வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள் ; சிவனோடு பேசியவர்கள்- 3

0
தி. இரா. மீனா            

ஆதய்யா:

சௌராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆதய்யா புலிகெரேவிற்கு [தற்போதைய லட்சுமேஸ்வரா] வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக வந்தவர். பிறகு அங்கேயே தங்கி பத்மாவதி என்னும் சமணப் பெண்ணை மணந்து கொண்டார்.தன் மாமனாரிடம் சிவபெருமானின் உயர்வை விளக்கிச் சொல்லி,விவாதித்து சௌராஷ்டிரத்திலிருந்து சோமேஸ்வ ரரைக் கொண்டு வந்து புலிகெரெயிலுள்ள சுராஹொன்னெ பாசடி யில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அவருடைய முத்திரை சௌ ராடிஷ்ர சோமேஸ்வரர்.வசனம்,மற்றும் ஸ்வர வசனங்களை எழுதிய வர். [ஸ்வரவசனங்களைப் பாடலாகப் பாடும் தன்மை -இன்றும் உள்ளது] அவருடைய வசனங்கள் இலக்கிய உயர்வும், தத்துவ மேன்மையும் கொண்டவை. சில வசனங்கள் :

1.“கல்லுள் பொன் வெளிப்பட்டாலும்
     பொன் கல்லுக்கு அடிமையாகுமா?
     சிப்பியிலிருந்து முத்து பிறப்பினும்
     முத்து சிப்பிக்கு  அடிமையாகுமா?
     கற்பகமரம் பூமியில் பிறந்தால்
     அது பூமிக்கு அடிமையாகுமா?
     சரணர்கள் தாயின் கருவிலிருந்து பிறப்பதால்
     சரணர் பெற்றோர்க்கு அடிமையாக முடியுமா?
     சௌராஷ்டிர சோமேஸ்வரா
     உன் சரணர்கள் சுதந்திரமானவர்கள்”

2.குரவன் தான் உருவாக்கும் குடத்திலிருப்பதில்லை
    விவசாயி தான் வளர்க்கும் தானியத்திலிருப்பதில்லை.
    தேரை உருவாக்கும் தச்சன் தேரிலிருப்பதில்லை.
    சிவன் இந்த உலகைக் கட்டுப்படுத்தும்  பொறிஞனாக         
    இயந்திரத்துடன் இருக்கிறான் என்று  நீங்கள் சொன்னால்
    சௌராஷ்டிர சோமேஸ்வரன் ஒப்புக்கொள்வதில்லை.” 

3.“நேர்மையான செயல் பயிற்சி ஸ்படிகமாய் இல்லாதவரை
     ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்றாலென்ன?
     அறுபத்தெட்டு புனித ஸ்தலங்களுக்குப் சென்றாலென்ன?
      நீ கைவிட்டாலென்ன? பற்றிக் கொண்டாலென்ன?
     சௌராஷ்டிர சோமேஸ்வரனோடு ஐக்கியமாகிற
     பேரானந்தம்   நேர்மை உடைய சரணர் மனதில் மட்டும்
     ஒளியான சிவலிங்கமாய் உள்வாங்கப்பட்டிருக்கும்”

4. “இமைகள் மூடி வடிவமற்றதைக் காணவேண்டும்
      செவிகள் மூடி ஒலியற்றதைக் கேட்கவேண்டும்
      நாவடக்கி சுவையற்றதைச் சுவைக்கவேண்டும்
      நாசியடக்கி மணமற்றதை உணரவேண்டும்
      மெய்மறந்து இலிங்கத்தோடு இணையவேண்டும்
      சௌராஷ்டிர சோமேஸ்வரனைப் பிடித்து
      ஐம்பொறிகள் நீக்கி இலிங்கப் பொறிகளாக்க வேண்டும்”

5. “மதமழித்தவனுக்கு மாயை என்ன செய்யும்?
     கவலையழித்தவனுக்கு காயம் என்ன செய்யும்?
     இயற்கை மீறியவனுக்கு உயிர் என்ன செய்யும்?
     பிரமையழித்தவனுக்கு உணர்வு என்ன செய்யும்?
     மறதியழித்தவனுக்கு அறிவின் கேள்வி என்ன?
     சௌராஷ்டிர சோமேஸ்வரனே
     நீ என்ன செய்வாய் தான் தானான அடியவனுக்கு?”

6. “பின்பற்றாதீர் , வேதங்களைப் பின்பற்றாதீர்
      துன்பப்படாதீர்  ,சாத்திரங்களோடு துன்பப்படாதீர்
      பயன்படுத்தாதீர் ,புராணங்களைப் பயன்படுத்தாதீர்
      காலம் கடத்தாதீர் ,ஆகமங்களோடு  காலம் கடத்தாதீர்
      சிக்கிக் கொள்ளாதீர் ,சொல்வலைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்
      சௌராஷ்டிர சோமேஸ்வரனின்  கரம் பிடிப்பீர் ”

7. “பிறப்பொரு தளை ,இறப்பொரு முக்தியெனச் சொல்லும்
     அறிவற்றவர்களை என்னவென்று சொல்வேன் ஐயனே?
     பிறப்பு இறப்பு என்னும் உறவில் முக்தியுண்டா?
     தேங்கிய தேக்கிய முக்கால வினைகள் நீங்கி
     எண்வகை போகங்கள் அழிந்து பிறப்பு இறப்பின்றேல்
     முக்தியாம்,சௌராஷ்டிர சோமேஸ்வரனின் கை பற்றாமல்
     அத்தகைய முக்தியில்லை.”

அக்கவணிய ஹம்பய்யா:

குந்தள நாட்டின் முகுந்தபுரத்தைச் சேர்ந்தவர்.பக்தர்களின் வழி பாட்டிற்காகப் புனிதநீர் கொண்டுவந்து கொடுப்பது இவர் பணி யாகும்.”ஹம்பய விருப்ப “என்பது இவர் முத்திரையாகும். சிவனின் பெருமை,பக்தனின் பண்புகள் ஆகியவற்றை விளக்குவதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

      “பக்தன் பொய்யுரைப்பதில்லை
        அவன் ஆசைகளுக்கு ஆளாவதில்லை
        புலனாசைகள் என்பது அவனுக்குப் புல் போன்றது
        கருணை என்பது அவன் கையிலிருப்பதால்
        இரப்பது என்பது அவனறியாதது.
        நினைவென்பது அவன் அடிமை,சினம்அவனறியாதது.
        மூவகைக் கவலைகள் அவனைத் தொடுவதில்லை
        இலிங்கம் அவனிடமிருப்பதால் எல்லைகளெதுவுமில்லை
        அவன் பாதை உலகிற்குப் புதியது.
        உலகின் பாதை அவனுக்குப் புதியது.
        அவன் இலிங்கத்தை தியானிக்க
        இலிங்கம் அவனை தியானிக்கும்.
        அவன் புகழ்பாடுவதென்பது என்னால் இயலாதது.
        சென்ன ஹம்பைய விருப்பய்யா!
        உண்மைச் சரணனின் பக்தி வலுவானது.”

 அக்கவணி ஹொன்னய்யா:

புலிகெரே [இன்றைய லட்சுமேஸ்வரா] இவரது ஊராகும். தினந்தோறும் துங்கபத்திராவிலிருந்து நீர் கொண்டுவந்து இறைவனை நீராட்டி வழிபடுவது இவர் வழக்கமாகும். சோமநாதர் இவருடைய வசனங்களின் முத்திரையாகும் ஒரே கடவுள் வழிபாடு, இலிங்கம்- அங்கம் ஆகியவற்றின் சமன்பாட்டை வலியுறுத்துவதாக இவர் வசனங்கள்  அமைகின்றன.

“நடப்பது நடக்கட்டும் நடக்காமல் போனது
  போகட்டுமென்று ஒருவன் சொல்லிவிடமுடியாது
  சபதம் எடுத்துக்கொண்டவனுக்குத் தேவை உறுதிதான்
  நீங்கள் பிடித்ததை விட்டுவிடக்கூடாது
  புலிகரே வரத சோமநாதன் வலிமையோடு
  தன்னைச் சார்ந்தவனை விட்டுவிடுவதில்லை”.

                                                                                 – (தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *