Blog

  • அந்தணன் என பாரதியார் அறிவித்த சான்றோர்

    தஞ்சை வெ.கோபாலன்.

     

    வேதபுரம் என்று மகாகவி பாரதியாரால் அழைக்கப்படும் புதுவையில் வசித்தவர் கனகலிங்கம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அந்த கனகலிங்கத்தின்பால் பாரதிக்கு மிகுந்த அன்பு உண்டு. பொதுவாகவே அந்தக் காலத்தில் மிகவும் சமூக நிந்தனைக்குட்பட்டிருந்த இந்த வகுப்பினர்பால் பாரதிக்கு மிகுந்த அக்கறை உண்டு. அவர் எழுதுகிறார்:–

    “அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி, நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக் கொடு. கிணறு வெட்டிக் கொடு. ஸமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை யெல்லாம் ஒன்று சேர்த்து இந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டை செட்டிமார்களே! இந்த விஷயத்தில் நீங்கள் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயந்தரக்கூடிய கைங்கர்யம் தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமான கைங்கரியம்.”

    இந்த கனகலிங்கம் நாகலிங்கம் எனும் வள்ளுவப் பண்டாரத்தைத் தன் கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். பாரதியார் இந்தக் நாகலிங்கத்தைப் பற்றிச் சொல்லும்போது “எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் சிநேகம். அவனுடைய கோயில் அம்மன் மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன்.* (“தேசமுத்துமாரி” எனும் பாட்டு). அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கும் வருவதுண்டு.” இப்படி பாரதியார் எழுதுகிறார்.

    பாரதியாரின் இரண்டாவது பெண் சகுந்தலா “என் தந்தை” எனும் நூலொன்று எழுதியிருக்கிறார். அதில் அவர் எழுதுவ்தாவது: “புதுவையை அடுத்துள்ள உப்பளத்தில் ‘தேசமுத்து மாரியம்மன் கோயில்’ என ஒரு மாரியம்மன் கோயில் உண்டு. அதில் ஒரு வள்ளுவ இளைஞன் பூஜை செய்து வந்தான். ‘அவன் தேவி பூஜை செய்கிறான். பிராமணத் தொழில் நடத்துகிறான்’ என்று என் தந்தை அவனுக்கு வேத முறைப்படி பூணூல் போட்டு வைத்தார். அந்தத் தேச முத்துமாரியம்மன் பேரில் ஒரு பாட்டு எழுதினார்.
    ‘ஒருவன் தன் செய்கையினாலும், தர்மத்தினாலுமே தனது ஜாதிக்கு உரியவனாகிறான், பிறவியினாலல்ல’ என்பதே என் தந்தையாரின் கருத்து. அதை ஞான ரதத்தில் கண்வ ரிஷிகள் உபதேச மூலமாகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.”

    கனகலிங்கம் மகாகவி பாரதியாரை “எனது குருநாதர்” என்று அழைத்து அதே தலைப்பில் ஒரு நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். கனகலிங்கத்துக்குப் பாரதியார் மீது ஏன் அப்படியொரு பற்று, பாசம், பக்தி? அதைச் சற்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாமே!

    கனகலிங்கம் பாரதியார் வீட்டுக்கு அடிக்கடிப் போகும் வழக்கம் உண்டு; அது தவிர கடற்கரை சாலையில் உலாவும் போதும் அவரை அடிக்கடி சந்தித்திருக்கிறார். பாரதியாருடன் எப்படியாவது உரையாட வேண்டும் எனும் அவா அவருக்கு இருந்தது. அவர் விரும்பியபடி பாரதியோடு பழகும் சந்தர்ப்பமும் அமைந்தது. அப்படி அவரோடு பழகப் பழக அவருடைய மனவோட்டங்களும் தன்னுடையதும் ஒத்துப் போவதை கனகலிங்கம் உணரத் தொடங்கினார். அவர் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றி கனகலிங்கம் சொல்லும்போது, அவர் தான் எழுதிய புதிய ஆத்திசூடி வாக்கியங்களுக்கேற்ப நடப்பார் என்கிறார். அதாவது;

    ஏறுபோல் நட
    குன்றென நிமிர்ந்து நில்
    கோல் கைக்கொண்டு வாழ்

    இவைகளை அவர் சரியாகவே கடைப்பிடித்தார். சொன்னதைச் செய்யும் செயல் வீரர் பாரதியார் என்கிறார் கனகலிங்கம். அவரிடம் தான் ஏதேனும் உபதேசம் பெற்றுக் கொள்ள விரும்புவதாக கனகலிங்கம் சொன்னபோது பாரதி அவருக்கு பூணூல் போட்டுவைக்க உத்தேசித்திருப்பதாகவும், இப்போது வசதியில்லை என்பதால் பின்பொருமுறை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவருக்கு சந்தியாவந்தனம், காயத்ரி மந்திரம் ஆகியவைகளைச் சொல்லிக் கொடுத்தார். குருநாதர் சொல்லித் தந்தபடி கனகலிங்கமும் தினமும் மும்முறை சந்தியாவந்தனமும், காயத்ரி மந்திர உச்சாடனமும் செய்து வந்தார்.

    பாரதி சொல்லியிருந்தபடி ஒருநாள் கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவிக்கும் நாளை முடிவு செய்து ஏற்பாடுகள் நடந்தன. அதிகாலை எழுந்திருந்து நீராடிவிட்டு சுத்தமான உடைகளை அணிந்துகொண்டு தன் வீட்டுக்கு வரச்சொன்னார் கனகலிங்கத்தை. சட்டை போட்டுக் கொள்ள வேண்டாமென்றும் அறிவுறுத்தினார். அவர் சொன்னபடி, சொன்ன நேரத்தில் அவர் சொன்ன கோலத்தில் கனகலிங்கம் பாரதியாரின் வீட்டை அடைகிறார். அங்கே பலரும், குறிப்பாக பாரதியாரின் நண்பர்கள் கூடியிருந்தார்கள். வ.வெ.சு.ஐயர், மண்டையம் சீனிவாசாச்சாரியார், நாகசாமி, குவளை கிருஷ்ணமாச்சாரியார், கோவிந்தராஜுலு நாயுடு ஆகியோர் இருந்தனர். கனகலிங்கம் வந்திருந்த பெரியோர்களை நமஸ்கரிக்க அவர்கள் இவரை வாழ்த்தினர்.

    வ.வெ.சு.ஐயர் “நேரமாகிறது, சீக்கிரம் ஆகட்டும்!” என்று குரல் கொடுக்க பாரதியார் தானும் பிரம்மோபதேசம் செய்விப்பவர் இருக்கவேண்டிய கோலத்தில், நெற்றியில் குங்கும திலகத்தோடு அங்கு வந்து சேர்ந்தார். சுவற்றில் லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகியோர் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அந்தப் படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. படங்களின் அடியில் ஒரு பிச்சுவா கத்தி; அதற்கும் படங்களுக்கும் பாரதி குங்குமப் பொட்டிட்டு வணங்கினார். பின்னர் பராசக்தியைப் பணிந்து போற்றி பாடல்களைப் பாடினார்.

    bharathi screenshotபின்னர், கனகலிங்கத்தை கிழக்கு திசை பார்த்து உட்காரச் சொல்லிவிட்டு அவருக்கு நெற்றியிலும் மார்பிலும் திருநீறு பூசினார். பின்னர் அவரைக் குத்துக்காலிட்டு உட்காரச் சொல்லி கையில் பூணூலைக் கொடுத்து யக்ஜோபவீததாரண மந்திரங்களைச் சொல்லி அவரையும் சொல்லச் செய்தார். பின்னர் கையில் மேலும் கீழுமாய்ப் பிடித்திருந்த பூணூலை முதலில் கழுத்தில் மாலை போல போட்டுக் கொண்டு, பின்னர் வலம் போட்டுக் கொள்ளச் செய்தார். பின்னர் அவர் காதில் காயத்ரி மந்திரத்தை மூன்று முறை உபதேசம் செய்தார்.

    கனகலிங்கம் எழுந்து பாரதியாரின் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்தார். உடனே பாரதி கம்பீரமான குரலில், “இன்று முதல் நீ பிராமணன்!” என்று உரத்த குரலில் சொன்னார். “இனி யாராவது உன்னிடம் நீ என்ன ஜாதி என்று கேட்டால், நான் பிராமணன் என்று தைரியமாகச் சொல்லு!” என்றும் கட்டளையிட்டார்.

    “அப்படியொருவன் ஆகமுடியுமா என்று யாராவது உன்னிடம் கேட்டால்; எனக்குத் தெரியாது, என் குரு பாரதியிடம் கேளுங்கள்!” என்று பதில் சொல் என்றார். உள்ளூர் காரர்கள் யாராவது இது பற்றித் தன்னிடம் கேட்பார்கள் என்று பாரதி எதிர்பார்த்தார்; ஆனால் என்ன காரணமோ எவரும் கேட்கவில்லை. ஆனால், ஈஸ்வரன் தர்மராஜா வீதியில் வசித்து வந்த மணிலாகொட்டை வியாபாரி ஒருவர் மட்டும் “பாரதி புதுச்சேரியைக் கெடுக்க வந்திருக்கிறான்” என்று தனக்குள் முணுமுணுப்பாகச் சொல்லிக் கொண்டிருந்தாராம்.

    பாரதியார் கனகலிங்கத்துக்கு மட்டுமல்ல, இன்னொருவருக்கும் இதுபோல உபநயனம் செய்து வைத்தார். அவர் நாகலிங்கம் என்பார். இவர் புதுச்சேரி உப்பளம் பகுதியில் இருக்கும் முத்துமாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்தவர். இவர் ஒரு முறை கனகலிங்கத்தை அணுகி, அவரிடம் இவ்வூரில் பாரதியார் யாரோ ஒரு ஹரிஜனப் பையனுக்கு பூணூல் அணிவித்தாராமே, அது பற்றி தெரியுமா? என்று கேட்டார். அந்தச் சிறுவன் தான்தான் என்று கனகலிங்கம் சொன்னார்.

    அதற்கு நாகலிங்கம் தனக்கும் அதுபோல செய்து கொள்ள வேண்டுமென்றும், பாரதியாரிடம் சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டு தான் முத்துமாரியம்மனுக்குச் செய்யும் அர்ச்சனை முறையாக செய்ய அது உதவும் என்றும் சொல்லியிருக்கிறார். கனகலிங்கமும் நாகலிங்கத்தை அழைத்துக் கொண்டு போய் பாரதியாரிடம் அறிமுகம் செய்து வைத்து, அவருடைய விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் பாரதியைப் பார்த்த நாகலிங்கம் இவர் என்ன ஒரு பித்தரைப் போல இருக்கிறாரே என்றதற்கு, கனகலிங்கம், அவர் பித்தரா சித்தரா என்பதை நீயே புரிந்து கொள்வாய் என்றாராம்.

    பாரதியார் நாகலிங்கத்துக்கு வாக்களித்திருந்தபடி ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 4 மணிக்கு அவரைத் தன் வீட்டுக்குவரச் சொன்னார். அவர் வந்ததும், அவரைப் பார்த்து “வாரும், வாரும், குருக்களே!” என்று நாகலிங்கம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பூஜைகள் செய்துவருவதைக் குறிக்கும் வகையில் குருக்களே என்று அழைத்தார். பிறகு முறைப்படி நாகலிங்கத்துக்கும் பாரதியார் பூணூல் அணிவித்து, பிரம்மோபதேசம் செய்து வைத்து அனுப்பியிருக்கிறார்.

    இது குறித்து வ.ரா. பாரதியிடம் கேட்டதற்கு, அவன் செய்யும் அந்தணத் தொழிலுக்கு அவன் பூணூல் அணிய வேண்டும் என்று சொன்னார். பாரதியாருக்குப் பூணூல் இல்லை என்பதை மனதில் எண்ணிக் கொண்டு வ.ரா.சிரிக்கவே, அந்தக் கேலிச் சிரிப்பைப் புரிந்து கொண்டு பாரதியார், “என்ன ஓய்! அவன் செய்யும் தொழிலுக்கு பூணூல் தேவை; நானோ ஊரறிந்த பார்ப்பான், எனக்கு எதற்கு?” என்றாராம். இதனை வ.ரா.வே தன்னுடைய நூலில் பதிவு செய்திருக்கிறார்.

    தஞ்சை வெ.கோபாலன்,
    இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
    திருவையாறு பாரதி இயக்கம், திருவையாறு.
    #9486741885

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ஏனோ ஜெயகாந்தனின் ”கோடுகளைத் தாண்டாத கோலங்கள்” நினைவுக்கு வந்தது….

    crazy

    ”கோடுகளைத் தாண்டாமல், கோலத்தில் குந்தினான்,
    மாடுகளை மேய்க்கும் மணிவண்ணன், -ஏடிலிதை,
    சொல்லக் கவியிலையே, சித்திரமே பாடுது
    கொள்ளைக் கனியமுதைக் கேள்”….கிரேசி மோகன்….

    Share
  • தலை தீபாவளிக்கு வரும் நாச்சாமியே! வருக! வருக!….

    கிரேசி மோகன்

    ———————————————————————-
    (விகடனில் வெளியான சிறுகதை)….
    ———————————————-

    நமது கதாநாயகன் நாராயணசாமி என்கிற நாச்சாமி, ஒரு பிறவி சங்கோஜி. ஆம்பளையாகப் பிறந்து தொலைத்த தோஷ்த்துக்காக, நாச்சாமிக்குக் கதாநாயகன் அந்தஸ்து கொடுக்க வேண்டியதாகிறது. மற்றபடி குணாதிசயங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நாச்சாமிக்கும், படிதாண்டாப் பத்தினிக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை கோடி தேறும். அதீதமான கூச்சத்தால் நாச்சாமிக்கு அர்த்தமில்லாத பயங்கள். பல்லி, கரப்பில் ஆரம்பித்து, சிறுவயதில் சாதம் ஊட்ட அம்மா ‘பூச்சாண்டி’ என்று காண்பித்த பால்கார கோனார்வரை யாரைப் பார்த்தாலும் பயம். பயத்தின் பக்கவிளைவாக அல்பமான சந்தேகங்கள். வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் தந்தையின் நண்பா இன்ஸ்பெக்டர் பாஷ்யம், ஜஸ்டிஸ் சதாசிவம், தாயோடு வம்பளக்க வரும் காசி பாட்டி – இவர்களில் யாரோ ஒருவர் முகமூடிக் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது நாச்சாமியின் சந்தேகமான நம்பிக்கை.

    குறிப்பாக, காசி பாட்டியின் பேரில் அவனுக்கு எப்போதும் ஒரு கண். காரணம், ‘பாட்டிக்குக் க்காசி என்னும் ஆம்பளைப் பெயர் எப்படி வந்தது? ஒருவேளை புனைபெயரில் கொள்ளையடித்த்துப் பாட்டி தப்பிவிடப் பார்க்கிறாளோ…?’- இப்படிப் பல கேள்விகளில் மூழ்கிக் கிடந்த நாச்சாமி, பாட்டி மண்டையைப் போடும்வரை அவளைப் பூலான்தேவியாகப் பாவித்து வந்தான்.

