Blog

  • உறவுகள்

    பொன் ராம்

    அன்று நான் தூங்காமல் ஏனோ விழித்திருந்தேன். உறக்கம் வராமல் என் அருகில் படுத்திருந்த ஜிம்மியும், ஏனோ என்னை அதன் பச்சைக்கலர் டார்ச் லைட் கண்களால் பார்த்தபடி இருந்தது. அதன் கண்களுக்கு சுமி தெரிந்தாளோ? என்னை அழைத்துச் செல்ல வந்திருப்பாளோ? என ஜிம்மி என்ன செய்கிறது என உற்றுப் பார்த்தேன். அது நான் பார்ப்பதறிந்து ஃபோட்டோவிலிருந்த சகுந்தலாவைப் பார்த்தது. அதன் கண்ணில் ஏனோ இரண்டொரு துளி நீரை என்னால் உணர முடிந்தது. இரட்டை சடையும்,டென்னிஸ் பேட்டுமாய் அவள் சிரிக்கின்ற கன்னங்குழி அழகை இறைவன் தான் பார்க்க ஆசைப்பட்டு எடுத்தானோ?
    ஏங்க! சகுந்தலாவுக்குப் பட்டுப்பாவாடை பச்சைக்கலரில் வாங்கலாமா?ஒரு ஃபோட்டோகூட எடுத்துடலாங்க! அவ வந்த பிறகு தான் இந்த வீட்டுல இத்தனை வசதி! சுமி!வேண்டாம்மா! நம்ம குடும்பத்துக்கு ஃபோட்டோ ஆகாது. நிலைக்காதுன்னு ஆச்சி சொன்னாங்க!

    ஒண்ணே ஒண்ணு தான்! அதுக்கப்புறம் உங்களைக் கேக்கவே மாட்டேன்! சொன்னது முரளிதரனின் காதுக்குள் இன்னமும் கேட்டுக்கொண்டே இருப்பது போல் ஒரு பிரமை!

    இருவருமே சொல்லாமலே சென்று விட்டீர்களே! என தொண்டைக்குள் ஏதோ மாட்டிய உணர்வு  தெரிந்தது. ஆட்டோவில் எவனோ வைத்த பாமிற்கு இவர்கள் தானா கிடைத்தார்கள்! பச்சைக்கலர் பட்டு கூட மிஞ்சவில்லையே அம்மா! என மனம் கூக்குரலிட்டு அழுதது. தவமாய் தவமிருந்து வாரிக் கொடுத்துவிட்டு நிற்கிறேனே! ஜிம்மி மட்டும் இல்லையென்றால் என்றோ இறந்திருப்பேன்!

    இருட்டி வெகு நேரம் ஆனபோதும் எங்கள் இருவருக்கும் வெளிச்சமிட ஏனோ மறந்த இறைவனை நினைத்தபடி இருந்தேன். ஜிம்மி நடக்க முடியாமல் எழுந்து சகுந்தலா இருந்த ஒவ்வொரு அறையாய் சென்று சிறிது நேரம் அப்படியே அமர்ந்து அவள் வைத்திருந்த ஒவ்வொரு பொருளாய்ப் பார்த்தது. அவளும், ஜிம்மியும் விளையாடிய பந்தை உருட்டித் தடுமாறி விழப்போனது. ஜிம்மி! என அழைத்த நான் கண்கலங்கியதைப் பார்த்து ஓடி வந்து எனது மடியில் படுத்தது. அழைத்து அழைத்துப் பார்த்தேன்!. அது எழுந்திருக்கவே இல்லை. வாழ்க்கையில் பல மரணத்தைப் பார்த்த என் கண்ணில் ஏனோ அன்று நீர் வரவேயில்லை. எனது அப்பா வாங்கிக் கொடுத்த ஈசிசேரில் படுத்தபடி ஜிம்மியைத் தடவியபடி இருந்தேன். உயிர் ஏனோ தன் வரவை யாருக்கும் சொல்லாமலே வருவது போல் சென்று விடுகிறது.

    காலைப்பனியில் மப்ளர் போட்ட செக்யூரிட்டி அய்யா! பால் என ஒருக்களித்த கதவை ஆச்சரியத்துடன் திறந்தான்! உள்ளே மடியில் ஜிம்மியுடன் ஃபோட்டோவைப்பார்த்த நிலையில் உயிர்பிரிந்த சாம்பசிவத்தைப் பார்த்த அதிர்ச்சியில் வெளியே தகவல் சொல்ல ஓடினான்.

    Share
  • வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!….

    மேகலா இராமமூர்த்தி

    தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் பெற்ற தமிழர்களாகிய நாம் பேறுபெற்றோர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பொய்யாமொழி, முப்பானூல், தெய்வநூல் என வேறுபல் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

    அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் என்ற முப்பகுப்புக்களை உடைய இந்நூலின் முதலிரண்டு பகுப்புக்கள் அறியப்பட்ட அளவில் மூன்றாம் பகுப்பாகிய காமத்துப்பால் பாடல்கள் அறியப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

     அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சொல்லப்பட்டது போலவே அருமையான, இனிய, காதல் மற்றும் இல்லற வாழ்விற்குச் சுவைதரும் பல செய்திகள் காமத்துப்பாலிலும் சொல்லப்பட்டுள்ளன. காமத்துப்பாலில்தான் வள்ளுவப் பேராசானின் கற்பனைத் திறனும், காட்சிகளை நாடகப் பாங்கில் நம் கண்முன் நிறுத்தும் ஆற்றலும், ஏன்….அவரின் மெல்லிய நகைச்சுவை உணர்வும் சிறப்பாக வெளிப்படுகின்றன எனலாம். அவரை ஓர் சிறந்த கவிஞராகவும் அடையாளம் காட்டுவது காமத்துப்பாலே எனலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த காமத்துப்பால் பாக்களில் சிலவற்றைக் குறித்துச் சிந்திப்பதும், காட்சிப்படுத்துவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

    இனிப் பாடல்களுக்குச் செல்வோம்…

    தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளுக்கும் அவன்மீது அன்பு தோன்றுகின்றது. ஆயினும், பெண்மைக்கே உரிய நாணம் தடை போடுவதால் தலைவன் தன்னை நோக்கும் போது நிலத்தை நோக்குகின்றாள். அவன் தன்னைப் பார்க்காத தருணத்தில் அவனை நோக்கி மெல்லப் புன்னகைத்துக் கொள்கின்றாள். இதனையே

    “யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

    தான்நோக்கி மெல்ல நகும்.” என்கின்றார் வள்ளுவப் பேராசான்.

    இக்குறளைப் படித்தவுடனேயே நமக்கு ஓர் திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகின்றது. ஆம்…..”உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் தானே அவை?

    இதோ காதல் வயப்பட்ட தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அங்கே வாய்ச்சொற்களுக்கு வேலையேயில்லாமல் போய்விடுகின்றது. (காதல் கடிதங்களும் தேவையற்றன ஆகிவிடுகின்றன). கண்கள் பேசாதவற்றையா வாயும், எழுத்துக்களும் பேசிவிடப் போகின்றன?

     ”கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

    என்ன பயனும் இல.” என்கின்றது வள்ளுவரின் அமுதமொழி.

    வெண்மதியையும், பெண்ணின் முகத்தையும் ஒப்புமைப்படுத்திப் பாடாத தமிழ்ப் புலவர்களோ, கவிஞர்களோ இல்லை என்றே கூறலாம். வள்ளுவரும் அதற்கு விதிவிலக்கல்ல.

    இரவு நேரத்தில் தன் காதலியைச் சந்திக்க வருகின்ற ஓர் தலைவன் (இரவுக்குறி என்று இஃது அகத்திணையில் குறிக்கப்படும்) வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான். அங்கே அழகான முழுநிலாக் காட்சியளிக்கின்றது. அந்நிலவோடு தன் காதலியின் முகத்தை ஒப்பிட்டுப் பார்க்கின்றான். உடனேயே ஒரு முடிவுக்கு வந்தவனாக நிலவைப் பார்த்து ”உன்னோடு என் காதலியின் எழில் முகத்தை ஒப்பிடுவதே தவறு. நீயோ களங்கம் உடையாய்! அதுமட்டுமன்று, தேய்கின்றாய்…வளர்கின்றாய். ஆனால், என் காதலியின் முகமோ களங்கம் சிறிதுமற்றது” என்று தன் காதலிக்குப் புகழ்மாலை சூட்டுகின்றான். சுவையான அத்திருக்குறள் இதோ….

    ”அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

    மறுவுண்டோ மாதர் முகத்து.”

    அத்தோடு விட்டானா? நிலவே…! நீ என் தலைவியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினாயானால் இப்படி நாணம் இல்லாமல் எல்லாரும் காணும்படி வானில் தோன்றாதே என்றுவேறு கூறுகின்றான்! புதுமையான வேண்டுகோள் இல்லையா?

    ”மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

    பலர்காணத் தோன்றல் மதி.” என்பது அக்குறட்பா.

    இப்போதெல்லாம் கணவனும், மனைவியும் தாங்கள் நல்ல நண்பர்கள் போலப் பழகுவதாகக் கூறிக்கொள்கின்றார்கள் அல்லவா? இதற்கு முதன்முதலில் அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் நம் வான்புகழ் வள்ளுவரே.

    தலைவன் ஒருவன், தனக்கும் தன் தலைவிக்குமுள்ள உறவைப் பற்றிக் “காதற் சிறப்புரைத்தல்” என்ற அதிகாரத்தில் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகின்றான்….

    ”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

    மடந்தையொடு எம்மிடை நட்பு.”

    மாந்தர்களே! இத்தலைவியொடு எனக்குள்ள நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது என்கின்றான். இங்கே உறவு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் நட்பு என்ற சொல்லை அவன் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு இதைவிட அருமையான விளக்கம் எதனையும் கொடுத்துவிட முடியாதென்றே தோன்றுகின்றது.

    அதே அதிகாரத்திலேயே தலைவனின் இருப்பிடத்தைப் பற்றித் தலைவி கூறும் மொழிகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. தலைவி சொல்கின்றாள்…..”என் காதலர் என் நெஞ்சத்திலேயே எப்போதும் குடியிருக்கின்றார். அதனால் நான் சூடான பொருள்களையே உண்பதில்லை. அவை அவரைச் சுட்டுவிடுமோ என அஞ்சுகின்றேன்” என்கின்றாள். கேட்பதற்குச் சற்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றது இல்லையா? இதோ அக்குறட்பா…

    ”நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

    அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.”

    இதே குறட்பாவைப் படியெடுத்தது (photocopy) போலக் கவிஞர் வைரமுத்துவின் பாடல் ஒன்று சமீபத்திய திரைப்படம் ஒன்றில் வந்தது. அவ்வரிகள் இதோ..

    “ஹாட்பாக்சில் (hotbox) வைத்த ஃபுட் (food) உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும், என் உள்ளமெங்கும் நீ நின்றிருக்க உனை உஷ்ணம் தாக்கக் கூடும்….”.

    தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும் வள்ளுவர் பேராசானாக இருந்து காதல் பாடல்கள் பல எழுதத் துணைபுரிந்து வருகின்றார் என்பதனையே திரைப்பாடல்கள் (அன்றும், இன்றும்) மெய்ப்பிக்கின்றன.

    அடுத்து, தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள காதல் ஊரிலுள்ளோர்க்குத் தெரிந்துவிடுகின்றது. அவர்கள் அலர் (காதலர்களைப் பொது இடத்தில் அவர்கள் காதுபடப் பழித்தல்) கூறத் தொடங்குகின்றனர். அதனைக் கண்ட தலைவி மிகவும் வேதனையுற்று “நான் என் காதலரைக் கண்டதென்னவோ ஒருநாள் தான், ஆனால் இந்த அலரோ திங்களைப் பாம்பு கொண்ட செய்தி (சந்திர கிரகணம்) போல் ஊரெங்கும் பரவிவிட்டதே” என வருந்துகின்றாள்.

     ”கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

    திங்களைப் பாம்புகொண் டற்று.”

    மற்றொரு சமயம் தலைவன் பொருள்தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரிய நேரிடுகின்றது. அவன் பிரிவை ஆற்றமுடியாமல் தலைவி அவன் சென்ற வழியையே பார்த்துச் சோர்ந்து கிடக்கின்றாள். அப்போது அவள் வேதனையை அதிமாக்கும் மாலைப்பொழுது வந்தது. இம்மாலைப் பொழுது இவ்வளவு துன்பம் தருவது என்று நான் தலைவனோடு ஒன்றாகச் சேர்ந்திருந்த காலத்தில் அறியவில்லையே எனப் புலம்புகின்றாள்.

    “மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

    காலை அறிந்தது இலேன்.”

    அம்மாலைப் பொழுதின் மயக்கத்திலே தலைவி ஓர் கனவு காண்கின்றாள். அக்கனவில் தன் தலைவனைக் கண்டு மகிழ்கின்றாள். கண்விழித்துப் பார்க்கின்றாள்; தான் தலைவனைக் கண்டது கனவில்தான் என்பதனை அறிந்து பெருத்த ஏமாற்றம் அடைகின்றாள். அடடா! நனவு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருப்பின் நான் கனவில் என் தலைவனைப் பிரியாமல் இருப்பேனே என்று எண்ணித் துயருறுகின்றாள்.

    “நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்

    காதலர் நீங்கலர் மன்” என்கின்றது வள்ளுவம்.

    தலைவனையே எதிர்பார்த்துக் காத்திருப்பதனால் தலைவியின் அழகமை தோள்கள் மெலிந்தன. உடலில் பசலை படர்ந்தது. (பசலை என்பது உடலில் ஏற்படும் ஓர் பசிய நிறமாற்றத்தைக் குறிப்பது, மற்றபடி பசலைக் கீரைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை). கை வளையல்கள் கழன்றன. அழுது அழுது கண்கள் ஒளியிழந்தன. தலைவன் சென்ற நாட்களைக் கோடிட்டுக் குறித்துக் கொண்டே வருவதனால் விரல்களும் தேய்ந்தன. இதனையே வள்ளுவப் பெருந்தகை,

    ”வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

    நாளொற்றித் தேய்ந்த விரல்.” என்கின்றார்.

    பிறகு அவள் தன்னைத்தானே தேற்றிக் கொள்கின்றாள், “என் இனிய நெஞ்சே, நீ தலைவனை உன்னிடத்தில்தானே வைத்திருக்கின்றாய், பின்பு ஏன் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என எண்ணி உடலை வருத்திக் கவின் இழந்து மெலிந்து வருகின்றாய்” என வினவிக்கொள்கின்றாள்.

    ”துன்னத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

    இன்னும் இழத்தும் கவின்.”

    சில காலத்திற்குப்பின், தலைவனும் தலைவியும் மறுபடியும் ஒன்றாய் இணைகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாய்ப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் தலைவனுக்குத் தும்மல் வருகின்றது. அவன் தும்முவதைக் கண்ட தலைவி, வாழ்க! என வாழ்த்துகின்றாள். உடனேயே, யார் உம்மை நினைத்தார்கள், ஏன் உமக்குத் தும்மல் வந்தது எனத் தலைவனைப் பல கேள்விகள் கேட்டு, அழுது அவனோடு ஊடல் கொள்கின்றாள். இன்றும் நம் கிராமங்களில் யாருக்காவது தும்மல் வந்தாலோ அல்லது புரையேறினாலோ அவ்வாறு செய்பவர்களை யாரோ நினைக்கின்றார்கள் என்று எண்ணும் வழக்கம் உள்ளது தானே?

    இவ்வழக்கம் வள்ளுவர் காலந்தொட்டு இருந்து வருகின்றது போலும்.

    “வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்

    யாருள்ளித் தும்மினீர் என்று.” என்கிறார் தெய்வப்புலவர்.

    தலைவனுக்கு மீண்டும் தும்மல் வருகின்றது. (பாவம், சளித்தொல்லையால் அவதியுறுகின்றான் போலிருக்கின்றது.) தலைவி தன்னைச் சந்தேகிப்பாளே, கோபித்துக்கொள்வாளே என எண்ணித் தும்மலை அடக்க முற்படுகின்றான். அப்போதும் தலைவி அவனை விடவில்லை. உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை என்னிடமிருந்து மறைக்க முயல்கின்றீரோ? எனக் கேட்டு அழுகின்றாள்.

    ”தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

    எம்மை மறைத்திரோ என்று.”  என அவர்களிடையே அரங்கேறும் ஊடல் நாடகத்தை நகைச்சுவை ததும்பப் பாடல் வடிவில் நம் கண்முன் நிறுத்துகின்றார் வள்ளுவப் பெருந்தகை.

    இவ்வாறு காமத்துப்பாலில் படித்து இன்புறத்தக்க பல குறட்பாக்கள் குவிந்து கிடக்கின்றன. சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களின் சுருங்கிய வடிவாகவே (abridged version) காட்சியளிக்கின்றன இக்குறட்பாக்கள் எனலாம். களவு என்று சொல்லப்படுகின்ற காதல் வாழ்வையும், கற்பு என்று அறியப்படுகின்ற இல்லற வாழ்வையும் இருபத்தைந்து (25) அதிகாரங்களில் திருவள்ளுவப் பெருந்தகை சுவைபட நகர்த்திச் செல்லும் பாங்கு படித்து இன்புறத்தக்கது. காமத்துப்பால், கற்புநெறி பிறழா நல்லதோர் இல்லறத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனலாம்.

    படங்களுக்கு நன்றி: http://www.chennaimuseum.org/draft/gallery/03/03/modp2.htm#.

    http://www.indiapicks.com/Indianart/Main/Ravi_Varma_Gallery.htm

     

     

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…. (45)

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

    அன்பினியவர்களே !

    உலகம் இன்று ஒரு சிறிய பந்தாகி விட்டது . எப்படி என்கிறீர்களா? நாட்டுக்கு நாடு பறப்பது என்பது மிகவும் சுலபமான ஒரு விடயமாகி விட்டது. கடல் கடந்து சீமை செல்கிறோம் எனும் ஒரு நிலைமாறி ” இதோ நாளை காலை அங்கு வந்து விடுகிறேன் ” என்று மிகவும் நம்பிக்கையுடன் ஆயிரம் மைல்களுகளுக்கப்பால் இருப்பவர்களுக்கு கூறக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

    வாழ்க்கை முறையிலும் சரி, வியாபார விடயங்களிலும் சரி இலகப்பொருளாதாரம் ஒன்றுடன் ஒன்ரு பின்னிப்பிணைந்து இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

    இத்தகிய ஒரு காலகட்டத்திலே தான் இன்று இங்கிலாந்து நாட்டின் மக்கள் முன்னே ஒரு பெரிய விவாதம் தலைதூக்கியுள்ளது.

    ஜரோப்பிய ஒன்றியத்தில் ஜக்கிய இராச்சியத்தின் பங்கு பற்றிய விவாதமே அது. ஜரோப்பிய பாராளுமன்றத்தினால் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் மீது விதிக்கப்படும் விதிமுறைகளுக்கு இன்று இங்கிலாந்தில் கடுமையான எதிர்ப்பு ஒரு பக்கத்தில் இருந்து கிளம்பியுள்ளது.

    இது ஏதோ இப்போதுதான் புதிதாக கிளம்பியுள்ள ஒரு பிரச்சனை அல்ல. நீறுபூத்த நெருப்பு போல பலகாலமாக அனைத்து அரசியல் கட்ச்சிகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களிடையே உள்ள ஒரு பகுதியினரின் மனதில் நிலவு வந்த அபிப்பிராயமே அதுவாகும்.

    காலத்துக்குக் காலம் தேர்தல் சமயங்களில் அடிக்கடி வெளிக்கொண்டு வரப்படும் இப்பிரச்சனையினால் அதிகம் பாதிக்கப்படும் அரசியல் கட்ச்சி தற்போதைய இங்கிலாந்து கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான் கட்சியான கன்சர்வேடிவ் கட்ச்சியினருக்கே ஆகும்.

    கன்சர்வேடிவ் கட்சி அதன் பெரைக் கொண்டே கூறிவிடக்கூடிய பழைய மரபுகளைக் கட்டிக்காக்கும் ஒரு கட்சியாகும். இக்கட்ச்சியில் இருக்கும் பலர் தமது பழைய பிரித்தானிய பேரரசின் ஏகாதிபத்திய அபிலாஷைகளை மனதில் தக்க வைத்துக் கொண்டுள்ளவர்களாகும்.

    அதற்காக ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து வகிக்கும் பங்கு குறித்து இவர்கள் கூரும் எதிரான கருத்துக்களில் உண்மை இல்லாமலில்லை.

    ஜரோப்பிய ஒன்றியம் போடும் பல சட்டங்கள் பிரித்தானிய நாட்டின் அரசியல் சட்டங்களில் தலியிடுவதாக அமைந்துள்ளது அரசுக்கு ஒரு பெரும் தலையிடியாகவுள்ளது.

    குறிப்பாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டு அகைது செய்யப்பட்டு நாடுகடத்த முயற்ச்சி செய்யும் போது அவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைச் சட்டங்களை உபயோகித்து தமது நாடு காடத்தலைலிருந்து பலகாலமாக தப்பித்துக் கொண்டு வருவது மக்களிடையே மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதுமட்டுமன்றி ஜரோப்பிய ஒன்ரியத்தில் புதிதாக இணைந்துள்ள கிழகு ஜரோப்பிய நாடுகளின் பிரஜைகள் இலகுவாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து இந்நாட்டின் அரச உதவிப்பணத்தை இலகுவாகப் பெறுகிறார்கள் என்பதும், இத்தகிய நடவடிக்கைகள் இந்நாடு பொருளாதாரச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் வேளையில் நடைபெறுகிறது என்பதும் மேலும் மக்களின் மனதில் பல எதிரான உணர்வலைகளுக்கு வித்திடுகின்றன.

    நாளொன்றுக்கு ஜரோப்பிய ஒன்றியத்துக்கான பிரித்தானிய நாட்டின் செலவு ஏறத்தாழ 50 பில்லியன் பவுண்ஸ் என்பது மக்களுக்கு முகிந்த எரிச்சலை உண்டு பண்ணி வருகிறது.

    ஆனால் அதே சமயம் பிரித்தானிய ஒன்ரியத்தில் அங்கம் வகிப்பதனால் இங்கிலாந்து நன்மை அடையாமலுமில்லை. கண்க்கெடுப்புகளின் படி ஏறத்தாழ 30 சதவீததத்திர்கு அதிகமான இங்கிலாந்தின் ஏற்றுமதி இவ்ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தின் உதவியினாலேயே நடக்கிறது என்று கூறப்படுகிறது.

    அத்தோடு இங்கிலாந்தில் குற்றச்செயல்களைப் புரிந்து விட்டு ஏனைய ஜரோப்பிய நாடுக\ளில் மரைந்து வாழ்ந்து வந்த பல குற்றவாளிகள் ஜரோப்பிய அங்கத்துவத்தினால் கிடைத்த ஒத்துழைப்பினால் கைது செய்யப்படுளார்கள் எனப்தும் உண்மை.

    பல பெரிய இங்கிலாந்து நிறுவனங்களின் முகவர்கள் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் முன்னிலை வகிப்பதனால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்தலாம் என்று றிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

    அதேசமயம் ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தினால் வளரும் பொருளாதாரங்களான சீனா, இந்தியா ஆகியவற்ருடன் இங்கிலாந்து ஏற்படுத்தக்கூடிய கூட்டுறவுகள் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் இதற்கு எதிரானவர்கள்.

    ஜரோப்பிய அங்கத்துவத்திற்கு எதிரானவர்கள் எனும் கொள்கை ஒன்றின் அடிப்படியில் அமைந்த “ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி” மக்களின் கருத்துக் கணிப்பில் ஆதரவு பெர்று வருகிறது. இவர்களுக்கு கிடைக்கும் ஆதரவு கன்சர்வேடிவ் கட்ச்சியின் அங்கத்தவர்களில் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரானவர்களினாலேயே பெருகுகிறது என்பது பெரும்பான்மையான அரசியல் அவதானிகளின் கருத்து.

    இதனால் ஜரோப்பிய ஒன்றியத்துடனான உறவை மீள்பரிசோதனை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை கன்சர்வேடிவ் கட்ச்சியில் வலுவடைந்து பிரதமர் டேவிட் கமரனுக்கு தலியிடியைக் கொடுத்து வருகிறது.

    அவரது கூட்டரசாங்கத்தின் அடுத்த கட்ச்சியான லிபரல் டெமகிரட்ஸ் முற்றுமுழுதாக ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை ஆதரிக்கிறார்கள்.

    இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்ரியத்துடனான ஊரவை வலுப்படுத்த வேண்டுமேயன்றி வழுவிழக்கச் செய்யக்கூடாது என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

    இந்நிலையில் அடுத்தவாரம் இது பற்றிய தனது கருத்தை வெளியிடப்போகும் பிரதமர் டேவிட் கமரன் அவர்களி உரையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வெறும் வாய்களுக்கு கிடைக்குமா அவல் ?

    பொறுத்திருந்து பார்ப்போம்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • பிரசவ அரங்கேற்றம்

     

    சரபோஜி

     

    எங்களைப்
    பகலவனாக்க
    பராசக்தியிடம் சக்தி கேட்டவனே

    உன் இறுதிச்சடங்கில்
    உன்னை மொய்த்த
    ஈக்களை விட
    வந்தவர்கள் குறைவாம். (more…)

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப்பறிப்போமா! (3)

    பவள சங்கரி

    நிலையான குறிக்கோளும், தெளிவான சிந்தையும்!

    நாம் எல்லோருமே வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறோம். எங்கு வெற்றி, எதில் வெற்றி என்று நிலையான ஒரு குறிக்கோள் இருந்தால்தானே அந்த வெற்றிப் பாதையை நெருங்க முடியும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்பது இலக்கு இல்லாத ஓர் பயணம் போன்றது. மேலோட்டமாக, பொத்தாம் பொதுவாக ஒரு குறிக்கோள் என்பதைவிட உறுதியான மற்றும் நிலையானதொரு குறிக்கோளைக் கொண்டிருத்தல் வேண்டும். அதற்குத் தெளிவான சிந்தனை வேண்டும். நாம் சாதிக்க நினைக்கும் விசயங்களை முதலில் பட்டியலிட வேண்டும்.

    உதாரணமாக நம் இலட்சியம் குடியிருப்பதற்கு ஒரு அழகான வீடு கட்ட வேண்டும் என்றால், அந்த வீடு எந்த அளவில், எந்த இடத்தில், அதாவது நகரத்தின் மையப் பகுதியிலா அல்லது  நகர எல்லையை விட்டு அமைதியான ஒரு பகுதியிலா என்பது போன்றதோடு அதற்கான செலவு எவ்வளவு ஆகும் போன்ற அனைத்தையும் தெளிவாகப் பட்டியலிட வேண்டும். இதில் மிக முக்கியமானது நம் சக்திக்கு உட்பட்ட இலட்சியமாக இருக்க வேண்டியது. நம் தகுதிக்குத் தகுந்த குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். ஒரு சிறிய வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு அரசாங்கப் பணியில் இருப்பவரின் ஆசை அதைவிட சற்றே பெரிதான, கொஞ்சம் அதிகமான வசதிகளுடன் கூடியதான் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற தெளிவான குறிக்கோள் உடையவராக இருந்தால் அது சாத்தியமாவதில் பெரிய பிரச்சனை இருக்காது. தாம் செய்யும் வேலையை நல்ல விதமாகச் செய்வதோடு, கூடுதலான நேரப் பணியையும் (overtime) ஏற்றுக் கொள்ளலாம். எந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள், அதைத் திருப்பிச் செலுத்தும் வழி எந்த அளவு சாத்தியம் போன்ற அனைத்தையும் தெளிவாகத் திட்டமிடல் அவசியம். இப்படி திட்டமிட்ட விசயங்களைத் தெளிவாக ஒரு குறிப்பேட்டில் பதிவிட வேண்டியதோடு அதனைத் தாமும், தம் குடும்பத்தாரும் அன்றாடம் அதிகமாகப் புழங்கும் இடத்தில் கண்ணில் படும்படியாக வைக்க வேண்டியது அவசியம். இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருப்பது போல இருக்கலாம். ஆனால் பல வெற்றியாளர்கள் இது போன்ற வழிமுறைகளை பின்பற்றியிருக்கிறார்கள் என்பது விசாரித்துப் பார்த்தால் அறியலாம். ஒரு வீடு கட்டுவது என்பது அந்த குடும்பத் தலைவன் மற்றும் சம்பாதிக்கும் மனைவி ஆகிய இருவரின் கையில் இருந்தாலும், ஓய்வு பெற்ற பெற்றோர் மற்றும் சிறிய குழந்தைகள் ஆகியோருக்கும் இந்த இலட்சியம் அறிந்திருந்தால் குடும்பத்திலோ அல்லதுதனிப்பட்ட முறையிலோ தேவையற்ற அதிகப்படியான செலவினங்களைக் குறைத்தும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தும் அந்த இலட்சியத்தை அடைவதற்கு பெரிதும் துணையாக இருப்பார்கள். அந்த இலட்சியத்தை முழுமையாகவும், சிறப்பாகவும் அடைவது எப்படி?

    கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள்!

    ஆம், மனோத்தத்துவ நிபுணர்களும் சொல்லக்கூடிய எளிய வழிகள் இவைதான். அதாவது நம்முடைய இலட்சியத்தின்மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருத்தல் அவசியம். இதனை தியானம் என்றும் கொள்ள்லாம். அன்றாடம் விடியலிலோ அல்லது நமக்குக் கிடைக்கும் எந்த ஒரு அமைதியான, தொந்திரவு இல்லாத சூழலிலோ தனிமையில் அமர்ந்து நம் இலட்சியம் குறித்த ஆழ்ந்த கற்பனையை வளர்க்கலாம். வீடு கட்ட வேண்டிய இடத்தை திட்டமிட்டு வைத்திருப்போமே அங்கிருந்து ஆரம்பிக்க்லாம் நம் கற்பனையை. அடுத்து அந்த வீட்டின் அடித்தளத்திலிருந்து ஆரம்பித்து நாம் விரும்பும் வகையில் கொஞ்சம், கொஞ்சமாக அந்தக் கட்டிடத்தை மேலெழும்பச் செய்யலாம். இறுதியில் என்ன விதமான மர வேலைப்பாடுகள் மற்றும் அழகுபடுத்துதல், வண்னம் பூசுதல் வரை அனைத்தையும் கற்பனையில் முழுமையாக, அழகாக செய்து முடிக்கலாம். வெளிப்படையாகச் சொல்லும்போது மலைப்பாக இருக்கும் இந்த விசயம், நம் ஆழ்மனதில் அமைதியாக அசை போடும்போது மிக எளிதாகத் தெரியும். காரணம் நம் ஆழ்மனதின் சக்தி மிகவும் அதிகம் என்கிறார்கள் மனோத்தத்துவ வல்லுநர்கள். ஆம், கற்பனைக் குதிரையின் வேகம் மிகவும் அதிகமாம். அதாவது நிழற்படங்களாகப் பதிவு செய்வதை நம் ஆழ்மனம் எளிதாக பதிவேற்றிக் கொள்கிறது என்கிறார்கள். வெற்று நினைவுகளை ஆழ்மனதில் பதிவேற்ற முடியாது. அதேசமயம் மனப்படங்களாக அதைச் செலுத்தும்போது  நம் ஆழ்மனம் அதைச் சரியாக உள்வாங்கிக் கொள்கிறது.  ஆக நாம் செலுத்துகிற மனப்படங்கள் தெளிவானதாக இருக்கும் வகையில் அதற்கான செயல்வடிவம் பெற ஆரம்பித்துவிடுகிறது அது. நம்மை சுறுசுறுப்புடன் அதற்கான பணியில் முழுமையாக ஈடுபடச் செய்கிறது.

