Blog

  • ஜெய மங்களா! சுப மங்களா!

    ஜெய மங்களா! சுப மங்களா!

    வரலட்சுமி பூஜையான இன்று திருமகளை வரவேற்றுக் கொண்டாடுங்கள். ‘ஜெய மங்களா சுப மங்களா’ என்ற இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (6)

    கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் . . . (6)

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    கவியரசர் கண்ணதாசன் எனும் காவியப் பெருங்கடலினுள் விழுந்து நீச்சலடிப்பது என்பது உள்ளத்தை எப்போதும் ஆனந்தமயமாக வைத்திருக்கக்கூடிய செயலாகும்.

    தமிழர்கள் நெஞ்சங்களிலெல்லாம் தனக்கென ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டவர் கவியரசர் என்றால் அது மிகையாகாது.

    தன்னுள்ளத்தில் விழுந்த காலத்தின் வடுக்களை கவிதை வரிகளாக்கினார். திரைத்துறை விற்பன்னர்கள் கொடுத்த கதைகளுக்கும் காட்சிகளுக்கும் ஏற்ப தனது அனுபவங்களின் மூலம் தான் பெற்ற வாழ்வின் ஞானத்தை அக்காட்சிகளுக்கேற்ற பாடல் வரிகளாக்கினார்.

    கவியரசர் ஆன்மீகத்தை ஆழமாகப் புரிந்து கொண்டவர். அனைத்து மதங்களின் சாரத்தையும் அறிந்து கொண்டவர்.

    வாழ்க்கையெனும் ஆழியிலே நாத்திக அலைகளைக் கடந்து அமைதியான பகுதியான ஆத்திக பரப்பினிலே மிதந்தவர். கடந்து வந்த பாதையின் அனுபவங்கள் அனைத்தையும் அழகக உள்வாங்கிக் கொண்டவர்.

    இந்தப் பதிவிலே என்றும் என் மனதில் ஆழப்பதிந்த ஒரு பாடலைப் பகுத்துப் பார்த்து அதை எந்தக் கோணத்தில் அவர் பார்த்து எழுதியிருப்பார் என்பதை எனது கோணத்திலே பார்க்கத் தலைப்படுகிறேன்.

    மெல்லிசை மன்னரான எம்.எஸ்.வி அவர்கள் நடத்தும் கச்சேரிகளில் முதல் பாடலாக ஒலிக்க வேண்டும் என்று கவியரசரே விரும்பிய,

    “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” என்று ஒலிக்கும் இனிமையான பாடலே அது.

    ஒரு பாடலுக்குள் எத்தனை விஷயங்களைப் புகுத்தலாம் என்பதற்கு இந்த ஒரு பாடலே கவியரசரின் ஆற்றலுக்குச் சான்றாக விளங்குகிறது என்று சொல்லலாம்.

    கண்ணனின் தாசனல்லவா கண்ணதாசன் அவர் கண்ணனைப் பற்றிப் பாடாத பொழுதுகள் இல்லையென்றே கூறிவிடலாம். தத்துவப் பாடலாகட்டும், பக்திப் பாடலாகட்டும், காதல் பாடலாகட்டும் அனைத்தினுள்ளும் கண்ணனைப் புதையல் போன்று புதைத்து வைத்திருப்பார் கவியரசர்.

    மேலும் கண்ணனைப் பற்றிப் பாட வேண்டும் என்று எண்ணுகிறார் கவியரசர். அவர் நினைவில் நிறைந்திருக்கும் கண்ணனின் கைகளில் எப்போதும் தவழ்ந்திருப்பது என்ன ?

    புல்லாங்குழல் அல்லவா ?

    துணைக்கு அழைக்கிறார் புல்லாங்குழலை. கண்ணனின் கைகளில், உதடுகளில், இடுப்பில் என்று அந்த மாயக் கண்ணனுடன் அனுதினமும் இணைந்திருப்பது புல்லாங்குழல் அல்லவா ?

    அந்தப் புல்லாங்குழலையே கண்ணன் அதாவது தேவகியின் மைந்தன் புருஷோத்தமன் என்று புகழப்படும் கண்ணனைப் பாடும்படி பணிக்கிறார் கவியரசர்.

    புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்

    புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

    என்கிறார் கவியரசர்.

    புல்லாங்குழலைத் தொட்டவர் ஆன்மீக வித்தகராயிற்றே கங்கைக்கரைத் தோட்டத்தை விட்டு விடுவாரா என்ன ?

    புல்லாங்குழலைக் கொடுத்த மூங்கில்களை அழைத்து பாட வைத்து விடலாம் ஆனால் கங்கைக்கரைத் தோட்டத்தை எப்படி இங்கே கொண்௶டு வர முடியும் ?

    சிந்திக்கிறார் கவியரசர். உடனே அவருக்கு வந்து விடுகிறது கண்ணன் மாகாபாரதத்திலே கங்கைக்கரையில் நிகழ்த்திய லீலைகளில் ஒன்று.

    அது என்ன என்கிறீர்களா?

    வாருங்கள் கொஞ்சம் மகாபாரதத்துள் செல்வோம்.

    கங்கையிலே பிராமணகோடி என்று ஒரு இடம். அந்த இடத்திலே ஆழம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அவ்விடத்தில் தான் பாண்டவர்களில் தருமனுக்கு அடுத்தவனான பீமன் குதித்துக் குளிப்பது வழக்கம்.

    தனக்குத் தலையிடியாக இருக்கும் பீமனை எப்படி ஒழிப்பது என்று தவித்துக் கொண்டிருந்த துரியோதனன் அவனை அழிப்பதற்கு ஒரு அருமையான திட்டம் தீட்டினான்.

    பீமன் வழமையாகக் குதிக்கும் இடத்தில் நீருக்கடியில் வெளியே காணமுடியாதபடி நுனிகளில் கடுமையன விஷம் பூசப்பட்ட ஈட்டிகளை நாட்டி வைத்தான்.

    பீமனும் குளிக்க வந்தான் அப்போது அங்கே வந்த கண்ணன் ” பீமா நீ குதிக்கப் போகும் இடத்தைப் பார் அங்கே சில வண்டுகள் மொய்க்கின்றனவே அவைகளின் மீது பாய்ந்து அவைகளைக் கொல்லாது அவற்றைத் தாண்டிக் குதித்து விடு “

    துரியோதனன் திட்டம் தவிடு பொடியாகி விட்டது. மனதில் இது திரைப்படம் போல ஓட விடுவாரா எமது கவியரசர் ?

    கொடுக்கிறார் அடுத்த வரிகளைப் பாருங்கள்

    வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே – எங்கள்

    மதுசூதனன் புகழ் பாடுங்களேன்

    என்கிறார்.

    சரி கண்ணனோடு கங்கைக்கரைத் தோட்டத்தை இணைத்து விட்டோம் இனி அடுத்து எனச் சிந்தனைச் சுழல்கள் வட்டமிட ,

    “ஓ கண்ணனின் திருமேனியை முதலில் தரிசித்தது யார் ? மேகங்களல்லவா ? “

    சரி அவைகளைக் கொண்டு என்ன செய்விக்கப் போகிறார் எங்கள் கவிக்குயவர்.

    பெருமதிப்பிற்குரியவர்கள் எங்காவது வருகிறார்கள் என்றால் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர்களின் மீது பன்னீர் தெளித்து மரியாதை செய்யும் வழக்கத்தை நினைவில் கொள்கிறார்.

    சாதாரண மனிதர்களுக்கே பன்னீர்த்துளிகள் தெளிக்கப்பட்டால் உலகத்தின் உதாரணமாகத் திகழப்போகும் அக்குழந்தை கண்ணனை எப்படி வரவேற்கப் போகிறதாம்.

