Blog

  • உச்சி மாநாடு!

    எல்லைக் கட்டுப்பாட்டுக்குள்
    தூய்மைப்படுத்த
    அப்புறப்படுத்த
    சீர்படுத்த
    ஒரு
    கணக்கெடுப்பு!

    மனிதப்பதர்களின்
    இயற்கைச் சூழல்
    அட்டூழிய
    அடாவடிகள்
    எதிர்கொள்ள
    ஒரு
    கருத்தாய்வு!!

    வேலனது
    பருத்திக்காட்டில்
    பச்சைப்புழு அகற்றம்
    குமரனது நெற்பயிரில்
    அடர்புழு நீக்கம்
    கந்தனது வாழையில்
    குருத்துப் புழு
    கொத்தியெடுப்பு
    ஆங்காங்கே
    வேலை நியமனம்!

    எல்லாமும்
    அலசி ஆய்ந்திட
    ஊர்த்தலைவாசலில்
    மின்னோட்டமில்லா
    மின்கம்பிகளில்
    மின்னல்வேக
    ஏற்பாட்டில்
    ஓர்
    உச்சிமாநாடு!

    இது
    அனைத்துண்ணிகளாம்
    பகுத்துண்ணிகளின்
    உச்சிமாநாடு!!

    Share
  • கட்டுக்கடங்காத வெள்ளம்!

     

    இசைக்கவி இரமணன்    

    காலு வச்ச எடமெங்கும்  தாமரை
    கையி தொட்ட எடமெங்கும் பூமழை
    கண்ணு பட்ட எடமெல்லாம் பெளர்ணமி
    கன்னு முட்ட முட்டவரும் பால்மடி

    இவ எட்ட முடியாத பைரவி
    எவனும் கிட்ட நெருங்காத பேரொளி

    அவ சுட்ட எடமெங்கும் பொட்டலே
    அது தொட்ட கணத்துல பூக்குமே

    இது கட்டுக் கடங்காத வெள்ளமே
    அதைக் கட்டத் துடிக்குது உள்ளமே

    தென்றல் தொட்டு விழுந்தது பட்டு மலரொன்று
    போகுது ஊர்கோலமே!

    இனி திக்குத் தெசெயொண்ணுமில்லயே
    இதில் திரும்ப வழியொண்ணுமில்லயே
    இதில் இன்பமும் துன்பமும் வண்ணமே
    அதில் வண்ணங்கள் ஒவ்வொன்றும் ராகமே

    எந்தன் நட்டநடு நெஞ்சில் பைரவி
    அது பட்டப் பகலினில் ராத்திரி

    தங்கம் கொட்டிக் கெடக்குது கொல்லையில்
    உயிர் பஞ்சுப் பறக்குது கொள்ளையில்

    இன்னும் எத்தனை எத்தனை சென்மமோ?
    இந்த அன்புக்குப் பேரென்ன வன்மமோ?

    அந்த முத்துச் சிரிப்பியின் பித்தத்திலே
    இந்தச் சத்தமும் சங்கீதமோ?
    நான் உங்களுக்கு வழி சொல்லவா?
    அட உங்களையும் சுழல் கொள்ளவா?
    தேன் சின்னத் துளியில்ல ஊருணி
    வான் அந்தத் துளிக்குள்ள முக்குளி
    அவ வச்சுக்கிட்ட பேரு பைரவி
    அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் காவிரி

    அட கண்ணில் பெருகுது கங்கையே
    அடி காலை அளந்தவன் தங்கையே

    அம்மோய்! அண்ட பகிரண்டம் பம்பரம்
    அங்கு ஜனன மரணங்கள் சாமரம்

    என்னைக் கொண்டவளே உன்னைக் கண்டொருநாள் ரெண்டு
    வார்த்தை சொன்னாலிது தீருமோ

    அவ ஊரறியாத பயங்கரி
    வந்து ஊட்டி வளர்க்கிற சங்கரி
    அவ வச்சதுதானிங்கு சட்டமே
    அந்தச் சட்டமெல்லாம் அவ இட்டமே

    உயிர் உன்மத்த உச்சமே பைரவி
    அதில் ஊறிக் கெடக்குது என்விதி

    இனி மிச்சமொண்ணுமில்ல சங்கதி
    அட மீனுக்கு முக்கெல்லாம் சந்நிதி

    அந்தக் காத்துல வாசனை என்கதி
    அவ காலில் கெடப்பதே நிம்மதி

    அந்த உச்சாணிக் கொம்புல உக்காந்த பைங்கிளி
    பேச்சில் அறுந்தது சங்கிலி!

    காலு வச்ச எடமெங்கும் (இசை வெள்ளத்தில் மூழ்கித் திளைக்க)

    படத்திற்கு நன்றி :

    http://srisubramaniamthroupathai.webs.com/srithroupathaimahashakti.htm#542691942

    Share
  • வீணையடி நீ எனக்கு!

     

     

    ஷைலஜா

    கர்னாடக சங்கீதத்தின் உயிர்நாடியாக விளங்குவது வீணை. வீணையை உற்பத்தி செய்வதும் சரி, பயில்வதும் சரி கடினமானது. வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும் உன்னத வாத்தியமாகும். தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும், அதி முக்கிய வாத்தியமாக அன்றும், இன்றும் விளங்குவது வீணை தான்.

    வீணை மிகவும் தொன்மை வாய்ந்தது. ஆன்மீகம் சார்ந்தது, வரலாற்றுப் பெருமைமிக்கது. இலங்கை மன்னன் இராவணன் வீணை வாசிப்பதில் உயர்ந்தவனாகவும்
     
     
     அவனது வீணை இசையில் எல்லாம் வல்ல சிவபிரானே லயித்ததாகவும் புராணக்கதை கூறும்.
     
    இன்றும் திருவரங்கம் அரங்கன் கோயிலில் இரவு திருவரங்கனுக்கு ஏகாந்த வீணை இசை வாசிக்கப்படுகிறது.(வேறு கோவில்களிலும் இருக்கலாம்)

    இன்று தமிழ் கலையுலகில் அரங்கத்தை அலங்கரிக்கும் அதி சிறப்பு வாத்தியங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்துள்ள வாத்தியமாக விளங்குவது வீணை… பலா மரமே இவ்விசைக் கருவியினை வடிவமைக்க பெரிதும் பயன்படுத்தப்படும் என்றாலும் ஒவ்வொரு வகையான வீணையைப் பொறுத்து வீணை
     
    செய்யப்பயன்படுத்தப்படும் மரமும் மாறுபடுகிறது.. கலைவாணி சரஸ்வதிதேவியின் திருக்கரங்களில் காணப்படும் வீணையானது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை அல்லது தஞ்சாவூர் வீணையென்று அழைக்கப்படும். தஞ்சையை ஆண்ட மன்னனான இரகுநாத மன்னனின் காலத்தில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட வீணையே மேற் குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய வீணை இசைக் கருவியாகும். இது தவிர நடைமுறையில் பல வகைப்பட்ட வீணை இசைவாத்தியங்கள் இன்று வழக்கத்தில் இடம்பெற்ற போதும் பொதுப்படையில் மேலே குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய தஞ்சாவூர் வீணையே புழக்கத்திலும் தமிழரின் பாரம்பரிய நாரிசை வாத்தியமாகவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.

    மேற்குறிப்பிடப்படும் வீணை ஆனது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலும் அதன் ஒட்டு மொத்த அழகியல் அலங்கரிப்பு உருவ
     அமைப்பிலும் தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது. அதே சமயம் மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும்,
     வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை)
     மற்றுமொரு உற்பத்தி பூமியாக திருவனந்தபுரம் விளங்குகின்றது. திருவனந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவனந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில்அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பனவற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.

    கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஓரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் என சொல்லப்பட்டாலும் வீணை மீட்டலே சரியான வார்த்தை ஆகும் .
     
    வீணைகளையும் தம்புராக்களையும் உற்பத்தி செய்யும் தொழிலில் திருச்சியும் நாத பரம்பரையை வளர்ப்பதில் தன்னாலான தொண்டு புரிந்து வருகிறது. பல வெளிநாடுகளுக்கு   இந்த வாத்தியங்களை  ஏற்றுமதி செய்துவரும் ராம்ஜீ கம்பெனியை  திருச்சி ஆண்டார் தெருவில் மிக எளிமையான தோற்றத்துடன் ஆனால் உள்ளே கலையின் சாங்கோபாங்கமான விளக்கமுடன் இருப்பதை  சிறுமியாய்  இருக்கும்போது அப்பாவுடன் சென்று காண நேர்ந்தது. அப்போது அதன் உரிமையாளராக இருந்தவர்  அப்பாவிடம்,” இதை தொழில்னு சொல்லமுடியாதுங்க சார்  உயிர்த்துடிப்புள்ள கலைன்னு தான் சொல்வேன் வீணை தம்புராக்கள் செய்யறது மட்டுமில்ல  அவைகளை ரிப்பேருக்கு யாரும் கொண்டுவந்தா என் சொந்த செலவுலயே  செய்து்  தந்துடுவேன்” என்றார் மகிழ்ச்சியாக.
     
    ஒலிநயத்தைப்பற்றியும் சங்கீததைப்பற்றியும் நூற்றுக்கணக்கான நூல்கள் அந்ததொழிலகத்தின்  சிறிய  நூல்நிலையத்தில் இருந்தன  உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும்   அந்த   நூல்களைப்  பார்த்துதான் சரி செய்துகொள்கிறார்களாம். அந்த வாத்திய தொழிலகத்தின் பின்பக்கம் உள்ள கூடத்தில் முதல் உற்பத்திக்கூடங்கள் இருந்தன  ஒருவர் தண்டியை சரி செய்துகொண்டிருந்தார் இன்னொருவர் யாளிமுகப்புக்கு  ஃபினிஷிங் டச்  கொடுத்தார்.  வேறொருவர் சுருதிக்    கம்பிகளை இணைத்துக்கொண்டிருந்தார் . உற்பத்திக்கட்டங்கள்  பலவாறாகக்  காணப்பட்டன.
     
    ‘சாதகத்தால் பலம் பெறுகிறது சங்கீத ஞானம்  அதேபோல  ஆற  அமர   சிந்திச்சி செதுக்கி நகாசுகள் செய்து  நாதப்பரிசோதனை செய்து பெருமை பெறுவது
     வீணையாகும்” என்றார் அங்கிருந்த  ஒருவர். மேலைநாட்டு சங்கீதவிற்பன்னர்கள்  திருச்சியின் இந்த இசைக்கருவி தொழிற்கூடத்திற்குவந்து நாதப்பரிவர்த்தனை செய்து சென்றிருக்கிறார்களாம். பிரமாண சுருதி  என்றும் சுருதி ஆனந்தம் என்றும்  பெரியோர் கூறுவார்கள் நாதத்தின் உயிர் நாடியே சுருதி தானே!
     
     உற்பத்தியாளராக  வியாபாரியாக மட்டும்   இல்லாமல் தன்னை  ஒரு கலைஞராயும் அமைத்து  தாம் உற்பத்திசெய்யும்  தம்புரா வீணைகளை  சுருதி மீட்டி சரி பார்த்தார்  அன்று நான் சென்றபொது இருந்த அந்த  உரிமையாளர்(பெயர் மறந்துவிட்டது)ஆண்டார் தெருவில் தயாராகும் வீணையைப்பற்றி  அப்போது  திருச்சி தொழிலதிபர் இப்படிக்கூறினார் என அப்பா விவரித்தார்,”  வீணை இங்கே உற்பத்திச் செய்து விற்கப்படுகி்றது ஆனால் மறக்கப்படுவது கிடையாது! (A  Veena  is  sold  here, but is not  forgotton)

     இசைக்கருவிகளில்  வீணை  சிறந்தது ஏன் என்றால்  அதை எளிதிலே உண்டாக்கிவிட முடியாதாம் நல்ல மரத்தைதேர்ந்தெடுத்து வெவ்வேறு பகுதிகளையும் அமைத்து  அவற்றை இணைத்து     தந்தி பூட்டி உருவாக்கவேண்டும். அழகிய பருவ மங்கைபோல் விளங்கும் வீணை கமகத்தில் சிறந்தது. எந்தக்கருவிக்கும்   இல்லாத சிறப்பு வீணைக்கு உண்டு , ஆம், மற்ற கருவி்களை இயக்கும்போது ஒலிக்கும் விரல்களையோ வாயையோ எடுத்தால்  ஒலி நின்றுவிடும் ஆனால் வீணையை மீட்டியவிரலை எடுத்த பிறகும் அதன் கார்வை இனிதாக ஒலித்துக்கொண்டே  இருக்கும் , பெண் மனம்  போல!

