நானுனை மறவேன் நாராயணனே!
சு.ரவி
இராப் பகலாக இடருற்ற வேழம்
அராற்றி ஆதி மூலமென் றலற
கராப் படச் சக்கரம் கதுமென எறிந்த
பராத் பரனே உன் பதம் மறவேனே!
ஒருமனத் தோடுனை உடும்பெனப் பிடித்த
துருவனை வானில் துலங்கு மீனாக்கிய
கருட வாஹனா , கார்முகில் வண்ணனே
நிருதி நெருக்கினும் நினை மறவேனே!
பால்வீதி எங்கும் பரந்த கோளெலாம்
கால்கழற் பரல்களாய்க் கணகணத் துருள
வால்சுருண்டெழுந்த வராஹ மூர்த்தியே
ஆலம் பொழியினும் அடிமறவேனே!
நொடியி லோர்தூணை நூறிப் பிளந்து
படியில் அமர்ந்தவா(று) இரணியன் பருவுடல்
மடியுறக் கீண்ட இடிகுரற் சிம்மமே!
அடிமை நானுந்தன் அடிமறவேனே!
தானம் இரந்த குறளனாய் வந்து
வானம் அளந்த வளர் நெடு மாலே!
ஊனம் செய்தென் உடல் வருத்திடினும்
நானுனை மறவேன் நாராயணனே!
அம்புவில் லேந்தி அடர்நெடுங் கானகம்
தம்பியும் தாரமும் துணைவர நடந்த
செம்பத மலர்கள் சேவித்தவாறே
நம்பி எந்நாளும் நான் கிடப்பேனே!
குரக்கரின் துணைகொடு குன்றுசூழிலங்கை
அரக்கரதம் அரசின் ஆணிவேர் அறுத்தோய்!
இரக்கமற்றென்னை இழிநர கிடினும்
உரக்க நின் நாமம் ஓதிநிற் பேனே!
மனம்வெறுப் பேறி மதம் கொண்ட வேந்தர்
சினம்பெருத் தென் மேல் சீறிய போதும்
புனல்கறுத் தோடும் யமுனைத் த்றைவனே,
அனல்வறுத் திடினும் அடிமற வேனே!
திரிதரும் காலிகள் பின்சென்ற தெய்வமே!
எரிதரும் நரகில் எனையிட்ட போதும்
கிரிதரா உந்தன் கீர்த்தியே அன்றி
பிறிதொரு வார்த்தை பேசகில்லேனே!
ஓரா ழியும்,வெண் சங்கமும் ஏந்தும்
ஆரா அமுதே ஆருயிர் நிலையே!
நீரா ழியினுள் எனைஆழ்த் திடினும்
சீரார் பதமலர் சிந்தை கொள்வேனே!