Blog

  • நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை

    சு. ரவி

     

    7D83B7BE-1A74-4E7A-980C-FDCAA5E06091

    இளைஞனே,

    நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை.
    பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை.
    கண்ணீர் மன அழுத்தத்தைக் கரைக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை.
    அது உன் திறமையையும் தன்னம்பிக்கையையும் தகர்த்து விடுகிறது.

    அழுகை ஆன்மாவைப் புனிதமாக்குகிறது என்பது வேலையற்றவரின் வெட்டி வேதாந்தம்.

    என் இனிய இதயமே,

    உன் அழகிய விழிகளில் துளிர்த்து உதிர்வன உன் ஓராயிரம் நிறைவேறாத ஆசைகளே.
    உனக்காக நெகிழ்வதை நிறுத்து.

    “வாடிய பயிர்களைக் கண்டு” வாடினால் நீ வடலூர் வள்ளல் ஆகலாம்.
    அப்போது நீ உனக்காக அழமாட்டாய்- உலகத்து உயிர்களுக்காக அழுவாய்.
    அது உயர்ந்த யோக மார்க்கம்!

    என் நம்பிக்கையே,

    கண்ணீரும், அழுகையும் கோழையின் ஆயுதங்கள். பெண்மையின் பலவீனங்கள்.
    ஒரு துளி பன்னீர் கிடைக்க ஓராயிரம் ரோஜா மலர்கள் தேவை..
    ஆம் ஒரு ஞான யோகி உருவாகுமுன் இந்த மண்ணில் ஒராயிரம் கர்மயோகியர் அவதரிக்க வேண்டும்.

    உன் வாடைக்காலப் போர்வையை வீசி எறி. வஸந்தம் உன்னை வரவேற்கக் காத்திருக்கிறது.

    கர்மயோகியே,

    கண்ணீர் உலர்ந்து கடமை உணர்ந்து
    திண்மை செறிந்து நொய்ம்மை தவிர்த்து
    எழுந்திரு!

    நீ பிறந்தபோது அழுதாய். அது அறியாமல் செய்தபிழை.
    அது உன் வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடங்க
    நீ ஊதிய வெற்றி சங்க முழக்கமாகட்டும்.

    உன் புன்னகை மிளிரும் முகத்தில் நாளைய உலகின் அருணோதயம்
    தெரிகிறது.
    இதோ உன் கண்ணீர் நின்றுவிட்டதால் இந்தியத் தாயின் ஜீவநதிகள்
    பிரவாகமெடுத்து ஓடுகின்றன!
    கண்ணீரின் தடங்கள் மறைந்த பாதையில் உன் வீறு நடை போடு!

    என் இனிய இந்திய இளைஞனே,

    நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை
    பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை.

    சு.ரவி

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 127

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி

    மறக்குடி மக்கள் குமரி ஒருத்திக்குக் கொற்றவையின் கோலம் புனைவித்து, வழிபடு பொருள்களுடன் ஐயையின் கோட்டம் செல்லுதல்  

    தம் பகைவர் தலையைத்
    தாமே அறுத்தெறிய வேண்டும் என்று                           kotravai 2
    எப்போதும் எண்ணுபவர்கள் மறவர் குடியினர்.
    அப்பகைவர் எவரும் தம்மை வென்றிடாதபடி
    மிக்க வீரம் கொண்ட அவர்
    தொல்குடி மக்களாவர்.

    அவர்கள் தம் குடியில் பிறந்த
    சாலினியைக் கொற்றவையைப் போல் அலங்கரித்தனர்.
    சிறிய வெள்ளிய பாம்பின் குட்டிபோல் இருந்த
    பொன் கயிற்றால் அவள் குறுகிய கூந்தலைக் கட்டினர்.

    முள்வேலியால் சூழப்பட்ட
    அவர்கள் தோட்டத்தில் புகுந்து,
    பயிர்களை அழித்த காட்டுப் பன்றியின்
    வளைந்திருந்த கொம்பைப் பிடுங்கி
    அவள் சடையில் இளம்பிறையாகச் சூடினர்.

    அஞ்சுவது என்பதை அறியாத வலிமைமிக்க
    புலியின் வாயைப் பிளந்து
    அதன் வெண்பற்களை எடுத்து
    வரிசையாகக் கோர்த்துத் தாலியாகக் கட்டினர்.
    வரிகளும் புள்ளிகளும் நிறைந்து காணப்படும்
    அதன் தோலை மேகலையாக அணிவித்தனர்.

    வயிரம் பாய்ந்த மூங்கில் வில்லை
    மிகவும் சிரமப்பட்டு வளைத்து நாண் ஏற்றி
    அவள் கையில் கொடுத்தனர்.
    முறுக்குடன் அமைந்த கொம்புகளையுடைய
    கலைமான் ஊர்தியில் அவளை அமர்த்தினர்.

    மதனப்பாவை, கிளி,
    சிறு முடிகளையும் அழகிய சிறகையும்
    உடைய காட்டுக்கோழி,
    நீலநிறம் பொருந்திய மயில்,
    பந்து, கழங்கு ஆகியவற்றை அவளுக்குத் தந்து
    அவளைக் கொற்றவையாக வழிபட்டனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  20 – 35
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://www.santabanta.com/photos/goddess-durga/9103043.htm

     

    Share
  • பயணத்தில்…

    -செண்பக ஜெகதீசன்

    பாலைவனமாக நனவு,
    பூங்காவாகப் பூத்துக்குலுங்கும்          Garden_Fountain
    கனவு…

    எதிர்மறைகள்
    எப்போதும் உள்ளவைதான்…

    நனவு
    பூங்கா ஆகிட
    நம்பிக்கை நீருற்று,
    துணிவை உரமாக்கு,
    துணைக்கரங்கள் தானேவரும்!

    கனவுத் தூக்கத்தைக்
    கலைத்துவிட்டு

    நனவுப் பயணத்தில்
    நம்பிக்கை வை!

    நம்பிக்கைகள்,
    அவை
    கைவிடுவதில்லை…!

    Share
  • Human Life

    -Raa. Parthasarathy

    Happiness and Sorrow as waves on the Sea                      yacht-in-rough-sea
    We all Sailing on the above,
    It is stumbling as Yacht on the Sea,
    Good and bad never we foresee.

    Time and Tide never wait and See,
    Ups and downs in our Life of Sea,
    In the World of Instability, we expect Stability,
    We sail on the boat of faith, with Reliability.

    Share
  • காற்று வாங்கப் போனேன் பகுதி 20

    கே.ரவி

    கவிதை எழுதத் தொடங்கிய சில மாதங்களிலேயே காவியங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை என்னைப் பற்றிக் கொண்டது. முதல் முயற்சியாக, சாம்ராட் அசோகனின் மனமாற்றத்துக்கு வழிவகுத்த கலிங்கத்துப் போரை மையமாகக் கொண்டு ஒரு குறுங்காவியம் நாலைந்து நாட்களில் எழுதி முடித்தேன். கலிங்கத்துப் பரணியில் தொடங்கிய என் தமிழ்ப் பயிற்சி, அதற்குக் காலத்தால் மிகவும் முற்பட்ட அசோகனின் கலிங்கப் போரில் வளர்ந்தது பற்றி மகிழ்ந்தேன். “வீரமா ஈரமா” என்ற தலைப்பில் எழுதிய சாம்ராட் அசோகன் சரித்திரக் காவியத்தின் கைப்பிரதியை முதலில் என் ஆசான் தண்டமிழ்க் கொண்டலிடம் தந்தேன். தவறுகள் இருந்தால் திருத்திக் கொடுக்க வேண்டினேன். பல நாட்கள் ஆகியும் அவருக்கு ஏனோ அதைப் படித்துப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. “ராஜா, முதலில் இதைப் படித்துச் சரி பார்க்க குப்புசாமி வாத்தியாரிடம் கொடு, நான் பிறகு பார்க்கிறேன்,” என்று அவர் சொன்னதும் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியிலேயே இன்னொரு தமிழாசிரியராக இருந்த குப்புசாமி அவர்களிடம் அதைத் தந்தேன். மறுநாள் அவர் என்னை அழைத்து, கவிதை நாடகம் நன்றாக இருப்பதாகப் பாராட்டி விட்டு, “உன் வீடு எங்கே?” என்று கேட்டார். சென்னை, மந்தைவெளி, ராமகிருஷ்ணா மடம் சாலையில், ராணி மெய்யம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு எதிரில் என்று நான் சொன்னதும், வெகு அருகிலேயே இருக்கும் அவர் இல்லத்திற்கு மாலை 7 மணிக்கு என்னை வரச் சொன்னார். சென்றேன். தினமும் வரச் சொன்னார். இரண்டு வாரங்கள் தொடர்ந்து சென்றேன். என் கவிதை நாடகத்தின் ஒவ்வொரு பாடலையும் வரிவரியாகப் படித்து, சிறு திருத்தங்களும் செய்து, பல இடங்களில் நயம் வியந்து பாராட்டி, மிகப் பெரிய கவிஞர்களின் புகழ்மிக்க வரிகளுடன் ஒப்பு நோக்கி, இரண்டு வாரங்கள் தினமும் மாலை அவர் எனக்காகச் செலவழித்த கணங்களுக்கு என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தாலும் போதாது. அந்த நாடகத்தின் கவிதைகளை நான் அடியோடு மறந்து விட்டாலும், நான் என்றும் மறக்க முடியாதவராய் என் நெஞ்சில் குப்புசாமி வாத்தியார் இடம்பெற்று விட்டார்.

    கோழியைக் கேழி என்று எழுதிக் கேலிக்கு ஆளான நான் தமிழ் வகுப்பில் எழுதிய கட்டுரைகள் பாராட்டுப் பெற்றன. கண்ணகி பற்றிய ஒரு கட்டுரையை இப்படி முடித்திருந்தேன்: “கண்ணகியின் புகழைச் செங்குட்டுவன் வடித்த கல்லும் சொல்லும்; இளங்கோவின் சொல்லும் சொல்லும்”. அந்த வரிகளின் பக்கத்தில் என் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் எழுதியிருந்தார்:

    கல்லும் சொல்லும் சொல்லும் சொல்லும்
    என்னும் சொல்லும் என்னை வெல்லும்

    ஓராண்டுக்கு முன் என் விடைத்தாளை விட்டெறிந்த ஆசானே இப்படி எழுதியதும் எனக்கு எப்படி இருந்திருக்கும்!

    என் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன் அவர்களிடம் நான் பயின்றது சொல்லாளுமை. சொற்கள் எப்படி அடுக்கடுக்காக நெருங்கி வர வேண்டும், அதே சமயத்தில் ஒன்றிலொன்று கோக்கப்பட்டு ஊடுபாவி இருக்க வேண்டும் என்ற நுட்பத்தை அவருடைய கவிதைகளில் இருந்தே கற்றுக் கொண்டேன். அருவிபோல் பொழியும் சொல்லோட்டம் அவர் நடையின் தனிச்சிறப்பு:

    கொஞ்சுமொழி மழலையைக் கோலத் தியற்கையைக்ravi
    கோயிலாக் கொண்ட இறைவா
    அஞ்சுதலை உடையார்கள் ஆறுதலை அடைகின்ற
    அற்புதம் புரிகின்றவா
    தஞ்சமென யாங்களே பஞ்சனைய பதமலர்கள்
    பற்றினோம் பற்றற்றவா
    வஞ்சமறு நெஞ்சிலே விஞ்சுமருள் கொஞ்சவரு
    வள்ளலே வரமருளவா

    கருத்துச் செறிவும் சொல்லழகும் கைகோத்து நடக்கும் அவர் பாடல்களில்:

    பாறைக் கதவைப் பார்க்கும் விதவை
    கூறைப் புடவை கொடுவொரு தடவை

    எழுத்தெண்ணிப் பாடும் கட்டளைக் கலித்துறைக்கு அவருடைய ஒரு பாடலே கட்டளைக்கல்:

    துலங்குவெண் ணீறு துணிப்பிறைக் கோடு துணைக்கரங்கள்
    இலங்குநற் றொந்தி இறைவனென் புந்தி இருக்கையிலே
    விலங்கெனும் வாழ்வு விளங்கிடும் தாழ்வு விரைந்தழியும்
    கலங்கிடும் உள்ளம் களிப்பெனும் வெள்ளம் கலந்திடுமே

    இந்தச் சொற்கட்டுக்கோப்பே வெகுநாட்களுக்குப் பிறகு எனக்குள் இருந்து வியக்கத் தக்க கட்டளைக் கலித்துறை பாடல்களை வரவழைத்தது.

    1984-ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் சபரி மலை செல்லும் நான் எப்பொழுதும் மலையேற மிகவும் சிரமப் படுவேன். மூச்சுத்திணறித் திண்டாடுவேன். மலையில் இருந்து இறங்குவதில் எனக்கு அவ்வளவு சிரமம் நேர்ந்ததில்லை. பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை அதிக சிரமமில்லாமல் மலையில் ஏறிவிட்டதும் மகிழ்ச்சியாக, அடாடா, இவ்வளவு எளிதாக ஏறி வந்து விட்டேனே, இனி இறங்குவது இன்னும் சுலபமாக இருக்கப் போகிறது என்று மனத்துக்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டேன். ஆனால், அந்த ஆண்டு மலையில் இருந்து இறங்கும் போது, காலிரண்டும் துவள, உடல் ஒத்துழைக்க மறுக்க, முடியவில்லை ஐயப்பா என்று வாய்விட்டுக் கதறியழும் நிலை ஏனோ ஏற்பட்டது. காரணமே புரியவில்லை. எல்லாவற்றுக்கும் நமக்குக் காரணம் புரிந்து விடுகிறதா? என்ன சிகாமணி, சத்தமே காணோம்! அப்படி அழுது, தொழுது இறங்கியபின், சென்னை திரும்பும் வழியில்தான் ‘பிறவா வேட்கைப் பஞ்சகம்’ என்று ஐந்து கட்டளைக் கலித்துறைப் பாக்கள் வந்தன:

    எழச்செய்தாய் சென்னி முடிதாங்கி மாமலை ஏறிவந்து
    தொழச்செய்தாய் கால்கள் துவளத் துவள இறங்குகையில்
    அழச்செய்தாய் ஆனால் அடுத்த பிறவிக் கருங்குகையில்
    விழச்செய்தால் உன்னை விடமாட்டேன் வீர மணிகண்டனே

    விழலுக் கிரைத்தநீர் இல்லை விரதம் நுதல்விழியின்
    அழலுக் கெரிந்தவன் சாட்சி ஹரிஹரா உன்பதத்தின்
    நிழலை அடைய நெடுந்தூரம் வந்தேன் மறுபிறவிச்
    சுழலில் தவிக்க விடவேண்டாம் சோதி மணிகண்டனே

    புகலின்றி வாழ்க்கைப் புதைமணல் சிக்கிப் புலம்புகின்றேன்
    பகலை இரவாக்கும் பேரொளி யேயுந்தன் பாதமலர்
    அகலா திருக்கும் அனுபூதி வேண்டும் கருவறையில்
    புகச்செய்ய வேண்டாம் புனிதனே புண்ணிய பாலகனே

    மறைவா யிருந்தாலும் காடு மலைகள் கடந்துவந்தே
    இறைவா உனைநான் இருகண்க ளாலும் பருகிவிட்டேன்
    மறவாமல் எந்தன் மனத்துக் கினிய வரம்தருவாய்
    பிறவாமை யன்றிப் பிறிதொன்றும் வேண்டாப் பிடிவாதமே

    துறவிக்கும் உண்டு துளியச்சம் நீடு துயில்நடுவே
    மறலிக் குயிரைப் பறிகொடுக் கின்ற மரணபயம்
    பிறவிப் பிணிதீர மட்டுமே நெஞ்சைப் பிணித்துவைத்தேன்
    மறந்தும்நான் வேறு வரம்கேட்க மாட்டேன் மணிகண்டனே

    மீண்டும், 1966-க்கே போவோம். வீரமா ஈரமா நாடகத்தைத் தொடர்ந்து, நூர்ஜஹான் கவிதை நாடகம், இன்னொரு சமூகக் கவிதை நாடகம், அதாவது, முற்றிலும் சொந்தச் சரக்கு, எழுதினேன். அந்த நாடகங்களின் பிரதிகள் எதுவுமே என் வசம் இல்லை. ஓரிரு பாடல்கள் மட்டும் நினைவில் உள்ளன.

    நாட்டைக் காக்கும் பணியில் காதலன் போர்முனைக்குச் சென்றுவிடத் தனிமையில் அழுதபடிப் படுத்திருக்கும் காதலியின் நிலையைச் சொல்லும் ஒரு விருத்தம் நினைவுக்கு வருகிறது:

    நீர்த்துளிகள் நித்திலத்தின் குவியல் போலே
    நேரிழையின் கன்னத்தில் வழிய ஓசை
    சேர்த்துளிகள் செதுக்காத சிற்பம் அங்கே
    தேம்பிக்கொண் டிருந்ததுதன் மேனி யெங்கும்
    வேர்த்திருப்ப தாலவளும் முனக லோடு
    மெல்லத்தான் புரண்டுபடுத் தாள்அக் காட்சி
    தேர்த்திருப்பம் போலிருந்த(து) அந்தத் தேரின்
    தெய்வமோ போர்முனையில் இருந்த தம்மா

    இப்படி என் கவிதைப் பயணம் நடந்து கொண்டிருந்த போது, 1967-ல் என்று ஞாபகம், திரைப்படத் துறையில் என் வளர்ப்புத் தந்தைக்குப் பரிச்சயமாயிருந்த கவிஞர் தேவநாராயணன் என் வீட்டுக்கு ஒருநாள் வந்திருந்தார். என் கவிதை ஈடுபாடு பற்றிக் கேள்விப் பட்டதும் அடுத்த வாரம் தம் வீட்டில் நடைபெற இருந்த ஒரு கவியரங்கத்தில் நான் பங்குபெற்றுக் கவிதை படிக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார். மறுநாள் சென்றேன், மந்தைவெளி, செயிண்ட் மேரிஸ் சாலையில் இருந்த அவர் இல்லத்துக்கு. சிறிய கூடத்தில் சுமார் இருபத்தைந்து நபர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவர் தலைமை. அவர் அழைக்க ஒவ்வொருவராகக் கவிதை படிக்க, வந்திருந்தோர் ரசிக்க, எனக்கு எல்லாமே அதிசயமாக இருந்தது. அது பாரதி கலைக் கழகம் என்ற நிறுவனத்தின் மாதமொரு கவியரங்க நிகழ்ச்சி என்று பிறகு தெரிந்து கொண்டேன். அன்று பாரதியின் புதிய ஆத்திசூடியில் இருந்து ஒவ்வொருவருக்கும் ஒரு வரி தலைப்பாகத் தரப்பட்டிருந்தது. எனக்குத் தரப்பட்ட வரி, “சைகையில் பொருளுணர்”. என் முறை வந்தது. எழுந்து நின்று என் கவிதையைப் படித்தேன்:

    அன்றொருநாள் ஆலமரம் விரித்த நீழல்
    அமைதியுடன் அழகுமிக அமைந்த சூழல்

    கல்லால மரத்தடியில் மெளனமாக வீற்றிருந்து, சின்முத்திரை காட்டிச் சைகையில் பொருளுணர்த்திய தட்சிணாமூர்த்தி பற்றிய என் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    நான் தொடர்ந்து பாரதி கலைக் கழகத்தின் கவியரங்குகளில் பங்கேற்று நிறைய கவிதைகள் படித்தேன். பாரதி கலைக் கழகத்தின் தலைவர் பாரதி சுராஜ் மிகப் பெரிய கவிதை ரசிகர். நான் சந்தித்த மிகநல்ல மனிதர்களில் ஒருவர். அவரைப் பற்றித் தனியாக ஒரு பகுதியில் பிறகு சொல்கிறேன்.

    பல கவியரங்கங்களில் பங்கு கொண்டு பாராட்டுப் பெற்றேன். ஆனாலும், என் மனத்தில் ஏதோ நெருடல். நான் என் திறமையைக் காட்டிக் கொள்ளும் ஒரு சாதனமாகக் கவிதையைப் பயன்படுத்துவதில் மனோன்மணிக்குச் சம்மதம் இல்லை. அவள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். விரைவில் நான் தலைப்புகளுக்குப் பாடல் எழுதுவதை நிறுத்தி விட்டேன். அந்தச் சூழலில்தான் ஏற்கனவே சொன்னதுபோல் கம்பன் வந்து கதவை இடித்ததும், வாத்ஸ்யாயனன் என்னை வம்புக் கிழுத்ததும். இலக்கியம், தத்துவம், அரசியல் சித்தாந்தம்; இப்படிப் பலதுறைகளிலும் நிறைய படித்தேன். நிறைய எழுதினேன். அந்தச் சமயத்தில்தான், முன்பகுதியில் குறிப்பிட்டது போல எனக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது; இல்லை, தரிசனம் கிட்டியது. அதற்கும் தேவநாராயணனே காரணமாக இருந்தார்.

    (தொடரும்)

    Share
  • அம்மா என்றழைக்காத உயிரில்லையே…

    –கவிஞர் காவிரிமைந்தன்

    mannan song

    கண்கள் பனிக்கும்! கருவறையில் உன்னைச் சுமக்கும் நொடி முதலாக தன்னை மறக்கும்! உன்னை நினைக்கும்! வண்ணக் கனவுகள் ஆயிரம் கண்டு உன்னை வளரத்திடும் பெண்மையின் பூரணம் தாய்!  கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் எடுக்கின்ற அவதாரம் ‘தாய்’ என்பதும் மிகையில்லை!  கருணை, அன்பு, பாசம், நேசம் என்று எத்தனையோ சொற்கள் தாயிடம்தானே குடிகொண்டுள்ளன.

    “அம்மா” என்கிற ஆதாரச் சொல்லிலே அன்பின் அடையாளங்கள்!  ‘அம்மா’ என்று அழைக்கும்போதே.. நமக்குள் எத்தனை சுகஸ்வரங்கள்?  பூமியைக்கூட தாய் என்றுதானே நாமும் அழைக்கிறோம்!  அறிவியல் ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகளைத் தந்து இந்த பூமியை சொர்க்கபுரியாக்கலாம்!  ஆனால் அவையெல்லாம் தாயின் மடியில் தலைவைத்து படுக்கும்போது கிடைக்கின்ற நிம்மதி சொர்க்கத்தைவிட மேலானதல்லவா?
    VaaliilayarajaKJY
    கவிஞர் வாலியின் கருத்து முத்துக்கள் தாயைப் பற்றி ‘மன்னன்’ என்கிற திரைப்படத்தில் வெளியான பாடலில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் குரலில் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை பண்டரிபாய் நடிப்பில்..

    http://www.youtube.com/watch?v=9CKTKjIYXLw

    காணொளி: http://www.youtube.com/watch?v=9CKTKjIYXLw

    படம் : மன்னன்
    இசை: இளையராஜா
    பாடல்: வாலி
    குரல்: கே.ஜே.யேசுதாஸ்
    நடிப்பு: ரஜினிகாந்த், பண்டரிபாய்

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே
    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே
    நேரில் நின்று பேசும் தெய்வம்
    பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே

    அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
    திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
    அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
    புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
    பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
    அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
    அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
    மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
    அதை நீயே தருவாயே

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே

    பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
    அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
    விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
    கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
    ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
    நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
    ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
    உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
    உன்னாலே பிறந்தேனே

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே
    நேரில் நின்று பேசும் தெய்வம்
    பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே
    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

    அட்சர வாசகங்கள் வார்த்தைக் கோலங்களாய் விழ.. அந்த அர்த்தப் புஷ்பங்களை கானமழைபொழியும் யேசுதாஸ் குரல் மெருகேற்றித்தர.. கண்களைப் பனிக்க வைக்கும் அரிய பாடலாய் காதில் விழுகிறது!

    இது குறித்து கவிஞர் வாலி அவர்களைச் சந்தித்து நெஞ்சாரப் பாராட்டிய நாளில்.. திரைப்படத்தில் இடம்பெறும்போது ஒருபாடல் எப்படி மக்களைச் சென்றடைகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

    இதைவிட 72 முறை ‘தாய்’ என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு தனிக் கவிதையில் தான் படைத்த தாய் கவிதைச் சரத்தை மடமடவென்று  உச்சரித்தார்!  (குமுதம் இதழில் வெளிவந்ததாக அறிகிறேன்)  மண்ணிலென்ன தோன்றக்கூடும் மழையில்லாதபோது.. மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது என்கிற கவிஞர் வாலியின் வரிகளே மீண்டும் நெஞ்சில்!!

    இன்னுமொரு செய்தி.. திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் திருக்கோயிலில் பளிங்குக்கல்லில் பதிக்கப்பட்டிருக்கிறது இந்தப் பாடல்..அம்மா என்றழைக்காத உயிரில்லையே..

     

     

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (141)

    கிரேசி மோகன்

    Trivikrama. Thiruvona Aashamsagal.
    Trivikrama. Thiruvona Aashamsagal.

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–
    ஓணத்தின் போது எழுதியது….
    ————————————————

     

    Vamana. Happy Onam.
    Vamana. Happy Onam.

     

    Krishna vanquishes Kuvalayapeedam. Chinese brush, watercolour.
    Krishna vanquishes Kuvalayapeedam. Chinese brush, watercolour.

    பொன்னாழி வெண்மைப், புரிசங்கு கையிருக்க,
    கண்ணா யிரச்சேடன் கட்டிலில், -பெண்ணாழி,
    மார்பில் பதித்து, மலரும்கண் மாலவனின்
    சார்பாக கண்ணன் ஜனிப்பு….(364)

    சேணம் பிடித்தைவர், சேனை ஜெயித்திட,
    வானத்து வைகுண்டம் விட்டகன்ற, -ஓணத்தன்,
    வாத புரீசன், வடமதுரா மன்னவன்,
    கீதகோ விந்தந்தாள் காப்பு….(365)

    களித்தெமுனா, தீரத்தில், கோபியர் சூழ,
    குளித்தவர் காமத்தைக் கொன்று, -அளித்தனன்,
    ஞானத்தை; அந்தநந்த, நீலத்தை நாம்வணங்கி,
    ஓணத்தில் கொள்வோம் உவப்பு….(366)

    வானத்தை, மண்ணை, வரமாய் பலிதந்த,
    தானத்தை அன்றளந்த தெய்வத்தை, -ஓணத்து,
    வாமனக் குட்டனை, வாத புரீசனை,
    நீமனக் கட்டில் நிறுத்து….(367)

    ஆச்சு அறுபது, ஆண்டு களுருண்டு,
    போச்சாழி வண்ணா பரந்தாமா, -தாச்சு,
    உறங்கி எழுந்துண்டு, ஊர்கதை பேசும்,
    குரங்கிதை மாருதியாய்க் கொள்….(368)

    எழுத்தில் பிழையிருந்தும், ஏற்றுக்கொள் கண்ணா,
    வழுத்த வழியறியேன் வேறு, -பழுத்த,
    கவியாக்கு என்னை, குறையொன்றும் இல்லா,
    புவிவாழ்வை கோவிந்தா போடு….(369)

    —————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி

    http://kamadenu.blogspot.in/2013_09_01_archive.html

     

    Share
  • சரித்திரத்தில் பதிந்த முத்தே

     
    எம். ஜெயராமசர்மா .. [மெல்பேண் ]

     

    vairamuthu-award

     

     

    சரித்திரத்தில் பதிந்த முத்தே
    சங்கத்தமிழ் கண்ட முத்தே
    பொறுப்புடனே கவிதை சொல்லும்
    புகழ்மிக்க வைர முத்தேEndhiranSpecial31

    கறுத்தநிற வைர முத்தே
    கவித்துவத்தின் உயர்ந்த முத்தே
    செருக்குடனே கவிதை சொல்லும்
    சிறந்த நல்ல தமிழின்முத்தே

    கண்ணதாசன் வாலி ஒடு
    கவிதை நின்று போச்சுஎன
    கவலை கொண்ட மனத்தையெலாம்
    களிப்புக் கொள்ள வைத்தாயே

    எண்ண எண்ண இனிப்பதற்கு
    ஏற்றவகையில் கவிதை தந்து
    வர்ணஜாலம் செய்து நிற்கும்
    வைரமுத்து வாழ்க வாழ்க

    மீசை கொண்ட பாரதியாய்
    மிடுக்கொண்ட வைர முத்து
    ஆசைகொண்டு தமிழை ஆண்டு
    அனைவரையும் அணைத்து விட்டார்

    வெள்ளுடையில் வந்து நிற்பாய்
    தெள்ளுதமிழ் தந்து நிற்பாய்
    துள்ளுநடை ஓடி வரும்
    சுவையுடனே கவிதை வரும்

    அள்ள அள்ளக் குறையாத
    அழகுதமிழ் பாய்ந் தோடும்
    அனைவருமே நீந்தி அதில்
    ஆனந்தம் பெற்று நிற்போம்

    தேசிய விருதை வென்றாய்
    திசையெலாம் பயணம் செய்தாய்
    காவியம் இயற்றி நின்றாய்
    கவிதைகள் பலவும் தந்தாய்

    பாவிலே பயணம் செய்தாய்
    பட்டங்கள் பலவும் பெற்றாய்
    ஓவியக் கவிதை தந்த
    உயர்முத்தே வாழ்க வாழ்க

    படித்த பின் புலம்
    பாட்டில் தெரியும்
    எடுத்த பொருளும்
    எளிதில் புரியும்
    தடித்த குரலால்
    தமிழைத் தருவாய்
    வெடித்த சிரிப்பு
    விரிந்தே பரவும்

    அடுக்கு மொழியும்
    அள்ளித் தருவாய்
    மிடுக்கு நடையும்
    விட்டு விலகாய்
    தொடுத்த கவிதை
    சுவையாய் தருவாய்
    தெறித்துச் சிதறும்
    தீந்தமிழ் அங்கே

    கல்வியில் பட்டம் பெற்று
    கவிதையால் பட்டம் வென்று
    நல்லதோர் நிலையில் நிற்கும்
    நற்றமிழ் கவிஞ்ஞரே நீர்
    வல்லமை பெற்று நாளும்
    வையத்தில் வாழ்க என்று
    நல்லதாய் வாழ்த்து கின்றேன்
    நானும் ஓர் ரசிகனாவேன்

    Share
  • பிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரண விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.

    jay

     http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gsqRGM1JirU

    http://www.space.com/25288-supernova-survivor-massive-star-weathers-mega-blast-video.html

    +++++++++++++++

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    காலவெளிக் கருங்கடலில்
    கோல மிடும் கட்டுமரத் தீவுகள்
    காலக்ஸி ஒளிமந்தை !
    தேயும் பூத விண்மீன் ஈர்ப்புத்  திணிவால்
    மாய மாய் வெடித்து
    வாயுவும், தூசியும் சிதறிப்
    புதிய அண்டம் பிறக்கும்,  எழுபிறப்பு
    மனிதச் சுழற்சி போல் !
    பிறப்பும், இறப்பும் ஊழ்விதி
    பிரபஞ்சத் தோற்றமும் அப்படியே !
    அகில வெளி அரங்கிலே
    முகில் வாயுவில் மிதக்கும் இரு
    காலக்ஸிகள் மோதினால்
    கைச்சண்டை புரியாமல்
    கைகுலுக்கிப்
    பின்னிக் கொள்ளும் !
    வாயு மூட்டங்கள்
    வாரித் தழுவி
    சேய் விண்மீன் உதிக்கும் !
    இட்ட எச்சத்தில்
    புதிய கோள்கள் உண்டாகும் !
    மரணச் சூரியன் வெடித்து
    தூசி வெளியேறி
    பிறக்கும் புதிய கோள்கள்  !
    காலக்ஸி ஒளிமந்தை
    தீவாய் மிதந்து
    கருங்கடலில் நகர்வது
    கருஞ்சக்தியால் !

    ++++++++++++

     

     

    அகிலவெளித் தூசிகளே பிரபஞ்சத் தோற்றத்துக்கு மூல காரணி :

    2014 ஜூலை 9 ஆம் தேதி வெளிவந்த “இயற்கை” [Nature] விஞ்ஞான இதழ் ஓர் மர்மப் புதிரை விடுவித்தது.  ஒரு சூப்பர்நோவா [Supernova : மரண விண்மீன்] வெடித்த சில வாரங்களுக்குள்  அகிலவெளித் தூசியைப் [Cosmic Dust] பேரளவில் வெளியேற்றுகிறது.  அவ்விதம் வெளியாவது கூடியவரை 2.5 ஆண்டுகள் நீடிக்கலாம்.   வெடிக்கும் விண்மீன் பெரு வடிவத் தூசிப் பரலாகத் [Oversize Dust Grains]  தோன்றுகின்றன.  வெடிப்பில் பரல்கள் வெளியேறுவது முதலில்  மிக மெதுவாகவும், பிறகு வெகு விரைவாகவும் நேர்கிறது. இவ்விதம் நிகழ்ந்த ஒரு  சூப்பர் நோவாவை [SN : 2010JL]  முதலில் 2010 இல் விண்ணோக்கி மூலம் ஒரு காலக்ஸி அருகில் நோக்கியவர் டென்மார்க் பல்கலைக் கழக வானியல் விஞ்ஞானி கிரிஸ்டா கால் [Christa Gal].  அவர் பயன்படுத்திய விண்ணோக்கி சில்லியில் உள்ள பூதப் பெரும் தொலைநோக்கி [Very Large Telescope in Cerro Paranal, Chile].  மரிக்கும் பூத விண்மீன்களில் மட்டுமே இப்படி வெடிப்பு நிகழ்கிறது.  நமது சூரியன் போன்ற சிறிய விண்மீன்களில் வெடிப்பு நேர்வதில்லை.  பூத விண்மீன்கள் மடிந்து வெடிக்கும் போது அவற்றிலிருந்து, இரும்பு, சோடியம், கால்சியம் போன்ற தனிம அட்டவணைக் கன மூலகங்கள் [Heavy Elements in the Periodic Tables] எல்லாம் உருவாகின்றன.