    படங்களுக்கு நன்றி :

    http://en.wikipedia.org/wiki/Saraswati_veena

     

     

    Share
  • துர்க்கை

     

     கவிநயா

     துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் துன்பம் மிரண்டு போகுமே!

    நற்சொல்லாகி நாவில் நின்று நாளும் நம்மைக் காக்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் தீமை ஓடிப் போகுமே!

    நற்பலன்கள் நம்மைத் தேடி வந்து நன்மை சேர்க்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் அச்சம் அச்சம் கொள்ளுமே!

    நற்றுணையாய் நிமிடந் தோறும் கூட நின்று காக்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் சஞ்சலங்கள் விலகுமே!

    சத்தியத்தைக் காட்டி நம்மின் சோதனைகள் தீர்க்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் வினைகள் யாவும் தீருமே!

    வித்தை போல நல்லவற்றைத் தந்து நம்மைக் காக்குமே!

     

    துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் தோல்வி தோற்றுப் போகுமே!

    நிற்க என்று சொல்லி வெற்றி நம்மை வந்து பற்றுமே!

     

    துர்க்கை என்னும் நாமம் சொன்னால் அமைதி நெஞ்சில் கூடுமே!

    ஆனந்தமே ஆனந்தமாய் நம்மை வந்து சேருமே!

     

    கற்க என்று காலன் வந்து பாடம் சொல்லும் முன்னமே

    துர்க்கை நாமம் நெஞ்சில் வைக்க என்றும் நன்மை நன்மையே!

     

    படத்திற்கு நன்றி

    http://iravuvaanam.blogspot.com/2011_10_01_archive.html

    Share
  • பரமஹம்ஸரும் பவதாரிணியும்

     

    இசைக்கவி ரமணன்

    அவளுக் கென்றோர் மனமுண்டு! அதில்
    ஆயிர மாயிரம் குணமுண்டு!
    சிவனை நெஞ்சில் மிதித்திடுவாள், ஒரு
    சித்திர மலராய்ச் சிரித்திடுவாள்
    கவலைகள் யாவும் இவளேதான், ஒரு
    கலமாய் வருவதும் அவளேதான்!
    எவரும் எதுவும் அறியாமல், இவளே
    எதிரே புதிராய்த் திரிகின்றாள்!

    ஏதும் துவங்கிய முன்பேயே, அவை
    எல்லாம் விழுங்கி வியர்த்தவள்தான்
    ஏதோ மிஞ்சி இருப்பதுபோல்
    இன்றும் வீதியில் திரிகின்றாள்
    தீதும் நன்றும் இவள்கண்கள், இவள்
    சிந்திய சிரிப்பே நம்பெண்கள்
    கீதம் பாடும் கவிஞர் நெஞ்சில்
    கிளர்ந் தெழுந்திடும் கிரணங்கள்!

    உச்சி வெய்யில் வியர்வையிலே
    உடம்பில் ஒருவித நடுக்கம்போல்
    பிச்சியின் சினத்தின் உச்சத்தில்
    பெயர்ந்த சுகமே பக்தியடா!
    தன்னை மீறிய புதிரொன்று
    தன்னி லிருந்தே தோன்றியதை
    அன்னை உணர்ந்து வியக்கின்றாள்
    அதனைக் காண விழைகின்றாள்!

    எங்கே எப்படிக் காணுவது?
    எவ்விதம் தன்னைக் காணுவது?
    கங்கைக் கரையின் ஓரத்தில்
    கனலாய் பக்தி ஒதுங்கியது
    அங்கே பதுமை வடிவத்தில்
    அநந்த சக்தி ஒடுங்கியது
    எங்கும் காணாப் பேரின்பம், ஓர்
    ஏழையின் மூலம் துலங்கியது!

    பவதா ரிணியே கண்ணாடி
    பரம ஹம்ஸரே பக்தியதில்
    அவரை வைத்துத் தன்னைத்தான்
    கண்டு மகிழ்ந்தாள் பராசக்தி!
    சிவனே அறியாப் பேதையவள்
    சித்தம் சிலிர்க்க வைத்தவரை
    இவனா கவியில் பாடுவது?
    இலையா நதியைச் சூடுவது?

    பக்திக் கனலின் வெப்பத்தால்
    சக்தியின் பிடரியைப் பற்றியவர்
    சக்தி யென்னுமோர் மூர்க்கத்தை
    சற்றும் குறையா ஆக்கத்தை
    நற்கதி அனைவரும் பெறவேண்டி
    நட்டு வைத்தார் நடுவூரில்
    முக்தியும் இதற்கோர் ஈடில்லை, எந்த
    முடிவும் இதுபோல் சுகமில்லை!

    காளியின் கண்ணைப் பாருங்கள், அதில்
    பரம ஹம்ஸரே தெரிகின்றார்
    தூளியி லாடும் குழந்தைபோல்,
    தூண்டிற் புழுபோல், தோள்தேடும்
    தோழன் போல், ஒரு துணைவன்போல்
    துவண்டு புரண்டு துடிக்கின்றார்
    ஆளே யின்றி அத்வைத
    அருமை ஒருமையில் நிற்கின்றார்!

     
    அவளுக் காக அழுவதுபோல்
    ஆனந் தம்வே றொன்றில்லை
    அவளே கதியென விழுவதுபோல்
    அறிவொன் றிங்கே வேறில்லை
    அவளே தானாய்க் காண்கின்ற
    அனுபவம் போல்பிறி தொன்றில்லை
    பவதா ரிணியைக் காணுங்கள்
    பரம ஹம்ஸர்தான் தெரிகின்றார்!

    படத்திற்கு நன்றி :

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

    Share
  • ஸ்ரீ ஷிர்டி சாயி ஆறு

     

    இசைக்கவி ரமணன்

    ஸ்ரீ ஷிர்டி சாயி ஆறு

    (அக்டோபர் 21, 1985 விஜயதசமி அன்று எழுதியது)

     

    பாடத் திறந்தவாய் மூடமுடி யாதபடிப்
    பாயும்கங் கைப் பிரவாகம்
    பருகத் திறந்தவிழி பரிதியாய் விரியவே
    பரவுமின் பப் பிரகாசம்
    சாடப் பிறந்தகலி ஓடச் சிரித்தபடி
    சஞ்சாரம் செய்யும் நாகம்
    தரையேது வானேது தெரியாத விதமாகத்
    தாயாகப் பொழியு மேகம்
    தண்மையை தழலான தங்கதீபம் நெஞ்சைத்
    தாலாட்டும் தேவ கீதம்
    தந்திகளை உந்திவரும் சங்கநாதம் நல்ல
    தருணத்தில் வந்த வேதம்
    ஆடாஆ டப்பெருகும் ஆவேசம் நெஞ்சைவிட்
    டகலாது நீளும் தாபம்
    அள்ளஅள் ளப்பரவும் ஆனந்த சாகரம்
    அமிழ்தமென் சாயிரூபம்!

     

    நந்தா விளக்காக நமதுவினை எரியவதில்
    நாயகன் குளிர்காய்கிறான்
    நாளாக இரவாக வாளாகத் நின்றுதுயர்
    நண்ணாமல் காவல் செய்வான்
    வந்தாடும் பிள்ளையெனைப் பந்தாடி வீடெங்கும்
    வாசலாய் மாற்றிவிட்டான்
    வருவதெது செல்வதெது விரைவதெது தெரியாமல்
    வண்ணவிண் நாய்நிறைந்தான்
    என் தாயுமல்லவோ என் தந்தையல்லவோ
    எல்லாமும் நீயல்லவோ!
    ஏனோ வெறித்தபடி எங்கோநீ நோக்குவதும்
    எமதுநலன் தானல்லவோ?
    சந்திநே ரத்தொளிரும் தங்கத் தடாகத்தில்
    தாமரை எங்கள் தேகம்
    சந்நிதி உலாவந்து சஞ்சலம் தீர்க்கும் ஆச்
    சர்யமென் சாயி நாமம்!

     

    யார்சொல்லி வீதியினில் யாகத்தின் ஜ்வாலையாய்
    யாசகம் கேட்டுவந் தாய்?
    யார்சொல்லி ஆனந்த லீலைகள் மாயங்கள்
    அன்றாடம் என்றாக்கினாய்?
    யாரழைத் தாலும்வந் தருள்செய்யும் கருணையை
    ஐயனே எங்கு கற்றாய்?
    அபலையாய் நின்றவெனை அன்போடு தடவியேன்
    அருள்மொழிகள் பேசவைத்தாய்?
    ஓரிழை கூடவொளி நுழையாத நெஞ்சிலேன்
    உள்ளங்கை யாகநின்றாய்?
    ஓங்காரம் ரூபமாய் ஒளியெலாம் நாதமாய்
    ஓயாமல் விந்தைசெய்தாய்
    ஆரழைத் தாலும்விசி அகலாமல் கடலுன்னுள்
    அலையாய்க் கலந்திருக்கும்
    அல்லல்புயல் வீசுமொரு தொல்லைப்ர தேசத்தின்
    ஆச்சரியம் சாயிதீபம்!

     

    விட்டாலும் எனைவிட்டு வெளியெங்கும் போகாமல்
    வீடாக வாழவேண்டும்
    கொட்டாமல் உள்ளழகுக் கோலத்தை யேகாண
    ஒத்தாசை செய்யவேண்டும்
    சுட்டாலும் உன்கோவில் சுவரிலே மோதிநான்
    சுமையின்றி வீழவேண்டும்
    ஒட்டாமல் நின்றபடி உயிரெலாம் தழுவுமுன்
    உள்ளன்பில் நெகிழவேண்டும்
    முட்டாமல் முட்டிமடி மோதிக் களிக்கும்நான்
    மோகனக் கன்று நீ தாய்
    தொட்டாலும் வானமாய்த் தொலைவெங்கும் செல்லாமல்
    தூபமாய் நீ நிறைந்தாய்
    எட்டாத படியென்று முட்டிமுட் டிக்கதறி
    எத்தனைக் காலமழுதேன்!
    முட்டா ளெனைக்கொன்று முகமெலாம் ஆனந்தம்
    மூட்டியது சாயிதீபம்!

     

    விழிதிறந் தாலென்ன இமைவிழுந்தா லென்ன
    வேண்டியதை மனம்பார்க்குமே!
    வெளியென்றும் உள்ளென்றும் விளையாட்டு நின்றகணம்
    விரிகின்ற புதுலோகமே!
    மொழியெலாம் சுடராகிச் சுடரெலாம் மொழியாகி
    மோடி தலை சுழலுதையா!
    மோனமா ஞானமா மூண்ட அபிமானத்தில்
    வானெலாம் அழுததையா!
    வழியெலாம் திருநாட்கள் வாசலில் கைபொத்தி
    வரவேற்றுப் பாடுதையா
    தவழ்ந்திடத் தவழ்ந்திடத் தரையெலாம் மடியாகித்
    தடுமாற வைக்குதையா!
    அழவேண்டி வரும்கண்ணீர் ஆகாய கங்கையாய்
    அடிநெஞ்சில் மோதுதையா!
    தொழவேண்டும் என்றேனும் தோணாத மூடனின்
    தோள்தட்டும் சாயிநாமம்!

