Blog

  • தமிழ்த்தொண்டாற்றிய தவநெறிச் செல்வர் – குமரகுருபரர்

    தமிழ்த்தொண்டாற்றிய தவநெறிச் செல்வர் – குமரகுருபரர்

    -மேகலா இராமமூர்த்தி

    தாமிரபரணியாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டமென்னும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீகைலாசம் எனும் பகுதியைச் சார்ந்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாமசுந்தரி அம்மையாருக்கும் கி.பி. 1625ஆம் ஆண்டு, ஆனித் திங்கள் திருவாதிரை நன்னாளில் திருமகனாய்த் தோன்றினார் சைவமும் தமிழும் தழைக்கவந்த அருளாளரான குமரகுருபரர்.

    பிறந்து ஐந்தாண்டுகள் வரைப் பேசாத மூங்கைப் பிள்ளையாக அவர் இருந்ததனால் கவலையுற்ற அவருடைய பெற்றோர், அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச்சென்று செந்திலாண்டவர் சந்நிதியில் கிடத்திவிட்டுப் பாடுகிடந்தனர். முன்னியதை முடித்துவைக்கும் முருகப்பெருமான் அருளால், பேசாத அக்குழந்தை பேசும் திறன்பெற்றது. அம்மட்டோ? பாடும் திறனும் பெற்றது என்கின்றது அவருடைய வரலாறு.

    பின்னர், கல்வியில் நல்ல தேர்ச்சிபெற்ற குமரகுருபரர், கந்தர் கலிவெண்பா என்ற நூலினை முதலில் பாடினார். தாம் பிறந்த தலத்தில் எழுந்தருளியிருந்த கைலாசநாதர்மீது கைலைக் கலம்பகம் எனும் பிரபந்தம் இயற்றினார். ஞான சாத்திரங்களே அன்றித் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும் நல்ல புலமைபெற்றார் குமரகுருபரர்.

    அதன்பயனாய், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரை மீனாட்சியம்மை குறம், மதுரைக்கலம்பகம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி மாலை முதலிய அற்புதமான நூல்களை இயற்றி அன்னைத்தமிழுக்கு அணிசெய்தார்.

    குமரகுருபரரருக்குச் சிவஞான உபதேசம் செய்தருளியவர் தருமபுர ஆதினத்தில் நான்காம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய திருநிறை மாசிலாமணி தேசிகராவார். துறவுநிலை அருளவேண்டுமென்று தம் ஞானாசிரியரிடம் குமரகுருபரர் வேண்ட, அவ் ஆதீன மரபுப்படி துறவறம் மேற்கொள்ள விரும்புவோர் தலயாத்திரை செய்துவரல் வேண்டுமாதலால் காசி யாத்திரை செய்து திரும்புமாறு குமரகுருபரருக்குக் கட்டளையிடுகின்றார் குருமகா சந்நிதானம் தேசிகர் அவர்கள்.

    காசிக்குச் சென்றுதிரும்ப நெடுங்காலம் ஆகுமே என்று கவலைப்பட்ட குமரகுருபரரைச் சிதம்பரம் வரை சென்றுவரப் பணித்தார் மாசிலாமணி தேசிகர். அவ்வாறே சிதம்பரம் சென்ற குமரகுருபரர், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை முதலிய நூல்களை அங்கே இயற்றினார். அங்கிருந்து திரும்பியவர் பின்னர்க் காசிக்கும் சென்றார்.

    காசியை அக்காலத்தில் ஆண்ட தில்லி பாதுஷாவான தாரா ஷுகோவின் மனத்தில் இடம்பெற்றுச் சிவத்தொண்டுகள் சிலவற்றைக் காசியில் புரிய விழைந்த குமரகுருபரர், பாதுஷாவோடு உரையாடுவதற்கு வசதியாக அவருடைய தாய்மொழியான இந்துஸ்தானியை விரைவில் கற்க விரும்பிக் கலைமகளைத் துதித்துச் சகலகலாவல்லி மாலை பாடி அவள் அருளால் இந்துஸ்தானி மொழியில் புலமை பெற்றார் என்று கூறப்படுகின்றது.

    பிறகு பாதுஷாவிடம் இந்துஸ்தானி மொழியிலேயே பேசி அவர் மனத்தைக் கவர்ந்து, காசியில் கேதார கட்டம் (Kedar Ghat) எனுமிடத்தில் மடம்கட்ட ஓர் இடம் பெற்றார் குமரகுருபரர். அவ்வாறு கட்டப்பட்டதே குமாரசாமி மடமாகும். அங்கேயே சிவபோகம் செய்து வாழ்ந்துவந்தார் அவர். அக்காலக்கட்டத்தில்தான் காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக்கலம்பகமும் அவரால் இயற்றப்பட்டன. காசியில் தாம் வாழ்ந்த இடத்தில் தமிழிலும் இந்துஸ்தானியிலும் புராணச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தியிருக்கின்றார் அவர்.

    அளவிடற்கரிய தமிழ்ப்பற்றுடையவரான குமரகுருபரர், தாம் முதலில் பாடிய கந்தர் கலிவெண்பாவிலேயே,

    ”ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
    பேசுமியல் பல்காப் பியத்தொகையும் – ஓசை
    எழுத்துமுத லாம்ஐந் திலக்கணமும் தோய்ந்து
    பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து…”
      (கந்தர் கலிவெண்பா: 118-119)

    அடியேற்கு அருளவேண்டும் என்று கந்தனை வந்தனை செய்திருக்கக் காண்கின்றோம்.
    சகலகலாவல்லி மாலையிலும்,

    ”நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியிற் பணித்தருள்வாய்…”
    என்றும்

    ”பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்
    எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்…”
    என்றும் கலைமகளைத் துதிக்கின்றார்.

    குமரகுருபரருடைய செய்யுட்களில் தனிச்சிறப்புப் பெற்று விளங்குவது அவற்றின் இன்னோசையே ஆகும். ஏனையோரின் பாட்டுக்களிலிருந்து இவருடைய செய்யுட்களை நம் செவிப்புலன்கொண்டே எளிதில் வேறுபடுத்திவிடலாம். இச்செய்யுட்களின் சொற்களும் சொற்றொடர்களும் ஒன்றினோடு ஒன்று செவிக்கினிமை தரும்வகையில் பொருந்த அமைந்துள்ள பாங்கு, தென்பாண்டிநாட்டுப் பொருநை ஆற்றின் ஓட்டத்தை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றது.

    குமரகுருபரர் இயற்றிய நீதிநெறிவிளக்கம் எனும் 102 வெண்பாக்களால் அமைந்த அறநூல், அரிய வாழ்வியல் கருத்துக்களை நமக்கு அறியத் தருகின்றது. இந்நூலின் கருத்தாழத்தில் ஈடுபட்ட மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கரும், குடந்தைக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவருமான,  சி. தியாகராசச் செட்டியார் ”திருக்குறள் பருவத்தே பெற்ற பிள்ளை நீதிநெறிவிளக்கம்” என்று இதனைப் போற்றியுள்ளார்.

    இந்நூலிலிருந்து சில பாடல்களைச் சுவைத்தின்புறுவோம்!

    கல்விகுறித்துப் பேசுகின்ற நீதிநெறிவிளக்கப் பாடலொன்று,

    கற்புடைய மனைவியை ஒத்திருப்பது கல்வி; அம்மனைவியினால் கிடைக்கப்பெறும் காதற் புதல்வனே இனிய செய்யுள்; சொல்வன்மையே செல்வமாகும்; அச் செல்வத்தால் பெருமைமிகு அவையிலுள்ளோர் மனங்களை மகிழச்செய்தல் ஒருசிலராலேயே இயலும் என்கின்றது.

    கல்வியே கற்புடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்
    செல்வப் புதல்வனே ஈர்ங்கவியாச் சொல்வளம்
    மல்லல் வெறுங்கையாம் மாணவை மண்ணுறுத்தும்
    செல்வமும் உண்டு சிலர்க்கு
    .  (நீதிநெறி விளக்கம் – 3)

    இளமை நிலையாமை, செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை, உயிர் நிலையாமை எனும் நால்வகை நிலையாமையைப் பாடாத அறநூல்களே அநேகமாகத் தமிழில்  இல்லை எனலாம். திருக்குறள், சிலப்பதிகாரம், நாலடியார், திருமந்திரம் என்று நீளும் இவ்வரிசையில் குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கத்திற்கும் இடமுண்டு.

    நீரில் தோன்றிடும் குமிழி போன்றது இளமை; அந்நீரில் எழும் அலைகள் போன்றது செல்வம்; அந்நீர்மேல் எழுதிய எழுத்துப் போன்றது இம்மானுட யாக்கை; எனவே சிவபிரானை வழுத்துவதே மாந்தர்க்கு வாழ்வாக அமையவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள்.

    நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம்
    நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் – நீரில்
    எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே
    வழுத்தாத தெம்பிரான் மன்று. 

    கலைகளில் சிறந்தது இலக்கியக் கலை. நிலையில்லாமல் மாறும் அழகின்பத்தை நிலைபெறச் செய்ய இலக்கியம் பயன்படுகின்றது. மேற்கு வானத்தில் மாலையில் காணப்படும் அந்தி அழகு நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கின்றது. உள்ளம் வியந்துபோற்றும் அழகுமிக்க சிறந்த காட்சியை வானில் கண்டு மகிழ்கின்றோம். சிறிதுநேரம் கழித்து மீண்டும் அதனைக் கண்டுமகிழ விரும்பினால், அந்த அழகு, புலன்களுக்கு எட்டாத ஒன்றாக ஆகிவிடுகின்றது. ஒருநாள் ஒருவேளை உள்ளத்தில் தோன்றிய புதிய உணர்ச்சி மற்றொரு நாள் மற்றொரு வேளையில் தோன்றுதல் அரிதாகின்றது. இவ்வாறு மறைந்து மாறிப்போகும் அழகையும் உணர்ச்சியையும், படைப்பாளி தான் படைக்கும் இலக்கியத்தின்மூலம் நிலைபேறடையச் செய்துவிடுகின்றான். அத்தகைய படைப்பாளி உயிர்களைப் படைக்கும்  பிரமனைவிட உயர்ந்தவன். ஏனெனில்  பிரமன் படைக்கும் உயிர்களுக்கு அழிவுண்டு; ஆனால் படைப்பாளிகளாகிய புலவர்களின் படைப்புக்களோ காலத்தை வென்று, நின்று வாழக்கூடியவை என்கிறார் குமரகுருபரர்.

    கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
    மலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான் – மலரவன்செய்
    வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
    மற்றிவர் செய்யும் உடம்பு.  
    (நீதிநெறி விளக்கம் – 6)

    குமரகுருபரரின் இக்கருத்தை மனத்திற்கொண்டே, ”படைப்பதனால் என் பேர் இறைவன்; நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று பாடினாரோ கவியரசு கண்ணதாசன் என எண்ணத் தோன்றுகிறது.

    பொதுவாகவே மனிதர்கள் தம்மைப் பிறர் மதிக்கவேண்டும் எனும் வேட்கையும் விருப்பமும் கொண்டவர்கள். அம்மதிப்பைப் பெற அவர்கள் செய்யவேண்டுவது என்ன என்பதை ஒரு பாடலில் விளக்குகின்றார் குமரகுருபரர்.

    ”பிறருடைய குறைகளையே சொல்லித் தூற்றிக்கொண்டிராமல் அவர்களின் குணங்களைப் பலரறியப் போற்றுங்கள்; அனைவரிடமும் பணிவோடு நடந்துகொள்ளுங்கள்; பெருமதிப்புப் பெறுவீர்கள்” என்பதே அப்புலவர் பெருந்தகை நமக்குச் சொல்லும் நல்லுரை.

    பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
    மறவாதே நோற்பதொன்று உண்டு – பிறர்பிறர்
    சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
    யார்யார்க்குந் தாழ்ச்சி சொலல்.
    (நீதிநெறி விளக்கம் – 19)

    குமரகுருபரர் ஓர் அருந்தமிழர்; தமிழ்மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து நன்னிலை பெறவேண்டுமென விரும்பியவர். அதனாற்றான் தம்முடைய நூல்களில் தமிழினம் ஈடேற்றம் காண்பதற்கேற்ற உயர்ந்த அறக் கருத்துக்களைத் தவறாது வலியுறுத்தியிருக்கின்றார்.

    ”ஆசை ஆசை என்று அத்தனைக்கும் ஆசைப்படாதீர்! செல்வம் என்பது நம் சிந்தையின் நிறைவே ஆகும். கட்டுக்கடங்கா ஆசை வறுமையில் கொண்டுபோய் விட்டுவிடும்!” என எச்சரிக்கின்றார், தம்முடைய சிதம்பர மும்மணிக்கோவையில்.

    ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே
    அல்கா நல்குரவு அவாவெனப் படுமே.”
    (சிதம்பர மும்மணிக்கோவை: 26)

    தமிழில் தோன்றிய பிள்ளைத்தமிழ் நூல்களில் குமரகுருபரர் பாடியருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. அதிலும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தெய்வநலஞ் சான்ற தீந்தமிழ்ப் பனுவலாகும். திருமலைநாயக்கர் அவையில் இந்நூலை அரங்கேற்றம் செய்த குமரகுருபரர், ”தொடுக்கும் கடவுள்” எனத் தொடங்கும் வருகைப் பருவத்துப் பாடலைப் பாட, அன்னை மீனாட்சியே சிறுமியாக வந்து குமரகுருபரரின் கழுத்தில் ஓர் முத்தாரத்தை அணிவித்துச் சென்றாள் என்று சொல்லப்படுகின்றது.

    அப்பாடல் இதுதான்!

    தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
    தொடையின் பயனே நறைபழுத்த
    துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்
    சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
    எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
    ஏற்றும் விளக்கே வளர்சிமய
    இமயப் பொருப்பில் விளையாடும்
    இளமென் பிடியே எறிதரங்கம்
    உடுக்கும் புவனம் கடந்துநின்ற
    ஒருவன் திருவுள் ளத்தில்அழகு
    ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
    உயிர் ஓவியமே மதுகரம்வாய்
    மடுக்கும் குழற்கா டேந்தும்இள
    வஞ்சிக் கொடியே வருகவே
    மலயத் துவசன் பெற்றபெரு
    வாழ்வே வருக வருகவே!
    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – வருகைப்பருவம்)

    குருபரரின் இறைக்கொள்கையைப் பொறுத்தவரையில் அவர் சைவ சமயத்தில் பற்றுக்கொண்டிருந்த சிவநெறியாளராக இருந்தபோதிலும், பிற கடவுளர்களைப் புறக்கணிக்கவோ, பழிக்கவோ இல்லை.

    ஒரு கடவுள், ஒரு மொழி, ஒரு கலை, ஒரு நாடு என்னும் வரையறையின்றிப் பல கடவுளரையும், பல மொழிக் கருத்துக்களையும், பல கலைச் செய்திகளையும் பல நாட்டு வருணனைகளையும் இவருடைய செய்யுட்களில் காண்கின்றோம். இந்நாட்டின் தென்திசையிலுள்ள செந்தூரையும், வடநாட்டிலுள்ள காசியையும் இவர் பாடுகின்றார். தாம் பிறந்த பாண்டி நாட்டையும், தம் குருவைப் பெற்ற சோழநாட்டையும், வாழ்ந்து வந்த கங்கைக் கரையையும் வருணிக்கின்றார். சிவபெருமான் முதல் கலைமகள் வரையுள்ள தெய்வங்களைப் பாராட்டுகின்றார். இவற்றால் இவர் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் உளப்பாங்கோடு விரிந்த உலகியல் அறிவும் பெற்றவர் என்பது தெற்றெனப் புலனாகின்றது.

    தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து வளர்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து, காவிரியாற்றங்கரையிலும் கங்கையாற்றங்கரையிலும் மடம் அமைத்துத் தமிழையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்த பதினேழாம் நூற்றாண்டின் பெரும்புலவர் குமரகுருபரர். இல்லறவாழ்வைத் துறந்தபோதினும் தமிழைத் துறக்காத தகைசால் பெருந்தகையான அவர், இறுதியில் கங்கையாற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.

    சொற்சுவையும், பொருட்சுவையும், தெவிட்டாத அருட்சுவையும், சிந்தை மகிழும் இன்னோசையும் மிளிரும் அத்தவநெறிச் செல்வரின் அருந்தமிழ்ப் பனுவல்களைத் தமிழர்களாகிய நாம் அனைவரும் படித்துப் பயன்பெறுவோம்!

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    https://ta.wikipedia.org//wiki/குமரகுருபரர்
    https://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/Blessed-in-life-and-death/article16481818.ece
    http://www.tamilhindu.com/2008/09/kumaraguruparar-life-history-by-uvesa/
    https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/jun/09/அங்கயற்கண்ணி-அளித்த-அங்கீகாரம்-2717201.html

     

     

    Share
  • Telling the Tale of Tamils Across the Oceans – A Talk

    Telling the Tale of Tamils Across the Oceans – A Talk

    Telling the Tale of Tamils Across the Oceans – A Talk
    Prof. M. Anandakrishnan Endowment Lecture Series

     About the talk


    A talk on an unprecedented publication on Tamils in Southeast Asia and Singapore. Two distinguished Singapore institutions – the Indian Heritage Centre and the Institute of Policy Studies – join hands to publish an authoritative, scholarly but accessible account of  the 2000-year history of Tamil influence on and imprint in Southeast Asia and a more contemporary history of Tamil arrival and settlement in the island of Singapore. The two-volume book features insightful essays by established scholars from around the world as well as by young Singaporeans who have lived as Tamil Singaporeans. The connections between Tamil Nadu and the lands across the Bay of Bengal speak of one of the most penetrating soft power projections anywhere in this world and yet that tale has largely been forgotten or ignored or both. This book and the introductory talk are gentle reminders of our continuities and discontinuities.

    About the speakers


    Arun Mahizhnan is Special Research Adviser at the Institute of Policy Studies. He undertakes selected special projects at the Institute. Currently, he is leading the effort to publish Singapore Chronicles, a 50-volume book series to commemorate the 50th anniversary of Singapore’s Independence (https://lkyspp.nus.edu.sg/ips/research/special-projects/singapore-chronicles). He was previously Deputy Director and the head of the Arts, Culture and Media research cluster in IPS. He was concurrently an Adjunct Professor at the Wee Kim Wee School of Communication & Information at the Nanyang Technological University till 2017. Before joining IPS in 1991, he held senior positions in public communications in broadcasting and public relations. In the public domain, he has been a long time contributor to the development of arts and culture in Singapore and currently serves as Chairman of the Intercultural Theatre Institute, a tertiary level theatre training institute, and as Director of the Centre for Singapore Tamil Culture, an NGO focused on building bridges across Singapore cultures.

    Nalina Gopal is Curator at the Indian Heritage Centre and oversees the centre’s curatorial team. She has a BA in History and an MA in International Studies from the University of Madras. Prior to joining the centre in 2008, she was curator and registrar at a private museum in Chennai, India. Her research interests include South Asian diaspora in southeast Asia as well as Indian history and art. Her recent publications include Singapore Indian Heritage (2017), and Once Upon a Time in Little India (2019), for which she has authored chapters and artefact descriptions; some recent publications include “Through the Lens of Art: Setting the context to Indian Heritage in Singapore and Southeast Asia,” in ASEAN— India Shared Cultural Heritage in “Act East” ASEAN-Indian Shared Cultural Heritage (2019). In addition to the Centre’s permanent galleries, she has also recently curated exhibitions including Once Upon a Time in Little India, Symbols and Scripts—The Language of Craft, Chetti Melaka of the Straits—Rediscovering Peranakan Indian Communities and From the  Coromandel Coast to the Straits— Revisiting our Tamil Heritage.

    About Prof. M. Anandakrishnan


    Prof. Anandakrishnan obtained Ph.D in Civil Engineering (1960) from the University of Minnesota, USA. He served as Professor of Civil Engineering at IIT, Kanpur between 1963 and 1974. He served the United Nations  in the UN Centre for S&T for Development(1978-1989); as the Vice-Chancellor of Anna University (1990-96); and as Vice-Chairman of the Tamil Nadu State Council for Higher Education from 1996-2002.  Currently he is the Chairman,  Board of Governors, Indian Institute of Technology  Kanpur and Rajasthan; President, Ranganathan Centre for Information Studies (RCIS), Chennai; President, Tamil Nadu Academy of Sciences,  Chennai; Member, Board of Management, NUEPA, Delhi; Member, High Power Committee on Renovation and Rejuvenation of Higher Education in India and Chairman, Executive Council, Science City, Chennai. He was Chairman, MIDS between 2003 and 2008. He has served as Chairman or Member of several high level committees of MHRD, UGC, AICTE and NAAC. His honours and awards include Padma Shri from the President of India (2002); the Order of Scientific Merit from the President of Brazil (1996); Distinguished Leadership Award of the University of Minnesota (2003); Honorary Fellow of the Indian Society for Technical Education (2005); UGC National Swami Pranavananda Saraswati Award in Education (2006); Fellow of the Institution of Engineers, India and Fellow of the National Academy of Sciences, India.

    
    
    Share
  • சித்திர நடம்

    சித்திர நடம்

    விவேக்பாரதி

    நண்பன் சத்திய நாராயணன் இந்தப் படம் எடுத்துவந்து அதற்கொரு கவிதை தரும்படி கேட்டான்!நேற்று முந்தினம் தோழி அமிர்தாவின் நாட்டியத்தைக் காண நேர்ந்தது! அதை இது பிரதிபலிக்க, அந்த இன்பம் இந்த இன்பத்தில் வெளிவந்தது!

    சச்சல சலவென வணுங்கு சலங்கை
    தத்திமி தகஜனு சுரங்கள் வழங்க
    நித்தில நகமொடு நிமிர்ந்த பதங்கள் – நடமாட

    மத்தள ஜதிகொடு வணங்கி மயங்கி
    வக்கனை மலர்குழல் விரிந்து சுழன்று
    மச்சம தெனும்விழி நகர்ந்து நகர்ந்து – விளையாட

    சிற்றிடை யெனுமொரு குழந்தை மருங்கி
    லொட்டிய அரைவடம் சினுங்கி நடுங்க
    உத்தர தனமவை யுயர்ந்து குலுங்க – வொருமாது

    சத்திய விறைவரு லங்க ளறிந்த
    சித்திர நடவகை பொழிந்த துகண்டு
    முற்றிய கவிமனம் வியந்து புகழ்ந்து – மகிழாதோ!!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 92

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 92

    நாங்குநேரி வாசஸ்ரீ

    92. வரைவின் மகளிர்

    குறள் 911

    அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
    இன்சொல் இழுக்குத் தரும்

    நேசமில்லாம பணத்து மேல ஆச வச்சி இனிக்க பேசுத தாசியோட பேச்சு ஒருத்தனுக்கு துன்பத்தக் கொடுக்கும்.

    குறள் 912

    பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
    நயன்தூக்கி நள்ளா விடல்

    எம்புட்டு ஆதாயம் கெடைக்கும்னு பாத்து அதுக்கேத்தாமாரி இனிக்க இனிக்க பேசுத தாசிய நம்பி ஏமாறக் கூடாது.

    குறள் 913

    பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ அற்று

    பொருள் மேல மட்டுமே ஆச வச்சி அதுக்காவ பொய்யா கட்டி அணைக்குத தாசி கூட இருக்கது, இருட்டு அறையில சம்பந்தமில்லாத பொணத்த அணைச்சிக் கிட்டதுக்கு சமானமாவும்.

    குறள் 914

    பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
    ஆயும் அறிவி னவர்

    அருள மட்டுமே தேடுத அறிவுள்ளவுக பொருள விரும்புத தாசியோட சேந்து இன்பத்த அனுவிக்க விரும்ப மாட்டாக.

    குறள் 915

    பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
    மாண்ட அறிவி னவர்

    சொந்த அறிவுள்ள படிச்ச புத்திசாலிங்க எல்லாருக்கும் பொதுவா இருந்து இன்பத்த தருத தாசி பின்னால போவ மாட்டாக.

    குறள் 916

    தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
    புன்னலம் பாரிப்பார் தோள்

    தன்  அழக நெனச்சி தலக்கனம் புடிச்சுத் திரிஞ்சு அத வித்துப் பொழக்கித தாசி பொறத்தால படிச்ச பெருமக்க போவ மாட்டாக.

    குறள் 917

    நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
    பேணிப் புணர்பவர் தோள்

    நெஞ்சுறுதி இல்லாதவுக தான் மனசார இல்லாம வெறும் பொருளுக்கு ஆசப்பட்டுக் கூடுத தாசி பின்னால போவாக.

    குறள் 918

    ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
    மாய மகளிர் முயக்கு

    .வஞ்ச மனசுள்ள தாசிகிட்ட மயங்கி கெடக்க புத்திகெட்டவன மோகினி பிடிச்சதா சொல்லுவாக.

    குறள் 919

    வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
    பூரியர்கள் ஆழும் அளறு

    ஒழுக்கங்கெட்ட தாசியோட தோள் கூறுகெட்டவன் விழுந்து கெடக்க நரகத்துக்குச் சமானம்.

    குறள் 920

    இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு

    மனசு ஒருத்தங்கிட்டயும் ஒடம்பு ஒருத்தங்கிட்டயுமா ரெண்டு மனசா இருக்க தாசியும், கள்ளும், சூதாட்டமும் இந்த மூணு வகையும் லச்சுமினு சொல்லுத திருமகள் வெலக்கி வச்சவுகளுக்கு ஒறவா வந்து அமையும்

    Share
  • மாமூல் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மாமூல் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

     

    சையத் ஹக்கீம் அன்சாரி சந்தைக்கு போயிருந்தார். சில பொருள்களுடன் திரும்பி வரும்போது இதுவரை கேட்கப்படாத ஒரு விசித்திரமான சத்தம் கேட்பதாக அவருக்கு  தோன்றியது. அவர் வழி ஓரத்தில் செவிமடுத்து நின்றார்.

    “என்ன இப்படி நிக்கிறீங்க?” கொய்யாப்பழ வண்டியை தள்ளிக் கொண்டு செல்கின்ற குருதாஸ் அவரிடம் கேட்டான். கொஞ்சம் பின்னால் பல பாதைகள் கூடுகின்ற இடத்தில் வைத்துதான் குருதாஸிடமிருந்து பத்து ரூபாய்க்கு கொய்யா வாங்கியிருந்தார்.

    ”எனக்கு சாகறதுக்கு நேரம் ஆச்சுனு தோணுது” அவர் மெதுவாக சொன்னார்.

