மெளனத்தின் பாடல்
சொற்கூச்சல் பொழுதுகளில்
உன் மகத்தான பேரழகு வெளிப்படுகிறது.
நேசத் தென்றல் வீசும் இதயங்களை
வார்த்தைகளற்று வசீகரிக்கிறாய்.
காலக் காற்று
தலைமுடி கலைக்கையில்
சற்றே சங்கடமாகவும் உணர்கிறாய்
வார்த்தைகள் புதைந்த
வெட்கத்தில் சம்மதம் கொள்கிறாய்
முகிழ்க்கும் மோனப் பொழுதுகளில்
ஒரு தவம் போல் நீள்கிறாய்
வெளிப்படாத உன் குரலில் எப்போதும்
ஒளி(ர்)ந்தபடியிருக்கிறது ஒரு கவிதை.
அறியாமையின் நர்த்தனத்தை
ஏளனப் பார்வையால் வீழ்த்தி
மடிகறக்க எண்ணும் கரங்களுக்கு
புறக்கணிப்பைப் பரிசளிக்கிறாய்.
குறுமனப் பேய்கள் குதித்தாடுகையில்
நீயே ஆயுதமாகி விரட்டி அடிக்கிறாய்.
அவ்வப்போது நாற்றமெடுக்கும்
ஆணவ நோய்க்கு மருந்துமாகி..
பேசாப் பொருளின் ப்ரிய பொழுதுகளில்
வாழ்வாங்கு வாழ்கிறாய்.
பின்
பேச்சுகள் வெடித்தெழும் ஒரு தருணம்
‘அமைதி’யாய் வாய்க்கும் ஒரு மரணம்.
படத்துக்கு நன்றி
http://forevernocturne.wordpress.com/volume-ii-issue-i-october-2011/silence/