குறளின் கதிர்களாய்…(75)
-செண்பக ஜெகதீசன்
நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். (திருக்குறள்-334: நிலையாமை)
புதுக் கவிதையில்…
காலம் என்பது
கடந்திடும் நாட்களே,
நிலையா நாளின்
நிலையறிந்து
வாழவேண்டும் மனிதன்
உண்மை அறிந்தோர்
உரைப்பர்
உயிரறுக்கும் வாள்தான்
நாள் என்று!
குறும்பாவில்…
நிலையானதல்ல நாளென்பது,
அறிந்தோர் அறிவர்
அது வாழ்வறுக்கும் வாளென!
மரபுக் கவிதையில்…
நின்று காலம் நிலைப்பதில்லை
நிலத்து மாந்தர் வாழ்க்கையிலே,
சென்று கொண்டே யிருந்தாலும்
செல்வது காலக் கூறல்ல,
தின்றிடும் உந்தன் வாழ்நாளைத்
தீரச் சுவைத்திடும் உயிரினையே,
நின்றது வாளாய் உயிரறுக்கும்
நாலும் அறிந்தவர் கூற்றிதுவே!
லிமரைக்கூ…
வாழ்வினில் வந்துபோகும் காலமது நாள்,
கருதுவர் இதையே நன்கறிந்தோர்
மண்ணில் மாந்தரின் உயிரறுக்கும் வாள்!
கிராமிய பாணியில்…
நாளுநாளு நல்லநாளு
காலங்காலமா வாறநாளு,
காலக்கணக்கா வாறநாளு
கடந்துபோவும் இந்தநாளு..
தெரிஞ்சிக்க தெரிஞ்சிக்க
உண்மயத்தான் தெரிஞ்சிக்க,
தெனமும்வாற நாளிதுதான்
நம்ம
உசிர அறுக்க வாளிதுதான்,
நெலயேயில்லா ஒலகத்தில
நெலயநீயும் தெரிஞ்சிக்க…
நாளுநாளு நல்லநாளு
உசுர அறுக்க நல்லவாளு…!