சத்தியமணி

காத்திருந்து வந்ததிந்த காதலர் தினம் – தினம்
காத்திருந்தும் வரவில்லை கண்ணனின் மனம்
பூத்திருந்து புன்னகைத்த கோதையின் முகம்
பொங்கி அழும் முன்னாலே ஊடலில் சுகம்

சீண்டி விளையாடுவதில் இன்னும் சிறுபிள்ளை
சண்டி தனமத்தனையும் பண்ணும் பெரும்தொல்லை
என்ன செய்ய காதலிலே கட்டி விட்டான் மெல்ல‌
ஏக்கமுடன் காத்திருக்க வைப்ப‌தையோ சொல்ல

தாமதமாய் வந்தவுடன் கண்ணடிப்பான் கொஞ்சம்
கீதமழைப் பெய்யும் குழல் கீர்த்தனைகள் மிஞ்சும்
ஊடலுக்கு மெய்யும் பொய்யும் ஓயாமல் கெஞ்சும்
ஒட்டு மொத்தமாய் கேட்டு கூடலுக்குள் தஞ்ச‌ம்

படத்திற்கு நன்றி:

http://www.koausa.org/Gods/God2.html

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “காதலர் தினம்

  1. காதலர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
    சங்ககாலத்தில் காதல் எங்கள் மத்தியில் இருந்திருக்கின்றது . காதலின் உவகையும் வலியும் பதிவான அழியாயிலக்கியங்கள் அவை. ஆனால் சங்கம் மருவிய சிலப்பதிகார காலகட்டத்தில் குழந்தைத்திருமணமுறை எம் மத்தியில் வழக்கத்திற்கு வர காதலும் மருவிவிட்டது..இன்று எங்கள் சமூகம் காதல் அற்றதாக மாறிவிட்டது. “ஆதலினால் காதல்செய்வீர்” என எமக்கு அறிவுரை வழங்கியவன் பாரதி.
    சங்கம் மருவிய காலகட்டத்தில் தென்னிந்தியாவில் முடிசூடிய மூவேந்தர்கள் ஓங்கி பேரரசுகள் உருவாகின. பேரரசுகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரத்தை . பிறப்பு சார்ந்தே உலகமெங்கும் நிலப்பிரபுத்துவம் உருவாக்கிக் கொண்டிருந்தது.
    சங்ககாலம் முதலே தமிழகத்தில் சாதியதிகாரமும் சாதிப்பிரிவினையும் வலுவாக இருந்திருந்தன. சங்கம் மருவிய காலத்தில் சாதியதிகார கட்டுமானமாகி சாதியடையாளங்களை மீறுவது உறுதியாக தடுக்கப்பட்டு அதற்காகவே குழந்தை வயதில் திருமணம் அறிமுகமாகி பதினைந்து நூற்றாண்டுகளாக நாங்கள் காதல் என்றால் என்ன என்று அறியாது. வாழ்ந்து வந்திருந்தோம். இதனால் நாங்கள் அறிந்ததெல்லாமே வெறும் பாலுறவு மட்டுமே.
    திருமணத்தில் காதல் இல்லாத காரணத்தால் நம் மூதாதையர் விபச்சாரிகளை தேடிப்போனார்கள்
    இளைஞனும் யுவதியும் தமது விருப்புக்கும் ரசனைக்கும் இயல்புக்கும் ஏற்ற துணையை தாமே தேடிக்கொள்வதுதான் உண்மையான காதல். தன் தோழனையும் தோழியையும் தேடிக்கொள்ள அனுமதி வழங்கிய எங்கள் சமூகம் வாழ்நாள் முழுக்க நீளும் திருமண உறவைத் தேடிக்கொள்ள கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக அனுமதிக்கவில்லை.
    திருமண பொருத்தத்தில் சொத்து, குடும்ப அந்தஸ்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள் .திருமணம் செய்ய விருப்பவர்களுக்கிடையில் விருப்பு, ரசனை, மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றில் பொருத்தம் உண்டா? என்று பார்த்தது கிடையாது. .இந்தப் பொருத்தங்கள் அவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகாமல் தெரிய வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய. திருமண முறைகளில் ஜோடியாக தம்பதிகளென முடிவுசெய்தபின்னர்தான் அவர்களை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம்.
    இருவர் தமக்கிடையே பகிருந்தோறும் நெருங்குந்தோறும், பழகுந்தோறும் அகத்தை பகிர்ந்துகொள்வதால் வளரும் ஓர் உறவுதான் காதல்.
    எமது விருப்பு, ரசனை, மனநிலை, அறிவுத்திறன் ஆகியவற்றில் இணைவு இல்லாத ஓருவரோடு கொஞ்ச நேரத்திற்குப் பின் எங்களால் பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவரை திருமணம் புரிந்தால் அந்தத் திருமணம் எப்படி தொடர முடியும்?
    பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத்தளம் இல்லாத நிலையில் நம் மத்தியில் தம்பதிகளுக்கிடையில் வெறும் வெற்று உரையாடல்கள் மட்டுமே சாத்தியம்.
    எங்கள் மத்தியில் நடைபெறும் திருமணங்களில் சில காலம் தாண்டியபின் தம்பதிகளுக்கிடையில் உரையாடலே நிகழ்வதில்லை. உணவு ரெடியா?, பிள்ளைகள் சாப்பிட்டார்களா? என சில வரிகளுகளுக்குமேல் தமக்கிடையில் உரையாடும் தம்பதிகள் மிக மிக அபூர்வம். வேறு வழியே இல்லாத நிலையில் நம் மத்தியில் திருமண உறவு என்பது வெறும் ஒப்புக்கு போலியாக நிகழ்வதாக மாறிவிடுகின்றது
    நம் மத்தியில் திருமணமான தம்பதிகள் பெரும்பாலும் தமது நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுகிறார்கள். திருமணம் புரியும் தம்பதிகளுக்கிடையில் காதலை வளராதலால் வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன் வெறும் சினிமா, நாவல்கள் நாடகங்கள் மூலம் வெறும் கற்பனையில் காதலைத் தரிசித்துவிட்டு அநேகமானவர்கள் மரணித்துப் போய்விடுகின்றார்கள்.
    இன்னமும் உண்மையான காதல் என்றால் என்ன என்று எங்களுக்கெல்லாம் . தெரியாத காரணத்தால் எந்த தெரிவும் இல்லாமல் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையயுள்ள அருகாமையையே காதலுக்கான காரணமாக எடுத்துக் கொள்கின்றோம். எங்கள் மத்தியில் இருவர் அருகருகே பழக நேர்ந்தாலே திருமணம் செய்து கொள்கின்றார்கள்.
    இறுகிய எங்கள் சமூகத்தின் மத்தியில் காதல் தடை செய்யப்பட்ட ஒன்றாக இன்னமும் இருப்பதனாலேயே அது இரகசியமானதாக உளவு பாக்கப்படும் ஒரு விடயமாக அமைந்துள்ளது. . இதனால் காதலை நிதானமாக அணுக முடியாது சில கண்களில் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே திருமணங்களாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளில் முடிவடிகின்றன.
    காதலை நிதானமாக அணுகவும் முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும் அனுபவம் தேவை. அத்தகைய அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் தேவை.
    ஆரோக்கியமான சமூகங்கள் காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரத்தினை கொண்டிருக்கும். . பொருத்தமான ஆண்பெண் உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்

    – நல்லையா தயாபரன்

  2.  திரு நல்லையா தயாபரன், திரு இன்னம்பூரான்  அவர்களுக்கு ந‌ன்றி.  த‌ங்களின் கருத்திலிருந்து இன்னொரு கவிதை பரிசளிக்கிறேன். தமிழ் வாழ்க‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *