Blog

  • முளைப்பாரி: சக்தியின் மூலப்படிமக் குறியீடு

    -முனைவா். ரா.மூர்த்தி

    தாய்த்தெய்வ வழிபாடு மனிதன் அச்சமுறும் காலத்திலிருந்து அச்சத்ததைப் போக்கிக் கொள்வதற்காகக் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட தற்காப்புச் செயல்பாடு ஆகும். இது தமிழ்ச்சமூகத்தில் கண்ணகி வழிபாட்டின் தொடர் விரிவு எனவும் தற்கால நிலைப்பாட்டில் மாரியம்மன் வழிபாடாக மாறியதையும் நாட்டுப்புற ஆய்வாளர்களால் இனங்காண முடிகின்றது.

    தாய்த்தெய்வ வழிபாடு ஆக்ரோசத்தோடு ஆவேச நிலையில் தெய்வமாக்கப்பட்டதை “காளி அசுரனைக் கொன்றமை, கண்ணகி அரசனின் கொடூர முடிவுக்குட்பட்டமை” கற்பின் சந்தேகத்தினால் கொடூர மாற்றம் நிகழ்ந்து பின் வழிபாட்டுக்கு உள்ளாக்கப்படுகிறது. வெறிச்சூழலை ‘சந்து செய்வித்தலால்’ கொடூரத் தோற்றம் ஒரு நிலைப்படுத்தப்பட்டு சாற்றுவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு பெரும்பாலும் தாய்த்தெய்வமான சக்திக்கே அதிகம் நிகழ்த்தப்படுகிறது.

    தாய்த்தெய்வ வழிபாட்டோடு பண்பாட்டில் வெளிப்படும் தெய்வங்களின் ஆக்ரோசத் தன்மையைக் குறைக்க அமைப்பாக்கத்தில் ஒரு பெண் மூலம் மற்றொரு பெண்ணுக்குத் தேவையான சடங்குகளை சாமி ஆடுபவர்கள், மருளாடிகளுக்கு நிறைவேற்றப்படுகிறது. இத்தன்மை ஒரே தளத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பதில்லை. அதன் தளங்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். மாறுபடும் சூழலில் மூலப்படிமத்தின் பெயரும் மாற்றமுறுவதோடு, பொருளின் தன்மை மக்களின் வழக்காற்று வார்த்தைகள், செய்விக்கப்படும் படையல்கள், பொருட்களின் தன்மையும் மாறுபடக் கூடும். இவ்விரண்டு சாய்மையினால் இடம், பொருள் மாறுபட்டாலும் மூலப்படிமத்தின் குறியீடு ஒரே நிலையிலேயே சொற்பொருண்மை கொண்டு செயலாக்கம் பெறுகிறது.

    இந்நிலைப்பாடு தமிழர்களின் வாழ்வில் காலங்காலமாகச் சக்தி தெய்வத்திற்கு மங்களம், வளமை, பசுமை, மறுபிறப்பு, செழிப்பு எனக் குறியீட்டு வடிவத்தை  நிறைத்துச் சமய வழிபாட்டை நகர்த்திச் செல்வதில் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. அதில் தொல்தமிழர்களின் முளைப்பாரியும் அடங்கும். பிற இனத்தவர்கள் தெய்வத்தினை அணுக முற்படாத நிலையில் அத்தெய்வத்திற்கு படைக்கப்படும் பொருட்களைக் கொண்டும் வழிபடும் மக்களைக் கொண்டும் இன்ன தெய்வங்கள் என்று அறிந்துகொள்ள நேர்கிறது. சிலர் இது சக்தியின் வெளிப்பாடு உருவாக்கம் என்று எளிதில் இனங்காணமுடிகிறது.

    முளைப்பாரி தமிழ்ச்சமூகத்தில் வழிபாட்டின் போது எந்நிலையில் பயன்படுத்தப்படுகிறது. அதற்கான காரணம், தோற்றத்தொன்மம், சமூக அடையாளமாக மாறக் காரணம்? தற்காலச் சூழலில் அவற்றின் போக்கு எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது அதனையும் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

    முளைப்பாரி விளக்கம்

    முளைப்பாலிகை என்பதை பேச்சு வழக்கில் முளைப்பாரியாக மாரியது. முளைப்பாலிகை என்பதற்கு “நவ தானியங்கள் முளைக்கும் முளைத்தாழி” என்று கூறுகின்றனர். தாழி என்பது மண் சட்டியைக் குறிக்கும். “விரித்த பாலிகை முளைக்குட நிரையினர்” என்று சிலப்பதிகாரம் சுட்டுகிறது. கோவலன் கண்ணகி திருமணத்தின்போது தானியங்கள் முளைக்கும் பானைகளை ஏந்திக்கொண்டு சென்றதைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகிறது.

    முளைப்பாரி என்பது வித்தினின்று வெளிவருவது. முளைப்பது; பாரி என்பதற்கு ‘கள்’ என்று தமிழகராதி பொருளிடுகிறது. முளைப்பாரி என்பதை உருவாக்குதல் என்று பொருளிட்டால் ‘விதை’ மண்ணில் முளைப்பது என்றால் ஒரு நிலையில் இயல்பாக பறவைகளின் ஊடாக நிகழக்கூடும். மற்றொன்று இறந்தவர்களின் நினைவாக வேண்டுதல் பொருட்டும், விருப்பத்தின் பேரில் நடவு செய்யப்பட்டு அதன் வழி நிகழக்கூடும். பெண்கள் உழவுத்தொழில், பயிர்த்தொழில் இனங்கண்ட நாள் முதல் முளைத்தல், வெளிவருதல் இவை அனைத்தும் பெண்மையின் வளர்சிதை பெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. ‘கள்’ என்ற நிலையில் பார்த்தால் தமிழர்களின் தொல்நிலையிலிருந்தே ஒன்றிணைந்து வருகிறது. இதுவும் இறந்தவர்களுக்கே நடுகல், கல்லறை இவற்றின் அருகில் ஒரு சடங்காக நிகழ்த்தப்பட்டு வருகிறதைக் காணலாம். இழப்பின்மூலம் மீண்டும் புதுமையை எய்த முடிவதோடு இறப்பிற்குச் சரிகட்டலாம் என்ற எண்ணப்போக்கு தமிழ்ப் பண்பாட்டில் தொன்றுதொட்டு காலங்காலமாக நிகழ்ந்து வருகிறது.

    முளைபாரி உருவாக்கும் விதம்

    முளைப்பாரியை உருவாக்குவதில் புழங்கு பொருட்களில் கலப்பு நிகழ்வது போல தானியங்களிலும் கலப்பு மாற்றம் இருக்கும் ‘தென்மாவட்டங்களில் பறையர்கள் முளைப்பாரிக்கு கம்பு, சோளம்,  கேப்பை இதனையே அதிகம் பயன்படுத்துகின்றனர். மாறாக பள்ளர்கள் பயறுகளைப் பயன்படுத்துகின்றனர். முளைப்பாரியை உருவாக்கும் போது பாடக் கூடிய பாடல்

    “நல்ல தண்ணீர் எடுத்து வந்து
    நாங்கள் முளை போட்டோம்
    சிவபாலரெல்லாம் போட்டோம்
    போட்ட முளை பழுதில்லாமல்
    போங்கி நல்லா வளர”
    என்று பாட்டுப் பாடி தொடங்குகின்றனர்.

    ஊர்க்கு ஒதுக்குப்புறத்திலும், அல்லது ஊர்ச்சாவடி, கோயில் ஆகிய இடங்களில் அகலமான உயரமான குத்துச்சட்டி, மண்பானையைக் கொண்டு பயன்படுத்துகின்றனர். பறையர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் காப்புக் கட்டிக்கொண்டு அவர்களது இல்லத்திலே முளைப்பாரியை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதில் பறையர்களுக்கு நாடார் இனத்தைச் சேர்ந்தவர்கள் முளைப்பாரி போட்டு திருவிழா அன்று வழங்குகிறார்கள் (இடம்: வத்திராயிருப்பு). முளைப்பாரிக்குத் தேவையாக வைக்கோல், சோளத்தட்டை இரண்டையும் மூன்று அடி உயரம் நறுக்கி அதில் வைக்கோலைக் கொண்டு சுற்றி கால்படாத களிமண்ணைக்கொண்டு நல்ல தண்ணீர் ஊற்றி அதனைக் குழப்பிக் குத்துசட்டியின் நடுவில் சோளத்தட்டையை வைத்து அதில் மணல் பரப்பி களிமண் கொண்டு மெழுகி அதன் மீது கம்பு, சோளம், போன்ற தானியங்களை ஊறவைத்து தடவி விடுவது வழக்கம் ஏழு நாட்கள் அல்லது ஒன்பது நாட்களுக்கு காற்று புகாமல் மறைவாக மறைத்து வைத்து பிறகு திருவிழா அன்று அதனை வெளிக்கொண்டுவருவார். இவ்வாரு செய்வது பறையர்களின் தொல்கால நிலையாகும்.

    முளைப்பாரிக்குத் தேவையான பொருட்களைக் கையில் எடுத்துக்கொண்டு வழிபடும் போது

    “சோளத்தட்ட ரெண்டெடுத்து
    சோக சோகயாக உருச்சுவச்சு
    கம்மந்தட்ட ரெண்டெடுத்து
    கணுகணுவா ஒடுச்சி வச்சு
    பருத்தி குச்சி ரெண்டெடுத்து
    பளபளன்னு பாவி வச்சு”
      என்று பாடி ஆரம்பிக்கின்றனர்.

    பானை, சட்டி, சோளத்தட்டை இவற்றின் மூலத்தை நோக்கும்போது இரு கருத்தமைவுகளை வெளிக்காட்டுகிறது. பானை –  பெண்மையின் குறியீடு என்றும், சோளத்தட்டை – ஆண்மையின் குறியீடு என்றும் எடுத்துக்கொண்டு  பண்பாட்டோடு அணுகும் போது பானை(பெண்) – சோளத்தட்டை(ஆண்) இரண்டையும் உருவாக்குபவள் பெண்மையே. ஓர் உயிரியின் உருவாக்குதல் – அழித்தல் இரண்டும் பெண்ணே முன்னின்று செயல்படுகிறாள். பயிர்த்தொழில், தானியங்களின் உற்பத்தியைப் பெருக்குதல், அறுவடை போன்ற செயல்பாடு பெண்மையின் வெளிப்பாடே. இதனைச் சிறுதெய்வ வழிபாடுகளில் நம்மால் இனங்காணமுடியும். பெண்தெய்வங்கள் முக்கோண வடிவில், தாமரை வடிவில், நாற்சதுர வடிவில் தோன்றும். அதன் நடுப்புறத்தில் அல்லது அதன் மேல்தளத்தில் ஆண் உருவங்கள் காணப்படும். சிவனின் லிங்கத்தோற்றத்தில் கூட மேல்நோக்கி நின்ற நிலையில் லிங்கமும், அதனைத் தாங்கிக் கொண்டு யோனி போன்று வடிவம் காணப்படும். இக்கட்டுமான அமைப்பினைக் கொண்டு முளைப்பாரியின் தோற்ற வடிவத்தினை அணுகினால் நம்மால் ஓர் அனுமானத்தை இனங்காண முடியும்.

    முளைப்பாரிக்கான தானியங்கள், புழங்கு பொருட்கள் சமூகத்திற்குச் சமூகம் மாறுபட்டாலும் நிறத்தின் சாயல் பசுமை – பச்சைத் தன்மையிலே வளமையாகக் காணப்படுகிறது. அதற்கு மாறாகச் சிவப்பு கோபத்தின் வெளிப்பாடாகவும் பலியிடுதலின் நிலையாகவும் இருந்து வருகின்றது.

    தமிழ்ச்சமூகமும் முளைப்பாரியும்

    தமிழ்சமூகத்தோடு முளைப்பாரியை இனங்காணும் தன்மையில் மருதநிலம் தோற்றமுற்றதே உழவு, விவசாயத்தை மையமிட்டு, ஏனென்றால் இயற்கைச் சூழல், தட்பவெப்ப நிலை, பருவகால மாற்றம் இதனைக் கருத்தில் கொண்டு தமிழர்கள் வாழ்வை நிகழ்த்தி வந்தனர். “தென்னிந்தியச் சடங்கு வரிசையில் பொங்கலிடுதல் உழத்தொழிலின் ஒரு மூலப்படிவக் குறியீடு  என்பதோடு மங்களத்தின் வெளிப்பாடு என்று பிரந்தா பெக் (1969:556) கூறுவதாக பக்தவத்சல பாரதி கூறுகிறார். பொங்கல் வளமை என்று எண்ணத் தோன்றும் போது முளைப்பாரி அதற்கு வித்தாகப் பசுமையின் குறியீடாகக் கொள்ள நேர்கிறது.

    தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்களுக்கு  திருவிழா(கொடை)வின் போது தமிழர்களால் நிகழ்த்தப்படக்கூடிய மூலப்படிவ சடங்காகும். இச்சடங்கு செய்வதால் அம்மனுக்குக் குளிர்ச்சி ஏற்பட்டு குழந்தைப்பேறின்மை, திருமணம் ஆகாத் தன்மை, குடும்பச் செழிப்பின்மை, நோய், நீத்தல் போன்ற தன்மைகள் மாறி செழிப்பு ஏற்படும் என்ற எண்ணப் போக்கு தமிழர்கள் மத்தியில் நிகழ்ந்து வருகிறது. சிறுதெய்வ வழிபாடுகள் அனைத்தும் தாய்த்தெய்வத்தின் வெளிப்புறத்தோற்றமாக இருப்பதால் அதனது வேண்டுதலை நிவர்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் கோவில் வழிபாட்டின் போது பெண்களால் இச்சடங்குகள் செய்விக்கப்படுகிறது.

    முளைப்பாரி இடுவது தமிழ்ச்சமூகத்தில் அனைத்து ஊர்களிலும் தெருக்களிலும் நிகழ்ந்தாலும் அதனை உருவாக்குவதற்குத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களே தேவையாக இருப்பதைக் காணலாம். பெரும்பான்மையான சிறுதெய்வங்களின் தோற்றத் தொன்மத்தினை ஆராய்ந்து நோக்கியோர் உயிர் இழப்பு ஏற்பட்ட சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களே அத்தெய்வங்களை உடல் ரீதியாகவும், உணவு ரீதியாகவும் ஆதரித்தனர் என்று தொன்மக்கதைகள் கூறுகிறது. “ விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஆண்டுதோறும் முத்தாலம்மன் தேர்த்திருவிழா நடைபெறும். திருவிழாவில் பதினெட்டுப்பட்டி கிராமங்களைச் சார்ந்த பல இனமக்கள் கலந்து கொள்வதோடு அனைவரும் வணங்கும் பொதுத்தெய்வமாகவும் முத்தாலம்மன் இருந்து வருகிறது. இருந்தாலும் திருவிழாவில் பறைகொட்டுதல், முளைப்பாரி எடுத்தல் நிலையினைப் பறையர் இனமக்களே செய்கின்றனர். “அன்றே பிறந்து அன்றே அழியக்கூடிய தெய்வமாக” முத்தாலம்மன் தெய்வம் இருந்து வருகிறது.  முளைப்பாரி உருவாக்குதல், அழித்தல் தெய்வம் முதலாகப் பறையர்களே செய்கின்றனர். இது அனைத்து சிறு பெண்தெய்வங்களுக்கும் பொருந்தும். தெய்வங்கள் அழியக்கூடிய நாட்களில் தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொருட்களும் அழிக்கப்படுகிறது.

    இத்தெய்வங்களின் மூலவடிவம் தோற்றமுற்ற நிலம் அதே இடத்திலே குடிகொள்ளும் அதன் நினைவாக ஆண்டுதோறும் உருவாக்கப்படும் எடுப்பு தெய்வங்கள், படையல்கள் அதன் குறித்த காலங்களில் அழிக்கப்படுகிறது. இதில் தொடர்தலைமுறை வணக்கம் மரபு ஒரு வகையிலும் அதனைச் சந்து செய்விப்பதற்காகப் படைக்கப்படும் செயல்பாடுகளும் வெளிப்படுகிறது.

    முடிவுகள்

    தமிழ்ச்சமூகத்தில் விவசாயத்தோடு இரண்டறக் கலந்த முளைப்பாரி தமிழர்களின் அடையாளத்தை தொடர்ச்சியாகத் தாங்கிக் கொண்டு வருகிறது. தெய்வத்திற்கு மட்டும் பயன்பட்டுவந்த முளைப்பாரிகள் இன்று பல்வேறு நிகழ்வுகளுக்குப் பயன்பட்டு வருகிறது. தலைவர், தலைவிகளின் மாநாடுகள், பொதுக்கூட்ட வருகை, நினைவஞ்சலி செலுத்தும் இடங்கள், பொதுநிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக முளைப்பாரி பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை மாற்றத்தினால் தொல்படிவ மூலம் மாற்றமுறாமல் இருந்தாலும் அதன் வெளிப்பாடு தெய்வ நிலையிலிருந்து சற்று மாற்றமுற்று காணப்படுவதை இனங்காண முடிகிறது.

    துணை நின்ற நூல்கள்

    1.பக்தவத்சல பாரதி – பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன்

    பதிப்பகம், 53,புதுத்தெரு, சிதம்பரம் -001
    2.பக்தவத்சல பாரதி – தமிழர் மானிடவியல், அடையாளம் வெளியீடு,  புத்தாநத்தம், திருச்சி -10, முதல் பதிப்பு-2002.

    1. பக்தவத்சலபாரதி – மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம் வெளியீடு,

      புத்தாநத்தம், திருச்சி -10, முதல் பதிப்பு-2005.

    *****

     கட்டுரையாளர் –  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி
    பெரியநாயக்கன் பாளையம்
    கோயம்புத்தூர்- 20

    Share
  • சேக்கிழார்   பா நயம் – 13  

    திருச்சி புலவர்.இராமமூர்த்தி

    ========================

    அடுத்து, திருவாரூரில் ஆண்ட மனுநீதிச் சோழனின் சிறப்பு கூறப்படுகிறது! திருவாரூர் நகர்ச் சிறப்பு  பெரியபுராணத்துக்கு எவ்வாறு துணை புரிகிறது என்பதைச் சில அகச்சான்றுகளால் விளங்கிக்  கொள்ளலாம்!  திருவாரூரின்  பெருமைக்கு   முதற்காரணம். அந்நகருக்குத்  திருமகளே வந்து சிவபெருமானை வழிபாடு செய்தருளினாள்  என்பதாம். அதற்கு ஆதாரம் திருவாரூரில் பெரிய திருக்கோயிலின்  பெயரே கமலாலயம் என்பதாம்!  இதனைச் சேக்கிழார்,

    ‘’சொன்ன நாட்டிடைத்  தொன்மையின்  மிக்கது

    மன்னு  மாமல  ராள்வழி  பட்டது ‘’

    என்று பாடுகிறார்!  மேலும் தியாகேசப் பெருமான் பலகாலம்  பாற்கடலில் மகாவிஷ்ணுவின் இதயத்திலும், பின்னர் பலகாலம் தேவருலகிலும், பின்னர் திருவாரூரிலும்  எழுந்தருளிய சிறப்புடையது.  மேலும் அந்த நகரில்தான், கைலாயத்தில் சுந்தரரை விரும்பிய இருசேடியருள் ஒருத்தியாகிய கமலினி, பரவை நாச்சியாராக வந்துஅவதாரம் செய்த மாளிகை உள்ளது! தொண்டர்கள் தேடும் சிவபிரான், தாமே சுந்தரரைத்  தேடிப்போய்,  சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம்  இருமுறை தூதுவராக நடந்தருளிய பாதத் தாமரையின் நறுமணம் கமழும் திருவீதி உடையது. இதனைச் சேக்கிழார்,

    “இடந்த  ஏனமும்  அன்னமும்  தேடுவார்

    தொடர்ந்து கொண்டவன்  தொண்டர்க்குத்  தூதுபோய்

    நடந்த  செந்தா  மறையடி  நாறுமால் ‘’

    எனப்பாடுகிறார்! இவ்வூரில்தான், சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட்கொண்ட சிவபெருமான், ‘’தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’’ என்று அடி எடுத்துக் கொடுத்தார். அவ்வகையில் உருவான திருத்தொண்டர் புராணத்துக்குப்  பொருளாகிய அடியார் திருக்கூட்டமும் எழுந்தருளிய ஊர்  திருவாரூராகும். இத்தனைச் சிறப்புக்களும் அமைந்த ஊர் திருவாரூராகும். இவ்வூரில்   சோழர்களின் மரபு வழியில், சேக்கிழாரை ஆதரித்த அநபாயச்  சோழன் மரபின் முன்னோனாகிய  மனுநீதிச் சோழன் ஆட்சி புரிந்தான்! அவன் அறநெறி தவறாமல் ஆட்சி செய்ததோடு, வேள்விகள் பல புரிந்து , திருக்கோயி லுக்கான நிபந்தங்களையும் வழங்கினான். அவனுக்கு உலகோர் போற்றத்தக்க முறையில் அருமையான ஆண்மகவு பிறந்தது! அந்த ஆண்மகன் வளரும்போதே  போர்க்கலை ஆட்சிக்கலை, ஆன்மிகம் ஆகியவற்றைப் பயின்றான்

    ஒருநாள்  அவன் இளவரசர் பலரும், நாள் வகைப் படையினரும்  நாற்புறமும் சூழ்ந்து வர, அரசவீதியில் மணிகள் ஒலிக்கும் தேரில் ஏறிச்  சென்றான். அப்போது எவரும் அறிந்து கொள்ளாத நிலையில் ஓர்  இளைய ஆன் கன்று இளவரசன் சென்ற தேரின் சக்கரங்களுக்கிடையில் சிக்கி மாண்டது! உடனே இளவரசன், தான் செய்த  பிழையை நீக்கிக் கொள்ளும் கழுவாயை,   தம் நாட்டு மன்னனாகிய தந்தை அதனை அறியும் முன்னரே அந்தணர்களிடம் சென்று  கேட்டான்!  இந்தச் செய்தி பரவியது. அப்போதே தன் அருமைக்  கன்றை இழந்த தாய்ப்பசு, அரண்மனை வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியைக்  கொம்பால்  முட்டி அசைத்து ஒலிக்கச் செய்தது! அந்த மணியோசை அரசன் செவியில் ஒலித்தது. இதுவரை ஆராய்ச்சி மணியோசையைக் கேட்டறியாத அரசன் விரைந்து வெளியே வந்தான். காவலர்கள் ஒரு பசுமாடு மணியை அசைத்தது. என்று கூறினார். அரசன் அமைச்சர்களைப் பார்த்தான். அவர்களுள் அறிவால் மிக்க ஓர் அமைச்சர், அரசனின் பாதங்களை வணங்கிப் பேசலானார்.

    ‘’சோழ மன்னனே!  நீங்கள் பெற்ற  புதல்வனாகிய இளவரசன், பலவகை மணிகள் பெரிதாய் ஒலிக்கும் , மிகவுயர்ந்த தேரின்  மேலேஉள்ள தேர்த்தட்டில்  ஏறி,எண்ணிக்கையற்ற தேர்கள் சூழ்ந்துவர, அரசர்கள் மட்டுமே சென்று பழகும் பெரிய வீதியில் நகர் வளம் செய்யும்போது, மிகவும் இளைய பசுங்கன்று ஓன்று எங்கிருந்தோ யாரும் அறிந்து கொள்ள இயலாத வகையில் தானாகச் சென்று, மிகவும் கீழேயுள்ள தேர்ச்  சக்கரங்களின் இடையே எப்படியோ புகுந்து இறந்தது. அதனால் மனத்தளர்ச்சியுற்ற தாய்ப்பசு, மணியோசையை உண்டாக்கியது!” என்றார்.

    இப்பாடலில் புலப்படும்  அமைச்சரின் நுண்ணறிவு நம்மை வியப்புக்கு ஆளாக்குகிறது. முதலில்  ‘வளவ!’ என்று மன்னனை அழைக்கிறார்! குழப்பத்துடன்  இருந்த மன்னன் மனத்தில் அவன்  நாட்டை ஆளும் மிகப்பெரிய சோழர்  பரம்பரையினன் என்பதை  ‘வளவன்’  என்ற சொல்லால்  விளக்குகிறார்!

    அடுத்து, அத்தகைய பெருமைமிக்க அரசனாகிய ‘நின்’ புதல்வன் என்கிறார்! ஆதலால் பெருமை மிக்க நின் மகன்  சிறுமை  செய்பவனல்லன்  என்கிறார்! புதல்வன் என்ற சொல்லாட்சி அவன்   குலத்துக்கே  நீத்தார் கடன் புரிவதற்குரிய ஒரே புதல்வன் என்பதைக் குறிக்கிறது. ‘’அங்கு ஓர் மணி நெடுந்தேரில் ஏறி’’ என்று கூறுகிறார். ஆங்கு என்ற சொல், அவனுக்கே உரிய இடத்தில் என்ற பொருளை உடையது. ‘ஓர்’ என்பது ஒப்பற்ற என்ற பொருளில் உடன் வரும் பல தேர்களுள்  இத்தேர் சிறப்பு வாய்ந்தது என்பதைப் புலப்படுத்துகிறது.அதனால் இளவரசன் பற்பல தேர்களின் இடையே தனித்த சிற்ப்புடைய தேரில் ஏறி வருகிறான் என்பதைக் குறிக்கிறது. அதனால் பசுங்கன்று இவற்றைத் தாண்டி உள்ளே நுழைந்தது நடவாத செயல் என்ற ஐயத்தை உருவாக்குகிறது!  ‘மணி’ என்ற சொல் அத்தேரில் ஆரவாரத்துடன் ஒலித்த மணிகளின் ஓசையைக் குறிக்கிறது.அந்த ஆரவார ஓசை இளங்கன்றை அச்சுறுத்தி விலகியோடச் செய்திருக்குமே, என்று கருத வைக்கிறது. ‘’நெடுந்தேரில்’’ என்ற தொடர் மிகவுயர்ந்த தேர் அது, என்பதைக் காட்டுகிறது.அவ்வாறு உயர்ந்த தேரிலிருந்து சக்கர பகுதி கண்ணில் புலப்படாது என்ற கருத்தைப் புலப்படுத்துகிறது. ‘ஏறி’ என்ற சொல் தேர்த்தட்டின் உயரத்தைக் குறிக்கிறது. அவ்வாறு ஏறி வருபவன் பார்வை வழியைப் பார்த்துச் செலுத்தும் வாய்ப்பில்லாமையைக் காட்டுகிறது.   ‘அளவில் தேர்த்  தானை சூழ ‘ என்ற தொடர் எண்ணிக்கை அளவைக் கடந்த தேர்களுக்கிடையில் இளவரசன் ஏறிவந்த நெடுந்தேர் சென்றது என்பதைப் புலப்படுத்தி எல்லாவற்றுக்கும் இடையில் வரும் இளவரசன் தேரை யாராலும் நெருங்க வியலாது என்ற நுணுக்கமான விளக்கத்தால் ஆன்கன்று இந்தத்    தேரின் கீழே செல்லும் வாய்ப்பே  இல்லை என்று வலியுறுத்துகிறது. அவன் தேரேறிச் செல்லும் தெரு, அரசகுடும்பத்தினர் மட்டுமே செல்வதற்குரிய மேன்மை மிக்க தெரு என்பதை விளக்குகிறது. அங்கே எளிய மனிதரோ, விலங்கோ செல்வது அரச நிந்தனை என்ற குற்றத்துக்கு உரிய செயல் என்பதை நிலைநாட்டுகிறது. ‘போங்கால்’ இளவரசன் எந்த நோக்கமும் இல்லாமல் மகிழ்ச்சி உலாவை மேற்கொண்டு  சென்றான் என்பதைப் புலப்படுத்தி, அவனுக்கு அந்த ஆன்கன்றைக்  கொல்லும் நோக்கமில்லை என்பதையும் குறிக்கிறது. அடுத்து  ‘இளைய ஆன்கன்று ‘ என்று அமைச்சர் கூறுகிறார்.மிகவும் இளையது அக்கன்று, ஆதலால் தானாக அக்கன்று தேரின் கீழே செல்லாது என்பதையும், ‘இளங்கன்று பயமறியாது!’ என்ற பழமொழிக்கேற்ப அக்கன்று  அறிவும் அச்சமும் அற்றது என்பதையும் அத்தொடர் குறிக்கிறது. அடுத்து ‘’தேர்க்கால் இடைப்புகுந்து ‘’ என்கிறார் அமைச்சர். முன்சக்கரத்தில் புகுந்தால் அது தேரை ஓட்டுபவனின் கவனமின்மையைக் குறிக்கும். ஆனால் பல சக்கரங்களை உடைய பெருந்தேரின்  இடையில் புகுந்தது என்பதால், இளவரசன் அதனை நேரில்  காணாத நிலையை அனுமானிக்க வைக்கிறது. அனுமானம் குற்றத்தை நிரூபிக்காது. கன்று இறந்ததை யாரும் அறிந்து கொள்வதற்குள், அதனை ஒரு பசு அறிந்து கொண்டது என்பது நடவாத செயல். அப்பசுவின் தளர்ச்சியால் எவ்வாறு  அறிவுடன் ஆராய்ச்சி மணியை அசைத்தது என்பதைப்  புரிந்துகொள்வது? என்ற ஐயமும் தோன்றுகிறது!

    இந்தக்  கொலைவழக்கு விசாரணைக்கு  வந்தால், குற்றத்தின் பின்னணி, குற்றச்செயலின் தன்மை ,குற்றம்  நடந்த சூழ்நிலை, கொலை நோக்கம்,  கொலை செய்யப்பட்ட கன்றின் அறிவு, இவை அனைத்தும் இக்கால இந்தியக் குடியாட்சியின் குற்றவியல், தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் எந்த வகை யினுள்ளும்   அடங்காது. ஆகையால் அக்கால முடியாட்சிச் சட்டங்கள் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வருதல் இயலாது. சட்டமும் நீதியும், எல்லாக் காலத்துக்கும்  உரியனவே! என்பதையும், இந்தக் குற்றத்தை அன்றைய அமைச்சர் அணுகிய விதம் எக்காலச் சட்டத்துக்கும் இசைவாகவே உள்ளது என்பதையும் நாம் சிந்தித்தால் சேக்கிழார் பெருந்தகையின் சட்ட நுணுக்க அறிவும் , அவர் அக்காலத்திலேயே சோழமன்னனின்  முதலமைச்சராக விளங்கிய பெருமையும் ஒருங்கே புலப்படுகின்றன! கொலைக்குற்றம் சாட்டப் பட்டவரின் சார்பில் வைக்கப்படும் வாதங்கள் எவ்வாறிருக்க வேண்டும் என்பதை இப்பாடல் விளக்குகிறது. இனி நாம் பாடல் முழுவதையும் படித்து இப்பாடலின்  சொல்லாட்சிச் சிறப்பைப் புரிந்து கொள்வோம்!

    “வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
    அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
    இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாகத்
    தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை” என்றான்”

    இந்த வழக்கின் பின்புலத்தை மிகவும் நுட்பமாக விளக்கும் வகையிலும், பின்நிகழ்ச்சியை முன்னதாகவே உணர்த்தும் உத்தியாகவும், திருவாரூர் பற்றிய அறிமுகப் பாடலில்,

    “பல்லி  யங்கள் பரந்த வொலியுடன்

     செல்வ  வீதிச்  செழுமணித்  தேரொலி

     மல்லல் யானை  ஒலியுடன்  மாவொலி

     எல்லை  இன்றி  எழுந்துள  எங்கணும்” 

    என்று சேக்கிழார் பாடி வைத்த நுட்பம், எண்ணி யெண்ணி மகிழ்தற்குரியது!

    ============================================================

     

     

     

    Share
  • திருவாதிரைச் சீரும் கொங்குச் செட்டியார் சடங்குமுறைகளும்

    -மா.தமிழ்மலர்

    தமிழகத்தில் திருவாதிரை கும்பிடும் முறை – சிவன் ஆலயங்களில் திருவாதிரை, ஆருத்ரா தரிசனம் வழிபாட்டு முறை – சேந்தனார் வரலாறு – திருவாதிரைச் சிறப்பு – கொங்குநாட்டில் திருவாதிரை நோன்பு கும்பிடும் முறை – கொங்குச் செட்டியார் செய்யும் திருவாதிரைச் சடங்கு – திருவாதிரைச் சடங்கின் சிறப்பு – கும்பிடும் முறை – கும்பிடும் பெண்கள் – சடங்கிற்குரிய உணவுப் பொருள்கள் – இதன் பலன்.

    சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவாதிரையாகும்.  மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரம் வந்தாலும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு மிகவும் சிறப்பானதாகும்.  திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாள் தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மிகப் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  சிதம்பரம் நடராசப் பெருமானின் ஆலயத்தில் இந்தத் தினத்தன்று நடராசருக்கு அபிடேகமும், நடராசர் சிவகாமி திருக்கல்யாண உற்சவமும், தேர்த்திருவிழாவும் நடைபெறும்.

    சிதம்பரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துச் சிவாலயங்களிலும் நடராசப் பெருமானுக்கு அபிடேகமும், நடராசர் சிவகாமி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகின்றது.  இவ்விழாவில் நடராசப் பெருமானுக்கு பிரதான உணவாகக் களி படைக்கப்படுகின்றது.  மேலும், திருக்கல்யாண முடிவில், சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் சரடு வழங்கப்படுகின்றது.  தம் கணவரின் ஆயுள் பெருக சுமங்கலிப்பெண்கள் இந்த மஞ்சள் சரட்டினை வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர்.  இவ்விழா  தமிழகம் முழுவதும் இவ்வாறு நடைபெற்றாலும், கொங்கு நாட்டில் திருவாதிரை நோன்பு தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து சிறிது வேறுபட்டு, நாட்டார் சடங்குகளுடன் சேர்த்துச் செய்யப்படுகின்றது.  மேலும், இங்கு வாழும் அனைத்து மக்களும் இந்நோன்பினை கடைப்பிடிப்பதில்லை.  குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் இந்த நோன்பினை கடைபிடிக்கின்றனர்.  உட்கழுத்துச் சரடு கட்டிக் கொள்ளும் சமூகத்தவர் மட்டும் இந்நோன்பினை கடைபிடிக்கின்றனர்.  அவரவர் குல வழக்கப்படி, இந்நோன்பிலும், சில சடங்கு முறைகளைச் செய்கின்றனர்.  குறிப்பாகக் கொங்கு நாட்டில் வாழும் கொங்குச் செட்டியார் இனத்தைச் சார்ந்தவர்கள் திருவாதிரைப் பண்டிகையினை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.  தாயம்பாளையம் பகுதியைச் சார்ந்த கொங்குச் செட்டியார் இனத்தைச் சார்ந்தவர்கள் பூப்படையும் வயதில் இருக்கும் தங்கள் குலப் பெண்களுக்கு திருவாதிரை தினத்தன்று திருவாதிரைச் சீர் செய்கின்றனர்.  இந்த திருவாதிரைச் சீர் குறித்தும், திருவாதிரை நோன்பு குறித்தும் இந்த ஆய்வுக் கட்டுரையில் காணலாம்.

    மார்கழி மாதம் தட்சிணாயனத்தின் இறுதி மாதமாகும்.  மார்கழி மாதத்தில் தில்லையில் குடி கொண்டுள்ள நடராசப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவதாக ஐதீகம் உண்டு.  தேவர்களுக்கு மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதாகும்.  வைகறையில் இறைவனைத் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.  சிதம்பரம் பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமாகும்.  மார்கழி மாதத்தில் திருவாதிரை தினத்தன்று அபிடேகங்கள் நடைபெறும்.  நடராசப்பெருமான் அடுத்த நாள் அதிகாலை நேரில் வீதிவலம் வருவார்.  அதனை ஆருத்ரா தரிசனம் என்பர்.  ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல்.

    ஐதீகக் கதை:

    தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர்.  சிவனார் பிச்சாடனர் வேடம் ஏற்று முனிவரின் இல்லங்களுக்குப் பிச்சை எடுக்கச் சென்றார்.  முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனரின் பின் சென்றனர்.  இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித் தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு போன்றவற்றை தோற்றுவித்து சிவன்பால் ஏவினர்.  சிவனார் மதயானையைக் கொன்று அதன் தோலை அணிந்தார்.  மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி நடனமாடி முனிவர்களுக்கு உண்மை உணர்த்தினார்.  இதுவே ஆருத்ரா தரிசனம் என்றும் சொல்லப்படுகின்றது.

    சேந்தனார்:

    சைவ சமய அடியவர்களில் சேந்தனாரைப் பற்றி இருவேறு கதைகள் வழங்கப்படுகின்றன.  ஒருவர் பட்டினத்து அடிகளின் கணக்குப் பிள்ளையாக இருந்து பின்பு இறைவனின் திருவடியை அடைந்தவர்.  இன்னொருவர் சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் விறகு வெட்டியாக வாழ்ந்து வந்தார்.  மிகச் சிறந்த சிவபக்தர்.  நாள்தோறும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்பு தான் அவர் உணவருந்துவார்.

    ஒரு நாள் மழை அதிகமாகப் பெய்தமையால் விறகுகள் ஈரமாயின.  அதனால் அன்று சேந்தனாரால் விறகு விற்க இயலவில்லை.  அரிசி வாங்குவதற்கு அன்றைய தினம் அவரிடம் காசு இல்லாத காரணத்தால் கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்து இருந்தார்.  ஆனால் யாரும் தென்படவில்லை.  சிவனடியார் வேடத்தில் சிவபெருமான் வந்தார்.  களியை மிகவும் விருப்பமுடன் உண்டார்.  மேலும், அந்தக் களியை அடுத்த வேளை உணவிற்கு தருமாறு வாங்கிச் சென்றார்.  மறுநாள் காலையில் சிதம்பரம் நடராசப் பெருமான் ஆலயத்திற்குச் சென்ற அந்தணர்கள் இறைவனைச் சுற்றி களி சிதறல்களைக் கண்டனர்.  சோழ அரசனிடம் இறைவனார் கனவில் சேந்தனார் வீட்டிற்குச் சென்று களியுண்ட நிகழ்வைத் தெரிவித்து இருந்தார்.  இதனால் அரசர் அமைச்சரிடம் சேந்தனாரை அழைத்துவரச் சொல்லி விட்டு தில்லையம்பல நடராசனை தரிசனம் செய்வதற்காக ஆலயம் வந்தார்.  இந்நிலையில் தேரில் நடராசப் பெருமான் வீதியுலா வந்துக் கொண்டிருந்தார்.  ஆனால் தேர் திடீரென்று நின்று விட்டது.  இதனால் அரசர் முதல் அனைவரும் திகைத்து நின்றுக் கொண்டிருந்தனர்.  இந்நிலையில் சேந்தனாரும் இறைவனை தரிசிக்க வந்து கொண்டிருந்தார்.  தேர் நிற்பதைப் பார்த்து செய்வது அறியாது திகைத்தார்.  அப்பொழுது சேந்தா பல்லாண்டு பாடு என்று வானிலிருந்து அசரீரி கேட்டது. “மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் போயகல” என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து பதின்மூன்றுப் பாடல்கள் பாடினார்.  தேர் நகர்ந்தது. அரசர் அவர்தான் சேந்தனார் என்பதை உணர்ந்து அவரிடம் தம் கனவினைக் கூறினார்.  அப்பொழுதுதான் சேந்தனார் தம் இல்லத்திற்கு வந்தது சிவபெருமான் என்பதனை உணர்ந்து பெருமகிழ்ச்சி அடைந்தார்.  இந்த நிகழ்வின்       விளைவாகத் திருவாதிரை அன்று நடராசப் பொமானுக்கு “களி” உணவாகப் படைக்கப்படுகின்றது.  சேந்தனார் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் உள்ளன.

    திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி என்று சொலவடையாக வழங்கப்படுகின்றது.  கேரளத்தில் திருவாதிரைக்களி நடனம் என்ற பெயரில் பெண்கள் நடனமாடுகின்றனர்.  சங்கர சங்கீதை என்ற நூலில் இந்நோன்பின் மகிமை கூறப்பட்டுள்ளது.  சம்பந்தர் “பூம்பாவை உயிர்பிழைக்கும் பொருட்டு பாடிய தேவாரப் பதிகத்தில்,

          “வளர்திரை வேலையுலாவும் உயிர்மயிலைக்
          கூர்தரு வேவ்வல்லார் கொற்ற கொள் சேரிதனிய
          கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
          ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவை

    என்று திருவாதிரை தினத்தைச் சிறப்பிக்கின்றார்.  நாவுக்கரசுப் பெருமானும் ஆதிரை தினம் குறித்துப் பாடியுள்ளார்.  இதனால் திருவாதிரை நோன்பு தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை அறியலாம்.

    கொங்குநாட்டில் திருவாதிரை நோன்பு ஆருத்ரா தரிசனம்

    மார்கழி மாதம் முழுவதும் கொங்கு நாட்டில் சிவாலயங்களிலும், பெருமாள்; கோவில்களிலும் மிகவும் சிறப்பாக வழிபாடும், பூசைகளும் நடத்தப்படுகின்றன. மார்கழி மாதம் பத்தாவது நாளில் நிறைமதியோடு கூடிய திருவாதிரை தினத்தன்று இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகின்றது.

    அனைத்துச் சிவாலயங்களிலும் நடராசப் பெருமானுக்கு அபிடேகம் நடத்தப்பட்டு, விடியற்காலையில் இறைவன் வீதியுலா நிகழ்த்தப்படுகின்றது.  பின்பு நடராசர்-சிவகாமி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகின்றது.  இறைவனுக்குக் களி உணவாகப் படைக்கப்பட்டு, பக்தர்களுக்குக் களி பிரசாதமாக வழங்கப்படுகின்றது.  பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், பவானி, திருச்செங்கோடு தலங்களிலும் இவ்விழா நடைபெறுகின்றது.

    கொங்குச் செட்டியார் செய்யும் திருவாதிரை சீர்

    கொங்கு நாட்டில் வாழும் வணிகர் இனத்தைச் சார்ந்தவர்கள் கொங்குச் செட்டியார் என்றழைக்கப்படுகின்றனர்.  கொங்கு வேளாளர் இனத்தைப் போன்று இவர்களிடத்தும் குலப்பிரிவுகள் உண்டு.  கொங்கு வேளாளர் குலப்பிரிவுகள் இவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.  பெரிய குலம், காரையூரான் கூட்டம், ஒதாளர் குலம் போன்ற குலப்பிரிவுகள் இவர்களிடத்தும் உண்டு.  இவர்களில் தாயம்பாளையம் கொங்குச் செட்டியார் பெரிய குலத்தைச் சார்ந்தவர்களும் இவர்களின் பிற குலப்பிரிவினரும் திருவாதிரைச் சீரைச் செய்கின்றனர்.

    கொங்கு வேளாளர் இனத்தைச் சார்ந்தவர்களில் பெரிய குலத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு திருவாதிரைச் சீர் செய்து சங்கரண்டாம்பாளையம் இரத்தினமூர்த்தி ஆண்டவர் கோவிலில் பொன்னூஞ்சல் ஆட்டுவது மரபாகும்.

    இதனைப் போன்று தாயம்பாளையம் கொங்குச்செட்டியார் இனத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் குலத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்குத் திருவாதிரைச் சீர் செய்கின்றனர்.

    திருவாதிரைச் சீர் செய்யும் முறை:

    பெண் குழந்தைகள் பூப்பு அடைவதற்கு முன் இச்சீரினைச் செய்ய வேண்டும்.  9,10,11 என்ற ஒற்றைப் படை வயதிற்குள் செய்ய வேண்டும்.  திருவாதிரைச் சீரைச் செய்ய இருக்கும் பெண்குழந்தையின் பெற்றோர் கார்த்திகை மாதத்திலிருந்து இச்சீர் செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.  உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.  தாய்மாமனையும், அத்தையையும் அழைத்து இச்சீரினை முறைப்படி செய்துக் கொடுக்கச் சொல்ல வேண்டும்.

    கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் முடிந்து 21-வது நாளில் சதுர்த்தி திதியில் பிள்ளையார் நோன்பு கும்பிட வேண்டும்.  முதல் நாள் இரவு பெண் குழந்தையின் தாய்மாமாவும், அத்தையும், பெண் குழந்தையின் வீட்டிற்கு வந்துவிடுவர்.

    நோன்பு கும்பிடுவதற்கு முதல் நாள் வீட்டினைத் தூய்மை செய்தல் வேண்டும்.  விடியற்காலையில் எழுந்து அத்தை நோன்பு கும்பிடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.  பொங்கல் வைத்த பிறகு பணியாரத்திற்கு அரிசி வெந்தயம் இவற்றை நீரில் ஊற வைக்க வேண்டும்.  பின்பு பெண் குழந்தையை அழைத்து ஊரில் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று நெய் அரப்பு தேய்த்து குளித்து விட்டு புத்தாடை அணிவிப்பர்.  பின்பு வீட்டிற்கு வந்து ஆட்டுரலில் அரிசி வெந்தயத்தை ஆட்டி எடுத்துக் கொள்வர்.  குடலை பருப்பை வேகவைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு வெல்லத்தினைப் பாகு காய்ச்சி இம்மாவில் கலக்க வேண்டும்.  பின்பு வேகவைத்த கடலை பருப்பினையும் சேர்த்து பணியாரமாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இதற்குப் பின்பு மஞ்சள் தேங்காய் பழம், 21 பணியாரம், வெற்றிலை பாக்கு, கற்பூரம், தீபம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சீர் செய்ய இருக்கும் பெண், அத்தை, பெண்ணின் தாயார், உறவினர்கள் அனைவரும் பிள்ளையார் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.  அங்கு தீபம் ஏற்றிப் பிள்ளையாரை வணங்கி நோன்பை நல்லபடியாக முடித்துத் தரச் சொல்லி வேண்ட வேண்டும்.  பூசை முடிந்த பிறகு வீட்டிற்கு வந்து குழந்தைகளுக்கு பணியாரம் கொடுக்க வேண்டும்.  தாய்மாமா, அத்தைக்கு மதியம் வடை பாயாசத்துடன் விருந்து போட வேண்டும்.

    பிள்ளையார் நோன்பைச் செய்து முடித்த பிறகு சீர் செய்ய இருக்கும் பெண்ணும், பெண்ணின் தாயும், அசைவம் சாப்பிடக்கூடாது.  காப்புக் கட்டிக் கொள்ளும் பெண் மாலை நேரங்களில் வெளியே செல்லக் கூடாது.  துக்க நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளக் கூடாது.

    பிறகு அவரவர் வசதிக்கேற்ப திருவாதிரை தினத்தன்று உறவினர்களை அழைப்பர்.  முன்பு பெண் குழந்தையின் வீட்டில் இந்தச் சீர் நடைபெறும்.  தற்சமயம் திருமண மண்டபங்களில் இச்சீரினை நடத்துகின்றனர்.  அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்படுகின்றது.

    திருவாதிரை தினத்தன்று அதிகாலையில் பெண்ணை எழுப்பிவிடுவர்.  இரவு சாதம் செய்து கடலை பருப்பு கூட்டும் செய்து வைத்து விடுவர். திருவாதிரைக்கு முந்தைய நாள் வீட்டினை மெழுகிச் சுத்தம் செய்ய வேண்டும்.  இரவு சாதமும் கடலைப் பருப்புக் கூட்டும் செய்து வைக்க வேண்டும்.  அதிகாலை சீர் செய்துக் கொள்ளும் பெண், அத்தை, அத்தை பெண், பெண்ணின் தாயார் ஆகிய அனைவரும் பல் தேய்த்து முகம் கழுவி சுவாமி கும்பிடுவர்.  பின்பு சாதம், நாட்டுச்சர்க்கரை பழம் சேர்த்து சாப்பிட்டு விட்டு கூட்டினையும் சாதத்தினையும் கலந்து சாப்பிட்டு முடித்து விடுவர்.  பின்பு நாள் முழுவதும் பட்டினி இருப்பர்.  பெண்ணிற்கு பசித்தால் பால், பழம் அவல் கொடுப்பர்.  உப்புக் கலந்து எந்தப் பொருளும் உண்பதற்குக் கொடுக்க மாட்டார்கள்.  பின்பு, வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண் குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாள்.  ஆற்றங்கரை இருந்தால் ஆற்றிற்கு அழைத்துச் சென்று குளிக்க வைப்பர்.  ஆறு இல்லை என்றால் வீட்டில் குளிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.  முக்காலி அரப்பு, நெய் தணல், மஞ்சள், சோறு வேப்பிலை ஆகியவை குளிப்பதற்காக பெண்ணிற்குத் தேவைப்படும் பொருட்களாகும்.  பெண் குளிப்பதற்கு முன் பெண்ணின் அத்தை பெண்ணின் தலையில் நெய் தேய்த்து விடுவாள்.  பின்பு அரப்பு தேய்த்துக் குளித்து விடுவாள்.  வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண் பந்தம் பிடித்துக் கொண்டு நிற்பாள்.  இதற்குப் பின்பு பெண்ணிற்கு புத்தாடை அணிவிப்பர்.  பெண்ணிற்குரிய அலங்காரங்களை செய்து முடிப்பர்.  ஆண்டாள் கொண்டை போட்டு விடுவர்.  ஆண்டாள் மாலையும் அணிவிப்பர்.  கிளி ஒன்றையும் பெண்ணின் தோளில் வைத்து விடுவர்.  இதற்கிடையில் மாமன் மனைவி குளித்துவிட்டு சாமிக்கு சூடம் ஏற்றி விட்டு கும்பிடுவார்.  பின்பு பொங்கல் வைத்துவிட்டு, தினை அடை, கம்பு அடை, போன்றவற்றைச் செய்து முடிப்பார்.  அதன்பின்பு படைப்புக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சமைக்க வேண்டும்.  பாசிப்பருப்பு, வெண்டைக்காய் புளிக்குழம்பு, ஏழுவகைப் பொறியல் திருவாதிரைக் களி சாதம் ஆகியவற்றை சமைக்க வேண்டும்.

    திருவாதிரை நட்சத்திரம் வந்த பிறகு சாமி கும்பிட அனைவரும் தயாராகுவர்.  சாமி கும்பிடும் இடத்தில் மெழுகி கோலமிட வேண்டும்.  இறைவனுடைய படங்களை வைத்த பிறகு குத்துவிளக்கு, கற்பூரத்தட்டு, பூசைமணி, சாம்பிராணிப் புகை போடும் கரண்டி ஆகியவற்றைக் கொண்டு வந்து வைக்க வேண்டும்.  பின்பு மஞ்சள் பிள்ளையாரையும் சாணிப் பிள்ளையாரையும் பிடித்து வைப்பர்.  பிள்ளையார் மேல் பூச்சூடி வைப்பர்.  அதன்பின்பு தலைவாழை இலையை விரித்து படைப்புப் போட்டு வைப்பர்.  அப்படைப்பில் பொங்கல் சாதத்தை ஏழு உருண்டைகளாகப் பிடித்து வைப்பர்.  அதன் மேல் சர்க்கரையையும் நெய்யையும் கலந்து வைப்பர்.  பின்பு ஏழுவகை பொரியல் சாதம், ஏழு அடை பாயசம் ஆகியவற்றினையும் இலையில் படைப்பர்.  சாதம் வெண்டைக்காய்ப் புளிக்குழம்பு, பா. பருப்பு, இவற்றையும் இலையில் வைப்பர்.  திருவாதிரைக் களியையும் இலையில் வைப்பர்.  சாமி கும்பிடும் இடத்தில் கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவற்றையும் வைப்பர்.  பின்பு, மஞ்சள் சரடு, பூசணிக்காய் ஆகியவற்றையும் மஞ்சள் பிள்ளையாரையும் சுற்றி வைப்பர்.  தேங்காயை உடைத்து வைப்பர்.  பழம் வெற்றிலை பாக்கு சூடம் ஆகிய பொருட்களும் சாமிக்கு அருகில் வைப்பர்.

    குத்து விளக்கில் நெய் ஊற்றித் திரிபோட்டுத் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.  பின்பு பெண்ணை சாமி கும்பிடும் இடத்திற்கு அழைத்து வர வேண்டும்.  அலங்காரம் செய்து கொண்ட பெண்ணின் தலை மேல் சும்மாடு வைத்து அதன் மேல் பேழை முடியை வைப்பர்.  அந்தப் பேழை முடியில் இரண்டு தேங்காய், பழம் ஒரு சீப்பு, வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் இருக்கும்.  பெண்ணிற்கு முன்னால் பெண்ணின் அத்தை செம்பில் புதுத்  தண்ணீரை எடுத்து வருவார்.  வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண் அந்த இடத்தில் தீப்பந்தம் பிடித்து நிற்க வேண்டும்.  பின்பு பெண்ணின் சேலையில் ஒரு தேங்காய், பழம் ஒரு சீப்பு, வெற்றிலை பாக்கு ஆகியவற்றை மடியில் கட்ட வேண்டும்.  இன்னொரு தேங்காயை எடுத்து உடைத்துவிட்டு தேங்காய், வெற்றிலை பாக்கு இவற்றை சாமியின் கிழக்குப் பக்கம் வைப்பர்.  பின்பு பெண்ணைப் பேழை முடியில் நிற்க வைப்பர்.  கிழக்குத் திசையில் பெண்ணை நிற்க வைப்பர்.  பெண்ணிற்கு அருகில் அத்தை துணையாக நிற்பார். இந்நிலையில் பெண்ணின் மாமா சாமிக்கு அருகே அமர்ந்து திருவெம்பாவை பாடல்கள் இருபதையும் பாடுவார்.  திருப்பள்ளி எழுச்சி பாடல் ஒன்றையும் சேர்த்து 21 பாடலையும் பாடுவார்.  ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன் மணி அடித்து இன்னொரு மாமா சூடம் ஏற்றி இறைவனை வழிபாடு செய்வார்.  மேலும் திருச்சிற்றம்பலம் என்றும் மாமா சொல்லி முடிப்பார்.  இவ்வாறு 21 பாடல்களையும்  பாடி முடித்து திருச்சிற்றம்பலம் என்று கூறிப் பூசையினை முடிக்க வேண்டும்  பூசை முடிந்த பிறகு பேழை முடியை மறுபடியும் பெண்ணின் தலையில் வைத்து மணவறையை சுற்றி வர வேண்டும்.  அத்தை கையில் செம்புடனும், பெண் பேழை முடியுடனும் உள்ளே சென்று விடுவர்.  பின்பு சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் சரடு வழங்கப்படும்.  அவர்கள் கணவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு தங்கள் கழுத்தில் மஞ்சள் கயிற்றினைக் கட்டிக் கொள்வர்.  பின்பு பெண் சீருக்கு வந்துள்ள அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்.  பின்பு நோன்பு முடித்து பெண், அத்தை, உறவினர்கள் அனைவரும் சாப்பிடுவர்.  இதன் பின்பு சிறிது நேரம் கழித்து பெண்ணிற்கு நெய் தேய்த்து அரப்பு வைத்து குளிக்க வைப்பர்.  வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண் தீப்பந்தம் பிடித்துக் கொண்டு நிற்பர்.  பின்பு நாட்டுச் சர்க்கரையினை மூன்று உருண்டைகளாக கையில் நாம்பிப் பிடித்து பெண்ணின் தலையில் மூன்று முறை சுற்றி விட்டு மூன்று பக்கங்களிலும் போடுவர்.  அதன்பின் சாதத்தை மூன்று உருண்டைகளாகப் பிடித்து அதனையும் தலையில் சுற்றிப் போடுவர். சுற்றிப் போட்டபிறகு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வருவர்.   மறுநாள் விடியற்காலை எழுந்து நடராசர் சிவகாமி வீதியுலா வருவதற்கு முன்பு இறைவனைப் பெண்ணும், அத்தையும் வழிபாடு செய்வர்.  மதியம் பெண்ணின் பெற்றோர் பெண்ணின் தாய் மாமா- அத்தைக்கு க. பருப்புட்டுடன் வடை பாயசம் வைத்து விருந்து போடுவர்.  பின்பு அத்தை மாமாவும் தங்கள் இல்லம் திரும்புவர்.  சீர் நிகழ்வுகள் இத்துடன் முடியும்.  ஆண்டுதோறும் பெண்ணும் தாயும் பிள்ளையார் நோன்பையும், திருவாதிரை நோன்பையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    திருவாதிரை நோன்பு

    சுமங்கலிப் பெண்களும் திருவாதிரை நோன்பை மிகவும் சிறப்புடன் கடைப்பிடிப்பர்.  திருமணமான முதல் ஆண்டில் வரும் திருவாதிரை நோன்பிலிருந்து தங்கள் நோன்பை கடைப்பிடிக்க ஆரம்பிப்பர்.   கணவன் வீட்டில் தான் இவ்விரதத்தை பெண்கள் கடைப்பிடிப்பர்.  பெண்ணின் பெற்றோர் திருவாதிரைக்கு ஒருவாரம் முன்பே பெண்ணிற்கும் அவள் கணவனுக்கும் புத்தாடை, காய்கறிகள், அரிசி பருப்பு போன்றவற்றை பெண்ணிற்குச் சீதனமாகக் கொடுப்பர்.  கணவன் வீட்டார் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அனைவரையும் அழைத்து விமர்சையாக இந்த நோன்பினைக் கடைப்பிடிப்பர்.  திருமணமான முதல் ஆண்டு பெண்ணும் அவள் கணவனும் விரதம் இருப்பர்.  முதல் நாள் இரவு சாதம், கடலை பருப்புக் கூட்டு, இவற்றை செய்து வைத்து விடுவர்.  விடியற்காலையில் குளிப்பதற்கு முன் கணவன், மனைவி இருவரும் பல் தேய்த்து சுவாமி முன்பு விளக்கேற்றி வழிபட்டுச் சாதம், பழம், நாட்டுச் சர்க்கரை போட்டு சாப்பிட்ட பிறகு கூட்டினையும் சாப்பிட்டு முடிப்பர்.  பின்பு இருவரும் விரதம் இருப்பர்.  திருவாதிரை நட்சத்திரம் வந்த பிறகு, திருவாதிரை நோன்பிற்கு வேண்டிய அத்தனை உணவு வகைகளையும் பெண்ணும், பெண்ணின் உறவினர்களும் சமைப்பர்.  சாதம், ஏழுவகை பொரியல், புளிக்குழம்பு, அடை, பாசிப் பருப்பு, திருவாதிரைக்களி, வடை, பாயாசம் அனைத்தையும் சமைப்பர்.  மஞ்சள் பிள்ளையார், சாணிப்பிள்ளையார், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குத்து விளக்கு, மஞ்சள் சரடு, குத்து விளக்கு கற்பூரம், படியுல் நிறைய நெல், தக்கிலி ஆகியவற்றை பூசை அறiயில் வைப்பர்.  சுமங்கலிப் பெண்களின் எண்ணிக்கைக்கேற்ப தலை வாழை இலையில் படைப்புப் போடவர்.  பௌர்ணமி (நிலவு) வந்த பிறகு சாமி கும்பிட ஆரம்பிப்பர்.  தேங்காய் உடைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்துச் சாமி கும்பிடுவர்.  கற்பூரம் ஏற்றி இறைவனை வழிபாடு செய்தவுடன் மஞ்சள் சரட்டினை பெண்கள் கையில் கொடுப்பர்.  சரட்டினைப் பெற்றுக் கொண்ட பெண்கள் கணவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிப் பின்பு கயிற்றினைக் கட்டிக் கொள்வர்.  பின்பு நிலாவினைப் பார்ப்பர், அதன் பின் புதுமணத் தம்பதியர் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவர்.  மறுநாள் விடியற்காலையில் பேரூர் சென்று பட்டீசுவரப் பெருமானையும், பச்சை நாயகி அம்மனையும், நடராஜர்-சிவகாமி திருமண உற்சவத்தையும் பார்ப்பர்.  பேரூர் செல்ல இயலாவிடில் உள்ளூர் சிவாலயத்தில் நடராசர்-சிவகாமியினைத் தரிசித்து வருவது வழக்கமாக உள்ளது. 

    திருவாதிரை சீர், திருவாதிரை நோன்பின் சிறப்புகள்

    திருவாதிரை என்ற சொல்லோடு தொடர்புபடுத்தி சிவபெருமானை ஆதிரையான் என்று அழைக்கின்றனர்.  திருவாதிரை குறித்து சம்பந்தரும், திருநாவுக்கரசுப் பெருமானும் தம் தேவாரத்தில் குறிப்பிடுகின்றனர். “மார்கழி மாதத்தின் திருவாதிரை நாள் சிவபெருமானுக்கு உரியதாகக் கருதப்படுகிறது.  அந்நாளில் உளுந்துமாவினால் செய்த களி வீட்டு உணவில் சிறப்பிடம் பெறுகிறது”.  “திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி” என்பது தென் மாவட்டங்களில் வழங்கும் சொலவடை என்று தொ. பரமசிவன் அவர்கள் தன் பண்பாட்டு அசைவுகள் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.  இவற்றிலிருந்து தமிழக முழுவதும் திருவாதிரை நோன்பு மிகவும் சிறப்பாக மக்களாலும், சிவாலயங்களிலும் கடைபிடிக்கப்பட்டது புலனாகும்.

    ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகள்

    1.தமிழரிடையே தைந்நீராடல் என்ற வழக்கம் இருந்ததாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  மார்கழி நீராடல் என்ற குறிப்பு இல்லை.  இருப்பினும் மார்கழியிலும் நீராடல் இருந்திருக்க வேண்டும். “ஆண்டாள் தனது திருப்பாவையில்” மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் நீராடப் போதுவீர்” என்று பாடுகின்றார்.  மார்கழி மாதம் பௌர்ணமி நிலவில் தன் பாவை நோன்பினைத் தொடங்குகின்றார் ஆண்டாள்.  மார்கழி மாத பௌர்ணமி நாள் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளாகும்.  எனவே, திருவாதிரை நோன்பும், பழங்காலத்தின் பாவை நோன்பின் எச்சமாக இருக்கலாம்.  பாவை நோன்பு நல்ல கணவன் கிடைப்பதற்கு நோற்ற நோன்பாகும்.  இதன் அடிப்படையில் தான் பூப்பு அடைவதற்கு முன் பெண்களுக்குத் திருவாதிரைச் சீர் செய்யப்படுகின்றது.

    2.தமிழகம் முழுக்கத் திருவாதிரை நோன்பு கொண்டாடப்பட்டாலும், கொங்கு நாட்டைத் தவிர பிற இடங்களில் சிவாலயங்களில் கொண்டாடப்படும் நோன்பாகவும், ஆருத்ரா தரிசனமாகவும் இப்பண்டிகை விளங்குகின்றது.  ஆனால், கொங்கு நாட்டில் மட்டும் சுமங்கலிப் பெண்களால் கொண்டாடப்படும் திருவாதிரை நோன்பாகவும், கணவனின் ஆயுள் பெருக இறைவனை வழிபடும் சடங்காகவும் உள்ளது.  கொங்கு நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் இந்நோன்பினைச் செய்வதில்லை, உட்கழுத்துச் சரடு கட்டிக் கொள்ளும் பெண்களே இந்நோன்பினை மேற்கொள்கின்றனர்.  இந்நோன்பு மங்கிலிய நோன்பு என்றழைக்கப்படுகின்றது.

    3.கொங்கு வேளாளர், கொங்குச் செட்டியார் என்ற இரு இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பத்து வயதிற்கு உட்பட்ட பெண்களுக்குத் திருவாதிரைச் சீர் செய்கின்றனர்.  கொங்கு வேளாளர் இனத்தில் சங்கரண்டம்பாளையம் இரத்தின மூர்த்தியை குலதெய்வமாக வழிபடும் பெரிய குலத்தைச் சார்ந்தவர் மட்டுமே செய்கின்றனர்.  கொங்கு வேளாளர் பெரிய குலப் பெண்களுக்கு பொன் ஊஞ்சல் ஆட்டும் பழக்கமும் உள்ளது.  கொங்குச் செட்டியார் பெரிய குலத்தைச் சார்ந்தவர்கள் திருவாதிரைச் சீர் செய்தாலும் பொன்னூஞ்சல் ஆட்டும் பழக்கம் இல்லை.

    4.சிலம்பு கழிநோன்பு பற்றிக் குறிப்பு வேண்டுமானால் சங்க இலக்கியத்தில் செய்தி உள்ளது.  திருவாதிரை நோன்பு குறித்த செய்திகள் இல்லை.

    5.“நாட்டார் சடங்காக இருந்த பாவை நோன்பு பிற்காலத்தில் வைதீகத் தொடர்பு ஏற்பட்டு ஏற்கலாம், திருவாதிரை நோன்பாக மாற்றியிருக்கலாம்”.

    6.சேந்தனார் காலத்திற்குப் பிறகு நோன்பில் இறைவனுக்குரிய வழிபாட்டுப் பிரசாதமாகக் களி மாறியிருக்கலாம்.

    7.திருமணத்திற்கு முன்பு நல்ல கணவன் கிடைப்பதற்கு இறைவனை வழிபாடு செய்வது தமிழர் மரபு.

    8.தன்னுடைய கணவன் இறைவன் அடியாராக இருக்க வேண்டும் என்பதுவும், நல்லவனாக இருக்க வேண்டும் என்பதும் பாவை நோன்பின் குறிக்கோளாக அமைகின்றது.

    9.மார்கழி மாதத்தில் முழு நிலவு நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் இறைவனை வழிபடுவதால் கணவனுக்கு நல்ல ஆயுள் கிடைக்கும் என்ற நம்பிக்கை திருவாதிரை நோன்பின் குறிக்கோளாக அமைகின்றது.

    10.திருவாதிரைச் சீரும் சைவ வைணவ சமயங்களின் ஒற்றுமைக்குச் சான்றாக இருக்கின்றது.  இது வளமைச் சடங்காகவும் திகழ்கின்றது.  பெண் குழந்தை பூப்படைந்து திருமணமாகி மக்கட் செல்வத்தைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாக அமைகின்றது.  திருவெம்பாவை பாடல்கள் சைவ சமயத்திற்கும், ஆண்டாள் கொண்டை, மாலை போன்றவை வைணவ சமயத்திற்கும் சான்றாக விளங்குகின்றது.  மார்கழி மாதங்களில் எட்டாம் நூற்றாண்டு முதல் நாட்டார் சடங்குகளிலும் திருவெம்பாவைப் பாடல்களும், திருப்பாவைப் பாடல்களும் சான்றாக அமைகின்றன.

    11.இலையில் படைக்கப்பட்ட தினை அடை, கம்பு அடை போன்றவை கொங்கு நாட்டு உணவு வகைகளைக் குறிக்கின்றது.  இவை நாட்டார் உணவு வகைகளாகும்.  ஏழு அடை, ஏழு பொரியல், ஏழு பொங்கல் போன்றவை ஏழு கன்னிமாரை குறிப்பிடுகின்றன.  இலையில் வைக்கப்பட்ட ஏழு பொங்கல் உருண்டைகளும் ஏழு கன்னிமாரைக் குறிப்பிடுவதாகும்.  எனவே, இவ்வழிபாட்டில் கன்னிமார் வழிபாடும் இடம் பெறுகின்றது.

    12.கன்னிமார் வழிபாடு கொங்கு நாட்டில் பிரதான வழிபாடாகும்.  பெண்களின் திருமணம், குழந்தைப் பேற்றிற்காகக் கன்னிமாரை வழிபட்டு பொங்கல் வைப்பது கொங்கு நாட்டின் வழக்கமாகும்.

    13.பேழை மூடி கொங்கு நாட்டிலுள்ள புழங்குப் பொருளாகும்.  எனவே, இவ்வழிபாட்டில் பேழை மூடி, தக்கிலி, மைகோதி போன்ற கொங்கு நாட்டிலுள்ள புழங்கு பொருட்களும் பயன்படுகின்றன.

    14.சோறு சுற்றிப் போடுதல், நாட்டுச் சர்க்கரை சுற்றிப் போடுதல் போன்றவை கொங்கு நாட்டில் கண்ணேறு கழிப்பதற்காக செய்யப்படும் பழக்கங்களாகும்.  சோற்று உருண்டை மேல் தணல் வைத்து நெய் சாற்றுதல் போன்ற கண்ணேறு சடங்கின் மூலம் தமிழரின் தொன்மையான பழக்கங்களை மீட்டெடுக்க முடிகின்றது.

    15.பேழை மூடியில் பெண்ணை நிற்க வைக்கும் பழக்கமும் புதியதொன்றாகும்.  இவையும் கொங்கு நாட்டு தமிழரின் தொன்மையான சடங்குகளையும், தமிழரின் பழமையான புழங்குப் பொருட்களை மீட்டெடுக்க உதவுகின்றன.

    16.கொங்கு நாட்டில் வண்ணார், நாவிதர் இல்லாமல் எந்த சீரும் நடப்பதில்லை.  அந்த வகையில் பந்தம் பிடிப்பதற்கும், மாற்றுத் துணி விரிப்பதற்கும், சுற்றிப் போடுவதற்கும் இந்த வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண்கள் பயன்படுகின்றனர்.

    17.தமிழனின் பண்டைய பண்பாடான தாய்மாமன் உறவினையும் இந்தச் சடங்கு நிலைநிறுத்துகின்றது.

    18.எந்தச் செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன்பு பிள்ளையாரை வணங்குவது தமிழரின் மரபு.  அவ்வகையில் இச்சடங்கிலும் பிள்ளையார் நோன்பில் தொடங்குகிறது.  கார்த்திகை தீபம் முடிந்து ஆரம்பிக்கும் இச்சடங்கு மார்கழி மாதப் பௌர்ணமியில் முடிகின்றது.

    19.பொதுவாக எந்தச் சடங்காக இருந்தாலும், ஒரு நாள் இரண்டு நாளில் முடிந்து விடும். ஆனால், இந்தச் சடங்கு 21 நாள் நீடிக்கின்றது. அது மட்டுமல்லாது ஆண்டு தோறும் தொடர்ந்து நடக்கும் மங்கல நிகழ்வாகவும் இருக்கின்றது.

    20.கொங்கு வேளாளர், கொங்குச் செட்டியார் தொடர்பு, தாயம்பாளையம் கொங்குச் செட்டியார் மரபுகளை அறிந்து கொள்ள இச்சடங்கு வாயிலாக அமைகின்றது.

    21.கொங்கு நாட்டின் தொன்மையான உணவு வகைகளை அறிய முடிகின்றது.

    ஆய்விற்கு துணை நின்ற நூல்களும், முதன்மை ஆதாரங்களும்

    1. பண்பாட்டு அசைவுகள் – தொ. பரமசிவன்
    2. சம்பந்தர் தேவாரப் பாடல்கள்
    3. சேந்தனார் திருப்பல்லாண்டுப் பாடல்கள்
    4. கள ஆய்வுச் செய்திகள்
    5. சேந்தனார் வரலாறு குறித்த செவிவழிச் செய்திகள்.

    *****

    கட்டுரையாசிரியர் – இணைப் பேராசிரியர், துறைத் தலைவர்,
    எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரி,
    திருப்பூர்.

     

    Share
  • வாலாட்டிச் சென்ற கருங்குருவி

    -முனைவர் ஆ. சந்திரன்

    கருங்குருவியின் வால் மேலும் கீழும் அசைந்துகொண்டிருப்பதை வறட்டுப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த தாடிக்காரன். அவனுக்குப் பித்து பிடித்திருப்பதாக அவ்வூர் மக்கள் திடமாக நம்பினார்கள். அதனால் அவனுக்கு அப்பெயரே நிலைத்துப் போனது; பித்தன். ஆனால் அவனுடைய பெயர் மாணிக்கம். பெயருக்கு ஏற்பத்தான் அவனும் இருந்தான் என்பது தனிக்கதை.

    ஊர்மக்களால் பித்தன் என்றும் பிச்சைக்காரன் என்று அழைக்கப்பட்ட மாணிக்கம் பாழடைந்த அந்த இரும்புக் கேட்டின் மேல் மெல்ல அடியெடுத்து வைத்து பக்கவாட்டில் நடந்துகொண்டிருந்த கருங்குருவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    கீச்… கீச்… என்ற குருவியின் ஓசையைக் காதில்வாங்கிய அவனுடைய மனம் ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியிருந்தது.

    காட்டூரில் ரயில் பயணத்திற்கான வெள்ளோட்டம் அப்பொழுதுதான் முதன்முறையாக நடந்தது. புகையைக் கக்கிக்கொண்டு சீரான வேகத்தில் ரயில் அந்த ஊரைநோக்கி வந்துகொண்டிருந்தது. வயிறுமுட்டத் தின்ற சாரைப்பாம்பாய் வளைந்து நெளிந்து மெதுவாக  நடைமேடையில் நுழைந்து நின்றது. ரயில்வே ஊழியர்கள் ஒன்றுகூடி ரயிலுக்குக் கிடாய்வெட்டி ஆரத்தியெல்லாம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் பக்தி தலைக்கேறியவனாய்க் காணப்பட்டான்.

    ஊரே அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. அதிசயமான அந்தக் காட்சியை மக்களிடம் உதிர்த்துவிட்டு மெல்ல ரயில் அங்கிருந்து புறப்பட்டுப் போனது.

    ரயில்போன சிறிது நேரத்தில், தண்டவாளத்தின் இரு மருங்கிலும் தலைகவிழ்ந்து நின்ற நெல்மணிகள் நிறைந்த வயலுக்குள் கல்லெறிந்த தேன் கூட்டிலிருந்து பறந்து செல்லும் தேனீக்களாய்ப் புகுந்தனர் வேடிக்கை பார்க்கக் கூடியவர்கள். வயல்வெளிக்குள் சென்ற ரயிலின் பிம்பங்கள் மறைய வாரங்கள் பல ஆயின.

    அதன் பிறகு காட்டூர் ரயில் நிலையத்தைத் தினமும் பல ரயில்கள் கடந்து சென்றன. என்றாலும், மக்கள் எவ்வித மாற்றமுமின்றி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

    அப்போது….மணிக்கம் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அன்றிரவு வானில் ஒரே நேர்கோட்டில் வரிசையாக இருந்த மூன்று நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அழகிய அக்காட்சியை அவன் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வருகிறான். அதற்குமுன் எத்தனையோ முறை நட்சத்திரங்களைப் பார்த்தபோதும் இல்லாத ஒரு வியப்பு அவனுக்கு அன்று தோன்றியது. அது புதுமையாக இருந்தது அவனுக்கு. எண்ணிறந்த நட்சத்திரங்களின் நடுவே வரிசையாக சம அளவில் இருக்கும் அந்தக் காட்சி அவனுடைய மனதில் வடுவாக நிலைத்துப் போனது.

    அவன் வானத்து நட்சத்திரங்களை எண்ணத்தொடங்கிய சமயத்தில் அவனுடைய வயது சிறுவர்களில் சிலர் கல்லை வரிசையாக அடுக்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் சிறுசிறு செடிகளைப் பிடுங்கி சிறிய குழிகளை நோண்டி அதில் நட்டு வளர்க்கும் வேலையில் மூழ்கியிருந்தார்கள். இன்னும் சிலர் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நடந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிலருக்குச் சத்தமாகக் கத்திப் பேசுவதற்குப் பிடித்திருந்தது. எனவே அவனுடன் விளையாட யாருக்கும் பிடிக்காமல் போனதில் வியப்பொன்றும் இல்லை. அதைப் பற்றி அவன் ஒன்றும் அலட்டிக்கொள்ளவும் இல்லை.

    ஒரு நாள் அப்பாவுடன் வயலுக்கு நீர்பாய்ச்சச் சென்றிருந்த மாணிக்கம் வானை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

    கருமேகங்கள் வானில் வேமாகச் சென்று கொண்டிருந்தன. நீரைச் சுமந்துகொண்டிருந்த அவற்றைப் பார்த்தவன் தனக்குப் பழக்கமான ஆடு, மாடு, அம்மா, முறுக்குமீசை வைத்திருந்த அப்பா, தங்கச்சிப் பாப்பா, கருவுற்றிருந்த சித்தி என ஒப்பிட்டுக் கொண்டிருந்தான்.

    நீரின் சுமையைப் பொறுக்க முடியாத மேகத்துண்டுகள் சில அவனுடைய ஒப்பனையில் மாட்டாமல் தப்பி ஓடிக்கொண்டிருந்தன. அவற்றினுடன் போட்டியிடும் விதமாக வயலில் இருந்து பூச்சிகள் படையெடுக்க ஆரம்பித்தன.

    அவ்வாறு புறப்பட்ட தும்பிகளுள் ஒன்று நெற்றியில் மோதி அவனுடைய கவனத்தைச் சிதைத்தது.

    அப்பூச்சியைப் பிடித்து விளையாட அரம்பித்தான். அதுவும் அவனுடைய விரல்களின் மேல் நடனம் பழக ஆசைப்படுவதுபோல் நடந்துகொண்டது.

    சிறிது நேரத்தில் அவனை நோக்கி ஏராளமான பூச்சிகள் படையெடுத்தன. ஒரு கட்டத்தில் சூறாவளியில் சிக்குண்ட இரும்புத் தூணாய்ப் பூச்சிகளுக்குள் நின்றான் அவன்.

    “ஏய் மாணிக்கம்! மழைவரும் போல் இருக்கு”  என்று சற்றுத் தொலைவில் இருந்த தன் மகனை அழைத்தவாறே வெண்டைக்காய்த் தோட்டத்திற்குள் சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் நீரின் மடையை நெல் வயலுக்குள் திருப்பிவிட்டு மோட்டாரை நீறுத்த ஓடினான் மாணிக்கத்தின் அப்பா வேலாயுதம். அதற்குள் வானம் சிந்திய நீர்த்துளிகள் அவனை முழுமையான நீராட்டின.

    தன்னுடைய தந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது வெள்ள நீர் முழங்காலைக் கடந்து போனதால் தந்தையின் தோள்மீது அமர்ந்து வீட்டிற்குப் போனான்.

    தன்னுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் எப்போது உறங்கினான் என்று தெரியாது. கிழக்கில் உதித்த கதிரவனின் கரங்கள் அவனுடைய கண்களைத் தழுவ உறக்கம் அவனை விட்டு விடைபெற்றுச் சென்றது.

    அவன் எழுந்த போது அம்மா மாட்டிற்குத் தண்ணீர் வைத்துக்கொண்டிருந்தாள். அப்பா அப்போது வயலில் இருப்பார் என்று தெரியும்; அதனால் அவன் வேகமாக நடந்து செல்லும் தொலைவிலிருந்த வயலை நோக்கி நடந்தான். இல்லை… இல்லை… ஓடினான்.

    நேற்றுப் பெய்த மழையால் புத்துணர்ச்சி பெற்ற நெல்மணிகள் அவனுடைய கால்களை வருடி மகிழ்ந்தன. இல்லை…இல்லை… அவன் அவற்றை வருடி மகிழ்ந்தான்.

    நெல்மணிகளின் புன்னகையுடன் பள்ளியை அடைந்தான்.

    ஆங்கில ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். ”ரெயின் ரெயின் கோ அவே”  என்ற பாடலைப் பாடியமைக்காக அவனுக்கு பள்ளியில் நல்ல பெயர் உண்டானது. பல முறை அப்பாடலைப் பாடுமாறு பள்ளியில் கேட்டதுண்டு. அவனும் மகிழ்ச்சியாகப் பாடியுள்ளான்.

    அவன் வளர வளர வயலோடு சேர்த்து வானத்து நட்சத்திரங்களுடனும் நெருக்கமானான். மனிதர்களுடன் பழகுவதைவிட அதிக நேரம் அவனுடைய நெருக்கம் அதிகமாக இருந்தது. வயலில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதால் அவனுக்கு நேரம் போவதே தெரிவதில்லை. சில நேரம் அதனால் கல்லூரிக்குத் தாமதமாகப் போனதுண்டு.

    அப்படிப் போகும்போது அவனை ஆசிரியர்கள் மட்டுமன்றி சக மாணவர்களும் கிண்டல் செய்வதுண்டு. அப்படி ஒரு நாள் அவனது வரவால் தன்னுடைய பாடம் தடைப்படுவதாகக் கோபங்கொண்ட ஆசிரியர், “ஏன் லேட்”….  என்றார் சத்தமாக.

    “வயல்ல கொஞ்சம் வேலையிருந்தது…… அதனால…… ” என்று மாணிக்கம் தயங்கியவாரே மெதுவாகச் சொல்ல…..

    சரி… சரி…  வா! வா! என்றவர், தன் கடமையைத் கடுகடுப்புடன் தொடர்ந்தார்.

    மதியம் சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவச் சென்றபோது அவனுக்கும் ரமேஷ்க்கும் சின்னதாக ஒரு கைகலப்பு. பிரச்சனை ஆசிரியர் வரை போனது.

    இருவரும் விசாரணை வளையத்தில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

    ரமேஷ் தரப்பில் அவன்தான் என்னை முதலில் அடித்தான் என்று சொல்லப்பட்டதால் ஏன் அடித்தாய் என்ற கேள்வி மாணிக்கத்தின் மீது பெரிதாக எழுந்தது.

    “காட்டுவாசின்னு என்னைத் திட்டினான் அதனால் தான் அவனை அடித்தேன்னு” நடந்ததைச் சொல்லி பூமியைப் பார்த்து நின்றான் மாணிக்கம்.

    அந்த நிகழ்விற்குப் பிறகு அவன் தலை வானத்தை நோக்கியே நின்றது எப்போதும்.

    அதற்குக் காரணம் அவனுடை கண் பார்வைக்கு அன்று புதிய ஒளி கிடைத்தது. ஆசிரியர் வழியில்.

    மனித இனத்தின் உன்னதத்தைப் பற்றிய அந்த விளக்கம் அவனுடை மனதில் பசுமையாய்க் குடிகொண்டது.

    தன்னுடைய ஊரின் சிறப்பைப் பற்றி அறிந்துகொள்ள அவன் அன்று தன்னுடைய பயணத்தைத் தொடங்கினான்.

    காட்டில் வாழும் யானை, புலி, சிங்கம், ஓநாய்களைப் பற்றி அறிந்திருந்தவனுக்கு அவனுடைய காட்டூரின் வரலாறும் அதன் அருமையும் விளங்கியது.

    தன்னுடைய சிறப்பை மனதில் சுமந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தவனுடைய பார்வையில் தண்டவாளத்தின் இருபுறமும் ஆங்காங்கே புதிதாக முளைத்திருந்த வீடுகள், ஊரின் மையப்பகுதியில் இருந்த இரண்டு பெரிய உரக்கடை முதலியன பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

    பேருந்திலிருந்து இறங்கி வீடு நோக்கி நடந்துசென்றவன் வழக்கமாகக் குடிக்கும் பன்னீர் சோடாவைக் குடிக்க பெட்டிக் கடையை நோக்கி போனான். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்து வந்த பெட்டிக்கடை அந்த இடத்தில் இல்லை. அதற்குச் சற்றுத் தள்ளி பெரிய குளிர்பானக் கடை ஒன்று புதிதாய் முளைத்திருந்தது. பளபளப்பான டிஜிட்டல் பேனருடன் இருந்த அந்தக் கடையை உற்றுப்பார்த்தவனுக்குக்  காணாமல்போன பெட்டிக்கடை மனக் கண்ணில்  தெளிவாய்த் தெரிந்தது.

    அதைப்பற்றி ஊரில் உள்ள மக்களிடம் கூறினான். அவன் கூறியதைப் பலர் நம்பவில்லை. சிலர் நம்பினாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

    விடாப்பிடியாய் தன்னுடைய கருத்தைக் கூறிக்கொண்டு வந்துகொண்டிருந்த அவனுடைய பாதையில் ஒருத்தன் குறுக்கிட்டான். யாருடைய கண்ணுக்கும் எளிதாகத் தெரியாமல் இருக்கும் அவன் என்ன என்ன செய்வான் என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

    அவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் வானிலிருந்த மூன்று நட்சத்திரங்களில் ஒன்று கீழே விழுந்தது. அவனுக்குப் பிரமை உண்டாக அதிர்ந்தான். அவனுடைய அந்த அதிர்ச்சியைப் பார்த்து அவ்வளவு காலம் அவனுடன் பயணித்த கருங்குருவி வாலாட்டிக்கொண்டு அங்கிருந்து பறந்துபோனது.

    அதுவரை கருங்குருவி இருந்த இடத்திற்குப் பின்னால் மறைந்திருந்த ஒற்றைக் கண்ணனைக் கண்கொட்டாமல் பார்த்தான் மாணிக்கம்.

    அவனுடைய பார்வையில் வழக்கம் போல் அன்றும் எவ்வித பதற்றமும் இல்லை…….

    கம்பீரமாய் நடக்க ஆரம்பித்தான்…

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த் துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர், வேலூர்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 188-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. முரளிநாதன் வித்யாதரனின் இப்புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருக்கிறார் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தெரிவாளர் இருவரும் என் நன்றிக்குரியோர்.

    ”இணையருக்குப் பின்னே இணைந்து நிற்கும் இக் காகங்கள் கரைந்து பேசுவது என்ன?” என்று அறிந்துகொள்ளும் ஆவல் நமக்குள்ளும் ஊற்றெடுக்கின்றது. அதனை ஊகித்துச் சொல்லும் அரும்பொறுப்பை நம் வித்தகக் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்!

    *****

    ”திருந்தாத மாந்தர் எறியும் நெகிழிக்குப்பைகளைக் கண்டு மனம் வருந்தி, அவற்றைத் தம் அலகால் அகலச்செய்யக் காத்திருக்கும் காக்கைக் குடும்பமிது” என்றியம்பி நம்மை நெகிழ்த்துகின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    அமர்ந்திருக்கும் அண்ணனுக்கும்
    அக்காளுக்கும் தெரியாமல்
    முதுகுக்குப் பின்னே
    முத்தான எம் காக்கைக் குடும்பம்
    அவர்களின் பேச்சைக் கேட்டு
    அம்மாவுடனான அப்பாவின் உரையாடல்
    கல்லூரி மாணவர்களிவர்கள்
    கடற்கரையச் சுத்தம் செய்து
    நெகிழிக் குப்பைகளை அகற்ற
    நேரத்துடன் வந்தார்கள்
    நாளை அவர்களின் பணி
    நடைபாதை வியாபாரிகளோடு
    விதிகளைப் பின்பற்றாது
    விற்பவர்களுக்கு இனிமேல்
    கடுமையான தண்டனை
    கட்டாயம் வேண்டும்
    உருளை வறுவலை
    உண்ணட்டும் நம் மகன் பின்
    திருந்தாத மாந்தரெவரோ
    திரும்பவும் வீசியெறிந்த
    நெகிழிக்குப்பை காண
    நெஞ்சம் பதைப்பதால்
    அலகால் கொத்திச் சென்று
    அகற்றுவோம் இங்கிருந்து
    நானிலம் நலம் பெற நாம்
    நால்வரும் துணை நிற்போம்..

    *****

    ”சோலைவிட்டு வந்த வாலைக் காதலர்கள் போடும் தீனி இரைபொறுக்கக் காத்திருக்கும் இக்காக்கைகள் வேதனை ஆர் அறிவார்?” என்று வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வேதனை…

    கால நேரம் பார்க்காமல்
    கடற்கரை அமர்ந்தே கதைபேச
    வாலை வயதுக் காதலர்கள்
    வந்து போவார் எந்நாளும்,
    சோலை விட்டு வந்திவர்கள்
    சிந்தும் தீனி இரைபொறுக்க
    வேலை யின்றி வரும்காக்கை
    வேதனை யிவர்தான் அறிவாரோ…!

    *****

    காகங்கள் வாயிலாய் நல்ல கருத்துக்களைச் செப்பியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தி சிறந்த கவிதை…

    கரையோரப் பறவைகள்

    கங்குலிலே களத்துமேட்டில்
    காகங்களின் வரவுக்காகக் காத்திருந்த
    கஞ்சமற்ற நெஞ்சம் கொண்ட நம்
    கசடற்ற களநாயகன் தாம்
    கண்ணுக்கெட்டிய தூரம்வரை
    கட்டாந்தரை ஆனபோதும்
    கந்தலான ஆடையுடன்
    கதியாக வருவார்க்காய்க் காத்திருக்க
    கம்பெனிக்காரனாகக் கடுமையுடன்
    கப்பம் கட்டக் கட்டாயப்படுத்தி – தன்
    கரிய கரம் கொண்ட
    கயவனைப் போல் வந்த காலனாக
    கவலைகொண்ட முகத்தையும் கண்ணோக்காது
    கல்வியறிவற்ற மாக்களை ஒப்பவே
    களர்நிலமாக்கிக் களவாடிச் சென்றதால்
    கழனியெல்லாமழிந்த கோலம் கண்டு
    கன்னத்தில் கரைபுரண்ட கண்ணீரைக்
    கரையேற்ற வாராரோ என
    ’கஜா’வால் களையிழந்த களம்கண்டு
    காளையர்கள் காத்திருக்க – இங்கு
    கன்னியும் காளையும் கடற்கரை மணலிலே
    களவுகொண்டுள்ள காட்சி கண்டு
    கலங்கிடும் உள்ளமுடன் கவலையோடு நோக்கிடும்
    கனத்த நெஞ்சம் கொண்ட இக் காகங்கள்…

    அண்மையில் வந்த கஜா புயலால் கழனிகளை இழந்து, மனமுழந்து வாடும் மக்களைக் காக்க வாராது, கடற்கரையோரம் களவுக்காதல் வளர்க்கும் பொறுப்பற்ற இளையோரைக் கண்டு வெறுப்புற்ற காகங்களைத் தம் கவிதைவழிக் காட்சிப்படுத்தியிருக்கும்  முனைவர் மு. புஷ்பரெஜினாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்து மகிழ்கின்றேன்.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181127 DWA -Canson 200gsm -600dpi scan wm-72dpi

     

    ”தீண்டும் மனக்குரங்கின் தூண்டுதலால் வந்துபோகும்
    யாண்டும் குளிர்,வெப்பம் இன்ப,துன்பம் ! -பாண்டு
    மகனே பொறுப்பாய், மனதால் பொருப்பாய்
    புகழாம் போரில் புகு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181126 -DWA -between the armiesm-24×32 wcol canson 200gsm -icam wm

    இருபுறம் சேனை கருநிறக் கண்ணன்
    அருச்சுனன் தேரை அசைத்து -பொறுமையாய்
    கீதை பகர்கின்றார் காண்டீப சாரதி
    பாதை பகவானின் போக்கு…..கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (289)

    இந்த வார வல்லமையாளராக  தென்னிந்தியாவின் பல பழைய வரலாற்று இடங்கள், கோவில் கலைகள், கல்வெட்டுகள் பற்றி விரிவாக வலைச்சுவடி எழுதும்  ரா (ராமையா) முத்துசாமி அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. பெற்றோர்: இராமையா – பார்வதி அம்மாள்.

    இரா முத்துசாமி புதுக்கோட்டை மாவட்டம் இராமசந்திரபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோரின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஒரு சிறு கிராமம். எனவே கொங்குநாட்டின் மீது ஒரு ஈர்ப்பும் பிடிப்பும் உண்டு. கல்லூரிப் பட்டப்படிப்பை காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், முதுகலைப் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ. (டி.ஆர்.டி.ஓ), சென்னை, ஆவடியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். 45 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை வாழ்க்கை. 2000 முதல் எழுதத் தொடங்கியுள்ளார். தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வலைத்தளங்களில் எழுதி வருகிறார். தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், நாட்டுப்புறவியல், அறிவியல், மற்றும் நடப்புச்செய்திகளிலும் நாட்டம் உண்டு. விக்கிப்பீடியாவில் (தமிழ், ஆங்கிலம்) கட்டுரை தொடக்கம், மேம்படுத்துதல் மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளையும் மேற்கொண்ட அனுபவம் உள்ளது. புகைப்படக்கலையிலும் ஆர்வமுண்டு. சென்னை ஃபோட்டோ வாக் குழுவினருடன் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மதராசப்பட்டிணத்தின் வரலாறு சார்ந்த இடங்களை புகைப்படங்கள் மூலமாக புகைப்படக் கதையாக வெளியிட்ட அனுபவமும் உண்டு.

    https://agharam.wordpress.com/
    http://know-your-heritage.blogspot.in/
    https://www.facebook.com/muthusamy.ramaiah.5

    இந்த வாரம் சங்க கால இலக்கியத்தில் இரும்புத் தொழில்நுட்பம் என்று ஆராய்ந்து பதிந்துள்ளார்:

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 189

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நலம் ..நலமறிய ஆவல் – 135

    தலைவரும், அதிகாரியும்

    நிறுவனமோ, குடும்பமோ, எந்த தலைவருக்கும் ஒரே நியதிதான். பிறர் சொல்வதைக் காதுகொடுத்து கேட்டுவிட்டு, சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி வேலையைப் பகிர்ந்தளித்துவிட்டு ஒதுங்கிவிட்டால் எந்தக் காரியமும் சிறப்பாக முடியும்.

    நானே வல்லவன்!

    பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் பொதுக்கூட்டம் நடைபெறும்போது, ஒரே குரல்தான் ஒலிக்கும் – தலைமை ஆசிரியரது. `பதவி கிடைத்துவிட்டது. இனி நான் கற்க வேண்டியது எதுவுமில்லை!’ என்ற அகங்காரம்! பாதிக்கப்படுபவர்கள் என்னவோ மாணவர்கள்தாம்.

    தலையை நிமிர்த்திக்கொண்டு எல்லாரையும் விரட்டிக்கொண்டே இருக்கவேண்டும், அப்போதுதான் தம் பேச்சுக்கு மறுபேச்சே இருக்காது, தாம் நினைத்தபடி நடப்பார்கள் என்று எண்ணிய தலைவர்கள் நிலைப்பது கிடையாது. இவர்களுக்குத் தம் குறை நிறைகள் புரிவதில்லை.

    எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அடுத்த வகுப்பிற்கான மணி அடித்ததுமே ஆசிரியர்கள் அறைக்கு வெளியே நின்றுகொண்டு, சுழலும் கதவைப் பிடித்து நிற்பார். “Teachers! Go to class!” என்று ஆசிரியர்களை தத்தம் வகுப்பிற்குப் போகப் பணிப்பார்.

    `நான் ஒரு பெரிய அதிகாரி!’ என்ற பெருமிதம் அவரை அப்படி நடக்க வைத்திருக்கலாம். ஆனால், ஒரு நல்ல தலைவர் இப்படி நடக்கமாட்டார். எல்லா அதிகாரிகளையும் `தலைவர்’ என்று ஏற்க இயலாது.

    ஒவ்வொரு முறையும் இப்படியே அதிகாரம் செய்ய, எங்களுக்கு எரிச்சல் மூண்டது. நாங்கள் என்ன மிருகங்களா, ஓயாமல் ஒருவர் விரட்ட?

    “நமக்காக கதவைத் திறந்துவிடுகிறாரே! அவர் கையில் ஆளுக்குப் பத்து காசு வைத்துவிட்டுப் போகலாமா?” என்று ஒரு ஆசிரியை கேட்க, அனைவரும் பெரிதாகச் சிரித்தோம். இயலாமையைத் தணித்துக்கொள்ள கேலி பேசுவதும் ஒரு வழி.

    குறைகளைப் பெரிது பண்ணுகிற அதிகாரி

    ஒரு தலைவரானவர் தன் கீழ் இருக்கும் ஒவ்வொருவரின் குணாதிசயத்தையும், குறை, நிறைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். குறைகளையே பெரிதுபடுத்திக்கொண்டிருந்தால், யாருக்குத்தான் கடமை உணர்வுடன் செயலாற்றப் பிடிக்கும்! பிறரிடம் நல்லவிதமாக நடந்துகொண்டால்தானே நல்லெண்ணம் நீடித்திருக்கும்?

    கதை

    தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருவர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவள் மஹானி.

    எதிர்பாராத அல்லது நடக்கக்கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டால் அவைகளை எப்படிச் சமாளிப்பது என்று அமைதி குலையாது யோசிக்கும் திறமை அமைந்திருக்கவில்லை அவளுக்கு. சிபாரிசுதான் மஹானியை தலைமை ஆசிரியையாக உயர்த்தி இருந்தது. அதனால் பதவிக்கு ஏற்ற மனத்துணிவு இருக்கவில்லை.

    ஒரு முறை, மாணவர்கள் புகை பிடிக்கக்கூடாது என்ற பள்ளி விதிமுறையை மீறிய மாணவர்களைத் திட்டப்போனாள் மஹானி. அவர்களோ, `அந்த ஆசிரியர், இந்த ஆசிரியர்,’ என்று சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு, `அவர்கள் மட்டும் சிகரெட்டு பிடிக்கிறார்களே!’ என்று அவளையே திருப்பிக்கேட்டார்கள், திமிருடன்.

    மஹானி தன் நிதானத்தை இழந்தாள். தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களின் மரியாதையைக் காப்பது தன் கடமை என்று உணரத் தவறினாள்.

    விளைவு?

    பள்ளியெங்கும், ஏன், ஒவ்வொரு வகுப்பறையிலும், அவள் கத்தியது கேட்கும்படி ஒலிபெருக்கியில், மாணவர்கள் கூறியதைப் பரப்பினாள் – அந்த ஆசிரியர்களின் பெயர்களையும் மறவாது குறிப்பிட்டு! அதன்பின், பரிதாபத்துக்கு உரிய அந்த ஆசிரியர்கள் எந்த முகத்துடன் மாணவர்களை நிமிர்ந்து பார்ப்பார்கள்?

    `தன்னையே பிறர் தட்டிக்கேட்கும்படி வைத்துவிட்டார்களே இந்த ஆசிரியர்கள்!’ என்ற பதட்டம்தான் ஏற்பட்டது.

    `ஆசிரியர்கள் இங்கு மாணவர்கள் இல்லை. அவர்களும் உங்களைப்போல் இருக்க வேண்டிய அவசியமில்லை!’ என்று அடித்துச்சொல்லும் தைரியம் மஹானிக்கு இருக்கவில்லை.

    முட்டாள்தனமாக தன் கீழ் வேலை பார்த்த ஆசிரியர்களைத் தாக்கி, அவர்களுடைய மரியாதையையும் இழந்தாள்.

    நல்ல தலைவர் எந்நிலையிலும் நிதானம் தவறாது இருக்க முயலவேண்டாமா?

    சொந்தக் கதை

    மாணவர்கள் சட்டைக்காலர்வரை நீண்ட தலைமுடி வளர்த்துக்கொள்ளக்கூடாது என்ற விதி மலேசியப் பள்ளிகளில் உண்டு. அதை மீறிய ஒரு மாணவனை நான் கண்டித்தபோது, “நீங்கள் மட்டும் முடியை நீளமாக வளர்த்துக்கொண்டிருக்கிறீர்களே!” என்று சாடினான்

    நான் நிதானமாக, “நான் ஆணுமில்லை, இங்கு படிக்க வந்த மாணவனுமில்லை,” என்று பதிலளித்தேன்.

    என்னைக் கேவலப்படுத்துவதாக நினைத்து அவன் கூறியது அவனுக்கே அவமானத்தை விளைவித்தது. முகம் சிறுக்க அப்பால் போனான்.

    மாற்றவேண்டியதை மாற்று!

    ஒரே நிலையில் இருப்பது ஒருவருக்குப் பாதுகாப்பான உணர்வை அளிக்கலாம். ஆனால், `மாறுதல்’ என்பது பல சமயங்களில் நன்மை விளைவிக்கும். மாறும் காலத்திற்கேற்ப நாமும் மாறத் தயாராக இருக்கவேண்டும்.

    எந்த மாறுதலையும் ஏற்கத் துணிவற்ற தலைவர்கள் பிறர் சொல்வதைக் கேட்பதில்லை. தம் சொற்படி கேட்காதவர்களுக்குத் தண்டனை அளிக்கவும் தயங்குவதில்லை. இப்போக்கினால் அவர்களுக்கும் நிம்மதி கிடையாது, அவர்கள் சொற்படி நடப்பவர்களுக்கும், ஏன், எதிர்ப்பவர்களுக்கும்கூட நிம்மதி பறிபோய்விடும்.

    குறுக்கீடு எதற்கு?

    எந்தக் காரியமும் செய்ய ஆரம்பிப்பதற்குமுன் அதன் நெளிவு சுளிவுகளைப்பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டால் குழப்பம் வராது.

    வேலையைப் பிறருக்குப் பகிர்ந்தளித்தபின் அடிக்கடி குறுக்கிடும் தலைவர்களைப்பற்றி என்ன சொல்ல! இப்போக்கினால் வேலையும் தாமதமாகும், செய்பவருக்கும் எரிச்சல் மூளும்.

    தகுதி இருக்கிறதா என்று முதலிலேயே பார்த்துத்தானே வேலையை அளித்திருப்பார்கள்? பின் எதற்காக குறுக்கிடுவது?

    மாறாக, அவர்களுடன் இணைந்து செய்தால் உறவு பலப்படும். விறைப்பாக நடந்துகொள்வதற்குப் பதில் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினால், இரு தரப்பினருக்கும் நிறைவாக இருக்குமே!

    பிழைகளே பாடம்

    ஒரு வேலையில் புதிதாக நியமனம் ஆனவுடன் தவறுகள் புரிவது இயற்கை. அதனால் மேலதிகாரி கண்டபடி தாக்கினால், முன்னேறுவது எப்படி? அறியாமல் செய்யும் பிழைகளைப் பாடமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் இருந்தால், பொறுப்புகள் அதிகரிக்கும்போது மன உளைச்சலும் அதிகமாகாது தடுக்கலாம்.

    அப்படியே ஒருவர் பிழை புரிந்தாலும், தலைவர் பலபேர் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தாது, தனியாக அழைத்துச் சொல்லலாமே!

    ஒரு குடும்பத்தலைவியிடமிருந்து கற்ற பாடம்

    “உன் தாய் உன்னை ஓயாமல் திட்டிக்கொண்டே இருக்கிறாளா! உன்னால் எப்படி பொறுக்க முடிகிறது?” ஒரு பெண் தன் தோழியைக் கேட்டாள், அதிசயத்துடன்.

    “நான் சரியாக நடந்துகொள்ளாததால் திட்டுகிறாள். அதோடு, தனியாக அழைத்துத்தானே செய்கிறாள்!” என்ற பதில் வந்தது.

    அந்த தாய் மகளைத் திருத்தும் நோக்கத்துடன் கடுமையாகப் பேசியிருக்கலாம். பிரச்னை என்று வந்தால், அதை எப்படி மாற்றுவது என்றும் வழி காட்டியிருக்கலாம். ஆனால், மகளுடைய நிலையில் தன்னை வைத்துப் பார்த்து, அவளுடைய தன்னம்பிக்கைக்குப் பங்கம் வராதபடி நடந்துகொண்டாள். அதனால் வருத்தம் உண்டானாலும், தாய்மீது கோபம் எழவில்லை மகளுக்கு.

