நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57
57. வெருவந்த செய்யாமை
குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து
செஞ்ச தப்ப நியாய வழில கவனிச்சு பாத்து திரும்ப அவன் அந்த தப்ப செய்யாம இருக்கதுக்கு ஏத்தா மாதிரி தண்டன கொடுக்கவனே ராசா.
குறள் 562:
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்
நெறைய நாள் செல்வாக்கோட இருக்கணும்னு நெனைக்கவங்க கண்டிக்கத் தொடங்குதப்போ கடுமையா தொடங்கிட்டு பொறவு வரம்பு மீறாம தண்டன கொடுக்கணும்.
குறள் 563:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
மக்கள் பயப்படுதமாரி இருக்க கொடுமக்கார ராசா நடத்துத ஆட்சி வெரசலா அழிஞ்சு போவும்.
குறள் 564:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்
நம்ம ராசா கொடுமக்காரன்னு மக்கள் சொல்லுததக் கேட்டு இருக்க ராசாவோட ஆட்சிக்காலம் கொறஞ்சு அவன் கெட்டழியுவான்.
குறள் 565:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து
கடுகடுனு மொகத்த வச்சிக்கிட்டு யாராலயும் சுளுவா பாக்கமுடியாதவனா இருக்கவன் கிட்ட குவிஞ்சு கெடக்க சொத்து பேய் கணக்கா பாக்குததுக்கு பயப்படுத்தும்.
குறள் 566:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்
கடுமையா பேசி, தயவு தாட்சண்யமே இல்லாம இருக்கவன் கிட்ட உள்ள செல்வம் நிக்காம அழிஞ்சு போவும்.
குறள் 567:
கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்
கடுஞ்சொல்லும் வரம்பு மீறின தண்டனையும் ஒரு ராசாவோட பகைய செயிக்க ஒதவுத ஆயுதத்த தேச்சி மொண்ணையாக்குத அரம் கணக்கா ஆவும்.
குறள் 568:
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு
மந்திரி , மத்த கூட்டாளிங்க எல்லார்கிட்டயும் கலந்து பேசாம கோவப்பட்டு சீறுதவனோட செல்வம் சுருங்கிப் போவும்.
குறள் 569:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்
முன்னாலயே யோசிச்சு தேவைப்படுத பாதுகாப்பு செய்யாத ராசா போர் வந்திச்சுன்னா பயந்து வெரசலா அழிவான்
குறள் 570:
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை
கொடுமக்கார ராச்சியம் நல்லதப் படிக்காதவுகள தனக்கு பக்கத் தொணையா வச்சிக்கிடும். அது கணக்கா பூமிக்கு பாரம் வேற ஒண்ணுமில்ல.
(அடுத்தாப்லயும் வரும்….)