எங்கே போகும்?
மணிச்சிகை
நாட்டை ஒருவன் குப்பை என்றான்
ஆங்கோர் திரைப்படத்தில்,
நமக்கோ உடனே ரோசம் வந்தது!
நல்லது நல்லதுதான்!
ஏட்டில் காட்சியில் இழித்துச் சொன்னால்
எழுந்து வரும்கோபம்
ஏனோ வாழ்க்கை வாழும் போதில்
எவர்க்கும் வருவதில்லை!
குழுமிக் கிடக்கும் குப்பைக் கூட்டம்,
கூடவே பசுக்களிங்கு!
குவியும் நெகிழி உண்டு நலத்தில்
குலையும் உயிரனங்கள்!
மழைக்கா லத்தில் அள்ளாக் குப்பை
மழையில் என்னபடும்?
மக்கள் சிந்தனை எங்கே போனது?
மாற்றம் என்றுவரும்?
பசுமை என்று பெயரை வைத்தால்
பசுமை நேராது!
பளிங்குக் கற்கள் எந்தப் போதும்
பால்நில வாகாது!
தசையின் அழுக்கு தேய்த்துக் குளிக்கத்
தேவை என்பதுபோல்,
தரையில் ஊரில் குப்பை அழுக்கு
தேவை சுத்தமொன்றே!!
