Blog

  • கணினி, ஜகம் நீ

     

    நாகை வை. ராமஸ்வாமி)

    அன்றொரு நாள், ஆண்டு 1999, இரவு 1.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

    ஒரே நிசப்தம்.  ரிடையர் ஆக ஒரு சில மாதங்களே இருந்த அந்த பெரியவரும், அவர் மனைவியும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் மும்பை அபார்ட்மென்டில்.

    என்ன? பயந்துவிட்டீர்களா, ஏதோ பயங்கர நிகழ்ச்சி என்று?  நோ, நோ.

    அந்த நேரத்தில்  தான், முதல் முறையாக அமெரிக்கா  சென்றிருக்கும் அவர்கள் மகன் நேரடி உரையாடlல் செய்ய அழைப்பு மணி விடுப்பான்.  அவர்களுக்கு ஒவ்வொரு இரவும், மகிழ்வான சிவராத்திரி தான்.

    அப்பொழுது தான் அவர்களுக்கு கம்ப்யூட்டரைப் பற்றி ஓரளவு தெரியும்.   அவன் கிளம்புவதற்கு முன் ஒரு பி..சி.. (பர்சனல் கம்ப்யூட்டர்) வாங்கி வைத்து ஆரம்ப விளக்கங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான்.  

    பத்துதடவை சொன்னாலே புரியாத வயதாகிக் கொண்டிருக்கும் மூளைச் செல்கள் புத்துணர்வு  பெற்று புரிந்து கொள்ளவே பத்து நிமிடம் ஆகும்.  அவன் ஓரிரண்டு தடவை சொல்லிக் கொடுத்துவிட்டு,  “யூ நோ அப்பா, யூ ஒன்லி டாட் மீ மெனி திங்ஸ்” என்று குல்லா வைத்துவிடுவான்.  அதில் மகிழ்ந்து அதிகம் கேட்கக் கூடாது என்ற குல்லாகூடிய தலைக் கனத்துடன் ஓகே என்று சொல்லிவிட்டார்

    ஒரு வழியாக கம்ப்யூட்டரை ஆன் செய்து விட்டார்.  மகன் சொல்லியபடி, MSN

    ஜன்னலைத் திறந்து, காத்திருந்தார்

    மணி 2.00 நெருங்கிக் கொண்டிருக்கிறது.  திக், திக், ஏன் இன்னும் கூப்பிடவில்லை?

    ட்ர்ர்ர்ரிங்…….  ட்ர்ர்ரிங்.

    அப்பாடா, மணி அடித்தது.

    அவன் உருவம் தெரிந்தது.

    மனைவி தூக்கக் கலக்கத்தில், ஏதோ பிரமை பிடித்தவள் மாதிரி கனவா நனவா என்ற நிலையில், ஏற்கனவே பெரியதான தன் கண்களை இன்னும் அகல விரித்து கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டு மகன் உருவத்தைத் தடவிக்கொண்டிருந்தாள்.   பிரிவாற்றாமை கண்களில் நீர் வரச் செய்தது.

    வாயை அசைத்து ஏதோ சொல்கிறான்.  அந்த நாள் மௌனப் படம் பார்ப்பது போலிருந்தது. ஏதும் கேட்கவில்லை.

    அவர்கள் இருவரும் ஊரையே எழுப்பி விடுகிறமாதிரி காட்டுக் கத்தலாக “ஹலோ, ஹலோ, ஹலோ” என்று சுமார் இருபது ஹலோ போட்டிருப்பார்கள். அவர்கள் இருந்தது நான்காவது மாடி.  அவர்கள் கூப்பிட்ட ‘ஹலோ ஹலோ’க்களில், அந்த இரவு நேரத்தில் சாலையில் போய்க்கொண்டிருந்த சிலர் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு, “அவாஜ் ஆதா ஹை, மகர் கோய் நஹீ, டர் லக்தா ஹை” ‘சத்தம் மட்டும் கேட்கிறது, ஆளையே காணோமே’ என்று பயந்து அலறி அடித்து ஓடுவது நன்றாகத் தெரிந்தது.

    அவன் டைப் செய்வது தெரிந்தது.  கம்ப்யூட்டரில் அவன் மெசேஜ் தெரிந்தது.  

    “ஸ்பீக்கர் ஆன்ல இருக்கா?”

    “அது எப்படி செக் செய்வது?”

    “ஸ்பீக்கரில் பட்டன் இருக்கும்.  அது ரெட் லைட்டில் இருக்கா, க்ரீன் லைட்டில் இருக்கா?”

    “எந்த லைட்டும் இல்லை”

    “பட்டன் ஆன் செய்தாச்சா?”

    “எப்படி செய்வது?”

    “அப்பா…அது ஒரு  ப்ரஸ் பட்டன் தான்.  சைடில் இருக்கும்.  ஜஸ்ட் ப்ரஸ்  இட்.  நான் சொல்லியிருக்கிறேனே?”

    “இரண்டு நாள் தான் பாடம் எடுத்தாய், மறந்துவிட்டது கண்ணா, கோபிச்சுக்காதே.   ஒன் மினிட்.  ஓகே.  ஆன் ஆகிவிட்டது.  க்ரீன் லைட்.”

    “இப்போ பேசலாம்.  அம்மா எங்கே?”

    “இதோ ரெண்டு பேரும் தான் இருக்கோம்.  உனக்கு தெரியலையா?”

    “சரியா தெரியலை.   கேமிராவை சரியா ஃபோகஸ் செய்யணும்.”

    “இதோ ஒன் மினிட்.  ம்..ம்.. அட்ஜஸ்ட் செஞ்சாச்சு.”

    “சரியா அட்ஜஸ்ட் செய்யலை.  ரூம் சீலிங் தான் தெரிகிறது.  இன்னும் சற்று கீழே ஃபோகஸ் செய்யவும்.”

    தமிழ் அரைகுறையாகப் படித்திருந்ததால், செய் என்றோ  செய்யுங்கள் என்றோ சொல்வதற்குத் தெரியாது.   செய்யவும், பார்க்கவும், என்றுதான் சொல்வான்
     
    “ஓகே, இப்போ”

    “அப்பா….இப்போ  தரை தெரிகிறது.”

    “ஓகே, இப்போ?”

    “ஓகே. நீங்க இரண்டு பேரும் பாதி பாதி தான் தெரிகிறீங்க>”

    “இப்போ?”

    “குட்.  சரியாக இருக்கிறது.”

    “ஓகே.  சொல்லு.  எப்படியிருக்கே”

    “நான் ஓகே.  நீங்கள்  உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  சரி. எனக்கு டைம் ஆகிவிட்டது.  நாளைக்கு இதே நேரத்தில் இதே சேனலில்  பார்க்கலாம்.  அர்ஜன்ட் மெசேஜ் இருந்தால் மட்டும் மெயில் செய்யவும். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் செல்லம்…டிங் டாங்..”

    “இருப்பா இன்னும்  பேசவே இல்லை.  அதுக்குள்ளே  ஆஃப் செய்யாதே.”

    அவன் கேட்டால் தானே.   ஆஃப் செய்துவிட்டான்.   ம்..ம்.. இன்னும் 24 மணி நேரம்  காத்திருக்க வேண்டியது தான்.

    அடுத்த நாள் இரவு.

    அவன் சொன்னமாதிரி  செய்து ரெடியாகிவிட்டோம்.

    இதோ வந்துவிட்டான்.

    “ஹலோ..ஹலோ”

    “சொல்லுப்பா..கேட்கிறதா..”