    மேகங்கள் கரைந்து பன்னீர்த்துளிகளாய் பரந்தாமன் மீது விழுகிறது என்கிறார் எங்கள் வித்தகக் கவி.

    பன்னீர் மலர்சொரியும் மேகங்களே – எங்கள்

    பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்

    என்று சித்தரிக்கிறார் வார்த்தை வித்தகர்.

    இதுவரையும் புகழ் பாடுங்களேன் என்றுதானே வரிகளை யாத்திருந்தார். இப்போது என்ன திடீரென மெய்யழகைப் பாடுங்களேன் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா ?

    கண்ணன் குழந்தையாகச் சிறையில் பிறந்ததும் தந்தை வாசுதேவனால் வெளியே எடுத்துச் செல்லப்படும்போது அக்குழந்தையின் மேனியழகை முதன் முதல் கண்ணுற்றது மேகங்கள் தானே ! அதனால் தான் மேகங்களை கண்ணனது மெய்யழகைப் பாடும்படி கேட்கிறார் போலும்.

    ஆசுகவியின் சிந்தையில் அடுத்து வருவது ராகங்கள். அதுவும் தென்கோடி ராகங்களை அழைக்கிறார். என்ன இது ? வடக்கே மதுராவில் பிறந்த கண்ணனைப் பாட தென்கோடி ராகங்களா ? சிந்திக்க வைக்கிறார் கவியரசர்.

    கண்ணனையே கணவனாக அடைய வேண்டி பாசுரங்கள் பாடிய ஆண்டாள், ஆதிசங்கரர்,ராமானுஜர்,வேதாந்த தேசிகர் என்போர் மட்டுமல்ல கண்ணனையே எண்ணிப் பல பாடல்கள் பாடிய மகாகவி பாரதியார் வரை அனைவரையும் ஈந்தது தென்திசை தானே !

    தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே – எங்கள்

    ஶஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்

    என்று அழகுற வரிகளை அள்ளி வீசுகிறார் எங்கள் கவியரசர்.

    சரி ராகங்களை அழைத்து வந்து விட்டார். அவை கச்சேரியை ஆரம்பிக்க வேண்டாமா ?

    அவை எங்கிருந்து ஆரம்பிக்கப் போகின்றன? ஓ அவைகளும் கண்ணனின் குழந்தைப் பருவத்திலிருந்துதான் ஆர்ம்பிக்கின்றனவாம். அதுவும் அந்தக் குழந்தையாய் அவர் யாரைச் சித்தரிக்கின்றாரென்றால் குருவாயூரில் இருந்து பக்தர்களை ரட்சிக்கும் குருவாயூரப்பனைச் சொல்கிறார்.

    அதுவும் கண்ணனை குருவாயூரில் தவழ்ந்தவன் என்று சொல்லாமல் தவழ்கின்றவன் அதாவது இன்றும் அருள் பாலித்துக் கொண்டிருப்பவன் என்கிறார்,

    குருவாயூரில் தவழ்ந்து ரட்சிக்கும் அதே கண்ணன் தானே மதுராவையும் ஆள்கின்ற மன்னனாகக் காட்சியளிக்கிறான் இல்லையா ? அதை எப்படி இங்கே இணைக்கிறார் பாருங்கள்,

    குருவாயூர் தன்னில் அவன்

    தவழ்கின்றவன்

    ஒரு கொடியோடு மதுராவை

    ஆள்கின்றவன்

    ஆகா, இதுதான் கவியரசருக்கேயுரித்தான தனி முத்திரை எனலாம்.

    அதுசரி ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் என்கிறார் ஏன் தெரியுமா? கண்ணனின் அரசாட்சியில் அவனுக்கு அங்கு எதிர்க்கட்சியே கிடையாது. மாற்றுக்கொடியில்லா மாநகரம். கன்ணன் எனும் அந்த மதுரகானம் இசைப்பவனின் மதுரத்தில் மயங்கி பேதமின்றி மக்கள் வாழ்கிறார்கள். என்கிறாரோ நம் கவியரசர் ?

    எல்லாவற்றையும் தன் கானத்துக்குள் வைத்தவருக்கு அடடே நாம் தரிசிக்கும் எங்கள் ஏழுமலையானின் உறைவிடத்தை உரைக்க வேண்டாமோ என்ற எண்ணம் வருகிறது போலும்.

    சரி மீண்டும் ஒரு சம்பவ சம்பாஷனைக்குள் நுழைவோம் வாருங்களேன், கண்ணா உன் அம்மாவான எனக்கு என் மகனின் திருமணம் ஒனறைக்கூட பார்க்க வாய்ப்பளிக்கவில்லையே என்றொரு குறையைக் கூறுகிறாள்.

    சரி கவலையை விடுங்கள் தாயே நான் கலியுகத்தில் ஸ்ரீனிவாசனாக அவதரிப்பேன் நீயே மறுபடியும் எனக்குத் தாயாக வருவாய் உன் முன்னிலையிலேயே நான் திருமணம் செய்து உன் குறையைப் போக்குகிறேன் என்பார்.

    ஸ்ரீனிவாசப் பெருமாளாக கன்ணனும் அவரது தாய் வகுளமாலிகையாக யசோதையும் வந்து ஸ்ரீனிவாசக் கலியாணத்தில் யசோதையின் குறையும் தீர்க்கப்பட்டு திருப்பதியில் ஏழுமலையானாக வாசம் செய்கிறார்.

    இதையெல்லாம் கவியரசரின் அழைப்பின் பேரில் வந்து பாடிக் கொன்டிருக்கும் ராகங்கள் அட ஸ்ரீரங்கத்தை விட்டு விடலாமா என்று எண்ணி விட்டன. விடுவாரா கவியரசர் ? விளையாடி விட்டார் போங்கள். இரண்டையும் இணைத்து அழகாய்த் ராகங்களின் பாகமாகத் தருகிறார்.

    திருவேங்கடத்தில் அவன்

    அருள்கின்றவன்

    அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி

    கொள்கின்றவன்

    ராகங்களை பெண்களாகத்தான் பார்ப்பது வழக்கம். அப்படியான சூழலில் தன்னுடைய உதவிக்கு அபயக்குரல் கொடுத்த பாஞ்சாலியைப் பற்றிக் கூறாமல் விட்டுவிடலாகாது என்பதால் அடுத்த வரி வந்து விழுகிறது.

    பாஞ்சாலி புகழ்காக்க தன் கை கொடுத்தான்

    என்று சூதாட்டத்தில் தம்மையே இழந்து பின்னர் பாஞ்சாலியை இழந்த பாண்டவர்களினால் காப்பாற்ற முடியாத பாஞ்சாலியைக் காக்க தன்கையைக் கொடுத்த கண்ணனின் புகழை அவ்வரிகள் உள்ளடக்குகின்றன.

    அது மட்டுமா ? அச்சம்பவமே போரின் ஆரம்பம் என்பதை சூசகமாகக் குறிப்பிடுவதற்கு ஏதுவாக பரந்தாமன் சங்கை எடுத்தான் என்று கூறுகிறார்.

    சங்கை என்பது இரண்டு வகையாக அர்த்தப்படுத்தப்படும். பகாப்பதமாக எடுத்தால் அது பயத்தையும், சந்தேகத்தையும் குறிக்கும். பகுபதமாக எடுத்தால் சங்கை எடுத்து முழக்கினான் என்று கொள்ளலாம்.

    பாஞ்சாலியின் பயத்தையும் , சந்தேகத்தையும் போக்கினான் கண்ணன் என்பதோடு போரின் ஆரம்பத்தை அறிவிக்கும் வகையில் சங்கை முழக்கினான் என்றும் பொருள்படக் கூடிய வகையில் அடுத்த வரிகள் அமைகின்றன.

    அன்று பாரதப்போர் முடிக்க

    சங்கை எடுத்தான்

    என்ன இது அடாவடித்தனமாக இருக்கிறதே துரியோதனின் நாட்டின் பகுதியைப் பறித்தல்லவா கண்ணன் பாண்டவர்களுக்கு கொடுத்தான் என்று எண்ணினால் அதற்கு கூட பதில் வருகிறது.

    என்ன என்கிறீர்களா ?

    பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக்

    கொடுத்தான்

    என்று கண்ணன் முறையற்ற செயல் ஒன்றும் செய்யவில்லை என்று அறிவித்தும் விடுகிறார்

    சரி இதுவெல்லாம் சரிதான் இத்தனை விடயங்களையும் கண்டு, கேட்டு, படித்தவர்களுக்காய் எதைக் கொடுத்தான் கண்ணதாசனின் கண்ணன் என்று பார்த்தால்,

    நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம்

    கொடுத்தான்

    என்று கூறி எமக்குக் கிடைத்ததுதான் அளப்பரிய பரிசு கண்ணனுக்கு பெரிய பாராட்டுப் பத்திரமே தந்து விடுகிறார்.

    கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீக அறிவியல் ஆழமானது என்பதைப் புரிந்து கொள்ளும் பயணத்தில் இது மற்றொரு மைல்கல்.

    அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை

    Share
  • மயிலை என்கிற மெட்ராஸ் என்கிற சென்னைப்பட்டினம் – வயது – 384

    மயிலை என்கிற மெட்ராஸ் என்கிற சென்னைப்பட்டினம் – வயது – 384

    பாஸ்கர்

    அறுபதுகளில் ஆரம்பித்து சென்னையை ரசித்து வருகிறேன். முதலில் எனக்கு அது மயிலாப்பூர். அப்புறம் அது மெட்ராஸ். இன்று எனக்கு சென்னை. அந்த பால்ய வயதில் எனக்கு ஊர் பற்றிய ஈர்ப்பு ஏதுமில்லை. சுற்றி வந்த தெருக்களும், குளங்களும், பூங்காக்களும், சினிமா கொட்டகையும், கொஞ்சம் பள்ளிக்கூடங்களும் தான் எனக்கு இந்த மண். ஒரு அரைக்கை வெள்ளை சட்டை, இடுப்பில் எப்போதுமே நிற்காத அரை டிராயர் (வீட்டில் நிஜார்) ஒரு சின்னப்பை தாண்டி உலகம் வேறில்லை.

    கொஞ்ச நாள் அம்புலிமாமா, பிறகு வளர்ந்த பின் முத்து காமிக்ஸ் என வாசிப்பு தொடர மெல்ல கல்கண்டுக்கு வந்தேன். படித்துகொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையை ஊட்டியது எது என தெரியவில்லை. ஒரு குக்கிரராமத்தில் பிறந்து இருந்தால் இவை எல்லாவற்றையும் நான் இழந்து இருக்கலாம். பெரிய குண்டுமணி பங்களா என அழைக்கப்படும் அந்த ஆபிரகாம் தெரு குடியிருப்பு என்னை சீராட்டி கொண்டாடியது. நான் அவர்களின் செல்லம். என்னை அய்யா என அழைத்த நேசமான மக்கள் இன்று யாரும் இல்லை. ப்ரைனோ பேபி பைல்வான் பாஸ்கர் என கொஞ்சிய தந்தை பற்றிய நினைவு இன்றும் பசுமை. அய்யா பையா என என்னை கொஞ்சிய தாயும் மனதில் நீங்காமல் இருக்கிறார். விவரம் புரியாத வயதில் கள்ளமும் கபடும் நிச்சயம் இருக்க முடியாது என்பதற்கு என் வாழ்க்கையே சாட்சி.

    அடிப்படையில் எங்கள் ஏழ்மை குடும்பம் எனக்கு பலம் தான். அது இல்லாமல் இருப்பின் என்னை நிறைய பேர் அண்டியிருக்காமல் இருக்க கூடும். எந்த பரிவுக்கும், பாசத்திற்கும் பின் ஒரு பரிதாபம் இருக்கவே செய்கிறது. இதை எல்லாம் நான் கடக்கவில்லை. அது என்னை கடந்தது. எத்தனையோ இரவுகள் பட்டினியுடன் கடந்து இருக்கிறேன். ஆனால் அன்புக்கூட்டத்தில் பசியின் வலி தெரியவில்லை. அண்டை வீட்டார் எங்கள் பசியை போக்க முயன்றார்கள். சிலர் துணி மணி கொடுத்தார்கள். கோவில் வாசலில் இலவச உணவுக்கு வரிசையில் நின்ற போது அவமானம் தெரியவில்லை. ஆனால் ஏன் பிறயோர் நிற்கவில்லை என கேள்வி மட்டும் எழுந்தது.

    ஆனால் வளர வளர பிம்பம் பெரிதாகிறது. பள்ளியில் மதிய உணவு யாருக்கு வேண்டும் என கேள்வி எழுந்த போது யாரும் எழுந்து நிற்கவில்லை. நான் மட்டும் எழுந்தேன். அந்த கூச்சம் பல நாள் என்னுள் இருந்தது. இதுவும் சென்னையின் கொடை என இப்போது சமாதானம் செய்து கொண்டாலும் அந்த வலியை மறக்க முடியவில்லை .

    எப்படியோ என்னுள் எழுந்த மொழி ஆசை தமிழ் தாண்டி ஆங்கிலத்திற்கும் சென்றது. படிப்பின் மீது ஈர்ப்பு இல்லை. பத்தாம் வகுப்பு பெயில். அப்பா பெல்ட்டால் அடித்தார். பிறகு அவரே மருந்தும் இட்டார். எந்த இன்னலிலும் யாரும் இந்த மயிலாப்பூரை விட்டு நகரவில்லை. அதற்கு நாதியும் இல்லை. எங்களுக்கு மெட்ராஸ் என்ற ஒரூ இடம் தனியாக இல்லை. இந்த இடம் தான் உலகம் என்றான பின் பெயரில் ஒன்றுமில்லை. இதனை இன்று வரை கெட்டியாக பிடித்து கொண்டு இருக்கிறேன். எங்கு சென்றாலும் இரவுப்பொழுது இந்த மண் தான். இது ஒரு கொள்ளும் புத்தி.

    சென்னையும் நானும் ஒன்றாகவே வளர்ந்தோம். அது இளமையாக இன்றும் இருக்கிறது. மூப்பு என்னை தழுவுகிறது. பார்க்கும் ஒவ்வொரு இடத்திற்கு பின்னும் ஒரு சரித்திரம் இருப்பது போல அவை எல்லாவற்றிலும் எனக்கு தனி நினைவுகள். என்னையும் தாங்கிய இந்த மண்ணையும் மக்களையும் தாண்டி எனக்கு வேறு உலகம் இல்லை. பிடித்துக்கொண்டே இருக்கும்போது நழுவும் காலம் போல மெல்ல பிடி தளருகிறது. நேசமும் வாஞ்சையும் இந்த மயிலை மீது தான். இது எனக்கு போதி மரம் போல ஒவ்வொரு நாளும் சென்னை புதிதாக பிறந்து கொண்டு இருக்கிறது.

    பெரும் வியப்பில் அதனை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இந்த உணர்வுக்கு எப்படி பெயரிட்டாலும் அதை அடைக்க முடியாது. ஒரு ஊரை, இடத்தை கவர்ந்து இருந்து மனசுக்குள் அதனை போஷிக்க முடியுமா? முடியும் என்பது எனது அனுபவம். இதற்கு காரணம் மயிலை என்கிற சென்னை. இந்த வானம் என்றும் எனக்கு கானம். இந்த தாகம் தீராகாதல். வாழ்க மயிலை, வாழ்க சென்னை.

    Share
  • குறளின் கதிர்களாய்…(465)

    குறளின் கதிர்களாய்…(465)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(465)

    அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
    பெற்றா னெடிதுய்க்கு மாறு.

    -திருக்குறள் – 943 (மருந்து)

    புதுக் கவிதையில்…

    உண்ட உணவு
    செரிமானம் ஆகியது
    தெரிந்து
    அடுத்து உண்பதை
    உடலின் தேவை
    அளவறிந்து உண்ணவேண்டும்,
    அதுவே
    இந்த உடம்பைப் பெற்றவன்
    அதனை
    நெடுங்காலம் கொண்டுசெல்லும்
    நல்வழியாகும்…!

    குறும்பாவில்…

    உண்டது செரித்ததை யறிந்து
    உண்பதை உடல் தேவையறிந்து உண்பதுடலை
    நெடுநாள் கொண்டுசெல்லும் வழியாகும்…!

    மரபுக் கவிதையில்…

    உண்ட உணவு செரித்ததையே
    உணர்ந்தே யறிந்து அதன்பின்னே
    உண்ணத் தொடங்கு முன்னாலே
    உடலின் தேவை தனையறிந்தே
    உண்ண லென்ப துயர்வாமே,
    உடலை நெடுநாள் கொண்டுசெல்லக்
    கண்ணும் கருத்தாய்ப் பேணிடவே
    கண்ட வழியே இதுதானே…!

    லிமரைக்கூ…

    உணவை யுண்ணு முன்னாலே
    உண்டது செரித்ததையும் உடல்தேவையும் அறிந்துண்டால்,
    உடல்நிலைக்கும் நெடுநாள் தன்னாலே…!

    கிராமிய பாணியில்…

    மருந்து மருந்து
    ஒணவே மருந்து,
    ஒடலு வலுவாயிருக்க
    ஒணவே மருந்து..

    மொதலுல தின்ன ஒணவு
    முழுசா செமிச்சாச்சாங்கிற
    வௌரந் தெரிஞ்சி
    ஒடல் தேவயயும் அறிஞ்சி
    அதுக்கேத்தாப்பில
    ஒணவு உண்டுவந்தா,
    அதுவே
    இந்த ஒடம்பு
    நெடுநாள் தெடமா
    நெலச்சிருக்க வழியாவும்..

    தெரிஞ்சிக்கோ,
    மருந்து மருந்து
    ஒணவே மருந்து,
    ஒடலு வலுவாயிருக்க
    ஒணவே மருந்து…!

    Share
  • ரஷ்யாவின் நிலவுத் தளவுளவி லூனா -25 பழுது ஏற்பட்டு நிலாத் தளத்தில் விழுந்து முறிந்தது

    ரஷ்யாவின் நிலவுத் தளவுளவி லூனா -25 பழுது ஏற்பட்டு நிலாத் தளத்தில் விழுந்து முறிந்தது

    2023 ஆகஸ்டு 11 ஆம் தேதி ரஷ்யா நிலவு நோக்கி ஏவிய லூனா -25 நிலா தளச் சிமிழ்.
     
    ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய விஞ்ஞானிகள் முயலும் முதல் விண்வெளித் திட்டம். நிலாவின் தென் துருவத்தில் லூனா-25 நிலாசிமிழ் தடம் வைக்க வேண்டும், இந்தியச் சந்திரயான்-3 அதே தென் துருவப் பரப்பில் தடம் வைப்பதற்கு முன்னர்.  
     
    நிலாவின் தென் துருவப் பகுதியில் தான் பேரளவு நீர்ப்பனிப் பாறைகள், எரிசக்தி மூலக்கூறுகள். தனிமங்கள், தாதுப் பொருட்கள் இருக்கலாம் என்று இந்தியா, ரஷ்யா போட்டி போட்டுக் கொண்டு முயல்கின்றன.  
     
    ரஷ்ய முன்னறிப்பு லூனா-25 விண்சிமிழ் 800 கி.கி.எடையுள்ள நிலாத்தளச் சிமிழில் பழுது ஏற்பட்டு எதிலோ மோதி, அதன் தொடர்பு அறுந்து போய் இருப்பிடம் தெரியாமல் போனது,
     
    இந்தியாவின் சந்திரயான்-3 தளவுளவி நிலவின் தென் துருவத்தில் 2023 ஆகஸ்டு 23 இல் மெதுவாக இறங்கி தடம் வைக்கும், அடுத்து அதிலிருந்து ஒரு தளவூர்தி நகர ஆரம்பிக்கும்; அது ஒரு வாரம் தவழ்ந்து நிலவின் தகவல் அனுப்பும் என்று இந்தியா திட்டமிட்டு  எதிர்பார்த்து உள்ளது.  
     
    3900 கி.கி. எடையுள்ள சந்திரயான்-3 விண்சிமிழ் தளவுளவி, தளவூர்தியில் 7 ஆய்வுக் கருவிகள் உள்ளன. ஏவிய பிறகு 40 நாட்கள் கழித்து, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தடம் வைக்கும். ரஷ்யன் லூனா-25 விண்தளச் சிமிழ் 7 நாட்களில் நிலவில் இறங்க டிசைன் செய்யப் பட்டது. 
    1. The Luna-25 craft blasted off from far-east Russia on August 11, 2023 was crash-landed on Moon BBC News
    Share
  • பெற்றுவிட்ட சுதந்திரத்தைப் பேணிவிடல் முக்கியமே !

    பெற்றுவிட்ட சுதந்திரத்தைப் பேணிவிடல் முக்கியமே !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    இன்னுயிரைப் பலர் ஈந்தார்
    ஈன்ற மண்ணை மீட்பதற்கு
    பல் கொடுமை அனுபவித்தார்
    பாரதத்தாய் துயர் களைய
    காந்தியெனும் மகான் வந்தார்
    கைப்பிடித்தார் அனைவரையும்
    சாந்தி சாந்தி என்று
    சத்தியத்தைத் தூக்கி நின்றார்  !

    கொள்ளை கொண்ட வெள்ளையர்
    குமுறிக்  கனல் கொப்பளித்தார்
    வெள்ளமாய்க் குருதி மண்ணில்
    பெருகிவிட வழி சமைத்தார்
    ஈரமின்றி உயிர் பறித்தார்
    இரக்கமதை மறந்து நின்றார்
    பாரத்தாய் துயர் அறியா
    பாதகராய் மாறி நின்றார்

    படைபலத்தைக் கொண்டு நின்றார்
    பணபலத்தைப் பெருக்கி நின்றார்
    பாதகர்கள் பல பேரைப்
    பக்கபலம் ஆக்கி நின்றார்
    பாரதத்தாய் படு துயரைப்
    பரிகாசம் செய்து நின்றார்
    கயவர் பலர் கைகோத்துக்
    கண்ணியத்தை மறந்து நின்றார்

    அடிமை கொண்ட வெள்ளையர்
    ஆணவத்தில் அமிழ்ந்து நின்றார்
    அசுரராய் உரு மாறி
    அழித்தொழித்து மகிழ்ந்தார்
    அவர் முன்னே வந்தார்
    அகிம்சையைக் கை எடுத்தார்
    ஆள வந்த வெள்ளையரை
    ஆட அவர் செய்திட்டார்

    ஆண்டவனின் அருள் பெற்ற
    அவரே நம்மண்ணல் காந்தி
    ஊதிவிட்டால் பறந்திடுவார்
    உலர்ந்த உடல் கொண்டவவர்
    ஆன்மீக பலம் மிக்கார்
    அகிம்சையினைத் துணை கொண்டார்
    பலங் கொண்ட வெள்ளையரைப்
    பாரதம் விட்டோடச் செய்தார்

    ஏறி நின்ற வெள்ளையரை
    ஏற்றிவிட்டார் கப்பலிலே
    மாறி அவர் மனமாற
    வைத்திட்டார் காந்தி மகான்
    ஆகஸ்டு பதின் ஐந்தில்
    அனைவருமே வியப்படைந்தார்
    அகிம்சையால் பாரதத் தாய்
    அடைந்திட்டாள் சுதந்திரத்தை

    பாடினார் ஆடினார் பரவசமாயினார்
    கூடினார் கொடி ஏற்றினார்
    கொண்டாடி மகிழ் வெய்தினார்
    அடிமை இருள் அகன்றது
    ஆதவன் ஒளி பரப்பினான்
    காந்தி எனும் சக்தியால்
    கண்டு விட்டார் சுதந்திரத்தை

    பெற்று விட்ட சுதந்திரத்தைப்
    பேணி விடல் முக்கியமே
    காந்தி கண்ட சமுதாயம்
    குலைந்து விடச் செய்யாதீர்
    கிடைத்திட்ட சுதந்திரத்தை
    மதித்துமே போற்ற வேண்டும்
    ஆணவத்தில் ஏறி நின்று
    அதை மதிக்க மறக்காதீர்

    Share
  • குறளின் கதிர்களாய்…(464)

    குறளின் கதிர்களாய்…(464)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(464)

    கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா
    லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு.

    – திருக்குறள் – 930 (கள்ளுண்ணாமை)

    புதுக் கவிதையில்…

    கள்ளுண்பவன்
    தான்
    கள்ளுண்ணாத போதில்
    கள்ளுண்டு ஒருவன்
    தள்ளாடுவதைப் பார்த்து,
    கள்ளுண்கையில் தனக்கும்
    இந்நிலை வருமென
    எண்ணிப்பார்க்க மாட்டானோ…!

    குறும்பாவில்…

    கள்ளுண்டு தள்ளாடுபவனைக் கண்டொருவன்
    கள்ளுண்கையில் தனக்கும் இந்நிலைதான் வருமென
    கள்ளுணாபோது எண்ணிப் பாரானோ…!

    மரபுக் கவிதையில்…

    கள்ளை யதிகம் உண்டொருவன்
    கருத்த தழிந்தே யுலகோரும்
    எள்ளும் வகையில் சோர்ந்துவிழும்
    இழிந்த நிலையைக் கள்ளுண்போன்
    கள்ளை யுண்ணா வேளையிலே
    காணும் போதில் எண்ணானோ
    கள்ள துண்டால் தனக்கும்தான்
    காண முடியும் இழிவென்றே…!

    லிமரைக்கூ…

    கள்ளை யுண்டோன்படும் பாட்டை
    காணும் கள்ளுண்போன் உணாதபோது உணரானோ
    தனக்கும் வரவிருக்கும் கேட்டை…!

    கிராமிய பாணியில்…

    குடிக்காத குடிக்காத
    கள்ளு குடிக்காத,
    குடியக் கெடுக்கிற
    கள்ளு குடிக்காத..

    கள்ளு குடிக்கறவன்
    தானும்
    குடிக்காத நேரத்தில
    வேற ஒருத்தன்
    குடிச்சிக்கிட்டு
    போதயில படுற பாட்டப்
    பாக்கும்போது,
    தனக்கும் இப்புடி ஒரு
    கேவலமான
    நெலம வருமுண்ணு
    நெனச்சிப்பாக்க மாட்டானா..

    அதால
    குடிக்காத குடிக்காத
    கள்ளு குடிக்காத,
    குடியக் கெடுக்கிற
    கள்ளு குடிக்காத…!

    Share
  • கங்கைகொண்ட சோழபுரம் – ஒரு பார்வை

    -மேகலா இராமமூர்த்தி

    விசயாலயச் சோழன் தொடங்கி மூன்றாம் இராசேந்திரன் ஈறாக விளங்கிய பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலம் தமிழ்நிலத்தின் நாகரிக வளர்ச்சிக்கும் பண்பாட்டு எழுச்சிக்கும் பல்வேறு கலைகளின் மலர்ச்சிக்கும் பேருதவி புரிந்த காலமாகும். மாமன்னன் முதலாம் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோயில், அவன் மைந்தனான முதலாம் இராசேந்திரன் எழுப்பிய கங்கைகொண்ட சோழீச்சரம், இரண்டாம் இராசராசனால் தாராசுரத்தில் எழுப்பப்பட்ட ஐராவதீசுவரர் கோயில் ஆகிய மூன்றும் சோழர்காலக் கோயிற்கலையின் உச்சங்களாக இன்றும் மிளிர்கின்றன எனில் மிகையில்லை.

    இம்மூவருள் இராசராசனைத் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலேறிய முதலாம் இராசேந்திர சோழன், சோழப்பேரரசைக் கடல்கடந்தும் விரிவடையச் செய்து தமிழரின் வீரத்தை, பெருமையைத் தரணிக்கெல்லாம் பரப்பிய சிறப்புக்குரியவன்.

    சோழரின் புலிக்கொடியை அயல்நாடுகளிலும் பறக்கவிட்ட முதலாம் இராசேந்திர சோழன் குறித்தும் அவனால் உருவாக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தின் சிறப்பைக் குறித்தும் சிறிது அறிந்துகொள்வோம்.

    முதலாம் இராசேந்திர சோழன்:

    விசயாலயன் காலத்தில் தலையெடுத்த பிற்காலச் சோழர்களின் ஆட்சி, முதலாம் இராசேந்திரன் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது. வானவன் மாதேவியாரான திரிபுவன மாதேவியார்க்கும் முதலாம் இராசராசனுக்கும் மகனாய்ப் பிறந்தவன் முதலாம் இராசேந்திரன். இவன் பிறந்தது மார்கழித் திருவாதிரை என்கின்றனர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி முதலான வரலாற்றறிஞர்கள்; ஆடித் திருவாதிரை என்கின்றார் தொல்பொருள், கல்வெட்டுத்துறை அறிஞர், குடவாயில் பாலசுப்பிரமணியன் (காமரசவல்லியில் உள்ள ராஜேந்திர சோழனின் கல்வெட்டைச் சான்றுகாட்டி). இவனுடைய இயற்பெயர் மதுராந்தகன் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன. இராசராசன் ஆட்சியின்போதே படைகளை நடாத்திப் போர்கள் பலவற்றில் ஈடுபடும் வாய்ப்பைப் பெற்றிருந்தான் இராசேந்திரன். இலங்கை மன்னனான ஐந்தாம் மகிந்தனையழித்து ஈழநாட்டை முற்றாகச் சோழரின் ஆளுமையின்கீழ்க் கொண்டுவந்தான்.

    இராசேந்திரன் வடநாட்டிற்குப் படையெடுத்துச் சென்று மத்தியப் பிரதேசத்திலுள்ள சித்திரகோடா, கோசலதேசம், ஒட்டரநாடு, வங்காளத்திலுள்ள லாடதேசம் உள்ளிட்ட பல பகுதிகளைக் கைப்பற்றிக் கங்கைக்கரையை அடைந்தான். எனினும், தான்வென்ற நாடுகளை அவன் ஆள விரும்பவில்லை; படையெடுப்பை அதற்காக அவன் நடத்தவும் இல்லை. தான் புதிதாக உருவாக்க விரும்பிய நகரையும் ஏரியையும் கங்கைநீராற் தூய்மைப்படுத்த விரும்பியே படைகளை வடக்கே அனுப்பினான்; தன் படைகளைத் தடுத்த அரசர்களுடனேயே அவன் போர் புரிந்தான் என்கிறார் வரலாற்றறிஞர் மா. இராசமாணிக்கனார் தம்முடைய ’சோழர் வரலாறு’ எனும் நூலில்.

    கங்கையைக் கொண்டதோடு மட்டுமல்லாது கடல்கடந்து சென்று கடாரம்/காழகம் (மலேசியாவிலுள்ள கெடா), சுமத்ரா தீவிலுள்ள ஸ்ரீவிஜயம், இலாமுரி தேசம், மாநக்கவாரம் (நிக்கோபார் தீவுகள்) ஆகியவற்றையும் கைப்பற்றினான் இராசேந்திரன்.

    ’காழகம்’ என்ற சொல் (ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட்டினப்பாலை: 191)) பத்துப்பாட்டில் காணப்படுதலால் சங்கத்தமிழர் நெடுங்காலமாகக் கடாரத்துடன் கடல் வாணிகம் செய்துவந்தமையை அறியலாம்.

    கங்கைகொண்ட சோழபுரம்: முதலாம் இராசராசன் காலம்வரை தஞ்சையே பிற்காலச் சோழர்களின் தலைநகராய்த் திகழ்ந்தது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் அது மாறியது; கங்கை வரையில் படையெடுத்துச் சென்று அப்பகுதிகளைத் தன் குடைநிழலில் கொண்டுவந்ததன் அடையாளமாய்க் கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய நகரத்தை உருவாக்கி அதனையே சோழநாட்டின் தலைநகராக்கினான் ’பரகேசரி’யாகிய இராசேந்திரன்.

    இராசேந்திரனைத் தொடர்ந்து அரசாண்டவர்களும் இந்நகரத்தையே தம் தலைநகராகக் கொண்டமையால் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராய் விளங்கிய பெருமை இந்நகரத்துக்கு உண்டு. இப்போது இந்நகரம் தன் பழம்பெருமையை இழந்து ஒரு சிற்றூராய்க் காட்சியளிப்பது வருத்தமளிக்கின்றது.

    கங்கைகொண்ட சோழீச்சரம்: புதிய தலைநகரத்தை உருவாக்கியதைத் தொடர்ந்து, அந்நகரத்தில் அற்புதமானதொரு கோயிலைச் சிவனார்க்கு எடுப்பித்தான் இராசேந்திரன். கங்கைகொண்ட சோழனால் கட்டப்பெற்ற கோயிலாகையால் இது கங்கைகொண்ட சோழீச்சரம் எனும் பெயர்பெற்றது. இந்தியத் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற இக்கோயிலானது ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலைப் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவால் உலகின் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

    அளவில் தஞ்சைப் பெரியகோயிலைவிடச் சிறியதாயினும் சிற்ப வேலைப்பாடுகளில் தஞ்சைக் கோயிலை விஞ்சிய தரத்தோடும் எழிலோடும் திகழ்கின்றது இத்திருக்கோயில். தஞ்சைப் பெரியகோயில் இலிங்கத் திருமேனியைப் போலவே இங்குள்ள இலிங்கத் திருமேனியும் அளவிற் பெரியது; ஒரே கல்லால் ஆனது.

    எழில்மிகு சிற்பங்கள்: கங்கைகொண்ட சோழீச்சரத்தின் கிழக்கு வாயிலில் கோயிலின் எதிரே சுதையாலான பிரம்மாண்டமான நந்தி காணப்படுகின்றது.

    விமானத்தில் அமைந்துள்ள சிற்பங்களும் கோயிலின் வெளிப்புறத்தில் காணப்படுகின்ற சிற்ப உருவங்களும் பெருவனப்புடையவை. தென்மேற்கில் சபாபதியும், மேற்கில் இலிங்கோற்பவரும், தெற்கில் விநாயகரும் அழகாய்க் காட்சிதருகின்றார்கள்.

    வடக்கில் திருவாயிலுக்கருகில் சண்டேச அனுக்கிரகமூர்த்தி சிற்பம் எழிலோடு திகழ்கின்றது. இச்சிற்பத்தில் சிவபெருமான் உமையோடு அமர்ந்திருக்கின்றார். அவரது காலடியில் கைதொழுத நிலையில் அமர்ந்துள்ளார் சண்டேசுவரர். சிவனார் மகிழ்வோடு சண்டேசுவரருக்குக் கொன்றை மாலையொன்றைச் சூட்டுகின்றார்; உமையம்மை அதனைப் பெருமிதத்தோடு கண்டுகளிக்கின்றார். இச்சிற்பத்தை நோக்குகையில் ஒரு நாடகக் காட்சியையே சிற்பமாக வடித்துவிட்டனரோ என வியக்கத் தோன்றுகின்றது.

    இச்சிற்பத்தின் எதிரே காணப்படும் ஞானசரசுவதியின் சிற்பமும் கவினார் வனப்புடையது.

    இச்சிற்பங்களுக்கு மாமல்லபுரச் சிற்பங்களே அடிப்படையானவை என்றாலும் அவற்றினும் மேம்பட்ட சிற்பத்திறனை இவற்றில் காணமுடிகின்றது.

    கங்கைகொண்ட சோழீச்சரத்தைப் புகழ்ந்து கருவூர்த்தேவர் பாடிய பதிகங்கள் ஒன்பதாம் திருமுறையிலுள்ள திருவிசைப்பாவில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று:

    அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
    அங்ஙனே பெரியநீ சிறிய
    என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
    எளிமையை யென்றும்நான் மறக்கேன்
    முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
    முக்கணா நாற்பெருந் தடந்தோட்
    கன்னலே தேனே அமுதமே கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே.
     (திருவிசைப்பா: 1)

    சோழகங்கம்: பஞ்சமில்லா நீர்ப்பாசனத்திற்கு வித்திடும் வகையில் தலைநகராம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இராசேந்திரனின் விருப்பப்படி வெட்டப்பட்டதே சோழகங்கம் எனும் ஏரி. கொள்ளிடத்திலிருந்து அறுபது மைல் தொலைவுக்குக் கால்வாய் வெட்டிச் சோழகங்கத்துக்கு நீர்வழித்தடத்தை உருவாக்கியதாய்த் தெரிகின்றது. கங்கையிலிருந்து பொற்குடங்களில் கொண்டுவரப்பட்ட நீரை இவ்வேரியில் சேர்த்துக் கங்கையையும் காவிரியையும் (காவிரியின் வெள்ளப்பெருக்கைக் கொள்ளுமிடமே கொள்ளிடம்) அப்போதே ஒன்றிணைத்தவன் இராசேந்திரன்.

    ”பகீரதன் ஆகாயகங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததுபோல் கங்கைநீரைச் சோழநாட்டுக்குக் கொண்டுவந்து கங்கைகொண்ட சோழப் பேரேரியை முதலாம் இராசேந்திர சோழன் உருவாக்கினான்” என எசாலம் செப்பேடு கூறுகின்றது.

    சோழகங்கம் இப்போது ’பொன்னேரி’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. விசயநகரத்தார் காலத்தில் இப்பெயர் மாற்றம் ஏற்பட்டதாய்த் தெரிகின்றது. இதில் நீரைவிடவும் இப்போது மணலே அதிகம் நிறைந்திருப்பதைக் காண்கையில் மனம் கனக்கவே செய்கின்றது.

    மாளிகைமேடு: அரண்மனை இருந்த இடமிது. இராசேந்திரனும் அவனைத் தொடர்ந்துவந்த சோழமன்னர்கள் பலரும் கங்கைகொண்ட சோழபுர மாளிகையில் இருந்துகொண்டு ஆட்சிசெய்திருக்கின்றனர். இம்மாளிகை குறித்துக் கல்வெட்டுகளால் அறியமுடிகின்றது.

    ”வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து
    மண்குளிரும் சாயல் வளர்க்குமாம் – தண்கவிகைக்
    கொங்காரலங்கல் குலதீபன் கொய்பொழில்சூழ்
    கங்கா புரமாளி கை.”
    என்று காங்கைகொண்ட சோழபுர மாளிகையைச் சிறப்பிக்கின்றது தண்டியலங்காரப் பாடல்.

    இப்போதிங்கு அரண்மனை இல்லை; அஃது இருந்ததற்கான அடையாளமாய்க் காரைக் கலப்புண்ட செங்கற் சிதைவுகளே மிகுதியாய்க் காணப்படுகின்றன. இங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடங்கள் பல்வேறு காலக்கட்டங்களைக் காட்டுவதால் இம்மாளிகை பிற்காலத்தில் மாற்றிக் கட்டப்பட்டமை புலப்படுகின்றது.

    கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகள்: வரலாற்றுச் சிறப்புடைய கங்கைகொண்ட சோழபுரத்தில் 1980, 1981, 1985, 1987, 1991 ஆகிய ஆண்டுகளில் மாளிகைமேடு, மண்மலை, கல்குளம், குருவாலப்பர் கோயில், பொன்னேரி ஆகிய வெவ்வேறு இடங்களில் மொத்தம் 31 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இவ் அகழாய்வின் பயனாய்ப் பல தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. இவற்றின்மூலம் சோழர்கால அரண்மனை எவ்வாறிருந்தது என்பதையும் அக்காலக் கலை, நாகரிகச் சிறப்பினையும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

    கூரை ஓடுகள்: கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் அதிக அளவில் கிடைத்தவை கூரை ஓடுகளும் இரும்பு ஆணிகளுமேயாகும். இக்கூரை ஓடுகளின் தலைப்பகுதி மரச்சட்டத்தில் பொருத்துவதற்கேற்ப அரைவட்ட வடிவில் காணப்படுகின்றன.

    இரும்பு ஆணிகள்: இரும்பு ஆணிகளும் பிடிப்பாணிகளும் அகழாய்வில் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை 3 செ.மீ முதல் 24 செ.மீ. வரை நீளமுள்ளவை. இவற்றின் தலைப்பகுதி சதுர வடிவிலுள்ளது. ஆணிகளின் தலைப்பகுதியை மரத்துடன் இணைக்குமிடத்தில் நான்கிதழ்கள் கொண்ட பூ வடிவ இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்பட்டு அழகூட்டப்பெற்றுள்ளது.

    வண்ணங்களுடன் கூடிய காரைத்துண்டுகள்: பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ணங்கொண்ட சுண்ணாம்புக் காரைத்துண்டுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. கட்டடங்களின் சுவர்ப்பகுதிகளிலும் விதானத்திலும் இவ்வண்ணங்களால் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன என்று இவற்றைக்கொண்டு நாம் ஊகித்தறியலாம்.

    தந்தப் பொருள்கள்: தந்தத்தினாலான ஆளி, யானை ஆகிய உருவங்கள் கிடைத்துள்ளன. அரண்மனையை அணிசெய்யத் தந்தத்தினாலான பொருள்கள் பயன்படுத்தப்பட்டமையை இவை உணர்த்துகின்றன.

    வளையல் துண்டுகள்: சங்கினாலான வளையல் துண்டுகளும், கருப்பு, மஞ்சள், பச்சை, நீல நிறங்களினால் ஆன கண்ணாடி வளையல் துண்டுகளும் இங்குக் கிடைத்துள்ளன. சங்கினாலான வளையல்களைப் பெண்கள் அணியும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது. ஏன்… சிந்துவெளி அகழாய்விலேயே சங்கு வளையல்கள் செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டமை ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சோழர் காலத்தில் சங்கு வளையல்களோடு ’கலகலக்கும்’ கண்ணாடி வளையல்களையும் மகளிர் அணிந்திருந்தமைக்கான சான்றுகள் இவை.

    இவையல்லாமல் மட்பாண்டங்கள், சீனநாட்டுப் பானையோடுகள், காசுகள் செய்யப் பயன்படும் மண்ணாலான வார்ப்புகள், பளிங்குக் கற்களாலான மணிகள், குறுவாளின் கைப்பிடி போன்றவையும் அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன.

    இவ்வாறு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களெல்லாம் கங்கைகொண்ட சோழீச்சரத்திற்கு அருகிலுள்ள அகழ்வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    முடிவுரை: இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாட்டின் தலைநகராகவும் கலைக்கூடமாகவும் திகழ்ந்த கங்கைகண்ட சோழபுரத் திருநகர் இன்று பொலிவிழந்து நலிவடைந்து சிற்றூராய் மாறியிருப்பது காலத்தின் கோலமே. சராசரி மாந்தர்களுக்கும் சாம்ராஜ்ஜியம் ஆளும் வேந்தர்களுக்கும் மட்டுமல்லாது ஊர்களுக்கும்கூட வாழ்வும் தாழ்வும் உண்டென்பதனை இது தெற்றெனக் காட்டுகின்றது.

    இப்பகுதியில் நிகழ்ந்த அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்களும் கல்வெட்டுகளும் இந்நகரின் பண்டைய சீரையும் சிறப்பையும் வியனுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றன. சோழர்களின் மங்காத புகழைத் தன்னகத்தே தாங்கியிருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்தைப் பழையபடி பொலிவுறச் செய்யும் நன்முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவேண்டும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1.https://ariyalur.nic.in/tourist-place/gangaikonda-cholapuram/

    2. சோழர் வரலாறு – டாக்டர் மா. இராசமாணிக்கனார், பூரம் பதிப்பகம், சென்னை – 600 033.

    3. கங்கைகொண்ட சோழபுரம் இராசேந்திர சோழன் அகழ்வைப்பகம் – பதிப்பாசிரியர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப., சிறப்பு ஆணையர், தொல்லியல் துறை.

    4. https://www.dinamani.com/tamilnadu/ராஜேந்திர-சோழன்-வெட்டிய-சோழகங்கம்-ஏரி-மீண்டும்-உயிர்பெற-வாய்ப்பு-3253462.html

     

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 20

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 20

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா ஏவிய லூனா-25 நிலவுத் தளவுளவி

    ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா ஏவிய லூனா-25 நிலவுத் தளவுளவி

    சி. ஜெயபாரதன், கனடா

    ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுத் தட வைப்பு தென்துருவப் போட்டியில் சந்திரயான் -3 இந்திய விண்சிமிழை முந்திச் செல்ல, ரஷ்யா லூனா -25 [LUNA -25] நிலவுத் தளவுளவியை 2023 ஆகஸ்டு 8 ஆம் ஏவியுள்ளது. நிலவு நோக்கிப் பயணம் செய்யும் ரஷ்யாவின் நிலாத் தளவுளவி ஆகஸ்டு 23 ஆம் தேதி நிலவை நெருங்கும் என்று ஏவப்பட்டுள்ளது. வேகமாய் இயங்கும் ரஷ்ய விண்சிமிழ் ஏவுகணை நிலவை 5 அல்லது 6 நாட்களில் நெருங்கும். அடுத்து அது 3 அல்லது 7 நாட்களில் 100 கி.மீ [60 மைல்] உயரத்தில் நிலவைச் சுற்றி, தரையில் இறங்கும். இதுவரை நிலவில் இறங்கித் தளவூர்தி தவழ்ந்த முப்பெரும் வல்லரசுகள் அமெரிக்கா, ரஷ்யா, சைனா ஆகியவையே. ஆனால் எந்த நாடும் துணிந்து நிலவின் தென்துருவத்தில், இதுவரை இறங்கிய தில்லை. தென் துருவத்தின் இருண்ட குழிப் பிரதேசத்தில் நீர்ப்பனி இருப்பு பலவித உலோகங்கள் இருப்பு இந்த நாடுகளை ஈர்த்துள்ளன. பனிக் குன்றுகளின் நீரிலிருந்து எரிசக்தி ஹைடிரஜன், ஆக்சிஜென் வாயுக்கள் பிரித்தெடுத்து பிற்காலத்தில் ராக்கெட் ஏவு எரிசக்தி தயாரிக்கலாம். இந்த தொழில் நுணுக்கப் பந்தயத்தில், வெற்றி பெறுவது ரஷ்யாவா அல்லது இந்தியாவா என்று காணப்போவது ஒரு வரலாற்று சாதனை யாகக் கருதப்படும்.

    https://www.thespacereview.com/article/2228/1

    https://www.russianspaceweb.com/luna_resurs.html

    edition.cnn.com/2023/08/10/world/russia-luna-25-launch-scn/index.html

    Share
  • இந்தியா ஏவிய சந்திரயான் -3 விண்சிமிழ் தற்போது எங்கே பயணம் செய்கிறது?

    இந்தியா ஏவிய சந்திரயான் -3 விண்சிமிழ் தற்போது எங்கே பயணம் செய்கிறது?

    Chandrayaan -3 Lander Module with Rover during Trans Lunar Injection

    சி. ஜெயபாரதன், கனடா

    Chandrayaan-3 Update: ISRO Successfully Completes Translunar Injection of the Lunar Spacecraft

    2023 ஜூலை 14 இல் நிலவை நோக்கி ஏவிய  இந்திய விண்சிமிழ் சந்திரயான் – 3 ஆகஸ்டு 5 ஆம் நாள் எங்கே பயணம் செய்கிறது ?  என்ன நிகழ்கிறது ?  விண்சிமிழ் பூமியை ஐந்து முறை நீள்வட்டப் பாதையில் சுற்றி, ஒவ்வொரு முறையும் பூமியின் சுழல்வீச்சு உந்துவிசையால் வேகம் மிகுந்து, நீள்வட்டப் பாதை நீண்டு, நீண்டு நிலவை நெருங்கியது.  ஆகஸ்டு முதல் தேதி, சிறு தள்ளுவிசை ஏவு கணைகள் அரை மணி நேரம் இயங்கி, விண்சிமிழ் நிலவு ஈர்ப்பு மண்டலத்தில் தாவி [Trans Lunar Orbit] உள்ளது.

    Chandrayaan -2 Orbiter has been used in Chandrayaan -3 to trasmit the message.

    இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகம் இஸ்ரோ [ISRO] ஆகஸ்டு 23-24 தேதி நாட்களில் சந்திரயான் தளவுளவி நிலவில் மெதுவாய் இறங்கும், அடுத்து அதிலிருந்து, தளவூர்தி வெளியேறி நிலவில் நகரும் என்று எதிர்நோக்கி இருக்கிறது.  அவ்விதம் நிகழும் அந்த வரலாற்று மைல்கல் நிகழ்ச்சியைப் பதிவு செய்யும் ஓர் அற்புதக் கருவி ஆல்ஃபா துகள் எக்ஸ்ரே ஒளிப்பட்டை மானி [Alpha Particle X-Ray Spectrometer] விண்சிமிழ் தளவுளவி, தளவூர்தி யில் இணைக்கப் பட்டுள்ள மற்ற கருவிகள் நிலவின் புழுதி இரசாயனக் கலவைகளை அறிந்து பூமிக்கு அனுப்பும்.  சந்திராயன் -2  2019 இல் ஏவிய விண்சுற்றி [Orbiter] இன்னும் நிலவைச் சுற்றி இயங்கி வருவதால், அடுத்து சந்திராயன் -3 திட்டத்தில் விண்சுற்றி ஒன்று இணைக்கப் படவில்லை.

    2019 இல் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பழுதுகள் ஏற்பட்டு நிலவில் விழுந்து முறிந்து போனது.  இம்முறை அவ்விதத் தவறுகள் நிகழா என்று இஸ்ரோ எதிர்பார்க்கிறது.


    Chandrayaan -3 Trans Lunar Injection on August 1, 2023

    https://weather.com/en-IN/india/space/news/2023-08-01-isro-completes-translunar-injection-of-chandrayaan-3

    Share
  • குறளின் கதிர்களாய்…(463)

    குறளின் கதிர்களாய்…(463)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(463)

    ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
    போற்றலு ளெல்லாந் தலை.

    -திருக்குறள் -891(பெரியாரைப் பிழையாமை)

    புதுக் கவிதையில்…

    செயல் எதையும்
    செவ்வனே செய்து முடிக்க
    வல்லவரின்
    ஆற்றலை இகழாதிருத்தல்,
    தீங்கெதுவும்
    தமக்கு வராமலிருக்கக்
    காப்பவர் செய்யும்
    காவல்கள் அனைத்திலும்
    முதன்மையானது…!

    குறும்பாவில்…

    செயலைத் திறம்படச் செய்வாரின்
    செயல்திறனை இகழாதிருத்தல், தம்மைக் காத்திடச்
    செய்யும் காவல்களிலெல்லாம் முதன்மையானது…!

    மரபுக் கவிதையில்…

    செய்யும் செயலைத் திறம்படவே
    செய்து முடிக்க வல்லாரின்
    செய்யு மாற்ற லதுதன்னை
    சேயென் றிகழா திருந்திடுதல்,
    உய்யும் வழிக்குத் தடையாக
    உளதாம் தீங்கில் காத்திடவே
    செய்யும் காவல் அனைத்தினிலும்
    சேரும் முதன்மை இடத்தினையே…!

    லிமரைக்கூ…

    செயல்வல்லார் திறனதற்கு இகழே
    சொல்லா திருத்தலே பெற்றிடும் தமைக்காக்கும்
    காவலிலெல்லாம் முதன்மைப் புகழே…!

    கிராமிய பாணியில்…

    பாராட்டணும் பாராட்டணும்
    தெறமயபப் பாராட்டணும்,
    எதயுமே நல்லாச் செய்யிறவங்கத்
    தெறமயப் பாராட்டணும்..

    எதச் செய்தாலும்
    நல்லாச் செய்துமுடிக்கிறத்
    தெறம உள்ளவங்கள அவமதிச்சிக்
    கொறசொல்லாம இருந்தாப்போதும்,
    அதுவே
    தனக்குக் கெடுதல்வராமப்
    பாதுகாக்கிற
    காவலுல யெல்லாம் ஒசத்தியா
    மொதல்தரமானது..

    அதால
    பாராட்டணும் பாராட்டணும்
    தெறமயபப் பாராட்டணும்,
    எதயுமே நல்லாச் செய்யிறவங்கத்
    தெறமயப் பாராட்டணும்…!

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 19

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 19

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • திரைப்படப் பாடல்களின் ராகங்கள்

    திரைப்படப் பாடல்களின் ராகங்கள்

    திரைப்படப் பாடல்கள் எந்தெந்த ராகங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன என்பதை ஜெயராமன் இனிமையாகப் பாடிக் காட்டி விளக்குகிறார். குரோம்பேட்டை நகைச்சுவையாளர் மன்றத்தில் ஒலித்த இன்னிசை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன் அவர்களின் சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share