Blog

  • தமிழ் படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு | செம்மொழி இயக்குநர் சந்திரசேகரன்

    தமிழ் படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு | செம்மொழி இயக்குநர் சந்திரசேகரன்

    தமிழ் படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்கிறார், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் முழுநேர இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன். செம்மொழி நிறுவனப் பணிகள், இதர தென்னிந்திய மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி அளித்தது சரியா, சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு ஏன் அதிக நிதி ஒதுக்குகிறது, தமிழை மத்திய அரசு புறக்கணிக்கிறதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் அளித்துள்ளார். அவருடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொல்தமிழரும் கடவுட்கோட்பாடும்!

    -மேகலா இராமமூர்த்தி

    பண்டைத் தமிழரின் வாழ்வையும் வீரத்தையும் அறிந்துகொள்ள நமக்குப் பெருந்துணை புரிவது சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான புறநானூறு. அதில் தமிழரின் வாழ்வியலைப் பேசும் பாடல்கள் பல உள. எனினும், தமிழன் என்பவன் யார்? அவனுக்கான அடையாளம் என்ன? வழிபாட்டு முறை என்ன? என்பதை விளக்க மாங்குடி கிழார் என்ற புலவர் இயற்றிய புறநானூற்றின் 335ஆவது பாடலையே பலரும் எடுத்தாளுவது வழக்கம். மாங்குடி கிழாரே தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் புறநானூறு 72இல் சிறப்பிக்கப்பட்டவரும், அவன்மீது மதுரைக் காஞ்சி பாடியவருமான மாங்குடி மருதனார் ஆவார்.

    மாங்குடியாரின் 335ஆவது புறநானூற்றுப் பாடல் தொல்தமிழரின் வாழ்வியலை அறிந்துகொள்ள எந்த அளவிற்கு உதவுகின்றது என்பதை ஆராய்வோம்.

    அந்தப் பாடல்…

    அடலருந் துப்பின் .. .. .. ..
    குரவே தளவே குருந்தே முல்லையென்று
    இந்நான் கல்லது பூவும் இல்லை
    கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
    சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
                                     

    இந்நான் கல்லது உணாவும் இல்லை
    துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
    இந்நான் கல்லது குடியும் இல்லை
    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
    ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
                          
    கல்லே பரவின் அல்லது
    நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
    (புறம்: 335 – மாங்குடி கிழார்) 

    அடலருந் துப்பின் (வெல்லுதற்கரிய வலிமையுடைய) என்று தொடங்குகின்ற இப்பாடலில், அதனையடுத்துள்ள இரண்டு சொற்கள் சிதைந்துள்ளன. இரண்டாம் அடியிலிருந்துதான் பாடல் முழுமையாய்க் கிடைக்கின்றது. 

    ”குரவு, தளவு, குருந்து, முல்லை ஆகிய நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்கள் இல்லை; கரிய அடிப்பகுதியை உடைய வரகு, பெரிய கதிரினை உடைய தினை, சிறுகொடியில் விளையும் எள், புள்ளிகள் நிறைந்த அவரை இவை நான்கினைத் தவிர உணவுப்பொருட்களும் இல்லை; துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்த நான்கல்லாத குடிகள் இல்லை; மனம் பொருந்தாப்  பகைவரின் முன்னே அஞ்சாமல் நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து, விளங்குகின்ற உயர்ந்த கோட்டினையுடைய யானைகளைக் கொன்றுத் தாமும் விழுப்புண்பட்டு வீழ்ந்து இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர யாம் நெல்தூவி வழிபடுவதற்கேற்ற வேறு கடவுளும் இல்லை.” என்பது இப்பாடலின் பொருள்.

    இந்தப் பாடலில் பயின்றுவந்துள்ள மலர்கள், உணவுப்பொருட்கள் இவற்றை நோக்கினாலே புரியும் இவை முல்லைநிலத்தைச் சேர்ந்த மலர்களும் ஆங்குவிளையும் உணவுப் பொருட்களும் என்பது. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு அல்லாது வேறு குடியுமில்லை என்று சொல்லப்பட்டிருப்பதிலிருந்து குறிப்பிடப்பட்ட அந்த முல்லைநிலப் பகுதியில் இந்த நான்கு குடியினர் மட்டுமே வாழ்ந்திருந்தனர் என்பதை நாம் உய்த்துணரமுடிகின்றது.

    இந்த நான்கு குடியினரும் போருக்குச் சென்று வெல்வதையும், வெல்ல இயலாதுபோயின் விழுப்புண்பட்டு வீரமரணம் அடைவதையும், போரோடு ஒட்டிய நிகழ்வுகளில் பங்கேற்பதையும் பெருமையாய்க் கருதும் மறக்குடியினர்; அதனால்தான் போரில் இறந்துபடும் தம்மினத்து வீரர்களின் நினைவாய் நடுகல் எழுப்பி, அதில் இறந்தோரின் பீடும் பெயரும் பொறித்து அக்கல்லை வழிபட்டிருக்கின்றனர்; வேறு தெய்வங்களைத் தாம் நெல் உகுத்து வழிபடுவதில்லை என்கின்றனர். (நெல் உகுத்தல் என்பது நெற்பொரியை உகுத்து வழிபடுவதைக் குறிக்கின்றது.)

    இந்தப் பாடலின் திணை: போர் வெற்றியைக் கொண்டாடும் வாகைத் திணை.

    துறை: மூதின் முல்லை. அதாவது மறக்குடியில் பிறந்த ஆடவரேயன்றி அக்குடியில் பிறந்த மகளிரும் மறத்தில் சிறந்துவிளங்குவதைப் பேசுவது இந்தத் துறை.

    இவையனைத்தையும் தொகுத்துப் பார்க்கையில், இப்பாடல் முல்லைநிலத்துச் சிற்றூர் ஒன்றில் வாழ்ந்துவந்த துடியன், பாணன், பறையன், கடம்பன் எனும் நான்கு மறக்குடியினரின் வாழ்வியலைப் பேசுகின்ற பாடல் என்பது தெளிவாய்ப் புலப்படுகின்றது. இவர்களின் குரலாக ’மாங்குடி கிழார்’ இப்பாடலைப் பதிவுசெய்திருக்கின்றார். 

    இந்தப் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல் அன்று தமிழ்நிலத்தில் வாழ்ந்தவர்கள் துடியன், பாணன், பறையன், கடம்பன் எனும் நான்கு குடியினரே; நடுகல் வழிபாடு ஒன்றே தமிழர் வழிபாடு; நெல் உகுத்துப் பிற தெய்வங்களைப் பரவுவது தமிழர் வழக்கமில்லை என்ற முடிவுக்கு வருவது அறிவார்ந்த செயலா? 

    சங்க இலக்கியம் என்று சொல்லப்படுவதைத் ’திணை இலக்கியம்’ என்று குறிப்பிடுவதே பொருத்தமானது என்பார் தமிழண்ணல். ஏனெனில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் திணை வகுத்து அவற்றுக்கேற்ற துறைகளும் வகுத்து அவ் இலக்கியம் நமக்குப் பாடல்களை அளித்துள்ளது. 

    குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவர்களும், முல்லை நிலத்தவராக மேற்கண்ட பாடலில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் நான்கு குடியினரும், அவர்களைப் போலவே முல்லைநிலத்தில் வாழ்ந்த ஆயர்களும், மருத நிலத்தவரான உழவர்களும், நெய்தல் நிலத்தவரான பரதவரும், ஆறலை கள்வர்களாகப் பாலைவழிகளில் திரிந்து கொள்ளை கொலைகளில் ஈடுபட்ட எயினரும் தமிழரே.

    குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த காந்தளும், குறிஞ்சியும், வேங்கையும், முல்லை நிலத்தில் மலர்ந்த குரவும், தளவும், குருந்தும், முல்லையும், கொன்றையும், மருத நிலத்தில் தழைத்த தாமரையும், குவளையும், கழுநீரும், நெய்தல் நிலத்தைச் சார்ந்த தாழையும், புன்னையும் இன்னபிறவும் தமிழ்நிலத்து மலர்களே! [தமிழ்நாட்டு மலராக நாம் குறிஞ்சிநிலத்துச் செங்காந்தள் மலரைத்தான் தெரிவுசெய்திருக்கின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.]

    குறிஞ்சிநிலத்துச் சேயோனும், முல்லைநிலத்து மாயோனும், மருதநிலத்தவர் வேந்தன் என்று கொண்டாடிய இந்திரனும், நெய்தல் நிலமக்கள் சினைச் சுறாவின் கொம்பினை நட்டு வழிபட்ட வருணனும் தமிழ்த் தெய்வங்களே! 

    “சினைச்சுறவின் கோடுநட்டு
    மனைச்சேர்த்திய வல்லணங்கினான்…”
    (பட்டினப்பாலை: 86-87)

    இத்தெய்வங்களல்லாது, காடுகிழாள், கானமர் செல்வி, ஐயை என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட வெற்றித் தெய்வமான கொற்றவையும் மறக்குடியினரால் வழிபடப்பட்டிருக்கின்றாள். இதனைத் தொல்காப்பியத்தின் ’கொற்றவை நிலை’ விளக்குகின்றது. சிலப்பதிகார ’வேட்டுவ வரி’ கொற்றவை வழிபாட்டை விரிவாய்ப் பேசுகின்றது.

    ஐயை கோட்டத்தில் தெய்வம் ஏறப்பெற்ற சாலினி என்ற பெண், “கலையாகிய ஊர்தியில் அமர்ந்த கொற்றவை, தான் கொடுத்த வெற்றிக்கு விலையாக உயிர்ப்பலியை உண்டாலல்லது நும் வில்லிற்கு வெற்றியைக் கொடாள்; எனவே, வழிப்போக்கரின் வளத்தைப் பறித்துண்ணும் மறவர்களே! நீங்கள் கள்ளுண்டு களிக்கும் வாழ்க்கையினை விரும்புவீராயின் கொற்றவைக்கு நேர்த்திக் கடனைத் தாருங்கள்” என்று முழங்குவதை வேட்டுவ வரி காட்டுகின்றது நமக்கு.

    ”கலையமர் செல்வி கடனுணி னல்லது
    சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
    மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
    கட்டுண் மாக்கள் கடந்தரு மெனவாங்கு…”
    (சிலப்பதிகாரம்: வேட்டுவ வரி)

    இவையல்லாமல், ஆல், அரசு, கடம்பு, வேம்பு போன்ற மரங்களையும், நீர்நிலைகளையும் தெய்வம் உறையும் இடங்களாக நம்பித் தொல்குடித் தமிழர் வணங்கினர். நாகங்களை வணங்கும் மரபும் தொன்றுதொட்டு நம்மவரிடம் இருந்தது. இவ்வாறு தமிழர் வழிபாடு விரிந்து பரந்தது; பல்வேறு படிநிலைகளை உள்ளடக்கியது.

    இன்றைய தமிழ்நாட்டுக்குப் பொருந்தும் வகையில் சொல்வதானால்…ஆயிரக்கணக்கில் நம்மிடம் சாதிகள் உண்டு; அதனினும் அதிகமாய் உட்பிரிவுகள் (subsects) உண்டு. ஒவ்வோர் இனத்தாரின் பழக்கவழக்கங்களிலும், உணவு முறைகளிலும், தெய்வ நம்பிக்கைகளிலும் வேறுபாடுகள் உண்டு. எனினும், குறிப்பிட்ட ஒரு சாதியாரை மட்டுமா நாம் தமிழர் என்று அடையாளப்படுத்துகின்றோம்? இல்லையே! அனைத்துச் சாதியாரையும்…ஏன்…தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மதத்தினரையும் தமிழர் என்றுதானே அடையாளப்படுத்தி வருகின்றோம்!

    அதுபோல், வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தில் வாழ்ந்த அனைத்துத் திணை மாந்தரையும் உள்ளடக்கியதே அற்றைத் தமிழினம்; அவர்கள் அனைவரின் வாழ்க்கைமுறைகளும் நம்பிக்கைகளும் சேர்ந்ததே தமிழர் வாழ்வியல்.

    எனவே, முல்லைநிலத்துச் சிற்றூரைச் சேர்ந்த மறக்குடியினர் சிலரின் வாழ்வியலையும் வீரவழிபாட்டையும் காட்சிப்படுத்தும் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு, அதனை அன்றைய தமிழினத்தையே ஒட்டுமொத்தமாய் அடையாளப்படுத்தும் பாடலாய்ப் பறைசாற்றுவது எப்படிச் சரியாகும்? அது தமிழர் வாழ்வியலின் ஒரு கூறு என்று கருதுவதுதானே பொருத்தமாய் இருக்கும்?

    பன்மொழி பேசுவோரும் பல்லினத்தோரும் வாழும் இந்திய நாட்டை ஒரே நாடு ஒரே மொழி என்று சுருக்க நினைப்பது எப்படித் தவறான செயலோ அதுபோன்றதே பல்வேறு பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வியலையும் கொண்ட அன்றைய தமிழ்க்குடியினரையும், நேரிய பார்வையோடும் சீரிய சிந்தனையோடும் நோக்காது, ஒரு குறுகிய அடையாளத்துக்குள் அடக்க நினைப்பது!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. புறநானூறு மூலமும் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் உரையும்.
    2. தொல்காப்பியம் மூலமும் உரையும் – கு.வெ.பாலசுப்பிரமணியன்.
    3. புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு – தமிழண்ணல்.
    4. சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்.
    5. பட்டினப்பாலை மூலமும் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையும்.

     

    Share
  • எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 33

    எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 33

    மூலம்:  எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 33: வெளிப்படை யானது, வியப்பில்லை 

    வெளிப்படை யானது, வியப்பில்லை இது.
    களிப்புடன் ஆடும் ஏதோ ஒரு பூவுக்கு.
    பனிப் பருவத் தாக்கு பூத் தலை அறுக்கும்.
    அது எதிர்பாரா ஆளுமை விளைவு.

    Apparently with no surprise
    To any happy Flower
    The Frost beheads it at it’s play –
    In accidental power –

    பனிப் படுகொலை யாளி தொடர்வான்,
    கதிரோன் கூட ஏதும் தடுக்காது
    நகர்வான், அடுத்தோர் நாள் கடக்க,
    அனுமதி செய்யும் கடவுளுக்கு.

    The blonde Assassin passes on –
    The Sun proceeds unmoved
    To measure off another Day
    For an Approving God –

    ********************

    In the fifth line of ‘Apparently with no surprise,’ the speaker refers to the frost as a “blond Assassin”. This is an interesting and surprising description and only adds more personification to the poem. There is an immediate juxtaposition between the work of an assassin, to kill on purpose, and the action of the frost, killing accidentally. The word “blonde” is also an unusual choice. This likely refers to how pale the frost is or perhaps what it looks like when the sun hits it just right. This is supported by the next line which mentions the sun.

    She goes on to say that the sun is proceeding “unmoved / To measure off another Day”. The death of the flower and the destructive power of the frost, or death, is not strange. There is nothing world-ending about this loss. The sun is here as a symbol of time, moving on without a worry for anything going on in the world.

    These lines are all good examples of another technique known as enjambment. IT can be seen in the transitions between lines six, seven, and eight. Between seven and eight the poet introduces God into the poem. God, she says, is approving of everything that’s going on in the world. He is well aware of the life and death of his creation and is happy to let things go on as they are. This is yet one more way that the poet is able to show that life moves as it will. There is no way to influence God, stop time, or slow death and everyone should be as “happy” and accepting of it as the flower is.

    Share
  • குறளின் கதிர்களாய்…(398)

    குறளின் கதிர்களாய்…(398)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(398)

    அறங்கூறா னல்ல செயினு மொருவன்
    புறங்கூறா னென்ற லினிது.

    -திருக்குறள் -181 (புறங்கூறாமை)

    புதுக் கவிதையில்…

    அறத்தின் சிறப்பினை
    ஒருவன்
    அறிந்தும் கூறாமல்
    அறம் அல்லாதவற்றை
    அளவின்றிச் செய்தாலும்,
    அவன்
    அடுத்தவரைக் கெடுத்துப்
    புறங்கூறாதவன் என்னும்
    புகழ்ச் சொல்லே
    என்றும்
    இனிமை பயக்கும்…!

    குறும்பாவில்…

    அறத்தின் சிறப்பைக் கூறாமல்
    அறமிலாதவற்றைச் செய்தாலும் ஒருவன் அடுத்தவரிடம்
    புறங்கூறாதவன் எனும்பெயர் பெருமையுடையதே…!

    மரபுக் கவிதையில்…

    அறத்தின் சிறப்பை நன்றாக
    அறிந்தே ஒருவன் கூறாமல்
    அறமே யில்லா செயல்களையே
    அடுக்காய்ச் செய்து வந்தாலும்,
    பிறரைப் பற்றிக் கெடுதலாகப்
    பிடிக்கா வகையில் புண்படவே
    புறங்கூ றாதோன் எனும்பெயரே
    புகழைச் சேர்க்கும் இனிமையதே…!

    லிமரைக்கூ…

    வாழ்வி லுயர்ந்தது அறமே,
    வாய்மையிதைக் கூறாமல் அல்லவை செய்வோனுக்கும்
    புகழ்தரும் புறங்கூறாத் திறமே…!

    கிராமிய பாணியில்…

    பேசாத பேசாத
    பொறஞ்சொல்லு பேசாத,
    பொளப்பக் கெடுக்கிற
    பொறஞ்சொல்லு பேசாத..

    அறத்தோட
    செறப்பச் சொல்லாம
    ஓருத்தன்
    அறமில்லாத செயல்களச்
    செய்து வந்தாலும்,
    அவன்
    பொறஞ்சொல்லு பேசாதவனுண்ணு
    பேரு வாங்குனா அது
    பெரிய செறப்பாகுமே..

    அதால
    பேசாத பேசாத
    பொறஞ்சொல்லு பேசாத,
    பொளப்பக் கெடுக்கிற
    பொறஞ்சொல்லு பேசாத…!

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 15

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 15

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    (கவிஞர் திரு தாரமங்கலம் முத்துசாமி அவர்கள் எழுதிய ‘மகரந்தம் தேடும் மலர்கள்’ என்னும் கவிதை நூல் பற்றிய மதிப்பீடு)

    முன்னுரை

    முகநூல் பதிவுகளை ‘மின்னணுப் பதிப்புத் துறை’ எனவும் வழங்கலாம் .எத்தகைய செலவும் இல்லாமல் ஒரு கைப்பேசியின் துணைக்கொண்டே அனைத்துப் படைப்புக்களையும் பதிவிடும் ஒர் அரிய வாய்ப்பினை இன்றைய அறிவியல் நமக்கு கொடையாக்கியிருக்கிறது. அந்தப் பதிவுகளில் ‘கவிதைகள்’ என்னைப் பெரதும் கவர்நதிருக்கின்றன. முகநூல் பதிவுகள் என்ற நிலையிலோ அப்பதிவுகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வநத பிறகோ அவற்றைப் படித்து நான் அடைந்த அனுபவத்தைப் பிறருக்கும் பந்தி வைப்பதில் எனக்கு ஒரு அடக்கமான அமைதி. பதிப்புத் துறையில் முகநூல் செய்து வருகிற பணியினைத் திறனாய்வுத் துறையில் வல்லமையின் துணைகொண்டு நான் செய்து வருகிறேன். அந்த வகையில் முகநூல் கவிஞர்களில் ஒருவரான தாரமங்கலத்தார் என அன்புடன் அழைக்கப்படும் தாரமங்கலம் முத்துசாமி அவர்கள் எழுதிய ‘மகரந்தம் தேடும் மலர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பைப் பற்றிய மதிப்பீட்டினை இங்குப் பதிவு செய்கிறேன்.

    1. உரைநடை செய்யுள் கவிதை ஒரு பார்வை

    தற்காலத்தார் எழுதும் கவிதைகள் பெரும்பாலும் கருவிலேயே சிதலமடைவதற்குக் காரணம் அது கவிதையாக உருப்பெறாததுதான். கவிதை பற்றிய சொல்லாராய்ச்சி நடந்த அளவுக்கு இங்கே கவிதைப் படைப்பு வளரவில்லை. கவிதைக்கும் உரைநடைக்கும் உள்ள வேறுபாடு தெற்றெனப் ;புலப்படுவதுபோல்  கவிதைக்கும் செய்யுளுக்கும் உள்ள வேறுபாடு இன்னும் உணர்ந்து கொள்ளப்படவில்லை. கவியரங்கங்களீல் இரண்டு முறை படிப்பதுதான் கவிதை என்று எழுதப்படாத இலக்கணம் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் அந்த வரிகளில் கவிதை இருப்பதாகவோ அந்த வரிகளில் மட்டுந்தான் கவிதையிருப்பதாகவோ அவர்களாகவே எண்ணிக் கொள்வதுதான். செய்யுள் வடிவம். கவிதை பண்பு. எந்தச் சொற்களையும் செய்யுளாக்கலாம். ஆனால் கவிதைக்குச் சொல்லாட்சி இன்றியமையாத ஒன்று. எந்தக் கருத்துக்களையும் செய்யுளாக்கலாம். அதனால்தான் பழந்தமிழில் மருத்துவம் சோதிடம் வானநூல் முதலியவை எல்லாம் செய்யுள் வடிவத்தில் இருந்தன. இன்றைய ‘மரபுப்பாவலர்கள் பலரும் அறியாத உண்மை இது.  அவைகளெல்லாம் பெரும்பாலும் விருத்தங்களில் அமைந்திருப்பதாலேயே இவர்கள் அவற்றைக் கவிதை என்று ஏற்றுக் கொள்வார்களா? உரைநடையைச் செய்யுள் வடிவத்தில் எழுதிவிடலாம். கவிதை தனித்தன்மை மிக்கது. எதனையும் கவிதையாக நோக்கத் தெரிந்தவனே கவிதையாகச் சொல்லத் தெரிந்தவனே கவிதையாக்கத்தில் வெற்றி பெற முடியும். இந்த ஆற்றல் ஒரு படைப்பாளனுக்கு தினசரி  4 காட்சிகள் என்பதுபோல அமையாது. எப்போது வரும் என்று சொல்லவும். முடியாது. ‘‘தன்னை மறந்த லயம்’ என்பார் மகாகவி. தான் காணும் உலகில் தான் படைத்துக் கொண்ட உலகில் தன் சஞ்சாரத்திற்கேற்பப் படைத்துக் ;காட்டுபவனே படைப்பாளன் ஆகிறான். கவிஞன் ஆகிறான். பொங்கல் வாழ்த்து எழுதுகிறவர் எல்லாம் புரட்சிக் கவிஞர் ஆகிவிடமுடியாது.  உரைநடை என்பது சொற்கோவை. செய்யுள் என்பது சொற்கோவையின் யாப்பு வடிவம். கவிதை என்பது தனித்துவமான அனுபவங்கள் சொற்களில் வெளிப்படுவது. இந்த வேறுபாடு தெரியாதவரைக்கும் செய்யுட்களைக் கவிதை என்று எண்ணுகிற மயக்கம் நிலவிக் கொண்டே இருக்கும்.  இதனை மாற்ற நாசா செய்யும் எந்த முயற்சியும் பலனளிக்காது.

    2. முகநூல் பதிவும் முத்துசாமியும்

    முகநூல் பதிவுகளை மின்னணுப்பதிப்புத்துறை எனத் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். அதற்கேற்ப நூலாசிரியரே தனது முகநூல் பதிவு அனுபவங்களைக் கவிதையாக்கித்தந்திருக்கிறார்.

    படிக்க சுவைக்கப் பார்த்து ரசிக்க
    அறிவியல் புதுமை அற்புதல் மகிமை
    ஆட்டம் பாட்டம் அனைத்தும் கொண்டாட்டடம்
    மனதினை ஈர்க்கும் மருத்துவக் குறிப்பு
    தினமும் வெளிவரும் தீந்தமிழ் வணக்கம்!
    ஆடியோ வீடியோ அனைத்தும் கிடைக்கும்
    ஓடிவா என்று உரக்கக் கூவிடும்
    உண்மைச் சங்கம் இலக்கியம் பாட்டு
    இன்னிசை கவிதை கலக்கும் இடமே
    கற்கண்டுமுகநூல் …………..
    வாழ்த்து மகிழ்ச்சி வசைபல இவையெனக்
    கோத்துவிட்டே கும்மாளம் ;அடிக்கும்
    மார்க்கின் முகநூல் சேர்க்கும் அறிவை!

    நல்ல படைப்பாளர்களுக்கு இன்றைய நிலையில் முகநூல் பதிவு என்பது ‘அருட்கொடை’ என்பதுபோல அறிவியல் கொடை எனலாம். பல்பொருள் அங்காடியாகத் திகழும் இந்த முகநூலில் கவிஞர் தாரமங்கலத்தார் எழுதிய கவிதைகள் நூலாக்கப்பட்டு ஒரு சுவைஞன் என்ற முறையில் என் பார்வைக்கு வந்தது. இந்த நூல் கவிதைகளைப் படித்த பிறகுதான் வல்லாளர்களுக்கு மட்டுமன்று வழியின்றித் திகைத்தோர்க்கும் முகநூல் அடைக்கலப் பூங்காவாகியிருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இனிமை! எளிமை! நகைச்சுவை! நளினம்! மொழிஉணர்வு! அழகியல், மனித நேயம் இவை அத்தனைக்கும் முகநூலைக் கொள்கலமாக்கியிருக்கிறார் முத்துசாமி என்பதைப் பின்வரும் சில எடுத்துக்காட்டுக்கள் புலப்படுத்தக்கூடும்.

    2.1. கை மேல் பலன்

    நூற்பதிப்புக்கள் பிறர் கைக்குச் சென்று, படிக்கப்பட்டு அவர்களுக்குரிய பொழுதில் மனநிலைக்கு ஏற்ப சில கருத்துரைகளை நல்கலாம் நல்காமலும் போகலாம். முகநூல் அத்தகையதன்று. இந்த இலக்கியப் பதிவுகள் ஆண்ட்ராய்ட் தொழிற்சாலையின் உடனடி தயாரிப்பாதலின் வாசகர்களின் பின்னூட்டங்கள்; மறுநொடியே பதியப்படுகின்றன. எதிர் மறைக்கருத்துக்களும் பாராட்டுக்களும் கருத்துரைகளுமாக விரியும் அவை படைப்பாளனின் உறக்கத்தோடு ஒத்துப் போவதில்லை. .பின்னூட்டங்களில் காணப்படும் ஜால்ராக்களைவிட, திறனாய்வுக் கருத்துக்கள் பெரிதும் போற்றப்படுகின்றன.

    3. மலர்கள் மாலையான கதை

    உதிரிப்பூக்களாகிய கவிதைகளைத் தொகுத்து மாலையாகத் தொடுத்துக் காட்சிப்படுத்துவதில் முத்துசாமி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார். மரபுக் கவிதைகள் என்ற பெயரில் வாய்பாடுகளையே கவிதையாக எழுதி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் முகநூல் பதிவுகளுக்கு நடுவே இனிய எளிய சந்தங்களால் மக்கள் வாழ்வியல் வடிவங்களைக் கவிதைகளாக்கியிருக்கிறார்.

    பாடுபொருளைப் பொருத்தவரையில் குழந்தைகளைக் கொணடாடுகிறார்.  கூர்வாளையும் பாடுகிறார். தடம் மாறிய தமிழனையும் அவனைத் தலைநிமிர வைக்க முயன்ற பாரதியையும் பாடுகிறார். கண்ணனூர் மாரியம்மனையும் பாடுகிறார், காதலையும் பாடுகிறார். இட்டளியைப் பாடுகிறார். இயற்கையைப பாடுகிறார். இயேசுவையும் பாடுகிறார். சிறு நெல்லியைப் ;பாடுகிறார். சிட்டுக் குருவியைப் பாடுகிறார். வறுமையைப் பாடுகிறார். வண்ணக்கிளியைப் பாடுகிறார். இத்தனைப் பாடல்களையும் எளிய தமிழில் பாடுகிறார். எல்லாவற்றைப் பற்றியும் எல்லாருக்குமாகப் பாடுகிறார்.

    வாய்பாடுகளுக்காகச் சீர்களைத் தேடி, இட்டு நிரப்பும் அவலத்தை இவருடைய பாடல்களில் நான் காணவில்லை. உள்ளத்தில் தோன்றுகின்ற கருத்துக்கள், சிக்கல்கள் முதலியவற்றுக்கான வடிவங்கள் தானே அமைந்துவிடுகின்றன. நாலு வரியிலும் பாடுகிறார். நாற்பது வரிகளிலும் பாடுகிறார். நாட்டார் வழக்கைப் பல பாடல்களில் பல பொருண்மைகளில் பாடி உள்ளங் கவர்கிறார். சமுதாய அவலங்களை ஊடுருவி நோக்கும் இயல்பான கவிஞனுக்கான பார்வை இவருடைய இந்த நூலில் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும் சிறப்பினைக் காணமுடிகிறது. .

    3.1. தாரமங்கலத்தாரரின் தத்துவச் சிதறல்கள்

    தத்துவப பார்வை இல்லாதவர்கள் கவிஞர்களாகப பரிணமிக்க முடியாது. இது ஒரு கவிதைக் கோட்பாடு. விதை முளைத்து இரு பிளவுக்கு இடையில் துளிர் விடுகிறது. .அந்தத் துளிர் பச்சைதான் என்றாலும் எல்லாப் பச்சைகளையும் போலன்று. தனித்தன்மை மிக்க பச்சை நிறம்.

    பச்சைக குழந்தைபோல்
    உச்சி மெலிந்த உன்னத இலையே!
    பச்சை நிறமெல்லாம்
    பயணத்தைத் தொடங்கிவைக்கும்!
    சிவப்பு நிறமெல்லாம்
    பயணத்தை முடித்துவைக்கும்

    இது ஒரு இயல்பான சிந்தனை. குண்டும் குழியுமாகச் சாலைப்பணி நடககிற இடத்தில் செங்கொடி பறப்பதைக் கண்டிருக்கலாம். இத்தகைய காட்சி ஒன்றினை ஒருமுறை கண்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை சொன்னாராம் ‘எங்கே மேடுபள்ளம் இருக்கிறதோ அங்கேயெல்லாம் செங்கொடி பறந்தே தீரும்’ என்று. இதனை திரு.ஜீவபாரதி பதிவு செய்திருக்கிறார். பட்டுக்கோட்டையாரின மனநிலை பச்சைத் தளிரின் பச்சை வண்ணத்தைக் கண்ட முத்துசாமி பாவலருக்கு வந்திருக்கிறது. செம்மை தடுக்கும். பசுமை வழிவிடும்.

    ‘கள்ள உறவில் பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டியில் காண்கிறார் கவிஞர். குழந்தை குப்பையான கதை அது!

    குப்பையெல்லாம் கூட்டிக் குழிவெட்டிப் புதைத்திடுங்கள்!
    குப்பை உரமாகும் குழந்தை மரமாகும்

    என்று உருகுகிறார். குழந்தை விதை என்றால் அது விதைக்கப்பட .குப்பையில் வீசப்படக் கூடாது. ‘குழந்தை மரமாகும்’ என்பது தத்துவத்தின் கவித்துவ வெளிப்பாடு

    3.2. தாரமங்கலத்தார் பாடல்களில் கற்பனை

    ‘பண்புடையவர்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருப்பதனால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது’ என்பார் திருவள்ளுவர். நம் முத்துசாமியோ உலகம், சுற்றுவதை நிறுத்திவிட்டு ஊறுகாய்க்காக அவரிடம் வந்து அதனை இரக்குமாம்.

    பழைய சோறு போட்டுப் பசுந்தயிரை ஊற்றி
    பிசைந்து உண்ணும் போது பிரியமாய் மாவடுவைப்
    பிட்டு நாவில் வைக்கச்
    சுழலும் உலகமும் சுற்றுவதை நிறுத்தி
    விழையும் வடுவை விருப்பமாய்க் கேட்கும்!

    உயர்வு நவிற்சியாக இருந்தாலும் எளிய அழகான கற்பனை இது. உயர்திணைக்கு மட்டுந்தான் சிரிப்பு உண்டு. அஃறிணை சிரிக்காது. காரணம் தெரியாது. உயர் திணையிலும் சில அஃறிணைகளுக்குச் சிரிக்கத் தெரியாது. பாவலர் எழுதுகிறார்

    மலர்கள் சிரித்தால் பூரிப்பாம்
    மனிதர் சிரித்தால் புன்சிரிப்பாம்!
    மண்மகள் சிரித்தால் பூகம்பம்!
    விண்மகள் சிரித்தால் இடிமுழக்கம்!
    மலைமகள் சிரித்தால் எரிமலையாம்!
    மங்கையர் சிரித்தால் பனிமலையாம்!
    கடல்கள் சிரித்தால் சுனாமியாம்!
    கன்னியர் சிரித்தால் திவாஅலாம்!

    எல்லாப் பொருளின் வினைகளையும் சிரிப்பாகக் கற்பனை செய்யும் கவிஞர் இட்டளியைக் கூடக் கற்பனை செய்கிறார்.

    உளுந்தும் அரிசியும் உறவு கொண்டதில்
    மலர்நதது இட்லி மணந்தது சட்னி!”

    ஆட்டுக்கல்லில் தனித்தனியாக அரைபடும் அரிசியும் உளுந்தும்  அம்மணிக்கையால் பாத்திரத்துள் கலக்க உறவு கொள்கிறதாம். அதனால் இட்லி வந்ததாம்!

    4. மலர்கள் தேடிய மண் வாசனை

    ‘மகரந்தம் தேடும் மலர்கள்’ என்று நூலுக்குப் பெயர் வைத்திருக்கிறார். அந்த மலர்கள் நுகர்ந்த மகரந்தங்களில் மண்வாசனையும் கலந்திருக்கிறது..   மாபெரும் காப்பியக் கட்டுமானத்தில் ஆங்காங்கே வரிபபாடல்களையும் குரவைப் பாடல்களையும் இணைத்துக் கொண்டு தம் காப்பியத்தைத் தமிழர்தம் நெஞ்சுக்கு நெருக்கமாக்கினார இளங்கோவடிகள். அந்த இலக்கிய உததியைத் தாரமங்கலத்தாரும் பின்பற்றித் தாம் பாடிய கவிதை நூலில் பல பொருண்மைகளை நாட்டுப்புற பாடல் வடிவத்தில் பதிவு செய்திருக்கிறார். தமிழிலக்கிய வடிவங்களில் கவிதைக்குத் தனியிடம் உண்டு. அக்கவிதையுள்ளும் புலவர்களுக்கானவை தனி. கவிதைகளுக்கானவை தனி. வெண்பா> கட்டளைக் கலித்துறை முதலியவை புலவர்களுக்கானவை. தாலாட்டு, தெம்மாங்கு, சிந்து கும்மி இலாவணி முதலியன கவிதைகளுக்கானவை. பிந்தைய வடிவங்களில்தான் தமிழ்க்கவிதைகள் குதூகலித்துக் கும்மாளமிடுகின்றன. கவிதைகளை மகிழ்ச்சிப்படுத்துவதில் தாரமங்கலதத்தார் தனிக் கவனம் செலுத்தியிருக்கிறார்.

    4.1. விறகு சுமக்கும் விதவை

    புரட்சி என்பது சொல்லாமலேயே திட்டமிடப்படாமலேயே வெடிப்பது. கவிஞர் பலர் தாம் எழுதிய கவிதைகளில் ‘இது புரட்சிக் கருத்து’ ‘இது வரை யாரும் சொல்லாதது’ ‘பாடாதது’ என்று தமக்குத்தாமே பாராட்டுப் பத்திரம் படித்துக் கொள்வதை கண்டிருக்கிறோம்!  இது உலக இயற்கை. தம்பி முத்துசாமி இதற்கு மாறுபட்டவர். என்பது இந்தப் பதிவால் விளங்கும். கணவனை இழந்த பெண்களையே நாம் விதவை என்கிறோம். கணவனை இழப்பது என்பது ஒரு ஆணை ஒரு பெண் இழப்பது என்னும் குறுகிய பொருளுக்குரிதன்று. அவனுடைய அன்பை, அரவணைப்பை, பாதுகாப்பை, எதிர்காலக் கனவுகளை அனைத்தும் இழந்துவிடுவதாகத்தான் பொருள். இழப்பன அவையெனின் அவற்றை ஒருத்தி அவன் மறைந்த பிறகுதான் இழக்க வேண்டும் என்பதில்லை. உயிரோடு இருக்கும்போதும் இழக்கலாம். அப்போதே அவள் விதவையாகிவிடுகிறாளாம். இது பாட்டின் உள்ளடக்கத்தில் ஒனிந்து கிடக்கும் புரட்சியான சேதி  கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒருத்தியை விதவையாகச் சித்திரித்தது தமிழ்க்கவிதையுலகம் காணாதது.

    கட்டியவன் சரியில்லையே!
    காசு பணமும் தரவில்லையே!
    வெட்டி ஆளா அவனிருக்க
    வெறும் நிலவா நீயிருக்க உன்
    வேதனைக்கு மருந்துமுண்டா சொல்லம்மா? உன்
    விடியலுக்கு வழியுமுண்டா செல்லம்மா?

    என்று அவளையே கேட்கிறார் கவிஞர். இந்தப் புரட்சி சேதிக்குப் பின்னால் நடப்பியல் உலகத்தை மிக நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

    கால்வயிற்றுக் கஞ்சிக்காக
    காலமெல்லாம் உழைச்சுழைச்சு
    கட்டெறும்பா தேயிறியே கண்ணம்மா! உன்
    சாதிசனம் சொந்த பந்தம்
    சல்லிக் காசு கொடுத்ததுண்டா செல்லம்மா?”

    உண்மையல்லவா? இங்கே உறவுகளெல்லாம் சடங்குகளுக்காக!. திருமணத்திற்கும்  சாவுக்கும் ;ஆள்சேர்ப்பதுதான் நடப்பியல் வாழ்க்கை.  சொந்தச் சாதிக்காரனுக்கு எவனும் அவன் துன்பத்தில் கைகொடுப்பதில்லை. மரணப் படுக்கையில் கிடந்தாலும் ‘உடம்பைப் பாரத்துக்க’ என்னும் ஒற்றை வரிகொண்டு ஆண்ட்ராய்ட் போனில் தன் அனுதாபத்தைச் சேமித்துவிடுகிறார்கள்.

    4.2. ஆசை உறவாகுமா? ஆதரவு சோறாகுமா?

    ஆசை உறவாகாது ஆதரவு சோறாகாது’. பள்ளிக்குச் செல்லவேண்டிய பருவத்தில் பாரம் சுமக்கும் குழந்தைகளின் கல்விக்கு உதவும் உறவுகள் இல்லாததை இப்படிப் பாடுகிறார் கவிஞர்.

    பெற்றவர்கள் கூட இல்லை புரிய மான உறவும் இல்ல!
    உற்றவர்கள் என்று சொல்லி உதவி செய்ய யாருமில்ல!
    கற்பதற்கு வழியுமில்ல! கண்கலங்கி நிற்பதுதான் சதியாநான்
    கைபிசைந்த நிற்பதுதான் விதியா?

    என்று சமுதாய நடப்பியலில் காணும் கசப்பான உண்மைகளை நாட்டுப்புற வடிவத்திலேயே பதிவு செய்து காட்டுவது ஒரு வடிவ நுண்ணியம்.

    4.3. கண்ணீர்ப்பால் தந்த தாய்

    நாட்டார் இலககிய வடிவங்களில் ஒப்பாரியும் தாலாட்டும் உள்ளம் உருக்குபவை. கற்பனையும் உணர்ச்சியும் கைகோத்து எக்காளமிடும் அத்தகைய கவிதைகளில் உள்ளம் பறிபோவது புதுமையன்று, தாய் தாலாட்டுப் பாடுகிறாள்

    கடைப்பால் கொடுத்தால் கால்;வயிறு ரொம்பாதுன்னு
    கண்ணீரால் பால்கொடுத்தேன் கண்மணியே நீயுறங்கு!’”

    உலகியலில் தாய் அழுதுகொண்டு பால் கொடுக்கமாட்டாள். கூடாது, ஆனால் வறுமையின் உச்சம். தாய் அழுதுகொண்டு கொடுப்பதைப் பாடுகிறார் கவிஞர்

    ஆன்றோர் சபையும் இருக்குது நா மன்றமும் கிடக்குது!
    அத்தனையும் இருந்துமென்ன அநியாயம்தானே நடக்குது?
    பசிக்கொடுமை தீர வேண்டும் வீட்டிலே  இந்தப்
    பட்டினிச் சாவு மறைய வேண்டும் நாட்டிலே

    சமுதாயச்சிக்கல்களில் வறுமையும் பசியும் தலையானவை.  அவற்றைப் பாடாத கவிஞனை வரலாறு  தன் கணக்கில் வரவு வைக்காது. முத்துசாமி வரவுவைக்கப்பட்டவர்.!

    5. மலர்கள் தேடும் மழலைகள்.

    மலர்கள் தேடும் மழலைகள் என்னுந் தொடர் தம்பி முத்துசாமி எழுதிய பாடல்களில் குழந்தைப் பாடல்களைக் குறிப்பது. குழந்தைப் பாடல்களில் தமிழிலக்கியம் இன்னும் சவலையாகவே இருக்கிறது என்பது மழலை புரியாது’ என்பதுபோல உண்மை. காரணம் குழந்தைகள் பாடுவது என்பது முழுமையும் கற்பனை. குழந்தைகளுக்கு அறிவைவிடக கற்பனை மிகுந்து நிற்கும். இந்தக் கற்பனையின் பேரளவு படைப்பாளனுக்கு வராது. அவன் தன் உயரத்திலேயே நின்று கொண்டிருப்பான். மகாகவியின் பாப்பாப் பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் எல்லாம் அறிஞர்களின் சிந்தனைக்கே பிடிபடாதவை.  ‘தேம்பி அழுங்குழந்தை நொண்டி’ என்பது குழந்தையின் பிஞ்சு அறிவுக்குப் புலப்படுமா என்ன? குழந்தைப் பாடல்களில் மழலை தவழ வேண்டும். கன்னிமாரா நூலகம் நுழைந்து விடக்கூடாது. படைப்பாளன் தன்னை முன்னிலைப் படுத்துவது அல்ல குழந்தைப் பாடல்கள். மழலையாக மாற வேண்டும். எம்.எஸ்.இராஜேஸ்வரி பாடுவதும் பி.சுசீலா பாடுவதும் ஒன்றாகாது. கவிஞர் பலரும் ஒதுங்கிக் கொள்ளும் இந்தப் பகுதியில் தம்பி முத்துச்சாமி துணிச்சலுடன் இறங்கிச் சில பாடல்களைப் பதிவு செய்திருப்பதே பெரிதும் பாராட்டத்தக்கதாக அமைகிறது. கூடிப்பேசும் குருவிகள் என்னுந்; தலைப்பில் இவர் எழுதியிருக்கும் பாடல் குழந்தைகளுக்கும் இனிக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்.

    கூடிப்பேசும் குருவிகளே கொஞ்சிப் பேசுங்க!
    நாடிவரும் தென்றலிடம் நலததைக் கேளுங்க!
    பாடுகின்ற குயிலினமும் உங்கள் பந்தமே!
    ஆடுகின்ற மயிலினமும் உங்கள் சொந்தமே!”

    என்னும் பாடலில் பறவைகளோடு குழந்தைகளைப் பழக வைக்கும் பாங்கும் எலலா உயிர்கள் மேலும் அன்பு காட்ட வேண்டும் என்ற உயரிய பண்பாக்க முயற்சியும் ஒரு சேர வெளிப்படுவது காண்க. பஞ்சவர்ணக்கிளி பற்றி அனைவருக்கும் தெரிந்த பாடல் பச்சைக் கிளியே பறந்துவா! பாலும் சோறும் உண்ண வா! கொச்சி மஞ்சள் பூச வா! கொஞ்சி விளையாட வா!” என்பது. இந்தப் பாடலை இசையமைப்பாளர்கள் குழநதைகளுக்கு வாயில நுழையாத மெட்டுக்களிலெல்லாம் பாடி வதம் செய்திருக்கிறார்கள்.

    பார்க்க பார்க்க அழகுஎங்கள் பக்கம் வந்து பழகு
    செக்கச் சிவந்த ;அலகு நீ சிறகடித்தால் அழகு!”

    கொட்டை உனக்குப் பிடிக்குமா அதைக்
    கொண்டு வந்து தரட்டுமா?”

    மினுமினுக்கும் கிளியக்கா உன்
    மேனியெல்லாம் ஒளியக்கா!”

    தும்பியோடு விளையாடு தம்பி! நீ
    துன்புறுத்த நினைக்காதே தம்பி!

    என்னும் வரிகளில் குழந்தைகளோடு குழந்தையாய்க் கவிஞர் ஒன்ற முயல்வதைக் காணலாம். குழந்தைப் பாடல்களில் பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் என்னும் இலக்கணவகைச் சொற்களைப் பெரிதும் தவிர்த்து இயற்சொல், திரிசொல் இவற்றோடு வழக்குச் சொற்களையும் கலந்து அமைத்தாலே பாடல்கள் மழலைகளின் நெஞ்சில் பதியும். நினைவில் தங்கும். வாயில் நுழையும் மழலைகள் மகிழும். அன்றிப் புலவன் தன்னுடைய புலமைக்கு வடிகால் தேடினால் பாடல்களையும் புலமையையும் அலமாரியில் அடக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

    நேசம் உனது வாசம் என் நெஞ்சில் வநது வீசும்!
    வேசம் இல்லாப் பாசம் உன் வியர்வை கலந்து பேசும்!”

    என்ற வரிகளில் சகர வர்கக எதுகைகளைக் கொண்டு குழந்தைகளோடு குழந்தையை  விளையாடி மகிழ்கிறார் கவிஞர்

    6. கலையியல் கவிதைகளில் அழகியல் தொடர்கள்

    சொற்கள் கவிதைகளைச் சிறக்கச் செய்யும். தொடர்கள் நூல்களை நிலைநிறுத்தும். ‘நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் ஆடைவாங்குவதற்காக’ என்னும் ஒரு தொடர் நா காமராசனைப் புதுக்கவிதையின் நாயகனாக்கியது காண்க. ’மந்திரம் போல் சொல் வேண்டும் என்பார் பாரதியார். அதுபோல பல சொற்களைச் சீர்களாக்கிப் பந்திவைத்திருக்கிறார் முத்துச்சாமி.

    6.1. செடிவைக்கும் மலர்கள்

    பள்ளி செல்லும் பெண்பிள்ளைகள் செடிகளை அதாவது நாற்று நடுகிறார்கள். கன்றுகளை நடுகிறார்கள். இதனைக் காணும் கவிஞர் செடிவைக்கும் மலர்கள்’ என்று வண்ணனை செய்கிறார்.

    6.2. தங்க நிற நெருப்பில் தவத்தில் இருந்தவை

    காலைச் சிற்றுண்டியாக இட்டளியும் பொங்கலும் தயாரிக்கிறார்கள். அவற்றுள் பொங்கலில் இடுவதற்கு முந்திரிப் பருப்புக்களை வாணலியில் இட்டு வதக்குகிறார்கள். இந்தக் காட்சி ‘முந்திரி நெருப்பில் தவம் செய்வதுபோல்’ தோன்றுகிறதாம். ‘தங்க நிற நெருப்பில் தவம் செய்யும் முந்திரி’! அடடா! என்ன அழகிய கற்பனை வெளிப்பாடு?

    6.3. வறுமைக்குப் பஞ்சமில்லை

    விருந்தினரைப் போற்ற இயலாத நிலையைத்தான் வறுமையின் உச்சம் என்பார் வள்ளுவர். ‘கொல்வறுமை தாளவில்லை என்பார் ஜீவா. உண்மையில் அந்த வீட்டில் பஞ்சமேயில்லையாம்! எதற்கு? வறுமைக்கு! எவ்வளவு ஆழமான அழகான கற்பனை கலந்த சொற்றொடர்? இதுதான் கவிதை!

    7. மகரந்தம் தேடும் மலர்களில் வடிவக் கோட்பாடுகள்

    முறையாகத் தமிழ் படித்தவர். பட்டங்கள் பல பெற்றவர். யாப்பிலக்கணம் தெரிந்தவர்.  பாவகைகளையும் அவற்றின் இனங்களையும் பகுத்தறிந்தவர். இருந்தாலும் இந்த நூலில் அவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்து மக்கள் மொழியில் கவிதை எழுதியுள்ளார் முத்துசாமி. இந்தத் துணிச்சல் பட்டுக்கோட்டைக்கு இருந்தது பாவலர் வரதராசனுக்கு இருந்தது. ஜீவாவுக்கு இருந்தது. கே.சி.எஸ..அருணாசலத்திற்கு இருந்தது கொத்தமங்கலம் சுப்பு அவர்களுக்கு இருந்தது. இன்றைக்கு இவருக்கு இருக்கிறது. மக்கள் வாழ்வியல் சிக்கல்களை வரையறுக்கப்பட்ட யாப்புக்குள் கொண்டுவர இடர்ப்படுவதைவிட மக்கள் மொழியிலேயே அவர்களுக்குத் தெரிந்த நடையிலேயே எடுத்துமொழிவதையே தனது வடிவக்கோட்பாடாகக் கொண்டிருக்கிறார் முத்துசாமி. இது இந்த நூலுக்கு மட்டும்!

    சில கருத்துரைகள்

    கவிஞனைப் பாராட்டுவதற்கான கட்டுரையன்று இது. அது என் வேலையுமல்ல. கவிதையின் சுவையனுபவத்தைப் பிறர்க்குப் பநதிவைப்பது பரிமாறுவது அவ்வளவுதான்! அவ்வாறு சுவைக்கிறபோது எல்லாமே இனிபபாகத்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அந்த வகையில் நூலின் அகப்புறக் கட்டுமானம் பற்றிய சில கருத்துரைகளைப் பதிவிட நேர்கிறது. .

    1. ஆண்ட்ராய்டில் தட்டச்சுச் செய்யப்பட்டு நூல்வடிவமாக்க அச்சுக்கு அனுப்புகிறபோது எழுத்துரு சிறுபான்மை மாறுபடும். எனவே மெய்ப்பு திருத்துகிறபோது தனிக்கவனம் இருந்திருக்க வேண்டும். இந்த நூலில; ‘லி’ என்ற எழுத்தே அச்சடிக்கப்படாமல் அடிக்கோடாகக் காட்சியளிக்கிறது.
    2. வந்த பையன் என்பதுபோலப் பெயரெச்சத்திற்குப் பின்னால் வல்லினம் மிகாது என்பது மிக மிகச் சாதாரண இலக்கணம் என்பதை மெத்த படித்த நூலாசிரியர் கவனததிற் கொள்ள வேண்டும்.
    1. உள்ளடக்கத்தால் சிறக்கும் இந்த நூலின் அட்டைப்படம் அலட்சியமாகக் கையாளப்பட்டிருப்பது வருத்தத்தற்குரியது. பன்முகப் பொருண்மைகளைப் பாடுபொருளாகக் கொண்ட இந்த நூலுக்கு இந்தப் படம் பொருந்தாமல் போகிறது. ஒரு நூலுக்கு அட்டைப்படம் என்பது தாயின் முந்தானை!  தாவணியன்று!

    நிறைவுரை

    பணிக்காலததில் பாடம் நடத்தி பணி ஓய்வு பெற்றவுடன ஓய்வூதியத்தில் ஒளிந்து கொண்டு உலகமும் தெரியாமல் உலகததிற்கும் தெரியாமல் மறைந்த தமிழாசிரியர் பலர். தம்பி முத்துசாமியோ வேறுபட்டுத் திகழ்கிறார்.  தன்னை மனிதனாக ஏற்றுக் கொண்ட தன்னைச் சூழ்நதிருக்கும் சமுதாயத்தை இந்த எழுபது வயதில் அவர் ஏறெடுத்துப் பார்க்கிறார். எழுத்தில் வடிக்கிறார. இதுவே ஒரு சமுதாயப்பணி! நாமும் எதனையாவது இந்தச் சமுதாயத்திற்குச் செய்ய வேண்டும், சொல்ல வேண்டும் என்ற துடிப்பு இந்த நூலின் ஒவ்வொரு பககததிலும் எதிரொலிப்பதை என்னால் உணரமுடிகிறது. நீங்களும் அந்தத் துடிப்பை உணரவேண்டும் என்பதற்காகத்தான் படித்துச் சுவைத்ததைப பந்திவைத்துப் பகிர்ந்திருக்கிறேன். வண்டுகள்; தேட வேண்டிய மகரந்தத்தை மலர்களைத் தேடவைத்திருக்கிறார் முத்துசாமி! நாம் என்ன மலர்களைவிடத் தாழ்ந்தவர்களா?

    (தொடரும்)

    Share
  • ஸ்நோஒயிட் & டோரா

    ஸ்நோஒயிட் & டோரா

    சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்சுக்குச் சென்றோம். தற்செயலாக ஸ்நோஒயிட்டையும் டோராவையும் சந்தித்தோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஔவை – 87

    ஔவை – 87

    இன்று 87ஆம் பிறந்தநாள் காணும் தமிழறிஞர் ஔவை நடராஜன் அவர்களுடன் 2016ஆம் ஆண்டு நான் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் இதோ. ஔவைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    கேட்டார்ப் பிணிக்கும் வகையில் உரையாற்றும் பேச்சாளர். எளிமையும் வலிமையும் இணைந்த அன்பாளர். சிறந்த சிந்தனையாளர். சிறப்புகள் பல வாய்ந்த ஒளவை நடராசன் அவர்கள், தமிழ் ஓலைச் சுவடிகள் சேகரிப்புக் குறித்து, சில கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    உ.வே.சாமிநாதையருக்குப் பின்னால் ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பெற்ற புதிய நூல் ஏதும் இருக்கிறதா என்ற அவரின் கேள்வி, ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. 2011 மார்ச் 14 அன்று, சென்னை, தி.நகரில் உள்ள அவரின் அலுவலகத்தில் இந்த நேர்முகம் பதிவானது. அவருடனான குரல் நேர்காணலை, இங்கே கேட்கலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி?

    உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி?

    இன்னும் இன்னும் எனக் கேட்டு வாங்கிச் சாப்பிட வைக்கும், சுவையும் சத்தும் நிறைந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உங்கள் சமையல் மேடை பளபளக்க

    உங்கள் சமையல் மேடை பளபளக்க

    இன்று எங்கள் வீட்டைச் சுத்தம் செய்து முடித்தோம். படிப்படியாக இதை நிறைவேற்றி முடித்துள்ளது, தி பிக் டீமின் (The Big Team) இளம் அணி. முதல் முறையாக இவர்களின் சேவையைப் பயன்படுத்தியுள்ளோம். போகாத கறைகளையும் தேய்த்துப் போக்கினார்கள். எட்டாத ஒட்டடையையும் எட்டித் துடைத்தார்கள். விடாப்பிடி அழுக்கையும் விரட்டினார்கள். சுவர்களுக்கு வண்ணம் பூசுவது, தச்சுவேலை, பிவிசி கதவு அமைப்பது, இரும்பைப் பற்றவைப்பது (வெல்டிங்) போன்ற பல வேலைகளையும் திறம்பட முடித்துள்ளார்கள். சமையல் மேடைத் தொட்டியை இவர்கள் எப்படிப் பளபளக்க வைக்கிறார்கள் என்று பாருங்கள். நம் நேயர்களுக்காகச் சிறப்புச் சலுகை ஒன்றையும் வழங்க முன்வந்துள்ளார்கள். அது என்ன என்பதை வீடியோவின் உள்ளே பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வரி வாலாட்டியின் இன்னிசை

    வரி வாலாட்டியின் இன்னிசை

    நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று இன்னிசை எழுப்பிய வரி வாலாட்டிக் குருவி என்கிற வெண்புருவ வாலாட்டி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மு. இளங்கோவனின் மணல்மேட்டு மழலைகள் – ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா

    மு. இளங்கோவனின் மணல்மேட்டு மழலைகள் – ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா

    குழந்தைகளுக்கு விருப்பமானவை பாட்டும் கதையும் ஆகும். இன்றைய விரைவு உலகத்தில் நம் குழந்தைகளுக்கு இவை கிடைப்பதில்லை. இக்குறையை உணர்ந்து, முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டுச் சுவைக்கும் வகையில் மணல்மேட்டு மழலைகள் என்ற தலைப்பில் எழுதிய பாடல்களை நூல்வடிவில் வெளியிட்டுள்ளார். புதுவை இசையறிஞர் கலைமாமணி கா. இராசமாணிக்கனார் அவர்களின் மேற்பார்வையில் இசைத்தென்றல் இராஜ்குமார் இராசமாணிக்கம் அவர்கள் இப்பாடல்களுக்கு இசையமைத்து ஒலிவட்டாக உருவம் கொடுத்துள்ளார். இந்த ஒலிவட்டினையும் நூலினையும் மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அரங்க. செல்வம் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி வெளியிட உள்ளார்கள். அறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

    அழைப்பின் மகிழ்வில்
    வயல்வெளித் திரைக்களம்
    புதுச்சேரி – 605 003

    நாள்: 25. 04. 2022 / நேரம்: மாலை 6.30 மணி
    இடம்: செயராம் உணவகம் (Hotel Jayaram), புதுச்சேரி

    நிகழ்ச்சி நிரல்

    தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி காஇராசமாணிக்கம் அவர்கள்

    தலைமை,
    ஒலிவட்டு மற்றும் நூல் வெளியீடு
    மாண்புமிகு பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்கசெல்வம் அவர்கள்
    புதுச்சேரி சட்டப்பேரவை

    ஒலிவட்டு முதல்படி பெறுதல்
    திருகே.பிகேசெல்வராஜ் அவர்கள்
    தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

    நூல் முதல்படி பெறுதல்
    புரவலர் திருந. க. குணத்தொகையன் அவர்கள்புதுச்சேரி

    அருளாசியுரை
    தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்
    இருபதாம் பட்டம், பொம்மபுர ஆதீனம்

    ஒலிவட்டுச் சிறப்புப் படிகளைப் பெறுதல்
    முனைவர் விமுத்து அவர்கள்
    தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்

    பேராசிரியர் சு. பழனியாண்டி அவர்கள்
    தாளாளர், சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, மோகனூர்

    மருத்துவர் ச. முத்துராமன்

    பொறியாளர் பார்த்தசாரதி, ஆசிரியர் – வலைத்தமிழ்

    சிங்கைக் கவிஞர் .  இளங்கோவன் அவர்கள்

    வாழ்த்துரை
    பேராசிரியர் ப. சிவராசி,
    இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி

    ஒலிவட்டு அறிமுகவுரை
    பொம்மலாட்டக் கலைஞர் முகலைவாணன்

    வரவேற்புரை
    திருதூசடகோபன் அவர்கள்

    நன்றியுரை
    திருகோ. முருகன் அவர்கள்
    புதுச்சேரி இலக்கிய வட்டம்.

    Share
  • சாதம் உண்ணும் குயில்

    சாதம் உண்ணும் குயில்

    நம் வீட்டு மதில் சுவரில் தினமும் பல முறைகள் உணவு வைப்போம். இவற்றைக் குயில், காக்கை, மைனா, தவிட்டுக் குருவி, செம்போத்து, பூனை, அணில் எனப் பலவும் வந்து வாடிக்கையாக உண்ணும். சாதத்தைக் குயில் உண்ணும் காட்சி இதோ. இதைப் படமெடுத்துப் பகிர்வது, அவரவர் தங்கள் வீட்டில் இப்படி உணவிடுவதற்கு உந்துதலாக இருக்கும் என்பதற்காகவே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இப்படி ஒரு பலகை தேவையா?

    இப்படி ஒரு பலகை தேவையா?

    தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சாலையின் மேலே டிஜிட்டல் பலகைகளை வைத்துள்ளதை அண்மையில் கவனித்தேன். வண்டிகள் போகும் வேகத்தில் இவற்றைப் படிக்க இயலாது. பகல் வெளிச்சத்தில் இந்த எழுத்துகள் சரியாகத் தெரியாது. ஓரத்தில் நிறுத்திப் படிக்கலாம். அவசரச் செய்திகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க இது ஒரு வழியாக இருக்கலாம். ஆனால், வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சாலையிலிருந்து சற்றே திசை திருப்பவும் இடம் உண்டு. இதைப் படிப்பதற்காக வாகனத்தை அந்த இடம் வந்ததும் மெதுவாகச் செலுத்தினாலும் பின்னால் வரும் வாகனங்கள் மோதும் வாய்ப்பும் உண்டு. இந்தப் பலகைகள் தேவையா? உங்கள் கருத்தை எழுதுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 47

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 47

    -மேகலா இராமமூர்த்தி

    தன் அண்ணன் இராவணனால் துரத்தப்பட்ட வீடணன், தன் அமைச்சர்களோடு அண்ணல் இராமனிடம் அடைக்கலம் வேண்டி வந்தபோது, ”அண்ணனுக்குப் பகைவரால் ஆபத்து ஏற்படும் வேளையில் அவனைப் பிரிந்துவருபவனை நம்பக்கூடாது; ஆதலால், வீடணனை ஏற்பது ஆபத்து” என்று ஆலோசனை சொன்னான் அண்ணனை இராமனின் துணையோடு வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றிய சுக்கிரீவன்.

    சுக்கிரீவனின் கருத்தையறிந்த இராமன் அடுத்து சாம்பனின் கருத்தைக் கேட்கின்றான். சாம்பனும், ”வீடணனின் வரவு பொன்மானாக வந்த மாரீசனின் வரவைப் போல் தீமைபயக்கக் கூடியதே; எனவே, அவனைச் சேர்த்துக்கொள்வது நன்றன்று” என்ற தன் கருத்தைத் தெரிவித்தான்.

    சாம்பனைத் தொடர்ந்து நீலனும், ஏனைய அமைச்சர்களும் வீடணனை நம்மவனாகப் பற்றிக் கொள்ளுதல் பழுது (தவறு) எனும் கருத்தையே வழிமொழிந்தனர்.

    இறுதியில் அனுமனின் கருத்தை வினவினான் இராமன். ”உத்தமர்கள் அனைவரும் உரைத்தபின்னர் நானும் விளம்ப வேண்டுமா?” என்று பணிவோடு கேட்டுவிட்டு, ”தூயவர்களாகிய இவர்கள் வீடணனைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் தூயவையே; எனினும், நான் வீடணனைத் தீயவன் என்று ஐயுறமாட்டேன்; அதற்கான காரணங்களை இப்போது உரைக்கின்றேன்” என்று தன் கருத்துக்களை எடுத்தியம்பத் தொடங்கினான் அனுமன்.

    ஐய! உள்ளத்திலுள்ளதைப் பேச்சில் வெளிப்படுத்துவதற்கு முன்பாக மெள்ளத் தம் முகங்களே கூறிவிடும்; வஞ்சகத்தின் விளைவுகள் எல்லாம் நல்ல கருத்தில்லாத, அறியாமையாகிய இருள்நிறைந்த பள்ளம்போன்ற முகத்தில் அல்லாது, (அறிவொளி வீசுகின்ற) வெட்டவெளி போன்ற முகத்தில் வெளிப்பட்டுத் தோன்றுமோ?” என்றான்.

    உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற
    மெள்ளத் தம் முகங்களே விளம்பும் ஆதலால்
    கள்ளத்தின் விளைவுஎலாம் கருத்துஇலா இருள்
    பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ. 
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6452)

    வீடணனின் முகத்தில் கள்ளமில்லை; அறிவின் மாட்சி தெரிகின்றது. ஆதலால், அவன் தீயவனாக இருக்க வாய்ப்பில்லை என்பதே ஈண்டு அனுமன் வெளிப்படுத்தும் கருத்து.

    அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
    கடுத்தது காட்டும் முகம்”
    (706) என்ற வள்ளுவரின் குறட்கருத்தைக் கம்பர் இப்பாடலில் எடுத்தாண்டிருக்கக் காண்கின்றோம்.

    வீடணன் நம்மிடம் வந்துசேர்ந்திருக்கும் காலம் சரியானதன்று என்று இராமனுக்குச் சுட்டிக்காட்டி அவனை ஏற்றுக்கொள்ள மறுதலிக்குமாறு வற்புறுத்திய நண்பர்களுக்குப் பதிலளிக்க விரும்பிய மாருதி,

    ”வலிமை மிக்கதான வாலியின் பகையைக் கடந்து நின்றது நின்னுடைய வலிமை; இனி, இலங்கை அரக்கர்கட்கும் அதனால் அழிவு உறுதியாயிற்று என்பதால், தனக்கு மூலம் எனப்படும் துணைவர்களான இராவண கும்பகருணர்களைப் பிரிந்து வருவதை நிறைவேற்றினான் வீடணன். எனவே, அவன் இங்கு வந்துசேர்ந்திருக்கும் காலமும் பொருத்தமானதே” என்றான் அஞ்சனை மைந்தன்.

    காலம்அன்று இவன் வருகாலம் என்பரேல்
    வாலிதன் உறுபகை வலி தொலைத்தலால்
    ஏலும் இங்குஇவர்க்கு இனிஇறுதி என்றலால்
    மூலம்என் துணைவரைப் பிரிவு முற்றினான்.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6455)

    தன்னை இராவணன் கொல்லச் சொன்னபோது அதனைத் தடுத்தவன் இந்த வீடணன்தான் என்பது அனுமனின் நினைவுக்கு வருகின்றது. அதைப்பற்றி இராமன் உள்ளிட்ட அனைவர்க்கும் தெரிவிக்க விரும்பிய அவன்,

    இராவணன் அவையில் கொண்டு நிறுத்தப்பட்ட என்னைக் கொல்லச்சொல்லி இராவணன் ஆணையிட்டபோது இடைமறித்து, “அபலைகளான பெண்களைக் கொல்வதும், வீரமற்ற அறிவிலிகளைக் கொல்வதும், நமது அழிவுக்குரிய செயல்களைச் செய்தார்களெனினும் தூது வந்தவர்களைக் கொல்வதும் தூய செயல் ஆகாது என்று சிறந்த காரணங்களை எடுத்துக்காட்டி என்னைக் காத்தவன் இந்த வீடணன்” என்றான் அனுமன்.    

    மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய
    ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும்
    தூதரைக் கோறலும் தூய்து அன்றாம் என
    ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6459)

    தொடர்ந்து இராமனிடம் தன் கருத்துக்களை முன்வைத்த சொல்லின் செல்வனான அனுமன்,  

    ”வெற்றி வேந்தனே! தேவர்க்கும் அசுரர்க்கும் பிரமன் முதலாய தேவர்களுக்கும் மேலான மும்மூர்த்திகட்கும் செய்துமுடித்தற்கு அரிய காரியத்தை முடிப்பதற்கு நீ முனைந்து நிற்கின்றாய். தனக்கு ஆபத்து வந்த காலத்தில் அடைக்கலம் என்று உன்னை நாடிவந்த வீடணனை ஐயுற்று நீ ஏற்றுக்கொள்ளாது புறஞ்செல்ல விடுவாயானால், கிணற்றின் சிறிய அளவு தண்ணீரைக் கண்டு கடல் ஐயுற்றதற்கு ஒப்பாகாதோ? என்று வினவினான்.

    கடல்போன்றவனான உன்னைச் சிறு புனலொத்த இந்த வீடணனால் என்ன செய்துவிட முடியும்? இவனைக் கண்டு சந்தேகம் கொள்வது எதற்கு? நற்குணங்களும் நீதியும் வழுவாத இவனைத் தாராளமாக நம்மோடு இணைத்துக்கொள்ளலாம் என்பது வீடணன் குறித்த அனுமனின் நிலைப்பாடு.

    மாருதியின் வார்த்தைகள் இராமனுக்குத் தன் காதுகளில் அமுதம் பாய்ந்தது போன்ற இன்பத்தை நல்கின. ”பேரறிவாளனே! நீ சொன்ன வார்த்தைகள் மிக நன்று!” என அவனைப் பாராட்டிவிட்டு, அனைவரையும் நோக்கி, ”மாருதி சொன்ன கருத்துக்களே சிறந்தவை” என்றுரைத்தான் அழுத்தமாக.

    அதனைத் தொடர்ந்து, அடைக்கலமாக வந்தவனை விடலாகாது என்பதற்குச் சான்றுகாட்டும் விதத்தில், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி மன்னனின் கதை, ஆலகால விடத்தை உண்டு சிவனார் தேவர்களைக் காத்த கதை, அடைக்கலம் எனச் சரணடைந்த யானையை முதலையின் வாயிலிருந்து திருமால் காத்த கதை எனப் பலவற்றை எடுத்துரைத்துத் தன்னை நம்பி வந்தவரை ஒருவன் காக்கவில்லையாயின் அறத்தால் என்ன பயன்? அவன் ஆண்மையால்தான் என்ன பயன்? ஆதலால், வீடணனை ஏற்றுக்கொள்வதால் நன்மையோ தீமையோ எதுவந்தாலும் சரி; அவனை ஏற்றுக்கொள்வது என்று நான் முடிவுசெய்துவிட்டேன் எனக்கூறி, கதிரோன் மைந்தனான சுக்கிரீவனைக் கூப்பிட்டு, ”நீ சென்று வீடணனை என்பால் அழைத்து வா!” என்றான் இராமன்.

    வீடணனை சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று யோசனை சொன்ன சுக்கிரீவனையே வீடணனை அழைத்துவர இராமன் அனுப்பியது நமக்கு வியப்பளிப்பதாய் உள்ளது. பின்னாளில் தன்னை நிராகரிக்கச் சொன்னவன் இந்தச் சுக்கிரீவன் என்பதை வீடணன் அறியும்போது அவனுக்கு சுக்கிரீவன்பால் கோபமும் வெறுப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அதனைத் தவிர்த்துத் தொடக்கம் முதலே இருவரும் நட்பாகப் பழகும் சூழலை ஏற்படுத்திவிட வேண்டும் எனும் நோக்கத்தோடு இராமன் வீடணனை அழைத்துவரச் சுக்கிரீவனைத் தேர்ந்தெடுத்தான் என்று நாம் எண்ணுவதில் தவறில்லை.

    இராமனின் கட்டளையை ஏற்றுச்சென்ற சுக்கிரீவன் வீடணனைக் கண்டான்; இருவரும் ஒருவரையொருவர் அன்புறத் தழுவிக்கொண்டனர். கருநிறத்தவனான வீடணனும் வெண்ணிறத்தவனான சுக்கிரீவனும் தழுவிக்கொண்ட காட்சியானது, இரவும் பகலும் தழுவிக்கொண்டதுபோல் இருந்தது என்கிறார் கற்பனையில் விற்பன்னரான கம்பர்.

    இராமன் வீடணனுக்கு அடைக்கலம் தர விரும்புவதை அவனிடம் தெரிவித்த சுக்கிரீவன், ”என்னுடன் வா நாம் இராமனைப் பணிவோம்” என்றான்.

    உவகையால் கண்கள் பொங்க, உடல் புல்லரித்து நின்ற வீடணன், ”செம்பஞ்சு ஊட்டாமலேயே சிவக்கின்ற மென்மையான பாதங்களை உடைய சீதாதேவியை இராமனிடமிருந்து பிரித்த பாவியும், வஞ்சகனுமான இராவணனுக்கு இளைய தம்பியாகிய என்னை வருக என்றுகூறி அருள்புரிந்தானோ? என்னையும் அடைக்கலம் என்று கருதினானோ? அடியவனாகிய நான் இராமனின் அருளால் தாழ்சடைக் கடவுளாகிய சிவபெருமான் உண்ட நஞ்சானது எவ்வாறு அவர் உண்டதால் சிறந்ததாயிற்றோ அதுபோலச் சிறந்தேன்” என்றான்.

    பஞ்சுஎனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி
    வஞ்சனுக்கு இளைய என்னை வருகஎன்று அருள் செய்தானோ
    தஞ்சுஎனக் கருதினானோ தாழ்சடைக் கடவுள்உண்ட
    நஞ்சுஎனச் சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன். (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6487)


    சுக்கிரீவனின் யோசனைப்படி விரைந்துசென்று இராமனைக் கண்டு வணங்கினான் வீடணன். இராமனும் மகிழ்ந்து அருகிலுள்ள ஆசனத்தில் அவனை அமர்த்தி, ”கடல்சூழ்ந்த இலங்கைச் செல்வத்தை உனக்கே தந்தேன்” என்று கூறிவிட்டு இலக்குவனை அழைத்துத் ”தம்பி இவனுக்கு மகுடம் சூட்டுக” என்றான்.

    ஏன் இலக்குவனை இராமன் முடிசூட்டப் பணித்தான் எனில், சுக்கிரீவன், சாம்பன், மற்றுமுள்ளோரைப் போல் இலக்குவன் வாய்திறந்து வீடணனை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லையே தவிர அவனுக்கும் அதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்துகொண்டான் இராமன். அந்த மனநிலையை மாற்றவேண்டும் என்று கருதியே அவனிடம் வீடணனுக்கு இலங்கை வேந்தனாய் முடிசூட்டும் பொறுப்பை அளித்தான் என்கின்றனர் கம்பனில் தோய்ந்தோர்.

    அப்போது வீடணன், ”ஐயனே! அழிவற்ற செல்வமாகிய நின் திருவருளை எனக்கு அளித்தனை; களவுத்தன்மை உடைய அரக்கனாகிய இராவணனுக்கு இளையவனாய்ப் பிறந்த அந்தத் தொடர்பு தீரும்படி, நின் தம்பியாகிய பரதனுக்களித்த திருவடி நிலைகளான (காலணிகள்) மகுடத்தை எனக்கும் சூட்டுக” என்று பணிந்து வேண்டினான்.

    வீடணனின் விநயத்தில் மகிழ்ந்த இராமன், ”குகனோடு சேர்த்து நாங்கள் ஐவர் சகோதரர்கள் ஆனோம்; இது முன்பு நிகழ்ந்தது; பின்பு மேருமலையைச் சுற்றிவரும் சூரியனின் மகனான சுக்கிரீவனுடன் சேர்த்துச் சகோதரர் ஆறுபேர் ஆயினோம். எங்களிடம் உள்ளன்புகொண்டு எம்பால் வந்தவனே! உன்னுடன் சேர்த்து இப்போது சகோதரர்கள் ஏழுபேர் ஆயினோம். புகுதற்கரிய கானக வாழ்வை எனக்குத் தந்து புதல்வர்களால் நிறைந்திருக்கின்றான் உன் தந்தை தயரதன்” என்றான்.

    தயரதனை எந்தை என்றுரைக்காமல் நுந்தை என்று வீடணனிடம் இராமன் உரைப்பது, உண்மையிலேயே அவன் வீடணனைத் தன் உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டுவிட்டான் என்பதன் வெளிப்பாடே.

    குகனொடும் ஐவர்ஆனேம் முன்பு பின் குன்றுசூழ்வான்
    மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த
    அகனமர் காதல்ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்
    புகலருங் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6507)

    குல, இன வேறுபாடின்றி அனைவரையும் சோதரர்களாக இராமன் ஏற்றுப்போற்றும் பாங்கு, அவனின் பண்பட்ட மனநிலைக்குச் சான்றாவதோடு, “யாவரும் கேளிர்” எனும் கணியன் பூங்குன்றனின் பொன்னடிகளைப் பின்பற்றும் உயர்ந்தவனாகவும் அவனை அடையாளப்படுத்துகின்றது எனலாம்.

    அதன்பின்னர், கடல்சூழ்ந்த இலங்கையின் மதில் முதலிய பாதுகாப்புப் பற்றியும், இராவணன் உள்ளிட்ட அரக்கர்களின் வலிமை பற்றியும், இலங்கையின் படையளவு பற்றியும் வீடணனிடம் முற்றாய்க் கேட்டறிந்தான் இராமன்.

    இலங்கையின் நிலவரம் உரைத்த கையோடு இலங்கை நகரத்தை அனுமன் ஒருவனாகவே எரித்தழித்த திறலையும் அண்ணல் இராமனுக்கு அறியத் தந்தான் இராவணனின் இளவல். அதுகேட்டுப் பூரித்த இராமன், ”இத்துணை வீரச்செயல்கள் நிகழ்த்திய நீ, சீதையைக் கண்டும் அவளை மீட்டுவராமல் அங்கேயே விட்டுவந்தது என் வில்லாற்றலை நான் காட்டவேண்டும் என்பதற்காகவா வீரனே?” என்று கேட்டு அனுமனைப் பாராட்டினான். தன் வீரப் பிரதாபங்களைத் தன் வாயால் சொல்லிக்கொள்வதையோ பிறர் வாயால் கேட்பதையோ விரும்பாத அனுமன் நாணத்தோடு தலைகுனிந்தான்.

    அடுத்து, கடலைக் கடந்து இலங்கை செல்வதற்கான வழியென்ன என்று இராமன் வீடணனைக் கேட்டபோது, கடல்வேந்தனான வருணனை வேண்டி வழி கேட்போம் என்று யோசனை சொன்னான் அவன். அதனையேற்ற இராமன், ”இளமைப் பருவத்தினளான சீதையை இராவணனின் சிறையினின்று மீட்டுவருவதற்குரிய வழியைத் தருக” என வருணனை வேண்டி, வேதநெறிப்படி அடுக்கப்பட்ட தருப்பைப் புல்லில் கருங்கடலைப் பார்த்தபடி அமர்ந்து வருண மந்திரத்தைத் தியானிக்கத் தொடங்கினான்.

    நாட்கள் ஏழு கடந்தும் வருணன் வரவில்லை. இராமனின் தாமரைக் கண்கள் சினத்தால் சிவந்தன.

    ”ஒருவர் எவரிடமும் எதனையும் வேண்டாதவர் என்றாலும், ஒருவர்பால் சென்று ஒன்றை வேண்டுவாராயின் அவ்வாறு வேண்டியவர் சிறுமையிலிருந்து நீங்கமாட்டார். இன்று நான் இலங்கைக்குச் செல்லும் வழியைத் தர வருணனை வேண்டியதை கடல்வேந்தன் மறுத்துவிட்டான்; இது நன்று நன்று!” எனக் கோபத்தால் புகைதோன்ற நகைத்தான் இராமன்.

    ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்பால் ஒருவர்
    சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார்
    இன்று வேண்டியது எறிகடல் நெறிதனை மறுத்தான்
    நன்று நன்றுஎன நகையொடும் புகைஉக நக்கான்.
    (கம்ப: வருணனை வழிவேண்டு படலம் – 6597)

    நாம் எத்துணை உயர்ந்தவராயினும் ஒருவரிடம் சென்று உதவிவேண்டி நின்றால் அவர் முன்பு தாழ்ந்துதான் போகின்றோம் என்று இராமன் உரைத்த கருத்து எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடியதே.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • தனியுடைமை

    தனியுடைமை

    பாஸ்கர்

    எல்லாவற்றையும் இனி துறக்க வேண்டும்
    புதுப்பொருள் ஏதும் இனி தேவையில்லை
    இருப்பவற்றை இழந்தால் மிக மிக இனிது
    தேவைகளற்று இருப்பின் ரொம்ப சுகம்
    போட்டி கலச்சாரம் இனி கிஞ்சித்தும் கிடையாது
    தோற்றுப்போவது இனிமேல் பெரும் சுமையில்லை
    வெற்றி காணும் ஆசையுமில்லை வெறியுமில்லை
    கருத்துச் சொல்ல ஆள் எங்கே எனத் தேடவேண்டாம்
    எவர் செய்கையும் எனக்கு இனிமேல் சரிதான்
    எந்தத் தவறும் என்னை உள்ளே சீண்டுவதில்லை
    உண்மையாய் இருக்கப் பிரயத்தனம் இனியில்லை
    கவிதை எழுதி யார் பாராட்டுக்கும் காக்கப் போவதில்லை
    நீ செய்தது தவறென சொன்னால் நகர்ந்து விடுகிறேன்
    அற்புதம் எனச் சொல்லும் முன் காணாமல் போகிறேன்
    பேச்சு குறைந்து போய், எனக்குள் வாழ்ந்துகொள்கிறேன்
    ஆள் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைகிறது
    எனக்குள் இருக்கும் உலகில் யாருக்கும் இடமில்லை
    காற்று பட்டு கரையும் பஞ்சு மிட்டாய் வாழ்க்கை இது
    கரைந்துகொண்டே விரைவில் காணாமல் போகிறேன்
    தத்துவமான வாழ்க்கை எனத் தள்ளியே இருந்து விட்டேன்
    நிஜம் வேறெனத் தெளிகையில் மனமூப்பில் மறைகிறேன்.

    Share