    விண்மீன்கள் தோன்றுவதற்கும், அண்டக் கோள்கள் உண்டாவதற்கும் முக்கியத் தேவை,  எவை என்றால், மின்னேறிய அகிலவெளித் தூசிகள் [Ionized Cosmic Dust] என்பதே அவற்றுக்குப் பதில்.   மேலும் அந்தத் தூசிகள்தான் உயிரினங்கள் உதிப்பதற்கும் கருவிப் பொருளாக அமைகின்றன.   ஆயினும், அந்த தூசிகளின் ஆதிமூலச் சுரப்பிகள் இதுவரை எவையெனத் தெரியாமல் போயிற்று. இப்போது பல வானியல் விஞ்ஞானிகள் தொலைநோக்கி வழியாகப் பார்த்து, மூலச் சுரப்பியைத் தெரிந்து கொண்டனர்.  சிறிய காலத்தில் மரிக்கப் போகும் பூதச் சூரியன்  வெடித்துச் சிதறும் வாயுவும், தூசியும் பிரபஞ்ச அண்டக் கோள்களின் மூலச் செங்கலாய்  உருவெடுத்து மீண்டும்  அண்டக் கோள்களைப் படைக்கும் திறமடைகின்றன.   மனிதப் பிறப்பு இறப்புச் சுழற்சியைப் போல் பிரபஞ்ச விண்மீன்களும் முதிர்ச்சி அடைந்து, மூப்பு எய்தி மரித்துப் பிறக்கின்றன.

     

    Life cycle of star   “இளம்பிராய வளர்ச்சியில் காலக்ஸிகள் வாயு முகிலை விண்மீனாய் மாற்றும் இயக்கம் குன்றிய திறனாக்கத்தில் (Less Efficient Process) நிகழ்கிறது.  ஆரம்ப காலத்தில் காலக்ஸிகளுக்கு அகிலத் தூசி (Cosmic Dust) உருவாக்கப் போதிய காலப் பொழுது இருப்பதில்லை.  அவ்விதம் தேவையான வாயு முகிலின்மையால் விண்மீன் வளர்ப்பரங்குகள் (Stellar Nurseries) உண்டாவதில் தாமதமாகிறது.  வாயு முகில் பரவலில் தூசி படிவுக்கும் விண்மீன் வடிவு ஆக்கத்துக்கும் ஓர் எளிய இணைப்பாடு உள்ளது.  நாங்கள் அந்த இணைப்பாட்டை முதல் முறையாக காலக்ஸி உருவாக்கக் கணனிப் போலி இயக்கத்தில் (Computer Simulations for Galaxy Formation) உண்டாக்க முயல்கிறோம்.” ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago) “ஒளிமந்தையில் நிரம்பியுள்ள ஊடகமான வாயு முகிலும், அகிலத் தூசியும் (Gas & Dust, Interstellar Medium – ISM) முகிலிலுள்ள கொந்தளிப்பால் பூத மூலக்கூறாகச் சேர்ந்து திணிவு நிலை மிகை யாகிறது. (Overdensity in Giant Molecular Cloud). குழந்தை விண்மீன்கள் தம்மிடம் உள்ள கதிர்வீச்சால் தம்மைச் சுற்றி இருக்கும் வாயு முகிலைப் புயல் கணைகளால் சூடேற்றுகின்றன.  மேலும் சுற்றியுள்ள வாயு முகிலை அயனிகளாய் ஆக்குகின்றன (Ionize the Gas Clouds) ! மார்க் குரும்கோல்ஸ் (கலிஃபோர்னியா பல்கலைக் கழகம்) “12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய மிகப் பளுவுள்ள ஒளிமயமான காலக்ஸிகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம்.  அப்போது பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் என்று யூகிக்கிறோம்.  அந்த முடிவுகள் காலக்ஸி உருவாகி வளர்ந்த கணித மாடல் முன்னறிவிப்புகளுக்கு உடன்பாடாய் இல்லாமல் முரண்படுகின்றன.” டானிலோ மார்செஸ்னி (Tufts University Astrophysicist) “நமது பால்வீதி காலாக்ஸி பக்கத்தில் நெருங்கும் ஆன்ரோமேடா காலாக்ஸியுடன் ஐந்து பில்லியன் ஆண்டுகள் கடந்து மோதப் போகிறது !  (எதிர்பார்க்கப்படும்) அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிக்குப் பிறகு வான மண்டலம் இரவில் எப்படித் தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது !” ஆப்ரஹாம் லோப் வானியல் பேராசிரியர், ஹார்வேர்டு பல்கலைக் கழகம் (Abraham Loeb) Life cycle of star -2   விண்மீன்களின் மூர்க்கத்தனமான வாயுத் தூசி இயக்க விண்வெளியில் பெரும்பானமை

    ​ ​

    யான காலாக்ஸிகள் மோதிக் கொந்தளித்து, ஒற்றை வடிவத்தில் முழுவதும் சேர்ந்து கொள்கின்றன !  பெரிய காலாக்ஸி சிறிய காலாக்ஸியுடன் பின்னிக் கொள்வது பொதுவாக விண்வெளியில் நேரும் ஒரு சாதாரண நிகழ்ச்சியே !  டேனியல் கிறிஸ்ட்லைன் (Daniel Christlein, Astronomer Yale University) “காலக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப் பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது.  முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன !  வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.” (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies). டாக்டர் ஆன்ரூ பங்கர் (Dr. Andrew Bunker Anglo-Australian Observatory)   Fig 1 Galactic Fountains in Milkyway “காலக்ஸிகள் எப்படித் தோன்றின என்பது வானியல் பௌதிகத்திலே கேட்கப்படும் மிகப் பெரிய ஒரு கேள்வி.  அந்த வினாவுக்கு நெருங்கிய பதில் கிடைக்க புதிய தொலைநோக்கி அனுப்பிய படங்களும், கணனிப் போலி இயக்கங்களும் (Computer Simulations) பயன்படுகின்றன.” ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago & Physicist Fermi National Accelerator Laboratory) “பூர்வீக விண்மீன்களைப் பற்றி அறிவது பேபி பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்த்து

