Blog

  • எல்.கே. ஜி மாணவன்

    ரா.பார்த்தசாரதி

    பசி,  தூக்கம்  வந்தால்  எங்களுக்கு  அழத்  தெரியும் !
    உங்கள்  கஷ்டங்கள் பற்றியும், வரவு செலவு பற்றியும் எங்களுக்குத் தெரியாது !

    நாங்கள் கேட்டதை உடனே வாங்கிக் கொடுக்கவேண்டும் !
    எங்களுக்குச் சாப்பிடும் பொருளின் விலை பற்றித் தெரியாது !

    எங்களுடைய  சிரிப்பினைத் தானமாகக் கொடுக்கத்தெரியும் !
    எங்களுக்குப் பயம் கவலை என்பது என்னவென்று தெரியாது !

    எங்களுக்கு எந்தப் பொருளையும் கடிக்கவும் உடைக்கவும்  தெரியும் !
    நாங்கள் உடைக்கும் பொருளின் மதிப்பும் விலையும் தெரியாது !

    உங்கள்  வேலையே  உங்களுக்கு  முக்கியம் !
    எங்கள்  விளையாட்டே  எங்களுக்கு முக்கியம் !

    வேலைக்குச் செல்லாத அம்மாவே  ’நல்ல அம்மா’ என்று தெரியும் !
    டிவியிலும், செல்போனிலும் நேரம் கழிப்பது எங்களுக்குத் தெரியாது !

    எல்லாக்  குழந்தைகளும் மண்ணில் பிறக்கையில் நல்லகுழந்தைகளே !
    அவர்கள் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் தாய், தந்தை  வளர்ப்பினிலே !

     

    Share
  • காதலின் பொன்வீதியில் – 7

    மீனாட்சி பாலகணேஷ்.

    இசையால் இணைந்த இதயங்கள்

    கானகத்தின் நடுவிலிருந்த அழகான அந்தப் புனலில் இளமங்கையர் சிலர் நீராடி மகிழ்ந்தனர். ஒருவரையொருவர் கேலி செய்தபடியும், நீரைத் துளாவி வாரி இறைத்தும் மகிழ்ந்தவர்கள் நீராடி முடித்துக் கரையேறி உடைகளை உடுத்துக் கொண்டு அலங்காரம் செய்து கொண்டனர்.

    “ரூப்மதி, இப்போது நீ கொஞ்சம் உனது ‘பீனை’ இசைத்துப் பாடேன். இந்த இயற்கைச் சூழலில் எவ்வளவு நன்றாக இருக்கும்,” என்றாள் ஒருத்தி. ரூப்மதி என்ற அந்த மங்கை பேரழகி மட்டுமல்ல. இசையிலும் தேர்ந்தவள்; இனிய குரல் படைத்தவள்; ‘பீன்’ எனும் இசைக்கருவியை இசைத்தபடி பாடுவதில் வல்லவள்.

    மரத்தடியில் அமர்ந்து கொண்ட அப்பெண்கள் குழாம் ரூப்மதியின் இனிமையான பாடல்களை ரசிக்கலாயிற்று.யார் இந்த ரூப்மதி? மால்வாபிரதேசத்தின் ஒரு நாடான தரம்புரியின் அரசரான தன்சிங் எனும் ராஜ புத்திர வம்சத்து மன்னரின் அருமை மகள். தோஹா (Doha) எனப்படும் அழகான இரண்டு வரிக் கவிதைகள் இயற்றுவதிலும் அவற்றை இசையமைத்துப் பாடுவதிலும் திறமை படைத்தவள்.

    அந்தக் கானகத்தின் மறுகோடியில், மாண்டுவின் சுல்தானான பாஜ் பஹதூர் வேட்டையாட வந்திருந்தான். அவன் ஒரு மானைத் துரத்த, அது ஓட , மன்னனும் மானும் கானகத்தின் இக்கோடிக்கு வந்து விட்டனர். இசைப்பிரியனான பாஜ்பஹதூரின் செவிகளில் ரூப்மதியின் இன்னிசை தேனாகப் பாய்ந்தது. இசையால் ஈர்க்கப்பட்டு அவளுடைய குரல் வந்த திசையில் தேடிச் சென்று ஒளிந்து நின்று பார்த்தான்.

    இசையால் மட்டுமல்ல, அவளுடைய காந்தம் போன்ற ஈர்க்கும் எழில் மிகுந்த வடிவ அழகாலும் தன் வயமிழந்து, கொடிகளையும் செடிகளையும் விலக்கிக் கொண்டு அவள்முன் வந்தான் பாஜ் பஹதூர். “பெண்ணே, நீ யார்? உனது இசையால் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டாய்,” என்றான்.

    அச்சத்தால் தோழியர் சிதறி ஓடினர்!சிறிதும் அச்சம் கொள்ளாது அந்த ராஜபுத்திர மங்கை ரூப்மதி, “நான் மால்வா பிரதேசத்து தரம்புரியின் அரசர் தன்சிங்கின் மகள்,” என்றாள்.

    முதலில் தனது இனிய இசையைப் பொழிந்து அவனது உள்ளத்தை வசப்படுத்திக் கொண்டவள், இப்போது கண்ணையும் கருத்தையும் தன் அழகினால் கவர்ந்து கொண்டு விட்டாள்.

    இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடியே……… கணங்கள் பெருகி மணிகளாகி, அவையும் திரண்டு யுகங்களாகி விட்டனவோ?

    கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல … என்னும் குறளுக்கொப்ப, தன்னுடைய இனிய இசையால் அவன் தன்பால் காதல் வயப்பட்டு விட்டான் என்று குறிப்பால், அவன் நோக்கினாலும், பேச்சினாலும் உணர்ந்து கொண்டு விட்டாள் ரூப்மதி. தன் இசையை, தான் போற்றும் இசையை அவனும் மிகவும் ரசிப்பவன், அழகன், இளைஞன் என்ற காரணத்தால் வேற்று மதத்தவனாயினும் அவள் உள்ளமும் அவனிடம் சென்று ஒன்றி விட்டது.

    இருவருக்குமே உள்ளுணர்வு கூறியது- ‘காலம் தாழ்த்தினால் காரியம் கைகூடாது’ என்று!

    பாஜ் பஹதூர் தான் முதலில் கேட்டான்: “எனது நாடான மாண்டு உன்னை அரசியாக அடையும் பாக்கியம் பெறுமா?”

    ரூப்மதியின் இதயம் வேகமாகத் துடித்தது. அவள் கேட்க விழைந்த சொற்களைக் கூறுகிறான் அவன்! ஆயினும் சிந்தித்தாள். வாய்ப்பை நழுவ விடக் கூடாது. ராஜபுதன மங்கையான அவளுக்கும் சில விருப்பங்கள் உண்டு. அவற்றை நிறைவேற்றுபவனே அவள் இதயத்திற்கும் உரிமையாளன் ஆக இயலும். ‘நர்மதை நதி எனக்குத் தாய் போன்றவள்; அவள் மடியில், பிறந்து, விளையாடி, வளர்ந்து செழித்தவள் நான்; அவளைப் பிரிந்து, அவளைக் காணாமல், என்னால் ஒரு நாள் கூட வாழ இயலாது. என்ன செய்யலாம்?’ சிந்தித்தாள்.

    நெடு நேர அமைதியின் பின், இசைக் குயிலின் இதழ்கள் பிரிந்து மன உறுதியுடன் சொற்கள் வந்து விழுகின்றன. “என் தெய்வமான அன்னை நர்மதையை நான் தினந்தோறும் கண்டு மகிழும் வண்ணம் ஒரு அரண்மனையை உங்களால் மாண்டுவில் நிர்மாணிக்க முடியுமா? அப்போது தான் நான் மாண்டுவின் அரசியாகவும் உங்கள் இதய ராணியாகவும் ஆக இயலும்.”

    காதலின் திண்ணம்- கனவுகளின் வண்ணம்- மனதில் கொண்ட எண்ணம்- எல்லாம் சேர்ந்திழைந்த சொற்கள் அவை!

    “அது விரைவிலேயே நடக்கும்,” எனும் உறுதியானசொற்களைக் கூறியபடி கம்பீரமாக பாஜ் பஹதூர் திரும்பிச் சென்றான்.

    ரூப்மதியின் உள்ளம் அலைகடலில் படகு போலத் தத்தளித்தது. ‘நான் அவரால் நிறைவேற்ற முடியாத ஒரு செயலைக் கேட்டு விட்டேனோ? அவரைத் திரும்பக் காண்பேனா? அன்னை நர்மதை தான் வழி காட்ட வேண்டும்….’ பற்பல எண்ணங்கள். ஏக்கத்தில் நாட்கள் யுகங்களாக நகர்ந்தன.

    இப்போது அவள் இயற்றிய பாடல்கள், பாடிய இசை அனைத்துமே பிரிவின் துயரைத் தாங்க இயலாத காதல் கவிதைகளாகவே இருந்தன. அதிகம் பாடுவதும் இல்லை! பாடினாலும் அதில் துயரம் பெரிதும் கொப்பளித்தது!

    சுல்தான் பாஜ் பஹதூரும் தனது அரசியல் கடமைகளைப் புறக்கணித்தும் தனக்கு மிகவும் விருப்பமான இன்னிசை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமலும் நாட்டியங்களை ரசிக்காமலும் தனிமையை விரும்பி, ரூப்மதி பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து, அவள் வேண்டுகோளை எவ்வாறு நிறைவேற்றி அவளைக் கைப்பிடிப்பது என்ற துயரில் வாடலானான்.

    மகளின் வாட்டத்தை அறிந்த அரசி, ரூப்மதியின் தோழியர்களிடம் துருவிக் கேட்டு, ரூப்மதியை பாஜ்பஹதூர் சந்தித்ததையும், அவளை மாண்டுவின் அரசியாக்கிக் கொள்ள விரும்பி வேண்டியதையும் அறிந்து கொண்டாள். கேள்விப்பட்ட தந்தை தன்சிங் மிகுந்த சினத்தினால் இதனை ஒப்புக்கொள்ள மறுத்தார். “நமது குடிக்கும் குலத்துக்கும் அவப்பெயர் வந்து சேரும், அவளுக்கு விஷம் கொடுப்பது தான் இதற்கான தண்டனை,” என்றார். தாய் மன்றாடிக் கேட்டுக் கொண்டதன் பேரில், மகளை அரண்மனையிலேயே சிறையிட்டுக் காவலில் வைத்தார்.

    தனிமையிலும் தாபத்திலும் தவித்த ரூப்மதியின் கனவில் அவள் நாளும் வழிபடும் நர்மதை அன்னை வந்தாள். “மகளே, மாண்டு நகரில் ஒரு குறிப்பிட்ட மரத்தினடியில் ஊற்று ஒன்று உற்பத்தியாகி எழுந்து ஓடி வந்து என்னுடன் (நர்மதையுடன்) சேரும். அங்கு நீ உன் காதலனைச் சேர்வாய்,” என ஆசி கூறினாள். ரூப்மதியின் நெஞ்சம் ஆனந்த வெள்ளத்தில் நீந்தியது.

    Baz_Bahadur_and_Rani_Rupmatiரூப்மதி அவளுடைய தந்தையால் சிறை வைக்கப்பட்டதைக் கேள்வியுற்ற பாஜ்பஹதூர் தரம்புரி மேல் போர் தொடுத்து, ரூப்மதியைச் சிறைமீட்டுச் செல்கின்றான். அவளை இந்து, இஸ்லாம் ஆகிய இரு முறைப்படியும் திருமணம் புரிந்து கொண்டு தன்னுடைய பட்டத்தரசியாக்கிக் கொள்கின்றான். இப்போது இருவரும் நாடு முழுவதும் சுற்றி, அன்னை நர்மதை கனவில் வந்து கூறிய நீரூற்றைத் தேடுகின்றனர். ஒரு மரத்தினடியே ‘குபு குபு’வெனப் பெருகி வரும் வெள்ளியிழைகள் போன்ற ஊற்றைக் கண்டு பிடித்ததும் ரூப்மதியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

    Rewa_Kund,_Manduஇனிய இசையால் தன் இதயத்துள் குடிபுகுந்து தன் வாழ்வையும் இன்ப மயமாக்கிய இசைக்குயிலுக்கு பாஜ்பஹதூர் ஒரு அழகான அரண்மனையை அங்கேயே நிர்மாணிக்கின்றான். இந்தப் புனிதமான நீரூற்று ரேவா குண்ட் எனப் பெயரிடப்பட்டு, ஒரு நீர்த்தேக்கமாக அமைக்கப் பட்டது. இதிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நர்மதையின் நீரானது ரூப்மதியின் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. (புகைப்படங்களில் பார்த்தால் எத்தனை விதவிதமான கலையம்சம் நிறைந்த வாய்க்கால்கள்! இவை அனைத்தும் ரூப்மதிக்கான பாஜ் பஹதூரின் காதல் பரிசுகள்)16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட இந்த அரண்மனை விசாலமான முற்றங்களையும், பெரிய அறைகளையும், சுற்றுப்புறங்களைக் கண்டு களிக்க உகந்த மிக உயரமான உப்பரிகைகளையும் கொண்டு விளங்குவதாகும். இந்த உயரத்திலிருந்து ரூப்மதி கீழ்மட்டத்தில் ஓடும் நர்மதை நதியையும், தொலை தூரத்து விந்திய மலையின் செழித்த பச்சை நிறக் காடுகளையும், இன்னும் தொலைவில் இருக்கும் தனது தாய்வீடான தரம்புரியையும்கண்டு மகிழ ஏதுவாக அந்த உப்பரிகை அமைந்திருந்தது.

    Rupmati_Pavilion_01தாய்வீட்டைப் பிரிந்தவளின் உள்ளத் தவிப்பைத் தனிமையான நேரங்களில் இந்த உப்பரிகை மீது அவள் அமர்ந்து இயற்றிப் பாடிய இந்த தோஹா அழகுறத் தாபத்துடன் விவரிக்கின்றது.

    ‘நீயும் என்னுடன் இருந்த நாட்கள் இறந்து பட்டன;
    நான் உன்னுடன் இருந்தவை போலவே:
    இன்று திரும்பவும் நான் நானாக, நீ நீயாக
    ஒன்றாக அல்ல, இரண்டாக:
    இந்தக் கொடுமைக்கு என்ன செய்தோம் நாம்,
    ஓ, விதியே?

    (இங்கு நீ என்பது தாய்நாட்டைக் குறிக்கின்றது)

    Rupmati_Pavilion_02இளம் காதலர்கள் ரூப்மதியும் பாஜ்பஹதூரும் இந்த உப்பரிகையில் அமர்ந்து மாலை வேளைகளிலும் இரவுகளிலும் தங்கள் பொழுதினை இன்பமாகக் கழித்தனர். அவள் கவிதை இயற்றிப் பாட, அவன் ரசித்து மகிழ்ந்தான். அவனும் சில வேளைகளில் அவளுடன் சேர்ந்து பாடல்களை இசைத்தான். இசை, இன்னிசை, என்றும் பொழியும்அழியாத இசை இருவர் உள்ளங்களிலும் தாம் ஒருவர் பால் மற்றவர் கொண்டிருந்த காதலை மேன்மேலும் ஆவலுடனும் சிறப்புடனும் வளரச் செய்தது.

    ரூப்மதி இயற்றிய காதல் ரசம் சொட்டும் ஒரு தோஹாவின் மொழிபெயர்ப்பு:

    ‘இன்றிரவு நான் நிலவை வரவேற்பேன்
    அவளது புதுமையான ஒளிரும் முகத்திற்கு முகமன் கூறுவேன்
    ஆ! எத்தனை ஆனந்தம்! உமது கண்களும் எனதும்
    ஒரே இடத்தில் பதிந்து நோக்குவது!’

    ரூப்மதியின் அழகும் இசையும் பாஜ் பஹதூரைக் கட்டிப் போட்டு வைத்திருந்தன. அவளை விட்டுப் பிரியாது மகிழ்ந்திருந்த அவன், அரச அலுவல்களைப் புறக்கணித்தான்.அவர்களுடைய ஆனந்த வாழ்வு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.அப்போது தான் அரியணை ஏறியிருந்த அரசரான அக்பர் கண்களில் படைப் பாதுகாப்பற்றிருந்த மால்வா- மாண்டு பகுதி உறுத்தலாகப் பட்டது.

    அதனைக் கைப்பற்ற தனது படைத் தலைவர்களுள் ஒருவனான ஆதம்கானைப் படையோடு அனுப்பி வைத்தார். இசையிலும் காதலிலும் மூழ்கி அரச அலுவல்களை மறந்து விட்ட பாஜ் பஹதூரால் முகலாயப் படைகளைத் தாக்குப் பிடிக்க இயலவில்லை. விரைவில் தோற்கடிக்கப் பட்டான். ஆதம்கானின் படைகளால் கொல்லப்பட்டான் எனவும் கூறப்படுகின்றது.

    ரூப்மதியின் அழகினைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த ஆதம்கான் அவளைத் தன் உடமையாக்கிக் கொள்ள முயல்கிறான். தான் அவனிடமிருந்து தப்ப வேறு வழியில்லை என அறிந்த ரூப்மதி, தனது துயரத்திலிருந்து விடுபட மூன்று நாள் அவகாசம் கேட்கிறாள். ‘ஒரு ராதோர் ராஜ்புத்திர மங்கை ஒருமுறை தான் காதல் வயப்படுவாள். பாஜ் பஹதூர் ஒருவனே எனது உயிரும் ஆன்மாவுமாவார். நான் என்ன செய்து இந்த இக்கட்டிலிருந்து தப்புவது?’ என யோசித்து வருந்தியவளுக்கு ஒரு நல்ல வழி புலப்படுகின்றது.

    இக்கருத்தைப் பிரதிபலிக்கும் ஒரு தோஹா- ரூப்மதி இயற்றியதன் மொழிபெயர்ப்பு:

    ‘ஒரு சிங்கத்திற்கு ஒரு சிங்கக்குட்டி;
    உண்மையாளனுக்கு ஒரு சொல்;
    வாழைக்கு ஒருமுறை குலை தள்ளல்;
    என் இதயத்திற்கும் ஒரே தலைவன்!’

    மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றிக் கழிகின்றன. மூன்றாம் நாள் இரவில் பாஜ் பஹதூருடனான தனது திருமணத்தின் போது தான் அணிந்தபட்டாடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டு அலங்கரித்துக் கொண்டாள். ‘பீன்’ இசைக்கருவியை மீட்டியபடி துயரம் நிறைந்த பாடல்களை இசைக்கலானாள்.

    ரூப்மதி இயற்றிய அவலம் நிறைந்த ஒரு பாடலின் (தோஹா) மொழிபெயர்ப்பு:

    ‘எனது மென்மையான உள்ளம் இந்தக் கொடூரத்தைத் தாங்காது
    நம்மைப் பிரிக்கும் இந்த நெருப்பின் ஜ்வாலைகள்!
    ஓ! தன்னைக் குளிர்விப்பதென இந்த சதி உன்னுவாள்
    தனது தலைவனின் சிதை தன்னை!’

    (சதி- உடன்கட்டை ஏறும் மனைவி)

    வெகு நேரத்தின் பின், தாதியைக் கூப்பிட்டாள்: “நான் எனது அறைக்குச் செல்கிறேன். ஆதம்கானை அங்கு வரச் சொல்.”

    தனது அறைக்குள் சென்றவள் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த விஷத்தை அருந்துகின்றாள். அமைதியாகப் பஞ்சணையில் சாய்ந்து கண்களை மூடிக் கொள்கின்றாள்.

    உற்சாகமாக உள்ளே நுழைந்த ஆதம்கான் அந்த அழகியின் உறங்கும் கோலத்தில் அவள் பேரழகைக் கண்டு பிரமிக்கிறான். உள்ளம் படபடக்க அவளருகே அமர்ந்து கையைப் பற்றுகிறான். உயிரற்ற அவள் உடலைக் கண்டு திகைக்கிறான். அவள் எண்ணம் இப்போது அவனுக்குப் புரிகின்றது.

    “ஓ! காவலாளிகளே! ஓடி வாருங்கள். இவள் இறந்து விட்டாள்,” எனப் பதறுகிறான்.

    எல்லாரும் ஓடி வர, “ரூப்மதி தன் காதலனுக்காகவே தன்னைக் காப்பாற்றிக் கொண்டு இறந்து விட்டாள். பாஜ் பஹதூர் பக்கத்திலேயே இவளையும் அடக்கம் செய்ய வேண்டும்,” எனக் கட்டளை இடுகின்றான் ஆதம்கான். அவ்வாறே செய்யப் படுகின்றது.

    நீண்ட நாட்கள் வரை இந்தச் சமாதிகளின் அருகே சென்று, ‘ரூப்மதி,’ எனக் கூவி அழைத்தால் அது, ‘பாஜ் பஹதூர்’ என்று எதிரொலிக்குமாம். (தற்சமயம் இந்த சமாதி பாழடைந்த நிலையில் உள்ளது என்பது மிகுந்த வருத்தம் தரும் செய்தி ஆகும்.)

    காதலின் பொன்வீதி காதலர்களுக்கு வாழ்வில்மட்டுமே அல்ல; இறப்பிலும் இணை பிரியாது பயணிக்கும் காதலர்களுக்கும் உரித்தான பொன்வீதி தான் அல்லவா?

    இசையால் இணைந்த ரூப்மதி- பாஜ் பஹதூர் இதயங்கள் காதலின் ஜீவகீதங்களை என்றென்றும் இசைத்திருக்கும் அன்றோ?

    ___________________________________________________________________________

    பின் குறிப்பு: ரூப்மதி- பாஜ் பஹதூர் காதல் கதை ராணி ரூப்மதி எனும் பெயரில் ஒரு அற்புதமான ஹிந்தி திரைப்படமாக நீண்ட நாட்களுக்கு முன் வந்துள்ளது.வேண்டுவோர் இதனை You Tube- ல் காணலாம். மிக அழகான பாடல்கள் கொண்டது. கட்டாயம் பார்த்து மகிழுங்கள்.

    ___________________________________________________________________________

    படங்கள் உதவி: விக்கிபீடியா

    Baz Bahadur and Rupmati: http://upload.wikimedia.org/wikipedia/commons/6/68/Bazrupmati.jpg
    Baz Bahadur and Rupmati: http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1c/Baz_Bahadur_and_Rani_Rupmati_-_Google_Art_Project.jpg
    Rewa Kund: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/ba/Rewa_Kund%2C_Mandu.jpg/800px-Rewa_Kund%2C_Mandu.jpg
    Rupmati Pavilion: http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a6/Rupmati_Pavilion_at_Mandu.JPG
    Rupmati Pavilion: http://upload.wikimedia.org/wikipedia/commons/2/28/Rupmati_Pavilion_03.jpg

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 15-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. எம். வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்தைப் போட்டிக்குத் தெரிவு செய்துதந்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமை இதழ் தன் நன்றியை நவில்கின்றது.

    11216346_840352649352269_429205382_n

    தினைத்தாளன்ன (அரிந்த தினைப்பயிரின் அடிப்பகுதி போல்) சிறுபசுங்காலுடன் நீரிலே ஆரல் மீன் தேடி அழகாகப் பறந்து செல்லும் கொக்கைக் கண்டு நம் மனம் சொக்குகின்றதே!

    தனக்கான சரியான இரை கிடைக்கும்வரைக் காத்திருக்கும் பொறுமையும், கிடைத்தவுடன் அதனைத் தவறாது கொத்தித் தின்னும் திறனும் கொக்கிடம் நாம் கற்கவேண்டிய பாடங்கள். அதனால்தான் வள்ளுவப் பேராசான்,

    “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து”
    என்று நமக்கு நல்லுரை நவின்றார்.

    குறிதவறாத கொக்குபோல் நம் கவிஞர்களும் தாம் சொல்லவந்த கருத்தினைத் தவறாது சொல்லிச் செல்லும் ஆற்றல் வாய்ந்தோர்.

    முதலில், சிந்தனைக்கு நல்விருந்தாய் வந்துள்ள இவ்வாரக் கவிதைகளைப் படித்தின்புறுவோம் வாருங்கள்!

    ***

    ’பறவையின் சிறகுடையும் தரையில் அதன் பாதங்கள் சுவடுகளாகின்றன’ என்று சுவையான சிந்தனைப் பதியன் போட்டுள்ளார் திரு. கவிஜி.

    முடிவெடுத்த
    முற்றுப் புள்ளி
    தருணங்களில்
    வர்ணங்கள் சொட்டும்
    கண்ணீர்… 

    குதிக்க தயாராகும்
    உடலுக்குள்
    கடவுள் அலறுகிறார்
    […]
    சிறகுடையும்
    தரையில் பாதங்கள்
    சுவடுகளாகும்

    கண்கள் விலகும்
    பின்னோக்கில்
    ஒரு மரணம் வாழ்கிறது

     ***

    ’வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியும் பொய்த்துவிட, சொந்த மண்ணில் பிழைக்க வழியில்லா விவசாயிபோலப் பறவைகளும் வறண்ட பூமியை விட்டு வானிலே வேறிடம் பெயர்கின்றன இரைதேடி!’ என்கிறார் திரு. எஸ். பழனிச்சாமி.

    …வெண்கொக்கு ஒன்று இரைவேண்டி – தண்ணீரைத்
    தேடியே வானத்தில் ஆங்கே அலைகிறது
    நாடியநீர் எங்குமே காணவில்லை – வாடித்
    தவித்து வறண்டபூமி யில்வீழ்ந்த போது
    புவிதனில் வெப்பக்காற் றோடு – செவியினில்
    கேட்டது நொந்த விவசாயி சொன்னவுரை
    […]
    வீழ்ந்ததை 

    எண்ணியே வருந்தாதே வெண்கொக்கே நீமுயன்றால்
    மண்ணிலே வேறிடத்தில் வாழ்விருக்கும் – விண்ணில்
    பறந்தேதான் சென்றுவிடு; இச்சொல்லால் அவ்விடமே
    துறந்து செழிப்பான வாழ்வுதேடும் – திறத்தால்
    திரைகடல் மேலே விரைவாய் பறந்து
    இரைதனைத் தேடுகின்ற கொக்கு.

     ***

    முயற்சி செய்து மேலே பறந்தால் ’வெற்றிடக் கொக்கும் வெற்றிக் கொக்காகும்’ என்று நயமிகு வார்த்தைகளால் நம்பிக்கை ஊட்டுகிறார் திரு(மிகு). பயணி. (பெயரைப் ’பயனி’ என்று பிழையாக எழுதியிருக்கிறீர்கள்.)

    …வெள்ளை
    நீலம்
    இரண்டும்  நெகிழும்  நீர்வழி

    கடலும் வானும்
    கலக்கும்  பெருவெளி

    காத்திருப்பும் முயற்சியும்
    ஒன்றில் ஒன்று தொடரும்
    வெற்றிடக் கொக்கு
    ஒரே தாவலில்
    வெற்றிக் கொக்காய் மாறும் தருணம்

    எதுவும்
    எழுந்தால்
    இருக்கும் இடம் விட்டுப்
    பறந்தால்
    சுகம்…

     ***

    ’காட்டை அழித்தோம்; மழையை ஒழித்தோம். நீர்நிலைகள் வறண்டதால் பறவைகளும் வேற்றுப்புலம் செல்கின்றன வாழ்க்கை தேடி’ என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    காட்டை வெட்டி அழித்துவிட்டார்
    காண வில்லை மழையினையும்,
    நாட்டி லுள்ள நீரையெல்லாம்
    நச்சு நீராய் மாற்றிவிட்டார்,
    கூட்டைக் கட்ட இடமுமில்லை
    குடும்பம் நடத்த வழியுமில்லை,
    நாட்டை விட்டே செல்லுகின்றேன்
    நல்ல வாழ்வைத் தேடிடவே…!

     ***

    ’தண்ணீரில் மீன் கிடைக்காததால் விண்மீன் பிடித்துண்ணப் பறக்கின்றது கொக்கு’ எனும் நயமான கற்பனையைக் கவிதையில் வார்த்திருக்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    தண்ணீர்க் கரையில் தவமிருந்த கொக்குக்கு
    உண்பதற் கேற்றதோர் மீனின்றி – விண்மீன் 
    பிடித்துண்ண வேகம் பறக்கின்றத் தன்மை 
    இடியை இடிக்கும் இடி.

    ***

    ’இறந்தகால நினைவுகளும் வேண்டாம்;எதிர்காலம் குறித்த கனவுகளும் வேண்டாம். இன்றைக்காக மட்டும் வாழ்வதை இயற்கையிடம் பயில்வோம்’ எனும் பொருள்பொதிந்த மொழிகளைப் பாடலில் பதித்திருக்கின்றார் திரு. சாயாசுந்தரம்.

    நேற்றைப் பற்றிக் கேட்டு
    பின்னோக்கி விரட்டும்
    எதுவும் வேண்டாம் …. 

    நாளை பற்றிச் சொல்லி
    கனவுக் கானச் செய்யும்
    கற்பனையும் வேண்டாம்… 

    இன்று மட்டுமே நமக்கானதாய் வாழ
    கற்றுக் கொள்ளலாமே
    இயற்கையிடம் …
    […]
    கடல் தாண்டிப் பயணிக்கும் 
    ஒற்றைப் பறவையின் 
    இரட்டைச் சிறகுகளில் அடைக்கலமாகி 
    பூமியின் தாகத்திற்கு 
    சிறிது பூமழை தூவலாம் வா …. 

    ***

    ’நதியன்னை ஈன்ற இந்தப் பறவை, வானிடம் இறைஞ்சுகிறது தன் தாய்க்கான மழையுணவை!’ எனும் நல்லதோர் சிந்தனையைச் செவிக்குணவாய்த் தந்திருக்கிறார் திரு. குமரகுரு.

    நதி முட்டை பொரித்து
    வெளியேறி வருகிறேன் வானமே
    எனக்காக
    என் தாய்க்கு
    மழை உணவு தா!
    […]
    இரவெல்லாம்
    நான் புசிக்க
    நிலாகனி தருகிறாய்
    மழைத்துளியை ஏன் விண்மீனாக
    மறைத்து வைத்து கொள்கிறாய்?
    […]
    உன் சர்வாதிகாரத்தை நிறுத்தி
    சமத்துவ மழை அனுப்பு

    பசுங்காடுகள் தழைத்து
    கிடக்கும் பூமியை படை
    நான் இருக்கும் வரை
    என் இறகுகளால் உன்னை
    வருடி விடுகிறேன்

    ***

    ’வெள்ளை உள்ளமும் நீல விஷமுமுள்ள உன் பயணத்தில் பட்டும் படாமலும் துணிச்சலோடு பற!’ என்று வாழ்க்கைப் பாடத்தைப் பறவைக்குப் போதிக்கிறார் திரு. மீ. விசுவநாதன்.

    பிரபஞ்சம் அளக்க முடியாத
    பெரும் கனவு !
    விழித்துக் கொண்டேதான் 
    அதைக் கடக்கவேண்டும் !
    வெள்ளை உள்ளமும்
    நீல விஷமும் 
    உள்ள பயணத்தில்
    கவனமாக, ஒரே குறியாக
    பட்டும் பாடாமலும் பற ! 
    தைரியமாகப் பற !

    ***

    நிலத்தோடு கடலையும் மனிதன் மாசுபடுத்திவிட்டதால் வருத்தமுற்ற பறவை தான்வாழப் பொருத்தமான இடம்தேடிப் பறக்கிறது’ எனக்கூறிச் சுற்றுப்புறத் தூய்மையின் அவசியத்தை விளக்குகிறார் திருமிகு. புனிதா கணேசன்.

    விடுமுறைக் கழிப்பில் கூடும் மனிதர்கள் கூடி
    இடுகின்ற குப்பைகளும் கூளங்களும் ஆங்கே
    நடுக்கடலில், கரை கழுவும் அலைகள் – சேர்த்து
    எடுத்துவிடும் எம்முயிரைக் குற்றுயிராய்! வருத்தி …

    நேர்த்தியுடன் நான் கொண்ட சிறகு இன்று
    பார்த்திருக்க பாழாகும் முன்னே – பறக்கிறேன்
    மார்க்கம் ஒன்றை வான் வழியாய்க் கொண்டு!
    தேர்ந்தெடுப்பேன் சிறந்த சூழல் கண்டு …

    சூழல் மாசு செய்யும் மாந்தர் கேளீர் – நன்கு
    பாழ் படாத சூழல் காப்பீர் யாவர்க்குமாய்
    மாள்வது என்னவோ உயிரினம் யாவுமே –அவை
    வாழ்வை எண்ணியே சூழல் பேணுவீர் !

    ***

    பாசமெனும் பாசிகள் வசம் சிக்கிக் கவலைக் குளத்தில் அமிழ்ந்துவிட்ட மனிதனை மீட்டெடுக்கத் துணைநிற்கும் விந்தைப் பறவையை நம்முன் பறக்கவிட்டுள்ளார் திரு. கனவு திறவோன்.

    …பறத்தல் எளிது
    முயன்றால் நிஜத்தில்
    மூழ்கினாலும் கனவில்
    மனம் மட்டும் போதும்
    மனம் அலையலாம்
    தொலையலாமா?

    பாசப் பாசிகள் வலைப் பின்ன
    கவலைகள் குளம் தன்னில்
    ஆழ்ந்திட்ட மானிடனே
    என் கால்களையாவது பற்றிக் கொள்

    என்
    சிறகுகள் துணையுடன்
    பாரெங்கும் பறப்போம் வா!

    ***

    இருந்தால் இரைதேடிச் செல்வேன்; இறந்தால் பிறர்க்கு இரையாக ஆவேன் எனும் உயர்ந்த நீதியை வெகு சாதாரணமாகப் பேசும் அதிசயப் புள்ளொன்றைக் காண்கிறோம் திரு. சுரேஜமியின் கவிதையில்.

    …நிலையைத் தேடி ஓடும்
    நீர்ப்பறவை யானெனினும் எந்தன்
    நிலையில் தவறுவதும் இல்லை
    நின்று வருந்துவதும் இல்லை
    நிலத்தார் வாழ்வதில் நடக்கும்
    நித்தம் மாறுவதும் இல்லை
    நீரும் வறழ்கின்ற போது
    நாளும் ஓடுவதே வாழ்வு!

    ஏதும் சேர்க்கின்ற பழக்கம்
    எனக்கிங்கு இல்லை யதனால்
    நோக்கம் சிதறுவது இல்லை
    நொந்து நாளும் வாழ்வதில்லை
    இருந்தால் இரைதேடிச் செல்வேன்
    இறந்தால் இரையாகிப் போவென்
    இப்படி ஒருவாழ்வு மண்ணில்
    இருந்தால் சொல்லுங்கள் மானிடரே!

     ***

    பரிவின்றிச்சுட்ட நரிக்குண மனிதனைக் கண்டு அஞ்சி, ஆண்டவனை நோக்கி அபயக்குரல் எழுப்பும் சிறுபறவையைக் கண்முன் நிறுத்துகிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    நரிக்குண மனிதன்
    பரிவின்றி சூட்டான்
    ஓலமிட்டபடியே
    உயர உயர பறக்கின்றேன்
    என்னை காப்பாற்றிக்கொள்ள
    இறைவா நீதான் என்னில்
    நிறைவாயா  இல்லை  
    நானே உன்னில் மறைவேனா?

    ***

    திசையறி கருவிகளின்றித் திறமையாய் உலகை வலம்வரும் பறவைகளை வியக்கிறார் திருமிகு. வானதி வேதா. இலங்காதிலகம்.

    …ஆவலாய் ஆண்  குச்சிகளோடிறங்க
    காவலர் மாறும் கட்டுதிட்டமாய்
    கடமையேற்றுப் பெண் கூடிணைக்கும்.
    இலகுவாக நீரில் நடக்க
    இறகுகளற்ற நீண்ட கால்கள்.
    கழுத்தை வளைத்துப் பறக்கும் நாரை.

    அகண்ட உலகில் அரசாட்சி
    விதண்டா வாதமில்லை விசாவின்றி
    பனிக் காலத்தில் கர்மசிரத்தையாய்
    தனிச் சுதந்திரமாய் திசையறிகருவியின்றிப்
    புலம் பெயரும் மாபெரும்
    புதிர் நிறை புள்ளினம்!…

    ***

    இரைதேடிப் பறக்கும் எனக்குக் கிடைக்கவிருப்பது குண்டடியா? இல்லை கெண்டை மீனா? எனும் பறவையின் அச்சத்தைப் பாடலாக்கியிருக்கிறார் திரு. ஜெயபாரதன்.

    நெடுந்தூரம் 
    நீண்ட நேரம், நில்லாமல்
    பசியோடு
    இரை தேடிப் பறக்கும் எனக்கு
    குண்டடி கிடைக்குமா ?
    கெண்டை மீன் கிடைக்குமா ?
    முதலை வாய் விருந்தா ?
    திமிங்கலப் பற்கள் அரைக்குமா ?
    இல்லை; 
    பாய்ந்து வரும்
    பருந்து மீன் பறிக்குமா ?
    பயங்கர வாழ்வில் என்றும்
    பரிதவிப்பே !

    ***

    ’மீனைப் பிடித்துவிட்டால் மகிழ்ச்சியோடு வானை அளக்கலாம்’ எனும் பறவையின் உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றார் திருமிகு. தமிழ்முகில்.

    …துள்ளிக் குதிக்கும் மீனையுமே
    அலகால்
    விருட்டென
    பற்றிக்
    கொண்டு
    மேலெழும்பி –
    காற்றைக்
    கிழித்தபடி
    பறந்து
    பாறையின்
    மீதே
    சேகரித்திருக்கும்
    மீன்
    குவியலுடன்
    சேர்த்திட்டால் –
    கவலையின்றி
    பசியாறி
    களிக்கலாம் !
    மகிழ்வோடு
    சிறகை விரித்து
    வானையும்
    அளந்து
    சிறகடிக்கலாம் !

    ***

    சுயநலக் கலப்பில்லா உள்ளத்திற்கு முன்னேற்றம் ஆகாயமாய் முன்னே விரியும் என்கிறார் திரு. சங்கர் சுப்ரமணியன்.

    உள்ளொன்று வைத்து
    புறமொன்று பேசும்
    வேசங்கள் இல்லாமல்
    […]
    அன்பொன்று
    இருந்தும்
    இடைநிற்கும் வேறுபாட்டின்
    மாயையில் வீழாமல்
    மாற்றோரின் இன்னல்களை
    பாராமுகமாய் தனக்கென எழுப்பும்
    சுயநல இலட்சியமில்லாமல்
    எல்லையில்லாமல்
    என்னில் வசப்படாமல்
    விட்டு சிறகடித்ததும்
    முன்னே விரிந்தது ஆகாயம்

    ***

    மாசுபட்ட சுற்றுப்புறத்தால் தன் இனத்தையே இழந்துவிட்ட சோகத்தில் உறவைத் தேடும் பறவையிது என்கிறார் திருமிகு. ராதா மரியரத்தினம்.

    …மாற்றம் ஒன்றே மாறாததென
    மாறும் உலகில் சிதைந்தது எம் இனம்
    மாசு பட்டது உலகம் யாவும்
    வீசும் காற்றும் ,ஆழிப் பேரலையும்
    சேர்ந்து எம் இனம் கொன்றே ஒளித்தது
    வலித்தகால்கள் தங்க ஒரு மரம் இல்லை
    குஞ்சுகள் பொரித்தாலும் இருக்கக் கூடில்லை 
    உண்ணஉணவில்லை 
    கண்ணுக்கு தெரிந்தவரை
    உறவுகளைத் தேடுகிறேன் 
    எங்கேனும்  எம் இனத்தைக்
    கண்டால் சொல்லீரோ

    ***

    கவிதைகள் அனைத்துமே மிக நன்றாக இருக்கின்றன. கவிஞர் பெருமக்களுக்குப் பாராட்டுக்கள்!

    சிறந்த கவிஞரைத் தேர்ந்தெடுக்கும் சமயம் இது!

    தான் வசித்த, நேசித்த நிலத்தைச் சுமந்துசெல்லவியலா ஏக்கத்தோடு, தொலைதூரம் ஏகும் பறவையின் சோகம் சொல்லும் சுகமான கவிதை ஒன்றை இங்குக் கண்டேன்.

    அக்கவிதை…

    பறந்திடப் பல
    திசைகளிருந்தனவெனினும்
    அப் பேரண்டத்திடம்
    துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ
    சௌபாக்கியங்கள் நிறைந்த
    வழியொன்றைக் காட்டிடவெனவோ
    கரங்களெதுவுமிருக்கவில்லை
    […]
    முற்காலத்திலிருந்து
    தேக்கிய வன்மம்
    தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து
    தன் எல்லை மீறிய பொழுதொன்றில்
    மிதந்தலையும் தன் கீழுடலால்
    மிதித்திற்று உலகையோர் நாள்

    பறவையின் மென்னுடலின் கீழ்
    நசுங்கிய பூவுலகும் தேசங்களும்
    பிதுங்கிக் கொப்பளித்துக் காயங்களிலிருந்து
    தெறித்த குருதியைப் பருகிப் பருகி
    வனாந்தரங்களும் தாவரங்களும்
    பச்சை பச்சையாய்ப் பூத்துச் செழித்திட

    வலி தாள இயலா நிலம் அழுதழுது
    ஊற்றெனப் பெருக்கும் கண்ணீர் நிறைத்து
    ஓடைகள் நதிகள்
    சமுத்திரங்கள் வற்றாமல் அலையடித்திட

    விருட்சக் கிளைகள்
    நிலம் நீர்நிலைகளெனத் தான்
    தங்க நேர்ந்த தளங்களனைத்தினதும்
    தடயங்களெதனையும்
    தன்
    மெலிந்த விரல்களிலோ
    விரிந்த சிறகுகளிலோ
    எடுத்துச் செல்லவியலாத் துயரத்தோடு
    வெளிறிய ஆகாயம் அதிர அதிர
    தொலைதுருவமேகிற்று
    தனித்த பறவை

    இக்கவிதை வி(வ)ரிக்கும் கற்பனையின் அற்புதம் உள்ளம் அள்ளுகிறது; இதன் ஆசிரியர் திரு. எம். ரிஷான் ஷெரீபை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவு செய்கிறேன்.

    அடுத்து, பறவை வேட்டையாடித் தன் மிருககுணத்தை வெளிப்படுத்தும் மனிதனைச் சாடும் கவிதை ஒன்றும் என்னைச் சிந்திக்க வைத்தது.

    அக்கவிதை…

    துணை தேடிச் செல்லும்
    தும்பை நிற புள் 

    அதன் இறகு உதிரும்
    வாசம் மண்ணோடு பேசும்
    மீதமிருக்கும் சுவடுகளை..  

    ஒற்றைக் கால்
    தவமிருந்து கிடைத்த காதல்
    தட்டிப் பறித்தது
    ஒரு தோட்டா….

    விதை முற்றாத
    இளம் கனியின் சூளுடைத்த
    பாவம் யாருடையதோ?

    தனிமை கொன்று
    தனித் தேசம் தேடும்
    துயரத்தை மாற்றி எழுதிட .. 

    விஞ்ஞான உலகில்
    சுட்டுத் தெறித்த
    காதல் பறவையின்
    குருதி குடித்தவனும் 

    மனிதன் என்றே
    அறியப் படுகிறான்!!

    இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. கார்த்திகாவுக்கும் என் சிறப்பான பாராட்டுக்கள்! 

    கவிஞர்களே! தொடர்ந்து போட்டிகளில் உற்சாகத்துடன் கலந்துகொள்ளுங்கள்! வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்!

     

    Share
  • உன்னையறிந்தால் (8)

    நிர்மலா ராகவன்

    தெரியக்கூடாத  இரகசியங்களல்ல

    உனையறிந்தால்

    மூன்று வயதுவரை ஆடையின்றி வீட்டுக்குள் ஓடியாடிக் கொண்டிருந்த பையனுக்கு மழலையர் பள்ளிக்குப் போனதும் ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. `பெண்கள் ஏன் தனி டாய்லெட்டுக்குப் போகிறார்கள்?’

    டிராயரைச் சரியாகப் போட்டுக்கொள்ளத் தெரியாமல் அவன் வெளியே வர, `ஷேம், ஷேம்!’ என்று அவனையொத்த பிற மாணவர்கள் இணைந்து பாட, குழப்பம் அதிகரித்தது.

    விரைவில், அவனும் அவர்களைப்போல நடக்கக் கற்றான். வீட்டில் குட்டித் தம்பிக்கு அம்மா டயாபர் மாற்றும்போது, `ஷேம், ஷேம்!’ என்று சொல்லிச் சிரித்தான்.

    தன்னைப்போலவே பிறருக்கும் கண், காது எல்லாம் இருக்கின்றன என்றவரை அவனுக்குப் புரிந்தது. அம்மாவுக்கும் `ஷேம் ஷேம்’ இருக்குமோ?

    அன்று அம்மா குளிக்கப் போகையில், `நான் ஒன் ஷேமைப் பாக்கணும்,’ என்றபடி, தானும் உள்ளே நுழையப்போனான்.
    `இந்த வயசிலேயே கெட்டுப் போயிட்டியா?’ என்று அம்மா கண்டபடி திட்டியிருந்தால், அந்த நிகழ்ச்சி அவன் பிஞ்சு மனதில் ஆழமாகப் பதிந்து, ஏதாவது பிரச்சனையில் கொண்டுவிட்டிருக்கலாம். அவளோ, அவனை மெல்லத் தள்ளிவிட்டு, கதவைச் சாத்திக்கொண்டாள். பின்பு, அப்போதுதான் குளித்திருந்த ஒரு பெண் குழந்தையின் நிர்வாணமான உடலைக் காட்டி, `இது பொண்ணு. நீ பையன்!’ என்று விளக்க, அவன் வாயை மூடியபடிச் சிரித்தான். அந்த வயதில் புதிய அனுபவங்கள் எல்லாமே வேடிக்கை.

    பெரியவர்களுக்கு மட்டும் மார்பகம் ஏன் பெரிதாக இருக்கிறது என்ற ஆர்வம் மூன்று, நான்கு பெண் குழந்தைகளுக்கு உண்டாகும். தற்செயலாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, பேச்சை மாற்றிவிடலாம். அவர்களும் மறந்து விடுவார்கள். ஆனால், பிறர் சிரிக்கிறார்களே என்று அதைப்பற்றியே பேசுவதும் சரியல்ல. பிஞ்சிலேயே பழுக்க வைக்கும் வேண்டாத முயற்சி இது.

    ஏன் மாத விலக்கு வருகிறது என்று புரியாது, உதிரப்போக்கால் தான் இறந்துவிடுவோமோ என்று பயந்ததாகப் பல பெண்கள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

    நான் பதினான்கு வயது மலாய் மாணவிகளிடம் கலந்து பேசியபோது, வயதுக்கு வந்ததும், `இனி பையன்களுடன் அதிகம் பேசாதே!’ என்று மட்டும் தாய்மார்கள் அறிவுரை வழங்கியதாகச் சொன்னார்கள். வேறு ஒன்றும் சொல்லவில்லையாம். நான் ஒரே வரியில் உடலுறவை விளக்கினேன், எந்தவித உணர்ச்சியுமில்லாது. (விஞ்ஞானப் பாடத்தில், குரலில் உணர்ச்சி காட்டாது தகவல்களை மட்டும் தெரிவிக்க வேண்டும்).

    `இவ்வளவுதானா! இதற்கு என்ன, இவ்வளவு ஆர்ப்பாட்டம்!’ என்றாள் ஒரு மாணவி.

    பழமைவாதிகளான பெற்றோர், `தானே தெரிந்துவிட்டுப் போகிறது!’ என்ற அசிரத்தையுடன், என்ற ரீதியில் உடலுறவைப்பற்றிப் பேசவே மறுப்பார்கள். ஒரு குடும்பத்தில், பதின்ம வயது ஆண் ஒருவன் பெண்ணைப்பற்றியோ, இல்லை, பெண் ஆண்களைப்பற்றியோ பேசுவது தகாது என்பதுபோல் நடந்துகொண்டால், பிள்ளைகள் குழம்பி விடுவார்கள். கல்யாணத்துக்குப் பிறகு பிரச்னைகள் ஏற்படலாம்.

    30, 35, 45 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான மூன்று பெண்கள் என்னிடம் கூறியது: `அவர் என்னைத் தொட வந்தபோது, `இதெல்லாம் தப்பு’ என்று நான் என் கணவரிடம் மன்றாடினேன். அவர் வாரக்கணக்கில் என்னுடன் இதைப்பற்றி என்னிடம் பேசினார்’.

    தம்மை எவ்வளவு அறிவிலிகளாக வளர்த்திருக்கிறர்கள் பெற்றோர் என்று அவர்கள் மீதும், தம்மீதும் ஆத்திரம் அவர்களுக்கு.

    பதினெட்டு வயதுப்பெண் ஒருத்தி இப்படித்தான் குழந்தைத்தனம் மாறாமல் இருந்தாள். தில்லியில் பஸ்ஸில் போகும்போது எல்லா ஆண்களும் தன்னை ஏன் இடிக்கிறார்கள் என்று குழம்பி, என்னிடம் ரகசியமாகக் கேட்டாள். பெற்றோரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாது, `நான் இனி பஸ்ஸில் போக மாட்டேன். கார் வாங்கிக் கொடுங்கள்,’ என்று நச்சரித்திருக்கிறாள். அவள் தாயிடம் விசாரித்தேன். நான் நினைத்தபடியே, தாய்க்கு ஆண்-பெண் உறவைப்பற்றி அவளிடம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பெண்ணிடம் நான் விளக்கிச் சொல்லி, புண்ணியம் கட்டிக்கொண்டேன்! அந்தப் பெண் சர்வசாதாரணமாக, `எங்கம்மாவுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி எதுவும் தெரியாது,’ என்றாள்.

    முன்காலத்தில், கூட்டுக் குடும்பங்களாக இருந்தபோது, அக்கா, அத்தை என்று யாராவது ஒரு பெண்ணின் கர்ப்பம், பிரசவம் நிகழும். பன்னிரண்டு வயதில் ரகசியமாக வைக்கப்பட்டவை லேசாகப் புரிய ஆரம்பிக்கும். இப்போது அப்படியா! பெற்றோர் நாணிக் கோணாமல் எடுத்துச் சொன்னால், அதை ஏற்பார்கள் குழந்தைகள். இல்லாவிடில், தவறான முறைகளில் நண்பர்களிடமிருந்து கற்கும் அபாயம் இருக்கிறது.

    ஒரு குழந்தையின் இயற்கையான ஆர்வமும், தனக்கு நிறைய விஷயங்கள் தெரியும் என்ற பெருமையும் புரியாது, அலட்சியமோ, அவமதிப்போ செய்தால், அதன் பாதிப்பு பல வருடங்கள் நிலைக்கும்.

    படித்த கதை: ஆலோசகராக (COUNSELLOR — நாடி வருபவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்) பணியாற்றிய ஒரு பாதிரியார் தனது புத்தகத்தில் எழுதியிருந்தது:

    “எனக்கு நினைவு தெரிந்த நாளாக, `கண் எங்கே?’ என்று யாராவது கேட்டால் கண்ணைச் சிமிட்டி, `கை?’ என்று கேட்டபோது பெருமையுடன் கையைத் தூக்கிக் காட்டியிருக்கிறேன். மூன்று வயதில், யாராவது எங்கள் வீட்டுக்கு வந்தால், புதிய உறுப்பு இதுதான் பெருமையுடன் அதைக் காட்டி, அதன் பெயரும் எனக்குத் தெரியும் என்று காட்டிக்கொள்வேன். அதிர்ச்சியும், அவமானமுமாக, என் பெற்றோர் என்னை அவசரமாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவார்கள்.

    அப்போது, எனது ஆண் உறுப்பு ஒரு அவமானச் சின்னம்தான் என்று தோன்றிப்போயிற்று. அதனால், சிறுநீர் கழிப்பதுகூட கஷ்டமாக ஆகியது. நான் செய்யும் காரியம் யாருக்கும் தெரியக்கூடாது என்று குழாயைத் திறந்துவிடுவேன். வளர்ந்து பெரியவனானதும்கூட இதே நடத்தை தொடர்ந்தது. குழாய்த் தண்ணீர் ஓசை இருந்தால்தான்தான் சிறுநீர் கழிக்க முடிந்தது”.

    தமது அந்தரங்கமான பாகங்களின் பெயர்களோ, அல்லது அவைகளின் பயன் என்ன என்றோ குழந்தைகளுக்குத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படுவது இயற்கை. ஒரு குழந்தை எப்போது தனக்குப் புரியாத ஒன்றைப்பற்றி அறிய விரும்பி, கேள்வி கேட்கிறதோ, அப்போதே அது பதிலுக்கும் தயார் என்பதை உணரலாம். எளிமையான, அதிர்ச்சி தராத விதத்தில் விளக்கினால், குழப்பமின்றி, மன ஆரோக்கியத்துடன் வளரும்.

    தொடருவோம்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(75)

    -செண்பக ஜெகதீசன்

    நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
    வாள துணர்வார்ப் பெறின். (திருக்குறள்-334: நிலையாமை)

    புதுக் கவிதையில்…

    காலம் என்பது
    கடந்திடும் நாட்களே,
    நிலையா நாளின்
    நிலையறிந்து
    வாழவேண்டும் மனிதன்

    உண்மை அறிந்தோர்
    உரைப்பர்
    உயிரறுக்கும் வாள்தான்
    நாள் என்று!

    குறும்பாவில்…

    நிலையானதல்ல நாளென்பது,
    அறிந்தோர் அறிவர்
    அது வாழ்வறுக்கும் வாளென!

    மரபுக் கவிதையில்…

    நின்று காலம் நிலைப்பதில்லை
    நிலத்து மாந்தர் வாழ்க்கையிலே,
    சென்று கொண்டே யிருந்தாலும்
    செல்வது காலக் கூறல்ல,
    தின்றிடும் உந்தன் வாழ்நாளைத்
    தீரச் சுவைத்திடும் உயிரினையே,
    நின்றது வாளாய் உயிரறுக்கும்
    நாலும் அறிந்தவர் கூற்றிதுவே!

    லிமரைக்கூ…

    வாழ்வினில் வந்துபோகும் காலமது நாள்,
    கருதுவர் இதையே நன்கறிந்தோர்
    மண்ணில் மாந்தரின் உயிரறுக்கும் வாள்!

    கிராமிய பாணியில்…

    நாளுநாளு நல்லநாளு
    காலங்காலமா வாறநாளு,
    காலக்கணக்கா வாறநாளு
    கடந்துபோவும் இந்தநாளு..

    தெரிஞ்சிக்க தெரிஞ்சிக்க
    உண்மயத்தான் தெரிஞ்சிக்க,
    தெனமும்வாற நாளிதுதான்
    நம்ம
    உசிர அறுக்க வாளிதுதான்,
    நெலயேயில்லா ஒலகத்தில
    நெலயநீயும் தெரிஞ்சிக்க…

    நாளுநாளு நல்லநாளு
    உசுர அறுக்க நல்லவாளு…!

     

    Share
  • பாரினில் பாரதப் பெண்கள் (1)

    சுலோசனா

    முன்னுரை

    பாரினில் பாரதம்
    தமிழ் ஆந்திரா, கேரளம் ,கர்னாடகா எனத் தெற்கிலும் மஹாராஷ்டிரா,குஜராத்,ஹரியானா,பிஹார் பஞ்சாப்,எனப் பலவாக நாடுகள் பிரிந்து இருந்தாலும், ஹிந்து தர்மம் சொந்த தர்மம் எனும் அடி நாதமே அஸ்திவாரமாக இருக்கின்றது. பலவித மனம் உள்ள பல வித பூக்களால் தொடுக்கப்பட்ட கதம்பமாலையாக பாரதம் உள்ளது. பாரதத்தில் மங்கையரும் பல விதமான மலர்களே. அவைகள் பூத்துக் காயாகி கனியாகிப் பக்குவமடைகிறது. பாரதம் போன்ற கதம்பமாலையே அதன் பல்வேறு நாட்டுப் பெண்களும்.

    அந்த கதம்ப மாலையை இணைக்கும் சூத்திரம் நூலாகப்பட்டது தியாகம். தியாகமே பாரதத்தில் பெண்கள் பலவித முறைகளில் ஆடை ஆபரணங்கள் அணிந்தாலும்,பல மொழிகளில் பேசினாலும் ஆதாரச் சுருதியாக ஒலிக்கும் நாதம் ஒன்றுதான். அது தியாகம்தான். சராசரிக்கும் மேற்பட்ட பெண்மணிகள் நாட்டிற்காக தியாகம் செய்வார்கள்.சராசரியான குணமுடைய பெண்கள் வீட்டிற்காக,தான் நடத்தும் இல்லறத்திற்காக, கணவனுக்காக, மகன், மகளுக்காகவும், அடுத்து பேரன் பேத்திகளுக்காகவும் வாழ்ந்து வருகிறார்கள்.அதில் இன்பம் காணவும் பழக்கப்பட்டுவிட்டனர். இதற்கு மாறான பெண்களே இல்லையா எனக் கேட்கலாம். இருக்கலாம். ஆனால் அது எங்கோ ஒன்று.

    தவறிழைத்தவர்களுக்கு ஒரு ஸ்லோகம் இவ்வாறு காணப்படுகின்றது;-

    யத்ர நாரிஸ்ய பூஜ்யந்தே

    தத்ர தேவா; ரமயத்தே ;

    எங்கு பெண்கள் பூஜீக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வங்கள் மகிழ்வடைகின்றன.என்பது இதன் பொருள்.இங்கேதான் இன்னொரு சொல் வழக்கும் உண்டு.

    பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசு” ஆணின் வைராக்கியத்திற்கு பலகீனம் தந்து அவன் சம்சார சாகரத்தில் இருந்து கடைத்தேறாமல் இருக்கக் காரணம் பெண்ணே என்ற ஒரு கருத்து.

    தமிழகத்தில் அரசவைக் கவிஞர் ராமலிங்கம் பாடுகின்றார். “மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்று பெண்பிறப்பை உயர்த்தி ஒரு கருத்தும் தீர்க்கதரிசியான மஹாகவி பாரதியார் ,பெண் என்று பூமிதனில் பிறந்து விட்டால் மிக்க பிழைகள் இருக்குதடி என்றும் இன்னொரு கருத்துமாக நம்முன் வைக்கின்றார்கள் இவ்வித இரண்டு கருத்துகளுக்கு நடுவேதான் இந்திய பெண்மணிகளின் வாழ்வு . ஆனால் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில்தான் ஒரு வழிப்பாட்டு முறை;-

    இந்த கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்வதுபோல் ஒரு வழிப்பாடு ,சிவனும் சக்தியுமாக ,பெருமாளும் பிராட்டியுமாக இந்து கோவில்களில் பெரும்பாலும் வழிப்படுகின்றனர்.எங்கும் உள்ள இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் தனித்தனியே வழிப்பட்ட பழக்கம் ஆயின் ஒரு திருத்தலத்தில் தமிழகத்தில் உள்ள திருச்செங்கோடு எனும் திருத்தலத்தில்தான் ஒரு சம நிலை வழிபாடு நடக்கின்றது.

    இந்த மலைக்கோவிலில்தான் இறைவன் என் படைப்பில் அனைவரும் சமமே என்பது போல் ஒரு பாதி ஆணாகவும்,ஒரு பாதி பெண்ணாகவும் காட்சி அளிக்கின்றார். அவரே “அர்த்தநாரீஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். இவ்விறைவடிவம் தானாகவே உருவான சுயம்பு மூர்த்தி என்கிறது தல புராணம். இங்கு எழுந்தருளியுள்ள செங்கோட்டு வேலவரும் அவ்விதமே அழைக்கப்படும். இக் கோவில் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது.,என தாராளமாக குறிப்பிடலாம். நாயன்மார்களால் பாடல் பெற்ற தலம். அருணை முனிவர் பாடல் அருளிச் செய்த திருத்தலம். ஆணாகவும் பெண்ணாகவும் இரண்டும் ஒன்றுமாகவும் ஆகி நின்ற அவ்வடிவை பூஜித்தும் ஆண் பெண் இரு பாலரின் மனங்களும் ஏன் சம நிலைக்கு வரவில்லை எனத் தெரியவில்லை. மற்ற நாட்டினரும் மதிக்கும் பாரதப் பண்பாடு இன்று கலப்பட மற்றதாகக் கேள்வி.

    பெண்களால் கட்டிக் காப்பாற்றப்பட்ட கலாச்சாரம் இன்று கலப்பட ஆசாரமாகிவிட்டதா என்றும் கேள்விகள் எழுகின்றன.ஒரு புறம் ஆசிரியையாக ,ஜில்லா அதிகாரியாக , நீதியரசியாக,காவல் துறையில் கண்ணியமுள்ள காவல் அதிகாரியாக ஏன் விண்வெளி விஞ்ஞானியாக. மறுபுறம்?

    சின்னஞ் சிறுமி கூட சீரழிக்கப்படுகின்றனர்.உறவாக வந்தவராலும் கொடுமை ஊரானாலும் கொடுமை. யார் இதற்கெல்லாம் பதில் சொல்வது?இதில் பெண்ணே பெண்ணுக்கு எதிரி.வீட்டிற்குள்ளேயே மாமியார் என்ற பெயரில் நாத்தி என்ற பெயரில், அண்ணி என்ற பெயரில். இனப்பற்று தேவையற்ற இடங்களில் அதிகமாகக்கூட இருக்கின்றது .பெண்கள் இடத்தில் ஏன் இல்லை?

    படித்த பாமர பெண் இனமே சிந்திப்பாயா? இறைவன் படைப்பில் இருவரும் சமம் என்றாலும் இயற்கையே நம்பிக்கை வைத்து, நாரீ மணி இடத்திலே படைப்புத்தொழிலில் சிறிது பங்கிட்டு கொடுத்திருக்கும் தாய்மை எனும் மாபெரும் பொறுப்பை தயங்காமல் தந்திருக்கிறது.

    பெண்ணை துறந்தபெரும் தவச்சீலர்களாளும் தாயை துறக்க இயலவில்லையே. பெரும் பாலும் எல்லா உயிர்களிலும் பெண்ணிற்கே தாய்மைத்தவம் பலித்திருக்கிறது.

    பரந்த பாரத மண்ணை உயரப் பறந்து கருடப் பார்வை பார்க்காமல் சின்னஞ்சிறு பறவையாக பறந்து பார்த்ததை ஆசையின் காரணமாகவும் ஆவலின் காரணமாகவும் பகிர்ந்து கொள்ள விழைந்து வந்துள்ள நன்றியுடன்

    சுலோசனா

    தட்டச்சு உதவி : உமா சண்முகம்

    Share
  • காதல் நாற்பது – 39

    சொல்லிக் கொடு இனியவனே !

    ajay

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    பல்லாண்டு காலம்

    கடிவாளச் சங்கிலியால் வெளுத்

    தடிக்கப் பட்டேன் !

    என் முகமூடிக் குள்ளே ஊடுருவிப்

    பின்புலத்தை நோக்க

    உனக்கு ஆற்றல் உள்ளதால்,

    உன் இனிய கனிவு

    நளினத்தால் காண்பாய்

    நீ என் ஆத்மாவின்

    நிஜ முகத்தை ! அது

    வாழ்வுப் பந்தயத்தில்

    மங்கித் தளர்ந்த சாட்சிதான்

    எந்தன் முகம் !

    சோம்பித் திசை மாறாத

    ஆத்மாவை நீ

    உள் நோக்க

    உறுதியும், காதலும் உள்ளது,

    உனக்கு !

    பொறுமைத் தேவதை காத்திருப்பாள்

    புதிய சொர்க்கத்தில்

    இடந்தேடி !

    ஏனெனில்

    பாபத்தில் வீழாமல்,

    சோகத்தில் மூழ்காமல்,

    இறைவனின் நிர்ப்பந்தம் யில்லாமல்,

    மரணம் பக்கத்தில் நிற்காது,

    தென்படுவை எல்லாம்

    நீங்கிச் செல்கையில்,

    என்னைத் தளரச் செய்யாதவை

    எதுவும் வெறுப் பூட்டாது

    உனக்கு !

    நன்றி பொழிந்திட,

    நல்லதைச் செய்பவன் நீ

    எல்லோரைக் காட்டிலும் !

    எனக்கு நீ

    சொல்லிக் கொடுப்பாய்

    இனியவனே !

    அந்த யுக்தியை.

    ************

    Poem -39

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    Because thou hast the power and own’st the grace

    To look through and behind this mask of me

    (Against which years have beat thus blanchingly

    With their rains), and behold my soul’s true face,

    The dim and weary witness of life’s race,

    Because thou hast the faith and love to see,

    Through that same soul’s distracting lethargy,

    The patient angel waiting for a place

    In the new Heavens,–because nor sin nor woe,

    Nor God’s infliction, nor death’s neighbourhood,

    Nor all which others viewing, turn to go,

    Nor all which makes me tired of all, self-viewed,–

    Nothing repels thee, . . . dearest, teach me so

    To pour out gratitude, as thou dost good!

    **********

    Share
  • சீரியல்

    –மாதவன் ஸ்ரீரங்கம்.

    ராஜேஸ்வரி அதிர்ந்துபோய் கிடந்தாள். கட்டிலின் சுருக்கமற்ற மெத்தையை அவள் கண்ணீர் ஈரமாக்கியது. சாத்தப்படிருந்த படுக்கையறையினை கடந்தும் ஹாலில் ஓடிக்கொண்டிருந்த சீரியலின் சப்தம் கேட்டது. டிரஸ்ஸிங் டேபிளில் வைத்திருந்த தம்ளரில் ஆடைகட்டிக்கிடந்தது பால். அவள் இதை எதிர்பார்க்கவேயில்லை. என்னதான் காதலித்து திருமணம் செய்துவந்திருந்தாலும் அவள் தன் மாமியாரை பெற்ற தாய்போலத்தான் பாவித்து பிரியமாக இருந்தாள். ஆனால் தன் மாமியார் இப்படியொரு காரியம் செய்வாளென்று அவள் நினைத்துக்கூட பார்த்ததில்லை.

    இத்தனைக்கும் அவள் வெறுங்கையுடன் இந்த வீட்டிற்கு மருமகளாகவில்லை. தன் ரியல் எஸ்டேட் தந்தை முதலில் எதிர்த்தாலும்கூட சுரேஷ் ஒரு வங்கி அதிகாரியாக நல்ல வேலையில் எல்லாம் இருக்கிறான் என்று தெரிந்தபிறகு முழுதாக சம்மதித்து அட்டகாசமாக நகைநட்டுகள் எல்லாம் போட்டு பிரமாதமாக திருமணம் செய்துவைத்திருந்தார். எல்லாம் தன் தலைவிதி என்று நொந்துகொண்டாள் ராஜேஸ்வரி.

    ஆரம்பத்திலிருந்தே மாமியார் கற்பகத்திற்கு தன்னை ஏன் பிடிக்காமல் போயிற்று என்று யோசித்து நிரம்ப சலித்துவிட்டாள். சுரேஷ்தான் சொன்னான். கற்பகத்தின் அண்ணன் மகள் ரேவதியை சுரேஷுக்கு மணமுடிப்பதாக சிறுவயதிலிருந்தே முடிவு செய்திருக்கிறாள், ஆனால் சுரேஷின் கல்லூரியில் தேவதைபோல ராஜேஸ்வரி வரவும் சுரேஷ் காதல்கொண்டு அவளைத்தான் மணப்பேன் என்று கற்பகத்திடம் சத்தியாகிரகம் செய்யவும் வேறு வழியின்றி ராஜேஸ்வரியை கட்டிவைத்தாள்.

    அன்றிலிருந்தே கொடுமைதான். சிறுவயதிலேயே தாயை இழந்த ராஜேஸ்வரி கற்பகத்தின் கொடுமைகள் எல்லாவற்றையும் மவுனமாக பொறுத்துக்கொண்டு சிரித்தபடி நடமாடினாள். சுரேஷிடம் ஒரு வார்த்தைகூட மாமியாரைப்பற்றிக் குற்றம் சொன்னதில்லை. என்றேனும் ஒருநாள் தன் உள்ளன்பைப் புரிந்து ஏற்றுக்கொள்வாள் என்று மனதார நம்பினாள். ஆனால் இன்று இப்போது அவள் மாமியார் செய்திருக்கும் காரியம் ராஜேஸ்வரியின் நம்பிக்கைகளை சுக்குநூறாக உடைத்துவிட்டது.

    எப்பேர்ப்பட்டவரும் ஒரு பெண்ணுக்கு செய்யத்தயங்கும் ஒரு கொடுஞ்செயலை கற்பகம் தன் மருமகளுக்கு செய்துவிட்டாள். ஆமாம் அவள் கருவை கலைப்பதற்கான மருந்தை பாலில் கலந்து கொடுத்திருக்கிறாள். எப்போதுமில்லாமல் இன்று வெகு அதிசயமாக தன்னுடன் சிரித்துப்பேசியபோதே அவள் யூகித்திருக்கவேண்டும். அவள்தான் அன்புமயமானவளாயிற்றே. நல்லவேளையாக வேலைக்காரப்பெண் செண்பகம் மட்டும் விஷயத்தை சொல்லாமலிருந்தால் அந்த பாலை அவள் இன்னேரம் குடித்திருப்பாள்.

    அவளால் சமாதானமே செய்துகொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும் அவள் பெற்ற பிள்ளையின் கருவை அல்லவா சுமந்துகொண்டிருக்கிறாள். எப்படி தன் பேரக்குழந்தையை தன் கையாலேயே கொல்லத்துணிந்தாள். கேள்விகள் ராஜேஸ்வரியின் உடலெங்கும் ஊசியாகக் குத்தித்துளைத்தன. ஒரு முடிவிற்கு வந்தவளாக அவள் படுக்கையிலிருந்து மெல்ல எழுந்துகொண்டாள். சீரியல் பார்த்துக்கொண்டிருந்த கற்பகம் ராஜேஸ்வரியையே புருவம் சுருங்க பார்த்துக்கொண்டிருந்தாள்.

    *************************************

    “கட் கட் கட் கட்” என்று திவாகர் சொன்னதும் கேமராவும், எரிந்துகொண்டிருந்த ஃபோகஸ் விளக்குகளும் அணைந்தன. ராஜேஸ்வரியாக நடித்த அந்தப்பெண்ணும் மாமியார் கற்பகமும் வாய்விட்டு சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார்கள். கேமராமேனுடன் மானிட்டரில் எடுத்த காட்சிகளை சரிபார்த்துக்கொண்டிருந்தான் திவாகர். பக்கத்தில் நெருங்கிய ராஜேஸ்வரி திவாகரிடம் சொன்னாள்.

    “திவா சார், நெக்ஸ்ட் வீக் சுந்தர் சார் படத்துக்கு கால்ஷீட் குடுத்துருக்கேன் சார். கொஞ்சம் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்குடுங்க சார்”

    “எத்தன நாள்மா”?

    “பத்துநாள்னுதான் சொல்லிருக்காங்க. அப்டியே அத முடிச்சிட்டு கோவா டூர் பிளான் பண்ணிருக்காரு என் ஹஸ்பண்ட்”

    “என்னம்மா எப்டி அவ்ளோ நாள் சமாளிக்கிறது சொல்லுங்க. உங்க லாஸ்ட் வீக் டப்பிங்கெல்லாம் முடிச்சிட்டீங்களா”?

    “சார் எல்லாத்தையும் முடிச்சிட்டேன். இன்னிக்கி எடுத்தது மட்டுந்தான் பென்டிங்”

    திவாகர் அரைமனதாக சம்மதித்தான். அது ஒன்றும் அவனுக்கு பிரச்சனையில்லை. அவள் வரும்வரை அவள் சம்பந்தப்பட்ட டிராக்கை விட்டு மற்ற டிராக்குகளை காட்டி சமாளித்திக்கொள்ளலாம். ஆர்டியன்ஸின் எதிர்பார்ப்பும் கொஞ்சம் கூடும். அவள் நகர்ந்தபின்பு டையலாக் ரைட்டருக்கு போன் செய்தான். சற்றுமுன் எடுத்த காட்சிகளின் சில வசனங்களில் மாற்றம் செய்யவேண்டியவை குறித்து பேசியபின்புதான் நண்பன் ராகுல் காத்திருப்பதே அவன் நினைவிற்கு வந்தது. எல்லோருக்கும் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட்டு ராகுலை அழைத்துக்கொண்டு தன் ஆல்ட்டோவில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.

    “சாரி மச்சி ரொம்ப வெயிட் பண்ணவச்சிட்டனா”?

    “அதெல்லாம் பரவால்ல. மூவி டைரக்ட் பண்றேன்னு ஊர்லருந்து வந்திட்டு சீரியல் பண்ணிட்ருக்க”?

    “பத்து வருஷம் நாயாப்பேயா அலைஞ்சாச்சு மச்சி. கைவசம் நூறு ஸ்கிரிப்டு வச்சிருக்கேன். பத்துகோடி தொடங்கி ஆயிரம் கோடி பட்ஜட் வரை கதையிருக்கு. பேஜிலரா இருந்தவரை தெரியல. கல்யாணம் புள்ளகுட்டிங்க எல்லாம் வேற ஆயிருச்சி. பொழைச்சாகணுமே. பார்ப்போம். நெறைய கான்டாக்ட் இருக்கு. அப்பப்ப புரொடியூசர்ஸையும் பார்த்துகிட்டுத்தான் இருக்கேன்”

    ராகுல் மவுனமாக ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியிருந்தான்.

    “ஆமா நீ என்ன செய்யிற? காலேஜ் முடிஞ்சப்புறம் ஆளு அட்ரஸேயில்ல? கார்த்திகிட்டதான் அப்பப்ப பொலம்புவேன். பரதேசி ஒருவார்த்தைகூட சொல்லாம அப்ஸ்கான்டாயிட்டானேன்னு”

    “அவங்கிட்டதான் மச்சி நம்பர் வாங்குனேன். நடுல நெறைய பிரச்சனைங்க. அப்பா ஏகப்பட்ட கடனை வச்சிட்டு செத்துட்டாரு. கனடால சொந்தக்காரர் ஒருத்தரு ஏகப்பட்ட பிஸ்னஸ், கூட ஒத்தாசையா இருன்னு கூப்பிடவும் ஓடிட்டேன். கல்யாணங்கூட பண்ணிக்கல. இப்பக்கூட அவுரோட பிராப்பர்ட்டி டீலிங் ஒன்னு முடிக்கத்தான் வந்தேன். அன்னிக்கி கார்த்திய எதேச்சையா மால்ல பாத்தப்பதான் உன்னப்பத்தி சொன்னான். ரெண்டுநாள்ல ரிட்டர்ன் ஆவுறேன்”

    “பட் செம்ம ஹேப்பிடா எனக்கு உன்ன பார்த்ததுல. இந்தப்பக்கம் வர ஐடியா இருக்கா இல்ல அங்கயே செட்டிலா”?

    “வரணும்டா. வந்து என்ன செய்யன்னுதான் யோசிக்கிறேன்”

    “போடா லூஸு. எக்கச்சக்க வழிகள் இருக்கு பொழைக்க. அட எதுமே இல்லாட்டி என் சீரியலுக்கு வந்துரு” என்று கண்ணடித்தான் திவாகர்.

    “ஹஹ்ஹ்ஹா கோவிச்சுக்காத மச்சி. ஜனங்களை முட்டாள்தனமா அடிமையாக்குற சோசியல் பொல்யூஷன் சமாச்சாரம்டா சீரியல்”

    திவாவிற்கு சுருக்கென்றது.

    “தப்பா புரிஞ்சிகிட்ட மச்சி. சீரியல் ஒரு அவுட்லெட். வீட்லயே சமைச்சி தொவச்சி நொந்துபோயிருக்கிற லேடிஸுக்கு பெரிய ரிலாக்ஸ்ட். அவ்ளோ ஏன், முன்ன மாதிரி மாமியார் மருமக சண்டைலாம் பேப்பர்ல வருதா இப்பல்லாம் ? ஏன்னா அவங்க சீரியலை ஒன்னா சேர்ந்து பார்த்து பிரன்ட்ஸ் ஆயிட்டாங்கடா” என்று வாய்விட்டுச்சிரித்தான்.

    “அப்டியில்ல மச்சி. ஒருத்தரை ஒருத்தர் எப்புடி எவிடன்ஸ் இல்லாம கொல்றதுன்னு சீரியல் பார்த்து தெளிவாயிருப்பாங்க” என்று ராகுலும் சிரித்தான்.

    *************************************

    வித்யாவின் கண்ணீர் எழுத்துக்கள்மீது விழுந்தது. ஜன்னல் திரைகள் காற்றிலாட கப்போர்டு மூலையில் ராஜேஸ்வரியும் அழுதுகொண்டிருந்தாள்.

    “இப்பவாச்சும் நீ நம்புறியா விது”?

    வித்யாவால் பேசமுடியவில்லை. அழுகை முட்டிக்கொண்டுவந்தது. கதவை திறந்துகொண்டு கற்பகம் உள்ளே வந்தாள். அக்காவின் மாமியார். அவள் முகம் சோகமாக இருந்தது. வித்யா அழுவதை பார்த்து அவள் தோளில் ஆறுதலாக கைவைத்தாள்.

    “விடு கண்ணு. இனி அழுது என்ன பண்றதுசொல்லு. செத்துப்போன உன் அக்கா திரும்பி உயிரோட வரவாபோறா” என்றாள்.

    வித்யாவிற்கு இப்போதே அந்த பெண்மணியை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டால் என்னவென்று தோன்றியது. அறைமூலையில் அவள் அக்கா ராஜேஸ்வரி தன் மாமியாரையே எரிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தாள். வித்யா பதில்பேசாமல் அக்காவின் டைரியுடன் அறையிலிருந்து வெளியேறினாள். கதவை சாத்திக்கொண்டு கற்பகமும் பின்தொடர, ஹாலில் சுரேஷ் யாருடனோ போனில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.

    “அதெல்லாம் இப்ப அப்டித்தான் பேசுவ ரேவதி. கல்யாணத்துக்கப்புறம் நீ எப்டின்னு பார்க்கத்தான போறேன்”.

    வித்யாவை கண்டதும் போனை கட்செய்துவிட்டு முகத்தை சோகமாக்கிக்கொண்டான். கற்பகம் கிச்சனுக்குள் செல்ல சுரேஷும் வித்யாவும் தனிமையிலிருக்கும்போது சுரேஷ் சொன்னான்.

    “எனக்கு உண்மையில இஷ்டமேயில்ல வித்யா. அம்மாதான் பாவம் ரொம்ப பிடிவாதம் பண்றாங்க. அவங்களுக்கும் பாவம் வயசாவுதுல்ல. அதான் ஒத்துக்கிட்டேன்”

    வித்யா அமைதியாக இருந்தாள். பொண்டாட்டி செத்தா புதுமாப்பிள்ளை என்னும் பழமொழி அவளுக்கு நினைவுக்கு வந்தது. எத்தனை சுலபமாக இருக்கிறது இவர்களுக்கு. இவர்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் இப்படி இருப்பார்களா ? இத்தனைக்கும் அக்கா இறந்து ஆறுமாதம்கூட முழுதாய் ஆகவில்லை.

