Blog

  • கடவுளாய் (சிறுகதை)

    கடவுளாய் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    கணவன் பூமிநாதன் இறந்தபிறகு அவருடைய கனவை எப்படியாவது நெறவேத்தனும்னு நெனச்சு இலங்கையிலிருந்து கடல் வழியாக வந்து டூரிஸ்டு பஸ்ஸில ஏறி இராமேஸ்வரம் சிவன் கோயிலுக்கு வந்து இன்னயோட அஞ்சு நாட்களாச்சு. ‘இராவணன கொல செஞ்ச பாவத்த இராமரே இங்கேதா தீர்த்துகிட்டாராம். அரக்கன் தானே இராவணன். தப்பு செஞ்சதுக்குதானே தண்டனை. இதிலென்ன பாவம் இருக்கு. ம்ம் அதுவும் சரிதா அடுத்தவ பொண்டாட்டிமேல ஆசப்படறது தப்புதா. இருந்தாலும் இராவணன் கண்ணியமா இருந்தாரே. ஆனா இப்போ நடக்கறத பாத்தா எத்தன பொம்பளப்புள்ளக  பலியாகுதுக பாவம். எல்லாத்தயும் செஞ்சிட்டு யோக்ய சிகாமணிகளா ஒருசிலரு ஊருக்குள்ள சுத்திகிட்டுத்தானே இருக்கானுக. இதெல்லா எப்போ சரியாகப்போகுது. நமக்கு இங்க மூணுவேள சோத்துக்கே வழியக்காணோ.  நம்ம ஒலக நடப்பப்பத்தி யோசிச்சு என்ன பண்ணப்போறோம். அன்னதானம், வாழைப்பழம், பிரசாதம் என எப்படியோ வயறு நெறஞ்சுடுது.  இனியும் இப்படி எத்தன நாட்களுக்கு இந்தப்பொழப்பு, தூணில சாஞ்சு கண்களை மூடி யோசிச்சிட்டிருந்தாள் இலட்சுமி.  குலசேகரன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தான்.  இந்த ஐந்து நாட்களாக யோசித்ததில் அவளுக்கு  ஒரு யோசனை தோன்றியது.

    இராமேசுவரம் வந்த அன்று அவள் பார்த்த காட்சிகளைச் சிந்தையில் தெளிய விட்டாள். கடலில் மூழ்கி குளிக்கின்ற பலராலும் கழட்டிவிடப்பட்ட ஆடைகள்.  பலராலும்  கழட்டிவிடபட்ட  உள்ளாடைகள், துண்டுகள் என ஆங்காங்கே குவிந்து கிடந்தன.  குளித்து முடிந்ததும் ஆடைமாற்றிவிட்டுதான் கோயிலுக்குள் செல்லவேண்டும்.   இலட்சுமி, பையனை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு பெண்கள் ஆடைமாற்றும் இடத்திற்குப் போனாள்.  தனித்தனியாக அறை அறையாக இருக்கும் என்று   எதிர்பார்த்தாள்.   சுத்திலும் மறைக்கப்பட்ட   மதிற்சுவர்  மட்டுந்தான் உயரமாக இருந்தது.  உள்ளே அப்படியே வெட்டவெளி. ஒருத்தர் உடைமாற்றுவதை  மற்றவர் பார்க்கலாம். ஆனால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வலைபோன்ற  கூடை வைக்கப் பட்டிருக்கிறது.

    கழட்டிய  பயனற்ற  ஆடைகளை இடுவதற்காக.  ஆனால் கடலில் மூழ்கிக் குளித்துவிட்டு பாவங்களை களைந்தபிறகு, கழட்டிய ஆடைகளை மீண்டும் தொட்டால் பாவம் ஒட்டிக்கொள்ளும் என நம்புகின்றார்கள். அதனால் அந்த ஆடைகளை பலர் அப்படியே ஈரத்துடன் கழட்டின இடத்திலேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். ஈரமான ஆடைகள் ஆங்காங்கே கிடந்தன.  இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் சுத்தம் செய்வார்களோ என்னமோ அந்த ஆடைகளை எடுத்துச் சென்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள். அதில் நல்ல ஒரு சேலையை எடுத்து அலசி காயப்போட்டாள்.   காய்ந்த பிறகு அந்த சேலையை மடிப்பு எடுத்து அழகாகக் கட்டினாள். குலசேகரனுக்கும் அதே போலச் சட்டை ஒன்றை  ரெடிபண்ணி மாத்திவிட்டாள்.  இப்போது இவர்களைப் பார்த்தால் யாருக்கும் எந்த ஐயமும் வராது.

    அங்குக் கிடந்த ஆடைக்குவியல்களில் சில நல்ல ஆடைகளையும் துடைக்கும் துண்டுகளையும் எடுத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தாள். அங்கேக் கிடந்த சோப்புத்துண்டுகளைப் பொறுக்கிப்போட்டு நன்றாகக் கசக்கினாள். கொஞ்சதூரத்தில் ஒரு பைப்பும் இருந்தது. நன்றாகத் துவைத்து ஆங்காங்கே காயப்போட்டு எடுத்தாள். ஆழகாக அழுத்தி அழுத்தி அயர்ன் போட்டது போல மடக்கி எடுத்தாள்.

    உடம்பில் தெம்பு இருக்கும் போது நாம் பிறரிடம் கையேந்தி பிச்சை கேட்கக் கூடாது. அது உண்மையிலேயே இயலாத ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டத்தொழில். கைகால்கள் நன்றாக இருக்கும் போது நாம் பிறரிடம்  கையேந்தப் பழகினால் அது நம்மை மனதளவில் முடமாக்கி விடும். செய்யக்கூடாது  என்று தலையை அசைத்தாள்,  கோயிலின் நுழைவு வாயிலிருந்து கடலுக்குச் செல்லும் வழி எங்கும் பல கடைகள் இருந்தன. பூசைசாமான்கள், மலர்கள், அலங்காரப் பொருட்கள் பிரசாதம், சடங்குப் பொருட்கள், சந்தனமாலைகள், துணிகள் விற்கும் கடைகள்  எனப்பல கடைகள். அதில் சில கடைகளுக்கு முன்பு வேட்டி, துண்டு போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  அதில் சிறிய ஒரு கடையைப் பார்த்து நடந்தாள்.  வயதான ஒரு தாத்தா உட்கார்ந்திருந்தார்.

    “தாத்தா இந்தத் துண்டு, துணியெல்லா யாரோ பயன்படுத்தினதுதா. ஆனா நல்லா தொவச்சிருக்கே. இதெ வாங்கிக்கோங்க. வாங்கி உங்க கடையில வையுங்க. விக்க வேண்டா. வாடகைக்கு.” என்று தயங்கித் தயங்கி கூறினாள்.  “யாராவது மாத்திக்கத்துணி எடுக்க மறந்தவங்களுக்கு இந்த வாடகைத் துணி ரொம்ப ஒதவியா இருக்கும்.” என்று கெஞ்சிக் கொண்டு நின்றாள் இத்தோடு இது நான்காவது கடை. ஒரு வழியாக அவரைப் பேசி சம்மதிக்க வைத்தாள்.

    “இப்படி  வேணும்னா செய்யலா  தாத்தா. எனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு துணிகள் வெளியில போகுதோ அதப்பொறுத்து காசு கொடுங்க.” என்று மறுபடியும் கெஞ்சினாள். ஒத்துக்கொண்டார் கடைக்காரர். நன்றி நிறைந்த மனதோடு கையெடுத்துக் கும்பிட்டாள். உத்வேகம் பிறந்தவளாய் அடுத்த ஆடைகளை அலசச் சென்றாள்.

    கோயிலுக்கு வருகின்ற பலரும்  வாடகைக்கு ஆடை கேட்டு வந்தார்கள். வார்த்தை தவறாமல்   வந்த வருமானத்தில் ஒரு பகுதியைக் கடைக்காரர் லட்சுமிக்கும் கொடுத்தார். அவளது கையில் அன்றாடச்  செலவுக்கு பணம் புழங்கத் தொடங்கியது. பல நேரங்களில் கோயில் பிரசாதமே உணவாக இருந்ததால் காசு அதிகம் செலவாகவில்லை. அது போகக் கோயிலுக்கு போகின்ற வழியில் இருக்கின்ற சில கடைகளுக்கு முன்னால் கூட்டிப்பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிடுவாள். கோயிலுக்குள் செல்பவர்களின் செருப்புகளைக் காவல் காப்பாள். யாரிடமும் கைநீட்டி இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க மாட்டாள். அவர்களாகக் கொடுக்கின்ற பணத்தை வாங்கிக் கொள்வாள்

    அமாவசை முடிந்து வருகின்ற புதன்கிழமையன்று அப்துல் கலாம் ஐயா படித்த பள்ளிக்குப் போகவேண்டும் என்று எண்ணியிருந்தாள்.  திட்டமிட்டபடியே பள்ளிக்குச் சென்றாள். எப்படியாவது கையில காலில விழுந்தாவது குலசேகரன பள்ளில சேர்க்கணும்  தலைமையாசிரியரை பார்க்கணும் காலை 8 மணிக்குப் பள்ளிக்குச் சென்றாள் மதியம் 12.30 மணி வரை காத்திருந்தாள். தற்போது அப்பள்ளியின் தலைமையாசிரியர் பெயர் வைத்தியநாதன். அவர் இப்பள்ளியில் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன.

    “ஐயா வணக்கம்.”

    “வணக்கம். வாங்க  என்ன விஷயம்?”

    “ஐயா  எம்புள்ள பேரு கலாம். கலாம் ஐயா படிச்ச பள்ளில என் பையனும் படிச்சு பெரிய ஆளா வரணும்ங்குறது அவ அப்பாவோட கனவு. என் பையன உங்க பள்ளியில சேர்க்கணு  சார் .”

    “எந்த வகுப்பு?”

    “நாலாம் வகுப்பு ஐயா.”

    “மூணாவது வரை படிச்ச டி.சி கொடுங்க”

    “இல்ல ஐயா அது வந்து….. வந்து ……நாங்க வேற ஊர்ல படிச்சோம் ஐயா. அங்க கொடுத்த டி. சி தொலைஞ்சு போச்சு”

    “டி.சி இல்லாம சேர்க்க முடியாதுமா.  இனி ஒரு மொற அந்த பள்ளில போய் கேட்டுப் பாருங்க.  நீங்க இதுக்கு முன்னாடி இங்கே வந்திருக்கீங்களா?”

    “இல்லீங்களே.  ஐயா திரும்ப அந்தப் பள்ளிக்குப் போக இயலாது. அங்க ஒரு தகராறு செய்துட்டோம். வேற ஏதாவது வழி இருக்கா ஐயா. நீங்க வேணா இவன மூணாம் வகுப்பு பாடங்களக் கேட்டு பாருங்களேன். இல்ல ஏதாவது எழுத வெச்சுப் பாருங்களேன்.

    ‘இயலாது’ இந்த வார்த்தை வைத்தியநாதனுக்கு மண்டைக்குள் ஏதோ குடைந்து கொண்டிருந்தது. இந்த அம்மாவ வேறு எங்கேயோ பார்த்து இருக்கோமே யோசித்துப்பார்த்தார்.

    “சரிமா ஒரு எழுத்துத் தேர்வு வைக்கிறேன் சரியா எழுதினா பார்ப்போம் இல்லனா வேற வழி இல்லம்மா இங்க சேர்த்த முடியாது.      நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க.”

    மேசை மேல இருந்த மணியை தட்டினார்.  “காளி அண்ணே இங்க வாங்க. இந்தப் பையன கீதா டீச்சர்கிட்ட கூட்டிட்டுப் போய் நாலாம் கிளாசுக்கு டெஸ்ட் வைக்கச் சொல்லுங்க.” என்றார்.

    இலட்சுமி வெளியில்  காத்திருந்தாள். வைத்தியநாதன் நெற்றியைத் தடவிக்கொண்டு  நாற்காலியில் குனிந்தபடி உட்கார்ந்து எதையோ யோசித்தான். திடீரென ஞாபகம் வந்தவனாய் பீரோவில் உள்ளிருந்து ஒவ்வொரு பைல்களாக தூக்கிப்பார்த்தான். ஒரு ஃபைலுக்குள் இருந்து ஒரு கவரை எடுத்தார்.  அதில் இலட்சுமியின் குடும்பப் புகைப்படம் இருந்தது.

    வைத்தியநாதனின் தந்தை துரைசாமி எழுதின  ஒரு கடிதமும் உடன் இருந்தது.

    ‘மகனே வைத்தியநாத என்னைப்போலவே ஏதோ ஒரு காரணத்துக்காக இயக்கத்தில சேர்ந்தவன்தான் பூமிநாதன். அவன் ரெண்டுதடவ கடல் கடந்து தமிழகத்திற்குச் சென்றுவிட்டா. அகதிகள் முகாமில வெச்சு  விசாரணைக்கப்பறம்  மீண்டும் சூழ்நிலைக்கைதியாக இங்கேயே வந்து மாட்டிக்கொண்டார. என்ன செய்ய?  இதேபோல நான் ஒரு முகாமில் தங்கி இருந்தபோது உன்னை யார் என்று தெரியாதுன்னு உன் எதிர்காலத்தை யோசிச்சு  சொன்னே. அப்போ   இவ காணாம போன எம்பையனு   மீனவ முத்தையானு ஒருத்தரு சொன்னாரு. முத்தையா போல ஒருத்தரும்  இவனக் காப்பாத்த  வரல. சொன்ன  மாதிரியே முத்தையா  தன்னுடைய கடைசி காலம் வர உன்ன அவரு மகனாவே படிக்க வச்சு இப்படி ஒரு பதவியும் வாங்கி கொடுத்தாரு. பூமிநாத ரொம்ப நல்லவன். அவன் இயக்கத்தில தனக்குக் குடும்பம் இல்லைன்னு சொல்லி இருக்கிறா. அவனுக்குக் குடும்பம் இருப்பது எனக்கு மட்டுந்தான் தெரியும். அவனுடைய கனவு, இலட்சியம், சிந்தனை,  ஆசை, விருப்பம் எல்லாமே அவனுடைய பையனப் படிக்க வைக்கணுங்கறது  மட்டுந்தா. அவனுடைய குடும்ப ஃபோட்டோவை உனக்கு அனுப்பித் தர்றே. இந்த கடிதம் உன் கைக்குக் கிடைக்கும்போது நானும் அவனும் உசுரோட இருப்போமா இல்லையான்னு தெரியாது. இந்த கடிதத்த மிகவும் சிரமப்பட்டுத் தான் உனக்கு கொண்டு சேர்த்துள்ளேன் இந்த புகைப்படத்தில் இருக்கிற பையனுக்கு எப்படி யாவது படிக்க வழி பண்ணுப்பா. இப்படிக்கு உன் வளர்ச்சிக்காக உன்னைப் பிரிந்து வாழும் உன்னுடன் உன் அப்பா.’ என்று முடிந்திருந்தது   கடிதத்தை மடக்கிவைத்துவிட்டு போட்டோவை திரும்ப ஃபைலுக்குள்ளேயே வைத்தார்.

    “காளி அண்ணே அந்த  அம்மாவை கூப்பிடுங்க டீச்சர்கிட்ட இருந்து டெஸ்டு பேப்பரையும் வாங்கிட்டு வாங்க.”

    காளி அண்ணன் நடையும் ஓட்டமுமாக வந்தார்.  விடைத்தாளை வாங்கி பார்த்தார்  வைத்தியநாதன்.

    “ம்மா பைய  நல்லா படிக்கிற பையனா இருக்கா. நாங்க சேர்த்துக்கறோம்” என்றார்.

    அவள் கண்களில் தண்ணீர் வழிகிறது என்பதை ரவிக்கைக்குள் நீர் வழிந்து ஓடிய போது தான் உணர முடிந்தது.

    “ அவ அப்பா எங்கே?”

    “அவ அப்பா ஆக்சிடென்டில எறந்துட்டாருங்க ஐயா”

    ‘உங்களுக்கு வீடு எங்கே?”

    “இங்க தாங்க ஐயா. இராமேஸ்வரம் கோயில் பக்கம்.”

    “உன் பேரு இலட்சுமி. பையன் பேரு கலாம் எப்படி?  கலப்பு திருமணமா?”

    “இல்லங்க ஐயா இவன் பேரு சேகர். அவன் அப்பாவுக்கு இவன் அப்துல் கலாம் ஐயா மாதிரி பெரிய ஆளா வரணும்னு ஆசை அதுனால பையன அப்படித்தான் கூப்பிடுவாரு. அதனால அந்த பேரையே வெச்சிரலாம்னு விட்டுட்டேன் சார்.”

    பூர்விகமாகவே நீங்க இங்க தானா மா? எவ்வளவு வருஷமா இங்க இருக்கீங்க?”

    “ஐயா அது வந்து எங்க பாட்டிக்கு அம்மா காலத்தில இருந்தே இங்கதான்யா. அவரு எனக்கு ஒன்னு விட்ட மாமா மொற ஆகுது. அவிக வீடும் இங்கதான் கோவிலுக்கு மேவரம். பூ வியாபாரம்.” கேட்ட கேள்விகளுக்கும் கேட்காத கேள்விகளுக்கும் சேர்த்து பதில் அவன் வெளியில் நீட்டிக்கொண்டிருந்த இலட்சுமியின் குடும்பப் புகைப்படத்தை உள்ளே தள்ளிவிட்டார்.

    “உங்க வீட்டுக்காரர் பேரு?”

    “அவரு  பேரு மயில்சாமி  ”

    ஆனால் சரிபார்க்கப்பட்ட விடைத்தாளில் மாணவன் பெயருக்கு நேராக குலசேகரன் என்றும் தந்தை பெயருக்கு நேராக பூமிநாதன் என்றும் எழுதி இருப்பதைப் பார்த்தார்.  ஏன் இவனுக்கு நான் இனியொரு முத்தையாவாக இருக்கக்கூடாது.

    மௌனமாகச் சிரித்துக்கொண்டே சேர்க்கை அட்டையில் கையெழுத்திட்டார்.

    Share
  • அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள் !

    அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    அம்மையே அப்பாவென் றழைத்தார் வாசகர்
    அன்னையும் பிதாவும் என்றார் ஒளவையார்
    அன்னையைத் தொட்டே ஆரம்பம் என்பதை
    அனைவரும் அகத்தில் இருத்திடல் வேண்டும்

    அன்பின் உருவாய் அன்னையே இருக்கிறாள்
    அவளே பொறுமையின் இருப்பிடம் ஆகிறாள்
    உண்ண மறப்பாள் உறங்க மறப்பாள்
    ஒரு கணமேனும் பிரியவே மறக்காள்

    பத்து மாதம் பாடாய் படுவாள்
    பசியும் பார்க்காள் ருசியும் பார்க்காள்
    கருவை எண்ணியே உருகியே நிற்பாள்
    காத்துக் கிடப்பாள் புதுமலர் கண்டிட

    பட்ட வேதனைகள் பஞ்சாய்ப் பறந்திடும்
    பச்சிளம் குழந்தை முகத்தைக் கண்டதும்
    கட்டித் தழுவுவாள் கண்ணீர் பெருகும்
    இட்டமாய் அணைப்பாள் இன்பத்தில் மூழ்குவாள்

    அன்னையே என்று ஆனந்தப் படுவாள்
    அனைத்தும் கிடைத்ததாய் அகநிறை வடைவாள்
    பெண்மையே முழுமை பெற்றதாய் நினைப்பாள்
    பெரு வரமாகவே எண்ணியே மகிழ்வாள்

    நீள நினைப்பாள் நெஞ்சில் சுமப்பாள்
    ஆழ அறிவை ஊட்டிட விளைவாள்
    வாழ்வை வளமாய் ஆக்கிட முனைவாள்
    வழித் துணையாக இருப்பாள் அன்னை

    நல்ல குருவை நாடியே  நிற்பாள்
    வல்ல பிள்ளையாய் ஆக்கிட முனைவாள்
    கற்றவர் முன்னே வந்திட வேண்டி
    கைகூப்பிக் கடவுளை வேண்டியே நிற்பாள்

    துன்பம் வந்தால் துடித்துப் போவாள்
    அன்பைப் பொழிந்து அவளும் உருகுவாள்
    சிரிப்பைக் கண்டால் சிறகை விரித்து
    சிட்டுக் குருவாய் வானில் பறப்பாள்

    தாழ்ந்து விடாமல் தாங்கியே நிற்பாள்
    வீழ்ந்து விடாமல் வேராய் இருப்பாள்
    ஏணியாய் ஆகி ஏற்றியே விடுவாள்
    என்றும் அன்னை துணையே ஆவாள்

    அன்னை என்பள் ஆருயிர் போல்வாள்
    அவளின் உணர்வே பிள்ளையே ஆகும்
    அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள்
    அவளைப் போற்றுவோம் அவழடி தொழுவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(517)

    குறளின் கதிர்களாய்…(517)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(517)

    யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
    வேந்து செறப்பட் டவர்.

    -திருக்குறள் -895(பெரியாரைப் பிழையாமை)

    புதுக் கவிதையில்…   

    ஆற்றல் மிக்க
    அரசனின் சினத்துக்கு
    ஆளானவர்
    அவனிடமிருந்து தப்பிக்க
    அவனியில்
    எங்கு சென்றாலும்
    ஆகிறார்
    உயிர் பிழைக்க
    இயலாதவராய்…!

    குறும்பாவில்…

    ஆளும் அரசனின் சினத்திற்கு
    ஆட்பபட்டோர் அதிலிருந்து தப்பிக்க எங்கு
    சென்றாலும் உயிபிழைக்க இயலாதவரே…!

    மரபுக் கவிதையில்…

    ஆற்ற லுடனே நாட்டினையே
    ஆளும் வல்ல அரசனவன்
    சீற்றம் கொள்ளும் வகையினிலே
    சீண்டி விட்ட ஒருவர்தான்,
    ஆற்றா அச்சம் கொண்டேதான்
    அதனில் நின்றும் தப்பிக்க
    மாற்ற மாக எங்குபோயும்
    மண்ணில் வாழ இயலாரே…!

    லிமரைக்கூ…

    ஆள்வான் சிறப்பாய் நாட்டை,
    அவ்வரசன் சினமுற வைத்தோர் எங்கொளித்தும்
    அடைவார் உயிரிழக்கும் கேட்டை…!

    கிராமிய பாணியில்…

    ஒழுங்காயிரு ஒழுங்காயிரு
    தப்புசெய்யாம ஒழுங்காயிரு,
    ஒன்னவிட ஒசந்தவங்ககிட்ட ஒழுங்காயிரு..

    நல்ல மொறயில
    நாட்ட ஆளுற ராசாவே
    கோவிச்சிக்கிற அளவு நடந்தவன்,
    பயந்து
    தப்பிச்சி எங்க போனாலும்
    அவனால
    உயிரோட இருக்கமுடியாதே..

    அதுனால
    ஒழுங்காயிரு ஒழுங்காயிரு
    தப்புசெய்யாம ஒழுங்காயிரு,
    ஒன்னவிட ஒசந்தவங்ககிட்ட ஒழுங்காயிரு…!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . 303

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . 303

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    அன்பான வாசகர்களுக்கு, அன்பு வணக்கங்களுடன் அடுத்தொரு மடலோடு உங்கள் மத்தியில் வருவதில் மகிழ்கிறேன்.

    அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலைகளிலும் தினமும் ஏதோவொரு நாடகம் அரங்கேறிக் கொண்டுதானே இருக்கிறது.

    இங்கிலாந்து மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன ?

    எனது கடந்த மாத மடலுக்கும் இந்த மடலுக்குமிடையில் பல அரசியல் அதிர்வுக் காட்சிகள் இங்கிலாந்து மேடையிலே அரங்கேறி விட்டன.

    அது என்ன அதிர்வுகள் ? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுந்திருக்கும்.

    பத்து வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சி எனும் அரசியல் கானகத்தில் அடைபட்டுக் கிடந்தது தொழிற்கட்சி.

    தொடர்ந்து  தேர்தல் வெற்றிகளை சந்தித்து அரச அதிகாரத்தில்  12 வருடங்களாக இருந்தது கன்சர்வேடிவ் கட்சி.

    அவர்களின் அரசியல் ஆணவம் மக்களின் வாழ்வாதாரச் சிக்கலைச் சிக்கும் வழிகளை கண்டறிய விடவில்லை.

    அவ்விரக்தி மக்கள் மனதிலே கொடுத்த மாற்றம் லேபர் கட்சியை அதீத பெரும்பான்மை பலத்துடன் அரச கட்டிலில் அமர்த்தியது.

    இதுவெல்லாம் நீங்கள் அறிந்ததே !

    ஆனால் ஏதாவது மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்து தொழிற் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

    ஏனேனில் அதிரடியான மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்துவதற்கு ஏதுவான ஒரு பொருளாதார ஸ்திர நிலையை வெளியேறிய கன்சர்வேடிவ் கட்சி விட்டுச் செல்லவில்லை.

    விளைவு !

    பொருளாதார ஸ்திரத்தை ஏற்படுத்த  மக்களுக்கு அதிருப்தி அளிக்கக்கூடிய சில கடினமான பொருளாதார நிலைப்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை அரச அதிகாரத்திலுள்ள தொழிற்கட்சிக்கேற்பட்டது.

    அதன் காரணமாக பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்த ஒரு அரசின் பிரதமர்களில் மிக வேகமாக செல்வாக்கு சரிவைச் சந்தித்த முதலாவது பிரதமர் எனும் சாதனையை தனதாக்கிக் கொண்டார் நமது பிரதமர் கியர் ஸ்டாமர்.

    அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை எனது அரசின் பதவிக்காலமான 5 வருட முடிவில் என்னைப் பற்றியும் எனது அரசின் கொள்கைகள் பற்றியும் கணித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார் பிரதமர்.

    இதனிடையே பலகாலமாக இங்கிலாந்து அரசுக்கு தலையிடியாக இருந்துவருவது வெளிநாட்டவரின் அரசியல் தஞ்சம் கோரும் சட்டவிரோத குடியேற்றம்.

    குறிப்பாக பிரெஞ்சு நாட்டிலிருந்து கள்ளத்தோணியில் இங்கிலாந்துக் கால்வாய் வழியாக உள்ளே நுழையும் வெளிநாட்டுகாரர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

    இங்கிலாந்தில் தீவிர வலதுசாரக் கொள்கையுடைய கட்சிகளின் கூக்குரல் இங்கிலாந்தின் பொருளாதர , வாழ்வாதாரச் சிக்கல்களுக்கு வெளிநாட்டவரின் அளவுக்கு மீறிய குடியேற்றமே காரணம் என்று கூவியது.

    மக்களின் கருத்துக் கணிப்புகளும் இங்கிலாந்தின் வெளிநாட்டவரின் குடியேற்றம் பற்றிய சர்ச்சையின் எதிரொலியாகவே இருக்கிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று ப்ரசாரம் செய்து வெற்றி கண்டவர் நைஜல் வராஜ் .

    இப்போ இங்கிலாந்தின் மறுமலர்ச்சிக் கட்சி  Reform Party எனும் கட்சியின் தலைவராக கடந்த தேர்தலில் முதன்முறையாக வெற்றியீட்டி பாரளுமன்ற எம்.பி ஆக உள்ளார்.

    இவர் அமேரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களின் ஆதரவாளர்.

    ட்ரம்ப் அவர்களின் பரிபூரண ஆதரவும் இவருக்கு உண்டு.

    இன்றைய இங்கிலாந்து அரசியல் சூழலில் கன்சர்வேடிவ் கட்சியையே இவர் இல்லாமல் ஆக்கி விடுவாரோ எனும் வகையில் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

    இந்த சூழலில் தான் இம்மாத ஆரம்பத்தில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் இடம் பெற்றது.

    இதுவரை இங்கிலாந்து அரசியல் மேடை கண்டிராத மிகபெரிய அதிர்வலைகளை இத்தேர்தல்கள் ஏற்படுத்தியது.

    ஆமாம் இதுவரை இங்கிலாந்து தேர்தல்களம் சந்தித்திராத ஒரு புதுவிதமான முடிவை அள்ளி வீசியது.

    காலகாலமாக இங்கிலாந்து தேர்தல் களத்தில் அதிமுக்கிய கட்சிகளாக விளங்கிய கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி இரண்டு கட்சிகளுமே அதிர்ந்து போகக்கூடிய வகையில் நைஜல் வராஜ் அவர்களது ரிபோர்ம் கட்சி Reform Party அதிக அளவிலான கவுன்சில்களையும், கவுன்சிலர்களையும் பெற்று பெருவெற்றி ஈட்டியுள்ளது.

    கன்சர்வேடிவ், லேபர் இரண்டு கட்சிகளுமே அத்திவாரத்தில் ஆட்டம்.கண்டுள்ளன.

    இங்கிலாந்தில் இதுவரை நடந்து வந்த இரு கட்சி ஆட்சிமுறை மாற்றம் காணப்போகிறதோ எனும் ஐயப்பாடு முதற்தடவையாக அரசியல்.அவதானிகள் மட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

    இதன் பிரதிபலிப்பு இதுவரை லேபர் கட்சி பிரதமராக இருக்கும் ஒருவரிடமிருந்து எதைக் கேட்க முடியாது என்று எண்ணிருந்தார்களோ அதைக் கேட்கும்படியாகி அவர்களின் நம்பிககைக்கு ஒரு பெருத்த அடியைக் கொடுத்துள்ளது.

    இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களில் பெரும்பான்மையோர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார்கள் என்று ஆராயும் நிலைக்குக் கட்சிகளைத் தள்ளியுள்ளது.

    காலகாலமாக வெளிநாட்டவரின் குடியேற்றத்தை ஆதரிக்கும் கொள்கைகளை முன்வைக்கும் லேபர் கட்சியின் தலைவர் வெளிநாட்டவரின் அளவுக்கு மீறிய வருகையால் இந்நாட்டு மக்கள் தம் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர் எனும் தாழ்வு மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று பேசியுள்ளார்.

    இதுவே ஒரு லேபர் கட்சித் தலைவர் முதன்முறையாக வெளிநாட்டவரின் வருகைக்கு எதிராக பேசிய முதல் பேச்சு என்று அரசியல் மட்டத்தில் கருதப்படுகிறது.

    அதிரடியாக வெளிநாட்டவருக்கு கொடுக்கும் பணிகளுக்கான விசா , மற்றும் மாணவர்களுக்கான விசா ஆகியவற்றின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தப் படுகின்றன.

    இதைத்தான் கவியரசர் ” மாற்றம் ஒன்றே மாறாதது ” என்று கூறியிருந்தாரோ ?

    சரி இனி எமது பிரதமர் நாட்டின் பொருளாதாரச் சீரமைப்புக்காக எடுத்த நடவடிக்கைகளைப் பார்ப்போம்

    வெளிநாட்டு வர்த்தக உடன்பாடுகள் பலவற்றை பிரதமர் கியர் ஸ்டாமர் எட்டியுள்ளார்.

    அவரது இணக்கப்பாடுகள் இந்தியா , அமேரிக்கா , மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பனவற்றுடன் எட்டப்பட்டுள்ளன.

    இது எமது பிரதமரின் சர்வதேச அளவிலான நிலையினை ஸ்திரப்படுத்தியுள்ளது எனும் கருத்துக்கு வலுச் சேர்க்கிறது.

    குறிப்பாக அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்ததும் எமது பிரதமர் ஸ்டாமருக்கும் , அதிபர் ட்ரம்ப்புக்குமிடையிலான உறவைப்பற்றி  எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

    ஆனால் பிரதமர் கியர் ஸ்டாமர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமேரிக்காவுடனும் , அதன் அதிபருடனும் ஒரு சுமுகமான உறவைப் பேணி வருகிறார்.

    அடுத்து யூக்கிரேனுக்கும், ரஸ்யாவுக்கும் இடையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகளுக்கு கியர் ஸ்டாமர் பக்கபலமாக இருப்பது போலத் தோற்றமளிக்கிறது.

    சமீபத்தில்.பாலஸ்தீன)ன் பகுதியான காஸா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தடைகளைக் கண்டித்து மிகவும் காரசாரமான ஒரு செய்தியை இஸ்ரேலுக்கு இங்கிலாந்து சார்பில் கியர் ஸ்டாமர் விடுத்துள்ளார்.

    இந்த ஒருமாத காலத்துக்குள் பல காட்சிகள் அரங்கேறியுள்ளன இவை இனிவரும் நாட்களில் எமது அரசியல் அரங்கில் மேடையேற்றப்போகும் காட்சிகளை அடுத்த மடலில் பகிர்ந்து கொள்கிறேன்.

    Share
  • ஒருத்தி மகனாய்ப் பிறந்து – ஆண்டாள் எழுதியது சரிதானா?

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து – ஆண்டாள் எழுதியது சரிதானா?

    அண்ணாகண்ணன்

    நள்ளிரவு 2.40 மணி. தாகத்தால் விழித்தேன். தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுத்தேன். அப்போது திடீரென இந்த வரி, நினைவுக்கு வந்தது. ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர. இதில் முன்னிலை, படர்க்கை சார்ந்து ஒரு சிக்கல் இருப்பது போல் தோன்றியது.

    பாடல் முழுவதும் முன்னிலையில் இருக்க, ஒளித்து என்பது மட்டும் படர்க்கையில் இருக்கிறது. பிறந்து, வளர, பிழைப்பித்து, நெருப்பென்ன நின்று, உன்னை, பறைதருதி எனப் பெரும்பாலும் முன்னிலையாகவே இருக்கின்றன. ஒளித்து என்பது மட்டும் படர்க்கையாக இருக்கிறது. அதாவது, இந்த இடங்களில் எல்லாம் அவர் தாமாகவே செய்கிறார். ஒளித்து என்பதில் மட்டும் இன்னொருவர் வந்து ஒளித்து வைக்கிறார்.

    இங்கே, ஒளித்து வளர என்பது சரியாக ஒட்டவில்லை. ஒன்று, ஒளிந்து வளர என இருக்க வேண்டும். அல்லது, ஒளித்து வளர்க்க என இருக்க வேண்டும். ஒளித்து வளர என்கிற போது, வசுதேவர் வந்து ஒளித்து வைக்கிறார். ஆனால், கண்ணன் தானாகவே வளர்கிறான், யசோதை வளர்க்கவில்லை எனப் பொருள் தோன்றுகிறது.

    ஆண்டாள், ஒளித்து வளர என எழுதியது சரிதானா? உங்கள் கருத்து என்ன?

    Share
  • மலைசூழ் கோவைப் பதிவாழ்க

    மலைசூழ் கோவைப் பதிவாழ்க

    மலைசூழ் கோவைப் பதிவாழ்க – வண்ண
    மயில்சூழ் கோவைப் பதிவாழ்க
    முகில்சூழ் கோவைப் பதிவாழ்க – இன்
    மொழிசூழ் கோவைப் பதிவாழ்க
    கலைசூழ் கோவைப் பதிவாழ்க – மிளிர்
    கவின்சூழ் கோவைப் பதிவாழ்க
    மரம்சூழ் கோவைப் பதிவாழ்க – நல்ல
    மனம்சூழ் கோவைப் பதிவாழ்க

    நறுநீர்க் கோவைப் பதிவாழ்க – உயர்
    நலம்சேர் கோவைப் பதிவாழ்க
    முறுவல் பூக்கும் முகம்வாழ்க – வாழ்வில்
    முழுமை சேர்க்கும் அகம்வாழ்க
    பொருள்சேர் கோவைப் பதிவாழ்க – வளர்
    புதுமை சேர்க்கும் புலம்வாழ்க
    அருள்சேர் கோவைப் பதிவாழ்க – தினம்
    அணிசேர் கோவைப் பதிவாழ்க

    வயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பெரும்
    வளம்சேர் கோவைப் பதிவாழ்க
    செயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பசும்
    செழுமை சேர்க்கும் செகம்வாழ்க
    இதம்சேர் கோவைப் பதிவாழ்க – இயற்கை
    எழில்சேர் கோவைப் பதிவாழ்க
    குறையொன்று இல்லாக் குடிவாழ்க – தூய
    குளிர்சேர் கோவைப் பதிவாழ்க

    – அண்ணாகண்ணன்

    Share
  • தண்ணீரும் காவிரியே!

    தண்ணீரும் காவிரியே!

    தண்ணீரும் காவிரியே! தார்வேந்தன் சோழனே!
    மண்ணாவதும் சோழ மண்டலமே! – பெண்ணாவாள்
    அம்பொற் சிலம்பி அரவிந்தத் -தாளணியும்
    செம்பொற் சிலம்பே சிலம்பு!

    இது கம்பர் தொடங்கி, ஒளவையார் முடித்த பாடல். முதலிரண்டு அடிகளைக் கம்பரும் அடுத்த இரண்டு அடிகளை ஒளவையாரும் பாடினார்கள் எனக் குறிப்பு இருக்கிறது.

    தண்ணீர் என்றால் அது காவிரிதான். வேந்தன் என்றால் சோழன்தான் எனப் போற்றும் பாடல். அடுத்த அடியில், மண்ணாவதும் சோழ மண்டலமே என்பதற்கு மண் என்றால் அது சோழ மண்டலம்தான் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இதன் இன்னொரு பொருளை எண்ணித் துணுக்குற்றேன். மண்ணோடு மண்ணாவது என்றால் அது சோழ மண்டலம் என்ற பொருளும் இருக்கிறது. சோழன் மீது இருக்கும் காழ்ப்பில், பாண்டியர், சேரர் யாரேனும் இப்படி வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடிவிட்டார்களா?

    Share
  • 16ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    16ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    வல்லமை மின்னிதழ், 15 ஆண்டுகளை நிறைவுசெய்து 16ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் தமிழின் முதல் மின்னிதழ். பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற ஆய்விதழாக இரண்டு ஆண்டுகள் இருந்தது. தொடர்ந்து நடுநிலையுடன் படைப்புகளை வெளியிட்டு வருகிறது.

    இந்தப் பதினைந்து ஆண்டுகளில் வல்லமை, 19,831 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,949 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. தொடர்ந்து பங்களிக்கும் படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

    Share
  • வாழ்க்கை ஒரு வட்டம்  

     

    வாழ்க்கை முழுவதும் பணம், பதவி, செல்வாக்கு என்று நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த ஒருவருக்கு ஒரு தருணத்தில் சற்று நின்று மூச்சுவிட நேரம் கிடைத்தபோது அவர் மனதில் மிகப்பெரிய வினா ஒன்று எழுந்தது. என்னதான் நேர்மையாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் தம் இறுதிக்காலம் எப்படியிருக்குமோ என்ற அச்சம் எவருக்கும் இருப்பது இயல்புதானே? அப்படித்தான் அவருக்கும் அப்படியொரு ஐயம் எழுந்துவிட்டது. அதாவது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள ஒருவருக்கு எதிலெல்லாம் அதிகம் ஈடுபாடு இருக்கும்? சொத்து, குடும்பம், ஆரோக்கியம் அல்லது சமுதாயம் – இவற்றில் எதன் மீது அதிக நேசம் ஏற்படும் என்ற ஐயம் ஏற்பட்டுவிடுகிறது. யாரிடம் போய் இதைத் தெளிவுபடுத்திக்கொள்வது என்று வெகு நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்தார்.

    அன்று தம் ஊருக்கு ஒரு மகான் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சென்று சந்திக்கிறார். தன்னுடைய ஐயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள அந்த மகானிடம் சென்று தன்னுடைய வினாவை முன்வைக்கிறார்.

    அந்த மகானும் புன்னகையுடன், “உனக்கு குழந்தை இருக்கிறதல்லவா? அந்தக் குழந்தைக்கு என்னென்ன தேவைன்னு சொல் பார்க்கலாம் ” என்று அவரையே திருப்பிக் கேள்வி கேட்டார்.

    சற்று யோசித்தவர், வயிற்றுக்கு உணவு, பாதுகாப்பான தாயின் மடி அல்லது தந்தையின் தோள், அன்பு, பாசம், விளையாட்டு போன்றவையைத் தவிர பெரிதாக வேறு ஒன்றுமிருக்காதே என்றார்.

    உடனே அந்த மகான், வாழ்க்கை என்ற இந்த வட்டத்தில் முதலும், முடிவும் ஒன்றுதான். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலும் அந்த ஆரம்பக்கட்டத் தேவைகளைத் தவிர வேறு தேவைகள் ஏதுமிருக்காது. உணவு, தண்ணீர், மருந்துகள், வசதி, அன்பானவர்களின் பாசமும் அவர்களின் அருகாமையும் மட்டும்தான் அவர்களின் தேவையாக இருக்கும். ஆடம்பரம், பகட்டு, செல்வம், சொத்துபத்துகள், வங்கி இருப்பு, நகைகள், ஈகோ, ஆசைகள், சமூகம் போன்ற வெறும் மாயையாக இருந்த அனைத்தும் எண்ணங்களிலிருந்து மறைந்துவிடும் என்றார்.

    அப்படியானால் பிறந்த குழந்தைக்கும் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவருக்கும் எந்த வேறுபாடுமே இல்லையா சாமி’ என்று மீண்டும் கேட்டதற்கு அவர்,

    ‘புதிதாகப் பிறந்த குழந்தைக்கும், தனது வாழ்க்கையை நிறைவு செய்யப்போகும் ஒருவருக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்ன தெரியுமா?

    அதுவரை தாம் வாழ்ந்த வாழ்க்கையில் தாம் பெற்ற அமைதியும், மன நிறைவும் தரும் ஒரு சில நேசத்துக்குரிய நினைவுகள் மட்டுமே பிறந்த குழந்தைக்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளவருக்குமான வேறுபாடு’ என்றார்.

    அந்த மகான் சொன்னதைக் கேட்டவரின் மனதில் ஏதோ பொறிதட்ட ஊர், உலகம் ஆயிரம் சொல்லலாம், பெற்ற மனம் பித்தானாலும், பிள்ளை மனம் கல்லாகாது. தெளிவுபடுத்திய மகானுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பியவர், தன் வாழ்க்கை வட்டத்தின் அடுத்த கட்டத்தை எண்ணியபடியே நகர்ந்தார்.

     

    Share
  • குழந்தையின் பெயர் (சிறுகதை)

    குழந்தையின் பெயர் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?”

    “நீங்கதான் சொல்லுங்களேன்!” பிரசாத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் பிரபா. முகத்தில் வெட்கமோ, புன்னகையோ இருக்கவில்லை. எதையோ யோசிப்பதுபோல் இருந்தாள் என்றுதான் பட்டது அவனுக்கு.

    முதலிலேயே யோசித்துவைத்திருந்தது நல்லதாகப்போயிற்று என்ற மகிழ்வுடன், “விட்டல், இல்லாட்டி கோகுல்,” என்று சற்று உரக்கவே சொன்னான்.

    “கிருஷ்ணர் பேரா,” என்று இழுத்தாள்.

    “அதேதான்!”

    “அவருக்கு நிறைய பெண்களோட சகவாசமில்ல?”

    அவனுக்குப் பெருமையாக இருந்தது. பிறக்கப்போகிற மகன் உத்தமபுத்திரனாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இதில் என்ன தவறு?

    கிருஷ்ணன் இல்லாவிட்டால் ராமன். “ராமசந்திரன்,” என்றான் அழுத்தமாக.

    “MGR வாத்தியாரா?”

    “இல்லே. தசரதகுமாரன். ராமாயணத்திலே..”.

    “எனக்கும் தெரியும்”. சற்று சூடாக வந்தது அவள் பதில்.

    “ராமர்தான் ஏகபத்தினி விரதன்,” என்றான் சமாதானமாக.

    “சுகமா அரண்மனையில இருக்கிறதை விட்டுட்டு, அப்பா சொல்றார்னு காட்டுக்குப்போய் கஷ்டப்பட்டாரே! அதைச் சொல்லமாட்டீங்களே!” என்று சாடினாள். “கொஞ்சம் சொந்த புத்தியை உபயோகிச்சிருக்கவேண்டாம்?”

    மகாபாரதம், ராமாயணம் ஆகிய இரண்டின் நாயகர்களும் சரிப்படவில்லை. வேறு யாரைச் சொல்லலாம்?

    “நடராஜன்?”

    “சிவன் பேரு. ஒங்களுக்கு பஸ்மாசுரன் கதை தெரியுமில்ல?”

    `இவள் எங்கே போகிறாள்?’ என்று சற்று அயர்ந்தான் பிரசாத்.

    அவளே சொன்னாள்: “தன்னோட கையை யார் தலையில வெச்சாலும் அவங்க சாம்பலாகணும்னு வரம் கேட்டானாம் அந்த அசுரன். யார்கிட்டே? சிவன்கிட்டே”.

    சுவாரசியமாக இருந்தது கதை.

    “எவ்வளவு கெட்ட குணம்!” என்று அவளை ஊக்கினான்.

    “ரொம்ப யோசிக்காம, சிவனும் அவன் கேட்டதைக் குடுத்துடரார். நைச்சியமா பேசறவங்களுக்கு ரொம்ப யோசிக்காம எதையாச்சும் குடுத்தா, குடுக்கறவங்களுக்குத்தான் கஷ்டம்”.

    சிவன் அப்படி என்ன கஷ்டத்தை அனுபவித்தார் என்று கேட்கவேண்டும்போல இருந்தது அவனுக்கு. `இதுகூடத் தெரியாதா!’ என்று ஏளனம் செய்துவிடுவாள். வேண்டாம்.

    “முருகன்? சிவகுமார்னு வெச்சா, நாகரிகமா இருக்கும்”. அவன் குரல் பலகீனமாக ஒலித்தது. இதற்கு என்ன ஆட்சேபம் தெரிவிக்கப்போகிறாளோ!

    “சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபிச்சுக்கிட்டு, பெத்தவங்களை விட்டு எங்கேயாவது போயிடுவான். ரெண்டு பொண்டாட்டிவேற!”

    அவன் மௌனமாக இருந்தான்.

    “வேற ஏதாவது பேசலாமா?” என்றாள்.

    அவன் வாயே திறக்கவில்லை.

    அவளே கேட்டாள்: “பிறக்கிறது பெண்குழந்தையா இருந்தா?”

    “சீதா,” என்று சொன்னவன், அவள் முகத்தைப் பார்த்துவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான். பழங்காலப் பெயராக இருக்கிறது என்பாளோ?

    “ஜானகின்னு பேர் வெச்சுட்டு, ஜானுன்னு செல்லமா..,” என்றவனை இடைமறித்தாள். “கட்டினவர் காட்டுக்குப் போனபோது, அவ எதுக்கு அவரோட கல்லிலேயும் முள்ளிலேயும் போய் திண்டாடினா? `நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்’னு போயிருக்க வேண்டியதுதானே?”

    அதற்குமேல் அவனுடைய கற்பனை ஓடவில்லை.

    மறுபடியும் அவளே கைகொடுத்தாள். ”பார்வதி புத்திசாலி. சிவனோட ஒடம்பிலே பாதி அவளுக்கு. சக்தி இல்லாட்டி சிவன். ஒரு பொண்ணு இப்படித்தான் இருக்கணும். துணை இல்லாம நான் இல்லேன்னு ஒவ்வொருத்தனும் தவிக்கணும்”.

    “ஏண்டா பிரசாத்து? ரெண்டுபேரும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தீங்களே! `ஒங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ அப்படின்னு தரகர்கிட்ட சொல்லிவிடவா?” தாய் கேட்டாள்.

    “எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம்மா”.

    “அதான் ஏன்னு கேக்கறேன். `நான் நாகரிகமானவ. தமிழெல்லாம் படிக்கிறதில்லே’ன்னு சில அரைகுறைங்கமாதிரி அலட்டிக்காம, ஆன்மிகப் புத்தகங்களெல்லாத்தையும் கரைச்சுக் குடிச்சிருக்கா. ரொம்ப புத்திசாலிடா!”

    “எனக்கு இவ்வளவு புத்திசாலியான பொண்ணு வேண்டாம்மா. பெண்ணியம் பேசறா. எல்லாத்தையும் அலசறா”.

    “அதான் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கா”. அழுத்தமாகச் சொன்னாள் அம்மா.

    “அவளோட ஆராய்ச்சியை வேலையோட வெச்சுக்கட்டும். கோயிலுக்குப் போனோமா, சாமி கும்பிட்டோமா, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமான்னு இருக்கிற சராசரி பொண்ணுதான் எனக்குச் சரிப்படும்”.

    மனதுக்குள் சொல்லிக்கொண்டான், `கல்யாணம் ஆகி, பிறக்கப்போகிற குழந்தைக்குப் பெயர் வைப்பதில்கூட எங்களுக்குள் ஒற்றுமை இல்லையே! இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எதிரும் புதிருமாக இருந்தால் வாழ்க்கை நரகமாக இருக்காதா!’

    Share
  • பிராகுய் – தமிழ் உறவு | பலுசிஸ்தானிகள் நம் பங்காளிகள்

    பிராகுய் – தமிழ் உறவு | பலுசிஸ்தானிகள் நம் பங்காளிகள்

    அண்ணாகண்ணன்

    சென்னையிலிருந்து சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, பலுசிஸ்தான். அங்குப் பேசப்படும் பிராகுய் (பிராஹுய்) என்ற மொழியை, அழியும் நிலையில் உள்ள மொழியாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. பிராகுய், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழில் நாம் சொல்லும் அரிசி, பால் போன்ற சொற்கள், இதே பொருளில் பிராகுய் மொழியிலும் உள்ளன. இங்கு நாம் வா என்பதை, அவர்கள் பா என்கிறார்கள். இங்கு நாம் ஊர் என்பதை அவர்கள் உரு என்கிறார்கள். நாம் இரண்டு, மூன்று என்று சொல்வதை அவர்கள் ஈரத், மூசித் என்கிறார்கள். சிந்துச் சமவெளி நாகரிகம், தமிழ் நாகரிகம் என்ற கூற்றுக்கு இவை வலுச் சேர்க்கின்றன.

    பாகிஸ்தானின் மிகப் பெரிய மாநிலம், பலுசிஸ்தான். இங்கு சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வசிக்கின்றனர். பலூச் விடுதலைப் படை, கடந்த 25 ஆண்டுகளாகத் தனி நாடு கேட்டுப் போராடி வருகிறது. மனித உரிமை மீறல், அடக்குமுறை போன்ற காரணங்களைக் கூறி, பாகிஸ்தானுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வருகிறது. இப்போது, தங்களைப் புதிய நாடாக ஐ.நா. அமைப்பும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ் வேர்களைக் கொண்ட பலுசிஸ்தான், தனி நாடு ஆவதை வரவேற்கிறேன். ஆபரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக, இந்தியாவின் நட்பு நாடாக, சுதந்திர பலுசிஸ்தான் மலரட்டும். சமூக, சமய நல்லிணக்கத்துடன், அமைதியும் வளமும் வளர்ச்சியும் செழிக்கும் நாடாக, தனித்த மொழி, மரபு, பண்பாட்டு அடையாளங்களைத் தக்க வைத்து, இந்துஸ்தானின் சகோதர நாடாக எழுக பலுசிஸ்தான்.

    #Balochistan #BLA #Pakistan #India #operationSindoor #Brahui #Brahvi #Brohi

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 302

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 302

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    அன்பினிய வல்லமை வாசக இதயங்களே !

    உங்களனைவருடனும் மீண்டும் ஒரு மடல் மூலம் இணைவதில் மகிழ்கிறேன்.

    இங்கிலாந்தின் நிகழ்வுகள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    எமது பொருளாதாரச் சிக்கலை தீர்ப்பது ஒருபுறமிருக்க சர்வதேச நாடுகளின் அரசியல் நகர்வுகளின் தாக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டிய தேவையில் இங்கிலாந்து நாடு இருக்கிறது.

    குறிப்பாக யூக்கிரேன் , ரஸ்ய நாட்டுப் போரும் அதன் முன்னெடுப்புகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் நிலைப்பாட்டின் பக்க விளைவுகள் இங்கிலாந்துப் பிரதமருக்கு சங்கடத்தை விளைவித்தது.

    ஆனால் சங்கடங்களில் சில சாதுரியங்களும் கிடைக்கும் சாத்தியக்கூறும் உள்ளதல்லவா ?

    அது என்ன என்கிறீர்களா ?

    இங்கிலாந்தின் உள்நாட்டு பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்கும் பொருட்டு பல சிக்கலான பொருளாதார திட்டங்களை முன்வைத்ததால் செல்வக்கு சரியக் கண்டார் பிரதமர் கியர் ஸ்டாமர்.

    அந்நேரம்தான் அதிபர் ட்ரம்ப்பின் யூக்கிறேன் ரஸ்யப் போரின் மீதான திருப்பங்களின் தாக்கம் ஐரோப்பாவின் மீது விழுந்தது.

    ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், அமேரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலைச் சமாளிக்கும் பாலமாகச் செயற்படத் தலைப்பட்டார் கியர் ஸ்டாமர்.

    யூக்கிறேன் நாட்டிற்குச் சார்பாக செயற்பட்டு வந்த அமெரிக்க அரசியல் போக்கை மாற்றிய ட்ரெம்ப்பின் தாக்கம் ஏற்படுத்திய இடைவெளியை சமப்படுத்த இணக்கமுற்ற நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் தலமைப் பொறுப்பை கியர் ஸ்டாமர் ஏற்றார்.

    சரிந்து கொண்டிருந்த அவரது அரசியல் செல்வாக்குக்கு முட்டுக் கொடுப்பது போல் அவர் மீது மக்களுக்கு ஒரு மதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

    அதேநேரம் அமெரிக்க அதிபர் ஏற்படுத்திய இறக்குமதி வரி அதிகரிப்பினால் ஏற்பட்ட உலகச் சந்தையின் நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய ஒரு அரசியல் அவசியம் ஏற்பட்டது.

    அந்த நிலையில் அமெரிக்க அதிபருடனான உறவினை மிகவும் மென்மையான ஒரு போக்கில் எமது பிரதமர் அணுகிய முறை அவரது கட்சியில் மட்டுமில்லாமல் எதிர்க்கட்சிகளிலும் அவருக்கு ஓரளவு ஆதரவை கொடுக்கும் ஒரு நிலையைத் தோற்றியுள்ளது.

    அடுத்து பிரித்தானிய இரும்பு ஆலையின் நிலை பெரிய செய்தியாகியது.

    பிரித்தானியாவின் தொழிற்சாலைகளில் பெயர் பெற்றிருந்த பிரித்தானிய இரும்பு ஆலை பிரித்தானிய தொழிலதிபர்களிடமிருந்து சீன முதலீட்டாளர்களின் கைவசத்திலிருந்தது.

    அவ்வாலை இலாபகரமானதாக இல்லாமல் நட்டத்தில் ஓடுகிறது என்பதால் அதனை மூடப்போவதாக அதன் சீன முதலீட்டாளர்கள் அறிவித்தார்கள்.

    பிரித்தானியாவின் அடையாளமாக கால காலமாக ஓடிக்கொண்டிருந்த தொழிற்சாலை மூடப்பட்டால் அதனால் ஏற்படும் சமூகத் தாக்கங்கள் கணக்கிலடங்கா

    அதனைக் கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் அவசரச் சட்டத்தை அமுல் படுத்தி அவ்வாலையை தேசிய உடமையாக்கி அத்தொழிற்சாலையை உடனடி மூடுதலிலிருந்து காப்பாற்றியுள்ளது.

    பிரித்தானிய அரசின் இந்நடவடிக்கையும் அனைவரினதும் ஆதரவைப் பெற்றுள்ளது.

    அதிகாரத்திலிருக்கும் பிரித்தானிய அரசுகளுக்கு தொடர்ந்து தலையிடியைக் கொடுக்கும் பிரச்சனையாக சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரெஞ்சுக் கரையிலிருந்து நுழையும் “படகு அகதிகள்” இருந்து வருகிறார்கள்.

    இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை தவிர்ப்பதற்கான பலவித நடவடிக்கைககை அரசு முடுக்கி விட்டாலும் அது குறைவதாகத் தெரியவில்லை.

    அதற்கான லேபர் அரசின் முக்கிய நகர்வுகள் கொடுக்கப்போகும் விளைவுகளை எதிர்நோக்கியபடி அரசியல் அவதானிகள்.

    அடுத்து இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை பாரிய மாற்றத்துக்குள்ளாகி இருக்கிறது.

    சிலகாலமாகவே இங்கிலாந்தின் சுகாதார அமைச்சு பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

    மருத்துவர் பற்றாக்குறை , தாதிகள் பற்றாக்குறை, மனநோய் பிரிவுகளுக்கான சேவைகளின் பற்றாக்குறையென பல குறைபாடுககௌச் சந்தித்தது.

    சுகாதார அமைச்சர் பல மாதங்களாக நடாத்திய ஆய்வுகளின் பின்னர் தேசிய சுகாதார சேவையின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றுவதாக அறிவித்துள்ளார்.

    தற்போதைய கட்டமைப்பின் கீழ் ஒரே நடவடிக்கைகள் பல பிரிவுகளினால் பல தடவைகள் மேற்கொள்ளப்படுவதால் தேவைக்கதிகமான உத்தியோகத்தர்களுடன் , அளவுக்கதிகமான நேரம் செலவிடப்படுவதாகக் கூறியுள்ளார்.

    நோயாளிகள் சிகிச்சை பெறுவது இலவசமாகவே நடைபெறுவது என்பதை இன்றுவரை கடைப்பிடித்து வருவது பாராட்டத்தக்கது.

    ஆனால் இச்சேவையைபிதே கொள்கையில் தொடர்ந்தும் கடைப்பிடிக்க இத்தகைய மாற்றம் அவசியமானது என்கிறார் சுகாதார அமைச்சர்.