     

    நரகத்தில் வாழ்வதே நலமென்று நம்பினேன்
    நாதனே வந்துநின்றாய்!
    நான்பார்க்கி றேனென்னும் மடமையினி யில்லையெனை
    நீபார்க்கும் நினைவுபோதும்!
    விரகத்தைக் கொண்டாடும் வீணனைத் துரியத்தின்
    வெட்டவெளி தொட்டருளினாய்
    வீணான காலங்கள் விளைக்கின்ற உரமாகும்
    விந்தையதை யும்புரிந்தாய்
    கரகங்கள் தலைமீது காலடியில் கனலாறு
    கடுவெய்யில் சுட்டெரிக்க
    கங்கையாய் வந்தென்னைக் காப்பாற்றி மாறாத
    கடனாளி யாக்கிவிட்டாய்
    சிரசுக்குன் சீரடி சிந்தைக்கு ஷீரடி
    சித்தமெல் லாமுன் துனி!
    செப்புவதும் உந்நாமம் சிந்திப்ப துன்ரூபம்
    சேரும்கதி உன்தீபமே!

    படத்திற்கு நன்றி :
    http://www.saibaba.ws/quotes/shirdi100sayings.htm

    Share
  • மீண்டும் ‘இல்னாவின்’ தலைவராக பரேஷ் நாத்

     

    செல்வரகு

     

    BY,

    T.JAYANTHI

    EDITORIAL IN-CHARGE,
    GRIHSHOBHA (Delhi press Group)

     

    Share
  • இடப்பெயர்ச்சி

    சாந்தி மாரியப்பன்

    பக்கத்து வீட்டுத் தாத்தா
    திரும்பாப்பயணம் புறப்பட்டு விட
    சலனமின்றி
    இடம் பெயர்ந்தது சாவிக்கொத்து
    முன்னுரிமைப்படி..

    சாய்வு நாற்காலிக்கு அடுத்த தலைமுறையும்
    சொகுசு நாற்காலிக்கு மூன்றாம் தலைமுறையும்
    அவசரமாய் அடித்துக்கொண்டு
    ஆரவாரமாய் இடம் பெயர
    அமைதியாய் நிகழ்ந்ததோர் இடப்பெயர்ச்சி..
    துணி மூட்டையுடனும் தட்டுடனும்
    திண்ணையில் பாட்டி.

     

    படத்திற்கு நன்றி : http://valerioberdini.photoshelter.com/gallery/Life-on-the-Pavement-Kolkata-India/G0000.2lGdfeOmrg

    Share
  • வல்லமையாளர்

     

     

    திவாகர்

    கடுதாசி எழுதுவது என்பதே ஒரு இன்பம். அது போல கடுதாசி நமக்கு வரும்போதெல்லாம் அதைப் படிக்குபோதெல்லாம் ஒரு இன்பம் வரும். உலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் செய்திகள் உடனுக்குடன் வரும்  இந்த அதி நவீன காலத்தில், எங்கு நோக்கினும் எல்லோரிடமும் கைபேசி இருக்கும் இந்தக் காலத்தில், அறிந்தவர் அறியாதவர் என்று  எந்நேரமும் நம் காதுகள் ஒரே பிஸி பிஸிதான். மொபைல் வந்தாலும் வந்தது.. போயே போய் விட்டது எழுத்தால் செய்தி தெரிவிப்பது என்பது.. புருஷன் ஊருக்குப் போகிறான். உள்ளூர் ஸ்டேஷன் போய் வண்டி ஏறுமுன்பு மனைவிக்கு ஒரு கால், ஸ்டேஷன் வந்தாச்சு, வண்டிக்கு காத்திருக்கிறேன் என்று, சரி, வண்டி வந்து விட்டது – வண்டி ஏறிவிட்டேன்.. வேற? என்று  இன்னொரு கால், பிறகு வண்டியில் போய்க்கொண்டிருக்குபோதே நிறைய பேச்சுகள், இறங்கவேண்டிய ஸ்டேஷன் வந்தவுடன் பேச்சுகள்.. பேச்சுகள்.. இந்த உலகில் ஒருத்தரை ஒருத்தர் பிரிவது என்பது சாத்தியமே இல்லை என்பதாக ஆகிவிட்டது

    பிரிவு என்பது அன்பை வலுப்படுத்த மிகவும் அவசியம் என்றெல்லாம் ஒரு காலத்தில் சொல்வார்கள். அந்தப் பிரிவெல்லாம் இனி இல்லை.. ஒருவரை ஒருவர் பிரிந்தால் கூட பிரிவு நேரத்தில் வசதியாக . மொபைல் போன் இருக்கவே இருக்கிறது. எந்நேரமும் பேசலாம், கொஞ்சலாம், சண்டை போடலாம், திட்டலாம், எரிச்சல் படலாம்.. தாம் என்னென்ன அந்தந்த நேரத்தில் செய்து கொண்டிருக்கிறோம் என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கலாம்.. ஆஹா எத்தனை வசதிகள்..

    ஆனாலும் கொஞ்சம் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன். அதே மனைவி, அதே கணவன்.. வீட்டை விட்டு வெளியூர் சென்ற கணவன் திரும்பி வரும் வரை காத்திருப்புதான், மனையாளுக்கு எத்தனையோ கவலைதான்.. அதோ தபால்காரர் வருகிறார்.. கணவர்தான் கடிதம் எழுதியிருப்பார்.. ஆமாம்.. அவரோட கடிதம்தான்.. அடடா.. இரண்டு வரியில் எத்தனை அன்பு வெளிப்படுகிறது அவரிடம்.. இவள் இல்லாமல் பொழுதும் கொஞ்சமும் நகர்வது இல்லையாமே.. இங்கு மாத்திரம் என்ன வாழுகிறதாம்.. உடனுக்குடன் பதில் எழுதவேண்டும் என்று அவள் கை துடிக்கிறது.. முதல்நாள் வாங்கி வைத்திருந்த அந்த இன்லாண்ட் லெட்டர் உடனுக்குடன் மேசையிலிருந்து உருவப்பட்டு அவள் தன் ஆசை எண்ணங்களால் அன்பு எனும் மை கொண்டு நிரப்பப்படுகிறது. பிரிவுதான் எத்தனையோ இன்பத்தை அவன் திரும்பி வரும்போதுதான் அதிகம் வெளிப்படுத்தும், இடையில் இந்தக் கடிதங்களின் இன்ப உலா.. ஆஹா!!

    ஆனால் இந்தக் கடிதங்களெல்லாம் கதைகளிலும் கற்பனைகளிலும் மட்டுமே இனி காணலாம். கொஞ்சம் அதிர்ஷ்டமிருந்தால் இரவில் கனவு கூட வரலாம்தான்.. யாருக்காவது கனவில் தான் கடிதம் எழுதுவது போல கண்டால் காலையில் ஞாபகம் வைத்துக் கொண்டு வெளியேயும் சொல்லி விடுங்கள்.. இவர்  கனவில் கடிதம் எழுதினாராம் என்று அதிசயப் பிறவியாகப் பார்க்கலாம்.

    அப்படிப்பட்ட அதிசயம் படைத்த ஒரு கடிதத்தை இந்த வாரம் திரு பழமைபேசி வல்லமையில் http://www.vallamai.com/literature/short-stories/27373/ அம்மாவுக்குக் கடிதம்’ என் சிறுகதையில் கொடுத்திருக்கிறார். இக்கடிதம் ஒரு வகையில் மாறுபட்ட உணர்ச்சியில் எழுதப்பட்ட கடிதம் என்றாலும், மனதில் எழுந்த கருத்துக்களை அழகாக வெளிப்படுத்தி  எழுதப்பட்டது என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.

    அன்புடன் அம்மாவுக்கு,

    சுகாதாரத்தில் நான் மிகவும் நலமாய் இருப்பதாகவே உணருகிறேன். இன்று நான் உன்னைச் சந்திக்கிற வரையிலும் மனரீதியாகவும் நலமாய்த்தான் இருந்தேன். ஆனால் தற்போது அப்படி இல்லை. மிகவும் வருத்தமாய் இருக்கிறது.

    நீயும் உன் கணவனுமாகச் சேர்ந்து கொண்டு என் பள்ளிக்கூட முன்றலுக்கு ஏன் வந்தீர்கள்? வந்ததோடு மட்டுமல்லாமல், ஏதேதோ பேசி நண்பர்கள் மத்தியில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள்.

    எனக்கு நன்கு நினைவிருக்கிறது. இனிமையான கோடைகால விடுமுறை அது. ஆறாம் வகுப்புத் தேர்வு எழுதி விட்டு, பெருமைமிகு ராபின்சன் இடைநிலைப் பள்ளியில் அடுத்த ஆண்டு படிப்பினைத் தொடரப் போகிறேன் எனும் மகிழ்ச்சியில் திளைத்து மகிழ்ந்தோடிக் கொண்டிருந்தேன்.

    என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத பருவம்; வீடெங்கும் தேடிப் பார்க்கிறேன்; அப்பாவைக் காணவில்லை. கூட்டத்தினின்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி போல உணர்ந்தேன். வழிதவறி அல்லாடும் என்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மேய்ப்பன் எவனும் வர மாட்டானா என ஏங்கிப் புழுங்கித் தவித்தேன். அடிமேல்தான் அடி விழும் என்பார்களே, அதைப் போலத்தான் எனக்கும்.

    என்மீதான உன் கவனிப்பும் அருகிப் போனது. உனக்கு எல்லாமே ஸ்டீவ் என்றாகி விட்டது. நீயும் என்னைக் கவனிக்கவில்லை. அப்பாவையும் சந்திக்க விடவில்லை. நொறுங்கிப் போனேன் நான்.

    அந்த ஏழு மாதங்களும் எனக்கு வெம்மையான மாதங்கள்தாம். அங்கே நீதிமன்றக் கதவுகளைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தார் அப்பா. அதுவும் எனக்காக! போராட்டத்தின் முடிவில் வாரம் ஒருமுறை என்னையவர் பொது இடத்தில் வைத்துப் பார்க்கலாம் என்றாகிப் போனது.

    வாரத்தில் கிடைக்கும் அந்த இரண்டு மணி நேரமும் எனக்கு வசந்த காலம். இறைவனின் திருவுலகிற்கே அழைத்துச் செல்வார் அவர். அவர் சந்திக்குமந்த மெக்டொனால்ட்சு கடையோ, இசுடார் பாக்சு கடையோ, அது எனக்கு புனிதத் தலமானது. எனக்குப் பொன் தரவில்லை. பொருள் தரவில்லை. சந்திக்கும் போதெல்லாம் என் அப்பா எனக்கு ஊட்டியது நம்பிக்கையான சொற்களை மட்டுமே. அவைதான் இன்றளவும் என்னை இருத்திக் கொண்டுள்ளது.”

     பாருங்களேன், ஒரு சிறு கடிதத்திலே ஒரு உணர்ச்சிக்காவியமே நடந்து முடிந்துள்ளது. உணர்ச்சிகள் மட்டும் மனிதனுக்கு இல்லையென்றால் மனித வாழ்க்கையே நமக்கு தேவையில்லாததுதான். அழகான கதையில் ஒரு கருத்துள்ள கடிதத்தை உணர்ச்சிக் கலவையோடு கலந்து கொடுத்த திரு பழமை பேசி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவிப்பதோடு பழமையை அதன் தரம் அறிந்து வெளியிட்டு வாசகர்களை தன்னோடு கூடவே அழைத்துச் செல்லும் பாணிக்காக அவருக்கும் நம் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடைசி பாரா: இசைக்கவி ரமணன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நவராத்திரி கவிதைக் கொலுவில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் பொன்னூஞ்சல் கவிதைதான் இந்தக் கடைசி பாராவில் இடம் பெறுகிறது. அன்னையிடம்தான் இவருக்கு எத்தனைப் பிரியம் பாருங்கள்:

    அல்லைப் பழிக்கும் அடர்நிறத்தாள்-என்
    அல்லல்கள் தீர்க்கும் அபிராமி
    தில்லைக் கரசனின் தாண்டவத்தில்-நல்ல
    தாளமென்றானவள் சிவகாமி
    சொல்லைக் கள்ளாய் மாற்றித்தரும்-அருள்
    சொக்கன் மகிழ்கிற மாதங்கி
    தொல்லை வினைகள் தொலைத்தெறிந்தே-உயிர்
    துடைத்துக் கொடுக்கும் சாமுண்டி

    விண்வரை அசைகிற பொன்னூஞ்சல்-அந்த
    விதியை உதைக்கும் அதிசயமாம்
    மண்வரை வந்த உயிர்களுக்கோ-அவள்
    மலரடி நிழலே பெரும்சுகமாம்

     

    Share
  • கணினி விளையாட்டுக்கள்

    கே.எஸ்.சுதாகர்

    மின்னஞ்சலில்  படைப்புகளை அனுப்பும் காலம் இது. நேரம், தபால் செலவு மிச்சம். ஒரு முறை முரசு அஞ்சலில் படைப்பை அனுப்பியிருந்தேன். சற்று நேரத்தில், ‘Please send Bamini or Tharini” என்று பதில் வந்தது. ‘பாமினியும் தாரிணியும் எனது கசின்மார்கள். அவர்களை எப்படி நாம் அனுப்ப முடியும்?’ என்கின்றார் மனைவி. ஒரு சிலர் எந்த எழுத்துரு என்றாலும், அதை மாற்றி எடுக்கும் வல்லமை பெற்றவர்களாக இருக்கின்றார்கள். அப்படி இயலாதவர்களுக்காக நாம்தானே மாற வேண்டும். இப்பொழுதெல்லாம் நான் அவரவர்களுக்குத் தகுந்தமாதிரி பாமினி, முரசு அஞ்சல், யுனிகோட் என்ற எழுத்துருக்களில் அனுப்பி வருகின்றேன். 

    இந்தக் கணினியின் வருகையானது ஆரம்பத்தில் எனக்கு மிகவும் பயப்பீதியைத்தான் ஏற்படுத்தியது. 1983 ஆம் ஆண்டளவில்தான் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்குலேட்டரையே (calculator) அனுமதித்திருந்தார்கள். அதற்கடுத்த வருடமளவில் பேராசிரியர் குணசேகரா ( ‘குண்டா’ என்பது நாம் அவருக்கு அழைக்கும் செல்லப் பெயர்.) அவர்களால்தான் எமக்கு இந்த கணினி யுகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவரைப் பற்றியதொரு சிறு அறிமுகம். மெலிந்த தோற்றம். ஆஸ்மா நோயாளி. அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிற்கு ஆலோசனை வழங்கும் ஏழு விஞ்ஞானிகளுள் ஒருவர். 

    நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அவர் எங்களுக்கு விரிவுரைகள் ஆரம்பித்து இரண்டாவதோ மூன்றாவதோ நாள். ஒட்டி உலர்ந்த நாயொன்று வகுப்பறைக்குள் நுழைந்தது. நாங்கள் ஆரவாரத்துடன் அதைத் துரத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். அந்த நாய் வகுப்பறைய விட்டுப் போவதாக இல்லை.  அது வாசலுக்கு வரும் வரைக்கும் காத்திருந்த பேராசிரியர் குணசேகரா, பந்தொன்றை உதைக்கும் வீரனைப் போல அந்த நாயைப் பந்தாடினார். அது காற்றிலே பறந்து போய் வெளியிலே விழுந்தது. சம்பவம் ஒரு அதிர்ச்சியாக இருந்தாலும், காட்சி சிரிப்பாக இருந்தது. அடக்க முடியாமல் வாய் பொத்தி – விட்டு விட்டுச் சிரித்தோம். ஆத்திரம் தாளாமல் ‘டஸ்ர’ரைத் தூக்கி எங்களுக்குள் எறிந்துவிட்டுப் போய் விட்டார் பேராசிரியர். 

    அதன்பிறகு ‘FORTRAN’ என்றொரு ‘கொம்பியூட்டர் மொழி’ படிப்பு. சிறிய துளைகள் கொண்ட கட்டுக்கட்டான மட்டைகள். ஒரு பெரிய இராட்சத இயந்திரம், ‘கொம்பியூட்டர் லாப்’பின் முன்னால் இருந்தது. அதற்குள் அந்த மட்டைகளைப் போட்டு எடுக்க வேண்டும். மூன்று மாதம் அந்தப் படிப்பு. உண்மையில் இற்றை வரைக்கும் அதிலே என்னத்தைத்தான் அடித்தோம் படித்தோம் என்று விளங்கவில்லை. மூன்றுமாத காலத்தில் ஒருமுறைதான் அந்த இயந்திரத்தின் பக்கம் சென்றதாக நினைவு. எனது நண்பன் சிவகுமார் அதில் கரை கண்டவன். மூன்றுமாத காலமாக ஒவ்வொரு நாளும், சளைக்காமல் காலை ஏழுமணிக்கே எழுந்து அந்தக்கட்டுகளைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விடுவான். அதில் அவன் எனக்கு ‘குட்டி லெக்சரர்’. 

    அந்தப் படிப்பிற்குப் பின்னர்தான் பேராசிரியர் எங்களையெல்லாம் ‘கொம்பியூட்டர் லாப்’பிற்குள் செல்வதற்கு அனுமதி தந்தார். அதற்குள் போவது கிட்டத்தட்ட கொலைக்களத்திற்குப் போவது போல. அது ஒரு ஏ.சி றூம். அந்தக்காலத்தில் கொம்பியூட்டர்கள் எல்லாம் ஏ.சி றூமிற்குள்தான் வீற்றிருந்தன. வெளியே சப்பாத்துகளைக் கழற்றி விட்டுத்தான் உள்ளே நுழையலாம். எலிகளுக்குப் பக்கத்தில் வெண்ணெய்க்கட்டிகளை வைத்து விட்டு, எப்பவாகிலும் அதன் மூக்கைப் பார்த்த அனுபவம் உங்களுக்கு இருக்கின்றதா? அப்படித்தான் – கொம்பியூட்டர் லாப்பைத் திறந்து, வாசலில் நின்றபடியே மூக்கை விரித்துச் சுருக்கி தனது நுகர்புலனை லாப்பிற்குள் விடுவார் பேராசிரியர். அச்சொட்டாக வந்து ஒரு சிலரை கொம்பியூட்டரில் இருந்து எழுப்பி அறையை விட்டு வெளியே போகும்படி கலைப்பார். இது எனக்கு ஏன் என்று ஆரம்பத்தில் பிடிபடவில்லை. சொக்ஸ் (socks) நாற்றமுடையவர்களைத்தான் அப்படி அவர் கலைக்கின்றார் என்பது பிறகு தெரிய வந்தது. அவரின் இந்த சேஷ்டையால் – அதன் பிறகு 20 – 25 கொம்பியூட்டர்கள் இருக்குமிடத்தில் 5 – 6 மாணவர்களே இருந்தார்கள். 

    அதன்பின்பு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (The Open University ), 1988 – 89 இல் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. கள்ளனுக்குப் பொலிஸ் வேலை கொடுத்தது போல. பத்துக் கொம்பியூட்டர்கள். அறைக்கு ஏ.சி இல்லாததால் மூன்று மின்விசிறிகள். 

    ஒருமுறை கொம்பியூட்டர் சம்பந்தமான புத்தகங்களைக் பார்த்துக் கொண்டிருந்த போது, அதனுள் ஒரு பேப்பரில் இருந்த தகவல் என்னைக் கவனத்தில் ஈர்த்தது. அதில் 30 floopydisks ‘நாவல’ என்னும் இடத்தில் இருந்த தலமைப்பீடத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல். இயக்குனரிடம் சென்று அந்த floopy (குறுந்தகடு) பற்றி விசாரித்தேன். அவர் சற்று ஜோசித்துவிட்டு, “ஆ.. கொஞ்சப் பொருட்கள் வந்தன. cool ஆன இடத்திலை வைக்கச் சொல்லி எழுதியிருந்தார்கள். அதுதான் பத்திரமா ஒரு இடத்திலை வைச்சிருக்கிறோம்’ என்றார் அவர். அவற்றைத் தர முடியுமா என்று கேட்டேன். அவரும் கிளாக்குமாக என்னை ஒரு அறைக்குள் கூட்டிச் சென்று அங்குள்ள fridgeஐத் திறந்தார்கள். உள்ளே பால், பழம் – அவற்றின் மத்தியில் மதியச் சாப்பாட்டுடன் அந்தப் பொதி இருந்தது. “தம்பி, மூண்டு மாதமா இதுக்குள்ளை கிடக்கு. என்னெண்டு ஒருக்காப் பாரும்.” உள்ளே 30 floopydisk உம் நீரிலே ஊறி உப்பிப் போய் இருந்தன. நான் சிரிக்க அவர்களும் சேர்ந்து சிரித்துக் கொண்டார்கள். 

    இன்னொருதடவை அவர் தனது பத்தாம் வகுப்புப் படிக்கும் மகனுக்கு கொம்பியூட்டர் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டார். அவனும் படிப்பதற்கு வந்தான். அவனுக்கு ஒன்றும் ஏறுவதாகத் தெரியவில்லை. கொஞ்ச நேரம் கொம்பியூட்டரை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். “சேர், என்ரை மணிக்கூட்டை ஒருக்காப் பாருங்கோ. இது  இவ்வளவு காலமும் வெள்ளைக்கலராக இருந்தது. இப்ப செவ்விளநீர்க் கலராக மாறிப் போச்சுது” மணிக்கூட்டின் உள் முகப்பைக் காட்டினான். “கொம்பியூட்டரிலை இருந்து ஏதாவது கதிர்வீச்சு வருகிறதா? எனக்குப் பயமாக இருக்குது” என்று சொல்லிக் கொண்டே வகுப்பை விட்டு வெளியேறிவிட்டான். அதன் பிறகு அவன் அந்தப் பக்கம் வரவும் இல்லை. அவனின் தந்தையும் அதைப்பற்றி ஒன்றும் என்னிடம் கேட்கவுமில்லை. 

    இலங்கையில் இருக்கும் காலங்களில் ஒருமுறைதானும் கொம்பியூட்டரில் தமிழ் எழுதும் வாய்ப்புக் கிட்டவில்லை. நியூசிலாந்தில் எனக்கு முரசு அஞ்சல் அறிமுகமானது. தமிழை அப்படியே ஆங்கிலத்தில் நேரடி மாற்றம் செய்யும்போது (ammaa – அம்மா) தமிழ் எழுத்துக்கள் உருவாகின. 1995 ஆம் ஆண்டிலிருந்து முரசைப் பாவித்து வருகின்றேன். 

    நியூசிலாந்தில் எனது நண்பன் ஒருவனுக்கு ஏற்பட்ட அனுபவம் மிகவும் சுவையானது. அவன் கொம்பியூட்டர் நன்றாகத் திருத்துவான். ஒருமுறை டாக்டர் ஒருவரின் வீட்டிற்கு கொம்பியூட்டர் திருத்துவதற்காகச் சென்றான். கொம்பியூட்டருக்கு வைரஸ் பிடித்துவிட்டது. “டாக்டர் உங்கள் கொம்பியூட்டருக்கு வைரஸ் பிடித்துவிட்டது” என்றான் அவன். அவர் உடனே தனது மகனைக் கூப்பிட்டார். அவனுக்கு பத்து வயதிருக்கும். “காய்ச்சலோடை கொம்பியூட்டரிலை இருக்க வேண்டாம் எண்டு எத்தனை தரம் சொன்னனான். கேட்டால்தானே! இப்ப தன்ரை வைரசை கொம்பியூட்டருக்குக் குடுத்திட்டான்” என்று அவனை டாக்டர் ஏசினார். மகன் சிரித்துக் கொண்டே உள்ளுக்குப் போனான். இதை நான் எப்படி அடுத்தவருக்குச் சொல்வது என்று எனது நண்பன் எனக்குச் சொன்னான். 

    இது அவுஸ்திரேலியாவில் நடந்தது. மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். எனது குடும்ப வைத்தியரிடம் (Family doctor) சென்றிருந்தோம். முதுகுப்புறம் நோவினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். டாக்டரின் முகம் என்றுமில்லாதவாறு வாடியிருந்தது. அவர் இலங்கையில் இருக்கும்போது பிரபல சத்திரசிகிச்சை நிபுணராக (Surgeon) இருந்தவர். இங்கே குடும்பவைத்தியராகப் பணி புரிகின்றார். அறையைவிட்டு வெளியே வந்தார். தனது முதுகை தூண் ஒன்றிற்கு எதிராக முண்டு கொடுத்துக் கொண்டார். பாம்பு நெளிவது போல தனது உடலை மேலும் கீழும் தூண் மீது அசைத்தார். “எனக்கும் அடிக்கடி வாறதுதான். எழுபத்தெட்டு வயதான நானே இதுக்கு மருந்து எடுக்கிறதில்லை. உடற்பயிற்சிதான் இதுக்கு மருந்து. சிலவேளை என்ரை மனிசி மசாஜ் செய்து விடுவார்” கையைக் கூப்பி புட்டுக் கொத்துவது போல என் முதுகினில் குத்தினார். 

    டாக்டர் எனக்கு மருந்து தந்துவிட்டார். இனி மகனுக்கு! “மகனின்ரை வளர்ச்சி குறைவாக இருக்கு. ஏதாவது விட்டமின்கள் தரமுடியுமா?’ கேட்டு முடிவதற்கு முன்பே பதில் வந்தது. “இதிலை நான் டொக்டரா அல்லது நீர் டொக்டரா? இஞ்சை விட்டமின்கள் எழுதித் தந்தா நான் ஜெயிலுக்கைதான் பிறகு இருக்க வேண்டி வரும். அவுஸ்திரேலியாவிலை நல்ல சத்துள்ள உணவு வகைகள் எல்லாம் இருக்கு. அதைச் சாப்பிட்டாலே போதும்.” 

    அதிகம் கதைத்துவிட்டேனோ என்னும் தோரனையில் அறையின் மூலையை வெறித்துப் பார்த்தார் டாக்டர். “இப்பெல்லாம் முன்னையப்போல ஒன்றும் செய்துவிட முடியாது. எப்பொழுதும் எங்களைக் கவனித்தபடியே இருக்கின்றார்கள். இஞ்சை பாருங்கள் இதை…! இது ஒண்டு இப்ப வந்து என்னைப் பயப்பிடுத்துது.” அவர் காட்டிய திக்கில் ஒரு கொம்பியூட்டரும் ஒரு பிறின்ரரும் பெட்டி பிரிக்கப்படாமல் இருந்தன.  அவரது சலிப்புத் தன்மைக்கு அதுவே காரணம் என்பதைப் புரிந்து கொண்டோம். தனது நாற்பது வருட சேவையில் இப்பொழுதுதான் ஒரு பேரிடி வந்திருக்கின்றது என்றார். அதைப் படித்து வேலை செய்வதற்கு தனக்கு வயது போய்விட்டது என்றார். 

    இது நடந்து சிலகாலங்களின் பின்னர் மீண்டும் சென்ற போது கொம்பியூட்டரும் பிறின்ரரும் அவரது மேசையில் இருந்தன. ஆனால் இணைப்புகள் தொடுக்கப்படாமல் தன்னந் தனியனாக அவரை வெறித்துப் பார்த்தபடி இருந்தன. 

    அவரை வேவு பார்ப்பதற்கென்றே இப்பொழுது வருத்தம் அடிக்கடி வருகின்றது. அவர் மேசைமீது தனது பேனாவினால் தாளம் போட்டுத் தட்டியபடி ஏதோ ஒரு சினிமாப்பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். கொம்பியூட்டர், பிறின்ரருடன் கை கோர்த்த கழிப்பில் விழாக்கோலம் பூண்டிருந்தது. “உமக்கொரு full blood test செய்ய வேணும்!” என்று சொல்லியபடி விசைப்பலகையை (keyboard)  தனது ஒரு விரலினால் குத்தத் தொடங்கினார். “கொலஸ்ரோல், சுகர், லிவர் எல்லாம் செக் பண்ணச் சொல்லி இதிலை எழுதி இருக்கிறன்.” பிறின்ரரில் இருந்து சத்தம் போட்டபடி அரையும் குறையுமாக வெளியே வந்த பேப்பரை இழுத்தெடுத்தார். என்னிடன் நீட்டியபடி புன்முறுவல் செய்தார். உலகத்திலை நடக்காதது என்று ஏதாவது உண்டா என்பது போன்ற பார்வை. எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் பெயர்தான் செல்லத்துரை சுதாகரன் என்பதற்குப் பதிலாக செல்லத்துரை சிவராஜா என்று இருந்தது.

     

    Share
  • பேச்சு

    முகில் தினகரன்

    ‘வயசாயிட்டா…தலைல இருக்குற முடிதான் கொட்டிடும்னு கேள்விப்பட்டிருக்கேன்…மூளையுமா கொட்டிடும்?…சனியன் என்னோட உயிரை வாங்கறதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கு…ஒரு ஒண்ணாங் கிளாஸ்; படிக்கற குழந்தையைக் கூப்பிட்டு…’இந்தா பாப்பா…போயி எலக்ட்ரிக் பில் கட்டிட்டு வா’ன்னு சொல்லி பணத்தையும் கார்டையும் குடுத்திருந்தா அது கூட அழகா போய் ஷநறுக்ஷகுன்னு கட்டிட்டு வந்திருக்கும்!…அறுபத்தியேழு…அறுபத்தியெட்டு வயசாச்சு…இந்த வேலையக் கூட கரெக்டாச் செய்ய முடியலை நீயெல்லாம் இத்தனை வருஷம் பொழைச்சு என்ன பிரயோசனம்?’

    மகள் சந்திரா வீட்டிற்குள் தீபாவளிப் பட்டாசாய் வெடித்துக் கொண்டிருக்க, தலையில் கையை வைத்தபடி வெளித் திண்ணையில் குனிந்து அமர்ந்திருந்தார் வெள்ளிங்கிரி. தான் முகம் தெரியாத ஒரு இளைஞனால் ஏமாற்றப் பட்டு விட்டது கூட அவரை வெகுவாய்ப் பாதிக்கவில்லை. மகளின் வாயிலிருந்து சரமாரியாய் வந்து விழும் அமிலத் துண்டங்கள்தான் அவரை உருக்குலையச் செய்திருந்தன.

    சில நிமிடங்களுக்குப் பிறகு, மெல்ல வீட்டிற்குள் எட்டிப் பார்த்து, ‘அம்மா…சந்திரா’ ஒருவித பயத்துடனே அழைத்தார்.

    ‘என்ன…என்ன எழவைக் கொட்டிக் குடுக்கப் போறே சந்திராவுக்கு?’ உள்ளிருந்து வார்த்தைச் சாட்டைகள் வந்து விழுந்தன.

    ‘ஒண்ணுமில்லம்மா….நெஞ்சு ஒரு மாதிரி எரிச்சலாயிருக்கு…ஒரு வாய் காப்பித் தண்ணி…கீது…’

    ‘க்கும்…நீ பண்ணிட்டு வந்த காரியத்துக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல்…சும்மா வாயை மூடிட்டு கம்னு கெட…அதையும் இதையும் கேட்டு..எரிச்சலை மூட்டாதே…!…ஹும்….என்னைப் பெத்தவ எப்படித்தான் உன் கூட பொழப்புத்தனம் பண்ணினாளோ..?…அது செரி…அவ எங்க முழுசாப் பொழச்சா…அதான் பாதியிலேயே பரதேசம் போயிட்டாளே’

    வெள்ளிங்கிரிக்கு மனைவியின் ஞாபகம் வந்தது. ‘லட்சுமி….நானும் நீயும் வாழந்த வாழ்க்கையைப் பத்தி இதுகளுக்கு என்ன தெரியும்?…பேசாம நீ போனப்பவே என்னையும் கூடக் கூட்டிட்டுப் போயிருக்கலாமல்ல லட்சுமி…இப்படி பெத்த மகள் வாயிலிருந்து கேட்கக் கூடாத பேச்சையெல்லாம் கேட்க வேண்டியிருக்கே லட்சுமி’

    மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை விநாயகம், திண்ணையில் வெளிறிப் போன முகத்துடன் அமர்ந்திருக்கும் மாமனாரைப் பார்த்துமே புரிந்து கொண்டார் அங்கு சந்திரா கதகளி ஆடிக் கொண்டிருக்கின்றாள் என்று.

    வந்ததும் வராததுமாய் கணவனிடம் கொட்ட ஆரம்பித்தாள் சந்திரா. ‘ஏங்க…உங்க அருமை மாமனார் இன்னிக்கு என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கார் தெரியுமா உங்களுக்கு?’

    விநாயகம் வாயைத் திறக்காமல் புருவ உயர்த்தலிலேயே ‘என்ன?’ என்று கேட்க,

    ‘எலக்ட்ரிக் பில் கட்டிட்டு வரச் சொல்லி பணத்தையும் காரடடையும் கொடுத்தனுப்பினா…ரெண்டையும் தொலைச்சிட்டு வந்து நிக்குது கெழம்’

    ‘அடடே…அப்படியா?…’என்ற விநாயகம் மாமானார் பக்கம் திரும்பி, ‘என்ன மாமா?…எங்க மிஸ் ஆச்சு?…வரிசைல நிக்கும் போதா?…இல்ல போற வழியிலேயேவா?’

    சட்டென்று இடை புகுந்தாள் சந்திரா, ‘நீங்க வேற…அங்க வரிசைல நிக்கும் போது எவனோ வந்து, ‘என்ன பெரியவரே வெய்யில்ல நிக்கறீங்க?…என்கிட்டக் குடுங்க நான் என்னுடையதோட சேர்த்து உங்களோடதையும் கட்டித் தர்றேன்’னு சொன்னானாம்…இதுவும் நம்பிக் குடுத்துட்டுப் போய்…எங்கியோ ஒரு நிழல்ல பராக்குப் பார்த்திட்டு உட்கார்ந்திருக்கு…அவன் நைஸா…எஸ்கேப் ஆயிட்டான்…அவன் குடுத்து வெச்சவன்..நாலு நாளைக்கு குவாட்டரும்…கோழி பிரியாணியுமா ஜமாய்ப்பான்’

    கள்ளம் கபடம், சூது வாது, பொய் புரட்டு;;;;…..எதுவும் தெரியாத…அந்தக் காலத்து மனிதரான தன் மாமனார் இந்தக் கால மனிதர்களின் தகிடுதத்தங்கள் பற்றிச் சிறிதும் அறியாதவராய் இருந்ததுதான் அவர் ஏமாந்ததற்கான சரியான காரணம் என்பதை யூகித்து விட்ட விநாயகம், ‘சரி…சரி…விடு..விடு…அதையே திரும்பத் திரும்பப் பேசறதில் என்ன ஆகப் போகுது?’ என்று தன் மனைவியை அடக்கினார்.

    கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு; அமைதியாய் வீட்டிற்குள் சென்று அவருக்கு மதிய உணவு பரிமாறுவதில் முனைப்பானாள் சந்திரா.

    உணவை முடித்து விட்டு வழக்கம் போல் அரை மணி நேரம் உறங்கி எழுந்த விநாயகம், போகும் போது தன் மனைவியிடம் சொல்லி விட்டுச் சென்றார். ‘த பாரு சந்திரா…நீ பாட்டுக்கு ரொம்ப ஓவரா சத்தம் போட்டுப் பேசி அவரோட மனசை நோகடிக்காதே…பாவம்…ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கார்’

    ஆனால், அதைத் துளியும் காதில் வாங்கிக் கொள்ளாதவளாய் மறுபடியும் முழக்கத்தை ஆரம்பித்தாள் சந்திரா.

    ‘அங்கங்கே…வயசான கிழடு கட்டைகளை ஏண்டா முதியோர் இல்லத்துல கொண்டு போய்த் தள்ளிடறாங்கன்னு இப்பத்தான் புரியுது…இப்படிக் கேனத்தனமா நடந்து…கழுத்தறுத்தா யார்தான்…எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துக்குவாங்க?’

    வெள்ளிங்கிரியின் அடிவயிற்றில் பசி தன் இருப்பை உணர்த்த ஆரம்பித்தது. ‘சாப்பாடு கேட்கலாமா?…வேண்டாமா?’ யோசித்தார்.

    ‘எதற்கெடுத்தாலும்…’நாங்கெல்லாம் செய்யுற எந்தக் காரியமும்…எந்தக் காலத்திலேயும் சோடையே போகாது’ ன்னு வாய் கிழியப் பேசுவியே…இப்ப எங்க போச்சு…அந்த அனுபவச் சனியனெல்லாம்?’

    சற்றும் வாய் ஓயாமல், வார்த்தைகளில் துளியும் பிசகின்றி, தங்கு தடையில்லாமல் மடை திறந்த வெள்ளமாய்…வானைக் கிழித்துக் கொண்டு கொட்டும் அடர்த்தி மழையாய்…அவள் பேசுவதையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த வெள்ளிங்கிரியின் நினைவுகள் பின்னோக்கிச் சென்று அந்த நாளை எண்ணிப் பார்த்தது.

    அப்போது சந்திராவிற்கு மூன்று வயதிருக்கும். நல்ல நிறம், சதைப் பிடிப்பான கன்னம், மற்றும் கை கால்களுடன் ‘கொழு…கொழு’வென்றிருந்த அவளை பார்ப்பவர்கள் அனைவரும் ரசித்துக் கொஞ்சுவர். கொஞ்சிக் கொஞ்சி மகிழ்வர்.

    பிறகு அவளின் திக்குவாய் குறை பற்றித் தெரிய வரும் போது, ‘த்சொ…த்சொ..’என்று பரிதாபப்பட்டு ‘அழகை அள்ளிக் கொடுத்த ஆண்டவன் இப்படி அநியாயம் பண்ணிட்டானே!’ என்று இறைவனையே நிந்தனை செய்தபடி நகர்வர்.

    ‘ஏங்க…..காலைல நம்ம சமுக்குட்டி அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தேன்….ஊரிலிருந்து அவங்க பெரியாத்தா வந்திருந்தாங்க…அவங்க நம்ம சந்திராவோட குறையைக் கேள்விப்பட்டு…ஒரு நிவர்த்தி சொன்னாங்க…’ லடசுமி ஒரு நம்பிக்கையோடு சொல்ல,

    ‘என்ன…என்ன சொன்னாங்க?’

    ‘அவங்க ஊர்ல ‘புலிப்பாணி’ன்னு சித்தர் இருக்காராம்…காது கேட்காதவங்களுக்கு கேட்க வைக்கறாராம்…வாய் பேசாதவங்களைப் பேச வைக்கறாராம்…’

    ‘நெஜம்மாவா?’

    ‘ஆமாங்க…பிறவி ஊமைகளையே பேச வைச்சிடறவரு…நம்ம பொண்ணுக்கு என்ன வெறும் திக்குவாய்தானே?…நிச்சயமா சரி பண்ணிடுவார்னு எனக்குத் தோணுதுங்க’

    எப்படியாவது தங்கள் குலக் கொழுந்தின் திக்குவாய் குறை தீர்ந்தாப் போதும் என்கிற ஆர்வத்தில் கணவனும் மனைவியும் அந்தப் புலிப்பாணிச் சித்தரைப் பார்த்து, சில தீர்த்தங்களையும்…பச்சிலைச் சாறுகளையும் வாங்கி வந்து மகளுக்கு கொடுத்துப் பார்த்தனர். ம்ஹும்…ஒன்றும் பலிக்கவில்லை.

    சித்த வைத்தியம்…இங்கிலீஸ் வைத்தியம்…சீன வைத்தியம்…ஹோமியோபதி என்று எல்லா வகையிலும் முயற்சி செய்து பார்த்து விட்டுத் தோல்வியில் துவண்டு கிடந்தவர்களிடம் பக்கத்து வீட்டுப் பாட்டி ஒரு வைத்தியம் சொல்ல,

    ‘அடப்போ கெழவி…எல்லாப் பண்டுதமும் பண்ணிப் பார்த்தாச்சு…இது ஒண்ணுதான் பாக்கி’ என்று சலித்துக் கொண்ட லட்சுமியிடம்,

    ‘அப்படியேன் சொல்லுறே லட்சுமி?…அதையும்தான் முயற்சி பண்ணிப் பார்ப்போமே…ஒரு வேளை அதனால கூட சரியாகலாமில்ல?’ என்று சொன்ன வெள்ளிங்கிரி தானே தன் முயற்சியில் அந்தப் பாட்டி சொன்ன உபாயத்தைச் செய்து பார்த்தார்.

    என்ன ஆச்சரியம்…’திடு..திப்’பென்று ஒரு நாள் காலையில் சந்திரா எந்தவித திக்கலும்…திணறலும் இன்றி சரளமாய்ப் பேச ஆரம்பித்தாள். பெற்றவர்கள் மனம் குளிர்ந்து போய் ஒரு கோயில் பாக்கி வைக்காமல் எல்லாக் கோயில்களுக்கும் சென்று தங்கள் நன்றியைச் செலுத்தினர்.

    ‘ஏய்…கெழம்….வயித்துக்கு ஆகாரம் போடணும்கற நெனப்பிருக்கா?…இல்ல…பணத்தையும் கார்டையும் தொலைச்ச மாதிரி அந்த நெனப்பையும் தொலைச்சிட்டியா?…’ சந்திரா கத்தலாய்க் கேட்க,

    பழைய நினைவுகளிலிருந்து மீண்ட வெள்ளிங்கிரி மலங்க மலங்க விழித்தார்.

    ‘போ…உள்ளார தட்டுல போட்டு வெச்சிருக்கேன்…போய்க் கொட்டிக்க…’

    எழுந்து தள்ளாட்டமாய் நடந்து சென்றவரைப் பார்த்து,

    ‘தள்ளாட்டத்தைப் பாரு…தண்ணி போட்டவனாட்டம்’ என்று சந்திரா நக்கலாய்ச் சொன்னது வெள்ளிங்கிரியின் காதுகளுக்கு சரியாய்க் கேட்காமல் போனதற்குக் காரணம் பசியின் காதடைப்பு.

    (முற்றும்)

    Share
  • ஈரத்துணி

     தமிழ்த்தேனீ

    மாலை ஐந்து மணி. சிமெண்டும், மணலும் அப்பிக்கிடந்த உடலைக் கழுவிக் கொண்டே, “கிருஷ்ணா, எனக்கு இன்னிக்கு ஒரு 100 ரூபா குடு. நாளைக்கு பொழுது விடிஞ்சா தீபாவளி, நான் அடுத்த வாரம் உனக்கு திருப்பிக் குடுத்துர்ரேன்”, என்று சக தொழிலாளியிடம் எப்படியோ கொஞ்சம் பணம் கடன் வாங்கிக்கொண்ட கருப்பசாமி, அந்தப் பணத்தில் பட்டாசுகளும், புதிய துணிகளும், இனிப்பு பலகாரங்களும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

    வீட்டுக்கு வரும்போதே மாலை 6 மணி ஆகிவிட்டது. கைகால்களைக் கழுவிக்கொண்டு நிமிர்ந்தவர், “ஆமாம் ரமேஷ் பெங்களூருக்கு போனானே ஒரு இண்டெர்வியூக்காக, இன்னிக்கு வந்துருவேன்னு சொன்னானே, எங்கே இன்னும் வரவில்லையா? விடிஞ்சா தீபாவளி !” என்றார்.

    அவர் மனைவி அஞ்சலை, “தீபாவளிக்கு முத நாளு வந்துருவேன்னு சொல்லிட்டுதானே போனான். இன்னிக்கு வந்துடுவான். நீங்க கைகாலைக் கழுவிகிட்டு உள்ளார வாங்க”  என்றாள்.

    அன்றாட கவலைகளை மறந்து கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த நாளைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்தனர் மக்கள். மறு நாள் தீபாவளி. நாடெங்கிலும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் வாண வேடிக்கைகளும், பட்டாசுகளின் சத்தமும், சங்கு சக்கரம், மத்தாப்பூ, புஸ்வாணம் போன்றவைகளின் ஒளியும், கண்ணைப் பறித்தது.

    விதவிதமான புதிய வகைப் பட்டாசுகள் நகரெங்கும் விற்பனையாகியது. புத்தாடைகள் சரசரக்க, பிள்ளைகள் பட்டாசுகளும், அவற்றைப் பாதுகாப்புடன் கொளுத்த நீண்ட ஊதுபத்திகளும் கையில் வைத்துக்கொண்டு கபடமில்லாமல் சிரித்துக்கொண்டே, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். 

    வாங்கி வந்த பட்டாசுகளையும், இனிப்பையும் வீட்டில் மனைவியிடம் கொடுத்து, “பத்திரமாக வைய்யிம்மா”  என்றார். அவருக்கு அவருடைய மகன் ரமேஷ் கம்பி மத்தாப்பூ கொளுத்தவே பயந்து, “அப்பா இதைப் பிடிப்பா பயமா இருக்குது” என்று அலறியது  நினைவுக்கு வந்தது. சிரித்தபடியே கைகால்களை கழுவிக்கொண்டு  உள்ளே வந்து உட்கார்ந்து செய்தித்தாளைப் பிரித்தார்.

    செய்தித்தாளில் கொட்டை எழுத்தில் போட்டிருந்த செய்தியையும், புகைப்படங்களையும்  பார்த்து அதிர்ந்தே போனார் அவர். பட்டாசுக் கம்பனியில் தீப்பிடித்தது, பட்டாசு வெடித்ததில் பட்டாசுக் கம்பனியின் கட்டிடம் சிதறியது. அதில் வேலை செய்துகொண்டிருந்த  மக்கள், மற்றும்  ஒரு மைல் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிப்பு, பலபேர் சடலம் தோண்டி எடுக்கப் படுகிறது.  தீக்காயத்துடன் அவதிப் படுவோரை எடுத்துக்கொண்டு அவசரகால ஊர்திகள் மருத்துவமனைக்கு விரைகின்றன. தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க போராடி வருகின்றன.

    நாட்டிலே இருக்கற மக்கள் சந்தோஷமா இருக்கணும்னு தங்களோட உயிரையும் பணயம் வெச்சு பட்டாசு தயாரிக்கறாங்க, இந்தப் பட்டாசுக் கம்பனீலே வேலை பாக்கறவங்க  வயித்துப் பொழைப்புக்காக கூலிக்கு வேலை பாக்கறாங்க.  இப்பிடி தீயிலே மாட்டிகிட்டு கருகிப் போயிட்டாங்களே, அவங்க குடும்பம் என்னா பாடு படுதோ என்று மனதுக்குள் வருந்தினார்.

    “இந்தப் பய ரமேஷுக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சுதுன்னா  கொஞ்சம் நிமிரலாம். சரி அவன் வந்தா தெரியும் வேலை கிடைச்சுதா, நல்ல வேலையா? சம்பளம் எவ்ளோ ஒண்ணும் தெரியலை, சரி அவன் வந்த வுடனே அவனைக் கேள்வி மேலே கேள்வி கேட்டு தொந்தரவு செய்யாதே. படிச்ச புள்ளே ஆயிரம் யோசனை இருக்கும், அங்கே என்னாகேள்வி கேட்டாங்களோ, வேலையைப் பத்தி என்னா சொன்னாங்களோ. கஷ்டப்பட்டு படிக்க வெச்சிருக்கேன் நல்ல வேலை கிடைக்காமையா போயிரும், என் மவன் கெட்டிக்காரன், எல்லாம் நல்லபடியா நடக்கும், கவலைப்படாதே, வந்தவுடனே இந்த பலகாரத்தைக் குடு, நிதானமாப் பேசிக்கலாம்”, என்று அஞ்சலைக்கு ஆறுதல் சொல்வது போல் தன் மனதையே தேற்றிக் கொண்டார் கருப்பசாமி.

    தட்டின் முன் வந்து உட்கார்ந்து, “காவ்யாகுட்டி, அப்பா தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு,உனக்கு கௌனு எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். அண்ணன் வந்துரட்டும், புது கௌனு போட்டுகிட்டு வெடியெல்லாம் வெடிக்கலாம்” என்றார். அஞ்சலை அவர் தட்டில் பலகாரத்தை வைத்தாள்.  

    “போப்பா, அண்ணன் மத்தாப்பூ கொளுத்தவே பயப்படும், நானு தைரியமா பட்டாசு வெடிப்பேன், அண்ணன் பயந்தாங்கொள்ளி”, என்று சிரித்தாள் காவ்யாகுட்டி.

    “வீட்டுலே யாருங்க, வெளியே வாங்க”, என்று ஒரு குரல் கேட்டது. அஞ்சலை எட்டிப் பார்த்து, “ஏனுங்க வாசல்லே போலீஸ் ஜீப் நிக்கிது, உங்களை யாரோ கூப்புடறாங்க” என்றாள்.

    “சரி வந்து சாப்படறேன்” என்றபடி எழுந்து போய் வாசலில் பார்த்தார்.

    ஒரு காவல் துறை ஜீப் அவர் வீட்டருகே வந்து நின்றது.

    “இந்தாங்க, இந்த தினசரியைப் பாருங்க”, என்று அவர் முன் ஒரு தினசரியை நீட்டினார்கள்.  தினசரியை பிரித்தவர் கண்ணில் பட்டது அந்தச் செய்தி. அதிர்ந்து போய் பேச்சு வராமல் அப்படியே தலையில் கைவைத்துக்கொண்டு கண்களில் நீர்வழிய உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்த அஞ்சலை, “என்னங்க ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ?” என்றாள். அவர் கையிலிருந்து தினசரியை வாங்கிப் பார்த்து அதிர்ந்தாள்.

    “வண்டியிலே ஏறுங்க”, என்று அவரையும், அஞ்சலையையும் அழைத்துக் கொண்டு  காவல்துறை ஜீப் புறப்பட்டது. “காவ்யாக் குட்டி, பத்திரமா வீட்டிலேயே இரு”,  என்ற கருப்பசாமியின் குரல் காற்றிலே தேய்ந்தது. 

    “உங்க புள்ளதானே இந்த ரமேஷ், உண்மையைச் சொல்லுங்க, உங்களுக்கும்  தீவிரவாதிகளுக்கும் எவ்ளோ வருஷமாத் தொடர்பு இருக்கு ?” என்றார் அதிகாரி.

    “ஐயா, சத்தியமாச் சொல்றேனுங்க. அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. என் மவன் பெங்களூருக்கு ஒரு இன்டெர்வியுவுக்காகப் போயிட்டு வரேன்னு போனான். இன்னிக்கு வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனான்.  அவ்ளோதாங்க எங்களுக்குத் தெரியும்.  அவன் வந்தா உடனே நானே தகவல் சொல்றேனுங்க, நானே அவனைக் கையோட கூட்டிகிட்டு வந்து உங்க கிட்ட ஒப்படைக்கிறேனுங்க.”  என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்து  உள்ளே போய் அந்தப் பட்டாசு, இனிப்பு அத்தனையையும் எடுத்துவந்து   தண்ணீரில் முக்கி ஈரத்துணியில் முடிந்து  வெளியே எறிந்தார். 

    அக்கம்பக்கத்து மனிதர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். அக்கம்பக்கம் மனிதர்கள், “என்னா ஆச்சு அஞ்சலை ?”ன்னு  அவருடைய மகனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். ஒரு சிறுவன் “டேய் நம்ம ரமேசு குண்டு போட்டானாம்டா, அவனைப் போலீசு தேடுது ” என்று கத்திக் கொண்டே ஓடினான்.

    திபுதிபுவென்று கருப்பசாமியின் குடிசை வாசலில் அவரைத்தேடி கும்பலாக பத்திரிகைக்காரர்களும் வந்தனர். மக்கள் அவர் வீட்டு வாசலில் கூடினர். கண்ணீருடன் நிமிர்ந்த அவரிடம் ஒரு பத்திரிகை நிருபர், “நீங்க பத்திரிகை பாத்தீங்களா, உங்க மகன் தீவிர வாதிகளோட சேந்துகிட்டு குண்டு வெச்சிருக்கான்”  என்றார்.

    “பாத்தேனே…… என்னால தாங்கிக்க முடியலையே…. அப்பப்பா எத்தனை உயிர்கள், எத்தனை உடல்கள் சிதறிப்போச்சு, யாரு பெத்த புள்ளைகளோ, மனிதமே செத்துப்போச்சே, என் மவன் இப்பிடி பல உயிர் போறதுக்கு காரணமா தீவிர வாதியா மாறி குண்டு வைப்பான்னு நான் நெனைச்சு கூடப் பாக்கலையே, என் குடும்பத்திலே அவனாவது படிக்கணும்னு வயித்திலே ஈரத் துணியைக் கட்டிகிட்டு பட்டினியா பசியா உழைச்சேனே, இப்பிடி செஞ்சிட்டானே”,  என்று கதறினார் கருப்பசாமி, அஞ்சலை மயங்கிச் சாய்ந்தாள். பதறிப்போய் அவளை தாங்கிக் கொண்டு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் குமுறிய அவர்.

    “அவனை எங்க மகன்னு சொல்லிக்கறதுக்கே அவமானமா இருக்கு.எங்களுக்கு மகனே பொறக்கலைன்னு நெனைச்சுக்கறேன். எப்பிடியாவது அவனைக் கண்டு பிடிச்சு…. கொன்னுடுங்க ! மனிதத்தையே அழிக்கிற இந்த தீவிர வாதத்திலே ஈடுபடற நரகாசுரன்களை எந்த கிருஷ்ணன் வந்து எப்போ கொல்றானோ, அப்போதான் நம்ம உலகத்துக்கே உண்மையான தீபாவளி அவனைக் கொன்னுடுங்க… கொன்னுடுங்க…” என்று கதறினார் கருப்பசாமி !

    Share
  • எந்தன் விழிகளில்

     

    இசைக்கவி ரமணன்

    எந்தன் விழிகளில் உந்தன் பதங்கள்
    எழுந்து மின்னுதே
    எந்த நேரமும் சிந்தையிலேயொரு
    மொந்தை தளும்புதே
    அந்தரி சூலி வராகி மாரி
    ஆனந்த பைரவி, உன்னை
    அண்டிக் கிடக்குற நெஞ்சு முழுக்கவும்
    மண்டிக் கிடப்பவ நீ!

    சலசலக்குற ஓடையிலே சலங்கை எடுத்தியா? நடுவில்
    பவளம்மின்னும் பவழமல்லியில் பாதம் தொடுத்தியா?
    சந்தனக் காட்டு வாசம் அதுல சேத்துக் கொழச்சியா? உன்
    சந்தோஷமே சங்கீதமா மெட்டி போட்டியா? அம்மா!
    சந்ததம் இந்த சந்நிதி எனக்கு சாசனம் கொடுத்தியா? (எந்தன்)

    இரவுமில்லே பகலுமில்லே உதயமாச்சுது, அது
    இங்கும் அங்கும் நகராம பதிஞ்சி போச்சுது
    உறவுமில்லே பிரிவுமில்லே உயரமாச்சுது
    ஒண்ணு ரெண்டு போலத் தெரிஞ்ச காலமும் போச்சுது
    ஒத்திக்கிட்டு சொட்டுத் தண்ணி வடிப்பது உரிமையாச்சுது (எந்தன்)

     
    பக்கத்துல பாரு நாலு வேதமும் பம்மிப் பதுங்குது, இன்னொரு
    பக்கத்துல அம்மோய் முனிவர் வரிசை பாத்து நிக்குது
    வெக்கமில்லாதொரு ஏழைமனசு நடுவில் கெடக்குது, இந்த
    வெவரம் தெரிஞ்சபோது பாவம் வேர்த்து நடுங்குது, அப்ப
    வீசுற காத்துல பாதம் நடுவில் வீழ்ந்து மறெஞ்சிது! (எந்தன்)

     

    எந்தன் விழிகளில்- உங்கள் செவிகளில்

     

    படத்திற்கு நன்றி :

    http://www.vishvarupa.com/shakti.html

     

     

     

     

    Share
  • வார ராசி பலன் 14.10.12 முதல் 20.10.12 வரை:

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: மாணவர்கள் மன தைரியம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிட்டும். பணியில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களுடன் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றிய அலசலைத் தவிர்ப்பது. சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறாமைக்காரர்களின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் உங்கள் ஆதரவைப் பலப்படுத்தினால் வெற்றி உறுதி. கலைஞர்களுக்குத் தட்டிச் சென்ற வாய்ப்புகள் திறமையின் அடிப்படையில் மீண்டும் உங்கள் வசமாகும். இந்த வாரம் பெண்களின் நிதி நிலையில் சிறிது அதிருப்தி இருந்தாலும், குடும்பச்செலவுகள் தடையின்றி நடக்கும்.

    ரிஷபம்: உறவினர்களுக்கு பணஉதவி செய்கையில் சற்று எச்சரிக்கையோடு இருந்தால், உறவுகள் எப்போதும் இணக்கமாக இருக்கும். சுய தொழில் புரிபவர்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பிருந்தாலும், லாபம் கையில் கிட்டும் வரை பொறுமை அவசியம். இந்த வாரம் உடன் பிறப்புகளுக்காக அதிக நேரமும், பணமும் செலவு செய்யும் சூழல் நிலவும். பணியில் இருக்கும் பெண்கள் எல்லா விஷ்யங்களிலும் கவனத்துடன் செயல்பட்டால், பிரச்னைகள், அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் பொழுது, தகுந்த பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியம்.

    மிதுனம்: பொறுப்பான பதவி வகிப்பவர்கள் ரகசியமாய் வைக்க வேண்டிய செய்திகளை ரகசியமாகவே வைத்தால், நிம்மதியாய் உலா வரலாம். முதியவர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் தேவையான ஓய்வை அளித்தால் புத்துணர்வுடன் பணிகளில் ஈடுபட இயலும். பெண்கள் அறிமுகமில்லாத இடங்களில் இயன்ற வரை சொந்த விஷயங்களைப் பிறரிடம் பரிமாறிக்கொள்வதைத் தவிர்த்து விடவும். இந்த வாரம் சில சமயம் சரக்குகள் வரும் வரை வியாபாரிகள் சிறிது பதற்றத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நிறை குறைகளை அறிந்து கொண்டால் அவர்களை நல்வழிப்படுத்துவது எளிதாகும்.

    கடகம்: சொந்த மனை வாங்க எடுக்கும் முயற்சிக்குத் தேவையான பணமும், ஊக்கமும் சேரும். பெண்கள் ஆரோக்கியம், உணவு இரண்டிலும் தனிக் கவனம் செலுத்தி வந்தால், அயர்வின்றி வேலைகளை முடிக்க முடியும். பணியில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கேற்ற இலாக்காவில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்கள், பண விஷயங்களில் எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்துச் செய்வதே நல்லது. வேலைகளை முடிக்க முடியும். இந்த வாரம் வியாபாரிகள் எதிர்ப்புகளைச் சமாளித்து முன்னேறுவார்கள். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைத் தவிர்த்தால், உடல் நலம் குன்றாமலிருக்கும்.

    சிம்மம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறருக்கு வாக்குக் கொடுக்கும் முன் நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்படுங்கள். கசப்பான அனுபவங்களைத் தவிர்த்து விடலாம். இந்த வாரம் கடன் பிரச்னைகள் பெண்களுக்குச் சற்று தொல்லை கொடுத்தாலும், தங்கள் வாக்கு வன்மையால் அனைத்தையும் சமாளித்து விடுவார்கள். வியாபாரிகள் அரசாங்க விவகாரங்களில் தக்க ஆலோசனையுடன் செயல்படுவதன் மூலம் பண விரயத்தைக் குறைத்து விடலாம். பணிவாகப் பேச்சு, இதமான அணுகுமுறை இரண்டையும் மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு வாய்ப்புக்களோடு பணவரவும் வந்து சேரும்.

    கன்னி: பெண்கள் பண வரவிற்கேற்றவாறு செலவுகளை வரிசைப்படுத்திக் கொண்டால், குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவது கடினமாக இராது. மாணவர்கள் சிறிய விஷயங்களைப் பெரிதாக்கி வம்பு செய்பவரிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இதம், கண்டிப்பு இரண்டையும் தக்கவாறு பயன்படுத்தினால், அவர்களால் பிரச்னைகள் ஏதுமிராது. பணியில் இருப்போர்கள், உயரதிகாரிகளிடம் பணிவாய் நடந்தால், உங்களுக்குத் தேவையான சலுகைகள் நழுவாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பிடிவாதத்தைச் சற்று தளர்த்திக் கொண்டால், உரிய நேரத்தில் உதவிகள் கிட்டும்.

    துலாம்: இந்த வாரம் கூட்டுத் தொழிலில் அவசியமில்லாத மாற்றம் எதையும் செய்ய வேண்டாம். பெண்கள் புதிய உறவுகள், பண வரவுகள் இரண்டிலும் கவனமாய் இருந்தால், பிரச்னைகள் புதிதாய்த் தோன்றாமலிருக்கும். மாணவர்கள் நண்பர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அரவணைத்துச் சென்றால், உங்களுக்குத் தோள் கொடுக்கத் தயாராய் இருப்பார்கள். கலைஞர்கள் வெற்றி கிடைக்கும் வரை எதிலும் அலட்சியம் இன்றி கவனமாகச் செயல்பட வேண்டும். வியாபாரிகள் புதிய தொழில் துவங்குதல், பெரிய அளவில் விரிவாக்கம் செய்தல் ஆகியவற்றில் நிதானமாகச் செயல்பட்டால் பல நன்மை பெறலாம்.

    விருச்சிகம்: வியாபாரிகள் வங்கி கணக்கு வழக்கு ஆகியவற்றை நேரடியாகக் கவனித்து வந்தால், பொருளாதாரம் இறங்காமலிருக்கும். மாணவர்கள் வாகனங்களில் ஏற்படும் சிறு பழுதை உடனடியாகச் சீர் செய்தால், அதிகச் செலவுகள் இருக்காது. உயர் பதவியில் இருப்பவர்கள் முக்கியப் பொறுப்புகளைத் தள்ளிப்போடாமல் செய்து முடித்தால், வெற்றியும் தடையில்லாமல் உங்களைத் தேடி வரும். சிலருக்குப் பணியிட மாற்றமும், அதனால் அதிருப்தியும் ஏற்படலாம். முதியவர்கள் உடற் பயிற்சி, உணவுப் பழக்கம் இரண்டிலும் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    தனுசு: பெண்கள் மிதமான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் அஜீரணம், வயிற்று வலி முதலியவை தலை காட்டாமலிருக்கும். பணியில் இருப்பவர்கள் பணப்பரிமாற்றத்தால் நல்ல நட்பு கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் முக்கியமான அலுவல்களில் உங்கள் முழுக் கவனத்தையும் திருப்பினால், விரும்பிய பலன் கிடைப்பது உறுதி. வியாபாரிகள் வரவில் காட்டும் அக்கறையைச் செலவிலும் காட்டி வந்தால், பொருளாதாரம் கையைக் கடிக்காமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கருத்துக்கு இனிமைப் பூச்சு கொடுத்தால், எதிராளிகளையும் எளிதில் வென்று விடலாம்.

    மகரம்: வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் பெற, வியாபாரிகள் அவ்வப்போது தேவையான புதுமைகளைப் புகுத்தினால் நல்ல பலன்களை அடையலாம். பெண்கள் அடிக்கடி இல்லத்தில் பயன்படுத்தும் மின் சாதனங்களை நல்ல முறையில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கணிசமாகக் குறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கோப தாபங்கள் வார்த்தைகளில் பிரதிபலிக்காமலிருந்தால், நீங்கள் நினைத்தபடி உதவிகள் பெறுவது எளிதாகும். பணியில் இருப்பவர்கள் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு சிபாரிசு செய்வதைத் தவிர்த்து விட்டால், வீண் தலைவலி உங்கள் அருகே வராமலிருக்கும்.

    கும்பம்: கலைஞர்கள் தேடி வரும் வாய்ப்புகளைத் தங்கள் வளர்ச்சிக்கு அடித்தளமாக மற்றிக் கொள்வதன் மூலம் அதிக நன்மைகளை அடையலாம். வேலைக்குப் போகும் பெண்கள் அலுவலகம், இல்லம் இரண்டிடத்திலும் உள்ள பணிச்சுமையைச் சமாளித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகள் பணத்தைக் கையாளும் போது ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்த பின் பட்டுவாடா செய்தால் பணக் கஷ்டம், மனக்கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருந்தால் இழப்புகளும் நஷ்டங்களும் குறையும்.

    மீனம்: இது வரை நெருக்கம் காட்டி வந்த உறவுகள் இந்த வாரம் சற்று விலகியே இருக்கும். பெண்கள் உங்கள் சக்திக்கு மீறிக் கடன் வாங்கிச் செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் புதிய இடங்களில் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் இருந்தால், சிக்கல்களை எளிதில் சமாளிக்க முடியும். பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் திருப்தியைச் சம்பாதிக்க சற்று அதிகமாகப் பாடுபட வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் உடல்நலம், மன நலம் இரண்டையும் நல்ல விதமாகப் பராமரித்து வந்தால், அவர்களின் பாதையில் வெற்றியும், வாழ்த்தும் வந்து சேரும்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 41

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

    காமக் கடவுளுக்கு விஞ்சை வீரன் விழா எடுத்தல்

    பெரிய வெள்ளிமலையில் அமைந்திட்ட
    அகன்ற பெரிய வித்தியாதரர் நகரினிலே
    தேன் ஒழுகும் மலர்கள் செறிந்த
    பூம்பொழில் ஒன்று.

    ஆங்கே
    நீண்ட கரிய கயல்களை ஒத்த
    கயல்விழிக் காதலியோடு இணைந்து
    விஞ்சை வீரன் ஒருவன்
    காம தேவன் அவனுக்கு
    விருந்திட்டே விழாக் கொண்டாடினன்.

    இந்திர விழா பற்றியும், புகார்க் காட்சிகள் பற்றியும் விஞ்சை வீரன் தன் காதலிக்கு உரைத்தல்

    காமவிருந்து முடியும் தருணம்
    தன் காதலியிடன்
    உரைத்தனன் இங்ஙனம்.

    வடபுலத்தில் உறையும் நாம்
    காமவேள் விழாவது கொண்டாடி
    முடிக்கும் நாள் இன்று.

    இதே நாள்
    தென்திசையதனில் வளம்கொழிக்கும்
    புகார் நகர் தன்னில்
    இந்திர விழாவினுக்கென்று
    கால் கோள் கொடியேற்றித் தொடங்கும்
    முதல் நாள்.

    விழாக்கோலம் பூண்டிருக்கும்
    புகார் தன்னில்
    காணும் காட்சிகள்தான்
    என்னென்னே!!.

    நாளங்காடிக் காட்சிகள்

    மிக்க வேகமுடன்
    நெருங்கி வந்து எதிர்த்து நின்ற
    அசுரர் பெருங்கூட்டம்
    தோற்றோடிப் போனது..
    இந்திரன் நகரைக் காவல்புரிந்த
    புலியின் வலிமையுடைய
    வீரக்கழல் அணிந்த
    முசுகுந்தன் அவனிடம்.

    எனினும்
    வஞ்சனை மிகுதியால்
    அசுரர் கூட்டம்.
    போகிற போக்கில்
    ஏவியே சென்றது
    முசுகுந்தன் மீது
    இருள்கணை ஒன்றினை.

    முசுகுந்தன் ஏவலுக்காய்
    இந்திரன்விட்டுச்சென்ற
    காவல் பூதம்
    வஞ்சக இருளை நீக்கியது.

    என்றென்றும் முசுகுந்தன்
    மெய்க்காவலாகி நிற்கவென்று
    இந்திரன் இட்ட கட்டளைப்படி
    முசுகுந்தன் அவனுடன்
    புகார் நகர் நாளங்காடி தங்கியே
    பலிபெற்று வருகிறது.
    காவல் பூதமது.

    இத்தகைய சிறப்புப் பொருந்திய
    நாளங்காடிக் காட்சிகளை
    நாம் காண்போம்.

    ஐவகை மன்றக் காட்சிகள்

    முன்பு அசுரரால் வந்த
    இடரது போக்கியே
    அமராவதி நகரைக் காத்தமையால்
    மகிச்சியுற்ற இந்திரனால்
    கைம்மாறாய் அளிக்கப்பட்டு
    சோழ மரபினரால் கொண்டுவரப்பட்டு

    என்றும் பொய்க்காமல் நிலைபெற்ற
    தனித்தன்மையுடன் அழகுடன்
    புகார்நகரில் இலங்குகின்றது
    ஐவகை மன்றம்.

    அம்மன்றத்தின் சிறப்பினைக்கண்டு
    நாம் மகிழ்வோம்.

    உருப்பசி /ஊர்வசி வழித்தோன்றலாகிய மாதவியின் ஆடல் காட்சிகள்

    அன்றொரு நாள்
    இந்திரன் அவையில்
    அகத்தியரை வரவேற்க
    நாரத முனிவன்
    இசையின்பம் சிறக்கப்
    பாடும் பாடலும்,
    தோரிய மடந்தையர் பாடிய
    வாரப் பாடலும்
    ஆயிரம் கண்ணுடைய இந்திரன்
    செவியை நிறைத்து நின்றிருக்க…

    சயந்தன் நினைவில் மயங்கியபடி
    நடனமாடிய உருப்பசியின்
    குறை பொருந்திய நடன நாடகம்
    இந்திரன் செவியை நிறைக்கவில்லை…

    இதே காரணத்தால்
    பிற வாத்திய இசைகளும்
    தளர்ந்தேதான் போய் நிற்க..

    அகத்தியர் தாமும்
    சாபமிட்டார் இங்ஙனம்
    வீணை மங்கலமிழப்பதாக.
    இவள் மண்ணுலகில் பிறப்பாளாக

    சாபமதன்படி உருப்பசி
    மாதவியென்று பிறந்தனள்
    கணிகையர் குலத்தில்.

    உருப்பசி மாதவியாக….
    அவ்வழித்தோன்றலில் வந்த
    பாம்பு போன்ற அல்குல் உடையவள்
    இன்னுமொரு மாதவி.

    அவள் தம் சிறப்பு நடனக்காட்சிகளும்
    நாம் காண்போம்.

    சிவந்த இதழ்களும்
    உடுக்கை போன்ற இடையும்
    உடையவளே!

    புகார்நகரில் பூசைகொள்ளும்
    அமரர் தலைவன்
    இந்திரனை நாமும் வணங்குவோம்..
    என்றனன் தன் காதலியிடம்
    அவ்விஞ்சை வீரன்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 27
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram14.html

    படத்துக்கு நன்றி:
    http://www.rubylane.com/shop/rubylane-sold/ilist/,c=Vintage_Pins%2FBrooches_Jewelry,cs=Antique+%26+Vintage+Jewelry:Vintage:Pins%2FBrooches.html

    Share