Blog

  • மேகி நூடுல்சு அதிர்வலை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    பன்னாட்டு நிறுவனமான நெஸ்லேயின் ‘மேகி நூடுல்சு மசாலா’, உணவுப் பொருளில் காரீயம், மோனோசோடியம் குளுட்டாமேட் ஆகிய வேதிப்பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக உத்தரப் பிரதேச மாநில உணவுக் கலப்படத் தடுப்புப் பிரிவு நடத்திய ஆய்வில் தெரிய வந்ததால் இராணுவத்தினர் மேகி நூடுல்சு உட்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சு, ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா ரிலையன்சு செலக்ட் இன்ஸ்டன் ட் நூடுல்சு, வே வே எக்ஸ்பிரஸ் நூடுல்சு, ஆகிய நூடுல்சுகள் உணவுப்பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தில்லி அரசு 13 இடங்களில் இருந்து மேகி நூடுல்சு மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்தில் சோதனை நடத்தியுள்ளது. இன்று பல மாநிலங்களில் இது தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை ஒத்த மற்ற பொருட்களும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, இதன் மலிவான விலையினால் இன்று கீழ்த்தட்டு மக்களின் குழந்தைகளையும் எளிதில் கவர்ந்திழுக்கும் இந்த நூடுல்ஸ் கவர்ச்சிகரமாக சந்தைப்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இன்னொரு அதிர்ச்சியான தகவல், நூடுல்சில் உள்ள கெடுதல் விளைவிக்கும் வேதிப் பொருளான மேனோசோடியம் குளுட்டோமேட் என்பதன் சந்தைப் பெயர் அஜினோமோட்டோ என்பதுதான். இன்று பெரும்பாலான வீடுகளில், பாரம்பரிய சமையல் உள்பட, அனைத்து வகையான பதார்த்தங்களிலும் இயல்பாகக் கலந்துவிட்ட இந்த அஜினோமோட்டோ ஏற்கனவே பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அனைத்து வகையான குளிர்பானங்களும், அனைத்து பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும் உடனடியாக ஆய்விற்கு உட்படுத்தப்படவேண்டும். இதில் முக்கியமாக பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து அளிக்கும் உணவுப் பொருட்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

    உணவுப் பொருட்களைத் தவிர்த்து ரியல் எஸ்டேட் துறையும், நகை முதலீட்டுத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மிகப்பெரும் நகைக் கடைகளும் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்படவேண்டியதும் அவசியம். உணவுப் பொருட்கள், நகை, ரியல் எஸ்டேட், மற்றும் நுகர்வோர் சம்பந்தப்பட்ட பொருட்களின் விளம்பரத் தூதர்களின் பொறுப்புகள் இன்னும் சரியான முறையில் வரையறுக்கப்படாத சட்டங்கள்தான் இன்று நம் அரசியல் சாசனத்தில் உள்ளன. எதற்கெல்லாமோ அவசரச் சட்டங்கள் பிரகடனம் செய்யும் நாம், மக்களுக்காக இதுபோன்ற வரையறுக்கப்பட்ட அத்தியாவசிய சட்டங்களை உடனே அமல்படுத்த வேண்டியது அவசியம்.

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    ரஷிய இலக்கிய மேதை – லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)

     

    Tolstoyஉலகின் மிகச்சிறந்த புதின எழுத்தாளர்களில் ஒருவராக இன்றளவும் கருதப்படுபவர், லியோ டால்ஸ்டாய் என்றழைக்கப்பட்ட லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் (Lev Nikolayevich Tolstoy). இவர் ரஷ்யாவிலுள்ள யாஸ்னயா போல்யானா (Yasnaya Polyana) எனும் ஊரில் செப்டம்பர் 9, 1828-இல் மிகவும் புகழ்வாய்ந்த பிரபுத்துவப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே தாய் தந்தை இருவரையும் இழந்த டால்ஸ்டாய் உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்.

    1848-ஆம் ஆண்டு ரஷியாவின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான கசான் பல்கலைக்கழகத்தில் (Kazan University) அடியெடுத்துவைத்த டால்ஸ்டாய், கிழக்கத்திய மொழிகளையும் (Oriental Languages) பின்பு சட்டத்தையும் தன் விருப்பப் பாடங்களாகப் பயிலத் தொடங்கினார். கல்வியில் பின் தங்கியவராகவே அவரைக் கருதிய அவருடைய பேராசிரியர்கள், ’படிப்பதில் விருப்பமில்லாதவர், அதற்கான தகுதியும் இல்லாதவர்’ என்றெல்லாம் அவர்மீது முத்திரை குத்தவே, மனவருத்தமுற்றுக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டுத் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். பின்பு இராணுவத்தில் வேலை செய்துகொண்டிருந்த தன் மூத்தசகோதரர் நிக்கொலேவைப்போல (Nikolay) தானும் இராணுவத்தில் சேர்ந்தார். அப்போதுதான் அவருடைய எழுத்துப்பயணம் ஆரம்பித்தது எனலாம். இராவணுப்பணியிலிருந்து விலகிய பின்னும் தன் எழுத்துப்பணியிலிருந்து அவர் விலகவில்லை.

    டால்ஸ்டாயின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புக்களாக இன்றளவும் பேசப்படுவவை ’போரும் அமைதியும்’, ’அன்னா கரீனினா’ ஆகிய இரு நாவல்கள். சாகாவரம் பெற்ற இவ்விரு நாவல்களும் உலகின் தலைசிறந்த நாவல்களின் வரிசையில் இன்றளவும் தொடர்ந்து இடம்பிடித்து வருபவை.

    ’போரும் அமைதியும்’ எனும் நாவல், ரஷ்யாவில் நிகழ்ந்த நெப்போலியன் போனபார்ட் (Nepoleon Bonaparte) தலைமையிலான பிரெஞ்சு ஊடுருவலை, ஐந்து (ரஷிய) பிரபுக் குடும்பங்களின் பார்வையில் பேசுகின்றது. ஆனால் இந்நாவலின் இறுதி அத்தியாயங்கள் முந்தைய கதைப்போக்கிலிருந்து பெரிதும் விலகி, தத்துவங்களை உரையாடல் நடையில் பேசுவதாய் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு நாவலுக்குரிய இலக்கணங்களிலிருந்து மாறியிருப்பதாலோ என்னவோ, ’”போரும் அமைதியும் எனும் இந்நாவலை, ஒரு நாவல் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; வேண்டுமானால் அதனை வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பாய்க் கொள்ளலாம்” என்று டால்ஸ்டாயே கூறியிருக்கின்றார். தன்னுடைய அடுத்த நாவலான ”அன்னா கரீனினாவே (Anna Karinina) தனது உண்மையான முதல் நாவல்” என்பது அவருடைய கருத்தாகும்.

    அக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், அன்னா கரீனீனா மிக நேர்த்தியான வடிவம் கொண்ட ஒரு நாவல் என்பது பெரும்பான்மையான உலக எழுத்தாளர்கள், விமரிசகர்கள் மற்றும் வாசகர்களின் எண்ணமாய்ப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. டால்ஸ்டாயினால் புனையப்பட்ட மாபெரும் உணர்ச்சிக் காவியம் அன்னா கரீனினா; அஃதோர் உயிருள்ள கலைப்படைப்பு எனில் மிகையில்லை.

    காதலுக்காகக் குடும்ப வாழ்க்கையைத் துறப்பதா? அல்லது குடும்ப வாழ்க்கையைத் துறப்பதால் ஏற்படும் களங்கத்திற்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் பயந்து காதலில்லாத திருமண வாழ்வையே தொடர்வதா? எனும் மிகச் சிக்கலான கேள்வியும் அதற்கான பதிலுமே இந்நாவலின் பயணமாய் நீண்டிருக்கின்றது.

    ”‘மகிழ்ச்சியான குடும்பங்களெல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன; துயரமான குடும்பங்கள்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன” (Happy families are all alike; every unhappy family is unhappy in its own way). எனும் அன்னா கரீனினாவின் தொடக்க வரிகள் மிகவும் புகழ்வாய்ந்தவை.

    ரஷியாவின் மேட்டுக்குடியைச் சேர்ந்த பெண்ணான ’அன்னா’வே இந்நாவலின் நாயகி. அவளுடைய மகிழ்ச்சியில்லா மண வாழ்க்கை, பின்பு மற்றொரு ஆடவனோடு (Vronsky) அவளுக்கு ஏற்படும் காதல், அதனால், கணவனையும் மகனையும் பிரிந்துசெல்லும் அன்னாவுக்குச் சிலகாலத்திற்குள்ளாகவே தன் காதலன் மீது ஏற்படும் அவநம்பிக்கை, ஐயம், தன் முந்தைய மண வாழ்க்கையை விட்டுவந்தது பற்றிய குற்ற உணர்வு இப்படிப் பல்வேறு நிலைகளில் அன்னாவின் மனஉணர்வுகளை மிக நுண்மையாகச் சித்தரித்திருக்கிறார் டால்ஸ்டாய். உலக இலக்கியத்தில் உளவியல் ரீதியாக அதிநுண்ணிய ஆய்வுகள் செய்யப்பட்ட வெகு சில நாவல்களில் அன்னா கரீனினாவும் ஒன்று என்பது ஆய்வாளர்கள் கருத்து.

    உலக நாடுகளிலுள்ள பல்வேறு மதங்கள் பற்றியெல்லாம் ஆர்வத்தோடு அறிந்துவைத்திருந்த டால்ஸ்டாய், இந்தியாவின் வீரத்துறவி விவேகானந்தர் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். “தன்னலமற்ற ஆன்மிக வழியில் சென்றவர்களில் இவரையும் விட அதிகமான உயர்ந்த நிலையை அடைந்தவர் எவரேனும் இருக்கிறாரா என்பது சந்தேகமே” என்பது விவேகானந்தரைப் பற்றிய ரஷிய இலக்கிய மேதையின் மதிப்பீடு.

    அகிம்சையில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த  டால்ஸ்டாய், அதை வலியுறுத்தி எழுதிய ’பரலோக இராச்சியம் உன்னுள் இருக்கிறது’ (The kingdom of God is within you) எனும் நூலே, டால்ஸ்டாயைத் தன் குருவாகக் கொண்டிருந்த மகாத்மா காந்திக்கு அறவழியில் போராட மிகப்பெரும் உந்துசக்தியாக இருந்திருக்கின்றது என அறிகின்றோம்.

    இராமசேஷன் என்ற இந்தியப் பத்திரிகையாளர் ஒருவர், ’ஆங்கிலேயரின் கொடுமைகள் தாங்க முடியவில்லை. அதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று குறிப்பிட்டு டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினாராம். அதற்குப் பதில் எழுதிய டால்ஸ்டாய், ‘ஹிண்டு குரலில்’ (திருக்குறளைத்தான் அவர் அப்படிக் கூறியுள்ளார்) உள்ள ’இன்னா செய்யாமை’ அதிகாரத்தின் ஆறு குறட்பாக்களைக் குறிப்பிட்டு, (அதன்படி) அறவழியில் போராடுங்கள்; அதுவே உங்கள் மண்ணுக்கு ஏற்றது என்று தன் பதிலில் தெரிவித்திருந்தாராம். (ரஷிய மேதையைக் கவர்ந்தவர் ஐயன் வள்ளுவர் என எண்ணும்போது நம் நெஞ்சு விம்மிதம் கொள்ளுகிறது!)

    மிகவும் வசதியான குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் எளிமையை விரும்புபவராகவும், அறவழியில் போராடுவதில் நம்பிக்கை கொண்டவராகவுமே டால்ஸ்டாய் வாழ்ந்தார். அமர இலக்கியங்கள் பல படைத்து, இன்றும் உலக மக்கள் பலரும் போற்றும் ஓர் இலக்கியவாதியாக, தத்துவஞானியாக, ஆன்மிகப் போராளியாக அவர் திகழ்ந்து வருகின்றார்.

    அம்மேதையின் நூல்களைக் கற்போம்! அவர் வாழ்ந்துகாட்டிய எளிய வாழ்க்கையை நாமும் பின்பற்றுவோம்!

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: சீர்ந்தது செய்யாதார் இல்

     

    சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
    அற்றத்தால் தேறா அறிவுடையார் – கொற்றப்புள்
    ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
    சீர்ந்தது செய்யாதா ரில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    சுற்றத்தார், நட்டார், எனச் சென்று, ஒருவரை
    அற்றத்தால் தேறார், அறிவுடையார்;-கொற்றப் புள்
    ஊர்ந்து, உலகம் தாவின அண்ணலே ஆயினும்,
    சீர்ந்தது செய்யாதார் இல்.

    பொருள் விளக்கம்:
    சுற்றத்தார், நட்புடையவர் என்ற எண்ணத்தில் அவர்கள் எவரிடத்திலும் தாம் மறைமுகமாகச் செய்வதை வெளிப்படுத்தாதவரே அறிவுடையவர்கள். (அவ்வாறு நம் செயல் பிறருக்குத் தெரிந்துவிட்டால்) வெற்றியுடைய பறவையின் மீதமர்ந்து உலகில் உலாவரும் தலைவனே ஆனாலும் தனக்கு பலனளிக்கும் காரியத்தை செய்யாது விடமாட்டார்.

    பழமொழி சொல்லும் பாடம்: தனக்குப் பலனளிக்கும் செயலை யாராக இருந்தாலும் செய்ய எண்ணுவர், அதனால் செயல் வெற்றியுடன் நிறைவுறும்வரை பிறர் அறிய தமது செயல்களை அறிவில் சிறந்தோர் வெளிப்படுத்த மாட்டார்கள்.

    இதனை வள்ளுவரின் குறள் ஒன்றும் குறிப்பிடுகிறது…

    கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
    எற்றா விழுமந் தரும். (குறள்: 663)

    இக்குறளின் கருத்து, செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

    தனக்கு ஆதாயம் என்றால் ஒரு  செயலையும் பழிபாவம் அஞ்சாது  கடவுளும் செய்ய விரும்புவார் என்பதை அறிவோம். அதனால் பிறர் நம் செயலை அறிவது நம் செயலுக்கு இடையூறாக அமையலாம்  என்பது இப்பழமொழிச் செய்யுள் குறிக்கும் அறிவுரை. உரைநூல்கள் பொதுவாக, இச்செய்யுளில் வெற்றியையுடைய கருடனில் பறந்து, தாவி உலகளந்த திருமாலே ஆனாலும் தனக்கு பலன் என்றால் பழிபாவம் பாராமல் எதையும் செய்வார் என்று குறிப்பிடுகிறது. இது வாலியை மறைந்திருந்து அழித்து, சுக்ரீவனுக்கு உதவி வானரக் கூட்டத்தை தனது செயலுக்குப் பயன்படுத்திய இராம கதையைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளலாம். மாறாக மாம்பழத்தை அடைய விரும்பி மயில் மேல் பறந்து உலகைச் சுற்றி வந்த முருகனையும் குறிக்க வாய்ப்பிருந்தாலும், இக்கோணத்தைக் குறிப்பிட்ட உரை ஏதும் உள்ளதாகத் தெரியவில்லை.

    Share
  • கோட்பாடுகளின் அடிப்படையில் செவ்விலக்கியங்களை ஆராயத் துணை செய்யும் இணையத் தரவுகள்

    முனைவர் மு.பழனியப்பன்.

     

    செவ்வியல் இலக்கியங்களில் இலக்கிய நயம் காணுதல், உவமை, உருவக அழகு காணுதல் என்ற மரபு சார்ந்த இலக்கியத் திறனாய்வில் இருந்து வேறுபட்டு, மேலை நாட்டுச் சார்பால் கோட்பாட்டு அடிப்படையிலான திறனாய்வுகள் தற்காலத்தில் பெருகி வளரத் தொடங்கியுள்ளன. பல்வேறு வகையானத் திறனாய்வு முறைகளின் வழியாகச் சங்க இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் அரிய கருத்துகள் இத்திறனாய்வாளர்களால் வெளிவரச்செய்யப்பெற்றுள்ளன. இதன் காரணமாக தமிழ்த் திறனாய்வுலகில் புத்தொளி வீசத் தொடங்கியுள்ளது. இவ்வாய்வுகளுக்கும், ஆய்வு அணுகுமுறைகளுக்கும் உதவும் இணைய தளங்கள் பல உள்ளன. அவற்றினைப் பற்றிய அறிமுகத்தையும் அவ்விணைய தளங்களின் தரம் பற்றியும் மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

    கோட்பாடு – சொல் விளக்கம்:
    கோட்பாடு என்பதை ஒரு கருத்தாக்கம் என்று பொருள் கொள்ளலாம். கோட்பாடு என்பதனைப் புரிந்து கொள்ள பின்வரும் எடுத்துக்காட்டு உதவும்.
    கற்பு என்பது ஒரு கோட்பாடு. நடைமுறை வாழ்வில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள கோட்பாடு. இதன் வாழ்வியல் நெறிமுறை என்னவென்றால், ஒருவனுக்கு ஒருத்தி என்பதாகும். எனவே ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மட்டுமே, சமுதாய நிகழ்வாகிய திருமணச் சடங்கின் மூலம் இணைந்து வாழும் வாழ்க்கையே கற்புக் கோட்பாட்டினைக் கொண்டது என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு கொள்கையின் சிந்தனைத் தெளிவினாலும் – ஏற்றுக் கொள்ளல் என்பதாலும் – சமுதாய நிலைப்பாட்டினாலும் கோட்பாடுகள் உருவாகின்றன.

    இவ்விரு மேற்கோள்களும் தமிழ் இணையப் கல்விக்கழகத்தின் இணையதளத்தின் நாட்டுப்புறவியல் பாடப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். தமிழ் ஆய்வுகளின் அடிப்படைகளைத், தமிழ்க்கல்வியின் அடிப்படை நிலைகளை அறிந்து கொள்ளத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளம் பயன்படுகின்றது. இத்தளம் தனக்கென ஒரு விரிந்த நூலகத்தையும், தமிழ்ப் பட்டப்படிப்பின் தரத்திற்கான பாடங்களையும் கொண்டு விளங்குகின்றது

    கோட்பாடு வகைகள்:
    கோட்பாட்டின் வகைகளைப் பின்வருமாறுப் பட்டியலிடுகின்றது விக்கிப்பீடியா தளம்.
    அறவியல் திறனாய்வு
    பெண்ணியத் திறனாய்வு
    அமைப்பியல் திறனாய்வு
    பின் அமைப்பியத் திறனாய்வு
    பின்நவீனத்துவத் திறனாய்வு
    நவீனத்துவத் திறனாய்வு
    வடிவவியத் திறனாய்வு
    மார்க்சியத் திறனாய்வு
    கட்டுடைப்பியத் திறனாய்வு
    யதார்த்தவியத் திறனாய்வு
    வரலாற்றியல் திறனாய்வு
    புது வரலாற்றியல் திறனாய்வு
    சமூகவியல் திறனாய்வு
    மொழியியல் திறனாய்வு
    ஒப்பீட்டுத் திறனாய்வு
    உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு
    தொல்படிமவியல் திறனாய்வு
    எடுத்துரைப்பியல் திறனாய்வு
    அறிவுறுத்தல் திறனாய்வு
    பின்காலனித்துவத் திறனாய்வு
    புனைவியல் திறனாய்வு
    சூழலியல் திறனாய்வு
    புதுத் திறனாய்வு
    இப்பட்டியலில் உள்ள திறனாய்வுகளை, அவற்றின் செல்நெறிகளை, கோட்பாடுகளின் முந்தையதான நிலையை இத்தளம் எடுத்துரைத்து அதற்கான தொடுப்புகளைப் பெற்றிருப்பது சிறப்பிற்குரியதாகும்.

    இவை ஒவ்வொன்றுக்கும் விரிவுதேடி இணையத்தில் நுழைந்தால் அவற்றுக்கான தரவுகள் ஓரளவிற்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இக்கட்டுரையின் அளவு கருதிச் சிற்சில கோட்பாடுகளுக்குக் கிடைக்கும் இணையத் தரவுகள் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

    குறிப்பாக தமிழுக்கே உரித்தான தனித்துவ மிக்கக் கோட்பாடுகளாக வளர்ந்துள்ள திணைக் கோட்பாடு போன்ற கோட்பாடுகள் ஒரு வகையாகவும், மேலைநாட்டுச் சிந்தனைக்கு இடமளித்த அவை தந்த வெளிச்சம் கொண்டு சங்க இலக்கியத்தைப் பார்த்த கோட்பாடுகள் மற்றொரு வகையாகவும் ஆக்கிக் கொள்வது என்பது இக்கட்டுரையின் வகைப்பாட்டிற்கு பொருத்தமுடையதாகும் என்பதில் அப்பிரிவே கொள்ளப்படுகின்றது.

    தமிழின் தனித்த கோட்பாடுகள்:
    தமிழின் தனித்த கோட்பாடுகளாக அறியத்தக்கனவற்றுள்
    1. திணைக்கோட்பாடு
    2. ஈகைக் கோட்பாடு
    3. கூற்றுக் கோட்பாடு
    4. அறிவுத் தோற்றவியல்
    ஆகிய நான்கு அமைப்புகளை இணைய நிலையில் காணமுடிகின்றது.

    திணைக் கோட்பாடு:
    திணைக்கோட்பாடு என்ற நிலையில் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் முன்னைப் பேராசிரியர் க.பூரணச்சந்திரனின் இணையதளம் சிறப்பிடம் பெறுகின்றது. இவரின் இத்தளத்தில் இவரது பல் திறப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றைச் சொடுக்கி நமக்குத் தேவையான கட்டுரைகளைப் பெறலாம். திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் அவர் சங்க இலக்கியங்களைக் கண்டுச் சில முடிவுகளுக்கு வருகின்றார். அவற்றில் பின்வரும் சில குறிக்கத்தக்கன.

    முதல், கரு, உரி என்ற இம்மூன்றனுள் உரிப்பொருளே சிறப்பானது. ஏனெனில் முதற்பொருள் பயின்றுவராத, கருப் பொருள் காணப்படாத பாக்களைக் கூட காணலாம். ஆனால் உரிப் பொருளற்ற கவிதை ஒன்றையும் காண இயலாது. உரிப்பொருள் மானிட வாழ்க்கைஅனுபவமே ஆதலின் சங்க இலக்கியமே மனிதமையவாத அடிப்படையில் அமைந்தது என்பதில் ஐயமில்லை. எனவே சங்கப்பாக்களை உரிப்பொருள் மட்டும் பெற்ற பாக்கள், உரிப்பொருள், முதற்பொருள், கருப்பொருள் பெற்ற பாக்கள் என்றுதான் பகுக்க முடியும்.

    1. குறிஞ்சி-வேட்டைச் சமூகம், சுரண்டல் உருவாகா நிலை,இயற்கைக் காதல், பெருமளவு தாய்வழிச் சமூகம்.வெட்சி-வேட்டைச்சமூகம், சிறிய தலைவர்கள், ஆநிரை கவர்தல்
    2.முல்லை-ஆடுமாடுகள் சொந்தமாதல், தனியுடைமையின் தொடக்கம், மேய்த்தல் சமூகம், தந்தைவழிச் சமூகமாதல், கற்புக் கோட்பாடு, வஞ்சி-சிறிய தலைவர்கள், நேருக்கு நேர் போரிடல்
    3. மருதம்-பெருமளவில் நிலத்தைச் சொந்தமாக்குதல், இயற்கை யழிவு, சுரண்டல்- நிலவுடைமைச் சமூகம், பெண்ணுடைமைச் சமூகம், ஆண்கள் நெறிதவறுதல்-நொச்சி-அரணமைத்துக் காத்தல், பெரும் அரசர்கள் தோற்றம்
    4. நெய்தல்-இயற்கைக்குத் திரும்புதல், சுரண்டலற்றநிலை, கலப்புக்காதல், சிரமம், துன்பம்,இரங்கல்,புலம்பல், நிச்சயமற்ற பிரிவு, காஞ்சி-நிலையாமை, நிலையின்மை, புலவர்கள் பேரரசை விட்டு சிறிய புரவலர்களை அணுகுதல்பாலை-களவுசெய்யும் சமூகம்இ மனிதனை மனிதன் அழித்தல், தற்காலிகப் பிரிவு, வெம்மை, பிரிவும் பிரிவின்மையும், வாகை-பெருவேந்தர் குறுநில மன்னர்களை வெற்றிகொண்ட தன்மை இரக்கம்
    5. பாலை-களவுசெய்யும் சமூகம், மனிதனை மனிதன் அழித்தல், தற்காலிகப் பிரிவு, வெம்மை, பிரிவும் பிரிவின்மையும்,வாகை-பெருவேந்தர் குறுநில மன்னர்களை வெற்றிகொண்ட தன்மை, இரக்கம்
    என்பன அவர் காட்டும் திணைக் கோட்பாடு சார்ந்த கருத்துகள் ஆகும்.

    ஈகைக் கோட்பாடு:
    தமிழர்களின் அறம் சார்ந்த செயல்பாடுகளுள் ஒன்று ஈகை ஆகும். இதனைத் தமிழர்களின் தனித்த கோட்பாடாக முனைவர் ந. இளங்கோ காண்கிறார். அவரின் ஈகைக் கோட்பாடு பற்றிய கட்டுரையானது தமிழ்த்தொகுப்புகள் என்ற தளத்தில் காணப்படுகின்றது. இத்தளமும் சங்க இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகளுக்கு இடமளித்து வரும் தளமாகும். இதன் பொறுப்பாளராக சென்னையைச் சார்ந்த சிங்கமணி விளங்கி வருகின்றார். காலத்தால் அழியாத பல செய்திகளைத் தாங்கி இத்தளம் வருவதால் இதற்குத் தமிழ்த் தொகுப்புகள் என்றே பெயரிட்டுள்ளனர். இத்தளத்தில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களின் ஆசிரியர்கள் பெயர்கள் தரப்பெற்றுள்ளன. அதன் வழியாக அவ்வாசிரியர்களின் ஆக்கங்களைக் காணலாம். இதுதவிர கட்டுரையின் பொருள் வகைமையும் தரப்பெற்றுள்ளது. இதன் வழியாகவும் சங்க இலக்கிய ஆய்வுகளைப் பெறலாம்.

    சங்க இலக்கியங்களில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில்,உணவிடல் என்ற பல நிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, திருக்குறள் முதலான நீதி நூல்களில் சமண, பௌத்தமதச் சொல்லாடல்களுக்கு ஒப்பப் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது. அற்றார்அழி பசி தீர்த்தல் (குறள்226) ஈகை, வறியார்க்கு ஒன்று ஈவதே-ஈகை (குறள்221) என்றெல்லாம், ஈகை அறம் பசி தீர்த்தல்; அதுவும்வறியவனின் பசியைத் தீர்த்தல் என்றபொருளில் வலியுறுத்தப்பட்டது. ளளுபுகழ் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் ஈதலால் இசைபெறலாம் என்று ஈகையைப் புகழோடு இணைக்கின்றார். விருந்தோம்பல் என்ற சங்க இலக்கியத்து ஈகையைத் திருவள்ளுவர் இல்லறத்தான் கடமைகளில் ஒன்றாகத் தனித்துவலியுறுத்துகின்றார் என்ற இந்தக் கருத்துச் செவ்வியலக்கியங்களில் காணப்படும் ஈகைக் கோட்பாட்டை விளக்குவதாக உள்ளது.

    கூற்றுக் கோட்பாடு:
    செவ்விலக்கியங்களில் கூற்று முறை அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. தலைவி, தோழி, தலைவன் போன்றோர் கூற்று நிகழ்த்தும் முறைகளுக்கு ஒரு வரையறை உண்டு. திருக்குறள் கூற்று அடிப்படையில் அமைந்திருப்பதை மையமாக வைத்துக் கூற்றுக் கோட்பாடு என்ற ஒரு கொள்கையை முன்நிறுத்துகிறார் கே. பழனிவேலு. இவரின் கட்டுரை பனுவல் என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. இத்தளம் பல ஆய்வுக்கட்டுரைகளின் அரங்கமாகத் திகழ்கின்றது (puthiyapanuval blogspot.in). இவ்விதழ் சென்னை அம்பத்தூரில் இருந்து டாக்டர் சீனிவாசன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் உலகு தழுவிய அளவில் வெளிவருகின்றது. இதன் ஆர்க்கைவ்ஸ் என்ற சேமிப்புக்களத்தில் ஒவ்வொரு இதழும் சேமிக்கப்பெற்றுள்ளன. அவற்றில் பல தரமான சங்க இலக்கியக் கோட்பாடு; ஆய்வுகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இதனுள் ஆய்வாளர்கள் அனைவரும் தங்களின் ஆய்வுரைகளை வழங்க உள்நுழைந்து பதிவு பெற வேண்டும்.

    திருக்குறளைக் கூற்றுக் கொள்கை அடிப்படையில் கண்டு அவர் பின்வரும் முடிவிற்கு வருகின்றார்.
    திருக்குறள் சுட்டும் அறங்கள், தமிழ்ச் சமூகத்தில் புழங்கிக் கொண்டிருந்த அறங்களே ஆகும். இந்த அறங்கள் எதையும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தாகக் கருதமுடியாது. ஆசிரியர்,கூற்றுகளைத் தொடர்நிலையில் மொழிப்படுத்தும் பணியையே செய்துள்ளார். இவ்வாறான மொழிப்படுத்தலின் நுட்பமே அறத்தை உரைக்கும் பனுவலைப் புனைவுப் பனுவலாக இயங்கச் செய்கிறது. கூற்றுகளின் பொருண்மைத் தொகுதிகளைப் புரிந்துகொண்டு பிற கூற்றுகளுடன் இணைக்கின்ற திருவள்ளுவருடைய மொழித்தொழில்நுட்பம் பிற அற இலக்கியங்களில் காணக் கிடைக்காததாகும். இதனாலேயே அறம் உரைக்கின்ற நோக்கத்திற்கு இடையிலும் திருக்குறளால் ஒரு புனைவுப் பனுவலாகவும் இயங்க முடிகிறது என்ற இந்தக் கருத்து திருக்குறளில் கையாண்டுள்ள மொழித் தொழில் நுட்;பத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.

    அறிவுத் தோற்றவியல்:
    அறிவுத் தோற்றவியல் என்ற கோட்பாட்டை எம்.டி முத்துக்குமாரசாமி அறிமுகப் படுத்திச் சங்க இலக்கியங்களை அதன் வழியில் ஆராய்ந்துள்ளார். இவரின் பெயரிலேயே ஒரு தளம் அமைந்துள்ளது. இதனுள் பல்வகைக் கட்டுரைகள் கிடைக்கின்றன. சங்க இலக்கியக் கோட்பாட்டுக் கட்டுரைகளும் உள்ளன. இதன் முகவரி http://mdmuthukumaraswamy.blogspot என்பதாகும். அறிவுத்தோற்றவியில் என்பதை அவர் பின்வருமாறு விளக்குகின்றார். அறிவறிவு அல்லது அறிவுத்தோற்றவியல் என்று தமிழில் குறிக்கப்படுகின்ற Epistemology என்பதை இலக்கியத்தில் காண விழைந்த முதல் தமிழ் நூலாக க.நாராயணனின் “தமிழர் அறிவுக்கோட்பாடு” என்ற நூலினைச் சொல்லலாம். ஆனால் நாரயணனின் நூல் அறிவுத்தோற்றவியலை விளக்கிய அளவுக்கு பழந்தமிழ் இலக்கியத்தின் அறிவுத்தோற்றவியலை விளக்கவில்லை. இதற்கு அடிப்படையான காரணம் நெறிமுறையில் ஏற்பட்ட கோளாறே ஆகும்.

    நாராயணனின் நூல் “அறிவு” என்ற சொல் பதினென்கீழ்க் கணக்கு நூல்களிலும் பிற சங்க இலக்கியங்களிலும் குறிப்பாக திருக்குறளிலும் எங்கெல்லாம் வருகிறது என்று பார்த்து, அவற்றை “அறிவு” பற்றிச் சொல்லப்படுகின்ற கருத்துக்களோடு இணைத்து தமிழரின் அறிவுக்கோட்பாடு என தனக்கு வேண்டியதை மட்டும் உருவி எடுத்து தொகுப்பதாக உள்ளது. ஆகவே அடிப்படை நிலைப்பாடுகளை தொகுக்கின்ற பிரச்சினை எழவே இல்லை. இதற்கு மாறாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களின் அமைப்பாக்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்து அவற்றின் அறிவுத்தோற்றவியலை விளக்குவது என் நெறிமுறையாகிறது. இதற்கு சங்க இலக்கியத்தின் மையப்புள்ளியை நான் அடையாளம் காணவேண்டும் என்ற விளக்கம் மிக்க முன்னுரையோடு இவர் இந்தக் கட்டுரையைத் தொடங்குகின்றார்.

    இக்கட்டுரையின் முக்கியமான முடிவாகக் கருதத் தக்கது பின்வரும் கருத்தாகும். உணர்ச்சியை மையமாகக் கொண்டு சகமனிதன், இயற்கை, புற உலகு, ஆகியவற்றோடு மொழி செயல்பாட்டின் மூலம் மனிதன் கொள்கிற இயங்கியல் உறவினை அடிப்படை அறிவுத்தோற்றவியல் நிலைப்பாடாக அறியவரும்போது சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் நவீன வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து தமிழனை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை சொல்லக்கூடும். அப்படிப்பார்க்கையில் அக புற ஒழுங்குகளை ஒரே சமயத்தில் எதிர்கொள்கிற நெடுநெல்வாடை போன்ற பாடல்கள் இக்காலத்திற்கு மிகவும் தேவையான, தமிழனின் உணர்வுகளை உயிர்ப்பிக்கின்ற நவீன கவிதைகளாக விளங்குகின்றன. என்னைப் பொறுத்தவரை நெடுநெல்வாடையே பத்துப்பாட்டில் மிகச் சிறந்த கவிதையாகும் இவ்வகையில் சங்க இலக்கியங்கள் முழுவதற்குமான அறிவுத் தோற்றவியல் ஆய்வுகளைத் தொடங்கலாம்.

    பல் துறை ஆய்வுகள்:
    சங்க இலக்கியப் பல்துறை ஆய்வுகளை இலங்கை நாட்டு அறிஞர்கள் பலரும் செய்துள்ளனர். இலங்கை நாட்டாரின் ஆய்வுகளை இணையப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் தளம் நூலகம் என்ற தளமாகும். இத்தளத்தில் இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள அத்தனை நூல்களும், சிற்றிதழ்களும், சிறுஅறிக்கைகளும் சேமிக்கப்பெற்றுள்ளன. இத்தளம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்டு, கொழும்புவில் இருந்து இயங்கி வருகின்றது.
    தமிழ் இலக்கிய ஆய்வுகள் என்ற பெயரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்று இத்தளத்தில் கிடைக்கின்றது.

    இக்கருத்தரங்கு அமரர் கைலாசபதியின் பதினோராவது நினைவு ஆண்டான 1993இல் இடம்பெற்றது. இதனுள் அமைந்துள்ள கட்டுரைகள் பின்வருமாறு.
    • சங்க இலக்கியத்தில் நோக்கு என்னும் செய்யுளுறுப்பு (பண்டிதர் க.சச்சிதானந்தன்),
    • சங்க இலக்கியங்களிலே ஒழுக்கவியற் கோட்பாடுகள் (வித்துவான் க.சொக்கலிங்கம்),
    • சங்க இலக்கியங்களில் தோழி (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்),
    • பழந்தமிழர் வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் (கி.விசாகரூபன்),
    • சங்கச் செய்யுள் வடிவங்களும் மொழியும் (பேராசிரியர் அ.சண்முகதாஸ்),
    • யப்பானிய அகப்பாடல் மொழிபெயர்ப்புக்குச் சங்கப்பாடல் மரபு பற்றிய அறிவின் இன்றியமையாமை (மனோன்மணி சண்முகதாஸ்),
    • ஈழத்திற் காணப்படும் சங்ககால முதுமக்கட் தாழிகள் (பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்),
    • வழுக்கையாற்றுப் பிராந்தியத்திற் சங்ககாலப் படிமங்கள் (செ.கிருஷ்ணராஜா)
    என்ற எட்டுக் கட்டுரைகள் இதனுள் அடங்கியுள்ளன. இக்கட்டுரைகளில் இலங்கையில் நடைபெற்று வந்த சங்க இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகளை எடுத்துரைப்பதாக உள்ளது.

    இத்தளத்தை அறிமுகம் செய்வதாக அமையும் வலைப்பூ “வேர்களைத் தேடி” என்ற வலைப்பூவாகும். இவ்வலைப்பூவில் பல சங்க இலக்கியக் கட்டுரைகள் காணப்பெறுகின்றன. இதன் பொறுப்பாளர் முனைவர் இரா. குணசீலன் ஆவார். திருச்செங்கோடு கே. எஸ்.ஆர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் சங்க இலக்கியங்கள் குறித்த பல தகவல்களை, கட்டுரைகளை அளித்து வருகின்றார் (http://www.gunathamizh.com)

    மேலைநாட்டுக் கோட்பாடுகளும், சங்க இலக்கிய ஆய்வுகளும்:
    மேலைநாட்டுத் தாக்கத்தால் தமிழ்த் திறனாய்வு உலகிற்குப் பல கோட்பாடுகள் அறிமுகமாகின. குறிப்பாக நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று இவற்றை இருவகையாகப் பகுக்ககுலாம். அழகியல், மார்க்சியம், மொழியியல், அமைப்பியல் போன்ற கோட்பாடுகள் நவீனத்துவக் கோட்பாடுகள் ஆகும். பின்னை நவீனத்துவக் கோட்பாடுகள் என்ற அடிப்படையில், பெண்ணியம், உளவியல், பின்னை நவீனத்துவம் போன்றன அமைகின்றன. இவற்றிற்கான நோக்குகளும் கட்டுரைகளும் இணையத்தில் கிடைக்கின்றன. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.

    நவீனத்துவ ஆய்வுகள்:
    மொழியியல் ஆய்வுகள்
    நவீனத்துவ ஆய்வுகளில் மொழியியல் சார்ந்த ஆய்வுகள் குறிக்கத்தக்கன. மொழியியல் பின்வரும் பல்துறைகளைக் கொண்டது.
    • ஒலிப்பியல் ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு ஒலிகள் பற்றிய துறை;
    • ஒலியியல், ஒரு மொழியின் அடிப்படை ஒலிகளின் வடிவுரு பற்றி ஆராயும் துறை;
    • உருபனியல், சொற்களின் உள் அமைப்புப் பற்றி ஆராயும் துறை;
    • சொற்றொடரியல், எவ்வாறு சொற்கள் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட வசனங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் துறை;
    • சொற்பொருளியல், சொற்களின் நேரடியான பொருளை ஆராய்தலுக்கும்,(சொல் குறிக்கும் பொருள்), அவை சேர்ந்து உருவாக்கும் வசனங்களின் நேரடியான பொருள்களையும் ஆராயும் துறை;
    • மொழிநடை, மொழியின் பாணிகளை ஆராயும் துறை;
    • சூழ்பொருளியல் தொடர்புச் செயற்பாடுகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய ஆய்வு;
    • தொடரியல் ஆய்வு

    இவற்றின் அடிப்படையில் சங்க இலக்கியங்களை ஆராயும் தன்மை நவீனத்துவ ஆய்வாகின்றது. மொழியியல் சார்பான கட்டுரைகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தளத்தில் பெரிதும் கிடைக்கின்றன. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இதழான ஆய்வியில் என்ற இதழில் வெளிவந்துள்ள பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகளின் பிடிஎப் வடிவம் கிடைக்கின்றது. இவற்றின் வழியாக மொழியியல் சார்ந்த பலகட்டுரைகளை வாசிக்கமுடிகின்றது. இதன் முகவரி: http://www.ulakaththamizh.org/ என்பதாகும். இத்தளத்தில் 1972 முதல் வெளிவந்த கட்டுரைகள் கிடைக்கின்றன. மேலும் முன்னூறுக்கும் மேற்பட்டக் கட்டுரையாளர்களின் பெயரடைவு உள்ளது. இவ்விரண்டின் வழியாகவும் தேடிக் கட்டுரைகளைப் பெற முடியும். செ.வை. சண்முகம், ஆதித்தன், ச. அகத்தியலிங்கம் போன்ற மொழியியல் அறிஞர்களின் கட்டுரைகள் இங்குச் சேமிப்பாக உள்ளன.

    அழகியல்:
    அழகியல் என்பதும் நவீனத்துவச் சிந்தனை ஆகும். வருணனை, உவமை, கற்பனை போன்றனவற்றைத் தமிழ் மரபில் அழகியல் எனக்கொள்வோம் இதனைத்தாண்டி மேலைநாட்டு அழகியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்களை அணுகும் முறைக்கான வாய்ப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன. நவீன இலக்கியத் திறனாய்வில் குறிக்கத்தக்கத் திறனாய்வாளர் தி.சு நடராசன் ஆவார். இவரின் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அழகியல் சார்ந்த இவரின் ஒரு கட்டுரைத் தமிழ்க் கூடல் என்ற தளத்தில் கிடைக்கின்றது. மகிழம் இன்ஃபோடெக், மதுரை என்ற முகவரியில் இருந்து வெளிவரும் இணையப் பத்திரிக்கை தமிழ்க்கூடல் என்பதாகும். இதன் முகவரி http://www.koodal.com/ என்பதாகும்.

    மார்க்சியத் திறனாய்வு:
    இணையதள அளவில் அதிகமாகத் தமிழில் கிடைக்கும் அயலக் கோட்பாடுகளில் தலையாயது மார்க்சிய திறனாய்வாகும். மார்க்சிய கொள்கைகளை முன்வைத்துப் பல இணையதளங்கள் இயங்கிவருகின்றன.
    இதில் குறிக்கத்தக்க இணையதளம் மார்க்சிஸ்ட். ஆர்க் என்பதாகும். இதன் முகவரி https://www.marxists.org/ மார்க்சியக் கொள்கைகளை அறிந்து கொள்ள மிக உதவும் தமிழ்க்களஞ்சியம் இத்தளமாகும். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்ற பலரின் கட்டுரைகள் இத்தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

    சிவலிங்கம் என்பவர் இத்தளத்தின் தமிழ்ப்பகுதிக்கு இணைய வடிவமைப்பாளராக விளங்குகின்றார். இவரே பல ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்து அளித்துள்ளார். பொருளியல் ஆய்வுகளுக்கு இத்தளம் மிகப் பயன்படும்.
    மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் என்ற பெயரில் இதழொன்றும் வெளிவருகின்றது. இதில் சங்க இலக்கியம் பற்றியச் சிந்தனைகள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. இது மதுரையில் இருந்து வெளிவருகின்றது. கம்யுனிஸ்ட் பார்டி ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் இது வெளிவருகிறது. இதன் முகவரி https://www.marxists.org/. பண்டைய பண்பாடும் ஆய்வுகளும் என்ற கட்டுரையில் மார்க்சிஸ்ட் சிந்தனை வயப்பட்டு சங்க இலக்கியத்தின் மேல் எழுதப் பெற்றக் கட்டுரைகள் மதிப்பிடப்பெற்றுள்ளன. இக்கட்டுரையின் பல கருத்துகள் சங்க இலக்கியத்தைப் புரட்டிப்போடுகின்றன.

    இனியொரு என்ற தலைப்பிலான ஒரு தளமும் மார்க்சிய முறையில் இயங்கும் கோட்பாடுகளுக்கு இடமளிக்கும் ஆக்கங்களுக்கு இடம் தரும் தளமாக உள்ளது. இதன் முகவரி iniyoru.com என்பதாகும்.

    உளவியல்:
    உளவியல் அடிப்படையிலான கோட்பாடுகளுடன் சங்க இலக்கியங்களை ஒருங்கிணைத்துப் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மோகனா என்ற சென்னைப்பல்கலைக்கழக ஆய்வாளர் தனக்கென ஒரு வலைப்பூவை நிறுவி அதனுள் தன்னுடைய பல கட்டுரை ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். உளவியல் அடிப்படையில் ஐந்துச் சங்கப் பெண்பாற் புலவர்களின் ஆக்கங்களை அவர் ஆராய்ந்துள்ளார். இத்தளத்தின் முகவரி mohanawritings.blogspot.in என்பதாகும்.

    உளவியில் அணுகுமுறை பற்றிய தகவல்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இலக்கியத்திறனாய்வுப் பாடத்தின் வழியாக வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் ஆய்வாளர்கள் உளவயில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

    பின்னை நவீனத்துவம்:
    பெண்ணியம்:
    பின்னை நவீனத்துவக் கோட்பாடுகளில் பெண்ணிய நோக்கில் பல ஆய்வர்ளர்கள் சங்க இலக்கியத்தை ஆராய்ந்துள்ளனர். அ.ராமசாமி, பஞ்சாங்கம், மு.பழனியப்பன் போன்றோர் இதனுள் குறிக்கத்தக்கவர்கள். அ. ராமசாமி பக்கங்கள், பெண்ணியம் (இணைய இதழ்), பதிவுகள் (இணைய இதழ்) ஆகியவற்றில் பெண்ணியக் கட்டுரைகள் பல இடம்பெற்றுள்ளன.

    பின்னை நவீனத்துவம்:
    பின்னை நவீனத்துவம் என்ற கோட்பாட்டிலும் பல இணையப் பக்கங்கள் கிடைக்கின்றன. பின்னை நவீன அலை என்ற இணையப் பக்கம் பின்னை நவீனத்துவக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி அவற்றின் வழியாக சங்க இலக்கியங்களை நோக்குகின்றது. அ.ராமசாமி, முத்துமோகன், தமிழவன் போன்ற பலரின் ஆக்கங்கள் இணையவழிப் படுத்தப்பெற்றுள்ளன. இவர்கள் பின்னை நவீனத்துவம் சார்ந்து இயங்குபவர்கள் ஆவர்.

    இவ்வாறு பல்வேறு கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி அக்கோட்பாடுகளின் வழி சங்க இலக்கியங்களைக் காண பெரும் வாய்ப்புகள் இணையத்தில் கிடைத்துவருகின்றன. இவற்றைத் துணை கொண்டு இளைய ஆய்வாளர்கள் பயன் கொள்வது என்பது அவர்களின் தரத்தை உயர்த்தி நிற்கும்.

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர்,
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    திருவாடானை
    9442913985
    M.Palaniappan
    muppalam2006@gmail.com
    manidal.blogspot.com
    9442913985

     

     

    Share
  • வளவன் கனவு- வரலாற்று நாவல் (1)

    சு. கோதண்டராமன்

     

    முன்னுரை

    களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படுகிறது. காரணம் அப்பொழுது என்ன நடந்தது என்பதைக் காட்டும் வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதுதான். அந்தக்கால வரலாறுதானே எழுத முடியவில்லை, கற்பனை  செய்ய என்ன தடை? அதைத் தான் இந்த நாவலில் செய்திருக்கிறேன்.

    கற்பனை செய்ய உரிமை கிடைத்துவிட்டது என்பதற்காக அஸ்திவாரம் இல்லாமல் ஆகாயக் கோட்டை கட்டவில்லை. இந்த நாவலில் வரும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுக்கும் ஆதாரம் உண்டு. அவை வலுவாக இல்லாமையால் ஒன்றுக்கு மேற்பட்ட ஊகங்களுக்கு இடம் அளிப்பவையாக உள்ளன. அவற்றில் ஒன்றை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். எதிர்த்தரப்பு ஊகமே சரியானது என்று நிரூபிக்கப்படும் வரையில் என்னுடையது கொடிகட்டிப் பறக்கும். யார் கண்டார்கள், என் ஊகம் உண்மையாகக் கூட ஏற்றுக் கொள்ளப்படலாம்.

    தலைப்பைப் பார்த்தவுடன் கல்கியும் அவரது பார்த்திபன் கனவும் தான் நினைவுக்கு வரும். அந்த எழுத்துலகச் சக்கரவர்த்தியால் பாதிக்கப்படாதவர் யார்? அவர் தரத்தை எட்ட முடிந்தவர் யார்?

    இதோ நானும் என் பொல்லாச் சிறகை விரித்து ஆடத் தொடங்குகிறேன். வரலாற்றுப் புதினம் என்ற பெயருக்குத் தகுதி உடையதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்கள்.

    1 நதிப் பயணம்

    வளவன் கனவு

    கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தமம்

    ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹமணஸ்பதிம் ஆனச்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்

    – ரிக்வேதம்

    (கூட்டத்தின் தலைவரான உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுக்குள் அறிஞர். ஒப்பற்ற புகழ் படைத்தவர். ஒளி பொருந்தியவர்களில் சிறந்தவர். வேதத்திற்கு வேத நாயகராய் விளங்குபவரே, எங்களுடைய பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து அருள் பொலிவுடன் உமக்குரிய ஆசனத்தில் இங்கு எழுந்தருள்வீராக.)

    நர்மதை நதி ஓடிக்கொண்டிருந்தது. என்ன வேகம்! என்ன வேகம்! எதற்கு இந்த அவசரம்? கன்றின் குரல் கேட்டு ஓடும் பசுவைப் போலல்லவா வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல் தன் இலக்கை நோக்கி ஓடுகிறது! கடலைச் சந்திக்க இவ்வளவு ஆர்வமா? கரையில் முளைகளில் கட்டப்பட்டிருந்த படகுகள் நீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டு விடும் போல அவற்றின் கயிறுகள் இழுத்துக் கொண்டு விறைப்பாக நின்றன.

    சினோர் நகரில் நதியின் வடகரையில் நின்றுகொண்டிருந்த ஆங்கிரஸ பிரமராயர் ஒரு கணம் அந்த நீர்ப் பெருக்கின் அழகில் மெய் மறந்து நின்றார். ‘நம் நாட்டுக் காவிரிக்கு இவ்வளவு வேகம் இல்லை. அது பெருகி வரும் நாட்களில் செக்கச்செவேல் என்று நுங்கும் நுரையுமாக இருப்பதைப் போல் இல்லாது இந்த நீர் எவ்வளவு தெளிவாக உள்ளது! மேலும் இது காவிரி போல் சில மாதங்கள் வறண்டு போகாமல் ஆண்டு முழுவதும் ஓடும் ஜீவநதியாக உள்ளது’ என்று மனதிற்குள் ஒப்பிட்டுக் கொண்டார்.

    மறுகணம் திடீரென்று விழிப்பு வந்தவர் போல அவர் தன்னைச் சுற்றிப் பார்வையிட்டார். இன்று அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. கடந்த   இரண்டு மாதமாக அலைந்த அலைச்சல் முடிவடைந்து அவருடைய வேலையில் இன்று ஒரு புதிய திருப்பம். இன்னும் ஒரு மாதத்திற்கு அவருக்கு ஓடும் நதியையோ, பாடும் குயிலையோ ரசிப்பதற்குத் தேவையான ஓய்வு இல்லை.

    “முதல் படகில் எல்லோரும் ஏறியாகி விட்டதா? பொறுப்பாளர் யார்?” என்று கேட்டவர் தன் கையில் இருந்த சுவடிக்கட்டிலிருந்து ஒரு ஓலையை எடுத்தார். “அம்ருத நயினார்” என்று விளித்தார். படகில் உட்கார்ந்திருந்த நயினார், “எல்லாம் சரியாக இருக்கிறது அமைச்சரே, என் வசம் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த முப்பது மனிதர்கள் இருக்கிறார்கள், எல்லோருக்கும் தேவையான உணவு இருக்கிறது. சோழநாட்டு மாலுமிகள் நால்வரும் இருக்கிறார்கள்.”

    “சரி, நீங்கள் புறப்படலாம். காழித் துறைமுகத்தில் சந்திப்போம்.” பச்சைக் கொடியை அசைத்தார் பிரமராயர்.

    படகில் உட்கார்ந்திருந்தவர்கள்,

    கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தமம்

    ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹமணஸ்பதிம் ஆனச்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்

    என்று ஒரே குரலில் முழங்கினர். படகு புறப்பட்டது.

    பிரமராயர், “சரி, அடுத்த படகு தயாராக இருக்கிறதா?” என்று கேட்டுவிட்டுத் தன் கையில் இருந்த ஓலையைப் பார்த்து, ‘ஆனந்த நயினார்’ என்று படித்தார். “சித்தமாக உள்ளேன், அமைச்சரே. என் பொறுப்பில் முப்பது பேர் உள்ளனர். ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மாலுமிகள் ஆயத்தமாக உள்ளனர். உணவுப் பொருள் உள்ளது. உத்தரவு கிடைத்தால் நாங்கள் புறப்படுவோம்’ என்றார் அவர்.

    “சரி, போகலாம். காழியில் காத்திருங்கள். நான் வந்துவிடுகிறேன்” என்றார். பயணிகளின் விநாயகர் துதியுடன் புறப்பட்டது படகு.

    இப்படியே 99 படகுகள் புறப்பட்டுச் சென்றன. நூறாவது படகில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, ஆங்கிரஸ பிரமராயர் தானும் ஏறி அமர்ந்தார். படகு புறப்பட்டது. எல்லோரும் ’கணானாம் த்வா’ சொன்னார்கள்.  முடித்தபின் ஆங்கிரஸர் அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் கேட்டார், “எல்லோரும் விநாயகரைக் குறித்து வேத மந்திரம் சொல்கிறீர்களே, அவர் வேத தெய்வமாகத் தெரியவில்லையே” என்றார்.

    அவர் மறுமொழி சொன்னார், “வேத தெய்வம் அல்ல என்றாலும் இங்கு நாங்கள் பரம்பரையாக வணங்கி வரும் தெய்வம். இடையூறு இல்லாமல் வேலை முடிவதற்கு நாங்கள் அவரைத்தான் வேண்டுவோம். அதற்காக இந்த வேத மந்திரத்தை ஓதுவது எங்கள் முன்னோர்களின் வழக்கம்” என்றார். ‘சோழநாட்டின் மாரியம்மன், ஐயனார் போல இவர் இந்த வட்டாரத்தின் தொல்பழம் தெய்வம் போலத் தோன்றுகிறது. எந்தத் தெய்வமாக இருந்தால் என்ன, எல்லாம் நல்லபடியாக நடந்தால்  சரிதான்’ என்று நினைத்துக் கொண்டார் ஆங்கிரஸர். படகில் ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதை நோக்கிக் கும்பிட்டார்.

    கடந்த இரண்டு மாதமாக என்ன அலைச்சல் அலைந்திருக்கிறார்! சோழ நாட்டில் நடப்பதற்கும் இங்கு நடப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. அங்கு எல்லாம் சமவெளி. ஒரு நாளில் இரண்டு காத தூரம் நடக்கலாம். இங்கு மலைப் பகுதி. அரைக்காதம் நடப்பதற்குள் கால்கள் கெஞ்சுகின்றன. ‘இந்த மனிதர்கள் நம்மை விட உடல் வலிமையும் ஆன்ம வலிமையும் மிக்கவர்கள் தாம். இவர்களை பத்திரமாகச் சோழநாட்டுக்குக் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும், விநாயகப் பெருமான் துணை புரிய வேண்டும்’ என்று பிரார்த்தித்துக் கொண்டார்.

    மாலுமிகள் லாகவமாகப் படகை ஓட்டிச் சென்றனர். அவர்களுக்குத் துடுப்புப் போட வேண்டிய வேலையே இல்லை. நீரின் போக்கில் போனதால் படகு மிக வேகமாக ஓடியது. பாறைகளில் மோதாமல் பார்த்துக் கொள்வது தான் அவர்களது வேலை. வரும்போது பட்ட சிரமத்தை நினைத்துக் கொண்டார். கடலில் அனாயாசமாகப் படகோட்டிய சோழ நாட்டு மாலுமிகளால் இந்த நதியில் எதிர்த்து வர முடியவில்லை. அதனால் பாருகச்சம் துறைமுகத்தில் உள்ளூர் மாலுமிகளை அமர்த்திக் கொண்டார். அவர்கள் மிக வலிமையானவர்கள். அவர்களும் உதவியதால் நீரின் போக்குக்கு எதிராகப் படகை ஓட்டி வர முடிந்தது.

    இந்த இரண்டு மாதத்தில் எத்தனை பேர் எவ்வளவு உதவி செய்திருக்கிறார்கள்! அவந்தி தேசத்தின் சிற்றரசர் நம் சோழ மன்னனின் வேண்டுகோளைப் பெரிதாக மதித்து நமக்குத் தேவையானதைச் சேகரித்துக் கொடுத்தாரே! நேற்று கார்வான் நகரில் அந்த மூவாயிரம் பேர் கூடியிருந்தது தெய்விகமான காட்சியாக இருந்தது. இவர்கள் சோழநாட்டில் போய் இறங்கியதும் மன்னர் மிக மகிழ்ச்சி அடைவார். தேவதேவன் அருளால் மன்னர் விருப்பம் நிறைவேற வேண்டும். சோழநாடு முன்போல வலிமையும் புகழும் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். சினோர் நகரம் சிறிது சிறிதாகக் கண் பார்வையிலிருந்து மறைந்தது.

    தொடரும்

    Share
  • சரித்திரம் படைக்கத் துடிப்பவன்டா!

    -றியாஸ் முஹமட்

    அந்த முள்ளி வாய்க்கால்தான்
    என் பெற்றோர்களுக்குக் கொள்ளி
    வைத்தது!

    அன்று ஈழத்து அகதிமுகாம்கள் கூட
    எங்களைத் தள்ளி வைத்தது
    என் பள்ளி படிப்புக்கு அன்றுதான்
    முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது!

    உறவுகள் இல்லாது ஒதுக்கப்பட்டவன்
    தேர்வு இல்லாமலே தெருவுக்கு வந்தவன்
    தேர் இழுக்கும் மாந்தர்கள் மத்தியில்
    பொதி சுமக்கும் கழுதையானேன்!

    ஒரு கூலிக்குப் பிறந்தவன்தான்
    அதற்காகக் கூனிக் குறுகி
    கேள்விக் குறியாக வாழ முடியுமா?

    அநியாயத்தைத் தட்டிக் கேட்பேன்
    தனித்து நின்றாலும் எதிர்த்து நிற்பேன்
    சமூகத்தைக் கூறு போட நினைத்தால்
    அவனைச் சந்தியில் வைத்து
    சந்து கிழிப்பேன்டா!

    அழுக்கன்தான்டா நான்
    அநீதிகளைக் கண்டால்
    வெடி குண்டா வெடிப்பேன்டா!

    என்னைச் சுட்டிப் பையன் என்று சொல்லாதே…
    சுட்டுப் போடுவேன்!
    கிட்ட வந்து நெருங்காதே
    வகுந்து போடுவேன்!
    ஊரில் உள்ள
    நாதாரி, காவாலிகளுக்கெல்லாம்
    இனி நான்தான்டா கோடாரி!

    சாக்கடையில்தான் நான் சங்கமித்தாலும்
    சமுத்திரத்தில் நான் குளித்தவன்டா
    சரித்திரம் படைக்கத் துடிப்பவன்டா
    பேய் பிடித்து ஆடுதடா உலகம்
    ஒரு புரட்சியில்லாது அடங்குமா
    கலகம்?

     

    Share
  • புத்தியில் தெளிகிலாரே!

    -எசேக்கியல் காளியப்பன்

    ‘கலையெலாம் நன்கு கற்றுக்
    காரியம் வெளிநாட்    டில்தான்
    நிலைபெற வாழல்’ என்னும்
    நினைப்பினைப்  பெற்றோர் பிள்ளை
    தலையிலே பதிக்கின்  றாரே!
    தமிழதற்(கு) உதவா தென்றும்
    கலைமகள்  ஒதுக்கி வைத்துக்
    காசினைப் பூசிப் பாரே!

    உற்றது பிறரும் பார்க்க
    உயர்ந்ததாய் வேண்டு மென்றே
    கற்றதின் மேலே வைத்த
    காதலா இந்தப் போக்கு?
    மற்றைய நாடு சென்று
    மங்காத செல்வம் சேர்க்கப்
    பெற்றவர் தமக்குள் கொண்ட
    பித்தமே இந்த நோக்கு!

    ‘இதந்தரும் தமிழைக் கற்றால்
    என்வரும்? இங்குள் ளோர்போல்
    பதர்களாய்  மடிவ  தற்கோ?
    பணந்தரும் வெளிநா  டெ’ன்றே
    விதந்துரை செய்து பிள்ளை
    வெளிநாடு செல்ல வைத்து
    நிதமவர் நினைப்பில் ஏங்கி
    நிம்மதி இழக்கின்  றாரே!

    மதங்களைப் போல இன்று
    மற்றொரு நாடு சென்று
    விதவித மான இன்பம்
    விரும்பிடு கின்ற  ஆசைச்
    சிதைவளர்க் கின்றார்! தங்கள்
    சிறுவரைப் பலிகொ டுப்பார்!
    புதைகுழிக் குள்ளே போகும்
    புத்தியில் தெளிகி லாரே!

     

    Share
  • அழகின் விளிப்பு

    -சி. ஜெயபாரதன், கனடா

    அழகினைக் கண்டால், உளம்போய்
    அடிமை ஆகுதடி !
    நிழலினைப் போல, பின்னால்
    நெருங்க ஆசையடி !                                                azhagin vilippu

    கற்ற மறையெல்லாம் ஒருகணம்
    காற்றில் பறக்குதடி !
    ஒற்றரைப் போல ஒளிந்து
    உளவச் செல்லுதடி !

    சுற்றுப் புறமெல்லாம் மறந்து
    சூனிய மாகுதடி !
    சுற்றி வருகுதடி துணைக் கோளாய்
    சுய உணர் விழந்தபடி !

    பட்டப் பகலிலும் கனவுகள்
    பளிச்சிடு மேயடி !
    வட்டப் புள்ளி போல, மனம்
    வலம் வருகுதடி !

     

    Share
  • ” அவன், அது , ஆத்மா” (15)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    “தியாகி கோமதி சங்கர தீக்ஷிதர்”

    agsஅவன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் வருடத்தில் (15.08.1966) சுதந்திர தினக் கொண்டாட்டம் அவனுடைய பள்ளியிலும் காலை எட்டு மணிக்கு நடைபெற்றது. பள்ளியின் நூலகத்திற்கு முன்பாக இருக்கிற பெரிய மைதானத்தில் மாணவ, மாணவிகள் அழகிய முறையில் வரிசையாகக் கூடி இருந்தனர். முக்கிய விருந்தினர் பெரிய கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி, முடிச்சை அவிழ்த்ததும் அதிலிருந்து வண்ண வண்ண ரோஜாப் பூக்கள் கொத்தாக பூமியை நோக்கிப் பறந்து வந்து கொண்டிருக்க “தாயின் மணிக்கொடி பாரீர்..அதைத் தாழ்ந்து பண்ணிந்து வணங்கிட வாரீர்” என்ற மஹாகவி பாரதியாரின் பாடலை மாணவ மாணவிகள் “சல்யூட்” வைத்தபடி பாடினார்கள். தலைமை ஆசிரியர் “அரங்கநாத ராவ்” சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றியும், முக்கிய மாக செங்கோட்டை “வீர வாஞ்சிநாதன்” பற்றியும் கூறிய செய்திகள் அவன் மனதில் இன்றும் பசுமையாகப் பதிந்திருக்கிறது. முக்கிய விருந்தினரின் உரையைவிட அவனது தலைமை ஆசிரியரின் உரையே அவனுக்குப் பிடித்திருந்தது. தேசிய கீதம் பாடி விழா நிறைவு பெற்றதும் அனைவருக்கும் ஒரு இனிப்பு வழங்கப்பட்டது. அவன் அதை வாங்கிக்கொண்டு அவனது வீட்டிற்கு ஓடியே வந்து கொண்டிருக்கும் பொழுது “சர்மாஜி சாலை”யில் உள்ள “பஞ்சாயத் யூனியன்” அலுவலக வாசலில் சுதந்திர தினவிழாக் கூட்டம் நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தான். சிறிது நேரம் அங்கு நிற்க அவன் விரும்பினான். அந்த வேளையில் ஒரு வயதானவர் கதர் வேஷ்டியும், கதர் சட்டையும் அணிந்து மேடையில் கம்பீரமான குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தார். பேசும் பொழுதே அவர் தனது வேஷ்டியை இறுக்கிக் கட்டியபடி பேசினார். அவரது பேச்சு அவனைக் கவர்ந்தது. அவர் ஒன்றும் கவர்ச்சியான வார்த்தைகளைச் சொல்லிக் கேட்பவரைத் தன் பக்கம் இழுக்கும் பேச்சாளர் அல்ல. உள்ளத்தில் உள்ள உண்மையை அவர் உரத்த குரலில் கூறினார். அவர், இளைஞர்கள், பள்ளிக் குழந்தைகள் எல்லோரும் கட்டாயம் பாரதியாரின் கவிதைகளைப் படிக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறித்தினார். “வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்றும், “சாதிகள் இல்லையடிப் பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம்” என்று கரகரத்த குரலில் ரசித்துப் பாடியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் தனது உரையை முடிக்கும் பொழுது “வந்தே மாதரம்..வந்தே மாதரம்…பாரத மாதாக்கீ ஜே” என்று மூன்று முறை உரக்கச் சொல்லி தனது உரையை முடித்துக் கொண்டார். கூட்டத்தில் எல்லோரும் அவரைத் தொடர்ந்து கோஷமிட்டனர். அவனும் “வந்தே மாதரம்..பாரத மாதாக்கீ ஜே” என்றான். “மாமா இப்ப பேசின தாத்தாவின் பேரென்ன” என்று அவன் பக்கத்தில் நின்றிருந்த பெரியவரைக் கேட்டான்.

    “இவர்தான் கோமதி சங்கர தீக்ஷிதர்”. பெரிய தியாகிடா. காங்கிரஸ்காரர். நம்மூர்காரராக்கும்” என்று அவர் சொன்னதில் அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவனுக்கு , பாரதியாரின் பாடலை படிக்கத் தூண்டிய மகாத்மாதான் கோமதிசங்கர தீக்ஷிதர். அதன் பிறகு அவன் அந்த ஊரில் பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பாக, தேரடித் தெருவில் நடந்த கூட்டங்களில் அவரின் பேச்சைக் கேட்டிருக்கிறான். ஒரு முறை ,” மாமா உங்களோடு பேச்சு நன்னா இருந்தது” என்று அவன் சொன்ன போது , ” அம்பி நன்னாப் படிக்கணும்…நேரத்த வீணாக்காதே…முன்னுக்கு வா” என்று அவனது முதுகை தட்டி அவர் சொன்னதில் அவனுக்கு விருது கிடைத்த இன்பம் இருந்தது. அதை அவன் அவனுக்கு அம்மாவிடம் கூறி மகிழ்ந்தான்.

    ஆசாரக் கட்டுப்பாடு மிகுந்த காலத்தில் தாழ்த்தப் பட்ட மக்களுக்காக (ஹரிஜனங்களுக்காக) ஒரு விடுதியை ஊருக்கு வெளியில் தன் சொந்த முயற்சியில் துவக்கியவர். கல்லிடைகுறிச்சி லக்ஷ்மி அம்மாள், சங்கர ஐயர், யக்னேஸ்வர சர்மா போன்ற விடுதலைப் போராட்டத் தியாகிகளோடு தானும் இணைந்து போராடியவர். வெள்ளைக்காரக் கலெக்டர் “ஆஷ் துரை ” யைச் சுட்டுக் கொல்வதற்கு யார் யார் தயார் என்ற சீட்டுக் குலுக்கிப் போட்ட பெயர்களில் ஒன்று “கோமதி சங்கர தீக்ஷிதர்” என்று சுதந்திரப் போராட்ட வரலாறு கூறுகிறது. செங்கோட்டை வாஞ்சிநாதன் பெயர் வந்தது அவர் அந்தக் காரியத்தைச் செய்து முடித்து, முடிந்தார்.

    தீக்ஷிதர் மீது பெருந்தலைவர் காமராஜருக்கு மிகுந்த மரியாதை உண்டு. எப்பொழுது கல்லிடைகுறிச்சிக்கு காமராஜர் வந்தாலும் “தீக்ஷிதர்” எப்படி இருக்கிறார் என்று விசாரிப்பாராம். தேசம்தான் தன் மூச்சு என்று வாழ்ந்தவர் தீக்ஷிதர். அதனால் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து மூன்று முறை அவர்தான் காங்கிரஸ் கட்சி சார்பாக நிறுத்தப் பட்டார். வென்றார். காங்கிரஸ் தோற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்த பொழுதும் கோமதி சங்கர தீக்ஷிதர் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார். அவர் எப்பொழுதும் புகைவண்டியில் சாதாரண வகுப்பில்தான் பயணம் செய்வார். அப்படி இருந்தால்தான் சாதாரண மக்களின் குறைகளை நாம் அறிந்து கொண்டு அதற்கான நிவாரணத்தையும் செய்ய முடியும் என்று சொல்வாராம். “பாரத மாதா பஜனை சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி, மஹாகவி பாரதியாரின் பாடல்களைப் பாடி தேச பக்தியைத் தூண்டிய தியாகி அவர். திலகர் வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியின் செயலாளராக இருக்கக் கூடிய கே.எஸ். சங்கரசுப்ரமணியன் ஒரு முறை பள்ளியின் வேலை விஷயமாக சென்னையில் சட்டமன்ற அலுவலகத்திற்குச் சென்றிருந்த சமயம், அங்கே கோமதி சங்கர தீக்ஷிதரைச் சந்தித்திருக்கிறார். அப்பொழுது தீக்ஷிதர் சங்கரசுப்ரமணியன் வந்த விபரங்களைக் கேட்டு விட்டு,” அம்பி..இன்னிக்குத்தான் என்னோடு நக்ஷத்திரம் ..எண்பது முடிந்து எண்பத்தி ஒன்று ஆரம்பம்” என்றாராம். உடனே,” மாமா எனக்கு ரொம்ப பாக்கியம்.” என்று அவரை வணக்கிவிட்டு,” இன்னிக்கு நீங்க என்கூடத்தான் சாப்பிடணும்..வாங்கோ மௌவுட் ரோடு கீதா கபேக்குப் போய்ச் சாப்பிடலாம்” என்று அழைத்துக் கொண்டு போனதாகவும் கே.எஸ்.சங்கரசுப்ரமணியன் மாமா அவனிடம் கூறியிருக்கிறார். அதன் பிறகு அப்போதைய முதல் அமைச்சர் மு.கருணாநிதிதான் சட்டசபையிலேயே தீக்ஷிதருக்கு சதாபிஷேக விழாவை நடத்திப் பெருமை கொண்டார் என்பது வரலாறு.

    “சங்கமுத்துத் தேவர்”

    தியாகி தீக்ஷிதருடனேயே எப்பொழுதும் இருக்கக் கூடிய நெருங்கிய தொண்டர்களில் ஒருவர் “சங்கமுத்துத் தேவர்”. மிகவும் எளிமையானவர். நேர்மையாளர். தீட்சிதரின் மறைவுக்குப் பின்னால் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக வெற்றி பெற்றவர் சங்கமுத்துத் தேவர். வடக்கு மாடத்தேருவில் இருந்த கே.எஸ். வேங்கடராமையர் வீட்டிற்கு சங்கமுத்துத்தேவர் வந்திருந்த சமயத்தில் அவரிடம் அவன் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு பேசி இருக்கிறான். சிருங்கேரி சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் கல்லிடைகுறிச்சிக்கு 04.05.2012, 05.05.2012 அன்று விஜயம் செய்திருந்த சமயம் குருவை தரிசிக்க சங்கமுத்துத் தேவர் வந்திருந்தார். அப்பொழுதும் அவன் அவரிடம் பேசிக்கொண்டிருந்தான். அடக்கமும், எளிமையும் உள்ள நல்ல பண்பாளர். நேர்மையாளர். அவரைப் பற்றி இன்று (04.06.2015) ஏதோ அவனுக்கு நினைவு வர, அவரை நன்கு அறிந்த அவனுக்கு நண்பரான கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியனிடம் ,”அம்பி…சங்கமுத்துத் தேவர் எங்க இருக்கார்…இப்ப எப்படி இருக்கார்” என்று கேட்டான். ” அவர் இறந்து நான்கு நாட்கள் ஆகிறது..நான் சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த பொழுது அந்தச் செய்தி எனக்குக் கிடைத்தது” என்று அவனிடம் கீழாம்பூர் சொன்னார். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சங்கமுத்துத் தேவர் பற்றிய நினைவுகளை அவன் நண்பன் கீழாம்பூருடன் பகிர்ந்து கொண்டான். அப்பொழுது கீழாம்பூர், கோமதி சங்கர தீக்ஷிதருக்கும் சங்கமுத்துத் தேவருக்கும் குரு – சிஷ்ய உறவுதான் இருந்தது என்றும் தேவருக்கு தீக்ஷிதரின் மீது அளவிலாத பக்தியே இருந்ததென்றும் சொன்னார். இது போன்ற தியாகிகளைப் பற்றி யாருமே இப்பொழுதெல்லாம் கேட்ககூட மாட்டேன் என்கிறார்களே என்று கீழாம்பூர் மிகவும் வருத்தப் பட்டார்.

    கோமதி சங்கர தீக்ஷிதர் 1962ம் வருடப் பொதுத் தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினராக அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டி இட்ட பொழுது தேர்தல் நிதியாக பெட்ரோல் பேங்க் நடேச ஐயர் ரூ.17500/- (ரூபாய் பதினேழாயிரதி ஐநூறு) கொடுத்திருக்கிறார். அதில் செலவு ரூ.12400/- (ரூபாய் பனிரெண்டாயிரதி நானூறு) போக மீதமுள்ள ரூ.5100/-ஐ நிதியளித்த நடேச ஐயர் அவர்களிடமே திருபித்தர காமராஜர் அவர்களிடம் அனுமதி பெற்று, திருப்பிக் கொடுத்து விடுகிறார். இந்தச் செய்தியை தனது நாட்குறிப்பில் (டைரி) தீட்சிதர் குறித்து வைத்திருக்கிறார் என்ற செய்தியையும் சொல்லி, சட்டமன்ற உறுப்பினராக இல்லாத சமயம் தீக்ஷிதர் சென்னைக்கு வந்திருக்கிறார். அப்பொழுது தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனைப் பார்க்கச் சென்றிருக்கிறார். ஏ.என்.சிவராமன், தீக்ஷிதரின் சீடர். ஏ.என்.எஸ். தீட்சிதரைப் பார்த்து,” நீங்கள்தான் இப்பொழுது சட்டமன்ற உறுப்பினர் இல்லையே…சென்னையில் உங்களுக்கு என்ன வேலை?” என்று கேட்டிருக்கிறார். “நம்மூரில் மூன்று தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு அரசாங்கத்தின் உதவி தேவைப் படுகிறது. அவர்களுக்கு நல்ல புத்தி இருக்கிறது..மேல் படிப்பு வசதி செய்து கொடுத்தால் நன்றாக முன்னுக்கு வருவார்கள். அதுதான் நான் நேரிலேயே வந்து வேண்டியதைச் செய்து கொடுக்கலாம் என்று வந்திருக்கிறேன் என்று சொன்னாராம். அதற்கு,” நீங்கள்தான் உண்மையாகவே தாழ்த்தப் பட்டவர்களை மேலே கொண்டுவர உழைக்கும் மாமனிதர்” என்று தினமணி ஆசிரியர் சிவராமன்ஜி சொன்னதாக நண்பர் கீழாம்பூர் சொன்னார்.

    ” ஏ.என்.சிவராமன்ஜி “

    ansதினமணி ஆசிரியர் சிவராமன்ஜி அவர்களும் தேசத்திற்காகப் பாடுபட்ட தியாகிதான். கல்லிடைகுறிச்சி “ஜார்ஜ் மிடில் ஸ்கூல்”ல் எட்டு ஆண்டுகள் ஆசிரியராக வேலை பார்த்திருக்கிறார். இதுபற்றி அவரே கைப்பட ஒரு கடிதத்தை திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியின் செயலாளருக்கு எழுதி இருக்கிறார். அதை பள்ளியின் நூற்றாண்டு விழா மலரில் வெளியிடிருக்கிரார்கள். அந்த எட்டு வருடங்களில் அவருக்கு தியாகிகள் லக்ஷ்மி அம்மாள், சங்கர ஐயர். கோமதிசங்கர தீக்ஷிதர், எக்னேஸ்வரசர்மா போன்ற பெரியோர்களிடம் நெருக்கிப் பழகும் பேறு கிடைத்துள்ளது. பாலகங்காதரத் திலகர் மரணமடைந்த பொழுது ஊரில் இருந்து இருநூறு பேர்களை தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அழைத்துக் கொண்டு சென்று கூட்டுத் தர்ப்பணம் (நீத்தார் கடன் ) செய்திருக்கிறார்.

    அந்தப் பெரியவரை அவனுக்கு நேரில் சென்று பார்த்துப் பேசும் பாக்கியத்தை அவனுக்கு நண்பன் கீழாம்பூர்தான் ஏற்படுத்திக் கொடுத்தார். அப்பொழுது கீழாம்பூர் சங்கரசுபிரமனியன் “அம்மன் தரிசனம்” ஆன்மிக மாதப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். சிவராமன்ஜி அம்மன் தரிசனத்தில் வேத மந்திரங்கள் என்ற தலைப்பில் அற்புதமாக ஒரு நெடுந்தொடர் எழுதினார். அவன் அந்தக் கட்டுரையை ரசித்துப் படிப்பான். ஒருமுறை அவனும், அவனது மனைவி சீதாலக்ஷ்மியும் அவரை ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்தனர். அவன் அவனுக்கு மனைவியை, ” இவள் என்னோடு “மிசெஸ்” சீதாலக்ஷ்மி” என்று அறிமுகப் படுத்தினான். உடனே அவர்,” டேய்…அப்படிச் சொல்லக் கூடாது….என்னோடு “ஒய்வ்” (wife)ன்னு சொல்லு” என்று அவனைத் திருத்தி, அவர்கள் இருவரையும் ஆசீர்வாதம் செய்தார். சீதலக்ஷ்மியிடம் அவளது கல்வித் தகுதிகளைக் கேட்டு மகிழ்ந்தார். எனக்கும் கொஞ்சம் “பெங்காலி” தெரியும் என்றார். நிறை குடங்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதன் பிறகு பல முறை அவன் அவரை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறான். எப்பொழுதும் எதையேனும் படித்துக்கொண்டே இருப்பார் அல்லது வேத மந்திரங்க்களைக் கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் மறைந்த செய்தி கேட்டு அவன் அவரது இல்லத்திற்குச் சென்றான். அங்கே அவரது உடலுக்கு வலதுபுறம் வேதமந்திரங்களைச் சொல்லியபடி அந்தணர்களும், மறுபுறம் நான்கைந்து இஸ்லாமிய அன்பர்கள் திருக்குரானையும் ஓதியபடி இருந்த காட்சி அவனுக்குள் மறைபொருளான இறைவனின் இருப்பை உணர்த்தியது. அவர் திருக்குரானை அதன் அரபிக்மூல மொழியிலேயே நன்கு ஓதக் கற்றிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் இஸ்லாமிய அன்பர்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டும் இருந்தார் என்று கீழாம்பூர் அவனிடம் சொன்னதில் அவரின் ஆர்வத்தையும், அறிவாற்றலையும் எண்ணி “சிவராமன்ஜி” அவர்களை மனதார வணங்கினான். “இருந்தாலும், இறந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே”.

    இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    படங்கள் உதவி   K.V,. அன்னபூர்ணா . நன்றி.

    Share
  • இளமையும் புதுமையும்!

    -சாஜஹான்

    இளமைப் பருவம் முழுதும்
    கவிதை துளிரும் மனதில்
    துளிரும் கவிதை மொழிகள்
    தெளிவில் அமைய வேண்டும்!

    கவிதை எழுதும் சமயம்
    கருத்தில் உணர்ந்து எழுது
    கவிதை வரியின் எழிலும்
    கருத்தில் நிறையும் பொருளும்!

    இளைஞர் எமது மனதில்
    நிறைவு பெறுதல் வேண்டும்
    இளைஞர் எமது கைகள்
    எழுதும் கவிதை வரிகள்
    உலகில் உயர்வு பெற்றுப்
    புதுமை காணவேண்டும்!