    “நீங்கள் சொல்வது  கேட்கவில்லை.  நான் பேசுவது  கேட்கிறதா?”

    “கேட்கிறது”
     
    “ஓகே,  வெயிட்.  ஒயர் சரி  செய்யவேண்டும்.  பார்க்கிறேன்.”

    “அந்த  மௌஸ் இருக்கு பாருங்கள்.  அதை மேல் உள்ள பாரில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்று இருக்கும்.  அதில் நகர்த்தி க்ளிக் செய்யுங்கள்.”

    தலை சுற்றியது அவர்களுக்கு..   ஏற்கனவே கொஞ்சம் வெர்டிகோ ப்ராப்ளம்.

    “இரு, இரு. மெதுவாக சொல்லு.  மௌஸா, எலியா?  நான் எங்கே போவேன் இப்போ எலி பிடிக்க, என்ன சொல்றே?”

    “அப்பா, கீ போர்ட் கிட்ட, கம்ப்யூட்டர் கீழே ஒரு பெரிய ஹார்டுவேர் பெட்டி இருக்கிறது, பாருங்கள், அதிலேருந்து கனெக்ட் செய்த ஒயரிலிருந்து ஒரு சின்ன எலி மாதிரி கைக்கு அடக்கமான நகர்த்தக்கூடிய டிவைஸ் பேடின் மேல் வைத்திருக்கிறது, பார்க்கவும்.”

    “ஆமாம்.  அதுதான் மௌஸா?.  ஓகே.  அதை என்ன செய்யவேண்டும்?”

    “அதை லேஸாக நகர்த்தினால், கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ஒரு அம்புக்குறி நகரும்.”

    “ஐ.  ஆமாம்.  நகருகிறது.  ஆனால்,  அம்புக்குறி எங்கோ  போகிறதே?”

    “மெல்ல நகர்த்துங்கள். அது எங்கு இருக்கிறதோ அங்கே அந்த மௌஸில் மேற்புரத்தில் உள்ள இடப்பக்கத்தில் உள்ள பகுதியை அமுக்குவதற்குத்தான் க்ளிக் செய்வது என்று பெயர்.”

    “நீ நன்றாக சொல்லிக் கொடுக்கிறாய்.  பேசாமல் கம்ப்யூட்டர் க்ளாஸ் ஆரம்பித்து இங்கேயே இருந்திருக்கலாம் போலிருக்கிறது.  எங்களுக்கு டென்ஷன் இருக்காது.”

    அவன் சொன்னபடியே செய்தார். ஆனால் மௌஸின் வலப் புறத்தை க்ளிக் செய்துவிட்டார்.  ஒரு சிறிய ஜன்னல்,  “cut, copy, paste……” என்று வந்தது.  அவனிடம் சொன்னார்.  அவன் சிரித்தான்.

    “அப்பா, அது இல்லை, இடது பக்கப் பகுதியை க்ளிக் செய்யவும்”  என்றான்.

    செய்தார்.  அம்புக் குறி வந்தது ஆனால் எங்கோ போய்விட்டது சொன்னார். “அம்புக் குறியைக் காணோம்.”  

    “வெயிட்.  ஜஸ்ட்  மூவ் த மௌஸ்”.   மூவினார்.  வந்தது.

    “என்ன விசேஷம்  செல்லம்?  எப்படி இருக்கே.  வேலை பிடித்திருக்கிறதா?  கீப் யுவர் பாஸ் ப்ளீஸ்ட் வித் யுவர் பெர்ஃபார்மன்ஸ், ஓகே?”   அவருக்கு அவன் வேலை கவலை. அவர் காலத்திய தந்திரங்கள் தான் தெரியும்.   அவன் அம்மா, “நல்லா சாப்பிடுப்பா.  ஏதாவது செய்யத் தெரியவில்லைனா, போனில் கேளு.”

    “ஓகே, ஓகே,  டைம் ஆகிவிட்டது.  இரண்டு நாள் லீவு.   திங்கட்கிழமை பார்க்கலாம்”
     
    “அடாடா, என்னடாது, ஒண்ணுமே பேசவில்லை.  அதுக்குளே  டைம் ஆகிவிட்டது, இன்னும்  இரண்டு நாள் வேற லீவு என்கிறாய்?”  அவர்கள் ஆதங்கம்.

    ராத்திரி பூரா சிவராத்திரியாய் விழித்திருந்து, கண்கள் சிவக்க, உடலில் சூடேறி, ஒவ்வொரு நாளும் தலையிலும் கண் இமைகளிலும் வேப்பெண்ணெய் தவிர, யார் யார் என்னென்ன சொல்கிறார்களோ அத்தனை எண்ணெய்களையும் தடவி,  ஒரு நாள் அந்த எண்ணெய் கீழே கிரானைட் தரையில் கொட்டியது தெரியாமல் தடாலென்று வழுக்கி விழுந்து ஒரு நாள் பூரா ராமர் வில் மாதிரி ஆனது ஒரு எண்ணெய் காண்டம்.

    அமெரிக்காவிலிருக்கும் மகனுடன் பேசுகிறோம் பேர்வழிகள் என்ற பெயரில் தினமும் இரவில் இரண்டு மூன்று மணி நேரம் இன்டர்நெட் ஆன் செய்து வைத்ததில் மாதாந்திர நெட் கனெக்ஷன் பில்லும்,  அவனைக் கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டே கம்ப்யூட்டர் சரியாக வேலை செய்யாத  போதெல்லாம், செல் ஃபோனிலும் பேசிக்கொண்டிருந்ததது எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 2500 ரூபாய் மாதம் கட்டவேண்டியிருந்தது ஒரு புராணம்.

    இம்மாதிரியான பல இரவுகள் கடந்த பின்தான் ஓரளவு எந்த கோளாறில்லாமலும்  அவர்களால் மகனுடன் கணினி  மூலம் உரையாட முடிந்தது,.

    அவராவது ஏதோ தடவித் தடவி கம்ப்யூட்டர் ஓரளவு கற்றுக் கொண்டுவிட்டார்.  ஆனால் அவர் மனைவிக்கு இன்னும் புரியவில்லை.  கொஞ்ச நேரம் அதிகம் உட்கார்ந்தால், “போதும் எழுந்திருங்க, அங்க வலிக்கிறது, இங்க வலிக்கிறதுன்னு ஒத்தடம் கொடு என்பீங்க.” என்று அலாரம் கொடுப்பாள்.

    .அவனிடம் கம்ப்யூட்டரில் ஏதாவது புரியவில்லை என்று கேட்டால், “யூ நோ அப்பா, இட் ஈஸ் எ சைல்ட்ஸ் ப்ளே ஃபார் யூ. ஒங்க ஆபீசிலேயே ட்ரெயினிங் கொடுத்திருக்காங்களே.  யூ ஆர் எ கம்ப்யூட்டர் savvy now.” என்பான்.

    “அது என்னப்பா கம்ப்யூட்டருக்கு பூட்டு, சாவி எல்லாம் இருக்கா? எனக்குத் தெரியாதே” என்று ஜோக்கடிப்பார்.

    அவர் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் எடுத்ததே ஒரு கதை.  கம்ப்யூட்டரைஸ் செய்யும் நோக்கத்தில், அவர் ஆபீசில் எல்லோருக்கும் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் கொடுத்தார்கள்.  அவருக்கும் இனிமேல் கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறோம், ரிடையர் ஆகப் போகும் சமயத்தில் என்று நைஸாக தப்பிக்கப் பார்த்தார்.  ஆனால் அவர் எம்.டி. விடுவதாக இல்லை.   வீட்டிற்குப் பக்கத்திலேயே ஏதாவது ட்ரெயினிங் இன்ஸ்டிட்யூட்டில் கம்பெனி சிலவில் கற்றுக் கொள்ளும்படி உத்திரவு.

