Blog

  • ஸ்ரீபிரியா ஆனந்த் வீட்டுக் கொலு

    ஸ்ரீபிரியா ஆனந்த் வீட்டுக் கொலு

    சென்னை, தாம்பரத்தில் வசிக்கும் ஸ்ரீபிரியா ஆனந்த், முதல் முறையாகக் கொலு வைத்திருக்கிறார். இராமர் பட்டாபிஷேகம், வள்ளித் திருமணம், காந்தியடிகள் ரவுண்டானா எனப் பலவும் இவரது கொலுவை அலங்கரிக்கின்றன. இவர் மகள், வன உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் தனித் தனியே சரணாலயம் அமைத்துள்ளார். சிங்கங்களை இப்படித் திறந்துவிட்டிருக்கிறீர்களே, ஆபத்து இல்லையா? என வெ.சுப்ரமணியன் கேட்டதற்கு ஸ்ரீபிரியாவின் பதில் அழகானது. தேவியரையும் தெய்வங்களையும் தரிசிக்க வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • போத்தீஸ் கொலு

    போத்தீஸ் கொலு

    சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் பேரங்காடியின் வாயிலில் பிரமாண்ட கொலு வைத்திருக்கிறார்கள். அதன் முன்னே நின்று வாடிக்கையாளர்கள் படம் எடுத்துக்கொள்கிறார்கள். இதில் என்னென்ன பொம்மைகள் இருக்கின்றன? வாங்க பார்க்கலாம்.

    படப்பதிவு – ஹேமமாலினி லோகநாதன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏவன் நதியில் படகுப் பயணம்

    ஏவன் நதியில் படகுப் பயணம்

    இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டிராட்போர்டு என்ற ஊரில் பாயும் ஏவன் நதியில் ஓர் இனிய படகுப் பயணம். அன்னப் பறவைகள் உடன்வர, காற்றில் புறாக்கள் கவிதை வரைய, சில்லென்ற காற்றில் சிலுசிலுத்தபடி தவழும் நதியலையின் தாலாட்டில் மிதந்தபடி, உலாப் போகலாம் வாருங்கள். படப்பதிவு – நவ்யா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓர் எளிய யோசனை – 12

    ஓர் எளிய யோசனை – 12

    தண்ணீர் ஆவியாகாமல் இருக்கத் தெர்மோகோல் இட்டவரை நமக்குத் தெரியும். இங்கே சூரியனின் சூட்டிலிருந்து மீன்களைக் காக்க, என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜெயலட்சுமி நயினார் வீட்டுக் கொலு

    ஜெயலட்சுமி நயினார் வீட்டுக் கொலு

    திருவனந்தபுரத்தில் வசிக்கும் ஜெயலட்சுமி நயினார் வீட்டுக் கொலு, இதோ. அவர் கணவர் பேராசிரியர் மா.நயினார், கொலுவைக் குறித்து அழகாக விளக்கியுள்ளார். உள்ளன்புடனும் கலையுணர்வுடனும் மிளிரும் இந்தக் கொலுவைக் கண்டுகளிக்க வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜெயந்தி மோகன் வீட்டுக் கொலு

    ஜெயந்தி மோகன் வீட்டுக் கொலு

    சென்னை, கோவூரில் வசிக்கும் ஜெயந்தி மோகன் வீட்டுக் கொலுவைக் கண்டுகளிக்க வாருங்கள். கொலுவை நமக்கு அறிமுகப்படுத்தி, ‘சகலம் சௌபாக்கியம் சுபம்’ என இவர் நிறைவுசெய்வது மங்களகரம். செல்வியர் காயத்ரியும் ஹரிணியும் ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என மழலைக் குரலில் பாடுவது தனி அழகு.

    படப்பதிவு – அமலன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இங்கிலாந்தின் அன்னப் பறவைகள்

    இங்கிலாந்தின் அன்னப் பறவைகள்

    இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டிராட்போர்டு என்ற ஊரில், ஏவன் நதியில் ஆனந்தமாக நீந்தும் அன்னப் பறவைகளைப் பாருங்கள்.

    படப்பதிவு – நவ்யா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாதந்தோறும் மகாகவி

    மாதந்தோறும் மகாகவி

    வணக்கம்.

    ‘மாதந்தோறும் மகாகவி’ அக்டோபர் 11, மாலை 6.30 மணிக்கு.

    சென்னை, மயிலாப்பூரில், லஸ் கார்னர் அருகிலுள்ள ஆர்கே கன்வென்ஷன் அரங்கிற்கு வரலாம். இயலாதெனில் இந்த இணைப்பில் நேரலையாகப் பார்க்கலாம்:

    https://youtu.be/uLklIBdb-1Y

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • ஜெர்மனியின் உலக முதல் செயற்கை ஜெட் விமான எரித்திரவ ஆலை

    ஜெர்மனியின் உலக முதல் செயற்கை ஜெட் விமான எரித்திரவ ஆலை

    Aviation: Germany Opens World’s First Plant for Clean Jet Fuel on October 4, 2021

    S. Jayabarathan B.E. (Hons), P. Eng (Nuclear) Canada

    An airplane taking off in Germany.

    2050 ஆண்டுக்குள் ஜெர்மனி பூஜிய கரிவாயு வெளியேற்றத் திட்டம்

    அகில நாட்டு விமானப் பயணக் குழுவகம் [ International Air Transport Association] (IATA) 2021 அக்டோபர் 4 இல் அறிவித்த “2050 ஆண்டுக்குள் பூஜிய கரிவாயு குறிக்கோள்” தகவல் லாபமில்லா அட்மாஸ்ஃபர் தொழிற்துறை [Nonprofit Organization Atmosfair] தனது உலக முதற்பாடு செயற்கைக் கரி நடுமை ஈ-கெரோசின் ஜெட் எஞ்சின் எரித் திரவ ஆலையைத் [Synthetic Carbon-neutral eKerosene Aviation Fuel Plant] திறந்தது. குழுவகம் ஜெர்மனி எம்ஸ்லாந்து [Emsland ] நிலப் பகுதியைத் தேர்வு செய்து 2022 ஆண்டில் எட்டுக் பாரல்கள் [Eight Barrels] ஒரு டன் செயற்கை ஈ-கெரோசின் எரித் திரவம் தயாரிக்கும் என்று அறிவித்தது. விமானப் போக்குவரத்துப் பயணம் பூகோளக் கரிவாயு வெளியேற்றத்தில் 2%-3% பங்களவு பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். தற்போதுள்ள ஏவியேசன் எரித்திரவத்தில் ஈ-கிரேசினைக் கலந்தால். பேரளவு கரிவாயு வெளிவீச்சைக் குறைக்கும். அதற்கு மீள்புதிப்பு மின்சக்தி பரிமாற காற்றாடி சுழலிகள் [ Electricity from Reusable Wind Turbine] தேவைப்படும். அவ்விதம் தயாராகும் கலப்பு எரித் திரவம், ஜெர்மனியின் லுஃப்தான்ஸா விமானங்களில் நிரப்பப்படும்.

    ஜெர்மனியின் விமானங்களுக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் டன் ஈ-கெரோசின் எரித் திரவம் தேவைப்படும். காலநிலைப் பாதுகாப்புக்கு பச்சை நீரக வாயு [Green Hydrogen] பயன்படுகிறது. பச்சை நீரக வாயு தயாரிக்க பேரளவு மீள்புதிப்பு மின்சக்தி [காற்றாடிச் சுழலிகள்] மின்சாரம் கிடைக்க வேண்டும். செயற்கை ஈ-கெரோசின், ஏவியேசன் எரித்திரம் போல் 4 முதல் 5 மடங்கு விலை மிக்கது. பேரளவு ஆலைகள் தயாரித்தால் விலை குறையலாம். அத்துடன் ஏராளமான காற்றாடிச் சுழலிகள் மின்சாரம் அருகில் கிடைக்க வேண்டும்.

    இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் நீரக வாயு [Hydrogen Fuel-Based] எரிசக்தி மூலம் இயங்கத் தொழில்நுணுக்கம்.


    Indian Railways Will Run Trains on Hydrogen Fuel-Based Technology

    Under the flagship programs of the Government, ‘Advanced Chemistry Cell (ACC) Batteries’ and ‘National Hydrogen Mission’, to cut down on the Green House Gas (GHG) emission under Paris Climate Agreement .

    A new dawn ushers on Indian Railways as it endeavors to be self-reliant for its energy needs as directed by the Prime Minister and solarise railway stations by utilizing its vacant lands for Renewable Energy (RE) projects. Railway is committed to utilize solar energy for meeting its traction power requirements and become a complete ‘Green mode of transportation’.

    The Ministry of Railways has decided to install solar power plants on its vacant unused lands on mega scale.

    The use of solar power will accelerate the Minister of Railways, Piyush Goyal’s mission to achieve conversion of Indian Railways to ‘Net Zero’ Carbon Emission Railway.

    Indian Railways present demand would be fulfilled by the solar projects being deployed, making it the first transport organisation to be energy self-sufficient. This would help in making Indian Railways green as well as ‘Atma Nirbhar’.

    இந்திய இரயில்தொடர் எஞ்சின்கள் மீள்புதிப்பு எரிசக்தியில் இயங்கத் திட்டங்கள்

    இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் முற்போக்கு இரசாயன மின்கலன் நிறுவகம் & தேசீய நீரக வாயு நிறுவகம் [Advanced Chemistry Cell Batteries & National Hydrogen Mission] இரண்டும் இணைந்து, 2015 ஆண்டு பாரிஸ் காலநிலை உடன்படிக்கைப்படி, 2030 ஆண்டுக்குள், இந்திய இருப்புப் பாதை வண்டிகள் நீரக வாயு மூல எரிசக்தியில் [Hydrogen Fuell-Based Technology] இயங்கி பூஜிய கரித்தூள் வெளியேற்ற விதியைக் கடைப் பிடிக்கும் என்றோர் திட்டம் உள்ளது. [indian Railway Organization of Alternate Fuel (IROAF)] & [Green Fuel of Indian Railways] நிறுவகங்கள் திட்டத்தை,54 மைல் தூரத்தில் [90 கி.மீ.] உள்ள, வட இரயில்வே சோனிபட்- சிந்து பகுதியில் கட்ட ஆரம்பித்துள்ளன.

    திட்ட வேலைகள் டிசைன், வடிவாக்கம், தயாரிப்பு, அனுப்புதல். நிறுவுதல், சோதனை, நீரக வாயு & மின்கல மின்னியல் சாதனம், நீரக வாயு சேமிப்பு, [For 1600 HP Engine DEMUS] .முதலில் 2 டீமஸ் எஞ்சின்கள் மாற்றப்படும். பிறகு 2 ஹைபிரிட் எஞ்சின் மாற்றப்படும். அத்திட்டம் இந்தியாவுக்கு 2.3 கோடி ரூபாய் ஆண்டுக்கு மிஞ்சும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அந்த புதிய இரயில் தொடர் ஹரியானாவில் சோனிபட்-சிந்து பகுதியில் முதலில் இயங்கும்.

    அடுத்து பரந்த வெளியில் நிறுவி சூரியக் கதிர்ச்சக்தி மின்கலன் ஆற்றலில் இரயில் எஞ்சின்கள் இயங்க ஏற்பாடுகள் தயாராகுகின்றன.

    Indian Railways has acted as a pioneer in green energy procurement. It has started energy procurement from various solar projects like 3 MWp solar plant set up at MCF Raebareilly (UP). About 100 MWp rooftop solar systems have already been commissioned on various stations and buildings of Indian Railways.

    Besides, one project of 1.7 MWp at Bina (Madhya Pradesh) which shall be connected directly to the Overhead Traction System has already been installed and is presently under extensive testing. It is likely to be commissioned within 15 days. This is the first of its kind project in the world commissioned by Indian Railways in collaboration with Bharat Heavy Electricals Limited (BHEL). It involves adoption of innovative technology for converting Direct Current (DC) to single phase Alternating Current (AC) for feeding directly to Railway’s overhead traction system. The solar power plant has been established near the Bina Traction SubStation (TSS). It can produce approximately 25 lakh units of energy annually and will save around INR 1.37 Crore for Railway every year.

    தகவல்

    1.https://kleanindustries.com/resources/environmental-industry-market-analysis-research/germany-opens-world-s-first-plant-for-clean-jet-fuel/

    2. https://www.euronews.com/2021/10/04/world-s-first-commercial-plant-making-clean-jet-fuel-has-opened-in-germany-says-ngo

    3. https://www.ecowatch.com/clean-jet-fuel-germany-2655220447.html

    4. https://youtu.be/Mb_8DJF6Hp0

    5. https://youtu.be/mBd8FGqPMM0

    Share
  • செல்வமகள் திருவடியை சிக்கெனவே பிடித்திடுவோம்!

    செல்வமகள் திருவடியை சிக்கெனவே பிடித்திடுவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நிலையாக நில்லாமல் நீள்சுகத்தை நல்காத
    அலைபாயும் பொருள்நாடி அனைவருமே அலைகின்றார்
    அலைமகளே உன்னருளை அவர்நாடா ஓடுகிறார்
    அவரகத்தை மாற்றிவிட அருள்சுரப்பாய் அலைமகளே

    இவ்வுலக வாழ்வினுக்கு இன்பமே பொருளாகும்
    இன்பமதை மனமிருத்தி பொருள்நாடல் முறையல்ல
    பொருளெம்மை வந்தடைந்தால் போகமதை மனமகற்றி
    அலைமகளின் அருள்கிடைக்க அனுதினமும் வேண்டிடுவோம்

    தளர்வறியாச் செல்வமதை தந்தருள வேண்டுகிறோம்
    நிலைதழும்பா வாழ்க்கையினை நீயருள வேண்டுமம்மா
    விலையில்லாச் செல்வமென்று விளம்பிநிற்கும் மனமகல
    அலைமகளே அருள்புரிவாய் அடிபணிந்து பரவுகிறோம்

    அளவான பொருளமைய அலைமகளே அருளிடம்மா
    அறம்செய்யும் அகமமைய அருள்புரிவாய் அலைமகளே
    ஆசைவலை அறுவதற்கு அம்மாநீ உதவிடுவாய்
    அனுதினமும் திருவடியைப் பரவுகிறோம் அனைவருமே

    கொள்ளையிடும் குணமுடையார் குவலயம்விட்  டகலவேண்டும்
    குணமுடையார் குவலயத்தில் குறைவிலா திருக்கவேண்டும்
    வறுமையெனும் வார்த்தையது வரண்டழிந்து போகவேண்டும்
    வையகத்தில் மக்களென்றும் வாழ்வாங்கு  வாழவேண்டும்

    செல்வமதை தீதில்லா வழியினிலே பெறவேண்டும்
    செல்வமதை நல்லதற்கு செலவிடவே எண்ணவேண்டும்
    செல்வமது செல்லுமெனும் நிலையதனை மனமிருத்தி
    செல்வமகள் திருவடியை சிக்கெனவே பிடித்திடுவோம்

    வற்றாத செல்வமதை வழங்கினாலும் தாயே
    வழங்குகின்ற மனமமைய வரமருள்வாய் நீயே
    சுற்றமொடு சூழவுள்ளார் சுமையகல வேண்டும்
    சுந்தரியே இலக்குமியே தொழுகின்றோம் அம்மா

    நற்கருமம் செய்வதற்கே நற்செல்வம் தருவாய்
    தற்பெருமை கொண்டோரை தலைபணிய வைப்பாய்
    பொற்குவியல் கொடுத்தாலும் நற்குணத்தை அளிப்பாய்
    புனிதமுடை  நின்பாதம் தொழுகின்றோம் அம்மா

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 36

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 36

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உண்மை பாதி! உவமை பாதி!

    முன்னுரை

    ‘ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட்டு ஒன்றாகும்’ என்பார் ஔவை. இது விதியின் வினை. ஒன்றைக் கற்கின் மற்றொன்று நினைவுக்கு வரவேண்டும். இது நூலின் தரமதிப்பீடு. ஒன்றின் தொடர்ச்சியே மரபாயினும் ஒன்றின் அழிவின் தொடக்கமும் அதுவாக இருந்தால்தான் அது மரபு. புளியங்கொட்டை முளைத்தால் புளியமரமாகத்தான் வருமேயன்றிப் புங்கமரமாகாது. இதுதான் மரபு. எனவே ஒன்றின் வழிவழித் தொடர்ச்சியே மரபாகும். ஔவையின் மூதுரையைக் கற்குங்கால் நம்மையுமறியாமல் தோன்றுகிற சிந்தனைகள் கற்பாரை முன்னோக்கி நகர்த்துகின்றன. அங்கிருந்து வந்தவர் அல்லர் ஔவை. ஆனால் அவர் சிந்தனைகளுக்கான மூலம் அங்கிருந்துதான் தொடங்குகிறது.  கருத்தியல் சிந்தனைகளை அழகியல் உவமங்களோடு பொருத்திக் காட்டும் அன்னாரின் சதுரப்பாடு மூதுரை முழுவதிலும் வானத்து நிலவொளியைப்போல் பரந்து கிடக்கிறது. ஔவையின் உவமங்களைச் சான்றோர் சிலரின் உவமச் சிந்தனைகளோடு பொருத்திக் காட்டுவதையே இக்கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொள்கிறது.

    பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார்

    ‘குறியெதிர்ப்பை நீரது உடைத்து’ என்ற ஒரு தொடர் திருக்குறளில் வரும். தான் செய்த உதவிக்கு மாற்றாகக் கைம்மாறு செய்யப்படும் காலத்தை எதிர்பார்த்துச் செய்யும் உதவியை அப்படி அழைக்கிறார் திருவள்ளுவர். மிக உயர்ந்த பண்பாளருக்கு மட்டுமே உரிய இயல்பு அது. அது புகழை நோக்கியது. நடப்பியலுக்கு அவ்வளவாகப் பொருந்தாது. ‘பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார்’ என்ற தொடரும் திருக்குறளில் உண்டு. செய்யப்படுகின்ற நன்மை அளவால் சிறிதாயினும் உதவி செய்வாரின் கருத்தின் பயன் அறிந்தவர்க்கு அது பனையளவாகத் தோன்றுமாம். இந்த செய்ந்நன்றி அறிதலை உவம அளவையால் விளக்கிக் ‘காலம் வரும் வரை காத்திரு’ என்னும் நடப்பியல் உண்மையையும் பதிவு செய்திருக்கிறார் ஔவையார்.

    “நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
    என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
    தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை தலையாலே
    தான் தருத லால்” ( மூதுரை -1)

    சொல்ல நினைக்கும் பொருண்மையை முழுமையாகச் சொல்ல முடியாது பகுதி மட்டுமே வெளிப்பட்டு நிற்கும் நேர்வுகளும் நீதி இலக்கியங்களில் உண்டு. திருக்குறள் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களைப் பொருண்மைக்கேற்பப் பரிமேலழகர் பாகுபாடு செய்ததற்கு இதுதான் காரணம். செய்ந்நன்றி அறிதல் என்பதும் இத்தகையதே. உதவி ஒன்றுதான். அது செய்யாமற் செய்த உதவியாக, காலத்தினால் செய்த உதவியாக, பயன் நோக்காது செய்த உதவியாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஒன்றன் பகுதியாகவே கொள்ளுதலே ஏற்புடைத்து. அதாவது உதவி இத்தனை வகைப்படும் என்றென்னாது இந்தப் பண்புகளின் தொகுப்பே உதவி என்று கோடலே பொருந்தும் என்க.

    காலம் கனிந்தால்தான் காயும் கனியும்

    விதி என்பது மூட நம்பிக்கை அன்று. அது இயற்கைச் சட்டம். ஒவ்வொரு வினைக்குமோர் எதிர் வினை உண்டென்பது அறிவியல் என்றால் ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்’ என்பது அறிவியல் ஆகாதா? ‘ஊழ்’ என்ற சொல்லுக்கு  “இருவினைப் பயன் செய்தவனையே சென்று அடைவதற்கு ஏதுவாகிய நியதி” என்று வரைவிலக்கணம் தந்த பரிமேலழகர் ‘ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒருபொருட்கிளவி’ என்று விளக்கமளிக்கிறார். அழகரின் இந்த விளக்கம் ஊழ் பற்றிய எந்த அறிவியல் கருத்தினையும் களத்தில் சந்திக்கப் போதுமானது. ஊழ் காலத்தோடு தொடர்புடையது. முயற்சி நம்முடையது முடிவு காலத்தினுடையது. இதனைத்தான் வள்ளுவர் வேறுவாய்பாட்டில் சொல்லுகிறார்.

    “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” (கு.377)

    இவன் வகுத்ததை இவனாலேயே துய்க்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணமாக இன்னொரு சக்தி இருக்க வேண்டுமல்லவா? எதற்கும் காலம் வரவேண்டும் என்பது உலகியல். அதனைத்தான் ஔவை,

    “அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
    எடுத்த கருமங்கள் ஆகா  தொடுத்த
    உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
    பருவத்தால் அன்றிப் பழா.” (மூதுரை – 5)

    என்ற பாட்டில் விளக்கிக்காட்டுகிறார். தொடர் முயற்சி நம்முடையதாகலாம். ஆகின்ற நாள் நம் கையில் இல்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுதான் பலன் கொடுக்கும் என்று விதிக்கப்பட்ட மரங்கள் உருவத்தால் வளர்ந்து விடுவதனாலேயே பலன் கொடுக்கும் பருவத்துக்கு முன்பாகவே பயன் தந்துவிடாது. ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!’ என்னும் கீதையின் சாரமும் இதுவே. பலனை எதிர்பாராதே என்றால் அது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது என்பது கருத்து.

    “எழுதிய ஆறேகாண்! இரங்கு மடநெஞ்சே!
    கருதியவாறோ கருமம் – கருதிப் போய்க்
    கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
    முற்பவத்தில் செய்த வினை” (மூதுரை – 22)

    என்னும் மற்றொரு பாட்டில் இதே கருத்தினைப் பிறவிக் காலத்தையே அளவு கோலாக வைத்துப் பாடுகிறார். கற்பக மரத்தில் ஏறிப் பறித்தவன் கையில் காஞ்சிரங்காய் கிடைக்கிறது என்றால் அதற்குக் காரணம் முன்வினை. அந்த வினை தன் விளைவைக் காட்டுதற்கு இந்தப் பிறவி வரை காலத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பது கருத்து. வினை நம்முடையது. வினைப்பயன் நாம் கருதிய ஆறு அன்று. இறைவன் எழுதிய ஆறு! அது காலத்தின் கையில்!

    உரை முன்னால்! உவமம் பின்னால்!

    பொதுவாக முன்னாலே எழுதப்படும் கவிதை அல்லது செய்யுளுக்குத்தான் பின்னாலே உரையெழுதுவார்கள். ஆனால் சில நேர்வுகளில் இது மாறி அமைந்துவிடுவதும் உண்டு. அதுபோன்றதொரு நிகழ்வு தமிழில் நிகழ்ந்திருப்பதாகக் கருதலாம். ‘இந்த உலகம் ஏன் இன்னும் நிலைபெற்றிருக்கிறது? என்னும் வினாவை எழுப்பிக் கொண்ட சங்கச் சான்றோர் ஒருவர் அதற்கான காரணத்தை நிரல்படக் கூறுகிறார்.

    “உண்டால் அம்ம இவ்வுலகம்! இந்திரர்
    அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
    தமியர் உண்டலும் இலரே! முனிவிலர்!
    துஞ்சலும் இலர்! பிறர் அஞ்சுவது அஞ்சிப்
    புகழெனின் உயிரும் கொடுக்குவர்! பழியெனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலர்! அயர்விலர்!
    அன்ன மாட்சி அனை யராகித்
    தமக்கென முயலா நோன்தாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!” (புறம். 182)

    இந்தப் பாட்டில் தலையாய தகுதியைப் பாட்டின் இறுதியிலே பதிவு செய்தவர் ஏனைய தகுதிக் கூறுகளைப் பாட்டின் உள்ளடக்கமாகப் பதிவு செய்திருப்பதைக் காணலாம். ‘தனித்து உண்ணமாட்டார், சினங்கொள்ளமாட்டார், புகழுக்காக உயிரும் கொடுப்பார், பழியொடு வருவது உலகமே எனினும் அதனை விரும்பார், தளர்ச்சியறியாதவர்’ என்னும் இவையெல்லாம் தகுதிக்கூறுகள். இந்தத் தகுதிக் கூறுகள் இருக்க வேண்டுமாயின் அவர் எத்தகைய இயல்பினராக இருக்க வேண்டும் என்று எண்ணிய புலவர் ‘அவர் தன்னலமற்றவராக’ இருக்க வேண்டும் என்னும் தரமுத்திரையைப் பாட்டின் இறுதியிலே வைத்துவிடுகிறார். தன்னலமற்றவர் இருப்பதால்தான் இவ்வுலகமும் இருக்கிறது என்பது வழுதியின் கருத்து. இதே தன்னல மறுப்புணர்வைத் திருவள்ளுவர் ‘பண்பு’ என்னும் ஒற்றைச் சொல்லால் அடக்கிப்,

    “பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் ;
    மண்புக்கு மாய்வது மன்” (கு.996)

    என்னும் குறட்பாவில் பண்புடையவர் இருப்பதால் உலகம் இருக்கிறது என்று புறநானூற்றை வழிமொழிந்து, கூடுதல் தகவலாக அப்படி யாராவது இல்லாது போயிருந்தால் இவ்வுலகம் என்றைக்கோ மண்ணுக்குள் மறைந்து போயிருக்கும் என்பதையும் கூறுகிறார். இவ்விரண்டு பாடல்களில் உவமங்கள் இல்லை. கருத்தியல் பதிவாக மட்டும் இருக்கின்ற இதற்கு உவமத்தால் அடர்த்தி கூட்டுகிறார் ஔவையார்.

    நெல்லுக்கிரைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை” (மூதுரை – 10)

    ஔவையாரின் இந்தப் பாட்டில் ‘தன்னலமறுப்பாளர்’ என்று புறநானூற்றிலும் ‘பண்புடையார்’ என்று திருக்குறளிலும் சொல்லப்பட்டவர்க்கு மூதுரையில் ‘நல்லார்’ என்னும் பட்டம் சூட்டப்படுகிறது. அந்த நல்லவரால் அல்லாதவர்ககும் வாழ்வாம் என்பது ஔவையின் கருத்து. கருத்துப் பரிணாமம் இப்படி விரிகிறது!. இவர்களால் இந்த உலகம் இருக்கிறது என்பது புறநானூறு. இவர்களால் இந்த உலகம் இருக்கிறது. அத்துடன் இவர்கள் இல்லாவிட்டால் என்றைக்கோ அழிந்து போயிருக்கும் என்பது திருக்குறள். இவர்கள் இருப்பதால்தான் உலகம் இருக்கிறது இவர்களால் மற்றவர்களுக்கும் நன்மை என்பது மூதுரை. மற்றவர்களுக்கும் நன்மை என்பதற்குத்தான் ‘நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பாயும்’ என்ற உவமப்பயன்பாடு.

    “சாந்துணையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
    ஆந்துணையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
    குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து
    மறைக்குமாம் கண்டீர் மரம்!” (மூதுரை – 30)

    கோடரி கொண்டு தன்னை வெட்டுபவனுக்கும் நிழல் தரும் மரத்தினை உவமமாக்கி மேலே சொல்லப்பட்ட பண்புடையார், தன்னல மறுப்பாளர், நல்லவர் என்பாருக்குப் புதிய பரிமாணத்தை உவமவழிக் காட்டுகிறார் ஔவை. கருத்தியல் பரிணாமத்திற்கு ஏற்ப எந்தக் கருத்துக்கு எந்த இடத்தில் எத்தகைய உவமத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவர்கள் நம் முன்னோர்!,

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

    பேரறிஞர் அண்ணா அவர்களின் எளிய தோற்றம் நாடாளுமன்ற வளாகத்திலேயே அவருக்குப் பல சங்கடங்களைக் கொடுத்திருக்கிறது. பேரறிஞர் பெர்னார்ட்ஷாவிற்கும் இந்த அனுபவம் உண்டு. உருவத்தின் எளிமையாலும் சிறுமையாலும் மானக்கேட்டிற்கு உள்ளானவர்களின் வரலாறு உலக அரங்கில் உண்டு.  பராசக்தி படத்திற்கு அவரது உருவத் தோற்றத்தால் முதலில் நிராகரிக்கப்பட்டவர்தான் நடிகர் திலகம். ‘உருவத்தைக் கொண்டு மனிதர்களை எடைபோடக்கூடாது’ என்பது அறிவுரையானால் ‘அப்படி எடைபோடுவது இந்த மண்ணின் எதிர்மறைப் பண்பாகத்தான்’ கொள்ள வேண்டியதிருக்கிறது. திருவள்ளுவர் சொல்கிறார்,

    “உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சாணி அன்னார் உடைத்து” (கு. 667)

    ‘உருள் சுழலாது அதன் கடைக்கண் செருகுமது வடிவால் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து” என்று விளக்கம் தருவார் பரிமேலழகர். ஒருவன் திட்பம் நோக்கிக் கொள்ளவேண்டுமேயன்றி உருவம் கண்டு கொள்ளக் கூடாது என்பது கருத்து. வள்ளுவன் சொல்லிய இந்தக் கருத்தினை,

    “மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
    உடல் சிறியர் என்றிருக்க வேண்டாம் – கடல் பெரிது
    மண்ணீரும் ஆகா அதனருகே சிற்றூறல்
    உண்ணீரும் ஆகி விடும்” (மூதுரை 12)

    என்னும் பாடலில் நெய்தற் பொருளை உவமமாக்கிப் பாடுகிறார் ஔவை. தாழையின் மடல் பெரிதென்றாலும் மயக்கும் மணத்தைத் தரும் இதழ் வடிவால் சிறியது. தாழையின் மடல் வேறு இதழ் வேறு. அது மட்டுமன்று நெய்தற்கடல் பெரிது. ஆனால் அந்நீர் நன்னீராகாது. கடற்கரையில் இருக்கும் ஊற்றுநீர் அளவால் சிறிதே யானாலும் அருந்துவதற்குப் பயன்படும். இரண்டு உவமங்களைச் சொல்லிய ஔவை, ‘உடல் சிறியர் என்று இருக்க வேண்டாம்’ என்று ஒரு வரியில் உண்மையைச் சொல்லுகிறார்.

    அற்ற குளத்து அறு நீர்ப்பறவை

    நட்பைப் பற்றித் திருவள்ளுவர் பலபட ஆராய்ந்திருக்கிறார். அவ்வாறு ஆராய்ந்து அன்னார் எழுதிய குறட்பாக்களில் ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “கெடுங்காலை கைவிடுவார் கேண்மை அடுங்காலை
    உள்ளினும் உள்ளம் சுடும்” (கு. 799)

    ஒருவனுக்குக் கேடுவரும் போது அவனைவிட்டு நீங்குவாருடைய நட்பை உயிர்போகின்ற அந்த நேரத்தில் எண்ணினால் அந்த நட்பை நினைத்த உள்ளத்தை அது (அந்த நட்பு) சுடும் என்பது கருத்து. எந்த நிலையிலும் பண்பாடு தவறாதவர் திருவள்ளுவராதலின் தன்னைக் கைவிட்டவரைச் சுட்டாது தன்னைக் கழித்து மறந்த கேண்மையை எழுவாயாக்கி உரைத்த மாண்பு காண்க. கேண்மைதான் சுடும். ‘அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு கொள்ளற்க’ (798) என்பதும் அது. திருவள்ளுவரின் இந்தக் கருத்தியல் நூற்பாவிற்கு அழகியல் மேம்பட கவிதை உரையெழுதியிருக்கிறார் ஔவையார்.

    “அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
    உற்றுழி தீர்வார் உறவல்லர் –  அக்குளத்தில்
    கொட்டியும ஆம்பலும் நெய்தலும் போலவே
    ஒட்டி யுறவார் உறவு” (மூதுரை – 17)

    நீர் இருக்கும் வரை இருந்து, குடித்து, குளித்து, வாழ்ந்து, உறவாடிய பறவை நீர் குறைந்தவுடன் குளத்தோடு இருந்துவந்த உறவை அறுத்துப் பறந்துவிட, நீர் இல்லாது வறட்சி வந்த காலத்தும் கொட்டி, ஆம்பல், நெய்தல் ஆகிய மலர்கள் காய்ந்து மடியும். முன்னதைக் கூடா நட்பிற்கும் பின்னதைக் கொள்ள வேண்டிய கேண்மைக்கும் உவமமாக்குகிறார் ஔவையார். பறவை குளத்தில் பிறக்காதது. வந்து போவது. குளம் அதற்கு வேடந்தாங்கல். வேர்த்தாங்கல் அல்ல. துன்பம் வந்த போது குழுமுவது நட்பு. விலகுவது நட்பன்று. நட்பு உறவாவது அதன் பரிணாமம். ‘உயிரோடு உடம்பிடை நட்பு’ என்பார் திருள்ளுவர். அறிமுகம் நட்பாகாது. நீர்ப்பிடிப்பெல்லாம் நட்பாகாது. வேர்ப்பிடிப்பே நட்பு. ஔவையாரின் பாடலில் அழகியல் புனைவு பாதி. ஆழமான அறிவுரை பாதி!.

    பொற்கொல்லன் இல்லமும் தாமரைத் தடாகமும்

    புறநானூற்றில் புலவர்கள் பலர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். புலவர்கள் சிலர் ஒரே பாட்டை மட்டும் பாடியிருக்கிறார்கள். அப்படிப் பாடியவர்களில் கண்ணகனார்  என்னும் சான்றோரும் ஒருவர். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்நீத்த போது அவர் உயிர் நண்பர் பிசிராந்தையர் அங்குவந்து அவரும் வடக்கிருந்து உயிர்நீத்த நிகழ்வு கண்டு நெகிழ்ந்து பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. அந்த ஒருபாடல்தான் புறநானூற்றில் அவர் பாடியதாக இருக்கிறது.

    “பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
    மாமலை பயந்த காமரு மணியும்
    இடைப்படச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
    அருவிலை நன்கலம் அமைக்குங்காலை
    ஒருவழித் தோன்றியாங்கு – என்றும் சான்றோர்
    சான்றோர் பாலர் ஆப!
    சாலார் சாலார் பாலர் ஆகுபவே” (புறம். 218)

    இப்படி அமைந்த இந்தப் பாடலில் வேறுபட்ட இடத்தில் விளையும் வேறுபட்ட பொருள்கள் நல்வினை நிகழும் சூழலில் ஒன்றுபடும் என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது. பொழுதுநோக்கிப் பாடப்பட்டிருப்பினும் இணையும் பொருள்கள் தம்முள் இணையாகி இயைந்தவை என்பது நோக்கத்தக்கது. இந்தச் சிந்தனையை ஔவையார்,

    “நற்றாமரைக் குளத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பில்லா
    மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
    காக்கை உகக்கும் பிணம்!” (மூதுரை – 24)

    என்னும் வெண்பாவில் ‘நல்லவரே நல்லவரை நாடிச் செல்வர்’ என்னும் கருத்தமையப் பாடியிருக்கிறார். சங்க இலக்கியத்தில் நேர்முகப் பதிவு மட்டும் அமைந்திருக்க  ஔவை எதிர்மறைப் பதிவினையும் உடன் சொல்லுகிறார். நல்ல தாமரைக் குளத்தை அன்னம் நாடும். கற்றாரைக் கற்றார் நாடுவர். கல்வியில்லாத மூடரை மூர்க்கர் விரும்புவர் என்பதாம். காமுறுவர் மற்றும் முகப்பர் என்பன உயர்திணை முரண்கள் எனின் உகக்கும் என்பது அஃறிணை உடன்பாடு என்பது அறிக. இனிப் பாட்டின் நுண்ணியத்தை நற்றாமரைக் குளத்தைத் தேடி நல்லன்னம் செல்வதற்கும், முதுகாட்டில் கொண்டு வந்து போட்ட பிணத்தைக் காக்கை உகப்பதற்குமான இடைவெளியில் காணலாம்.

    சந்தனக்கோல் குறுகினாலும் சந்தனமே

    ‘குடகு’ என்ற சொல்லில் வரும் இரண்டு உகரங்களில் முதலில் நிற்பது முற்றியலுகரம். இறுதியில் நிற்பது குற்றியலுகரம். முன்னது ஒரு மாத்திரையாய் ஒலிக்க இறுதியது அதனின் குறைந்து ஒலிக்கும். குறைந்தொலிக்கும் அதனை உகரம் எனல் பொருந்துமோ என்னும் ஆய்வில் உரையாசிரியர் இளம்பூரணர் ஈடுபடுகிறார்.

    “அவைதாம்,
    குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற
    முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன”  (தொல். எழு.2)

    என்னும் தொல்காப்பிய நூற்பா, சார்பெழுத்துக்களைப் பற்றியதாகும். இந்த நூற்பாவின் அடிப்படையில் குற்றியலுகரம், குற்றியலுகரங்களின் இயல்பு பற்றி ஆராயும் இளம்பூரணர் அவற்றைத் தனியெழுத்துக்களாகக் கொள்ளாது உயிரது குறுக்கமாகவே கொள்கிறார். கொண்டு,

    “சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது அதுபோல இகர உகரங்கள் குறுகின இடத்தும் அவை உயிர் ஆகற்பாலன”

    என்று எழுதுகிறார். நூற்றுக்கணக்கான உவமைகளைப் படைத்துக் காட்டும் ஆற்றல் மிக்க நச்சினார்க்கினியரும் இதே நூற்பாவிற்கான தம் விளக்கத்தில் இளம்பூரணர் பயன்படுத்திய உவமத்தையே வழிமொழிந்திருக்கிறார். உகரம் உயிரெழுத்தாதலின் ‘உகரக்குறுக்கமும்’ உயிரெழுத்தே என்பது அவர்தம் கருத்து. இக்கருத்தைச், “சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது” என்னும் உவமத்தால் உயிரின் குறுக்கம் உயிராகுமேயன்றிப் பிறிதாகாது என்னும் இவ்விருவர்தம் அளவையியல் முடிவுக்கு இந்த உவமம் பயன்பட்டுள்ளது. உரையாசிரியர்களின் உவமக் கோட்பாடுகளில், ஒருவர் கண்டு மொழிந்த உவமத்தை மற்றொரு உரையாசிரியர் வழிமொழிந்திருப்பது புலமையோடு பண்புசார்ந்த வெளிப்பாடாகக் கருதப்படலாம். ஏனைய கோட்பாடுகள் அறிவும் புலமையும் சார்ந்திருக்க உண்மையோடு உறழ்ச்சி கொள்ளாது ஒத்துப்போகும் உயரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் வண்ணமாக வழிமொழிதலாகிய இக்கோட்பாடு விளங்குவது காண்க. உரையாசிரியர்கள் இலக்கண விளக்கத்திற்காக பயன்படுத்திய இந்த உவமத்தை ஔவை இலக்கியத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

    “சந்தனம் மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
    கந்தம் குறைபடாது ஆதலால் – நந்தம்
    தனம் சிறிய தாயினும் தார்வேந்தர் கேட்டால்
    மனஞ்சிறியர் ஆவாரோ மற்று?” (மூதுரை – 28)

    கொடுத்தே பழகிய குமணனும் அதியனும் ஊழ்வினை காரணமாகச் செல்வத்தில் குறைந்த காலத்தும் கொடுக்கும் இயல்பினின்றும் மாறுபடார் என்னும் கருத்தை ஔவை சந்தனக் கட்டை, சந்தனக் குச்சியாக மாறினாலும் கந்தம் மாறாது, கடமை தவறாது என்று உண்மையுரைக்கிறார். இளம்பூரணர் கையாண்ட உவமத்தை நச்சினார்க்கினியர் பயன்படுத்திக் கொள்கிறார். அவர்கள் இருவரும் இலக்கண விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதை ஔவை இலக்கியத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார். ஒரே உவமத்தில் மனம் பறிகொடுத்த புலவர்களின் மனநிலையைப் புகழ்வதா? மூவரையும் ஈர்த்த அந்த உவமத்தின் சிறப்பைக் கருத்தில் கொள்வதா?

    தோகை மயிலும் சிறகுக் கோழியும்

    பலத்தை முன்னிறுத்தி இறுமாப்புக் கொள்வதைவிடப் பலவீனத்தை உணர்ந்து அடக்கமாக இருப்பதே சிறந்தது. ஆனால் உலகியல் இதற்கு மாறுபட அமைந்திருக்கிறது. அண்டங் காக்கைகள் எல்லாம் தங்களைக் குயில்களாக எண்ணிக்கொள்வதும் கரிக்கட்டைகள் தங்களை ஊதுவத்திகளாக எண்ணிக் கொள்வதும் இங்கே நியதியாக இருக்கிறது. ’பாரதி’ என்னும் பெயரை அபிமானத்தால் வைத்துக் கொள்வது வேறு. ‘பாரதி’ என்று பெயர் வைத்திருப்பதாலேயே தங்களையும் ‘மகாகவி’ என எண்ணிப் பிறரை நடுங்க வைப்பது என்பது வேறு. பின்னவர் இங்கு அதிகம்.  திருவள்ளுவர் காலத்திலிருந்தே இந்தப் போலிகள் பற்றிய சிந்தனை இங்கே இருந்து வந்திருக்கிறது.

    “கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
    கொள்ளார் அறிவுடை யார் “ (கு. 404)

    அறிவு இரண்டு கூறுகளை உடையது. ஒன்று கல்வி. இரண்டு கேள்வி. கேள்வி மட்டும் உடையவனின் கேள்வியும் நிறைவு பெறாது. அவன் அறிவும்  முழுமைபெறாது. அந்தப் போலி அறிவுடைமையைத்தான் திருவள்ளுவர் ‘ஒண்மை’ என்னும் சொல்லால் குறிக்கிறார். மணற்பரப்பில் நத்தையால் கிழிக்கப்படும் கோடு கோடானாலும் அடுத்த அலையில் அது அழிந்துவிடுமாதலின் அது நிலைபெறாது. இந்தக் குறட்பாவிற்குக் காட்சியளவையால் விளக்கவுரை எழுதுகிறார். ஔவை,

    “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
    தானும் அதுவாகப் பாவித்து – தானும் தன்
    பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
    கல்லாதான் கற்ற கவி” (மூதுரை – 14)

    மயில் ஆடுகிறபோது தோகை தானாக விரியும். சிறகைத் தோகையாக எண்ணித் தன்னை மயிலாகக் கருதிக் கொள்ளும் வான்கோழி ஆடுகிறபோது அது தன் முயற்சியால் விரித்துக் கொள்கிறதாம். ‘விரித்து ஆடினால்’ என்னும் இருசொல் தொடர் தரும் நுண்ணியம் இது. அறிவுடையவன் கவிபாடினால் தானாக இனிக்கும். கல்லாதவன் முயன்று பாடினாலும் இனிக்காது. மாறாகக் கேட்பவனுக்குக் காது மடல் கசக்கும். பாவனையினால் வரும் கேட்டினைப் பறவைகளை வைத்து விளக்கியிருக்கும் ஔவையின் பாடல் இது.

    நிறைவுரை

    கருத்தியல் அளவைக்கு உவம அளவையைக் கூட்டுதல். உவமத்தோடு இருந்த கருத்தியல் பதிவுகளுக்குக் கூடுதல் உவமங்களைக் காட்டி விளக்குதல். ஒரு கருத்தியலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உவமங்களைப் பயன்படுத்துதல் என்பனவெல்லாம் ஔவையின் உவமக் கோட்பாடுகளாக அறியக் கிடக்கின்றன. கருத்தோடு இயைந்த நீதிகளைக் கண்ணோடு இணைந்த காட்சிகளைக் கொண்டு விளக்கும் ஔவையின் உவமக் கோட்பாடு தனித்தன்மை மிக்கது. தமிழ் வரலாற்றில் ஔவைகளுக்குப் பஞ்சமில்லை. சிவபெருமான் குடும்பச் சிக்கலைத் தீர்த்த நீதிபதி ஔவை,, அதியமானுக்காகத் தூது சென்ற அமைச்சர் ஔவை, கம்பனையும் ஒட்டக்கூத்தனையும் வம்புக்கிழுத்த வழக்கறிஞர் ஔவை, சோழனையே எதிர்த்த போட்டியாளர் ஔவை, நீதிநூல்கள் பாடிய பாவலர் ஔவை என்று பலராகவே இருந்துவிட்டுப் போகட்டும். அது பற்றிய கவலை நமக்குத் தேவையில்லை. அது ஆய்வாளர் பணி. மரங்கள் பலவாகட்டும் நிழல் ஒன்றுதானே! உண்ணுதற்கே விருந்து! விரித்த இலை யாருடைய தோட்டத்தில் விளைந்தது என்ற ஆராய்ச்சி தேவையற்றது!  எந்த ஔவையாக இருந்தால் என்ன? எண்ண வேண்டிய நீதிகளை இனிக்கும் உவமங்களால் பந்தி வைத்த எல்லா ஔவைகளையும் போற்றுவோம்! அவர் பாடல்கள் நமக்குப் பாடமாகட்டும்!

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(371)

    குறளின் கதிர்களாய்…(371)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(371)

    சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன்
    சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

    – திருக்குறள் – 445 (பெரியாரைத் துணைக்கோடல்)

    புதுக் கவிதையில்

    நல்லாட்சி மக்களுக்கு
    நல்க,
    நல்ல அறிவுரைகள் வழங்கும்
    அறிஞர் தமையே
    கண்ணாய்க் கொண்டே
    அகிலம் இயங்குவதால்,
    அரசனும்
    அத்தகைய பெரியோரை
    ஆராய்ந்தறிந்து
    நட்புக்கொள்ள வேண்டும்…!

    குறும்பாவில்

    நல்லறிவுரை வழங்கும் அறிஞரை
    உலகம் கண்ணாய்க் கொண்டியங்குதலால் அரசனும்
    அத்தைகையோரை அறிந்து நட்புக்கொள்க…!

    மரபுக் கவிதையில்

    நல்லதா யாட்சி நல்கிடவே
    நல்ல அறிவுரை வழங்குகின்ற
    வல்லவர் தமையே கண்ணெனவே
    வகுத்து வையமே இயங்குதலால்,
    நல்லது செய்ய நாட்டரசன்
    நம்பி யத்தகு பெரியோரின்
    நல்லதாம் துணையைப் பெற்றிடவே
    நட்புக் கொள்ளுதல் நலந்தருமே…!

    லிமரைக்கூ

    அறிவுரை தந்திடும் பெரியோர்,
    அகிலத்தின் கண்களாம் இவரே அரசனின்
    நட்பைக் கொண்டிட உரியோர்…!

    கிராமிய பாணியில்

    தொணகொள்ளு தொணகொள்ளு
    நல்லது சொல்லுற தொணகொள்ளு,
    பெரியவங்க தொணகொள்ளு..

    நல்ல வழிகள எடுத்துச்சொல்லுற
    நாலுமறிஞ்ச பெரியவங்களக்
    கண்ணா வச்சித்தான்
    ஒலகமே நடக்குது,
    அதுனால
    நாடாளுற ராசாவும்
    இதுமாதிரி பெரியவுங்கள
    ஆராஞ்சறிஞ்சி
    நட்பாக்கிக் கொள்ளணும்..

    அதால
    தொணகொள்ளு தொணகொள்ளு
    நல்லது சொல்லுற தொணகொள்ளு,
    பெரியவங்க தொணகொள்ளு…!

    Share
  • மனமகிழ மனமுறையும் பெருவிழாவே  நவராத்திரி!

    மனமகிழ மனமுறையும் பெருவிழாவே நவராத்திரி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஒன்பது என்பது எண்களிலும் முக்கியமானது. ஜோதிடங்களிலும் முக்கிய மானது.எண்கணித ஜோதிடத்திலும் இன்றியமையாததாய் இருக்கிறது.இந்த ஒன் பதை நவ என்னும் பெயரினைக் கொடுத்து இராத்திரியுடன் இணைத்து நவராத்திரி என்றும் அழைக்கின்றோம்.நவராத்திரி என்றாலே ஒன்பது இரவுகள் என்பதையும் எல்லோரும் அறிவோம். நவ – என்றால் இன்னுமொரு கருத்தும் இருக்கிறது. அதாவது புதுமை என்பதையும் கருத்திருத்த வேண்டும். நவநாகரிகம் என்று – புதிய அம்சங்களுடன் வந்தமைந்த நாகரித்தைப் பெயரிட்டு அழைக்கிறோம் என் பதையும் யாவரும் அறிவோம்.புதுமைகள் பல வாழ்வில் தொடர்ந்து வரவேண்டும் என்னும் எண்ணத்தினால்த்தான் வருடந் தோறும் நவராத்திரியினைப் பக்தி பூர்வமாக அனுஷ்டித்து வருகிறோம் என்றும் எண்ணிடத் வைக்கிறதல்லவா !

    நவராத்திரி என்றவுடன் பெண்மைதான் முன்னே வந்து நிற்கும். பெண்மை என்றதும் அங்கு தலைமை தாங்குவது தாய்மைதானே! தாயினைத் தெய்வமாக வணங்கும் முறை தொன்று தொட்டு சமூகத்தில் இருந்து வருகிறது என்பதை வரலாற்றால் அறிந்து கொள்ளுகிறோம்.எம்மைப் படைத்த ஆண்டவனையே “அம்மையே” என்றுதான் அழைத்து ஆராதிக்கின்றோம். மணிவாசகப் பெருமானே “அம்மையே அப்பா ஒப்பிலாமணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்று தாயினையே முன்னிறுத்தி அந்தப் பரம்பொருளை விழிக் கின்றார். ” தாயினும் நல்ல தலைவர் என்றடியார்” என்றும், “தாயும் நீயே தந்தையும் நீயே” என்றும். சம்பந்தப் பெருமானும் தாயினை முன்னிறுத்திப் பாடுவதும் நோக்கத்தக்கதே.தமிழ் மூதாட்டி ஒளவையார் எத்தனையோ அறிவு ரைகள் பகர்ந்தவர். அவர்கூட கொன்றை வேந்தனை ஆரம்பிக்கும் வேளை “அன்னையும்” என்றுதான் முதலடியாகக் கொண்டு ஆரம்பிக்கிறார்.

    நாம் வாழும் பூமியைய் தாய் என்கின்றோம். வாழ்வினுக்கு அவசியமான பொறுமையைத் தாய் என்கின்றோம். அனைவரின் அகத்திலும் அமரவேண்டிய கருணையையும் தாய் என்றுதான் சொல்லுகிறோம். ஓடுகின்ற ஆறுகளுக்கும் தாய்மையைக் கொண்ட பெண்களின் பெயர்களையே சூட்டி பெருமைப்படுத் துகிறோம் அல்லவா!

    உலகிலே யாவராலும் மதிக்கப்படுவதும், புனிதமாய் கருதப்படுவதும் என்ன வென்று பார்க்குமிடத்து  அஃது தாய்மையாய்த்தான் மலர்ந்திருக்கிறது எனலாம். தாய்மைக்கு ஈடாக எதுவுமே இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவேதான் தாய்மையை வழிபாட்டு நிலைக்கு எங்கள் முன்னோ ர்கள் உயர்த்தினார்கள் எனலாம். அந்தத் தாய்மையினை நவராத்திரியுடன் இணைத்து – ஒன்பது இரவுகளையுமே தாய்த் தெய்வ வழிபாடாக எங்களின் முன்னோர்கள் அமைத்து விட்டார்கள். பெண்மை என்றாலே பெருஞ்சக்தி என்றுதான் போற்றப்படுகிறது. அந்த வகையில் பெருஞ்சக்தியாக உருவெடுக்கும் தெய்வத்துக்கு ஒப்பிட்டுத்தான் சக்தி வழிபாடு என்பதே தொடங்கி இருக்கலாம் என்று கருதமுடிகிறதல்லவா! அகிலத்தின்  இயக்கத்துக்கு அந்தச்சக்தியே முதன்மையாய் இருக்கிறது அல்லவா! அப்படிப்பட்ட சக்தியானது இல்லாவிட்டால் இந்த அகிலத்தின் இயக்கமே அற்றுவிடும் அல்லவா? இந்த அடிப்படையில் சக்தியை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதே பக்தி பூர்வ மான நவராத்திரி விழாவாகும்.

    சிவ என்றால் ஏகன் என்பதே அர்த்தமாகும். ஏகம் என்றால் ஒன்று என்றுதானே பொருள்.அதனால்த்தான் சிவனுக்கு உரிய ராத்திரியான சிவராத்திரியை ஒன்றாக் கினார்களோ தெரியவில்லை. நவ என்றால் ஒன்பது. நவசக்திகளைக் குறிக்க நவ ராத்திரியை ஏற்படுத்தியும் இருக்கலாம் அல்லவா! சக்தி பெரிதா சிவன் பெரிதா என்று எடுத்து வீண் வாதம் மட்டும் செய்து விடவே கூடாது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையேல் சக்தியும் இல்லையே என்றாகிவிடும். இரண்டுமே பிரிக்க முடியா நிலையாகும். இதனால்த்தான் “மன்னுயிர்கள் சாரத் தருஞ் சக்தி – பின்னமிலான் எங்கள் பிரான்” என்று திருவருட்பயன் காட்டி நிற்கிறது.

    வடக்கே காஷ்மீர் தொடக்கம் தெற்கே கன்யாகுமரிவரை, மேற்கே பாஞ்சால த்திலிருந்து கிழக்கே பர்மா வரை, ஈழத்தில் பல பகுதிகளிலும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சைவர், வைணவர், சாக்தர், காணாபத்தியர், என்று எல்லா மதத்தவர்களுமே நவராத்திரியை அனுஷ்டிக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்க தேயாகும். நவராத்திரி எப்பொழு ஆரம்பிக்கப்பட்டது என்று பார்க்கும் பொழுது – பாரத காலம், இராமாயண காலம் என்று நீண்ட காலமாகவே நவராத்திரி கைக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்றுதான் அறிய முடிகிறது.

    நவராத்திரி என்பது சக்தியை மையப்படுத்திய பூஜையாக இருப்பதால் – இதனைப் பல பெயரில் அழைத்து அனு‌ஷ்டித்து வருவதும் நோக்கத்தக்கது. அம்பாள் எனக் காஷ்மீரிலும், பவானி என ராஜஸ்தானிலும், கல்யாணி என கூர்ஜரத்திலும், உமையென்று மிதிலைப்பகுதியிலும், அழைத்துப் போற்றிப் பரவுகின்றனர்.இதனை விடவும் – மீனாட்சி, காமாட்சி, சாமுண்டி, சரஸ்வதி, துர்க்கை, பகவதி என்றும் பெயரிட்டு சக்தியை போற்றி வருவதையும் காணக்கூடியதாகவும் இருக்கிறது.

    சக்தியினைப் பரவி நிற்கும் நவராத்திரி என்பது ஒன்றல்ல. நவராத்திரி என்பது வருஷத்தில் நான்கு முறை வருகிறது. மஹா நவராத்திரி என்னும் பெயருடன் தையில் வருகிறது. வஸந்த நவராத்திரி என்பது பங்குனியில் வருகிறது, ஆனியில் வருவது ஆஷாட நவராத்திரியாய் அமைகிறது. புரட்டாசியில் வருவது சாரதா நவராத்திரி. இந்த சாரதா நவராத்திரியைத்தான் இந்தியா தொடக்கம் ஈழம்வரை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவின் வடபகுதியில்  ‘தசரா” என்னும் பெயருடன் கலைமகளின் விழா அமைகிறது. நாங்கள் நவராத்திரி விழாவாக எடுக்கின்றோம். நவராத்திரியின் நிறைவினை விஜயதசமி என்று அழைக்கிறோம். விஜயதசமியையும் உள்ளடக்கியே வடக்கில் “தசரா” என்றார்களோ என்றும் கருதக்கூடியதாக இருக்கிறதல்லவா!

    நவம் என்றால் ஒன்பது  எண்ணிக்கை என்று பார்த்தோம்.. அது எண்ணிக்கை மட்டுமல்ல – புத்துணர்ச்சி என்னும் கருத்தையும் தாங்கியே நிற்கிறது. கலைகளைப் போற்றி நின்று கொண்டாடும் வழிபாட்டு விழாவாக நவராத்திரி அமைகிறது எனலாம். கலைகளை முன்னிறுத்தி அனுஷ்டிக்கும் பொழுது அங்கு புத்துணர்வு மேலிடுவது இயல்பான ஒன்றல்லவா? இதனால் நவராத்திரி புத்துணர்வினை நல்கி புதுத்தெம்பு பெருகி வாழ்வில் மகிழ்வினை நல்கிட உதவும் விரதமாய், கொண்டாட்டமாய் அமைகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    எங்களின் சமயம் எங்கள் வாழ்வுடன் இணைந்தே வருகிறது. ஆனபடியால்த்தான் வளர்ந்து கொண்டே வருகிறது.  தளர்வுண்டு போகாதிருப்பதற்குக் காரணம் அதன் தொடர் நிலை என்றுதான் என்ண முடிகிறது. அப்படித் தொடர்வதற்குக் காரணம் –  நாங்கள் சமயத்தை வாழ்வியல் ஆக்கிக் கொண்டதே முக்கிய நிலை எனலாம். கடவுளையே உறவு முறையில் அழைத்து கடவுளுக்கே குடும்பமும் வைத்து வாழ்வியயோடு இணைத்து நிற்கும் சமயத்தை உலகில் எங்குமே காணமுடியாது. அதனால் வாழ்வுக்கு வாழ்வியலுக்கு எவை எல்லாம் இன்றியமையாதனவோ அவற்றையெல்லாம் இறையுடன் இணைத்து அவற்றுக்கு பெருமையும் பெறுமதியும் காட்டி நிற்பதுதான் எங்கள் சமயத்தின் உன்னதம் எனலாம். கர்த்தர், கருணாநிதி, பிதா, பிள்ளை, அண்ணல், அரும்பொருள், நாயகன், நடுநிலையாளன், மாண்புடையான், மெய்ப்பொருளானவன், தலைவன், தோழன், என்றெல்லாம் அன்பு பாராட்டி அழைக்கின்றார் அந்தப் பரம்பொருளை. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக “தாய்” என்று அழைப்பதே சிறப்புடையதாகும் என்று தவசிரேஷ்டர்கள் எண்ணுகிறார்கள்.

    தாயிடத்துப் பிள்ளை உரிமையுடன் எதையுமே கேட்கும் நிலை இருக்கிறது. தாயான சக்தியிடம். வாழ்வினில் செம்மையாக வாழ எவையெல்லாம் எமக்குத் தேவை என்பதைத் காட்டி நிற்பதுதற்கு நவராத்திரி எல்லோருக்கும் வரமாய் வாய் த்திருக்கிறது எனலாம்.

    நல்ல நலம் வேண்டும். இவ்வுலகில் வாழுதற்கு நல்ல வளம் வேண்டும். நலமும் வளமும் வாய்த்துவிடுவது மட்டும் முக்கியமல்ல. அத்துடன் தெளிவும் வரவேண்டும். நலமென்னும் என்னும் பொழுது வீரமாகிறது.வளம் என்னும் பொழுது செல்வம்  ஆகிறது.தெளிவென்னும் பொழுது கல்வி வந்து அமைகிறது தெளிவைத் தரும் கல்வியையும், வளத்தைத் தரும்   செல்வத்தையும், நலத்தைத் தரும் வீரத்தையும் தந்தருளவாய் தாயே என்று மனமுருக  வேண்டிப் பிரார்த்தி த்து நிற்பதுதான் நவராத்திரியாய் வந்து அமைகிறது. வீரத்துடனும், செல்வத்துட னும் அறிவு அதாவது கல்வியானது இணைய வேண்டும். அப்படி இணைந்தால் த்தால் வீரமும் செல்வமும் ஒழுங்கான முறையில் பயனை அளிக்கும். அப்படி அமையும் பொழுது அங்கே வெற்றி என்னும் வெளிச்சம் பிரகாசமாய் வந்து நிற்கும். இதுதான் உண்மை. இதுதான் நிச்சயம். இதனை உணர்த்துவதாய் அமைவதுதான் நவராத்திரி. இந்த வெற்றியையே உணர்த்தி நிற்பதைத்தான்  விஜயதசமி என்று கொண்டாடி மகிழ்கிறோம்..

    சக்தியின் வடிவங்கள் பற்பல. எந்தத் தேவைக்கு என்ன சக்தி தேவையோ அந்தச் சக்தியாய் – தாயாய் விளங்கும் ஆதிசக்தி வந்து நிற்பாள். நாட்டின் ஆட்சி அதிகார த்தை நடத்தும் மந்திரிசபையில் பாதுகாப்பு, கல்வி, நிதி என்பதை நடத்துவதற் கென்று இருபது போல் – ஆதி சக்தியானவளும் உலக இயக்கத்துக்கு இன்றியமை யமையாதனவாகிய வீரம், செல்வம், கல்விக்கும் பொறுப்பான சக்தியாய் வருவதை நவராத்திரி விளக்கி நிற்கிறது எனலாம். துர்க்கை எனும் சக்தி வீரத்துக்கும்,   இலக்குமி எனும் சக்தி செல்வத்துக்கும், சரஸ்வதி எனும் சக்தி கல்விக் குமாய் அமைந்திருக்கிரது என்பது நோக்கத்தக்கதாகும்.

    தாய்மை என்பதைப் பெண்மையில்த்தான் காணலாம். பெண்மை என்றால் மென்மை என்றும் பொருள் இருக்கிறது. அந்த மென்மைக்குள்ளே பொறுமையும் இருக்கிறது. மோலோங்கும் சினமும் இருக்கிறது. பெண்மை அடங்கி நிற்கும் பொழுது அங்கு  மென்மை மேலோங்கும். அதே  பெண்மை பொங்கிடும் வேளை யாவுமே பொசுங்கிவிடும் வெம்மையே வெளிப்பட்டு நிற்கும். பெண்மையினை மென்மையாய்த்தான் அணுகவேண்டும். சக்திகளாய் அமைகின்ற – மலை மகளையும், அலைமகளையும், கலைமகளையும், அன்புடன் அணுகினால் வாழ்வினிலே நலமும் வரும், வளமும் வரும், நல்ல தெளிவும் வரும்.

    நல்நலமும், நல்வளமும், நல்லறிவும், ஒன்றாக இணையும் பொழுதுதான் வாழ்க்கையென்பது பூரணமாகிறுது. இதில் ஒன்று குறைந்தாலும் அஃது நிறைவுடைய வாழ்வாக அமையவே மாட்டாது.இவை மூன்றையும் பெற்றிட மனம் மொழி மெய்களால் உருக வேண்டும். நம்மை மறந்து சலனமற்ற அந்தச் சக்தியிடம் சரணடைதல் வேண்டும். கிடைத்த வளத்தை கீழாக்குவதோ பாழாக் குவதோ பொருத்தமில்லா நிலையாகும்.

    இறைவனைக் குறித்து உண்ணாமல் , உறங்காமல், உயிருக்கு வருகின்ற ஊறுகளைப் பாராமல், தவமியற்றி அதன் பயனாக வரத்தால் பல பெற்றிட்ட பலர் – கிடைத்தற்கரிய அத்தனையையும் , தங்களது ஆணவம் என்னும் அகந்தையினால் பொல்லாவழியில் செலுத்து – முடிவில் வரமும் போய் வாழ்வும் அழிந்ததை இதிகாசங்கள், புராணங்கள் வாயிலாக அறிகின்றோம்.

    சுத்தம் என்னும் பதத்தின் முன் அகரம் வந்தால் அது “அசுத்தம்” ஆகி விடுகிறது. சுரர் என்னும் பதத்தின் முன் அகரம் வரும்பொழுது “அசுரர்” வந்துவிடுகிறார். சுத்தமாய் இருப்பவர் “சுரர்”. அசுத்தமாய் இருப்பவர் “அசுரர்” என்றாகி விடுகிறதல்லவா! நவராத்திரி பற்றிய சிந்தனையில் இஃது அவசியாமா என்று எண்ணிடத் தோன்றுகிறதா? இறைவனிடம் வரம்பல பெறுவதற்கு நீண்ட நாட்கள்…. ஏன் வருடக்கணக்கில் தவமியற்றி பெறுதற்கு அரிய பேறுகளை எல்லாம் பெற்றதன் பின்னர் – அத்தனையையும் அறமில்லா வழியில் செல்லவிட்டு, ஆணவத்தின் உச்சிக்கே சென்று, முடிவில் வரமும் இழந்து, வாழ்வும் முடிந்துபோன நிலையினைப் புராணங்கள் இதிகாசங்கள் காட்டுகின்றன.

    சிவ பக்தனானா இராவணன், சிவனிடம் வரம் பெற்ற பத்மாசூரன், சிவனிடம் வரம் பெற்ற சூரபதுமன், ஹம்சன், இரணியன், மகுடாசூரன் என்று இந்தவரிசை நீள்கிறது.வீரம், செல்வம், கல்வி மூன்றும் வந்தாலும் – அங்கு அகந்தை மட்டும் வந்துவிடக்கூடாது. அறிவுடன் அதாவது நல்லறிவுடன் சேரும் வீரமும் , செல்வமுமே நிலைக்கும். பயன் அளிக்கும். பல்கியும் பெருகும். மாறாக நடப்பின் அத்தனையும் பயனற்றே போய்விடும் என்பதை மனமிருத்த வேண்டும். அந்த அருமையான தத்துவத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் பக்திபூர்வமான நிலைதான் “நவராத்திரி” என்பதையும் அனைவருமே அகமிருத்துவது அவசிய மாகும்.

    நவராத்திரி என்பது விரதமா அல்லது கலைகளின் விழாவா என்று எண்ணும் பொழுது – விரதத்துடன் இணைந்த கலைவிழாவாகத்தான் நவராத்திரியைப் பார்க்கின்றோம். நவராத்திரி தொடங்கி விட்டாலே – ஆடலுக்கும், பாடலுக்கும் குறைவே இருக்காது. கலைஞர்கள் அனைவரும் சங்கமிக்கும் விழாவாக நவராத்திரி அமைவது அனைவருக்கும் பேரானந்தமாகும். வீட்டிலும் பாட்டு. வெளியிலும் பாட்டு. கல்லூரிகள், கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்பார்க்கும் இடங்கள், யாவற்றிலும் நவராத்திரி மிகவும் சிறப்பாகக் கலை விழாவாகவும், பக்தி பூர்வமான சமய நிகழ்வாக அமைவதைக் காணக்கூடியதாக இருக்கும்.அதே வேளை அனைத்து ஆலயங்களிலுமே நவராத்திரி பக்திபூர்வமாய் நடைபெறுவதையும் காணலாம்.

    நவராத்திரி என்றதும் மனமெல்லாம் ஒருவித பூரிப்பே ஏற்படும். ஏனென்றால் கலைகளின் விழாவாக இருப்பதால். இந்த விழாவில் “கொலு” வைப்பது என்பது வீட்டிலும் இருக்கும்.ஆலயங்களிலும் இடம் பெறும். “கொலு” என்றால் அழகு என்பதுதான் அர்த்தமாகும். கொலு என்பது ஆடம்பரத்துக்காக வைக்கப்படுவது அல்ல. கொலு வைப்பதிலும் அர்த்தங்கள் பொதிந்தே இருக்கின்றன என்பதையும் கருத்திருத்தல் அவசியமேயாகும்.

    கொலுவைப்பதிலும் சில நடைமுறைகள் வழக்கில் இருந்தே வருகின்றன. அதாவது ஒற்றைப் படையில் அமையுமாறுதான் கொலுவின் படிகளை அமைத்து வருகிறார்கள்.ஆனால் அவரவர் வசதிக்கு ஏற்பவும் கொலுவினை வைத்து வரு வதையும் காணமுடிகிறது.ஒன்பது படிகளாக வைப்பதை விஷேடம் என்று கருதும் நிலையே பரவலாகக் காணப்படுகிறது.

    “ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணாலாகிய பொம்மைகளால் என்னைப் பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், செளகரியங்களையும் அளிப்பேன்” என்று தேவி பாகவதத்தில் – அம்பாள் கூற்றாக வருவது கொலு வைப்பதற்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம் அல்லவா !

    கொலு மேடையில் கீழிருந்து முதற் படியிலே – ஓரறிவான, புல், செடி போன்ற வற்றையும், இரண்டாம் படியில், ஈரறிவுடைய நத்தை, சங்கு போன்றவற்றையும், மூன்றாவது படியில், மூன்றறிவுடைய கறையான், எறும்பு போன்றவற்றையும், நான்காம் படியில் நான்கறிவான நண்டு, வண்டு, போன்றவற்றின் பொம்மை களை யும், ஐந்தாம்படியில் ஐந்தறிவான மிருகங்கள், பறவைகளின் பொம்மைகளை வைத்தல் வேண்டும். ஆறாவது படிதான் எங்களுக்கு உரியதாகும். சிந்திக்கும் அறிவுடைய நிலை மனிதர்களுக்கே இருப்பதால் இந்தப் படியில் மனிதர்களின் பலவகைப் பொம்மைகள் இடம் பெற்றிருக்கும்.ஏழாவது படியானது – மனிதனாய் இருந்தும் உயர்நிலையினை எய்திய ரிஷிகளுக்கு உரியதாய் அமைகிறது.அங்கு ரிஷிகளின் பொம்மைகள் வைக்கப்படும். மனிதருக்கும் ரிஷிகளுக்கும் அப்பால் தேவர்கள் வருகிறார்கள்.எனவே எட்டாம் படியில் தேவர்கள் இடம் பெறுவார்கள். இதில் நவக்கிரகங்கள், அட்டதிக்கு பாலகர்கள், தேவைதைகளின் பொம்மைகள் வைக்கப்படும்.ஒன்பதாம் படிதான் கடவுளருக்கு உரிய இடமாகும்.பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெருந் தெய்வங்களும், ஸரஸ்வதி , லக்‌ஷ்மி, பார்வதி ஆகிய முப்பெருந் தேவியரும், இடம் பெறுவர். நடுநாயகமாய் ஆதிபராசக்தியின் பொம்மை வீற்றிருக்கும்.

    வெறும் பொம்மைகளைக் கொண்டதாக கொலு அமைந்து விட்டது என்று எண்ணிவிடக்கூடாது. மனிதன் என்பவன் தன்னுடைய ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொண்டே வருகிறான்.அவனின் ஆன்மீகச் சிந்தனை பிரகாசிக்கும் நிலையில் முடிவில் இறைவனுடன் கலக்கவே வேண்டும். அப்படியான ஒரு தத்துவார்த்தத்தை உணர்த்துவதாகவே நவராத்திரியில் வைக்கப்படும் கொலு காட்டி நிற்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.       .

    இறை சக்தியால் நாமெல்லாம் இயங்குகிறோம். இறைசக்தியே எமக்கு இயக்க சக்தியாகும். அந்தச் சக்தியே அறிவை செல்வத்தை ஆற்றலை அளிக்கிறது. அந்த அளவிட முடியாத சக்தி அளித்த ஆற்றலை – அந்தச் சக்தியின் ஆசியுடன் வாழ்வில் கையாண்டால்  “வாழ்க்கை வழமாகும். வாழ்க்கை வையத்துள் வசந்தமாக அமையும்.”  இப்படி வாழ்வியலோடு இணைந்த சக்தியாய் அமைவது தான் நவராத்திரி விழாவின் கருப்பொருள் எனலாம்.

    மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்!
    ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
    ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
    வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.

    வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
    ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
    காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
    மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே

    பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
    மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
    அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
    தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே

    Share
  • சின்னஞ்சிறு பெண்போலே | ஜெயந்தி சுப்ரமணியன்

    சின்னஞ்சிறு பெண்போலே | ஜெயந்தி சுப்ரமணியன்

    நவராத்திரியில் கொலு வைப்பதுடன், பாட்டுப் பாடி, அன்னையை இசையால் ஆராதிப்பது நம் மரபு. சென்னையில் ஜெயந்தி சுப்ரமணியன் தம் வீட்டில் கொலு வைத்துப் பாடுகிறார். உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றி, உயர்புகழ் பெற்ற ‘சின்னஞ்சிறு பெண்போலே’ பாடலை அவரது குரலில் கேளுங்கள். அவர் வீட்டுக் கொலுவைக் கண்டுகளியுங்கள்.

    படப்பதிவு – வெ.சுப்ரமணியன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சாந்தி ஜெயராமன் வீட்டுக் கொலு

    சாந்தி ஜெயராமன் வீட்டுக் கொலு

    கொலு எப்படி வைக்க வேண்டும் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டு, இதோ. சென்னை, விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள சாந்தி ஜெயராமன் வீட்டுக் கொலுவை இணையம் வழியே கண்டுகளிக்க வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share