    இளைஞர் எமது மனதில்
    உதிக்கும் கவிதைத் துளிகள்
    புதுவுலகு நோக்கி நகரும்
    திறமை படைக்க வேண்டும்!

    இளைஞர் எமது பணிகள்
    மடமை ஒழிக்கும் தடிபோல்
    உலகில் திகழ வேண்டும்
    நம்கவிதை நாளும் உலகில்
    புதுமை படைக்க வேண்டும்
    அப்புதுமைக்கு உரிமை எமது
    இளமை பெறுதல் வேண்டும்!

     

    Share
  • காலம் (8)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x150111

    கவிதையே என்னுயிர் ; காலக் குழந்தை
    செவிகளுக் குள்ளே சிரித்துச் சுவைத்து
    மகிழும் கருவை மழையாய்ப் பொழிய
    உமிழும் கவியே உயிர். (71) 11.03.2015

    கூலிக்காய் வந்தோம் குறைநிறை யோடேநாம்
    ஜாலியாய் என்றும் ஜகத்திலே நாலில்
    ஒருவராய் அன்புடனே ஒற்றுமையாய் வாழ்ந்தால்
    விரும்பி வரவேற்கும் வீடு. (72) 12.03.2015

    அவரைப்பூ , ஆகாயம் , ஆழ்கட லெல்லாம்
    கவலை யிலாத கனிந்த சிவனே !
    நவநீதக் கண்ணனும் ஞானமாம் நீலி
    அவளும் அதுதா(ன்) அறி. (73) 13.03.2015

    சித்தனுக்கும் அந்த சிவனுக்கும் போக்கேது !
    உத்தம னாத்ம உயிராக நித்தனாய்
    தேருடலில் வாழ்கின்றான் ! தேடாதே வீணாக
    ஊரூராய் ஊர்க்குருவி போல். (74) 14.03.2015

    சீட்டுக்குள் ராஜாவின் சித்திரம் பேசாது ;
    வாட்டமும் கொள்ளாது ; வாஞ்சையாய் கூட்டத்தில்
    கொண்டாட்டம் போட்டு குஷியாய் இருந்திட
    வண்டாட்டம் சுற்றியே வா.. (75) 15.03.2015

    வண்டியில் ஊர்சுற்றி வந்து தமிழ்ச்சுவடி
    கண்டு பிடித்துத்தன் கண்விழ்த்துத் தொண்டினைச்
    செய்த தமிழ்முனி சீர்சாமி நாதனை
    கைதொழுதால் வாழும் கலை. (76) 16.03.2015

    குருவிபோல் சேர்த்துக் குடும்பமாய் வாழும்
    அருமையே ஆனந்தம் ; ஆசை பெருகி
    அருவிபோல் ஓடினால் அங்கதைத் தாங்க
    இருக்குமே பாறை இறை. (77) 17.03.2015

    வெளியில் அமைதியும் வேதனை உள்ளும்
    ஒளித்திருக்கும் வாழ்வி(ல்) உனக்கு ஒளியில்லை !
    உள்ளே அடங்கியும் ஊரில் திரிவதும்
    கள்ள மிலாத கலை. (78) 18.03.2015

    வாய்திறந்து பாடுவதும் , வந்தோர்முன் புன்னகைத்து
    நோய்மறந்து பேசுவதும் , நோகாது தாய்மடியில்
    தூங்குவதும் துள்ளிக் குதித்து வறியோரைத்
    தாங்குவதும் தங்கமனந் தான். (79) 19.03.2015

    கொஞ்சம் சிரிக்கலாம் ; கொஞ்சம் அழுதாலும்
    பஞ்சுபோல் மெல்லப் பறக்கலாம் – நஞ்சு
    கலக்காத நெஞ்சுள் கவலை வராதே ;
    உலகமே உல்லாச ஊற்று. (80) 20.03.2015

    Share
  • பெண்ணே பொங்கி எழு!

    -ரா.பார்த்தசாரதி 

    வயது  வந்த  பெண் அவள்,
    வரதட்சணை  இன்றி அழுகிறாள் !
    வரதட்சணை  தந்து  மணப்பவளோ
    வரட்டி  போலங்கு  எரிகிறாள் !

    நங்கை எனும் பெண்  அழுகிறாள்,
    கண்ணீரை ஏனோ கங்கையாகக் கொட்டுகிறாள்
    ஏனோ இவ்வுலகில் ஆயிரம் பொன் தந்தாலும்
    இவ்வுலகில் மங்கை மண்ணெண்ணெய்க்குள்   மறைகிறாள்!

    மண்ணாய் என்றும் இருந்துவிடாதே  கண்ணே!
    புதுமைப்  பெண்ணாய் மாறிட வேண்டும்
    பொன் பொருள் ஊதியம் தந்து வாழ்கின்றாய்
    என்றுதான் உன் சுதந்திரத்தை  நிலைப்படுத்துவாய்?

    ஆணுக்கு நிகராய்ப் படித்து பட்டம் பெற்றாய்
    உன் பெற்றோரைத் திருமணத்தோடு  மறந்தாய்
    உனக்கு உயிரும் உருவமும்  தந்தவளை
    உதாசீனம்  செய்ய  எண்ணி விடாதே!

    மதிப்பும் மரியாதையும் மனதிலே மட்டும்தானா?
    பிறந்த வீட்டையும் சற்றே  நினைக்க வேண்டாமா?
    பல்லாயிரம்  தொலைவில் இருந்தாலும்  தாய்ப்பாசம் மாறுமா?
    அவள் நிலைமை என்றும் உயர்த்த வேண்டமா?

    ஆணுக்கு  நிகராய் என்றும் இருந்திடுவாய்
    தர்மத்தையும் நியாயத்தையும் என்றும் நிலைநாட்டிடுவாய்
    பெண்ணடிமை   என்பதை  வேரோடு அறுத்திடுவாய்
    ஞாலத்தில்  புதுமைப் பெண் என்பதைப் பறைசாற்றிடுவாய்!

     

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -2 யாருமில்லை நான்

    [1830 -1886]

    aemi
    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -2
    யாருமில்லை நான்

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    யாரு மில்லை நான் ! நீ யார் ?
    யாருமில் லையா நீயும் ? ஆகவே
    நாம் ஜோடியெனச் சொல்லாதே !
    நாடு கடத்துவர் நம்மை, தெரிந்து கொள்.

    எப்படிப் பயமளிக்கும் சிலராய் இருத்தல் ?
    எப்படிப் பொதுத் தவளை போல் இருத்தல் ?
    ஒருநாள் முழுதும் உன்பேர் சொல்வது
    சேறு பூசிப் போற்றுவது போலாகும் !

    ++++++++++++

    “I’m nobody! Who are you?
    Are you nobody, too?
    Then there’s a pair of us—don’t tell!
    They’d banish us, you know.

    How dreary to be somebody!
    How public, like a frog
    To tell your name the livelong day
    To an admiring bog!”

    ― Emily Dickinson, The Complete Poems

    வாழ்க்கை

    வெற்றி இனிக்கிறது வெகுவாக
    தோல்வி என்றும் அடைவோர்க்கே !
    அமிழ்தச் சுவை உணர்ந்து கொள்ள
    பெரும் புண்பட் டிருக்க வேண்டும் !

    வெற்றிக் கொடி தனைப் பெற்று
    இன்று நிலை நாட்டியவர் எவரும்
    விளக்கிச் சொல்ல இயலாது
    தெளிவாய் வெற்றி யாதென !

    தோற்று வீழ்ந்து மரிக்கின் றவன்
    கேளாத காதில் தெளிவாய் விழாது
    வெற்றியின் நீண்ட மெய்வருத்த
    மனத்துயர் இடர்கள், முறிவுகள்.

    ++++++

    Life

    I

    SUCCESS is counted sweetest
    By those who ne’er succeed.
    To comprehend a nectar
    Requires sorest need.

    Not one of all the purple host 5
    Who took the flag to-day
    Can tell the definition,
    So clear, of victory,

    As he, defeated, dying,
    On whose forbidden ear 10
    The distant strains of triumph
    Break, agonized and clear.

    CONTENTS · BIBLIOGRAPHIC RECORD

    Share
  • வாழ்த்தும் வயதில்லை வணங்குவோம் பெரியவரை!

    -சுரேஜமீ

    அகவை தொண்ணூறு
    அடைவர் சிலரே
    அப்படி அடைந்திடினும்
    அங்கங்கள் அசையா                                   kalaignar
    அடுத்தவர் துணைதேடி
    அஞ்சி வாழ்ந்திடுவர்!

    அன்னைத் தமிழ்தொட்ட
    அஞ்சுகப் புதல்வரோ
    அயராத உழைப்பினால்
    அகவை தொண்ணூற்றிரண்டில்
    அடியெடுத்து வைக்கிறார்
    அன்னார் காணநூறு!

    அண்ணா முழங்க
    அரியணை ஏற
    அரணாய்த் தொடர
    அருந்தமிழ் பேச
    அரசியல் தெளிந்து
    அரசினைப் பற்றி
    இரண்டும் மூன்றாய்
    ஐந்துமுறை ஆள
    இலக்கியப் பணியில்
    இன்னமும் ஆழ்கிறார்!

    இவர்தம் உழைப்பை
    எவரும் கற்க
    வெற்றி நிச்சயம்!
    வேண்டும் இதயம்
    எதையும் தாங்க
    இவர்போல் உறுதியாய்
    மொழியின் ஆளுமைக்கு
    முன்னமும் பின்னமும்
    எவரும் இலையென
    எழுதும் வல்லவர்!
    பேனா முனையில்
    பெண்ணை வைத்து
    மண்ணை இழுத்த
    மன்னவன் இவெரென்பேன்!

    வாழ்த்தும் உள்ளங்கள்
    வளரட்டும் இவர்வயது
    வானம் வரைக்கும்
    எட்டட்டும் வளத்தை
    வார்த்தைகள் வடிக்கும்
    வாய்ப்பினைப் பெற்று
    வளர்க்கட்டும் சிந்தனையை
    வருவது நன்றதுதீதென
    வான்புகழ் நாடென்று
    வளர்க்கட்டும் தமிழ்நாட்டை
    வளரும் சமுதாயம்
    வாழ்க வளர்கவென!
    வாழ்த்தும் வயதில்லை
    வணங்குவோம் பெரியவரை!

     

    Share
  • தாகூரின் கீதங்கள் – 7

     

    உன்னோடு ஐக்கியம்

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    atag

    உன்னைத்தான் எப்போதும்

    நேசித்திருப்பதாய்

    உணர்கிறேன் இன்று நான்

    எல்லா

    இடர்களுக்கும் இடையே !

    யுக யுகமாகப்

    பொதுக் குழுவினரோ டிணைந்து

    நீயும் நானும்தான்

    நேசர்களாய் இருந்தோம் !

    உலகில் எப்புறம் நோக்கினும்

    உயிர் வாழ்வில்

    நினைவுக்கு வருகிறது;

    நீயும், நானும்

    எல்லை யற்ற வடிவங்களில்

    ஐக்கிய மானது

    எனக்குத் தெரிகிறது

    ஒவ்வொரு பிறப்பிலும் !

    காலவரை கடந்து

    வான்வெளி அரங்கிலே நான்

    வாசம் செய்ததை

    நான் மறந்து போனேன் !

    விண்மீன்களின்

    மினுமினுப் பொளியில்

    தாவித் தாவி

    ஊஞ்சலாடி இருந்திருப்போம்

    ஒன்றாக

    நீயும் நானும் !

    *********************

    Original Source: A Tagore Testament,

    Translated From Bengali By Indu Dutt

    Jaico Publishing House (1989)

    121 Mahatma Gandhi Road,

    Mumbai : 400023
    **********************

    Share