    அடிக்கடி யாரோ சத்தம் விடுவது போல முழங்கிக் கொண்டு செல்கின்ற சர்வன் ரயில் வண்டியின் சப்தங்கள், டாக்ஸிகளினுடையவும் இரண்டு அடுக்கு பஸ்ஸினுடையவும் இரு சக்கர வண்டிகளினுடையவும் சத்தங்கள் வழிவாணிபக் காரர்களின் ஓசைகள் சிறுவர்களின் ஓசைகள் இவையெல்லாம் சையத் ஹக்கீம் அன்சாரியின் காதுகளிலிருந்து அகன்றது. முன்பு எப்போதும் கேட்கப்படாத ஒரு சத்தம் அசாதாரணமான விதத்தில் அவருடைய காதுகளில் முழங்கிக் கொண்டிருந்தது.

    ஹௌசான்!………… அவர் சத்தமாக தனது மூத்த மகனை அழைத்தார்.

    ஹௌசான் கேட் வே ஆஃப் இந்தியாவின் எலிபன்ட் குகைகள் உள்ள வழியில் ஒரு படகில் இருந்தான். சக்தமான அலைகளில் பட்டு ஆடுகின்ற படகை கட்டுப்படுத்துகின்ற வேலைக்கிடையில் தனது உதவியாளனிடம் கூறினான்.

    ”யாரோ என்னை கூப்பிடுறாங்க..”

    அப்போது, சையத் ஹக்கீம் அன்சாரியின் இரண்டாவது மகன் இஸ்மாயில் நரிமன் பாயின்ட் வழியாக பூக்களால் அலங்கரித்த குதிரை வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். பெல்ஜியத்தில் இருந்து வந்த ஒரு குடும்பம்தான் குதிரை வண்டியில்/ அலங்கரித்த தொப்பிகள் அணிந்த இரண்டு மக்களும் அவர்களுடைய பெற்றோரும். அவர்கள் நால்வரும் நகர காட்சிகளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் அடிக்கடி எங்கெங்கோ கை நீட்டி உற்சாகத்துடன் சத்தம் போட்டனர் அவர்களவெச்சு சவாரி செய்வது இஸ்மாயிலுக்கு அளவற்ற மகிழ்ச்சியாய் இருந்தது. அவன் அவர்கள் கேட்பதற்காக உடலை அசைத்து பாடினான்.

    அச்சி மும்பை……………… அச்சி மும்பை………………………..

    ”இஸ்மாயில்…………….. சையத் ஹக்கிம் அன்சாரி அழைத்தான்.

    பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆச்சரியத்துடன் திரும்பினான். அவனுடைய பெயரும் இஸ்மாயில் என்பதாயிருந்தது.

    “மரணம்னா  என்னன்னு உனக்குத் தெரியுமாப்பா………”

    ”தெரியாது நான் வளர்த்த கிளி ரெண்டு நாள் முன்னாடி செத்திடுச்சு. அவன் கூறினான்.

    ”நானும் சாகப் போறேன்.” அவர் வெளிப்படுத்தினார் .

    அது இஸ்மாயிலுக்கு நம்பமுடியவில்லை.

    ”பாபா இப்போதைக்கு ஒன்றும் சாகமாட்டீங்க, பார்த்தா நோய் ஒன்றும் இல்லையே”

    ”அதனாலே இல்ல, ஒவ்வொருத்தருக்கும் இத்தனை காலம்னு இருக்கு. அது முடிஞ்சி கூடுதலா ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது. மரணத்தின் சுவை என்ன என்பதை நான் அறிந்து கொண்டு இருக்கிறேன்.”

    மரைன் டிரைவில் தாராபோரிவாலா அக்வோரியத்திற்கு  முன்பாக பெல்ஜியத்தில் இருந்து வந்த குடும்பம் இறங்கியதும் வேறு பயணிகளை எதிர்பார்க்காமல் அன்றைய வேலையை முடித்து விட்டு இஸ்மாயில் தன்னுடைய குதிரை வண்டியில் மிக வேகமாக வீட்டிற்கு திரும்பினார். அவருடைய மனதில் ஏதோ குழப்பம் நிலவியது வெள்ளைக் குதிரைகள் இரண்டும் அவனுடைய மனதை புரிந்த வண்ணம் எப்போதும் விட அதிக வேகமாக ஓடியது.

    சையத் ஹக்கீம் அன்சாரி கண்களை திறந்தார் அவர் தனது மக்களைப் பார்த்தார். இருவரும் ஒரே நேரத்தில் குனித்து நின்றனர்.

    அப்பாஜி இப்போ நல்லா இருக்கா? ஹௌசான் கேட்டான்.

    ”இது வெறும் தலைச்சுற்றல் தான். இஸ்மாயில் கூறினான்.

    ஹௌசானின் மனைவி நூர்ஜஹானும், இஸ்மாயிலின் மனைவி மும்தாஜும் மக்களை சேர்த்து பிடித்துக்கொண்டு பின்னால் நின்றனர். அப்பாஜி கண்கள் திறப்பதைப் பார்த்து கொஞ்சம் முன்னால் வந்தனர். அவர் எல்லோரையும் பார்த்தார். திறந்து வைத்த ஜன்னல் வழியாக ஒரு சிறிய வானம் தெரிந்தது மரணத்தைக் குறித்த ஒரு ஞாபகப்படுத்தலாக அவர் அதை உள்வாங்கினார். ஏதோ சொல்வதற்காக அவருடைய  நா அசைந்தது. அறைக்குள் அமைதி அதிகரித்தது. ஹௌசானும் இஸ்மாயிலும் காதுகளை கூர்மையாக்கி மிக்க கவனத்துடன் நின்றனர்.

    ”நான் செத்துப் போனா என்னை சவப்பெட்டியில் அடைத்து வைக்கக் கூடாது”……. என்று சையத் ஹக்கீம் அன்சாரி கூறினார்.

    ஹௌசானும் இஸ்மாயிலும் திடீரென உருவான பிரமிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். மசூதியில் சித்திர வேலைப்பாடுகள் செய்த அழகான ஒரு சவப்பெட்டி இருக்கிறது. அதில் தான் பிணங்களை புதைக்க கொண்டு செல்வர்.

    ”ஒரு மஞ்சணை  உருவாக்கணும் மூங்கில் தண்டுகளால், அதில் என்னை எடுத்து படுக்கவெச்சு சிவப்புத் துணியில மூடணும். அதுக்கு மேல வெள்ளப் பூக்களை தூவி விடுங்க. நிறைய வேண்டாம்.”

    ஹௌசானும் இஸ்மாயிலும் சிறிது நேர படபடப்பை கடந்து அப்பாஜியின் ஆசையை நிறைவேற்றுவோம் என்று முடிவுக்கு தலையசைத்தனர். சையத் ஹக்கீம் அன்சாரி திருப்தி அடைந்தார்

    ”நீங்க நல்லவங்க. என்னோட எந்தவொரு ஆசையையும் நீங்க நிறைவேற்றுவீங்கனு  எனக்குத் தெரியும்.”  நிறுத்தினார்.  மீண்டும் பேசத் தொடங்கினார். ”முடியல இனிமே தா முக்கியமான ஒரு விஷயம்.”

    மக்கள் அது என்ன என அறியும் எதிர்பார்ப்போடு நின்றனர்.

    ”என்னுடைய உடலை மண்ணில் புதைக்க கூடாது, சிதை மூட்டி எரிக்க வேண்டும்.”

    பக்கத்து வீட்டுக்காரர்களான சியாம் சரணும், கஜானன் கீர்த்திகரும் நோய்வாய்ப்பட்டதை அறிந்து பேசுவதைக் கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தனர்.  இருவரும் திகைத்தனர் ஒரு முஸ்லிமின் உடல் எரிப்பதா? சையத் ஹக்கீம் அன்சாரிக்கு என்ன ஆச்சு!..  சிந்தனை சக்தி நஷ்டப்பட்டுருச்சா?..

    ”இதோ என்னோட ரெண்டு நண்பர்கள் இவர்களை நான் சாட்சி வைக்கிறேன். என்ன தீ மூட்டி எரிப்பீங்கன்னு நீங்க எனக்கு உறுதித் தரணும். அப்படீனாதா எனக்கு சமாதானமா சாக முடியும்” சையத் ஹக்கீம் அன்சாரி இரண்டு மகன்களையும் மாறி மாறிப் பார்த்தார்.

    தெருவின் மேற்குப் பக்கம் உள்ள மசூதியில் ஒரு வேனல் காற்று வீசி அடித்தது. அங்கே தங்கி இருப்பவர்கள் பலரும் தூசியில் இருந்து காப்பாற்றிக்கொள்ள மூக்கைப் பொத்தினர். காற்று மங்கிய சுவர்களுக்கு இடையில் சுழன்றது, சிலர் கபத்துடன் இருமினர். மேல்நிலையில் வசிக்கின்ற புறாக்கள் ஒரு விபத்தின் அறிகுறியாக முனகின. மசூதியின் கதவை அடைத்துவிட்டு மியான் அப்துல் அக்தரும், ஃபாரூக்மௌலவியும் மற்றவர்களும் தெருவில் இறங்கினர். சையத் ஹக்கீம் அன்சாரியின் வீட்டை இலக்காக வைத்து அதி வேகமாக நடந்தனர்

    ”அன்சாரி நாங்க கேள்விப்பட்டது நெஜமா? அவருடைய உடம்புக்கு நேராகக்குனிந்து நின்று ஃபாரூக்மௌலி கோபத்தோடு கேட்டார்.

    நேரம் கடந்தது.

    ”நீங்க ஏன் ஒன்னும் பேசாம இருக்கீங்க” மியான் அப்துல் அத்தர் சத்தமிட்டார்.

    ”என்னுடைய உடல் அக்னியினுடையது” சையத் ஹக்கீம் அன்சாரி கூறினார்.

    அவர் ஆச்சாரங்களுக்கு எதிரான ஒரு சடங்கை விரும்புகிறார் என்பது தெருவில் வசிக்கும் அனைவருக்கும் தெரிந்தது. அதன் உண்மையை அறிய பலரும் அவர் வீட்டிற்கு வந்தனர் எதற்காக அவர் தனது உடலை அக்னிக்குச் சமர்ப்பிக்கிறார் என சிந்தித்த போது யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. யதார்த்தமாக சில கருத்துக்கள் உயர்ந்தன. ஒரு வேலைக்கார பிராமணனை அவர் கொன்று புதைத்து விட்டார் எனவும் அந்த பாவ விமோசனத்திற்காக தனது ஆசாரங்களை எதிர்க்க பிள்ளைகளை கட்டாயப்படுத்துகிறார் என்றும் ஒரு சிலர் கூறினர். வேறு சிலர் அவர் மீது ஒரு கொலை குற்றத்தை சுமத்த விரும்பவில்லை. தக்க சூழ்நிலைக்கொப்ப அவர்கள் வேறொரு கதை உருவாக்கினர். அது இப்படி இருந்தது: சையத் ஹக்கீம் அன்சாரி தனது சிறுவயதையும், இளமைப் பருவத்தையும் காஷ்மீரில் தான் கழித்தார். அவருக்கு அன்று காஷ்மீரில் ஒரு பண்டிட் மகளுடன் மனவிருப்பம் ஏற்பட்டது. அவள் துர்மரணத்தை நேரிட்டு சிதையில் எரிந்ததன் துக்கம் தாங்காமல் காஷ்மீரை விட்டு வந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் காஷ்மீருக்கு போகவே இல்லை. இப்போது மரண நேரத்தில் அவர் அவருடைய காதலை தீவிரமாக நினைத்துப் பார்க்கிறார்.

    அது என்னமோ இருக்கட்டும் ஒரு முஸ்லிமுக்கு சேர்ந்ததல்ல சிதை.

    தெருவில் தர்பூசணி வியாபாரி நஜிமுதீன் பக்கத்து வியாபாரி குருதாசிடம்  கூறினான். மத சம்பந்தப்பட்ட காரியங்களில் நஜிமுதீன் பெரிய பண்டிட் ஒன்றுமில்லை என்றாலும் அவனுக்கு சையத் ஹக்கீம் அன்சாரியின் பிணத்தை எப்படி அடக்கம் செய்வது என்பதில் ஒரு தெளிவான கருத்து இருந்தது.

    “ஆனா அன்சாரி சாப் விரும்பறது ஒரு இந்து முறைப்படியான அடக்கத்தை”…… குருதாஸ் கூறினார்.

    ”எங்க ஆளுங்க என்ன வெறும் காசு வாங்கறவங்கனா உங்களோட நினைப்பு. நாங்க ஒரு போதும் இதுக்கு சம்மதிக்க மாட்டோம்” நஜிமுதீன் கூர்மையான குரலில் கூறினான்.

    ”சால வாயை மூடுங்க நீங்க எல்லாம் கைகட்டி பார்த்துட்டுதா இருப்பீங்க அன்சாரி சாவுக்கு நாங்க சிதை தயாரிப்போம்”. குருதாஸ் வீரத்தோடு  கூறினான்.

    “எனக்கொரு தர்பூசணி…” சின்ன இஸ்மாயில் நஜிமூதினிடம் கேட்டான்.

    அவன் அதைக் கேட்காமல் தர்பூசணி வெட்டும் கத்தியுடன் குருதாஸிற்கு நேராக குதித்தான். குருதாஸின் கையிலும் கத்தி இருந்தது. கொய்யாப்பழம் அறுப்பதற்காக பயன்படுத்தப்படும் கத்தி அவ்வளவு  பெரிதல்ல இருந்தாலும் நல்ல கூர்மையுடையதாக  இருந்தது.

    மூன்றாவது குத்து வரை இருவரின் கால்களும் உறுதியாக நின்றது. நான்காவது குத்திற்கு இருவரும் மண்ணில் சரிந்தனர். அதற்கிடையில் நஜிமுதீனின் கால்பட்டு குருதாசின் கொய்யாப் பழ வண்டி கீழே விழுந்தது. கொய்யாப்பழம் முழுவதும் நிலத்தில் சிதறியது. குருதாஸ் அவற்றுக்கு இடையில் மண்டியிட்டு அமர்ந்தான். ஒரு நிமிடத்திற்கு கொய்யாவின் மனத்தை உணர்ந்தான். அதற்குள் நஜிமுதீன் பின்னிலிருந்து அவனது கழுத்தை வெட்டினான். சின்ன இஸ்மாயில் கத்தினான். தெருவில் பலரும் சத்தமிட்டனர். சையத் ஹக்கீம் அன்சாரிக்கு  ஒன்றும் கேட்கவில்லை. அவருடைய உயிர் உடலைவிட்டு பிரிந்திருந்தது.  இனி என்ன செய்வது என்ற கேள்வியுடன் ஹௌசானும் இஸ்மாயிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க, சாத்திய கதவுக்கு வெளியில் ஆரவாரம் உயர்ந்தது.

    திறங்க…………….…கதவத்  திறங்க……………….

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
    Share
  • படக்கவிதைப் போட்டி – 238

    படக்கவிதைப் போட்டி – 238

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (29.12.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 237இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 237இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. லோகேஷ் எடுத்துள்ள இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 237க்கு அளித்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    மிதிவண்டிகள் அருகி மோட்டார் வாகனங்கள் பெருகிச் சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் இன்னமும் மிதிவண்டியை மதித்து மிதிப்பதற்கே இந்தப் பெரியவருக்கு நாம் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும். எனினும் சட்டைகூட அணியாமல் வெயிலில் செல்லும் இவருடைய தளர்ந்த தோற்றம் நம் மகிழ்ச்சியை வற்றச்செய்துவிடுகின்றது.

    இப்படத்துக்குப் பொருத்தமான பாடலை படைத்துத் தரும்படி நம் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கின்றேன்.

    *****

    ’பெற்ற பிள்ளைகள் வெளிநாடேகிவிட, உற்ற துணையாயிருந்தவளோ விண்ணேகிவிட, துணையேதுமின்றித் தன் பிழைப்புக்காய் உழைக்கும் முதியவர் இவர்’ என்று இப்பெரியவரின் வருந்தத்தக்க வாழ்வைக் கவிதையாக்கியிருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உயிர்த் துணை…

    பெற்றெடுத்துப்
    பேணி வளர்த்துப்
    படிக்கவைத்த பிள்ளைகள்,
    போய்விட்டனர்
    வெளிநாட்டுக்கு-
    விமானம் ஏறி..

    உற்ற துணையாயிருந்த
    ஒருத்தியும்
    போய்ச் சேர்ந்துவிட்டாள்,
    ஒற்றை ஆளாய் இவரை
    விட்டுவிட்டு..

    மற்றவர்களும்
    மறந்துவிட்டனர்..

    உயிரே யற்ற
    ஒரே துணை,
    ஓட்டை மிதிவண்டியில்
    வற்றிய உடலுடன்
    வேலைக்குச் செல்கிறார்-
    வயிற்றுப் பிழைப்புக்காக…!

    *****

    ’மாசு இல்லா வான்வெளியும், தூசு இல்லாச் சாலையுமாகக் காட்சியளிக்கும் கிராமத்தில் இம்முதியவர் மேற்கொள்ளும் சுகமான மிதிவண்டிப் பயணம் வருங்காலத்தில் படத்தில் மட்டுமே சாத்தியமாகிடுமோ?’ என வருந்துகின்கிறார் திரு. கோ. சிவகுமார்.

    காட்சிப் பொருள்

    மாசு இல்லா வானவெளி!
    தூசு இல்லாச் சாலை வழி!
    ஓங்கி வளர்ந்து
    மொட்டையான
    ஒற்றைப் பனைமரம்!
    ஆங்காங்கே
    நிழல் மரங்கள்!
    தண்ணீர் வண்டிகளும்
    சரக்கு வண்டிகளும்
    தடயங்கள் பதிக்காத சாலை!
    அதில்
    சுகமான மிதிவண்டிப் பயணம்!
    இந்தக் கிராமத்தின்
    அடையாளங்களெல்லாம்
    இனி
    படத்தில் மட்டுமே
    பார்க்க முடியும்
    காட்சிப் பொருளாய்
    ஆகிடுமோ!

    *****

    ’ஓடி ஓடி உழைத்து நாடி தளர்ந்தபின்னும் உழைத்துச் சாப்பிட்டால்தான் சோறு உடம்பில் ஒட்டும் எனும் கொள்கையுடைய இம்முதியவரைச் சுமந்துசெல்லும் மிதிவண்டி முன்பு விமானமும் தூசுதான்!’ என்கிறார் திரு. ராவணா சுந்தர்.

    உள்ளம் – வயதறியாது

    பொட்டவெளிக்காட்டில்
    உச்சிவெயில் அடிக்கையில்
    நட்ட நடுச் சாலையில்
    பட்டமரமெல்லாம்
    மூலைக்கு ஒன்றாய்
    பேருக்கு நிற்கையில,
    பட்ட கடனெல்லாம்
    பலனற்றுப் போனாலும்,
    கருத்த மேனியில்
    விழுந்த தழும்புகள்
    பல கதைகள் கூறும்,
    மேலாடை விடுத்து
    உன் அங்கங்கள்
    வடித்த கண்ணீரில்
    கலந்த உதிரங்களை
    என்றும் உன் தோள்களுக்குத்
    துணையான துண்டின் வாசமறியும்,
    செருப்பாய் நீ
    சிற்றுண்டி வித்து
    உழைத்துச் சீராட்டிய உறவுகளெல்லாம்
    சீமையில் செழிப்புற,
    எலும்புகள் மேற்தோலில் எட்டிப்பார்த்தாலும்
    ஒட்டிய வயிற்றுக்கு
    உழைச்சாதான் சோறு
    உடம்பில் ஒட்டும்னு,
    உன்குருதி புடைக்க
    நீ ஓங்கி மிதிக்கிற
    மிதிவண்டியப் பார்க்கும்போது,
    தூரப் பறக்கும் விமானத்தையும்
    சற்று ஏளனமாப் பார்க்க வைக்கும்.

    *****

    உறவுக்கும் உணர்வுக்கும் சொந்த பந்தங்களுக்கும் அடிமையான வாழ்க்கை நிகழ்வுகளைச் சுழன்றுசெல்லும் மிதிவண்டிச் சக்கரங்களைப்போலச் சற்றே சுழற்றிப் பார்க்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    தொலை தூரத்து வெளிச்சம்

    மெல்ல மிதிக்க
    மிதிவண்டிச் சக்கரம்
    மெல்லச் சுழலுது முன்னே!
    நினைவுச் சக்கரமோ
    மெல்லச் சுழன்றது பின்னே!

    இனி ஒரு சுதந்திரம் வேண்டும்
    என்று அன்று குரல் கொடுத்த அண்ணல்
    சுதந்திரம் கிடைத்ததோ நாட்டுக்கு
    ஆண்டாண்டு காலமாய்
    அடிமைகளாய் வாழ்ந்ததால்
    இன்றும் இருக்கிறோம் அடிமைகளாய்!

    மிதிவண்டியில் சங்கிலியால் இணைந்து
    முன் சக்கரத்தோடு பயணம் செய்யும்
    பின் சக்கரமாய்த்
    தாலிச் சங்கிலியால் என்னோடு இணைந்து
    வாழ்க்கைப் பயணத்தை அவளோடு துவங்கிட
    உறவுக்கு அடிமையாய் ஆனேனே!

    உணர்வுக்கு அடிமையாகிட
    உயிர்களை அவள் சுமந்திட
    புதுச் சொந்தங்களுக்கு அடிமையாய் ஆனேனே!
    உறவுகளும் சொந்தங்களும்
    அன்பால் இணைந்திட
    பந்தங்களுக்கு அடிமை ஆனேனே!

    அத்தனையும் இழந்து
    தனிமரமாக நிற்கையில்
    அடிமைச் சங்கிலிகள் அறுந்து போய்
    தொடருது வாழ்க்கைப்பயணம்!
    வெளிச்சம் தரும் விடுதலை வேண்டி
    இறைவா உன் திருவடி தேடி
    இன்னும் ஒரு சுதந்திரம் வேண்டும்!

    *****

    செப்பமிட்ட பாதையில் மிதிவண்டியில் பயணிப்பதால் மட்டும் பண்படா வாழ்க்கையினைச் சரிப்படுத்திவிடமுடியாது எனும் வாழ்வியல் உண்மையை விளம்பியிருக்கின்றார் திருமிகு. சத்யா இரத்தினசாமி.

    வாழ்க்கை மிதித்து சலித்த தடங்களிலே…
    மிஞ்சியது மிதிவண்டிதான்…….. எனச் சலித்துக்கொண்டாலும்
    இயற்கைக்கு எதிராக எரிபொருள் வாகனங்கள் செய்யும் இம்சைக்கு
    இது போதுமென்று , நீவிர் தேற்றிக்கொள்வது தெரிகின்றது.
    பாதைகள் செப்பமிடப்பட்டாயிற்று ………..
    எனினும் இன்னும் பண்படாத வாழ்க்கையினை
    இரு சக்கர இடைவெளியில் மிதித்து மிதித்து மீள முடியாது..
    மீண்டும் இன்றும் புறப்பட்டு விட்டாய்………
    ஓய்வைத்தான் உள்ளம் வேண்டினாலும் உறங்கவிடாத் தேவைக்காக………

    *****

    சுழலும் மிதிவண்டிக்குப் போட்டியாகச் சீரிய கருத்துக்கள் பலவற்றைத் தம் கவிதைகளில் சிறப்பாகச் சுழலவிட்டிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள் உரியவை.

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    பயணங்கள் முடிவதில்லை!

    ஆதாரம் தேடித் தேடி
    ஆண்டாண்டு அலையும் கொடிகள்!
    சேதாரம் கிட்டாமல்
    செழித்துக் காய்ந்த நிலங்கள்!
    நீராதாரம் பொய்த்துப் போய்
    காய்ந்த நிலமடந்தை!
    ஏர்முனை தேய்ந்து போய்
    மழுங்கிய மண்ணின் மைந்தர்!
    ஒட்டிய தேகம் பட்டினி வயிறு
    எலும்பு தெரியும் வெற்றுடம்பு
    கந்தல் நிறை வேட்டி – என
    உன்நிலை பார்த்தபின்பு
    நூற்றாண்டு பல கண்டாலும்
    காந்திக்கும் உடை மாறாது!

    கண்ணில் கனவுகள் வண்ணம் இழந்து போனாலும்
    கண்ணீர் வற்றிக் காய்ந்து போனாலும்
    சுழலும் சக்கரம் சுற்றுவது நிற்பதில்லை – இவர்
    வாழ்க்கைத் துயரங்கள் முடிவிற்கு வருவதில்லை!
    இங்குப் பொய்த்தது பருவம் மட்டுமல்ல
    பதவியிலிருப்போர் வாக்கும் தான்…!

    ”ஒட்டிய தேகமும், பட்டினி வயிறும், கட்டியிருக்கும் கந்தல் வேட்டியும் இப்பெரியவரின் இல்லாமைக்குக் கட்டியங்கூறி நிற்கின்றன. இந்த அவலநிலைக்கு இவர்மட்டுமா காரணம்? வாக்கு வாங்குவதற்காகச் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிய அரசியலாளரும் அல்லவோ காரணம்!” என்று நாட்டின் எதார்த்த நிலையைப் பாட்டில் வெளிக்காட்டியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • (Peer Reviewed) சம்புவராயர் கால அஞ்சினான் புகலிடங்கள்

    (Peer Reviewed) சம்புவராயர் கால அஞ்சினான் புகலிடங்கள்

    மு.கயல்விழி,
    உதவிப் பேராசிரியர் (தமிழ்),
    பச்சையப்பன்  மகளிர்  கல்லூரி,
    காஞ்சிபுரம்.
    மின்னஞ்சல்: kayalarul22@gmail.com

    முன்னுரை                                                                                                                         

    இடைக்காலத் தமிழக வரலாற்றில் அஞ்சினான் புகலிடங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அக்காலத் தமிழகத்தின்; வடபகுதியைச்  சம்புவராய மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்தனர். இவர்கள் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் தனியரசு  செலுத்தியவர்கள். வட தமிழகத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர்கள் இவர்களே. இவர்கள் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாளர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த வஞ்சினான் புகலிடங்கள் அவர்களின் மேம்பட்ட பொருளியல் அறிவைப் புலப்படுத்தின. தமிழக வணிகர்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அஞ்சினான் புகலிடங்கள் இவர்கள் வணிகத்தின் மீதும், வணிகர் மீதும், நாட்டின் பொருளியல் நலன் மீதும், எத்துணை அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதைப் புலப்படுத்தின. அஞ்சினான் புகலிடங்களால் வணிகம் செழித்தது; வணிகர்கள் பாதுகாக்கப்பட்டனர். இதன் விளைவாய் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தது. ஆனால் அஞ்சினான் புகலிடங்களை ஆராய்வது மிகவும் சவாலான மற்றும் சிக்கலான பணியாகும். இதன் சான்றுகள் தொல்லியல் துறை சார்ந்தது என்பதால் இது குறித்து அதிக ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே இது சார்ந்து இந்த ஆய்வு மேற் கொள்ளப்படுகின்றது.