    சேர்ந்தார், வேறு வழி.?

    .ஒரு நாள், ஒரு 9 வயதுக் குழந்தை சேர்ந்தது.  அவரைப் பார்த்து, “ஹை, தாத்தா, நமஸ்தே” என்றாள்.

     “காட் ப்ளெஸ்  யூ”.  என்றார்.

    “ஏன், நீங்களும்  ப்ளேஸ் பண்ணலாமே?”  என்றாளே  பார்க்கலாம்.

    “ஓகே, ஐ ஆல்ஸோ  ப்ளெஸ் யூ”

    “தேன்க் யூ.  நீங்க  சொல்லிக் கொடுக்கிறீங்களா, கத்துக்கறீங்களா?”

    அவருக்குக் கொஞ்சம் வழிய ஆரம்பித்தது.

    “சும்மா, டைம் பாஸ் குழந்தே, வீட்டில் கம்ப்யூட்டர் இல்லே, அதான்

    மெயில் அனுப்ப வந்தேன்”  சமாளிக்க முயற்சித்தார்.

    “பின்ன, வேறே என்னமோ தப்புத் தப்பா செய்யறீங்க?”

    “உனக்கு ஆபரேட் செய்ய  தெரியுமா?”

    “ஓ, நல்லாத் தெரியுமே,  நான் கூட மெயில் செக் செய்யத்தான் வந்தேன்.”

    “அப்போ இந்த மெயில் எப்படி ஓபன் செய்யறதுன்னு சொல்றாயா?”

    “அப்படி வாங்க வழிக்கு, உங்களுக்குத் தெரியலைன்னு  கண்டுபிடிச்சுட்டேன்.”

    அந்த வாண்டிடமிருந்த்தும்  கற்றுக்கொண்டதற்கு சற்று  தயக்கம் தான்.  ஆனாலும் கூச்சத்தைப் போக்கிக் கொண்டார், ஆர்வ மிகுதியில்.

    ஒரு மாத டிரெயினிங்.  ஓரளவு தான் புரிந்தது.  எக்ஸெல், ஈமெயில் அனுப்புவது போன்ற சமாசாரங்களில் தடுமாற்றம் தான்.

    மகனிடம் தெரிந்தாலும், தெரியாது என்று சொல்லி, அவனிடமிருந்து கற்றுக் கொள்வது போல் நடிப்பதில் அவருக்குப் பெருமை, சொல்லிக் கொடுப்பதில் அவனுக்கும் பெருமை. . ஆனாலும் சில நுணுக்கங்கள் புரியத்தான் இல்லை.

    ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்பது அடிக்கடி ஞாபகப்படுத்தும்.

    ரிடையர் ஆகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும்,  இப்பொழுது  மகன், கணினி தெரிந்த மறுமகளுடன் வசிப்பதால், பிரச்சினைகள் அதிகம் இல்லை. இருந்தாலும், அவன் கணினி மொழியில் ஏதாவது சொல்லிவிட்டால், தலையைப் பிய்த்துக் கொள்ளத்தான் செய்கிறார்.  இப்பொழுது, கணினி விஷயத்தில், அவர், பாதி கிணறுக்கு மேல் தாண்டிய மாதிரி தான்.  அவரை கணினி savvy என்று சொல்லமுடியாவிட்டாலும், கணினி sav என்று சொல்லலாம்.

    இந்த கணினி என்று ஒன்று கண்டுபிடித்திருக்கிறார்களே, அது, ஒரே மாயா ஜால உலகம்.  அதன் முன் உட்கார்ந்து விட்டால், எது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம், பொழுது போவதே தெரியாது.  அது தவிர, அயல் நாடு என்றாலே, விமானப் பயணம் என்றாலே எதுவுமே தெரியாத நடுத்தர வகுப்பினருக்கு ஒரு வரப் பிரசாதம்.  அதனால் தான், அந்தப் பெரியவரும், இளைய ராஜா பாடிய “ஜனனி, ஜகம் நீ..” என்ற பாட்டை சற்றே மாற்றி, “கணினீ, ஜகம் நீ” என்று கணினி முன் உட்காரும்போதெல்லாம் பாட ஆரம்பித்துவிடுவார்.

    கம்ப்யூட்டரில் இதை டைப் செய்வதற்குள், இதோ, அவரது முதுகு அலாரம் அடிக்கிறது, (பெட்டர் (?) ஹாஃப்) அலாரமும் அடிக்கிறது.

     

    Share
  • ‘சதம் “அடித்தேன்

     

    விசாலம்

    வல்லமை‘ என்ற பெரிய கிரிக்கெட் மைதானம்  அதில் பங்கு பெருபவர்கள் பெரிய ஜாம்பவான்கள் தான்   அதற்கு  கேப்டன் திருமதி பவள சங்கரி   மிகத்  திறமையுடன்  டீம் மை கொண்டுச் செல்லும் கேப்டன் .கூடவே  உபதலைவர்கள் போஸ்டில் திருமதி காயத்ரி, திரு இளங்கோ, திருமதி சாந்தி. இந்த வல்லமை  எழுத்து மைதானத்தை முதலில் நடத்திச்சென்றவர்    திரு அண்ணாகண்ணன்  .அவர் மிகவும் திறமை வாய்ந்த கேப்டன் . பல படைப்புகளைக் கொடுத்து எழுத்துலகில் ரன்களைக்  குவித்திருக்கிறார்.  பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவர் முதலில் சிபி .காம் sifi  .com  ல்  இருந்த போது என்னையும் எழுத்துலகத்தில்  சேர்த்துக்கொண்டார் . அப்போது ஆரம்பித்தது  தான்

    “நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்   “என்று  திரு கண்ணதாசன் அவர்களின் பாடலைப்போல்  நானும் அவர் போகுமிடமெல்லாம்  தொடர்ந்தேன்  . சி பி .காமுக்குப்பிறகு சென்னை ஆன் லைன் னில்  விடாமல் எழுதி வந்தேன்  .  அந்த மைதானத்திலும்  செஞ்சரி எடுத்தேன்’  அங்கு கட்டுரைகளுடன் எனக்கு ” வீடும் வாஸ்துவும் ” என்பதைத்தொடராக எழுத வாய்ப்பும் வந்தது  .பின்  அவர் “வல்லமையை ஆரம்பித்தார்  .  நானும்  இங்கு தொடர்ந்தேன் இந்த வல்லமை என்ற மைதானம் ஆரம்பித்திலிருந்தே  தொடர்ந்து  பல  மேதைகள்  ,சேர்ந்து  திறமையாக விளையாட   நானும்  ..இவர்களுடன் சேர்ந்து  பல கற்றும் வருகிறேன் என் பங்கும் இதில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது  இந்த மைதானத்தில் இந்தக்கட்டுரை  என்னுடைய நூறாவது ரன் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சிதான்

    இந்த நூறு என்ற நம்பருக்கு மிகவும் சக்தி உண்டு  . கிரிக்கெட் விளையாடும் போது 95 ரன்  தாண்டியவுடனேயே எல்லோருக்கும் ஒருபுது உற்சாகம் வந்துவிடும் பேட்ஸ் மேனுக்கும்தான்  ….பின்  அவன் மிகவும் கவனமாக ஆடிநூறைத் தொட்டவுடன்   மக்களிடையே கரகோஷம்  எழும் .அவனும் தன் மட்டையைச்சுழற்றி நன்றி தெரிவிப்பான் இதுவே நூறைத் தாண்ட  எல்லாம் நார்மலுக்கு வந்துவிடும்   இனி  அடுத்த  ஐம்பதும்   பின் நூறும் தொடும்போதுதான்   அந்த உற்சாகம் திரும்பும் .இதுவே  சினிமாவுக்கும் சொல்லலாம்  நூறாவது நாள் சினிமா ஓட  அது பெரிய விளம்பரம்  ஆகிவிடும்   நாடகமோ வேறு நடனமோ எல்லாமே நூறு நாட்கள்  தொட அதற்கு தனி மவுசு வந்துவிடுகிறது  ,நியூமரலாஜியில் 100 என்றால்  மிகவும் ஒழுங்குமுறை  எனலாம்  ஆங்கிலத்தில்  perfection . .100 ல்   முதலில் இருக்கும்  1  என்பது சூரியனைக்குறிக்கும்   சூரியன்  எப்போதுமே தன் வேலையை  மிகவும்  சரியாக அப்பழுக்கில்லாமல் செய்து வருவான்  . நம்பர் ஒன்று என்றாலே தனி பராக்கிரமம் , .சக்தி , தன்னம்பிக்கை,  எதையும் சாதிக்கும் திறமை , தலைமை வகித்தல்  . தனித்தனமை  ,ஒருவருக்கும் கிழ்ப்படியாத குணம்  . தைரியம்  ,மனோபலம்  என்று பல குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்  . இத்துடன்  இரண்டு சைபர்  சேர  நூறாகிறது .

    சைபர் என்றாலே சூன்யம்  …. சில தியானத்தில்  சூன்ய மெடிடேஷன்  என்று ஒன்று உண்டு  .அதில் எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி மனதை ஒரு சூன்யமாக  ஆக்கி தியானம் செய்யவேண்டும் .இது மிகவும் கஷ்டமான ஒன்று  ஒரு 15 நிமிடங்கள் செய்வதற்குள் பாம்பு நுழைவதுப்போல்  ஒரு எண்ணம் வந்து நுழைந்து கொள்ளும் . இந்த சூன்ய மெடிடேஷனின் கருத்து   உபனிஷத்தில்  வருகின்ற

    “ஓம் பூர்ணமித  பூர்ணமிதம்  பூர்ணாத்  பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய  பூர்ணமாதாய  பூர்ணமேவாவசிஷ்யதே  ” .…………….என்பதுடன்  ஒத்துப்போகிறதோ என்று எனக்குத்தோன்றுகிறது
    .
    நாம் தியானிக்கும் போது  நாம் ஆக்ஞா சக்கரத்தில் கவனம் செலுத்துகிறோம் இந்த இடத்தை அவிமுகிதம் என்று சொல்வார்கள். இதனின் மூல இயந்திர வடிவம்  சைபரைப்போன்ற வட்டமே .   மூலதெய்வம் சதாசிவம் ,  தேவி மனோன்மனி இதைப்பார்க்கும் போது  100 என்ற எண்ணிற்கு நிறைய சக்தி இருக்கிறது எனத்தோன்றுகிறது

    நூறு என்ற எண் மிகவும் எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதால் முக்கியமான போலீஸ் அழைக்கும் நம்பராக அது உள்ளது . பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் இந்த நூறு புகழைச் சேர்க்கிறது நூற்றுக்கு நூறு கணக்கில்  . என்றால்  அரசின் பரிசும் கிடைக்கிறதுபணத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் நூறு பைசஈ ஒரு ரூபாய் என்றும்   .நூறு பத்துரூபாய்  ஆயிரம் என்றும் நூறை  ஆரம்பமாக வைத்தே    ஒரு பூஜ்யம் சேர்த்தபடி  ஏற்றிக்கொண்டே போகிறோம்  . உடம்பில்  வெப்பமும் நூறு வரை ஏற்றுக்கொள்கிறது .  அது தாண்டிவிட்டால் சுரம் என்று படுத்துவிடுகிறோம்  டெசிமல்  கணக்கிலும் நூறு தான் முக்கிய பங்கு வகிக்கிறது

    கோர்ட்டிலும்  “நான் பேசுவது நூற்றுக்கு நூறு உண்மை   ‘என்று ஆரம்பிப்பதையும் பார்க்கிறோம் .பண்டிகை அல்லது திருவிழாநாட்களில் நாம் பெரியவர்களை  வணங்க  அவர்களும் நூறாண்டு  நோய் நொடியில்லாமல் வாழவேண்டும் என்று வாழ்த்துவார்கள்

    நூறாண்டு வாழ்ந்தவருக்கு கனகாபிஷேகம் செய்வதையும் பார்க்கிறோம் இது போல் நூறுக்கு இருக்கும் சிறப்பை அடுக்கிக்கொண்டே போகலாம்

    இப்போது என் கதைக்கு நான் வருகிறேன் ……. வல்லமையில்  பெரிய பெரிய எழுத்தாள   மேதைகளுக்கு நடுவில்  நானும் புகுந்து  டொக் .டொக்கென்று ஒவ்வொரு ரன்னாக எடுத்து அவுட்டாகாமல் .இடத்தைப்பிடித்து பின் பல மேதைகளிடமிருந்து பாடங்கள் ,அனுபவங்கள் பெற்று பின்  , எழுத்தே  என் மூச்சு என்ற  நிலைமையை  அடைந்துள்ளேன்  விளையாட்டில்    .ஒவ்வொரு சமயம் சௌத்தா  அல்லது சக்காவும்   எடுத்து ……. ஓ ……தில்லி பழக்கம் வந்துவிட்டது .அதான் ஹிந்தி   வந்துவிட்டது. அதான் நாலு ரன்களும் சிக்சரும்  ……அடித்து   அதற்குத்தகுந்த பாராட்டும் பெற்று    இன்று நூறாவதைத் தொட்டிருக்கிறேன்  .கிரிக்கெட் மைதானத்தில் சதம் அடித்தவருக்கு எப்படி கைத்தட்டல்கள் விழுமோ அது போல பெரியவர்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்  சிலர் வயதில் என்னைவிட சிறியவர்கள் ஆனலும் எழுத்துலகில் அவர்கள் பெரிய ஜாம்பவான்களாக இருப்பதால் அவர்களும் என்னை வாழ்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன் . ஒவ்வொருத்தர் எத்தனையோ சாதனைகள் செய்து வரும் போது இது என்ன பெரிய சாதனையா என்று என் மனம் என்னைக்கேட்டாலும்  வாழ்த்துகள் என்பதில் இருக்கும் பாசிடிவ் அலைகள் என் கனவை நனவாக்கும் என்ற நம்பிக்கையினால் இதை எழுதினேன்

    நான்  இதுவரை எழுதி   வரும் குழுமங்கள்    ..திரு  ஆகிரா நடத்தும் மழலைகள்  {,குழந்தைகளுக்கு எழுதுவதே ஒரு தனி ஆனந்தம் தான்}   இல்லம் பிரவாகம்,  முத்தமிழ்   பண்புடன்  நிலாச்சாரல்  தமிழமுதம் அன்புடன் .ரத்னமாலை  ,தமிழ்வாசல்

    இதுவரை எழுதிய படைப்புகள் கூடிய சீக்கரம்  ஆயிரம் தொட்டுவிடும்    ஆயிரம் எப்படியாவது  முடிக்க வேண்டும் என்ற ஆசை  தான்    .  அதற்கு என் உடல் ஒத்துழைக்க வேண்டும்

     என் கட்டுரைகள் வந்த பத்திரிக்கைகள்  , அவள்விகடன் , ஆனந்தவிகடன் , மங்கையர் மலர்  ,ஞான ஆலயம்  ஓம் சரவணபவ  , ஷண்முக கவசம்  வெற்றிநடை. .

