நெல்லைத் தமிழில் திருக்குறள்- 92

நாங்குநேரி வாசஸ்ரீ
92. வரைவின் மகளிர்
குறள் 911
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
நேசமில்லாம பணத்து மேல ஆச வச்சி இனிக்க பேசுத தாசியோட பேச்சு ஒருத்தனுக்கு துன்பத்தக் கொடுக்கும்.
குறள் 912
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்
எம்புட்டு ஆதாயம் கெடைக்கும்னு பாத்து அதுக்கேத்தாமாரி இனிக்க இனிக்க பேசுத தாசிய நம்பி ஏமாறக் கூடாது.
குறள் 913
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று
பொருள் மேல மட்டுமே ஆச வச்சி அதுக்காவ பொய்யா கட்டி அணைக்குத தாசி கூட இருக்கது, இருட்டு அறையில சம்பந்தமில்லாத பொணத்த அணைச்சிக் கிட்டதுக்கு சமானமாவும்.
குறள் 914
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்
அருள மட்டுமே தேடுத அறிவுள்ளவுக பொருள விரும்புத தாசியோட சேந்து இன்பத்த அனுவிக்க விரும்ப மாட்டாக.
குறள் 915
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்
சொந்த அறிவுள்ள படிச்ச புத்திசாலிங்க எல்லாருக்கும் பொதுவா இருந்து இன்பத்த தருத தாசி பின்னால போவ மாட்டாக.
குறள் 916
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்
தன் அழக நெனச்சி தலக்கனம் புடிச்சுத் திரிஞ்சு அத வித்துப் பொழக்கித தாசி பொறத்தால படிச்ச பெருமக்க போவ மாட்டாக.
குறள் 917
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்
நெஞ்சுறுதி இல்லாதவுக தான் மனசார இல்லாம வெறும் பொருளுக்கு ஆசப்பட்டுக் கூடுத தாசி பின்னால போவாக.
குறள் 918
ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு
.வஞ்ச மனசுள்ள தாசிகிட்ட மயங்கி கெடக்க புத்திகெட்டவன மோகினி பிடிச்சதா சொல்லுவாக.
குறள் 919
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு
ஒழுக்கங்கெட்ட தாசியோட தோள் கூறுகெட்டவன் விழுந்து கெடக்க நரகத்துக்குச் சமானம்.
குறள் 920
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு
மனசு ஒருத்தங்கிட்டயும் ஒடம்பு ஒருத்தங்கிட்டயுமா ரெண்டு மனசா இருக்க தாசியும், கள்ளும், சூதாட்டமும் இந்த மூணு வகையும் லச்சுமினு சொல்லுத திருமகள் வெலக்கி வச்சவுகளுக்கு ஒறவா வந்து அமையும்