    இடைக்காலத் தமிழகத்தின் அரசியல் (அவல) நிலை

    இடைக்காலத் தமிழகத்தின் அரசியல் நிலை மிகவும் குழப்பம் நிறைந்தது. தமிழகத்தின் தீயூழின் காரணமாய்ப் பேரரசுச் சோழர்களும், அவர்களைத் தொடர்ந்து பிற்காலப்பாண்டியர்களும் வீழ்ச்சியடைந்தனர். அவர்களின் வீழ்ச்சி மாபெரும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியது. தமிழகத்தில் அரசியல் குழப்பம் நீடித்ததுடன், எங்கும் அமைதியின்மை நிலவியது. தமிழகமே போர்க்களமாக மாறியது. பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி.1219ல் சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்று அழிவை ஏற்படுத்தினான். இதன்பின் அரசனான ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1257ல் சோழநாட்டை வென்று நிர்மூலமாக்கினான் (பாண்டியர் வரலாறு. ப:445). இந்நிலையில் தெலுங்குச் சோழ மன்னனான விஜய கண்டகோபாலன் கி.பி. 1267ல் காஞ்சிபுரத்தை வென்றான் (பிற்காலச் சோழர் சரிதம் .ப:386). சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜன் எந்தப் படையெடுப்பையும் தடுக்கவியலாத அளவுக்குப் பலவீனமானான். இது தவிர சேரமன்னன் பாஸ்கர இரவிவர்மன் கி.பி.1313ல் படையெடுத்துச் சோழநாட்டை வென்று தொண்டை நாடு வரை தன் ஆதிக்கத்தைப் பரப்பினான். கி.பி.1313ல் காகதீய மன்னன் பிரதாபருத்திரன் தன் தளபதி முப்பிடி நாயகனை அனுப்பிக் காஞ்சிபுரத்தினைக் கைப்பற்றினான். போசள மன்னன் வீர நரசிம்மனும் தன் பங்குக்குப் பெரும் படையுடன் வந்து வெற்றி பெற்று, திருச்சி மாவட்டம் கண்ணனூரில் ஒரு அரசை நிர்மாணித்தான்.

    இதன் பின்னும்; அந்நியப் படையெடுப்புகள்; தொடர்ந்தன. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூர் (Malik Kafur)  தமிழகத்தின் மீது கி.பி.1311ல் படையெடுத்துப் பேரழிவையும், பெரும் சேதத்தையும் ஏற்படுத்கினான் (தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும்.ப:387). அவனைத் தொடர்ந்து குஸ்ருகான் (Khusro Khan) கி.பி.1318லும், உலூக்கான் (Ulugh Khan) கி.பி.1323லும், தமிழகத்தைச் சூறையாடி, பெரும் பொருளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இவ்வாறு தொடர்ச்சியான படையெடுப்புகளால் மக்கள் சிக்கிச் சின்னா பின்னமானார்கள். தமிழகத்தில்; தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை தோன்றியது. இந்நிலையில் பஞ்சங்களும் தோன்றி மக்களை வாட்டி வதைத்தன. கி.பி.1344ல் காஞ்சிபுரம் மாவட்டம் நெரும்பூரிலும் (ARE.No:276/1912), இதேவாண்டு வேலூர் மாவட்டம் கலவை (SII.Vol:7 No-444) மற்றும் குடிமல்லூரிலும் (ARE.No:420/1905) பஞ்சங்கள் தோன்றின. இதன் காரணமாய் மக்கள் கடுமையான இன்னல்கள் அடைந்தனர். இவ்வாறு ஓயாத படையெடுப்புகளாலும், இயற்கைச் சீற்றங்களாலும், இடைக் காலத் தமிழ் மக்கள் சொல்லவியலாத் துயரடைந்தனர்.

    அஞ்சினான் புகலிடங்களின் தோற்றம்

    அஞ்சினான் புகலிடம் என்றால் தஞ்சம் தேடி அஞ்சி வருபவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் அமைப்பாகும். அஞ்சினான் புகலிடங்கள் முதலில் எங்கு தோன்றின என்ற முடிவு இன்னும் எட்டப்படவில்லை. பண்டைய நாளில் சமணர்கள் இது போன்ற அடைக்கலங்கள்; வழங்கும் அமைப்புகளை நடத்தினர். இது “அபயதானம்”என்று அழைக்கப்பட்டது. வாழ்க்கைப் போரில் தோற்று, அனைத்தையும் இழந்து, அநாதைகளாகிய அபலைகளுக்கு உணவும், உடையும், உறையுளும் சமணப் பெரியோர்களால் சமணப் பள்ளிகளில் (சமண ஆலயம்) வழங்கப்பட்டது. சான்றாகத் திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள “ஜம்பை” என்ற ஊரினைக் கொள்ளலாம். இங்கு “கண்டராதித்தப் பெரும் பள்ளி” என்ற சமண ஆலயம் சோழர் காலத்தில் செயல்பட்டது. அங்கு “சோழத்துங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம்” என்ற அஞ்சினான் புகலிடம் செயல்பட்டது. அங்கு தஞ்சம் தேடி வருபவர்களுக்கு உணவும், உடையும், தங்குமிடமும் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் சமணர்களால் அமைக்கப்பட்ட இந்த அஞ்சினான் புகலிடங்கள் காலநிர்பந்தத்தால் அரசர்களாலே நடத்தப்பட வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

    சோழர் காலத்தின் இறுதியில் தோன்றிய அரசியல் குழப்பங்களால் சமயம் சாராத அஞ்சினான் புகலிடங்கள் தமிழகத்தின் பலவிடங்களில் தோன்றின. பின்னர் வந்த சம்புவராயர் காலத்தில் இது பல்கிப் பெருகின. சோழர்கள் ஆட்சிக்குப் பின் தொண்டை நாட்டை ஆண்ட சம்புவராய மன்னர்கள் நாட்டின் நிதி நிலையைச் சீர்த்திருத்த முனைந்தனர். சோழர் கால வரிவிதிப்பு முறைகள் இக்காலத்திற்குப் பொருந்தவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. வணிகம் அழிந்தது, வணிகர்கள் வறியவராயினர். பலவிடங்களில் வியாபாரிகள் அரசு வரிகளைச் செலுத்தவியலாமல் ஊர்களை விட்டு ஓடினர். எனவே வணிகத்துக்கும், வணிகர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய இன்றியமையாப் பணியைச் சம்புவராய மன்னர்கள் முதலில் கொண்டனர். இதன் காரணமாய் நாட்டின் பல பகுதிகளில் அஞ்சினான் புகலிடங்களை  ஏற்படுத்தினர்.

    அஞ்சினான் புகலிடங்களின் நிலை

    அஞ்சினான் புகலிடங்கள் போர்க் காலங்களில் துன்புற்ற மக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு அரண்கள் என்றும், வணிகர்களின் பாதுகாப்புக்காகவும். வணிகத்தின் வளர்ச்சிக்காகவும் நிறுவப்;பட்ட பொருளியல் அமைவிடங்கள் என்றும் இரு மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. கூர்ந்து ஆராயுமிடத்து அவை வணிகத்துக்காக நிறுவப்பட்ட புகலிடங்கள் என்பது தெளிவாகின்றது. அக்காலத்தில் போர்கள் என்பது அன்றாட நிகழ்வாய் மாறிய நிலையில் மக்களுக்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருந்தால் அது போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில்; அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அஞ்சினான் புகலிடங்கள் ஏதும் அவ்விடங்களில் அமைக்கப்படவில்லை. மாறாக இப்புகலிடங்கள் அமைக்கப்பட்ட இடங்களெல்லாம் வணிக மையங்களாகத் திகழ்ந்தன. புதியதாக அமைக்கப்பட்ட இப்பகுதிகளி;ல் அக்கால வணிகக் குடியினரான காசாயக் குடியினர் (கைக்கோளர், சாலியர், கோலியர், சேனையங்காடிகள், செக்குக் குடிகள், செட்டிகள் போன்றோர்) பெருமளவில் வரவேற்கப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர்.

    போர்களால்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமேயன்றி பாதுகாப்புப் பகுதிகள் அமைக்கப்பட்டிராது. அக்காலத்தில் போரால் நேரடியாக பாதிக்கப்பட்ட எவ்விடங்களிலும்; அஞ்சினான் புகலிடங்கள் அமைக்கப்பட்டதாகச் சான்றுகளில்லை. மாறாகப் புதியதாக அமைக்கப்பட்ட அஞ்சினான் புகலிடங்களில்; வணிக இனத்தவர்கள் வந்து குடியேறி வணிகம் புரிய ஊக்கமளிக்கப்பட்டதற்குச் சான்றுகள் உள. எனவே அஞ்சினான் புகலிடங்கள் நிறுவும் நடவடிக்கையானது போரினால் வணிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வணிகம் செழிக்க வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட பொருளியல் தொடர் நடவடிக்கையாகக் கொள்ளவேண்டும். சம்புவராய மன்னர்கள் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்; துரிதமாகப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டதுடன் பல  அஞ்சினான் புகலிடங்களை அமைத்தனர். எனவே, அஞ்சினான் புகலிடங்கள் என்பவை பொதுமக்களைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட அரண்கள் என்பதைவிட வணிகத்தையும்; வணிகர்களையும் பாதுகாக்க அரசு அமைத்த அமைவிடங்கள் என்பது சாலவும் பொருந்தும்.

    சம்புவராயர் கால அஞ்சினான் புகலிடங்கள்:-

    சம்புவராய மன்னர்கள் பல்லவர்களுக்குப் பின்பு வந்த சோழர் காலத்தில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை (வட தமிழ்நாட்டை) ஆண்ட அரச குலத்தவர் ஆவர். கி.பி 10 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை இவர்களுடைய ஆட்சி நிலைத்திருந்தது. ஆரம்பத்தில் காஞ்சிபுரத்தைத்  தலைநகராகக் கொண்டு சோழர்களின் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்த அவர்கள் பின்பு படைவீடு என்ற இடத்தில் தம் தலைநகரை மாற்றிக்கொண்டனர். இவர்கள் சோழர்கள் ஆட்சியில் முக்கியப் படைத்தலைவர்களாகவும் குறுநில மன்னர்களாகவும் பணியாற்றினார்கள். இவர்கள் தமிழகத்தின் சிறந்த புராதனத் தமிழினத்தைச் சார்ந்தவர்கள். சோழர்களுடன் நெருங்கிய திருமண உறவைக் கொண்டவர்கள். பல்வேறு  சம்புவராய மன்னர்களின் கல்வெட்டுகள் இவர்கள் பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்று உரைக்கின்றன (ARE.NO:244/1901 & ARE.NO: 453/1923-24 & ARE.NO:163/1915 & SII. Vol-3.No:63 & பெருமுக்கல் கல்வெட்டுகள், ப:60) மேலும் இவர்கள் பழம்பெருமை மிக்க வன்னிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் சோழர்களின் குறுநில மன்னர்களாகப் பணியாற்றிய இவர்கள் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் சுதந்திர மன்னர்களாகத் தனியரசு செலுத்தினர்.

    இடைக்காலத்தில் இடைவிடாத போர்களாலும், இயற்கைச் சீற்றங்களாலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எனவே, சம்புவராய மன்னர்கள் வணிகம் வளர்ப்பதை முதற்பணியாகக் கொண்டனர். முதலில் வணிகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு மண்டலங்கள் (அஞ்சினான் புகலிடங்கள்); அமைக்கப்பட்டன. இவ்வஞ்சினான் புகலிடங்கள் ஒரே இடத்தில் செறிந்து காணப்படாமல் நாடு முழுவது பரவிக் காணப்பட்டன. வணிக வளர்ச்சி தேவைப்படும் இடங்களில் இவை அமைக்கப்பட்டன. அஞ்சினான் புகலிடங்களி;ல் வந்து வியாபாரம் செய்ய வணிகர்கள் பெரிதும் வரவேற்கப்பட்டனர், அவர்கள் வணிகம் செய்து பிழைக்க ஊக்குவிக்கப்பட்டனர். அரசே இவ்விடங்களுக்குப் போதுமான பாதுகாப்பை நல்கியதுடன் வணிகர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க உறுதியளித்தது. சிலவிடங்களில் வணிகத் தெருக்கள் புதிதாய் அமைக்கப்பட்டன. அத்தெருக்களுக்கு பெயர்களும் சூட்டப்பட்டன. இங்கு புதிதாய்க் கடை வைத்து வணிகம் செய்யும் வணிகர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டி அரசுக்கு அவர்கள் முதலாண்டு செலுத்த வேண்டிய வரிகள் பெருமளவு தள்ளுபடி செய்யப்பட்டன. இவ்வாறு அஞ்சினான் புகலிடங்களில் வணிகத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் சிறப்பாக வழங்கப்பட்டது.

    சம்புவராய மன்னர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில்  அஞ்சினான் புகலிடங்களை நிறுவினர். ஆனால் இவற்றில் ஒரு சில மட்டுமே வெளிச்சத்திற்கு வந்தன. திருமல்லிநாத சம்புவராயன் விழுப்புரம் மாவட்டம் “செவலப்பொறை” என்ற இடத்தில் அஞ்சினான் புகலிடம் ஒன்றை அமைத்தான் (ஆவணம் இதழ் எண்:16,ப:104). வென்று மண்கொண்ட சம்புவராயன் வேலூர் மாவட்டம் “கீழ்மின்னல்”(ARE.No:135/1933-34), “கூடநகரம்” (ARE.No:137/1926), மற்றும் “வேப்பூரிலும்” (ARE.No:499/1926), திருவள்ளூர் மாவட்டம் “திருவேற் காட்டிலும்” (ARE.No:393/1958-59), காஞ்சிபுரம் மாவட்டம் “கொத்திமங்கலம்” (ARE.No:137/1926) என்ற ஊரிலும் அஞ்சினான் புகலிடங்கள் நிறுவினான். மூன்றாம்  இராஜநாராயணச் சம்புவராயன் திருவண்ணாமலை மாவட்டம் “வடமாதிமங்கலம்” (ARE.No:62/1933-34) என்ற ஊரில் அஞ்சினான் புகலிடம் அமைத்தான். குலசேகரச் சம்புவராயன் திருவண்ணாமலை மாவட்டம் “தெள்ளாறு” (ARE.No:70/1934-35) மற்றும் “இடைப்பாறையிலும்” (ARE.No:141/1941-42) அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தான். இவ்வாறு சம்புவராய மன்னர்கள் நாட்டின் பல பகுதிகளில் அஞ்சினான் புகலிடங்களை நிறுவி வணிகம் வளர்த்தனர்.

    முடிவுரை

    சம்புவராயர் அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு. அவர்கள் காலத்தில் நாடு முழுவதும் பரவலாக நிறுவப்பட்ட இவ்வஞ்சினான் புகலிடங்கள் வணிகத்தைப் பாதுகாத்தன. திருடர்கள், கொள்ளையர்கள், அந்நியர் படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்கள் இவற்றால் வணிகர்கள்  பாதிக்காமலிருக்க இவை பாதுகாப்பளித்தன. அஞ்சினான் புகலிடங்களில் வணிகம் செழித்தது, வணிகர்கள் கொழித்தனர். இங்கு பொதுமக்கள் தடையின்றி பொருட்களை விற்றும், அச்சமின்றி பண்டங்களை வாங்கியும் நாட்டின் பொருளியல் நிலையை உயர்த்தினர். இதனால் வணிகர்கள் நன்முறையில் பொருளீட்டியதுடன், அரசுக்கு முறையாக வரியும் செலுத்தினர். இதன் விளைவாய்; நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டது. போரினால் வீழ்ச்சியடைந்த பொருளியல் நிலை இவ்வாறு உயர்ந்தது. மக்கள் நிம்மதியுடனும், வளத்துடனும், மகிழ்வுடனும் வாழ்ந்தனர். இடைக்காலத் தமிழக வரலாற்றில் சம்புவராயர் அரசு மக்கள் நலன் சார்ந்த, பொருளியல் திறன் வாய்ந்த,  வணிகத் தொலைநோக்கு கொண்ட அரசு என்பதற்கு அவர்கள் ஏற்படுத்திய அஞ்சினான் புகலிடங்களே சாலச் சிறந்த சான்றுகளாகும்.

    விரிவாக்கம் (Abbreviations)
    1. ARE- Annual Report on Indian Epigraphy
    2. SII-South Indian Inscription
    கருவி நூற்பட்டியல் (Bibliography)

    1.Appadurai.A, (1990), Chennai, Economic Condition In South India, University of Madras.

    2.Neelakanta Sastri.K,A., (1975), Chennai, The Cholas, University of Madras.

    3.இராஜசேகரத் தங்கமணி.ம, (1978), சென்னை, பாண்டியர் வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

    4.சதாசிவப் பண்டாரத்தார்.தி.வை, (2008), சிதம்பரம், பிற்காலச் சோழர் சரிதம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

    5.பிள்ளை.கே.கே. (2013), சென்னை, தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராச்சி நிறுவனம்.

    6.தமிழக வரலாறு – சோழர் காலம், (1998), சென்னை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்

    7.நடன.காசிநாதன் & வசந்த கல்யாணி.அர (பதி), (1998), சென்னை, பெருமுக்கல் கல்வெட்டுகள், தமிழ்சாடு  அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சோழ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட குறுநில வேந்தர்களாகிய சம்புவராயர்களின் பங்களிப்பு, தமிழக வரலாற்றில் குறிப்பிடத் தகுந்ததாகும். கடைசியாகத் தமிழகத்தை ஆண்ட குறுநில மன்னர்களும் இவர்களே ஆவர். சோழர்களின் இறுதிக் காலத்தின்போது சமுதாயத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் குறிப்பிடத்தகுந்தது, அஞ்சினான் புகலிடங்கள் ஆகும். இந்தக் கட்டுரை இது குறித்துத் தெளிவாக விளக்குகிறது. அஞ்சினான் புகலிடங்கள் போர்க் காலங்களில் துன்புற்ற மக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு அரண்கள் என்றும், வணிகர்களின் பாதுகாப்புக்காகவும். வணிகத்தின் வளர்ச்சிக்காகவும் நிறுவப்பட்ட பொருளியல் அமைவிடங்கள் என்றும் இரு மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன என்று கட்டுரையாசிரியர் அஞ்சினான் புகலிடங்கள் குறித்துக் கூறுகிறார். இயல்பாகவே குறுநில மன்னர்கள் மக்களின் துன்பம் துடைப்பதற்காக மேற்கொண்ட பல வழிகளை வரலாற்றின் மூலமாக அறிகிறோம். அந்த வழியில் சம்புவராய மன்னர்களின் சமுதாயப் பணி ஆகிய அஞ்சினான் புகலிடங்கள் குறித்து இந்தக் கட்டுரை பேசுகிறது. சம்புவராயர் குறித்து மேலும் சில விளக்கங்களைக் கட்டுரையாசிரியர் சற்று விரியத் தந்திருக்கலாம்.  


     

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள் ; சிவனோடு பேசியவர்கள்- 3

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள் ; சிவனோடு பேசியவர்கள்- 3

    தி. இரா. மீனா            

    ஆதய்யா:

    சௌராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆதய்யா புலிகெரேவிற்கு [தற்போதைய லட்சுமேஸ்வரா] வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக வந்தவர். பிறகு அங்கேயே தங்கி பத்மாவதி என்னும் சமணப் பெண்ணை மணந்து கொண்டார்.தன் மாமனாரிடம் சிவபெருமானின் உயர்வை விளக்கிச் சொல்லி,விவாதித்து சௌராஷ்டிரத்திலிருந்து சோமேஸ்வ ரரைக் கொண்டு வந்து புலிகெரெயிலுள்ள சுராஹொன்னெ பாசடி யில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அவருடைய முத்திரை சௌ ராடிஷ்ர சோமேஸ்வரர்.வசனம்,மற்றும் ஸ்வர வசனங்களை எழுதிய வர். [ஸ்வரவசனங்களைப் பாடலாகப் பாடும் தன்மை -இன்றும் உள்ளது] அவருடைய வசனங்கள் இலக்கிய உயர்வும், தத்துவ மேன்மையும் கொண்டவை. சில வசனங்கள் :

    1.“கல்லுள் பொன் வெளிப்பட்டாலும்
         பொன் கல்லுக்கு அடிமையாகுமா?
         சிப்பியிலிருந்து முத்து பிறப்பினும்
         முத்து சிப்பிக்கு  அடிமையாகுமா?
         கற்பகமரம் பூமியில் பிறந்தால்
         அது பூமிக்கு அடிமையாகுமா?
         சரணர்கள் தாயின் கருவிலிருந்து பிறப்பதால்
         சரணர் பெற்றோர்க்கு அடிமையாக முடியுமா?
         சௌராஷ்டிர சோமேஸ்வரா
         உன் சரணர்கள் சுதந்திரமானவர்கள்”

    2.குரவன் தான் உருவாக்கும் குடத்திலிருப்பதில்லை
        விவசாயி தான் வளர்க்கும் தானியத்திலிருப்பதில்லை.
        தேரை உருவாக்கும் தச்சன் தேரிலிருப்பதில்லை.
        சிவன் இந்த உலகைக் கட்டுப்படுத்தும்  பொறிஞனாக         
        இயந்திரத்துடன் இருக்கிறான் என்று  நீங்கள் சொன்னால்
        சௌராஷ்டிர சோமேஸ்வரன் ஒப்புக்கொள்வதில்லை.” 

    3.“நேர்மையான செயல் பயிற்சி ஸ்படிகமாய் இல்லாதவரை
         ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்றாலென்ன?
         அறுபத்தெட்டு புனித ஸ்தலங்களுக்குப் சென்றாலென்ன?
          நீ கைவிட்டாலென்ன? பற்றிக் கொண்டாலென்ன?
         சௌராஷ்டிர சோமேஸ்வரனோடு ஐக்கியமாகிற
         பேரானந்தம்   நேர்மை உடைய சரணர் மனதில் மட்டும்
         ஒளியான சிவலிங்கமாய் உள்வாங்கப்பட்டிருக்கும்”

    4. “இமைகள் மூடி வடிவமற்றதைக் காணவேண்டும்
          செவிகள் மூடி ஒலியற்றதைக் கேட்கவேண்டும்
          நாவடக்கி சுவையற்றதைச் சுவைக்கவேண்டும்
          நாசியடக்கி மணமற்றதை உணரவேண்டும்
          மெய்மறந்து இலிங்கத்தோடு இணையவேண்டும்
          சௌராஷ்டிர சோமேஸ்வரனைப் பிடித்து
          ஐம்பொறிகள் நீக்கி இலிங்கப் பொறிகளாக்க வேண்டும்”

    5. “மதமழித்தவனுக்கு மாயை என்ன செய்யும்?
         கவலையழித்தவனுக்கு காயம் என்ன செய்யும்?
         இயற்கை மீறியவனுக்கு உயிர் என்ன செய்யும்?
         பிரமையழித்தவனுக்கு உணர்வு என்ன செய்யும்?
         மறதியழித்தவனுக்கு அறிவின் கேள்வி என்ன?
         சௌராஷ்டிர சோமேஸ்வரனே
         நீ என்ன செய்வாய் தான் தானான அடியவனுக்கு?”

    6. “பின்பற்றாதீர் , வேதங்களைப் பின்பற்றாதீர்
          துன்பப்படாதீர்  ,சாத்திரங்களோடு துன்பப்படாதீர்
          பயன்படுத்தாதீர் ,புராணங்களைப் பயன்படுத்தாதீர்
          காலம் கடத்தாதீர் ,ஆகமங்களோடு  காலம் கடத்தாதீர்
          சிக்கிக் கொள்ளாதீர் ,சொல்வலைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்
          சௌராஷ்டிர சோமேஸ்வரனின்  கரம் பிடிப்பீர் ”

    7. “பிறப்பொரு தளை ,இறப்பொரு முக்தியெனச் சொல்லும்
         அறிவற்றவர்களை என்னவென்று சொல்வேன் ஐயனே?
         பிறப்பு இறப்பு என்னும் உறவில் முக்தியுண்டா?
         தேங்கிய தேக்கிய முக்கால வினைகள் நீங்கி
         எண்வகை போகங்கள் அழிந்து பிறப்பு இறப்பின்றேல்
         முக்தியாம்,சௌராஷ்டிர சோமேஸ்வரனின் கை பற்றாமல்
         அத்தகைய முக்தியில்லை.”

    அக்கவணிய ஹம்பய்யா:

    குந்தள நாட்டின் முகுந்தபுரத்தைச் சேர்ந்தவர்.பக்தர்களின் வழி பாட்டிற்காகப் புனிதநீர் கொண்டுவந்து கொடுப்பது இவர் பணி யாகும்.”ஹம்பய விருப்ப “என்பது இவர் முத்திரையாகும். சிவனின் பெருமை,பக்தனின் பண்புகள் ஆகியவற்றை விளக்குவதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

          “பக்தன் பொய்யுரைப்பதில்லை
            அவன் ஆசைகளுக்கு ஆளாவதில்லை
            புலனாசைகள் என்பது அவனுக்குப் புல் போன்றது
            கருணை என்பது அவன் கையிலிருப்பதால்
            இரப்பது என்பது அவனறியாதது.
            நினைவென்பது அவன் அடிமை,சினம்அவனறியாதது.
            மூவகைக் கவலைகள் அவனைத் தொடுவதில்லை
            இலிங்கம் அவனிடமிருப்பதால் எல்லைகளெதுவுமில்லை
            அவன் பாதை உலகிற்குப் புதியது.
            உலகின் பாதை அவனுக்குப் புதியது.
            அவன் இலிங்கத்தை தியானிக்க
            இலிங்கம் அவனை தியானிக்கும்.
            அவன் புகழ்பாடுவதென்பது என்னால் இயலாதது.
            சென்ன ஹம்பைய விருப்பய்யா!
            உண்மைச் சரணனின் பக்தி வலுவானது.”

