Blog

  • நாற்காலியில் இடமில்லை

    –மாதவ. பூவராக மூர்த்தி.

    இந்தக்  காலக் கட்டத்தில் விதவிதமான நாற்காலிகள் வந்து சின்னக் குழந்தைகள் கூட நாற்காலியில் உட்காரும் போது இப்படி ஒரு தலைப்பு கொஞ்சம் புதுமையாகவும் முரணாகவும் இருக்கும். ஆனால் நாற்காலி ஆசை மனிதனின் ஆழ்மனதில் குடிகொண்டிருக்கும் ஒரு எண்ணம் என்று கருதுகிறேன்.

    ஸ்டூல், பெஞ்சு, திண்ணை, ஊஞ்சல், பலகை, தாழ்வாரத்துக்கும் முற்றத்துக்குமான மேடான பகுதி, பாய், ஜமுக்காளம் என்பதே அந்த காலத்தில் உட்கார உபயோகமாகும் வஸ்துக்களாக இருந்தது. நாற்காலிகள் கை வைத்த மர நாற்காலிகள் மிகப் பெரிய மனிதர்கள் வீட்டில் மட்டுமே காணக்கிடைக்கும். அதன் பிறகு சோபா வந்தது. சாய்வு நாற்காலி வயதானவர்களுக்காக வந்தது. இன்று நாம் கம்புயூட்டர் முன் உட்காரப் பயன்படுத்தும் சுழல் நாற்காலிகள், அலுவலகத்தில் மேனஜர் அமர மட்டுமே பயன் படுத்திய காலம்.

    அந்த வயதில் நான் பார்த்த சுழல் நாற்காலிகள் மாணிக்கம் ஸலூனில்தான் உண்டு. சின்ன வயதில் கிராப்பு வெட்டும் அனுபவம் இன்னும் பசுமையாக இருக்கிறது. உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தோன்றியது.

    பிறந்ததிலிருந்து கோவில் வேண்டுதல்கள் என மூன்று வருடங்கள் முடி காணிக்கை கொடுத்தே காலம் கடந்து விட்டது. நான்கு வயதில் ஒரு நாள் அப்பா தான் முடி வெட்டிக்கொள்ளப் போகும் போது கூட என்னையும் அழைத்துக் கொண்டுப் போனார்.

    மாணிக்கம் சலூன் கடைத்தெருவில் ஒரு சந்துக்குப் பக்கத்தில் இருக்கும். மாணிக்கத்தை நான் முதல் முறை பார்க்கும் போது அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கும். உள்ளே இருப்பவர்கள் எத்தனைப் பேர் என்று தெரியாத மாதிரி வாசல் கண்ணாடித் தட்டியில் பச்சை வர்ணம் பூசியிருக்கும். ஸ்பிரிங் கதவு மட்டும் நிலையில் நடுவில் பொருத்தப்பட்டிருக்கும். கதவு திறக்கும்போது மட்டும் உட்புறம் ஒரு கணம் தெரிந்து மறையும்.

    மாணிக்கம் வெற்றிலை போடுபவர். அடிக்கடி கதவை லேசாகத் திறந்து துப்ப வருவார். அப்போது வாசலில் நின்று யோசனையுடன் இருப்பவர்களைப் பார்த்து “வாங்க சாமி, அடுத்தது நீங்க தான் என்பார்”.

    அவர் வார்த்தையை நம்பி உள்ளே போனால் இருக்கும் மூன்று நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மூவரும், கண்ணாடிக்கு கீழே போடப்பட்ட பெஞ்சில் ஒரு நாலு பேரும் இருப்பார்கள். நாம் யோசனையுடன் போனால் தம்பிக்கு ஷேவிங் மட்டும் தான் என்பார்.

    barber shopசலூனின் உட்புறம் நான் பார்த்த முதல் சொர்க்கம். காரணம் முகம் பார்க்க எங்கள் வீட்டில் ஒரு பெரிய கண்ணாடி கூடத்தில் இருக்கும். அது வீட்டுப் பெரியவர்களின் உயரத்துக்குத் தகுந்தபடி ஒரு ஐந்து அடியில் ஒரு ஆணியில் கம்பிகட்டி சற்றுச்  சாய்வாக ஒரு கட்டையில் நிற்க வைத்து இருப்பார்கள். கண்ணாடிக்கும் சுவருக்கும் இடையில் கிராப்பு சீப்பு வைக்கப்பட்டிருக்கும்.

    என்போன்ற உயரக்குறைவான குழந்தைகள் கையில் வைத்துக் கொள்ளும் முகம் பார்க்கும் கண்ணாடியில்தான் பௌடர், பொட்டு அல்லது விபூதி வைத்துக் கொள்வோம். என்னை முழுவதுமாக பார்த்துக் கொள்ள நான் கூடத்துக் கண்ணாடியின் முன் தாழ்வாரத்தில் நின்றால் தான் என் உயரத்துக்கு என்னைப் பார்க்க முடியும். அந்த தொலைக்காட்சியில் நான் பார்த்த உருவம் இந்த சலூனில் மிக அருகில் பார்க்கும்போது நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்று என்னை பெருமிதம் அடையச்செய்யும்.

    நான்கடையின் வாசலில் நுழைந்து கடையின் உள்ளே போனபிறகு அந்தத் தெருமுழுவதும் அந்தக் கடை விரிந்திருப்பதாகத் தோற்றம் தரும். காரணம் இரண்டு பக்கச் சுவர்களிலும் பொருத்தப் பட்டிருக்கும் நிலைக்கண்ணாடிகளில் மாறி மாறித் தோற்றம் விழுந்து வெகு தொலைவை வரை நாம் தெரிந்துகொண்டிருப்போம்.

    பெரும்பாலும் சலூன்களில் கடிகாரம் இருக்காது. நேரம் ஆவது தெரியாமல் இருக்க இது ஒரு உத்தி. தினத்தந்தி, ராணி, மற்றும் அழகிய பெண்களின் உருவம் போட்ட ஆங்கில பத்திரிக்கைகள் பெஞ்சில் நிறைந்து நம் கவனம் ஈர்க்கும். எங்கள் வீடுகளில் வராத அந்த தினத்தந்தியில் நான் வருடக் கணக்காக சலூன் போகும்போது மட்டும் கன்னித்தீவு படித்திருக்கிறேன்.

    சுவரில் சிங்கப்பூர் காலண்டரில் சீன ஜப்பான் அழகிகள் குறைவான உடைகளில் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது என் பதின்ம வயதுகளில் தான் என் கண்ணில் பட்டு மனதில் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது.

    barber shop1கண்ணாடி முன் மேஜையில் நிறைய சின்ன பாட்டில்களும் டப்பாக்களும் வைக்கப்பட்டிருக்கும். ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலின் வாயில் வளைவான ஒரு குழாய் பொருத்தப் பட்டிருக்கும். மாணிக்கம் அதை எடுத்து நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் மேல் பீச்சுவார். சிதறல்கள் முகத்தில் தலையில் பட்டவுடன் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

    வைத்தியர் சங்கம் என்று ஒரு அறிவிப்புப் பலகை இருக்கும். அதில் ஷேவிங், கட்டிங் கட்டணம் எழுதியிருக்கும் ஒரு தேதி குறிப்பிட்டு இன்று முதல் என்று எழுதியிருக்கும். பிரதி அமாவாசை, செவ்வாய் கிழமை கடை விடுமுறை என்று போடப்பட்டிருக்கும்.

    பெரும்பாலான ஊர் வம்புகளும், நடப்புகளும் அரசியலும் நான் சலூனில் இருந்த போதுதான் தெரிந்து கொண்டேன். கத்தியை  முகத்துக்கு மிக அருகில் வைத்து இருக்கும் போது மாணிக்கம் தன் கருத்தைச் சொல்லி நம் ஆமோதிப்பை வேண்டுவார். காயப்படவேண்டாமே என்று நாம் தலையசைக்க வேண்டியிருக்கும்.

    மூன்று நாற்காலிகளில் உட்கார்ந்திருப்பவர்கள் முழுவதுமாக மூடிவைத்திருப்பதால் அவர்கள் யாரென்று கட்டிங் முடிந்து துணியைப் பிரித்தவுடன் அவர் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்திருக்கும் போதுதான் தெரியும். மாணிக்கம் அவர் கையில் சீப்பு கொடுப்பார். அவர் நாற்காலிக்கு அருகில் கண்ணாடிக்கு மிக அருகில் போய் தலை சீவுவதைப் போல சீவிக்கொண்டே தன் முக அழகில் மயங்கிப் போவார். மாணிக்கம் அவரை நகர்த்த சுழல் நாற்காலியை லேசாக அசைப்பார். அவர் நகர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணம்கொடுத்து மீதி வாங்கிக்கொண்டு கண்ணாடியில் இன்னொமொரு முறை ரசித்துக் கொண்டே இறங்குவார்.

    அப்பா அடுத்தது உட்காருவார். தெருமுழுக்க அப்பா முகம் தெரியும். தலைமீது தண்ணீரை அந்த பாட்டிலால் போட்டு மாணிக்கம் கட்டிங் ஆரம்ப்பிப்பார். நனைந்த முடிகள் அப்பாவில் நாற்காலியைச் சுற்றிலும் சிதறும். புல் வெட்டுவது போல் ஒரு மிஷினை உபயோகப் படுத்துவார். அதன் பின் மாணிக்கம் கடையின் மூலையில் தொங்கவிட்டிருக்கும் பெல்டில் கத்தியைத் தீட்டுவார். அவர் முகத்தைப் பார்க்கவே மதுரை வீரனைப் போல இருக்கும். பயமாக இருக்கும். அவர் கத்தியை அப்பா முகத்தில் பூசிய நுரையில் மீது படரவிடுவார். முடிந்தவுடன் படிக்காரத்தால் முகத்தில் தேய்த்து விடுவார். அப்பாவின் முகம் ஜொலிக்கும்.

    அப்பா அவரது அரியணையிலிருந்த்து இறங்கியவுடன் அவரது வாரிசான என்னை அதில் அமரச்செய்வார். நாற்காலியில் சுழலும் அனுபவம் பெற முயலும் என் ஆர்வத்துக்குத் தடை போடுவார் மாணிக்கம். “வாங்க தம்பி உட்காருங்க” என்று சொல்லிய வாறே கீழிருந்து ஒரு மரப்பலகை எடுத்து நாற்காலியின் கைப்பிடிகளுக்கு இடையில் வைத்து அதில் என்னைத் தூக்கி உட்காரவைப்பார். என் கைகளை வளைத்து மெதுவாக என் தொடைகளின் மேல் வைத்து விட்டு வெள்ளைத்துணியால் என்னை முகம் மட்டும் தெரியுமாறு மூடிவிடுவார்.

    மண்ணில் புதையுண்டு போனமாதிரி முகம் மட்டும் தெரியும். நாற்காலியில் உட்காரமுடியவில்லை என்கிற வருத்தத்தைக் கண்ணாடி தெளிவாக எனக்குக் காட்டும். அப்பா பக்கத்தில் நிற்பார். மாணிக்கம் தண்ணீர் பீச்சும்போது முகத்திலும் தெறித்துச் சில்லிடும். அந்த மிஷினை  அசைத்துக் கொண்டே ஒரு கையால் தலையை முன்பக்கம் அழுத்துவார். பின் மண்டையில் மிஷின் ஓட்டப்படும். குறுகுறு என்கும். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் ஆசையில் தலையை மெதுவாகத் தூக்குவேன். தெரிவதற்கு முன் மாணிக்கத்தின் கை அதை அழுத்தி விடும். என் பல முயற்சிகள் பல தடவை முறியடிக்கப்படும். சில சமயம் மாணிக்கம் “ஸ்” என்று சப்தமெழுப்புவார், “அசைக்கக்கூடாது” என்பார். சில உதிர்ந்த முடிகள் கண்ணுக்கு அருகிலும், கன்னத்திலும் விழுந்து உறுத்தும். கை வெளியே எடுக்க முயற்சிப்பேன். முடியாது… ஒரு வழியாக முடித்து என் தலைக்கனம் குறைத்து அழகாகச் சீவி விடுவார்.

    கொஞ்சம் கொஞ்சமாகக் காம்ப்ளான் குடிக்காமலேயே வளர்ந்தேன். அந்த நாள் நான் சற்றும் மறக்க முடியாத நாள். அந்த முறை முடிவெட்டத் தனியாக போயிருந்தேன். “தம்பி வாங்க” என்று அழைத்து எனக்கு அரியணை தரலாம் என்று முடிவு செய்து நாற்காலியின் குஷனை ஒரு தட்டு தட்டி உட்காரலாம் என்பது போல் செய்கை செய்ய நான் ராஜராஜ சோழன் போல் அரியணையில்  ஏறி அமர்ந்து ஒரு பெருமிதத்துடன் என் எதிரில் தெரிந்த கண்ணாடியில் என் உருவத்தை, அதன்  கம்பீரமானப் பொலிவைப் பார்த்துக் கொண்டேன். எனக்குப் பிடித்திருந்தது.

    அதன் பிறகு எத்தனையோ சுழல் நாற்காலிகள், பல் டாக்டரிடம், கண்டாக்டரிடம், அலுவலகத்தில் …. அவைகள் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்க வில்லை. எனக்கு முதல் சந்தோஷத்தைக் கொடுத்த மாணிக்கம் சலூனின் சுழல் நாற்காலி அனுபவம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது மறுபடியும் அதை உணர்கிறேன்.

    படம் உதவிக்கு நன்றி:
    http://www.rangaprabhu.com/buzz/
    http://swipelife.com/2011/03/shop-review-chief-barber-shop/

    Share
  • குறளின் கதிர்களாய்…(38)

    -செண்பக ஜெகதீசன்

    கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

    போக்கு மதுவிளிந் தற்று.     (திருக்குறள்-332: நிலையாமை)

    புதுக் கவிதையில்…

    கூடிடும் கூட்டம் அவையில்          shenbaga jegadesan for kuthattu
    கூத்தாடும் காட்சி காண,
    கலைந்திடும் அதுவே
    காட்சி முடிந்ததும்…

    இதுதான் கதை-
    பெருஞ்செல்வம் சேர்வதும்
    பின்னர் விட்டுப்போவதும்…!

    குறும்பாவில்…

    கூத்துசபை வரும் கூட்டம்
    போவதுபோல் போய்விடும்,
    செல்வந்தனிடம் சேரும் பணமும்…!

    மரபுக் கவிதையில்…

    கலையாம் கூத்து நடக்கையிலே
        காண வந்திடும் ரசிகர்களும்
    கலைந்தே செல்லுவர் முற்றிலுமாய்
        காட்சி முடிந்ததும் சபைவிட்டே,
    மலைபோல் செல்வம் சேர்ந்துவந்து
        மனிதனைச் செல்வனாய் ஆக்கிடினும்
    நிலைப்ப தில்லை அவனிடமே
    நீங்கிச் சென்றிடும் அவனைவிட்டே…!

     லிமரைக்கூ…

    கூத்து முடிந்ததும் அவைகலையும் கூட்டம்,
    சேர்ந்த பணமும்
    சிலநாளில் கைவிட்டு ஓடியேவிடும் ஓட்டம்…!

    கிராமிய பாணியில்…

    கூத்து கூத்து தெருக்கூத்து
    கூட்டம் கூடிடும் தெருக்கூத்து,
    ஆட்டம் பாட்டம் முடிஞ்சதுமே
    பாக்க வந்த கூட்டமெல்லாம்
    பறந்து போவும் எடத்தவுட்டே…

    பணத்து கதயும் இதுதானே,
    சேந்து வந்த பணமெல்லாம்
    கூத்துசப கூட்டம்போல
    சேந்து போயிரும் பாத்துக்க…!

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 38

    கே. ரவி

    கடவுள் நம்பிக்கை எப்படி என் நெஞ்சில் நுழைந்தது என்றா கேட்டேன்? எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும் போதே, தினமும் கந்தர் சஷ்டிக் கவசம் சொன்னது நினைவு வந்தது. நான் எழுதிய முதல் கவிதையே “அகத்திய முனிவரின் அகத்தினில் உதித்தவள்” என்றுதானே தொடங்கியது? அதை அடுத்து நான் எழுதிய கவிதை, “வேலவனின் வேலினிலே விளங்கி நிற்கும் செந்தமிழே” என்றுதானே அமைந்தது? அப்படியென்றால், அப்பொழுதே என் நெஞ்சில் கடவுள் நம்பிக்கை வேரூன்றியிருந்ததே! நடுவில் நான் சிறிது தடுமாறி விட்டேனோ?

    இப்பொழுது நினைத்துப் பார்த்தால், அதன் காரணம் சற்று விளங்குகிறது. தமிழ் சரியாக எழுதத் தெரியாத காரணத்தால் வகுப்பில் நேர்ந்த அவமானம், என்னைச் சில மாதங்களுக்குள் தமிழில் கவிதை எழுதும் அளவுக்கு வளர்த்துவிட்ட கதையை முன்பே சொல்லி விட்டேன். இதனால், தமிழ், தமிழ் என்று ஒரு தாகம் என்னுள் ஊற்றெடுத்தது. அதே சமயத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் மிகவும் ஈடுபட்டேன். அந்த காலக்கட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர் கிளர்ச்சி எழுந்த அரசியல் வரலாறு நமக்குத் தெரிந்ததுதான். அந்தக் கிளர்ச்சியின் போது அதில் ஈடுபட என்னை ஊக்குவித்தவர் என் தமிழாசான் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன். வகுப்பில் அவர் ஆற்றிய வீர உரையால் தூண்டப்பட்டு, எங்கள் பள்ளி மாணவர்களைத் திரட்டிக் கொண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து ஊர்வலம் போனதும், கைவிரலைக் கீறி ரத்தக் கையெழுத்திட்டதும் நினைவுக்கு வருகிறது. அந்த ஈடுபாட்டின் காரணமாக, மொழிப்பற்றின் காரணமாக, அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய அரசியல் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டேன். 1967-ஆம் ஆண்டுத் தேர்தலில் அண்ணாவின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் பெரிதும் மகிழ்ந்தேன். பாவேந்தர் கவிதைகளும், பகுத்தறிவுப் பாசறை என்று பறைசாற்றிக் கொண்ட அரசியல் இயக்கமும் என் கடவுள் நம்பிக்கையைப் பின்னுக்குத் தள்ளி மறைத்து விட்டன என்பதே சரி. அத்துடன், எதையும் தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்க்கும் தீவிரமும் சேர்ந்து கொண்டது. ஆனால், நான் எப்பொழுதும், கடவுள் மறுப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்ததில்லை. கடவுள் உண்டு என்று நிறுவ முடியாத நிலையில், எந்த அனுபவமும் எனக்கு அதற்கு உதவாத நிலையில், கடவுள் உண்டா இல்லையா என்று எனக்குத் தெரியாது, அப்படியே இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும் என்ற நினைப்புடன் சில காலம் இருந்து விட்டேன்.

    இந்த காலக்கட்டத்தில்தான், சிந்தனைக் கோட்டத்தில் மாஸ் பிரேயர் என்ற கூட்டு வழிபாடு நடத்தத் தொடங்கியிருந்தோம். அதில் பக்திப் பாடல்கள் பாடுவோம். தெய்வம் உண்டா, இல்லையா என்று தெரியாது என்று சொல்லிக் கொண்டே நானும் அந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் தவறாமல் கலந்து கொண்டு, மிகவும் சிரத்தையோடு மற்றவர்கள் பாடல்களைப் பாடுவதோடு நானும் பக்திப் பாடல்கள் எழுதிப் பாடிக் கொண்டிருந்தேன். அது ஒரு வினோதமான நிலை.

    அதன் பிறகு நான் தத்துவப் பாடம் படிக்கத் தொடங்கிய கதையை முன்பே சொல்லி விட்டேன். தத்துவ மேதைகளின் தர்க்கமும், வாதங்களும் என்னை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தின. தெளிவான விடை கிட்டவில்லை. ஒருபுறம் இம்மானுவெல் கன்டின் வாதம், மறுபுறம் சங்கரரின் அத்வைதக் கொள்கை! நடுவில், ஏனென்றே தெரியாமல் என்னை ஈர்த்த விவேகானந்தரின் எழுச்சியூட்டும் எழுத்துகள்! ஒரே போராட்டம்தான்! எல்லாவற்றையும் விட, மஹாகவி பாரதியாரின் அதிதீவிரமான பக்திப் பாடலகளும், சக்திப் பாடல்களும் எனக்குள் ஏற்படுத்திய கிளர்ச்சி!

    அப்போதுதான், என் வாழ்வில் சில சம்பவங்கள் நிகழ்ந்தன.

    as2

    ஷோபனாவின் தம்பி, அதாவது, அவளுடைய சித்தியின் மகன், அவளுடனேயே வளர்ந்தவன், 1981-ஆம் ஆண்டு திடீரென்று தன் வாழ்வை முடித்துக் கொண்டான். இன்றளவும் அதன் காரணம் தெரியவில்லை. இதனால், ஷோபனா மிகவும் ஆழ்ந்த துயரத்தில் இருந்தாள். துயரம் ஒருபுறம் இருக்க, ஏன் இப்படி நடந்தது, என்ன காரணம் என்ற கேள்விகள் அவளை மிகவும் பாதித்தன. விடை கிடைக்காதா, இறந்த தன் தம்பிக்கு என்ன ஆயிற்று, யாராவது வந்து வெளிச்சம் காட்ட மாட்டார்களா என்று அவள் குழப்பத்திலும், விரக்தியிலும் மூழ்கியிருந்த போது, தொலைக்காட்சியில் விளையாட்டுத் துறை வர்ணனையாளராக இருந்த முரளி என்பவர் ஷோபனாவின் நிலையை அறிந்து, தனக்குத் தெரிந்த ஒருவரை மனோவசிய நிபுணர் என்று சொல்லி அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்தான் டாக்டர் நித்யானந்தம். அறிமுகம் ஆன சில நாட்களிலேயே அவரைத் தன் ஆன்மிக குருவாக ஷோபனா ஏற்றுக் கொண்டதோடு என்னையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள். கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த எனக்கு உடனே ஆன்மிக நாட்டம் ஏற்படவில்லை. இருந்தாலும், ஷோபனாவின் உள்ளூக்கத்தில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. அவள் சொன்ன செய்திகளை அலட்சியம் செய்யாமல் கேட்டு உள்வாங்கிக் கொண்டேன். ஷோபனா டாக்டரிடம் தீட்சை பெற்று விட்டதை என்னிடம் சொன்னாள். அவளுடன் சேர்ந்து தொலைக்காட்சி நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்த எழுத்தாளர் சு.சமுத்திரம், அனந்த பத்மனாபன் இருவருக்கும் டாக்டர் தீட்சை வழங்கியதை அறிந்தேன். எனக்கும் அப்படி ஓர் அனுபவம் நேரிடாதா என்ற எண்ணம் ஏற்பட்டது.

    அன்று மாலையே, எப்பொழுதும் போல், வீட்டு மொட்டை மாடியில் சென்று காற்றாட அமர்ந்தேன். அப்படித்தான், காற்று வாங்கப் போய் நிறைய கவிதைகள் அவ்வப்போது வாங்கி வந்திருக்கிறேன். அன்று எப்பொழுதும் போல் அமர்ந்திருந்த என் கண்கள் தாமாக மூடிக் கொண்டன. ஏதோ ஒரு தியான நிலைக்கு யாரோ என்னை அழைத்துச் செல்வது போல் உணர்ந்தேன். சிறிது நேரத்தில், இதெல்லாம் வெறும் பிரமை என்று ஒதுக்கி விட்டுக் கண்களைத் திறந்த போதுதான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அதைச் சொல்வதற்கு முன், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இரண்டு சம்பவங்களைச் சொல்லியாக வேண்டும்.

    as3என் அண்ணன், அதாவது, என் சித்தியின் மகன், ஶ்ரீதர், மிகவும் தெய்வ பக்தி உள்ளவன். அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆண்டுதோறும் சபரி மலைக்குச் சென்று கொண்டிருந்தான். நான் அப்போது சபரிமலைக்குச் சென்றதில்லை. என் குடும்பத்திலேயே, என் உடன்பிறந்த சகோதரர்களைக் காட்டிலும் ஶ்ரீதரிடம் எனக்கு நெருக்கமும் பாசமும் அதிகம். 1983-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், ஒருநாள் அவன் என்னை மயிலையில் உள்ள ஷீர்டி சாயிபாபா கோவிலுக்குப் போகலாமே என்று அழைத்தான். பாபாவைப் பற்றிப் படித்திருந்தேன். அவருடைய எளிமைத் தோற்றம் என்னை ஓரளவு கவர்ந்திருந்தது. சரி போகலாம் என்று சொல்லி அவனுடன் சாயிபாபா கோவிலுக்குச் சென்றேன். அங்கே நான் எதுவும் பிரார்த்தனை செய்யவில்லை. வெளியே வந்து தெருவில் நடந்து கொண்டிருந்த போது, ஶ்ரீதர் என்னிடம் சாயிபாபா பற்றி ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டான். பார்க்கலாம் என்றேன். அத்துடன் விடாமல், “சங்கம்” என்ற ஹிந்திப் படத்தில் முகேஷ் பாடிய “தோஸ்த் தோஸ்த் நா ரஹா” என்ற பாடல் மெட்டிலேயே பாபா பற்றிய பாடல் அமைய வேண்டும் என்ற ஒரு விசித்திரமான விண்ணப்பத்தையும் வைத்தான். அவன் சொல்லி முடிக்கும் முன்பே, நான் மெல்லப் பாடத் தொடங்கி விட்டேன்: “சாயிராம் சாயிராம்” என்று, அதுவும் அவன் கேட்டுக் கொண்ட மெட்டிலேயே.

    சாயி ராம் சாயி ராம் சாயி ராம் சாயி ராம்

     

    தாயின் கருணை சாயி ராம் – ஒளிas4

    தவழும் வதனம் சாயி ராம்

    நேய உணர்வு சாயி ராம் – என்றும்

    நிலைக்கும் உறவு சாயி ராம்

     

    தூய மனமுன் ஆலயம்

    தீப ஒளியுன் ஆசனம்

    தேகம் எடுக்கும் ஆணவம் – அதைத்

    தடுக்கும் உன் அருட்கரம்

     

    நீரும் நெருப்பும் சேருமோ – உன்

    நிழலில் துயரம் தோன்றுமோ – உன்

    பார்வை அழைக்கும் போது – மனம்

    பாதை மாறிப் போகுமோ

     

    சாயி ராம் சாயி ராம் சாயி ராம் சாயி ராம்

    இந்தப் பாடலைப் பாடும் போது என் கண்களிலிருந்து என்னை அறியாமல் கண்ணீர் கசிவதை உணர்ந்தேன். அதில் உள்ள சொற்கள் மெட்டுக்காகக் கோக்கப்பட்ட சொற்கள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

    அடுத்த நாள், மீண்டும் ஶ்ரீதரும் நானும் சாயி பாபா கோவிலுக்குச் சென்றோம். திரும்பி நடந்து வரும்போது, ஶ்ரீதர் தன்னுடன் சபரி மலைக்கு வர முடியுமா என்று கேட்டான். யோசிக்கவே இல்லை. சரியென்று சொல்லி விட்டேன். நடந்து வரும் போதே, இன்னொரு பாடலையும் பாடினேன். ஆபோகி ராகத்தில் அமைந்த அந்தப் பாடலின் பல்லவி, பம்பை நதியில் விளக்குகள் மிதந்து செல்லும் காட்சியைப் பற்றி இருந்தது. சபரி மலைக்கு நான் சென்றதில்லை; பம்பை நதியைப் பார்த்ததில்லை; அதில் பக்தர்கள் விளக்குகள் மிதக்க விடும் செய்தியும் எனக்குத் தெரியாது. எப்படியோ பாடல் வந்தது:

    பம்பையிலே செல்லும் தீபங்களே – எங்கள்AYYAPPA

    நம்பிக்கையின் ஒளி ஓடங்களே

    பம்பையிலே செல்லும் தீபங்களே

     

    செந்தழல் போல்மேனி சீறும் புலியேறிக்

    கைகளில் வில்லேந்திக் காவல்செய் யும்தீரம்

    பந்தள ராஜன் மைந்தனைக் காண

    வந்தவர் பிணிதீர்க்கும் புண்ய நதி தீர்த்தம்

    பம்பையிலே செல்லும் தீபங்களே

     

    நெய்யபிஷேகத்தில் நெஞ்சுருகாதா

    கற்பூர தீபத்தில் கண்பனிக்காதா

    ஐய்யனைக் காணும் தருணம் வராதா

    ஆவலைத் தீர்த்து வைக்கும் ஆனந்த க்ஷேத்ரம்

     

    பம்பையிலே செல்லும் தீபங்களே – எங்கள்

    நம்பிக்கையின் ஒளி ஓடங்களே

    பம்பையிலே செல்லும் தீபங்களே

    [இந்தப் பாடலை என்னிசையில் நண்பர் ராஜகோபால் பாடியதைக் கேட்கச் சொடுக்கவும் —–]

    அந்தப் பாடல் வந்த அடுத்த நாள்தான், டாக்டர் நித்யானந்தத்தின் ஆன்மிகப் பாதையில் சேரலாமோ என்ற நினப்பு எனக்கு ஏற்பட்டது. அன்றுதான், நான் மொட்டை மாடியில் சென்று அமர்ந்து கொண்டேன். த்யான நிலைக்கு யாரோ என்னை அழைத்துச் செல்வது போன்ற உணர்வை பிரமை என்று அலட்சியம் செய்துவிட்டுக் கண்ணைத் திறந்தால், அந்த மொட்டை மாடியின் சுவரின் மேல், ‘4’ என்ற வடிவில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு, ஒரு கிழவர் அமர்ந்திருந்தார். கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தால் அவர் அங்கே இல்லை. மாலை மயக்கமோ? திரும்பினேன், பின்னால் சுவரில் அதே கிழவர், வெள்ளைத் தாடி! மீண்டும் மறைந்தார். திரும்பினால், முன்னால் சுவர் மேல் மீண்டும் அவர், சாயி பாபாவேதான்! எனக்குச் சற்று பயமாக இருந்தது. ஆனால் உற்றுப் பார்த்தேன். அவர் முகம் மட்டும் கருப்பாக, டாக்டர் நித்யானந்தத்தின் முகச்சாயலில் தெரிந்தது. விரைந்து மாடியில் இருந்து இறங்கி வந்து விட்டேன். அது நடந்த சில நாட்களிலேயே நானும் டாக்டரின் ஆன்மிகப் பாதையில் சேர்ந்து விட்டேன்.

    எப்படியோ, கடவுள் பற்று இல்லாமல் இருந்த நான், சபரி மலைக்கு வருவதாக ஶ்ரீதரிடம் வாக்களித்ததும், டாக்டரின் ஆன்மிகப் பாதையில் சேரும் முடிவுக்கு வந்ததும் ஒரே சமயத்தில் நடந்துவிட்டன. என் வாழ்வில் ஓர் அதிசயமான திருப்புமுனையாக அந்த நிகழ்ச்சிகள் அமைந்தன! அதன்பின் காற்றில் அடித்துச் செல்லப்படும் இலவம் பஞ்சு போல நான் வேகமாகப் பறந்து கொண்டிருந்தேன்.

    (தொடரும்)

    Share
  • நீ ஒரு கற்பகத் தரு!

    -விசாலம்

    நிலவாக உன்னை நினைத்தாலோ,
    காலை காணாமல் போய்விடுவாய்
    மலராக உன்னை நினைத்தாலோ
    ஒருநாளில் நீ உதிர்ந்து விடுவாய்,
    வானவில்லாக உன்னை நினைத்தாலோ
    கணநேரத்தில்  நீ  மறைந்துவிடுவாய்,
    பனித் துளியாக  உன்னை நினைத்தாலோ
    வெயில்பட  மறைந்து  விடுவாய்,
    அலைகளாக உன்னை  நினைத்தாலோ
    காலை முத்தமிட்டு ஓடிவிடுவாய்,
    மலையாக உன்னை நினத்தாலோ
    கல்மனம் போல்  நீ  மாறிவிடுவாய்.
    நீராக உன்னை  நினைத்தாலோ
    பனிக்கட்டி போல் உறைந்து விடுவாய்,
    உன்னை நான் ஒன்றும் நினைக்கவில்லை
    எனக்கு நீ நீயாகவே இரு…
    என்றும்போல் நீ ஒரு கற்பகத் தரு!

     

    Share
  • வாராய் என் தோழி வாராயோ…

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    pasamalar
    மலராத பெண்மை மலரும்
    முன்பு தெரியாத உண்மை தெரியும்
    வாராய் என் தோழி வாராயோ…

    வாசம்தரும் மலர்கள் ஆயிரம் இருக்கலாம்!  ஆனால் பாசம் தரும் மலரல்லவா – பாசமலர்?  அண்ணன் – தங்கை உறவை அற்புதமாய் சொன்ன படம்!  எண்ண அலைகளாய் என்றும் நினைவுகளில் நீந்தும் படம்!  நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் இணைந்து நடிப்பில் இமயமென உயர்ந்த படம்!! கருப்பு வெள்ளையில் திரையில் வடித்த இக்கவிதையை இயக்கியவர் திரு.ஏ.பீம்சிங் என்பதை மறக்க முடியுமா?

    KANNADHASAN - VISWANATHAN - RAMAMOORTHY          A Bhimsingh          lr-eswari

    இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் – பாடல்பெற்ற ஸ்தலங்களாய் பரிணமிக்கின்றன.  விஸ்வநாதன் ராமமூர்த்தியின் கற்பனை மெட்டுக்களுக்கு கவியரசு கண்ணதாசன் வார்த்தை முத்துக்களை வழங்கி ஒரு விழாவே நடத்தப்பட்டிருக்கிறது.  தரமான குடும்பப்படம் எடுப்பதில் தன்னிகரற்று விளங்கிய இயக்குனரின் கைவண்ணத்தில் மிளிரும் இப்படம் தமிழ்த்திரைச் சரித்திரத்தில் ஒரு மைல்கல்!!  குரல் தந்த பின்னணி பாடகர்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா, பி. பி. ஸ்ரீநிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகிய பலரும் நம் நெஞ்சில் நிறைகிறார்கள்.

    அன்றுவரை பின்னணி கோரஸில் பாடிவந்த செல்வி எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் முதன் முதலாக முன்னணிக்கு வந்து முழுமையாகப் பாடிய முதல்பாடலிது என்பதுதான் இப்பாடலுக்கான முதல் தகவல்!  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட  இப்பாடகி தமிழ்த்திரையில் தனது முத்திரையை பதித்து உலா வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.  இன்றுவரை அந்நன்றியை மறவாதவராய் விளங்கும் எல்.ஆர்.ஈஸ்வரியைக் காண்கிறோம்!

    முதல் பாடலே முத்தான பாடலாய்.. ஒரு வரவேற்பு பாடலாய் அமைந்த பல்லவியைப் பாருங்கள்.. அதுவும் சூப்பர் ஹிட்!!

    இப்பாடலில் உள்ள மற்றுமொரு சங்கதி.. அன்றைய காலக்கட்டத்தில் தணிக்கைக் குழுவிற்கு திரு.சாஸ்திரி என்பவர் தலைவராக இருந்தார்.  கண்டிப்புக்கு பெயர் போனவர்.  தணிக்கைக்குழுவில் இப்பாடல் உட்படுத்தப்பட்டபோது, கவிஞருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  கவிஞரே.. இப்பாடலில் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம் – கத்தரி வைக்கச் சொல்கிறது. ஆனால் சொல்லியிருக்கும் விதம் – கத்தரிக்க விட மாட்டேன் என்கிறது.  என்ன செய்வது என்று கவிஞரிடம் வினவினார் சாஸ்திரி அவர்கள்.

    கவிஞரின் பேனா முனையில் பூத்த அந்த வரிகளில் பெண்மையின் கெளரவம் மலர்ந்து கிடக்கிறது.  இதைவிட எப்படி அந்த விஷயத்தைச் சொல்லிவிட முடியும் என்று படிப்பவரை மட்டுமின்றி கேட்பவரையும் வியக்க வைக்கிறது.

    மலராத பெண்மை மலரும் – முன்பு
    தெரியாத உண்மை தெரியும்!

    பாசமலர் திரைக்காவியத்தின் பாடல்கள் அனைத்தும் பரிபூரண சுகமானவை என்பதைப் பகர்வதற்கு இப்பாடலும் சத்திய சாட்சி!

    இது கவிதைக் கோமகன் கண்ணதாசனின் அரசாட்சி!!

    காணொளி: http://www.youtube.com/watch?v=u1ZCYDXjqTI

    படம்: பாசமலர்
    பாடல்: கவியரசு கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    குரல்: எல்.ஆர்.ஈஸ்வரி

    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ..
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ..

    மணமேடை தன்னில் மனமே நாணும்
    திருநாளைக் காண வாராயோ
    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ..

    மணக்கோலம்கொண்ட மகளே..
    புது மாக்கோலம் போடு மயிலே
    குணக்கோலம் கொண்ட கனியே
    நம் குலம் வாழ பாடு குயிலே..
    சிரிக்காத வாயும் சிரிக்காதோ..
    திருநாளைக் கண்டு மகிழாதோ..

    தனியாகக் காண வருவார்
    இவள் தளிர் போல தாவி அணைவாள்
    கனி போல சேர்ந்து மகிழ்வாள்
    இரு கண் மூடி மார்பில் துயில்வாள்
    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ..

    மலராத பெண்மை மலரும்
    முன்பு தெரியாத உண்மை தெரியும்
    மயங்காத கண்கள் மயங்கும்
    முன்பு விளங்காத சேதி விளங்கும்
    இரவோடு நெஞ்சம் உருகாதோ
    இரண்டோடு மூன்று வளராதோ..

    Share
  • நம் இந்தியாவில் அந்நிய முதலீடுகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியாவில் அந்நிய முதலீட்டை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், இன்றைய தேசிய முற்போக்குக் கூட்டணியும் சிவப்புக் கம்பளம் விரித்து, வரவேற்கின்றன. இது சரியான அணுகுமுறையா? அந்நிய முதலீடுகளை எந்தெந்தத் துறையில் அனுமதிக்கலாம் மற்றும் அதன் எல்லை எதுவரை என்பதை வரையறுக்கவேண்டியது அவசியம். அந்நிய முதலீடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்திய சந்தையில் விற்கப்படும் அளவு மற்றும் வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதியாகும் அளவையும் வரையறுக்கவேண்டும். இதன் மூலம் ஏற்படும் பரிவர்த்தனைகள் முழுதும் இந்திய ரூபாயில் இருந்தால் நன்மை பயக்கும். இதற்கு மாறான நிலையில் அந்நிய முதலீடுகளை வரவேற்கும் பட்சத்தில் பின்னாளில் நம்முடைய பொருளாதாரம் கேள்விக்குறியாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு எந்த வகையில் பயனுள்ள வகையில் இருக்கும் என்பதும் சிந்திக்கத்தக்கவை. உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் 1000 கோடி டாலருடன் இந்தியாவிற்குள் நுழைவதாக வைத்துக்கொண்டால், அந்தத் தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் அப்படியே இருக்கும். காப்பீடு செய்பவர்களின் தொகையும் அவர்களுடைய கணக்கில்தான் ஏற்றம் பெறும். பின்னொரு நாளில் காப்பீடு செய்தவருக்கு இழப்பு ஏற்பட்டால் அவரால் காப்பீடு செய்யப்பட்ட தொகையிலிருந்தே அதைக் கொடுக்க முடியும். அப்படியிருக்க காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு நமக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்? 57 ஆண்டுகள் கடந்துள்ள பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சொத்து மதிப்பு, இன்றைய தேதியில் பல லட்சம் கோடிகளைத் தாண்டிவிட்டது என்பது நிதர்சனம் இப்படியிருக்க காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை வரவேற்பது எந்த வகையில் பயனுடையதாக இருக்கும் என்பதைக் குறித்துக் ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.

    அடுத்து, பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டின் தலையீடு பற்றி பார்த்தோமானால், அனு ஆயுத ஆய்விலிருந்து விமான உதிரிப்பாகங்கள் வரை அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்தால் அது இந்திய இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாகவல்லவா அமையும்? நம்முடைய நாட்டின் பாதுகாப்பு வேற்று நாட்டவரின் கைகளில் செல்வது சரியானதாக இருக்குமா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. முதலீடு செய்தவர்கள் வருமானம் போதவில்லை என்ற காரணமோ. அல்லது வேறு ஏதோ காரணமோ காட்டி திடீரென்று ஒரு நாள் தங்கள் தொகையைத் திருப்பி எடுத்தால் நம் நாட்டின் பாதுக்காப்புத் துறை உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்படலாம். அதோடு மிக முக்கியமான ஒன்று நம்முடைய இராணுவ இரகசியங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படலாம். பாதுகாப்புத் துறை உற்பத்திகள் எதிர்பாராத சூழலில் நிறுத்தப்படும் அபாயமும் ஏற்படலாம்.

    உலகிலேயே மிக நீண்ட இரயில் பாதைகளையும், அதிகமான பயனீட்டாளர்களையும் கொண்டுள்ள ஒரே நாடு நம் இந்தியா மட்டும்தான் என்கிற நிலையில், இத்துறையில் அந்நிய முதலீடு தேவையா என்பதையும் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. புல்லட் ரயில் என்று சொல்லக் கூடிய அதிவேக ரயிலுக்காக சுமாராக 40,000 கோடி ரூபாய் ஒதுக்குவதும் அவசியமற்றது. சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், அவர்கள் தங்கள் சொந்த பொருளாதாரத்தைக்கொண்டே இதனை செயல்படுத்தினார்கள். ஒரு நாளில் ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய இரயில்களுக்கு இவ்வளவு பெரிய தொகை செலவு செய்வது தேவையற்றது. அவ்வளவு விரைவாக செல்ல வேண்டியவர்கள் விமானத்தில் பயணம் செய்யலாம். இரயில்வேத் துறையை சரியான முறையில் நிர்வாகம் செய்தால் இன்னும் இலாபகரமாக இயக்க முடியும் என்பதே வல்லுநர்களின் கருத்து.

    அந்நிய முதலீட்டை உற்பத்தித் துறையில் அனுமதித்தும், ஏற்றுமதியை ஊக்கப்படுத்தியும், இறக்குமதிக்கான பரிவர்த்தனை இந்திய ரூபாயிலும், இருந்தால் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவைப் போன்று நம் இந்திய பொருளாதாரமும் தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை!

    Share
  • நான் கொடுக்கவுமில்லை

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (39)

     

    நான் கொடுக்கவுமில்லை

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2/[/mixcloud]

    10420113_533031216798230_7817792460307062254_n

     

    நான் கொடுக்கவுமில்லை
    நீ எடுக்கவுமில்லை
    எந்தன் இதயத்தில்
    உந்தன் இடம்

    தானும் தானுமாய் இருந்தது
    நானும் நீயுமாய்ப் பிரிந்தது
    தேனும் பாலுமாய்க் கலந்தது
    வானும் வானுமாய் இணைந்ததோ?

    கிழக்கு ஜன்னல் வானமும்
    மேற்கு ஜன்னல் வானமும்
    மொட்டை மாடி வானத்தில்
    கைகுலுக்கி முத்தமிட்டுக்
    காணாமற்போய்த் தானானதோ?

    இல்லை. அப்படி இல்லை இன்னும்.

    இறுகத் தழுவிக்கொள்ளும் போதெல்லாம்
    இடம் மாறுகின்றன இதயங்கள்
    இதனால்தான்
    இழந்ததாகவும் நுழைந்ததாகவும் அடைந்ததாகவும்
    ஏதேதோ உணர்வுகளும் விழைவுகளும்
    எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன

    ஒன்று, தன்னை
    உணரத்தான்
    ஒன்றுபோல் இரண்டாய்
    இரண்டுபோல் ஒன்றாய்த்
    தானே மயங்கும் மாயத்தில்
    தயக்கமின்றித் தலைப்பட்டது

    சத்தியத்திற்குப் பாதைகள் கிடையாது, அந்த
    சந்நிதிக்குக் கதவுகள் கிடையாது, இது
    தத்துவமில்லை தரிசனம் என்பதைக்
    காதலைப்போல் வேறெதுவும் காட்டித் தராது

    என்னுயிரின் தேனூற்றே!
    எதிரே வா!
    இருமை இலாத அருமையை
    இருமையே உணர்த்தும் பெருமையை
    இவர்களுக்குக் காட்டுவோம் வா!
    இறுகத் தழுவியபடி
    இதழ்கள் அழுந்திப் பொருந்தியபடி
    இதயமொன்று இதயமொன்றில்
    இடைவிடாமல் தன்னைக் கரைத்தபடி……

    படத்திற்கு நன்றி

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    crazy

     

    “வாய்ராதை மூடிட, வேய்ங்குழல் ஊதுதல்,
    போய்கீதை யோகம் பிறந்தது: -தாய்வீதி,
    மண்ணுண்ட போது மிரட்டத் திறந்தாலும்,
    பெண்னன்புக்(கு) உண்(டு)அடைக்கும் பூட்டு”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    “இந்திர கர்வம் இடிமழை மின்னலாய்
    வந்திட கண்ணன்கோ வர்த்தனத்தை -தந்திட
    ஆயர் குடையாய், அடங்கி அவன்அரை
    DRAWER தாளில் தடால்”….அரை DRAWER -சின்னப் பையன் கண்ணன் என்றும் DRAWER கேசவ் என்றும் கொள்ளலாம்….
    (OR )
    ஆயர் குடையாய், அடங்கி அமரேசன்
    சேயவர் தாளில் சரண்”….கிரேசி மோகன்….

    crazy
    “தயிராய்ச்சி கண்ணிநுண் தாம்புக்குட் பட்டக்
    கயிறால் உரலிழுத்தக் கண்ணன் ; -அயிரா
    வதத்தோ(டு) அமரர்கோன் வீழ்ந்திட வைத்தான் ;
    இதத்தோ(டு) இருப்போர்க்(கு) இறை”….கிரேசி மோகன் ….

    Share
  • புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க..

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (38)

    புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க..

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AF/[/mixcloud]

    10609465_789022631159760_8447361610157700547_n
    உன்முகம் பார்த்துப் பார்த்துத்தான்
    ஒவ்வொரு காலையும் புலர்கிறது! அதில்
    உதிக்கும் புன்னகை தயவில்தான்
    உயிரும் உயிராய் மலர்கிறது
    என்மனம் என்றே எதுவுமில்லை
    இதயம் மட்டும் துடிக்கிறது, நீ
    எதிரே இருந்தும் எங்கே என்று
    ஏனோ பாவம் தவிக்கிறது…

    இதயம் என்பது உள்ளே இல்லை
    இரண்டு விழிகளில் சிரிக்கிறது
    இம்மியும் எனக்குத் துன்பம் வந்தால்
    இருகரம் ஒன்றாய் அணைக்கிறது
    கதைகள் கனவுகள் கற்பனை எல்லாம்
    கண்முன் தினமும் நடக்கிறது
    காலம் எந்தன் தலையணை அருகே
    கவிதைத் தாளாய்க் கிடக்கிறது

    ஒவ்வொரு சமயம் இருக்கின்றாயா
    என்றொரு கேள்வி குடைகிறது
    ஒவ்வொரு நேரம் உன்னைத் தவிர
    ஒன்றும் இல்லை புரிகிறது
    கவ்விய தாயின் வாயில், குட்டிக்
    கன்றாய்க் கிடக்கின்றேனே! உன்
    காதல் என்னும் காவல் ஒளியில்
    கண்ணைத் திறக்கின்றேனே!

    இதயக் கதவைத் திறந்து திறந்து
    எத்தனை முறைநான் பார்த்தாலும், அதன்
    இருண்ட மூலையில் புன்னகை நினைப்பை
    விளக்காய் ஏற்றிப் பார்த்தாலும்
    பதிந்து பதிந்து பரந்து விரிந்து
    பலவித வண்ண வடிவாக, உன்
    பாதம்! சதங்கை கீதம்! இவையே
    பார்த்து நெகிழ்கிறேன் என் தேவி!

    என்னை முழுதும் இழந்தேனா? அதில்
    ஏழை மகிழ்ந்தேனா?
    உன்றன் நிழலை அடைந்தேனா? அதில்
    ஊமை பிழைத்தேனா?
    என்னை இழப்பது போலோர் இன்பம்
    எதிலும் இல்லையம்மா! உன்
    எதிரே நின்று நின்று கரைவதே
    எனக்கு முக்தியம்மா!

    எங்கும் இருந்தும் எனக்கே எனக்காய்
    எதிரே வந்தாயே!
    எல்லாம் ஆகியும் ஏழையை அணைத்து
    எல்லாம் தந்தாயே!
    பொங்கும் புனலாய்க் கண்ணில் இதயம்
    பொங்கிப் பொங்கிவர..
    புன்னகை ஒன்றின் பூரணமாய் நீ
    புதிதாய்ப் புதிதாய்ப் பூக்க…..

    படத்திற்கு நன்றி

    Share
  • குற்றவாளி அரசியல்வாதிகளைப் பற்றி நீதிமன்றத்தின் ஆலோசனை

    நாகேஸ்வரி அண்ணாமலை.

     

    Supreme_Court_of_India_wikipedia

    மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் செய்தி ஒன்று ஆகஸ்ட் 27 அன்று பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கிறது.  அந்தச் செய்தி இதுதான்.

    ‘குற்றப் பின்னணி உடையவர்களையும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்களையும் அமைச்சர்களாக நியமிப்பதை பிரதமரும் மாநில முதல்வர்களும் தவிர்க்க வேண்டும்.  இதற்கான பொறுப்பு அவர்களுக்கு உண்டு’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    குற்றப் பின்னணி உடையவர்களை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது.  அப்படி நியமித்தால் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த மனு தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு ‘பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது.  இந்த மனுவின் தீர்ப்பில்தான் உச்சநீதிமன்றம் அப்படிக் கூறியிருக்கிறது.

    யாரை அமைச்சர்களாக நியமிப்பது, யாரை நியமிக்க முடியாது என்பது பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை என்றும் ஆனால் இது பற்றிய விஷயங்களில் அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.  அந்த ஆலோசனைதான் மேலே குறிப்பிட்ட தீர்ப்பு.

    ஊழல் புரிபவர்களாகவும் மற்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதால் சமூக ஆர்வலர்கள் இதை எதிர்த்துக் குரல் எழுப்பினர்..  சட்டத்தை இயற்றுபவர்கள் சட்டத்தை மீறுபவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி மக்களின் பிரதிநிதிகள் ஆவார்கள் என்று அவர்கள் கேட்டார்கள்.  மேலும் சட்டத்தின் பாதுகாவலனாக இருப்பதாகப் பதவி ஏற்கும்போது உறுதி அளித்துவிட்டுப் பின் அவர்கள் சட்டத்தையே மீறுபவர்களாக இருந்தால் மக்களுக்கு எப்படி ஜனநாயகத்தில் நம்பிக்கை வரும் என்றும் அவர்கள் கேட்டார்கள்.  அவர்களுக்குச் சமாதானம் ஏற்படும் வகையில் இதற்கு ஒரு முடிவு காண நீதிமன்றங்கள் முயன்றன.  முதலில் குற்றம் புரிந்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது.  குற்றம் என்று நிரூபிக்கப்படும்வரை குற்றம் புரிந்ததாகக் கருதப்படுபவர் நிரபராதியே என்ற அடிப்படையில் இது இயற்றப்பட்டது.  ஆனால் நம் நீதிமன்றங்கள் ஒரு வழக்கைத் தீர்த்துவைக்கப் பல ஆண்டுகள் எடுப்பதால் கீழ்க் கோர்ட்டுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் மேல் முறையீடு நீதிமன்றங்களுக்கு அப்பீல் செய்துவிட்டு குற்றம்
    புரிந்தவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்க வாய்ப்பு ஏற்பட்டது.  பல சமயங்களில் அவர்கள் வழக்குகள் கடைசியாகத் தீர்க்கப்படும்போது அவர்கள் ஆயுளே முடிந்துவிடலாம்.

    இதைத் தவிர்க்க வேண்டி எந்தக் கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.  ஒரு கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கே பல ஆண்டுகள் ஆகும் என்பது இன்னொரு விஷயம்.  அதன்படிதான் லாலு போன்றவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுக் கொஞ்ச காலம் சிறைக்குச் சென்றார்கள்.  அவர்கள் மேல் முறையீடு செய்துவிட்டு சிறையிலிருந்து வெளிவந்து மறுபடி அரசியலில் பங்குகொள்கிறார்கள்.

    இதிலும் ஒரு திருத்தம் வேண்டும் என்றுதான் இப்போது உச்சநீதிமன்றம் புதிய அறிவுரையை வழங்கியிருக்கிறது.  குற்றம் புரிந்தவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அது விசாரிக்கப்பட வேண்டிய ஒரு குற்றம் என்று ஒரு நீதிபதியால் ஏற்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் அப்போதே சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டார் என்று கொள்ள வேண்டும்.  மேலும் அவர் நிரபராதியாக இருக்கலாம் என்ற அனுமானத்தினால் மட்டுமே ஒருவர் குற்றம் புரியவில்லை என்று தீர்மானித்து அவரை சட்டம் இயற்றும் அமைச்சர் பதவிக்கு நியமிப்பது உசிதமல்ல என்றும் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.

    உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரையைப் பிரதம மந்திரியும் மாநில முதல்வர்களும் ஏற்று நடப்பார்களா என்பது அடுத்த கேள்வி.  இப்போது மத்திய அமைச்சரவையிலும் மாநில அமைச்சரவைகளிலும் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலானவர்கள் ஏதோ ஒரு வகையான குற்றம் புரிந்தவர்களாகவோ ஊழலில் ஈடுபட்டவர்களாகவோ இருக்கிறார்களாம்.  இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போவதாகச் சொல்கிறார்கள்.  யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்று முடிவு சொல்ல உச்சநீதிமன்றத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு அதிகாரமும் கொடுக்கப்படவில்லையாம்.  இருப்பினும், சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் முடிந்த பிறகும் சாக்கடை அரசியலைச் சுத்தப்படுத்த முடியவில்லை என்றால் இந்தியாவின் ஜனநாயகம் என்னாவது என்று கேட்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.  யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும், யாரை நியமிக்கக்கூடாது என்னும் பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டிய கடமை நாட்டை ஆள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம் மந்திரிக்கும் முதலமைச்சர்களுக்கும் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள்.

    எல்லாம் போகட்டும்.  குற்றம் புரிந்தவர்களே பிரதமராகவும் முதலமைச்சராகவும் இருந்துவிட்டால் என்ன செய்வது?   பிரதமர் மோதி விஷயத்தில் குஜராத் கலவரங்களில் அவருக்குப் பங்கு உண்டு என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்று கீழ் கோர்ட்டில் தீர்ப்பானாலும் இதை எதிர்த்து குஜராத் அரசு அப்பீல் செய்யவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.  ஆனால் கலவரத்தில் விதவையான ஸகியா ஜஃப்ரி என்ற பெண் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.  அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.  அதனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை மோதி மீதுள்ள குற்றச்சாட்டு இன்னும் விலக்கப்படவில்லை.  தமிழக முதல்வர் மீது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே குற்றத் தாக்கல் நீதிமன்றத்தில் பதிவாகி இப்போது வழக்கு முடியும் தறுவாயில் இருக்கிறது.  குற்றச் சாயலே இல்லாத அமைச்சர்களை நியமிக்கும் பொறுப்பு பிரதம மந்திரிக்கும் முதலமைச்சருக்கும் இருக்கிறது என்றால் குற்றவாளிகளாக இருக்கலாம் என்று நீதிமன்றங்களால் கருதப்பட்டு வழக்குகள் நடந்துவரும் இவர்களைப் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அறிவுரை என்ன?

    இவர்களைத் தேர்ந்தெடுத்ததே மக்கள்தான்.  அவர்கள் சிந்திக்க வேண்டும்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டெம்பர் 1, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு வைதேகி ஹெர்பர்ட் அவர்கள்

     

    vaidaehi herbert

    சங்கத்தமிழின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அமெரிக்கத் தமிழரான வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் அனைத்து சங்கத்தமிழ் நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். சென்ற ஜூலை 2014 இல் மிசௌரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் மாநகரத்தில் நடைபெற்ற வட அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழாவில் பங்கேற்ற வைதேகி ஹெர்பர்ட் அவர்கள், அனைத்து மக்களும் சங்கத்தமிழ் படித்து இன்புற வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.   பல்கலைக்கழகங்களில்  பல பேர் செய்ய வேண்டிய வேலையை, தனி ஒருவராக தனது கடுமையான உழைப்பினாலும் விடாமுயற்சியாலும்  பெரும் மொழிபெயர்ப்புப் பணி ஒன்றை நிகழ்த்திக்காட்டிய வைதேகி ஹெர்பர்ட்  அவர்கள்  இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.  இவரது தமிழ்ப்பணியால் கவரப்பட்டு   இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் வாசகர் முனைவர் ராஜம் அவர்கள்.

    தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் 33 ஆண்டுகளாகவும், குறிப்பாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 14 ஆண்டுகளாகவும் வாழ்ந்து வருபவர்  வைதேகி ஹெர்பர்ட்.  தமிழை  இரண்டாவது மொழியாகக் கொண்ட வைதேகி, சங்க இலக்கியங்களின் அழகால்  ஈர்க்கப்பட்டார். ஆர்வம் காரணமாக ராணிமேரிக் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ருக்மணி ராமச்சந்திரனிடம்  முல்லைப்பாட்டு பயிலத் தொடங்கினார். பிறகு சங்க இலக்கியங்களில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டார்.

    வைதேகியின் சங்க இலக்கிய ஆர்வத்திற்கு எல்லையே இல்லை, இவரைப்போல இந்த அளவிற்குத் தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் தமிழகத்திலும் இல்லை, உலகில் வேறு எங்கும் இல்லை” என்று இவரது தமிழாசிரியரான ருக்மணி ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் 473 புலவர்களால் இயற்றப்பட்ட 2,381 பாடல்கள் உள்ளன.

    தமிழின் அடிப்படை இலக்கியமான சங்க இலக்கியத்தில் இன்றைக்குப் புழக்கத்தில் இல்லாத பல தமிழ்ச் சொற்கள் நிறைந்துள்ளதால், மற்ற இலக்கிய மொழி பெயர்ப்புகளை விட இது அதிக சவாலை முன் வைக்கும் பணியாகும்.  உதாரணமாக ‘விறலி’ எனும் சொல்லுக்கு நேரடிப் பொருள் தரும்  ஆங்கிலச் சொல் இல்லாததால், தக்க சொல்லைத் தேடுவது சிரமம் தருவது   என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய சிறப்பு பேட்டி ஒன்றில் வைதேகி ஹெர்பர்ட் தெரிவித்துள்ளார்.

    இவருடைய முல்லைப்பாட்டு மற்றும் நெடுநெல்வாடை ஆகிய இரு நூல்களின் மொழிபெயர்ப்பையும் அமெரிக்க வாழ் தமிழறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டும், பதிற்றுப்பத்தை டோக்கியோ பல்கலைகழகப் பேராசிரியர் டாக்கநோபு டாக்காஹாஷியும் மேற்பார்வை செய்து சான்று வழங்கியுள்ளார்கள்.

               vaidehi_tamil_scholar_with_her_books          books of vaidaehi

    சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து இவரால்தான் முதன் முதலாக  மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதும், இதுவரை சங்க இலக்கியத்தை மொழி பெயர்த்தவர்கள் ஒரு நூலிற்கு மேல் மொழி பெயர்க்க முயலவில்லை என்பதும், அரசு மானியம், ஆதரவு போன்ற எதையும் எதிர்பார்க்காது சொந்த முயற்சியில் வைதேகி ஹெர்பர்ட் மொழி பெயர்த்துள்ளார் என்பதுவும்  இவரது பணியின் சிறப்பைக் கூறும்.

    மேலும், சங்க இலக்கிய அகராதி ஒன்றும் உருவாக்கியுள்ளார்.
    தனது காதலியை அடைய  “மடல் ஏறுதல்” என்ற  வழக்கத்தை  மேற்கொள்ளும்  சங்ககாலக் காதலனின் செய்கை இடம்பெறுவது எந்த சங்க இலக்கியங்களில் என்ற பட்டியல் கீழே:
    குறுந்தொகை –  (5 முறை) 14, 17, 32, 173, 182
    நற்றிணை –  (5 முறை) 146, 152, 220, 342, 377
    கலித்தொகை  – (6 முறை) 58, 61, 138, 139, 140, 141
    என்பது போன்ற தகவல்களும் வழங்கியுள்ளார்.

    மொழிபெயர்ப்பில் முதலில் தமிழ்ப்பாடலை வழங்கி, பிறகு ஆங்கில மொழிபெயர்ப்பையும், பிறகு பதம் பிரித்து பொருள் தரும் முறையைக் கையாண்டுள்ளார்.  இவரது மொழிபெயர்ப்புகளை அவரது வலைத்தளத்தில்  (http://sangamtranslationsbyvaidehi.com/)  படிக்கலாம்.  சான்றாக ஒரு பாடலுக்கு இவர் வழங்கிய  மொழிபெயர்ப்பொன்று  இங்கு வழங்கப்பட்டுள்ளது…

    __________________________

    குறுந்தொகை 40
    செம்புலப் பெயனீரார், குறிஞ்சித் திணை  – தலைவன் தலைவியிடம் சொன்னது:

    யாயும் ஞாயும் யார் ஆகியரோ
    எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல் நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

    Kurunthokai 40
    Sempulapēyaneerār, Kurinji Thinai – What the hero said to the heroine, about their love:

    My mother and your mother,
    what are they to each other?
    My father and your father,
    how are they related?
    You and I,
    how did we know each other?

    Like rainwater that falls and
    merges with the red earth, our
    loving hearts have become one.

    Notes:     This is the only poem that this poet wrote.  The poet’s name is a pseudonym taken from the key words in the poem.  The hero reassures the heroine that everything will be good for them.  He explains to her that their love is eternal, despite their families not knowing each other. The red earth and water are muthal.

    Meanings:  யாயும் – (my) mother, ஞாயும் – your mother, யார் ஆகியரோ – who are they to each other, எந்தையும் – my father, நுந்தையும் – your father, எம்முறை – in what way, கேளிர் – relatives, யானும் நீயும் – myself and you, எவ்வழி – in what way, அறிதும் – knew, செம்புலப் பெயல் நீர் போல – like rain falling on the red earth, அன்புடை நெஞ்சம் – loving hearts, தாம் கலந்தனவே – have merged
    ________________________________

    இம்மொழி பெயர்ப்புகளை நூலாக வெளியிட்டால் வர்த்தக ரீதியில் ஆதாயம் தராது  என்பது தெளிவாகத் தெரிந்தும் அவற்றை அச்சு நூல்களாகவும்  வெளியிட்டுள்ளார்.  இவருடைய நூல்கள் சிலவற்றை முதலில் முனைவர் ருக்மணி வெளியிட்டார்.  இப்பொழுது அனைத்து  நூல்களும் Digital Maxim என்ற பதிப்பகத்தால், (அமெரிக்காவில் இருக்கும்) திருமூர்த்தி ரங்கநாதன் என்பவரால் வெளியிடப்படுகின்றது. வர்த்தக மனப்பான்மை இவருக்கு இல்லை என்பதும் தமிழ்த்தொண்டு மட்டுமே இவரது முதன்மை நோக்கம் என்பதும் இவர்  வலைத்தமிழ்.காம் (http://www.valaitamil.com/) தளத்திற்கு வழங்கிய பேட்டியின் வழியாகத் தெரிகிறது.  நான்கு நிமிடமே உள்ள பேட்டியில்  இவையெல்லாம் எனது வலைத்தளத்தில் உள்ளது, என் நூலை வாங்க வேண்டியத் தேவை இல்லை(?!) வலைப்பதிவிலும் படிக்கலாம் என ஒருமுறைக்கும் மேல் வலியுறுத்துவதில் இருந்து இவரது தமிழ்ப்பணியின் நோக்கம் தெளிவாகிறது (https://www.youtube.com/watch?v=cItNOQHzfGs).  தமிழிலக்கிய மொழிபெயர்ப்பு பலரை சென்றடைய வேண்டும் என்ற இவரது சிந்தனையும், தொண்டு நோக்கில் மட்டுமே இவர் கருத்தாக இருப்பதும் புலனாகிறது.

    https://www.youtube.com/watch?v=cItNOQHzfGs

    இவரது நூல்கள் மின்நூலாகவும், அச்சு நூல்களாகவும் கிடைக்கின்றன. மின்நூலாக “ஆப்பிள் ஐ டியூன்” தளத்தில் பெறலாம் (https://itunes.apple.com/br/artist/vaidehi-herbert/id788436153?l=en&mt=11).

    சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்காக வைதேகி ஹெர்பர்ட்  அவர்களுக்கு கனடாவின் டொரண்டோ பல்கலைகழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் (2012 ஆம் ஆண்டில்) விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளன.

    vaidehi_tamil_scholar
    இலக்கியத் தோட்டம் விருது. படம் உதவி: BBC NEWS

    நல்லி திசையெட்டும் நடத்திய ஆகஸ்ட் 2013 மொழி பெயர்ப்பாளர்களை சிறப்பிக்கும் விழாவில் “பாஷா பூஷன்” விருதும் வழங்கப் பட்டு  இவர் சிறப்பிக்கப் பட்டார்.

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழாவில், படம் உதவி: siragu.com
    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழாவில், படம் உதவி: siragu.com

    வட கரொலினா மாநிலத்தின் தமிழ்ச் சங்கத்திற்காக  மூன்றுநாட்கள் நடைபெறும் சங்க இலக்கியப் பயிற்சிப் பட்டறை ஒன்றையும்  சென்ற  ஆகஸ்ட்  2013 இல் நிகழ்த்தினார். சங்க இலக்கியத்தை ஏன், எப்படிப் படிக்க வேண்டும் எனத் தொடங்கி சங்க இலக்கிய  நூல்கள் பற்றிய முன்னுரை அறிமுகத்தில் தொடர்ந்து, அகப்பாடல்களில் இருக்கும் முதல், கரு, உரி என்பவை பற்றிய விளக்கம் என விரிவுரையாகத் தனது இலக்கியப் பயிற்சிப் பட்டறையை தொகுத்து வழங்கி அமெரிக்கத் தமிழர்களின் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்.

    தனது தமிழ்ப்பணியின் மற்றொரு பகுதியாக குழந்தைகளுக்குச் சூட்ட சங்கத் தமிழ்ப் பெயர்களையும் திரட்டி அதற்காக ஒரு வலைத்தளமும் உருவாக்கியுள்ளார் (http://puretamilbabynames.wordpress.com/).  தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைக்காது இருப்பது வருந்தத்தக்கது  என்று அத்தளத்தின் அறிமுகப் பகுதியில்  குறிப்பிடும் வைதேகி, அவர் வசிக்கும் ஹவாய் மாநில மக்களுடன் ஒப்பிடுகிறார்.   நூறாண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்துவ மதத்தைத் தழுவினாலும் ஹவாய் மக்கள் அவர்கள் மொழியில், அவர்கள் மரபுப் பெயர்களை மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதையும் அதைப் பற்றி பெருமிதம் கொள்வதையும் சுட்டிக் காட்டுகிறார்.

    தனது கணவருடன் இணைந்து ஆண்டுக்கொருமுறை தமிழகச்சுற்றுலா ஒன்றினை (‘Tamil Heritage Tour’) ஏற்பாடு செய்து, மகாபலிபுரம், புதுச்சேரி, பிச்சாவரம், தரங்கம்பாடி, தஞ்சை, மதுரை, காஞ்சீபுரம், சென்னை போன்ற ஊர்களுக்கும், யானைகள், புலிகள் சரணாலயம் புராதன சமணக்கோயில்கள், போன்றவற்றையும் இவரது  சுற்றுலா (Herbert’s Tamil Heritage Tour, http://www.nivalink.com/corporate-groups/inbound/tamilnadu-vaidehi) அறிமுகப்படுத்துகிறது.

    சிறந்த தமிழ்த் தொண்டாற்றி வரும் வைதேகி ஹெர்பர்ட் அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    இவரை பாராட்ட விரும்புவோருக்காக இவரது மின்னஞ்சல் முகவரி: kavini100@gmail.com

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • அத்துமீறல்

    மாதவன் இளங்கோ

    thalys

     

    இன்னும் சற்று முன்னதாகவே கிளம்பியிருக்கலாம்.

    என்ன செய்வது? சரவண பவனில் நான் கேட்டிருந்த கொத்துப் பராட்டாவையும், ரோஸ்மில்கையும் கொண்டுவருவதற்கு, கொஞ்சமல்ல நிறையவே தாமதம் செய்துவிட்டார்கள். நானோ அதை சாப்பிட்டுவிட்டுத்தான் இந்த பாரீஸ் நகரத்தை விட்டுச் செல்வது என்கிற உறுதியோடு இருந்தேன். ஆசை யாரை விட்டது? பெல்கியத்தில் ஒரு சரவண பவன் இருந்தால் நான் இந்த அற்ப கொத்துப் பராட்டாவிற்கு ஆசைப்பட்டிருப்பேனா? இருந்தாலும் தாலிஸ் இரயில் இன்னும் அரைமணியில் கிளம்பவிருந்த நிலையில், என் தாயாருக்கு வேகமாக நடப்பதில் பிரச்சினை இருந்த நிலையில், உருண்டையான மனைவியையும், ஐந்து வயது மகனையும், மூன்று பெரிய பயணப்பெட்டிகளை வைத்திருந்த நிலையில், இந்தக் கொத்துப் பரோட்டா ஆசை தேவையற்ற ஒன்று!

    இன்னும் இருபது நிமிடங்கள்தான். தாலிஸ் கிளம்பிவிடும். அவர்களை இரண்டு பெட்டிகள் மட்டும் எடுத்துக்கொண்டு நடந்து போகச் சொல்லிவிட்டேன்.

    இறுதியில் கொத்துப் பரோட்டா வந்து சேர்ந்தது. அதிவிரைவாக ஒரு வாய் பரோட்டா, ஒரு வாய் ரோஸ்மில்கென்று மருந்து விழுங்குவது போல் விழுங்கிவிட்டு, பெட்டியை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன்.

    இன்னும் ஐந்தே நிமிடங்கள்…

    பாரீஸ் வடக்கு இரயில் நிலையம் சரவண பவனிலிருந்து அத்தனை தூரமொன்றுமில்லை. நடக்கும் தூரமே. இருந்தாலும், தாலிஸ் ஆயிற்றே! அதுதான் இந்த ஓட்டம். எல்லோரும் என்னை ஒருமாதிரி பார்ப்பது தெரிந்தது. இவர்களோடு இது ஒரு பெருந்தொல்லை! இந்த ஊர்க்காரர்கள் ஓடினால், “பாவம், ஏதோ அவசரம் போலிருக்கு!” என்று பரிதாபத்துடன் பார்ப்பார்கள் அல்லது கண்டுகொள்ளக் கூட மாட்டார்கள். ஆனால் நான் அவசரத்துக்கு ஓடினால், “இந்தியன் ஓடுகிறான்”, “அநாகரிகமானவன்!” என்பது போன்ற பார்வையை வீசுவார்கள். அவர்கள் நினைப்பது எனக்கு எப்படித் தெரியுமா? அந்த முகத்தைப் பார்த்தாலே போதும். ஏதோ ஐந்து நாட்களுக்கு முன்பே அழுகிப்போன மாம்பழத்தை தெரியாமல் தொட்டுவிட்டது போன்று முகத்தை சுளிப்பார்கள். சிலர் ஏளனமாகச் சிரிக்கவும் செய்வார்கள்.

    பிரசல்சு நகரம் செல்லும் தாலிஸ் இரயில் எட்டாவது பிளாட்பாரத்திலிருந்து இன்னும் சில நிமிடங்களில் கிளம்பும் என்று பிரஞ்சிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி வந்த அறிவிப்பைக் கேட்டுக்கொண்டே எட்டாவது பிளாட்பாரத்திற்கு ஓடினேன்.

    தொலைவில் முதல் வகுப்புப் பெட்டிக்கு முன்பு அதிகாரியுடன் என் குடும்பம் நின்று கொண்டிருந்தது. முதல் வகுப்பு என்று கூறினேன். நான் வாங்கும் சம்பளத்திற்கு அத்தனை பேரையும் முதல் வகுப்புப் பெட்டியில் எல்லாம் அழைத்துப் போகவே முடியாது. முடிந்தாலும், தேவையற்ற ஒன்று. ஏதோ எங்கள் அதிர்ஷ்டம், நான் முன்பதிவு செய்த தினத்தன்று இரண்டாம் வகுப்பு விலைக்கே முதல் வகுப்பு பயணச்சீட்டு கிடைத்தது. அதுவும் தாலிசில்! அது என்ன தாலிஸ்? மணிக்கு முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவிரைவு இரயில் வண்டி அது. நான் வசிக்கும் பிரசல்சு நகரத்திற்கு ஒரு மணிநேரத்தில் சென்று விடலாம்.

    அந்த இரயில் வண்டியைப் பிடிக்காமல் விட்டால் என்னவாகிவிடப் போகிறது? என் மனைவிக்கு தாலிசில் முதன்முதலாக முதல்வகுப்பில் செல்லும் பாக்கியம் கிட்டாமல் போகும். வரும்போது இரண்டாம் வகுப்பே விமானத்தை விடப் பிரமாதமாக இருக்கிறது என்று கூறிய என் தாயாருக்கு அதைவிடப் பிரமாதம் என்ன என்பது தெரியாமல் போகும். எனக்கு? ஒன்றுமில்லை. நான் நேராக நிலா சலூனிற்குச் சென்று மொட்டை அடித்துக் கொள்ளலாம்.

    பாரீசில் நிலா சலூனா? அந்நகரின் வடக்கு இரயில் நிலையம் அருகே உள்ள லா சாப்பல் பகுதி ஒரு குட்டித் தமிழ் தேசம். முனியாண்டி விலாசு, மாணிக்க விநாகர் ஆலயம் உட்பட பல தமிழ் விஷயங்களை, விசேஷங்களை அங்கு காணலாம். எனக்கு தமிழகத்தின் நினைவு அழுத்தும் போதெல்லாம் ஒரு வார இறுதியில் கிளம்பி பாரீஸ் நகரம் சென்று விடுவேன். நம் மக்களைப் பார்க்கலாம். நிறைய தமிழ் கேட்கலாம். ஒரு மாதத்திற்குத் தேவையானவற்றை கணபதி அங்காடியில் வாங்கி வந்து விடலாம். முக்கியமாக முருங்கைக்காய்!

    இந்த முறை கணபதி அங்காடி மூடியிருந்தது. வி.எஸ்&கோ ட்ரேடர்ஸ் பேரங்காடியில் வாங்கிய முருங்கைக்காய் நிரம்பிய பையை முதுகில் மாட்டிக்கொண்டு, பயணப்பெட்டியை இழுத்துக்கொண்டு முதல் வகுப்பு பெட்டியை சென்றடைந்தேன். ஏற்கனவே எங்கள் அனைவருடைய பயணச்சீட்டுகளையும் அதிகாரியிடம் கொடுத்திருந்தாள் என் மனைவி. விதிப்படி 2 நிமிடங்களுக்கு முன்னதாகவே பிளாட்பாரத்தில் காலடி எடுத்து வைத்து விட்டதால், அவர் எதுவும் சொல்லவில்லை. புன்னகைக்கவும் இல்லை.சுளித்துக்கொண்டு பார்ப்பதற்கு இந்தப் பார்வை பரவாயில்லை என்று தோன்றியது. எனக்குப் பிறகு மூன்று ஐரோப்பியர்கள் ஏறினார்கள். என்னிடம் காண்பிக்காமல் சேமிக்கப்பட்ட புன்னகை அவர்களுக்கு பரிமாறப்பட்டதைக் கண்டேன். இதெல்லாம் பழகிவிட்டது.

    பயணப்பெட்டிகளை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது. முருங்கைக்காய் பையையும் என் மகனுக்கு தேவையான தின்பண்டங்கள் நிறைந்த பையையும் மட்டும் எடுத்துக்கொண்டேன். அதில் தான் அவனுக்குத் தேவையான தற்காப்பு வாந்தி உறையும் இருந்தது. இல்லையென்றால் தாலிஸ் நாறிவிடும் அபாயமிருந்தது. அந்த விசேஷ கைப்பையிலுள்ள பல சமாச்சாரங்கள் எதற்கு என்பது என் மனைவி மட்டுமே அறிந்த விஷயம். சில தாய்மார்கள் அவற்றை அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பிருக்கிறது.

    அந்தப் பெரிய மூன்று பயணப்பெட்டிகளை அவற்றிக்கான இடத்தில் அடுக்கி வைக்க அந்த அழகான பணிஞை உதவி செய்தாள். ‘மெர்சி’ என்று பிரெஞ்சு மொழியில் நன்றி தெரிவித்தவுடன். ‘நோ ப்ராப்ளம்’ என்று ஆங்கிலத்தில் அழகிய புன்னைகையுடன் பதிலளித்தாள். அது அவள் வேலை. அவள் டச்சுக்காரியாகவோ அல்லது பிளம்மியப் பெண்ணாகவோ இருக்கவேண்டும். என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். உள்ளே இருந்து என் மனைவி நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறாள். ஆனால், அவளுக்கு சிரிக்கும் போது என் மகனைப் போலவே கன்னத்தில் அழகாக குழி விழுந்தது எனக்குப் பிடித்திருந்தது.

    உள்ளே நுழைந்து என்னுடைய இருக்கையை அடைவதற்குள் தாலிஸ் கிளம்ப ஆரம்பித்தது. பெரும்பாலும் அத்தனை இருக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இரண்டாம் வகுப்புப் பெட்டியை விட இங்கு இருக்கைகள் அகலமானவை, எண்ணிக்கையும் குறைவு தான்.

    இருக்கையில் ஏறிக் குதித்துக் கொண்டிருந்த என் மகன், ‘கம்பர்ட் 1 சூப்பரா இருக்குப்பா!’ என்றான். ஆமாம். முதல்வகுப்புப் பெட்டியை தாலிசில் அப்படித்தான் அழைத்தார்கள். என் தாயும் அவள் தரப்புக்கு, ‘என்னடாது ப்ளைட்டவிட அசத்தரது! அறுபது வயசில நேக்கடிசிருக்கற யோகத்தப் பாரு!” என்று வரும்போது இரண்டாம் வகுப்புக்கு கூறியதையே மீண்டும் கூறினாள், சற்றே கூடுதலான பிரமிப்புடன்.

    “உக்காரு பாட்டி! அப்பா உக்காரு பா! ஜாலியா இருக்கும்” என்று கத்தினான் என் மகன். திடீரென ஏதோ தோன்றியவனாய் சுற்றி நோட்டம் விட்டேன். கிட்டத்தட்ட அத்தனைக் கனவான்களும், சீமாட்டிகளும் எங்களை சிறுத்த முகங்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் என் மகனுக்குப் பின்னால் இருந்த இருக்கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அந்த அம்மணி மூக்குக் கண்ணாடியினூடே பார்த்த பார்வை அழுகிய மாம்பழத்தை மீண்டும் நினைவுபடுத்தியது.

    பாரீசுக்கு வரும்போது நால்வரும் இருவேறு வரிசைகளில் அமர்ந்திருந்தோம். நல்லவேளை. கம்போர்ட் 1-ல் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தோம். ஆனால், ஒரே ஒரு பிரச்சினை. இரண்டு பேர் வண்டி செல்லும் திசைக்கு எதிராக அமர்ந்து சென்றாக வேண்டும். என் மனைவிக்கு இது அறவே பிடிக்காது. அதுவும் தாலிசில் – முடியவே முடியாது. அதனால் எனக்குப் பக்கத்தில் என் தாயார். எனக்கு எதிரே ஜன்னலோர இருக்கையில் என் மகன், அவனருகே என் மனைவி. எங்களுக்கு இடையே பெரிய தொரு மேஜை. கம்போர்ட் 1-ல் உணவு இலவசமாகத் தருவார்களாம். என்ன பெரியதாய் இருக்கப் போகிறது அந்த உணவில். பரோட்டாவிற்கும் குருமாவிற்கும் ஈடாகப்போவதில்லை.

    எங்களுக்கு எதிர்புற ஜன்னலருகே இரண்டு எதிரெதிர் இருக்கைகளில் ஒரு கனவானும் சீமாட்டியும் அமர்ந்திருந்தார்கள். இளம் வயதுதான். அநேகமாக கணவன் மனைவியாக இருக்கவேண்டும். நண்பர்களாகக் கூட இருக்கலாம். அந்தப் பெண் அவனுடைய கைவிரல்கள் ஒவ்வொன்றாக தடவி விட்டுக்கொண்டே டச்சு மொழியில் அவனிடம் என் மகன் காலைத் தூக்கி மேசைமீது வைத்துக்கொண்டிருப்பதைப் பற்றி புகார் சொல்லிக்கொண்டிருந்தாள். அதைப் புரிந்துகொண்ட என் மனைவி என் மகனை அதட்டி கால்களைக் கீழே போடச் சொன்னாள்.

    சிறிது நேரத்தில் எப்போதும் போல் என் மகன், ‘மெர்குரி, வீனஸ்…’ என்று கோள்களின் பாட்டை உரக்கப் பாட ஆரம்பித்துவிட்டான். நான் மெதுவாக அந்தப் பெண்ணை பார்த்தேன். அழுகிய மாம்பழம்! அதற்கு முன்பே அதை கவனித்துவிட்ட என் மனைவி, ‘அமைதியாக இருக்கப் போகிறாயா? இல்லையா?’ என்று அவனை அதட்டினாள்.

    நான் என் மகனுடன் மெதுவாகப் பேசினேன்.

    “காலை மேசையின் மேல் தூக்கி வைத்து அசுத்தப்படுத்தக் கூடாது. நாமும், அடுத்து இங்கு வந்து அமர்பவர்களும் சாப்பிடும் இடமலல்லவா? மேலும் அது அநாகரிகமான செயலும் கூட! பொது இடங்களில் நாம் சத்தம் போட்டு பேசவோ பாடவோ கூடாது! அதுவும் கம்போர்ட் 1-ல் கூடவே கூடாது. இங்கிருக்கும் கனவான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் அது பிடிக்காது. நாம் அவர்களுக்கு தொல்லை தருகிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள். அவர்களைப் பொருத்தவரை, நாம் ஏற்படுத்துவது இரைச்சல்; மாசு! ஒலி மாசு! அது ஒருவகையான அத்துமீறல்!” என்று அறிவுரைத்துக்கொண்டே அவன் தலையை வருடிவிட்டுக்கொண்டிருந்தேன்.

    கம்பர்ட் 1-ல் அமைதி பரவ ஆரம்பித்திருந்தது. மேஜையும் அப்படி ஒன்றும் அழுக்கடையவில்லை.

    ஜன்னலினூடே வெளியே நோக்கினேன். வண்டி போகும் வேகத்தில் வெளியில் இருந்த எதுவும் தெரியவில்லை. மாறாக வண்டிக்குள் நடப்பதெல்லாம் திரைப்படமாய் தெரிந்துகொண்டிருந்தது. குறிப்பாக எங்களுக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த அந்த சீமாட்டியின் இதழ்கள் அந்த கனவானின் வாய்க்குள் அடைபட்டுக் கிடந்தது தெரிந்தது. அவை ஏற்படுத்தும் சத்தமும் சன்னமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அவனுடைய வலதுகை அவள் மார்பின் மீது எதையோ தேடிக்கொண்டிருப்பதும் தெரிந்தது.

    என் மனைவி முகத்தை சுளித்துக்கொண்டே கண்களை மூடிக்கொண்டிருந்தாள். திரும்பி எனக்கருகே இருந்த என் தாயைப் பார்த்தேன். அவள் முகத்திலும் அதே பாவம். அவளும் என் மனைவிக்கு முன்பே கண்களை மூடியிருக்கவேண்டும். இருவரும் தூங்கிவிட்டதாய் தெரியவில்லை.

    என் மகன் கால்களைத் தொங்கபோட்டபடி, கைகளைக் கட்டிக்கொண்டு, கண்களை மூடியபடி ஜன்னலின் மீது சாய்ந்துகொண்டிருந்தான். அநேகமாக தூங்கியிருக்கவேண்டும். அவனை அப்போது எழுப்பவேண்டாம் என்று தோன்றியது. ஆனால், அந்த முகத்தில் ஒருவித இறுக்கம் தெரிந்தது. என் மீதான கோபத்துடனேயே தூங்கிப் போயிருக்கிறான்.

    என் அறிவுரை அவனுக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதுவும், “நாம் ஏற்படுத்துவது இரைச்சல்; மாசு! அது ஒருவகையான அத்துமீறல்!” என்று நான் கூறியது அவனுக்கு நிச்சயம் புரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

    oOo

     

    Share
  • Advent Day!

     

    கிரேசி மோகன்

     

    September 1… 1896… A boy came to Arunachala to abide there forever… He was the silent sage, Ramana Maharshi….   Arunachala!

    ramana-boy
    “செப்டெம்பர் ஒன்றின்று, சின்னஞ் சிறுவராய்,
    அப்பன்தன் வீடு அருணைக்கு, -சுப்பன்(சுப்ரமண்ய அவதாரம் பகவான்)
    குடிபுகுந்த நன்நாள், குருவே வணக்கம்,
    மடிபுகுந்தோம் அண்ணா மலை”….கிரேசி மோகன்….

     

    Share
  • திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடனான நேர்காணல்

    ‘With You, Without You’
    திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல்
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    a

    பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் ‘With You, Without You’ (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

    d

    யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத் திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது.

    இந்தத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை அஞ்சலி பட்டீலுக்கு, இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக 2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, லண்டன் BFI, சிக்காகோ, ஹொங்கொங், கேரளா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ளது.

    b

    கேள்வி – ‘With You, Without You’ திரைப்படமானது தஸ்தாவேஸ்கியின் ‘A Gentle Creature’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந் நாவலின் கதையை, இலங்கையின் யுத்த காலத்தோடு தொடர்புபடுத்தலாம் என உங்களுக்கு ஏன் தோன்றியது? அவ்வாறு உங்களுக்குத் தோன்றச் செய்தது எது?

    பதில் – வளர்ந்துவரும் திரைக்கதையாசிரியர் ஒருவர், இந் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் யுத்த காலப் பின்னணியில் தான் எழுதிய கதையை என் கவனத்தில் கொண்டு வந்தார். தஸ்தாவேஸ்கியின் இந் நாவலானது, பல தளங்களில் விரியும் படைப்பு. அதன் ஒரு தளமானது நுகர்வுக் கலாசாரம், மானிடத் தொடர்புகளை சீர்குலைப்பதை விவரிப்பதாக அமைந்திருப்பதாக பல விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருவானது, அகிலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாகவும், நிரந்தரமானதுமென நான் சிந்தித்தேன்.

    இலங்கையும் மூடிய பொருளாதாரத்திலிருந்து திறந்த பொருளாதார சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், இது பொருத்தமான உருவகம் என நான் உணர்ந்தேன். யுத்தம் எனப்படுவது வலியவர்களது ஆட்சி அதிகாரங்களுக்காக, மக்களுக்கிடையே ஏற்படக்கூடிய மோதலாகும். இந் நாவலின் கதையானது ஆண்மையை சீர்தூக்கிப் பார்க்கும் கதையொன்றென இந் நாவலை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது. யுத்த காலத்தில் இலங்கைக்குள் நிலவிய ‘ஆண்மையை’ விமர்சனம் செய்வதற்கு இக் கதையின் மூலமாக எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

    பிரதான கதாபாத்திரங்கள் இரண்டுமே இனங்களால் வேறுபட்டும், யுத்த களத்திலிருந்து வந்தவர்களாகவும் இருப்பின், அவர்களது தொடர்புகளையும், எதிர்நோக்கும் சவால்களையும், பல பரம்பரைகளாக நிகழ்ந்த யுத்தத்தின் பின்னர் வழமைக்குத் திரும்ப முயற்சிக்கும் முழு இலங்கையின் நிலவரத்தையும் ஒரு உருவகமாகப் பயன்படுத்தலாம் என எனக்குத் தோன்றியது. இரு தரப்பினருமே அடுத்தவரின் கோணத்திலிருந்து பார்க்க ஆரம்பிக்காத வரையில் அமைதி ஏற்படாது என நான் நம்புகிறேன். இச் சிறு நாவலை, பல தடவைகள் வாசித்த பின்னரே நான் திரைக்கதையை எழுதினேன்.

    கேள்வி – திரைப்படத்துக்கான பணம் எங்கிருந்து வந்தது?

    பதில் – இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட ஆகார் எனும் அமைப்பின் மூலமாக ஆதாரப் பணம் கிடைத்தது. தெற்காசியாவில் நிலவும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஆவணப்படமொன்றை உருவாக்கித் தரும்படி அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டனர். ஆரம்பத் திரைக்கதையை வாசித்து முடித்ததன் பிற்பாடு, எனது விருப்பத்திற்கேற்ப இத் திரைப்படத்தை உருவாக்க அவர்கள் அனுமதித்தார்கள். மேலதிக செலவுகளை இலங்கைத் தயாரிப்பாளர்கள் இருவர் ஏற்றுக் கொண்டார்கள்.

    கேள்வி – இத் திரைப்படம், இதுவரையில் இலங்கையில் திரையிடப்பட்டிருக்கிறதா? இலங்கையில் திரையரங்குகள் மூடப்படுவதானது, திரைப்படங்களைத் திரையிடுவதில் பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாக நீங்கள் முன்பு கூறியிருக்கிறீர்கள். இப்பொழுது அந் நிலவரத்தில் மாற்றமேதும் உள்ளதா?

    பதில் – இத் திரைப்படமானது இன்னும் இலங்கையில் திரையிடப்படவில்லை. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டதாகும். இலங்கையில் தற்போதிருக்கும் திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறும்வரை நான் காத்திருக்கிறேன். இப்போது, நாம் உரையாடும் இக் கணம் வரை கூட அவ்வாறான மாற்றம் ஏதும் இடம்பெறவில்லை. திரையரங்குகள் மூடப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந் நிலையில், திரையரங்குகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றம் பெறாவிடில், இன்னும் பல திரையரங்குகள் மூடப்பட்டு நிலைமை இன்னும் மோசமாகும்.

    c

    கேள்வி – இத் திரைப்படம், இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பதில் – நானென்றால், எனக்கு இவ்வளவு காலம் நடந்தவற்றில் சிறந்ததாக நினைப்பது அதைத்தான். ஏனென்றால் இந்தியா எனப்படுவது எனக்கு மிகச் சிறப்பான ஒரு இடம். சரியாகச் சொல்வதானால் என்னுடைய இரண்டாவது வீடு போன்றது அது. சினிமா என்பதால் மாத்திரமல்ல, எல்லாவற்றினாலும். நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், இத் திரைப்படத்தைத் தயாரித்திருப்பது இந்தியத் தயாரிப்பாளர்கள் என்பதால் மட்டுமல்ல. சென்னையிலுள்ள பிரசாத் கலைக்கூடத்திலேயே பிற்தயாரிப்பு வேலைகள் நடைபெற்றன. இத் திரைப்படத்தைத் தொகுத்தது தேசிய விருது பெற்ற தொகுப்பாளர் திரு.ஏ.ஸ்ரீகர் ப்ரஸாத். ஒலி வடிவமைத்தது ஒரு இந்தியக் கலைஞர். பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது, தேசிய விருது பெற்ற இந்திய நடிகை அஞ்சலி பட்டீல். இவர்கள் அனைவருமே இவ்வளவு ஈடுபாட்டோடு இத் திரைப்படத்தில் பணியாற்றியமையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத் திரைப்படத்தை இந்தியாவில் திரையிடுவதே இவர்களுக்கு வழங்கக் கூடிய அதியுயர் விருதுகளாகும்.

    கேள்வி – இலங்கை திரைப்படத் துறையில் இருக்கும் மோசமான நிலைமைக்கு ஏற்ப, நீங்கள் இத் திரைப்படத்துக்காக செலவிட்ட பணத்தை மீளவும் எவ்வாறு பெற்றுக் கொள்வீர்கள்?

    பதில் – திரையரங்குகளில் திரையிடுவது, செய்மதி தொலைக்காட்சி மற்றும் DVD உரிமையை வழங்குதல் போன்ற வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் மாத்திரமே இப்போதைய நிலைமையில் தயாரிப்பாளர்களின் கையில் உள்ளது. இலங்கையில் திரையிடப்படும் திரைப்படங்களில் 95% ஆனவை, படத்துக்காக செலவழிக்கப்பட்ட பணத்தைக் கூட மீளப் பெற்றுத் தராதவை. எதிர்காலத்தில் எமது நிலைப்பாட்டுக்காக செய்மதி தொலைக்காட்சியில் திரையிடும் உரிமையை வழங்குவது, Video on demand, ITunes downloads, Vimeo, Netflix, Amazon, YOUTUBE streaming ஆகிய வலைத்தளங்களில் பதிவேற்றுவது போன்ற பணம் ஈட்டக் கூடிய வழிமுறைகளில் ஈடுபட நேரிடும். திரைப்படக் கலைஞர்கள் தேசிய சந்தையைத் தாண்டிச் சென்று, வேகமாக முன்னேறிவரும் தொலைத்தொடர்பு ஊடகங்களினூடாக பயனைப் பெற்றுக் கொள்வது நல்லதென நான் நம்புகிறேன்.

    கேள்வி – நீங்கள் இந்திய நடிகை அஞ்சலி பட்டீலைத் தேர்ந்தெடுத்தது எப்படி?

    பதில் – இந்தக் கதாபாத்திரத்தைக் குறித்து நான் இந்திய ஒலி சீரமைப்புக் கலைஞர் தபாஸ் நாயக்கிடம் விபரித்ததன் பின்னர், அவர் அஞ்சலி பட்டீலின் புகைப்படங்கள் சிலவற்றை என்னிடம் அனுப்பியிருந்தார். நான் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நடிகர்கள் தேர்வு நிகழ்விற்கு அவரை அழைத்திருந்தேன். தேர்வுக்காகப் பலரும் வந்திருந்தபோதும், அவருக்குள் இருந்த அப்பாவித்தனத்தையும், முரட்டுத்தனத்தையும் ஒன்றாகக் காட்டும் திறமையானது, ஏனையவர்களை விடவும் அவரிடம் மிகைத்திருந்ததைக் கண்டோம். அவர் அக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என நாங்கள் தீர்மானித்தோம். அவருக்குள்ளிருந்த நன்னெறிகளுக்கிணங்க வேலை செய்யும் குணம், ஈடுபாடு மற்றும் தொழில்முறை நேர்த்தி ஆகியன என்னை வியப்புக்குள்ளாக்கியது. எனது தேர்வு மிகப் பொருத்தமாக அமைந்ததையிட்டு மிகுந்த திருப்திக்குள்ளானேன்.

    கேள்வி – இந்தியாவும், இலங்கையும் திரைத்துறை மூலமாக சம்பந்தப்பட்டிருப்பது எவ்வாறு? கூட்டுறவாக இணைந்து இயங்குவதற்கான சாத்தியங்கள் எவ்வாறு உள்ளது?

    பதில் – எனது அனேகத் திரைப்படங்களின் பிற்தயாரிப்பு வேலைகளைச் செய்தது சென்னையில்தான். ஸ்ரீகர் ப்ரசாத், தபாஸ் நாயக் போன்ற முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றக் கிடைத்தமை எனது அதிர்ஷ்டம்.

    அநேகமான இந்திய திரைத்துறைக் கலைஞர்கள் தம் படப்பிடிப்புக்களுக்காக இலங்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். யுத்தத்தின் பின்னர், திரு.அநுராக் காஷ்யப், தனது Bombay Velvet திரைப்படத்தின் அனேக காட்சிகளை இலங்கையில் படமாக்கினார். எதிர்காலத்தில் நான், இன்னும் பல இந்தியக் கலைஞர்களோடும், தொழில்நுட்பக் கலைஞர்களோடும் இணைந்து பணியாற்றவும், இந்தியக் கூட்டுத் தயாரிப்புக்களில் பங்குகொள்ளவும் எதிர்பார்த்திருக்கிறேன். வூடி ஆலன் சொன்னது போல, வெற்றியின் 80% ஆனது, காட்சிப்படுத்துவதாகும். நெருங்கிய அயலவர்களாக நாம் ஒருவருக்கொருவர் வாயில்களில் அவர்களுக்காக முன் நிற்போம். அந்த ஒற்றுமையின் பலனாக நலன்கள் கிடைக்கப் பெறும் விதத்தைப் பார்த்திருப்போம்.

    ***************************

    Share