பறவையே எங்கிருக்கிறாய்?

0

கவிஜி.

ஜன்னலோரம் இருந்த அந்தக் கட்டிலில் அவன் அமர்ந்திருந்தான். ஏதோ யோசனை! அவன் முகம் தெளிவாய் இருந்தது முடிவெடுத்த பின் சாகத் துணியும் தற்கொலைக்காரன் போல, முடிவெடுத்த பின் கொலை செய்யத் துணிந்த போர் வீரன் போல, தெளிவான மனநிலைக்குள் குழப்பத்தை தேடுபவன் போல. சற்று நேரத்தில் அவன் இதழ் மெல்ல விரிந்தது. அவன் ஜன்னலை உற்று நோக்கினான். ஏதோ சட சட, தட தடவென ஒரு சத்தம். அது கேட்டதினால் தான் அந்த சிரிப்பு உதிர்ந்திருக்க வேண்டும்.

“என்ன வந்திட்டியா பறவை”,என்றான், இரு புருவங்களையும் உயர்த்தியபடி.

அதே தட தட, சட சட சத்தம் ஜன்னலுக்கு பின்னால் கேட்டது. கேட்டுக் கொண்டே இருந்தது. ஆம், வந்து விட்டது அந்தப் பெயர் தெரியாத பறவை. ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான், தன் காதுகளை கூர்மையாக்கி. அறையெங்கும் ஒரு வித சூடு பரவியிருந்தது. அது அவனுள் எந்தவித முக மாற்றத்தையும், உடல் மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவன் பார்வை ஆங்காங்கே நிலை குத்தி நின்று கொண்டிருந்தது.

” ஆமா பறவை. உன் பேர் என்ன? எத்தன தடவ கேட்டாலும் நீ சொல்ல மாட்டேங்கற ம்..ம்… சரி விடு இப்ப, பேரா முக்கியம். வாழணும் அதுதான் முக்கியம்”

“நான் உன்னப் பத்தி யாருட்ட சொன்னாலும், என்னை பைத்தியக்காரன்னு சொல்றாங்க பறவை” என்று சட்டென நிறுத்தினான்.

மெல்ல தலையை இடது புறம் தூக்கி ஜன்னலைப் பார்த்தான். கொஞ்சம் திறந்திருந்த ஜன்னலில் எவ்வித அசைவும் இல்லை. பறவை கவனத்தோடு கேட்டுக் கொண்டிருப்பதாக உணர்ந்தான் புன்னகைத்துக் கொண்டான்.

“சரி விடு பறவை நான் பைத்தியமாவே இருந்துட்டுப் போறேன். இங்க எல்லாருமே, தான் பைத்தியம் இல்லங்கறத நிரூபிக்கத்தான் வாழறாங்க. ஆனா, நீயும் நானும் வாழ்றதுனால பைத்தியமா இருந்தா இருந்துட்டுப் போலாமே” என்று சொல்லி சிரித்தான். பின், அவனே தொடர்ந்தான் …

“ஆமா பறவை . நீ உயரமா பறக்கும் போது என்ன நினைப்ப? நாங்கெல்லாம் உயரமா பறக்கும் போது, உயிர் போகாம கீழ வரணும்னுதான் நினைப்போம். ஆனா நீ வரம் வாங்கின உயிர் ஆச்சே உனக்கு உன் மனசுதான் உயரம். இல்ல!,” என்று சொல்லி அமைதியானான். நன்றாக சுவரில் சாய்ந்து கொண்டு, இரு கால்களையும் குத்த வைத்து அமர்ந்து கொண்டான்

“பறவை. ஹலோ பறவை என்ன இருக்கியா? “என்றான் ஜன்னலைப் பார்த்தபடி.

அதே பட பட, சட சட சத்தம்.

“அதானே. என்னைப் புரிஞ்சுக்கற அழகான ஜீவனாச்சே நீ. நீயா என்ன விட்டு போவ?”

“நீ ஒண்ணும் கவலைப் படாத பறவை. இந்த மனுஷங்க, எப்பவுமே உன்னை புரிஞ்சுக்க மாட்டாங்க. உனக்காக செலவு செய்ய அவுங்ககிட்ட நேரம் இல்ல. ஏன்னா, எல்லாருமே அவுங்க நிழல் கூட ஓடற கூட்டந்தான் அவுங்களப் பத்தி யோசிக்காத. உன்ன மாதிரி பறவையா இருக்கிற வரம் இவுங்க யாருக்குமே இல்ல பறவை”

“நீ நடப்ப பறப்ப. நினைச்சா தூங்குவ. இந்த உலகமே உன்னுதுன்னு நினைப்ப உனக்கு ஜாதி இல்ல, மதம் இல்ல, அணுகுண்டு உனக்குத் தெரியாது. மின்சாரத்துக்கான சண்டைல நீ இருக்க மாட்ட. ஆனா உன் கனவு பெரிய கனவு. அந்தக் கனவுல வானம் இன்னும் பெருசா இருக்கும். எல்லாருக்கும் உன் சிறக கொடுத்துப் பறக்க வைப்பநீ. வேற வேற தேசம் போவ. உனக்கு எதிரிங்க யாருமே இல்ல. ஆயுதமும் தோட்டாவும் உன் தோட்டத்துல விளையாது. நீ அழ மாட்ட. அப்படியே அழுதாலும் அது யாருக்குமே தெரியாது. நீ எங்களயெல்லாம் விட பெரிய ஆள் பறவை.”

“உன்னால மத்தவங்களுக்கு எப்பவுமே ஒரு தீங்கு கூட வராது. எறும்பு கூட உன்ன கடிக்காது பறவை. மழையையும், வெயிலையும், இலையுதிர்தலையும், பனியையும் அப்படியே வாங்கிக்குவ.”

“நீ குடைகளற்ற உயிர் பறவை இதெல்லாம் விட, ஒரு உயிர் பேசுறத எந்த இடையூறும் இல்லாம கேக்கற மனப்பக்குவம் இருக்கே. அதுல நீ தான் பறவை உச்சம். என்ன சிரிப்பு வருதா? சிரி பறவை, சிரி. இங்க எல்லாருமே ஒண்ணுதான். நீ நீயா இருக்கறதும், நான் நானா இருக்கறதும், எல்லாமே ஒண்ணுதான்” என்றபடியே மெல்ல எழுந்து ஜன்னலில் எட்டிப் பார்த்தான்.கண்கள் கலங்கியபடி.

கால்களில் சங்கிலி கட்டிய அந்த அலங்கோல பெண் மெல்ல தலையாட்டியபடியே நடந்து போய்க் கொண்டிருந்தாள்.

அங்கே ஒரு பறவையின் இறகு விழுந்து கிடந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.