நம் இந்தியாவில் அந்நிய முதலீடுகள்!
பவள சங்கரி
தலையங்கம்
இந்தியாவில் அந்நிய முதலீட்டை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், இன்றைய தேசிய முற்போக்குக் கூட்டணியும் சிவப்புக் கம்பளம் விரித்து, வரவேற்கின்றன. இது சரியான அணுகுமுறையா? அந்நிய முதலீடுகளை எந்தெந்தத் துறையில் அனுமதிக்கலாம் மற்றும் அதன் எல்லை எதுவரை என்பதை வரையறுக்கவேண்டியது அவசியம். அந்நிய முதலீடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்திய சந்தையில் விற்கப்படும் அளவு மற்றும் வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதியாகும் அளவையும் வரையறுக்கவேண்டும். இதன் மூலம் ஏற்படும் பரிவர்த்தனைகள் முழுதும் இந்திய ரூபாயில் இருந்தால் நன்மை பயக்கும். இதற்கு மாறான நிலையில் அந்நிய முதலீடுகளை வரவேற்கும் பட்சத்தில் பின்னாளில் நம்முடைய பொருளாதாரம் கேள்விக்குறியாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு எந்த வகையில் பயனுள்ள வகையில் இருக்கும் என்பதும் சிந்திக்கத்தக்கவை. உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் 1000 கோடி டாலருடன் இந்தியாவிற்குள் நுழைவதாக வைத்துக்கொண்டால், அந்தத் தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் அப்படியே இருக்கும். காப்பீடு செய்பவர்களின் தொகையும் அவர்களுடைய கணக்கில்தான் ஏற்றம் பெறும். பின்னொரு நாளில் காப்பீடு செய்தவருக்கு இழப்பு ஏற்பட்டால் அவரால் காப்பீடு செய்யப்பட்ட தொகையிலிருந்தே அதைக் கொடுக்க முடியும். அப்படியிருக்க காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு நமக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்? 57 ஆண்டுகள் கடந்துள்ள பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சொத்து மதிப்பு, இன்றைய தேதியில் பல லட்சம் கோடிகளைத் தாண்டிவிட்டது என்பது நிதர்சனம் இப்படியிருக்க காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை வரவேற்பது எந்த வகையில் பயனுடையதாக இருக்கும் என்பதைக் குறித்துக் ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.
அடுத்து, பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டின் தலையீடு பற்றி பார்த்தோமானால், அனு ஆயுத ஆய்விலிருந்து விமான உதிரிப்பாகங்கள் வரை அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்தால் அது இந்திய இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாகவல்லவா அமையும்? நம்முடைய நாட்டின் பாதுகாப்பு வேற்று நாட்டவரின் கைகளில் செல்வது சரியானதாக இருக்குமா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. முதலீடு செய்தவர்கள் வருமானம் போதவில்லை என்ற காரணமோ. அல்லது வேறு ஏதோ காரணமோ காட்டி திடீரென்று ஒரு நாள் தங்கள் தொகையைத் திருப்பி எடுத்தால் நம் நாட்டின் பாதுக்காப்புத் துறை உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்படலாம். அதோடு மிக முக்கியமான ஒன்று நம்முடைய இராணுவ இரகசியங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படலாம். பாதுகாப்புத் துறை உற்பத்திகள் எதிர்பாராத சூழலில் நிறுத்தப்படும் அபாயமும் ஏற்படலாம்.
உலகிலேயே மிக நீண்ட இரயில் பாதைகளையும், அதிகமான பயனீட்டாளர்களையும் கொண்டுள்ள ஒரே நாடு நம் இந்தியா மட்டும்தான் என்கிற நிலையில், இத்துறையில் அந்நிய முதலீடு தேவையா என்பதையும் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. புல்லட் ரயில் என்று சொல்லக் கூடிய அதிவேக ரயிலுக்காக சுமாராக 40,000 கோடி ரூபாய் ஒதுக்குவதும் அவசியமற்றது. சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், அவர்கள் தங்கள் சொந்த பொருளாதாரத்தைக்கொண்டே இதனை செயல்படுத்தினார்கள். ஒரு நாளில் ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய இரயில்களுக்கு இவ்வளவு பெரிய தொகை செலவு செய்வது தேவையற்றது. அவ்வளவு விரைவாக செல்ல வேண்டியவர்கள் விமானத்தில் பயணம் செய்யலாம். இரயில்வேத் துறையை சரியான முறையில் நிர்வாகம் செய்தால் இன்னும் இலாபகரமாக இயக்க முடியும் என்பதே வல்லுநர்களின் கருத்து.
அந்நிய முதலீட்டை உற்பத்தித் துறையில் அனுமதித்தும், ஏற்றுமதியை ஊக்கப்படுத்தியும், இறக்குமதிக்கான பரிவர்த்தனை இந்திய ரூபாயிலும், இருந்தால் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவைப் போன்று நம் இந்திய பொருளாதாரமும் தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை!