Blog

  • வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா – ஒரு பார்வை

    -மேகலா இராமமூர்த்தி
    வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா – ஒரு பார்வை
    (செயின்ட் லூயி, மிசௌரி)
    பகுதி – 1

    poster-fp

    அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்திலுள்ள செயிண்ட் லூயி நகரம் 250 வருடப் பழமையும் பாரம்பரியமும் கொண்டது. அதன் சிறப்பையும், பெருமையையும் மேலும் கூட்டும் வகையில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA (Federation of Tamil Sangams of North America) தனது இருபத்தேழாவது ஆண்டுத் தமிழ்விழாவை சென்ற வாரம் (ஜூலை 3, 4, 5, 6) ஆகிய நான்கு நாட்கள் அங்குக் கொண்டாடியது.

    மிசௌரி மாகாணத்தில் இயங்கிவரும் ஆற்றலும், துடிப்பும், தமிழ்ப்பற்றும் நிறைந்த தமிழ்ச் சங்கத்தினர் பேரவையின் தமிழ்விழாவைத் தங்கள் குடும்ப விழாவைப்போல் அத்துணைச் சிரத்தையுடனும் ஈடுபாட்டுடனும் செய்தனர் எனில் மிகையில்லை.

    ஜூலை 3-ஆம் தேதி இரவு முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்ட ‘ஸ்டார் நைட்’ எனும் இரவு விருந்து விமரிசையாக நடைபெற்றது. அதில் பேரவையின் தலைவர்கள் மற்றும் உயர் பொறுப்புக்களில் இருப்போர், இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    பேரவையின் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜூலை 4, 5 ஆகிய இரு தினங்களும் காலை 8:30 மணிமுதல் இரவு 11 மணி வரை நடைபெற்றன. ஜூலை 6-ஆம் தேதியன்று நிகழ்ச்சிகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்றன.

    விழாவைக் காண வந்திருந்த தமிழ் உறவுகளின் கண்களுக்கும் கருத்துக்கும் பெருவிருந்தாக அமைந்திருந்த அந்நிகழ்ச்சிகளின் தொகுப்பை வல்லமை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வும் பெருமிதமும் கொள்கின்றேன்.

    இனி, நிகழ்ச்சிக்களுக்குச் செல்வோமா?

    ஜூலை 4-ஆம் தேதியன்று காலை 8:30 மணிக்கு ’மறைஓதுதல்’ என்ற நிகழ்ச்சியோடு அன்றைய நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு ஆரம்பித்தது. தமிழ் மறையாம் திருக்குறளிலிருந்து சில அதிகாரங்களைக் குழந்தைகள் இசையோடு ஓதினர். அதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் முனைவர். தண்டபாணி அவர்கள் வரவேற்புரை நல்கினார். அடுத்து நடன நிகழ்ச்சிகள், அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பங்குபெற்ற பல்சுவை நிகழ்ச்சிகள் என விழா களைகட்டியது. சுவைஞர்கள் உற்சாக வரவேற்பளித்து பங்குபெற்ற கலைஞர்களுக்கு மகிழ்வூட்டினர்.

    Iyotheedoss-Panditherஅடுத்ததாக, இவ்வாண்டில்(2014) தன் மறைந்த நூற்றாண்டினைக் காணும் தலித் இயக்க முன்னோடியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான அயோத்திதாச பண்டிதரைப் பற்றிய சொற்பொழிவொன்றை வழங்கி அரங்கத்திற்கு எழுச்சியூட்டினார் தமிழகத்திலிருந்து வந்திருந்த கவிஞரும், சித்த மருத்துவருமான குட்டி ரேவதி அவர்கள்.

    தொடர்ந்து, திரைப்படத்தில் தமிழிலக்கியம் என்ற தலைப்பில் தமிழ்த் திரைப்பட வரலாற்றாளரான திரு. தியோடர் பாஸ்கரன் அவர்கள் சொற்பொழிவாற்றினார். பிறகு, பேரவை – 2014ஆம் ஆண்டுக்கான விழா மலர் வெளியிடப்பட்டது.

    பகலுணவு இடைவேளைக்குப் பிறகு மதிய நிகழ்வுகள் தொடங்கின.

    Robert_Caldwellஇவ்வாண்டைத் தன் இருநூறாவது பிறந்த ஆண்டாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும், திராவிட மொழியியலின் தந்தை என்று சிறப்பிக்கப்படும் இராபர்ட் கால்டுவெல் அவர்களைப் பற்றிய சிறப்புச் சொற்பொழிவை வழங்கினார் திரு. ஆல்பர்ட் செல்லதுரை அவர்கள்.

    அடுத்து இடம்பெற்றது மற்றொரு சிறப்புச் சொற்பொழிவு. இவ்வாண்டைத் தன் நூற்றாண்டாகக் கொண்டாடும் பண்ணாராய்ச்சி வித்தகர், ஏழிசைத் தலைமகன் குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார் ’இலக்கணக் கொண்டல்’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள்.

    kudanthai-p-sundaresanar-300-jpg சுந்தரேசனாரின் இசைத்திறன் குறித்தும், இசை ஈடுபாடு குறித்தும் உணர்ச்சி பூர்வமாக விளக்கிய முனைவர் இராமமூர்த்தி அவர்கள், அம்மேதையைத் தான் நேரில் சந்திக்கும் பேறுபெற்றவன் என்று கூறியபோது அரங்கமே அதனைக் கரவொலி எழுப்பிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

    பேரவை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பில் அடுத்ததாய் இடம்பெற்றது கவிஞர் குட்டி ரேவதி தலைமையில் நடைபெற்ற கவியரங்கம். அரங்கம் நிறைந்த சுவைஞர்கள் கூட்டம் ஒவ்வொரு கவிஞரின் கவிதையையும் கேட்டும், ஆர்ப்பரித்தும் உற்சாக வரவேற்பளித்தது இந்நிகழ்ச்சியின் வெற்றியைப் பறைசாற்றியது.

    விழாவின் முத்திரை நிகழ்ச்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்த ‘இலக்கிய விநாடி வினா’ அடுத்து இடம்பெற்றது. சங்க நூல்கள் அனைத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. விநாடிவினாவில் கலந்துகொண்ட இரு அணியினரும் சிறப்பாகப் பதில்சொல்லித் தம் புலமையை அழகாய் வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் 9-வயதுச் சிறுமி நிவேதிதா ராமன் குறிஞ்சிப்பாட்டிலுள்ள 99 வகையான மலர்களையும் ஒன்றுவிடாமல் கூறி அரங்கத்தினரை வியப்பில் ஆழ்த்தினார். விழாவைக் காண வந்திருந்த அனைவரும் எழுந்துநின்று விண்ணதிரக் கரவொலி எழுப்பித் தம் பாராட்டுக்களை அச்சிறுமிக்குத் தெரிவித்து மகிழ்ந்தனர்.  theeran-t

    விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்த நாட்டிய நாடகம் அடுத்து அரங்கேறி மக்களின் நாடி நரம்புகளிலெல்லாம் விடுதலை உணர்ச்சியைப் பாய்ச்சியது; அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

    திரு. ஞானமணி ராஜப்ரியர் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்றாக அடுத்து இடம்பெற்றது. 85 வயதைத் தாண்டிய முதியவராய் இருந்தபோதிலும் அவர் குரல் இளமை மாறாமல் இருந்தது வியப்பினும் வியப்பே! இனிய தமிழ்ப் பாடல்கள் பல பாடி அனைவரின் செவிகளிலும் இன்பத் தேனைப் பாய்ச்சினார் அவர்.

    தமிழர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை உணர்வா? அறிவா? என்ற தலைப்பில் சூடான விவாதங்கள் அடங்கிய ’கருத்துக்களம்’ எனும் நிகழ்வு அடுத்து நடைபெற்றது. அனல் பறக்கும் அக்கருத்துப் போரை நெறிப்படுத்தி நடத்தினார் மருத்துவர் திரு. எழிலன் நாகநாதன் அவர்கள்.

    பின்பு, சுற்றுப்புறச்சூழல் ஆர்வலரும், வங்கி அதிகாரியுமான திரு. ம. பா. நிர்மல் அவர்கள், குப்பைகள் இல்லாத சுகாதாரமான சுற்றுப்புறத்தை உருவாக்குவதன் அவசியத்தை விளக்கும் வகையில் ‘தமிழரின் எதிர்காலம்’ எனும் பொருளில் உரை நிகழ்த்தினார்.

    அதனைத் தொடர்ந்து திரைப்பட நடிகர், அரசியல்வாதி, தொழிலதிபர் என்ற பன்முகங்கள் கொண்ட வெற்றியாளரான நடிகர் நெப்போலியன் தன் திரை வாழ்க்கைப் பயணத்தையும், அனுபவங்களையும் சுவைபடப் பகிர்ந்துகொண்டார்.

    ஜூலை 4-ஆம் தேதி இரவின் இறுதி நிகழ்ச்சிகளான இரு நிகழ்ச்சிகள் மிகுந்த பாராட்டிற்குரியவைகளாக அமைந்திருந்தன. அவற்றில் முதலாவதாக அமைந்தது தெருக்கூத்து. இயல், இசை, நாடகம் என்று போற்றப்படும் முத்தமிழில் காலத்தால் மூத்தது கூத்துக்கலை. தெருக்களையே ஆடுகளமாக – அரங்கமாகக் கொண்டு நிகழ்த்தப்படும் கூத்து தெருக்கூத்து என்ற பெயரினைப் பெற்றது. பிற்கால மேடை நாடகங்களுக்கெல்லாம் தாயாக – அடிப்படையாகத் திகழ்ந்தது தெருக்கூத்தே என்பது நாடகவியலார் கருத்து.

    அவ்வகையில், ’சிலம்பின் கதை’ என்ற பொருளில் பேரவை மேடையில் நடைபெற்ற தெருக்கூத்து, பண்டைய தமிழனின் பாரம்பரியக் கலையை மீட்டெடுக்கும் ஒரு சீரிய முயற்சியாக அமைந்தது; ரசிகர்கள் அனைவரின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது. பல்வேறு வேலைச் சுமைகளுக்கு நடுவிலும் தளராது, மிகக் கடினமாக உழைத்து இந்தத் தெருக்கூத்தை மேடையேற்றிய மினசோட்டா தமிழ்ச்சங்கக் குழுவினரை எவ்வளவு போற்றினாலும் தகும்!

    அடுத்து அன்றைய இரவின் இறுதி நிகழ்ச்சியாக அமைந்தது, தோல்பாவைக் கூத்து என்னும் மற்றொரு கூத்து. 500 வருடப் பாரம்பரியம் கொண்ட இத்தோல்பாவைக்கூத்து இன்று பெரிய திரை, சின்னத்திரை போன்றவற்றின் ஆதிக்கத்தால் அழியும் தறுவாயில் இருந்துவருகிறது. இதனை அழியாமல் காக்கவேண்டும் என்ற உறுதியோடு உழைப்போர் வரிசையில் முதலிடம் பெறும் அம்மாப்பேட்டை திரு. கணேசன், திரு. மு. ஹரிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தோல்பாவைக்கூத்து என்ற இந்தத் தொல்கலையை அரங்கேற்றி அழகுபார்த்தனர்; சுவைஞர்களும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோட அதனைக் கண்டு களித்தனர்.

    IMG_0304முக்கியமான நிகழ்ச்சிகள் பலவும் அனைவரும் காணும் வகையில் பொதுமேடையில் நடைபெற்ற அதே வேளையில், வேறு சில சுவையான நிகழ்ச்சிகள் பிற சிறிய அரங்கங்களிலும் நடத்தப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று ஜூலை 4ஆம் தேதி காலை 9 மணி தொடங்கி மதியம் 12 மணிவரை நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ போட்டிகள். இதில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், தமிழிசை எனப் பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. குழந்தைகளும் ஆர்வத்தோடு பங்கேற்றுப் பரிசுகளை வென்று குவித்தனர்.

    ஜூலை 5ஆம் தேதியும் காலை 8:30 மணியிலிருந்தே பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கி அன்று முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றன. அவற்றின் விவரம் அடுத்த பகுதியில்…

    (தொடரும்)

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில் ? –14

    –சு.கோதண்டராமன்.

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 13

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 15

    வேத ரிஷிகளின் கவிதைச் சிறப்பு 

     

    அரவிந்த கோஷ் சொல்வதாகப் பாரதி கூறுகிறார், “வலியவனாகிச் சுடர் வீசிக் கொண்டு நிற்கும் இந்த அக்னி தேவனைப் பற்றிய மந்திரங்களிலே கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கின்றது. ஸூக்ஷ்மப் பொருள் ஆழ்ந்து நிற்கிறது. தெய்வ வெறி தெளிந்து நிலவுகிறது. பாட்டுக்கொள்ளுகிற அக்கினி தேவனுடைய தழலும், அவன் உறுமுதலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.”

    vedas_puranas

    வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. சாதாரணமாக நாம் பார்ப்பது போல அல்லாமல், அவர்கள் ஒரு குழந்தையின் நிலையில் இருந்து பார்க்கிறார்கள். எதையும் வியப்புடன் நோக்கும் குழந்தைப் பண்பை இழக்காமல் அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள பொருள்களை உற்றுநோக்கினர்.

    தம் மனதில் எழுந்த எண்ணங்களை வெளிப்படுத்தும்பொழுது, அவர்கள் குழந்தையாக இல்லாமல் கற்பனை வளம் மிக்க, தேர்ந்த புலவனின் திறமையைக் காட்டுகிறார்கள். குழந்தைத் தனத்தையும் புலமையையும் இணைத்து, எதையும் மறைபொருளாகவே தெரிவிக்கும் வேத மொழிநடைச் சிறப்பை வாசகர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரிக் வேதத்தில் அக்னி பற்றிப் பல இடங்களில் காணப்படும் புகழ் மொழிகளில் சில இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.

    எரிபொருள் இருக்குமிடத்தில் அடுத்த அடுத்த இடங்களுக்கு அக்னி பரவிக்கொண்டே இருப்பதையும் எளிதில் நகர்ந்து, நெடுந்தூரம் செல்வதையும் “அவர் சுகமான ரதம் கொண்டவர்” (சுக தம ரத:)  என வர்ணிக்கின்றனர்.

    மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் நாம் விளக்கேற்றுகிறோம். இருள் நீங்குகிறது. இது நமக்குச் சர்வ சாதாரணமான விஷயம். ஆனால் ரிஷி இதைக் கவித்துவக் கண்ணால் பார்க்கிறார். “வலிமையான குதிரைகளுடன் உன் ஒளி வலையை வீசிக் கொண்டு இருளாகிய கரு நிறப் போர்வையைக் கிழித்துக் கொண்டு நீ முன்னேறுகிறாய். அந்த இருளை, மறையும் சூரியனின் கிரணங்கள் நீரில் ஆழ்த்துகின்றன” என்கிறார்.[1]

    அக்னிக்கென்று நாம் ஹோம குண்டம், அடுப்பு போன்ற இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கிறோம். நாம் அமைக்காத இடங்களில் தீ பரவ நாம் விடுவதில்லை அல்லவா? இதனால் “தன் இருப்பிடத்திலேயே வளர்பவர் ” (ஸ்வே தமே வர்தமான: ) என்ற அடைமொழியால் அழைக்கின்றனர்.

    காற்று வெப்பம் மிகுந்த இடம் நோக்கி வீசும். நீர் பள்ளத்தை நோக்கிப் பாயும். அது போல, அக்னி நகர்வதற்குக் குறிப்பிட்ட திசை உண்டா? இல்லை அல்லவா? இதை, “அவரது முகம் எல்லா திசைகளிலும் பார்க்கிறது, அவர் நான்கு கண் உடையவர்” (விச்வதோமுக:, சதுரக்ஷ: ) என்கிறார் ரிஷி.

    தீ எரியும் அழகைக் கவி ரசிக்கிறார். ஜ்வாலைகள் நாக்குகளைப் போல் உள்ளன. அதனால் அக்னி ஸப்த ஜிஹ்வா – ஏழு நாக்குகள் உள்ளவர் – என்று கூறப்படுகிறார். அவை அவருடைய கேசம் போல் உள்ளன. அதனால் அக்னி ஒளியுள்ள கேசம் உடையவர் (சோசிஷ்கேச) என்று கூறப்படுகிறார். பார்ப்பதற்கு அழகானவர் (தர்சத) என்றும் புகழப்படுகிறார். நெய்யினால் அக்னி வளர்வதை நெய்யினால் மகிழ்பவர் என்று குறிப்பிடுகிறார். அவர் நெய் முதுகு உடையவர் (க்ருதப்ருஷ்ட) என்றும் சொல்லப்படுகிறார்.

    “அக்னி பிறக்கும் போது வெள்ளையாகவும் வலுத்த பின்னர் சிவப்பாகவும் ஆகிறார்” (ச்வேதம் ஜஞானம், அருஷம் மஹித்வா) என்றும் “சிவப்புக் குதிரை கொண்டவர்” (ரோஹிதாச்வ) என்றும் ரசித்துப் போற்றுகிறார் ரிஷி.

    அக்னி உள்ள இடத்தில் புகை இருக்கும். எனவே அவர் புகைக் கொடியார் (தூமகேது) எனப்படுகிறார். தீக்குச்சியை உராய்வதால் உண்டாகும் அக்னி குச்சியையே அழித்து விடுகிறது. ரிஷி பேசுகிறார், “விண்ணே, மண்ணே, இந்த அதிசயமான இயற்கை நியதியைக் கேளுங்கள், பிறந்ததும் பெற்றோரை விழுங்குகிறான் இந்த சிசு.”[2]

    அக்னியை பகலில் ஹோமம், சமையல் முதலானவற்றிற்காகவும் இரவில் வெளிச்சம் தருவதற்காகவும் மூட்டும் நிகழ்ச்சியைக் கவித்துவத்துடன் ரிஷி வர்ணிக்கிறார்,

    “இந்த அக்னிக் குழந்தைக்கு இரவு என்னும் பெண்ணும் பகல் என்னும் பெண்ணும் மாறி மாறிப் பாலூட்டினர்.”[3]

    பகல் இரவு இரண்டும் அவருக்குத் தாய்கள் போல இருப்பதால் அவர் இரு தாய்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

    மூட்டப்பட்டவுடன் தீயைக் காற்று அணைக்காமல் விரல்களால் மூடிக் காப்பாற்றும் நிகழ்ச்சியை முனிவர் வர்ணிக்கும் முறை அழகானது. “மணமாகாத பத்து சகோதரிகள் சேர்ந்து புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தையைப் பற்றுகிறார்கள்.” என்கின்றனர்.[4]

    அதே நிகழ்ச்சிக்கு இதோ இன்னொரு உவமை. வனத்தில் உள்ள இரு திருடர்கள் பல கயிறுகளால் வழிப்போக்கனைக் கட்டி நகர விடாமல் செய்வது போல இரு கைகளும் பத்து விரல்களால் தீயை அணையாமல் காக்கின்றன. [5]

    குறிப்புகள்:
    1    4.13.4.
    2    10.79.4.
    3    1,96.5.
    4    3,29.13.
    5    10.4.6.

    படம் உதவிக்கு நன்றி: http://www.hinduismnet.com/hinduism-vedas.htm

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 19

    கே.ரவி

    என்னிடம் மிகுந்த பாசத்தோடு பழகியவர், அன்பே வடிவான கவியரசி செளந்தரா கைலாசம் அம்மையார். பத்து ஆண்டுகளுக்கு முன், ‘மின்னற் சுவை‘ என்ற என் நூலுக்கு நான் அவர்களுடைய அணிந்துரை வேண்டுமென்று கேட்ட போது கண்நோயால் பாதிக்கப்பட்டுப் படிக்க முடியாத நிலையில் தாம் இருந்த போதும், மறுக்காமல், தருகிறேன் என்று சொல்லிக் கவிமாமணி, புதுவயல் செல்லப்பன் அவர்களைக் கொண்டு முழு நூலையும் படிக்கச் சொல்லிக் கேட்டு, மிக நல்ல அணிந்துரை வழங்கினார். அவருடைய அன்பை நான் மறக்க முடியுமா?