    விளையாட்டோ, கல்வியோ, தொழிலோ சுற்றுலாவோ இப்படி எந்தத் துறையாக இருந்தாலும், இந்தக் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடும் திட்டம் வெற்றி காண்கிறது என்பது பல வெற்றியாளர்களின் கருத்தாகவே உள்ளது. அன்றாடம் நாம் செயல்படுத்தக்கூடிய எந்தவொரு சிறிய விசயமாக இருந்தாலும், இயன்றவரை இந்த முறையில் ஆழ்மனத்தில் படமாக செலுத்திப் பிறகு செயல் வடிவம் கொடுக்கும்போது அச்செயல் மிகச் சிறந்த முறையில் நடைபெறுவதை நம் அனுபவத்தில் உணர முடியும்.

    வெற்றியின் இரகசியத்தை உணர்ந்து கொண்ட நாம் இன்றிலிருந்தே அதற்கான முயற்சியை தொடங்குவோமே. முழுமையான குறிக்கோளை நிர்ணயம் செய்து, அதனைத் தெளிவான திட்டமாகத் தீட்டிக்கொண்டு, நம் கண்ணில் படும்படியாக வைத்துக் கொண்டு, அன்றாடம் அதனை ஆழ்மனத்தில் படமாக செலுத்திக் கொண்டு, நாளுக்கு நாள் அதனை புதுப்பித்துக் கொண்டே வாருங்கள். அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுங்கள். அதனை நிறைவேற்றும் சக்தி தானாகக் கிட்டும் என்பதில் ஐயமில்லை. உங்கள் இலட்சியத்தை எளிதாக எட்டிவிடுவீர்கள்!

    மேலும் தொடருவோம்

    படங்களுக்கு நன்றி:

    http://inspiring-pictures.com/

    Share
  • why chocolates on valentines day…..?

     DARK CHOCOLATE

     

     

     

    Dark chocolate (with 70 percent cacao or more) lowers bad cholesterol (LDL) and increases good cholesterol (HDL).Dark chocolate has recently been discovered to have a number of healthy benefits. While eating dark chocolate can lead to the health benefits described below, remember that chocolate is also high in fat.

     

    1. It can help prevent heart disease: Like tea, dark chocolate contains flavonoids, which are compounds that act as antioxidants. Flavonoids protect cells from harmful molecules—called free radicals—that are produced when the body breaks down food or is exposed to sunlight or smoke. Free radicals can cause cell damage that leads to heart disease. Flavonoids can also lower blood pressure and reduce LDL cholesterol (i.e., the bad cholesterol) by up to 10 percent.

    2. It can improve your mood: Dark chocolate stimulates the production of endorphins, chemicals in the brain that bring on feelings of pleasure. It also contains the chemical serotonin, which acts as an anti-depressant.Chocolate also contains other substances with mood elevating effects. One is phenethylamine, which triggers the release of pleasurable endorphins and potentates the action of dopamine, a neurochemical associated with sexual arousal and pleasure. Phenethylamine is released in the brain when people become infatuated or fall in love.


    3. It can protect your skin: German researchers found that the flavonoids in dark chocolate absorb UV light, help protect and increase blood flow to the skin, and improve skin’s hydration and complexion.

    For all of its health benefits, though, dark chocolate does contain a lot of calories. So, experts recommend sticking to no more than three ounces of the sweet stuff per day.

     

    Chocolate has a special chemical PEA(Phenethylamine) that changes your mood and bring a feeling of pleasure.Thats why chocolate are always directly enjoyed and gifted to their buddies by all ,esp during valentines days.It really changes your mood.When ever you are upset please have a chocolate.

     CHOCOLATES ARE ALWAYS SPECIAL AND REALLY CHANGES YOUR MOOD WHEN DEPRESSED……..SO GO FOR IT…..
    Share
  • காதலர் தினம்

     

    சத்தியமணி

    காத்திருந்து வந்ததிந்த காதலர் தினம் – தினம்
    காத்திருந்தும் வரவில்லை கண்ணனின் மனம்
    பூத்திருந்து புன்னகைத்த கோதையின் முகம்
    பொங்கி அழும் முன்னாலே ஊடலில் சுகம்

    சீண்டி விளையாடுவதில் இன்னும் சிறுபிள்ளை
    சண்டி தனமத்தனையும் பண்ணும் பெரும்தொல்லை
    என்ன செய்ய காதலிலே கட்டி விட்டான் மெல்ல‌
    ஏக்கமுடன் காத்திருக்க வைப்ப‌தையோ சொல்ல

    தாமதமாய் வந்தவுடன் கண்ணடிப்பான் கொஞ்சம்
    கீதமழைப் பெய்யும் குழல் கீர்த்தனைகள் மிஞ்சும்
    ஊடலுக்கு மெய்யும் பொய்யும் ஓயாமல் கெஞ்சும்
    ஒட்டு மொத்தமாய் கேட்டு கூடலுக்குள் தஞ்ச‌ம்

    படத்திற்கு நன்றி:

    http://www.koausa.org/Gods/God2.html

     

    Share
  • தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) (3)

    திவாகர்

    தேவன் ஒரு சகாப்தம் (1)

    தேவன் ஒரு சகாப்தம் (2)

    கதாநாயகன் முதன்முதலில் நூலகத்தில் கதாநாயகியைப் பார்க்கிறான் என்று சொன்னேன் இல்லையா.. இந்த லைப்ரேரியன் (நூலகர் என்றெல்லாம் தேவன் எழுதமாட்டார்) பற்றி முதல் பக்கத்திலேயே விமர்சிப்பார் பாருங்களேன்.. இவரைப் போல நிறைய ஆசாமிகளை நாம் வாழ்க்கையில் சந்தித்து வருகிறோம் என்றே நமக்குத் தோன்றும்.

    கலாசாலை லைப்ரரியின் ஜன்னலைத் திறந்த லைப்ரேரியன் கோவிந்தராவின் பசிக்களை மிகுந்த முகத்தில் அனல்காற்று வீசியது. அதன் சிடுசிடுப்பு இன்னும் சற்று முதிர்ந்தது. எதிரே மலைப்பாம்பு போல் வளைந்து கிடந்த ரஸ்தாவில், ஜலம் அசைவது போன்ற பொய்த்தோற்றந்தான் தென்பட்டது.” ஒன்றரை மணிமுதல் இரண்டேகால் மணிவரை லைப்ரேரியன் சிற்றுண்டி வேளை.”

    மேலும் அவரைப் பற்றி நமக்கு சுவை கூடச் சொல்கிறார். இந்தப் பசிவேளையில் லைப்ரரியில்

    ”எதைக் கேட்டாலும் இல்லைதான் அப்போது, யார் கேட்டாலும் கிடையாதுதான்.. பீரங்கி வாயிலே வெளிப்படும் குண்டின் உத்வேகம் இங்கே வெட்கிப் போகும்”

    இப்படித்தான் கதையை ஆரம்பிக்கிறார் தேவன். இப்போதே இந்த லைப்ரேரியன் பற்றி சற்று தெரிந்திருக்கும்.. இப்படிப்பட்ட மகோன்னத வேளையில் நம் கதாநாயகி வரவு அங்கே நிகழ்கிறது.

    ”ஸார் ப்ளீஸ்! “ என்றது இனிமை ததும்பிய குரல். அவள்தான் பேசினாள்.

    இருண்ட வானத்தில் பளிச்சிட்ட கொடி மின்னல் போல ஒரு புன்சிரிப்பை வருவித்துக் கொண்டு “என்ன?” என்றார் ராவ்ஜி. இந்த மகதாச்சரியத்தைக் காணும் பதம் பெற்ற ஆத்மா வேறொன்றும் இருந்தது.”

    அந்த மாபெரும் ஆச்சரியத்தைக் கண்டவன் நம் கதாநாயகனே.. அதே போல நடராஜன் மணியை தேவன் வர்ணிக்கும்போது

    குரங்கு பேன் பார்த்தாலும் பார்க்கும்,காதை அறுத்தாலும் அறுக்கும்’ என்கிறபடி மணி உதவி செய்கிறேன் என்றால் தாஸானுதாஸனாக இருப்பான். ஆளைக் கவிழ்ப்பதென்று சங்கல்பம் செய்துகொண்டால் மண்ணைப் போட்டு மூடிவிட்டுத்தான் உட்காருவான்.

    அதே போல நடராஜன் ஜானகியோடு ரயில் பிரயாணம் செய்யும்போதும் தேவன் நமக்கு எப்படித் தெரிவிக்கிறார் பாருங்கள்.

    (ரயில் பெட்டியில் நடராஜன்) ”உள்ளே நுழைந்ததும் ஆண் சிங்கம் பிடரியைச் சிலிர்த்துத் தலையைத் தூக்கிப் பார்ப்பது போல இருபக்கமும் பார்த்தான். பிறகு ஜானகி இருக்கும் திக்கை நோக்கி நடந்தான். ‘திக்திக்’ என்று அடித்துக் கொண்டது ஜானகியின் நெஞ்சம். மங்களம் அவனை வேல் விழிகள் கொண்டு கண்ணகி தேவியானவள் பாண்டியனை விழித்தது போல குரோதமாகப் பார்த்தாள்.”

    இப்படி உவமையாகச் சொல்லிக் கொண்டு வருவதில் ஒரு சௌகரியம் வாசகர்களுக்குக் கிட்டி விடுகிறது. இந்தப் பாத்திரம் இப்படிப்பட்டது என்பதையும் வாசகர் மனம் உடனடியாக ஏற்றுக்கொண்டு விடுகிறது. வாசகர்களும் எங்கெல்லாம் அந்தப் பாத்திரம் வருகிறதோ அதற்கேற்றாற்போல தங்கள் மனநிலையை வைத்துக் கொண்டு படிக்கிற சௌகரியமும் ஏற்படுகிறது.

    இன்னும் சில ‘தேவ’ உவமைகளை மட்டும் தருகிறேன்.

    *****

    கஷ்டப்படும் ஆத்மா கஷ்டப்பட்டே தீரவேண்டும் என்ற நியதியின்படி மங்களம் இல்லாதபோதும் கூட விச்ராந்தியாயிருக்க முடியாமல் இவர் பிடியில் திணறினான். (ஜகதீசன்)

    ******

    வந்து சேர்ந்த நடராஜனுடைய ஆனந்தமும் திருப்தியும் முன்பு ராஜசூய யாகத்தை முடித்த யுதிர்ஷ்ட்ரனுக்கும் அச்வமேத யாதத்தை நடத்திய ராகவனுக்கும் ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே

    ******

    பொட்டை வெளியில் எரிக்கும் வெய்யிலில் நான்கு சொட்டு மழைத்துளிகள் போல் வந்த அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு வெளியே வந்தான் (நடராஜன்).

    ******

    துஷ்டனைக் கண்டால் தூர விலகுகிறதும், அது பயப்படுகிறது என்று துஷ்டன் எண்ணிக்கொண்டு கொக்கரிக்கிறதும் வழக்கமாக நடப்பதுதானே காலேஜில் நடராஜன் ஒரு காலத்திலும் சந்துருவை நெருங்கினவன் இல்லை.

    ******

    பல்வரிசை காட்டிக் கைகொட்டி ஆர்ப்பரிப்பது போல சமுத்திர அலைகள் ஓயாது எழும்புவதும் குனிவதுமாக இருந்தன (திருச்செந்தூர்).

    ******

    பகலிலேயே இருள் கவிந்திருக்கும் சுப்புரத்தினத்தின் கிருஹம்

    இரவில் துஷ்ட மிருகத்தின் குகை போல காணப்பட்டது.(சந்துருவின் வீடு)

    ******

    சூரியன் மாயவரம் வள்ளலார் கோயில் வீதியில் தினம் தினம் உதயமாகும்போது முதல்முதலாகப் பட்டுபுடவையை மடிசார் வைத்துக் கட்டிக்கொண்டு முன் வாசலில் அழகாக மாக்கோலம் போடும் ஒரு பெண்மணியைத்தான் பார்ப்பது வழக்கம். பார்த்தவுடன் உள்ளம் பூரித்துத் தன் கதிர்களைத் தெருவெல்லாம் வாரி இறைப்பான். அந்தப் பெண்ணும் அவனைப் பார்த்துப் பல்வரிசையைக் காட்டிவிட்டு, தன் வேலையில் முனைவாள் (இது மணியின் மனைவியைப் பற்றி உவமையோடு ஒரு அறிமுகம்)

    *********

    பெரிய சோம்பேறி; நாட்டுப்புறத்துப் பெருச்சாளி’ என்கிற நினைப்புடன் ஹரன் அவரைப் பார்த்தார். அவர் ஹரனை, ‘ஒன்றுக்கும் உதவாத உதியமரம், டெல்லியில் வளர்ந்ததனால் விறைக்கிறது’ என்ற பாவத்தில் பார்த்தார். (மணியின் தந்தை வீட்டில் நடராஜனின் தந்தை)

    *******

    தன் தலைக்கு மேல் முழங்கும் பேரிடிகளைப் பற்றிக் கலங்கியவாறு வரும்போது இடிகளுக்கிடையே தோன்றிய பாதை மீது ஒளி வீசி வழி காட்டும் மின்வெட்டுகளைப் போன்றதொரு சந்தர்ப்பமும் அவனுக்கு ஏற்பட்டது.

    *******

    சிவாக்ஞையின் பேரிலே ஆவிர்ப்பவித்த அக்கினி வீரபத்திரமூர்த்தியும், துஷ்டநிக்கிரகத்துக்காகத் தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட நரஸிம்ம ஸ்வாமியும் அப்போது அவருக்கு நிகராக முடியாது (ஹரனின் கோபம் பற்றி நடராஜன் நினைப்பது).

    *******

    சுக்குக் கஷாயத்தில் விடப்பட்ட விளக்கெண்ணையை விடியற்கால வேளையில் சிறுவர்கள் நோக்கும் அருவருப்புடன் ஜகம் கிழவரைப் பார்த்தாள்.

    இந்த சுக்குக் கஷாய அனுபவம் சிறிய வயதில் எனக்கும் கூட ஏற்பட்டது உண்டு. ஊரிலே தாத்தாவின் இந்த சுகாதார ஏற்பாடு இப்போது நினைத்தாலும் ‘வயிற்றைக் கலக்கும்”.

    ’மிஸ் ஜானகியின்’ கதை எல்லோருக்கும் பிடிக்கும் கதை. மிகப் பெரிய திருப்பங்களோ, சோகமயமோ, அந்தக் கால படங்களில் வருவது போல வண்டி வண்டியாக வசனங்களோ இல்லாத கதை. இத்தனைக்கும் இது  எட்டு/பத்து நாட்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்து விவரிக்கப் பட்டிருக்கும் கதைதான் என்பதால்  விறுவிறுப்பாக போய்க்கொண்டே இருக்கும். ஆனால் இந்த எட்டு நாட்கள் கதையிலும் ஒரு சில பாத்திரங்களுக்கு ஆயுள் பூராவுமாக நடக்கிற சங்கதிகளை மிகச் சுருக்கமாகச் சொல்லி விடுவது என்பது தேவனுக்கு கை வந்த கலை. அதுவும் திருச்செந்தூரிலேயே கதை முக்கால்வாசி நடப்பதால், அங்கே அருளாட்சி புரியும் எந்தை முருகனைப் பற்றிய வர்ணனைகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அள்ளி வழங்குவதில் தேவனுக்கு இணை தேவனேதான்.

    தேவன் இந்த ‘ஃப்ளாஷ்பேக்’ என்று சொல்லப்படும் உத்திகளை மிக நயமாக இந்தக் கதையில் கையாண்டுள்ளார். சினிமாவில் இப்படி காண்பிப்பது மிகச் சுலபம். எழுத்தில் எப்படி காண்பிப்பது. தேவனின் கதைகளைப் படித்தால் அதன் லாவகம் தெரிந்து விடும்.

    இந்த மிஸ் ஜானகியில் ஒரு நாயும் வரும். டைகர் என்ற பெயருடன் திருச்செந்தூர் கீழப்புதுத்தெருவில் ‘அநியாயமாக’  யாரையும் நுழையவிடாமல் அழிச்சாட்டியம் பண்ணும். நாயை மிக விசேஷமாக வர்ணனை செய்வார் தேவன். நாட்டிய மணி தெலுங்கு பங்காருவின் வீட்டில் பாதுகாப்புக்காக அவர் தந்தையால் வளர்க்கப்படும் டைகரின் பாவனைகளுக்கும் அதன் ‘உர்..உர்.. பாஷைகளுக்கு தேவன் விளக்கம் சொல்லும் அழகே அழகே.. (டைகர் என்ற பெயரை வைத்துக்கொண்டு பூனை போல இருக்கும் சுபாவம் அதனுடையதல்ல, கூடவே அன்று சிறிது விச்ராந்தியாக அவிழ்த்துவிடப்பட்டிருந்ததால் கீழப்புதுத்தெருவின் ஒரு கோடிமுதல் மற்றொரு கோடி வரை வாக்கிங் செய்துவிட்டு ஒரு முனையில் நின்று இந்த உலகத்தில் நாய் இனத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது)

    இப்படிப்பட்ட டைகரின் ஒரு ருசிகரமான விளையாட்டை மட்டும் தேவன் எழுத்துக்களால் படித்து விட்டு நாம் மிஸ் ஜானகியை விட்டு விலகி கல்யாணியை சந்திப்போமாக.

    Share
  • காதலியுடன் வாழ்வு! (வசந்த காலம்)

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++++++++++

    << காதலியுடன் வாழ்வு >>
    (வசந்த காலம்)

    ++++++++++++++++++++++++

     

     

    என் ஆத்மாவைக்
    கவர்ந்து கொள்ளும்
    மிருதுவான முரட்டுக்
    கரங்கள் யாருடையவை ?
    கசப்பான களிப்பும்,
    இனிப்பான வலியும்
    கலந்து என் இதயத்தில்
    ஊறிப் போயிருக்கும்
    ஒயின் எது ?
    இரவின் மௌன வேளையில்
    என் தலையணை மேல்
    பறக்கும் அந்த
    இறக்கைகள் யாவை ?
    என் தூக்கம் கலைக்கும் அவை !
    என்ன நடக்கு தென்று
    எவரும் அறியக்
    காணாது !
    ஆனந்தக் களிப்பை விடப்
    பேருன்னத மான
    சிரிப்பின்
    பிரதிபலிப்பை விடப்
    பேரழகுத் துயரம்
    கலந்திருக்கும் எனது
    பெரு மூச்சில் !
    கலில் கிப்ரான்

     

     

    என் கண்மணியே ! வா
    இந்தக் குன்றின் மேல்
    இருவரும் உலாவி வருவோம் !
    பனிப் பொழிவுகள்
    நீராய் ஓடும் !
    உறக்கத்தி லிருந்து வாழ்க்கை
    உயிர்த் தெழுந்து
    மேடு பள்ளங்களில்
    திரிந்து வருகிறது !
    வசந்த காலம்
    வைத்த தடங்களைப்
    பின்பற்றுவோம்
    தூரத் தளங்களில் !
    பசுமைக் குளிர்
    வயல்களுக்கு மேல்
    உயர்ந்த
    மலை உச்சிக்கு நாம்
    ஏறுவோம்
    மகத்தான உள்ளெழுச்சி நம்மை
    இழுத்துக் கொள்ள !

     

    விடிந்துள்ள வசந்த காலம்
    குளிர் காலத்து
    அங்கியை
    மடித்து வைத்து
    எலுமிச்சை மரங்கள் மேல்
    படிய விட்டது !
    பார்ப்பதற்கு
    இரவில் அலங்கரித்த
    பெருநகர்த்
    திருமணப் பந்தலில் உள்ள
    மணப்பெண் போல்
    தெரிகிறது !

     

    ஒருவரை ஒருவர்
    தழுவிக் கொள்ளும்
    காதல் ஜோடிகள் போல்
    தெரிகின்றன
    திராட்சைக் கொடிகள் !
    பாறைகளுக் கிடையில்
    நடனமிடும்
    சிற்றோடைகள் களிப்புடன்
    பாடிக் கொண்டு !
    மொட்டுகளில் சட்டென
    முகிழ்த் தெழும் பூக்கள்
    இயற்கை இதயத்தில்
    களஞ்சியாய்ச் செழித்த
    கடல் வயிற்றி லிருந்து வரும்
    நுரை போல் !

     

    என் கண்மணியே ! வா
    மல்லிகைக் கிண்ணத்தில்
    கடந்த காலத்தில் குளிர்ந்த
    கண்ணீர்த் துளிகளைக்
    குடித்துத்
    தேற்றுவோம் நம் ஆத்மாவை !
    பறவைகள் பொழிந்திடும்
    கீதங்களைக் கேட்டு
    உலாவித் திரிவோம்
    உவகை யோடு
    மதி மயக்கம் உண்டாக்கும்
    தென்றலில் !

     

    ஊதாப் பூக்கள்
    ஒளிந்திருக்கும்
    அந்தப் பாறை அருகிலே நாம்
    அமர்ந்தி ருப்போம் !
    அவை கொடுக்குக் கொள்ளும்
    இனிய முத்தங்களை
    பரிமாறிக் கொள்வோம்
    நாமிருவரும் !

    +++++++++++++
    Share
  • காதல் பூமியாய் காந்த பூமி..!

     
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    சுழன்று செல்லும் தேராக
    வெட்டவெளியில் வெள்ளோட்டம்

    ஆதவனும் வெண்மதியும் ஆளுக்கோர் திக்கில்
    பவனியாய் ஊர்கோலத் தேர் திருவிழா..!

    நாயகர்கள் வாழ்த்தோத ‘செவ்வாயில்’ புன்சிரிப்பும்
    கோளங்களின் நட்பும் பகையும் மாயைக்
    காதலைப் போற்றுமே…!

    கடலும் மலையும்  மண்ணும் காற்றும்
    அடைந்து திமிரும் எரிமலைகளும்
    மாயக் காதலுள் கட்டுண்டு கிடக்க…

    காதல்வானம் அள்ளித் தெளித்த
    காதல் வனமே பூகோளம்..!
    பூக்கோல காதல் விதைகள் முக்காலமும்..!

    வேரூன்றி எழுந்து நின்று பல்கிப்
    பெருகி கருகி அமிழ்ந்து
    மீண்டும் துளிர்க்கும் தளிராம் என்றும்

    சாகா வரம் பெற்று வந்த
    போகக் குழந்தை “அது” – மனித
    நெஞ்சங்களுக்குள் போதை தரும்
    பொற்குடமாம்  பாற்குடம்..!

    வேண்டாத இதயத்தையும் வேகவைத்தும்
    வாழாத மனங்களை வாழ விடும்
    வீழாத புகழ்கொடியை உச்சத்தில் ஏற்றும்…!

    மாயாவிக்  காதலே…! நீ…!
    பொற்கொடியா…..வடம் நீளும்
    தேர் சக்கரத்தின் அச்சாணியா ?

    இருந்தும் இல்லாமலும்…கண்டும் காணாமலும்
    உனைக் காக்கவென்றே காதல் பூமியாய்  சுழலும்
    காலகாலமாய் காந்த பூமி..!

    ================================================

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6

    தேமொழி

     

     

    முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
    எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
    என்னில் இன்று நானே இல்லை
    காதல் போலே ஏதும் இல்லை
    எங்கே எந்தன் இதயம் அன்பே
    வந்து சேர்ந்ததா

    வரிகள்: வாசன்

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5>>

    Share
  • கண்ணன் என் காதலன் – ‘கண்டால் சொல்லு!’

     

    -கவிநயா-

     

    காதோரம் கிசுகிசுக்கும் காற்றேநீ கண்டாயோ?
    ஆற்றோரம் அசைந்திருக்கும் நாற்றேநீ கண்டாயோ?
    வானெங்கும் வட்டமிடும் வெண்ணிலவே கண்டாயோ?
    தேனெடுக்க சுற்றிவரும் சின்னவண்டே கண்டாயோ?

    மூடியுள்ள கண்ணுக்குள்ளே மோகனமாய் சிரித்திடுவான்!
    நாடியென்றன் நெஞ்சுக்குள்ளே நர்த்தனங்கள் புரிந்திடுவான்!
    கண்திறந்து பார்த்துவிட்டால் கணத்தினில் மறைந்திடுவான்!
    மண்மயங்கும் வண்ணக்கண்ணன் மாயம்பல புரிந்திடுவான்!

    ஆடும்மயில் கண்டாலோ அவன்நினைவே வருகுதடி;
    பாடுங்குயில் குரலினிலே வேய்ங்குழலே ஒலிக்குதடி;
    கார்மேகம் கண்டாலோ கண்ணமுகம் தெரியுதடி;
    பார்புகழும் அவன்நினைவே மார்த்துடிப்பாய் ஆச்சுதடி;

    கால்கடுக்க சுற்றிவரும் காற்றேநீ கண்டால் சொல்லு…
    கடலேறி விளையாடும் அலையேநீ கண்டால் சொல்லு…
    ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்கும் சூரியனே கண்டால் சொல்லு…
    பாருக்குள்ளே மணியாம்என் மன்னவனைக் கண்டால் சொல்லு!

     

    படத்துக்கு நன்றி:  http://www.radhagopaljiutempel.com/srikrishnasriradhe.htm

    Share
  • காதலின் வேதம்

    பவள சங்கரி

    காதலின் கீதம் – Song Of Love (Khalil Gibran) – மொழிபெயர்ப்பு

    காதலர்களின் விழிகளும் யானே
    இச்சையூட்டும் இன்பரசமும் யானே
    மற்றுமந்த உளத்தின் ஊட்டமும் யானே

    விடியலில் மலரும் மனமும்  முத்தமிட்டுத்தம் அமுதகத்தின்மீது கிடத்திக்கொள்ளும் அக்கன்னியவளையும் கொண்டதோர் ரோசாவும் யானே.

     

    நிலையான செல்வத்தின் இல்லமும் யானே
    இன்புறவின் துவக்கமும் யானே.
    சாந்தம் மற்றும் கலக்கமின்மையின் தொடக்கமும் .யானே
    இரமியத்தின் இதழின் மீதான் மென்னகையும் யானே
    எம்மைத் தொடர்ந்து பற்றும் தருணமதிலந்த யுவன்தம் கடமையையும் மறந்து, அவர்த்ம் முழு வாழ்வும் இன்பக்கனாவின் நிதர்சனமாகிறது.

     

    பாவலரின் எழுச்சியும் யானே,
    கலைஞனின் வெளிப்படுத்துகையும் யானே,
    மற்றுமந்த இசைக்கலைஞனின் அருட்கிளர்ச்சியும் யானே

     

    கருணைநிறைத் தாயினால் நேசிக்கப்பட்டதோர் குழவியின் இதயமதின் புனிதாலயமும் யானே.

     

    ஓர் இருதயத்தின் கதறலில் தோன்றுபவன் யான்;
    ஓர் கோரிக்கையதைத் தவிர்ப்பவன் யான்;
    எம் அமைவு தேடுமந்த இருதயத்தின் இச்சையதை;
    அஃது குரலின் வெற்றுக் கோரிக்கையை விலக்குகிறது.

     

    ஆதாமிற்கு ஏவாளின் மூலமாகவே காட்சியளித்தேன் யான்.
    நாடு கடத்தலே அவர்தம் தேர்வாக இருந்தபோழ்தும் எம்மையே சாலமனுக்கு வெளிப்படுத்தியதோடு
    எம்மால் அவர் இதமும் பெற்றார்.

     

    ஹெலேனாவைப் பார்த்து யான் புன்னகைத்ததால் தர்வாடாவை அழித்தாளவள்:
    இருப்பினும் கிளியோப்பாட்ராவிற்கு யான் மகுடம் சூட்டியதால் அந்த நைல் நதிக்கரையில் அமைதி நிலவியது.

     

    காலங்களைப் போன்றவன் யான் – இன்று கட்டமைந்து நாளை அழிந்து படக்கூடியது;
    ஆக்கலும், அழித்தலும் புரியுமோர் இறையைப் போன்றோன் யான்;
    ஓர் ஊதாப்பூவின் பெருமூச்சைக் காட்டிலும் இனிமையானவன் யான்;
    பொங்கியெழும் புயலைக் காட்டிலும் உக்கிரமானவன் யான்.

     

    வெகுமதிகள் மட்டுமே வசீகரிப்பதில்லை எம்மை;
    பிரிவு ஊக்கமிழக்கச் செய்வதில்லை எம்மை;
    இன்மையும் செதுக்குவதில்லை எம்மை;
    இழப்பச்சம் மெய்ப்பிப்பதில்லை எம் விழிப்புணர்வை;
    உன்மத்தமும் எமக்கோர் ஆதாரமாவதில்லை.

     

    ஓ நாடிச்செல்வோரே, உண்மையை ம்ன்றாடும் உளமையே யான்;
    மேலும் தேடலிலும், பெறுதலிலும் மற்றும் எம்மைக் காப்பதிலும் உள்ள உம் நேர்மையே எம் நடத்தையைத் தீர்மானிக்கலாம்

     

    SONG OF LOVE – WATCH IN YOUTUBE

     

    http://youtu.be/-FczCTPJ_YM

     

    Share
  • பார்வை என்ன மணல் வெளியோ?

    ஷைலஜா

     

    காதலா என்றிது தெரியவில்லை மனம்
    ஆதலால் என் வசமில்லை-உடல்
    விறகாய் எரிவதைப்பார்த்தாயா-நறு
    மணத்தை அதனில் சேர்ப்பாயா?
    பாடாப்பாடல் அறிந்துகொண்டேன்  – அது
    உன் பேர்தான் எனவும் உண்ர்ந்துகொண்டேன்
    இரவுப்பூவை மலர வைத்தாய்-பின்
    உறக்கத்தில் சுகத்தை வரவழைத்தாய்-உன்
    பார்வை என்ன மணல் வெளியோ-நினைவுப்
    புதைந்து அழுந்தி மீள்கிறதே
    உன் வழிப்பாதையில் என் இதயம் -அது
    மீட்டும் ராகம் இன்று உதயம்!
    நெஞ்சிற்குள் ஏன் இந்நெருப்பு-அட
    நீதானடா இதற்குப்பொறுப்பு!

    Share