Blog

  • பல்கலை வல்ல நல்லறிஞர் – மயிலை சீனி வேங்கடசாமி

    பல்கலை வல்ல நல்லறிஞர் – மயிலை சீனி வேங்கடசாமி

    மேகலா இராமமூர்த்தி

    செவ்விலக்கியங்களையும் ஒல்காப் புகழுக்குரிய இலக்கண நூலான தொல்காப்பியத்தையும் படைத்தளித்த பண்டைத் தமிழர்கள் தமிழ்நாட்டு வரலாற்றை ஏனோ முறையாகத் தொகுத்து  ஆவணப்படுத்தவில்லை. அதனால் அவ்விலக்கிய இலக்கண நூல்களிலுள்ள பாடல்களைக் கொண்டே அன்றைய தமிழகத்தை நாம் ஊகித்தறிய வேண்டியிருக்கின்றது.

    பிற்காலப் பல்லவர் காலந்தொடங்கிக் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் போன்றவற்றில் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளைப் பொறித்து வைக்கும்  வழக்கம் அரசர்களால் தொடங்கப்பட்டதாகத் தெரிகின்றது. பிற்காலச் சோழர்கள் காலத்தில்  மேலும் அதிக எண்ணிக்கையிலான கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களும் பொறித்து வைக்கப்பட்டன.

    நம் வரலாற்றை அறிய, இக்கல்வெட்டுகளும் பட்டயங்களும் பேருதவி புரிகின்றன என்பதில் ஐயமில்லை. எனினும், இவற்றைப் படித்தறிய இன்றைய தமிழ் எழுத்துகளை மட்டும் ஒருவர் அறிந்திருந்தால் போதா. அன்றைய தமிழ் எழுத்துமுறைகளையும் நன்கு அறிந்திருத்தல் அவசியம். அவ்வகையில் தம்முடைய ஆழங்காற்பட்ட தமிழிலக்கியப் புலமையாலும், கல்வெட்டுகளைப் படித்தறியும் பயிற்சியாலும், பன்மொழித் திறத்தாலும் அன்றைய தமிழகம் குறித்த பல அரிய தகவல்களைத் தமிழ்கூறு நல்லுலகுக்கு அளித்த பெருமைக்குரியவர் மயிலை சீனி வேங்கடசாமி எனும் ஆய்வியல் அறிஞராவார்.

    சென்னையிலுள்ள மயிலாப்பூரில் 1900, திசம்பர் 16-இல் பிறந்தார்  வேங்கடசாமி. அவருடைய தந்தையார் ஒரு சித்த மருத்துவர்; அத்தோடு பழந்தமிழ் ஓலைச் சுவடிகளையும், நூல்களையும் தேடித் தேடிச் சேகரித்து வாசிக்கும் பழக்கம் கொண்டவராகவும் அவர் இருந்திருக்கின்றார். ஆகையால், ’தந்தையர் ஒப்பர் மக்கள்’ எனும் நன்மொழிக்கேற்ப இளமையிலேயே வேங்கடசாமிக்கும் தமிழில் அளவற்ற பற்று ஏற்பட்டுவிட்டது. வேங்கடசாமியின் உடன்பிறப்புகளில் அவருடைய மூத்த அண்ணன், தந்தையைப் போலவே சித்த மருத்துவரானார். இரண்டாவது அண்ணனான சீனி. கோவிந்தராசன் நல்ல தமிழறிஞராய்த் திகழ்ந்தார். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை அவர் எழுதியதாகத் தெரிகின்றது. தொடக்கத்தில் தம் தமையனார் கோவிந்தராசனிடம் தமிழ் பயின்ற வேங்கடசாமி, பின்னர் மகாவித்துவான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் கற்றார். தமது இருபதாவது அகவைக்குள்ளாகவே தமிழிலுள்ள இலக்கண இலக்கிய நூல்களையெல்லாம் தாம் அறிந்துகொண்டுவிட்டது பற்றித் தம்முடைய 19ஆம் நூற்றாண்டில் தமிழிலக்கிய வரலாறு” எனும் நூலின் முகவுரையில் மயிலையாரே குறிப்பிட்டிருக்கக் காண்கிறோம்.

    ஓவியக் கலையிலும் ஈடுபாடுகொண்டிருந்த அவர் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். பின்பு ஆசிரியர் பயிற்சி பெற்று, சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். நீதிக் கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய வேங்கடசாமி, குடிஅரசு, ஊழியன், செந்தமிழ், ஆனந்த போதினி, ஈழகேசரி உள்ளிட்ட பல இதழ்களில் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்

    தமது விடுமுறை நாள்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த மயிலை வேங்கடசாமி,  தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்து, பிராமி, கிரந்தம், தமிழ் என எந்த எழுத்துமுறையில் அமைந்த கல்வெட்டையும் படித்தறியும் திறன்பெற்றார். தமிழோடு ஆங்கிலம், கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், பாலி எனப் பலமொழிகளும் பயின்று பன்மொழி வித்தகரானார்.

    பிற வரலாற்றாய்வாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, பௌத்தக் கோயில்களையும், அவை சார்ந்த தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தவர் மயிலையார் என்பது எண்ணத்தக்கது. இவருடைய படைப்புகளாக 33 தமிழ்நூல்கள் இப்போது நமக்குக் கிடைக்கின்றன. பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும், கிறித்துவமும் தமிழும், மறைந்துபோன தமிழ்நூல்கள், களப்பிரர் ஆட்சியில் தமிழகம்,
    கொங்குநாட்டு வரலாறு, சமயங்கள் வளர்த்த தமிழ், பழங்காலத் தமிழ் வணிகம், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் போன்றவை அவற்றில் சில. இவற்றில் ஒவ்வொரு நூலும் அருங்கருத்துகளைத் தாங்கி நிற்கும் பெருந்தகவல்களஞ்சியம் எனில் மிகையில்லை.

    “மறைந்துபோன தமிழ்நூல்கள்” எனும் தம் நூலில் இருபதாம் நூற்றாண்டில் கிட்டாமற்போன தமிழ்நூல்கள் பலவற்றின் பட்டியலையும் அவற்றில் இடம்பெற்றிருந்த சில பாடல்களையும் அரிதின் முயன்று திரட்டித் தந்துள்ளார் வேங்கடசாமி. அவ்வாறு அவர் தேடித் தந்திருக்கும் அற்புதமான ஒருநூல் தகடூர் யாத்திரை. இன்றைய தருமபுரி மாவட்டமே அன்றைய தகடூர். அதனைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த குறுநில மன்னனான அதியமான் நெடுமானஞ்சிக்கும், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் தகடூரில் நடைபெற்ற போர்குறித்த செய்திகளைச் சிறப்பாக பேசும் நூல் இது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்நூலில் நூற்றுக்கணக்கான பாடல்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது நமக்குக் கிடைப்பவையோ 48 செய்யுட்கள் மட்டுமே. அரிசில்கிழார், பொன்முடியார் போன்ற சிறந்த புலவர்களின் பாடல்கள் இதில் உள்ளன.

    பண்டைத் தமிழகத்தின் சமூக நிலையையும், வரலாற்றையும், அரசியல் அமைப்பையும் அறிந்துகொள்ளப் பெரிதும் உதவக்கூடிய செய்யுள் வடிவிலிருந்த சாசனங்களையும், செப்புப் பட்டயங்களையும், கல்வெட்டுகளையும் தேடிக் கண்டுபிடித்து அவற்றுக்கு விளக்கங்களும் குறிப்புகளும் எழுதி ”சாசனச் செய்யுள் மஞ்சரி” எனும் நூலாக ஆக்கி அதனைச் சாகித்திய அகாதமியின் ஆதரவோடு மயிலையார் வெளியிட்டிருப்பது மகத்தான பணியாகும்.

    ”பௌத்தமும் தமிழும்” எனும் தம்முடைய ஆய்வு நூலில் பௌத்த மதமானது அசோகர் காலமான கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த வரலாற்றையும், அசோகருடைய உறவினராகிய மகேந்திரரும் அவரோடு வந்த பிக்குகளுமே அதைப் பரப்பியவர்கள் என்றும் குறிப்பிடும் மயிலை வேங்கடசாமி, அதே காலக்கட்டத்தில் வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த பிற சமயங்கள் பூரணனை வழிபட்டொழுகும் ஆசீவகம், அருகனை ஏத்தும் ஆருகதம் எனப்படும் ஜைனம், பிராமண சமயம் எனப்படும் வைதிகம் ஆகியன என்று குறிப்பிடுகிறார்.

    பௌத்தத்தை உருவாக்கிய சாக்கிய புத்தரும், ஜைனத்தைத் தோற்றுவித்த வர்த்தமான மகாவீரரும், ஆசீவகத்தைத் தோன்றச் செய்த மக்கலிபுத்திரரும் சம காலத்தவரே. இம்மதங்கள் உருவான அதே காலத்தில் வைதிக மதமும் செல்வாக்கோடு இருந்தது. வடநாட்டைச் சேர்ந்த இந்த நான்கு மதங்களும் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் தமிழகத்துள் நுழைந்தன என்கிறார் மயிலையார்.

    அப்போது இவற்றினின்றும் வேறான மதத்தைத் தமிழ்நாட்டுத் தமிழர் மேற்கொண்டிருந்தனர். தமிழகத்துள் நுழைந்த இந்நான்கு மதங்களும் ஒன்றையொன்று இழித்தும் பழித்தும் பேசி, சமயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் வாழ்ந்துவந்த தமிழர்களிடையே சமயப் பூசலைக் கிளப்பிவிட்டன. தமிழக மக்களிடையே செல்வாக்குப் பெறும் போட்டியில் முதலில் வெற்றிபெற்றது பௌத்தமே ஆகும். ஏனைய மதங்களோடு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பத்திலேயே பின்னடைவைச் சந்தித்த மதம் ஆசீவகம். எனவே வைதிகம், ஜைனம், பௌத்தம் எனும் மும்மதங்களுக்கிடையே மட்டும் சில காலம் சமயப்போர் நிகழ்ந்துவந்தது.

    இந்த மும்முனைப் போட்டியில் அடுத்து தோல்வியைச் சந்தித்தது பௌத்தம். அதற்கான முதன்மைக் காரணம் பௌத்தம் தனது புறப்பகையான ஜைனத்தையும், வைதிகத்தையும் எதிர்த்துவந்த வேளையில் அதற்குள்ளேயே  ஈன யானம், மகா யானம் எனும் பெரும் பிரிவுகளும், அவை சார்ந்த உட்பிரிவுகளாகச் சிராவகயானம், மகாயானம், மத்திரயானம் போன்றவையும் தோன்றியதே. ’ஐயுறும் அமணரும், அறுவகைத் தேரரும்’ எனும் திருஞானசம்பந்தர் தேவாரத்தால் பௌத்தத்தில் ஆறுவகைப் பிரிவினரான தேரர்கள் (தேரர்கள் = பௌத்த பிக்குகள்) இருந்ததை அறிகின்றோம். இந்த உட்பிரிவினர் தமக்குள்ளும் ஓயாது வாதுசெய்து போரிட்டனர். புறப்பகை போதாவென்று ’உடன்பிறந்தே கொல்லும் வியாதி’யான அகப்பகையும் சேர்ந்ததால் பௌத்தம் தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது.

    அன்றியும் பொதுமக்களிடமிருந்தும் அரசிடமிருந்தும் கிடைத்த அளவற்ற செல்வத்தால் பௌத்த விகாரைகளில் வசித்த பிக்குகளும் தங்கள் தூய கடமைகளை மறந்து செல்வத்தின் இன்பங்களைத் துய்க்கத் தொடங்கினர். தம் நெறிதவறிய நடத்தையால் மக்களிடமிருந்த நன்மதிப்பையும் செல்வாக்கையும் இழந்தனர் அவர்கள். இக்காரணங்களால் தமிழகத்தில் நன்கு வளர்ந்துவந்த பௌத்தம் வீழ்ந்துபட்டது என்கிறார்.

    ஈதொப்பவே, ”சணமும் தமிழும்” எனும் தம்முடைய மற்றோர் ஆராய்ச்சி நூலில் தமிழகத்தில் சமணத்தின் வளர்ச்சி வீழ்ச்சி குறித்துப் பரக்கப் பேசுகின்றார் சீனி வேங்கடசாமி. தென்னாடு வந்த பத்திரபாகு எனும் சமண முனிவரின் சீடரான விசாகமுனிவர் மூலமாகவே தமிழகத்தில் சமணம் பரவியது என்பதையும் ஜினர்களைக் கடவுளாகக் கொண்ட மதம் என்பதால் இது ஜைனமதம் என்றானதையும் நமக்கு அறியத் தருகின்றார் அவர்.

    சமண சமயம் பிற்காலத்தில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிவுண்டது. சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் என்பன அவை. சுவேதாம்பரம் என்பதற்கு வெண்ணிற ஆடை என்று பொருள். எனவே இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வெண்ணிற ஆடை உடுத்துவர். இவர்தம் ஆலயங்களிலுள்ள தீர்த்தங்கரர்களுக்கும் வெண்ணிற ஆடை அணிவிப்பர். திகம்பரம் (திக்+அம்பரம்) என்பதற்குத் திசைகளே ஆடை என்று பொருள். அதற்கேற்ப இப்பிரிவைச் சேர்ந்தவர்களும் திசைகளை ஆடையாக அதாவது எவ்வித உடையும் அணியாமல் அம்மணமாகவே இருப்பர். இவர்கள் கோவணம்கூட உடுத்துவதில்லை. இவர்களின் ஆலயங்களிலுள்ள தீர்த்தங்கரர்களுக்கும் இவர்கள் உடைகள் ஏதும் அணிவிப்பதில்லை. ஸ்தானவாசிகளுக்கு உருவ வழிபாட்டில் உடன்பாடில்லை. ஆதலால், அவர்கள் சமண ஆகம நூல்களையே அருகக் கடவுளாய்ப் பாவித்து வணங்குவர். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தோர் திகம்பர சமணர்களே!

    சமணர்கள் அனைவரும் துறவுநெறி மேற்கொண்டோர் அல்லர். அவர்களில் இல்லறவாசிகளும் உண்டு. அவர்களை சிராவகர் (சாவகர்) என்று குறிப்பர். இல்லறத்தை மேற்கொள்பவர் ஆயினும் அவர்களுக்கும் கடுமையான நெறிமுறைகளைச் சமணம் விதித்தே இருந்தது.

    சிராவகர் பத்து ஒழுக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும். அவை: கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறன்மனை நயவாமை, பொருள் ஈட்டுவதில் வரையறை எனும் அணுவிரதம் ஐந்து. கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, இரவு நேரத்தில் உண்ணாமை எனும் உண்ணாமைக் கொள்கைகள் நான்கு. பெரியோரை வணங்குதல் எனும் உயர்பண்பு; ஆகமொத்தம் பத்து ஒழுக்கங்கள்.

    நன்னெறிகளும் நல்லொழுக்கங்களுமே இரு கண்களாகக் கொண்டு சமைக்கப்பட்ட சமணம், தமிழ் இலக்கிய இலக்கணத்துக்கும் அருந்தொண்டாற்றியிருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழகத்தில் பெருவளர்ச்சி கண்ட சமணம் வீழ்ச்சியடைந்ததற்கான கரணியங்களையும் நுட்பமாய் ஆய்ந்திருக்கும் மயிலையார், பண்டைத் தமிழர் மதமும், வடநாட்டு வைதிக மதமும் கடவுளர் விஷயத்தில் சில கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தித் தம்முள் சமரசம் செய்துகொண்டன. அத்தோடு அவை ஒன்றுபட்டு தமிழகத்தில் ’பக்தி இயக்கத்தை’ முன்னெடுத்தன.

    கிபி 7, 8-ஆம் நூற்றாண்டுகளில் பெரு வளர்ச்சிகண்ட இவ்வியக்கத்தை மக்களிடையே மகத்தான வெற்றிபெறச் செய்த பெருமை சைவ சமய நாயன்மார்களையும், வைணவ சமய ஆழ்வார்களையுமே சாரும். அவர்கள் வெகுமக்கள் கடைப்பிடித்தற்கேற்ற எளிய வாழ்வியல் நெறிகளையும், இல்லறத்திலிருந்தபடியே பக்தி வாயிலாய் முக்தி அடைவதற்கான எளிய வழிகளையும் தாம் போகுமிடமெல்லாம் தம் பாடல்கள்வழிப் பரப்புரை செய்யவே, அவற்றால் ஈர்க்கப்பட்ட மக்கள், கடைப்பிடிப்பதற்குக் கடினமாயிருந்த பௌத்த சமணக் கோட்பாடுகளைக் கைவிட்டு, சைவ வைணவ சமயங்களைப் பின்பற்றுவாராயினர்.

    அக்காலச் சூழலில் சமண பௌத்தர்களில் பலருங்கூட சைவ வைணவ மதங்களைப் பின்பற்றி ஒழுகத் தலைப்பட்டனர்… ஏன் நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்று சொல்வது பொருத்தம். இவ்வாறு புதிதாகச் சைவ வைணவ சமயங்களில் தம்மை இணைத்துக் கொண்ட சமணரும் பௌத்தரும் தம்முடைய அவைதிக நெறிகள், ஒழுக்கங்கள் போன்றவற்றைச் சைவ வைணவ மதங்களில் கலந்தனர். அவ்வாறு கலந்தவையே இப்போது ’இந்து மதத்தில்’ காணக் கிடைக்கும் சமண பௌத்தப் பண்பாடுகளும் அவற்றின் கூறுகளும் என்பதையெல்லாம் தம் நூலறிவாலும் தமிழகமெங்கும் பயணப்பட்டுத் திரட்டிய பட்டறிவாலும் நன்குணர்ந்த மயிலை சீனி வேங்கடசாமி, அக்கருத்துகளை இவ்விரு நூல்களிலும் பதிவுசெய்திருக்கின்றார்.

    ”களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” எனும் மற்றொரு நூலில், களப்பிரர் என்றும் களப்பாளர் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவோர் வடநாட்டார் அல்லர்; அவர்கள் கன்னட வடுகரே என்கிறார். இவர்கள் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தனர். இவர்களில் பெரும்பாலோர் சமண சமயத்தை ஆதரித்தோராகவும், சிறுபான்மை பௌத்த ஆதரவாளர்களாகவும், ஓரிருவர் சைவ வைணவ நெறிபற்றி ஒழுகியோராகவும் இருந்தனர் என்று கூறும் ஆசிரியர், இந்நூலில் திரட்டித் தந்திருக்கும் செய்திகள் களப்பிரர் காலம் இருண்ட காலமன்று நீதிநூற்களையும் தமிழில் பாடல்கள் இயற்றுவதற்குப் புதிய பா வகைகளையும் அறிமுகப்படுத்திய ஒளிமிகு காலமே என்பதை நிறுவுகின்றன.

    இவ்வாறு தம் வாணாள் முழுவதையும் இலக்கிய, வரலாற்று ஆராய்ச்சியிலும் அவை சார்ந்த நூல்கள் எழுதுவதிலுமே செலவிட்ட மயிலை சீனி வேங்கடசாமி, 1980-இல் தம் எண்பதாம் அகவையில் பொன்னுடல் நீத்துப் புகழுடல் கொண்டார்.

    இப்பேரறிஞரைப் ப(போ)ற்றிப் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய பாடல் இவரின் நிகரற்ற தமிழ்த்தொண்டுக்குக் கட்டியம் கூறுவதாகும்.

    ”தமிழையே வணிகமாக்கித்
    தன்வீடும் மக்கள் சுற்றம்
    தமிழிலே பிழைப்பதற்கும்
    தலைமுறை தலைமுறைக்குத்
    தமிழ் முதலாக்கிக் கொண்ட
    பல்கலைத் தலைவன் எல்லாம்
    தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
    கால்தூசும் பெறாதார் என்பேன்”

    மயிலை தந்த மகத்தான அறிஞரான சீனி வேங்கடசாமியின் தன்னேரிலாத தமிழ்ப் பணிகளும், அருமையான ஆராய்ச்சி நூல்களும் அவருடைய பல்துறைத் திறனையும், நுண்மாண் நுழைபுலத்தையும் அறிவுலகில் என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்பது துணிபு.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1. சமணமும் தமிழும் – பதிப்பு வீ. அரசு
    2. பௌத்தமும் தமிழும் – பதிப்பு வீ. அரசு
    3. மறைந்துபோன தமிழ் நூல்கள் –பதிப்பு வீ. அரசு
    4. தமிழ் இலக்கிய வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு – பதிப்பு வீ. அரசு
    5. https://ta.wikipedia.org/wiki/மயிலை_சீனி._வேங்கடசாமி

    Share
  • சேக்கிழார் பா நயம் – 42

    சேக்கிழார் பா நயம் – 42

    திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ———————————————–

    சுந்தரர் தில்லைத் திருத்தலத்தில் கூத்தப் பிரான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார் . அப்போது தூக்கிய திருவடியை உடைய கூத்தப் பிரான் திருவருளால் வானில் ஓர் ஒலி எழுந்தது! அவ்வொலி சிவபிரான் வழங்கிய அருளொலியே யாகும் ‘’முத்துக்களை அலைத்து வரும் காவிரியால், பெருகிய வளமுடைய வயல்கள் சூழ்ந்த திருவாரூரிலே நம்மிடம் வருக!’’ என்ற நாதத்தைக் கேட்டதும், அதனை உணர்ந்து கொண்டு எழுந்தார். இதனைச் சேக்கிழார்,

    ‘’எடுத்தசே வடியா ரருளினார் ‘தரளம் எறிபுனன் மறிதிரைப் பொன்னி
    மடுத்தநீள் வண்ணப் பண்ணை ஆ ரூரில் வருகநம் பா’லென வானில்
    அடுத்தபோ தினில்வந் தெழுந்ததோர் நாதங் கேட்டலும் அதுவுணர்ந் தெழுந்தார்.’’

    என்று பாடினார். அதன்பின்னர் சுந்தரர் கொள்ளிடம் , திருக்கோலக்கா, திருப்புன்கூர் ஆகிய தலங்களைக் கடந்து திருவாரூரின் எல்லைப் புறத்திலே வந்து நின்றார்! அந்த நேரத்தில் ஆழித் தேரால் புகழ்பெற்ற திருவாரூரில் வாழ்ந்த அடியார்களை நோக்கிச் சிவபெருமான், ‘’என்றும் குறையாத பக்தியுடைய நம் ‘’ ஆரூரன்’’ என்ற சிறப்புப்பெயர் பெற்ற சுந்தரர், நாம் அன்புடன் அழைக்கக் கேட்டு , இவ்வூருக்கு வந்துள்ளான்! அவனை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வரவேற்று அழைத்துவருக!’’ என்று கட்டளையிட்டார்! இதனைச் சேக்கிழார்,

    ‘’தேராரும் நெடுவீதித் திருவாரூர் வாழ்வாருக்கு
    ஆராத காதலின்நம் ஆரூரன் நாம்அழைக்க
    வாராநின் றான்அவனை மகிழ்ந்தெதிர் கொள்வீர் ‘’

    என்று பாடினார். அவ்வாறே அடியார்கள் சுந்தரரின் சிறப்புக்களைப் போற்றி , அவர் முன் சென்று அவரை எதிர் கொண்டு வரவேற்று வணங்கினர்! அவர்களை நம் வன்றொண்டராகிய சுந்தரர் தாமும் கரங்களைக் குவித்து வணங்கியவாறே , அத்திருவாரூர்த் திருவீதியில் ஆலயம் நோக்கிச் சென்றார். அப்போது அவர் தம்மை எதிர்கொண்டழைத்த சிவனடியார்களை நோக்கி, ‘’ எம் தந்தையாகிய பெருமான் எழுந்தருளிச் சிறப்பிப்பதும் இந்தத்திருவாரூரோ? அப்பெருமான் மிகவும் எளியவனாகிய என்னையும் ஆட்கொள்வாரோ? ‘’ என்பதை அவர் திருமுன் சென்று கேட்டுச் சொல்க!’’ என்றுவேண்டினார்! இந்த வேண்டுகோளையே ஈற்றடிகளில் அமைத்து பதிகம்பாடினார்.

    ‘’வாயிற்புறத்துத் தம் முன் வந்து தம்மை யெதிர்கொண்டு வணங்குபவர்களாகிய திருவா ரூரின் அடியவர்களை, அவர் தம்மை வணங்குதற்கு முன்னரே தாம் கை குவித்து வணங்கி அவர்களுடன் கலந்து வந்து இருதிறத்தார்க்கும் மனமகிழச்சி பொங்க முன்னே சொன்ன வாறு தம்மை வரவேற்க அலங்கரிக்கப்பெற்று விளங்கும் திருவீதியினுள்ளே செல்வாராய நம்பிகள்; திருத்தொண்டர் … பாடி – இறைவன் ஆணையின் படி தம்மை வரவேற்க வந்த அந்த அடியவர்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு, “எமது பெருமான் விரும்பி எழுந்தருளியிருப்பது இத்திருவாரூரேயாகும்; அப்பெருமான் எம்மையும் ஆட்கொண்டருளுவரோ? கேளுங்கள்!“ என்ற கருத்துக் கொண்ட மகுடத்தையுடைய சந்தமும் இசையும் பொருந்திய காந்தாரப்பண்ணிலமைந்த திருப்பதிகம் பாடிக் கொண்டே – தமக்கும் அவர்கட்கும் பெருமானாகிய புற்றிடங்கொண்டாரது கோயில் திருவாயிலை அடைந்தார்.இதனையே, வந்தெதிர் கொண்டு வணங்குவார்முன் வன்றொண்டர் அஞ்சலி கூப்பி வந்து சிந்தை களிப்புற வீதி யூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி “யெந்தை யிருப்பது மாரூ ரவர் எ ம்மையு மாள்வரோ கேளீ“ ரென்னுஞ் சந்த விசைப்பதி கங்கள் பாடித் தம்பெரு மான்றிரு வாயில் சார்ந்தார். என்று பாடுகின்றார்.

    இப்பாடலில் சிந்தை களிப்புற – என்றதொடர் கூத்தப் பெருமான் ஆணையிட்ட திருஆரூர்த் தலத்தை யடைந்தோம் எனவும், ஆரூர்ப் பெருமான் ஆணையின்படிப் போந்த இவ்வடியவர்களை வணங்கப்பெற்றோம் எனவும் நம்பிகள் மனமகிழ்ந்தார். “நம்பிரானாராவார் அவரே“ என்று துணிந்து எதிர் கொண்ட அடியவர்கள் இந்த நம்பிகளைக் கிடைத்து வணங்கப்பெற்றோம் என்று சிந்தை களிப்புறுமாறு என்பதுமாம். மிகக் கடையேனாய், ஆட்கொள்ளப் பெறும் தகுதிபெறாத என்னையும். என்னையும் என்போல்வாரையும் என்று உளப்படுத்தி எம்மை எனப் பன்மையாற் கூறினார்.

    கேளீர் – நீங்கள் பழ அடியீர்கள். திருவாரூரிலே பிறக்கும் பெருமைத் தவமுடையீர்கள்; . எனது தகுதியின்மை நோக்கி இகழாது, உங்கள் உரிமையாலே உங்களது விண்ணப்பத்திற் கிணங்கி,இறைவன் என்னை ஆள்வரோ? அதைப் பழகிய நீங்கள் அவரிடம்கேட்டுச் சொல்லுங்கள் என்ற குறிப்பாம். அடியார் மூலம் ஆண்டவன் திருவருள் கிட்டும். அல்லவா?

    இவ்வாறே திருஞான சம்பந்த சுவாமிகள் திருவாரூரைத் தரிசிக்க எழுந்தருளியபோது தம்மை எதிர்கொண்ட அடியார்களை நோக்கி, உங்கள் இறைவனாகிய “திருவாரூரான் வருந்தும் போதெனை வாடல் எனுங் கொலோ“ என்று வினவித் திருப்பதிகம் பாடியருளினர். அப்பர் சுவாமிகளும் இவ்வாறே அடியவர்களை வினவி “நமக்குண்டு கொலோ … ஆரூர் அவிர்சடையான் …
    தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே“ என்று பாடியருளினர். அடிமைத் திறத்தின் சிறப்புப் பொருந்திய தலம் திருவாரூர் என்பது இங்கே. “திருத்தொண்டத் தொகை“ பாடியருளப் பெற்றமையாலும், “நிலவு தொண்டர்தங் கூட்ட நிறைந்துறை“யத் தேவர்கள் வணங்கி நிற்கும் தேவாசிரியன் விளங்குகின்றமையாலும் காணப்பெறும். இத்தலத்தே வாழ்வாராம் அடியார்களின் சிறப்பாவது இறைவனால் முன்னமே ஆட்கொள்ளப் பெற்று இனியுமோர் பிறப்பில்லாத பக்குவான்மாக்களே இங்குப் பிறக்கும் பெரு பெறுகின்றார் என்பதாம்.இங்குப் பிறப்பிற் செலுத்துகின்றமையாலே இறைவன் இவர்களை முத்தியிற் செலுத்துகிறான். இதனாலேயே ,

    ‘’திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்’’

    என இவர்கள் திருத்தொண்டத் தொகையில் தனியாகத் துதிக்கப் பெற்றனர்.

    ‘’ஆரூர்ப்பிறக்க முத்தி ‘’ என்பது பழமொழி . ‘’பிறந்தவர் பிறவாப் பெரும்பதி யகத்தும் ‘’ என்றார் கல்லாடனாரும். இவர்கள் முன்னமே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற முத்தான்மாக்கள் ஆதலின் மேலே காட்டியபடி, மூன்று ஆசாரியன்மார்களும் இந்த அடியவர்களை வினவிப் பதிகம் பாடிப் பின்னரே தலத்தினுள் சென்று ஆண்டானைப் பாடியருளினர் என்க !

    Share
  • படக்கவிதைப் போட்டி – 218

    படக்கவிதைப் போட்டி – 218

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (30.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • இலக்கியச் சிந்தனை 587 + குவிகம் 51

    இலக்கியச் சிந்தனை 587 + குவிகம் 51

    இலக்கியச் சிந்தனையும் குவிகமும் இணைந்து அழைக்கின்றன.

    Share
  • கடமையால் உயர்ந்த காவற் கோபுரம்

    கடமையால் உயர்ந்த காவற் கோபுரம்

    ஔவை நடராசன்

    கல்வியாளரும், அறிவிற்சிறந்த மரபின் கிளையாகவும் திகழ்ந்த காவல்துறைத் தலைவர் வி.ஆர்.இலட்சுமி நாராயணன் அவர்கள், இந்திய நாடு முழுவதும் நன்கறிந்த காவல்துறையின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார்.

    சிறந்த ஆங்கிலப் புலமையும் சிந்தனை வளமும் செயல் நேர்மையும் அவர் புகழுக்கு அணி சேர்த்தன.

    பல முறைகள் அண்ணா நகரில் நான் அவரைக் கண்டு பேசியிருக்கிறேன். மறைந்த வழக்கறிஞர் நண்பர் தெய்வசிகாமணி தான், அவர் இல்லத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்.

    எண்ணிப் பத்தாண்டுகளுக்கு முன்னர் அவர் ஆங்கில இந்து நாளிதழில் எழுதிய கடிதங்கள், அவரின் சிந்தனைப் பெருமிதத்தைக் காட்டின. நானும் அவரும் பல இலக்கிய மேடைகளிலும், இசை அரங்குகளிலும் பங்குகொண்டு பேசியிருக்கிறோம்.

    ஒரு முறை நீதியரசர் மேதை வி.ஆர்.கே. இல்லத்தில் விருந்துண்டதாக நினைவு .

    முதுமை என்பது, காலம் செல்லச் செல்லக் கனிந்து பழுத்ததும் காம்பிலிருந்து உதிரச் செய்து விடுகிறது. அந்த வகையில்தான், அறிஞர் இலட்சுமி நாராயணன் மறைந்தார்.

    எ.எஸ்.பி. ஐயர் தலைமுறையின் ஒரு மாமணியை இழந்துவிட்டோம். காவல்துறையில் பணியாற்றியபோதும் கனிவு ததும்பும் கடமை உணர்ச்சிக்கு அவர் உயரிய எடுத்துக்காட்டாக ஒளிர்ந்தார்.

    நான் அவரிடத்தில் பேசிய போதெல்லாம் அவரின் அண்ணன் நீதியரசர் விஆர்.கிருஷ்ணய்யரைப் பற்றித்தான் பேசினார் .

    தனக்குப் புகழ் வேண்டாத தலைவராக வாழ்ந்தார் .  ஒரு முறை அருளைக் கண்டு ஆரத் தழுவி, அப்பாவை நீ மிஞ்சுகிறாய் அதற்கு அடையாளம் தெரிகிறது என்று பாராட்டி என்னிடத்தில் புகழ்ந்தார்.

    அண்ணா நகர் சிகரப் பூங்காவில் அமைதியாக நடந்து வந்த நடையாளரை இழந்த துயரத்தை எண்ணி இரங்குகிறேன்.

    Share
  • A symphony with water colour

    A symphony with water colour

    Art by Jayanthi Sankar, Singapore

    Preserving the subjects with masking fluid to create the back grounds first – with the twilight, the reflections, water surface, the door, and the night sky were the most crucial. Removing masking fluid on the A3, 300mg watercolour papers to work on the subjects needed more care and very gradual building with dilute pigment. My constant dialogues with water in the past two years have been beautifully creating an effect of a symphony in me. Lovely experience🙂

    Share
  • தனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்

    தனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்

    The Extraordinary Journey of the Fakir என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கென் ஸ்காட் (கனடா நாட்டு இயக்குநர்) இயக்கிய படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பெற்று வெளிவந்துள்ளது. புதிய கதைக் களத்துடன் சுவையான படமாக அமைந்துள்ளதாகத் திரை விமர்சனங்கள் பலவும் தெரிவிக்கின்றன. வல்லமை வாசகர்கள் யாரும் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால், உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

    Share
  • வண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி

    வண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி

    மரபின் மைந்தன் முத்தையா

    காலத்தின் தோள்களிலே குயிலாக உட்கார்ந்து
    கானங்கள் இசைத்தவனைப் பாடு
    காற்றுவரும் திசையெல்லாம் குளிர்ந்துவரும் அவன்பாட்டில்
    கூறியுள்ள வாழ்க்கைமுறை தேடு

    ஞானத்தின் கருவூலம் தான் என்று இருந்தாலும்
    நான் என்ற ஆணவமே இன்றி
    வானத்தின் செய்திகளை வார்த்தைகளில் வார்த்தளித்த
    கண்ணதாசக் கவியரசே நன்றி

    சூட்சுமங்கள் எத்தனையோ சொல்லி வைத்த உன் கவிதை
    சூத்திரமாய் இருக்குதய்யா வாழ்வில்
    காட்சிக்கு இலை எனிலும் கருத்தெல்லாம் நிறைந்தவனே
    கைகூப்பினோம் உனது நாளில்

    சிறுகூடல் பட்டியையோர் ஷேத்திரமாய் ஆக்கியவன்
    சிறகடித்து ஆண்டுகளும் ஓடும்
    வருங்காலம் எப்போதும் வரகவியே உன்னுடைய
    வண்ணத்தமிழ் பாட்டிசைத்தே வாழும்

    Share
  • காலமெலாம் வாழும் கண்ணதாசன்!

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு
    பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே
    நிலைநிற்கும் பலகருத்தைச் சுமந்துவந்த அவர்பாட்டு
    நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது!

    பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்
    பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்
    இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்
    கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான்!

    கருவிலே கற்பனையைக் காவிவந்த கண்ணதாசன்
    உருவிலே கம்பனாய், காளிதாசன் போலானான்
    துருவியே தமிழ்கற்றான் துணிவுடனே கவிதந்தான்
    அருமைமிகு கண்ணதாசன் அகமெங்கும் வாழுகிறான்!

