திருமால் திருப்புகழ் (139)
கிரேசி மோகன்

”கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————-
கோகுலாஷ்டமி நாளில் எழுதியது….
——————————————————-

ஆகுலம் மேய்த்து, அருங்கீதை உரைத்துநம்,
ஆகுலம் தீர்க்க அவனியில், -கோகுலம்,
வந்தநம் கண்ணனை, வாழ்த்த மொழியில்லை,
வந்தனம் சொல்லுவோம் வா….(351)
இன்று சிறைவந்(து), இரவோ(டு) இரவாய்,
கன்றுகள் மேய்த்திட கோகுலம், -சென்று,
புகுந்தநாள் நாளை, முகுந்தனுக்கு நெஞ்சம்,
உகந்தநாள் ராதை உதிப்பு….(352)
அப்பம், முறுக்கு, அதிரசம், வெண்ணெய்நெய்
வெப்பம் தணிக்க, விளையாடச், -சொப்பும்,
உனக்களிப்பேன் கண்ணா, உகந்துனது நட்பை,
எனக்களிக்கப் புள்ளமர்ந்து ஏகு….(353)
வண்ண மயிற்பீலி, வேய்ங்குழல், மாம்பழக்
கன்னம் குழைய, களித்தபடி, -கன்னங்,
கருத்த இரவைப், பொருத்த உருவில்
ஒருத்தி மகனாய் உதிப்பு….(354)
அஷ்டமி ரோகிணியில், ஆயர்தம் பாடியில்,
இஷ்ட இடைச்சியர் இல்லம்போய், -துஷ்டனாய்,
சாமள வண்ணன், சளைக்காது வெண்ணெய்வாய்,
ஆமளவு உண்ண உதிப்பு….(355)
அய்யர்க்கு நேற்றவன், அய்யங்கார்க்(கு) இன்றவன்,
கையிருப்பு பக்ஷணம் கொள்வதற்கு, -மையிருட்டு
வண்ணனவன் இல்லம், வருவான் தினம்தினம்
கன்னமிடும் கோல்கைக் கொண்டு….(356)
————————————————————————————————————
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/