     அக்கவணி ஹொன்னய்யா:

    புலிகெரே [இன்றைய லட்சுமேஸ்வரா] இவரது ஊராகும். தினந்தோறும் துங்கபத்திராவிலிருந்து நீர் கொண்டுவந்து இறைவனை நீராட்டி வழிபடுவது இவர் வழக்கமாகும். சோமநாதர் இவருடைய வசனங்களின் முத்திரையாகும் ஒரே கடவுள் வழிபாடு, இலிங்கம்- அங்கம் ஆகியவற்றின் சமன்பாட்டை வலியுறுத்துவதாக இவர் வசனங்கள்  அமைகின்றன.

    “நடப்பது நடக்கட்டும் நடக்காமல் போனது
      போகட்டுமென்று ஒருவன் சொல்லிவிடமுடியாது
      சபதம் எடுத்துக்கொண்டவனுக்குத் தேவை உறுதிதான்
      நீங்கள் பிடித்ததை விட்டுவிடக்கூடாது
      புலிகரே வரத சோமநாதன் வலிமையோடு
      தன்னைச் சார்ந்தவனை விட்டுவிடுவதில்லை”.

                                                                                     – (தொடரும்)

    Share
  • பாதை வகுத்தபின் பயந்தென்ன லாபம் ?

    பாதை வகுத்தபின் பயந்தென்ன லாபம் ?

    சக்தி சக்திதாசன்
    லண்டன்


    ஐக்கிய இராச்சியம், வரும் ஐந்து வருட காலத்துக்கு தனது பயணத்தின் பாதையை நிர்ணயித்து விட்டது .

    ஆமாம் வருகிறது! வருகிறது! என்று பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு நிகழ்வு வந்து எம்மைக் கடந்து சென்ற பின்பு அது போன பாதையைப் பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்களத்தை ஆட்டிக்கொண்டிருந்த தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்தேறி பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களின் கட்சி அமோகமான வெற்றியை ஈட்டியுள்ளது. 1986ம் ஆண்டுக்குப் பின்னால் கன்சர்வேடிவ் கட்சி பெற்ற அதி பெரும்பான்மை வாக்குகள் இதுவென்று சரித்திர ஏடுகள் கூறுகின்றன.

    ஐக்கிய இராச்சிய அரசியல் சரித்திரத்தில் அழியாப் பெயர் பெற்ற “இரும்புப் பெண்மணி” எனும் பெயரெடுத்த மார்க்கிரட் தாட்சர் அவர்களின் வழியில் அடுத்தவோர் சரித்திரம் ஏற்படுத்தியவராகிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன்.

    ஐக்கிய இராச்சியத்தின் எதிர்க்கட்சியான லேபர் கட்சி 1930களின் பின்னால் கண்ட மாபெரும் தோல்வி இதுவாகிறது. ஐக்கிய இராச்சிய அரசியல் வரலாற்றில் இதுவரை கனவில் கூட வெற்றிபெறுவோம் என்று எண்ணாத லேபர் கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட பல வட இங்கிலாந்துத் தொகுதிகளில் கன்சர்வேடிவ் கட்சி முதற்தடவையாக வெற்றியீட்டியுள்ளது. இத்தொகுதி மக்கள் தமது ஆதரவை எமக்கு இரவலாகவே தந்துள்ளனர். அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதற்கான ஆக்கபூர்வமான செயல்களை நமது அரசு ஆற்ற வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

    லேபர் கட்சியின் இந்த படுதோல்விக்கு ப்ரெக்ஸிட் சம்பந்தமான அவர்களது தெளிவற்ற நிலை மட்டுமல்ல அவர்களது தலைவரான ஜெர்மி கோர்பனின் தீவிர சோஷலிச நிலைப்பாட்டையும், அடுக்கடுக்காக அவர்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகளின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையின்மையும் காரணம் என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

    பொரிஸ் ஜான்சன் அவர்கள் அடுத்த பிரதமாராகும் வகையில் ஆட்சியமைக்கும் தகுதியை அவருக்கு அளிக்கும் வகையில் அவரது கட்சி வெற்றியடையும் என்று கருத்துக் கணிப்புகள் கூறிய போதிலும் இத்தகைய ஒரு அமோக வெற்றியை அடைவார்கள் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்று.

    கன்சர்வேடிவ் கட்சிக்குக் கிடைத்த இந்த மாபெரும் வெற்றி அவர்களால் ஈட்டப்பட்டதா? இல்லை எதிர்க்கட்சியான லேபர் கட்சியினால் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கொடையா? என்பதன் விடை இன்னும் அரசியல் அவதானிகளால் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஐக்கிய இராச்சியத்தை பிளவுபடுத்திக் கொண்டிருந்த ப்ரெக்ஸிட் எனும் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி இந்தத்தேர்தலினால் கிடைக்கப்போகிறதா? என்பதும் அதனால் நாட்டில் ஏற்பட்ட பிளவு நீங்கப் போகிறதா இல்லையா? என்பதும் ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இருப்பினும் ஒன்றுமட்டும் உறுதியாகி விட்டது. ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வு நிச்சயம் நடைபெறத்தான் போகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை தனது தேர்தல் வெற்றியை அடுத்து ப்ரெக்ஸிட் அடுத்த கட்ட நகர்வை நோக்கி ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றினார் பிரதமர் பொரிஸ் ஜான்சன். இவ்வுடன்படிக்கையின்படி வரும் ஜனவரி 31ம் திகதி ஐக்கிய இராச்சியம் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது உறுதியாகி விட்டது. அதைத் தொடர்ந்து 2020 டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான காலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இந்த காலத்தினுள் வர்த்தக உடன்படிக்கையை எட்டாத பட்சத்தில் ஐக்கிய இராச்சியம் எதுவித வர்த்தக உடன்படிக்கையுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிலையேற்படும். இது ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வேன் என்று பொரிஸ் ஜான்சன் உறுதியுடன் கூறியிருக்கிறார்.

    இதுவரை எந்த ஒரு நாடும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருவருட கால அவகாசத்தில் வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டதாக வரலாறு இல்லை, உதாரணமாக கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்படிக்கையை எட்ட சுமார் ஏழு வருட காலம் எடுத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பிரதமர் ஒருவருட காலத்தில் ஒரு வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சியினரும் , ப்ரெக்ஸிட்டுக்கு எதிரானவர்களும் அடித்துக் கூறுகிறார்கள். 2020 வருட இறுதியில் ஐக்கிய இராச்சியம் உடன்படிக்கையின்றி வெளியேறப் போகிறது, பொருளாதாரச் சரிவைச் சந்திக்கப் போகிறது எனும் எச்சரிக்கையை இவர்கள் விடுக்கிறார்கள்.

    பிரதமர் பொரிஸ் ஜான்சனின் இந்த மாபெரும் வெற்றி அவர் தன்னிச்சையாக நடக்க ஏதுவாகப் போகிறது என்பதும் அவருக்கு எதிரானவர்களின் கருத்தாக இருக்கிறது. முதலாளித்துவம் , வலதுசாரக் கொள்கைகள் எனபவற்றின் அதிதீவிரப் போக்கினை இவரது அரசு கடைப்பிடிக்கப் போகிறது என்பதும் சிலரது கருத்தாக இருக்கிறது. இன்றைய ஐக்கிய இராச்சியத்தில் இனப்பிரிவினை தலைதூக்கியுள்ளது போன்ற ஒரு தன்மையைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவானவர்கள் வெளிநாட்டவரின் குடியேற்றத்தை முக்கிய காரணியாக எடுத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது இத்தகைய ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது. இனப்பிரிவினை, இனப்பாகுபாடு என்பன பற்றிய கருத்துக்களை வெளிப்படையாக விவாதிப்பது தம்மை ஒரு இனத்துவேஷியாகக் காண்பித்து விடும் எனும் காரணத்தினால் இவ்விவாதங்கள் பொதுத்தளங்களில் விவாதிக்கப்படாமலிருந்தது. பல முன்னனித் தலைவர்கள் இன்றைய ஐக்கிய இராச்சிய பிரதமர் உட்பட இப்பிரச்சனைகள், மற்றும் வெளிநாட்டவர் பற்றிய குறிப்புகளை வெளிப்படையாக தெரிவித்தது இத்தகைய விவாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவையே எனும் ஒரு நிலையை நாட்டில் ஏற்படுத்தியது. விளைவாக வெளிநாட்டவரின் குடியேற்றத்தை விவாதிக்கிறோம் எனும் போர்வையில் இனத்துவேஷத்தை வளர்ப்பதைக் ,குறியாகக் கொண்ட இனத்துவேஷிகளுக்கு வெளிநாட்டவரைத் தாக்குவதற்கு அனுமதி அளித்தது என்பதும் ஓரளவுக்கு உண்மையே !

    ஐக்கிய இராச்சியத்தின் அரச அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டுள்ள பொரிஸ் ஜான்சன் அவர்களின் முன்னால் இருக்கும் பொறுப்பு மிகவும் முக்கியமானவைகளாகும்.

    1. ப்ரெக்ஸிட் முதல் கட்ட நகர்வையடுத்து அடுத்த கட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டிய தேவை
    2. ப்ரெக்ஸிட் நிகழ்வினால் பிளவுபட்டிருக்கும் நாட்டினை ஒன்றுபடுத்துவது
    3. என்றுமே எண்ணிப்பார்க்க முடியாத தொகுதிகளில் முதற் தடவையாக வெற்றியீட்டியதன் மூலம் தமது ஆதரவையும் நம்பிக்கையையும் நல்கிய எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் ஆதரவை நிலைப்படுத்திக் கொள்வதற்காக அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவது.

    ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய கலாச்சார நிகழ்வு டிசம்பர் 25 வரும் கிறீஸ்துமஸ் பண்டிகையும், அதைத் தொடர்ந்து வரும் புதுவருடக் கொண்டாட்டமுமே . இம்முறை மக்களுக்கு கிறீஸ்துமஸ் பரிசாகவும், புதுவருடப் பரிசாகவும் ப்ரெக்ஸிட்டை அளிக்கிறார் நம்ப பிரதமர். அவரது இந்த அமோகமான பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றம் என்ன வழியில் நாட்டை கொண்டு செல்லப் போகிறது என்பதையும், பிரதமர் பொரிஸ் ஜான்சனின் உண்மையான அரசியல் அடையாளத்தையும் இனிவரும் காலங்களில் காணப்போகிறோம் என்பதுவே உண்மை.

    இது ஒரு பரிசா? இல்லை தண்டனையா ? என்பதை அடுத்த கிறீஸ்துமஸ் காட்டி விடுமா?

    Share
  • சேக்கிழார் பா நயம் – 60 (ஞாலம்)

    சேக்கிழார் பா நயம் – 60 (ஞாலம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    திருவாரூரில் இறைவன் தம் முன் எழுந்தருளிய போது அவர்தம் பொற்பாதங்களைக் கண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகள் நான்கு திருப்பாடல்களைப் பாடினார். அவற்றின் பொருளை இங்கே காண்பது நமக்கு நல்வாய்ப்பாகும். முதற்பாடலின் பொருளாக வேதங்களாகிய வண்டுகள் சூழ்ந்து, நுகர்ந்து ஒலிக்கும் பரமானந்தத் தேனை, எம்போன்ற எளியோருக்கும் நுகர்வுப் பெரும்பொருளாய் அமைத்து, அவர் திருப்பாதங்கள் வாரி வழங்குகின்றன! என்பதை அறிந்து கொண்டோம், அடுத்தபாடல், அத்திருவடிகள் மூவகைத் திருவருளை வழங்கும் அழகை சுந்தரர் எடுத்துரைக்கின்றார்.

    இறைவன் திருப்பாதங்கள் ஐந்தொழில்களைத் தம் திருக்கூத்து மூலம் மகிழ்ச்சியுடன் இயற்றின. அடுத்து அவை உயிரழிக்கும் காலனின் உயிரையும் அழிக்க எண்ணிக் கோபத்துடன் உதைத்தன. அன்புடன் அப்பெருமானின் திருப்பாதத்தை உமையம்மை வருடிக் கொடுத்தலால் சிவந்து விளங்கின என்று சுந்தரர் கூறுகிறார்.

    “ஞால முய்ய நடமன்று ளாடின;
    கால னாருயிர் மாளக் கருத்தன;
    மாலை தாழ்குழன் மாமலை யாள்செங்கை
    சீல மாக வருடச் சிவந்தன,“

    (இ-ள்.) வெளிப்படை. “உலகம் உய்யும் பொருட்டு ஐந்தொழிற் பெருங்கூத்தைத் திருஅம்பலத்திலே ஆடின; இயமனது உயிர்போகும்படி கோபித்தன; மாலையணிந்த கூந்தலையுடைய உமையம்மையார் தமது செங்கையினாலே உபசரித்துத் தடவச் சிவந்து காட்டின;

    (வி-ரை.) நடம் – ஐந்தொழிற் பெருங்கூத்து. இதனையே அற்புதக் கூத்து – ஆனந்தக்கூத்து – பொற்றில்லைக்கூத்து என்று பலவாறும் வகுத்துப் புகழ்ந்து ஆணையிட்டனர் திருமூலதேவ நாயனார்.

