Blog

  • முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 11

    –சி. ஜெயபாரதன்.

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 11

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 41

    Mukkonakkilikal - 42

    Mukkonakkilikal - 43

    Mukkonakkilikal - 44

    தொடரும்…

    Share
  • திருமால் திருப்புகழ் ( 134)

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    எங்கே இருக்கின்றீர், என்குரு நாதரே,
    இங்கே இருமை இருளிலுள்ளேன், -சங்கே,
    முழங்கு செவிடனென், மூளையில் எட்ட,
    ஒழுங்கு முறையாய் உரத்து….(320)

    சிரிரங்கா, வெண்ணை ,உறிரங்கா, வண்ணக்,
    கரிரங்கா, மாகிரி ரங்கா, -சரிரங்கா,
    இப்படி ஏத்தினால்தான், இல்லம் புகுவாயா,
    அப்படி என்ன அழும்பு’’….(321)

    தந்தம் ஒடித்தனன், தாய்மாமன் யானைக்கு,
    வந்தமா மல்லரை வீழ்த்தினன், -அந்த,
    முகுந்தனோ(டு) ஒன்ற, உகந்தவழி ஒன்று,
    அகந்தை அழித்தலாம் அது….(322)

    கரஞ்சூழ் வாளும், கதிராழி சங்கும்,
    அறஞ்சூழக் கொண்டுலகை ஆளும், -பரஞ்சோதி,
    நாரா யணனே, நலம்செய் மனத்தனே,
    சீராயர் சேயனே சத்து….(323)

    மைகொண்ட கண்ணாளை, மார்கொண்ட கண்ணனை,
    பைகொண்ட பாம்பில் படுத்தவனை, -வைகுண்ட,
    ஏகா தசியில், எழுப்புவோர்(கு) எம்பாவாய்,
    ஆக பரமபதம் ஆம்….(324)

    கையே தலையணையாய், பைந்நாகம் பாய்விரிப்பாய்,
    செய்யும் தொழில்யோக, சிந்தையாய், -செய்ய,
    குமுதத்தாள் தாங்க, குமுதத்தாள் நீட்டி,
    அமுதத்தன் தூங்கும் அழகு….(325)

    ——————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/

     

    Share
  • செவ்வாய்க் கோள் செல்லும் நாசாவின் எதிர்கால மனிதப் பயண தட்டுத் தளவூர்தி மெதுவாய் இறங்குவது நிரூபிக்கப் பட்டது.

    NASA Flying Saucer -1

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    [June 28, 2014]

     

    http://www.space.com/26390-nasa-s-flying-saucer-test-launch-and-powered-flight-video.html

    http://www.space.com/26143-flying-saucer-inflatable-mars-aerobrake-how-to-test-it-video.html

     

     

     

    செவ்வாய்க் கோள் செம்மண்ணில்
    மெதுவாய் இறங்கும் நாசா
    நூதனப் பறக்கும் தட்டு
    மாதிரிச் சோதனை செய்து முடித்தது !
    சாதனை புரிந்தது முதன்முதல்
    சோதனைத் தள இறக்கி !
    ஆறு சக்கர  ஊர்தி  முன்பு
    ஐயப் பாடுடன் இறங்கியது
    அதிர்ச்சி  உண்டாக்கி !
    இறங்காமல் போன ஊர்திகள் பல.
    இதுவரை ஏவப் படாத
    புதுமுறைப் பயணத் தட்டு இது !
    அகிலக் கதிர்ப் பாய்ச்சல்
    பரிதிக் கதிர்த் தாக்கல்
    குறைத்து  விண்வெளி தீரர்
    செவ்வாய்த் தளத்தில்
    மெதுவாய்
    இறங்கும் பறக்கும் மிதப்பிச்
    சோதனை முடிந்தது
    சிறப்பாக !
    இந்திய விண்ணூர்தி  இவ்வாண்டு
    செந்நிறக் கோள்  அண்டிச்
    சுற்றி வரப் போகுது
    வெற்றி கரமாக !

     

    ++++++++

     

    Soft Landing testing

     

    அண்டவெளிப் பயணத்தில் மிகத் தணிவுச் சுற்றுவீதியில் வட்டமிடும்  உலக நாட்டு விண்வெளி நிலையத்தைத் [International Space Station] தாண்டி மனிதர் நீண்ட காலம் பயணம் செய்யப்  பொறி நுணுக்கம் முற்போக்கடைய வேண்டும்.

    மைக்கேல் காஸாரிக் [Head Space Technology, NASA Headquarters]

    செவ்வாய்க் கோள் பயணத்துக்கு முன்பே பறக்கும் தட்டு இறக்கு முறைகளை குறைந்த நிதிச் செலவில் சோதித்து அது இயங்கப் போகிறதா வென்று உறுதியாக்கப் பட வேண்டும்.  நேற்று முடிந்த [ஜூன் 28,2014] சோதனை வெற்றியில் புளாதாங்கிதம் அடைந்தோம்.  பறக்கும் தட்டுச் [LDSD [Low Density Supersonic Decelerator]  சோதனை நாங்கள் முன்பு போட்டத் திட்டக் குறிக்கோளை நிறைவேற்றியது.  நாங்கள் சேமித்த தகவல் எதிர்காலச் செவ்வாய்க் கோள் மனிதப் பயணங்களுக்குப் பயன்படும்.

    மார்க் ஆட்லர்  [NASA Jet Propulsion Laboratory]

     

    Flying Disc Test Profile

     

    சமீபத்தில் நாசா ஏவிய சோதனைப் பறக்கும் தட்டின் சாதனை

    2014 ஜுன் 28 ஆம் தேதி ஹவாயி கௌவாய்த் தீவில், நாசா விஞ்ஞானிகள்,  ஹீலிய பலூனி லிருந்து தூக்கிச் செல்லப் பட்டு ஏவிய பறக்கும் தட்டு ஒலிமிஞ்சிய வேகத்தில் [Supersonic Mach : 4] உந்திச் சென்று 160,000 அடி உயரத்திலிருந்து 110 அடி விட்ட முள்ள [33 மீடர்] பாராசூட் மூலம், மெதுவாய் இறங்கி ஒருபெரும் விண்வெளிச் சாதனை புரிந்துள்ளது.   பறக்கும் தட்டு  20  அடி விட்டமுள்ள [6 மீடர்] காற்று உப்பிய ஓர் வட்ட வளையம் [Inflatable Ring].  ஹீலிய பலூன் வட்ட வளையத்தை முதலில் 120,000 அடி உயரத்தில் தூக்கி பிறகு தனியே விட்டது.  அப்போது   வளையத்தில் இருந்த நான்கு சிறு உந்து கணைகள் [ராக்கெட்டுகள்]  சுடப்பட்டு வளையத்தை ஒலிமிஞ்சிய வேகத்தில் தூக்கி 160,000 அடி உயரத்தில் [Stratosphere] கொண்டுபோய் மிதக்க விட்டது.  அப்போது ஒரு பாராசூட் சுயமாய்த் திறந்து காற்று உப்பிய வளையத்தை மெதுவாக இறக்கி, முடிவில் அது பசிபிக் கடலில் விழுந்து  கைப்பற்றப் பட்டது.

    அதாவது முதன்முதல் மனிதர் செல்லும் செவ்வாய்க் கோள் தளவூர்தி  இவ்விதம் மெதுவாக இறங்க இந்தப் பறக்கும் தட்டுச் சோதனை வெற்றிகரமாகச் செய்யப் பட்டது.  இந்தச் சோதனைத் திட்டத்தின் நிதி மதிப்பீடு 150 மில்லியன் டாலர் [2014 நாணய மதிப்பீடு].  சோதனையில், பாராசூட் திட்டமிட்டபடி  முழுவதும் விரியாமல் பகுதி அளவே திறந்தது.   ஒரு புதுவித நூதன உப்பிய நிறுத்த ஏற்பாடும் [Inflatable Braking System] சரியான நேரத்தில்  இயங்காமல் போனது.  முக்கிய சோதனை மட்டும் நிறைவேறியது.  மேலும் இந்தப் பறக்கும் தட்டு சோதனைகள் மீண்டும் செய்யப் படும்.  இதுவரை செய்த தளவூர்தி ஏற்பாடுகள் இத்தனை மெதுவாக செவ்வாய்க் கோளில் இறங்கியதில்லை.   அத்துடன் பறக்கும் தட்டு  இறக்கும் முறை தயாரிப்பதில் நிதிச் செலவும் சிக்கனம்.

     

     

    தளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள்  (Sediment Rocks).   அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையஆய் இருக்கும்.     எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.

    ஜாய் கிரிஸ்ப் (Mars Science Lab Dy Project Scientist NASA)

    (2012  ஆகஸ்டு முதல் வாரத்தில் )  செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம்  (Mound at the center of Gale Crater) MFF  உருவாக்கக் காட்சியை   (Medusae Fossae Formation  Exposure) ஒத்தது.   (MFF on Mars is an intensely eroded deposit ..)  அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை.   முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும்.   இதுவரை எந்த விண்ணுள வியும்  MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை.  அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.

    ஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர்  National Air & Space Museum)

     

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BudlaGh1A0o   [Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation]

    “உச்சத் தரமான தொலை அளப்பு மூலம் (High Quality Telemetry) தளவூர்தி (செவ்வாய் ஈர்ப்பில்) புகுவது, இறங்குவது, தடம் வைப்பது ஆகிய நிகழ்ச்சிகளை தெளிவாக அறிவது அவசியமானது.  செவ்வாய்க் கோள் விண்வெளித் திட்டத்தில் அதுவே மிக்க சவாலான தீரச்செயல் நுணுக்கம் !  நாங்கள் தேர்ந்தெடுத் திருக்கும் இறங்கு பாதை பிரச்சனைகள் குறைந்த முறையில் தகவலை அனுப்பும் பெரும் தகுதி யுள்ளது.”

    ஃபியூக் லி (Mission Mars Exploration Program at JPL)

    “செவ்வாய்த் தளத்தைத் தொடும் தருணத்துக்கு முன்னும், பின்னும் நேரும் முக்கிய நிகழ்ச்சிகளைத் தகவல் மூலம் அனுப்பும் பல்வேறு தகுதிப்பாடுகளை ஒப்பு நோக்கியே தேர்வு முறைகள் தீர்மானிக்கப் பட்டன.  குறுகிய பாதையில் இறக்கினால் இரண்டு விண்வெளிக் கப்பல்கள் (NASA’s Mars Odyssey & Mars Reconnaissance Orbiter) தொடர்ந்து தளவூர்தியைக் கண்காணிக்க வேண்டும். மாறாக நெடிய பாதையில் இறக்கும் போது தகவல் அனுப்புப் பூமிக்கு நேரடித் தொடர்பு கிடைக்கிறது.”

    மைக்கேல் வாட்கின்ஸ் (Mission Manager, NASA Jet Propulsion Lab).

     

     

     

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

    “மனிதன் இதுவரை நுழையாத இடத்துக்கு நாமினித் தைரியமாகப் போக வேண்டும். வால்மீன்கள் ஈர்ப்பு வீச்சைப் பயன்படுத்துவது, வக்கிரக் கோள்களை நெருங்குவது, செவ்வாயின் துணைக்கோளை ஆராய்வது போன்றவை அந்த முயற்சிகள்.  அங்கே ஓரினத்துவம் உள்ள பாறை உள்ளது.  உருளைக் கிழங்கு போல் தாறுமாறாக உள்ள ஃபோபாஸ் துணைக்கோள் செவ்வாய்க் கோளை 7 மணி நேரத்துக்கு ஒருமுறைச் சுற்றுகிறது.  மக்கள் ஃபோபாஸைக் காணும் போது ‘யார் அதை அங்கு வைத்தவர்’ என்று கேட்டால் பிரபஞ்சம் அதை அங்கே விட்டு வைத்தது என்று சொல்லலாம், விரும்பினால் கடவுள் அமைத்து விட்டார் என்றும் கூறலாம்.”

    அமெரிக்க விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் (Buzz Aldrin)

    “விஞ்ஞானத் துறையகம் அடுத்த ஆண்டு  (2013) ஆரம்பத் திட்டத்துக்குப் பச்சை விளக்கு  காட்டியதும், எங்கள் செவ்வாய்க் கோள் குறிப்பணியைத் துவக்கி வைப்போம்.  சந்திரனை ஆராய்ந்த பிறகு இப்போது அடுத்து எங்கள் குறி நோக்கம் செவ்வாய்க் கோள் மீது பாய்கிறது.”

    தேவிபிரசாத் கார்னிக்  (Director of Indian Space Research Organization)

     

     

     

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒத்தமைப்பு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்புத் தங்குதளம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

    “1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா இப்போது எழுந்துள்ளது.  ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம்.  ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம்.  ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்து விடும்.  செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம்.  ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்.”

    வில்லியம் பாயின்டன், [William Boynton] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

     

     

    LDSD TEST PROFILE -1 

     

    நாசா அனுப்பிய செவ்வாய்த் தளவூர்தி 2012 ஆகஸ்டு 6 இல் வெற்றிகரமாய் இறங்கியது !

    2.5 பில்லியன் டாலர் நிதிச் செலவில் (2012 நாணய மதிப்பு) நாசா 2011 நவம்பரில் துவங்கிய செவ்வாய்க் கோள் பயணத்தில் நவீனத் தளவூர்தி ஒன்றைப் புதிய முறையில் இறக்கி விண்வெளிச் சாதனை ஒன்றைப் புரிந்தது.  2009 ஆம் ஆண்டில் முடிவு செய்யப் பட்ட அத்திட்டம் விண்வெளி மீள்கப்பல் (Space Shuttle) பயண நிறுத்த நீடிப்பாலும், தளவூர்திப் பயிற்சிக் காலம் போதான்மை யாலும் தாமதமாகி 2011 ஆண்டு நவம்பரில்தான் நிறைவேற்றியது.  நாசா இதற்கு முன்பு வெற்றிகரமாகச் செவ்வாய்த் தளத்தில் இறக்கிய மூன்று தளவுளவி களின் (Spirit, Opportunity & Phoenix Lander) அனுபவத்தில் இப்போது அவற்றை விட முற்போக்கான “செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வு ஊர்தி” (Mars Science Laboratory, MSL)  எனப்படும் “ஆர்வ நோக்கித்” தளவூர்தி (Curiosity Rover) ஒன்றை அனுப்பி வெற்றி பெற்றுள்ளது.  நூதனத்  தளவூர்தி செவ்வாய்க் களத்தில் இரண்டாண்டு காலம் ஆய்வுகள் நடத்தப் போகிறது.  செந்நிறக் கோள்  விண்ணூர்தி 2011 ஆண்டு நவம்பரில் பிளாரிடா கனாவரல் ஏவு முனையிலிருந்து (Cape Canaveral, Florida) ஏவப்பட்டு 9 மாதங்கள் 350 மில்லியன் மைல் பயணம் செய்து,  செவ்வாய்க் கோள் ஈர்ப்பு விசையில் இறங்கி தளவூர்தியை பாராசூட் மூலம் முதலில் இறக்கி, பிறகு எதிர்விசை ராக்கெட்டுகள் கட்டுப்படுத்தி நாண்கள் கட்டிய தூக்கியில் கீழிறக்கித் தளத்தில் மெதுவாக, பாதுகாப்பாக வைத்துள்ளது.    செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் விண்ணூர்தி வேகத்தைத் தணித்து செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறக்கிச் சுற்ற வைப்பது, பூமியிலிருந்து சமிக்கை அனுப்பிக் கட்டுப் படுத்தும் மிகவும் சவாலான பொறியியல் நுணுக்க வேலை.   இந்த முயற்சிகளில் வெற்றி / தோல்வி 50% / 50% தான்.    இதுவரை செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்த நாசா, ஈசா, ரஷ்யா ஆகிய நாடுகளின் விண்வெளிப் பயணங்களில் வெற்றி அடைந்தவை  40% எண்ணிக்கைதான்.

    jay

    இந்த விண்வெளி சுய இயக்க யந்திர வேலைகள் யாவும் அசுர வேகத்தில் இறுதி ஏழரை நிமிடங்களில் திட்டமிட்டது போல் அடுத்தடுத்து தானாக நிகழ்ந்து நாசா ஒரு பெரும் விண்வெளி நுணுக்க முறையை முதன்முதல் செய்து காட்டி யுள்ளது.

    தளவூர்தி சுமந்து சென்ற நாசா விண்சிமிழ் ஏவப் பட்ட பிறகு சுமார் 9 மாதங்கள் 350 மில்லியன் மைல் தூரப் பயணம் செய்துள்ளது.   முதன்முதல்  தளவூர்திச் சிமிழ் விடுபட்டு விழும் போது மணிக்கு 8000 மைல் வேகத்தில் (விநாடிக்கு 3600 மீடர்) ஆகஸ்டு 4 ஆம் தேதி செவ்வாயின் மெலிந்த வாயு மண்டல உராய்வில் எரிந்து போகாமல், வெப்பக் கவசப் (Heat Shield) பாதுகாப்போடு இறங்கியது.  இறுதி ஏழு நிமிடங்கள்  செவ்வாய் ஈர்ப்பு விசையால், அந்த வேகம் மணிக்கு 13200 மைல் (விநாடிக்கு  5900 மீடர்) உச்சத்தில் அசுர வேகமானது !    வெப்ப எரிப்பு மட்டம் தாண்டிய பிறகு பாராசூட்  ஒன்று குடை விரித்துச் சிமிழைத் தாங்கி சற்று மெதுவாய் இறக்கியது.   அதற்குப் பிறகு எதிரடி ராக்கெட்டுகள் (Retro-Rockets) சுயமாய் இயங்கிச் சிமிழின் வேகத்தைக் குறைத்தன.  தளவூர்தி பின்பு ஒரு நூதனத்  தூக்கி மூலம் மெதுவாக இறக்கப்பட்டுச் செவ்வாய்த் தளத்தை ஊர்தியின் ஆறு சக்கரங்கள் ஒன்றாய்த் தொட்டன.  பிறகு அது அனுப்பும் தகவல், முன்பு அனுப்பி செவ்வாய்க் கோளைச் சுற்றிக் கொண்டிருக்கும் நாசாவின் மார்ஸ் ஆடிஸ்ஸி, அல்லது அடுத்த ரிக்கானைசென்ஸ் ஆர்பிட்டர் (NASA’s Mars Odyssey and / or Reconnaissance Orbiter) விண்ணுளவிகள் மூலம்  பூமிக்கு  வந்து சேரும்.   ஆர்வ நோக்கித் தளவூர்தி பூமிக்கு அனுப்பிய முதல் மீன்விழிப் படங்கள் கருப்பு நிறத்தில் சிறிதாய் இருந்தன.  தளவூர்தியில் உள்ள பன்னிறப் படக் காமிராக்கள் இனிமேல்தான் இயங்க ஆரம்பிக்கும்.

    2011 நவம்பரில் ஏவப்பட்ட செவ்வாய் விண்ணூர்தி 9 மாதங்கள் பயணம் செய்து 2012 ஆகஸ்டு  5 அல்லது 6 ஆம் தேதி செந்நிறக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது.  விண்சிமிழின் எடை 900 கி.கிராம் (1980 பவுண்டு). திட்டப் பணி செவ்வாயில் 686 பூமி நாட்கள் நீடிக்கும்.  தளவூர்தியின் முக்கிய ஆய்வு செவ்வாய்ச் சூழ்வெளியானது நுண்ணுயிர் ஜீவன்களை வளர்ப்பிக்கும் தகுதி உடையதா, அவற்றைப் பாதுகாக்கும் தன்மை உள்ளதா என்பதைக் காண்பதே.  அதாவது செவ்வாய்க் கோள் தோன்றிய காலத்தில் வாயுச் சூழ்வெளியும், நீர்மை வளங்களும் வசதி செய்து உயிரினங்கள் வசித்தனவா என்பதை நிரூபித்துக் காட்டுவதே ஆகும்.

    தளவூர்தி இறங்கத் திட்டமிடப் பட்டுள்ள  செவ்வாய்த் தளம் கேல் ஆழ்பள்ளம் (Gale Crater).  அது ஆராயப் போகும்  பரப்பின் நீளம் 16 மைல் நீளம், 12 மைல் அகலம்.   ஆறு சக்கர தளவூர்தி முதன்முதலில் ஒரு ராக்கெட் எஞ்சின் இயக்கும் பளுதூக்கி (Rocket-powered Sky Crane) மூலம் நூதன முறையில் இறக்கப் படும்.

    முக்கியமாக இந்தச் செவ்வாய்க் கோள் திட்டத்தில் நான்கு குறிப்பணிகள் நிறைவேற்றப்படும்.

    1. உயிரினம் எப்போதாவது செவ்வாய்த் தளத்தில் உதித்துள்ளதா ?

    2. செவ்வாய் பருவ நிலைப் (Climate) பண்பாடு எவ்விதம் இருந்து பிறகு மாறி யுள்ளது.

    3. செவ்வாய்க் கோளின் தளவியல் (Geology) பண்பாடுகளை உளவி அறிவது.

    4. செவ்வாய்க் கோள் தேடலில் அடுத்து வரப் போகும் மனிதப் பயணத்துக்குத் தயார் செய்வது.

    நாசா திட்டமிட்டிருக்கும் ஐந்து விண்வெளிக் குறிப்பணிகள்.

    2011 நவம்பரில் நாசா செவ்வாய் விஞ்ஞான ஆய்வகத்தை அட்லாஸ் V- 541 ராக்கெட்டில் பிளாரிடா கனாவரல் ஏவுகணை முனையில் அனுப்பத் திட்டமிட்டது.   இந்த முறை ராக்கெட்டில் செவ்வாயைச் சுற்றும் விண்கப்பல் எதுவும் தனியாக அமைக்கப் படாமல் வெறும் தளவூர்தியைத் தாங்கிச் செல்லும் விண்ணூர்தி மட்டும் ஏற்றிச் செல்லப்படுகிறது.  தளவூர்தி செவ்வாய்த் தளத்தில் இறங்குவதை, ஏற்கனவே பல மாதங்கள் சுற்றிவரும் செவ்வாய்க் கண்காணிப்பு விண்சுற்றி (NASA’s Mars Reconnaissance Orbiter) கவனித்துத் தளவுளவி சேமிக்கும் தகவலைப் பூமிக்கு அனுப்பும்.

     

     

    1.  செவ்வாய்த் தளவூர்தி எவ்வளவு பெரியது ?

    புதிய தளவூர்தி பழைய நான்கு விதமான தளவுளவிகளை (Spirit, Opportunity, Sojouner, Phoenix Lander) விடப் பெரியது, நீளமானது, கனமானது, நூதனமானது.  அதன் நீளம் : 10 அடி (3 மீடர்).  வாகனம் செவ்வாய்த் தளத்தில் எதிர்ப்படும் 2.5 அடி உயரக் கற்களைக் கடந்து செல்லும் திறன் உடையது.  தளத்தில் 600 அடி (200 மீடர்) நீளம் நகரும் ஆற்றல் உள்ளது.  விஞ்ஞான உளவுக் கருவிகள் எடை : 80 கி.கிராம் (176 பவுண்டு). வாகனத்தின் உச்ச வேகம் : மணிக்கு 90 மீடர் (300 அடி) தூரம்.  சராசரி சாதாரண வேகம் : மணிக்கு 30 மீடர் (100 அடி) தூரம்.  2 வருடத்தில் தளவூர்தி சுமார் 20 கி.மீடர் (12 மைல்) தூரம் பயணம் செய்யும் என்று சுமாராகக் கணிக்கப் படுகிறது.

    2.  நூதனத் தளவூர்தி எவ்விதம் செவ்வாயில் இறங்கத் திட்டமிடப் பட்டது ?

    இதுவரை செவ்வாய்க் கோளில் இறங்கிய தள வாகனங்கள் அனைத்தும் காற்றடைத்த பந்துக் கொத்தில் (Airbag Cushion Balls) அமைக்கப் பட்டு பாராசூட் இறக்கிக் கீழே விடுவிக்கப் பட்டன.  தரையில் விழுந்த பந்துக் கொத்து தவ்வித் தவ்வி இறுதியில் நின்று வாகனம் வெளிவந்தது.  புதிய நூதனத் தளவூர்தி ஹெலிகாப்டரில் சாதனம் இறக்கும் “வானிறக்கு முறையில்” (Sky Crane Lowering) செவ்வாய்த் தளத்தில் தடம் வைக்கும்.  இந்த முறைக்கு பாராசூட், “எதிரியக்கு ராக்கெட்” (Retro-Rocket), வானிறக்கு வடங்கள் தேவைப்படும்.  வாகனத்தை இறக்கும் விண்சிமிழை முதலில் பாராசூட் சுமந்து கீழிறக்குகிறது.  பிறகு விண்சிமிழின் எதிரியக்கு ராக்கெட்டுகள் இயங்கி செவ்வாய்க் கோள் ஈர்ப்பு விசைக்கு எதிராக மெதுவாக்கி அதன் இழுப்பைக் குறைக்கின்றன. அதன்பின் “வான் கீழிறக்கி” (Sky Crane) வடங்களில் கட்டப்பட்ட தளவூர்தி வாகனம் இறங்கித் தளத்தில் ஆறு சக்கரங்கள் படிய ஏதுவாகிறது.

     

    3. தளவூர்தியில் உள்ள சாதனக் கருவிகள்

    செவ்வாய்த் தளவூர்தியில் 10 கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன.  அவை மண், பாறை, சூழ்வெளியைச் சோதிக்கும் திறமுடையவை.  தொலைவிலிருந்து பாறைப் படிவை வாயுவாக்கும் வல்லமை உடைய ஒரு லேஸர் சாதனம் உள்ளது.  அடுத்தோர் கருவி ஆர்கானிக் கூட்டுகள் உள்ளனவா என்று சோதிக்கும்.  பிறகு தொலைவில் உள்ளவற்றைக் காணவும், படமெடுக்கவும் தேவையான புதுவிதக் காமிராக்கள்,  தளத்தைத் தோண்டும் கருவியும், அள்ளும் ஓர் அகப்பையும் உள்ளன.  எடுத்துப் பொடி செய்த பாறைகளின் உட்பொருளைப் ஆய்வு செய்திட இரசாயனக் கருவிகள்.  உயிரினத்தை வளர்ப்பிக்கும் ஆர்கானிக் கார்பன் கூட்டுகள் (Organic Carbon Compounds – Carbon, Hydrogen, Nitrogen, Oxygen, Sulfur & Phosphorus) இருப்பைக் காணும்,.  உயிரியல் பண்பாடுகளை (Biological Processes) நோக்கும் தளக் கலவைகளை  (Chemical, Isotopic, Minerological Composition of the Martian Surface) தனித்து அறிவது.  4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் செவ்வாய்ச் சூழ்வெளி வளர்ச்சி/தளர்ச்சிக் கால நீட்சி வரிசையைக் காண்பது.  செவ்வாய் நீரோட்டத்தின் தற்போதைய நிலை, பரவல் வரலாறு, நீர், கார்பன் டையாக்ஸைடு சுழற்சிப் போக்கை அறிவது. செவ்வாய்த் தளத்தில் தளக் கதிர்வீச்சு, காலாக்ஸி கதிர்வீச்சு, அகிலக் கதிர்வீச்சு, பரிதி புரோட்டான் நிகழ்ச்சிகள், இரண்டாம் பிறப்பு நியூட்ரான்கள் (Surface Radiation, Galactic Radiation, Cosmic Radiation, Solar Proton Events & Secondary Neutrons) ஆகிவற்றின் பண்பாடுகளை அறிவது.

     

    4. தளவூர்தி செவ்வாயில் செய்யப் போகும் சாதனைகள்

    செவ்வாய்த் தளத்தில் உலவும் வாகனத்தின் சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொரு சக்கரமும் தனித்தியங்க வெவ்வேறு மோட்டர் உள்ளது.  முன்னிரண்டு, பின்னிரண்டு சக்கரங்கள் திரும்ப தனித்தனித் “திருப்பி மோட்டார்” (Steering Motor) உள்ளது.  இம்மாதிரி திருப்பிகள் இருப்பதால் தளவூர்தி நின்ற இடத்திலே 360 டிகிரி கோணத்தில் திரும்ப முடியும்.

    5. தளவூர்தியை இயக்கும் மின்சக்தி ஆற்றல்

    பல்துறைப் பயண கதிரியக்க உலோகத்தின் மின்கலம் (Plutonium-238 Radioactive Decay) (Multi-Mission Radioisotope Thermo-electric Generator -MMRTG) ஆண்டு முழுவதும், இராப் பகலாய் 125 வாட்ஸ் (உச்ச அளவு) மின்னாற்றல் தர வல்லது.  செவ்வாய்க் கோளின் மத்திய ரேகையைத் தாண்டி வாகனம் சென்றாலும் தொடர்ந்து மின்சக்தி கருவிகளுக்குக் கிடைக்கும்.  பரிதியின் எரிசக்தி வாகனம் மத்திய ரேகைப் பகுதிகளில் நடமிடும் போது மின்னாற்றல் அளிக்கும்.  தளவூர்தியின் பரிதி மின்கலம் தினம் 2.5 kwh (Kilo Watt Hour)  வரை உற்பத்தி செய்யும்.  MMRTG கதிரியக்க மின்கலம் 2 ஆண்டுகள் வரைத் தேவைப் பட்டாலும் அதன் ஆயுள் 14 ஆண்டுகள் நீடிக்கும்.

     

     

    2013 செப்டம்பரில் சுற்ற  செந்நிறக் கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி

     

    2009 செப்டம்பரில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய இந்தியா 2013 ஆண்டில்  சிரமமான செந்நிறக் கோளைச் சுற்றி வரப் பேராசைத் திட்ட மிட்டுள்ளது.   20/21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷ்யா, ஈரோப்பிய நாடுகள், ஜப்பான், சைனா ஆகிய நாடுகள் செவ்வாய்க் கோளில் இறங்கி ஆராய்ந்தும்,இனிமேல்  ஆராய விரும்பியும் வருவது போல் இப்போது இந்தியாவும் இந்தப் பந்தயத்தில் இறங்கியுள்ளது.   அடுத்த ஆண்டு (2013) மனிதரற்ற ஓர் தனி விண்ணுளவியை 320 டன் எடை கொண்ட,  துருவத் துணைக்கோள் அனுப்பும் ராக்கெட்டில் (Indian Polar Satellite Launch Vehicle) (PSLV Rocket)  ஏவப்படும் திட்டம் தயாராகி அரசாங் கத்தின் அனுமதிக்கு இந்திய விண்வெளி ஆய்வகம் காத்திருக்கிறது.  பெயர் குறிப்பிட விரும்பாத வேறோர் அரசாங்க அதிகாரி செவ்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற சுமார்  90 மில்லியன் டாலர் (5 பில்லியன் ரூ) நிதித் தொகை மதிப்பீடு செய்துள்ளதாகக் கூறினார்.   சென்ற ஆண்டில் இந்தத் திட்டத்துக்கு 1.25 பில்லிய ரூ ஒதுக்கி வைத்தாகவும் தெரிகிறது.   ஏவப்படும் துணைக்கோள் பூமியை 500 கி.மீ. குற்றாரம் [300  mile Perigee], 80,000 கி.மீ. நீளாரம் [48000 mile Apogee] உள்ள நீள் வட்டத்தில் சுற்றத் துவங்கும்.   செவ்வாய்க் கோளை நெருங்கியதும் 60 மைல் உயரத்தில் முடிவாக விண்ணுளவி சுற்றி ஆய்வு செய்து வரும் என்று தெரிகிறது.

    +++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, Russian Space Exploration & Chinese Websites

     

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11 The Tech Harold – NASA The Nuclear-Powered Mars Science Lab – Curiosity
    12 NASA Mars Rover (Mars Science Lab – Curiosity) is Halfway to Next Destination (September 9, 2010)
    13 Mars Daily – NASA’s Next Mars Rover Rolls Over Ramps (September 14, 2010)
    14 Mars Smart Lander Mission -A Roving Mobile Science Lab (2009-2011)
    15 NASA Mars Rover Halfway to Next Destination (September 9, 2010)
    16 Press Trust of India – Chain’s Space Programme Gears Up to Moon & Mars (September 21, 2010)
    16  Science Daily : Geometry Drives Selection Date for 2011 Mars Launch (May 24, 2010)
    17  Scientific American : NASA’s Massive Curiosity Rover Nears Launch toward Mars (Nov 24, 2011)
    18 Mars Daily – NASA’s Next Mars Rover Rolls Over Ramps (During Testing) (September 14, 2010)
    19 NASA – Mars Science Laboratory (Curiosity Rover) (Jet Propulsion Lab JPL) (September 2010)
    20 NASA Report : Five things About NASA’s Mars Curiosity Rover (September 16, 2010)
    21 Wikipedia – Mars Science Laboratory (Rover Curiosity) (September 21, 2010)
    22  Mars Daily :  NASA’s Mars Rover Zeroes in On August Landing  (June 11, 2012)
    23  Mars Daily :  NASA Mars Rover Team Aims for Landing Closer to Prime Science Site  (June 12, 2012)
    24  Mars Science Lab Mission Update – NASA Tweaks August Landing Site – Closer to Prerequisites (June 12, 2012)
    25. Wikipedia :  http://en.wikipedia.org/wiki/Mars_Science_Laboratory  (June 12, 2012)
    27.  Daily Galaxy : Early Mars was The Water Planet –  Will NASA’s August 5th,  2012 Mission at Gale Crater Provide Proof ?  (June 13, 2012)
    28.  Mars Daily: NASA Confident Ahead of  Nail-biter Mars Landing (August 2, 2012)
    29.  Countdown to the Search for Life on Mars – One to Mars Curiosity Landing (August 4, 2012)
    30.  Mars Daily: Mars Tugging on Approaching NASA Rover Curiosity (August 6, 2012)
    31.  Mars Daily: Taking a Robotic Geologist to Mars By Daniel Stolte  (August 6, 2012)
    32.  Mars Daily:  Curiosity Ready to Rove Mars  (August 8, 2012)
    33.  Mars Daily : A New Martian Landscape Comes Alive With Curiosity (August 8, 2012)
    34   Astronomy Magazine : Will Curiosity Find Life on Mars ? (August 2012)

     

    36.  http://www.bbc.com/news/science-environment-27799129  [June 28, 2014]

    37.  http://www.space.com/26383-nasa-flying-saucer-test-ldsd.html  [June 28, 2014]

    38.  http://www.telegraph.co.uk/science/space/10933479/Nasas-flying-saucer-splashes-back-down-after-test.html  [June 29, 2014]

    39.   http://www.dailymail.co.uk/sciencetech/article-2675516/The-flying-saucer-man-Mars-Nasa-hails-test-craft-space-truck-missions-red-planet.html  [June 30, 2014]

    40.http://www.thetimes.co.uk/tto/news/world/americas/article4109077.ece [July 4, 2014]

     

    Attachments area
    Preview YouTube video Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation

    Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation
    Share
  • பொறியினை எழுப்பிவிட்டார் !

     

      எம்.ஜெயராமசர்மா-மெல்பேண்

     poster03

          வீரத்தை விவேகம் ஆக்கி

          வியந்துமே உலகம் பார்க்க

          பாரதம் ஈன்ற மைந்தன்

          பண்பிலே உயர்ந்து நின்றார்

     images (1)

          வேத சாரத்தை விளக்கி

          மக்கள் மனமெலாம் விதைத்து

          போதனை செய்து நின்று

          பொறியினை எழுப்பி விட்டார்

     

          இளமையில் துறவை ஏற்றார்

          பழமையில் புதுமை கண்டார்

          துறவிகள் வாழ்வில் என்றும்

          தூய்மையே வேண்டும் என்றார்

     

          ராம கிருஷ்ண பரம்ஹம்சர்

          நாளும் பாதம் பணிந்துநின்று

          நேரம் ஒன்றும் பார்த்திடாமல்

          யோக நிஷ்டை செய்துநின்றார்

     

          பரம் ஹம்சர் பார்த்தாலே

          பரவசத்தை அடைந்து விட்டார்

          உலகமீது அன்பு கொண்டு

          உழைப்பதற்குத்  தொடங்கி விட்டார்

     

          சித்துக்கள் செய்து அறியார்

          சொத்துக்கள் சேர்த்து அறியார்

          சத்தியத்தை மட்டும் அவர்

          தன்னுடனே சேர்த்து நின்றார்

     

         வேதத்தைக் கற்ற அவர்

         வித்துவச் செருக்கு ஒழித்தார்

         சாதகனாய் மாறி அவர்

         சரிதிரமாய் ஆகி விட்டார்

     

        ஆதரவு வேண்டி நிற்பார்

        அனைவரையும் அணை என்றார்

        போதனைகள் செய்ய முன்னர்

        போக்க வேணும் பசியென்றார்

     

        ஏழ்மையை போக்கி விட்டு

        இறைவனைக் காணு என்றார்

        தோழமை கொண்டு நாளும்

        தொடங்கிவிடு சேவை என்றார்  

     

        பெண்மையில் தாய்மை கண்டார்

        பிதற்றலை வெறுத்து நின்றார்

        மண்ணிலே நல்ல வண்ணம்

        வாழ்ந்திடப் பலவும் சொன்னார்

     

       சமயத்தின் சாரம் சொன்னார்

       இமயமாய் உயர்ந்து நின்றார்

       எமையெலாம் விழிக்கச் செய்தார்

       எழுமின்கள் என்றும் சொன்னார்

     

      வீர விவேகானந்தரை 

           என்றுமே வாழ்த்துவோம்

     விழிப்பினைத் தந்தவரை

             நாளுமே போற்றுவோம்

      நாடு சிறக்கவந்தவரை

            நாமெலாம் வாழ்த்துவோம்

     நம்முடை மனமெல்லாம்

         நல்லெண்ணம் எழுந்திடட்டும் !

     

    Share
  • திருமால் திருப்புகழ் (133)

     

    கிரேசி மோகன்

    Ksheerasagara Shayana, oil on canvas.  Keshav
    Ksheerasagara Shayana, oil on canvas. Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————–
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————-
    மகாலக்ஷ்மி தாயார் போற்றி….
    ——————————————

     Bhagavatha - Balarama triumphantly diverts Yamuna's course
    Bhagavatha – Balarama triumphantly diverts Yamuna’s course

    வாயார வாழ்த்து, வடவேங் கடன்நெஞ்சத்,
    தாயாரைப், பூவாழ் திருமகளை, -ஓயாமல்,
    அன்னை கடைக்கண், அனுக்கிரகம் கொண்டோர்முன்,
    முன்னை வினைகள் முடம்….(314)

    திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார் சன்னிதியில்….
    ———————————————————————————————

    Gajalakshmi. Watercolour. Inspired by Botticelli.
    Gajalakshmi. Watercolour. Inspired by Botticelli.

    வேதவல்லித் தாயே, வினைதீர்க்கும் செங்கமலப்,
    பாதவல்லி, பார்த்தன்தன் சாரதியின், -கீதவல்லி,
    ஏதமில்லா ஞானத்தை, ஏதுமில்லா மோனத்தை,
    சாதகனென் சிந்தையில் சேர்….(315)

    அராப்பள்ளி சாய்ந்து, அரங்கத்தை ஆளும்,
    பராத்பரா, பார்த்தன்தேர் பாகா, -”மரா”சொல்லி,
    கானகத்து வேடன், கவியானான், நின்னருளால்,
    நானதற்(கு) இணையாக நல்கு….(316)

    பீதாம் பரமவிழ, போட்ட நகைசிதற,
    வேதப்புள் வாகனனை தோள்சுமந்து, -பாதாதி,
    கேசம் குலுங்க, களிறுக்கன்(று) ஏகிய,
    நேசனக் கேசவனை நம்பு….(317)

    என்னை அகலாக்கி, எண்ணையாய் அன்பூற்றி,
    உன்னை வளர்த்தேன் ஒளியாகக், -கண்ணனே,
    உன்னொளியில் பாய்ந்து, உறுமாறும் பூச்சியாய்,
    என்நிலையை மாற்றிக்கொள் ஏற்று….(318)

    அண்ணன் பலராமன், பின்னை சுபத்ராவும்,
    உன்னொடு பூரியில் உற்சவராய், -நின்றிட,
    கண்ணா ஜகன்நாதா, கோர்த்தாய் பிறந்தகத்தை,
    என்னேவுன் கோகுல ஈர்ப்பு….(319)

    —————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2013_07_01_archive.html

    Share
  • ஒத்தனும் மத்தொருத்தனும்’’

    கிரேசி மோகன்

     

    பிரும்மாண்டமான கல்யாண மண்டபம்….உள்ளே மேடையில் மணமகன் ராமானுஜம்-மணமகள் ஜானகி….ஜானகி செக்கச் செவேலென்று வறுமையின் நிறம் சிவப்பில் ஜொலித்தாள்….ராமானுஜமோ நிறத்தில் வறுமையாக பெருமாள் கோயில் மூலவர் போல் இருந்தான்….இந்த அழகில் ஸிம்ஃபெனி வாசிக்கலாம் அளவுக்கு பியானோ பட்டன் ஸைஸ் பற்கள் தேங்காய் துறுவலாக வாயை விட்டு வெளியே விழாமல் ‘’பேய்ச் சிரிப்பு சிரித்த ‘’ முகமா வந்தவர்களுக்கு அழகு காட்டிக் கொண்டிருந்தது….காதலித்த ஜானகியை கைப்பற்றியதில் ராமானுஜத்திற்கு சந்தோஷம் தாங்காமல் எக்ஸ்ட்ரா ரெண்டு பல் முளைத்தது….காதலுக்கு கண் இல்லை, காதலித்த ஜானகிக்கும் கண்ணில்லை

    அப்போது ஜானகியின் தந்தை ,ராமானுஜத்தின் மாமானுஜம் ஓடிவந்து’’ மாப்ளே….என்பொண்ண கண்கலங்காம பாத்துக்குங்க’’என்றார் கண்கலங்க’’மாமா…நான் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பனில CEOவா இருக்கேன்….என் சம்பளத்தை சில்லறையா மாத்தினா சத்திரத்துல உள்ளவங்க கைநிறைய இருக்கும்….இதத் தவிர மெட்ராஸ்ல 4 வீடு இருக்கு’’என்று ஆறுதலாக பீத்திக் கொண்டவன் ‘’மாமா….உங்க பொண்ணுக்காக நான் வீட்டைக் கட்டிப் பாத்துட்டேன்….நீங்க உங்க பொண்ணு கல்யாணத்த பாண்ணிப் பாக்கற வழியைப் பாருங்க’’ என்று ‘’எங்கே மனம் மாறி விடுவாரோ’’என்ற அச்சத்தில் அவசரப் படுத்தினான்….

    மண்டபத்தின் வாசலில் கவுண்டமணி -செந்தில் போன்று இருவர் லுங்கியில்….
    மத்தொருத்தன்(செந்தில்)-அண்ணே! இப்ப போய் கேக்கலாம் சந்தோஷத்துல தந்துருவான்….
    ஒத்தன்(கவுண்டமணி)- இல்ல ….இப்ப வாணாம்….வா போவலாம்….செந்தில் சலிப்போடு கவுண்டரை தொடர்கிறான்…

    காட்சி-2
    —————-
    முதலிரவு அறை….ராமானுஜத்தின் எசகேடான பற்களில் டம்பளர் பட்டு ஜலதரங்கம் வாசிக்க, அவன் பாலை அருந்தி….பழங்களை மிக்ஸி போன்ற வாயிலிட்டு ஜூஸாக்கி குடித்து…,நாயகன் ராமானுஜம் நாயகி ஜானகியை வில்லன் போல நெருங்க, ஜானகி’’No நஹி’’ என்று தடுத்து ‘’என்னங்க எங்கப்பா கல்யாணத்துக்கு ஏகமா செலவு பண்ணிட்டார்…நீங்க கடனா….!’’ என்று கவர்ச்சிகரமாக கெஞ்ச’’ அசடே! அசடே!….எதுக்கு கடன் இந்தா ப்ளாங்-செக்….’’என்று தந்து ஸ்விட்சை அணைக்க அறையில் ராமானுஜ இருள் கும்மியது….

    வீட்டு வாசலில் லாம்ப்-போஸ்ட் அருகில் ஒத்தன் -மத்தொருத்தன்….செந்தில்-அண்ணே….நம்பாள் உச்சகட்ட கிக்குல இருக்கான் …..இப்ப போய் கேட்டா நிச்சயமா தந்துருவான்….
    கவுண்டமணி-இல்ல….இப்ப வாணாம்…வா போவலாம்….செந்தில் கவுண்டரை சபித்தபடி தொடர்கிறான்….

    காட்சி-3
    —————-
    நர்சிங்-ஹோம்….நர்ஸ் கையில் ராமானுஜ ஜாடையில் பிறக்கும் போதே பல்லுடன் கருப்பு வெளுப்பில்(கலரில் கொஞ்சம் அம்மாவையும் கொண்டு பிறந்த) குழந்தை….கிருஷ்ண தேவ ராயருக்கு வாரிசு பிறந்தாற் போன்ற பூரிப்பில் ராமானுஜம் நர்ஸின் பர்ஸை நூறு ரூபாய் நோட்டுக்களால் நிரப்புகிறான்….

    நர்சிங்-ஹோம் வாசல் வராண்டாவில் ஒத்தன் -மத்தொருத்தன்…செந்தில்- அண்ணே புள்ள பொறந்த குஷில பய இருக்கான்….இப்ப எத்த கேட்டாலும் தந்துருவான்….அடம் புடிக்காம வாங்கண்ணே’’
    கவுண்டர்-இல்ல இப்ப வாணாம்…வா போவலாம்….தன் தலையில் அடித்துக் கொள்ளப் போன செந்தில் கைதவறுதலாய் கவுண்டர் தலையில் அடித்தபடி பின் தொடர்கிறான்….

    காட்சி-4
    —————-
    பிரும்மாண்டமான கல்யாண மண்டபம்….மேடையில்….ஆறிலேயே பார்க்க சகிக்காத ராமானுஜம் அறுபதில் அடி பிடிச்ச கரிச் சட்டியாய், வாயில் வழுக்கையும் தலையில் பொக்கையுமாக அவதாரம் போல நிற்கிறான்….அருகில், மறுபடி ராமர் பார்த்தால் வில்லை உடைப்பார் என்னும் அளவுக்கு ஜானகி அதே அழகுடன் நிற்கிறாள்….ராமானுஜத்தின் 25 வயது மணமகன் லஷ்மணன்‘’அப்பனுக்கு தப்பாம’’ நிழல் போல(நிறத்தில்) தன்னருகே தேவதை போல நிற்கும் மைதிலிக்கு தாலி காட்டிக் கொண்டிருக்கிறான்(கட்டப் போகும் கட்டம்)….அப்போது ராமானுஜன் சம்பந்தி ஓடிவந்து ராமானுஜத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பிக்க, ராமானுஜம்’’நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்….என் சொத்து பூராவையும் உங்க பொண்ணு அதாவது என் மருமக மைதிலி பேர்ல எழுதிட்டேன்’’ என்று வீரவசனமாக பேசி பத்திரங்களை தாரை வார்த்தான்….

    மண்டபத்தின் வாசலில்….ஒத்தன் -மத்தொருத்தன்….
    செந்தில்-எண்ணன்ணே எல்லாத்தையும் கொடுத்துட்டான்….இப்ப நாம போய் கேட்டா….!
    கவுண்டமணி-இப்பவும் இல்ல….எப்ப கேக்கணும்னு எனக்குத் தெரியும்….
    செந்தில்-வா போவலாம் அதானே….நானே சொல்றேன்….வாங்க போவலாம்….

    காட்சி-5
    —————
    மருமகள் மைலி வீட்டு வாசல் திண்ணையில் கிழிந்த பாயாக ராமானுஜம் புரண்டு கொண்டிருக்கிறான்….உள்ளே அறைச் சுவரில் ஊதுபத்தி மாலையோடு ஜானகியின் படம்….வெளியே வந்த மருமகள் மைதிலியிடம், ராமானுஜம் பரிதாபமாக’’அம்மா மைதிலி மணி பத்தாகுது இன்னும் நான் காப்பி சாப்பிடல’’என்று கெஞ்ச, எதையோ மிதித்தவள் போல மைதிலி மாமனாரைப் பார்த்து, சத்தம் கேட்கும் டெஸிபெலில் மோவாய் கட்டையை தோளில் இடித்து’’ஏ! கிழட்டுப் பொணமே….எப்பப்பாரு என்ன காப்பி காப்பினு….பித்தம் தலைக்கேறி பாயைத்தான் நீங்க பிறாண்ட போறீங்க’’என்று நாலு வீடு கேட்கும் அளவுக்கு கூவி விட்டு நகர்கிறாள்….அவளுக்கு பிறகு தயங்கி வந்த மகன் லஷ்மணன் மூணு கண்ணால் தந்தையை(ஏற்கனவே இவனுக்கு ஒன்றரைக் கண்…இப்ப ப்ளஸ் ஒன்றரை….ஆக மூணு)வாத்ஸல்யத்துடன் முறைத்துவிட்டு மைதிலி கிழித்த கோட்டை தாண்டாமல் வந்த நிதானத்தில் வீட்டுக்குள் சென்று மறைகிறான்….அப்பளத்து உருண்டையாய் திண்ணையில் சுருண்டு கிடந்த ராமானுஜம் சிலிர்த்து எழுந்து வானத்தைப் பார்த்து’’தெய்வமே ! பாத்துண்டு சும்மா இருக்கியே….என்ன ஏன் இந்த வயசுல இப்படி அல்லாட விடறே….என்ன அழைச்சிண்டு போக மாட்டியா…இது உனக்கே சரியா’’ என்று விசும்பி விசும்பி அழ….

    தெருக்கோடியில் ஒத்தன் -மத்தொருத்தன்….

    ஒத்தன் -வாடா இப்ப போய் கேக்கலாம்….என்று கூறி எமனுருவில் பாசக் கயிறை உருவ….மத்தொருத்தன் சித்ரகுப்தனாகி-என்ணண்னே….அப்பல்லம் வாணானுட்டு….!
    உங்கள புரிஞ்சுக்கவே முடியல….!

    எமன் -அடேய்….நானா போய் யார் உசுரையும் வாங்கறதில்ல….அவங்களா தர்மமா தந்தா எடுத்துப்பேன்….அதான் எம்பேர் தர்மராஜன்….இது பேர் பாசக் கயிறு….
    சித்ரகுப்தன் -அப்ப எருமை….
    எமன் -உன்ன மாதிரி உசுர வாங்க அவசரப்படாம பொறுமையை ஞாபகப் படுத்த எருமை….வா இப்பத்தான் போகலாம்….அடுத்த தெருல தற்கொலைக்கு பயந்துண்டு ஆக்ஸிடெண்டுக்காக நடுத்தெருல நிக்கறான்’’என்று கூறி திண்ணையை நெருங்க…..ராமானுஜம் மாரடைப்பில் கோமானுஜமாகி சாய்கிறான்….
    —————————————————————————————————————————–

    Share
  • ’’பகல் பத்து’’

     

    கிரேசி மோகன்

    Keshav
    Keshav

    —————————–
    ”போலெ’ன்(று) உவமை புகல முடியாது
    மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று
    சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா
    எந்தனை வேறுவடி வாக்கு….(1)

    அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
    உழைக்கவரு வானவன் ஓடி -மழைக்குக்
    குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
    இடையன் இணைப்பில் இரு….(2)

    நாக்கால் நவநீதன் மூக்கால் மணிவண்ணன்
    கேட்கும் படிசெவியில் கோவிந்தன் -நோக்கும்
    விழியால் வரதன் விரலால் அரியென்(று)
    ஒழிந்தபோ(து) எல்லாம் ஒழுகு….(3)

    அழகவன் கோலம் அழகவன் ஜாலம்
    அழகவன் லீலா அபங்கம் -பழக
    அழகனவன் நட்போ அலுக்காத கற்பு
    பொழுதுமவன் பொற்பைப் புணர்….(4)

    ஆணானாய் பெண்ணானாய் மீனானாய் ஏனமானாய்
    தூண்தோறும் சிங்கத் துருவானாய் -கூனானாய்
    வானானாய் ராமனாய் மூணானாய் கண்ணனானாய்
    நானாவாய் நாராய ணா….(5)

    நீயின்றி நானில்லை நானின்றி நீயுண்டு
    தீயின்றி தீபம் திரிதானே -வாஇன்றே
    வெப்பமாய் வந்தென்னை அப்புவாய் சந்தனமாய்
    அப்பனே ஆரா அமுது….(6)

    ஆழ்ந்து படித்தென்ன ஆராய்ந்து பார்த்தென்ன
    வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம் -தாழ்ந்த
    சபரியெச்சில் ஏற்ற சமத்துவத்தின் மூலம்
    அபரி மிதமான அன்பு….(7)

    அன்பே எதுகையாய் ஆர்வமே மோனையாய்
    உன்பால் தளையற்ற உந்துதலால் -வெண்பாக்கள்
    பாடி அணுகுகிறேன் வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
    வாடிக்கை யாளனாக வா….(8)

    மேய்ப்போன் அவனிருக்க மந்தை மனமேனோ
    போய்ப்போய்ப் புலனைந்தைப் பேணுகின்றாய் -தாய்போல
    சக்திக்(கு) உகந்து சகலர்க்கும் ஊட்டிடுவான்
    பக்திகர்ம ஞானவழிப் பேறு…..(9)

    நீந்தித் தவழ்ந்து நடந்துவிரைந்(து) ஓடி
    ஏந்தினாய் வேடங்கள் எத்தனை -சாந்தி
    உனக்களிக்க வெண்பாவில் உட்கார்நீ ஓய்வாய்
    எனக்களிப்பாய் வேலை எழுத்து….(10)

    ————————————————————————————————————————————————

    Share
  • திருமால் திருப்புகழ் (132)

    கிரேசி மோகன்

    Udupi Krishna series. #krishnafortoday - Keshav
    Udupi Krishna series. #krishnafortoday – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————-

    Krishnapremi series. #krishnafortoday.  -Keshav
    Krishnapremi series. #krishnafortoday. -Keshav

    அறம்பாவம், பூமி சுரர்வானம், வாழும்,
    நரன்தாவும் மந்திமற்றும் நான்கு, -புரம்யாவும்,
    நாரா யணனனாய், நிற்கும் உணர்வினை,
    ஏராள மானவொன்றாய் ஏத்து….(308)

    இடுப்பில் ஒருகை, இணையவெண்ணை மத்தின்,
    பிடிப்பில் மறுகை பதிய -உடுப்பியில்,
    பின்னழகைக் காட்டிநிற்கும், பீலிமயிற் கண்ணனே
    முன்னழகைப் பார்ப்பதெந்த மாது….(309)

    அழைக்கும் குரலைக்கேட்(டு), ஆடா(து) அசங்கா(து),
    உழைக்க வருவானவன் ஓடி, -மழைக்கு
    குடையாய் மலையேந்தி, கோகுலம் காத்த
    இடையன் இணைப்பே இருப்பு….(310)

    மாதவன் கேசவன், மாலவன் மோகினி,
    மாதவன் சபரீசன் மாதாவாம், -ஆதலால்,
    அன்னையென்(று) எண்ணி, அணுகுவோரைக் காத்தருள்வான்,
    தன்னையே கன்னையன் தந்து….(311)

    ராவண காமத்தை, போவெனச் சொல்வீர்கள்,
    வாவென நாளை விளம்பாதீர், -ஆவன,
    செய்தோர் அகத்தினில், சாகேதன் ஸ்ரீகிருஷ்ணன்,
    வைதாலும் வாழ்வான் வலிந்து….(312)

    கருத்து டோங்க்ரே மகராஜ் பாகவதத்திலிருந்து….
    ——————————————————————————————

    அங்கை படுக்கையாய், அதரம் தலையணையாய்,
    செங்கமலக் கண்ணிமைகள் சாமரமாய், -தொங்குமெழில்,
    புல்லாக்கு மேல்குடையாய், வல்லா னுடன்வாழும்,
    புல்லாங் குழலுந்தன் பேறு….(313)

    ———————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_05_01_archive.html

     

    Share
  • அடுக்குமாடி குடியிருப்புகளும், ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    சென்னையில் மீண்டும் ஒரு அவலம். நில அதிர்வாலோ அல்லது சுனாமியாலோ ஏற்பட்ட பேரழிவு அல்ல. அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட அவலமே இது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பாதுகாப்புச் சட்டங்கள் பல இருக்கின்றன. அவைகள் சட்ட அளவில் மட்டும் இருக்கும் போல் உள்ளது. கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு முறையான மண் பரிசோதனை, நில ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்று தெரியவில்லை. அந்த இடத்தில் ஆறு மாடிகள் கட்டலாம் என்று வல்லுநர்களின் அத்தாட்சி பெற்ற பின்புதான் பதினொரு மாடி கட்டப்பட்டது என்றால் பதினொரு மாடி கட்டி முடிக்கும் வரை அரசு பொறியாளர் எங்கு சென்றுவிட்டார். அவருடைய கவனத்திற்கு இந்தச் செய்தி எப்படி எட்டாமல் இருந்திருக்கும்? அவருடைய அலட்சியப்போக்கின் விலையாக இன்று எத்தனை உயிர்களை பலி வாங்கிவிட்டது. இந்தக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கான தரச் சான்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது மாநகராட்சி அலுவலர்களின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட அவலம். குடியிருக்க ஒரு வீடு சொந்தமாக வேண்டும் என்ற ஆசையில் எங்கோ இருந்துகொண்டு சிரமப்பட்டு, வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி ஒரு வீட்டை வாங்குபவர்களும், இந்த கட்டுமானப் பணிகளுக்காக, வயிற்றுப்பாட்டிற்காக பீகார், ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற இடங்களிலிருந்து குடும்பத்துடன் வேலைக்கு வந்தவர்கள் என இரு சாராரும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டு வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். இறந்த பிறகு அவர்களுடைய பிணங்களை வந்துப் பார்த்து ஆறுதலளிப்பதைவிட, அமைச்சர் பெருமக்கள் தங்களுக்குக் கீழ் உள்ள நிர்வாக அதிகாரிகளை சரியான முறையில் பணியாற்றச் செய்திருந்தாலே இந்த கோர சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்யாமல், இனியாவது சென்னை மாநகரைச் சுற்றி கட்டிக்கொண்டிருக்கும் குடியிருப்புகளை ஆய்வு செய்து, தரச் சான்றிதழ்கள் தருவார்களா மாநகராட்சி அலுவலர்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    10514583_1459257254331310_1997140068682654040_n

    தமிழக அரசும், கட்டுமான நிறுவனங்களும், கட்டிடங்கள் கட்டுவதற்காக தங்களுடைய வயிற்றுப்பாட்டிற்காக வெளியூரிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு, உயிர் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் உறுதி செய்ய மனதுவைக்க வேண்டும். பல லட்சம் மதிப்புள்ள இந்தக் கட்டிடங்களை வாங்குபவர்களின் பாதுகாப்பிற்காகவும் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு காப்பீடு செய்யப்பட வேண்டும். இதில் பயன்படுத்தப்படக்கூடிய சிமெண்ட், மின்பொருட்கள், இரும்புப் பொருட்கள் போன்றவைகளின் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும். இனியாவது இது போன்ற மோசமான அழிவுகள் ஏற்படாமல் இருக்க அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் ஆணையம் இதன் போக்கில் எந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாகச் செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Share
  • மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

    –கார்த்திகேயன், விமலதாரணி.