    வேதக்கருத்தை எல்லாம் மிகச்சிறப்பாய்த் தமிழாக்கி
    காதினுக்குள் செலுத்துதற்குக் காரணமாய் இருந்தானே
    கீதைதனைப் படிப்பதற்கும் பாதைதனை அமைப்பதற்கும்
    போதனையாய்ப் பாவெழுதிப் போதித்தான் கண்ணதாசன்!

    Share
  • எங்கே போகும்?

    எங்கே போகும்?

    மணிச்சிகை

    நாட்டை ஒருவன் குப்பை என்றான்
    ஆங்கோர் திரைப்படத்தில்,
    நமக்கோ உடனே ரோசம் வந்தது!
    நல்லது நல்லதுதான்!
    ஏட்டில் காட்சியில் இழித்துச் சொன்னால்
    எழுந்து வரும்கோபம்
    ஏனோ வாழ்க்கை வாழும் போதில்
    எவர்க்கும் வருவதில்லை!

    குழுமிக் கிடக்கும் குப்பைக் கூட்டம்,
    கூடவே பசுக்களிங்கு!
    குவியும் நெகிழி உண்டு நலத்தில்
    குலையும் உயிரனங்கள்!
    மழைக்கா லத்தில் அள்ளாக் குப்பை
    மழையில் என்னபடும்?
    மக்கள் சிந்தனை எங்கே போனது?
    மாற்றம் என்றுவரும்?

    பசுமை என்று பெயரை வைத்தால்
    பசுமை நேராது!
    பளிங்குக் கற்கள் எந்தப் போதும்
    பால்நில வாகாது!
    தசையின் அழுக்கு தேய்த்துக் குளிக்கத்
    தேவை என்பதுபோல்,
    தரையில் ஊரில் குப்பை அழுக்கு
    தேவை சுத்தமொன்றே!!

    Share
  • கலிகாலத்தில் நல்லவர்கள்!

    கலிகாலத்தில் நல்லவர்கள்!

    நிர்மலா ராகவன், மலேசியா

    நலம்…நலமறிய ஆவல் – 163

    மகிழ்ச்சி அடைவதே தவறு என்பதுபோல் நடந்துகொண்டுவிட்டு, பிறகு தம்மைத் தாமே சமாதானப்படுத்திக்கொள்ளக் கூறுவது: `இந்தக் கலிகாலத்தில் நல்லவர்கள்தாம் அதிகமாகக் கஷ்டப்படுவார்களாமே!’

    `இன்னா செய்தார்க்கும்..’ என்று திருவள்ளுவர் எக்காலத்திலோ சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால், இன்று நமக்குத் தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்தால், நாம் ஏமாளி என்று நினைத்து இன்னும் எல்லை மீறுகிறார்கள். தேவையற்ற துன்பங்களை அனுபவிப்பதற்கு நல்லவர்களாக இருந்து என்ன பயன் என்ற விரக்தி ஏற்பட்டுவிடுகிறது.

    எதிர்ப்பா, மௌனமா?

    `நல்லவனாக இருக்கத்தான் எனக்குப் பிடிக்கும். ஆனால் அது எப்படி முடியும்?’ என்று கேட்பவர்களுக்கு:

    பிறர் நமக்குத் தீமை இழைத்தால் அதை பொறுத்துப்போவானேன்! அப்படிப்பட்டவர்களுக்குப் பயந்து நடந்தால், நமது சக்தி அவர்களுக்குப் போய்விடுகிறது. நாம் எதிர்த்தால் அவர்கள்தாம் சக்தியை இழந்துவிடுகிறார்கள்.

    கோபத்தை மௌனத்தால் வெல்லலாம் என்கிறார்கள். சில சமயங்களில் இம்முறை பலனளிக்கலாம். ஆனால், அவசியம் என்னும்போது கோபத்தை வெளிக்காட்டத்தான் வேண்டியிருக்கிறது.

    அளவுக்கு அதிகமாக பொறுமைகாப்போர் நாளடைவில் பலகீனம் அடைந்துவிடுவதுண்டு. இவர்களில் சிலருக்கு எதிலும் பிடிப்பற்றுப் போய்விடக்கூடும்.

    பிறரோ, எதிர்த்துச் சண்டைபோடத் தைரியம் இல்லாது, பின்புறம் போய் முதுகில் குத்தும் முறையைக் கையாள ஆரம்பிக்கிறார்கள்.

    கதை

    புதிய மணப்பெண்ணான பாலம்மா கிராமப்புறத்திலிருந்து வந்தவள். புக்ககத்தினரோ நாகரீகமான நகரைச் சேர்ந்தவர்கள். அவளுக்கு அவர்கள் வாழ்க்கைமுறை புரியவில்லை.

    எனினும், `பெரியவர்கள் சொல்வதையெல்லாம் சற்றும் யோசியாது, அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்’ என்ற முறையில் வளர்க்கப்பட்டிருந்ததால், எல்லாரையும் அனுசரித்துப்போனாள்.

    திருமணமாகிப்போன அவளுடைய நாத்தனார்கள் பிறந்தகத்திற்கு வந்தபோதெல்லாம் பெற்றோரிடம் துணிச்சலாகப் பேசுவதைப் பார்த்து, தான் எதையோ இழந்துவிட்டதைப்போல ஒரு வெறுமை உண்டாயிற்று.

    பாலம்மாவுக்கும் சிறிது தைரியம் வந்தது. ஆனாலும், `மூத்தவர்களை எதிர்ப்பதா!’ என்று தோன்றிப்போக, அவர்களுக்குப் பின்னால் அவதூறாகப் பேச ஆரம்பித்தாள்.

    குடும்பத்தில் மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தது நற்குணமாக இருக்கலாம். ஆனால், அவளுக்கு எந்த உரிமையையும் கொடுக்காது, `அசடு’ என்று அவர்கள் ஓயாது பழித்தபின்னரும் பொறுத்துப்போனது பாலம்மாவின் தவறு.

    தன்னை மாற்றிக்கொள்ள முடியாது, `என் வாழ்க்கையை இப்படியே, பிறர் சொல்வதைக் கேட்டே, கழித்துவிடுகிறேன்!’ என்று கண்டவரிடமெல்லாம் சொல்லிப்பார்த்தாள். அதில் நிறைவில்லை.

    தன்னைப்போல் இல்லாத, பிற கலாசாரங்களிலிருந்து வந்தவர்களுடன் பாலம்மா தன் அவலத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தால், ஒருக்கால் தீர்வு கிடைத்திருக்கும்.

    நல்லவனாக நடி

    `என்னை நல்லவர், திறமைசாலி என்று பிறர் பாராட்ட வேண்டும்!’ என்று உறுதி எடுத்துக்கொண்டவர்போல் நடப்பது போலித்தனம். குறுகிய காலத்தில் பதவியும், அத்துடன் பெரும்பொருளையும் அடைய முனைகிறவர்கள் செய்யும் உத்தி இது. நினைத்ததை அடைந்தவுடன் நல்ல குணமும், முன்பு காட்டிய சுறுசுறுப்பும் எங்கோ காணாமல் போய்விடும்!

    பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பி நடப்பவர்கள் பெரும்புகழை வாங்கலாம். ஆனால், மனோதிடமோ, நற்பண்போ இல்லாவிட்டால் வாழ்வில் எதிர்ப்படும் இடர்களைக் கடக்க இயலுமா?

    பிறர் படும் துயர்களைப்பற்றிப் பேசியே பொழுதைக் கழிப்பவர்கள் தம்மைப்பற்றி சற்று மறக்கலாம். `எனக்குப் பிறரது நலனில் மிகுந்த அக்கறை!’ என்று காட்டிக்கொள்ளும் முயற்சி இது.

    நாம் பேசுவதால் மட்டும் பிறரது கஷ்டங்கள் குறைந்துவிடுமா? அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்று யோசித்து, காரியத்தில் இறங்கினாலாவது பயனுண்டு.

    எல்லாருக்கும் நம்மைப் பிடிக்கப்போவதில்லை. நம்மைப் புரிந்துகொள்ளவும் முடியாது. (நமக்கே நம்மைப் புரிகிறதா என்பது வேறு விஷயம்).

    பார்ப்பவர்கள் அனைவரையும் கவரவேண்டும்; குறைந்த பட்சம் அவர்களது ஆமோதிப்பையாவது பெறவேண்டும் என்றெண்ணியே நடந்தால், சக்தி விரயமாக, சலிப்புதான் மிஞ்சும். நம் எல்லையை நிர்ணயிக்கும் உரிமையை பிறருக்கு எதற்காக வழங்கவேண்டும்?

    சில சமயம், குடும்பத்தினரே, `இவன் வித்தியாசமாக இருக்கிறானே, கஷ்டப்படப்போகிறானே! என்ற கரிசனத்துடன், ஒருவர் தேர்ந்தெடுத்த பாதையைக் குறைகூறினாலும், `நான் செல்வது நல்வழியில்தான்!’ என்று உறுதியுடன் நடந்தால், அவரையொத்த பிறரது நட்பு கிடைக்கும். அவர்கள் பக்கபலமாக அமைவார்கள்.  

    யார் நல்லவர்கள்?

    பிறரது துன்பத்தை தாமே அனுபவிப்பதுபோல் உணர்ந்து, அதைக் குறைக்கத் தம்மால் இயன்றதைச் செய்பவர்கள்.

    நம்மை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தால், ஏமாற்றாமல் அதைச் செய்பவர்கள். இத்தகையவர்களுக்குப் பிறரது கண்காணிப்பு அவசியமில்லை.

    கதை

    ஈவலின், பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்தவள். கணவரைவிட்டு, பிழைப்பைத் தேடி மலேசியா வந்திருந்தாள். (ஆங்கிலம் தெரிந்திருப்பதால், அந்நாட்டு பணிப்பெண்களுக்குக் கூடுதலான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது).

    கணவன், மனைவி, இரண்டு வயதுக் குழந்தை ஆகியோர் மட்டும் கொண்ட சிறிய குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கிடைத்தது. வீட்டு வேலையைச் சுத்தமாகச் செய்ததால், கவலையின்றி, எல்லா பொறுப்புகளையும் அவளிடமே விட்டது குழந்தை ஏமியின் (Aemi) தாய் செய்த தவறு. `என் குழந்தைக்கு என்னைத் தெரியாது! எல்லாவற்றையும் என் `மெய்ட்’ பார்த்துக்கொள்கிறாள். நான் தனியாக வெளிநாட்டுப் பயணம் செய்யச் சௌகரியமாக இருக்கிறது!’ என்று பெருமை பேசும் ரகம் அவள்.

    மூன்று வயதான ஏமி நோஞ்சானாக இருந்தாள். அதிகமாகப் பேசவில்லை. எதிரிலேயே இருந்த விளையாட்டு மைதானத்தில் தினமுமே அவள் சோர்ந்திருப்பதைப் பார்த்த நான், “ஏமி என்ன சாப்பிட்டாள்?” என்று ஒருநாள் விசாரித்தேன்.

    “ஜூஸ்!”

    “எப்போது?” என்று துருவினேன்.

    “அவள் தூங்குவதற்குமுன்”.

    “எப்போது தூங்கினாள்?” என்று கேட்க, ஐந்துமணி நேரத்திற்குமுன் என்று தெரிந்தது.

    சிறு வயதிலிருந்து என்னைத் தினமும் பார்த்திருந்தும், பதினைந்து வயது ஏமி, “யார் இது?” என்று என்னைக் காட்டி என் பேத்தியிடம் விசாரித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

    நான்கு வயதுக்குள் மனித மூளையில் 80% வளர்ந்துவிடுகிறது. அது நல்லபடியாக வளர சத்தான ஆகாரமும், தகுந்த ஓய்வும் வேண்டாமா?

    ஏமி ஐந்து மணிநேரம் தூங்கினாள் என்றால், அது களைப்பால். `பசிக்கிறது’ என்று சொல்லி அழக்கூடத் தெரியாது இருந்ததால், ஈவலின் அடித்து, மிரட்டி இருப்பாள் என்று தோன்றியது.

    இந்த இரண்டு பெண்களில் யாரை நோவது?

    யார் நல்லவள், யார் கெட்டவள்?

    தன் கடமையில் சற்றும் பொறுப்பின்றி, `விடுமுறைக்கு என் கணவரைப்போய் பார்த்துவிட்டு வந்தேன். பாஸ் (Boss) எனக்காக விமான டிக்கெட் வாங்கினார்!’ என்று பெருமை பேசிய ஈவலினா, அல்லது குழந்தை எப்படியோ வளர்ந்தால் சரி என்று விட்டேற்றியாக இருந்த அந்தத் தாயா?

    Pic courtesy: https://www.maxpixel.net/Model-Beautiful-Woman-People-Portrait-Fashion-2303383

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    -நாங்குநேரி வாசஸ்ரீ

     

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    57. வெருவந்த செய்யாமை

    குறள் 561:

    தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங் கொறுப்பது வேந்து

    செஞ்ச தப்ப நியாய வழில கவனிச்சு பாத்து திரும்ப அவன் அந்த தப்ப செய்யாம இருக்கதுக்கு ஏத்தா மாதிரி தண்டன கொடுக்கவனே ராசா.

    குறள் 562:

    கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்

    நெறைய நாள் செல்வாக்கோட இருக்கணும்னு நெனைக்கவங்க கண்டிக்கத் தொடங்குதப்போ கடுமையா தொடங்கிட்டு பொறவு வரம்பு மீறாம தண்டன கொடுக்கணும்.

    குறள் 563:

    வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

    மக்கள் பயப்படுதமாரி இருக்க  கொடுமக்கார ராசா நடத்துத ஆட்சி வெரசலா அழிஞ்சு போவும்.

    குறள் 564:

    இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்

    நம்ம ராசா கொடுமக்காரன்னு மக்கள் சொல்லுததக் கேட்டு இருக்க ராசாவோட ஆட்சிக்காலம் கொறஞ்சு அவன் கெட்டழியுவான்.

    குறள் 565:

    அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்ன துடைத்து

    கடுகடுனு மொகத்த வச்சிக்கிட்டு யாராலயும் சுளுவா பாக்கமுடியாதவனா இருக்கவன் கிட்ட குவிஞ்சு கெடக்க சொத்து பேய் கணக்கா பாக்குததுக்கு பயப்படுத்தும்.

    குறள் 566:

    கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
    நீடின்றி ஆங்கே கெடும்

    கடுமையா பேசி, தயவு தாட்சண்யமே இல்லாம இருக்கவன் கிட்ட உள்ள செல்வம் நிக்காம அழிஞ்சு போவும்.

    குறள் 567:

    கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
    அடுமுரண் தேய்க்கும் அரம்

    கடுஞ்சொல்லும் வரம்பு மீறின தண்டனையும் ஒரு ராசாவோட பகைய செயிக்க ஒதவுத ஆயுதத்த தேச்சி மொண்ணையாக்குத அரம் கணக்கா ஆவும்.

    குறள் 568:

    இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
    சீறிற் சிறுகுந் திரு

    மந்திரி , மத்த கூட்டாளிங்க எல்லார்கிட்டயும் கலந்து பேசாம கோவப்பட்டு சீறுதவனோட செல்வம் சுருங்கிப் போவும்.

    குறள் 569:

    செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
    வெருவந்து வெய்து கெடும்

    முன்னாலயே யோசிச்சு தேவைப்படுத பாதுகாப்பு செய்யாத ராசா போர் வந்திச்சுன்னா பயந்து வெரசலா அழிவான்

    குறள் 570:

    கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
    தில்லை நிலக்குப் பொறை

    கொடுமக்கார ராச்சியம் நல்லதப் படிக்காதவுகள தனக்கு பக்கத் தொணையா வச்சிக்கிடும். அது கணக்கா பூமிக்கு பாரம் வேற ஒண்ணுமில்ல.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • குறளின் கதிர்களாய்…(260)

    குறளின் கதிர்களாய்…(260)

    செண்பக ஜெகதீசன்

    பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்
    கழகத்துக் காலை புகின்.

                                                             –திருக்குறள்937(சூது)

     

    புதுக் கவிதையில்

    அறம் பொருள் இன்பங்களுக்காகக்
    அளிக்கப்பட்ட காலம்,
    அரசாள்பவனுக்கு
    அற்ப சூதாடு களத்தில் கழிந்தால்,
    அது
    காலம்காலமாய் தொடர்ந்துவரும்
    செல்வத்தையும்
    சொந்தமான நற்பண்புகளையும்
    இல்லாமல் போக்கிவிடும்…!

    குறும்பாவில்

    சூதாடுகளத்தில் அரசனுக்கான நற்காலம்
    கழிந்தாலது வழிவழிவந்த செல்வத்தையும்
    நற்பண்புகளையும் கெடுத்தழிக்கும்…!

    மரபுக் கவிதையில்…

    அறம்பொரு ளதனுடன் இன்பமென
    அரசன் துய்த்திடும் காலத்திலவன்,
    பொறுப்பது கொஞ்சமும் இல்லாமலே
    பொல்லாச் சூதின் களம்சென்றே
    அறமிலாச் சூததில் கழித்தாலே,
    அதுவே யவன்தன் பரம்பரையின்
    திறமையால் வளர்த்தநற் பண்புடனே
    திரண்ட பொருளையும் கெடுத்திடுமே…!

    லிமரைக்கூ…

    பொழுதுபோக்கினால் சூதாடும் களத்தில்,
    புவியரசனுக்கு அதனாலே வந்திடும் கேடு
    பண்போடு செல்வ வளத்தில்…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம் சூதாட்டம்
    வாழ்க்கையக் கெடுக்கும் சூதாட்டம்..
    நல்லதெல்லாம் அனுபவிக்கிற நேரத்தில
    அத மறந்து
    பொல்லாச் சூதுல போய்க்கழிச்சா,
    பெரிய ராசாவுக்கும் அது
    பரம்பரயா வந்த நல்லகொணத்தையும்
    சேத்துவச்ச செல்வத்தயும்
    சேந்தப்புல அழிச்சிடுமே..
    அதால
    வேண்டாம் வேண்டாம் சூதாட்டம்
    வாழ்க்கையக் கெடுக்கும் சூதாட்டம்…!

    Share
  • மாசிலா மணியே! வலம்புரி முத்தே!

    மாசிலா மணியே! வலம்புரி முத்தே!

    ஔவை நடராசன்

    என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய்மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து, தன் வியர்வையையும் உதிரத்தையும் கண்ணீரையும் குடம் குடமாகச் சிந்தி, ஒப்பற்ற மகளிர் திலகங்களாக இருவரையும் வளர்த்தார்.

    என் உறவினர்கள் யாரும் எட்ட முடியாதிருந்த கான்வென்டு பள்ளியில் சேர்த்துத் தாயாகி, தந்தையாகித் தெய்வமாக ஒவ்வொரு நாளும் வளர்த்தார்.

    சென்னையில் வாழ்ந்தபோது, அப்போதுதான் இரண்டாம் உலகப் போர் அச்சம் நிலவியது. சென்னையை விட்டு எல்லோரும் குடி பெயர்ந்தார்கள். பெயருக்கு ஏற்ற மாசிலாமணியாகத் திகழ்ந்த என் தாத்தா, வேலூருக்குக் குடிபெயர்ந்தார். வேலூரில், தன் மக்கட் செல்வங்களை நாளும் காலையில் கொண்டு போய்ப் பள்ளியில் விடுவதும், தாமே உணவு சமைத்து மதியம் பள்ளி வந்து ஊட்டுவதும் உருக்கம் தரும் காட்சியாகும்.

    இந்நிலையிலும் கூட, விடியலில் எழுந்து தாம் வல்லவராக இருந்த தச்சுப் பணியில் தம் கை நோக உழைத்தார். உடன் இருந்தவர்கள் எல்லாம் இந்தப் பெண் மக்களுக்குப் பத்தாம் வகுப்பு போதாதா என்று கேட்டபோது, வெகுண்டு எவ்வளவு படிக்க விரும்புகிறார்களோ, எந்த உயரத்துக்கு எட்ட விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு உயிர் உள்ள வரையில் அவர்களை உயரே அமர்த்திப் பார்ப்பதுதான் நான் எடுத்துக்கொண்ட சபதம் என்று வாழ்ந்து காட்டினார். உழைப்புக்கும் உறுதிக்கும் ஒரே சான்று என் மாமன்தான் என்று என் தந்தை சொல்வார் . தாராவைப் பார்த்துத் தான் மரபார்ந்த எங்கள் குடும்பத்தினரும், உறவினரும், பெண் மக்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.

    என் துணைவியார் தாரா ஒருவர் தான், எங்கள் மரபிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, பயின்று முதன் முதலில் வெற்றிச் சிறப்புப் பெற்றார். என் துணைவியார், மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத மனச் சோர்வு முதலில் வந்தது. ஆந்திர மாநிலத்து விசாகப்பட்டினத்தில் அவருக்கு இடம் தந்து அங்கே வரச் சொன்னார்கள். வேலூரில் இருந்து மீளவும் திரும்பிச் சென்னைக்கு வந்து துன்பக் கடலில் தாயில்லாத தனிமைத் துயரில் தவித்துக்கொண்டிருக்கும் நாங்கள் விசாகப்பட்டினத்துக்கு எப்படிச் செல்ல முடியும்? ஒரு மகளைச் சென்னையிலும் மற்றொரு மகளை விசாகப்பட்டினத்திலும் நான் போய்ச் சேர்ப்பதா என்று எள்ளளவும் என் மாமனார் மனம் கலங்கவில்லை.

    மன உறுதி மட்டும் இருந்தால் போதும். மலைகளையும் கூடத் தகர்த்துவிடலாம் என்று தன் மகளை விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்றார். மொழி தெரியாத மாநிலம், உறவினர்கள் என்று ஒருவர்கூட இல்லாத நிலை. கை உழைப்பைத் தவிர வேறு கதி இல்லாத நிலை.

    வீட்டுத் திண்ணை கிடைத்தால் போதும். என் கண்ணிலும் மடியிலும் வளர்ந்த மகளைத் தோளில் சுமந்தாவது துன்பம் வராமல் அவளைக் காப்பது என் கடமை என்று உறுதிபூண்டார். ஒரு கதை படித்தது போல இருக்கும். தாரா அம்மையாரின் தளராத மனமும் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்கிற தனிப்பெரும் முயற்சியும் பத்து நாளில் சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே மாற்றம் பெற்று வந்து சேரும் ஆணையைப் பெற்றார்கள்.

    ஓர் இனத்துக்கு மாசிலாமணி பிள்ளை போன்ற ஒரு கடமையாளர் இருந்தால் அந்த இனம் தலை நிமிர்ந்து நிற்கும்.

    முதலில், என் திருமணம் அவர் மனத்துக்குப் பேரிடியாக இருந்தது. சென்னைக்கு நான் வந்து வாழத் தொடங்கியதும், பழகப் பழக மெல்ல மெல்ல என் மீது பரிவைக் கொட்டினார். என் கடமை முடிந்துவிட்டது. என் அருமை மகளைப் போல இன்னொரு திருமகளை நான் எந்தப் பிறவியில் பெறப் போகிறேன் என்றாலும், என் மகள் தான் எனக்கு அன்னை. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் பிள்ளைகள் தான் எனக்குக் குல தெய்வங்கள் என்று புலம்பிய நிலையில் தான் அவர் உயிர் பிரிந்தது.

    உலகின் எத்தனை நாடுகளுக்கு நீ போவதென்றாலும் நான் உடன் வருவேன் என்று சொல்லி, மலை போன்ற மனத்துணிவை மகளுக்கு ஊட்டினார். இப்போதும்கூட, என் மனைவியைப் பார்த்து நான் பேசும்போதெல்லாம் என் மனக்கண்ணில் அவர் தான் நிற்கிறார்.

    “தாயாகி, தந்தையாகி எம்மைத் தாங்கி நின்ற தெய்வம்” என்ற தொடர்தான் அவர் கல்லறையில் எழுதப்பெற்றது.

    அவர் வளர்த்த குடும்பக் கொடி, இன்று செழித்தோங்கி நிற்கிறது. மகனும் பெயர்த்தியும் எனக் குடும்பத்தினரும், உறவினரும் மருத்துவ மணிகளாகத் மிளிர்கிறார்கள். எந்த உயர்வு அவர்களுக்கு வந்தாலும் மாசிலாமணி அவர்களின் நினைவுக்குத்தான் காணிக்கையாக்குகின்றனர்.

    ஒப்பற்ற ஒரு தந்தையாக, உலகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தார்.

    இன்று அவரின் 49ஆவது நினைவு நாளாகும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மனத்திலே எத்தனையோ தாக்கங்கள். சுற்றி அவ்வப்போது நிகழும் நிகழ்வுகள் உள்ளத்தில் தாக்கத்தை  ஏற்படுத்துகின்றன. அத்தகு தாக்கங்களின் எதிரொலிகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் அனைத்துமே என் வாசக உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆயிரம் எண்ணங்களை மலர்விக்கின்றன. ஆனால் இன்றைய இங்கிலாந்தின் உடனடி அரசியல் நிகழ்வுகள் கொடுக்கும் நாளாந்த மாற்றங்களின் தாக்கங்கள் அரசியல் களத்திலேயே நடமாட வைக்கின்றன. நடக்கும் அரசியல் மாற்றங்கள் எம் தனிப்பட்ட வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கம் எவ்வகையாக இருக்கப் போகிறது எனும் ஆதங்கம் ஒருபுறம், புலம்பெயர் வாழ்வினில் இந்நாட்டு பிரஜைகளாகி வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டவராகிய எமக்கும், எமது தலைமுறைக்கும் இவ்வரசியல் மாற்றங்கள் எத்தகைய மாற்றங்களை அல்லது எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கப் போகின்றன எனது ஆதங்கம் மறுபுறம்.

    நாம் பிறந்த மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் குடியேறி அந்நாட்டிலேயே வாழத் தொடங்கும் நாம் படிப்படியாக நமக்கு வாழ்வளித்த இந்நாட்டை நமது சொந்த நாடாகக் கருதும் நிலைக்கு நம்மை மாற்றிக்கொள்வது மிகவும் இலகுவான காரியம் அல்ல. ஆனால் காலப் போக்கில் நாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்கள், கலாச்சார விழுமியங்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்து வாழும் நாட்டிற்கு உளசுத்தியுள்ள ஒரு பிரஜையாக வாழ நமை மாற்றிக் கொள்கிறோம். அத்தகைய மாற்றத்தின்போது நாம் பிறந்த மண் நமக்குக் கொடுத்த மொழியின் மீதான காதலையும், கலாச்சார அடிப்படையையும் தொலைத்து விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகளே ஒரு போராட்டம்தான். இப்படியாக வாழ்ந்து நமது அடுத்த தலைமுறைகளை இங்கே உருவாக்கி அவர்கள் முற்றுமுழுதாக இந்நாட்டு மண்ணின் குழந்தைகளாகி, இந்நாட்டுச் சூழலிலே தமது வாழ்வாதாரத்துக்கான வழிகளைத் தேடி வாழும் வாழ்க்கையின்போது நாட்டில் பல அரசியல் மாற்றங்களும், இந்நாட்டின் தொன்மை மக்களின் மனத்தில் ஏற்படும் கசப்பான புரிந்துணர்வுகளினாலும் எமைச் சுற்றி ஏற்படும் மாற்றங்கள் ஒருவகை பயத்தைத் தோற்றுவிக்கத்தான் செய்கின்றன.

    பதினெட்டிலிருந்து அறுபத்திரண்டு வரை ஓடிக் கொண்டிருக்கும் என் வாழ்க்கைப் பயணத்தின் தண்டவாளங்களின் திசை இந்தச் சந்தியில் இத்தகையதோர் திருப்பத்தை ஏற்படுத்துவது கொஞ்சம் என்னைச் சிந்திக்க வைக்கிறது. பல வருடங்களாக இங்கிலாந்தின் பழம்பெரும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான உறவுகளின் மீதான அபிப்பிராய பேதங்களும், கருத்து மோதல்களும் கூர்மையடைந்து வரும் வேளையில், அது அக்கட்சியின் தலைவர் பலரைக் காலம் காலமாகக் காவு கொண்டு வந்துள்ளது. இந்தக் கருத்து மோதல்களின் அதியுச்சகட்டமாகவே இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த “ப்ரெக்ஸிட்” எனும் அரசியல் பூதம் அடைத்து வைக்கப்பட்ட கண்ணாடிக் கூஜாவிலிருந்து வெளிப்பட்டு, அரசியல் களத்தினில் ஆட்டம் போட்டு, இன்றைய பிரதமர் தெரேசா மே அவர்களையும் பலிகொண்டு நிற்கிறது.

    தெரேசா மே அவர்களுக்குப் பதிலாக, கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரையும், இந்நாட்டின் அடுத்த பிரதமரையும் தெரிவு செய்யும் பொறுப்பு, 313 கன்சர்வேடிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் விடப்பட்டு அவர்களின் வடிகட்டலில் மிஞ்சும் இரண்டு உறுப்பினர்கள், கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் சுமார் 1,60,000 பேர்களின் வாக்கெடுப்பினால் அடுத்த தலைவரும், எமது நாட்டின் பிரதமரும் தெரிவு செய்யும் திருவிழா ஆரம்பமாகிவிட்டது. 11 பேர் வாக்களிக்க, இந்தத் தலைவர் தேர்தலில் இன்று இருவர் மிஞ்சி நிற்கிறார்கள். யார் இவர்கள்? முன்னாள் லண்டன் நகர மேயராக இருந்த போரிஸ் ஜான்சன் இவர்களிலொருவர் இவரே சக பாராளுமன்ற அங்கத்தவரிடையே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர். இவர் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் வெளிநாட்டமைச்சர் பதவியிலிருந்தவர். தெரேசா மேயின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கையோடு ஒத்துப் போகாமல் தனது பதவியை இராஜினாமா செய்தவர்.

    அடுத்தவர் ஜெர்மி ஹண்ட். இவர் இங்கிலாந்தின் தற்போதைய வெளிநாட்டமைச்சர், முன்னாள் தேசிய சுகாதார அமைச்சர். இவர்களில் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து காலக் கெடுவான அக்டோபர் 31ஆம் திகதி உடன்படிக்கையுடனோ, அன்றி உடன்படிக்கை இல்லாமலோ விலகுவது என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறிக் கொள்கிறார். ஜெர்மி ஹண்ட் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் உடன்படிக்கையை எட்டக்கூடிய பட்சத்தில், ஒரு சிறிய கால தாமதம் ஏற்பட்டாலும் கூட அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றே என்று கூறுகிறார். ஆனால் தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடான தெரேசா மே அவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்பதன் அடிப்படையில் இவர்கள் இருவரினதும் நிலை திரிசங்கு சொர்க்கமே!

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதுவித உடன்படிக்கையும் எட்டப்படாத பட்சத்தில் உடன்படிக்கை இல்லாமல் விலகுவதே சட்டத்திலுள்ளது. ஆனால் அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது ஒரு வழக்கின் தீர்ப்பாக உள்ளது. பாராளுமன்றத்தில் இங்கிலாந்து எதுவித உடன்படிக்கையும் இல்லாமல் வெளியேறுவது என்பது பெரும்பான்மை உறுப்பினர்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் தெரிவு செய்யப்படும் புதிய பிரதமர், எவ்வகையில் இந்த பிரெக்ஸிட் எனும் பூதத்தைத் திரும்ப ஜாடிக்குள் அடைக்கப் போகிறார் எனது ஒருவராலேயும் புரிந்துகொள்ள முடியாமலே இருக்கிறது.

    சரி! தெரிவு செய்யப்படும் பிரதமர் யாராக இருப்பினும் அவர்கள் முன்னால் இருக்கும் பிரெக்ஸிட் எனும் பிரச்சனை ஒரு பிரச்சனையே! அதன் பின்னால் நாட்டின் பல பிரச்சனைகள் இன்னும் முகம் கொடுக்கப்படாமல் இருக்கின்றதே! அதனை அவர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள். பிரெக்ஸிட் எனும் இப்பூதம் நாட்டினை இரண்டாகப் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றது. வெளிநாட்டவர் குடியேற்றம் அல்லது இமிகிரேஷன் எனும் பிரச்சனை

    வெள்ளை இனத்தவர் மத்தியில் பலரின் மனங்களிலே சிறிது இனத்துவேஷ விதைகளைத் தூவியிருக்கிறது. இனத் துவேஷத்தையே கொள்கையாகக் கொண்ட சில கட்சிகள், இந்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார்கள். மனத்தில் பட்டதை அப்படியே பேசும் உண்மையான அரசியல்வாதிகளின் மீது தான் நமது அபிமானம் எனும் மக்கள் கூட்டம் அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பெற்ற வெற்றிக்குப்பின் இங்கிலாந்திலும் தலைவிரித்தாடுகின்றது. வெளிநாட்டவரின் வருகை, இந்நாட்டின் மக்களுக்கு ஏற்படுத்தும் இடர்களைப் பகிரங்கமாக விவாதிப்பது ஜனநாயகமே எனும் வாதம் ஒரு சரியான வாதமாகப் பட்டாலும் இந்தப் போர்வையின் கீழ் பல இனத்துவேஷம் கொண்டவர்கள் தமது இனவெறிக்கு நியாயம் கற்பிக்கும் நிலையொன்று ஏற்பட்டிருக்கிறது.

    இத்தகைய நிலையைச் சரி செய்து, வீழ்ந்துகொண்டிருக்கும் தமது கட்சிகளின் செல்வாக்கை மீண்டும் அதிகரித்துக் கொள்வதற்காக வழமையாக மிதவாதப் போக்குக் கொண்ட இங்கிலாந்தில் பெரும் அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தமது போக்கினை வெளிநாட்டவருக்கு எதிரான வகையில் கொஞ்சம் கடுமையாக்கிக் கொள்வார்களோ எனும் அச்சம் மேலோங்கியுள்ளது. இந்நிலையில் தான் இன்றைய எமது கேள்வியான இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? எனும் கேள்வி எனைப் போன்ற புலம்பெயர்ந்து வாழும் இங்கிலாந்து நாட்டுப் பிரஜைகளின் மனத்தில் ஆதங்கம் மிக்க கேள்வியாக மேலோங்கி நிற்கிறது. பல சமயங்களில் கட்டுப்பாடின்றி மனத்தில் தோன்றுவதை அப்படியே பேசி பல பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் போரிஸ் ஜான்சன் அவர்களே பிரதமராவர் எனும் எதிர்பார்ப்பு, அரசியல் அவதானிகள் மத்தியில் நிலவுகிறது. தனது பூட்டனார் துருக்கி நாட்டிலிருந்து அகதியாகக் இங்கிலாந்துக்கு தஞ்சம் தேடி வந்தவர். அந்த வழியில் வந்த நான் எப்படி இனத்துவேஷம் கொண்டவராக இருக்கலாம் எனும் வாதத்தை இவர் முன்வைக்கிறார். அதேபோல நான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டிருப்பது ஒரு சீன நாட்டுப் பெண்ணையே, நான் எப்படி வெளிநாட்டவருக்கு எதிராக இயங்குவேன் என்கிறார் ஜெர்மி ஹண்ட்.

    இதற்கான முடிவு ஜூலை மாதம் 22ஆம் திகதியே எமக்குத் தெரிய வரும். அடுத்து வரும் ஒரு 50 வருட காலத்தின் ஐக்கிய இராச்சியத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் பிரதமரை நாட்டில் வெறும் 1,60,000 மக்கள் மட்டும் தெரிவு செய்வதுதான் உலக ஜனநாயகத்துக்கே முன்னோடியாகத் திகழும் ஐக்கிய இராச்சியத்தின் ஜனநாயகமோ எனும் கேள்வி பல முனைகளில் இருந்து கிளம்பாமலில்லை.

    எதிர்காலம் எனும் கண்ணாடிச் சாளரத்தினூடாக என்ன தெரிக்கிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் லட்சோப லட்ச மக்களில் நானும் ஒருவன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share