    ஒரு தலைவர் முறைகேடாக நடந்தால், பிறரும் அவ்வழியைத்தான் பின்பற்றுவார்கள். (`தலைவரே அடிக்கிறார், நாம் செய்தால் என்ன?’ – இது லஞ்ச ஊழல் பெருகியிருக்கும் நாட்டில் ஒருவர் தன்கீழ் வேலை பார்த்தவர்களுக்குக் கூறிய அறிவுரை!))

    `நகத்தைக் கடிக்காதே!’ என்று ஓயாமல் மகளைக் கண்டிக்கும் தாய்க்கே அப்பழக்கம் இருந்தால், மகள் எப்படித் திருந்துவாள்?

    பிறரிடம் தாம் எதிர்பார்ப்பதன்படி தாமும் நடப்பவர்களே சிறப்பான வழிகாட்டிகளாக அமைகிறார்கள்.

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 44

    க. பாலசுப்பிரமணியன்

    தோல்விகள் தொடர்கதையானால் ..

    “சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்” – தொலைக்காட்சியில் இந்தப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. கவியரசு கண்ணதாசனின் இந்தப்பாடலின் ஆழமான கருத்து மனோதத்துவ அடிப்படையில் அலசிப்பார்க்கும் பொழுது ஒரு மனதின் பல பரிமாணங்களையும் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் துயரங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. வெற்றி – தோல்வி, மகிழ்ச்சி – துயரம், உயர்வு -தாழ்வு, வளமை -வறுமை  ஆகிய அனைத்தும் பிணைந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லோரும் அறிகின்றோம். ஆனாலும் தோல்விகளையும் துயரங்களையும் தாங்குகின்ற பக்குவம் நமது மனதிற்கு ஏற்படுவதில்லை.

    “நீங்கள் சொல்வது சரிதான் அய்யா. தோல்விகளைத் தாங்குகின்ற பக்குவத்தை அடைய முயற்சிக்கின்றேன். ஆனால் துயரங்களும் தோல்விகளும் திரும்பத்திரும்ப வரும்பொழுது எப்படி சம்மாளிப்பது?. தோல்விகளின் தொடர்ச்சியில் மனம் துவண்டு விடுகின்றதே – என்ற கூற்று காதில் விழத்தான் செய்கின்றது. “பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் “என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றதே !

    ஆங்கிலத்தின் மிகப்பெரிய கவிஞர் செகப்பிரியர் (Shakespeare)  ஓர் நாடகத்தில் கூறுகின்றார் : “துயரங்கள் வரும்பொழுது தனித்து வருவதில்லை. அணி அணியாக வருகின்றன” (When Sorrows come, they come not in a single spies, but in battalions) பலரும் அனுபவிக்கும் உண்மை இது! இதற்கு வழி என்ன? மன உறுதிதான் !

    அமெரிக்காவின் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய ஆப்ரகாம் லிங்கன் ஒரு சாதாரண தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்து எத்தனையெத்தனை சோதனைகளைச் சந்தித்தார். எத்தனை தோல்விகள் அவரைப் பின்தொடர்ந்தன ! தளர்ந்தாரா அவர்? ஒவ்வொரு தோல்வியையும் ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டு அவற்றை தன் முன்னேற்றத்திற்கான அடிக்கல்லாக மாற்றிக்கொண்டாரே! மற்றவர்களைக் கவரும் வசீகரமும் உடல்வாகும் இல்லாதவராக இருந்தாலும் தன் திறன்களால், தன் தொண்டால், தன் முயற்சிகளால் எல்லோரையும் ஈர்க்கும் காந்த சக்தி படைத்த மனிதராக மாறினாரே !  தோல்விகள் அனைவருக்கும் வரும். ஆனால் தொடர்ந்த தோல்விகள் அனைவருக்கும் வருவதில்லை. அப்படி வரும்பொழுது துவண்டுவிடாமல் எழுந்து ஒரு சிங்கத்தைப் போல சீறு நடை போடுகின்ற தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளலாமே!

    ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் கதைகள் அவருடைய ஆரம்பக்காலத்தில் எத்தனை முறை திருப்பியனுப்பப்பட்டது. அவர் முயற்சியைக் கைவிடவில்லையே ! உலகம் தன்னை ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராகப் போற்றும் வரையில் அவர் தளரவில்லை! உலகின் பல முன்னோடிகள் பெர்னார்ட் ஷாவோடு பேசவும் கருத்து பரிமாறவும் துடித்தார்களே!

    சர் ஐசாக் நியூட்டன் என்ன சொன்னார் “ஆயிரமாவது தடவை நான் ஒரு  பல்பை கண்டுபிடித்த போது  எவ்வாறு அதை 999 வழிகளில் செய்யக்கூடாது எனக் கற்றுக்கொண்டேன்”

    சரித்திரம் என்ன சொல்கின்றது?  – கீழே விழுந்தவர்கள் எழுந்து நின்றார்கள்; தடுக்கி விழுந்தவர்கள்- மீண்டும் எழுந்து நடக்க முயன்றார்கள்; தோல்வி அடைந்தவர்கள் – மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். சாதனை படைத்தார்கள் ! இப்படி சரித்திரம் படைத்தவர்கள் ஒன்றல்ல-இரண்டல்ல-ஆயிரமாயிரம்பேர்கள் ! இவர்கள் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா?

    பல நேரங்களில் நமது தவறான முடிவுகளால் நாம் தோல்வியைச் சந்திக்கிறோம். அந்த நேரங்களில் நமது முடிவுகள் தவறு எனது தெரிந்துவிட்டால் அதை ஏற்று மாற்றிக்கொள்ள துணியவேண்டும். தொடர்ந்து நமது தவறான முடிவுகளோட வாழ நினைத்தாலோ அல்லது நம்முடைய அகந்தை ,தற்பெருமை காரணமாகவோ நமது முடிவுகளைத் தொடர்ந்து போற்றிவந்தாலோ எப்படி வெற்றிப்படிகள் மீது ஏற முடியும்?

    அறிவியல் ஆராய்ச்சிகளில் “பிழை பகுப்பாய்வு” (Error Analysis) என்ற ஒரு முறை பல இடங்களில் நடத்தப்படுகின்றது. அதன் பொருள் என்ன? நமது கண்டுபிடிப்புக்கள் ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் பிழைகள் ஏற்படுவதும், பிழைகள் கண்டுபிடிக்கப்படுவதும் ஒரு சாதாரண நடப்பு. ஆனால் அந்தப் பிழைகள் ஏன் ஏற்பட்டன? அதற்கான மூல காரணங்கள் என்ன? அந்தப் பிழைகளை எப்படி சரி செய்யலாம்? என்ற ஆய்வு நடத்தப்படுகின்றது. இது தவறுகளை மறுமுறை வராமல் இருப்பதற்கான கற்றலையும் திறன்களையும் நமக்கு அளிக்கும். இந்தப் பழக்கத்தை நாம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் கொள்ளவேண்டும். தோல்விகளை அலசி ஆராய்ந்து தவறுகளை ஏற்று அதற்கான மாற்று வழிகளை கண்டுபிடித்து மாற்றத்தைக் கொணருதல் வெற்றிக்கான அறிகுறிகளை நமக்கு காட்டும்.

    மூளை-நரம்பியல் வல்லுநர்கள் தவறுகள் ஏற்படுவதற்கான காரணங்களிப் பற்றி செய்த ஆராய்ச்சியில் கவனக்குறைவுகளைத் தவிர மூளையில் ஒரு முறை ஏற்பட்ட கற்றலின் தாக்கங்கள் தொடர்வதாகவும் அவைகளுக்கான நியூரான்களின் வலைப்பின்னல்கள் வலுப்பட்டதால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தாமதிப்பதாகவும் அதனால் தொடர் தவறுகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கான சூழ்நிலைகளை புதிய கற்றல்களே உருவாக்கும். எனவே, தவறைத் தவறு என்று அறிந்து கொள்ளாத வரையில் தொடர் தவறுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு.

    இந்த மாதிரியான தொடர் தவறுகளால் ஏற்பட்ட தோல்விகளால் மூடப்பட்ட நிறுவனங்களும் உண்டு. பல்லாண்டு காலங்கள் மிகச் சிறந்ததாக இருந்த நிறுவனங்கள் தங்களுடைய மூளைகளைச் சலவை செய்து புதிய கற்றலுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த வில்லை  ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ பல காலங்கள் சிறப்பான உயர்நிலை சமூக அந்தஸ்து கிடைத்ததாலும் எவ்வளவு நாட்கள் அவை தொடரும் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை. ஒரு காலத்தில் மிகச் சிறப்பான காமெராக்களை கண்டுபிடித்த கோலோச்சிய கோடக் என்னும் நிறுவனம் வருகின்ற மாற்றங்களைக் கண்டுபிடித்து அதற்கான  தயாரிப்புகளில் ஈடுபடாததால் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

    இந்த நிலைக்கு வந்த பல நிறுவனங்களின் வழக்கு ஆய்வுகள் ஒன்றை மட்டும் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றன. தோல்விகள் பெரும்பாலும் ஒரு கணத்தில் வருவதில்லை. அவை வருவதற்கான பல அறிகுறிகள் நமக்கு முன்னமே கிடைத்து விடுகின்றன. நாம் விழிப்புடன் இருத்தல் மிக்க அவசியம்.

    நண்பர்களே ! தோல்வியையும் தொடர் தோல்விகளையும் கண்டு அஞ்சவேண்டியதில்லை… அவைகள் நமக்கு பின்னால் வரும் வெற்றிக்கு நிச்சயமான வழிக்காட்டல்களைக் கொடுக்கும்.

    துணிந்து முயற்சிக்கலாமே!!.. இன்றைய தோல்விகளை நாளைய வெற்றிகளாக மாற்றலாமே!!

    (தொடரும்)

    Share
  • சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சமம்

    முனைவர் இரா.வெங்கடேசன்

    உதவிப் பேராசிரியர்

    இந்திய மொழிகள் மற்றும்

    ஒப்பிலக்கிய பள்ளி

    தமிழ்ப் பல்கலைக்கழகம்

    தஞ்சாவூர் – 10

     

     

                சீனநாட்டை நெப்போலியன் உறங்கும் யானை என்றான் இது உண்மையே. மங்கோலிய இனத்தைச் சேர்ந்த சீனர்களின் உயர்வுக்குக் காரணமாக இருப்பவை உழைப்பு, இலக்கியம், மதநம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகாது என்று எண்ணுகின்றேன். உலகில் தொன்மையான நாகரிகத்தைக் கொண்ட சீனா தொன்மையான இலக்கிய வளத்தை தன்னகத்தே கொண்டதாகும். சீனச் சமுதாயம் தொடக்க காலத்தில் அறிஞர்கள், உழவர்கள், கைத்தொழில் செய்வோர், வணிகர் என்ற படிநிலையில் அமைந்திருந்தது. சீன ஞானி கன்பூசியசின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த மென்சிபசு சீனச் சமுதாயத்தை கற்றோர், கல்லாதவர் என இரண்டாகப் பாகுபடுத்தினார். இப்பிரிவு இன்றைய காலகட்டத்திலும் தொடர்கிறது. சீனத்தில் சீனம், மங்கோலியம், திபெத்தியம், கொரியம், தாய், உயிகுர், ஆங்கிலம் போன்ற மொழிகள் வழங்கப்பட்டாலும் சீனமொழி முதன்மை மொழியாக உள்ளது. சீனர்கள் கட்டுக்கோப்பாக வாழ்வதற்கு அடைப்படியாக இலக்கியங்களைக் கொண்டனர். சீன எழுத்து கி.மு.1250-1046 என்ற காலப் பகுதிக்குரிய எலும்பில் பொறிக்கப்பட்ட தேவ வாக்குகளிலும் வெண்கலப் பொறிப்புகளிலும் காணப்படுகின்றன. சீன எழுத்துக்களின் தரப்படுத்துதல் குவின் அரச மரபின் காலகட்டத்தில் நிகழ்ந்தது. சீனர்களைப் பண்படுத்தியது சீன இலக்கியங்களே. அப்படியான இலக்கியங்களில் முக்கியமானது சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சுமம் என்ற நூல் ஆகும். கன்பூசியஸ் முதலானோர் தம் காலத்தில் சொன்ன கருத்துக்களைத் திரட்டிய நூலாக இந்நூல் விளங்குகிறது. 1928 ஆம் ஆண்டு எம்.ஆர், ஜம்புநாதன் இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சீனர்களின் ஒழுக்கம், கல்வி, பண்பாடு, உடை, இசை, மதம் போன்றவைகளை இந்நூல் ஒழுங்குபடுத்துகிறது.

                இன்றைக்கு சீனர்கள் பண்பாடு, கல்வி, தொழில்நுட்பம், அரசியல், அறநிலை, அறிவுநிலை, சட்டம், இலக்கியம் போன்றவற்றில் உயர்ந்து நிற்பதற்குக் காரணம் அந்நாட்டில் வாழ்ந்த அறிஞர்களின் சிந்தனைகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சீன நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் மைய உறுப்பாகக் கன்பூசியம் [Confucianism] விளங்கி வந்துள்ளது. இந்நெறி சீனஞானி கன்பூசியசினாலும் அவருக்குப்பின் தோன்றிய மென்சியசு (mencius) உள்ளிட்ட சான்றோர்களாலும் வளர்க்கப்பெற்றது. பின் வந்து சங்கு (sung) மிங்கு (ming) அரச மரபின் ஆட்சிக் காலங்களில் புதுக்கன்பூசியம் (Neo-confucianism) வளர்ச்சிபெற்றது. இந்த நெறியாளர்கள் தாவு மார்க்கம் மற்றும் பௌத்தம் ஆகிய இருபெரும் நெறிகளினின்றும் தேர்ந்தெடுத்த சிந்தனைகளைப் புதுக்கன்பூசியசியத்தில் புகுத்தி விட்டனர். (சோ.ந.கந்தசாமி, 2013:41)

                சீனர்கள் தாவோ மார்க்கம், மோசியநெறி, இயற்கையியம், வினைமுறைக்கடைப்பியம், அல்லது சட்டவியம், பொதுவுடைமைவாதம், கன்பூசியிசம், பௌத்த மார்க்கம் போன்றவைகள் காணப்பட்டாலும் சைனர்களின் சிந்தனைகளில், இலக்கியங்களில் மேலோங்கி கன்பூசியிசம்2 நிற்கிறது. கன்பூசியசின் போதனைகள்யாவும் முற்ற முடிந்த அறிவுரை என்று மக்கள் ஒப்புதல் அளித்தனர். அளித்தபின் சீனப் பள்ளிகளில் எல்லாம் கன்பூசியசின் போதனைகள் பயிற்றுவிக்கப்பட்டன. கன்பூசியசு ஒரு சாமானிய மனிதர் என்ற மட்டில் சீனர்கள் கருதவில்லை. அவரை ஒரு பூரண மனிதர் என்று அவரை மதிப்பிட்டனர் (சோ.ந.கந்தசாமி, 2013:57) எனவேதான் சீனர்கள் கன்பூசியத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு இலக்கியங்கள் வழியாக அதனை மக்களுக்கு கடத்தினர். இந்த சிந்தனாமுறையென்பது சமூக விழிப்புடையதாக இருப்பதற்கானது. கன்பூசியசின் சிந்தனைகள் எப்பொழுதும் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

    II

                வடக்குச் சீனாவின் சேபூ என்ற இடத்தில் கி.மு.551-ஆம் ஆண்டு கன்பூஷியஸ் பிறந்தான். 3 வயதில் தந்தையை இழக்கிறான். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட கன்பூஷியஸ் சிறிய பள்ளிக்கூடம் தொடங்கிப் பின்னாளில் ராஜ்யத்தின் பிரதம மந்திரியாக உயர்ந்தான். பிரதம மந்திரி கன்பூஷியஸின் நிருவாகத்தின்கீழ் லூராஜ்யம் மற்ற ராஜ்யங்களுக்கு ஒரு முன்மாதிரியாயிருந்தது. விலைவாசி, முதலாளி-தொழிலாளி உயர்வு தாழ்வு, அறிவுக்கும் திறமைக்கும் தகுந்தாற்போல் வேலை போன்ற பல சீர்திருத்தங்களைச் செய்தான். சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கன்பூஷியஸ் தன் சீடர்களுடன் நாடு முழுக்கப் பயணப்பட்டு மக்களைச் சந்தித்து நற்போதனைகள் செய்தார்.

    “கன்பூஷியஸ் ஒரு சிந்தனையாளன், உபதேசிகன், தீர்க்கதரிசியல்ல காணாத கடவுளைப் பற்றி அவன் ஒன்றுஞ் சொல்லவில்லை. கண்முன்னே நடமாடும் மனிதர்களுக்கு தொண்டு செய்யாமல் காணாத பொருளுக்கு எப்படித் தொண்டு செய்ய முடியும் என்பது அவன் கேள்வி. உலகத்திலே பிறந்துவிட்டு உலக விவகாரங்களிலே ஈடுபடாமல் உலகத்தைவிட்டு ஓடிவிடுவதில் அர்த்தமென்ன இருக்கிறது என்று அவன் கேட்டான். இப்படி அவன் உலக ரீதியாக உபதேசிக்க வேண்டியது அந்தக் காலத்தில் அவசியமாய் இருந்தது. ஏனென்றால் அவனுடைய காலத்தில் தேச முழுமையிலும் அரசனுக்கும் குடிகளுக்குமுள்ள சம்பந்தம், உற்றார் உறவினர்களுக்குள்ள சம்பந்தம் முதலியவையெல்லாம் வரன் முறையின்றி ஒரே குழப்பமாய் இருந்தன. இதனாலேயே கன்பூஷியஸ் மனித வாழ்க்கைக்குத் தேவையான பல அமிசங்களைப் பற்றியும் கூறினான். கல்வி முறை, அரசியல் முறை, சடங்குகளைச் செய்யும் முறை, கலைகளை வளர்க்கும் முறை முதலிய பலவற்றைப் பற்றியும் அவன் திட்டங்கள் வகுத்திருக்கிறான்.” (வெ.சாமிசாதசர்மா, 2001: 50-51)

                கன்பூஷியஸ் புதிய மதமொன்றையும் உருவாக்கவில்லை. புதிய தத்துவங்களையும் உற்பத்தி செய்யவில்லை. ஆனால் மனித மனங்களை நன்றாக அறிந்தவன். மனித வாழ்க்கை பண்படுவதற்கு சில வழிமுறைகளைச் சொன்னான். இவை அனுபவத்திற்கு ஏற்றதாக இருந்தது. மக்கள் ஏற்றுக்கொண்டனர். லாவோத்ஸே உலகத்தைத் துறந்து வாழச் சொன்னான். கன்பூஷியஸ் உலகத்திலிருந்து வாழச் சொன்னான். கன்பூஷியஸின் காலத்திற்குப் பின்னால் வந்த மோத்ஸேயின் உபதேசங்கள் மக்களுக்கு உபயோகமாயிருந்தன. இதன் பின்னால் வந்த மென்ஷியஸ் என்ற மற்றொரு ஞானி மக்களுக்கு நன்மைகளைப் போதித்தான். இந்த சிந்தனையாளர்கள் சீனாவை சீன மக்களை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றனர். இவர்கள் சொன்னவைகள் தொகுக்கப்பட்டன. இந்த நூல்கள் இன்றைய காலகட்டத்திலும் பயனுள்ளதாக உள்ளது சீனர்களுக்கு மட்டுமல்ல உலக மக்கள் அனைவருக்குமே.

    III

                சீனமக்களின் அறிவுச் செழுமை, ஒழுக்கம் என்பன நீதிபோதனைகளால் கட்டமைக்கப்பட்டது. எந்தவொரு சீன இலக்கியத்திலும் நீதிபோதனை எப்பொழுதும் இடம்பெற்றுள்ளது. இலக்கியம் மக்களுக்காக என்ற கோட்பாட்டினைச் சீன இலக்கியத்தில் காண்கிறோம். அழகியல் கூறுகளுக்கு இரண்டாம் நிலை இடம்தான் தரப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக அற இலக்கியங்களும் (Moral Treatises) செவியறிவுரைகளும் (Exhortations) கடிந்துரைகளும் (Admonitions) மிகப் பலவாகத் தோன்றின. நவீனத் திறனாய்வாளர்கள் அவற்றைக் குறைத்து மதிப்பிட்டபொழுதும்கூட சீனரின் மனத்திலும் ஒழுக்க நெறியதும் அவற்றின் ஆதிக்கம் மிகுதியானது மட்டுமன்றி தொடர்ச்சியுமுடையது.3 எனவே சீன இலக்கியங்கள் பெரும்பகுதி நீதிபோதனைகளை வெளிப்படுத்தி நிற்பவைகள். இந்த நீதிபோதனைகள்தான் சீனர்களை உலகில் தலைசிறந்தவர்களாக காட்டி நிற்கிறது.