    கூச்சம், பயம், சந்தேகம் போதாதென்று, பத்தாத குறைக்குப் பவளக்கொடியாக நாச்சாமிக்கு அந்தக் கால லேடீஸ் ஸ்பெஷல் அயிட்டங்களான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற நால்வகைக் குணங்களும் அவ்வப்போது நபும்சகத்தனமாக வந்து வந்து போகும்.

    ஆனால், நாச்சாமியை நேருக்கு நேர் சந்திப்பது என்பது லஞ்சம் வாங்காத ஆபீஸ், சுலபமான எல்.கே.ஜி. அட்மிஷன், பத்தே நிமிடத்தில் புடவை செலக்ட் செய்யும் பெண்மணி, விலைவாசி குறைப்பு போன்ற சாத்தியப்படாத, நம்பமுடியாத சமாசாரங்களுக்குச் சமமான ஒன்றாகும். சுபாவத்திலேயே சங்கோஜியாக இருப்பதால் நாலு பேரைச் சந்திக்க திராணியில்லாத கூச்ச நாச்சாமி எப்போதும் பாண்டவர்களைப் போல் அஞ்ஞாதவாசத்தில் இருப்பது வழக்கம். பத்து மணி ஆபீஸுக்கு விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்து முதல் பஸ் பிடித்துச் சென்று மாலை ஐந்து மணிக்கு ஆபீஸ் விட்டதும் பொறுமையாகக் காத்திருந்து ஆள் நடமாட்டம் குறைந்து ஊர் அடங்கியதும் இரவு பத்து மணி கடைசி பஸ் பிடித்து வருவான்.

    நாச்சாமியின் முன்பு நாம் போய் நின்று, “உங்க பேர் என்ன?” என்று கேட்டால் போதும், அவ்வளவுதான்… நாச்சாமிக்கு வாய் உலர்ந்து, வெளிநாக்கு ஒட்டிக்கொண்டு, உள்நாக்கு உதிர்ந்து போய்விடும். ‘கேட்ட கேள்விக்குப் பதிலை நாராயணாசாமி என்று சொல்வதா? நாச்சாமி என்று சொல்வதா? என்ற குழப்பத்தில் தடுமாறி முடிவாக “நாயசாயிநாயாமி” என்று சைனீஷ் ஓட்டல் பாதார்த்தத்தின் பெயர் போல் எதாவது உளறிக் கொட்டுவான்.

    பல ஜாதகங்கள் பொருந்தி வந்தும் பெண்பார்க்கவெட்கப்பட்டதால், நாச்சாமியின் கல்யாணம் குததிராமலேயே இருந்தது. முடிவில் நாச்சாமியின் விருப்பதுக்கிணங்க பெண்பார்க்கும் படலம் பிள்ளைபார்க்கும் படலமாக சிலபஸ் மாற… குடவாசல் பெரிய பண்ணையார் சங்கரனின் மகள் ஜானகி வந்து நாச்சாமியைப் பார்த்து “பிள்ளை பிடித்திருக்கிறது” என்று தைரியமாகக் கூற, நாச்சாமி தனது ஆயுசிலேயே முதல் முறையாகத் தைரியத்தோடு வீரமாக வெட்கப்பட்டான்!

    கும்பலைக் கூட்ட விரும்பாத நாச்சாமியின் கொள்கைக்கு ஏற்ப அவனுடைய கல்யாணம் சிம்பிளாக ஒரு கோயிலில் கெட்டி மேளச்சத்தம்கூட இல்லாமல் அடக்கி வாசிக்கப்பட்டது. பந்தல் போட்டுக் குடவாசலில் ஐந்து நாள் கல்யாணம் நடத்த நினைத்த பெரியபண்ணை சங்கரனுக்கு இதில் மிகவும் வருத்தம்.

    திருமணமான ஒரு மாதத்தில் நாச்சாமிக்கு தலைத்தீபாவளி வந்தது. இந்த ஒரு மாதத்தில் புதிதாகக் கல்யாணமான பெண்னுக்கே உரிய வெட்கததில் இருந்த ஜானகி, கணவன் நாச்சாமியின் கூச்ச வெட்க சுபாவத்தைக் கவனிக்கத் தவறி விட்டாள். கல்யாணத்தில் விட்ட குறையைத் தலைத்தீபாவளியில் தீர்த்துக் கொள்ளும்படி தந்தைக்கு ஜானகி ரகசியமாகக் கடிதம் எழுதியது நாச்சாமிக்குத் தெரியாது.

    மனைவியை முதலிலேயே குடவாசல் அனுப்பி, மூன்று நாள் லீவு போட்டு விட்டு, வருகிற ஆபத்து தெரியாமல் தலைதீபாவளிக்குப் புறப்பட்டான் நாச்சாமி.

    ரயிலை விட்டுக் கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்கிய நாச்சாமியை வருவேற்க, மாமனார் பெரிய பண்ணை சங்கரன் வந்திருந்தார்.

    மாப்பிள்ளையைக் கண்ட சந்தோஷத்தில் சங்கரன், நாச்சாமியின் முதுகில் செல்லமாக ஒரு கோட்டை அறை அறைந்து “என்ன மாப்பிள்ளை, சௌக்கியமா…? என்று குசலம் விசாரித்தார். வெட்கத்தால் சிவக்கும் நாச்சாமியின் முகம் முதன்முறையாக ஆத்திரத்தால் ரத்தவிளாறியாகச் சிவந்தது. ஏதோ சொல்ல ஆரம்பித்தவனைப் பேச விடாமல் மறுபடி மாப்பிள்ளை முதுகில் ஒரு கோட்டை அறை (இம்முறை அறையில் கோட்டையோடு கொத்தளமும் இருந்தது…) அறைந்து, “ஒண்ணும் பேசாதீங்க… கல்யாணத்தைத்தான் சிம்பிளா நடத்தச் சொல்லி ஏமாத்திட்டீங்க… இப்போ தலைதீபவளிக்கு வசமா மாட்டிகிட்டீங்க… உங்களை விடப் போறதில்லை…” என்று கரகரத்த குரலில் பிளிறினார்.

    ஆரம்பமே சரியில்லை என்று பயப்பட ஆரம்பித்த நாச்சாமி, மாமனாரைப் பார்த்து “கொஞ்சம் இருங்க… அந்த ஸ்டேஷன்ல உள்ள கும்பல் கலையட்டும்” என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்… சங்கரன் பிரளய கால இடியோசை போல் சிரிக்க ஆரம்பித்தார். அந்தச் சிரிப்பு சத்தத்தில் செங்கோட்டை பாஸஞ்சர் சென்றதே தெரியவில்லை.

    “மாப்பிள்ளை… அந்தக் கும்பல் போகாது… உங்களை வரவேற்க நான் வரவழைச்ச கும்பல், நம்ம ஊர் ஜனங்க… நீங்க இங்கேயிருந்து குடவாசல் போய்ச் சேரும்வரை உங்க கூடவே வருவாங்க… என்று கூறிவிட்டு, கும்பலை பார்த்து விநோதமாக சமிக்ஞை காட்ட, “எங்க ஊர் மாப்பிள்ளை நாராயணசாமி என்னும் நாச்சாமி… வாழ்க, வாழக…” என்று கும்பல் மும்முறை கோரஸாகக் கூவியது.

    “என்ன இதுக்கே இப்படி அசந்து போயிட்டீங்களே… ஸ்டேஷனை விட்டு வெளில வந்தா ஆடிப் போயிடப் போறீங்க..” என்று சங்கரன் கூற, அப்போது கும்பலிலிருந்து ஒருவன் ஆளுயர ஈரமான ரோஜா மாலையயை நாச்சாமிக்கும் போட்டு அவனைச் சொட்டச் சொட்ட நனைய வைத்தான்.

    செட்டப் கும்பலைத் தாண்டி வெளியே செல்லும் சமயம் பலர் நாச்சாமியிடம் ஆட்டோகிராப் கேட்டு, குறிப்பாக ‘நாச்சாமி’ என்று கையெழுத்திடக் கெஞ்சிக் கூத்தாடி அவன் மேல் விழுந்து அவனைப் பணிவாகத் துவம்சம் செய்தார்கள்.

    கும்பலில் ரோஜாக்கள் போக, கழுத்தில் நாரோடு நாச்சாமி .வெளியே வந்தான். மறுபடி பிரளய கால இடியோசை, மாமனாரின் கைதட்டல், இம்முறை ஒரு யானை வந்து நாச்சாமிக்கு யானை உயர மாலை போட்டு அவன் சிரசில் தும்பிக் கையால் தொட்டு ஆசீர்வதித்தது.

    பல்லி, கரப்புக்கே பயப்படும் நாச்சாமி, யானையப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன் மாமனார் சங்கரன், யானைப் பாகனை பார்த்துச் சத்தமாக ஒரு சிக்னல் கொடுக்க… யானை நச்சாமியை அலக்காகத் தூக்கி அங்கு நிறுத்தப்பட்ட டாப் கழற்றிய ஓபன் ஜீப்பில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நிறுத்தியது. ‘மாப்பிள்ளை எவ்வழி மாமனார் அவ்வழி’ என்பது போல், சங்கரன் யனைக்கருகே போய் நிற்க, யானை சற்று மூச்சைப் பிடித்து அவரைத் தூக்கி நாச்சாமி அருகில் நிற்க வைத்தது.

    ‘கல்யாணத்தில் பார்த்த மாமனார் தானா, இல்லை காடுவாசிகளின் தலைவனா?’ என்று சந்தேகம் நாச்சாமியின் மனத்தில் தோன்றியது. ‘அடுத்த அயிட்டம் என்ன கண்றாவியோ?’ என்ற பயம் நாச்சாமியின் அடிவயிற்றைப் புரட்டியது.

    ஜீப்பில் பொருத்தப்பட்ட மைக்கில் மாமனார் ஒன், டூ, த்ரீ என்று கிட்டத்தட்ட நூறுவரை எண்ணி, மைக் டெஸ்ட் செய்து விட்டு, கூடியிருந்த ஜனங்களுக்கு நாச்சாமியியை தான் மாப்பிள்ளையாக அடைந்த விவரத்தை (ஜாதகம் பார்த்ததில் ஆரம்பித்து தாலி கட்டும் வரை) ஒன்றுவிடாமல் கூறி… தனது மாப்பிள்ளைக்கு செய்த சீர்செனத்தி பாத்திரம் பண்டங்களை வரிசையாக கூற… ஒவ்வொன்றுக்கும் கூடியிருந்த குடவாசல் ஜனத்தொகை கைதட்டி, விசிலடித்து, ஊளையிட்டுத் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துக் கொண்டது.

    பிறகு சங்கரன், நாச்சாமியியை ‘மாதம் மும்மாரி பொழிகிறதா?’ என்ற பாவனையில் ஒரு ராஜபார்வை பார்த்துவிட்டு, “உம்… ஊர்வலம் தொடங்கட்டும்” என்று மைக்கை முழுங்காத குறையாக, அதைக் கடித்துக் குதறிக் கர்ஜித்தார்.

    ஆமை வேகத்தில் ஜீப் நகர ஆரம்பித்தது. ஜீப்புக்கு முன்பு கரகாட்டம், பொய்க்கால் குதிரை, குடவாசல் சார்பட்டா பரம்பரையின் சிலம்பு வீச்சு போன்றவை தோன்றி, நத்தை வேகத்தில் நகர ஆரம்பித்தன.

    நாச்சாமி நரக வேதனையாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சமயம்… ஜீப்பில் ஒருவன் தாவி ஏறி, நாச்சாமி தலையில் நாலணா வைத்தான். அடுத்த கணம் ஒரு புலி வேஷக்காரன் சும்ம்ர்சால்ட் அடித்து ஜீப்பைத் தாண்டிச் தலையில் தனக்குக்தானே குட்டிக் கொண்டான். வீளம்பரங்களில் தலைவலி தைலம் தடவிய மறுகணமே ‘போயே போச்…போயிந்தே…!’ என்று புளகாங்கிதம் அடைபவரின் பிரகாசம் நாச்சாமியின் முகத்தில் திடீரென்று அழகாக ஒளி வீசியது.

    மறுநாள் காலை… சாதாரணமாக ரயிலில் செல்லும்போது எல்லோரும் கம்பார்ட்மெண்டை விட்டு இறங்கி விட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு கிட்டத்தட்ட கம்பார்ட்மெண்டைக் கமுவும் சமயம் இறங்கும் நாச்சாமி அன்று எக்மோரை நெருங்கும் முன்பே விடிகாலையில் மேல் பர்த்திலிருந்து ஒரு சம்மர் சால்ட் அடித்துக் கிழே குதித்து … ஒடும் ரயிலிலிருந்து பிளாட்பாரத்துக்கு போர்ட்டர்களே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்குத் தாவி இறங்கி ஒடிச் சென்று வண்டிக்கு முன்பே ஸ்டேஷனில் நுழைந்து அதே வண்டியில் தன்னோடு வந்த ஜானகியை வரவேற்கக் காத்திருந்தான்.

    ஜானகி எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காமல் பெட்டி படுக்கை போன்ற லக்கேஜி களை போர்ட்டருக்குச் சமமாக நாச்சாமி தன் தலையில் அடுக்கிக் கொண்டு பாலன்ஸ் செய்து போனதை ஸ்டேஷனே ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தபடி பார்த்தது.

    டாக்ஸியைக் கூப்பிட நாச்சாமி அடித்த காட்டுத்தனமான விசில் சத்தத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    விட்டுக்கு வந்தவுடன் டாக்ஸியிலிருந்து இறங்கி” நான் வந்தாச்சு!” என்று உற்சாகத்துடன் அவன் போட்ட காட்டுத் கத்தல், தெரு ஜனங்கள் காதுகளைக் கிழிக்க டி.வி.மகாபாரதத்தையும் மறந்து எல்லோரும் வெளியே வந்து வேடிக்கை பார்த்தார்கள்.

    முன்பெல்லாம் பல் தேய்க்கக்கூட பாத்ரூம் கதவைக் தாழிட்டுக் கொள்ளும் நாச்சாமி இப்போது குளிப்பதே வீட்டு வாசல் திண்ணையில் தான். அதுவும் சனிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் என்றால் கேட்கவே வேண்டாம் உடம்பிலும் தலையிலும் தடவிய எண்ணெய் ஊறும் வரை மார்க்கெட், மளிகைக்கடை போன்ற பொது இடங்களுக்கு இடுப்பில் கட்டிய ஒற்றை டவலோடு போய் விடுவான்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே, தா அம் தர வாரா நோய்

     

    ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
    மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
    தோஓ முடைய தொடங்குவார்க் கில்லையே
    தாஅம் தரவாரா நோய்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்,
    மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;-
    தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே,
    தா அம் தர வாரா நோய்.