    மருத்துவசேவை பிரித்தானியவாசிகளுக்கு இலவசம் என்றாலும் உல்லாசப் பிரயாணிகளாக வருவோரும், பிரித்தானியவாசிகளாக அல்லாதோரும் கட்டணம் அறவிடப்படுவார்கள் என்பது சிலகாலங்களின் முன்னாலிருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

    கடந்த கன்சர்வேடிவ் கட்சி அரசிலிருந்த போது ஆரம்பிக்கப்பட்ட மருத்துவர்களின் வேலைநிறுத்தம் லேபர் கட்சி தேர்தல் வெற்றி பெற்று அரசமைத்ததும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

    அங்கு மீண்டும் ஒரு சிறு சலசலப்பு ஏற்படுகிறது. மருத்துவ பதவிகளில் அதியுயர் பதவியான மருத்துவ விசேடத்துறை நிபுணர்கள் தமக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததினால் தாம் மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

    அந்த முனைப்பில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இங்கிலாந்தின் அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் லேபர் கட்சி அரசுக்கு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது.

    அவர்கள் பொருளாதாரத்தைச் சீராக்கவென்று எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கப் போகிறதா இல்லையா என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கத் தொடங்கப் போகிறது.

    இந்த இடைவெளியை அரசியல் , பொருளாதார விமர்சகர்கள் , நிபுணர்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    லேபர் அரசாங்கமும் , அக்கட்சியின் தலைமைத்துவமும் தம் பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

    பொதுமக்களாகிய நாம் இப்புதிய அரசாங்கம் மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்று கூறி பதவிக்கு வந்தவ்ர்கள் கொண்டு வந்த மாற்றங்கள் நம் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறதா என்று அதை நோக்கிய கணிப்பிலிருக்கிறோம்.

    அதேநேரம் சர்வதேச அரங்கில் அமெரிக்க நாட்டின் தலைமைத்துவம் கொண்டுவரும் அதீத மாற்றங்கள் ஏற்படுத்தும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்தப்போகும் மாற்றங்களின் விளைவு என்ன ?

    நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்களை தான் பதவிக்கு வந்து 24 மணி நேரத்தில் நிறுத்துவேன் என்று சூளுரைத்து பதவிக்கு வந்த அதிபர் ட்ரம்ப் நூறு நாட்களாகியும் எந்தப் போரையும் நிறுத்த முடியாமல் தவிக்கிறார்.

    அமெரிக்கா , சீனாவுக்கெதிரான வர்த்தகப் போரில் சிக்கிக்கொண்டு பல நாடுகள் அல்லாடுகின்றன.

    மியான்மார் நிலநடுக்கத்தை ஏற்படுத்திய இயற்கையின் சீற்றம் காவு கொண்ட உயிர்கள் ஆயிரமாயிரம்.

    ஆக மொத்தம் விடையில்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும் சில வினாக்களின் விடைகளையாவது அடுத்த மடலில் பகிர முடியுமா பார்ப்போம்.

    Share
  • தொல்காப்பியம்

    தொல்காப்பியம் யாருடைய அவையில் யார் முன் அரங்கேறியது?

    தொன்மைமிக்க நூலான தொல் காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூலாகும். எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள தொல்காப்பிய நூலில் 1600 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. 1847-ல் தொல்காப்பியத்தை ஓலைச் சுவடி வடிவில் இருந்து அச்சு வடிவுக்கு முதன்முதலில் மாற்றியவர் மழவை மகாலிங்க ஐயர்.

    நிலந்தரு திருவிற் பாண்டியன்” என்ற மன்னனது அவையில், அதங்கோட்டாசான் என்பவர் முன்னிலையில் அரங்கேறியதாக பாயிரம் கூறுகிறது. தொல்காப்பியர் பற்றி பனம்பரனார்,  ‘ஐந்திரம்’ என்ற நூலை நன்கு கற்ற புலவர் என்றும், பல்புகழ் நிறைத்த படிமையாளர் என்றும் புகழ்கிறார்.

    Share
  • பெயரின் முதல் எழுத்து (சிறுகதை)

    பெயரின் முதல் எழுத்து (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “அம்மா! நான் பட்டம் வாங்கறச்சே, எல்லாரோட அப்பா அம்மாவும் யூனிவர்சிடிக்கு வந்திருந்தா. எனக்கு மட்டும்..,” எப்பவோ நடந்ததை நினைத்து, அஞ்சனா பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

    “நான் வேலை செஞ்சாத்தான் நாம்ப சாப்பிட முடியும், ஒன்னைப் படிக்கவைக்க முடியும். ஒனக்குத் தெரியாதா, அஞ்சனா?” கங்காவின் குரல் கெஞ்சியது.

    “நான் ஒன்னைக் குத்தம் சொல்லலே. இன்னிக்காவது சொல்லிடும்மா. நெத்தியிலே பொட்டு இட்டுக்கறே. கழுத்திலேயும் இருக்கு. ஆனா, ஒனக்குத் தாலி கட்டினவரை நான் பாத்ததே இல்லே. அப்படி ஒத்தர் இருக்காரா, இல்லே..”.

    கங்கா பதறினாள். “என்ன வார்த்தை சொல்றே! நான் அப்படிப்பட்டவ இல்லேடி. சட்டப்படி என்னை ஒத்தர் கல்யாணம் பண்ணிண்டார். அவருக்குப் பிறந்தவதான் நீ.”

    “பின்னே ஏன் அவர் நம்பகூட இல்லே?”

    “என்னத்தச் சொல்ல! எங்க கல்யாணம் முடிஞ்ச மறுநாளே அவருக்கு என்னப் பிடிக்காம போயிடுத்து”.

    “நீ அப்படி என்ன பண்ணினே?”

    “நான் ஒரு தப்பும் பண்ணலே”. மகள் சற்றும் எதிர்பாராவிதமாக, கங்கா தன் புடவையைத் தூக்கினாள். “பாத்தியா? இதுதான்..!” அவள் சுட்டிய இடத்தில் சருமத்தின் நிறம் மாறியிருந்தது.

    “`குஷ்டரோகம் இருக்கிற பொண்ணை எல்லாருமா சேர்ந்து என் தலையிலே கட்டியிருக்கேள்!’ அப்படின்னு கத்திட்டுப் போனவர்தான். எங்கப்பா, `இவளுக்குச் சின்ன வயசிலேருந்து இப்படி ஒரு தழும்பு இருக்கு. இது வியாதியில்லே, மாப்பிள்ளை,’ அப்படின்னு அவர் காலைப் பிடிச்சுண்டு எவ்வளவோ கெஞ்சினார். அந்த மனுஷன் மசியலியே!”

    தனக்கு வேறு எந்த விவரமும் தெரியாதே என்று நினைவிலெழ,  “முக்கியமானதை விட்டுட்டியேம்மா. ஒன்னை நிர்கதியா விட்டுட்டுப் போனவரோட பேரு?”

    கங்கா மௌனம் சாதித்தாள்.

    அஞ்சனா மேலும் துருவினாள். “என் பேருக்கு முன்னாடி G ன்னு தலைப்பெழுத்து போட்டியே. அது ஒன்னோட பேரோட முதல் எழுத்துதானே?”

    “அவரோட பேரும் அதிலதான் ஆரம்பிக்கும்”. சொல்லியபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கங்கா, இதற்குமேலும் இதைப்பற்றிப் பேசத் தான் தயாரில்லை என்பதை உணர்த்துவதுபோல்..

    அதற்குமேலும் அம்மாவைக் கஷ்டப்படுத்த மனம் வரவில்லை அஞ்சானாவுக்கு. “இன்னிக்கு ஏதாவது சினிமா பாத்துட்டு, அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாமா?” என்று பேச்சை மாற்றினாள்.

    `அதுக்கெல்லாம் காசு கொட்டியா கெடக்கு?’ என்று முன்போல் சொல்ல முடியவில்லை கங்காவுக்கு. அவர்கள் உரையாடலால் அவள் மனமும் தத்தளித்துக்கொண்டுதான் இருக்கும். பாவம்!

    “இரு. புடவையை மாத்திண்டு வரேன். நீயும் பௌடர் அடிச்சுண்டு வா,” என்று சிரிக்க முயன்றாள்.

    அஞ்சனாவின் மனம் படத்தில் செல்லவில்லை.

    G என்ற எழுத்தில் என்னென்ன பெயர்கள் இருக்கும் என்ற யோசனையில் ஆழ்ந்தாள். கணேசன், கணபதி? கங்காதரன்?

    அதற்குமேல் யோசிக்க முடியவில்லை.

    படத்தில் கதாநாயகன் நாலைந்து தடியன்களை அடித்து உதைத்துக்கொண்டிருந்தான். பின் எப்படித்தான் கதாநாயகியின் மனதில் இடம் பிடிப்பது?

    அஞ்சனா முகத்தைச் சுளித்தாள். இந்த காதல், கத்தரிக்காய் எல்லாம் திரையில் பார்க்கத்தான் சுவாரசியமாக, கிளுகிளுப்பாக இருக்கும். நடைமுறையில் அம்மா மாதிரி எத்தனை பெண்கள் கஷ்டப்படுகிறார்களோ!

    “ஒரே சத்தமா இருக்கு,” என்று முணுமுணுத்துவிட்டு, மெல்ல எழுந்தாள். இருண்டிருந்த தியேட்டரின் கதவிலிருந்து வெளிப்பட்டவளுக்கு ஒரு சிறு கும்பல் கண்ணில்பட்டது.

    `என்ன நடக்கிறது இங்கே?’

    ஒருவர் தரையில் கிடந்தார். முகம் நீல நிறமாக மாறியிருந்தது. கைகள் விறைத்திருக்க, கண்கள் என்னவோ திறந்தபடிதான் இருந்தன.

    அருகில் வேதனை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தவர் அவரது நண்பர் போலும்! “இருதயச் சிகிச்சை நடந்து ஒரு மாசம்கூட ஆகல,” என்று பொதுவாகத் தெரிவித்தார்.

    “நகருங்கள், ப்ளீஸ். என்னால் உதவ முடியும்,” என்றபடி, அவர் அருகில் சென்றாள் அஞ்சனா.

    அவர்களிருவரும் வீடு திரும்புகையில், கங்கா விசாரித்தாள்: “பாதி படத்திலே எங்கேடி போயிட்டே?”

    “நான் போனதும் நல்லதாப்போச்சு. ஒரு உசிரைக் காப்பாத்தினேன்”. நடந்ததை விவரித்தாள். “இந்த reflexology-யால ஒடனே பலன்! அவர் கையில சில எடங்களை அழுத்திப்பிடிச்சேன். ரத்த ஓட்டம் சீராகி, எழுந்து நடந்து போனார். `பை’ அப்படின்னு கையை ஆட்டினார்னா பாத்துக்கயேன்!”

    “அப்படியே புண்ணியம்!” தாய் மெச்சிக்கொண்டாள். “அவர் யாருன்னு கேக்கலியா நீ?”

    “யாரா இருந்தா என்னம்மா? அவர் எழுந்து நடந்ததும், அங்கே இருந்தவாளெல்லாம் என்னைப் பாத்து சிநேகமா சிரிச்சதே சந்தோஷமா இருந்தது! ஒண்ணும் பேசாம நடந்துட்டேன்”.

    வேடிக்கை பார்த்தபடி பேரங்காடியில் நடந்துகொண்டிருந்த அஞ்சனா குரல் வந்த திசையில் திரும்பினாள்.

    “ஹலோ! அன்னிக்கு பேர்கூடச் சொல்லாம அவசரமா போயிட்டீங்களே! எனக்கும் கேக்கத் தோணல”.

    அவள் முகத்திலும் சிரிப்பு படர்ந்தது. பெயரைச் சொல்லிவிட்டு, “சௌக்கியமா?” என்று விசாரித்தாள்.

    “ஒங்க புண்ணியத்தால நல்லா இருக்கேன். வாங்களேன், காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”.

    “ஒங்க பேரைச் சொல்லலியே, ஸார்?”

    “கௌரிசங்கர்”.

    G – யில் ஆரம்பிக்கும் பெயர்! இவருக்கும் தன் அப்பா வயதுதான் இருக்கும். ஒரு கணம் திகைத்தவள், தன்னையே கடிந்துகொண்டாள்.

    இது என்ன பைத்தியக்காரத்தனம்?

    `வேண்டாம்’ என்று அம்மாவைத் துரத்தியவரைப்பற்றி எதற்காக ஓயாது யோசித்து மூளையைக் குழப்பிக்கொள்வது? அந்த மனிதர் எங்கே, எவளுடன்  இருக்கிறாரோ!

    “மத்தவங்க எல்லாரும் வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னப்போ, நீதான் என்னை.,” மார்பில் கையைப் பதித்துக்கொண்டார். “ஒங்க அம்மாவும் அப்பாவும் ஒன்னை நல்லபடியா வளத்திருக்காங்க அஞ்சனா”.

    ஏதோ சொல்லவந்தவள், தன்னை அடக்கிக்கொண்டாள். `எனக்கு அம்மா மட்டும்தான்’ என்பதை கண்டவரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பானேன்!

    “மனுஷனாப் பிறந்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யட்டா எப்படி?” என்றாள் அடக்கத்துடன்.

    “எனக்கு யாருமேயில்ல,” குழந்தைபோல, சுயபரிதாபத்துடன் கூறினார். “ரெண்டு கல்யாணம். ஒண்ணும் நிலைக்கலே”.

    ஒரு முறை அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள். இவ்வளவு பெரியவரிடம் எப்படித் துருவித் துருவிக் கேட்பது!

    தன் மனப்பாரத்தை யாரிடம் கொட்டுவது என்று காத்திருந்தவர்போல் அவரே தொடர்ந்தார்: “ஒருத்திக்குத் துரோகம் பண்ணினேன். தீர விசாரிக்காம அவளைத் துரத்தினேன்”.

    அவரே பேசட்டும் என்று அஞ்சனா காத்திருந்தாள்.

    “பெருநோய் அவ்வளவு லேசா பரவற வியாதியில்ல. ரொம்ப நாள், அதுவும் நெருக்கமா இருக்கிறவங்களுக்குத்தான் அந்த வியாதி வர வாய்ப்புண்டு. அது தெரிஞ்சதும், குத்த உணர்ச்சி உறுத்திக்கிட்டே இருந்திச்சு. எனக்கு அவசர புத்தி”.

    `இப்போது இந்தப் பேச்சு எதற்கு?’ என்று அஞ்சனா கேட்கவில்லை.

    “இன்னொருத்தியை ஏத்துக்க முடியல. அவ கேஸ் போட்டா. எனக்கு..,” தலையைக் குனிந்துகொண்டார். “நான்.. ஆம்பளையே இல்லேன்னு!”

    அஞ்சனாவுக்கு அதற்குமேலும் சந்தேகம் இருக்கவில்லை.

    `நீங்கள் ஆண்மகன்தான். உங்களுக்குப் பிறந்த பெண் நான்!’ என்று கூறிவிடலாமா?

    `எதற்காக?’ என்று அவள் மனம் இடக்கு செய்தது.

    துரோகமாம், குற்ற உணர்ச்சியாம்! என்னமாக அளக்கிறார்! பிரயாசைப்பட்டுத் தேடியிருந்தால் அம்மா இருக்கும் புதிய இடத்தைக் கண்டுபிடித்திருக்க முடியாதா?

    இத்தனை வருடங்களாக அம்மா எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பாள்! ஏன், தானே கேட்கவில்லையா, `நீ முறையாகக் கல்யாணம் செய்துகொண்டவள்தானா?’ என்று?

    இந்த மனிதர் நன்றாகத் துடிக்கட்டும்.

    சே! இவருக்கா உதவி செய்தேன்! மற்றவர்களைப்போல, வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்திருக்கலாம்.

    “என்னம்மா அஞ்சனா எழுந்துட்டே?”

    “எனக்கு அவசரமா ஒரு எடத்துக்குப் போகணும். மறந்தே போயிட்டேன்,” என்றபடி அஞ்சனா அங்கிருந்து விரைந்தாள்.

    அவள் போன திசையையே பார்த்தபடி இருந்தவருக்கு ஏதோ புரிந்தாற்போல் இருந்தது. இவளைப் பெற்றவள் தான் கைவிட்ட கங்காதான். அதே சாயல்! வேறு ஒருவரை மணந்து, இவளைப் பெற்றிருக்கிறாள்.

    தாலி கட்டிய பெண்ணுக்குத் துரோகம் செய்துவிட்டதாக எண்ணி இவ்வளவு காலமும் துடித்தோமே! எல்லாம் வீண்.

    கௌரிசங்கருக்கு அழுகை வரும்போல இருந்தது.

    வீடு திரும்புகையில், அஞ்சனா பலவாறாக யோசித்தாள்.

    `அம்மா! நான் அப்பாவைப் பாத்துப் பேசினேன்’.

    `அவர் யார் தெரியுமா? அன்னிக்கு ஒரு நாள் தியேட்டரில..’

    அம்மா என்ன சொல்வாள்?

    `கையோட அப்பாவை அழைச்சிண்டு வந்திருக்கமாட்டியோடி?’ என்பாள். கண்களில் ஆர்வம் கொப்புளிக்கும்.

    அவர் வந்தால், அம்மாவின் உலகத்தில் அவரும், அவருடைய உலகத்தில் அம்மாவும்தான் இருப்பார்கள், கடந்தகால இழப்பைச் சரிசெய்வதுபோல். இனி, அவளை யார் கவனிக்கப்போகிறார்கள்!

    வேண்டாம். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதுபோல் ஆகிவிடும். எனக்கு அம்மா வேண்டும்.

    “எங்கே போயிட்டே, அஞ்சனா? ரொம்ப இருட்டிப்போயிடுத்தே! வேலை அதிகமா இன்னிக்கு?” அம்மாவின் உண்மையான கரிசனம் ஒரு கணம் அவளை நிலைதடுமாறவைத்தது. சட்டென்று மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.  `ஆமாம்மா. ரொம்ப வேலை!” என்றாள், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.

    Share
  • தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து. விசுவ(வா)வசு

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து. விசுவ(வா)வசு

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து.
    விசுவ(வா)வசு

    சத்தியமணி 14 04 2025
    ராகம். ஆனந்த பைரவி

    பிறந்தாளே பிறந்தாளே சித்திரை பூமியில்
    விஸ்வவசு பெயரோடு தான்
    மலர்ந்தாளே தவழ்ந்தாளே நித்திரை எழுப்பியே
    விசுவாசம் மணம்வீசும் தான்

    திங்கட் கிழமை திவிதியை நன்னாளில்
    மங்களம் பொங்கிவர நம்வாசல் வந்தாள்
    அங்கம் மினுக்கும் தங்கம் அணிந்து
    சுவாதியில் சிற்றாடைப் பெண்ணாய் நுழைந்தாள்
    தெய்வங்களும் அருள் கூட்டுமே
    முன்னோர்களின் வரம் சேருமே
    இந்நாளும் எந்நாளும் இன்பங்களே

    வச்சிரம் யோகம் சைதுளைக் கரணமாய்
    அச்சிராப் பள்ளி பிள்ளையும்
    தடை போக்குவார்
    மெச்சிப் புகழும் உச்சி குளிரும்
    அன்போடு சுற்றமும்
    களிப் பூட்டுவார்
    மயிலோடு வேல் சிவனாருமே
    உமையோடு ஏழு மலையானுமே
    திருமகள் இல்லத்தில் அமர்ந்தார்களே

    Share