                கன்ஃபூசியஸ் மற்றும் அவரது சீடர்கள், சீனச் சமுதாயத்திற்கு வழிகாட்டும் கருத்துகளைக் கொண்டவையாக ஐந்து நூல்களை அடையாளம் காட்டினார்கள். இந்த ஐந்து நூல்களையுமே கன்ஃபூஷியஸ்தான் கொடுத்தார் என்றும் பலர் சொல்வார்கள். ஹான் வம்சத்தில் வந்த வு (Wu) பேரரசரின் காலத்தில் (கி.மு.141-கி.மு.87) கன்ஃபூஷியஸ் சொன்ன தத்துவங்களுக்கு அதிமுக்கியத்துவம் ஏற்பட்டது. கி.மு.136இல் கன்ஃபூஷியஸ்-இன் கருத்துகள் சீனாவின் தேசியக் கருத்துவாதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அன்று முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையில் இந்த ஐந்து நூல்களின் கருத்துக்கள் ஏதாவது ஒருவகையில் சீனாவின் அதிகாரபூர்வமான தேசியக் கருத்துகளாக இருந்து வந்தன. அந்த ஐந்து நூல்கள் எவை?

    1. மாற்றுத் தொகை (யீ சிங். Yi sing, Classic of Changes)
    2. வரலாற்றுத் தொகை (ஷு சிங், Shu sing, classic of History)
    3. கவித்தொகை (ஷிழ் சிங், Shi sing, classic of Songs)
    4. சடங்குத் தொகை (லீ சீ, Li ji, Collection of Rituals)
    5. வசந்தகால இலையுதிர் காலக் குறிப்புகள், (ச்சுன் ட்ச்சியு, Chun Qiu, Spring and Autumn Annals)”4

    கன்பூசியஸ் சொன்ன தத்துவங்கள், நீதிபோதனைகள், உலகியல் நீதிகளைப் போதிப்பதற்கு இந்த நூல்கள் உதவியிருக்கலாம். எப்படியாயினும் கன்பூசியசின் சிந்தனைகள் மக்களுக்கு நற்போதனைகளைக் கூறுவதாக உள்ளன.

                கன்பூசியஸ் முதலான சிந்தனையாளர்களின் தத்துவக் கருத்துக்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சுமம் என்ற இந்நூல் 1928 ஆம் ஆண்டு நீடன் கோ பதிப்பகத்தின் வழியாக எம்.ஆர்.ஜம்புநாதன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலைத் தமிழில் மொழிபெயர்க்கவேண்டிய தேவை குறித்து எம்.ஆர்.ஜம்புநாதன் இதுவே அறநூலும் ராஜதந்திர சாஸ்திரமும் இன்பநூலுமாகும். கம்பூஷன் மகானின் மொழிகளோடு பல மெய்ப்புருடர்களின் மொழிகளும் கலந்துள. சீன பாஷையிலிருந்து பல பாஷைகளில் அவை பல தடவை மொழிபெயர்த்திருந்த போதிலும் இதுவரை தமிழில் தோன்றவில்லை. இது முக்கியமாய் பல ஆங்கில நூல்களைத் தழுவியே எழுதப்பட்டுள. மூல நூலில் சம்பாஷணை மூலமாயும் இன்றும் பல உதாரணங்களுடன் சொல்லியுள்ளவைகளைச் சுருங்கச் சொல்லி விளக்கமாய் எழுதியுள்ளோம். (எம்.ஆர்.ஜம்புனாதன் 1928:34-35) என்று குறிப்பிட்டுள்ளார்.

                இந்த நூலில் 25 தலைப்புகள், 21 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. 21 அத்தியாயங்களில் 499 சூட்சமங்கள் பேசப்பட்டுள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள முன்னுரைகள் பல அரிய தகவல்களைக் கொண்டுள்ளன. இந்நூலாசிரியர் மூவரை மட்டுமே மகான்6 என்று ஏற்றுக்கொள்கிறார். இம்முன்னுரையில் மூன்று விசயங்களை மையப்படுத்தி விவாதிக்கின்றார். 1.புத்தமத மேன்மை, 2.இசை, 3.மொழி. இசையும் வசீகரமான மொழியும் தேவையில்லை என்கிறார். இந்துமதம், கிறித்தவமதம், இசுலாம் மதங்கள் பின்பற்றக்கூடிய போலியான நம்பிக்கைகளையும் இம்மதங்களைப் பின்பற்றியவர்களால் உண்டான அழிவுகளையும்7 பட்டியலிடுகின்றார். புத்தர், அசோகரின் பெருமைகளைக் கொண்டாடுகின்றார். பிற மதத்தினரைப் பேசும்பொழுது நாத்திகத்தை உயர்த்திப் பிடிப்பதாகத் தோன்றுகிறது. கடவுள் நாமத்தை உச்சரிப்பது, பாவமன்னிப்பு, தோத்திரங்கள் பாடுவது, அற்புத லீலைகள் புரிவது, இசை போன்றவையெல்லாம் அபத்தமானவைகள் என்று பதிவிடுகின்றார். இந்தப் பார்வை புத்தமத பார்வையை அடிப்படையாகக் கொண்டது.

                இந்நூலில் சொல்லப்படும் சூட்சமங்களை கன்பூசியஸ் லீ முதலிய அறிஞர்கள் உரைத்ததாகக் குறிப்பிடுகிறார். தமிழில் இருக்கும் அறநூல்கள் மக்களுக்கு அறக்கருத்துக்களை எவ்வாறு போதித்தனவோ அவ்வகையிலே இந்நூல் கருத்துக்களும் மக்களுக்குத் தேவையான அறத்தை வலியுறுத்துகிறது. நடுநிலைமை, அறம், மொழி, ஒழுக்கம், மனம், இறைவன், மகன் கடமை, சான்றோர், குரு, கல்வி, அறிவு, உலகநீதி, சங்கீதம், நடனம், இசை, மொழி, மாணவர் அறம், ஆசான் அறம், வரி, அரசாங்க அறம், உலக இரகசியம் என்று பல பொருண்மைகளை உள்ளடக்கிய கருத்துக்களை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளது.

                இந்த நூல் கூறுகின்ற அறக்கருத்துக்கள் அனைத்தும் சீன மக்களுக்கானது என்றாலும் உலகில் உள்ள அனைத்து மக்களும் பின்பற்றக்கூடிய பொதுமைகளைப் பெற்றுள்ளன. உலக மக்களுக்கானது எனும்பொழுது அறம் தலைதூக்கி நிற்பதையும் தனிமனித ஒழுக்கம் வலியுறுத்தப்படுவதையும் காணமுடிகிறது.

    நல்லாரை நயந்து பொல்லாரைப் புறக்கணித்தால் நாட்டிலுள்ளோருக்குச் சந்தோஷம்; பொல்லாரைப் புகழ்ந்து, நல்லாரை இழந்தால், மாந்தர்களின் மனமிளைக்கும் (ப.42)

    தரணியைத் தூய்மையாக்க, அன்பும், அமைதியும் தேவை. அகிலமெல்லாம் நிலவச் செய்யவும் (ப.42)

    நன்மையைக் கண்டு, அதை நாடாமலிருப்பது பேடித்தனமாகும் (ப.43)

    கைக்கூலியளித்து, கற்றோர்களை கைவசம் செய்ய இயலாது (ப.44)

    காலையில் சத்தியத்தைச் செவியுற்றவன், மாலையில் மகிழ்வுடன் மரிக்கலாம் (ப.48)

    பேராசையைப் பற்றுபவனுக்குப் பகைஞர்கள் பாரிலுண்டு (ப.48)

    அறிஞனைக் கண்டால் அவனை அடைய விரும்பவும், அறிவிலியை அணுகினால் தன்னகத்தை ஆராயவும் (ப.49)

    அரசர்களிடம் அதிகப்பழக்கம் அவமானத்தை விளைவிக்கும்; சிநேகிதர்களிடம் சகசமானது வெறுப்பில் முடியும் (ப.49)

    மாந்தர்கள் தம்தம் நிலைக்கேற்றவாறு மாறுதலை அடைகிறார்கள். (ப.57)

    அமைதி, அடக்கம், அரும்பணியோடமைந்த அச்சமற்றவனை அடைவது ஆனந்தம் (ப.74)

    அறத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மாணவர்களின் அறம், ஆசான் அறம், அரசாங்க அறம் உரைக்கிறது இந்நூல்.

    ஒரு மாணவனுக்கு மேன்மையான மதிப்பு அளிக்கப்பட்ட பொழுது நான் இதற்கருகனல்லன் எனச் சொல்லியதைச் செவியுற்று, சிறந்தவர் சந்தோஷமானார்” (ப.51)

    பாரிலுள்ள பெரியாரைப் பணிவதுபோல் பலரோடும் பாங்குடன் பழக வேண்டும். தரணியின் திருத்தொண்டே திருப்பணியெனத் தெளியவும். அயலான் ஆத்திரத்தினின்று நீங்க, நீ, வெறுப்பதை அவர்களுக்கு விரும்பாதே (ப.77)

    கசடறக் கற்றோன் கபடமற்றவனாகும் (ப.85)

    என்று மாணவர்களுக்கான அறம் போதிக்கப்படுகிறது. அரசாங்க அறம் பற்றிக் குறிப்பிடும்போது,

    பஞ்சகாலத்தில் அரசனுக்குப் பத்திலொன்று அளிப்பதே அரிது. தரணி தவிக்குங்கால், அரசன் ஆநந்தத்தில் அமிழ்வது அநீதியாகும். மாநிலத்தாரின் செல்வமே மன்னரின் சிறப்பாகும் (5.77)

    பயிற்சியற்ற பிரஜைகளைப் போருக்கனுப்புவது படுகொலையாகும் (ப.83)

    பக்தி நெறியையும் பலவந்தமாய் பாரில் வற்புறுத்தாதே (ப.85)

    அரச ஊழியத்தைவிட தேசத் தொண்டே திருப்பணியாகும் (ப.85)

    என்று பல இடங்களில் அரச அறம் பேசப்படுகிறது. இதைப் போல் நடுநிலை, ஒழுக்கம், மனம், இறைவன் என்று பல்வேறு விடயங்களை மையப்படுத்தி அறமாக விளக்கிக் கூறியிருப்பது முக்கியமானதாகும்.

                இகலோக இரகசியம் என்று சொல்லப்படும் அனைத்தும் உலக இரகசியமாக உள்ளன. இவற்றைப் பின்பற்றினால் உலகைப் புரிந்துகொள்ளமுடியும். அதாவது உலகத்தின் சூட்சமமாக இக்கருத்துக்களே இருக்கின்றன.

    இராஜ தந்திரத்தைவிட இராஜ நிர்வாகமே இணையற்ற செல்வமாகும். பெரியார், பேராபத்திலும் பொறுமையுடனுமுளார்கள். சிறியோர் செல்வச் சீலத்தைச் சிதைக்கின்றார்கள் (ப.89)

    பாரிலுள்ள எல்லாப் பணிகளும் நீதிநிலைகளையே நாடியுள (ப.89)

    சீலம் சிரத்தையுடன் சொல்லி; மனம், மெய்யோடு மொழிந்து; நலம், நட்பு காட்டி; உணர்வு உயிரோடு செய்தால்; நாடும் காடும் நம்மை நாடும் இல்லையேல் காடும் நம்மை யழிக்கும். இவையே வாழ்க்கையின் ஜோதியாகும் (ப.89)

    முன் நினைவுற்றவன் துரிதமாய்த் துன்பத்தை அடைவான் (ப.90)

    அழகில் ஆசையாவதுபோல் அறத்தில் அன்புடனாவது அரிது (ப.90)

    அகத்திலே அதிகம் பெற்று, புறத்திலே குறைவாய் பற்றுபவன், பகைமையுனின்று பிரிகின்றான் (ப.90)

    தீரர்கள் தன்னகத்திலிருந்தே துலங்குவார்கள்; தாழ்ந்தோர் அயலார் புகழ விரும்புவார்கள் (ப.90)

    அயலார் எனச் செய்ய நீ விருப்பாயோ அதை அவர்களுக்குச் செய்யாமலிருத்தலே வாழ்க்கைத் துணையாகும் (ப.91)

    கல்வியைக் கற்பதே சித்த சுத்தி நெறியாகும். உணவு உபவாசத்தாலில்லை (ப.91)

    கற்றோரே குறுக்கு நின்றாலும் கல்வியைக் கற்கவும் (ப.91)

    மொழியில் தெளிவே யாவுமாகும் (ப.92)

    இயற்கையின் இரகசியமறியாதவன் அறிஞனாகான். நன்மையான நடத்தையற்றவன், அறமணுகான் (ப.102)

    என்று இந்த உலகில் வெற்றிபெற்று வாழ்வதற்கான உலக இரகசியங்களை நுட்பமாகப் பதிவுசெய்துள்ளது இந்நூல்.

                எந்தவொரு நாட்டில் பன்மைத் தன்மைகள் இருக்கின்றனவோ அங்கிருந்துதான் தலைசிறந்த அறநூல்கள் தோன்றும். நீதிபோதனை என்பதும் தவிர்க்முடியாது. சீன இலக்கியம் அதற்கு விதிவிலக்கானது அல்ல. எனவே சீன இலக்கியங்களில் பெரும்பாலானவை நீதியைப் போதிப்பதாக அமைந்துள்ளது. சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சமம் நூலும் நீதியைப் போதிப்பதாக உள்ளது. அரசன், உழவர், மாணவர், ஆசிரியர், நடனம், இசை, மொழி, கல்வி, இறைவன் போன்றவற்றிற்கான அறத்தை வலியுறுத்தி நிற்கும் இந்நூல் தரும் சூட்சமங்களைப் பின்பற்றினால் உலகை வென்று, நல்ல மனிதராக வாழலாம். சீன மண்ணின், சீன மக்களின், சீனமொழியின் ரகசியம் என்பது இந்நூல் தரும் சூட்சமங்கள்தான் இந்தச் சூட்சமங்களே சீனாவை உலகில் தனித்தனியாகக் காட்டுகிறது. இந்நூல் தமிழ் அறநூல்களோடு ஒப்பிடத்தக்கது. இந்நூலை மறுபதிப்பு செல்வதால் தமிழுலகம் பயன்பெறும்.

     

     

    குறிப்புகள்

    1. வெ.சாமிநாதசர்மா, 2001, சீனாவின் வரலாறு, விடியல் பதிப்பகம், கோவை
    2. சோ.ந.கந்தசாமி, 2013, சீன இலக்கியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
    3. தன்னைப் பண்படுத்திக் கொள்ளுதல் (Personal cultivation) மனித உறவுகளின் வழியாக உண்டாகும் சிறப்பும் பண்பொழுக்கமும் அகியவற்றைக் கற்பிக்கும் நடைமுறைக்கு ஒத்த நீதித்தத்துவமாக விளங்கிய கன்பூசியம் சீனத்தின் தேசியப் பண்பினை வடிவமைத்ததுடன் சீனச் சமூகம், குடும்பம், இலக்கியம், கலைகள் ஆகியவற்றின் ஒவ்வொரு கூறிலும் ஊடுருவியுள்ளது. விரிவான பொருளில் கூறுவதெனில் சீன இலக்கியங்களில் பெரும்பகுதி கன்பூசிய இலக்கியமே [In a broad sense, much by Chinese literature is confucious] Liu-Wu-Chi, An Introduction to Chinese Literature, Bloomington Indiana, p.3
    4. Ibid, pp.4-5
    5. பயணி, 2012, (இ.ப.), வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோயில், பக்.138-139
    6. எம்.ஆர்.ஜம்புநாதன், 1928, சீனவேதம் அல்லது சகத்தின் சூட்சமம், சூடன்கோ, மதராஸ் 1928
    7. மனிதகோடி முமுழுவதையும் அன்புடன் எண்ணி பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொருவரும் உன்னதநிலையை அடையலாமென உரைத்த பெரியோர்கள் சிலரேயாவர். அவர்களுள் தலைசிறந்து விளங்குகிறவர்கள் புத்தபகவானும் கன்பூசியஸ் மகானுமேயாவார்கள். பிறகு நவீனமாய்த் தோன்றிய தயானந்தராகும் (மேலது., ப.3)
    8. ஹிந்து சமயத்தில் அபிமானங்கொண்ட தன் தம்பியினால் தன்னுடைய சமயத்திற்கே தீங்கு வருமென எண்ணியே ஔரங்கசீப் அவனைக் கொன்றார். முகம்மதிய மதத்தின் பெயரால் கணக்கற்ற ஹிந்துக்கள் மாய்ந்தனர் (மேலது., ப.11)
    Share
  • குறளின் கதிர்களாய்…(234)

     

    செண்பக ஜெகதீசன்

     

    பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்     

    துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.

           -திருக்குறள் -487(காலமறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    பகைவர்

    தமக்குக் கேடு செய்தாலும்,

    அறிவுடையோர்

    அவரறியச் சினம் கொள்ளார்..

     

    அவரை வெல்லும்

    காலம் பார்த்து

    அப்போதுதான் சினம் கொள்வர்…!

     

    குறும்பாவில்…

     

    பகைவரின் தவறுகண்டு கோபம்கொள்ளாமல்,                    

    அவரை வெல்லும் காலம்பார்த்துக்    

    கோபத்தைக் காட்டுவர் அறிவுடையோர்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    எதிரி செய்யும் கேடுகண்டே

         எடுத்த வுடனே அவரறிய

    எதிர்த்தே சினமதைக் காட்டாரே

         ஏற்றம் மிக்க அறிவுடையோர்,

    பதிலா யவரும் சினம்கொள்வார்

         பகைவரை வெல்லும் காலமதை

    மதியா லறிந்தே யவர்பகையை

         முடிக்கச் செல்லும் போதினிலே…!

     

    லிமரைக்கூ…

     

    பகைவரறியக் காட்டாத சினத்தை,          

    அறிவுடையோர் காட்டுவர் தெரிந்தபின்

    பகைவரைவெல்ல ஏற்ற தினத்தை…!

     

    கிராமிய பாணியில்…

     

    செய்யணும் செய்யணும்

    காலம்பாத்துக் காரியம்செய்யணும்,

    சரியான

    காலம்பாத்துக் காரியம்செய்யணும்..

     

    எதிரி செய்யிற

    எடஞ்சலப்பாத்து அவரறிய

    அறிவுள்ளவன் ஒடனே

    கோவத்தக் காட்டமாட்டான்..

     

    எதிரிய அழிக்க

    சரியான நேரம்பாத்து

    அப்பதான் காட்டுவான்

    அவனோட கோவத்த..

     

    அதுனால

    செய்யணும் செய்யணும்

    காலம்பாத்துக் காரியம்செய்யணும்,

    சரியான

    காலம்பாத்துக் காரியம்செய்யணும்…!

     

    செண்பக ஜெகதீசன்…

    Share
  • இரட்டைக் காப்பியங்கள் காட்டும் கனவுகளும் நம்பிக்கைகளும்

      -த.அமுதஜோதி                           

     மனித வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளைக் கற்பனை கலந்த சுவையோடு கூறுபவை காப்பியங்கள். இக்காப்பியங்களில் வரும் கனவுகளும் நம்பிக்கைகளும் மக்கள் சமுதாயத்தில் காலங்காலமாக நடைபெற்று வரும் வழக்கமாக உள்ளது. இவை அவர்களது வாழ்வியலின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. இத்தகைய கனவு மற்றும் நம்பிக்கைகள் இன்றும் மக்களின் வாழ்வில் இடம்பெறும் பாங்கினை காண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

     கனவுகள்

    உடல் துயின்றாலும் உள்ளம் துயில்வதில்லை. ஆழ்ந்த  உறக்கமில்லாத நிலையில் மனத்திரையில் தோன்றும் காட்சி தான் கனவு. மானிட வாழ்க்கையில் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். மனிதனின் எண்ணத்தில் உயிர்த்தெழும் கனவுகள், உள்ள உணர்வுகளைப் பிரதிபலித்துக் காட்டுகின்றன. எதிர்கால விழைவுகளையும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றன.

    கனவு சிலருக்குப் பித்த நோயாலும், உண்ட உணவு செரிக்காமையாலும் வரக் கூடும். இது விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் இடையில் உணர்வு தோய்கிறபோது உண்டாகும். அடிமனத்தில் தோய்ந்த எண்ணங்களும் எண்ணங்களின் விளைவுகளும் இடைவிடாத நினைவுகளும்  கனவுகளாக வரும் என்பர் ச.தண்டபாணி தேசிகர்.