    ​ ​

    விட வானியல் விஞ்ஞானிகளுக்குப் பேருதவி செய்யும்.  முதன்முதலில் உதித்த விண்மீன்களின் பிறப்பை விட அவற்றின் இறப்பே விஞ்ஞானிகளுக்கு முக்கிய நிகழ்ச்சியாகும்.  பிரபஞ்சத்தின் பூர்வ காலப் பிண்டத்தில் உருவான முதற்பிறவி விண்மீன்கள் பெரும்பான்மையாக ஹைடிரஜன், ஹீலிய வாயுக்களாலும், சிறிதளவு லிதிய வாயுவாலும் உண்டானவை.  முதலில் தோன்றியவை பேரளவுப் பளுவில் இருந்ததால், அவை விரைவாக வாழ்ந்து முடிந்து, அற்ப ஆயுட் காலத்தில் பிறந்த 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் இறந்து போயின !”  ரே ஜெயவர்தனா வானியல் பேராசிரியர், டொராண்டோ பல்கலைக் கழகம், கனடா   ஹப்பிள் & கெக் தொலைநோக்கிகள் மூலமாக இப்போது ஒளிச் செந்நிறக் கடப்பு : 7 இல் (Redshift Light -7) குறிப்பிடும் (பிரபஞ்சம் தோன்றி ஒரு மில்லியன் வயதாகும்) பூர்வ காலாக்ஸிகளைப் பற்றி அறிய முடிகிறது ! ஈர்ப்பாற்றல் குவியாடி (Gravitational Lensing) நோக்கில் காணும் மங்கலான பூர்வ ஒளி மந்தைகள் பால்வீதியை (Milkyway Galaxy) விட 100 மடங்கு சிறியவை ! ரிச்சர்டு எல்லிஸ் வானியல் பேராசிரியர் (California Institute of Technology) [March 2008] “பூமிக்கு அப்பால் 11 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் இந்த (பூர்வாங்க) 18 நீல வண்ணச் சிறிய வடிவமைப்புகள் (Dim Blue Small Objects) தற்கால காலாக்ஸிகள் சிலவற்றின் வித்துக்களாய் இருக்கலாம் ! ஒவ்வோர் உண்டையிலும் (Clump) பல பில்லியன் விண்மீன்கள் உள்ளன.  இம்மாதிரியான பல்வேறு உண்டைகள் ஒன்றுடன் ஒன்று மோதிச் சேர்ந்து வெகு காலமாக ஒளிமயப் பூத காலாக்ஸிகளாக உருவாகி வந்தவை என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.” ராஜர் வின்ட்ஹார்ஸ்ட் & ஸாமுவெல் பாஸ்காரெல் (அரிஸோனா மாநிலப் பல்கலைக் கழகம்) “விஞ்ஞானிகளின் முக்கிய வினா: ‘பூர்வாங்க விண்மீன்களின் சந்ததிகள் இப்போது எங்கே உள்ளன ? என்பதுவே.  அதற்குப் பதில், கருமைப் பிண்டம் சூடாக இருந்தால் பூர்வாங்க விண்மீன்கள் சில நமது பால்வீதி காலாக்ஸியில் திரிந்து கொண்டிருக்கும் !. . . . எங்களுடைய ஆராய்ச்சி விளைவுகள் பூர்வாங்க விண்மீன்களை அறிவதன் மூலம் கருமைப் பிண்டத்தின் இயற்கைப் பண்பாடைக் கற்றுக் கொள்ள முடியும்.  நமது பால்வீதி போல் மையத்தில் இருக்கும் பூதக் கருந்துளைகளைப் பற்றி அறிய அறிவிப்புச் சின்னத்தைக் (Tell-Tale Sign) காண முடியும்.” டாக்டர் டாம் தியூன்ஸ் (Dr. Tom Theuns, Researcher, Durham University U.K.) “வானியல் விஞ்ஞானம் ஒவ்வொருவர் ஆத்மாவையும் விண்ணை நோக்கக் கட்டாயப் படுத்துகிறது.  மேலும் நம்மை ஓர் உலகிலிருந்து மற்றோர் உலகிற்கும் அது வழிநடத்திச் செல்கிறது.” கிரேக்க மேதை பிளாடோ (கி.மு. 428-348)   பூதக் கணனிப் போலி இயக்கத்தில் காலக்ஸி தோற்ற ஆய்வுகள் நாசாவின் ஸ்பிட்ஸர் தொலைநோக்கியைப் பயன்படுத்தி விண் வெளியில் வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு மகத்தான வெடிப்பில் உருவாகும் விண்மீனைக் கண்டுள்ளார்.  அதிலிருந்து வெளிவரும் உட்புறச் சிவப்பொளி (Infrared Light) இரண்டு சுருள் காலக்ஸிகள் மோதும் போது உண்டாகும் பேரொளி போல் ஒளிர்ந்தது !  கண்ணுக்கு ஏறக்குறையத் தெரியாதபடி விண்மீன்கள் அகிலத் தூசி படர்ந்து மங்கலாக மற்ற ஒளியலை நீளங்களில் தென்பட்டன !  இணையும் தாய் காலக்ஸிகளின் மையத்துக்கு அப்பால் நிகழும் இது போன்ற ஒளிமயமான அதிசய விண்மீன் வெடிப்புக் (Starburst) காட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை.  அந்தப் பேரொளி மயம் பிரபஞ்சத்தில் இதுவரைக் கண்ட ஒளித்திரட்சி அளவை விடப் பத்து மடங்கு மிகை யானது ! “இந்தக் கண்டுபிடிப்பு இணையும் காலக்ஸிகள் தம் மையத்துக்கு அப்பால் பேரளவு விண்மீன் வெடிப்புக் காட்சியைக் காட்டும் என்பதை நிரூபிக்கிறது,” என்று காலிஃபோர்னியா பொறிநுணுக்கக் கூடத்தைச் (C.I.T) சேர்ந்த ஜப்பானிய வானியல் விஞ்ஞானி ஒருவர் கூறுகிறார். பிரபஞ்சத்தின் பூதநிறையுள்ள காலக்ஸிகள் தற்போது விஞ்ஞானக் கணனி மாடல்கள் முன்னறித்தது போலின்றிப் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே உருவாக்கப் பட்டன என்று இப்போது வானியல் இதழ் (Astrophysical Journal) ஒன்று அறிவிக்கிறது. “12 பில்லியன் ஆண்டு களுக்கு முன்னே தோன்றிய மிகப் பளுவுள்ள ஒளிமயமான காலக்ஸிகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம்.  அப்போது பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது சுமார் 1.5 பில்லியன் ஆண்டுகள் என்று யூகிக்கிறோம்.  அந்த முடிவுகள் காலக்ஸி உருவாகி வளர்ந்த கணித மாடல் முன்னறிவிப்பு களுக்கு உடன்பாடாய் இல்லாமல் முரண்படுகின்றன,” என்று வானியல் கட்டுரை ஆசிரியர் டானிலோ மார்செஸ்னி (Tufts University Astrophysicist) கூறுகிறார்.  புதிதாகக் கண்ட காலக்ஸிகள் நமது பால்வீதி ஒளிமந்தையை விட 5 அல்லது 10 மடங்கு பெருநிறை கொண்டவை.  பிள்ளைப் பிரபஞ்சத்தின் வயது 1.5 அல்லது 2 பில்லியன் ஆண்டுகளாக இருந்த போது அவை தோன்றியவ. அதாவது அவற்றின் “செந்நிறக் கடப்பு” மூன்றுக்கும் நான்குக்கும் (Redshift 3 = < 4) இடைப்பட்டது.  ஒளியலையின் செந்நிறக் கடப்பு இயற்காட்சி (Phenomenon) நீட்சியாகி நீண்ட ஒளிப்பட்டை அலை வரிசையில் (Red End of the Spectrum) நகர்வதைக் குறிப்பிடுவது.   பூதக்கணனிப் போலி இயக்கத்தில் (Supercomputer Simulation) பால்வீதி-ஆன்ரோமேடா மோதலை இட்டுப் பார்த்த பல ஊகிப்பு நிகழ்ச்சிகளில் ஓர் எதிர்பார்ப்பு மோதல் காட்சி (Possible Collision Scenario) இது : அந்தக் காட்சி அரங்கில் ஒவ்வொரு சுருள் காலக்ஸியும் விண்மீன்கள் நிரம்பிய தட்டாக வைத்துச் சுற்றிலும் கோள வடிவுக் கூண்டில் கரும்பிண்டம் உள்ளதாக (Disk of Stars Surrounded by a Spherical Dark Matter Halo) எடுத்துக் கொள்ளப்பட்டது.  அந்தப் போலி இயக்கத்தில் 10 கோடிக்கும் மேற்பட்ட போலித் துகள்கள் (Virtual Particles) இடம் பெற்றன.  பால்வீதி காலக்ஸி கீழிருந்து மேலே எழுந்தது !  ஆன்ரோமேடா சாய்வாக மேலிருந்து கீழ்நோக்கி நெருங்கியது.  காணப்படும் தளத்தின் அகலம் : ஒரு மில்லியன் ஒளியாண்டு தூரம்.  நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலம் : ஒரு பில்லியன் ஆண்டுகள்.  மோதலின் கொந்தளிப்பில் ஈர்ப்பு விசைகளும், அலையடிப்புகளும் பூமியின் கடல் கொந்தளைப்பு போல் சிக்கலான விளைவுகளை உண்டாக்கி காலக்ஸியை மாற்றி அமைத்தன ! ஒவ்வொரு காலாக்ஸி விண்மீன்களின் ஈர்ப்பு விசைகளும், கரும்பிண்டமும் பின்னி, ஊடுருவி, பெயர்த்து, திரித்து இறுதியில் ஒரு புதிய நீள்வட்ட காலக்ஸி படைக்கப் பட்டது.     அகிலத் தூசியும் வாயு முகிலும் விண்மீன் வடிவாக்கச் செங்கல்கள் ! விண்வெளியை ஆராயும் போது ‘அகிலத் தூசி’ (Cosmic Dust) அண்ட கோடிகளை மங்கலாக்கி மறைக்கிறது என்று விஞ்ஞானிகள் மன உலைச்சல் அடைகிறார். ஆனால் அகிலத் தூசி இல்லையேல் விண்மீன்கள் இல்லாத பிரபஞ்சத்தையே நாம் காண முடியும்.  விண்மீன்கள் உருவாவதற்குத் தேவையான முக்கிய உட்கூறு (Ingredient) அகிலத் தூசிதான் !  அத்துடன் பூர்வமாய்ப் பரவிய வாயு முகில் (Primordial Diffuse Gas Clouds) ஒன்று கூடிக் காலக்ஸிகளாய்ச் சேர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  “காலக்ஸிகள் எப்படித் தோன்றின என்பது வானியல் பௌதிகத்திலே கேட்கப்படும் மிகப் பெரிய ஒரு கேள்வி.  அந்த வினாவுக்கு நெருங்கிய பதில் கிடைக்க புதிய தொலைநோக்கி அனுப்பிய படங்களும், கணனிப் போலி இயக்கங்களும் (Computer Simulations) பயன்படுகின்றன என்று ஆன்ரே கிரவ்ஸ்டாவ் (Associate Professor of Astrophysics, University of Chicago & Physicist Fermi National Accelerator Laboratory) கூறுகிறார்.  2010 ஜூன் 3 ஆம் தேதி ‘இயற்கை’ (Nature) விஞ்ஞான இதழில் இக்கருத்தை வானியல் விஞ்ஞானி கென்னிக்கட் (Kennicutt, Director of University of Cambridge’s Institute of Astronomy) என்பவரும் குறிப்பிட்டிருக்கிறார்.     விண்மீன் உருவாக்கப்படும் நியதி (Star Formation Law) விஞ்ஞானி கென்னிகட் வெளியிட்ட விண்மீன் உருவாக்க விதி இதுதான் : காலக்ஸிகளின் ஒரு குறிப்பிட்ட பரப்பில் உள்ள வாயு முகில் பரிமாணத்துக்கு ஏற்ப அதே பரப்பளவில் உருவாகும் விண்மீன்கள் எண்ணிக்கையைப் பொருத்தது (Kennicutt Star-Formation relates the amount of gas clouds in galaxies in a given area to the rate at which it turns into stars over the sama area).  இந்தப் புதிய விதி பிரபஞ்சம் தோன்றிய பிறகு முதலிரண்டு பில்லியன் ஆண்டுகளில் உருவான காலக்ஸிகளுக்கு ஒவ்வாத முறையில் உள்ளது என்று இரண்டு விஞ்ஞானிகள் (Arthur Wolfe, University of California & Hsiao-Wen Chen, University of Chicago) கூறுகிறார். காரணம் பிள்ளைப் பிரபஞ்சத்தில் வாயு முகில் மாற்றமாகி ஆரம்ப கால விண்மீன்கள் உருவாக்கத் திறமை குன்றிப் போய் இருந்தது என்று கிரவ்ஸ்டாவ் அறிவிக்கிறார். விண்மீன்கள் வளர்ச்சிப்பாடு (Stellar Evolution) அகிலத் தூசி பெருக்கத் துக்கு வழி வகுத்து ஹீலியத்தை விடக் கன மூலகங்களான கார்பன், ஆக்ஸிஜன், இரும்பு போன்றவை உற்பத்தியாகின்றன.  விந்தையாக அகிலத் தூசியில் முக்கியமாக அந்த மூன்று மூலகங்களே பெருமளவில் காணப் படுகின்றன.  அகிலவெளி விண்மீன் ஆக்கும் வாயு முகில் பேரளவில் திரண்டு திணிவு மிகையாகும் போது விண்மீன் உருவாகும் இயக்கம் ஆரம்பமாகிறது.  குளிர்ந்த வாயு முகில் உள்ள ஒரு சில அரங்குகளில் ஹைடிரஜன் ஹீலியம் ஆகிய அணுக்கள் இணைய ஆரம்பமாகி மூலக்கூறுகள் உண்டாகின்றன.  இரண்டு ஹைடிரஜன் அணுக்கள் சேர்ந்து ஒரு ஹைடிரஜன் மூலக்கூறு உண்டாகிறது. அப்படி உருவான ஹைடிரஜன் மூலக்கூறுகள் பேரளவு நிறையுள்ள இளம் விண்மீன்கள் வெளியேற்றும் தீவிரப் புறவூதா ஒளியில் எளிதில் முறிந்து அழியக் கூடியவை !     பால்வீதியில் சூப்பர்நோவா தூண்டும் காலக்ஸி வாயு ஊற்றுகள் ஆப்பம் போன்ற காலக்ஸி தட்டு வெப்பம் அகிலவெளி விண்மீன் ஊடகத்தைச் (Interstellar Medium) சூடாக்கி எழுப்பும் சூப்பர்நோவா வெடிப்புகள் (Supernova Explosions) நமது பால்வீதியில் காணப்படு வதைச் சமீபத்தில் ஈசாவின் நியூட்டான் விண்ணுளவி (ESA’s XMM Newton Space Probe) நோக்கி இந்த சூப்பர்நோவா வெடிப்பு வெப்ப வாயு ஊற்றுக்களை நமது பால்வீதியில் படமெடுத்திருக்கிறது.  தட்டுக்கு மேலும் கீழும் செங்குத்தாய் வெளியேறும் வாயு ஊற்றுகள் ஒருசில கிலோபார்செக் (kiloparsec kpc) (A unit used for measuring Large Astronomical Distances. 1 kpc = 1,000 parsecs = 3,259 light-years) உயரத்தில் எழுகின்றன.  அதனால் கதிர்வீச்சு உண்டாகிக் குளிர் முகிலாகி மீண்டும் தட்டிலே விழுகின்றன.  அதாவது பால்வீதி சூப்பர்நோவா வெடிப்புகளால் காலக்ஸி தட்டில் வாயு முகில் அகிலவெளி விண்மீன்களின் படைப்புக்கு உதவுகிறது என்பது தெரிகிறது.  அந்த வாயு முகில் தணிந்த திணிவு நிலையிலும் (Low Density) ஒருசில மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் எக்ஸ்ரே கதிர்களை வெளியாக்கிகிறது.   பூர்வீகக் காலக்ஸிகள் பிரபஞ்சத்தில் உருவாதல் பேரளவு ஹைடிரன் வாயு ஈர்ப்புச் சக்தியால் உருண்டு திரண்டு அடர்த்தி மிகுந்து விண்மீன்கள் ஒன்று வளரும் அல்லது கலைந்து போய்விடும் !  அவை பல்வேறு வடிவுகளிலும், பரிமாணத்திலும் உருவாகின்றன.  முதலில் சிதைந்த விண்மீன் சிறியதாய்த் திணிவு மிகுந்து வடிவு பெறும் !  பேரளவில் திரண்டவை மெதுவாக உருவாகிப் பிறகு சிதைந்து சிதறுகின்றன !  பிரபஞ்ச விரிவாக்கத்தின் ஆரம்ப காலங்களில் உண்டை களாகத் திரண்டு விடுவித்துக் கொண்டவை பெரும்பான்மையாக கரும்பிண்டமும், நடுத்தன்மை ஹைடிரஜனும், (Dark Matter & Neutral Hydrogen) ஓரளவு ஹீலிய வாயுவாகவும் கருதப்படுகிறது.  இந்த உண்டை (Object) தனது ஈர்ப்புச் சக்தியால் சிதைய ஆரம்பிக்குக் போது,  அது “பூர்வீகக் காலாக்ஸி” (Protogalaxy) என்று குறிப்பிடப் படுகிறது.  முதன்முதல் திரணட பூர்வாங்க காலாக்ஸிகள் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிச் சிதைந்து போயின !

    கருமைப் பிண்டம், சாதாரணப் பிண்டம் (Dark Matter & Ordinary Matter in the form of Hydrogen & Helium Gas) இரண்டும் இந்த சமயத்தில் பிரிகின்றன !  வாயுக்கள் மோதி வெப்பத்தை இழக்கின்றன. வாயுக்களில் உள்ள அணுக்கள் மோதி வெப்பம் உண்டாக்கி, உட்சிவப்பு ஒளிக்கதிராக (Radiate as Infrared Light) வீசுகின்றன !  விண்மீன்கள் உதிக்காவிட்டாலும் பூர்வாங்க காலாக்ஸிகள் உட்சிவப்பு ஒளிக்கதிர் வீசித் தம்மைக் காட்டிக் கொள்கின்றன !  ஆனால் அவை விண்வெளியில் வெகு தூரத்தில் (பல ஒளியாண்டுகள் தூரம்) மிக மிக மங்கலாகத் தெரிவதால், தொலைநோக்கிகள் மூலம் காண்பதுவும் சிரமமானது ! பேபி பிரபஞ்சத்தில் நேர்ந்த காலாக்ஸிகளின் மோதல்கள் ! பிரபஞ்சத்தில் நேரும் காலாக்ஸி மோதல்கள் பலவற்றைக் கண்கவரும் வண்ணப் படங்களில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது !  அந்த ஹப்பிள் படத்தொகுப்பில் (Hubble Atlas) சில காலாக்ஸிகள் மோதுகின்றன !   சில காலாக்ஸிகள் பங்கெடுத்துப் பேரளவில் பின்னிச் சேர்ந்து கொள்கின்றன !  காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது.  முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன !  வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.” (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies). காலாக்ஸிகள் பின்னிச் சேர்ந்து கொள்ளும் போது விண்மீன்கள் வெடித்துப் பிறக்கின்றன !  அப்போது நீண்ட வாயு முகில் அலை வால்கள் (Tidal Tails of Gas & Dust) காலாக்ஸிகளைச் சுற்றி முளைக்கின்றன !  காலாக்ஸியில் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளதால் அவை மோதிக் கொள்ளும் போது சிதைவடைவதில்லை.  பூர்வீக காலத்தில் பேபி பிரபஞ்சத்தில் பக்கத்தில் இருந்த காலாக்ஸிகளிடையே சேர்ப்புகள், கலப்புகள் பல நூறு மில்லியன் ஆண்டுகளாய் நிகழ்ந்து வந்துள்ளன.  இப்போது வானியல் நிபுணர் சுமார் ஒரு மில்லியன் காலாக்ஸிகளின் மோதலை அருகில் உள்ள பிரபஞ்சத்தில் காண்கிறார்கள். நாசா அனுப்பிய காலெக்ஸ் விண்ணோக்கி (GALEX Space Probe)

    2003 ஏப்ரல் 28 ஆம் தேதி நாசா பூமியைச் சுற்றிவரும் “காலெக்ஸ்” (GALEX Orbiting Space Telescope) என்னும் விண்ணோக்கியை ராக்கெட் மூலம் அனுப்பியது.  பிரபஞ்சத்தில் கடந்த 10 பில்லியன் ஆண்டுகளாக புறவூதா ஒளிவீசும் பூர்வாங்க காலாக்ஸிகளை நோக்கி அகிலத்தின் பூர்வீக வரலாற்றை (Cosmic History) 29 மாதங்கள் தொடர்ந்து காலெக்ஸ் விண்ணோக்கி அறிந்து வந்தது.  அந்த விண்ணோக்கு விளைவுகள் நமது பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், அது எவ்வாறு வளர்ச்சி அடைந்து மாறியது என்பதையும் விஞ்ஞானிகளுக்கு எடுத்துக் காட்டும்.  அத்துடன் காலெக்ஸ் பூர்வாங்க காலத்தில் விண்மீன்கள் உருவாக இருந்த மூல காரணங் களையும் உளவிக் காணும்,  மேலும் காலெக்ஸ் முதல் முறையாக பிரபஞ்சத்தில் உருவாகி வரும் காலக்ஸிகளைக் காட்டும் ஓர் விளக்கமான விண்வெளிப் படத்தைத் (Galaxy Map) தயார் செய்யும் !  அதன் மூலம் நமது பால்வீதி போன்ற காலாக்ஸிகள் எவ்விதம் உண்டாக்கப் பட்டன என்று நான் அறியலாம்.  காலெக்ஸ் கண்டு அனுப்பும் புறவூதா நோக்கு நிகழ்வுகள் நமது பால்வீதியில் எப்போது விண்மீன்கள் இரசாயன மூலகங்களை உற்பத்தி செய்தன என்னும் புதிரையும் விடுவிக்கும் !

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gsqRGM1JirU

    [தொடரும்] 

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; ESA, National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Milkyway Galaxy Form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 Science Daily : What Shape is The Universe ? Columbia Astronomers Have Clue !  [Feb 17, 1998]
    20 NASA – The Galaxy Evolution Explorer (GALEX Space Probe) (April 28, 2003)
    21 The Cosmic Star Formation History (www.mpa-garching.mpg.de/HIGHLIGHT/2002/)
    21 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40807241&format=html (Galaxy -1)
    21 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712131&format=html (Galaxy -2)
    21 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40807101&format=html (Galaxy -3)
    22 A Computer Model of Galaxy Formation
    23 How Galaxies Work By : Craig Freudenrich, Ph..D.
    24 Science Daily – Early Star Formationin The Universe Illuminated (Sep 18, 2007)
    25 Discover Magazine – Unseen Universe (Jan 31, 2007)
    26 Scientific American – The Secret Lives of Stars (Number 4 Issue 2004)
    27 Cosmos – In Search of the First Stars By : Ray Jayawardhana (Jan 31, 2007)
    28 Astronomy Magazine – Quest for the First Galaxies By : Richard Ellis [March 2008]
    29 Space Daily – New Evidence for Supernova-Driven Galactic Fountains in Milky Way (Nov 22, 2010)
    30 Daily Galaxy – Stunning Burst of Star Creation Beams as Much Light as an Entire Galaxy (Nov 24, 2010)
    31 Space Daily – Cosmic Dust & Gas Shape Galaxy Evolution (Nov 24, 2010)
    32 Space Daily – Massive Galaxy Formed When the Universe Was Young (Nov 25, 2010)
    33 Space Daily – Astronomers Probe ‘Sandbar’ Between Islands of Galaxies (Nov 25, 2010)
    34 Astronomy Magazine – New Research – How Stars Form -Stars Change from Cold Gas to Blazing Hot Fireballs (December, 2010)

    35. http://www.scientificamerican.com/article/supernova-reveals-origins-of-universe-s-dust/?print=true [July 9, 2014]

    36. http://www.hngn.com/articles/35791/20140710/cosmic-dust-formed-by-gigantic-supernova-explosions.htm  [July 10, 2014]

    37.  http://www.ibtimes.co.uk/mystery-cosmic-dust-origin-solved-explosive-death-supernovas-created-stardust-factories-1456128  [July 10, 2014]

    38.  http://www.space.com/26482-cosmic-dust-survives-star-explosions.html  [July 10, 2014]

    ******************
    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  July 12, 2014

    Share
  • திருமால் திருப்புகழ் (140)

     

    கிரேசி மோகன்

     

    Guru Krupa. Acrylic on canvas. #Gurupoornima Jul 12, 2014
    Guru Krupa. Acrylic on canvas. #Gurupoornima Jul 12, 2014

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–

    இன்று குருபூர்ணிமா-வந்தே கிருஷ்ணம் ஜகத்குரும்….
    ———————————————————————————————-
    குருபூர்ணிமா வேண்டுதல் வெண்பா….
    ————————————————

    Divyam dadAmi thaey chakshu:' 'I give you divine eyes: Now look at Me' — Krishnam Vande Jagadgurum. #Gurupurnima  Keshav
    Divyam dadAmi thaey chakshu:’ ‘I give you divine eyes: Now look at Me’ — Krishnam Vande Jagadgurum. #Gurupurnima Keshav

     

    “சீதாப் பழம்தின்ற ஸ்ரீராமச் சந்திரா,
    கீதா உபதேச காகண்ணா, -போதாம்,
    குருபூர் ணிமையில், இருகார் முகில்காள்,
    தருவீர் எனக்குத் தவம்”….கிரேசி மோகன்….
    ——————————————————————–
    தங்கத்தில் திருவனந்தன் கோலத்தை கணினியில் கண்டு….
    ————————————————————————-
    அங்கம் ஜொலிக்க, அயனரன் பாதுகாப்பில்,
    தங்கமாய்த் தூங்கும் திருவனந்த, -சிங்கமே!,
    பாற்கடல் விட்டெதற்கு, பாதாளப் பள்ளிகொண்டீர்,
    வேர்க்கலையோ அங்குமக்கு விஷ்ணு….(357)

    பணம்தனில் தூங்கும், அனந்தனின் பூத,
    கணங்களின் காவலுற்ற காசை, -நினைந்திடும்,
    வேதாளங்கள் கையில், விலங்கிட வைத்திடும்,
    பாதாளம் பாய்ந்த பணம்….(358)

     

    THREE TIER PROTECTION FOR திருவனந்த புர ஸ்வாமிக்கு….
    ————————————————————————————

     

     

    Govinda. New forever series. #krishnafortoday
    Govinda. New forever series. #krishnafortoday


    பாஞ்சாலி, ஆனை, பிரகலாதன், துன்பத்தில்,
    பூஞ்சோலை இன்பமாய் பூத்தவா, -ஏஞ்சாமி !,
    காப்புக் கடவுள்நீ, கேரளத்தில் முப்பாது
    காப்பில் கிடக்கலாமோ கூறு….(359)

    பணமுனக்கு வந்ததால், பத்தும்(அவதாரம்) மறந்து,
    பணஅரவப் பள்ளிகொண்டாய் பத்து !, -மனமிறங்கு,
    பாதாளப் பொக்கிஷம், போகட்டும் எக்கேடு
    தீதாளும் தேசத்தைத் தாங்கு….(360)

    போர்பாண்ட வர்க்காய், புரிந்தன்று பாரதப்,
    பார்மூண்ட பாரத்தைப் போக்கியவா, -மார்தாண்ட,
    வர்மனிடம் பொக்கிஷத்தின், நிர்வகிப்பை விட்டுச்செல்
    தர்மசம் ரக்ஷணத் திற்கு….(361)

    அடையார் அனந்த பத்பனாப ஸ்வாமி கோயிலில் எழுதியது
    —————————————————————————

     

     

     

     

     

    Ananda. New forever series. #krishnafortoday
    Ananda. New forever series. #krishnafortoday

     

    கடலேழில் தூங்கி, களைப்புற்றாய் போலும்,
    அடையாற்றில் பள்ளி அடைந்தோய், -மடல்வாழை,
    தென்னை மரம்சூழ், திருவனந்தா, ஐம்புலக்,
    கண்ணைப் பறித்தெனைக் காண்….(362)

    ஆடிவரும் பூரம், அவதரித்து, மார்கழியில்,
    பாடிவரும் ஆண்டாளின் பாசுரத்தை, -நாடிவரும்,
    வைகுண்டம் விட்டந்த, வில்லிபுதூர் வாழ்வுக்கு,
    பைகொண்ட பாம்பணைவோன் பார்….(363)
    ———————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_05_01_archive.html

     

     

    Share
  • நானுனை மறவேன் நாராயணனே!

    சு.ரவி

    EEE844D4-9382-43A4-81EB-5B0A30E6A25D

    8A1CAC5D-6D89-4A1B-87C1-B1744B3A3E9F

    இராப் பகலாக இடருற்ற வேழம்
    அராற்றி ஆதி மூலமென் றலற
    கராப் படச் சக்கரம் கதுமென எறிந்த
    பராத் பரனே உன் பதம் மறவேனே!

    ஒருமனத் தோடுனை உடும்பெனப் பிடித்த
    துருவனை வானில் துலங்கு மீனாக்கிய
    கருட வாஹனா , கார்முகில் வண்ணனே
    நிருதி நெருக்கினும் நினை மறவேனே!

    பால்வீதி எங்கும் பரந்த கோளெலாம்
    கால்கழற் பரல்களாய்க் கணகணத் துருள
    வால்சுருண்டெழுந்த வராஹ மூர்த்தியே
    ஆலம் பொழியினும் அடிமறவேனே!

    நொடியி லோர்தூணை நூறிப் பிளந்து
    படியில் அமர்ந்தவா(று) இரணியன் பருவுடல்
    மடியுறக் கீண்ட இடிகுரற் சிம்மமே!
    அடிமை நானுந்தன் அடிமறவேனே!8A157ED5-0001-42AF-B530-9D839526AEDF

    தானம் இரந்த குறளனாய் வந்து
    வானம் அளந்த வளர் நெடு மாலே!
    ஊனம் செய்தென் உடல் வருத்திடினும்
    நானுனை மறவேன் நாராயணனே!

    அம்புவில் லேந்தி அடர்நெடுங் கானகம்
    தம்பியும் தாரமும் துணைவர நடந்த
    செம்பத மலர்கள் சேவித்தவாறே
    நம்பி எந்நாளும் நான் கிடப்பேனே!

    குரக்கரின் துணைகொடு குன்றுசூழிலங்கை
    அரக்கரதம் அரசின் ஆணிவேர் அறுத்தோய்!
    இரக்கமற்றென்னை இழிநர கிடினும்
    உரக்க நின் நாமம் ஓதிநிற் பேனே!

    மனம்வெறுப் பேறி மதம் கொண்ட வேந்தர்
    சினம்பெருத் தென் மேல் சீறிய போதும்
    புனல்கறுத் தோடும் யமுனைத் த்றைவனே,
    அனல்வறுத் திடினும் அடிமற வேனே!64045FAD-842D-4A33-B788-CB4914B4E61E

    திரிதரும் காலிகள் பின்சென்ற தெய்வமே!
    எரிதரும் நரகில் எனையிட்ட போதும்
    கிரிதரா உந்தன் கீர்த்தியே அன்றி
    பிறிதொரு வார்த்தை பேசகில்லேனே!

    ஓரா ழியும்,வெண் சங்கமும் ஏந்தும்
    ஆரா அமுதே ஆருயிர் நிலையே!
    நீரா ழியினுள் எனைஆழ்த் திடினும்
    சீரார் பதமலர் சிந்தை கொள்வேனே!

     

     

     

     

    85510988-C45B-40D3-A899-E3F7969BED6D98351337-30E3-458E-9439-87873559FEE7

    B76B39E2-29C6-4D03-AB7B-2A7F01DC77B6

     

    Share
  • காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர் பயிலரங்கம்.

    1

    9.7.2014 அன்று காரைக்குடி இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 80 மாணவ மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கத்தினை தன்னார்வத் தொண்டு ஆர்வலர் திரு சொ.வினைதீர்த்தான் நடத்தினார். பாரம்பரியமிக்க இந்நகராட்சிப்பள்ளி 1938ல் தொடங்கப்பட்டு நடுநிலைப்பள்ளியாகச் செயல்பட்டு வந்தது. சென்ற ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு ஆற்றல்மிகு தலைமை ஆசிரியர் திரு ஆ.பீட்டர் ராசா வழிநடத்தலில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. திரு பீட்டர் ராசா பயிலரங்கு நடத்த ஆர்வத்துடன் தக்க ஏற்பாடுகள் செய்தார்.

    23

    பத்தாம் வகுப்புப் படிக்கும் 24 மாணவ மாணவியரும், ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் 60 பிள்ளைகளும் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

    46

    நேர நிர்வாகம், நினைவாற்றல் பெருக்கல், உறவுகளை மேம்படுத்தல் பற்றிச் சில சிந்தனைகளை இளம் மாணவர் நெஞ்சங்களில் விதைக்க முடிந்தது.

    கற்றல் பற்றி (Registration, Retention, Recall) வாசிப்பு, சிந்திப்பு, படைப்பு என்ற நிலைகள் ஆராயப்பட்டன. ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி நெஞ்சில் நிறுத்தல் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது. “நான்கேட்கிறேன்; மறந்துவிடுகிறேன்; நான் பார்க்கிறேன்; நினைவுகூர்கிறேன்; நான் செய்கிறேன் புரிந்துகொள்கிறேன்!”என்பதனை ஒரு செயல் முறை மூலம் விளக்கப்பட்டது. நான் சொல்வதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு “உங்கள் ஆட்காட்டி விரலைக் கன்னத்தில் வையுங்கள்’ என்று கூறி அவர்கள் பார்க்க தன் பெருவிரலைத் தாடையில் பயிற்சியாளர் வைத்தார். பார்த்த மாணவர்கள் அனைவரும் அவ்வாறே அவரவர் பெருவிரலைத் தாடையில் வைத்தனர். பயிற்சியாளர் கூறியதான ஆள்காட்டி விரலை கன்னத்தில் வைக்கவில்லை. மாணவர்கள் பார்த்ததை செய்ததை ஆரவாரத்துடன் ஒத்துக்கொண்டார்கள். செயல்முறையால் I HEAR I FORGET; I SEE I REMEMBER; I DO I UNDERSTAND என்பதை உணர்ந்துகொண்டார்கள்.

    நினைவாற்றல் பெருக்கலில் ஒவ்வொரு கேள்விக்கான பதிலிலும் 4,5 சொற்களே பிரதானமாக உள்ளன என்பது எடுத்துக்காட்டுகளுடன் சுட்டப்பட்டது. படிக்கும்போது ஒரு பாடத்திலிலுள்ள ஒவ்வொரு கேள்விக்கான பதிலின் பிரதான 5,6 சொற்களைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்தக் குறிப்புப் புத்தகம் பாடத்தினை உணர்ந்து படிக்கவும் நினைவுபடுத்திக்கொள்ளவும் உதவும்.

    கற்க! கசடறக் கற்க!!
    கற்பவை கற்க! கற்றபின் கற்க!!
    நிற்கக் கற்க!

    என்று குறளைப் பிரித்துச் சொல்லி ஒருமுகக் கல்வி, பன்முறை படித்தலும் உரைத்தலும், பயனுறு கல்வி (FOCUSED LEARNING, POWER OF REPETITION, PURPOSE OF LEARNING) ஆகியவை வலியுறுத்தப்பட்டது.

    5

    நேர நிர்வாகத்தில் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றும் செயல்களைத் திட்டமிட்டு ஒழுங்குபடித்திக்கொள்ளுதலே நேர நிர்வாகம் என்பது விளக்கப்பட்டது. ஒருவர் செய்யும் செயல்கள் 1.அவசியம்/அவசரம், 2.அவசியம்/அவசரமில்லை, 3.அவசியமில்லை/அவசரம்,4.அவசிமும் இல்லை/அவசரமும் இல்லை என்று நான்கு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அலசப்பட்டன.

    அவசியமான செயல்களான 1.உடலினை உறுதி செய்தல், 2.அறிவையும் திறனையும் பெருக்கல், 3.உறவுகளை மேம்படுத்தல் வலியுறுத்தப்பட்டன. அவசியமான செயலைத் தாமதப்படுத்தும்போது அது அவசரமான செயலாகிவிடுகிறது. படிப்பினை நாளை பார்க்கலாம் எனத் தள்ளிப்போடும்போது தேர்வு நெருங்கிப் படிக்க முடியாது மதிப்பெண் குறைந்துவிடுகிறது.

    ‘என்றும் ஒருவுதல் வேண்டும் புகழ்
    நன்றி பயவா வினை.’

    குறிப்பிட்ட செயலைச் செய்யும்போது புகழோ நன்றியோ கிடைக்காவிட்டால் அச்செயலை என்றும் செய்யக்கூடாது என்றார் வள்ளுவர். அது அவசியமும் அவசரமும் இல்லாத செயல். அச்செயல் நேரத்தை வீணடிக்கும். ஒரு செயல் செய்யும்போது அது செய்பவரின் திறனை வளர்த்து அவர் புகழ் பெற உதவ வேண்டும். அல்லது அச்செயல் பிறருக்குப் பயன்பட்டு நன்றியுடைவர்களாக ஆக்கவேண்டும். தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்துகொண்டு கிரிக்கெட்டோ அல்லது சினிமாவோ பார்ப்பதாலும் செல்போனில் வேண்டாதவற்றைப் பேசுவதாலும் புகழும் வராது, நன்றியும் கிடைக்காது என்பதை மாணவர்கள் ஒத்துக்கொண்டார்கள்.

    மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். தாங்கள் பயிற்சியில் அறிந்துகொண்டவை பற்றிக் கருத்துரை (Feed back) எழுதிக்கொடுத்தார்கள்.

    Share
  • மன இருள் நீக்கி

    விசாலம்

    குரு பூர்ணிமா என்றாலே என் மனதில்  வந்து நிற்பது அந்த   தத்தாத்ரேயர்தான். சம்ஸ்கிருதத்தில் பூர்ணிமா என்பது நமது மொழியில் பௌர்ணமி  என்கிறோம். சூரியனின் ஒளி சந்திரன் மேல் விழுகிறது . சந்திரனுக்கு தனக்கென்று ஒளி ஒன்றும் இல்லை. சூரியன், பூமியின் நிழல்  சந்திரன் மேல் விழ  நம் கண்களுக்கு சந்திரன் பல பிறைகளாக  தோற்றமளித்து பின் பௌர்ணமி நிலவாக தெரிகிறது.

    ஜோசியத்தில் சூரியன் ஆத்மாவாகவும் சந்திரன் மனமாகவும் சொல்லப்படுகிறது. இனி இதை நம் உடலில் வைத்துப்பார்க்கலாம். உடலில் இருக்கும் ஆன்மா எப்போதும் ஒளிவீசிக்கொண்டே இருக்கிறது.  அந்த ஒளியை உணர்ந்து கொள்பவர்கள்தான் மகானாகத் திகழ்கிறார்கள். சாதாரண மனிதன் இதைக்காணமுடிவதில்லை, ஏனென்றால் மாயை அந்த ஒளியை மறைத்துக்கொண்டிருக்கிறது. அந்த மாயையை அகற்றி உள்ளிருக்கும் ஆன்மாவைக்கண்டுக்கொள்ள ஒரு குரு தேவைப்படுகிறது.  மாயை என்பது ஒரே  இருட்டாக சரியான இடம்  போகத்தெரியாமல்  ஒருவனை திண்டாட வைக்கிறது. இதனால் அவன் அந்த மாயவலையில் மாட்டிக்கொண்டு வெளியே மீண்டுவரமுடியாமல்  தத்தளிக்கிறான். மனதுக்குள் இருக்கும் இந்த இருளைப்போக்கி ஒளியை நமக்குக் காட்டி சத் .சித் ஆனந்தத்தை  அனுபவிக்கச்செய்பவர் தான் குரு.