    பொருள் விளக்கம்:
    ஆம் இச்செயல் எனக்கு எளிது என்று உலகை ஆண்ட மாவலி மன்னன், தனக்குத் துணையாக நின்று ‘மூன்றடி நிலத்தை கொடையாகக் கொடுக்க வேண்டாம்’ என்று குரு சுக்கிரன் கூறிய அறிவுரையை மதிக்காது, செருக்குடன் வாமனனுக்கு நீர் ஊற்றித் தாரை வார்த்துக் கொடுத்து அனைத்தையும் இழந்தான். (அது போல) தவறான காரியங்களை செய்யத் தொடங்குபவருக்கு, தமக்குத் தாமே வரவழைத்துக் கொள்ளும் துன்பம் போன்று வேறொன்று இல்லை.

    பழமொழி சொல்லும் பாடம்: ஆராயாது தவறான காரியங்களைச் செய்யத் தொடங்குபவர் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொள்வார். இக்கருத்து மாவலி மன்னனின் செயல் பற்றிய புராணக் கதை கொண்டு விளக்கப்படுகிறது. இதனை வள்ளுவர்,

    கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
    முடிந்தாலும் பீழை தரும். (குறள்: 658)

    ஆகாதவை என விலக்கப்பட்டச் செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு தொடர்ந்து செய்பவர்களுக்கு அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும் என்று கூறுகிறார்.

    “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனார் கூற்றை இன்றும் மறவாதவர் இல்லை. இக்காலத்தில் “சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது” என தமக்குத் தாமே துன்பத்தை வரவழைத்துக் கொள்ளும் செயல் பரவலாக அறியப்படுகிறது. இப்பழமொழியை ஒத்த ஆங்கிலப் பழமொழிகள் “Shoot oneself in the foot”, “A man may cause his own dog to bite him” ஆகியன.

    “தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே, தா அம் தர வாரா நோய்” என்பது பழமொழி என்று கூறும் உரை நூல்களும் உள்ளன. “ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன் மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்” என்ற மாவலியின் செயலை பழமொழியாக மா. இராசமாணிக்கனார் தனது உரையில் காட்டுகிறார்.

    Share
  • தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்

    மு​னைவர் சி.​சேதுராமன்.

    தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது. தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது. தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது. தமிழகத்தின் பண்டைக்கால வரலாற்றைச் சான்றுகளுடன் அறிய உதவும் பேரேடு இது எனக் கூறலாம். ஒரு மொழியில்முதலில் தோன்றியது இலக்கியம் அதனை அடியொற்றி அமைவது இலக்கணம்.

    ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ என்ற பவணந்தியாரின் கூற்று இதனைப் புலப்படுத்தும். தொல்காப்பியர் ஒரு பெரும் இலக்கண நூலை இயற்றி விதிகள் வகுக்க வேண்டுமெனின் தமிழ்கூறு நல்லுலகத்தில் அதற்குமுன்னரே எண்ணற்ற தமிழ் நூல்கள் இருந்திருக்க வேண்டும். அன்றியும் அவ்விலக்கியங்கட்குப் பலர் இலக்கண நூல்கள்எழுதியிருந்தனர் என்பதைத் தொல்காப்பியர் என்ப, ​மொழிப, என்மனார், புலவர் என்பன போன்ற ​சொற்களால் சுட்டுவதுகொண்டு அறியலாம். எல்லாவற்றிற்கும் மேலாகப் பாயிரம் எழுதிய பனம்பாரனாரே.

    “முந்து நூல்கண்டு மறைப்பட எண்ணிப்
    புலந்தொகுத்தோன்”
    என்று கூறிவிட்டதால் இது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாதலறியலாம். தொல்காப்பியர் மரபியலில் உயிர் மரபுக​ளைப் பற்றித் ​தெளிவாக அறிவியல் அறிஞர்களும் வியக்கும் வண்ணம் பல ​செய்திக​ளை எடுத்து​ரைத்துள்ளார்.

    மரபு – விளக்கம்:
    த​லைமு​றை த​லைமு​றையாக (பரம்ப​ரை பரம்ப​ரையாக) வழி வழியாக வரும் மு​றை​மை பற்றிக் கூறும் பகுதி​யை எடுத்து​ரைப்ப​தே மரபியலாகும். உயர்ந்​தோர் கூறும் வழக்கால் மரபு ​தோன்றுகிறது. உயர்ந்தவர்க​ளே வழக்கத்​தை உருவாக்குகின்றனர். அத​னைச் ​செயற்படுத்துகின்றனர். அதனால்தான் ​தொல்காப்பியர்

    “வழக்​கெனப் படுவது உயர்ந்​தோர் ​மேற்​றே
    நிகழ்ச்சி அவர் கட்டுஆகலான”(592)
    என்று குறிப்பிடுகின்றார்.

    மரபியல்:
    ஒல்காப் புகழ்பெற்ற தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணத்தினை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல்,பொருளியல், மரபியல் என ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளார். ஒன்பது இயல்களுள் ஒன்றான மரபியல் உணர்த்தும் செய்திகள் தொகுத்துத்தரப்பட்டுள்ளன.

    மரபு என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஆன்றோர் வழங்கிய சொற்களை அவர்கள் வழங்கிய முறைப்படியே கூறுவது ஆகும். இத்தகையமரபினைப் பற்றி கிளவியாக்கத்தில் கூறப்பட்டுள்ளது. யானை மேய்ப்பவனை பாகன் என்றும், ஆடு மேய்ப்பவனை இடையன் என்றும் கூறுவதேமரபு ஆகும். இவற்றை மாற்றிக் கூறினால் அது மரபு வழுவாகக் கருதப்படுகிறது.

    செய்யுளிலும் செய்யுளுக்கு உறுப்பாகக் கூறப்பட்டவற்றுள்ளும் (​செய்யுளுக்கு யாப்பியல் வ​கையால் அ​மைந்த உறுப்புகள் இருபத்தாறு. அம்​மை, அழகு, என வரும் எட்டும் ​சேர்த்து ​செய்யுளுக்கும் ​செய்யுள் ​தொகுதிகளுக்கும் உறுப்பாகும்) ஒரு வகை மரபுஇவ்வியலில் கூறப்பட்டுள்ளது. ​மேலும் செய்யுள் வழக்கிற்குப் பொதுவாகிய வேறு சில மரபுகளும் மரபியலில் கூறப்பட்டுள்ளன. உயர்திணை, அஃறிணை என்னும் இருவகைத் திணைகளைச் சார்ந்த பொருள்களின் இளமை, ஆண்மை, பெண்மை ஆகியவை பற்றிய மரபும், அஃறிணைப்பொருள்களாகிய புல், மரம் ஆகியவை பற்றிய மரபும் கூறப்பட்டுள்ளன.

    மரபியல் சூத்திரங்களை இளம்பூரணர் 112 ஆகவும், பேராசிரியர் 110 ஆகவும் மேற்கொண்டுள்ளனர். மக்கள் தாமேஆறறிவுயிரே (1532) எனத் தொடங்கும் நூற்பாவையடுத்து ஒருசார் விலங்கும் உளவெளன மொழிப என்ற நூற்பா இளம்பூரணர் உரையில் காணப்படுகிறது. இந்நூற்பாவுடன் ஒத்த கருத்துடைய நூற்பா போராசிரியர் உரையில் காணப்படவில்லை.

    நூற்பாவின் அடிகளைப் பிரித்தும் சேர்த்தும் பொருள் கொள்வதனால் எண்ணிக்கையில் வேறுபாடு காணப்படுகிறதே ஒழியப் புது நூற்பாக்கள் உரைகளில் கிடையாது. உலகில் உள்ள உயிர்க​ளின் மரபுக​ளை அறுவ​கை உயிர்ப்பாகுபாடுகளில் உள்ளடக்கித் ​தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தாவர இனம், விலங்கினம், மக்கள் இனம் உள்ளிட்டவற்றிற்குரிய மரபுக​ளையும் ​தொல்காப்பியர் மரபியலில் ​தெளிவுறுத்தியுள்ளார்.

    அறுவகை உயிர்ப்பாகுபாடு:
    தொல்காப்பியர் இளமைப் பெயரில் உயிர்பாகுபாடுப் பற்றி கூறுகையில், ஓரறிவுயிர் என்னும் உயிர்ப் பாகுபாடுஅதிகாரப்பட்டமையால் அதனொடு பொருந்த உலகத்துப் பல்லுயிர்களையும் ​ அறுவகையாக 8 நூற்பாக்களில் வகைப்படுத்திக்கூறியுள்ளார்.

    மரபியலில் மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளால் பற்றப்படும் ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலிஆகிய புலன்களுடன் மன உணர்வினையும் சேர்த்து, உயிரினங்களைத் தொல்காப்பியனார் ஆறுவகையினாற் பிரித்துள்ளார்.

    அறுவ​கை உயிர்க​ளைத் ​தொல்காப்பியர்,

    “ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே,
    இரண்டறிவதுவே அதனொடு நாவே
    மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
    நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே
    ஆறறிவதுவே அவற்றொடு மனனே!
    நேரிதின் உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
    என்று கூறியுள்ளார்.

    உடம்பால் மட்டும் அறிவன ஓரறிவு உயிர்கள் ஆகும். உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவு உயிர்கள் ஆகும். உடம்பு, நா, மூக்கு மூன்றாலும் அறிவன மூ அறிவு உயிர்கள் ஆகும். உடம்பு, நா, மூக்கு, கண் இ​வை நான்காலும் அறிவன நாலறிவு உயிர்கள் ஆகும். உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காது இ​வை ஐந்தால் அறிவன ஐந்தறிவு உயிர்கள் ஆகும். இவ்​வைந்​தோடு மனத்தாலும் அறியும் அறிவு​டையன ஆறறிவு உயிர்கள் ஆகும் என்று ​தெளிவாக அறிந்​தோர் ​நெறிமு​றையாக உணர்த்தியுள்ளனர் என்று ​தொல்காப்பியர் ​மொழிகின்றார்.

    உணர்வுகள் படிப்படியே தோன்றும் வளர்ச்சி நிலை​க​ளை அடிப்ப​டையாக ​வைத்துக் ​கொண்டு உயிர்களை இவ்வாறு ஆறு பிரிவுகளாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார். இம்மரபியலில் உயர்தி​ணைச் சாதிகள் நான்கனைப் பற்றியும் உத்திமுதலியன பற்றியும் கூறப்பட்டுள்ளன. இவ்வியலில் தொல்காப்பியனார் சில பெயர்களுக்கு மட்டும் மரபு வரையறைகூறியுள்ளார். தொல்காப்பியர் சுருக்கமாக வரையறுத்துக் கூறுவதற்குத் தகுந்தவாறு அமைந்த பெயர் மரபுகளை மட்டும்எடுத்துக்கூறி. விரிந்த நிலையில் வரும் மரபுடையவற்றைப் பொது விதிகளால் கொள்ள வைத்தார் என்பது தெரிகிறது.

    தாவர மரபு:
    இறைவன் படைப்பின் விந்தையைச் சிந்திந்தால் சிந்தனைக்கோர் அளவில்லை. ஓரறிவு உடைய மரஞ்செடி கொடிகள் முதல் ஆறறிவுபடைத்த மனிதன் வரை தொல்காப்பியத் திருநூலில் உலாவரக் காண்கிறோம். ஏன்? தேவர்களும், அசுரர்களும், இயக்கர்களும், கந்தர்வர்களுங்கூட இந்நூலில் இடம் பிடித்துள்ளனர். தேவர்களினும் மனிதனும் உயர்ந்த நிலையில் ஒளிர்வதாக ஆன்மிகச் செல்வர்கள் இயம்புவர். காரணம்தேவர்கள் நல்வினைப் பயன்களை மட்டுமே துய்ப்பவர். அழியா நிதியாகிய வீடுபேறு மனிதப் பிறவி ஒன்றால் மட்டுமே அடையமுடியும். இருவினை அகற்றி, மும்மலமறுத்து, நாற்பேறும் பெற்றுய்ய இடம் தருவது மானிடப்பிறவியே. தொடு உணர்ச்சி ஒன்றே கொண்ட இயற்கையின்இரகசியமாகத் தாவரங்கள் திகழ்கின்றன.

    ஓரறிவு உயிர்:
    உடம்பால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள். புல், மரம், ​செடி, ​கொடிகள், தாவர இனங்கள் அ​னைத்தும் இதில் அடங்கும். இத​னைத் ​தொல்காப்பியர்,

    “புல்லும்மரனும் ஓர் அறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே” (1527)
    என்று குறிப்பிடுகின்றார்.

    புல்லும் மரமும்:
    புல் என்றவுடன் அறுகம்புல், கோரைப்புல் என்பன நம் மனக் கண்ணில் தோன்றும். தென்னையோ, பனையோ மரம் என்று மயங்குவோம். தொல்காப்பியர் கருத்துப்படி தென்னை, பனை, பாக்கு, மூங்கில், வாழை, போல்வன மரங்கள் ஆகா. அவை புல் இன வகையைச்சேர்ந்தனவே, புல்லுக்கும், மரத்திற்கும் வேற்றுமையை புலப்படுத்தும் தொல்காப்பியனார் கருத்துகளை சிந்திக்க வேண்டாமா?

    “புறக் காழனவே புல்லெனப் படுமே
    அகக் காழனவே மரமெனப் படுமே”

    என்பவை தொல்காப்பியர் நூற்பாக்கள், உள்ளே வைரம்பாய்ந்த உள்வயிர்ப்புடையவற்றையே மரம் எனக் கருதுகிறார் ஒல்காப்புமை தொல்காப்பியனார். புல்லின் தன்மையும்சற்றே விரிவாக இயம்பியுள்ளார் தொல்காப்பியனார்.

    “தோடே மடலே ஓலை என்றா
    ஏடே இதலே பாளை என்றா
    ஈர்க்கு குலையே நேர்ந்தன பிறவும்
    புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்”

    தோடு, மடல், ஓ​லை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலைகளை உடையவை புல் இனத்தில் பாற்படும். இதனால் வாழை, தென்னை, ஈச்சை, பனைமரங்கள் மட்டுமின்றி தாமரை, கழுநீர் போன்ற நீர்வாழ் தாவரங்களும் புல் இன வகையைச் சாரும் என உணரலாம். புறவயிர்ப்பும், உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரன. இவ்வகைப்பட்ட உறுப்பு பெயருடையதாகி இவையும் புல்லெனப்படும்எனப்பகர்ந்து வாழை, ஈந்து, தாமரை, கழுநீர் என்பனவற்றை எடுத்துக்காட்டாக இயம்புகிறார் இளம்பூரணர்.

    மரத்தின் உறுப்புகளைத் தொல்காப்பியர் நூலின் வழிக் காண்பதும் சாலச் சிறந்தது. ​தொல்காப்பியர்,

    “இலையே முறிவே தளிரே தோடே
    சினையே குழையே பூவே அரும்பே
    நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்
    மரனொடு வரூ உம் கிளவி என்ப.”

    மரவ​கை உறுப்புகளாகக் குறிப்பிடுகிறார். இ​லை, முறி, தளிர், ​கோடு, சி​னை, கு​ழை, பூ, அரும்பு, ந​னை இ​வை ​போன்றன மரங்களின் உறுப்புகளாகும்.

    புல்லுக்கும் மரத்திற்கும் ​பொதுவாக உள்ள உறுப்புக​ளை,

    “காயே பழமே தோலே செதிளே
    வீழோ டென்றாங் கவையும் அன்ன”

    என்று ​தொல்காப்பியர் எடுத்து​ரைக்கின்றார். காய், பழம், ​தோல், ​செதில், விழுது ​போன்ற​வை புல்லுக்கும், மரத்திற்கும் ​பொதுவான​வையாகும்.
    இதற்கு உரையாசிரியர் தரும் சில விளக்கங்களை ஈண்டு நம் சிந்தனைக்கு கொணர்வது மிகப் ​பொருத்தமு​டையதாக இருக்கும்.

    புறவயிர்ப்பும், உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரன இவ்வுறுப்புப் பெயர் உடையதாகி மரமெனப்படும் என்று கூறி முருக்குதணக்கு என்பனவற்றை உதாரணங் காட்டுகிறார். தாழை பூ உடைத்தாகலானும், கோடுடைத் தாகலானும், புறவயிர்ப்பின்மையானும்மரமெனப்படுமாயினும் புல் என்றல் பெரும்பான்மை என்று கூறுவதும் நம் சிந்தனைக்குரியது.

    “புறக்காழன எனவே அவ்வழி வெளிறென்பது அறியப்படும். அவை பனையும், தெங்கும், கமுகும் முதலாயின புல் எனப்படும். இங்ஙனம்வரையறை கூறிப்பயந்த தென்னை? புறத்தும், அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பின்றியும், அதில் மரம் போல்வன இடையிடை பொய்பட்டும்புல்லும் மரமும் வருவன உள” என்று பேராசிரியர் பகர்கின்றார்.

    திணைப் பாகுபாட்டில் தாவரங்கள்:
    தொல்காப்பியர் நிலம் வகுத்த பாங்கே (முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல், பாலை) தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவாழ்வைக் காட்டுகிறது. மரம், செடி, கொடிகளால் திணைப்பெயர் வகுத்த ஆசிரியர் கருப்பொருளில் உணவு (உணா) மரம் போல்வனவற்றையும்இயம்புகிறார் பூ முதலியவற்றையு சிந்திக்கச் செய்கிறார்.

    “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
    செய்த யாழின் பகுதியோடு தொகை இ
    அவ்வகைப் பிறவும் கருயெவன மொழிப”

    புறத்திணையில்,
    “வெட்சி தானே குறஞ்சியது புறனே
    காஞ்சி தானே பெருந்திணைப் புறனே”

    “வாகை தானே பாலையது புறனே
    காஞ்சி தானே பெருந்திணைப் புறனே”

    வெட்சி, தும்மை, வாகை, காஞ்சி போன்ற மலர்களின் சிறப்பினைச் சிந்தனையில் தேக்குகிறார். இவை மட்டுமா?

    போரிடை மலர்கள்:
    மன்னர்கள் அடையாளம் கருதித் தம்முள் அறம் நிறை அரும்போர் புரிந்த வரலாற்றை இன்றைய அறிவியல் உலக அழிவுப் போரோடுஒப்பிட்டால் நெஞ்சங்குமுறும்,

    “வேந்திடை உறுபகை தெரிதல் வேண்டி
    ஏந்துபுகழ்ப் போந்தை வேம்பே ஆரென வரூஉம்
    மாபெரும் தானையர் மலைந்த பூவும்”

    என்ற நூற்பாவின் தொடரால் போந்தை, வேம்பு, ஆத்தி மலர்களின் அரும்புகழையும், அவற்றைப் புனையும் வேந்தரையும் புனைவதற்கான காரணத்தையும் இயம்புவது நம் சிந்தனைக்கு உரியது.

    ஓரறிவு உயிர்க்கு மனம் உண்டா?
    ஒன்று முதல் ஐந்து ஈறாகிய பொறியுணர்வு மனமின்றியும் பிறப்பனபோல வேறு கூறியது என்னை யெனின் ஓரறி உயிர்க்கு மனம்இன்மையின் அங்ஙனம் கூறுனார் என்பார் போராசிரியர். இக்கருத்து அறிவியறிஞர்கள் மேலும் சிந்திக்க இடம் கொடுக்கிறது. ஊனமும், செவிடும், குருடும் என அவயவத்தான் குறைவுபட்டாரை குறைந்த வகை அறிந்து அவ்வப்பிறப்பினுள் சேர்த்துக் கொள்க என்ற போராசிரியர் உரைஆய்வுக்கு உரியது.

    அறிவியல் அறிஞர் J.C போஸ் போன்றவர்கள் ஆய்வும், சித்தர்கள் சிந்தனையும், தொட்டால் சிணுங்கி போன்ற தாவரங்களின்செயல்பாடும் சிந்தித்தால் ஒரறிவு உயிர்க்கும் மனம் உண்டென உறுதியாக நம்பலாம். தொல்காப்பியர் ஆறாம் உயிரே பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே” என்ற நூற்பா வழங்கியுள்ளது ஒன்று முதல் ஐயறிவு உடைய உயிர்களுக்கு மனம் இல்ல என்று உறுதிப்படுத்துவதாகத்தோன்றலாம்.

    மனம் இருப்பது வேறு, மனம் செயல்படுவது வேறு. சிந்திக்கும் மனப்பாங்கு, நல்லது கெட்டது ஆயும் திறன், எதிர்கால விளைவை அறியும்பாங்கு மனிதர்க்கு உரியது என்று மட்டுமே கொள்ளல் தரும். ஆறாம் அறிவாகிய மன அறிவு படைத்த நாம் சிந்தித்துத் தெளிந்து உண்மைப்பொருளை உள்ளத்தால் பற்றிப்பிடித்து அதனில் கரைந்தது போதலே வாழ்வின் முழுப்பயன் என்று உணர்தல் ​வேண்டும். தொல்காப்பியத்துள்கோட்டுப் பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ நான்கும் இடம் பெற்றுள்ளன.

    செயற்கை வாழ்வில் முற்றும் திழைத்து இயற்கையை வேர் அறுக்க முயலும் இக்காலத்தில் தொல்காப்பிய முனிவர் வாழ்ந்தபழங்காலத்தில் மக்கள் யாவரும் இயற்கை வாழ்வில் ஒன்றி நுண்மாண்நுழைபுலமும், சிந்தனைச் செல்வமும், சீரிய வாழ்வும் கொண்டுசிறப்புற்று விளங்கினர் என்றால் மிகையாகாது.

    சொல் வேறு, செயல் வேறாய் வாழும் நாம் எல்லா உயிர்க்கும் பசிப்பிணியும், உடற்பணியும் உளப்பிணியும் தீர்த்து ஆன்ம தாகத்தைத்தணிக்கும் மரம், செடி, கொடி, வகைகளைப் போற்றிப் காப்பது நமது கட​மையாகும்.

    ஊர்வன, பூச்சியினங்கள்:
    “நந்தும் முரளும் ஈர்அறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே”(1528)

    என்று ​தொல்காப்பியர் ஈரறிவு உயிர்க​ளைப் பற்றி குறிப்பிடுகிறார். இ​வை ஊர்வனவாகும். நத்​தைடூ முரள் என்ற மீன் வ​கை, சிப்பி, கடல்வாழ் உயிரினங்களில் சில இரண்டறிவு உயிரினங்களாகும். இ​வை கடலில் ஊர்ந்து வாழ்வன.

    மூவறிவு ​கொண்ட​வை:
    மூவறிவு ​கொண்ட உயிரினங்க​ளை,

    “சிதலும் எறும்பும் மூவறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே” (1529)

    என்று ​தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். க​றையான், எறும்பு இ​வை ​போன்ற இனங்கள் தொடு உணர்ச்சி, நா உணர்ச்சி, மூக்குணர்ச்சி மூன்றும் கொண்டன.

    நாலறிவு ​கொண்ட​வை:
    “வண்டும் தும்பியும் நான்கறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே”(1530)

    என்று நாலறிவு உயிர்க​ளைப் பற்றித் ​தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். வண்டு, தும்பி, இவற்றின் இனங்கள், ​தொடு உணர்வு, நா உணர்வு, மூக்குணர்வு, இவற்றொடு கட்புலன் உணர்வும் பெற்றுத் திகழ்வன.

    ஐந்தறிவு ​கொண்ட​வை:
    விலங்கினங்கள் அ​னைத்தும், மனிதர்களில் விலங்குளாய் இருப்​போரும் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்தறிவு உ​டைய உயிர்களாவர். இத​னை,

    “மாவும் மாக்களும் ஐயறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே” (1531)

    என்று ​தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

    மக்களினம்:
    “மக்கள் தாமே ஆறறிவினவே” என்று அறுதியிட்டுப் பேசும் தொல்காப்பியனார் “பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே “எனத் தேவர், அசுரர், இயக்கர் முதலான பிறவிகளையும் தழுவிக்கொள்கிறார்.

    இவர்கள் மட்டுமோ ஆறறிவு படைத்தவர்கள். மனிதனின் ஆணவத்திற்கு முற்றுப் புள்ளி ​வைக்கிறார் தொல்காப்பியனார் “ஒரு சார்விலங்கும் உளவென மொழிப,” கிளியும், குரங்கும் யானையுங் கூட ஆறறிவு கொண்டவை” என்கிறார் உரையாசிரியர். இந்தியத் திருநாட்டின்அறிவியல் அறிஞர் நோபல் பரிசு பெற்ற பெருந்தகை ​ஜெகதீஸ்சந்திர​போஸ் இத்தகு ஒரறிவு படைத்த உயிர்களை ஆராய்ந்து அவற்றின்பெருமையை உலகிற்கு உணர்த்தியவர், இசை கேட்டு உருகும் தன்மையும் கொண்டவை தாவரங்கள் என்று இன்றைய அறிவியல் உலகம்ஏற்றுக்கொண்டுள்ளது.

    தொல்காப்பியர் குறிப்பிடும் உயிர் மரபுகள் குறித்த ​செய்திகள் இன்றுள்ள அறிவியல் அறிஞர்க​ளும் வியப்புறு வண்ணம் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கதாகும். ​தொல்காப்பியரின் மரபியல் உயிர்களின் பரிணாம வளர்ச்சி​யை எடுத்து​ரைக்கும் இயலாகவும் அ​மைந்துள்ளது. பல்லுயிரின வளர்ச்சி​யையும் அவற்​றை அழிக்காது பாதுகாக்கும் சமுதாயப் ​பொறுப்புணர்​வையும் ​தொல்காப்பியர் மரபியல் வழி நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி (தன்.,), புதுக்​கோட்​டை.
    E.mail: Malar.sethu@gmail.com

     

    Share
  • பறவையே எங்கிருக்கிறாய்?

    கவிஜி.

    ஜன்னலோரம் இருந்த அந்தக் கட்டிலில் அவன் அமர்ந்திருந்தான். ஏதோ யோசனை! அவன் முகம் தெளிவாய் இருந்தது முடிவெடுத்த பின் சாகத் துணியும் தற்கொலைக்காரன் போல, முடிவெடுத்த பின் கொலை செய்யத் துணிந்த போர் வீரன் போல, தெளிவான மனநிலைக்குள் குழப்பத்தை தேடுபவன் போல. சற்று நேரத்தில் அவன் இதழ் மெல்ல விரிந்தது. அவன் ஜன்னலை உற்று நோக்கினான். ஏதோ சட சட, தட தடவென ஒரு சத்தம். அது கேட்டதினால் தான் அந்த சிரிப்பு உதிர்ந்திருக்க வேண்டும்.

    “என்ன வந்திட்டியா பறவை”,என்றான், இரு புருவங்களையும் உயர்த்தியபடி.

    அதே தட தட, சட சட சத்தம் ஜன்னலுக்கு பின்னால் கேட்டது. கேட்டுக் கொண்டே இருந்தது. ஆம், வந்து விட்டது அந்தப் பெயர் தெரியாத பறவை. ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான், தன் காதுகளை கூர்மையாக்கி. அறையெங்கும் ஒரு வித சூடு பரவியிருந்தது. அது அவனுள் எந்தவித முக மாற்றத்தையும், உடல் மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவன் பார்வை ஆங்காங்கே நிலை குத்தி நின்று கொண்டிருந்தது.

    ” ஆமா பறவை. உன் பேர் என்ன? எத்தன தடவ கேட்டாலும் நீ சொல்ல மாட்டேங்கற ம்..ம்… சரி விடு இப்ப, பேரா முக்கியம். வாழணும் அதுதான் முக்கியம்”

    “நான் உன்னப் பத்தி யாருட்ட சொன்னாலும், என்னை பைத்தியக்காரன்னு சொல்றாங்க பறவை” என்று சட்டென நிறுத்தினான்.

    மெல்ல தலையை இடது புறம் தூக்கி ஜன்னலைப் பார்த்தான். கொஞ்சம் திறந்திருந்த ஜன்னலில் எவ்வித அசைவும் இல்லை. பறவை கவனத்தோடு கேட்டுக் கொண்டிருப்பதாக உணர்ந்தான் புன்னகைத்துக் கொண்டான்.

    “சரி விடு பறவை நான் பைத்தியமாவே இருந்துட்டுப் போறேன். இங்க எல்லாருமே, தான் பைத்தியம் இல்லங்கறத நிரூபிக்கத்தான் வாழறாங்க. ஆனா, நீயும் நானும் வாழ்றதுனால பைத்தியமா இருந்தா இருந்துட்டுப் போலாமே” என்று சொல்லி சிரித்தான். பின், அவனே தொடர்ந்தான் …

    “ஆமா பறவை . நீ உயரமா பறக்கும் போது என்ன நினைப்ப? நாங்கெல்லாம் உயரமா பறக்கும் போது, உயிர் போகாம கீழ வரணும்னுதான் நினைப்போம். ஆனா நீ வரம் வாங்கின உயிர் ஆச்சே உனக்கு உன் மனசுதான் உயரம். இல்ல!,” என்று சொல்லி அமைதியானான். நன்றாக சுவரில் சாய்ந்து கொண்டு, இரு கால்களையும் குத்த வைத்து அமர்ந்து கொண்டான்

    “பறவை. ஹலோ பறவை என்ன இருக்கியா? “என்றான் ஜன்னலைப் பார்த்தபடி.

    அதே பட பட, சட சட சத்தம்.

    “அதானே. என்னைப் புரிஞ்சுக்கற அழகான ஜீவனாச்சே நீ. நீயா என்ன விட்டு போவ?”

    “நீ ஒண்ணும் கவலைப் படாத பறவை. இந்த மனுஷங்க, எப்பவுமே உன்னை புரிஞ்சுக்க மாட்டாங்க. உனக்காக செலவு செய்ய அவுங்ககிட்ட நேரம் இல்ல. ஏன்னா, எல்லாருமே அவுங்க நிழல் கூட ஓடற கூட்டந்தான் அவுங்களப் பத்தி யோசிக்காத. உன்ன மாதிரி பறவையா இருக்கிற வரம் இவுங்க யாருக்குமே இல்ல பறவை”

    “நீ நடப்ப பறப்ப. நினைச்சா தூங்குவ. இந்த உலகமே உன்னுதுன்னு நினைப்ப உனக்கு ஜாதி இல்ல, மதம் இல்ல, அணுகுண்டு உனக்குத் தெரியாது. மின்சாரத்துக்கான சண்டைல நீ இருக்க மாட்ட. ஆனா உன் கனவு பெரிய கனவு. அந்தக் கனவுல வானம் இன்னும் பெருசா இருக்கும். எல்லாருக்கும் உன் சிறக கொடுத்துப் பறக்க வைப்பநீ. வேற வேற தேசம் போவ. உனக்கு எதிரிங்க யாருமே இல்ல. ஆயுதமும் தோட்டாவும் உன் தோட்டத்துல விளையாது. நீ அழ மாட்ட. அப்படியே அழுதாலும் அது யாருக்குமே தெரியாது. நீ எங்களயெல்லாம் விட பெரிய ஆள் பறவை.”

    “உன்னால மத்தவங்களுக்கு எப்பவுமே ஒரு தீங்கு கூட வராது. எறும்பு கூட உன்ன கடிக்காது பறவை. மழையையும், வெயிலையும், இலையுதிர்தலையும், பனியையும் அப்படியே வாங்கிக்குவ.”

    “நீ குடைகளற்ற உயிர் பறவை இதெல்லாம் விட, ஒரு உயிர் பேசுறத எந்த இடையூறும் இல்லாம கேக்கற மனப்பக்குவம் இருக்கே. அதுல நீ தான் பறவை உச்சம். என்ன சிரிப்பு வருதா? சிரி பறவை, சிரி. இங்க எல்லாருமே ஒண்ணுதான். நீ நீயா இருக்கறதும், நான் நானா இருக்கறதும், எல்லாமே ஒண்ணுதான்” என்றபடியே மெல்ல எழுந்து ஜன்னலில் எட்டிப் பார்த்தான்.கண்கள் கலங்கியபடி.

    கால்களில் சங்கிலி கட்டிய அந்த அலங்கோல பெண் மெல்ல தலையாட்டியபடியே நடந்து போய்க் கொண்டிருந்தாள்.

    அங்கே ஒரு பறவையின் இறகு விழுந்து கிடந்தது.

    Share
  • ஓலைத்துடிப்புகள் (8) – வெண்பூப் பகரும்

    கவிஞர் ருத்ரா

    “வெண்பூப் பகரும்”

    oolaisuvadi

    இச்சொற்றொடர் ஓரம்போகியார் எனும் சங்கத்தமிழ்ப் புலவர் ஐங்குறுநூறு பாடல் எண் 13 ல் எழுதியது.வெள்ளைக்குஞ்சம் போல் காற்றில் அழகாய் ஆடும் அந்த “பொங்குளை அலரி” பூக்கள் பற்றி பாடுகிறார்.மருதத்திணைப்பாடல் அது.அதை பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்று உள்ளம் பொங்கும்.மேலும் அப்பூக்கள் தலைவியோடும் தலைவனோடும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பது போல் தோன்றும்.அல்லது இவர்கள் அப்பூக்களோடு பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றும். அப்படி ஒரு நுண்மையான உணர்வை அச்சொற்களில் ஓரம்போகியார் காட்டுகிறார். அந்த பூக்கள் ஒரு நுண்செய்தியை தலைவிக்கு எப்படி உணர்த்துகிறது தெரியுமா? அவன் வரும் குதிரையின் தலைப்பூ அத்தகைய குஞ்சம் போல் ஆட்டி ஆட்டி சொல்வதைப்போல் இந்த ஆற்றங்கரையின் “வெண்பூக்களும்” அவளுக்கு அவன் வருவதைச் சொல்கின்றனவாம்.என்ன ஆழமான அழகான கற்பனை!

    “பரியுடை நன்மான் பொங்குளை அன்ன‌
    அடைகரை வேழம் வெண்பூப் பகரும்..”

    அந்த கரும்புப்பூக்கள் ஒரு இனிய காட்சியை அல்லவா நமக்கு சொல்கின்றன.”வெண்பூப் பகரும்” என்ற சொற்றொடர்களையே தலைப்பாக்கி இச்செய்யுளை செய்துள்ளேன்.

    கல்+இடை=கல்லிடை.குறிஞ்சி மருவி குறிச்சி ஆனது.பொதிகை மலையிடை அமைந்த ஒரு குறிஞ்சி ஊர் தான் எங்கள் ஊர் கல்லிடைக்குறிச்சி.அங்கே தாமிரபரணி எனும் ஆறு சங்கத்தமிழின் பெயரான “பொருனை” என்ற பெயரில் அமைதியான அழகுடன் ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆற்று எழிலில் மனம் கரைந்து சுழித்து நுரை பூத்து நாணல்கள் பச்சைத்தூரிகைகள் போல் படர்ந்திருக்க அந்த தலைக்குஞ்ச பூக்கள் தூரிகைகளாய் நீல வானத்திரையின் பின் புலத்தில் சங்கத்தமிழ் காட்சிகளை தீட்டிக்காட்டியதே இந்த சொல்லோவியம்.
    ஐங்குறுநூற்றுப்பாடல் எண் 23 ல் ஓரம்போகியார்

    தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வனொடு
    பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்”

    என்ற வரிகளில் இன்னும் நம் நெஞ்சம் பிழிகிற காட்சியை காட்டுகிறார்.

    புள்ளிகள் நிறைந்த அந்த நண்டு எனும் தாய் சாகும்படி அதன் குஞ்சுகள் பிறக்கும்.ஆனால் முதலை ஈன்றதனால் பசியுடன் கூடிய ஈன்ற வலியைப்போக்க தன் குட்டிகளையே தின்னும்.இந்த இரு வேறு துன்பியல் காட்சிகளும் தலைவன் தனக்கு ஏற்படுத்தும் பிரிவுத்துன்பத்தை நன்கு புலப்படுத்துவதாக தலைவியின் துன்பம் மிக்க உரையாக‌ ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.இக்காட்சியும் என் செய்யுளில் பதிந்து உறைந்து வருகின்றன.

    நாங்கள் சிறுவயது நண்பர்களாய் “கல்லிடைக்குறிச்சியின்” தாமிரவருணிக் கீழாற்றில் நுரை சிதற பாறைகளிடையே பரவி ஓடும் நீரில் குடைந்து குளித்து மகிழும்போது “முதலையின்” அமைப்பு போல் இருக்கும் ஒரு குத்துப்பாறையில் நாங்கள் விளையாடும் அந்த “பிள்ளைப்பருவ” படலங்களின் தூரிகையாகவே இந்த வரிகள் காட்சிகள் தீட்டுகின்றன.

    அந்த புள்ளி நண்டுகள் முதலைப்பாறைகள் “சிறிய அந்த வெண்பூக்கள்” எல்லாம் இனிமை குழைத்து பளிங்கு உருக்கி பால் நுரை பொருது இழையும் பொருநை எனும் எங்கள் தாமிரபரணியே இந்த “வெண்பூப் பகரும்”சங்கநடைக்கவிதையாய் சல சலத்து ஓடுகிறது.

    =====================================================================================================

    “வெண்பூப் பகரும்”

    பொருநை யாற்று பொறியறை தோறும்
    பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்
    கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கி
    அவன் வரும் யாறு அகந்தனில் பெருகி
    ஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதி
    கடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்
    அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.
    தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்
    சிறைப்படுதலால் “சிறை”யெனப்பட்டாய்
    ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.
    பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.
    பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.
    பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்
    பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌
    புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்
    புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.
    அவன்குரல் தீங்குரல் ஆகும் தீதும் ஆகும்.
    சேக்கை கண்ணும் முள்ளின் அடர்கான்
    அமிழ்பு துயில் மறுத்த அனல் படு இரவு.
    இனிதே பிறக்கும் பிறந்தே கொல்லும்
    “தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வன்”
    புதையுறு வேழக் கழியின் மருங்கில்
    புன்குரல் “பகன்றனை”வாராது மறைந்து.
    ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு
    ஈன்ற தன்னையே தின்னுதல் ஒக்கும்,
    தன் பார்ப்பு புசிக்கும் பரும்பல் முதலை
    பாய்தரு துறையன் ஊர்பட்டாங்கு
    பனிநலம் அழிய பனிக்கும் என் மைக்கண்.
    வெண்கவரி வேழம் குழைக்கும் காற்றில்
    என் அடுதுயர் யாவும் அவ் வெண்பூப் பகரும்.

    ======================================================

    பொழிப்புரை
    =======================================

    பொருநை யாற்று பொறியறை தோறும்
    பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்
    கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கி
    அவன் வரும் யாறு அகந்தனில் பெருகி
    ஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதி
    கடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்
    அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.

    பொருநை எனும் தாமிரபரணி ஆற்றங்கரைக் காட்சி இது.புள்ளிகள் படர்ந்த பாறைகள் தோறும் மோதி மோதி இனிமையாய் தண்ணீர் பாயும்.அந்த துள்ளல் நிறைந்த நீரில் தலைவி கால் நனைத்து மகிழ்கிறாள்.அந்த நுண்ணிய பொழுதுகளின் இடைவெளிக்குள்ளும் அவனைப்பற்றிய கனவே அவளுக்கு.அவன் வரும் வழி தன் மனக்கண்ணில் ஆறுபோல் பெருக அதன் ஓங்கிய அலைகள் ஒளிசிந்தும் பால் நிலவை எதிரொளி செய்கின்றன.(ஓங்கு திரை வாங்கும்).அந்த நிலவை கடல் கண்டு பொங்கி எழுவதைப் போல் ஆர்ப்பரிக்கும் தலைவனின் குதிரைத் தலையில் சூடிய அலரிப்பூ (வேழப்பூ எனும் ஒரு வித பேய்க்கரும்புப் பூ)ஆடி அசைவது (தலைவியை நோக்கி) ஒரு ஒலியை ஏற்படுத்தும்.

    தும்பி நுண்குழல் ஊச்சும் நறவில்
    சிறைப்படுதலால் “சிறை”யெனப்பட்டாய்
    ஆம்பல் பிணித்த அஞ்சிறைதும்பி.
    பகர்ந்தது அறிந்து கடல்நிறை களிக்கும்.
    பகராமை அஃதொன்றும் உளம் பறி செய்யும்.
    பகன்றை ஆயினும் இன்மை ஆயினும்
    பரி இமிழ் அரற்றும் குருகின் அன்ன‌
    புரி இதழ் அவிழ்தரும் புன்கண் பெருக்கும்
    புல்லிய அவிநீர் ஆவி உகுக்கும்.

    அங்கு உலவும் வண்டு தன் வாய் ஒட்டிய ஒரு நுண்ணிய உறிஞ்சுகுழலில் (ப்ரோபோசிஸ்) அங்கு உலவும் வண்டு ஒன்றை அவள் காண்கிறாள். தன் வாய் ஒட்டிய ஒரு நுண்ணிய உறிஞ்சுகுழலில் (ப்ரோபோசிஸ்) அந்த வண்டு உறிஞ்சிய தேனில் அமிழ்ந்ததால் சிறைப்பட்டு போனதால் தான் அஞ்சிறைத்தும்பியாய் ஆனாயோ ஓ வண்டே என்கிறாள் தலைவி.சிறகை அது குறித்த போதும் தான் ஒரு சிறைப்பட்ட நிலையில் இருந்ததால் அப்படி அழைக்கிறாள்.அதன் உள்ளிருந்து தலைவனின் குரல் கேட்கிறது.உண்மையில் அவன் தான் சிறைப்பட்டிருக்கிறான் போலும்.அவன் குரல் அவளுக்கு களிப்பின் கடல் நிறைந்து வழிந்தாற்போல் இருக்கிறது.அவன் சொன்னதும் கேட்டது.அவன் சொல்லாததும் அவளுக்கு கேட்டது.அது அவள் உள்ளத்தில் துன்பம் ஏற்படுத்தி அவளை பறித்துக்கொண்டது.மீண்டும் அவன் குரல் பகன்றது அவளுக்கு “பகன்றை” மலர் போல் மெல்லிய உணர்வுகளை எழுப்புகிறது. இருப்பினும் அத்தகைய மலர் போல் அல்லாமலும் துன்பம் செய்கிறது.துன்பம் தரும் குரல் என்னவாக இருக்கும்? “நான் இப்போது உடனே வருவதற்கில்லை” என்ற இன்னொரு குரலும் தலைவனிடமிருந்து அவள் கேட்டாள் போலிருக்கிறது. அந்த ஆற்றங்கரையின் குருகுகள் மிக்க உணர்ச்சிமிக்க ஒலிளை எழுப்பும்.அதைப்போல மெலிதாய் முறுக்கேறிய பூவின் மொட்டு இதழ்கள் திறக்கும். அதைப்போன்றே நலிவுற்ற என் கண்கள் பெருக்கும் கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் கீழ் இறங்கி சூடு ஏறி என்னுயிரையே உலுக்கிவிடும்.

    அவன்குரல் தீங்குரல் ஆகும் தீதும் ஆகும்.
    சேக்கை கண்ணும் முள்ளின் அடர்கான்
    அமிழ்பு துயில் மறுத்த அனல் படு இரவு.
    இனிதே பிறக்கும் பிறந்தே கொல்லும்
    “தாய்சாப் பிறக்கும் புள்ளிக்கள்வன்”
    புதையுறு வேழக் கழியின் மருங்கில்
    புன்குரல் “பகன்றனை”வாராது மறைந்து.

    அவன் எந்தக்குரலும் எங்கிருந்தும் எழுப்பவில்லை.இருப்பினும் அந்த வேழப்பூக்கள் அவளுக்கு ஒலியை கதிர்ப்பது போல் உணர்கிறாள்.அந்த மெய் விதிர்ப்பில் ஒருபக்கம் அவன் குரல் இனிக்கிறது.இன்னொரு பக்கம் தீய செய்தியை தாங்கி வருகிறது.படுக்கையில் தூக்கம் வரவில்லை.அடர்ந்த முள் காட்டில் கிடந்தவளாய் துன்புறுகிறாள்.இரவே நெருப்பு பற்றிக் கொண்டாற்போல் துடிக்கிறாள்.இப்போதும் தலைவனின் அந்த ஆற்றங்கரை தான் நினைவுக்கு வருகிறது.அவன் காதல் இனிதாய் பிறக்கும்.ஆனால் பிறந்தவுடனேயே கொன்றுவிடும் தன்மையும் அதற்கு இருக்கிறது போலும்.அவன் இருக்கும் அந்த துறையில் புள்ளிகள் நிறைந்த ஒருவகை நண்டு உள்ளது.அது ஈனும் குஞ்சுகள் அதனையே கொன்று தான் பிறக்கும்.(“தாய்சா(க)ப்பிறக்கும் புள்ளிக்கள்வன்)அவன் காதலும் அப்படியே தான்.அது பிறக்கும் நானே கொல்லப்படும் விந்தை வேதனை அல்லவா?அந்த வேழப்பூந் தட்டைகள் மண்டிய அந்த சேற்று நிலமும் நீரும் நிறைந்த கரையிலிருந்து அவன் குரல் கேட்கிறது.”நீ என்ன சொல்கிறாய்? எதையோ சொல்லிவிட்டு வாராது மறைந்து கொண்டாயே!”என்று தலைவி புலம்புகிறாள்.

    ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு
    ஈன்ற தன்னையே தின்னுதல் ஒக்கும்,
    தன் பார்ப்பு புசிக்கும் பரும்பல் முதலை
    பாய்தரு துறையன் ஊர்பட்டாங்கு
    பனிநலம் அழிய பனிக்கும் என் மைக்கண்.
    வெண்கவரி வேழம் குழைக்கும் காற்றில்
    என் அடுதுயர் யாவும் அவ் வெண்பூப் பகரும்.

    அடுத்ததாய் முதலை ஒன்றின் உருவம் அவளுக்கு தோன்றுகிறது.அதுவும் அந்த ஆற்றில் தான் இருக்கிறது.அதற்கு இரண்டு விழிப்படலங்கள் உண்டு.நீலிக்கண்ணீருக்கு ஒன்று.சாதாரணமாய் இன்னொன்று.அகன்ற கண்களில் தோன்றும்.(ஈர்ங்கண் விழிப்ப இருங்கண் கொண்டு…) பெரிய பற்களையுடைய முதலையோ தான் முட்டையிட்டு ஈன்ற குஞ்சுகளையே தின்னும். முதலைகள் பாய்ந்து வரும் ஆறும் அவன் ஊரில் தான் இருக்கிறது. நண்டு முதலை ஆகிய இரு விலங்குகளைப்போன்று அல்லவா அவன்
    இக்கொடிய‌ காதல் நோய் மூலம் என் உயிர் தின்னுகின்றான். குளிர்ச்சி பொருந்திய கனவு மிதக்கும் என் மையுண்ட கண்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கின.அதோ அந்த கரையில் ஆடும் அந்த சிறிய வெண்பூக்கள் இன்னும் என்ன சொல்லிக்கொண்டிருக்கின்றன? குழைவோடு வெண்சாமரம் போல் வீசுகின்ற அந்த மலர்க்குஞ்சங்கள என் துன்பத்தை தான் குழைய குழைய சொல்லிக் கொண்டிருக்கின்றன.

    ============================================================================================================================

    தொடரும்

    Share
  • சிகரம் நோக்கி (8)

    சுரேஜமீ

    வறுமை

    peak1111

    வறுமை சொல்லித் தரும் பாடத்தை இந்த வாழ்க்கையில் வேறெதுவும் சொல்லித்தர இயலாது. இன்றைக்கு வேண்டுமானால், ஒரளவுக்கு ஒவ்வொரு நடுத்தர குடும்பமும் வறுமையின் நிழலை விரட்டி இருந்தாலும், இன்னமும் குறைந்தபட்சம் ஒருவராவது, அக்குடும்பங்களில் வறுமையின் பிடியில் சிக்கித்தான் இருப்பர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    வறுமையைப் போக்குவதில் கல்வி ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், கல்வியைத் தாண்டி, நம் எண்ணங்களும், வாழ்வியல் சூழலும் நிச்சயம் வறுமையை விரட்டக்கூடிய ஒப்பற்ற காரணிகள் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்களை இந்த நவீன காலத்திலும் கூட உங்கள் முன் வைக்க இயலும்.

    உலகப் பெரும்பணக்காரர்களான பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சுக்கெர்பெர்க் மற்றும் நம் நாட்டிலுள்ள சச்சின் டென்டுல்கர், திருபாய் அம்பானி போன்றவர்களெல்லாம், கல்வியை வைத்து வாழ்க்கையை மாற்றியவர்கள் அல்லர்; மாறாக, தான் தாங்கியிருந்த எண்ணங்களை முதலாக்கி வரலாறு படைத்தவர்கள் என்றால், ஏன் நம்மால் முடியாது?

    இன்னமும், எத்தனையோ குழந்தைகள் பள்ளிக் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைக் கல்வியைத் தொடர இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்ற செய்திகளை பார்க்க நேரிடும் போதல்லாம், மனம் கிலேசமடைகிறது. இந்த இந்தியத் திருநாட்டில், எவ்வளவோ வளர்ச்சி கண்டுவிட்டோம்; ஆனால், இன்னமும் வறுமையை அறவே ஒழிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு, நம்மில் வலியவர்களுக்கு வர வேண்டும். அவ்வாறு வரும்போது, நம்மில் எளியவர்கள் நிச்சயம் சரித்திரம் படைப்பார்கள்.

    வறுமை பற்றி நம் இலக்கியங்கள் என்ன சொல்லியிருக்கின்றன என்பதற்கு முன்னால், சென்ற நூற்றாண்டு கண்ட மகாகவி பாரதி என்ன சொல்லியிருக்கிறான் என்பதும் நம் பள்ளிப் பாடத்தில் படித்ததே. அதை நினைவு கூறும் வகையில்,

    தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்

    இந்த ஜகத்தினை அழித்திடுவோம் – மகாகவி சுப்ரமணிய பாரதி

    ஆக வறுமையின் பிடி பசியில் தொடங்குகிறது. பசியின் கொடுமை பாதகத்திற்கும் துணியும் என்ற காரணத்தினால்தான், உலகத்தையே அழிக்கத் துணிகிறான் தன் எழுத்துக்களால் இந்தக் கவிஞன்.

    இதற்கெலாம் மேலாக நாம் ஒரு பழமொழியை உபயோகிக்கிறோம். அது தரும் சேதி என்ன? முதலில் பழமொழியைப் படியுங்கள்

    ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்!’ என்பதே. இப்பழமொழியின் தொடக்கம் ஒரு சங்க காலப் பாடல்தான்.

    அப்பாடலில் வருகிறது பசி வந்தால் என்னவெலாம் போகுமென்பது……….

    மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை

    தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந் திடப்பறந்து போம்!

    மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை மற்றும் காமம் ஆகிய பத்தும் பறந்து விடும் ஒரு பசியின் முன் என்றால் இதைவிட பசியின் வலிமையை, வறுமையின் கொடுமையை விள்க்கிச் சொல்ல வேறு நூல் தேவையில்லை.

    அத்தகைய வறுமையை நம்மால் விரட்ட முடியும் என்ற நம்பிக்கையும், அது தொடர்பாக நாம் செய்ய வேண்டிய முயற்சிகளும் மிகவும் இன்றியமையாதது;

    என்ன செய்யலாம்?

    1. வறுமையிலிருக்கும் ஒரு குடும்பத்திற்கு உதவுவதை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளுங்கள்!

    2. அவரவர் கிராமத்திலோ, அவரவர் உறவுகளிலோ, வீட்டிற்கு அருகாமையிலோ இருக்கும் மாணவர்களில் எவரேனும் நன்கு படித்தும் உயர் கல்வி, வறுமையால் தடைபட நேர்ந்தால், அப்படி இருக்கும் ஒரு மாணவருக்கு உங்களால் ஆன பொருளுதவியைச் செய்வதற்குத் தயங்காதீர்கள்!

    3. படித்தும் வேலையிலாமலிருக்கும் ஒரு இளைஞனுக்கு, தகுந்த ஆலோசனை கூறி அவன் வேலயில் சேரத் தகுதியை ஏற்படுத்துங்கள். முடிந்தால், உங்களால், உங்கள் நிறுவனத்திலோ அல்லது தெரிந்த நிறுவனத்திலோ ஒரு வேலைக்கு சிபாரிசு செய்யுங்கள்.

    4. வறுமையை எந்த வடிவில் பார்த்தாலும், அதை விரட்டியே தீருவேன் என்ற உறுதியை உங்கள் இல்லத்திலிருந்து தொடங்குங்கள்.

    5. உதவி நிறுவனங்களின் தொடர்புகளையும், அவர்கள் என்ன விதமான உதவி செய்கிறார்கள் என்ற விவரத்தையும் முடிந்த அளவு அனைவருக்கும் தெரியப் படுத்துங்கள்.

    6. உழைப்பையும் உங்கள் திறமையயும் முழுமையாக நம்புங்கள். உழைப்பிற்குத் தேவையான முதலீடு எவ்வளவு என்பதைத் தீர்மானியுங்கள். முதல் இல்லையே என நிலை குலையாமல், முதலீடுக்குத் தயாராக இருக்கும் உங்கள் சொந்தங்களையோ, அல்லது வணிக நிறுவனங்களையோ அணுகுங்கள். எதில் உங்கள் திறமை என்று நினைக்கிறீர்களோ, எவ்வித ஐயப்பாடும் இன்றி உடனடியாக அச்செயலைச் செய்யத் தொடங்குங்கள்!

    7. உங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். ஏதேனும் ஒரு புதிய சிந்தனை, ஒரு வணிக உத்தி, என ஏதாவது உங்களுக்கு ஏற்படலாம். அது பற்றித் திரும்ப திரும்ப சிந்தியுங்கள். எண்ணக் கருவாக்கி, ஏற்ற உருவாக்கி, உங்களைச் செதுக்க ஒரு ஒப்பற்ற வாய்ப்பாக அமைந்தால், வறுமை வற்றிவிடும்!

    இப்படி சிந்தனையை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எங்கெல்லாம் ஓர் உறுதி தென்படுகிறதோ, வறுமையை ஒழிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஒளிர்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் ஆற்றல் வெளிப்படட்டும்!

    இது மட்டும் நடந்து விட்டால், இந்தியாவில் வறுமையின் பிடியால் இருக்கும் இயலாமையும் அது கொடுக்கும் மரணமும் நிச்சயம் ஒழிந்துவிடும். எல்லாவற்றிற்கும் அரசையும், ஆள்பவர்களையும் எதிர் நோக்கக் கூடாது. ஆண்டவனாகவே இருந்தாலும், அவரவர் மனத்தினில் உதிக்கின்ற எண்ணங்கள் தான், அவர்களின் வாழ்வுக்குப் பொறுப்பாகிறது என்ற உண்மை புலனானால்,

    சிகரம் நம்மை நெருங்கித்தான் வரவேண்டும்!

    தொடர்வோம் பயணத்தை…………..

    Share
  • வெண்பஞ்சு முகில்களே நீங்கள் யார்?

    -ராதா மரியரத்தினம்

    இறைவனின் மஞ்சத்திலிருந்து
    நழுவி விழுந்த
    வெண் பஞ்சுத் துகள்கள்தான்
    மேகங்களோ?

    நிலவில் இருந்து
    வடை சுட்ட​ பாட்டி
    எரியாத​ அடுப்பை
    ஊதுகுழல் கொண்டு
    ஊதியதால் ஏற்பட்ட​
    புகையோ இந்த முகில்கள்?

    மழைத்துளி பவனி வர​
    இறைவன் அமைத்த​
    பறக்கும் தட்டோ முகில்?

    பூமித் தாயின்
    அழகு காண​
    ஊர்வலமாய் வரும் தேவர்கள்
    வாகனமோ முகில்?

    சூல் நிறைந்த​ தாயாய்
    ஆவதற்கு ஆவல் கொண்ட​
    கன்னிப் பெண்களோ
    இந்த​ வெண் முகில்கள்?

    Share
  • அமெரிக்காவில் பேன்

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    அமெரிக்காவில் இன்னும் பேன்களின் உபாதை இருக்கிறது என்று அறிந்து அதிசயப்பட்டேன்.  இந்தியாவில் பள்ளிப் பருவக் குழந்தைகளுக்குப் பேன் தொந்தரவு இருக்குமென்றும் அதன் பிறகு அவர்கள் கல்லூரியில் சேர்ந்த பிறகு இந்தத் தொந்தரவு தானே போய்விடும் என்றும் என் குழந்தைகளின் மூலம் அறிந்திருந்தேன்.

     images

    ஆனால் என்னைப் பொறுத்தவரை கல்லூரியிலும் பேன் தொந்தரவு என்னைப் பாடாயப் படுத்தியிருக்கிறது.  நான் கல்லூரியில் படிக்கும்போது விடுதியில் தங்கியிருந்தேன்.  மாணவிகளின் ஒழுக்கத்தில் மிகுந்த அக்கறை காட்டும் கல்லூரி என்று பெயர் வாங்கிய கல்லூரி.  மாணவிகளை விடுதிக்கு வெளியே ஆசிரியைகள் துணையில்லாமல் எங்கும் அனுப்ப மாட்டார்கள் என்பதால் இந்த மாணவிகளுக்குக் கல்யாணச் சந்தையில் கொஞ்சம் கூடுதல் மதிப்பு.  இதனால் பல பெற்றோர்கள் இந்தக் கல்லூரியில் தங்கள் பெண்களைச் சேர்க்க விரும்புவார்கள்!  மேலும் மாணவிகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்க அவர்களை நன்றாக உருத்தட்டப் பழக்கிவிடுவார்கள்.  இந்தக் காரணத்தாலும் பெற்றோர்கள் இந்தக் கல்லூரியை விரும்புவதுண்டு.  அமெரிக்கக் கிறிஸ்தவப் பெண் துறவிகளால் நடத்தப்பட்ட இந்தக் கல்லூரியில் விடுதிக்கான செலவு, உணவுக்கான செலவு என்று எக்கச்சக்கமாக வசூலிப்பார்கள்.  ஆனால் வசதிகள் மிகவும் குறைவு.  ஒரு அறையில் நான்கு பேர் தங்கியிருப்போம்.  அதில் ஒரு பெண்னுக்குத் தலையில் நிறைய பேன்கள் உண்டு.  அவள் தலையிலிருந்து என் தலைக்குப் பேன்கள் வேகமாக வந்துவிடும்.  சிலர் தலைமுடிக்குப் பேன்களை வசீகரிக்கும் சக்தி உண்டு என்பார்கள்.  என் தலைக்கு அது இருந்தது போலும்!  அதே அறையில் தங்கியிருந்த மற்ற இரண்டு மாணவிகளைவிட பேன் தொந்தரவால் நான்தான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.  அவளிடமிருந்து வெகு தூரம் தள்ளிப் படுப்பது (பத்தடிக்குப் பத்தடி அளவுள்ள அறையில் எவ்வளவுதான் தள்ளிப் போவது?) போன்ற எந்த உத்திகளும் கைகொடுக்கவில்லை.  விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போதெல்லாம் தலையைச் சுத்தம் செய்துகொண்டு போனாலும் விடுதிக்குச் சென்றதும் மறுபடி பேன் தொந்தரவு வந்துவிடும்.

    இந்தியாவில் என் மகள் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் சென்றதும் பேன்களை அவளை விட்டுப் போய்விட்டாலும் மேல்படிப்புப் படிக்க அமெரிக்கா வந்து இன்னும் மூன்று பெண்களோடு தனித்தனி அறைகளில் தங்கினாலும் பேன் தொந்தரவால் பாதிக்கப்பட்டாள்.  அவளுக்குத் தலையில் பேன்கள் வரக் காரணமாக இருந்த இன்னொரு பெண்ணின் கிராப் வைக்கப்பட்ட தலையில் இருக்கும் ஈறுகள் எல்லோர் கண்களுக்கும் நன்றாகவே தெரியும்.  எனினும் தலையைச் சுத்தம் செய்துகொள்ளும்படி அவளிடம் கூறுவதற்கு யாரும் முன்வரவில்லை.  பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதில் உடன்பாடு ஏற்படவே இல்லை.  அடுத்த வருடமே என் மகள் அறையை மாற்றிக்கொண்டாள்.

    பொதுவாகத் தலையைச் சுத்தமாக வைத்துக்கொள்பவர்களுக்குப் பேன்கள் தொந்தரவு இருக்காது என்று சொல்வார்கள்.  அமெரிக்காவில் இன்னும் பேன் தொந்தரவு இருக்கிறது என்பதால் அமெரிக்கக் குழந்தை மருத்துவர்கள் சங்கம் அவ்வப்போது பேன்களை ஒழிப்பதற்குரிய யோசனைகளை வெளியிட்டு வருகிறது.  பேன் தொந்தரவால் குழந்தைகளின் உடல்நலத்திற்குக் கெடுதல் எதுவும் வராவிட்டாலும், இந்தப் பேன்களால் வியாதி எதுவும் மற்றக் குழந்தைகளுக்குப் பரவும் அபாயம் எதுவும் இல்லையென்றாலும் தங்கள் குழந்தைகளின் தலையில் பேன்கள் இருந்தால் ஒருவித அருவருப்பு ஏற்படுவதால் பெற்றோர்கள் பேன்களைத் தங்கள் குழந்தைகளின் தலையிலிருந்து அகற்ற வேண்டும் என்று நிறைய முயற்சிகள் எடுக்கிறார்களாம்.  சிலர் தாங்களாக அதைச் செய்வதை விடுத்து பேன்களை அகற்றும் பயிற்சி பெற்றவர்களின் உதவியை நாடுகிறார்களாம்.  இவர்கள் ஒரு குழந்தைக்கு ஒரு முறை பேன்களைத் தலையிலிருந்து நீக்க இருநூறு டாலர் பணம் வசூலிக்கிறார்களாம்.  இப்போது நியூயார்க் போன்ற பெரிய நகரங்களில் இது ஒரு தொழிலாகவே வளர்ந்துவிட்டிருக்கிறதாம்.  குழந்தைகளின், பெரியவர்களின் தலைகளிலிருந்து பேன்களை அகற்றுவதற்கு அமெரிக்கா வருடத்திற்கு நூறு கோடி டாலர் – அதாவது ஆறாயிரத்து முன்னூறு கோடி ரூபாய் இன்றைய அந்நியச் செலாவணிக் கணக்குப்படி – செலவழிக்கிறதாம்!  பேன்களை அகற்றுவதற்குச் சந்தையில் கிடைக்கும் பல ஷாம்புகள் உட்பட பல வகையான மருந்துகளுக்காகும் செலவு, குழந்தை மருத்துவர்கள் பெற்றோருக்கு அறிவுரை வழங்கச் செலவழிக்கும் தொகை இதில் அடங்கும்.  அமெரிக்கா பணக்கார நாடல்லவா.  இப்படிப்பட்ட சிறிய விஷயங்களுக்கும் நிறையச் செலவழிக்கிறது.

    சிறு குழந்தைகளுக்கு வரும் பல வியாதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் மூலம் வியாதிகள் வருவதைத் தடுக்கலாம்.  ஆனால் பேன்களைத் தடுப்பது மிகவும் கஷ்டம்.  பேன்கள் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அவனோடு வாழ்ந்து வருகின்றன.  அவற்றை எளிதில் ஒழிக்க முடியாது.  அதனால் அமெரிக்கக் குழந்தைகள் மருத்துவர் சங்கம் பெற்றோர்களுக்கு யோசனைகள் வழங்கி வருகிறது.  குழந்தைகளின் தலைகள் அடிக்கடி ஒன்றுக்கொன்று உரசிக்கொள்வதால் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பேன்கள் பரவ சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றனவாம்.  அதனால் மற்றக் குழந்தைகளோடு தங்கள் சீப்புகள், தலைவாரப் பயன்படுத்தும் பிரஷ்கள் மற்றும் தொப்பிகளை மற்றக் குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று குழந்தைகளுக்குக் கூறுமாறும் அடிக்கடித் தங்கள் குழந்தைகளின் தலைகளைப் பேன்கள் இருக்கிறதா என்று பார்க்குமாறும் யோசனை கூறுகிறது.  அடிக்கடி இப்படிச் செய்வதால் பேன்களை ஆரம்பத்திலேயே ஒழிக்கும் வாய்ப்பும் மற்றவர்களுக்கு அவை பரவாமல் தடுக்கும் வாய்ப்பும் இருக்கிறதாகப் பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.

    பேன்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவர் தன் இரண்டு மகன்களுக்கும் அவர்கள் பள்ளியில் படிக்கும்போது பேன் தொந்தரவு இருந்ததாகவும் ஆனால் அவர்களுடைய பையன்கள் இந்தத் தொந்தரவிலிருந்து தப்பிவிட்டதாகவும் கூறுகிறார்.  சில தாய்மார்கள் குழந்தைகளின் தலையில் இருக்கும் பொடுகு, மணல் போன்றவற்றைப் பேன்கள் என்று எண்ணிவிடுகிறார்களாம்.  சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பேன்கள் வந்தால் மிகவும் அருவருப்பாக இருக்கும் என்பதால் பேன்கள் வருவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் விதமாக ட்ரீட்மெண்டை ஆரம்பித்துவிடுகிறார்களாம்.  அப்படி ஒருபோதும் செய்யக் கூடாது என்று குழந்தைகள் மருத்துவர் சங்கம்.வலியுறுத்துகிறதாம்.

    பல விஞ்ஞான முன்னேற்றங்களைக் கண்டுள்ள அமெரிக்காவால் கூட மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அவன் ரத்தத்தைச் சுரண்டி வாழும் (இருபத்து நாலு மணி நேரத்திற்கு மேல் மனிதனின் இரத்தத்தைக் குடிக்காமல் பேன்களால் உயிர் வாழ முடியாதாம்) பேன்களை இன்றுவரை ஒழிக்க முடியவில்லையே.

    படத்திற்கு நன்றி

    Share
  • அம்மா!

    -சித்ரப்ரியங்கா பாலு

    இந்த ஒரு வார்த்தையில் தான்அகிலமே உள்ளடக்கம்!
    உன்ன நினச்சாலே உள்ளமெல்லாம் புல்லரிக்கும்!
    கண்கண்ட தெய்வமாக் கடவுள் அனுப்பி வச்சவளே
    கடவுளாவே மாறித்தான் காத்து நித்தம் ரட்சிப்பவளே!
    திருமண பந்தத்துக்காக நீ சொந்தமெல்லாம் விட்டுவந்து,
    தன்னவனையே தலச்சனாய்த் தாங்கித்தான் கொண்டவளே!
    கட்டினவன் இஷ்டப்பட கஷ்டமுந்தான் நீயும் பட்டு,
    கண்மணிகள் மூவருக்குக் கருவறையைக் கடனாகக் கொடுத்தவளே!

    பெண்பிள்ள வேண்டாமென்ற பழங் கூற்றை நீ போக்க,
    பத்து மாதம் என்னயுந்தான் பாதுகாத்து வளர்த்தவளே!
    சந்ததியும் சிறக்கத்தான் சங்கடங்கள் பல பொறுத்து,
    சிந்தை எல்லாம் என்மேல்வைத்து விந்தை உலகை காட்டியவளே!
    தவமாய்த் தவமிருந்து உன் தங்கமகள் எனை ஈன்று,
    தந்தை அவர் கைகளிலே தாலாட்டக் கொடுத்தவளே!
    பெற்றவர் என்முகம் பார்த்துப் பூரித்து மகிழக் கண்டு,
    உனக் கட்டினவன் முகம் மலரக் கண்கள் ஓரம் கசிந்தவளே!

    உன் வயிற்றில் இருந்தப்போ உதைத்த வலி நீ மறந்து,
    உச்சிதனை முகர்ந்து நித்தம் உள்ளம்குளிர ’இச்சு’ கொடுத்தவளே!
    உதிரத்தைப் பாலாய் அளித்து உண்ணாது நீயும் தவித்து,
    ஒருவாய்ச் சோறு நான் உண்ண ஓராயிரம் வார்த்தைசொல்லிக் கொஞ்சியவளே!
    செல்ல மகள் நானுந்தான் சிறப்பாய் வரவிரும்பி,
    பிஞ்சுவிரல் நீ பிடித்துப் பள்ளியிலே விட்டவளே!
    விட்ட விரல் ஸ்பரிசத்துக்கு நானுந்தான் ஏங்கிநிற்க,
    வந்ததுமே வாரியணைத்து அந்தக் குறை தீர்த்தவளே!

    மகளா இருந்த நான் குமரியா மாறயிலே,
    மகிழ்ச்சிப் பூரிப்பில் உள்ளம் நெகிழ்ச்சியால் நிறைந்தவளே!
    பள்ளிப் படிப்பு முடிந்தும் குறையேதும் வைக்காது,
    கல்லூரியின்கண் விட்டு வாழ்க்கைக் கண் திறந்தவளே!
    கல்லூரியில் என்ன விட்டு உன் கண் கசிந்த காட்சியுந்தான்,
    என் கண்ணுக்குள்ள நிக்குதம்மா என் நெஞ்சுக்குழி விம்முதம்மா!
    சிறந்த பொறியாளனாய் நான் வெளிவந்த நேரம்,
    வியந்து நின்றவளே விலைமதிப்பற்ற என் மாணிக்கமே!

    மகராசி நீயுந்தான் ஒம் மக வாழ்க்கையிலே,
    ஆசானாதான் உயர அகல் விளக்கா நின்னவளே!
    எனப் பெத்தவளே உன்பெரும பத்தி பேசித்தான் வாய் மாளாது,
    என் பேனா வரி எழுதத் தமிழ்ச் சொற்கள் போதாது!
    எத்தொலைவு நீ இருந்தாலும் என் ஜீவன் நீ அம்மா!
    உன்னைப் போன்ற சொந்தம் உலகில் வேறு யாரம்மா?
    அன்னையர் தினத்தில் மட்டுமல்ல
    என்றும் உன் அன்பிற்காக
    ஏங்கும் உன் மழலை!

     

     

    Share
  • புத்தனுக்குக் கேள்வி!

    -இரா.சந்தோஷ் குமார்

    நானும் புத்தனாகியிருப்பேன்
    சித்தார்த்தா
    என்ன செய்ய ?
    போதி மரத்தை
    வெட்டித்தான்
    என் ஜனநாயகத்திலுள்ள
    அந்த குடிசையின்
    அடுப்பு எரிக்கப்படுகிறது!

    போதிமரத்தை
    வெட்டித்தான்
    நான் உல்லாசப்பட்ட
    அந்த விபசாரக் கட்டில்
    செய்யப்பட்டிருக்கிறது!

    நானும் புத்தனாகியிருப்பேன்
    ஆனாலும் என்னைச்
    சித்தார்த்தனாகக் கூட
    விட்டுவைக்கவில்லை
    இந்த நவீன உலகம்!

    ஆமாம்…
    ஆசையைத் துறக்கச் சொன்னாயாமே…?
    எனக்கும்
    தியானிக்க ஆசைதான்
    இல்லையேல்
    மரணிக்கக்கூட ஆசைதான்!
    நான் ஆசையைத் துறந்தால்
    இம்சைகள் அதிகமாகிவிடுமே!
    என்ன செய்ய புத்தா ?

    ஏய் சித்தார்த்தனே…
    உண்மையைச் சொல்!
    போதி மரத்திற்கு
    ஆசைப்பட்டுதானே
    நீயும் புத்தனாகினாய்?

     

    Share
  • கவியரசர் பாமாலை!

    -சுரேஜமீ

    மலையரசி கண்டெடுத்த முத்தொன்று வாழும்
    மனிதர்க்குச் சொத்தாகி நிற்பதற்கு யார்செய்
    தவமிங்கே தாயொடு தன்னிகரில் லாத்தமிழ்
    தான்செய் தமிழினம் செய்!

    சின்னஞ் சிறுவயதில் தெய்வம் துணையாகச்           kannadasanjpg
    சிறுகூடல் பட்டியில் பாவொன்று நீபாடப்
    பைந்தமிழ் வாவென் றுனையணைக்க வையம்
    பரவசமாய் வாழ்த்தி வர!

    படிப்பென்ன பாதியானால் பண்டிதராய் வந்திட்ட
    பார்போற்றும் தாய்த்தமிழ் உன்னகத்தே வாழ்ந்திருக்க
    பட்டினத்தில் சேர்ந்து வசனங்களை நீயெழுத
    எண்ணியவே ளைவந்த பாட்டு!

    படும்பாட்டைப் பாட்டெழுத பாரினிலே யாருளர்
    பட்டியெலாம் உன்பாட்டுத் தாலாட்டாய் தானுள
    பள்ளமேடு உள்ளவரைப் பார்மனிதன் வாழும்வரை
    பாட்டொலிக்கும் உன்பேரை நன்கு!

    தமிழ்த்தேரும் தாங்கிவரக் காவிரி மைந்தன்
    துணைவரவும் கண்ணதா சன்விழா ஆங்கே
    அமீரகத்தில் வெற்றிபெற நீயிருந்து வாழ்த்தங்கே
    வானிருந்து விண்மீனாய் நின்று!

    முத்தையா முக்காலம் வாழ்த்தும் தமிழையா
    வள்ளுவன் வானுறை தெய்வமெனக் கண்ணதாசன்
    உன்னைத்தான் பாடினனென் பேன்யான் மறுப்பாரோ
    மண்ணில் எவரும் சொல்!

    பாமாலை பாடுகின்றேன் பக்கத்தில் நீயிருக்கப்
    பூமாலை சேர்ந்திடும் உன்னடியில் நீயருள
    வாழ்த்திடு வந்திருக்கும் உன்னன்பர் யாவரையும்
    போற்றிடுவோம் உன்புகழை என்றும்!

     

    Share
  • அயல்நாட்டு மோகம்!

    -ரா.பார்த்தசாரதி

    வானுர்தி மேலேறி  அயல்நாட்டு வாசம்
    புதிய தேசம் புதிய மனிதர்களின் நேசம்
    மொழி, குணம் உணர்ந்து செயல்பட வேண்டுமே
    உறுதிகொண்டு கண்விழித்து உழைக்க வேண்டுமே !

    அங்கே அன்னையின்  அரவணைப்பு இல்லை
    ஆசை மனைவியின் இன்முகம் காண்பதில்லை
    பெற்ற மகன் மகளின் ஸ்பரிசம் இல்லை
    அன்புடன் உறவாடும் நண்பனும் இல்லை !

    அன்னமில்லை நேரத்திற்கு நமக்கு ஆகாரமில்லை
    பண்டிகை இல்லை அன்புகாட்ட  யாருமில்லை
    உணர்வுகள் வெறுமையுடன்  மாறிவரும் நிலை
    வேதனையையும் துன்பத்தையும் வெளிக்காட்டாத நிலை !

    பணமிருக்கும் நாட்டில் நல்ல மனதிற்கு இடமில்லை
    குணமிருக்கும் நாட்டில் பணத்திற்கு வழிஇல்லை
    வாழ்க்கை எனும் ஓடத்தில் வந்து சேரும் தடைகள்
    வந்தனவற்றை ஏற்றுக்கொள்ளும் இக்கால மனிதர்கள் !

    கல்வி, கலைகள் எல்லாம் நன்கு கற்றோம்
    வேலை கிடைத்து  வெளிநாட்டில் நன்கு உழைக்கின்றோம்
    காரணம், இவை எல்லாம் பெற்றோரின்  ஆசையே
    கலைமகளை ஒதுக்கிக் காசினைப் பூஜிக்கின்றாயே !

    பணத்திற்காக  வெளிநாடு  விரைந்து  சென்றாய்
    பெற்றோர்களை நினைந்து நிம்மதி இழக்கின்றாய்
    நம் நாட்டு  உணவின் சுவையை  மறந்தாய்
    மேல்நாட்டு உணவிற்கு மயங்கி அடிமைப்பட்டாய் !

    வெளிநாட்டில் இருக்கும்போது நம் நாட்டின் அருமை தெரியும்
    பண்பு கலாசாரம் இவற்றின் மதிப்பு தெரியும்
    பணத்திற்காகப் பிள்ளைகளை அனுப்புகிறோம் என அறிவோம்
    அறிவாளிகள் வெளியேற்றம் என்பதை நாமே நடத்துகின்றோம் !

    பிள்ளைகளைப் பணத்திற்காகப் புதைகுழியில் தள்ளுகின்றோம்
    பாசத்தையும் அன்பையும் தள்ளிவைத்துத் துயரப்படுகின்றோம்
    பிள்ளைகளின் அறிவை அடமானம் வைக்கின்றோம்
    தாய்நாட்டின்  வளர்ச்சியைத் தடை செய்கின்றோம் !

    பணம் எட்டிப் பார்க்கும் பாசம் பக்கத்தில் இருக்காதே
    பணத்திற்காக ஆசைப்பட்டு உறவுகள் துரத்தப்படுகிறதே
    தவறினை உணர்கின்ற நேரத்தில் காலங்கள் கழிக்கப்படுகிறதே
    எண்ணியே வாழ்க்கை  இருதலைக் கொள்ளியாய் இருக்கிறதே!

    என்றும் காலங்கள் மாறித்  தன்னிறைவு  பெற்றாலும்
    பணம் இருந்தாலும் வசதிகள்  இருந்தாலும்
    மனம் பாசத்திற்காக  ஏங்கும்  காலமாய் இருந்தாலும்
    என்று மாறுமோ  இந்த அயல் நாட்டு  மோகம்?!

     

    Share
  • ஐந்து கை ராந்தல் (17)

     வையவன்
    செம்மஞ்சளாகப் பிளந்திருந்த பப்பாளிப் பழத்துண்டங்களில் கருமுத்துகளாய் மின்னிய விதைகளை ஸ்பூனில் வழிக்கப் போனாள் பிரீதா.
    நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிவா “வெய்ட்” என்று தடுத்தான்.
    பீங்கான் கோப்பையில் அவள் அந்த எவர்சில்வர் ஸ்பூனை அப்படியே விட்டாள். ‘ணங்’கென்று ஓர் இனிய ஒலி வந்தது.
    “வாவ். ஹவ் லவ்லி” என்றான்.
    பிரீதாவும் அந்த அழகில் லயித்தாள்.
    “செம்மஞ்சள் மேகத்தில் மிதக்கும் கறுப்பு தேவதைகள்” என்றான்.
    “பிரிந்த இதயத்தின் நிராசைக் கருமணிகள்” என்றாள் பிரீதா.
    சிவா “வொண்டர் ஃபுல்” என்று அவள் உவமையைச் சிலாகித்தான். அவளைப் பார்த்தான். அந்தக் கண்களில் அந்த இனிய பிரீதா இல்லை. இவள் பிரச்னையை எதிர் கொள்பவள். குளிர்ச்சியான ஒளியூட்டுகின்ற பிரீதா இல்லை.
    இவள் வேறு-விளக்கின் கீழே நிற்கும் கருநிழல் மாதிரி.
    சிவா அவளிடம் அந்த அந்நியத்தைக் கண்டு அதைச் சந்திக்கப் பிரியமின்றி பார்வையை ஒதுக்கினான்.
    “உனக்கு திஷ்யாகிட்டே என்ன அப்படி ஒரு அக்கறை?”
    மெல்ல கடற்காற்று அசோக மரங்களை உயிர்ப்பித்தது.
    சிவாவுக்கு அவள் இன்னும் சில அடிகள் முன்னேறி வருவது போல் ஓர் உணர்வு.
    “இன்னிக்குக் காலையிலே அவள் ஒர்க்ஷாப்புக்கு தம்பியை அனுப்பி என்னைக் கூட்டி வரச் சொன்னா”
    “அதுக்கு மேலே?” அவள் தூண்டினாள்.
    “அதுக்கு மேலேயும் உண்டுண்ணு இன்னிக்குத்தான் வாய் விட்டுச் சொன்னாள்.”
    “ஓ”
    பிரீதா இதை இயல்பாகச் சொன்னாளா என்று அவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் புன்னகை செய்ய முயன்றாள். அதில் வலி தென்பட்டது.
    சிவாவின் கண்களில் அவள் எதையோ ஆழ்ந்து தேடினாள்.
    “உனக்கும் உண்டா?”
    “நேத்து வரைக்கும் இருந்தது.”
    “இப்ப…”
    “யோசிக்கிறேன்”
    “ஏன்?”
    “தாமுவுக்கு அவள் பேரிலே என்ன இன்ட்ரஸ்ட் இருக்கும்னு தெரிஞ்சபிறகு யோசிக்காம என்ன பண்றது?”
    “பப்பாளி விதையை எடுத்துடட்டுமா?”
    “ஓ… எஸ்!”
    பிரீதா விதைகளை அகற்றினாள். இன்னொரு சாஸரில் இரண்டு துண்டங்களை எடுத்து வைத்தாள்.
    “சாப்பிடு”
    அவன் கீழ்ப்படிவது போல் பழத் துண்டங்களில் செருகியிருந்த ஸ்பூனில் வெட்டினான்.
    அவன் பழத்தை அருந்தும் போது அவளும் கூட சாப்பிடத் தொடங்கினாள்.
    “எதற்காக யோசிக்கிறே?”
    “ம் ம்…” என்று அவள் கேள்வி புரியாது எங்கோ நினைவில் கரைந்திருந்த சிவா விழிப்பு வந்து கேட்டான்.
    “தாமு என்னை மனிதனாக்கியிருக்கிறார்”
    “நன்றி விசுவாசமா?”
    “அது மட்டுமல்லே.”
    “பின்னே?”
    “திஷ்யா தாமுகிட்டே இன்னும் மகிழ்ச்சியா இருக்கலாம்.”
    “உன்னை விரும்பின பிறகா?”
    “விருப்பங்கள் நிலையானவையல்ல”
    “வாட் டு யூ மீன்?”
    “வசதிகளைத் தான் மனசு எப்பவும் தேடுது. இன்னும் ஒண்ணுமே ஆகாத என்னாலே என்ன வசதி செஞ்சுட முடியும்? இந்தச் சினிமா சான்சை விட்டுட்டதுக்கு அவளே பின்னால வருத்தப்படலாம்.
    என்னை விரும்பியதுக்கும் சேர்த்து வருத்தப்படலாம். அவளே இல்லேண்ணாலும் அவங்க அப்பா, குடும்பம் எல்லாரும் அப்படி அவளை நெனைக்க வச்சுடலாம்.”
    “வாட் அபவ்ட் திஷ்யா? அவள் மனசு என்ன? தாமு யார் என்னண்ணு அவளுக்கு நல்லாத் தெரியும். அவ தாமுவை லைக் பண்ணுவாளா?”
    “இல்லே”
    “தென்?”
    “தென் இட்ஸ் ஹெர் ஒன் ப்ராப்ளம்”
    “இந்த ஒலகத்துக்கு நீ ஒரு மிஸ்ஃபிட் சிவா”
    அவன் சிரித்தான்.
    “இது நீ வாழ வேண்டிய காலமில்லே. நீ ஒரு நூற்றாண்டு பின்னாடி இருக்கே”
    “ஆ, இருக்கட்டுமே. ஒலகம் ரொம்பப் பெரிசு. அதற்குப் பொருத்தமானவங்களே மெஜாரிட்டி ஆயிட்டாலும் மைனாரிடிக்கு ஒரு மூலை இருக்கு.”
    “இதான் டிஃபீடிஸம். தோல்வி மனப்பான்மை.”
    “இது ஒரு மனப்பானந்மை. வெற்றியோ தோல்வியோ நாலு பேர் குத்தற முத்திரை. முத்திரைகளுக்கு வாழாம மனசுக்காக வாழ்கிறவனுக்கு இது விஷயமில்லே. தேர் அர்ஸோ மெனி மிஸ்ஃபிட்ஸ். நல்ல யோசிச்சா மிஸ் ஃபிட்ஸ் தான் மெஜாரிடி.”
    சிவா ஸ்பூனில் மற்றொரு பப்பாளிப் பழத்துண்டை எடுத்தவாறே பேசினான்.
    “நீயும் என்னைப் போலவே ஒரு கோழைதான் சிவா.”
    “ஆமா… நாம வாழ்க்கைக்கு வசதிகளுக்கு. அது நமக்கோ பிறருக்கோ இல்லாமப் போறதுக்கு ரொம்பப் பயப்படறோம்.”
    “தென்… நீ ஏன் பேனா எடுத்து எழுதறே. தன்னை விரும்புகின்ற நம்புகின்ற ஒருத்தியை ஏத்துக்க முடியாதவன்-அந்த பிரச்னைகளுக்குப் பயப்படறவன் என்ன எழுத்தாளன்?”
    அவன் அதிர்ச்சியுற்றான்.
    “பின்னாலே இந்தத் தோல்வி மனப்பான்மைக்கு கோழைத்தனத்திற்கு அழகான ஜோடனைகள் செய்து கதை எழுதுவே, பெரிய காதல் தோல்வி மாதிரி நீ இதைப் போஸ் பண்ணுவே”
    பிரீதாவிடம் இப்படி ஒரு பக்கத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.
    ‘நான் அப்படியா பிரீதா”
    “நீ மட்டுமில்லே. யூ மென், மோஸ்ட் ஆஃப்யூ ஆர் லைக் திஸ். ஒங்களுக்குப் பெண் வேணும்; பிரச்னைகள் இல்லாமே. லகுவா பொறுப்பு ஏத்துக்கனும்ணா ஒங்களுக்கு கசக்கும். எந்த சாக்கிலே கை கழுவலாம்னு யோசிப்பீங்க.”
    சிவாவுக்கு அவள் இன்னும் பேசட்டும் என்று ஒரு வெறி வந்தது.
    அவளுடைய வார்த்தைகள் உளித்தாக்கு போல் இறங்கி அவனைச் செதுக்கின.
    அவன் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்தான். வடிவமைப்பின் பரிணாமங்களில் உரிந்து உரிந்து வீழ்ந்தான்.
    “ஒங்களுக்கெல்லாம் காதல் வேணும். காதல் பிடிக்கும். அதன் பிரச்னைகளுக்கு நீங்க துடிதுடிப்பீங்க. ஆனா அது இன்னொருத்தருடையதா இருக்கணும். வென் இட் கம்ஸ்டு யூ. சமுதாயம்… தியாகம்… அது இதுண்ணு உங்க சுயநலத்துக்காக நீங்க போலிக் காரணங்களைத் தேடுவீங்க…”
    சிவா ஸ்பூனைக் கீழே வைத்து விட்டான்.
    இவள் வேறு பிரீதா. கொதிப்புற்றவள். வெடிக்கின்றவள்.
    மெய்மறந்து போய் அவன் கேட்டுக் கொண்டிருப்பது உறைத்த மாதிரி பிரீதா நிறுத்தினாள்.
    “ஸாரி சிவா.”
    “ப்ரொஸீட்… மேலே சொல்லுங்க. எக்ஸ்ப்ளய்ன் யுவர் செல்ஃப்.”
    அவள் முகம் குப்பென்று சிவந்தது.
    “ஐ டிட்ன்ட் மீன் யூ”
    “நோ… இட்ஸ் ஆல் ரைட்.. நானும் ஆண். அதே வர்க்கம், கேரி ஆன்.”
    அவள் உதட்டை மென்றுகொண்டே அவனை ஊடுருவுவது போன்று பார்த்தான். பிரீதாவின் கண்களிலிருந்து முத்து முத்தாக ஒரு மௌனத்தினிடையே நீர்த்துளிகள் உருண்டன.
    “பிரீதா” என்று ஒன்றும் புரியாமல் முனகினான்.
    அவள் சட்டென்று திரும்பி சமையலறைக்குப் போய் விட்டாள். பத்து நிமிஷம்… பதினைந்து நிமிஷம்… சிவா அங்கே ஒரு சம்பந்தமற்றவன் போன்று உட்கார்ந்திருந்தான்.
    அங்கே உட்கார்ந்திருப்பதா… எழுந்து செல்வதா என்று புரியாமல் கொஞ்சம் குழம்பினான்.
    சமையல் அறைக்கு உள்ளே போய் அவளை எந்த விதத்திலாவது தேற்ற வேண்டுமா என்று யோசித்தான்.
    பேசாமல் அங்கே உட்கார்ந்திருப்பதைத் தவிர தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்டவன் போன்று அமைதியாக சாஸரில் வைக்கப்பட்டிருந்த பப்பாளிக் கீற்றை ஸ்பூனில் கொஞ்சம் கொஞ்சமாக நறுக்கிக் கொண்டே அதை அருந்தாமல் வெறுமனே நறுக்கிக் கொண்டே அதன் சிதைவைக் கவனித்தான்.
    பதினைந்து நிமிஷம் கழித்து டிரஸ் மாற்றிக் கொண்டு வந்தாள். பிரீதா.
    பவுடர் டச்-அப் செய்திருந்தாள். அழுத முகமல்ல பழைய பிரீதா. இனிய, சுமுகமான, ஒளி பாய்ச்சுகின்ற பிரீதா.
    “சரி… நாம கௌம்புவோமா?” என்று அப்படி எதுவும் நடக்கவில்லை போன்று புன்னகையுடன் கேட்டாள்.
    “எங்கே?”
    “திஷ்யா வீட்டுக்குத்தான்”
    அவளை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறோம் என்பது சிவாவுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது.
    அவனும் எழுந்தான்.
    தொடரும்
    Share