    கனவுகளை நல்லகனவு, கெட்ட கனவு எனவும் பகற் கனவு, இரவுக்கனவு எனவும் பிரிப்பர். மக்களுக்கு நன்மையோ, தீமையோ வருவது கனவு மூலம் தெரிந்துவிடும். என்று நம்புகின்றனர்.

    கனவு-விளக்கம்

    கனவு என்ற சொல்லின் வேர்ச்சொல் கனாகாணுதல் என்பதாகும். கனவு பற்றித் தொல்காப்பியர்,

    கனவும் உரித்தால் அவ்விடத்தான                      (தொல்,பொருள்,நூ-195)

    நாணல் துஞ்ச லரற்றுக் கனவெனாஅ   (தொல், பொருள்,நூ-256)

    கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்    (தொல்,பொருள்,நூ-266)

    எனும் நூற்பாக்களில் கூறியுள்ளார். இதன் மூலம் தொல்காப்பியர் காலம் தொட்டு  கனவு பற்றிய சிந்தனை இருந்தமையை உணர முடிகின்றது.

    சிலம்பில் கனவுகள்

    சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கனவு, கோவலனின் கனவு, பாண்டிமாதேவியின் கனவு  என மூன்று வகை கனவுகள் கூறப்பட்டுள்ளன. இக்கனவுகள் பின்வரும் நிகழ்வுகளை முன்  உணர்த்திய  உளவியல் விருப்பங்கள் மற்றும் நிமித்தங்கள் ஆகும். பழங்காலப் புராணங்களிலும்  காவியங்களிலும் சரித்திர நாயகர்களின் கனவுகளைப் பற்றியும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் எழுதியுள்ளனர். பெரும்பாலும் கனவுகள் எதிர்காலத்தைப் பற்றியே வருவதுண்டு. கனவானது நல்ல செய்திகளைக் கூறுவதை விட எதிர்காலத்தில் நடக்க கூடிய தீமையை உணர்த்துகின்றது. இதைப்போன்ற கனவுகள் எச்சரிக்கை ஊட்டுவதாக அமைகின்றன.

    கண்ணகியின் கனவு

    சிலம்பில் கண்ணகியின் கனவு எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதாக அமைகின்றது. ஆகையால் இக்கனவை எச்சரிக்கைக் கனவாகவும் ஏதோ ஒரு குறியீட்டை  மையமாக வைத்து அமைந்ததாகவும் கூறலாம். கண்ணகி தோழி தேவந்தியிடம் தான் கண்ட கனவினைப்  பற்றிக் கூறும்பொழுது

    கடுக்கும்  என்நெஞ்சம் கனவினால்  (சிலம்பு,9-4)

    என்று அச்சத்துடனே  ஆரம்பிக்கின்றாள். இதன் மூலம் கனவு  அச்சத்தை ஏற்படுத்தும் என்ற உளவியல் கருத்து இங்கு கூறப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. கோவலனுக்கு எதிர்காலத்தில் தீங்கு வரப்போகிறது என்றும் புகாரை விட்டு வேறு ஊருக்குச் சென்று  அங்கு அரசன் முன் வழக்குரைப்பதாகவும் கனவு கண்டதாக கூறுவதனை ,

    …..  இடுதேள் இட்டு  என்தன்  மேல்
    கோவலற்கு உற்றது ஓர்தீங்கு என்று  அதுகேட்டுக்
    காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்     (சிலம்பு,9-48-50)

    எனும் பாடலடிகள் மூலம் அறியமுடிகின்றது.

    கோவலனுக்குப் பின்னர் நிகழப் போகிற நிகழ்வை முன்கூட்டியே கனவின் மூலம் உணர்ந்து தன் தோழியிடம் கூறுகின்றாள்.  கண்ணகியின் கனவு நிகழ்ந்த பிறகு தேவந்தி, வாழ்த்துக் காதையில்,

    செய்தவம் இல்லாதேன்
    தீக்கனாக் கேட்டநாள் எய்த உணராதிருந்தேன் (சிலம்பு ,29-5)

    என்று கூறிப் புலம்புகிறாள். இதன் மூலம்  காணும் கனவுகள் பலிக்கும் என்ற உண்மையை இளங்கோவடிகள் எடுத்தியம்பியுள்ளார். எனும் உண்மையை அறிய இயல்கின்றது.

    கோவலன் கனவு

    கோவலன் கனவைக் குறியீட்டுக் கனவாகவும், பின் வரக்கூடியதை முன்பே கூறுவதாகவும் கொள்ளலாம். கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து வந்த சமயத்தில்  தான் கண்ட கனவு பற்றி மாடல மறையோனிடம்,

    மாமலர் வாளிவறு நிலத்து எறிந்து
    காமக் கடவுள் கையற்று ஏங்க    (சிலம்பு,15  101-102)

    என்று கூறுகின்றான். இக்கனவு மூலம் கோவலன் மாதவியை  விட்டுப் பிரிந்து வந்தமையால் காமக்கடவுள் கையற்று ஏங்கி அழுவதாகவும்  தன் வாழ்வின் வீழ்வுக்கு காமமே காரணம் என்றும் கருதுவதாக அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. கோவலன் மாதவியோடு ஊடல் கொண்டதும், மதுரைக்குப் புறப்பட்டதும் புகாரில் துன்பம் நேரும் என்ற பயத்தின் காரணமாகவே என்பதைப் புலியூர்க் கேசிகன் தரும் உரை விளக்கத்தால் அறியலாம்.

    கோவலனுக்கு எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியை முன்கூட்டியே கனவில் உணர்த்துவதாக அமைந்திருப்பதனை,

    கூறைக் கோள் பட்டுக் கோட்டுமா ஊரவும்
    அணித்தகு புரிகுழை ஆயிழை தன்னொடும்
    பிணிப்பு அறுத்தோர்  தம் பெற்றி எய்தவும்  (சிலம்பு,15.98-100)

    எனும் பாடலடிகள் வாயிலாக உணர முடிகின்றது. கோவலன் ஆடை பிறரால் பறிக்கப்பட்ட நிகழ்ச்சியின் மூலம்  அவன் மீது பொய்க்குற்றம் சுமத்தப்படும் என்பதையும், எருமைக் கடாவின் மீது ஊர்ந்து செல்வதின் மூலம் எமனின் வாகனம் எருமை என்பதையும், கோவலன் அவமானப்பட்டு இறக்கப் போகிறான்  என்பதையும்  இக்கனவு நிகழ்ச்சி எடுத்தியம்புகின்றது. மேலும் கோட்டுமா ஊரவும்” என்று கனவில் கொம்பு வைத்த பன்றி வந்ததாகவும் கூறுகின்றான்.

    இவ்வாறு கனவில் பன்றி வந்தால் அரசனால் ஆபத்து உண்டாகும் என்று கனா நூல் கூறுகின்றது. அதேபோல்  பாண்டிய மன்னனால் கோவலனுக்கு ஆபத்து உண்டாகின்றது. இக்கனவு நிகழ்வைப் பெரிதுபடுத்தாமல் மதரைக்குச் சென்ற கோவலன்  கொலையுண்டான். இதன் மூலம்  கனவில் நிகழும் நிகழ்வுகள் எதிர் காலம் பற்றிய பயத்தை மக்கள் மனதில் விதைத்துள்ளது  என்பது தெரியவருகின்றது.

    கோப்பெருந்தேவியின் கனவு

    கோவலன் கொலையுண்ட அடுத்த நாள் பல தீய சகுனங்கள் நடப்பது போல ஒரு தீக்கனவு காண்கிறாள் கோப்பெருந்தேவி. வெண்கொற்றக்குடை கீழே விழுதல், கடைமணியானது இடைவிடாது ஒலி எழுப்புதல், திசைகள் எங்கும் அதிர்ச்சி,  ஞாயிற்றை இருள் விழுங்குதல் போன்ற பல்வேறு சகுனங்கள் நடைபெறுவதாகத் தோழியிடம்  அரசி கூறுகிறாள்.

    இக்கனவின் மூலம் பாண்டியனுக்கும் மதுரை நகரத்திற்கும் ஏதோ தீங்கு நடைப்பெறப் போகிறது என்பதை இளங்கோவடிகள் குறிப்பால் உணர்த்தியுள்ளமையை உணரமுடிகிறது. பாண்டிமாதேவியின் கனவு இயற்கைக்கு மறுதலையான நிகழ்ச்சிகளால் தீய நிமித்தங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

    வெண்கொற்றக் குடையோடு கோல்விழுந்து கடைமணி ஓசை எழுப்புவது- பாண்டிய மன்னனின் அரசாட்சிக்கு வருகின்ற தீமையை முன்கூட்டியே உணர்த்துவதாக அமைந்துள்ளது. கதிரை இருள் விழுங்கல் என்பது-பாண்டிமாதேவியின் நிலையை உணர்த்துவதாகக் கொள்ளலாம். திசை அதிர்தல், பகலில் விண்மீன் விழல், வானவில் இரவில் தெரிதல் ஆகியவை இயற்கையின் மாற்றங்களாகி நாட்டிற்கு வரும் துயரையும், நகருக்கு வரும் அழிவையும் சுட்டுவனவாகக் கருதப்படுகிறது.

    இக்கனவை இளங்கோவடிகள் கருப்பம் என்று கூறி மறுபடியும் தந்திருப்பதால், முழுக்க முழுக்க தீயநிமித்ததைக் குறிப்பதாகும். அரசு உடனடியாக விழப்போகிறது என்பதை இந்நிமித்தங்கள் வழியாக உணர்த்தியுள்ளார்.

    இவ்வாறு மூன்று கனவுகளும் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை விளக்கிக் காட்டுவனவாக  அமைந்துள்ளன. இன்றும் கனவுகள் பற்றிய நம்பிக்கை  மக்களிடையே வழக்கத்தில் உள்ளன. கனவில் நல்லவை நிகழக் கண்டால் தீங்கு நிகழும் எனவும், தீயவைக் கண்டால் நல்லது நடக்கும் எனவும் கூறிவருகின்றனர்.

    நம்பிக்கைகள்

     மக்கள் சமுதாயத்தில் ஒவ்வொரு இனமும் தனக்கெனச் சில பழக்க வழக்கங்களையும்,  நம்பிக்கைகளையும் கொண்டுள்ளன. இன்றைய அறிவியல் உலகில், பழந்தமிழ் மக்களின் நம்பிக்கைகள் அறிவுக்குப்  பொருந்தாதனவாகத் தோன்றலாம். எனினும் ஒரு நாட்டின் வரலாற்றில் இத்தகைய நம்பிக்கைகள் பல அவர்களின் வாழ்வோடு இரண்டறப் பின்னிப்பிணைந்து  கிடக்கின்றன  எனும் உண்மையை  மறுக்க இயலாது.

    நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் பண்பாட்டு வளர்ச்சியின்  படிக்கற்கள் எனப்படுகின்றன. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே  நம்பிக்கைகள் என்பர்.

    இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை  உணராத பொழுதும், மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத பொழுதும் மனித மனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவைகளே நம்பிக்கைகளாக  உருவாகின்றன.

    நம்பிக்கைகள்  காலம் காலமாக ஒரு தலைமுறையினடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்குப் பரவி வருகின்றன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரைப் பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன. நம்பிக்கைகளே மனித வாழ்வினை  இயக்குகின்றன. என்ற வகையில் காப்பியங்களில்  இந்நம்பிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

    தொல்காப்பியர் காலம் முதல் நல்ல சகுனம் பார்த்தல் நல்லச் சொற்களைக்  கேட்டபின்பு  போருக்குச் செல்லுதல் ஆகிய நம்பிக்கைகள் வழக்கில்  இருந்தன என்பதை,

    படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி  (தொல்,பொருள்,-61)

    எனும் நூற்பா வழிஅறியலாம்.  போருக்குச் செல்வதற்கு வீரர்கள் வெட்சி மாலையை அணிந்து கொண்டு தயராகும் போது காரி எனும் பறவை ஒலி எழுப்பினால் அது நல்ல சகுனமாகக் கருதப்பட்டது என்பதை,

    வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
    கட்சியுள் காரி யெழும்          (புறப்.வெட்சி-3)

    எனும் பாடலடிகளால் அறியலாம். பண்டைக்  காலத்தில்  காட்டிடையே மக்கள்  செல்லும்பொழுது ஆறலை கள்வர் மிகுந்த தொல்லை கொடுத்துக் கொண்டேயிருப்பர். ஆறலை  கள்வர்  நடமாட்டத்தைக் “கணத்துள்” என்ற பறவை  சத்தம் எழுப்பி மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த  செய்தியை  சங்க இலக்கியத்தில்

    ஆற்றயலிருந்த இருந்தோட் டஞ்சிறை
    நெடுங்காற்  கணத்துள் ஆளறி வுறீஇ
    ஆறு செல் வம்பலர்  படைதலை பெயர்த்து  (குறுந்,-350)

    எனும் குறுந்தொகைப் பாடலடிகள்  மூலம் அறியலாம்.

    கூகை அலறினால் சாவு வரும்  என்ற நம்பிக்கை பண்டைத் தமிழரிடையேயும்  இன்றும் தமிழகத்தில் நிலவி வருவதனை அறியலாம். இதனைப் புறநானூறு                அஞ்சுவரு குராஅல் குரலுந் தூற்றும் (புறம்-280)

    எனும் பாடலடி மூலம் எடுத்தியம்புகின்றது. காகம் கத்தினால் விருந்தினர் வருவார் என்பது அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழரிடையே நிலவி  வரும் நம்பிக்கையாகும். இதனை,

    மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
    அன்புடை  மரபின் கிளையோ டார   (குறுந்-250)

    எனும் குறுந்தொகைப் பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வாறு பழந்தமிழர்களின்  நம்பிக்கைகளைத்  தொல்காப்பியர் காலம் முதல் சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது. இரட்டைக்காப்பியங்களிலும் பல நம்பிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அந்நம்பிக்கைகளை  இன்றும் மக்கள்  கடைப்பிடித்து வருகின்றனர்.

    தெய்வம் உறுதல்

    தெய்வம் உறுதல் என்பது  குலதெய்வத்திற்கு படையலிட்டுப் பூசை  செய்யும் பொழுது ஏதேனும் செய்ய வேண்டிய முறைகளை மறந்து விட்டால் அக்குலத்தில் உள்ள வயதில் மூத்தப் பெண்ணின் மீது தெய்வம் வந்து  அக்குறையை தீர்க்கும் பொருட்டு தெய்வமுற்று கூறுதல் ஆகும். இதனை அருள் கூறுதல் என்றும் சாமியாடுதல் என்றும் கூறுவர். அவ்வகையில் சிலப்பதிகார வேட்டுவவரியில் மறவர் குலத்தில் பிறந்தப் பெண், அக்குலத்தின் நேர்த்திக் கடனை  தீர்க்கும் பொருட்டு தெய்வம்  உற்றனள்.

    அவள் உடம்பின் மயிர்கள் குத்திட்டு நின்றன. கைகளை அகல எடுத்து மேலே உயர்த்தினாள். கானவர் வியந்து நின்றனர். அவ்வூர் நடுவிலே, அவர்கள் கூட்டுணவு உண்ணும் ஊர்மன்றம் இருக்கும். அம்மன்றத்தில் அவள் அடிபெயர்த்து வைத்து தெய்வம் உற்றவளாகி வெறியாடினாள் . பகைவர்களின் ஊர் ஆரவாரம் மிகுந்துள்ளது. ஆநிரைகள் திரண்டுள்ளன. வலிய வில்லினை உடைய இம்மன்றமோ பாழ்பட்டு விட்டது. மறக்குடியில் வழிப்பறியால் வளம் ஏதும் வரவில்லை. அறக்குடியினரைப் போல் யாவரும்  உணவு மறந்து செயலிழந்து அடங்கினர்.

    கலையமர் செல்வி கடன்உணின் அல்லது
    சிலையமர் வென்றி கொடுப்போர் அல்லாள்
    மட்டுஉண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்
    கட்டுஉண் மாக்கள் கடந்தரும்     (சிலம்பு,12,  16-19)

    என்று தெய்வமுற்றப் பெண் முழங்கினாள். இதன் மூலம் கொற்றவைக்குத் தரவேண்டிய நேர்த்திக் கடனை முறைப்படி தாருங்கள்  என்று கூறியதை  அறிய முடிகின்றது. இன்றும் இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது. குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யும் பொழுது இவ்வாறு  சாமியாடுவதைக் காணமுடிகின்றது. மக்கள் காலங்காலமாக உணர்வாலும் செயலாலும் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உணர இயல்கின்றது.

    கண்துடித்தல்

    கண்துடித்தல், பல்லி கத்துதல் போன்றவைகளின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. உடம்பிலுள்ள ஒரு பகுதி  துடிப்பது கொண்டு எதிர்காலத்தைக் கணிப்பது உண்டு. பெண்களுக்கு வலக் கண் துடிப்பது நல்லது  என எட்கர் தெர்ஸ்டன் கூறுவதும்  இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்திர விழாவின் போது கண்ணகியின் கருங் கண்ணும்  மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை மறைத்துத் தத்தம் எண்ணத்தை உள் ஒளிக்க முயன்று நீர் வடித்தன.  கண்ணகிக்கு கோவலனை பிரிந்த துயரால் இடக் கண் துடித்தது. மாதவிக்கு ஆனந்தம் மிகுதியால்  வலக் கண் துடித்தது. என்பதை

                                கண்ணகி கருங்கண்ணும் ,மாதவி செங்கணும்
                                உள்நிறை கரந்து ,அகத்து ஒளித்து, நீர் உகுத்தன
                                எண்ணுமுறை,இடத்தினும் வலத்தினும் துடித்தன
                                விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்து  (சிலம்பு,5. 236-240)

    எனும் பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வாறே சீவகனின் தாய் விசயை, விடியற்காலையில் கனவொன்று கண்டேன். என் வலக்கண்ணும் துடிக்கின்றது.  பல்லியும் நல்ல இடத்தில் கத்துகின்றது .என் மகன் வருவானோ என்று எண்ணும் போதே சீவகன் சென்று நின்றான். என்று கூறப்பட்டிருப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கைகளை அறிய முடிகின்றது.

    பேய் நம்பிக்கை

    குழந்தை பெற்ற பெண்கள், ஈன்ற பத்தாவது நாளில் பெண்கள் சூழச் சென்று, இரவிலே ஈன்ற துன்பம் தீரக் குளத்து நீரில் நீராடுவது மரபு. அப்போது அவர்களை பேய்தீண்டாதிருக்க வேப்பிலையையும் வெண்சிறுகடுகையும் தடவிக்கொண்டு  செல்வர் என்பதை,

                                அரவாய்க்  கடிப்பகை, ஐயவிக் கடிப்பகை
                                விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
                                புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கம்
                                தீர்வினை மகளிர் குளனாடு அரவமும்   (மணி,7:  73-79)

    எனும் பாடலடிகள் வழி அறிய முடிகின்றது.

    இதன்மூலம் குழந்தை பெற்ற பெண்களைப் பேய் தாக்கும்  என்ற உண்மையை  உணரமுடிகின்றது. இன்றும்  குழந்தைபெற்ற  மகளிர் மற்றும் பூப்படைந்த  பெண்குழந்தைகள் வெளியில் செல்லும்  பொழுது கையில் வேப்பிலையைக்  கொண்டு செல்வதை நாம் காணலாம்; இச்செய்திகளின் மூலம்  பேய் பற்றிய நம்பிக்கை காலங்காலமாக இருந்து வருவதனைக்  காணமுடிகின்றது.

    தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை இக்கனவுகளும் நம்பிக்கைகளும் மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருப்பதனைக்  காண முடிகின்றது. நாம் நினைக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிவருகின்றன. ஆகவே எதிர்மறையான எண்ணங்களை எண்ண வேண்டாம். நல்ல எண்ணங்களையே எண்ண வேண்டும் எனும் சிந்தனையை மக்களிடம் விதைத்துள்ளது காப்பியங்கள். குழந்தைபெற்ற மகளிரையும் பூப்படைந்த பெண் குழந்தைகளையும் தொற்று நோய்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள கிருமிநாசினியாக வெண்சிறு கடுகையும் வேப்பிலையையும் நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்ற அறிவியல் உண்மையை அறியமுடிகின்றது.

    துணைநூற் பட்டியல்

    1. சிலப்பதிகாரம் – புலியூர்க்கேசிகன்
    2. மணிமேகலை – புலியூர்க்கேசிகன்
    3. தொல்காப்பியம் – இளம்பூரணர்
    4. திருக்குறள் உரை வளம் காமத்துப்பால் – ச. தண்டபாணிதேசிகர்
    5. குறுந்தொகை – புலியூர்க்கேசிகன்
    6. புறநானூறு – புலியூர்க்கேசிகன்

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,   தஞ்சாவூர்.

     

     

    Share