     
     
     
     

    கேள்வி : 1
    எனக்கு வயது 24. என் அண்ணன், என் அக்காவின் மகளை முறைப்படி  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணமான மூன்றாம் ஆண்டில் என் அண்ணன் ஒரு விபத்தில் காலமாகி விட்டார். இதனால் என் அக்கா பெண் 19 வயதில் விதவையாகி விட்டார்.

    இதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஆகையால் அந்த குழந்தையின் நலன் கருதியும் , என் அக்கா பெண்ணின் நலன் கருதியும் அவர்களை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தேன். அவர்களுக்கு என்னை மணந்து கொள்ள விருப்பம் தான். ஆனால் இதை சிலரிடம் சொன்னேன்.

    அவர்கள் அண்ணன் மனைவியை செய்து கொள்ளவது தவறு என்கிறார்கள். நான் அவர்களை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறேன், இதைப்பற்றி உங்களுடைய கருத்தினை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    பதில் :
    வட இந்தியாவில் சில குறிப்பிட்ட சமுதாயங்களில் அண்ணன் இறந்து போனால் அவரது விதவை மனைவியை கணவரின் தம்பிக்கே திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு 35 வயதாக இருந்து கணவரின் தம்பிக்கு அதை விட வயது குறைவாக  இருந்தாலும் மன ஒற்றுமை அடிப்படையில் திருமணம் செய்து வைக்கிறார்கள். அத்தகைய திருமணங்களில் நானே கலந்து கொண்டிருக்கிறேன்.

    கணவரை பறி கொடுத்த விதவை பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பாள். அவளுக்கு மறுமணம் தேவை. அதே நேரம் மறுமணம் செய்து புதிய வீட்டிற்கு புதிய குடும்பத்திற்கு அவள் செல்லும் போது அங்குள்ள சூழ்நிலைக்கு தக்கபடி அனுசரித்து செல்ல சிரமமாக இருக்கும். அந்த சிரமத்தை குறைக்கவே ஏற்கனவெ பழகிய வீட்டில் பழகிய மனிதருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். தென்னிந்தியாவை பொறுத்தவரையில்  விதவை பெண்ணை கணவரின் தம்பியே திருமணம் செய்யும் பழக்கம் இப்போது தான் தோன்றி வருகிறது.. இது ஒரு நல்ல பழக்கம் தான்.

    திருமணம் என்றாலும் மறுமணம் என்றாலும் அதில் கவனிக்கத்தக்க முதல் விஷயம் மணம் புரியபோகும் ஆண் – பெண் இருவருக்குமே பிடிக்க வேண்டும் என்பது தான். உங்களுக்கும் அந்த பெண்ணுக்கும் பிடிப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் மகிழ்ச்சியாக இந்த மறுமண நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

    ➢➢➢இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் :

    அந்த பெண்ணுக்கு 19 வயது தான். ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் அந்த பெண் இன்னும் வாழ்க்கை புரிந்து கொள்ள முடியாதவளாக இருப்பாள் . நீங்கள் இதுவரை அண்ணி என்ற எண்ணத்தில் பழகி வந்து இருப்பீர்கள். அவரும் உங்களிடம் மைத்துனர் என்ற எண்ணத்தில் பழகி வந்திருப்பார். இனி இந்த சூழல் அடியோடு மாற வேண்டும். அண்ணி என்பதை மாற்றி மனைவி என்கிற அந்தஸ்தை முழுமையாகத் தர வேண்டும்.

    தொடக்கத்தில் குடும்பமும் சமுதாயமும் உற்றுப்பார்க்கும். அந்த பார்வையின் அர்த்ததை  புரிந்து கொண்டு ஒரு சில மாதங்கள் மிக பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். அந்த பக்குவம் உங்கள் இருவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். இதில் எந்த அவசரமும் காட்டாமல் மற்றவர்கள் உங்களையோ அந்தப் பெண்ணையோ தப்பாக பேச வாய்ப்பு கொடுத்து விடாமல் பெற்றோர் மூலமாக நிதானமாக மறு திருமண நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.

    திருமண வாழ்க்கையை விட மறுமண வாழ்க்கை சிறப்பானது . இருவரும் இணைந்து விட்டுக் கொடுத்து கருத்தொருமித்து வாழ்ந்தாலே அந்த சிறப்பை அடைய முடியும். இல்லாவிட்டால் சிரமமானதாகி விடும்.

     
     
     
     

    கேள்வி : 2
    நான்  பிளஸ் – 2 மாணவி. வயதுக்கு ஏற்றபடி அழகாக இருக்கிறேன். ஆனால் என்னிடம் இருக்கும் ஒரு பழக்கம் என்னை பாடாய் படுத்துகிறது. நான் இப்போதும்  படுக்கையில் சிறுநீர் கழித்து விடுகிறேன். இதை நினைத்து என் மனம் சஞ்சலப்படுகிறது. இதனால் நான் உறவினர் வீடுகளில் இரவு தங்குவது இல்லை. என்னை நினைத்து என் அம்மா ரொம்ப வருந்துகிறார். என் திருமணத்திற்கு பிறகும் கணவர் வீட்டில் இப்படி ஆகி விடுமோ எனப் பயமாக இருக்கிறது.?

    பதில் :
    சகோதரி உங்கள் கடிதத்தின் பதிலுக்கு சற்று பொறுத்திருங்கள். இதே கேள்வியை ஒரு சில சிறுவர்களின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்காக கேட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு முதலில் பதில் தருகிறேன்.

    படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்களை ஆறு வயதிற்கு முன், ஆறு வயதுக்கு பின் என்று  இரண்டு வகையாக பிரிக்கலாம். 6 வயதுக்கு முன்பு என்பது இயல்பானது. பெற்றோர் சற்று சிரமம் எடுத்து கவனித்தால் நிறுத்தி விடலாம்.

    சிறுவர்கள் படுக்க போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு பால் கொடுக்க வேண்டும். பின்பு அவர்கள் தூங்க செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிக்க செய்யுங்கள். சிறுநீர் பை வற்றி விடும். அப்புறமாகத் துங்கட்டும். 15 நாட்கள் சிறுவர்களை தொடர்ச்சியாக 3 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுப்பி சிறுநீர் கழிக்க வையுங்கள். அவ்வாறு செய்தால் இயல்பாகவே சிறுநீர் கழிக்கும் மூட் வந்தால் சிறுவன் தானாக எழுந்து அம்மா ஒண்ணுக்கு என்று சொல்லி விடுவான்.

    சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து படுக்கையை நனைத்தால் attention seeking  இயல்பாகக் கூட இருக்கலாம். குழந்தைகள் மீது அதிக கவனம் எடுத்து கொள்ளாத பெற்றோரை தன் பக்கமாக ஈர்த்து என்னையும் கவனியுங்கள். இல்லாவிட்டால் இப்படித்தான் நடந்து கொள்வேன் என்பது போல் செயல்படுவார்கள். இது தான் அட்டென்ஷன் சீக்கிங்.   தாய் மீண்டும் கர்ப்பிணியாதும் முதல் குழந்தைக்கு ஒரு வித பாதுகாப்பு குறைவு ஏற்படும். அந்த பயத்தில் சிறுவர்கள் படுக்கையை நனைப்பார்கள். இப்படிப்பட்ட சிறுவர்களிடம் தாய் அதிக பாசத்தைக் காட்டி எப்போதும் நீ என் அன்பு குழந்தை என்று உணர்த்தினாலே போதும். 6 வயதுக்கு பிறகும் படுக்கையை நனைத்தால் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்.

    17 வயது சகோதரியின் பெற்றோரே நீங்கள் அவளை திட்டவோ, மிரட்டவோ வேண்டாம் டாக்டரிடம் அழைத்து சென்று ஆலோசனை கேளுங்கள். இது மிகச் சாதாரண விஷயம்.

     

     

    படம் உதவிக்கு நன்றி:  www.123rf.com

    Share
  • இசைக்கவியின் காணொலிகள்

     

     

    திரு.இசைக்கவி ரமணன் அவர்களின் மேடை நிகழ்ச்சிகளின் காணொலித் தொகுப்பு:

     

    _13425035721
    https://www.youtube.com/watch?v=RPG44eLlXsQ (கண்ணதாசன் – கேபி)
    https://www.youtube.com/watch?v=u7MfHGLCM5g (கண்ணதாசன் – கேபி 2)
    https://www.youtube.com/watch?v=MwA4kTp-lkg (கண்ணதாசன் – கேபி 3)
    https://www.youtube.com/watch?v=HIWCumXT1Bs (ATN Interview – 2 Canada)
    https://www.youtube.com/watch?v=EGv0cdZu9HQ (சொற்களே வருக வருக)
    https://www.youtube.com/watch?v=oWjDKLBWWzE (மனச வாட்டுறது)
    https://www.youtube.com/watch?v=cymfj8DQO2I (ஓடம் கரையேறி)
    https://www.youtube.com/watch?v=j_iN-j1Fhtk (ஓலைக் குடிசையிலே)
    https://www.youtube.com/watch?v=mJHrd4Dv4fQ (கங்கா ஆரத்தி என் வீடியோ)
    katharnath 133
    https://www.youtube.com/watch?v=8HwX2RxM0Gc (Rishikesh-Jageshwar-VruddhaJageshwar)
    https://www.youtube.com/watch?v=paJlioG05nk (Amritsar Wagah Border my video)

     

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி முடிவுகள்!

    அன்பு நண்பர்களே,

    கண்ணதாசன்-பிறந்தநாள்-நக்கீரன்-படம்5

    இதோ நாமெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, நடுவர் திரு வ.வே.சு. அவர்கள் வழங்கியுள்ள  “என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி” முடிவுகள் இதோ 

    10247260_435875026549812_5280102860535261571_n

    போட்டியில் உற்சாகமாக பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைவருக்கும்M.-RAVI-KAVIRI1-150x150 பாராட்டுகள். போட்டியை முன்மொழிந்துள்ள கவிஞர் திரு காவிரி மைந்தன், தம்முடைய இடைவிடாத பணிச்சுமையிலும், நடுவர் பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று, வல்லமையுடன் தம் தீர்ப்பை சிறந்த முறையில் வழங்கியுள்ள கவிஞர் திரு வ.வே.சுப்பிரமணியம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து எழுத்தாளர்களையும், ஊக்குவித்தும், உற்சாகப்படுத்தியும், மென்மேலும் சிறப்பாக காவியம் படைக்க உந்து சக்தியாகத் திகழும் நம் வாசகப் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. பரிசு பெற்றவர்கள் தங்கள் உள்நாட்டு முகவரிகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்படும்.

     

    தீர்ப்புக் கட்டுரை- நடுவர் வ.வே.சு

    ஒரு முக்கியமான சேதியை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

    கவியரசரின் பெயரைச் சொல்லி எது கேட்டாலும் நான் மறுக்காமல் ஒத்துக் கொண்டு விடுவேன்.  இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பது, காவிரிமைந்தன் கேட்ட உடனேயே கட்டுரைகளைத் தேர்வு செய்யும் நடுவராக இருக்க நான் ஒத்துக் கொண்டதிலிருந்து நிரூபணமாகிவிட்டது..

    அப்புறம் கொஞ்சம் யோசித்துப் பார்த்த பிறகே நான் இந்தப் பணிக்குத் தகுதியானவனா என்ற ஐயம் வலுத்தது. இந்தத் தன்னிலை விளக்கத்திற்கும் தன்னடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை என்னை அறிந்தவர்கள் நன்றாகவே அறிவார்கள்.

    பிறகு என்னதான் பிரச்சனை? கவியரசரின் வரிகளுக்குள்ளேயே ஆழ்ந்துவிட்டதுதான் பிரச்சனை. ஒரு புறம் அவருடைய ஒற்றைச் சொல்லை ஒருவரியில் பாராட்டி எழுதினாலே எங்கள் சொத்தை எழுதி வைக்கும் கூட்டம் நாங்கள். இன்னொரு புறம் அவருடைய ஒருவரியைப் பத்து பக்கங்கள் எழுதிய பின்னாலும் இன்னும் நூறு பக்கங்கள் ஏன் எழுதவில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் கூட்டம் நாங்கள். இதில் எப்படி நடுவராக இருந்து இது முதல் இது அடுத்தது என்று தேர்வு செய்ய..? கவியரசரின் இரசிகனாக, அனுப்பப்பட்ட அனைத்து கட்டுரைகளுக்கும் முதலிடம் என் நெஞ்சில் கொடுக்கப்பட்டுவிட்டதை அறிவிப்புச் செய்கிறேன்.

     கவியரசரை எழுத்தெண்ணிப் படித்தும் கேட்டும் இரசித்த என்னை போன்றவனுக்கு, பிறர் அவரை இரசிப்பதை அருகிருந்து பார்க்கக் கூடிய அரிய வாய்ப்பை வழங்கிய எனது இனிய நண்பர் காவிரி மைந்தனுக்கும், போட்டியை நடத்தும் வல்லமை குழுவுக்கும் ஆசிரியர் பவளசங்கரிக்கும் நிரம்ப நன்றி.

    இனி கட்டுரைப் போட்டியின் நடுவராக என் பணி முடிவுகள்:

    மொத்தம் வந்த கட்டுரைகள் முப்பது. அத்தனையும் முத்துக்கள்; இரத்தினங்கள். காரணம் அனைவருமே கண்ணதாசனென்னும் ஆழ்கடலுள் மூழ்கி முக்குளித்து எழுந்தவர்கள். யாரும் சோடை போகவில்லை. கவியரசரின் வரிகளை இடைகட்டித் தொடுத்த பிறகு எந்த மாலைதான் மணம் வீசாதிருக்கும்? எனில் தரம் பிரிப்பது எவ்விதம்? எல்லார் கைகளிலும் ஆணிப்பொன் தான். ஆனால் அதை எப்படிப்பட்ட ஆபரணமாக ஆக்கியிருக்கிறார்கள்? அங்குதான் கொஞ்சம் வேறுபாடு. அதற்குக் காரணம் அணுகுமுறை.

    சிலர் கவியரசரின் வாழ்க்கையை மட்டுமே எழுதியுள்ளனர்; சிலர் அதில் தம் வாழ்க்கை பிணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். சிலர் பொது வாழ்க்கைத் தத்துவமே அதில் அடங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர். சில கட்டுரைகளில் இலக்கிய ஊடாடல்களும் ஒப்புமைகளும் அதிகம் இருந்து சுவை கூட்டின; சிலவற்றுள் கவியரசரின் வரிகள் கண்ட வாழ்க்கை அனுபவங்கள் அருகு நெருங்கி அரவணைத்துக் கொண்டன. சிலவற்றில் கண்ணதாசன் மீது காதல்; சிலவற்றில் பக்தி; இன்னும் சில கட்டுரைகள், கவிதை வரிகளின் இடைபயிலும் மோனத்திற்குக் கூட மெட்டமைத்துப் பார்த்துள்ளன.

    அணுகுமுறை,.கருத்துத் தெளிவு, மொழி ஆளுமை, போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டுரை நீளம் ஆகிய துணை அலகுகளைக் கொண்டுதான் கட்டுரைகளை வரிசைப்படுத்தியுள்ளேன். ஆனால் இதையும் தாண்டி ஒரு பரவசத்தையும், துள்ளலையும் உயிரோட்டத்தையும் எந்தப் படைப்பில் பார்த்தேனோ அதைத்தான் பரிசுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

     

    மூன்று முதலிடங்கள்

    1. 1.   விசாலம்” அற்புதமான கற்பனை நேர்காணல். இரவு எட்டு மணிக்குக் கவியரசரோடு பேசத் தொடங்கி அருகிலுள்ள கோயிலின் இரவு மணியோசை மறையும் வரை பேசியதைப் பதிவு செய்துள்ளார். எடுத்த உடனேயே கவிஞரின் அழகு முகத்தைப் படம் பிடித்து நம் நெஞ்சில் இடம்பிடிக்கிறார். வான்நிலா என்று தொடங்கி, கவிஞரின் வாழ்க்கைப் பாதையோடும் அவர் படைப்புகளோடும் நம்மைப் பயணிக்க வைக்கிறார். இதற்குக் கண்ணதாசனே சாட்சி.! தெரிந்தாலும் பலர் வெளிச்சம் போடாத சேதி. நடமாடும் தெய்வமாக வாழ்ந்த காஞ்சி முனிவரோடு கவிஞருக்கு நிகழ்ந்த சந்திப்பைச் சொல்லியிருக்கிறார். கண்ணதாசன் என்ற அந்த ஆளுமையைக் கற்பனையிலேனும் அருகே கண்டு பேசுவதுதான் கட்டுரைக்கு உயிர் கொடுக்கும் என்ற இவரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. பொதுவாக நேர்காண்பவர் குறைவாகவும் பதிலளிக்கும் பிரபலம் அதிகமாகப் பேசுவதும் மரபு. இங்கே அது தலைகீழ்; காரணம் கவிஞரின் மவுன சம்மதத்தில் இவரே அவர் சார்பில் பதில்களைக் கொடுத்துள்ளார். இந்த நெருக்கம் கட்டுரையின் உயிர்ப்புக்கு அடித்தளம் அமைக்கிறது.
    1. 2.   அருமையான இன்னொரு கட்டுரை; ஜெயஸ்ரீ ஷங்கர் எழுதியுள்ளார். கண்ணதாசனை எப்போது நினைத்தாலும் இவர் பரவச உணர்வில் ஆழ்ந்துவிடுவார் என்ற அறிவிப்பினை அவர் எழுத்துக்களே செய்துள்ளன,, உதாரணம்: ”ஆம். அவரது எண்ணங்களே வளைந்து  வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும்  பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானது;  கரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானது” இனியும் மேம்படுத்த இயலாத எல்லைச் சொல் ஓவியம். “’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது…?’

    இந்த ஒரு வரியில், காதல் நுழைந்த இதயத்தின் முதல் துடிப்பை இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது.” எப்படி இரசித்திருக்கிறார் பாருங்கள். வாணி ஜெயராம் குரலில் இப்பாடலைக் கேட்டவர்கள் ஒரு கோப்பை அமுதக் குழம்பைக் குடித்தவர்கள்.

    1. 3.   அடுத்து பாண்டியன்.ஜி ( வில்லவன் கோதை) படைத்த கட்டுரை. அவரே இது வித்தியாசமான பார்வை எனக் குறிப்பிட்டிருக்கிறார். கவியரசரின் வாழ்க்கையை மிகச் சரியாக, ஓர் எழுத்தோவியமாகக் கொண்டு வந்துள்ளார். அநாவசிய மாலை சூட்டல்களும் , சிக்கித் திணறும் பாராட்டு மொழிகளும் இன்றி, ஒரு மாபெரும் கவிஞனை, அவன் வாழ்ந்த வாழ்க்கையின் போக்குகளைக் கொண்டும் எழுத்துகளைக் கொண்டும், கொண்ட கொள்கைகளை வைத்தும் தன்னுடைய அளவுகோலால் உண்மையாக எடை போட்டிருக்கிறார். உதாரணம் காட்டாமல் இருக்கமுடியாது.

     

    “ஐம்பத்தி நான்கு ஆண்டுகளே வாழ்ந்த கண்ணதாசன் எழுதிக்குவித்த கதை கவிதை கட்டுரைகள் ஏராளம். பத்தாயிரத்துக்கு அதிகமான கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதியவர் .முன்னூறுக்கு அதிகமான நூல்கள் விற்பனையில் வலம் வருகின்றன. கண்ணதாசன் தொடாத அரசியல் வாழ்வியல் துறைகள் அரிது .அவைகளெல்லாம் இன்றைய வாசகர் தொட்டுணராத பொக்கிஷங்கள். கவிஞர் பேசிய ஆத்தீகமும் நாத்திகமும் ஒதுக்கமுடியாதவை. பத்தாண்டு பகுத்தறிவு வாசத்துக்குப்பிறகு அவர் படைத்த மதம் சார்ந்த நூல்கள் இன்றும் விற்பனையில் முன்நிற்கின்றன.”வாசிப்பு திறன் மங்கிப்போன இந்நாளில் கவிஞரை நிரந்தரமாக வாழவைப்பது இசைக்கேற்ப அவர் எழுதிய திரைப்படபாடல்களே.

    ”கவிஞரது வாழ்க்கை ஒருசுவாரசியமான எவருக்கும் கிட்டாத அநுபவம். ஆனால் அது இன்னொருவர் வாழத்தக்கதல்ல. கவிஞரது எழுத்து எவருக்கும் கிடைக்காத வரம். அது காலமெல்லாம் மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு அதிசயம்.”

    ஆக (27)விசாலம், (1) ஜெயஸ்ரீ ஷங்கர், (13) பாண்டியன்.ஜி ஆகிய மூவரையும் முதல் பரிசுக்குரிய இடத்தில் வைக்கிறேன். மூவரும் சமமே.

    இரண்டாவது இடம்:  ஷைலஜா (6)

    ஆயிரம் சொற்களுக்குக் குறைந்திருந்தாலும் அர்த்தமுள்ள கண்ணதாசனைக் காட்டுவதில் எந்தக் குறையுமில்லாத கட்டுரை. இலக்கிய ஒப்புமைகளும் , கவியரசரின் கவிதைக் களங்களின் இடம் சுட்டிகளும் இவரது ஆழமான அணுகுமுறைக்குச் சான்றாகின்றது.

    “அழகான சிறிய வீடு அடுக்காகப் புத்த கங்கள்
    பழங்கால ஓவியங்கள் பஞ்சணை குளிர்ந்த காற்று
    தொழத்தக்க இளைய கன்னி தொண்டுக்கோர் சிறியபையன்
    எழிலான காகி தங்கள் எழுதுகோல் பழுதில் லாமல்!”

    என்கிறார் நம் கவிஞர்!

    “தொழத்தக்க இளைய கன்னி” என்பதில் வெறும் காமத்தைத் தாண்டிப் பெண்மையின் மீதான பெருமதிப்பையும் காட்டுவதை உணரமுடிகிறது” என்று திரையிசை தாண்டிய கவிதை வரிகளை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்திலுள்ள இட நெருக்கடியால் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

     

    மூன்றாவது இடம்:  கீதா மதிவாணன்(7)

    இலக்கியத் தரம் வாய்ந்த இனிய  கட்டுரை.” இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?” என ஒரு களம் அமைத்துக் கொண்டு சங்க காலம் தொடங்கி பல அழகிய இலக்கிய வரிகளை கவிஞரின் வரிகளோடு ஒப்பிட்டிருக்கிறார். “இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச்சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே.” என்று தனது எழுத்து அனுபவத்திற்கான பின்னணியையும் கொடுத்துள்ளார். முதல் தரமான இந்தக் கட்டுரையும் இடநெருக்கடியால்தான் மூன்றவதாக உள்ளது.

    கவியரசரின் கவிதை வரிகளினாலேயே கட்டப்பட்ட ஒரு கட்டுரை மண்டபத்தைக் காகிதத்தில் வரைந்து, முன்னுரையிலிருந்து முடிவுரைவரை பல உரைகளை உள்ளடக்கி  நம்மை இனிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள திரு சத்தியமணி (23) அவர்களுக்கும்

    ”அவரின் கவிதைகள், காலத்தின் சாத்திரங்கள்; அவரின் நான்காயிரம் கவிதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஏழு தொகுதிகளையும் படித்த நான் எல்லாக் கவிதைகளுக்கு முத்தாய்ப்புக் கவிதையாக போற்றுவது கண்ணதாசன் எழுதிய:

    சுடுகாட்டு எலும்புகளை
    சோதித்து பார்த்ததிலே
    வடநாட் டெலும்பென்று
    வந்த எலும் பில்லையடி!
    தென்னாட் டெலும் பென்று
    தெரிந்த எலும் பில்லையடி
    எந்நாட் டெலும் பென்றும்
    எழுதிவைக்க வில்லையடி
    ஒரு நாட்டு மக்களுக்குள்
    ஓராயிரம் பிரிவை
    எரியூட்ட வில்லையெனில்
    எந்நாளும் துன்பமடி

    என்ற கவிதையைத்தான். இந்தக் கவிதையை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்து ஒவ்வொரு இந்தியனின் இல்லத்திலும் அவன் உள்ளத்திலும் மாட்டி வைத்தால் போதும்! இனச் சண்டை சாதிச் சண்டை என்றும் வராது!”

    என்ற வைர வரிகளையும், கவியரசரின் வசனங்களைப் பற்றியும் சிறப்பாக எழுதி, நம் மனதில் இடம் பெறும் எஸ். கிருஷ்ணசாமி (24) அவர்களுக்கும்

    என் மனத்தில் ஒதுக்கப்பட்ட சிறப்பிடங்களைப் போட்டி அமைப்பார்களும் ஒதுக்க வேண்டுமென்று , பரிந்துரை செய்கிறேன்.

    இதைத் தவிர,

    சொந்த வாழ்க்கை அனுபவத்தையே கவிஞர் வரிகளோடு பிணைத்துவிட்ட ஞா.கலையரசி, (2)

    அறிவு பூர்வமாகக் கவியரசரை அணுகியுள்ள ஜெயராம் சர்மா,(3)

    இயல்பு வாழ்க்கையோடு இணைந்த கவிஞர் வரிகளின் நயம் பாராட்டியுள்ள ராஜலட்சுமி பரமசிவம், (11)

    “கடவுளின் செல்லப் பிள்ளையோ” ”என்ன தவம் செய்தனோ”, “கற்பனையில் முளைத்த காதலோ” என அற்புதமான துணைத்தலைப்புகள் கொடுத்து அசத்தியுள்ள ஸ்வேதா மீரா கோபால்,(12)

    கவிதைக்கும் கடலுக்கும் சிலேடை எழுதிக் கலக்கியுள்ள எஸ்.பழனிச்சாமி,(21)

    நான் போகுமிடமெங்கும் போற்றிப் பேசுகின்ற “பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்” என்ற அட்சர லட்சக் கவிதையைக் குறிப்பிட்டுள்ள மேகலா இராமமூர்த்தி,(20)

    கவியரசரின் கோடானுகோடி இரசிகர்களைக் கவர்ந்த  வாடாமலர்க் கவிதைகளை இரசனையோடு அளித்துள்ள தமிழ்முகில் நீலமேகம்(26)

    ஆகியோரின் கட்டுரைகள் பாராட்டுக்குரியவை.

    பங்கெடுத்துக் கொண்ட அனைவரும் கவியரசரை இதயத்தால் இரசிப்பவர்கள் என்ற உண்மையைக் கட்டுரையின் ஒவ்வொரு ஒற்றைச் சொல்லும் உறுதி செய்திருப்பதைக் காணும் போது

    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை” என்ற வரிகளின் ஆழம் நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகின்றன.

    வவேசு

    03/07/2014

    சென்னை-83

    இந்தப் போட்டியை அறிவித்த கவிஞர் திரு காவிரி மைந்தன் அவர்களுக்கும், சிறப்பான முறையில் வெற்றியாளர்களை   தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள கவிஞர் திரு வவேசு அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள். 

    அன்புடன் என்றும்,
    அண்ணாகண்ணன்

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில் ? –13

    –சு.கோதண்டராமன்.   

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 12

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 14

    கற்பனை ரதம்

     

    fire1

    இந்தத் தொடர் சற்றேறக்குறைய 50 வாரங்களுக்கு வரும். சலிப்பைத் தவிர்ப்பதற்காக, இந்த வாரம் ஆராய்ச்சியிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு கொஞ்சம் கற்பனையில் திளைப்போம். நம்முடைய கற்பனை ரதத்தை பின்னோக்கி ஓட்டிச் சென்று மனித நாகரிகத்தின் துவக்க காலத்திலிருந்து வருவோம்.

    இங்கே மனித வாழ்க்கை மிருக வாழ்க்கையிலிருந்து சற்றும் வேறுபடாமல் இருக்கிறது. கல்லை ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது தான் மனித நாகரிக வளர்ச்சியின் முதல் படி. அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள்-

    வேட்டையாடக் கல்லைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு மனிதன். பெரிதாகக் காற்று வீசியது. மரங்கள் இல்லாத பகுதியில் மண்ணை வாரிக் கொண்டு சென்றது. அப்பொழுது அந்த மனிதன் கண்ணில் இரண்டு கற்கள் தென்பட்டன. அவை அவன் அதுவரை பார்த்திருந்த கற்களிலிருந்து வேறுபட்டு இருந்தன. இது எங்கிருந்து வந்தது, இந்த வழியாக நான் பலமுறை போயிருக்கிறேனே, இது வரை கண்ணில் பட்டதில்லையே, அடியில் புதைந்து கிடந்த இது காற்றினால் மேல் மண் பறந்து போன பின் வெளிப்பட்டிருக்கிறது போலும் என்று பலவாறாகச் சிந்தித்தான். அதை வெளிப்படுத்தும் மொழித் திறன் அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் கிடைத்தது.

    fire2அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தால் ஒன்றைக் கையில் எடுத்தான். அது கை தவறிக் கீழே இருந்த மற்றொரு கல் மீது விழுந்தது. அதிலிருந்து தீப் பொறி வந்தது. காட்டுத் தீயையும் மின்னலையும் பார்த்து அஞ்சி வந்த இவனுக்கு மின்னல் போல் கண நேரம் ஒளிர்ந்து மறைந்தாலும் அச்சம் தராத இந்தச் சிறு தீப் பொறியைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. மறுபடியும் கல்லை எடுத்துக் கீழே போட்டான். மீண்டும் தீப் பொறி வந்தது. திரும்பத் திரும்ப இந்த விளையாட்டைச் செய்து கொண்டிருந்தவனுக்கு மற்ற மனிதருக்கும் இதைக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. கிய்யா முய்யா என்று குரல் எழுப்பி அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டான். எல்லோரும் இந்த வித்தையைப் பார்த்து வியந்தனர். ஆளுக்கு ஆள் பிடுங்கிக் கொண்டு போய் செய்து பார்த்தனர். சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில் அவர்கள் இதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அவை தீப்பற்றி எரிந்தன. எல்லோரும் வியந்தனர், மகிழ்ந்தனர், கூத்தாடினர்.

    தீயைக் கண்டுபிடித்தவனுடைய பெயர் ப்ருகு. (தீ எரியும்போது ப்ருக் ப்ருக் என்ற ஒலி உண்டாவதாக அந்த மக்கள் நினைத்தார்கள். இந்த ஒலியிலிருந்து அந்த மனிதனின் பெயர் வந்திருக்கலாம். அல்லது ப்ருகு என்பவரின் பெயரைக் கொண்டு அந்த ஒலிக்குப் பெயரிட்டிருக்கலாம்). தீக் கல்லைத் தனக்கு வெளிப்படுத்திய காற்றை அவன் ‘மாதரிச்வான்’ (பூமித் தாயின் மடியில் கீறுபவன்) என அழைத்தான்.

    மனிதன் தீ மூட்டக் கற்றுக் கொண்டு விட்டான். அவனது நாகரிகம் துரித கதியில் நடை போடத் துவங்கியது. வேத விருட்சத்தின் முதல் விதை அங்கே தூவப்பட்டது.

    fire3காட்டு விலங்குகளுக்குப் பயந்து குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், குகைக்குள்ளும் வந்து தாக்கும் மிருகங்களிடமிருந்து தப்பும் வழி அறியாது தவித்த மனிதன், தான் இருக்குமிடத்தில் தீ மூட்டி விலங்குகள் கிட்டே வர முடியாதபடி செய்தான். எங்கேனும் செல்ல வேண்டி இருந்தால் ஒரு எரியும் மரக்கட்டையைக் கையில் ஏந்தியபடி சென்றான். (மின் வசதி ஏற்படாத காலத்தில் கிராமங்களில் ஒரு தென்னை மட்டையைச் சுருட்டிக் கட்டிக் கொளுத்திக் கொண்டு இரவில் பயணம் செய்வர். இதற்கு சுளுந்து என்று பெயர். இதை நான் கடைசியாகப் பார்த்தது 1960 இல்.) சருகுகளினிடையே கற்களை மோதித் தீ மூட்டுவது எளிதாக இல்லை. பல முயற்சிகளுக்குப் பின் தான் அதில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் மூட்டிய தீயை அணையாமல் பாதுகாப்பது அவனுக்கு எளிதாக இருந்தது.

    பிற்காலத்தில் மொழி அறிவு ஏற்பட்டபின், ‘முன்னால் சென்று வழிகாட்டிச் செல்பவன்’ என்ற பொருளில் தீக்கு ‘அக்னி’ என்று பெயரிட்டான். அதுவே அதன் இயற்பெயராக நிலைத்தது. தீ அவனது உணவைச் சமைத்துச் சுவை கூட்டியது. இரவிலும் அவனால் பார்க்க முடிந்தது. கொழுந்து விட்டு எரியும் தீச்சுவாலையின் அழகை வியந்து அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தான். தனக்கு இத்தனை நன்மைகளைச் செய்யும் தீயை நன்றியுடனும் மரியாதையுடனும் நோக்கினான், அதை வழிபடத் தொடங்கினான்.

    கற்களை உரசுவதால் தீ உண்டாவது போல் பிற பொருள்களையும் அக் கூட்டத்தினர் உரசிப் பார்க்கத் தொடங்கினர். பல ஆண்டுகள் கழித்து, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த இரண்டு மரக்கட்டைகளை உரசியும் தீ மூட்ட முடியும் என்பதை ப்ருகுவின் கூட்டத்தினர் (ப்ருகவர்) கண்டுபிடித்தனர்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் மொழியைச் செம்மை செய்து தன் மனக்கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் வல்லமை பெற்ற காலத்திலும் இந்த ஆச்சரிய, நன்றி, மரியாதை, பக்தி உணர்வுகள் குறையாமல் இருந்தன, வேத ரிஷிகளின் கவிதைகளில் அக்னியைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான பாடல்களில் வெளிப்பட்டன. அதில் மாதரிச்வானையும், ப்ருகுவையும், ப்ருகவர்களையும் அவர்கள் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

    தீ மூட்டத் தேவையான பெரிய காய்ந்த மரங்களைத் தன் இருப்பிடத்துக்குக் கொண்டு வர பிற மனிதரின் உதவி தேவைப்பட்டது. அது வரை பால் உறவுக்காக மட்டுமே மற்றவரை நாடியவன் இன்று அதற்கு அப்பால் சென்று பல மனிதரிடமும் இணக்கமாக வாழத் தலைப்பட்டான். ஓரிடத்தில் தீ மூட்டி பல மனிதரும் பாதுகாப்பு கருதி அதற்குப் பின்னே சேர்ந்து இருக்கத் தொடங்கியதில் சமூக வாழ்க்கை துவங்கியது.

    தங்குமிடத்தில் தங்களுக்கு முன்னே தீ வளர்த்தார்கள், எனவே ‘முன்னால் வைக்கப்படுபவன்’ என்ற பொருளில் அக்னிக்குப் ‘புரோ-ஹிதன்’ என்றும் பெயரிட்டார்கள். கூட்டத்தைச் சார்ந்தவர் வெளியில் சென்றிருந்தால் அவருக்குக் கூட்டம் இருக்குமிடத்தைத் தெரிவித்து அழைக்க நெருப்பைப் பயன்படுத்தினர். எனவே ‘அழைப்பவன்’   என்ற பொருளில் தீக்கு ‘ஹோதா’ என்றும்  பெயரிட்டார்கள்.

    ஆபத்து வரும்போது ஒன்று கூடுவதும் அது நீங்கியபின் அடித்துக் கொள்வதும் மனித இயல்பு அல்லவா? அவ்வாறு நேரும்போது, மீண்டும் ஆபத்து வரும் என்பதைச் சுட்டிக் காட்டி ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி தவறு செய்தவரைத் தண்டித்துத் திருத்த ஒரு தலைவன் ஏற்பட்டான். மனிதனின் அரசியல் வாழ்க்கை துவங்கியது.

    தீயின் உதவியால் தனக்கு வசதியான இடத்தில் காட்டை அழித்து விவசாயம் செய்தான். உலோகங்களை உருக்கி கருவிகளும் ஆயுதங்களும் அணிகலன்களும் செய்தான். பொருளாதாரம் என்றொரு புதிய அத்தியாயம் அவன் வாழ்வில் ஏற்பட்டது.

    தத்தம் கூட்டத்திற்குள் அந்தந்தத் தலைவர்கள் அமைதி ஏற்படு்த்தினாலும் கூட்டங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. வலுத்தவன் வென்றான், தன் ஆட்சிப் பரப்பைப் பெரிதாக்கிக் கொண்டான். தன் வலிமைக்கும் அறிவுக்கும் செல்வத்துக்கும் அக்னியே காரணம் என்று கருதி அதை நன்றியுடன் வழிபட்டான்.

    விண்ணில் தோன்றும் சூரியனைப் பார்க்கிறான். வெப்பம், வெளிச்சம், வலிமை இவற்றில் அது தீயைப் போலவே உள்ளது. இதுவும் தீ தானோ?

    மின்னல் மின்னுகிறது. கண நேரமே ஆனாலும் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சுகிறது, மரங்களைத் தீப்பற்றி எரிய வைக்கிறது. இதுவும் அக்னி தானோ?

    கடலிலிருந்து அவ்வப்போது தீச்சுவாலைகள் கிளம்புகின்றன. நீருக்குள்ளும் அக்னி மறைந்து வாழ்கிறானோ?

    மரங்கள் உரசுவதால் காட்டுத் தீ உண்டாகிறது. மரங்களினூடேயும் அவன் மறைந்து வாழ்கிறானோ?

    தீயை மூட்டிவிட்டுக் கொஞ்சம் அசந்தால் அது அணைந்து விடலாம், வேறு எங்கேனும் பற்றிக் கொண்டு ஆபத்து விளைவிக்கலாம், தீ மேல் வைக்கப்பட்ட உணவு கருகிவிடலாம். தீ விஷயத்தில் மனிதன் எப்பொழுதும் விழிப்புடனும் செயல் துடிப்புடனும் இருப்பது அவசியமாகிறது. எனவே அக்னியை ‘செயலுக்குத் தூண்டுபவன்’ என்று பெயரிட்டான்.

    வெளி உலகில் பல வகையான அக்னிகளைப் பார்த்த அவன் தன் உடலுக்குள்ளே உற்று நோக்குகிறான். பசி எப்படி எரிக்கிறது? எப்படி செயலுக்குத் தூண்டுகிறது? பசி இல்லாவிட்டால் செயல்களே நின்று விடுமே? இதுவும் அக்னி தானோ?

    உயிருள்ள உடல்களில் எப்போதும் சூடு இருந்து கொண்டே இருக்கிறது. செத்த உடல் சில்லிட்டுப் போகிறது. குகைக்குள்ளே திருடன் போல உடலுக்குள்ளேயும் அக்னி ஒளிந்து வாழ்கிறானோ?

    இனப் பெருக்க வேட்கை தோன்றிவிட்டால் அது எப்படி உடலையும் உள்ளத்தையும் எரிக்கிறது? ஆக, அதுவும் அக்னி தானோ?

    ஒரு பொருளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுத் தாகம் எப்படி எல்லாம் மனிதனை நிலை கொள்ள விடாமல் இயக்கி வைக்கிறது? அதுவும் அக்னி தான்.

    இப்படியாக, மனிதனின் நாகரிக வளர்ச்சியின் வேகத்தை முடுக்கிவிட்ட அக்னியைப் புகழ்ந்து வேத ரிஷிகள் பாடிய பாடல்களைப் பற்றி அடுத்தடுத்த வாரங்களில் காண்போம்.

     

    படங்கள் உதவிக்கு நன்றி:
    www.smashinglists.com/top-ten-technology-advances-in-history/
    www.youtube.com/watch?v=i1YmKImHZl8
    http://www.dailymail.co.uk/news/article-2465933/Mans-greatest-invention-wheel-taming-twig-toothbrush-gave-longer-lives-invent-evolve.html

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 16

    கே.ரவி

    ramanathan 2657மாமா, அதாவது என் வளர்ப்புத் தந்தை, கல்யாணராமனிடம் மேலோங்கி இருந்த குணம் விருந்தோம்பல். வருவோர்க்கெல்லாம் வீட்டில் நல்ல சாப்பாடு போட வேண்டும் என்பதில் அவர் விடாப்பிடியாக இருந்தார். 1956-57, அவர் சென்னை, ஶ்ரீராம் நகரில் திரைப்படத் தயாரிப்பு அலுவலகம் திறந்த போதே அதில் தினமும் சிற்றுண்டி, சாப்பாடு செய்து போட ஆட்கள் அமர்த்தி விட்டார். அவருடைய குருநாதர் கே.சுப்பிரமணியத்திடம் இருந்து வந்த வழக்கம் அது. வெளியே எங்கேயும் எதுவும் சாப்பிடாத எம்.ஜி.ஆர் அவர்கள் கூட, இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், தஞ்சை ராமையாதாஸ் ஆகிய இருவருடனும் சேர்ந்து காலைச் சிற்றுண்டி அருந்த, அப்பொழுது தினமும் எங்கள் அலுவலகத்திற்கு வந்துவிடுவார். மற்ற தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தங்கள் படப்பாடல்களுக்கு ஜி.ராமநாதனின் இசையும், ராமையா தாஸின் வார்த்தைகளும் பெற வேண்டி அங்கேதான் வந்து சிற்றுண்டி அருந்தி விட்டுக் காத்திருப்பார்கள். நாலு வயதுச் சிறுவனான என்னைத் தம் மடியில் அமர்த்திக் கொண்டே ஜி.ராமநாதன் ஆர்மோனியத்தில் பல பாடல்களுக்கு மெட்டுப் போட்டிருக்கிறார். என் இசை ஈடுபாடு எப்படி வந்தது தெரிகிறதா? கருவில் வந்தது பாதி, ஜி.ராமநாதன் உருவில் வந்தது மீதி. பத்து விரல்களிலும் வைரக்கல் மோதிரங்கள் பளபளக்க அவர் ஆர்மோனியம் வாசித்த அழகை அருகிருந்து ரசிக்கும் பேறு எனக்குக் கிட்டியது.

    ஜி.ஆர் மடியில் அமர்ந்து இசையின் ஆரம்பப் பாடத்தைச் செவிவழியே வாங்கிக் கொண்ட நான், ஏறக்குறைய 1பத்தாண்டுகள் கழித்துக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததும் கிடார் கற்றுக் கொள்ள ஒரு இசை மேதையிடம் சேர்ந்தேன். அவருக்கு வீடு கிடையாது. ஒண்டிக்கட்டை. சென்னை, லஸ் முனையில் இருந்த ஒரு லாட்ஜ் மாடியில் நிரந்தர அறை வாடகைக்கு எடுத்திருந்தார். அங்கேதான் குடியிருந்தார். மெய்யாகவே எப்போதும் குடியில் இருந்தார் என்று கூடச் சொல்லலாம். அவர் அறையில் ஒரு ப்யானோ இருந்தது. அது மூடியே இருக்கும். எப்பொழுதாவது அவர் அதைத் திறந்து வாசிப்பார். முதலில் எனக்கு ‘ட்விங்கிள், ட்வுங்கிள் லிட்டில் ஸ்டார்’, ‘ஜாக் அண்ட் ஜில்’ ஆகிய மழலைப் பாடல்களை கிடாரில் வாசிக்கச் சொல்லிக் கொடுத்தார். இரண்டு மாதங்கள் இந்த இரண்டு பாடல்களிலேயே கழிந்தன. எனக்குப் பொறுமை இல்லை. அத்துடன், ப்யானோ வாசிக்க வேண்டும் என்ற ஆசையும் எழுந்தது. ஒருநாள், என்னை ‘ஜாக் அண்ட் ஜில்’ வாசிக்கச் சொல்லி விட்டு, எப்பொழுதும் போல் வெளியே தனக்கு ஸ்ருதி ஏற்றிக் கொள்ள அவர் சென்ற சமயம் ப்யானோவைத் திறந்து தடவ ஆரம்பித்தேன். திடீரென்று அவர் வந்து விட்டார். ‘நீ கிடார் வாசிக்கும் லட்சணத்திற்குப் ப்யானோ ஆசையா’ என்று கோவமாக என்னைத் திட்டி விட்டு அனுப்பி விட்டார். அதோடு முடிந்தது என் கிடார் பயிற்சி. ஆனால், அந்த மாமேதையிடம் வந்து பல பிரபல இசையமைப்பாளர்கள் தாங்கள் மெட்டமைத்த பாடல்களுக்கான பின்னணி இசை முறைப்பாட்டை, ஆங்கிலத்தில் அரேஞ்மெண்ட் என்பார்கள், எழுதிக் கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன். அதை விட, அவரிடம்தான் இன்னொரு மாமேதை இசை கற்றுக் கொண்டு பின்னாளில் முன்னணி இசையமைப்பாளராக உருவானார். குருவான மாமேதை தன்ராஜ் மாஸ்டர். அவரிடம் உருவான மாமேதை இளையராஜா.

    தன்ராஜ் மாஸ்டரிடம் கிடார் வகுப்புச் சடார் என்று ஒரு முடிவுக்கு வந்தும், இசையுடன் எனக்கிருந்த தொடர்பு விட்டுப் போகவில்லை. நான் இசையை விட்டாலும் அது என்னை விடுவதாகத் தெரியவில்லை.

    போன பகுதிகளில் குறிப்பிட்ட கவிஞர்களுக்கெல்லாம் காலத்தாலும், நாத யோகம் பயிலும் சீலத்தாலும் முற்பட்ட ஒருவருடைய பாடல்கள் என்னை ஆட்கொண்டன. அந்தக் கிழவரோடு நேரடியாக நான் பேசிப் பழகியதில்லை. மார்கழி மாதங்களில் மயிலைக் கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி நாலு மாட வீதிகளிலும் அதிகாலைப் பொழுதில், வெடவெடக்கும் குளிரில் அவர் பஜனை செய்து கொண்டு வீதிவலம் போகும் போது நாலைந்து முறை நானும் அவர் திருக்கூட்டத்தில் ஒருவனாக, “நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான் நடுவே” என்று மணிவாசகப் பெருமான் பாடியது போல் சென்றிருக்கின்றேன். அவ்வளவுதான். என்றாலும் எனக்கு அந்த இளம் வயதில் (அப்போது புகுமுக வகுப்பில் பயின்று கொண்டிருந்தேன்) யாருக்கும் கிடைப்பதற்கு அரிய ஒரு வாய்ப்புக் கிட்டியது.

    என் தந்தை விஸ்வம் வித்யா சாகர் என்றொரு பள்ளி நடத்திக் கொண்டிருந்தார். அது சென்னை, மயிலை, சாயிபாபா கோயில் எதிரில் உள்ள கபாலி நகரில் இருந்தது. அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பள்ளிச் சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடக்கும். என் மற்றொரு சகோதரி மாலினிதான் முழுப் பொறுப்பும். அதில், அந்தக் கவிதைத் தாத்தாவின் பாடல்களை வைத்து அந்தத் தாத்தாவின் மகள் ‘பாரிஜாதம்’ என்ற நாட்டிய நாடகம் உருவாக்கித் தந்திருந்தார். அதில் கதைப் போக்குக்குச் சில பாடல்கள் இல்லாத குறையைப் போக்கச் சில பாடல்களை என் சகோதரி என்னை எழுதச் சொல்லி உருவான அந்த நாட்டிய நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்தச் சமயத்தில் வித்யா சாகர் என்ற அந்தப் பள்ளியில் உயர்வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பானுரேகா என்ற பெண்மணியுடன் எனக்கு நட்புண்டானதும், ஜெமினி கணேசன் – புஷ்பவல்லி மகளான அவர் பின்னாளில் ரேகா என்ற புகழ்பெற்ற ஹிந்தி நட்சத்திரமாக ஜொலித்ததும் நம் கவிதைச் சரிதைக்குத் தேவையில்லை என்பதால் விட்டு விடுகிறேன்.

    நான் குறிப்பிட்ட கவிதைத் தாத்தா பழம்பெறும் பாடலாசிரியர் பாபனாசம் சிவன் அவர்கள். அவருடைய பாடல்களோடு என் பாடல்கள் கலந்து ஒரு நாடகம் உருவானது என்று சொன்னால் அது தெய்வம் தந்த வரமாகத்தானே இருக்க முடியும்!

    பைந்தமிழ் மலர்ப்பா மாலை சூட்டியுன்PapanasamSivann
    பாதமலர் பணிந்து பாடவும் வேண்டும்
    சிந்தையும் என் நாவுமெந் நேரமும் – உன்
    திருப்பெயர்ப் புகழ் மறவாமையும் வேண்டும்
    வந்த உலகில் மதி மயங்கி
    அறு பகைவர் வசமாய் அழியாமல் உன்
    அருள்பெற வேண்டும்

    இப்படிக் காதலாகிக் கண்ணீர் மல்கச் செய்யும் பாபநாசம் சிவனின் பாடல்களை எம்.கே.தியாகராஜ பாகவதரின் தேன்குரலில் கேட்டு எத்தனை முறை நெகிழ்ந்திருக்கிறேன்!

    பாபநாசம் சிவனின் மகள் நீலா ராமமூர்த்தி அம்மையார்தான் மேலே நான் குறிப்பிட்ட பாரிஜாத நாடகத்தைத் தம் தந்தையின் பாடல்களை வைத்து உருவாக்கித் தந்தவர்.

    அடுத்த ஆண்டு அந்தப் பள்ளி, தேவடி தெரு என்ற இடத்துக்கு மாறியது. இடம் மாறினாலும் தடம் மாறாமல் ஆண்டு விழாவை மேலும் சிறப்பாகக் கொண்டாட மாலினி ஏற்பாடுகள் செய்தார். அவருடன், என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்ட ஒரு மங்கையும் சேர்ந்து ஒரு முழு நாட்டிய நாடகம் எழுதித் தரச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். நான் குறிப்பிட்ட மங்கை சங்கீத ஞானம் மிக்கவர்; டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் மூத்த சகோதரி; ‘நீலு அக்கா’ என்று நான் அழைத்த பாசம் மிக்க சகோதரி. நான் எழுத, அவர் மெட்டமைக்க, துர்க்கா மிஸ் என்ற ஆசிரியை பாடப் ‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்ற நாட்டிய நாடகம் உருவானது. அதற்கு ஆர்மோனியம் வாசித்தவர் ராமமூர்த்தி என்ற பெரியவர். தசரதன், கைகேயியிடம் பலவாறு வாதாடியும் அவள் தான் கேட்ட இரு வரங்களில் பிடிவாதமாக இருந்ததால், கடைசியில்,

    என்னுயிரைக் கேட்கின்றாய் என்ன செய்வேன்
    இருந்தாலும் நானுனக்குக் கட்டுப் பட்டேன்
    சொன்னசொல்லைக் காக்க இரு வரமும் தந்தேன்
    சுகமுறுவாய் நானெந்தன் உயிரைத் தந்தேன்

    என்று பாடிக் கொண்டே தசரதனாக நடித்த சுஜாதா என்ற சிறுமி மயங்கிவிழுந்த காட்சியில் பலர் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட காட்சியைக் கண்டேன். அட, மீண்டும் சுபபந்துவராளி ராகம் அப்பா!

    என் மனத்தில் இசையும், கவிதையும் எப்படிக் கைகோத்துக் கொண்டு வளர்ந்தன என்பதை இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன.

    ‘இசையா, கவிதையா என்று பட்டிமன்றம் வைத்தால் நீ எந்தக் கட்சி?’ என்று என்னிடம் சிகாமணி, அதான் நம்ம பழைய புத்தி சிகாமணி, முன்பு ஒருமுறை கேட்டான். பட்டென்று பாட்டாக வந்தது பதில்:

    உனக்குத் தெரியும் கவிதை என்றால்
    உயரப் பறப்பதென்று
    எனக்குத் தெரியும் இசையென் றாலது
    என்னை இழப்பதென்று
    பறந்து கொண்டே இழந்தது பாதி
    இழக்க இழக்க வளர்ந்தது மீதி

    இவ்வாறு, 1969-70 களில், அதாவது என் பதினாறு வயதினிலே, இசையும், கவிதையுமாய் என் வாழ்க்கை இப்படிச் சென்று கொண்டிருந்த போதுதான் அதில், இல்லை என் நெஞ்சில், இல்லை இல்லை, என் உயிரில் இசைக்கவிதையாகவே அவள் நுழைந்தாள். அந்தக் கதை.. .. ! பிறகு சொல்கிறேன்.

    (தொடரும்)

    படங்களுக்கு நன்றி:

    http://movieraghas.blogspot.in/2008/06/blog-post_12.html

    http://malarum.com/

    Share
  • கண்கள் பார்க்கட்டும்…

    ஜெயஸ்ரீ ஷங்கர் 
    வையகமே ஒரு
    வண்ண வானம்
    கதிரொளி செய்யும்
    மாயாஜாலம்

    உயர்மலை பனியருவி
    நீள் நதி நீலக் கடல்
    வேடிக்கை காட்டும்
    பொன் மேகங்கள்

    பச்சயத் தட்டுக்கள் உயர்த்தும்
    வண்ண மலரினங்கள்
    கருவண்டுகள் சுற்றும்
    தாமரைக் குளங்கள்

    மலரிணை இறகு கொண்ட
    ஓவிய ஆடை கட்டி
    தேனுக்கு அலையும்
    பட்டான பூச்சிகள்

    உயர்ந்தும் படர்ந்தும்
    தென்றலோடு
    ஒய்யாரமாடும்
    தாவர சங்கமங்கள்

    விண்ணையும் மண்ணையும்
    வண்ணங்களால் மேகங்கள்
    அளக்கும் வானவில்லின்
    கம்பீர ஜாலங்கள்

    நாளெல்லாம் நடந்து
    களைத்த கதிரவன்
    கடல்குளிக்க சந்தியாகால
    வெட்கச் சிவப்புகள்

    பூமியெங்கும் கருமையை
    இறைத்த இருளரசனை
    விடியும்வரை எதிர்த்து நின்ற
    வெண்ணிலவின் சிரித்தமுகம்

    சோகம் சுமந்த மனங்கள்
    சுகம் பெறவே இயற்கை
    அன்னையென ஓடிவந்து
    அணைக்கும் பூமியிது

    கருவிழிகள் காணும் லோகம்
    ஏதுமறியா வெண்ணிலா விழிகள்
    பார்வை அறியா பரிதாப முகங்கள்
    இருளோடு அலைபாயும்
    மௌனப் பட்டாம்பூச்சிகள்….!

    தன்முகம் தானறியா முகம்
    பார்க்கும் கண்ணாடிகள்…!
    நொறுங்கும் இதயத்துள்
    இருளின் ரீங்காரங்கள்

    செவியும் குரலும்
    ஜீவனுக்கு ஒளியாக
    வழி சொல்லும்
    இரண்டு கண்கள்…!

    ஆதாரக் கண்கள்
    மூடிக் கிடந்தாலும்
    சேதாரம் ஏதுமில்லை
    ஆதரவுக் கரங்கள்
    திறந்து கொண்டால்
    ஆதரவு உத்திரவாதமுண்டு..

    வீழ்ந்த மரத்தின் விதையெடுத்து
    மீண்டும் மண் புதைத்து
    முளைவிடக் காத்திருக்கும்
    ஈர மனங்களே…!

    கண்களைச் சாம்பலாக்கிடாது
    சவாலாக்கி மீண்டும் காணவிடு ..!
    மறைந்த பின்னும் நீ பிறந்த
    அடையாளமாய் இன்னொரு
    முகத்தில் உனது அறிமுகம்!

    பார்வை பெற்ற புதியவன்
    காணும் உலகெங்கும்
    நிறைந்த இறைவனாய்
    உன்னையும் நினைப்பது …!

     

     

     

    Share