    அவர் ஒரு சிறந்த கவிஞர். கவிதையின்மேல் அளவு கடந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தெய்வ பக்தியும், தேச பக்தியுமே தம் இரு கண்களாகக் கொண்டிருந்தார். இந்திய சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்த போது அவரை அழைக்க நான் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது, என்னைத் தம் இல்லத்தின் பூஜை அறைக்குள் அழைத்துச் சென்று அங்கே வைக்கப் பட்டிருந்த ஒரு கலசத்தைக் காட்டினார். அதில் வெறும் மண் இருந்தது. “தம்பி, இது வெறும் மண் இல்லீங்க. நான் இந்த பாரத நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து இந்தக் கலசத்தில் போட்டு வைப்பேன். இது எப்பொழுதும் பூஜை அறையில்தான் இருக்கும். இதை நான் பாரத மாதாவாகவே ஆவாகனம் செய்து பூஜை செய்து வருகிறேன்” என்று அவர் சொன்னதும் நான் நெகிழ்ந்து போனேன். அவர் எப்போதும் சிரித்த முகமாகவே காணப்பட்டதற்கு, அவருடைய அசைக்க முடியாத தெய்வ பக்தியே காரணம். அவரே கவிதையிலேயே இதைச் சொல்கிறார்:

    சுடும்போதும் சிரிப்பேன் துன்பம் சுட்டபின் தென்றல் வந்து

    தொடும்போதும் சிரிப்பேன் தீய சொல்லினால் நெஞ்சில் காயப்

    படும்போதும் சிரிப்பேன் இந்தப் பாரெலாம் போற்றி மாலை

    இடும்போதும் சிரிப்பேன் என்றன் இதயமே இறைவன் சோலை

    கொதிக்கும் சுண்ணாம்புக் காளவாயில் நின்று கொண்டு, சிவபெருமான் திருவடியை எண்ணித் தம் ஐம்புலன்களுக்கும் அது குளிர்ச்சி தந்த பரவசத்தை ஒரு பெருங்கிழவர் பாடினாரே, அந்தப் பாட்டு இதில் எதிரொலிக்கிறதே!

    மாசில் வீணையும் மாலை மதியமும்

    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

    ஈசன் எந்தை இணையடி நீழலே

    1999, கார்கில் போர் நடந்த போது, நம் வீரர்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் தர வானவில் பண்பாட்டு மையம் ஒரு முழுநாள் கவியரங்கம் நடத்தியது. அந்தக் கவியரங்கத்தில், சென்னையில் இருந்த முன்னணிக் கவிஞர்கள் அத்தனைப் பேரும் கலந்து கொண்டு கவிதை படித்தார்கள். அந்தக் கவியரங்கம் முழுதும் ஒலிப்பேழையாகப் பதிவு செய்யப்பட்டது. அதன் நூறு பிரதிகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்று தீவுத் திடலுக்குப் பின்புறம், ஜிம்கானா கிளப்புக்கு எதிரில் உள்ள போர்ப்படைத் தளபதி அலுவலகத்தில் தலைமைத் தளபதியைச் சந்தித்து அவரிடம் நேரில் வழங்கத் திட்டமிட்டோம். அந்த ஒலிப்பேழைகளைப் போர்முனையில் இருந்த தமிழ் தெரிந்த வீரர்களுக்கு கொண்டு சேர்க்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளவும் தீர்மானித்தோம். நடக்க முடியாமல் கால் எலும்புகள் பாதிக்கப்பட்டிருந்த போதும் கவியரசி அம்மையார் தாமே முன் வந்து, அந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கிப் படைத்தளபதியிடம் அந்தப் பேழைகளைத் தந்த நிகழ்ச்சியை மறக்கவே முடியாது.

    1

    நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதை முழக்கங்களைக் கொண்ட இசைப்பேழைகளைப் போர்முனைக்குக் கட்டாயம் அனுப்பி வைப்பதாக அன்றைய படைத்தளபதி உறுதியளித்தார்.

    2

    ‘கவிதைகளைப் போர்முனைக்கு அனுப்பிய முதல் ஆள் நீதானப்பா’ என்று புத்தி சிகாமணி முணுமுணுக்கிறான்.

    ‘அப்பா சிகாமணி, முன்காலத்தில் போர்க்களத்திலேயே நின்று புலவர்கள் போர்ப்பரணி பாடியிருக்கிறார்கள். ஜயங்கொண்டான் என்ற புலவர் அப்படிப் பாடிய காவியம்தான் ‘கலிங்கத்துப் பரணி’. சாதாரண வார்த்தைகளை விடக் கவிஞர்களின் கவிச்சொற்களுக்கு வலிமை அதிகம் என்பதுதான் என் கட்சி. ‘வல்லமை’ மின்னிதழில் நம் இலக்கியப் பேழைக்கு என்ன பெயர் கொடுத்திருக்கிறார்கள் பார்த்தாயா? சொற்சதங்கை! மற்றவர் நாவில் நடக்கும் சொற்கள், கவிஞர் நாவில் மட்டுமே நடனமாடும். அந்தத் தாண்டவத்தை, அதுவும் ருத்ர தாண்டவத்தை நம் போர் வீரர்கள் கண்டால், போர்முனையில் அவர்களுக்கு மேலும் வீர உணர்ச்சி உண்டாகும். நீ ஏட்டுச் சுரைக்காய், இதெல்லாம் உனக்கு விளங்காது, விடு’ என்கிறேன்.

    3

    இந்த விவாதத்தை ஒதுங்கி நின்று கேட்டுக் கொண்டிருந்த மனோன்மணி திடீரென்று குரல் எடுத்துக் கலிங்கத்துப் பரணியிலிருந்து ஒரு பாடலைத் தன் கணீரென்ற குரலெடுத்துப் பாடுகிறாள்.

    பொருதடக்கை வாளெங்கே மணிமார்(பு) எங்கே

    போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத

    பருவயிரத் தோளெங்கே எங்கே என்று

    பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்

    மனோன்மணியின் குரல் அதிர்வுகளுக்கு ஏற்றவாறு பைரவியின் நடன அசைவுகள் நிழற்படங்களாக, என் நினைவுத் திரையில் மெல்ல . . மெல்ல. .! மெய்சிலிர்க்கிறது! அட, ஒரு நோக்கில் மனோன்மணிதான் பைரவியோ!

    சிகாமணி சொல்கிறான்: ‘நீர் சொன்னதெல்லாம் எனக்கு வெளங்கலே. ஆனா அவ பாடினதும் புரிஞ்சுடுத்து ஓய், பாட்டு எப்படி வீர உணர்ச்சியத் தூண்டும்னு. மயிர்க்கூச்செறியுது!!’

    எனக்குள் இருந்து பாரதியின் குரல் ஒலிக்கிறது:

    பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா

    . . . . . . .

    பூதங்கள் ஒத்துப் புதுமைதரல் விந்தையெனில்

    நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ!

    நான் கவிதை எழுதத் தொடங்கிப் பல நாட்கள், இல்லை, பல ஆண்டுகள் கழித்தே பாரதிக்கு நான் முழுமையாக ஆட்பட்டேன். நான் விரும்பிய கவிஞர்களில் ஒருவனாக மட்டுமே இருந்த அவன் என் நெஞ்சின் நாயகனாக விஸ்வரூபம் எடுத்தது ஒரே கணத்தில். அந்த தரிசனத்தை எனக்கு முதலில் சூசகமாகக் காட்டியவர் கவிமாமணி தேவநாராயணன். அது நடந்தது சென்னை ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில், 1971-ஆம் ஆண்டு. பிறகு அந்த தரிசனத்தில் என்னை முழுமையாக மூழ்கச் செய்தவர் அருமைக் கவிஞர் கண்ணதாசன்; அது நடந்தது 1975-ல் என்று நினைக்கிறேன். இந்த இரண்டு தரிசனங்களையும் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டும்.

    (தொடரும்)

    Share
  • சான் ஃபிரான்சிஸ்கோ பயணக்கட்டுரை – பாகம் 1

    செம்பூர் நீலு

    நாப்பா வாலி

    அமெரிக்க சுதந்திர தின விடுமுறை – ஜூலை 4ம் நாள். மனைவி, மகன் மருமகளுடன் சான் ஃபிரான்சிஸ்கோவின் 80 மைல் தொலைவிலூள்ள “நாப்பா வாலி” என்று அழைக்கப்படும் சுற்றுலா மையத்திற்கு சென்றோம். இந்த “நாப்பா வாலி” தரமானதும் விலை உயர்ந்த “வைன்” தயாரிப்புக்கு உலக அளவில் பேர் பெற்றது.

    Picture 1

    1858ம் வருடம் “ஜான் பச்செட்” என்பவர் ஒரு சிறிய வைன் தயாரிப்பை தொடங்கி ஒரு காலன் வைன் 2 டாலருக்கு விற்பனை செய்யத்துவங்கினார். பின்னர் 1861ம் ஆண்டு முதல் வைன் தயாரிப்பு தொழிலகம் (வைனெரி) “சார்ல்ஸ் கர்க்” என்பவரால் செயின்ட் ஹெலீனாவில் துவங்கப்பட்டது.

    Picture 2

    18ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் திராட்சை பயிரும் வைன் தயாரிப்பும் ஒரு வீழ்ச்சியை அடைந்தது. மேலும் 1920ம் ஆண்டு அமெரிக்க அரசின் மது ஒழிப்பு சட்டத்தினால் வைன் தொழிலகங்கள் மூடப்பட்டது. 1939ம் ஆண்டு வைனை முக்கிய கருத்தாகக் கொண்டு நாபா வாலி ஒரு சுற்றுலா நகரமாக புகழ் பெறத்தொடங்கியது. 1976ம் ஆண்டு உலகத்தில் தரம் வாய்ந்ததும் விலை உயர்ந்த வைன் தயாரிக்கும் இடமாகப் பெயர் பெற்றது. தற்சமயம் 450க்கும் மேற்பட்ட வைனரிகள் திராட்சை பயிர் / மற்றும் வித விதமான வைன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. வார இறுதி நாட்களிலும், மற்ற விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

    மற்ற ஒரு சிறப்பு அம்சமாக விளங்குவது “வைன் ட்ரெயின்”
    Picture 3

    10 பெட்டிகள் கொண்ட இந்த ஸ்பெஷல் ட்ரைன் 1915-17 ம் வருடம் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளை கொண்டது. இதில் டைனிங் கார், பவர் கார், பாண்ட்ரி கார், ஸ்பெஷல் கார் போன்றவை அடங்கும். 36 மைல் பிரயாணம், 3 மணி நேரம் பயணம்.  “மெக்ஸின்டரி தெரு” ஸ்டேஷனில் புறப்பட்டு வடக்கு திசையாக செயின்ட் ஹெலீனா வரை சென்று திரும்பும் இந்த ட்ரைன் வழியில் சில குறிப்பிட்ட வைனரிகள் இருக்கும் இடத்தில் நிற்கும். பயணிகள் இறங்கி வைனரியை சுற்றிபார்க்க அனுமதிக்கப் படுகிறார்கள். பின்னர் அங்கு தயாரிக்கும் வைன் வகைகளை ருசி பார்த்துவிட்டு திரும்பவும் ட்ரைனில் பயணம் செய்து புறப்பட்ட இடத்திற்கு வந்து சேருகிறார்கள். ட்ரைனிலேயெ ஸ்பெஷல் கோர்மே உணவும் வழஙகப்படுகிறது. இந்த பயணதிற்குக் கட்டணம் ஒருவருக்கு 200 டாலர் முதல் 350 டாலர் தான். தலை சுற்றுகிறது அல்லவா. ட்ரையினை வெளியிலிருந்து பார்த்துவிட்டு  நாபா வாலி டவுனான “காலிச்டோக” என்ற இடத்திற்குச் சென்றோம். 170 எக்கர் பரப்பளவில் “காஸில் டி அமொரோஸா” என்ற வைனரி இங்கு தான் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    காஸில் டி அமொரோஸா
    Picture 4

    இந்த வைனரி ஒரு புகழ் பெற்ற இத்தாலியை சேர்ந்த “டாரில் சட்டூயி” என்ற வைன் தொழிலதிபரால் உருவாக்கப்பட்டது. உலகத்தின் பல புகழ் பெற்ற புராதன கோட்டைகளை சுற்றிப் பார்த்து கடைசியில் இத்தாலியிலுள்ள 12ம் நூற்றாண்டு டஸ்கன் கோட்டையின் மாடலாக இந்த வைனரியை நிறமாணிக்க 1994ம் ஆண்டு அடிக்கல் நாட்டி துவங்கப்பட்டது.  மாரத்தான் மாதிரி கோட்டையை கட்டிமுடிக்க 13 ஆண்டுகள் ஆயிற்று. 2010ம் ஆண்டு பொது மக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்

    Picture 5

    121,000 சதுர அடி பரப்புள்ள இந்த கோட்டையில் 107 அறைகள் (90 அறைகள் வைன் தயாரிப்பிற்கும் அதை மர பாரெல்களில் அடைத்துவைத்து பராமரிப்பதற்கும் உபயோகபடுத்தப்படுகிறது) ஒரு பெரிய வரவேற்பறை அதன் சுவர்களில் புராதன இத்தாலியன் பெயிண்டிங்குகள், ரோமானிய பாணியில் அமைக்கப்பட்ட தளங்கள், கோட்டையின் மதில் சுவர்களுக்காக 8,000 டன் எடை கையுளியால் செதுக்கப்பட்டு உருவாக்கிய கருங்கற்கள், செங்கல்கள், கூரை ஓடுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. புராதன கால படிகட்டுக்கள், புராதன மாதாகோவில், பாதாள சிறைச்சாலை, பார், சித்திரவதை அறை. நிலத்திற்கு கீழெ 4 லெவெல் அறைகள்,

    50 பேர் அமரும் டைனிங் டேபிள்

    Picture 6

    நிலத்திற்கு மேல் 4 லெவெல் மாடி அறைகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்கு ஏற்றால் போல் ஒளியளிக்கும் மின்சார விளக்குகள். கோட்டை அறைகளில் நுழையும் போதே எதோ புராதன கால அறைக்குள் செல்லுகிறோமோ என்ற ஒரு பயம் கலந்த உணர்வு. 50 பேர் வரிசையாக இரண்டு புறமும் அமரக்கூடிய மர டைனிங் டேபிள்
    750 காலென் வைன் வைப்பதற்கான மர பாரல்கள் இன்னும் எத்தனை எத்தனையோ.

    750 காலன் மர பாரல்
    Picture 7
    வைன் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை ஒரு ஆடியொ விஷுவல் திரைப்படம் மூலம் பெரிய ஃப்ளாட் டி.வி. ஸ்க்ரீனில் விளக்குகிறார்கள். என்னதான் வைன் எவெர்சில்வெர் பாத்திரஙளில் தையார் செய்தாலும் அதை மர பாரல்களில் தான் சேமித்து வைக்கிறார்கள். அதில் தான் அதன் சுவை மாறாமல் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாமலிருக்கும்

    வைன் பாட்டில்கள்
    Picture 8   

    Picture 9
    புராதன கை வண்டி
    Picture 10
    வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பார்த்து அனுபவிக்கவேண்டும். 35 டாலர் கட்டணம் ஒருவருக்கு – கோட்டையை சுற்றிப் பார்ப்பதற்கும் 4 விதமான வைன்களை ருசிப்பதற்கும். அதற்கும் மேல் அவரவர்களுடைய சக்திக்கும் பர்சின் கனத்திற்கும் ஏற்றால் போல் பரிசுப் பொருட்களையும் வைன் பாட்டில்களையும் வாங்கலாம். நான் ஒரு பாட்டில் “வைன் ஸீட் ஆயில்” வாங்கினேன். இதை கலந்தால் பச்சை காய்கறிகள் ஸாலடின் ருசி இன்னும் அதிகரிக்கும்.

    Picture 11

    4 விதமான வைனை ருசித்து ரசித்து ஸிப் செய்துவிட்டு கோட்டையின் வெளியில் இருக்கும் புல் வெளியில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு. பின்னர் 50 மைல் தொலைவில் இருக்கும் “உக்காய்” நகருக்கு பயணமானோம். புகழ் பெற்ற 1000 உருவச்சிலைகள் கொண்ட புத்தர் கோவில் இருக்கும் இடம். அதைப் பற்றி பாகம் 2ல் புகைப்படஙளுடன் விவரிக்கிறேன்.

     

     

    நீலகண்டன் (செம்புர் நீலு)
    ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
    09-07-2014

    Share
  • உள்ளமெல்லாம் தள்ளாடுதே…..

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    Capture

    அன்புமொழிபேசி என் ஆசைவலைவீசி
    கன்னிமீனை அள்ளிக்கொள்ள கை தாவுதே!

    அழகியல் என்பது அகம் சார்ந்தது.  எனவேதான் காதல் மனதிற்குள் பூக்கிறது!  அந்த ஒற்றை வார்த்தைக்கான அர்த்தம் மட்டும் இந்த உலகமெங்கும் வியாபித்து நிற்கிறது!

    எத்தனை முறை இரவுகள் வந்தாலும் அந்த இரவில் ‘நிலா’ அழகுதானே!  புத்தம் புதியதாய் காட்சி தருவது ஒன்றும் புதிதில்லையே.. கற்பனைகள் கட்டவிழ்ந்துவிடும்போது உள்ளமெல்லாம் தள்ளாடுவது நியாயமாகிவிடுகிறது!

    இன்பம்பொங்கும் வெண்ணிலாவை அன்று எழுதித் தந்தவர் இயற்றியிருக்கும் இன்னொரு பாடலிது!  கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியன் இயற்றி இந்தி இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள் அமைத்த இசையில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி இணைந்து பாடிய பாடல்!

    வற்றாத கடலோரம் காதல் வலைக்குள் அகப்பட்ட காதலர்களின் உற்சாக ராகமிதோ..

    உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
    உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
    துள்ளுமலை தொட்டு என் காலை முத்தமிட்டு
    வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே!!

    உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
    உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
    அன்புமொழிபேசி என் ஆசைவலைவீசி
    கன்னிமீனை அள்ளிக்கொள்ள கை தாவுதே!

    SalilChowdhury1002k.vijayan
    விஜய்காந்த் பூர்ணிமா ஜோடியில் ‘தூரத்து இடி முழக்கம்’ திரைப்படத்திற்காக.. கே.விஜயன் இயக்கத்தில் வார்க்கப்பட்ட இப்பாடல் வரிகளாலும் இசையாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது!

    http://youtu.be/GzIrzj1X82w
    காணொளி: http://youtu.be/GzIrzj1X82w

    திரைப்படம்: தூரத்து இடி முழக்கம்
    இயக்கம்: கே.விஜயன்
    பாடல்: கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியன்
    இசை: சலீல் சௌத்திரி
    பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி

    உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
    உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
    துள்ளுமலை தொட்டு என் காலை முத்தமிட்டு
    வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே!!

    உள்ளமெல்லாம் தள்ளாடுதே..
    உள்ளுக்குள்ளே ஏதோ எண்ணங்கள் போராடுதே..
    அன்புமொழிபேசி என் ஆசைவலைவீசி
    கன்னிமீனை அள்ளிக்கொள்ள கை தாவுதே!

    வாய்மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா
    வண்டுவந்து தீண்டாமல் பூவாகுமா
    கொண்ட ஆசைகள் கை கூடுமா?..
    எல்லையில்லா இன்பங்கள் கொண்டாட்டமா
    எண்ணும் யோகங்கள் உண்டாகுமா?

    ஆண் மனம் வைத்தால் அஞ்சி பின் வாங்குமா
    நம்பியுள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா
    எந்தன் சொந்தங்கள் வீணாகுமா?
    தாலிகட்டி வேலிகட்டி காப்பாற்றுவேன்
    தங்கம் போல் உன்னைப் பாராட்டுவேன்!

     

     

     

     

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 12

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 12

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 45

    Mukkonakkilikal - 46

    Mukkonakkilikal - 47

    Mukkonakkilikal - 48

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    பின் சேர்க்கை :

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

    Share
  • காதல் நாற்பது – 12: காதலை அழைத்தது காதல் !

    –சி. ஜெயபாரதன்.

     

    Elizabeth Browing

    காதல் நாற்பது (12)
    காதலை அழைத்தது காதல் !
    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    இதயத்தி லிருந்து பொங்கிப்
    புருவம் வரை எழும்பும்
    இம்மெய்க் காதல்
    பெருமை ஊட்டும் எனக்கு !
    மகுடம் சூட்டும்
    மாபெரும்
    மாணிக்கக் கற்களால் !
    ஆடவர் கண்களை ஈர்க்கும் !

    எனது தகுதி யாவும்
    உள்ளத்தின் உள்ளிருக்கும்
    ஆத்ம மதிப்பீடை நிரூபிக்கும்,
    புற உலகுக்கு !
    உன் கண்ணும் என் கண்ணும்
    ஒன்றை ஒன்று
    எதிர் நோக்கும் வேளையில்
    நேசிப்பது எப்படி யென
    நீ உதாரணம் காட்டாமல் நான்
    நேசிக்கக் கூடாது
    நின்னை மனப் பூர்வமாய் !

    காதலை அழைத்தது காதல் !
    பதிலின்றி இனிதெனக்
    காதலை
    வெளிப் படுத்தக் கூடாது
    எனக்குரிய தென்று !
    உன் ஆத்மா வானது
    வலுவின்றி மயங்கி விட்ட
    என் ஆத்மாவை
    இழுத்துக் கொண்டு போய்
    பொன்னா சனத்தில் அமர வைக்கும்
    உன்னருகே !

    அந்தோ ஆத்மாவே !
    அவசியம்
    பணிவு வேண்டும்
    நமக்கு !
    உன்னைத் தனியே நேசிக்கும்
    எனக்கு
    உன்னருகில் மட்டுமே இருக்க
    விருப்பு !

    ********************

    Poem -12
    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing

    Indeed this very love which is my boast,
    And which, when rising up from breast to brow,
    Doth crown me with a ruby large enow
    To draw men’s eyes and prove the inner cost,–
    This love even, all my worth, to the uttermost,
    I should not love withal, unless that thou
    Hadst set me an example, shown me how,
    When first thine earnest eyes with mine were crossed,
    And love called love. And thus, I cannot speak
    Of love even, as a good thing of my own:
    Thy soul hath snatched up mine all faint and weak,
    And placed it by thee on a golden throne,
    And that I love (O soul, we must be meek!)
    Is by thee only, whom I love alone.

    **********

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(115)

    –சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்..

    பரபரப்பான வாழ்க்கை, நவீன விஞ்ஞான யுகத்தின் அதியுயர் கட்டத்தில் நாம் இன்று நின்று கொண்டிருக்கிறோம்.

    இருபத்தி நான்கு மணிநேர ஊடக யுகமிது. பிரசித்தி பெர்றவர்களின் 24 மணிநேர நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து எங்கே ஒரு சிறு தளும்பல் ஏற்படுகிறதோ அதனை உடனே அம்பலத்திற்குக் கொண்டு வருவதே இவ்வூடகங்கள் தமது திறமைகளுக்கு விடுத்துள்ள சவாலாகும்

    இத்தகைய ஒரு சூழலில் மிகவும் பிரபல்யமடைந்த கலைஞர்கள், பிரசித்திப் பெற்றவர்களின் பிள்ளைகள் இவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது மிகவும் நுணுக்கமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றே.

    உதாரணமாகப் புகழ் பெற்ற கலைஞர் ஒருவருக்கு மகனாகவோ அன்றி மகளாகவோ பிறந்து விட்டால் சாதாரணமானவர்கள் அனுபவிக்கும் சாதாரண மகிழ்ச்சியைக் கூட அனுபவிக்க முடியாமல் போய்விடுவது ஒரு துரதிர்ஷ்டமே !

    இத்தகைய சமுதாய அழுத்தங்களுக்குள்ளாகி பல பிரபல்யமடைந்தவர்கள் போகக்கூடாத வழிகளில் போய் தமது வாழ்வைச் சீரழித்துக் கொள்வதைக் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது.

    இங்கிலாந்தின் பிரபல்யமான பொப்பிசைப் பாடகர் “பாப் கெல்டோவ் (Bob Geldof) என்பவரைப் பற்றி அநேகம் பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் பல ஏழ்மை நாடுகளின் ஏழ்மை நிலையைப் போக்க உதவும் முகமாக பல நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்துப் பெயர் பெற்றவர்.

    அவரது மனைவியும் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பாடகியுமாக இருந்தவர். அவர் பெயர் “போலா யேட்ஸ் (Paula Yates) அவர் கூட தனது பிரபல்யம் வாழ்க்கையில் கொடுத்த அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி இருந்தார்.

    பின்பு ஒருநாள் யதேச்சையாக அளவுக்கதிமாக போதை வஸ்துகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்.

    Peachesஇவர்களது மகளின் பெயர் “பீச்சஸ்” (Peaches) இவர் கூட சில மாதங்களுக்கு முன்னால் தன் தாயைப் போன்று அளவுக்கதிகமாகப் போதை வஸ்துகளை உட்கொண்டதால் மரணமடைந்தார்.

    25 வயது நிரம்பிய, இரண்டு சிறு குழந்தைகளுக்குத் தாயான இவரின் கணவர் கூட ஒரு பிரபல்யமான இசைக்கலைஞர்.

    இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் “த ஸ்பெக்டெட்டர்” (The Spectator) என்னும் ஒரு பிரபலமான இதழுக்கு இவர் பேட்டியளித்திருந்தார். அப்பேட்டி இவர் இறந்து சில மாதங்களின் பின்னால் அவரது மரண விசாரணை முடிந்த பின்னால் இப்பொழுதே பிரசுரிக்கப்பட்டுள்ளது. அப்பேட்டியில் பேட்டி கண்டவரிடம் “நான் இளமையானவள் ஆனால் வாழ்க்கையில் எது கொடியது தெரியுமா? எம்மைப் பற்றி மக்கள் மனதில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பிழையான அபிப்பிராயங்களே” என்று தனது மன ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

    அதுமட்டுமல்ல தனது தாயின் அகால மரணம் தனக்குக் கூட மிகவும் அவப்பெயரைத் தேடித்தந்துள்ளது என்று கூறுகிறார். அவரைத் தெரிந்த அனைவரும் இவருக்கும் இவரது தாயாரைப் போன்றே முடிவு ஏற்படும் என்று முடிகட்டி விட்டார்கள் என்றும் கூறியுள்ளார். தன்னைப் பற்றிய தப்பபிப்ராயம் கொண்டவர்களின் தன் மீதான பார்வையை மாற்றியது தன்னிரு குழந்தைகளே என்றும் கூறியிருக்கிறார்.

    போதைவஸ்துக்களின் மிகவும் ஆபத்தான “கெரோயின்” (Heroin) என்றழைக்கப்படும் போதை வஸ்து அதை உபயோகிப்போர் மீது கொண்டுள்ளா அழுத்தமான பிடியைப் பற்றி விபரிக்கும் இவர், இப்போதைவஸ்து பல அரும்பெரும் கலைஞர்களின் வாழ்வைச் சீரழித்ததை எண்ணிப் பார்க்கும் போது தனக்கு வேதனையாக உள்ளது என்றும் கூறியிருந்திருக்கிறார். இப்படியெல்லாம் தனது வாழ்க்கையின் பிரச்சனைகளை புரிந்து வைத்துக் கொண்ட ஒருவரே இப்போதைவஸ்துவுக்கு அடிமையாகி 25 வயதே நிரம்பிய நிலையில் இரு குழந்தைகளைப் பரிதவிக்க விட்டுச் சென்றது போதைவஸ்துகளின்பாவனையின் ஆபத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

    வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் உழைத்து முன்னேறி பிரபல்யமடைந்து விட்டு பின் அந்த வாழ்க்கையை போதைவஸ்துவிற்கு அடிமையாக்குவதின் அநியாய விளைவினை எமது இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இம்மடலின் அடிப்படை நோக்கமாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • புலிக்கொடியின் மாட்சி

    –விசாலம்.
    சோழன்

    முன்னுரை:
    என் பூர்வீகம் தஞ்சாவூர். நான் அங்கு அடிக்கடி போய் அமரும் இடம்   தஞ்சை  பெரிய கோயில்.   அருள் மிகு பிரகதீஸ்வரர் கோயில். கல்லிலே கலை வண்ணம் கண்டேன்  என் மனதில் அழியா இடம் பெற்ற பேரரசர் திரு ராஜராஜ  சோழன். அவரது சரித்திரத்தை ஒரு கவிதை போல எழுத வேண்டும் என்ற ஆவலால் இதை எழுதினேன். எழுதும் போது என் கண் முன் அந்த மன்னரையே கண்டேன். அவர் பின்னால் தஞ்சைப்பெரிய கோயிலும் கம்பீரமாக நின்றது.

    அது  ஒரு பொற்காலம் ………….

    சோழ வள நாடாம், அதில் உயர் தஞ்சைக் கண்டு,
    தூயத்தமிழ் நாட்டின் தலைமை அதைக் கொண்டு,
    புகழ்  உச்சி  ஏணியில்  புலிக் கொடி நாட்டி,
    “அருள் மொழி வர்மனாம்” அருளைக் காட்டி,
    சிவனுடைய அருள் முழுமை பெற்று,
    ஒவ்வொரு மூச்சிலும்  சிவனே நின்று,
    கண்டறியாத அற்புதமாய்  நின்றது தஞ்சைக்  கோவில்
    ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அழியாத கற்கோவில்,
    கலை நுட்பம் சிறந்த அழகுத்திருகோயில் ,
    கண்டவர் பரவசம், காண்பவர் வியக்கும் கோவில்
    பிரும்மாண்ட சிவலிங்கம் அருள்  புரியும் கோயில்
    அவனைப்பார்க்கும்  நந்தியோ மனதை அள்ளும் கோயில்
    மலர் மணக்கும் கோவில்கள்
    மா பெரும்  விழாக்கள்.
    ஒன்றுபட்ட மனத்தாலே உழைத்திடும்  கரங்கள்,
    சாலை இரு புறமும் நிழல் கொடுக்கும் மரங்கள்.

    அது ஒரு பொற்காலம், மக்கள் மகிழ்காலம்
    அருள்மொழிவர்மன் திரு ராஜராஜன் வாழியவே

    ராஜகேசரி வர்மன்   நீதானே
    மும்முடி சோழன்  நீதானே,
    சிவபாத சேகரா நீதானே
    ஸ்ரீ ராஜராஜனும்  நீதானே
    சிவனருள் பெற்றவன்  நீதானே
    தமிழ் நாட்டின்  பெருமையும் நீதானே

    அது ஒரு பொற்காலம் மக்கள்  மகிழ்ந்தக்  காலம்
    அருள்மொழி வர்மன்  திரு ராஜ ராஜன் வாழியவே !

    எங்கும்  புலிக்கொடியின்  மாட்சி கொடிக்கட்டி பறந்தது ஆட்சி
    அருளோங்க, ஒளியோங்க   மகிழ்வோங்க, வாழ்வோங்க
    பொருள் வளம் ஓங்க, புலமை எழில்  ஓங்க  சிவ நாமம்  ஓங்க
    மாவீரன் எனப் பெயரோங்க சோழவளநாடு புகழோங்க
    நாற்றிசையும்  வெற்றிப் பேரிகையும்  ஓங்க சீரும் சிறப்புமோங்க,
    சொற்சுவையும் பொருட்சுவையும்  ஒருங்கே ஓங்க
    அயல்  நாட்டிலும் செந்தமிழ்   ஓங்க,
    வேற்றுமை நீங்கி  ஒற்றுமை  ஓங்க
    கலைகளும் சுடர் விட  காவியமும்  பெருகிட,
    தாயின் அன்பில் கோவிலும் எழும்பிட,
    அரசில் புதுமைகள்  தின்ந்தோரும் தோன்றிட,
    வைணவமும்  மதித்து  திருமால் கோவிலும் எழுப்பிட,
    ‘சூடாமணிவிஹாரா” என்ற புத்தக் கோவிலும்  வந்திட,
    கங்கைக் கொண்ட சோழபுரமாம் வானளாவ

    அது ஒரு பொற்காலம் மக்கள்  மகிழ்ந்தக்  காலம்
    அருள்மொழி வர்மன்  திரு ராஜ ராஜன் வாழியவே !

    தஞ்சை திருச்சி  முதல் ஆட்சி ,
    வட ஆற்காட்டிலும் புலிக்கொடி மாட்சி,
    பாஸ்கரவர்மனும்  தோல்வி கண்டான்,
    அமரபுஜங்கனும்  மாட்டிக் கொண்டான்,
    கண்டலூரிலும் புலிக்கொடி பறக்க
    கப்பற்படைகள்   தோல்வி அடிக்க,
    வில்லினம்  துறைமுகம்  சோழன்  கையில்
    எல்லா துறைமுகம்  அவன்  வசத்தில்
    கங்குவர்  நொலம்பர்   யாவரும்  பணிய,
    வேங்கி, குடகு  எல்லாம்  அவன்  கீழ்,
    தக்கிணத்திலும் “சாலுக்யா
    தோல்வி் கண்டான்  “சத்யஸ்ரயா ‘
    சேர பாண்டியன்  உடன்படிக்கை,
    இலங்கை  அரசனுக்கு உதவும் கை,
    சீறி எழுந்தது புலிக்கொடி
    எங்கும்  பறந்தது  வீரக்கொடி ,
    அரசன் மஹீந்தரன்  தோல்வி,
    சோழனின்   கொடிக்கு வெற்றி

    அது ஒரு பொற்காலம் மக்கள்  மகிழ்ந்தக்  காலம்
    அருள்மொழி வர்மன்  திரு ராஜ ராஜன் வாழியவே !

     

    படம் உதவிக்கு நன்றி: https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTn3wClbq7QjvXHtP1Jkdg8zjtoqlUZz7brRnmxb2T5wnpBqCFF

    Share
  • திருமால் திருப்புகழ் (138)

     

    கிரேசி மோகன்

    Bhagavatha -- Matsya Avatara   keshav
    Bhagavatha — Matsya Avatara keshav

    —————————————————————————————————-
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
    —————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–
    மயிலை ஸ்ரீனிவாசப் பெருமாள் வீட்டு வாசலில்
    விடி காலை எழுந்தருளிய போது….
    —————————————————————————————-
    சுற்றிடும் ஆழியை, சூழ்கடல்வெண் ஆழியைப்,
    பற்றி, எதிர்புறம் பத்தினிகள், -நிற்றிருக்க,
    புள்ளனெழாப் போதினிலே, பல்லக்கில் ஊர்வலமாய்,
    கள்ளனென வந்தவரே காப்பு….(345)

    ஆதி அரங்கனே, அன்று கயலாகி,
    வேதங்கள் காத்த விமலனே, -மாதவனே,
    ஆழ்வார் தமிழ்பெற்று, ஆயிரத்தில் ஒன்றாகி,
    வாழ்நாள் கழிக்கும் வரம்….(346)

    Bhagavatha - Krishna steals the garments of the gopis Keshav
    Bhagavatha – Krishna steals the garments of the gopis Keshav

    blogger-image-188552830

    ஆடிப் பெருக்காகக், கூடிக் குளிக்குமாயர்,
    பாடி இளம்கோ பியர்கூறை, -வேடிக்கை,
    ஆகப் பறித்தவா, மோகத் திரைவிலக்கி,
    யோகநிர்வா ணம்தா எனக்கு….(347)

    ஆயர்தம் சேயனாய், ஆசையோ(டு) ஆய்ந்திட,
    ஆயிரம் பேருண்டு, ஆயினும், -மாயிருள்,
    சாயலான் கட்டுண்டு, சாதுவாய் நிற்பது,
    தாயுரை தாமோ தரன்….(348)

    அரியா தவனை, அறியா தவரே,
    அறிய முயல்வார் அறிவால், -பரிவாக,
    பூபழம் பத்ரம், படைப்போர், அகத்தடுப்பில்,
    தீப்பிழம்பாய்த் தேங்கும் தவம்….(349)

    அரியா தவனை, அறியா தவரே,
    அறிய முயல்வார் அறிவால், -எரியா(து),
    ஒளிந்த நெருப்பாய், உணர ,மரத்தினைப்,
    பிளந்த குருடனைப் போல்….(350)

    ———————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:—-

    http://bhagavatham.blogspot.in/

    Share
  • திருமால் திருப்புகழ் (137)

     

    கிரேசி மோகன்

    Bhagavatha:  Amritha and the Mohini avatara  - Keshav
    Bhagavatha: Amritha and the Mohini avatara – Keshav

    கண்னன் திருப்புகழ்….
    —————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–

    Bhagavatha - Grace on Yashoda - Keshav
    Bhagavatha – Grace on Yashoda – Keshav

    அண்ணன் வடமதுரை, தங்கையோ தென்மதுரை,
    வண்ணம் இருவருமே வான்முகில், -முன்னொருநாள்,
    ஓசையின்றி கோகுலம், ஓடியிடம் மாறியதால்,
    மீசையின்றி கண்ணன்மீ னாள்….(338)

    அண்ணனுக்கு முன்னமே, ஆயர் குலமுதித்து,
    அன்னை யசோதை அமுதினை, -உண்ணவந்த,
    அம்பிகே ஆயினன், எம்பிரான் கோகுலத்தில்,
    தம்பியாய் பின்பிகுந்த தால்….(339)

    சரணா கதியென்று, சாகேத ராமன்,
    இருதாள் பணிந்து இருப்போர்க்(கு), -அரணாய்,
    அரியவன் கோதண்ட, அம்புகள் நிற்கும்,
    நெறியவன் காதை நமக்கு….(340)

    நீல பத்பநாபன் ’’பள்ளிகொண்டபுரம்’’ நாவலை
    இரா.முருகன் படிக்கத் தந்தபோது….
    —————————————————————————————

    கேசம் திருவல்லா, கால்கள் திருவாப்பூர்,
    சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி, -வாசனாய்,
    நீளப் படுத்தவரே, நீலபத்ம நாபரே,
    கோலத் திருவுருவே காப்பு….(341)

    கேசம் திருவல்லா, கால்கள் திருவாப்பூர்,
    சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி, -வாசா,
    பதினெட்டு மைலாய்ப், படுத்தோய் எனக்கு,
    விதியெட்டா வாழ்வை வழங்கு….(342)

    நாளுழி காலத்தில், ஆலாழி தெப்பத்தில்,
    பாலாழி வாய்கொண்ட பாலகனாய், -நீளாழி
    நீந்திக் கழித்தன்நாள், ஞாலம் வகுப்போய்ஏ,
    காந்தப் பெருக்கலைக் கூட்டு….(343)

    சுள்ளிகொண்டாய், காகா சுரனை விலக்கிட,
    கொள்ளிகொண்டாய் புள்ளீமக் காரியமாய், -அள்ளியன்று,
    வள்ளிகண்டம் கட்டிய, வேலனார் மாமனே,
    பள்ளிகொண்ட பாற்கடலோய் பார்….(344)

    ——————————————————————————————————————-

    Share
  • இன்று ஆஷாட ஏகாதசி

    இன்று ஆஷாட ஏகாதசி. பலலக்ஷம் வார்க்கரிகள் பாதயாத்திரையாகச் சென்று பண்டரிபுர விட்டலனைத் தரிசிக்கும் தினம். அடிமுதல் முடிவரை ஆராஅமுதமாகத் தித்திக்கும் அந்த அக்காரக் கனியைச் சுவைப்போமா?

    சு.ரவி

    ஓவியம் : சு. ரவி
    ஓவியம் : சு. ரவி

    அமுதப் பதிகம்

    இதயம் அமுதம்,இன்முகம் அமுதம்
    இணைவிழி அமுதம், இன்னருளமுதம்
    இதழ்கள் அமுதம், இளநகை அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 1`

    மொழியும் அமுதம், மௌனம் அமுதம்
    மூச்சும் அமுதம், முகில்நிறம் அமுதம்
    மழலை அமுதம், மயிலிறகமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 2

    குழலிசை அமுதம், குரலொலி அமுதம்
    குளிர்நுதல் அமுதம், குழல்சுருள் அமுதம்
    கழலிணை அமுதம், கரமலர் அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 3

    நடனம் அமுதம், நடைஅழ கமுதம்
    நட்பும் அமுதம், பகையும் அமுதம்
    இடவலம் அமுதம், இகபரம் அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 4

    ராதை அமுதம், காதல் அமுதம்
    ராகம் அமுதம், மோஹம் அமுதம்
    கோதை அமுதம், கோபியர் அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 5

    பாதை அமுதம், பயணம் அமுத்ம்
    பார்வை அமுதம், பாற்கடல் அமுதம்
    கீதை அமுதம், கிளரொளி அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 6

    கனவும் அமுதம், நனவும் அமுதம்
    கனிவும் அமுதம், முனிவும் அமுதம்
    ஜனனம் அமுதம், மரணம் அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 7

    அறிதுயில் அமுதம், அரவணை அமுதம்
    யமுனை அமுதம், யதுகுலம் அமுதம்
    உறிதயிர் அமுதம், உண்பதும் அமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 8

    துயரம் அமுதம், துணையும் அமுதம்
    துகளும் அமுதம், துளசியும் அமுதம்
    பெயரும் அமுதம், பேரழகமுதம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 9

    உருவம் அமுதம், உணர்வும் அமுதம்
    உள்ளொளி அமுதம், உயிர்நிலை அமுதம்
    அருவம் அமுதம், அன்பே அமுத்ம்
    ஆராஅமுதே அகிலம் அமுதம்! 10

     

    Share
  • கல்லுக்குள் ஈரம்

    நடராஜன் கல்பட்டு

    “கோசூ ஒரு சாய் குடு. குரியா எனக்கு காப்பீ குடு. நனெக்கொந்து சாய் தொகுண்ட்பாப்பா.” இவையெல்லாம் எங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தின் கணினிப் பிரிவில் கேட்கும் ஒலிகள்.

    “எந்த பூடீ. சாய் ஆறிப் போகுதில்லெ. வேகம் குடி.” இது என்னைப் பார்த்து செல்ல அதிகாரத்துடன் சொல்லப் படும் வார்த்தைகள்.

    அதென்ன பூடீ என்கிறிர்களா? அதுதான் ப்யூடி (beauty).

    குரியக்கோஸ் எங்கள் அலுவலகத்தில் உள்ள சிற்றுண்டி சாலையை நடத்துபவர். கேரளத்துக்காரர். வயது சுமார் 35 இருக்கும். முரடன் போன்ற தோற்றம்.

    சிற்றுண்டி சாலை நடத்துவது மட்டுந்தான் அவர் வேலை என்று இல்லை. விடு பார்த்துக் கொடுக்க வேணுமா? கோசு. வீட்டு மனை வாங்கப் போகிறீர்களா? கோசு. அவருக்கே சொந்தமாக பங்களூரில் இரண்டு மூன்று வீட்டு மனைகள் உள்ளனவாம். உழைப்பாளி அவர்.

    குரியக் கோசுக்கு தாய் தந்தை இல்லை. இல்லை என்றதும் தாய் தந்தை இல்லாமல் எப்படிப் பிறந்தார் என்று கேட்காதீர்கள். யார் அவர்கள், உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பதெல்லாம் தெரியாது குரியனுக்கு. சின்ன வயதில் அவரை இந்த ஊரில் சாய் கடை நடத்தும் நாயர் ஒருவர் இங்கு அழைத்து வந்தாராம்.

    சனிக் கிழமைகளில் அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை என்று பெயர். ஆனால் வேலை முடிந்து வீட்டிற்குக் கிளம்பும் போது மாலை 6 மணியாகி விடும். மற்ற நாட்களிலோ இரவு 7 அல்லது 8 மணியாகிடும் வீட்டிற்குக் கிளம்பும் போது. நல்ல வேளை வீடு ஸ்கூட்டரில் ஒரு நிமிடமும், நடையில் 3 நிமிட நேரமும் ஆகிடும் தூரத்தில் தான் உள்ளது.

    அதிக நேரம் வேலை செய்திட உடலில் தெம்பு வேண்டுமே. அதை அளிப்பது குரியக்கோஸ் தான்.

    சனிக் கிழமைகளில் நான் மதிய உணவிற்கு வீட்டிற்குச் செல்வதில்லை. குரியக்கோஸிடம் இரண்டு சப்பாத்திகள் வாங்கி உண்பேன்.

    மதியம் பசி வந்ததும், “கோஸு எனக்கு ரெண்டு சப்பாத்தி வேணும்” என்றால் வந்திடும் கோபம் அவருக்கு.

    “உரங்கிப் போயோ? சப்பாத்தி வேணுமெங்கில் முந்தே பறயணும்” என்பார் சற்று கோபமான குரலில்.

    சப்பாத்தி வந்து மேஜையில் ஆறிக் கொண்டிருக்கும். நான் பணியில் மூழ்கி இருப்பேன். என்னைத் தூக்கி வாரிப் போடும் கோஸின் குரல், “எந்த பூட்டீ இன்னும் தின்னிட்டில்லையோ? வேகம் தின்னு. கை களுவு. வேலெ பாரு.”

    மேலதிகாரிகளுக்கு மதிய உணவு அளித்த பின் அவசர அவசரமாக அன்று செய்ததில் மிச்சம் மீதி இருக்கும் உணவை எல்லாம் ஒரு பெரிய டிபன் கேரியரில் நிரப்பி வேகமாக வெளியே எடுத்துச் செல்லுவார் கோஸ்.

    எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம், இவருக்கு பெரிய குடும்பம் இருக்குமோ அல்லது அந்த உணவை எல்லாம் விற்று விடுகிறாரோ என்று.

    ஒரு நாள் கேட்டே விட்டேன், “கோஸ் இந்த கேரியர்லெ இருக்கறதெல்லாம் வித்தூடுவீங்களா?” என்று.

    “அறியணுமோ? என் கூட வா.” நானும் தொடர்ந்தேன் அவரை எனது வண்டியில். நேராக ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றார். அங்குள்ள சமையல் அறையில் டிபன் கேரியரை வைத்து விட்டு வெளியே வந்து, அங்கிருந்த ஒரு கிழவியிடம் பேசினார்.

    “எந்தா குஞ்சுமோள் சுகந்தன்னே?”

    “என்ன இன்னிக்கி?”

    “ஓளன்.”

    அடுத்த கணம் அவர் கன்னத்தில் முத்தமிட்டாள் அந்தக் கிழவி.

    “குஞ்சுமோன் சுகந்தன்னே?” இது ஒரு கிழவரைப் பார்த்து. இப்படியே ஒவ்வொருவரையும் கட்டித் தழுவி விசாரித்தார் குரியக்கோஸ்.

    கோஸைக் கண்டதுந்தான் என்ன ஒரு பிரகாசம் பஞ்சடைந்த அவர்கள் கண்களில்!

    சமையல் அறையில் இருந்து ஒரு பெண் காலி டிபன் கேரியரைக் கொண்டு வந்து கொடுத்தாள். நாங்கள் திரும்பினோம் அலுவலகம்.

    உருவத்தில் முரடனாகக் காட்சி தரும் இந்த கல்லுக்குள் தான் என்ன ஒரு ஈரம்!

    (கதையல்ல. நிஜம் இது. எனது மகள் சொல்லிட நான் எழுதியது.)

    நடராஜன் கல்பட்டு 11-05-2012

    Share
  • பெயரிடப்படாத ஆண், பெண் உறவு

    ரா. பார்த்தசாரதி

     
    தர்ம சிந்தனை, நல்லெண்ணம் கொண்டு உதவுபவன்
    செய்யும் உதவிக்கு எந்த கைம்மாறும் எதிர்பாரான்.

    வேலைக்காரியின், மகள் படிப்பிற்கு ஏன் உதவவேண்டும்?
    கார் டிரைவரின் தாயாரின் மருத்துவத்திற்கு ஏன் உதவவேண்டும் ?
    மாதம் ஒரு முறை அநாதை குழந்தைகளுக்கு ஏன் உதவவேண்டும் ?
    இவர்கள் எனது பெயரிடப்படாத உறவுகள் என சொல்லவேண்டும்

    உறவுகளின் பெயர் இருந்தும், உறவு மறந்துபோகும் !
    பெயரே இல்லாத ஆண், பெண் உறவுகள் வந்து போகும் !

    பாசமும், பந்தமும், கொண்ட உறவுகள் நிலைக்குமா?
    நாம் செய்யும் நல்லவைகள் என்றாவது பிரதிபலிக்குமா!

    ஒழுக்கம் மாறாத அன்பும், பழகும் விதமே உறவின் எல்லை !
    இதனை அறிந்த மனித இனத்திற்கு என்றும் கவலை இல்லை !

    நான் நோய்வாய்பட்டு இருந்தேன் சில நாட்கள் !
    என்னை காண வந்ததே அந்த பெயரிடப்படாத உறவுகள் !

     

     

    Share
  • தமிழரின் நனிநாகரிகம்

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    முகப்புரை: உலகில் தோன்றிய பல்வேறு இனக்குழுக்களுள் முதன்முதலாக நாகரிகம் பெற்ற இனக் குழுக்கள் மிகச் சிலவே. அவ்வினக் குழுவினரை வரலாற்றாய்வாளர்கள் அவர்தம் மொழிப்பெயரான் சுட்டுவர். ஓரினத்தைக் குறிக்க மற்றெல்லாவற்றினும் மேம்பாடுடைய மொழியே முதன்மையானது. அத்தகைய மூத்த மொழிகளாக மட்டுமல்லாமல் செம்மொழிகளாகவும் விளங்கிய, சிறப்புடைய மொழிகளாகக் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், பாரசீகம், சமற்கிருதம், தமிழ், சீனம் என்பவனவற்றை மொழியியற் பேரறிஞர் ச. அகத்தியலிங்கம் சுட்டுவார். இதனை எண்ணுங்கால் தமிழர்கள் உலகின் மூத்த குடிகள் மட்டுமல்லர்; நாகரிகத்தால் மேம்பட்டவருமாவர். இதனைக்,

    கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
    முன்தோன்றி மூத்த குடி.
    (புறப். வெண்பா மாலை. கரந்: 14) எனக் கூறுகின்றது புறப்பொருள் வெண்பா மாலை.

    அவ்வடையாளக் கூறுகளை அகம், புறமென இருபாற்படுத்தி இக்கட்டுரைக்கண் காணலாம். இக்கட்டுரை சுருங்கியதாகலின் ஒரு சில சான்றுகளே காட்டப்படுகின்றன. உலக மொழிகள் எல்லாம் எழுத்திற்கும், சொல்லிற்கும் மட்டுமே இலக்கணங்களைக் கண்டன. எம் தமிழ்மொழியோ இவற்றொடு வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த பெருமையுடையது. அதுவே பொருளிலக்கணமாம். எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுதிக்கும் முழுமையாக இலக்கணம் உரைத்த நூல் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமாகும்.

    அகத்திணை காட்டும் வாழ்வியற் கூறுகள்: தொல்காப்பியர் வாழ்வை அகம், புறமென இருபாற்படுத்துவர். அகமாவது, கைக்கிளை முதலாப் பெருந்திணை ஈறா எழுவகைப்படும். கைக்கிளை என்பது முதிராக் காதலெனவும், ஒருபாற் காதலெனவும், சிறுமை பற்றிய உறவெனவும் விளக்குவர்; பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். ஏனைய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பன அன்பின் ஐந்திணைகளாகும். இத்திணைப் பாகுபாடு நிலத்தின் அடிப்படையில் அமைந்தது; ஒழுக்க இயல்பினையும் விளக்குவது.

    இத்திணைகள் முதல், கரு, உரி என மூவகைப்படுத்தப்படுகின்றன. நிலமும் காலமும் முதற்பொருள்; தெய்வம், உணவு, மக்கள் முதலியன கருப்பொருள்; ஒழுக்கமே உரிப் பொருளாம். இவ்வொழுக்கத்தினைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என வகைப்படுத்துவர் இலக்கணிகள். ஒத்த தலைவனும், தலைவியும் ஒருங்கிணைந்து இன்புற வாழ்வது அகமாம். இவையெல்லாம் ஆரியர் முதலாய பிற தேயத்தார் அறியாதன.

    இக்காதல் வாழ்வைக் களவெனவும், கற்பெனவும் இருவகைக் கைகோளாகக் காட்டுவர். திருமணம் செய்துகொண்டு இணையராக வாழ்வதற்கு முன்னர்த் தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு, காதலித்து வாழ்வது களவொழுக்கமெனப்படும் (களவு = மறைவான ஒழுக்கம்). ஊரும், தமருமறிய மணம் செய்துகொண்டு வாழ்வது கற்பொழுக்கம். களவின்றியும் மணம் கூடுதல் உண்டு. மணவிழாக்கள் (வதுவைச் சடங்குகள்) பின்னர்த் தோன்றியன.

    “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
    ஐயர் யாத்தனர் கரண மென்ப”
    என்பது தொல்காப்பியம்.

    திருமணச் சடங்குகள்: வதுவைச் சடங்குகள் பற்றிய விரிவான செய்திகள் தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் இடம்பெறவில்லை. எனினும், அகம் 86-ஆம் பாடலில் நல்லாவூர் கிழார், தமிழர் திருமணமுறையைச் சுட்டியுள்ளார். அது வருமாறு:

    …புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
    வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
    கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
    பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
    நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

    பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
    வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
    கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
    பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர….(அகம்: 86)

    இவ்வகப்பாடல் பண்டை நாளைத் தமிழர் திருமணமுறையை நன்கு விளக்கும்.

    இத்திருமணத்தில் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டுதலும், தீவலம் வருதலும், மங்கலநாண் அணிவித்தலுமாகிய வடவர் மணமுறை இடம்பெறவில்லை என்பது காண்க. இந்நிகழ்வுகள் முதன்முதலாகச் சிலம்பில்தான் முகங்காட்டுகின்றன. இனி, வேறுசில செய்திகளோடு அகப்பகுதியை நிறைவு செய்வோம்.

    சில வழக்கவொழுக்கங்கள்: இல்லுறை மகளிர் மாலைக் காலத்தில் தம் இல்லங்களில் நறுநெய்பெய்து அகல்விளக்கேற்றினர். இல்லுறை தெய்வங்களை நெல்லும் மலரும் தூவி வழிபட்டனர். போர் காரணமாகவோ, பிறவாற்றானோ தலைவனைப் பிரிந்த தலைவி பிரிவாற்றாமையான் வருந்தும்போது முதுபெண்டிர் அவளுக்கு இன்சொல்கூறி ஆற்றுவிப்பர். பண்டை நாளில் நெல், கழங்கு முதலியவற்றான் கட்டுவிச்சி குறி கூறுதலும், நற்சொல் (விரிச்சி) கேட்டலும் (இன்னே வருகுவர் தாயர்: முல்லைப் பாட்டு) இவைபோல்வன பிறவும் தமிழர் வாழ்வில் இடம்பெற்றுள்ளன.

    புறம் காட்டும் வாழ்வியற் கூறுகள்: காதலும் போருமே தமிழர்தம் அடையாளங்கள் என்பர். ஆயினும், புறமென்பது போரை மட்டும் குறிப்பதில்லை. அரசு, வாணிகம், கல்வி, கொடை, அறமென வேறுபல் செய்திகளையும் உள்ளடக்கியதே புறமெனப்படும். முதலில் தமிழர்தம் போர்ப் பண்பினைக் காண்போம்.

    puram.4போர் முறைகள்: போர் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியர் புறத்திணையியலில் ஏழு திணைகளாக வகுத்துக் கூறியுள்ளார். அவை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி என்பன. தமிழர்களின் போர் முறை அறநெறிப்பாற்பட்டது. போரால் தீங்குகள் நேராமல் காக்கப்படவேண்டியவர்களது பட்டியலைப் புறம் விரிவாகக் கூறுகின்றது.

    ”ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென…”
    (புறம்: 9)

    அத்தொடு போர் முறையில் வடவாரியர்க்கும் எம் தமிழர்க்கும் மிகப் பெரிய வேறுபாடுள்ளது. வடவர்கள் போர் தொடங்கும் முன்னும், போரில் வெற்றிபெற வேண்டியும் பல்வேறு வேள்விகளைச் செய்து பலிதருவர். மேலும், இந்திரன், அக்னி, வருணன், பிரமன், விஷ்ணு போன்ற தேவர்களிடம் பகையை வெல்லப் பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் போன்ற போர்ப்படைகளை வேண்டிப் பெறுவர். (காண்க: இராமாயணம், மாபாரதம் போன்ற நூல்கள்). இம்முறை தமிழ் மறவர் அறியா ஒன்றாகும். நம் புறநூல்களில் தமிழர் போர் முறையை நன்கறியலாம். தமிழர்கள் தம் தோள்வலியையும், வாள்வலியையும் நம்பியே போர்மேற்சென்றனர்; வெற்றியும் பெற்றனர்.

    நடுகல் வழிபாடு: போரில் இறந்துபட்ட வீரர்கள் நினைவாகக் கல்நட்டு, Nadukalஅக்கல்லில் இறந்தாரின் பீடும் பெயரும் பொறிப்பர். அதற்குக் கள் முதலியவற்றை வைத்துப் படைத்து வழிபாடு செய்வர். இதனடிப்படையிலேயே சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல்லெடுத்து நீர்ப்படுத்தி வழிபாடாற்றப் பத்தினிக்கோட்டம் அமைத்தான். இதனையே ஆசிரியர் தொல்காப்பியரும், “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல், சீர்த்த மரபில் பெரும்படை வாழ்த்தலென்று” (தொல்:பொருள்: புறத்: 5) விளங்கக் கூறுவார். இதுவே இற்றை நாளில் ’கல் நிறுத்துதல்’ எனும் ஈமச்சடங்காக மாறியுள்ளது.

    கல்விச் சிந்தனை: தமிழர், கற்றோரையும் புலவர் பெருமக்களையும் பெரிதும் போற்றியுள்ளனர் என்பதனைப் புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற நூல்களான் அறியலாம். பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்” எனத் தொடங்கும் புறப்பாடலில் (எண்:183) கல்வியின் சிறப்பைப் பரக்கக் கூறியுள்ளான். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வஞ்சினங்கூறும் காலை, “புலவர் பாடாது வரைகவென் னிலவரை” (புறம்: 72) எனக் கூறியுள்ளதை எண்ணுக. புலவரைப் போற்றும் பண்பு நலனை இப்பாடல் நன்கு புலப்படுத்தும். மேலும், “சான்றோர் சான்றோர் பால ராப” என்ற அடியும், “செறுத்த செய்யுள் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” என்ற அடிகளும் அந்நாளைய தமிழ் மாந்தர் கல்வியின்மாட்டு எத்துணை மதிப்புக் கொண்டிருந்தனர் என்பதைத் தெள்ளிதிற் புலனாக்கும்.

    கொடைப் பண்பு: பொதுவாகத் தமிழரும், குறிப்பாகத் தமிழ் மன்னர்களும் கொடைநலம் வாய்க்கப் பெற்றவர் என்பதனைச் சங்க நூல்கள் அனைத்தும் கூறுகின்றன. தமிழர்கள், கொடையை வாணிக நோக்கிலோ, பயன்கருதியோ செய்தாரிலர்.

    ”இம்மைச் செய்தன மறுமைக் காமெனும்
    அறவிலை வாணிகன் ஆஅய் அலன்…”   
    (புறம்: 134)

    ”எத்துணை யாயினும் ஈதல் நன்றென             avvai
    மறுமை நோக்கின்றோ அன்றே
    பிறர், வறுமை நோக்கின் றவன்கை வண்மையே.”
    (புறம்: 141)

    ”செல்வத்துப் பயனே ஈதல்” (புறம்: 186)

    ”ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர்
    ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று
    கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர்
    கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று” (புறம்: 204)

    மேலே காட்டிய புறப்பாட்டடிகள் தமிழர்தம் கொடைச் சிறப்பினை நன்கு புலப்படுத்தும்.

    பிற செய்திகள்: தமிழர்கள் புகழெனின் உயிரும் கொடுப்பர்; பழியெனின் உலகே பரிசிலாகக் கிட்டினும் அச்செயலைச் செய்யார். வலியரென வழிமொழியார்; மெலியரென மீக்கூறா இயல்பினர். மக்கட்பேற்றினைப் பெரிதும் மதிப்பவர். மன்னரேயாயினும் அவர் செய்யும் தவற்றினைக் கண்டிக்கும் திறமுடையார் தமிழர். நட்புச் செய்தாரைப் போற்றும் திறனர் நம்மனோர். இன்னோரன்ன இனியநற் பண்புகளான் தமிழர் வாழ்வு பொலிவு பெற்றது.

    முடிப்புரை: ஈண்டுக் காட்டப்பட்டவை தமிழர்தம் நற்பண்புகளில் மிகச் சிலவே. கூறாது விடப்பட்டனவே மிகுதியானவை. தமிழர்தம் நனிநாகரிகத்தைக் கண்டறிய நம் பண்டைத் தமிழ் நூல்கள் பெரிதும் துணை நிற்பன. அவற்றைக் கற்போம்; அவனியில் நீடுபுகழ் சேர்ப்போம்.

    வெல்க தமிழர் நாகரிகம்!

     

    Share