    நாம் பல கலைகளைக் கற்றுக்கொள்கிறோம். அவைகளைப் போதிப்பவர் ஆசிரியர்கள். சம்ஸ்கிருதத்தில் ஆசார்யா என்று வரும்.  ஒவ்வொருவருக்கும் ஒரே குரு தான் இருக்க முடியும் ஆனால் ஆசார்யார்கள் பலர் இருப்பார்கள். ஒருவருக்கு இரண்டு மூன்று குருமார்கள் இருந்தால் அவர்கள் கொடுக்கும் தீட்சை வேறுபடும். .மந்திரம் வேறுபடும்.  அணுகுமுறையும் மாற வாய்ப்புண்டு. ஆகையால் ஒரே குருவைத்தேடி கடைசிவரை அவரையே ஆராதிக்க வேண்டும். ஆனால் சரியான குரு கிடைத்து  அவரால் பல நன்னமைகள் அடைந்து சத்சித் ஆனந்தம் அனுபவிக்கும் பாக்கியம் உடையவர் மிகச்சிலரே .

    நான் முதலில் சொன்ன ஸ்ரீ தத்தாத்ரேயர் தனக்கென்று தனி குருவைத்தேடவில்லை. அவர்    இயற்கையிலிருந்தே  பல குருவைத் தேர்ந்தெடுத்தார். மும்மூர்த்திகளின் சங்கமமாக அத்ரி முனிவரின் தர்மபத்தினி அனுசுயா மூலம் அவதரித்த தத்தாத்ரேயர் சிறு வயதிலிருந்தே பெரிய ஞானியாக திகழ்ந்தார். அவரைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். தத்தாத்ரேயர் அவர்களைத் தவிர்க்க முயற்சிப்பார். ஒரு தடவை அவர்  ஒரு நதியில் ஸ்னானம் செய்ய இறங்கினார். ஆனால் அவர் நதியிலே மூழ்கி இருந்து மூன்று நாட்கள் வெளியில் வரவில்லை. மூன்றாவது நாள் அவர் வெளியில் வந்ததும் பார்த்தால்  அந்தக்கூட்டம் அப்படியே நின்றபடி இருந்தது. திரும்பவும் மூழ்கி தனது சக்தியினால் ஒரு கையில் மது புட்டியும் இன்னொரு பக்கம் ஒரு மாதுவை அணைத்தபடி  வெளியே வந்தார். அந்தக்கூட்டம் அவர் யோகா சக்தியிலிருந்து மாறி மாயையின் வலையில் விழுந்து விட்டதாக நினைத்து அவரை விட்டு விலகியது. அதன் பின் தத்தாத்ரேயர் தன்னுடைய உடலில் இருந்த ஒரு துண்டையும் வீசிப்போட்டுவிட்டு அவதூதராக மாறினார். பின் வேதாந்தத்தைப்பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். அவருடைய கீதை  “அவதூத கீதை” என பிரசித்தி பெற்றது . இதைப் படிக்க ஆத்மஞானம் பற்றி அநேக விஷ்யங்கள் தெரிய வரும் .

    thathathreyarஒரு தடவை மன்னர் யது  தத்தாத்ரேயரைப் பார்த்தார்…,

    “சுவாமி  நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் காரணம் என்னவோ? அந்த ரகசியத்தை எனக்கும் சொல்ல வேண்டும். தங்கள் குரு யார் ?”

    “என் குரு என் ஆன்மாதான். அந்த ஆன்மாவை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன் அதுதான் என் ஆனந்தத்தின் காரணம். தவிர குரு என்று சொல்லப்போனால் இருபத்தினாலு குரு உள்ளனர். அவர்கள் மூலம் என் அறிவு வளர்ந்தது”

    “அவர்கள் யார் யார் என தெரியப்படுத்துங்கள் “

    “அவை  பூமி,  தண்ணீர், காற்று,  நெருப்பு,  ஆகாயம், நிலா, சூரியன், புறா , மலைப்பாம்பு, கடல் , விட்டிற்பூச்சி, வண்டு , தேன்  ,ஆண்யானை, மான், மீன், பிங்கலை ,  பறவை, குழந்தை , மாது , பாம்பு,  அம்பு செய்பவன், சிலந்தி , குளவி”

    இவைகளிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் விளக்கமாக சொன்னவுடன் மன்னர் யதுவும்  எல்லாம் துறந்து தவம் நாடிச்சென்றார்.

    குரு பிரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர:
    குரு சாட்சாத் பரப்பிரும்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம 

    படம் உதவிக்கு நன்றி:  http://santhipriyaspages.blogspot.com/2011/10/blog-post_05.html

    Share
  • மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

    –கார்த்திகேயன், விமலதாரணி.

    கேள்வி : 1
    என் மகனுக்கு வயது 7. இரண்டாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் விருப்பமின்றி இருக்கிறான். படிக்கச்  சொன்னாலே பசிக்குது சாப்பிட்டு படிக்கிறேன் என்றோ, டாய்லட் போக வேண்டும் என்றோ எதாவது சாக்கு சொல்வான். நானும் என் கணவரும் வேலை முடித்து வர இரவு ஏழாகி விடுவதால் ட்யூஷன் சேர்த்துள்ளோம். அங்கும் இப்படித்தான் செய்கிறானாம். ஞாபகமும் குறைவாக இருக்கிறது. அவனுக்குப் படிப்பில் ஆர்வம் வர என்ன செய்ய வேண்டும்?

    பதில் :
    உங்கள் குழந்தைக்கு படிப்பில் ஆர்வமில்லாதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பள்ளி ஆசிரியரை சந்தித்து அவன் நடவடிக்கைகளை விசாரியுங்கள். குழந்தையின் ஐக்யூ குறைவாக இருந்தாலும் அவனுக்கு கற்கும் திறன், சிந்திக்கும் மற்றும் நினைவு கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். இதனைப் பள்ளி ஆசிரியரும் உறுதி செய்தால் அவனை நல்ல சைக்காலஜிஸ்டிடம் அழைத்து செல்லுங்கள் அவனுக்கு ஐக்யூ டெஸ்ட் செய்ய வேண்டும். ஐக்யூ குறைவாக இருந்தால் ஆக்குபேஷனல் தெரபி கொடுக்க வேண்டியிருக்கும். மேழும் அவனுக்கு டிஸ்லெக்சியா பிரச்சனை உள்ளதா என்பதற்கான டெஸ்ட்களை செய்து அதற்கான தீர்வை கூறுவார்கள். எல்லாம் சரியாக இருக்குமானால் குழந்தையுடன் நீங்கள் செலவிடும் நேரம் குறைவு என்றோ, அவனுக்கு பயம், பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் இருப்பது இப்பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.  குழந்தைக்கு சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அதை அடைந்தால் பரிசுப் பொருள் கொடுங்கள். அவன் மனதில் தோல்வி பயத்தை போக்கி வெற்றி பெற ஊக்கமளியுங்கள். இசை நடனம் போன்ற ஒன்றை கற்றுக் கொடுங்கள். நன்கு வேர்க்கும்படியான விளையாட்டு ஒன்றில் சேர்த்து விடுங்கள் இவையெல்லாம் அவன் திறனை அதிகரித்து படிப்பில் கவனம் செல்ல உதவும்.

    கேள்வி : 2
    நானும் என் கணவரும் நல்ல பணியில் இருக்கிறோம். எங்களுக்கு ஒரே மகள். செல்லமாக அவளை வளர்த்திருக்கிறோம். அவள் 11 வகுப்பு படிக்கிறாள். அவள் கடந்த சில மாதங்களாக எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறாள். கேட்டால் கோபத்தில் பொருட்களை உடைக்கிறாள். வீசி எறிகிறாள். அவளை நினைத்து கவலையாக இருக்கிறது. இதற்கு முன் அவள் இப்படி இல்லை.

    பதில் :
    உங்கள் மகளைக் செல்லமாக வளர்த்திருக்கிறீர்கள் ஆனால் சுதந்திரமாக வளர்க்கவில்லையென்றே தோன்றுகிறது. கடந்த சில மாதங்களாகத்தான் அவள் இப்படி இருக்கிறாள் என்பதால் அவளுக்கு ஏதோ வெளியே சொல்ல முடியாத பிரச்சனை இருக்கலாம்.  ஒரே குழந்தையாக இருப்பவர்களுக்கு தன் பொருளையோ, உணர்வுகளையோ பகிர்ந்து கொள்வது சற்று சிரமம் தான். இதை குழந்தையிலிருந்தே பெற்றோர் சொல்லி வளர்க்க வேண்டும். யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாததாலேயே உங்கள் மகள் கோபப்படுகிறாள். அவளிடம் மனம் விட்டுப்பேசுங்கள். அவள் நடத்தையை குறை சொல்லாமல் பொறுமையாக இருந்து பாருங்கள். அவள் தோழிகளிடம் பேசிப்பாருங்கள்.  அவளுக்கு என்ன பிரச்சனை என்றாலும் அதை சரி செய்யாலாம் என்ற நம்பிக்கை கொடுங்கள். அவளாக தன் பிரச்சனை சொன்னால் ஒழிய நீங்களாக துருவித்துருவிக் கேட்காதீர்கள். உங்களின் பக்குவமான அணுகுமுறையினால்  ஒன்று அவள் பிரச்சனை உங்களிடம் பகிர்ந்து கொள்வாள் அல்லது தானாகவே சரி செய்துக் கொண்டு சகஜமாகி விடுவாள்.

    படம் உதவிக்கு நன்றி:  www.123rf.com

    Share
  • திருமால் திருப்புகழ் (139)

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————-
    கோகுலாஷ்டமி நாளில் எழுதியது….
    ——————————————————-

    Gitamrita series. #krishnafortoday - Keshav
    Gitamrita series. #krishnafortoday – Keshav

     

    ஆகுலம் மேய்த்து, அருங்கீதை உரைத்துநம்,
    ஆகுலம் தீர்க்க அவனியில், -கோகுலம்,
    வந்தநம் கண்ணனை, வாழ்த்த மொழியில்லை,
    வந்தனம் சொல்லுவோம் வா….(351)

    இன்று சிறைவந்(து), இரவோ(டு) இரவாய்,
    கன்றுகள் மேய்த்திட கோகுலம், -சென்று,
    புகுந்தநாள் நாளை, முகுந்தனுக்கு நெஞ்சம்,
    உகந்தநாள் ராதை உதிப்பு….(352)

    அப்பம், முறுக்கு, அதிரசம், வெண்ணெய்நெய்
    வெப்பம் தணிக்க, விளையாடச், -சொப்பும்,
    உனக்களிப்பேன் கண்ணா, உகந்துனது நட்பை,
    எனக்களிக்கப் புள்ளமர்ந்து ஏகு….(353)

    வண்ண மயிற்பீலி, வேய்ங்குழல், மாம்பழக்
    கன்னம் குழைய, களித்தபடி, -கன்னங்,
    கருத்த இரவைப், பொருத்த உருவில்
    ஒருத்தி மகனாய் உதிப்பு….(354)

    அஷ்டமி ரோகிணியில், ஆயர்தம் பாடியில்,
    இஷ்ட இடைச்சியர் இல்லம்போய், -துஷ்டனாய்,
    சாமள வண்ணன், சளைக்காது வெண்ணெய்வாய்,
    ஆமளவு உண்ண உதிப்பு….(355)

    அய்யர்க்கு நேற்றவன், அய்யங்கார்க்(கு) இன்றவன்,
    கையிருப்பு பக்ஷணம் கொள்வதற்கு, -மையிருட்டு
    வண்ணனவன் இல்லம், வருவான் தினம்தினம்
    கன்னமிடும் கோல்கைக் கொண்டு….(356)

    ————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/

     

    Share