    ஞாலம் உய்ய – உயிர்கள் கடைத்தேறி உய்யும்படியாகப்படைத்தல் – காத்தல். அழித்தல் – மறைத்தல் – அருளல் என்னும் ஐம்பெருந் தொழில்களும் இறைவன் செய்கின்றான்; ஆதலின் ஞாலம் உய்ய என்றார். இவையே தோற்றம் – நிலை – இறுதி – மறைப்பு – அருள் எனவும் கூறப்பெறும். இவற்றைப் புரிதலையே நடம் ஆடின என்பர். ஞாலம் – உயிர்களின்மேல் நின்றது.

    உய்ய நடம் ஆடின – ஞாலம் – சேதனம் – அசேதனம் என இருவகைப்படும்; அவற்றுள்ளே அசேதனம், சேதனத்தின் அநுபவத்திற்கே உரியது. சேதனமாகிய உயிர்கள் மலத்தாற் கட்டுப்பட்டன. மல மறைப்பு – இருள். இவ்விருள் மிக வலிமை வாய்ந்தது. அது தானாய் அகலாது; உயிரோ அதனை அகற்ற வலிமையற்றது; ஆதலின் இயல்பாகவே மலமற்றவனாய் எல்லாம்வல்லவனாம் ஒருவன் வேண்டும். அவன் தனக்கென்று உருவமோ செயலோ வேண்டாதவன். ஆதலின் அவன் உருவத்தையும் செயலையும் மேற்கொண்டால் அது ஞாலமுய்யவே கொள்வானாதல் வேண்டும். கட்டுண்டு கிடக்கும் உயிர்க்கு அதனைப்பற்றிய கட்டு நீங்கும்பொருட்டுக் கருவிகரணங்கள் வேண்டும்; அவற்றுக்காக உடம்பு தருதல் வேண்டும்; உடம்பு நிற்பதற்காகப் புவனங்களும், அவற்றிலே புசித்து அநுபவித்திருக்கப்போகங்களும் தருதல் வேண்டும்; இவற்றை மூலகாரணப் பொருளினின்று படைத்துத் தருதல் சிருட்டி எனப்படும். அவற்றைநிலைக்கச் செய்தல் திதி – காத்தல் எனப்பெறும். இளைப்பாற்றுதற்காக ஒடுக்குதலையே சங்காரம் என்பர்; மும்மலங்களின் வழிநின்று அவற்றின் றொழிலை நிகழ்த்துதல் மறைப்பு; மலநீங்கிய உயிரைத் தன்னடிகூட்டுதல் அருள் என்ப; இவ்வநைத்தையும் இறைவன் சங்கற்ப மாத்திரத்தாலே – நினைப்பு மாத்திரத்தாலே – செய்வன். இதனை அருட் கூத்தென்றும், அருள் விளையாட்டென்றும் உபசரித்துக் கூறுவர். இதனையே இங்கு நம்பிகள் ஞாலம் உய்ய நடம் ஆடின என்றார். சூரியனது சந்நிதி மாத்திரத்திலே வாவிகளில் உள்ள தாமரைகள் மலர்தலும், மலர்ந்தவாறே இருத்தலும், குவிதலும் நிகழ்வதுபோல இறைவனது சந்நிதி மாத்திரத்தானே இவை நிகழ்வன ஆதலின் ஆடின என்றார். ஆடுதல் இறைவன் தொழில்; ஆயினும் ஆடுதற்குரியன பாதங்கள் ஆதலின் பதம் ஆடின என்றார். பதம் – சிவசத்தி; அஃதொன்றேயாயினும் அறிதலும் செய்தலுமாகிய தொழில் வேறுபாடுபற்றி ஞானம் கிரியை என இரண்டாதலின் ஆடின எனப் பன்மையாகக் கூறினார்.

    காலன் ஆர் உயிர் மாளக் கறுத்தன – ஆருயிர் – மிகுவலிமை படைத்த உயிர். காலனாரது உயிர் என்றுரைப்பாருமுண்டு. காலனுக்கு ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பாலன்றி ஆர் விகுதி புணர்த்தற்கு இயைபின்மை ஓர்க. கறுத்தல் – கோபித்தல். “மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன“ என்பது அப்பர் பெருமான் தேவாரம்.“என்னடியா னுயிரைவவ்வே லென்றடற் கூற்றுதைத்த, பொன்னடி“ என்ற தேவாரமுங் காண்க. இறைவனது ஆணையின்வழி அவரவர் காலத்தைக் கணக்கிட்டுப் போவானாதலின் காலன் என்ப. அடியார்கள் காலனையுங் கடந்தவர்கள்.

    காலனையும் வென்றோங் கடுநரகங் கைகழன்றோம்
    மேலை யிருவினையும் வேரறுத்தோம்  – கோல
    வரணா ரவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
    சரணார விந்தங்கள் சார்ந்து
                                                 – அற்புதத் திருவாந்தாதி – 81

    என்று காரைக்காலம்மையார் திருவாக்குக் காண்க. தனது அதிகார வரம்பு கடந்தவனாய் இறைபணியின் நின்ற அடியார்களிடம், சென்றானாதலின் உதைபட்டான் என்க. பாதமிரண்டாதலின் கோபப் பிரசாதமென்ற இரண்டு அருட் குணமும் குறிக்கக் கறுத்தன – சிவந்தன எனக் கறுத்தல் சிவத்தல் இரண்டும் கூறப்பெற்றன.

    மாமலையாள் செங்கை சீலமாக வருட – வருட வேண்டிய முறையால் வருடுதல்  சீலமாக எனப் பெற்றது. வருடுதல் –  உபசரித்தல். இது ஒருவகை வழிபாட்டு முறை. உரிய மரியாதையோடு மெல்லென வருடவும் – என்க. வருட – வருடவும்; சிறப்பும்மை தொக்கது.

    “மன்னு மலைமகள் கையால் வருடின“
    “செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்க மலக்கரத்தால்
    வருடச் சிவந்தன மாற்பே றுடையான் மலரடியே“

    என்பன அப்பர் பெருமான் திருவாக்கு. சீலமாகும் பொருட்டுவருட என்றுரைத்தலுமொன்று. முன்னே கறுத்தன; பின்னே வருடச்சிவந்தன என்பது அணி. இனி முழுப்பாடலையும்  படித்தறிவோம்.

    ‘ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின;
    காலன் ஆர் உயிர் மாளக் கறுத்தன;
    மாலை தாழ் குழல் மா மலையாள் செங் கை
    சீலம் ஆக வருடச் சிவந்தன’

    ஆடின, கறுத்தன, சிவந்தன என்று இறைவன் பண்பு நலன்களைத் திருவடியின் பெருமைகளாகக்  கூறியது  சிறப்பு. அவற்றையே துதிக்க வேண்டும் என்பது பொருள்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 91

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 91

    நாங்குநேரி வாசஸ்ரீ

    91. பெண் வழிச்சேறல்

    குறள் 901:

    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
    வேண்டாப் பொருளும் அது

    பொஞ்சாதி மேல ஆச வச்சி அவ பேச்சக்கேட்டு ஆடுதது நல்லதுக்கு இல்ல. கடைமையச் செய்ய விரும்புதவங்க வேண்டாம்னு நெனைக்கதும் அதுதான்.

    குறள் 902:

    பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
    நாணாக நாணுத் தரும்

    ஏத்துக்கிட்ட கடமையச் செய்யாம பொம்பள பின்னால ஆச வச்சி சுத்துதவன் கிட்ட இருக்க சொத்து வெக்கப்பட்டு கூசி தல குனியுத நெலமைக்கு கொண்டு உட்ரும்.

    குறள் 903:

    இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
    நல்லாருள் நாணுத் தரும்

    கொணங்கெட்ட பொஞ்சாதி முன்ன பணிஞ்சு போவுத புருசன் நல்லவங்க மத்தியில நிக்குதப்போ கூச்சப்படுவான்.

    குறள் 904:

    மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
    வினையாண்மை வீறெய்த லின்று

    கலியாணம் முடிச்சு புது வாழ்க்கையோட பயன அடையாம குடும்பம் நடத்த பயப்படுதவனோட காரியத்தெறம சிறப்பா அமையாது.

    குறள் 905:

    இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்
    நல்லார்க்கு நல்ல செயல்

    பொஞ்சாதிக்கு பயந்து வாழுதவன் நல்லவங்களுக்கு நல்லது செய்யுதப்போவும் பயந்து நடப்பான்.

    குறள் 906:

    இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
    அமையார்தோ ளஞ்சு பவர்

    தேவர்களப்போல இந்த ஒலகத்துல ஒசத்தியா வாழ்ந்தாலும் பொஞ்சாதியோட அழகான தோளுக்கு பயந்து வாழுதவனுக்கு பெரும கெடையாது.

    குறள் 907:

    பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை உடைத்து

    பொஞ்சாதி ஏவுத காரியத்த செய்யுதவனோட ஆண்மையவிட வெக்கப்படுத கொணத்தக் கொண்ட மானமுள்ளவளோட பெண் தன்ம ஒசந்தது.

    குறள் 908:

    நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
    பெட்டாங் கொழுகு பவர்

    தம் பொஞ்சாதி ஆசப்பட்டதுமாரி வாழுதவன் சேக்காளியப் பத்தி வெசனப்படமாட்டான். அவுகளுக்கு நல்லதும் செய்யமாட்டான்.

    குறள் 909:

    அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
    பெண்ணேவல் செய்வார்கண் இல்

    நல்லகாரியத்த செய்யுததும் அதுக்காவ பொருள் சேக்க மொனையுததும், மத்த கடமைகளும் பொஞ்சாதி பேச்சக் கேட்டு நடக்கவங்களுக்குக் கெடையாது.

    குறள் 910:

    எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
    பெண்சேர்ந்தாம் பேதைமை இல்

    எதையும் ரோசனை பண்ணி செய்யுதவனும், நெஞ்சுறுதி இருக்கவனும் பொஞ்சாதி பேச்ச மட்டுமே கேட்டு நடக்க மாட்டாக.

    Share
  • ஏக்கம் மட்டும் போகவில்லை!

    ஏக்கம் மட்டும் போகவில்லை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஸ்திரேலியா


    புலம்பெயர்ந்து வந்தாலும்
    புலனெல்லாம் பிறந்தமண்ணின்
    நலந்திகழும் நினைவுகளை
    மறந்துவிட  முடியவில்லை
    உளமகிழப் பொங்கிநின்றோம்
    உவகையுடன் நாமிருந்தோம்
    வளமிழந்தோம் வாழ்விழந்தோம்
    புலம்பெயரும் நிலையானோம்!

    பண்பாடு  கலாசாரம்
    விட்டுநாம் அகலவில்லை
    பக்குவத்தை விட்டெறிந்து
    பறந்துமே திரியவில்லை
    கோயில்பல கட்டினோம்
    குலதெய்வம் நிறுவினோம்
    காலைமாலை தவறாமல்
    கடவுளிடம் முறையிட்டோம்!

    சாதிபற்றி எழுஞ்சண்டை
    சலசலத்துப் போனது
    சரிசமனாய் வாழுதற்கு
    உரியநிலம் ஆனது
    பேதமெனும் மனப்பேயும்
    பேதலித்துப் போனது
    என்றாலும் பிறந்தமண்ணின்
    ஏக்கம்மட்டும் போகவில்லை!

    Share
  • அன்பின் வெளிச்சம்

    அன்பின் வெளிச்சம்

    சக்தி சக்திதாசன், லண்டன்


    அன்பினுமினிய வல்லமை வாசகர்களுக்கு

    அன்பான வணக்கங்கள்.

    புனிதரான இயேசுபிரான் உதித்த திருநாளில் அவர் போதித்த அன்பினை இதயத்தில் ஏந்தி அன்பினுமினிய என் கிறீஸ்தவ அன்பர்களுக்கு இதயங்கனிந்த நத்தார் தின வாழ்த்துக்களைப் பொழிகின்றேன்.

    இருண்டதோர் உலகினில்
    வெளிச்சமென மிளிர்ந்தவன்
    மடமையெனும் இருளை
    அன்பு கொண்டு விரட்டியவன்

    அன்னை மேரியின் கருவறையில்
    அன்பே வடிவாய் முகிழ்த்தவன்
    வெறுமையெனும் பொட்டலில்
    மறுமலர்ச்சி விதையாய் விழுந்தவன்

    இடறி விழுந்திடும் மனித சமுதாயத்தை
    இரக்கமெனும் கம்பு கொண்டு தாங்கியவன்
    நோக்கமில்லா வாழ்வுதனில் மூழ்கியோரை
    அன்பெனும் இலக்கு நோக்கி நகர்த்தியவன்

    கெட்ட போரிடும் உலகினை மாற்ற
    தன்னுயிரை ஈந்து கருணை புரிந்தவன்
    பேராசையில் உழன்றிடும் மாந்தரை
    பேரருளின் மகிமை காட்டிக் காத்தவன்

    மாட்டுத்தொழுவமதில் அன்றுதித்து
    மானிட மேன்மைக்காய் தனையீந்த
    கர்த்தரின் திருநாளில் அன்புதனை
    முதன்மையாக்கி மனிதநேயம் காத்திடுவோம்

    Share
  • Annakannan Ideas – 37

    Annakannan Ideas – 37

    Got a call from this number; an usual automated voice call for marketing & promotion of a credit card. When I cut the call, got an idea.

    Mobile phone manufacturers & UI designers can add two buttons in the Call app: 1.Spam 2.Block.

    When we get unwanted calls & messages, instead of End / Delete button, we can choose either Spam or Block. It will not only delete; also mark as spam; also block the number. It will save lot of time.

    Share