     ஒவ்வொருத்தர் எத்தனையோ சாதனைகள் செய்து  உச்சியைத்தொட்டிருக்கிறார்கள் . அவர்கள் முன்னால் நான் சிறு துளிதான் ஆனாலும்  என் கடைசி மூச்சு வரை நான் இந்த மைதானத்தில்  பங்குப்பெற்று என் பங்கை திறம்பட  செயலாற்ற வேண்டும்  என்பதே என் ஆசை . அதற்குத்தகுந்த  மன வலிமையும் உடல் வலிமையும் அந்த பரமேஸ்வரன் தான் அளிக்க வேண்டும்

    2002 ல் ஆங்கிலம் எழுதி வந்த நான்  2006 ல் தமிழ்க் குழுமத்தில் முதன்முதலாக கால் வைத்தேன்  ஆறு வருடங்கள் ஓடிவிட்டன

    இந்த நேரத்தில் என்னை ஊக்கிவித்த  பலர் என் கண் முன் வருகிறார்கள் . முதன் முதலில் என்னைக்கணினியி ன்  முன்னால் தமிழில் எழுதவைத்து  ஆதரித்து என்னை மேலும் மேலும்நம்பிக்கையுடன்  எழுத வைத்த  ” நம்பிக்கை” என்ற குழு நடத்தி வந்த திரு பாசிடிவ் ராமாவுக்கு என் மனமார்ந்த நன்றி .

    முத்தமிழ்  நடத்தி வந்த திரு மஞ்சூர்ராஜா     திருமதி விஜி  ,எனக்கு ஊக்கம் கொடுத்து வாழ்த்திய குருஜி திரு காழியூரார் .  எனக்கு சகோதரராக இருந்து ஆதரித்த  திரு தமிழ்த்தேனீ திரு ஆகிரா திரு இன்னாம்புரான்ஜி  .திருஶ்ரீனிவாசன் ஜி டாக்டர் சங்கர்குமார்ஜி  சிங்கை குமார்ஜி  விக்ஞானி திரு ஜயபாரதன் ஜி  ,திரு அப்துல் ஜப்பார் ஜி   திரு கவியோகி வேதம்ஜி திரு வேந்தன்  திரு திவாகர் ஜி  திரு சிவசிவா திரு சபேராஜி   திரு நடராஜன்   யாவருக்கும் என் நன்றி என் அன்பு மகனாக இருந்து  என்னை ‘சென்னை ஆன் லைன்.’ ” வல்லமை” யில் எழுத வாய்ப்பளித்த  திருஅண்ணா கண்ணனுக்கும் நன்றி  .

    இல்லத்தில் இருக்கும் மூத்தவரான  திரு பர்வமணி அவர்களுக்கும் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன் அழகியைக் கண்டுப்பிடித்த  என் மகனான திரு விஷி என்ற விசுவநாதனுக்கும்  என் நன்றி  இசைக்கவிஞர் திரு ரமணன் ஜி யின் மனதைத்தொடும் பாடல்கள் எனக்குக் கவிதை எழுத  ஒரு தூண்டுகோலாக அமைந்தது .அன்பு சகோதரர் திரு ரமணனுக்கு  என் நன்றி .

     திரு பென்னேஸ்வரன் தமிழ் வாசலையும் திறந்து வைத்ததால் அதில்  எழுதும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது மிக்க நன்றி

    முழுவதும் ஆன்மீக மலராக மலர்ந்து நிற்பது  ரத்னமாலா  .அதை நடத்தி வருபவர் என் சகோதரர் டாக்டர் சங்கர்ஜி என் ஆன்மீகம் வளர அதுவும் ஒன்று   மிக்க நன்றி

    என் அன்பு தோழிகள் திருமதி  ஷைலஜா  திருமதி கீதா சாம்பசிவம்  திருமதி மீனாமுத்து, அன்பு சகோதரி திருமதி சீதாலட்சுமி . திருமதி ஜயஶ்ரீ சங்கர் ,திருமதி காயத்ரி யாவரையும் பாசத்துடன் நினைவுகொள்கிறேன்  மிக்க நன்றி

    திரு சுரேஷ் என்ற என் மகன் பிளாக் போடும் முக்கியத்துவத்தை என்னிடம் கூறியதால்  எனக்கும் ஒரு பிளாக் ஆரம்பிக்கும் எண்ணம் ஏற்பட்டது  அதற்காக நான் டாக்டர் சிவசங்கரை நாடியபோது   அவர் எனக்கு மீராம்பிகா என்ற பிளாக்கை ஆரம்பித்துக்கொடுத்தார் அவரும்  என் அன்பு மகன் தான் அவருக்கும் என் நன்றி .அத்துடன் திரு பாலமுரளி மேலே என் பிளாக்கில் படங்கள் போடும் விதத்தைச் சொல்லிக் கொடுத்து எனக்கு உதவினார் நன்றி பாலா

    என்னை எழுத்துலகில் மேலும் எழுத தூண்டுகோலாக இருந்து  உற்சாகப்படுத்திய மகள்கள்  திருமதி பவளஸ்ரீ  திருமதி  ஜயந்தி , திருமதி விஜி   திருமதி காந்திமதி  ; நிலச்சாரல் நடத்திய திருமதி நிர்மலா  யாவருக்கும் என் நல்லாசிகளுடன்  நன்றி. திரு ஆசீப் மீரான் .திரு உமாநாத் ,திரு பாலமுரளி ,திரு வேணுகோபால், யாவருக்கும் என் நன்றி

    இந்த எல்லா குழுமத்திலும் பல சகோதரர்கள் ,பல மகன்கள் .பல மகள்கள் என்னை ஆசையுடனும் பாசமுடனும் அம்மா என்று அழைத்து  பேசும் போது மனம் நெகிழ்ந்து போகிறது  வாழ்க குழுமங்கள் .

    ஒற்றுமையுடன் ஆக்கப் பாதையில்  எல்லா குழுமங்களும் நன்கு சிறப்பாக  நடக்க என் பிரர்ர்தனையுடன் கூடிய   நல்லாசிகள் .

    அன்புடன்  விசாலம்

    Share
  • “யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்…” [3வது தொகுப்பு]: [1] :வாலி வதைப் படலம்

     

    இன்னம்பூரான்

    இன்று மின் தமிழில் ‘இராமர் வாலியை வதம் செய்தது ஏன்?’ என்ற இழையை படித்தேன். நான் தனி இழை தொடங்கக் காரணம், நான் முன் வைக்கும் கருத்துக்களுக்கும், தவணை முறை தொடருக்கும் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ளவே. திரு. தேசிங்கு அவர்களுக்கும், திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.

    திரு.தேசிங்கு அவர்கள் இன்று சுட்டிய அவருடைய வாலி வதத்தை பற்றிய கட்டுரையை பலமுறை படித்தேன். வேத வரலாறு என்று அவர் எதை குறிக்கிறார் என்று அறிந்திலேன். அவர் ராமனின் செயலை நியாயப்படுத்தி கூறிய அலசல்களை கூர்ந்து, கவனித்துப் படித்தேன். அவை ஒருதலைபக்ஷமாக இருப்பதாக கருதுகிறேன். ஆத்திகர்களில் சிலர் இராமன் செயலில் நியாயம் இல்லை என்று சொல்லக்கூடும். நாத்திகர்களில் சிலர் வாலியின் கூற்றில் உண்மை இல்லை என்று சொல்லக்கூடும்..

    திரு. ஹரிகிருஷ்ணன், அந்த கட்டுரையின் தொடர்பாக குறிப்பிட்ட http://www.heritagewiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Vali என்ற அவருடைய கட்டுரை தொகுப்பை ஏற்கனவே பலமுறை படித்திருக்கிறேன். இன்றும் அவற்றை படித்தேன். திரும்பத்திரும்ப படிக்க வேண்டியவை. அதை செய்வேன்.

    மேற்படி பின்னணியில் என் கருத்துக்கள் சிலவற்றை முன் வைக்கத் துணிந்தேன். இது ஆரம்ப கட்டம். மேலும் சொல்ல விழைகிறேன். பொறுத்தாள்க. நான் வால்மீகி ராமாயணத்தின் பக்கம் செல்லவில்லை. எனக்கு வடமொழியை இணைய தளத்தில் படிப்பது கடினம். படித்து குறியீடுகள் இடுவதும் கடினம். பொறுத்தாள்க. நான் கம்பராமாயணத்திலிருந்து மேற்கோள்கள் காட்டி, என்னால் இயன்றவரை நடுவு நிலையிலிருந்து, வாலி வதத்தை பற்றி எழுத விழைகிறேன்.

    இன்று ஒரு குறிப்பு மட்டும், இராமனின் திட்டம் பற்றி: தன்னுடைய தகனத்துக்கு பிரதியுபகாரமாக, முன் கூட்டி சொல்லப்பட்ட, கபந்தனின் ஆலோசனையை பற்றி இப்போதைக்கு நான் எழுதவில்லை.

    கம்பநாடரின் இராமகாதை வால்மீகி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பும் இல்லை; தழுவலும் இல்லை. மு.வ. அவர்கள் குறிப்பிட்ட மாதிரி, இது ஒரு புது காப்பியமே. ( இலக்கிய வரலாறு 1972: 2006: பக்கம்:192). வால்மீகியின் சீதை வேறு; கம்பனின் சீதை வேறு என்கிறார், டி.கே.சி. (ரசிகமணி கட்டுரைக் களஞ்சியம்:2006: காவ்யா: பக்கம்: 65). கம்பனின் அங்கதன் வால்மீகியின் அங்கதன் அல்ல. கம்பரின் ‘மாயாசனகப்படலம்’ வால்மீகியில் இல்லை. இரணியப்படலமோ கம்பரின் தனிப்படைப்பு. (மு.வ. இ.வ. பக்கம்195). அவர் சுட்டியபடி, ‘இந்த வேறுபாடுகள் கதைச்சுவையையும், பண்புச்சிறப்பையும், கற்பனை வளத்தையும் கூட்டுவிக்கின்றன.’

    வாலி வதைப்படலம் கம்பரின் வாதத்திறனுக்கும், நடுவு நிலைக்கும் நிகரற்ற எடுத்துக்காட்டு. கம்பரை பற்றி நிறைய எழுத ஆர்வம். கை ஒத்துழைக்க மறுக்கிறது. அதனால், சிறிய இடுகைகளை, தவணை முறையில் தர அனுமதியுங்கள், இடையில் தாராளமாக பின்னூட்டங்கள் தரலாம். தயை கூர்ந்து, திசை மாற்ற வேண்டாம், இந்த தொடர் முடியும் வரை.

    நான் முன் வைப்பது:

    ஶ்ரீராமசந்திர மூர்த்தி வாலியை வதம் செய்தது தர்மம் இல்லை. கம்பர் இந்த படலத்தை படைத்தபோது மிகவும் சங்கடப்பட்டிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர் இராமனுக்கு வாதத்திறன் அளிக்கவில்லை. வாலி அடிப்பட்டு வீழ்ந்த பிறகு, அவனுக்கும், இராமனுக்கும் நடந்த வாதம், இலக்குவனின் குறூக்கீடு உள்பட, 56 பாடல்களில் உள்ளன. அவற்றுக்கு, பிறகு, வருகிறேன்.

    சுருங்கச்சொல்லின், வாலியின் வதை திட்டமிடப்பட்டதே, இராமனால், யாதொருவித பிரமேயம் இல்லாமலே.  சுக்ரீவனை அழைத்து,

        

    அவ் இடத்து, இராமன், நீ

          அழைத்து, வாலி ஆனது ஓர்

    வெவ் விடத்தின் வந்து போர்

          விளைக்கும் ஏல்வை, வேறு நின்று

    எவ்விடத் துணிந்து அமைந்தது; என்

          கருத்து இது’ என்றனன்;

    தெவ் அடக்கும் வென்றியானும்,

          ‘நன்றிஇது’ என்று சிந்தியா. [3944]

    ‘நீ வாலியை வலியப் போருக்கழைத்து வா. நீங்கள் சண்டை போடும்போது, நான் வேறிடத்திலிருந்து அம்பு தொடுப்பேன், இது என் கருத்து” என்கிறான். அவனும் ‘ஆமாஞ்சாமி’ போடுகிறான்.

    இது தகுமோ? இது நியாயமோ? இது தர்மமோ? இது அடுக்குமோ?

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    30 10 2012

    Share
  • “யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்…” [3வது தொகுப்பு]: [1] :வாலி வதைப் படலம்

     

    இன்னம்பூரான்

     

    வாலி மோக்ஷம் மிகவும் உருக்கமான நிகழ்வு; ஷைலஜாவின் கருத்தை அசைப்போட்டுக்கொண்டே படுத்தேன், நேற்றிரவு. இன்று அதிகாலை தரிசனம்: ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகம். எழுதத்தொடங்கினால், ஶ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் அரிய தமிழ் உரை ஒன்று வந்து போனது. (இன்று இணையதள சிக்கல்கள், சில.) ராமாயணம் என்றுமே அதிசயப்படுத்தும். அநேக வீடுகளில் தினந்தோறும்  பக்தியோடு ராமாயண படனம் உண்டு. மனம் கலங்கினால், ராமாயனத்திலிருந்து ஏதோ ஒரு பக்கம் எடுத்து படித்தி ஆறுதல் நாடுவதும் உண்டு.

    தொடக்கத்திலிருந்தே வாலி ராமபக்தன். அவனுக்கு பகையாக ராமன் -சுக்ரீவன் உடன்படிக்கை செய்ததை எப்படியோ தாரை ‘…நெடுந்துணை உடைமையால்…’ என்று மோப்பம் பிடித்து விடுகிறாள். வாலியை ‘துன்னிய அன்பினர் சொல்லினார்…’ என்று மென்மையாக எச்சரிக்கிறாள். ராமபக்தனுக்கு சினம் பொங்கியது. பெண்புத்தி பின்புத்தி என்று சினந்தான். ‘…வாலியின் கண் வரும் தீயிடை, தன் நெடுங்கூந்தல் தீகின்றாள்…’ என்று கம்பன் சொல்கிறார். கோபம் கொப்பளிக்க, கொப்பளிக்க, வாலியின் கண்களிலிருந்து தீ பறக்கிறது. அதில் கருகிப்போகிறது, தாரையின் கூந்தல். ஐயகோ! ஒரு பெண்ணின் கூந்தல் கருகினால், அது தீநிமித்தம் அல்லவோ!