    ராஜேஸ்வரி அவர்களுக்கு அருகே வந்து சோபாவில் உட்கார்ந்துகொண்டு சுரேஷையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் என்ன யோசிப்பாள் என்பதை வித்யாவால் புரிந்துகொள்ளமுடிந்தது. சிலகாலமாக கனவிலும் நேரிலுமாக அக்கா வந்தபோதெல்லாம் தன்னுடைய பிரமை என்றுதான் நினைத்திருந்தாள்.

    “இன்னும் என்னால நம்பவே முடியல வித்யா. அபார்ஷன் ஆனா செத்துக்கூடவா போயிடுவாங்க? ராஜி பாத்ரூம்ல வழுக்கி விழுந்து அபார்ட் ஆயிடுச்சின்னு அம்மா சொன்னப்ப எப்புடி பதறிப்போயிட்டேன் தெரியுமா? ப்ச்… நா வந்து ஆம்புலன்ஸுக்கு சொல்லி ஆஸ்பிடல் போறதுக்குள்ளயே பிளீடிங் ஜாஸ்தியாகி”…

    சுரேஷ் இப்போது நிஜமாகவே அழுதான். ஆனால் அதில்கூட நடிப்பு இருக்குமோ என்றுதான் வித்யாவிற்கு தோன்றியது. ராஜேஸ்வரியும் சுரேஷ் அருகே நின்று மூக்குறிஞ்சிக்கொண்டிருந்தாள்.வித்யா அங்கிருந்து கிளம்பிவிட்டாள். வாசல் கேட் வரை வந்த ராஜேஸ்வரி வித்யாவை பாவமாக பார்த்தாள்.

    “நீ கவலைப்படாதக்கா. நா இவங்களை சும்மாவிடமாட்டேன்” என்றபடி நடக்கத்துவங்கினாள்.

    *************************************

    “சே கட்டைலபோறவன். கரெக்டா இன்ட்ரஸ்டான எடத்துல வந்து தொடரும் போட்டுடறான் கடங்காரன்” என்றபடி எழுந்துகொண்டாள் பார்வதி. ரிமோட்டை அழுத்தி டீவியை அணைத்துவிட்டு பக்கத்து அறையை பார்த்தாள் சாத்தியிருந்தது. மருமகள் தலைவலியென்று படுத்துக்கொண்டிருந்தாள். செல் போன் ஒலித்தது. மதுரையிலிருந்து அண்ணி கோமதிதான்.

    “ஆங் சொல்லுங்கண்ணி”

    “—————————- “

    “ஆங் ஆச்சு. ஆமாமா நல்ல கட்டத்துல நிப்பாட்டிட்டான் பாருங்க”

    “—————————- “

    “தம்பி வேலைக்கி போயிட்டான்”

    “—————————— “

    “ம்ம்ம்ம்….. இருக்கா இருக்கா. உள்ளதான் படுத்திருக்கா”

    “——————————“

    “அட நாந்தான் சொல்றேன்னு சொன்னேன்ல”?

    “——————————– “

    “நேத்து மூலிகைக்கடைக்கி போயிருந்தேன்”

    “——————————— “

    “சும்மா தருவானா ? நாலு பொம்பளைப்புள்ளைங்க இருக்குண்ணே… அப்டின்னு கண்லதண்ணிவிட்டப்பறம் தான் குடுத்தான்”

    “——————————— “

    “ஆமாமா பால்லதான் கலந்து தரணும்”

    “———————————— “

    “அதெல்லாம் கவலைப்படாத நாம்பாத்துக்குறேன். உன் மருமகனைப்பத்தி உனக்கு தெரியாதா”?

    “———————————— “

    “ஒருநிமிஷம் இருங்கண்ணி” என்று போனை அடைத்துக்கொண்டு வேலைக்காரப்பெண்ணிடம் கேட்டாள்.

    “இங்க என்ன செய்யிற ? நாந்தான் உன்ன போயிட்டு சாயந்திரமா வரச்சொன்னன்ல”?

    “இல்லங்கம்மா அப்பாக்கு ஒடம்புக்கு முடியல. டாக்டர்கிட்ட கூட்டிப்போவணும். ஒரு முன்னூறுவா குடுத்திங்கன்னா சம்பளத்தில கழிச்சிக்கலாம்”

    பார்வதி மெல்ல நடந்து ஷோகேஸ் மேலிருந்த தன் ஹேண்ட் பேகிலிருந்து காசு எடுத்துக்கொண்டுவந்து கொடுக்க அந்த பெண் நகர்தாள். மறுபடி போன் பேசத்தொடங்கினாள் பார்வதி.

    “————————————– “

    “இல்லயில்ல. குயிலிதான்”

    “————————————- “

    “என்னமோ அவங்கப்பாக்கு முடிலயாம். காசு கேட்டா”

    “————————————– “

    “ஆமாமா என்ன பண்றது. வந்ததுலயே இவமட்டுந்தான் பரவால்லாம இருக்கா. ச்சே… ச்சே… அதெல்லாம் கெடையாது. கைசுத்தம் வாய்சுத்தம்”

    “————————————— “

    “ஆதார் அட்டையா ? ஆங் வாங்கியாச்சே”

    “————————————- “

    “தெரில தம்பிதான் கூட்டிட்டுப்போனான்”

    “———————————– “

    “தெரியலியே அண்ணி”

    “———————————- “

    “சரி பாருங்க. நான் எல்லாத்தையும் முடிச்சிட்டு சொல்றேன்”

    “————————————- “

    “வேணாம். இதப்பத்திலாம் உன் பொண்ணுகிட்ட எதும் சொல்லவேனாம்”

    “—————————————- “

    “ஆமா அவ சின்னப்பொண்ணுதான”

    “—————————————– “

    “ஆங் சரி”

    “—————————————- “

    “சரி”

    “—————————————– “

    “வச்சிடறேன்” என்றபடி பார்வதி கிச்சனை நோக்கி நகர்ந்தாள்.

    முழுவதும் படித்தபின்பு …

    “நல்லாயிருக்கு தம்பி. இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி கொண்டுவாங்க. அடுத்த பிராஜகட் உங்களோடதுதான்” என்றார் சிபிச்செல்வன்.

    திவாகருக்கு சந்தோஷத்தில் படபடத்து வந்தது. இப்போதே சென்று வித்யாவிடம் இதைப்பற்றிச் சொல்லவேண்டுமென நினைத்துக்கொண்டான். அவள்தான் இந்த யோசனையையே சொன்னவள். சினிமா சினிமா என்று புரொடியூசர்களாக தேடி அலைந்துகொண்டிருந்தவனை, “பேசாம சீரியல் ட்ரை பண்ணேன் திவா” என்று உற்சாகப்படுத்தியவள். ஐடியாவுடன் கூடவே ஒரு கதையும் கொடுப்பாள் என்று அவன் நினைக்கவேயில்லை. அதை தன் ஸ்டைலில் அழகாக மாடிஃபை செய்து டீவி நிறுவனத்திடம் காட்ட இதோ உடனே சம்மதித்துவிட்டார்.

    வெளியில் வந்து வித்யாவிடம் செல்பேசினான். அவள் குரலிலேயே எத்தனை மகிழ்ச்சி என்பதை புரிந்துகொள்ள முடிந்தது திவாகரால். இது நல்ல ஓப்பனிங். இதில் கிடைக்கும் நற்பெயரும் தொடர்புகளும் தன் சினிமா சம்பந்தமான எதிர்காலத்திற்கு உதவும் என்று கணக்குப்போட்டான்.

    *************************************

    ராஜேஸ்வரி ஒரு முடிவிற்கு வந்தவளாக எழுந்து ஃபோன்பேசினாள். பிறகு ஹாலுக்கு வந்து மாமியாரின் அருகே வந்து உட்கார்ந்துகொண்டாள். மாமியார் கற்பகம் அவளை சந்தேகத்துடன் பார்த்தாள்.

    “ஏங்கண்ணு பால் குடிச்சிட்டியா”?

    “இன்னும் இல்ல அத்தை. கொஞ்சம் கெஸ்ட் எல்லாம் வரேன்னிருக்காங்க. அதான் வெயிட் பண்றேன்”

    கற்பகம் ராஜேஸ்வரியையும் டீவியையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருக்க வாசலில் சுரேஷ் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.

    “என்ன ராஜி எதுக்கு அர்ஜண்ட்டுன்னு சொல்லி வரச்சொன்ன”?

    மாமியாரின் குழப்பம் நிறைந்த பார்வையை தவிர்த்துவிட்டு சுரேஷிற்கு பதில் சொல்ல வாய்திறக்க வாசலில் இப்போது ஜீப் ஒன்று வந்து நின்றது. உள்ளே நுழைந்த மகளிர் காவலர்கள் கேட்டார்கள்.

    “யாரு இங்க ராஜேஸ்வரி”?

    “என்ன ராஜி என்ன பிரச்சனை போலிஸெல்லாம் வந்திருக்காங்க”? என்று சுரேஷ் கேட்க ராஜேஸ்வரி சொன்னாள்.

    “கொஞ்சம் பொறு சுரேஷ் விளக்கமா சொல்றேன்” என கூறிவிட்டு போலீஸ் பெண்மணியிடம் சென்றாள்.

    “சரி, அந்த பால்தம்ளர் எங்க”?

    ராஜேஸ்வரி படுக்கையறை சென்று அந்த பாலை கொண்டுவந்து கொடுக்க, அதை போலீஸ் பத்திரமாக ஒரு பாலித்தீன் கவரில் ஊற்றி எடுத்துக்கொண்டார்கள்.

    “நீங்க சாயந்திரமா ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக்கிடுத்திருங்க ராஜேஸ்வரி” எனக்கூறிவிட்டு மாமியார் கற்பகத்தை கொடூரமாக ஒரு முறை முறைத்துவிட்டு சுரேஷிடம் வந்தாள்.

    “பாருங்க மிஸ்டர் சுரேஷ். உங்க மதர் இந்தப்பொண்ணோட கருவை கலைக்க இந்த பால்ல எதோ மருந்து கலந்திருக்காங்க. நாங்க இதை லேபுக்கு கொண்டுபோறோம். டெஸ்ட்ல அது உண்மைனு ரிசல்ட் வந்தா அவங்களை, ஏன் தேவைப்பட்டா உங்களையுமே அரஸ்ட் பண்ணவேண்டியிருக்கும்” என்று சொல்லிவிட்டு வெளியேற,

    சுரேஷ் அதிர்ச்சியுடன் நின்றிருக்க கற்பகம் என்னென்னவோ சொல்லி அழுது புலம்பத்தொடங்கினாள்.

    *************************************

    “கட் கட் கட் கட்..” என்றான் திவாகர்.

    கற்பகம் தன் கிளிஸரின் கண்களை துடைத்துக்கொண்டு செல்போனில் யாரிடமோ பேசத்தொடங்க, வித்யா திவாகர் அருகில் வந்தாள்.

    “நா நெனச்சமாதிரியே வந்துருக்கு திவா. தேங்ஸ்”

    “லூசு. சீரியலா எடுக்குறப்பவே நமக்கு இவ்ளோ கஷ்டமாயிருக்கு. உண்மையிலயே உங்கக்கா இப்டித்தான் இறந்துபோயிருக்காங்க. பாவம் அவங்களுக்கு எப்டி இருந்திருக்கும்”?

    “உண்மைதான் திவா. நா அதை நெனச்சு அழாத நாளில்ல. அந்த பொம்பள என் அக்கா புருஷன் எல்லாரும் ஆக்ஸிடன்ட்ல சாகறவைரைக்கும் நா தெனந்தெனம் தவிச்சிருக்கேன். கடவுளா பார்த்து நல்ல தண்டனை குடுத்துட்டாரு”

    “சரி விடும்மா அழாத. எனக்கு கொஞ்சம் டைமாவும். நீ வேணா ஒரு ஆட்டோ புடிச்சி வீட்டுக்கு கெளம்பிக்கிறியா”?

    “சரி திவா” என்றபடி வித்யா அங்கிருந்து நகர்ந்தபோது, ஷூட்டிங் ஹால் மூலையில் ராஜேஸ்வரி தன் வயிற்றைத்தடவியபடி அழுதுகொண்டிருந்தாள் யார் கண்ணுக்கும் தெரியாமல்.

    *************************************

    Share
  • பூங்குழலி

    கவிஜி.

    காதல் ஒரு போதும் தீர்வதில்லை. தீர்வது போல ஒரு தீவிரத்தை இந்த வாழ்க்கை வலை வீசி கதை பேசினாலும் காதல் தீராது என்பதே தீராதுதானே?

    தீ சுட்ட இதழ் கொண்டவனாய் ஆதி பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் கனவுகளை விரட்டி பிடித்து பின் விரட்டி விடுபவன். கனவு காண்பது அவனின் தீராப் பசி. மந்திர மனதுக்காரன். எல்லாமே பெரியது அவனுக்கு. வான் கொண்ட நீலமும் அது கொண்ட நீளமும், தான் கொண்ட யாகமும் அது கொண்ட தேகமும் அவனை தீரா சிந்தனைக்குள் சிதறடித்துக் கொண்டே இருந்தது.

    தீ சுடினும் வலி காட்டாத முகம் ரசனை மிகுந்தது என்பது அவனின் உள் நோக்கிய சித்தாந்தம். நீண்ட தலை முடியும் நீண்ட தாடியும் அவனை அழகாக்கிக் கொண்டிருப்பதாக அவன் வீட்டு நிலைக்கண்ணாடி நிலை கொள்ளாமல் கூறுவதாக அவன் நம்பினான். நம்புவது மட்டுமே நிஜம். அது ‘ஜனனமாகட்டும். மரணமாகட்டும்’என்பது அவனின் வேதாந்தம்

    ‘இன்னைக்கு ஆபீஸ் போக பிடிக்கல’ வார்த்தைகள் காதோரம் கிசுகிசுக்க, கவனத்தை பின்னால் அமர்ந்திருந்த தன் மனைவி பூங்குழலியின் பக்கம் சற்று திரும்பிய உடல் மொழியில் கொடுத்தான்.

    “ஏன் என்னாச்சு உடம்பு சரியில்லையா?” என்றான் ஆதி வழக்கமான நிதானத்துடன்.

    அப்பப்பா, எவ்வளவு வாகனங்கள். இங்கு வண்டி ஒட்டி அலுவலகம் செல்வதும் வீடு திரும்புவதும் போர்க்களம் கடந்து உயிர் திரும்புதல், நிதானம் இழந்த உள் மனசு புலம்பத் தொடங்கியது .

    “வீடு ஆபீஸ் சமைக்கறது துணி துவைக்கறது தூங்கறது. ச்சே… நாம மனசு விட்டுப் பேசியே ரெம்ப நாளாச்சுல்ல. ப்ளீஸ் ஆதி என்னை எங்கயாது கூட்டிட்டுப்போ. லைப் போர் அடிக்குதுடா” என்றாள் பூங்குழலி.

    அவள் குரலில் இந்த அசுர வாழ்க்கை தூவியிருந்த கலப்பட விதைகள் முளை விட்டிருந்ததை உணர முடிந்தது. ஆதி எதுவும் பேசவில்லை. பைக் நகரம் தாண்டி மேட்டுப் பாளைய சாலையில் பயணிக்கத் தொடங்கியிருந்தது. பூங்குழலி பைக்கில் சற்று முன்னால் நகர்ந்து அமர்ந்தாள் மெல்ல கட்டிக் கொண்டாள். எதிர்க்காற்று அவளின் முகத்தை தழுவிச் சென்றது. அடைபட்டு சுருண்டு கிடந்த கூந்தல் தன் சிறகுகளை விரித்து காற்றோடு கை கோர்க்கத் தொடங்கியது.

    “என்ன ஆதி. எதும் பேச மாட்டேன்கிற…ம்ம்ம்ம் … என்னை உனக்கு பிடிக்குமா?”புல்வெளியில் அமர்ந்த படி அவனையே பார்த்துக் கொண்டு கேட்டாள் பூங்குழலி.

    “புடிக்காமத்தான் லவ் சொல்லி உன் பதிலுக்காக ஆறு மாசம் காத்திருந்தேனா?”மெல்ல வலது கண்ணை சுருக்கி கண் அடித்தபடியே பதில் கூறினான் ஆதி.

    சிம்ஸ் பூங்கா வெறிச்சோடிக் கிடந்தது. ஆங்காங்கே சில குடும்பங்கள் சில ஜோடிகள் என்று பெயருக்கு பூத்த பூக்கள் போல மரங்கள் கொண்ட மைதானமாய் விரிந்து கிடந்தது.

    “காதலிக்கும் போது அவ்ளோ பேசுவ கல்யாணத்துக்கு அப்புறம் ஏன் இவ்ளோ யோசனை”

    “ஹே… ஒவ்வொரு வயசுல ஒவ்வொரு மாதிரி இருக்கறதுதான் வாழ்க்கை. பதினாறு வயசுல இருந்த மாதிரியே இருபத்தியாறு வயசுல இருக்க முடியுமா? இல்ல இருபத்தியாறு வயசுல இருந்த மாதிரி முப்பத்தாறு வயசுல இருக்க முடியுமா? ம்..அதுக்காக காதல் குறைஞ்சிடுச்சுன்னு அர்த்தம் இல்ல என்ற ஆதி அவளை ஆழமாகப் பார்த்தான்.

    “உன் தாடியும் தலை முடியும் தாண்டா உனக்கு செம லுக் குடுக்குது. இருபது வயசுல பார்த்த மாதிரியே தான் முப்பது வயசுலயும் இருக்க. நான் பாரு ஆண்ட்டி ஆகிட்டேன்” என்றாள் பூங்குழலி

    அவளின் உடல் மொழி சிணுங்கியது. அவன் தன்னை இன்னும் இளமையாக உணரத் தொடங்கினான். நிறைய பேசினார்கள் நிறைந்து பேசினார்கள் பேச்சில் காதலும் காமமும் மழை விடத் தொடங்கியிருந்தது. உச்சி மலைக் காற்றின் நெடுந்தூர பயணம் அவர்களைத் தழுவிச் சென்றது. மீண்டும் பூத்த பூவாகி இருந்தாள் பூங்குழலி. அரும்பு மீசை வந்தவனாக தன்னை உணர்ந்தான் ஆதி. வாழ்வின் நெருக்கடியில் இருந்து தொடுவானம் தீண்ட துடிக்கும் பறவைக் கூட்டங்களுக்குள் ஒளிந்து கொண்டவர்களாகி போனார்கள். இருவரும் ஆங்காங்கே அமர்ந்திருக்கும் ஜோடிகளைப் பார்த்து அவர்களுக்குள்ளாகவே பேசி சிரித்துக் கொண்டார்கள்(பழைய நினைவுகள்).

    “ஆதி அந்த பையனப் பாரேன். கிஸ் பண்ண எவ்வளவோ ட்ரை பண்றான். ஆனா அது விவரமான பொண்ணு. விட மாட்டேங்கறா பாரு”

    பூங்குழலி காட்டி பேசிய திசையில் ஆதியும் திரும்பி அந்தக் காட்சியை ரசித்தான்.

    “என்ன விவரமா இருந்து என்ன பிரயோஜனம். முக்கியமான நேரத்துல கவுந்துருவீங்கள்ல” என்று கண் அடித்து சிரித்தான் ஆதி.

    “போடா பி ஹச் டி ” என்று சொல்லி கன்னத்தில் செல்லமாக அடித்தாள் பூங்குழலி.

    பேச்சு எங்கெல்லாமோ சென்று ‘அடுத்த ஜன்மத்திலும் நீயே என் துணையாக வேண்டும்’ என்றான்.

    “என்ன திடீர்னு எமோசனல்?” பூங்குழலி. விழி விரியக் கேட்டாள். அவள் பார்வை முழுக்க ஆதியின் முகமே காட்சியாகி இருந்தது.

    “சரி எமோசனல் இல்ல. ஜாலி. ஓகேயா” என்று தொடர்ந்தான்அவன் கண்கள் மெல்ல சிவக்கத் தொடங்கி இருந்தது.

    “சின்ன உடம்பு, பெரிய கண்ணு, லைட்டா தூக்கின மாதிரி மூக்கு, ரோஸ் கலர் உதடு, வலது பக்கம் வகிடெடுத்து சீவின தலைமுடி,உடம்பை ஒட்டின மாதிரி தாவணி, ஜல் ஜல்ன்னு கணுக்கால்ல ஆட்டம் போடற கொலுசு, இடது மூக்குத்தில மின்னற முகம், வயசு ஒரு பதினெட்டு இருக்குமா? அங்க பாருடி ப்பா. சின்ன வயசுல உன்ன பார்த்த மாதிரியே இருக்குல்ல.” என்றான் ஆதி. அவன் கண்களில் கவிதை படித்த திருப்தி. அவனின் கண்கள் நிலை குத்திய இடத்தில் பூங்குழலியும் பார்த்தாள்

    “ம்ஹும். யாரை சொல்ற ஆதி. நீ சொல்ற மாதிரி யாருமே அங்க இல்லையே” பூங்குழலி சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் தேடியபடியே கூறினாள்.

    “ஹே லூசு. அந்த சிவப்பு தாவணிடி”

    “நீதான் லூசு. கிட்டத்தட்ட எல்லாருமே யூனிபார்ம் மாதிரி சிவப்பு தாவணிதான் போட்ருக்காங்க” பூங்குழலியின் முகம் தேடலைச் சுமந்த பார்வையானது. சட்டென ஏதோ மாந்தரீகன் போல ஆதி கூறினான்

    “அவ இங்க வருவா பாரு. வந்து அதோ அங்க இருக்கற சேர்ல உக்காருவா, போட்டோ எடுத்துக்குவா. அவ பார்வை முழுக்க என் மேல தான் இருக்கும்”

    பூங்குழலி மந்திரக்காரனைப் பார்ப்பது போல பார்த்தாள் ஆதியும் தவம் கலைந்தவனின் புரியாமை போல புலம்புவதாகவே உணர்ந்தான். அவள் அவன் சொன்னது போலவே அங்கு வந்து அமர்ந்தாள் புகைப் படம் எடுத்துக் கொண்டாள்.

    “ம்ம்.. பாரு. சேர்ல பாரு” கிசுகிசுத்த கணவனை செல்ல முறை முறைத்தாள் பூங்குழலி.

    “ஒரு கூட்டமே உக்காந்து போட்டோ எடுக்குது இதுல யாரன்னு பாக்க” அலுத்துக் கொண்டாள் பூங்குழலி.

    அவளின் கண்கள் ஆதியையே தேடியது.

    கண்களை அழுந்த துடைத்துக் கொண்ட பூங்குழலியின் கண்களில் எதிரே புல் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த அந்த இளம் ஜோடி அவளின் காதலையும், காதல் கணவனையும், அவர்கள் வந்து கொண்டாடிய அந்த ஒரு அழகிய நாளையும் கண் முன்னே நினைவுகளாக்கிக் கொண்டிருந்தது. கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள். மனதுக்குள் வெட்டிய மின்னலென அந்த ஜோடி அவளின் எண்ணங்களை சுழல வைத்ததுக் கொண்டிருந்தது. இன்னும் ஆழமாய்ப் பார்த்தாள். உள்ளமும் உடலும் ஒரு வித நடுக்கத்தை உராய்வை உணர்ந்தது.

    நீண்ட தலை முடியும் தாடியும் வைத்துக் கொண்டு அந்தப் பையன் தன் கணவன் ஆதியைப் போலவே இருக்கிறான். அந்த பெண் ஆதி அன்று சொன்ன அந்த ஒற்றை மூக்குத்தி கணுக்கால் கொலுசு வலது பக்க வகிடு சிவப்பு தாவணிப் பெண் போலவே இருக்கிறாள். ‘கடவுளே’ என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் பூங்குழலி. அவளுக்கு எல்லாமே கற்பனையாக கனவு போல இருந்தது. இறந்து போன தன் கணவனைப் போலவே ஒருவன், தன் கணவன் கூறிய பார்த்த ரசித்த அதே உடலமைப்பு கொண்ட பெண்ணுடன் தாங்கள் வந்தமர்ந்த அதே இடத்தில். பூங்குழலிக்குத் தலை சுற்றியது.

    ஒரு வேலை மறு ஜென்மமா?!! அவள் இன்னும் இன்னும் குழம்பினாள். தன் கணவன் கூறிய அத்தனை அடையாளங்களும் அவளுடன் ஒத்துப் போகிறது. அது மட்டுமல்ல அந்தப் பையன் அப்படியே தன் கணவனைப் போலவே இருக்கிறான். பூங்குழலியின் மனம் துடித்தது. ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் போலத் தோன்றியது. இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்தாள். நெஞ்சு விம்மியது சந்தோசம் மட்டுமே வாழ்வென தெரிவது போல அந்த ஜோடி இன்னும் இன்னும் நெருக்கமாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

    ஏக்கம் பெருந்தவிப்பை பூங்குழலிக்குள் விதைத்தது. துக்கம் சட்டென வடிந்து போன மழையின் வழியென காய்ந்தும் ஈரம் பசை கொண்ட வழியாக தன்னை வழியாக்கிக் கிடந்தது. கண்டிப்பாக அது தன் கணவன் ஆதியேதான். அதே இடது கை பழக்கம். வலது கையில் கடிகாரம் கட்டும் அதே சுபாவம் இன்னும் உற்று நோக்கினாள். வலது கண்ணை சுருக்கி கண் அடிக்கும் அதே குறும்பு முகம். சரி அவன் ஆதியாகவே இருந்தாலும் என்ன செய்ய முடியும்? தான் தவழ்ந்த கைகளில் வேறொரு பெண்.

    அவனைத் தழுவிக் கொள்ள வேண்டும் போல ஒரு ஊற்று கொப்பளிக்கத் தொடங்கியது அவள் எங்கும். காற்றில்லா தேசத்து மரமாக அமர்ந்திருந்தாள் அவர்களை ஆழமாய் பார்த்துக் கொண்டேயிருந்தாள். ஆதியின் சாயலில் இருந்தவன் தன் காதல் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்ததை இப்போது சற்று உற்றுக் கவனிக்கையில் கேட்க முடிந்தது.

    “சிவப்பு கலர் சுடிதாரில் சின்ன கண்கள் கொண்ட ஒருத்தி பாப் கட்டிங் கொண்ட தலை முடியோடு. ப்பா.. எவ்ளோ அழகு அவ. நீ வேண்ணா பாரேன் அவ இங்க வந்து உட்காருவா. என்னப் பார்த்துக்கிட்டே போட்டோ எடுத்துக்குவா.”

    திக் என்றது பூங்குழலிக்கு.

    “ஆதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????????????????”

    வாய்க்குள் வார்த்தை நீச்சல் மறந்து மூழ்கியது. ஏதேதோ எண்ணங்களின் சுழற்சி அவளைக் கொத்தத் தொடங்கியது. இருப்பினும் சமாளித்துக் கொண்டே பூங்குழலி அவன் காட்டிய திசையில் ஆவலோடு கண் விரிய பார்த்தாள்.

    சிவப்பு கலர் சுடிதாரில் ஒருத்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளின் பார்வை முழுக்க ஆதியைப் போல இருந்தவன் மேல் தான் இருந்தது. அது தீரா காதலுக்கான பார்வையாகப் பட்டது. நடை உடை பாவனை. அதிர வைக்க இன்னும் ஆழமாய் உடல் வியர்த்து உள்ளம் நடுங்கி கூர்ந்து கவனித்தாள் பூங்குழலி.

    வந்து கொண்டிருந்தவள்…..வந்து கொண்டிருந்தவள்…….பூங்குழலியைப் போலவே இருந்தாள்.

    சிறு குறிப்பு: 25 வருடங்களுக்கு முன் சிம்ஸ் பூங்காவிற்கு வந்து விட்டு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் பலியானது ஆதி மட்டுமல்ல.

    Share
  • வா என்றது உருவம், நீ போ என்றது நாணம் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    வா என்றது உருவம் … நீ போ என்றது நாணம் … பார்என்றது பருவம் …

    காத்திருந்த கண்கள் திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல்! விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவர் இசையில் மலர்ந்த மனோரஞ்சிதம்! பி.சுசீலாவின் குரலில் கேட்கும் தேவகானம்!! எளிமையான வரிகள் இனிமையான பொருளை அள்ளித் தெளிக்கும் கோலம்! அழகுரதம் ஒன்று அசைந்துவருவதைப்போல் கதையின் நாயகி தன் முகபாவனைகளால் வார்த்தைப் பூக்களைக் கோர்த்து ஒரு மாலையாக்குகிறாள்!

    பெண்மை என்ன சொல்லும் … எப்படி தவிக்கும் … என்கிற இலட்சணங்கள் அட்சர சுத்தமாய் இறக்குமதியாகியிருக்கிறது கவிஞரின் கற்பனையில்!

    வா என்றது உருவம்
    நீ போ என்றது நாணம்
    பார் என்றது பருவம்
    அவர் யார் என்றது இதயம்

    சொல் ஒன்று சொன்னால் செயல் என்னவாகும்? கவிஞரின் பாடல் அதற்கும் பதில் சொல்கிறது! மயக்கம் வருகிறது, தயக்கம் தருகிறது, கலக்கம் பெறுகிறது! உறக்கம் என்ன ஆச்சு.. பாருங்கள்!!

    கண் கொண்டது மயக்கம்
    இரு கால் கொண்டது தயக்கம்
    மனம் கொண்டது கலக்கம்
    இனி வருமோ இல்லையோ உறக்கம்

    வாடிக்கையான கற்பனைகளால் வரைந்துவிடாமல், வாழ்க்கையை மனிதன் எப்படி அனுபவிக்கிறானோ அதை அங்குலம்விடாமல் சொல்லிவிட முடிவது கவிஞர் கண்ணதாசனுக்கே! ஆசை என்றதாம் நிலவு அதை ஆமோதித்ததாம் மனது!! தற்குறிப்பேற்றணியைக்கூட திரைப்பாடலுக்கு சமர்ப்பணம் செய்திடும் சாதுர்யம்!!

    மாலை நிலாவினைக் கேட்டேன்
    என் மனதில் வந்தது என்ன
    ஆசை என்றது நிலவு
    ஆம் அதுதான் என்றது மனது

    கவிதை ஒன்று வரைந்து அதைப் பாடலாக்கித்தரும்போது கதையின்போக்கிற்கு வளைக்க வேண்டுமே. இதோ பாருங்கள்!! தன் காதலனைப் பின் தொடருகிறாளாம் நாயகி!

    ஏதோ ஒரு வகை எண்ணம்
    அதில் ஏனோ ஒரு வகை இன்பம்
    ஒரு நாள் ஒரு முறை கண்டேன்
    அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    படம்: காத்திருந்த கண்கள் (1962)
    பாடல்: கண்ணதாசன்
    இசை: எம். எஸ். விஸ்வனாதன், டி .கே. ராமமுர்த்தி
    குரல்: பி. சுசீலா
    காணொளி: https://youtu.be/OLV16AX3z2c
    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ …
    வா என்றது உருவம்
    நீ போ என்றது நாணம்
    பார் என்றது பருவம்
    அவர் யார் என்றது இதயம்

    கண் கொண்டது மயக்கம்
    இரு கால் கொண்டது தயக்கம்
    மனம் கொண்டது கலக்கம்
    இனி வருமோ இல்லையோ உறக்கம்
    (வா என்றது உருவம்)

    மாலை நிலாவினைக் கேட்டேன்
    என் மனதில் வந்தது என்ன
    ஆசை என்றது நிலவு
    ஆம் அதுதான் என்றது மனது
    (வா என்றது உருவம்)

    ஏதோ ஒரு வகை எண்ணம்
    அதில் ஏனோ ஒரு வகை இன்பம்
    ஒரு நாள் ஒரு முறை கண்டேன்
    அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்
    (வா என்றது உருவம்)

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    “கேசவன்தாள் மாடாக, கேசவன்கைக் கோடாக,
    பாசிப்புல் மேடாக, பண்டரி , -வாசனவன்,
    வீடாக வீற்றக்கல் ஓடாக, போற்றும்பா
    ஏடாகச் செய்பிறப்(பு) ஏழு”….கிரேசி மோகன்….

    கோடு- கேசவன் ஏந்திய ”மலை” & ஓவியர் கேசவ் வரைந்த கோடு….

    Share
  • புளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு

    Chaotic dance of Moons of Pluto

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZOgIsb2KjSQ

    http://www.space.com/29559-pluto-moons-weird-orbit-chaos.html#ooid=ZsZmFodTrKKuuW0KV_2RqkCxZFpg7azB

    http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html

    http://www.windows2universe.org/pluto/binary_planet.html

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=izQjzyN0nNc

    +++++++++++

    (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto)

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LgzM-uV81YE

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iQ_Wp4bcLFI

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KfODJpfS0fo

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ

    http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE

    +++++++++

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    New Horizon

     

    புதுத் தொடுவான் விண்கப்பல்
    புளுடோவையும்
    ஐந்து துணைக் கோள்களும் கடந்து
    அப்பால் பறக்கப் போகுது
    ஹப்பிள் விண்ணோக்கி
    தாறுமாறாய்ச் சுற்றும்  துணைக்கோள்
    கண்டு பிடித்தது !
    புளுடோ – சாரன்  இரட்டைக் கோள்
    பிணைப்பு முறைப்பாடு !
    புறக்கோள் புளுடோ
    பரிதி மண்டல விந்தை !
    கோணச் சுற்று வீதி !
    புதுத் தொடுவான் கப்பல் தொடர்ந்து
    கியூப்பர் வளையத்தின்
    கோள்களை உளவச் செல்லும் !
    சூரிய மண்டலத்து
    வால்மீன் மந்தைகளின்
    வளர்ப்பிடத்தை
    தெளிவாக
    ஆய்வுகள்  செய்யும் !
    வாயேஜர் விண்ணூர்தி போல்
    பரிதி மண்டல
    வரம்பைத் தாண்டி
    வரலாற்றிலே
    புதிய மைல் கல்லை நடும்
    நாசாவின்
    புதுத் தொடுவான் கப்பல் !

    +++++++++++

    ஹப்பிள் விண்ணோக்கி புறக்கோள் புளுடோவின் துணைக்கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றிப் பிரபஞ்ச நடனம் புரிகின்றன  [Cosmic Dance] என்று ஒரு புதுவிதத் தகவலைத் தெரிவித்துள்ளது.  நாசாவின் புதுத் தொடுவான் விண்கப்பல் 2015 ஜூலையில் புளுடோவைக் கடந்து செல்லும் போது அதன் துணைக்கோள்கள் எப்படி இயங்கி வருகின்றன என்று அறிய வாய்ப்பு ஏற்படும்.

    ஜான் கிருன்ஸ்ஃபெல்டு [இணை ஆளுநர், நாசா விஞ்ஞானத் திட்டம்]

    புளுடோ-சாரன் இரட்டைக் கோள், துணைக்கோள்கள் ஏற்பாட்டில்  ஒழுக்க முறிவுச் சுற்றுகள் [Chaos] இருப்பது ஒரு பொது இயக்கம் என்பதைக் கற்று வருகிறோம்.  அதனால் அண்டக் கோள்களில் இருக்கும் உயிரின வாழ்க்கையில் பாதிப்புகள் விளைய ஏதுவாகலாம்.

    டக்லஸ் ஹாமில்டன் [மாரிலாந்து பல்கலைக் கழகம்]

    புளுடோ-சாரன் இரட்டைக் கோள் ஈர்ப்பு விசைப் போட்டியில் தாக்கப்பட்டு நிக்ஸ் [Nix] துணைக்கோள் தாறுமாறாய்ச் சுற்றி வருகிறது.  இது சிறிய கொந்தளிப்பு மட்டுமில்லை; நிகஸ் தனது துருவங்களையே சுழற்றிக் கொள்ளலாம்.  நிக்ஸில் சூரிய உதயம் கிழக்கிலும்  அத்தமனம் வடக்கிலும் நிகழலாம்.  நிக்ஸ், கெர்பெரோஸ் போல, மற்ற துணைக் கோள்களும் தாறுமாறாய்ச் சுற்றலாம்.

    மார்க் ஷோவாட்டர் [SETI Institute in Mountain View, California]

    Cosmic Dance

    புறக்கோள் புளுடோ சந்திரன்களில் ஹப்பிள் நுண்ணோக்கியின் புதிய கண்டுபிடிப்பு

    2005 ஆண்டுமுதல் 2012 வரை ஹப்பிள் விண்ணோக்கி மூலம் தொடர்ந்து நோக்கி வந்த புளுடோ புறக்கோளின் துணைக்கோள்கள் நிக்ஸ், ஹைடிரா ஆகிய இரண்டும் தாறுமாறான முறையில் புளுடோவைச் சுற்றி வருவதாகக் கண்டிருக்கிறார்கள். புளுடோவின் ஐந்து சந்திரன்களும் அவ்விதன் நடனம் புரியலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  நிக்ஸ், ஹைடிரா இரண்டு கோள்களும் முட்டை வடிவில் அமெரிக்கப் பந்துபோல் நீள் வட்ட வடிவில் உள்ளவை.  ஒழுங்கற்ற முறையில் உருண்டு துருவங்கள் சுழன்று துணைக் கோள்கள்  சுற்றுவதை ஒளிக்காட்சியில் காணலாம். அவ்விதம் ஒழுங்கற்ற முறையில் துணைக்கோள்கள் நடனம் ஆடுவதற்குக் காரணம் ஒன்றை ஒன்று சுற்றும் இரட்டைக் கோள்களான புளுடோவும், அதன் துணைக்கோளான சாரனும் கொண்டுள்ள ஈர்ப்பு விசைகளே என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.  புளுடோவின் விட்டம் : 2300 கி.மீ. [1400 மைல்];  சாரனின் விட்டம் : 1200 கி.மீ. [720 மைல்]. இந்தப் புதிய தகவல் ஆங்கில இதழ் இயற்கையில் [Nature] 2015 ஜூன் 4 ஆம் தேதி வெளியாகி உள்ளது.  2015 ஜூலையில் புளுடோவைக் கடந்து செல்லும் நாசாவின் புதுத் தொடுவான் விண்கப்பல் [New Horizon Spaceship] உறுதிப் படுத்தும். நாசாவின் 700 மில்லியன் டாலர் திட்டத்தில் புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவைத் தாண்டி, கியூப்பர் வளையம் கடந்து பரிதி மண்டல எல்லைக்கு அப்பால் பயணம் செய்யும்.

    நியூ ஹொரைசன் விண்ணுளவி புளுடோவின் புதிய சந்திரன்களையும், வளையங்களையும் கண்டுபிடிக்கும் என்று மெய்யான ஓர் எதிர்பார்ப்பு உள்ளது.  புளுடோவுக்கு ஏற்கனவே  அறிந்த ஐந்து சந்திரன்கள் [சாரன், நிக்ஸ், ஸ்டைக்ஸ்,  ஹைடிரா & கெர்பெரோஸ்].  கணனி எண்ணியல் உருவாக்கத்தில் [Numerical Simulations] விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தூளான துணுக்குகள் புளுடோவை வளைங் களாய்ச் சுற்றி வருவதாகத் தெரிகின்றன !  அந்த வளையங்கள் தோன்றி மறைகின்றன.  புலப்படாத புது விண்வெளி நோக்கிப் போகிறோம் !   பயணத்தில் என்ன காணப் போகிறோம் என்று அறியோம்.   அந்த எதிர்ப்பாடுகள் 2015 ஆண்டு ஜூலையில் இருக்கும் !

    அலன் ஸ்டெர்ன் [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    ஹப்பிள் விண்ணோக்கியில் மங்கலாகத் தெரியும்  புளுடோவின் தளவியல் முற்றிலும் இதுவரைத் தேர்வு செய்யப் படாதது ! வானியல் விஞ்ஞானிகள் புளுடோவைக் குள்ளக் கோள் என்று ஒதுக்கினும், தள இயக்கங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவை அல்ல.   ஒரு கார் புளுடோவின் மத்திய ரேகையில் சுற்றி வந்தால் 5000 மைல் தாரம் என்று தொலைக் கருவி [Odometer] காட்டிவிடும்.    அது நியூயார்க் மன்ஹாட்டன் -மாஸ்கோ தூரம் ஆகும்.   அந்தப் பயணத்தில் ஒரு பயணி குளிர்ந்த நீரெழுச்சிகள், பள்ளக் குழிகள், முகில்கள் [Icy Geysers, Craters, Clouds] காண நேரிடலாம்.

    அலன் ஸ்டெர்ன்  [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    Pluto Satellites

    புளுடோ குள்ளக் கோளின் ஐந்து துணைக்கோள்கள்

    புளுடோவில் அடிக்கடல் இருக்க வாய்ப்புள்ளதற்கு இரண்டு சார்பு அளவுகள் முக்கியம்  : முதலாவது அதன் பாறை உட்கருவில்  உள்ள கதிரியக்கப் பொட்டாசியத்தின் அளவு [Radioactive Potassium Quantity] [75 parts per billion]. இரண்டாவது  அதை மூடியுள்ள பனிக்கட்டியின் உஷ்ண அளவு [-230 டிகிரி C].  புளுடோவின் திணிவு [Density] கணிப்புப்படி 40% பாறைக் கொள்ளளவு.  தேவையான அளவு கதிரியக்கப் பொட்டாசியம் இருந்தால், தேய்வு வெப்பமே பனிக்கட்டி [Mixure of Nitrogen & Water] நீராக உருகத் தகுதி அளிக்கும்.

    கியில்லமேம் ரோபூச்சன் & ஃபிரான்சிஸ் நிம்மோ [காலிஃபோர்னியா பல்கலை கழகம்]

    “பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றல் சுழற்சி விசையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது எமது பயங்கரக் கனவுகளுக்கு அப்பாற் பட்டது.  அது நமது புதுத் தொடுவான் விண்கப்பல் தயாரிப்பை மெய்ப்படுத்திய தோடு 2015 ஆண்டில் புளுடோவை நெருங்கி விடும் நேரிய விரைவுப் பாதையில் திருப்பப் பட்டது.  இதுவரைப் பிற விண்கப்பல்கள் புக முடியாத வியாழ மண்டலத்தைச் சீராக ஆராயப் புது யுக நவீனக் கருவிகளைக் கொண்டு போகும் அந்த விண்கப்பல் திருப்பம் ஓர் எதிர்பாராத நிகழ்ச்சியே !  மேலும் அப்பயணம் சூரிய மண்டலத்தின் மிகப் பெருங்கோள், அதன் துணைக் கோள்கள், வளையங்கள், சூழ்வெளியை ஆழ்ந்துளவித் தகவல் அனுப்பும் தகுதியும் கொண்டது.”

    அலன் ஸ்டெர்ன், நியூ ஹொரைஸன் பிரதம ஆய்வாளர், நாசா தலைமையகம், வாஷிங்டன். டி.சி.

    நாசாவின் விண்ணுளவி புது தொடுவான் இப்போது எங்கே பயணம் செய்கிறது ?

    2006 ஜனவரியில் ஏவப்பட்ட நாசாவின் விண்கப்பல் “நியூ ஹொரைசன்” இப்போது [மார்ச்சு 15, 2015] சூரிய மண்டலத்தின் கடைசிக் கோளான நெப்டியூன்  புறக்கோளை நெருங்கப் போகிறது.  நாளொன்றுக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் பயணம் செய்து,  சுமார் 3 பில்லியன் மைல் கடந்து, அடுத்து 2015 ஜூலையில் முதன் முதலாய்க் குள்ளக் கோள் புளுடோவை மிக நெருங்கிப் படமெடுக்கும்.  பிறகு 2015 ஜூலை 15 புளுடோவை 6000 மைல் [10,000 கி.மீ] தூரத்தில் உளவு செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

    புளுடோவின் தள உஷ்ணம் (-230 டிகிரி C) ஆக இருப்பதால், பனித் தரைக்குக் கீழே உள்ள நிரந்தர வெப்ப எழுச்சியால் நீர் மயக் கடல் ஒன்று இருக்குமா என்ற ஐயப்பாடு இருந்து வந்தது.  புளுடோ உட்கருவில் தொடர்ந்து வெப்பம் தர பாறையில் கதிரியக்கப் பொட்டாசியம் குறைந்தது [75 ppb] [parts per billion] அளவு இருக்க வேண்டும்.

    Eris and Moon

    இதுவரை குள்ளக் கோள் புளுடோ ஆழ்ந்து ஆராயப்பட வில்லை.  முன்பு நெருங்கிச் சென்ற வாயேஜர் விண்கப்பல்கள் [Voyager 1 & 2 Spaceships] இத்துணை அருகில் புளுடோவை நோக்கிச் செல்லவில்லை.  குள்ளக் கோள் புளுடோவில் பல மர்மங்கள் / புதிர்கள் உள்ளன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.   புளுடோவின் பனிக்கடியில் கடல் ஒன்று இருக்கலாம் என்றும் நீரெழுச்சிகள் [Geysers] பல  இருக்கலாம் என்றும் யூகிக்கப் படுகின்றன.  இப்போது ஐந்து சந்திரன்களை [Charon, Styx, Nix, Kerberos & Hydra] புளுடோ கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.   மேலும் புதிதாகச் சந்திரன்கள் கண்டுபிடிக்கப் படலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.   பல்லாண்டுகளாக, விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தெறித்த துணுக்குகள், தூசிகள் புளுடோவை வளையங்களாகச் சுற்றி வரலாம் என்றும் யூகிக்கப் படுகிறது !  2015-2016 ஆண்டுக்குப் பிறகு நாசாவின் நியூ ஹொரைசன் விண்ணுளவி வால்மீன்கள் தோன்றும் கியூப்பர் வளையத்தைப் படமெடுத்துக் கடந்து செல்லும்.   இறுதியாக 2020 ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி, முந்தி அனுப்பிய வாயேஜர் விண்கப்பல்கள் போல், புது சூரிய மண்டலத்தின் ஊடே பயணம் செய்யும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

    New Horizon Travel Path

    இந்த சொற்பச் செலவு புறக்கோள் உளவு விண்வெளிக் குறித்திட்டம்  வெற்றிக் கதை சொல்வது.   நியூ ஹொரைஸன்  விண்கப்பல் கூட்டுறவுக் குழுவினர் புளுடோ  உளவு முயற்சியில் பெற்ற இரட்டை வெகுமதி இவை.   முதலாவது பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு விசை உதவியால்  புளுடோவின் உந்து வேகம் மிகைப்பாடு.   இரண்டாவது  பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஓய்வில் முடங்கிக் கிடக்கும் விண்கப்பலின் கருவிகள் சோதிப்பு இயக்க வெற்றி.   அதாவது “ஓய்வு முடக்கப் பயண விஞ்ஞான முத்திரைச் சான்றிதழ்”  (Certification of  Hibernation Cruise Science).   புளுடோவை நோக்கிப் பயணம் செய்வதில் பரிதிக் கோளப் பாதை நெடுவே என்னென்ன விந்தைகள் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று காத்திருக்கிறோம்.”

    அலன் ஸ்டெர்ன்  (Alan Stern, New Horizons Principal Investigator)

    “சூரிய மண்டலத்தின் தூசி உளவியான ( SDC – Student Dust Counter) கருவி விண்வெளித் தூசிகளை எண்ணித் தகவல்  அனுப்பும்.  இந்தத் தகவல் பரிதிச் சூழ்வெளித் தூசி மய அடுக்கின் பண்பாடுகளை அறிய உதவும்.   அதன் மூலம் மற்ற பரிதி மண்டலப் புதிர்களையும், மர்மங்களையும் விஞ்ஞானிகள் விடுவிக்க முடியும்.”

    ஜேம்ஸ் ஷாலே  (James Szalay, University of Colorado Graduate Student & SDC Instrument Leader )

     

    “சனிக்கோளுக்கு அப்பால் தீரச் சாதனை செய்த விண்வெளிக் கப்பல் சென்று 30 ஆண்டுகள் கடந்து, முதன்முதல் சூரிய மண்டலம் தாண்டிய வாயேஜர் 1 & 2 (Voyager 1 & 2) விண்ணுளவிகளுக்குப் பிறகு, தனித்துப்  புளுடோ கோளை உளவ நியூ ஹொரைசன் விண்ணுளவி அனுப்பப் படுகிறது.”

    “இப்போது சூரிய ஒளிப்பிழம்பு புயல்களின் (Solar Wind Plasma) மூலம் வெளிப்படும், கனல் வீச்சுகளையும் (Solar Flares), கதிர் நிறை வீச்சுகளையும் (Coronal Mass Ejections) முன்பை விடக் கருவிகளின் மூலம் தெளிவாக நோக்கப் படுகிறது.   சூரிய இயக்கங்கள் மிகை யாகும் இத்தருணத்தில் நியூ ஹொரைசன் விண்ணுளவியின் நவீன நுண்திறன் கருவிகள் பரிதி மண்டலத்தைக் கூர்ந்து நோக்குவது  அவசியப் படுகிறது.”

    மாத்யூ ஹில்  (New Horizon PEPSSI Instrument Scientist, Johns Hopkins University, Md)

    “இதற்கு முன்பு விண்வெளித் தேடல்களில் காணாமல் விட்டவற்றை அறிவதற்குக் கவனமாகக் கருவிகளைத் தயார் செய்து மேற்பட்ட விஞ்ஞான நோக்கங்களுக்கு வழி வகுத்தோம்.  வியாழ மண்டலம் தொடர்ந்து மாறி வருகிறது.  புதுத் தொடுவான் விண்கப்பல் மனத் துடிப்பு உண்டாக்கும் கண்டுபிடிப்புகளைக் காணச் சரியான காலத்தில் சரியான இடத்தில் பயணம் செய்துள்ளது.”

    ஜெஃப்ரி மூர், வியாழக் கோள் ஆய்வுக்குழுத் தலைவர், நாசா அமெஸ் ஆய்வகம், காலிஃபோர்னியா

    நியூ ஹொரைஸன் ஓய்வு முடக்கக் கருவிகள் பயணத்தின் போது தூண்டிச் சோதிக்கப் பட்டன

    2006 ஜனவரி மாதம் புளுடோவை நோக்கிப் பயணம் துவங்கிய நியூ ஹொரைஸன் விண்வெளிக் கப்பல் பல மில்லியன் மைல் கடந்து 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுடோவின் ஈர்ப்பு வலையில் நழுவிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.    தற்போது ஏறக்குறைய முக்கால் பங்கு தூரத்தைக் (22.65  AU) (1 AU =  One Earth Distance from Sun] [One AU = 150 million Kms or 90 millian miles]  கடந்து நியூ ஹொரைஸன் விண்கப்பல்  புளுடோவை நெருங்க இன்னும் 8.76 AU தூரம் உள்ளது.

    ajay

    விண்கப்பல் பயணத்தின் போது இடைத்தூரம் மில்லியன் கணக்கில் இருப்பதால் பல கருவிகள் தம் ஆயுளை நீடிக்க “ஓய்வு முடத்துவம்” [Hybernation ] செய்யப் படுகின்றன.   இப்போது அப்படி உறங்கும் கருவிகள் எழுப்பப் பட்டு இயங்கப் பூமியிலிருந்து தூண்டப் பட்டன.   இந்த விழிப்பு இயக்க நிலை 2013 ஜனவரி வரை நீடிக்கப் படும்.   அவை மீண்டும் இயங்கு நிலைக்கு மாறி அண்டவெளிச் சூழ்வெளியின் நிலைகளைப் பதிவு செய்யும்.

    சூரிய மண்டலம் அடக்கிக் கொண்டுள்ள பரிதிக் கோளம் [Heliosphere]  என்பது, அதி வேகச் சூரியப் புயல்  அடித்து உட்புறம் ஊதிய ஒரு வகையான பலூனே.    தூரம் மிகையானதால் நியூ ஹொரைஸன் விண்கப்பலின் மின்னியல் கருவிகள் நிறுத்த பட்டு பெரும்பாலும்  ஓய்வு முடக்க உறக்கத்தில் தணிந்த உஷ்ணத்தில் பயணம் செய்கின்றன.    அவ்விதம் நாசா செய்வதால் விண்கப்பல் கருவிகளின் ஆயுள் நீடிக்கப் படுகிறது.   அதுபோல் விண்கப்பலைத் திசை திருப்பிச் செலுத்தும் உந்துவிசை ஏவிகளும் (Thrusters) தணிந்த நிலையில் இயங்கி வருகின்றன.

    முதலில் திட்டமிடப் பட்ட நியூ ஹொரைஸன் ஒரே ஒரு கருவி [(SDC) Student Dust Counter in Heliosphere] மட்டும் இயங்கும் விண்கப்பலாய்த் தீர்மானிக்கப் பட்டது.   அந்த SDC  கருவியைத் தயாரித்தவர் கொலராடோ பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவரே.  முதன்முதல் அகிலவெளி ஆழத்தில் பணி புரிய அனுப்பப் பட்ட உளவுக் கருவியே அது.   ஓய்வு முடக்கத்தில் விண்கப்பல் பயணம் செய்யும் போது  SDC  கருவி சுயமாய் இயங்கிச் சூரிய மண்டலச் சூழ்வெளியில் தாக்கும் தூசிகளை  எண்ணிக் கணக்கிட்டுப் பில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் பூமிக்கு  அனுப்புகிறது.   பரிதி மண்டலத்தின் அந்தத் தகவல் பிற சூரிய மண்டலத்தின் மர்மங்களை விடுவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    விண்கப்பல் கருவிகள் [SWAP -Solar Wind Around Pluto  &  PEPSSI – Pluto Energetic Particle Spectrometer Science Investigation] 1970 ஆண்டுகளில் அனுப்பப் பட்ட பயோனிர் 10 & 11,  வாயேஜர் 1 & 2 கருவிகளை விட நவீனமானவை,  சிறப்பானவை.  இந்தக் கருவிகள் பயண வழியில் மிதக்கும் சூரிய கதிரியக்க மின்னியல் துகள்களை எண்ணிக் கணக்கிடும்.    விநாடிக்கு 500 கி.மீ. வேகத்தில் (விநாடிக்கு 1 மில்லியன் மைல் வேகம்) வீசும் பரிதியின் புரோட்டான் புயலில் மாதிரி எடுக்கும்.  2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 80 நாட்கள் SDC, SWAP &  PEPSSI  ஆகிய மூன்று கருவிகளும் தகவல் பயிற்சியில் செம்மை யாகத் தகவல் அனுப்பியுள்ளன.

    New Horizon Spaceship

     

    புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோக்கு அப்பால் பயணம்

    1977 ஆம் ஆண்டில் அனுப்பிய இரட்டை வாயேஜர் -1 & -2 விண்கப்பல் களைப் பின்பற்றி 2006 ஜனவரி 19 இல் ஏவப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் (New Horizon Spaceship) முதன்முதல் புளுடோவைக் குறிவைத்து இப்போது பூதக்கோள் வியாழனையும், வளையக் கோள் சனியையும் தாண்டி முக்கால் தூரத்தைக்  கடந்து விட்டது.  2007 பிப்ரவரி 28 இல் வியாழனைச் சுற்றி அதன் ஈர்ப்பாற்றால் உந்தி விண்கப்பல் வேகம் மிகையாகி (Jupiter Flyby Swing) புளுடோவுக்குச் செல்லும் நேரிய பாதையில் திருப்பப் பட்டது.  அப்போது விண்கப்பல் வியாழக் கோளையும் அதன் துணைக் கோள் லோவையும் (Satellite Lo) புது யுக நவீனக் கருவிகள் மூலம் புது விபரங்களை உளவி அனுப்பியது.  நவீன வேக ராக்கெட் வசதிகள் அமைக்கப் பட்ட விண்கப்பல் வியாழனைக் குறுக்கிட 13 மாதங்கள் எடுத்துள்ளது.  விரைவான வேகத்தில் செல்லும் புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவை 2015 ஜூலை 14 ஆம் தேதியில் நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அத்துடன் பயணம் நிறுத்தம் அடையாது முதன்முறை விண்கப்பல் பனி அண்டங்கள் நிரம்பிய குயூப்பர் வளையத்தை (Kuiper Belt) நெருங்கி ஆராயும்.

    Current Location

    2006 ஜனவரி 19 ஆம் தேதி புதுத் தொடுவான் விண்கப்பல் பிளாரிடா கேப் கனாவரல் முனையிலிருந்து அட்லாஸ் -5 முதற்கட்ட ராக்கெட், சென்ட்டூர் இரண்டாம் கட்ட ராக்கெட், ஸ்டார் 48B மூன்றாம் கட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  இதுவரை உந்தப்படாத ஓர் வேக ராக்கெட் விண்கப்பலாகக் கருதப்படுகிறது புதுத் தொடுவான்.  சின்னக் கோள் புளுடோவைக் குறிவைத்து ஏவப்பட்டாலும் திட்டப்படி அது பரிதி மண்டலத்தின் விளிம்பில் கியூப்பர் வளையத்தையும், வால்மீன்கள் வெளிவரும் ஓர்ட் முகில் கோளத்தையும் ஆராயப் போகிறது.  விண்கப்பல் பின்பற்றும் வீதி ‘பரிதி-புவி விடுவிப்புப் பாதை’ (Earth -Solar Escape Trajectory). எனப்படுவது.  விண்கப்பல் உந்தப்பட்ட வேகம் விநாடிக்கு 10 மைல் வீதம் (மணிக்கு 36,370 மைல் வேகம்) (16.3 கி.மீ/விநாடி) (மணிக்கு 58,500 கி.மீ வேகம்) என்று அறியப் படுகிறது.  இந்த வேகத்தில் பயணம் செய்து பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றலில் முடுக்கப்பட்டு புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் (Charon) முதன்முதல் நெருங்கி ஆராயும்.  வியாழக் கோளையும் அதன் துணைக்கோள் லோவையும் (Lo) மெல்லிய வளையங்களையும் இதுவரை உளவிப் புதுத் தகவலை அனுப்பியுள்ளது.  அடுத்து சனிக்கோளின் பாதையை 2008 ஜன் 8 ஆம் தேதி குறுக்கிட்டுக் கடந்து இப்போது யுரேனஸ் நெப்டியூன் கோள்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

    புதுத் தொடுவான் பயணத்தின் குறிக்கோள் என்ன ?

    புதுத் தொடுவான் திட்டம் நிறைவேற 15 ஆண்டுகளுக்கு (2001–2016) ஒதுக்கிய நிதிச் செலவு 650 மில்லியன் டாலர்.  இச்செலவில் விண்கப்பல் கட்டமைப்பு, கருவிகள், ராக்கெட் ஏவல், திட்டக் கண்காணிப்பு, திட்ட இயக்கம், தகவல் ஆய்வுகள், விளம்பரம், பயிற்சி ஆகியவை அடங்கும்.  புதுத் தொடுவான் விண்கப்பல் குறைந்த எடையில் தயாரிப்பாகி வேகமாகச் செல்ல டிசைன் செய்யப்பட்டது.  ஏவப்படும் போது விண் கப்பலின் எடை 478 கி.கி (1054 பவுண்டு). புதுத் தொடுவான் திட்டமிட்ட போது புளுடோ பரிதி மண்டலத்தின் ஒரு கோளாகக் கருதப் பட்டிருந்தது.  சமீபத்தில் அது ஒரு குள்ளக் கோள் (Dwarf Planet) என்று அகில வானியல் ஐக்கியப் பேரவை உறுப்பினரால் (International Astronomical Union) புறக்கணிப்பானது.  இதுவரை செய்த பயணத்தில் விண்கப்பல் பூதக்கோள் வியாழனையும், அதன் துணைக் கோளையும், சனிக் கோளையும் நவீனக் கருவிகளால் ஆராய்ந்துள்ளது.

    அடுத்து 2011 மார்ச்சில் யுரேனஸ் கோள் பாதையைக் கடக்கும்.  அதற்கு அடுத்து 2014 ஆகஸ்டில் நெப்டியூன் கோள் வீதியைத் தாண்டும்.  2015 இல் புளுடோவை நெருங்கியதும், அது புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் உளவித் தகவல் அனுப்பும்.  2015 ஆண்டு ஜூலை 14 இல் புளுடோவைத் தாண்டிச் செல்லும் புதுத் தெடுவான் விண்கப்பல் 5 மாதங்கள் அதையும் அதன் துணைக்கோள் சேரனையும் ஆராயும்.  பிறகு சுமார் 100,000 எண்ணிக்கை யுள்ள குள்ளப் பனிக் கோள் அகிலத்தையும் (Icy Dwarf Worlds) பில்லியன் கணக்கில் இருக்கும் வான்மீன் மந்தை களையும் கொண்ட கியூப்பர் வளையத்தை (Kuiper Belt Globe) விளக்கமாக நோக்கும் !

    பூதக்கோள் வியாழனில் விண்கப்பல் கண்டது என்ன ?

    முதன்முதலில் வியாழனை நோக்கிச் சென்ற கலிலியோ விண்ணுளவி ஆறு ஆண்டுகட்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.  அதற்குப் பூமியால் இருதரம் ஈர்ப்பாற்றல் உந்தும், வெள்ளிக் கோளால் ஒருதர உந்தும் பெற்றது.  அதற்குப் பிறகு சென்ற காஸ்ஸினி விண்ணுளவி வியாழனை அண்ட வெள்ளிக் கோளால் இருமுறை ஈர்ப்பாற்றல் உந்தும், ஒருமுறை பூமியால் ஈர்ப்பாற்றல் உந்தும் பெற்று 3 வருடங்கள் எடுத்தது.  சனிக்கோளை நெருங்க மேலும் மூன்றரை ஆண்டுகளும் எடுத்தது.  ஆனால் வேகமாக உந்தப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் பூமி யிலிருந்து 13 மாதங்களில் (பிப்ரவரி 28, 2007) வியாழனை நெருங்கி ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் புரிந்தது.  அடுத்து 15 மாதங்களில் (ஜூன் 8, 2008) சனிக்கோளைக் கடந்ததும் அடுத்தோர் வரலாற்றுச் சாதனையே.

    வியாழனையும் அதன் நான்கு துணைக் கோள்களையும் விண்கப்பல் நெருங்கும் போது, பூமியிலிருந்து விண்கப்பலின் நவீனக் கருவிகள் ஆராய இயக்கப் பட்டன.  கலிலியோ விண்ணுளவி 2003 இல் ஓய்ந்த பிறகு அடுத்துப் புதுத் தொடுவான் 2007 இல் உளவி புதிய தகவலை அனுப்பியது.  வியாழனில் நிறம் மாறிவரும் ‘செந்நிற வடுவில்’ (Jupiter’s Red Spot) எழும்பும் ஒலிவேகத்தை மிஞ்சும் சூறாவளியை (Supersonic Winds) அளந்து அதன் போக்கை மிக்க விளக்கமாகப் படம் எடுத்தது.  2005 ஆண்டுவரை செந்நிற வடுக்களில் ஒரு வெள்ளை நீள்வட்ட முகில் (White Oval Cloud) தெரிந்தது.  மேலும் வியாழனின் மங்கிய வளையத்தைப் படம் பிடித்தது.  அந்த வட்ட வளைய அமைப்பில் வெகு சமீபத்தில் உண்டான மூன்று தூசிக் கொத்துகளைப் (Clumps of Fine Dust Particles) படம் எடுத்தது.

    Project Details

    வியாழன் துணைக்கோளில் விண்கப்பல் கண்டவை என்ன ?

    புதுத் தொடுவான் விண்கப்பலின் கூரிய காமிரா வியாழனின் எரிமலைத் துணைக்கோள் “லோவை” (Jupiter Moon Lo) சீரிய முறையில் முதன்முதல் ஆராய்ந்து தகவல் அனுப்பியது.  விண்கப்பலின் தொலை நீட்சி உளவுக் காமிரா ‘லோர்ரி படம் பிடிப்பி’ (LORRI – Long Range Reconnaissance Imager) வாஸ்தர் எரிமலைப் புகை கொதித்தெழும் (Tvashtar Volcano) காட்சியை விளக்கமாகப் படம் பிடித்து அனுப்பியது.  அதன் கோரப் புகை முகில் 200 மைல் (320 கி.மீ) உயரத்துக்கு எழுவதைக் காட்டியது.  அத்துடன் புதிய இரண்டு எரிமலைகளின் எழுச்சிகளையும், 20 மேற்பட்ட தளவியல் மாறுபாடுகளையும் கண்டுபிடித்தது.

    புதுத் தொடுவான் விண்கப்பல் பயணத்தில் இரண்டு முக்கிய விஞ்ஞானத் திட்டக் குறிக்கோள்கள் வெற்றி அடைந்தன.  முதலாவது ஓர் அண்டக் கோளின் ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்தி எப்படி நெருங்கிச் சென்று வேகத்தை விரைவாக்குவது என்று பயிற்சி மூலம் செய்தறிந்தது.  அதனால் விண்கப்பலின் வேகம் அதிகரித்துப் பயணக் காலம் குறைந்தது.  இரண்டாவது வியாழனுக்கு அருகில் ஈர்ப்புச் சுழல்வீச்சைப் பயன் படுத்தியதால், பேரளவு சுற்றியக்கச் சக்தியை (Jupiter’s Orbital Energy) விண்கப்பல் களவாடிக் கொள்ள முடிகிறது என்பது அறியப் பட்டது.  அவ்விதம் செய்ததில் பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றல் சுழற்சியால் (Gravitational Slingshot) விண் கப்பலின் வேகம் மணிக்கு 9000 மைல் (150000 கி.மீ/மணி) மிகையானது ! பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் !  வியாழக்கோளின் ஈர்ப்பாற்றல் உந்துசக்தி களவாடப் படவில்லை யென்றால் விண்கப்பல் புளுடோவை அண்ட மூன்று ஆண்டுகள் இன்னும் அதிகமாய் எடுக்கும் !

    (தொடரும்)

    படங்கள்:  Astronomy Magazine, BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html(Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html(Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html (Uranus & Neptune)

    d)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=41005231&format=html(Voyager 1 & 2 Travel Beyond the Solar System.

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 2005)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)

    7.  NASA Report – Pluto-Bound New Horizon Spacecraft Sees Changes in Jupiter System (September 10, 2007)

    8.  Wikipedia Report : New Horizons Spacecraft (May 26, 2010)

    9.  Astronomy Magazine :  How We Will Explore Pluto ?  NASA’s New Horizon Probe By : Richard Talcott (July 2010)

    10.  Pluto-Bound NASA Spacecraft to Collect More Data When Hibernating During Travel  (July 9, 2012)

    11.  Outer Planets :  New Horizons Doing Science in its Sleep (July 10, 2012)

    12.  http://www.decodedscience.com/new-horizons-nasas-pluto-bound-spacecraft-keeps-going-going/39941  [December 4, 2013]

    13. http://www.redorbit.com/news/space/1113047356/new-horizons-approaching-pluto-011514/  [January 13, 2014]

    14.  www.dailygalaxy.com/my_weblog/2014/01/the-unexplored-planet-nasas-fastest-spaceship-on-approach-to-pluto-1.html?  [January 18, 2014]

    14 a.  http://www.davidreneke.com/hubble-to-search-beyond-pluto-for-a-new-horizons-target/#  [June 20, 2014]

    15. http://www.planetary.org/blogs/emily-lakdawalla/2015/02041311-new-horizons-returns-first.html  [February 4, 2015]

    16.  http://blogs.scientificamerican.com/observations/2015/03/06/dawn-spacecraft-arrives-at-ceres-becomes-first-to-orbit-a-dwarf-planet/  [March 6, 2015]

    17. http://www.nasa.gov/newhorizons/homes-on-pluto/  [March 10, 2015]

    18.  http://www.nytimes.com/interactive/2015/01/13/science/space/photos-of-pluto-from-nasa-new-horizons.html?_r=0   [March 11, 2015]

    19. http://en.wikipedia.org/wiki/New_Horizons, [March 24, 2015]

    20.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/03/naming-the-mysterious-features-of-pluto-and-charon-an-open-invitation-to-the-world-community.html?  [March 24, 2015]

    21.  https://briankoberlein.com/2015/06/05/dance-of-the-moon/  [June 5, 2015]

    22.  http://earthsky.org/space/plutos-moons-tumble-in-chaotic-dance  [June 4, 2015]

    23.  http://www.spacetelescope.org/news/heic1512/  [June 3, 2015]

    24.  https://earthsky.org/space/plutos-moons-tumble-in-chaotic-dance  [June 4, 2015]

    25.  http://www.space.com/29559-pluto-moons-weird-orbit-chaos.html  [June 3, 2015]

    26.  http://www.windows2universe.org/pluto/binary_planet.html

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) June 6, 2015

    Attachments area
    Preview YouTube video Animation of the chaotic spin of Pluto’s moon Nix

    Animation of the chaotic spin of Pluto’s moon Nix

    Preview YouTube video Planetary Exploration, Passport to Pluto, Charon and the Kuiper Belt Trans-Neptunian Region

    Planetary Exploration, Passport to Pluto, Charon and the Kuiper Belt Trans-Neptunian Region

    Preview YouTube video Pluto the “Dwarf Planet” HD

    Pluto the “Dwarf Planet” HD

    Preview YouTube video Pluto on the Horizon: Anticipating our First Encounter with the Double Planet

    Pluto on the Horizon: Anticipating our First Encounter with the Double Planet

    Preview YouTube video Launch of NASA’s New Horizons Spacecraft

    Launch of NASA’s New Horizons Spacecraft

    Preview YouTube video ScienceCasts: Countdown to Pluto

    ScienceCasts: Countdown to Pluto

    Preview YouTube video Dr. Alan Stern: “New Horizons to Planet Pluto: Exploring the Frontier of Our Solar System”

    Dr. Alan Stern: “New Horizons to Planet Pluto: Exploring the Frontier of Our Solar System”
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    “கேசவ் கிழித்திடும் கோட்டுக்குள் கோகுல,
    வாசன் கிருஷ்ணனிவன், வாழு(ம்)இதி, -ஹாஸனவன்:
    அன்னையின் தாம்புக்(கு) அகப்பட்டோன், கட்டுண்டான்
    வண்ணமாய் கான்வாஸ் வஸம்”….கிரேசி மோகன்….

    Share
  • தேகமும் யோகமும் (10)

    கவியோகி வேதம்

    yoga21

    சரி. இந்த சபல மனத்தை எப்படி வழிக்குக்கொணர்வது? நான் பதில் சொல்கிறேன்.

    அது உங்களிடம்தான் உள்ளது. ஆம்! வேறு யாரும் உங்களைச் சபலப்படுத்த முடியாது! ஒரு பாடல் உங்கள் நினைவுக்கு வரவில்லையா?

    “தன்னை (நற்குணத்தில்) நிலைநிறுத்துவானும்,இல்லை தன்னைக் கீழே கொண்டுபோவானும், பிறகு ஒருவேளை, மேலே மேலே தன்னை மேம்படுத்துவானும் தானே”. இது ஒரு ‘நல்ல’ பழமொழியின் அறிவுறுத்தல்.

    நீங்கள் இடம் கொடுத்தால்தானே அவர்கள் மடத்தைப்பிடுங்குவார்கள். வைராக்யம் வேண்டும் ஸ்வாமி. வைராக்யம்! அதாவது நெஞ்சுறுதி! நீங்கள் பிறரது மெஸ்மெரிஸ வார்த்தைக்குச் சற்றும் இடம் கொடுக்காதீர்கள். .. “இந்த  விஷயத்தில் நான் என் இஷ்டப்படி தான் ஒரு நல்ல முடிவை எடுப்பேன். எனக்கென்று ஒரு தனிக்கொள்கை., அதாவது நல்ல கொள்கைஉண்டு,” என்று பிடிவாதமாக எப்போதும் இருங்கள். ஒருபோதும் எந்தச் சபலத்திற்கும், நப்பாசைக்கும் ஆட்படாதிருங்கள். பிறகு யார் உங்களை, எப்படி வளைத்துவிடமுடியும்?

    இன்னொன்று! எந்த நேரம் ஆயினும் ‘அவர் சொன்னார் இவர் சொன்னார்’ ஐயோ! என்னால் அவர்சொல்படி நடக்கமுடியலையே, நேரம் ஆகிறதே, குறிப்பிட்ட நேரத்திற்குள் என்னால் வேகமாகச் செயல்பட முடியலையே என்றெல்லாம் மனத்தைப்போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்.

    எப்போதும் இயல்பாக இருங்கள்.அமைதியுடனும், நிதானமாக அதேநேரம் காலம் அறிந்து அதற்குள் செயல்படுவதும் நிச்சயம் உங்களால் முடியும். ஒரு உண்மையான உதாரணம் சொல்லவா!

    எனக்குத்தெரிந்த ஒரு வயதான அம்மா இருந்தாள். கமலா மாமி என்று பெயர். 82 வயது. யார் என்ன சொன்னாலும் அவள் ‘அப்ஸெட்’… அதாவது கலங்கிவிடமாட்டாள். பதட்டமே இல்லாமல் எப்போதும் செயல்படுவாள். சிக்கல் ஒன்று திடீர்என வந்தாலும் இனி அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதிலேயே குறியாயிருப்பாள். எதனால் இச்சிக்கல், தடை வந்தது என குழம்பமாட்டாள். மனத்தைப்போட்டுக் கசக்கமாட்டாள். அவளிடமிருந்து பல விஷயங்களை நான் கற்றேன். அவளிடம் நானும் என் தம்பியும் “எப்படி மாமி! எப்பவும் உங்களால் நிதானமாக, அதேசமயம் சொன்ன நேரத்திற்குள் எல்லாம் முடிக்கமுடிகிறது?” என்று கேட்டோம். அவள் டக்கென்று உடனே ஒரு பதில் சொன்னாளே பார்ப்போம்!

    ‘அதாவது கண்ணா! நான் ராத்திரி ராத்திரி ஒரு குழந்தையாய் மாறிவிடுவேன். அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்’.

    எங்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. “புரியலையே மாமி”என்றோம். அவள் நிதானமாகச் சொன்னாள்.

    பகல் பூராவும் என் கணவர்க்காகவும், மற்ற மகன்கள், மகள்கள், பேரப்பசங்கள் இவர்களுக்காகவும் உழைத்து என்னால் முடிந்ததை ஈஸ்வர அர்ப்பணமாக, அதாவது என் ஸ்வாமி கண்ணனுக்காகத்தான் அவ்வளவும் செய்கின்றேன் என்று மனத்தில் சங்கல்பம் பண்ணிக்கொண்டு மகிழ்ச்சியுடன் செய்வேன். அதனால் எனக்குக் களைப்பே தெரிவதில்லை.

    பிறகு ராத்திரி நேரம் ஒரு மணிநேரம் கண்ணன் படம் முன்பு உட்கார்ந்து, அமைதியாகத் தியானம் செய்வேன். அப்போது கண்ணா! நான் பகலில் எனக்கு வந்த கவலைகள், திடீர்ச்சிக்கல்கள், குழப்பங்கள் யாவையும் இப்போது உன் பாதங்களில் வைத்துவிட்டேன். இனி உன்பாடு. அதன்பாடு! எதுவும் என்னோடது இல்லை. உன் பிரச்னைகளாகத்தான் அவைகளைக் கருதுகிறேன். ஆகவே நீதான் நாளை அவற்றுக்கு ஒரு நல்ல முடிவு கண்டுதரணும். சரியா கண்ணா? என்பேன். அவனும் சரி என்று தலையாட்டுவான். (அது நிச்சயம் என் மன(உள்)க் கண்ணுக்குத்தான் தெரியும்!).

    ஏதாவது சொல்லி பிறரை நான் புண்படுத்தியிருந்தால் என் கண்ணனிடமே இரவு மன்னிப்புக் கேட்டுவிடுவேன். புண்பட்டவர் சார்பில் தீவிரப் பிரார்த்தனையும் செய்வேன். என் பாரம் குறையும். என்னை அறியாமல் உடனே என் கண்ணனிடமிருந்து சில்லென ஒரு தென்றல் வந்து மனத்துள் பரவும். அவன் என்னைச் சட்டெனத் தழுவுவதுபோல் ஒரு காட்சி விரியும். என் கண்ணில் நீர் துளிர்க்கும்! பின் எப்படி எனக்கு டென்ஷனோ, பரபரப்போ வரும்? சொல்லுங்கள் என் கண்மணிகளா! என்பாள்.

    கேட்கிற எங்களுக்கு மயிர்க்கூச்சல் எடுக்கும். தினசரி நாங்கள் அவளைச் சீண்டினாலும் பதறாமல் இப்படியே பரவசமாய் ஒரு பதில் சொல்வாள். இந்த மாமி மாதிரி நாம் அனைவரும் இருக்க முயலவேண்டும்; பிரார்த்தனை செய்யவேண்டும். அந்த அம்மா சொன்னபிறகு அலுவலகத்தில் நான் யார் எனக்கு என்ன நெருக்கடி கொடுத்தாலும், இவர்களுக்காக மட்டுமின்றி யான் என் குருநாதர்(பாபாஜி)க்காகவே எல்லாம் செய்கின்றேன் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டேன். அதன்பிறகு என் உள்ளத்தில் மகிழ்ச்சியே நிலவியது.

    எந்தச் சிக்கலுக்கும் உடனுக்குடன் யார் மூலமாவது விடையும் கிடைத்தது. இதுதான் உண்மை. இப்படியே நடந்துகொண்டு யான் எந்த டென்ஷனையும் தவிர்த்துவிட்டேன். பின் எதற்காக நாம் இங்கே வாழ்கிறோம்? வீணாய் டென்ஷனில் ஆட்பட்டு, இருக்கிற கொஞ்சநஞ்சம் சக்தியையும் இழப்பதற்கா? நீங்களே சொல்லுங்கள்! இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் இளைஞர்க்குக்கூட டென்ஷன் என்கிற மனோவியாதி(!) வந்துவிடுகிறது.

    இதைக் களைய வழியை அன்றே அர்ஜுனன் மூலம் கண்ணன் நமக்குச் சொன்னான். “அர்ஜுனா! பிறரைக் கொல்லப் போவதும், தான் ஜெயிக்கப்போவதும் என்ற எண்ணம் எல்லாம் நானே விளைவிக்கின்றேன். நீ இதை ஒரு பெரியச் சுமையாகக் கருதிக்கவலைப்படாதே! எல்லாவற்றையும் என்னிடம் விட்டுவிட்டு நீ அமைதியாகச் செயல்படு. நான் உன் கூடவே எப்போதும் இருக்கும்போது நீ வீணாக ஏன் மனத்தைக்குழப்பிக்கொள்கிறாய்.” இதன் பிறகே அர்ஜுனன் மனத்தெளிவடைந்து தன் கடமையைச் சரியாகச் செய்யமுயன்றான். என்பது வரலாறு.

    ஆகவே நாமும் எது செய்தாலும் நம் ஆண்டவனே என்னைக் கருவியாகக் கொண்டு செயல்படவைக்கிறான் என்ற திண்ணமான மனம் கொண்டால் ஒருவித ஹார்ட் அட்டாக்கும் நமக்கு வரவே வராது. சரிதானா அன்பர்களே?

    தொடரும்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    சித்தாறாய் ஓடுது, சீமைப் பசுவுக்காய்,
    கித்தாரில் கந்தர்வ கானமாய்: -பெத்தாளே
    கத்தாழை போலுன்னை!, கண்ணன் திருவடியில்,
    வெத்தாளாய், பூவாய் விழு  ….கிரேசி மோகன்….

    Share