    ‘…உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம், இழைத்தவர்…’, ‘இருமையும் நோக்கும் இயல்பினான்…’, அவனுடைய ‘…ஆறுடை தர்மம் தன்னைத்தான் தவிர்க்குமோ? தன்னைத்தான் அரோ!..’, ‘…புன்தொழில் குரங்கோடு புணரும் நட்பனோ?…’, ‘…அம்பு இடை தொடுக்குமோ? அருளின் ஆழியான்…’ என்றெல்லாம் இராமனின் நற்குணங்களை பாராட்டி, தாரைக்கு சமாதானம் கூறுகிறான். இராமபாணம் துளைத்து வீழ்ந்த பின், ‘…இதுவும் தான் ஓர் ஓங்கு தர்மமோ?…’ என்ற வினா அவனுள் எழுகிறது. அப்போது தான் வாலிக்கு ஆண்புத்தி பின்புத்தி என்ற தெளிவு பிறக்கிறது.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    31 10 2012

    Share
  • விஜயகாந்திற்கு எதிராக போராட்டம் வலுக்கிறது

     

    செல்வரகு

    தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக அதன் மாநில தலைவர் DSR சுபாஷ் தலைமையில் கொட்டும் மழையில் இன்று 30-10-12 வள்ளுவர் கோட்டம் முகப்பில்  டிவி நிருபரை அவதுறாக பேசிய தே .மு .தி .க தலைவர் விஜயகாந்தை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது .பத்திரிக்கையாளர்கள்

    ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, மேலும் சாலை மறியலும் நடைபெற்றதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது .அங்கு பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த போலீசார் தலையிட்டு கூட்டத்தை கலைத்தனர் .இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு கைது செய்யாவிடில் மேலும் போராட்டம் தொடரும் என்று TUJ மாநில தலைவர் DSR சுபாஷ் அறிவித்துள்ளார் .

     

     

     

     

     

     

    Share
  • அக்டோபர் (2012) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

     

    அன்பு நண்பர்களே,

     வணக்கம். ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்து வரும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிகஅவசியமாகிறது. தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறோம். தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் ஐக்கியா தொண்டு நிறுவனர் திரு வையவன் அவர்களுக்கும், சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வரும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதோ சென்ற அக்டோபர் மாதத்தின் போட்டி முடிவுகள். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறும்  விடாமுயற்சியில் இருப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே. தொடர்ந்து உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.

    அன்புடன்
    பவள சங்கரி

    இம்மாதம் முப்பத்தியோரு கதைகள். வல்லமை பிராபல்யமாகி வருகிறது. இந்த மாதக் கதைகளில் மணி ராமலிங்கம் அவர்கள் எழுதிய நோ பால் சிறந்த கதையாக எனக்குப்படுகிறது. இதில் என்னைக் கவர்ந்தது நம் இன்றைய வாழ்க்கையின் முக்கிய கவர்ச்சிகளில் ஒன்றாகிவிட்ட கிரிக்கெட் விளையாட்டும் அதில்  செலவாகும் நேரமும் வாழ்க்கை அனுபவமும்  குறிப்பிடத்தக்க அளவில் இருந்த போதிலும் அது என்னவோ ஒரு விளையாட்டு, அது அவ்வளவு முக்கியமில்லை போல எழுத்தில் அது பிரதிபலிப்பதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் அதற்குரிய அழகுகளோடுதான் இருக்கிறது. குழந்தைப் பருவம், பள்ளி வாழ்க்கை,  போலத் தான் விளையாட்டுப் பருவமும்.  அங்கும் மனித உறவுகள் உண்டு, மனிதனின் பலங்களும் பலவீனங்களும் பங்கு கொள்கின்றன. அது ஒரு கால கட்டம் இருப்பினும் பின்னர் அந்தக் கட்டம் முடிந்து திரும்பிப் பார்க்கும் போது கடந்த உறவுகளும் அதன் சந்தோஷங்களும் மனதை பின்னும் ஒரு nostalgia வோடு பாதிக்கின்றன.  மணி மிகத் திறமையாக, convincing -ஆக அந்த அனுபவங்களையும் பின்னர் ஒரு ஏக்க உணர்வோடு திரும்பிப் பார்த்தலையும் எழுதியுள்ளார். யாரும் தொடாத அனுபவ தளம். வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆக, அவருடைய நோ பால் தான் எனக்கு இந்த மாதச் சிறந்த கதையாகத் தோன்றுகிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    வெ.சா.

    சென்ற மாத போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் பட்டியல் இதோ:

    1. நீறு பூத்த நெருப்புகள்

    2. நாணயம்

    3. தனியொருவனுக்கு உணவில்லையெனில்!

    4. கொள்ளி எறும்பு

    5. மாற்றான் தோட்டம்

    6.சுழல்

    7. தாசரி

    8. ஒரு முடிவின் மறு பக்கம்

    9. அம்மணி

    10. நாக்பூருக்குப் போ!

    11. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

    12. நோ-பால் – No Ball

    13. கூவமும் கங்கைதான்

    14. ஆண்மீக இச்சை..! (இது எழுத்துப் பிழை அல்ல….மனத்துப் பிழை…)

     

    15. பெட்டைகள்

    16. அம்மாவுக்குக் கடிதம்!

    17. சராசரிகள்

    18. நாத்திகம்

    19. ஈரத்துணி

    20. பேச்சு

    21. வந்து சொல்றேம்மா…

    22. இது என் சொத்து

    23. கனவுச் சாவி

    24. அன்பே தெய்வம்

    25. கோபம்.

    26. மாற்று(ம்) திறனாளி

    27. சொர்க்க வாசல்

    28. மாத்தி யோசி

    29. மௌன ராகம்

    30. நீ என்றுமே என் மகன்தான்

    31.ரகசியம்

    அக்டோபர் மாதப் போட்டியில பரிசை வென்றுள்ள  திரு மணி ராமலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து முயற்சி செய்ய வாழ்த்துக்கள்.

     

    Share
  • திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-17)

     

    விஜய குமார்

    சிங்கை

    பொதுவாக சிங்கப்பூர் என்றவுடனே வானுயர கட்டிடங்கள், பரபரப்பான மக்கள் கூட்டம் – அப்படி இருந்தும் குப்பை கூளம் இல்லாத,  மேடு பள்ளம் கூட இல்லாத அழகிய சாலைகள், எங்கும் எதற்கும் ஒரு நெறிமுறையுடன் இருக்கும் மனிதர்கள் – ஏன் பஸ்ஸில் ஏறக் கூட வரிசையில் நிற்கும் காட்சிகளையே  பலரும் பார்த்திருக்க  கூடும்  – அதையே ரஜினி கமல் முதல் இன்றைய ஹிந்தி  படங்களும் எடுத்துள்ளார்கள்.

     இந்த அளவிற்கு சிங்கை மென்மேலும் முன்னேறி வருவதற்கு காரணம் என்ன – இங்கே இருக்கும்  ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் – சிங்கைக்கு ஃபைன் சிட்டி ( ஆங்கில fine – என்ற இரட்டை அர்த்தமுள்ள வாக்கியம் ) டி  ஷர்ட்டுகள் கூட விற்பனையில் உண்டு. அதில் நோ ஸ்மோக்கிங்  முதல் ஒரு பெரிய நோ பட்டியலே இருக்கும். ஆனால் உண்மையில் இவை – ஆங்கிலத்தில் காரட் அண்ட் ஸ்டிக் என்பார்கள் – பொதுவாக காரட் வேலை செய்வதில்லை -அப்போது ஸ்டிக் ரொம்ப தேவை. ஒரு தலைமுறையில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சமுதாயமே இப்படி மாற அதுவே காரணம். இப்படி ஒரு ரிசல்ட் வரும் என்றால் அந்த கடுமையான விதிகள் நன்மைக்கே – தி  என்ட்ஸ் டூ ஜஸ்டிஃபை தி மீன்ஸ் !

    இங்கே கரண்ட் கட் பொதுவாக ஆகாது. நான் இங்கு வந்த ஏழு  ஆண்டுகளில்  ஒரே ஒரு முறை சில நிமிஷங்கள் ஒரு பகுதியில் மட்டும் ஆனது என்று படித்தேன். அதற்கும் அந்த மின்சார வாரிய கம்பெனிக்கு மில்லியன் கணக்கில் அரசாங்கம் அபராதம் போட்டது. அதே போலத்தான் ரயில் சேவையும். தடைப்பட்டால் நடத்தும் நிறுவனத்திற்கு பெரிய அபராதம். ஒரு முறை பெரிய ஃபிளைஓவர் ஒன்று கட்டும் போதே இடிந்து விழுந்தது. அதற்கு அதைக் கட்டிய நிறுவனத்தின் மீது அபராதம் போட்டது அரசாங்கம் – அத்துடன் நிறுத்தவில்லை – அந்த நிறுவனத்தின் சி  இ ஓ சிறை செல்ல நேரிட்டது. ஏன்? தி பக் ஸ்டாப்ஸ் அட் தி வெரி டாப் !!

    விமான நிலையத்தில் இறங்கும் போதே நம்மை மயக்குகிறது சிங்கை. நம்ம மீனம்பாக்கம் – அழுது வடியும் முகங்கள், எச்சில் துப்பி எங்கும் கரைகள், உடைந்த நாற்காலிகள், இயங்காத மின்தூக்கிகள், கவுண்ட்டரில் பாதி தான் இயங்கும், அதிலும் கடமைக்கே என்று ” அசுர ” வேகத்தில் செயல்படும் அப்பிசர் , பிறகு நல்ல நாளாக இருந்தால் ஒரு மணி நேரம் – சுற்றிச் சுற்றி பொறுமையை சோதிக்கும் வரவே வராத பெட்டிகள்  ! பராசக்தி பாணியில் இதை எல்லாம் தாண்டி வெளியில் வந்தால்  டாக்ஸி ( அய்யோ டாக்ஸி !) – அதையும் மீறி வெளியில் வந்தால் மெயின் ரோட்டில் பிளைஒவர்  வேலைக்காகத் தடுப்புகள் !!!

    சிங்கையில் விமானத்தில் இருந்து  இறங்கி பத்தே நிமிடத்தில் வெளியில் ! அது மட்டும் இல்லை – சிரித்த முகத்துடன் நம்மை வரவேற்கும் முகங்கள் – ஆம் பத்து நிமிடத்தில் வெளியில் வந்து விடலாம் – லக்கஜ் உட்பட ! எங்கே போகிறாய் என்றே கேட்காமல் சவாரி ஏற்றும் டாக்ஸி டிரைவர் – அய்யோ, அங்கேயா ! திரும்பி காலியா தான் வரணும் என்றே பேச்சே இல்லை.  இல்லாத மீட்டர்க்கு மேல் காசு – இல்லை சென்னை சம்மர் சூட்டை தோற்கடிக்கும் மீட்டர் சூடு – என்றெல்லாம் பயப்படாமல்  – குளிர் சாதன பெட்டியும்  இயங்கும் டாக்ஸி !!  வெளியில் எங்கும் பச்சை பசேல் என்று செடி -கொடிகள்  சாலை ஓரம் என்றும் பூங்காக்கள்  !!!

    ஒரு முறை அப்படி வரும்போது எக்ஸ்பிரஸ்வேயில் எக்சிட் தவறி விட்டது – நாங்கள் எடுக்க வேண்டிய டர்ன் தாண்டி போனதை உணர்த்த ஓட்டுனர் ( அப்போது எனக்கு வழி தெரியாது !) – தானே சாரி – இப்போது நான் மீட்டரை நிறுத்தி விடுகிறேன் – இதற்கு மேலே நீங்கள் காசு கொடுக்கத் தேவை இல்லை என்று நான் ஒன்றுமே கேட்காமல் தானே செயல்பட்ட அவரை – பார்த்து ஒருமுறை என்னை நானே கிள்ளிப் பார்த்தேன். !!!

    இன்னொரு முறை குடும்பத்துடன் கடற்கரைக்குச் சென்றபோது மறதியில் விலை உயர்ந்த கைபேசியை டாக்சியில் மறந்து வைத்து  விட்டேன். இறங்கி சில நிமிடங்களில் தான் விட்டதை உணர்ந்தேன் . உடனே மனைவியின் கைபேசி மூலம் டாக்ஸி கம்பெனி புக்கிங்  செய்யும் எண்ணுக்கு அடித்துப் பேசினேன் – அவர் – எந்த நிற டாக்ஸி – அது எங்கள் நிறுவனத்து டாக்ஸி இல்லை – இருந்தாலும் நானே இந்தச் செய்தியை பதிவு செய்கிறேன் – எங்கே ஏறினீர்கள், எங்கே இறங்கினீர்கள் , சுமார் எத்தனை மணி இருக்கும் என்று கேட்டுக் கொண்டு – இதுதான் கம்ப்ளைன்ட் நம்பர் என்று சொல்லி வைத்தார். பத்தே நிமிடத்தில் மீண்டும் போன் – அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் இருந்து – இறக்கிவிட்ட டாக்ஸி ஓட்டுனர் மீண்டும் எங்களை விட்ட இடத்திற்கு வந்ததாகவும் அங்கே கூட்ட  நெரிசல் அதிகமாக இருந்ததால் நேரே காவல் நிலையத்திற்கு  சென்று கைபேசியை ஒப்படைத்து விட்டாராம். !! உடனே அங்கு சென்றேன். வணக்கம் சொல்லி அங்கே இருந்த காவலர் – இது உங்கள் கைபேசியா ? உங்கள் அடையாள அட்டை எங்கே ? என்று வாங்கி சரி பார்த்து – கைபேசி  சரியாக உள்ளதா ? சரி நீங்கள் எடுத்துப் போகலாம் என்றதும் …..ஆஹா , என்ன ஒரு சிஸ்டம் – அந்த டிரைவர் சன்மானத்துக்கு எதிர்பார்க்கவில்லை – அவன் அடுத்த சவாரி ஏற்றிக்கொண்டு போய்விட்டான் , காவலர் டீ காசுக்கு தலையை சொரிய  வில்லை !!! இதை எதற்காக பதிவு செய்கிறேன் என்றால் இவை ஏதோ இங்கும் அங்கும் அரிதாக நடக்கும் செயல் இல்லை – இந்த ஏழு வருட சிங்கை வாசத்தில் ஒரு பைசா – சென்ட் ! யாருக்கும் கிம்பளம் கொடுக்கவில்லை – யாரும் கேட்கவும் இல்லை – கரண்ட் கனெக்ஷன்  முதல் எங்குமே எவருமே தங்கள் வேலையை செய்ய எதையுமே எதிர்பார்க்கவில்லை  ! அவர்கள் வாழ்வியலில் நேர்மை கலந்து விட்டதன் உன்னதத்தை உணர்ந்தேன்.

    சரி இப்படி ஒரு அற்புத நகரில் எனக்கு பிடித்த இடம் என்ன. சென்தோசா , மிருகக்காட்சி சாலை , பறவைகள்  பூங்கா என்று பல இருந்தும், எனக்கு மிகவும் பிடித்த இடம் – மக்ரிட்சி என்ற ஒரு இடம். சிங்கையின் பிரதான  நீர் தேக்கப் பகுதி இது. இதில் இயற்கையை ரசிப்பவர்களுக்கு  சுமார் பதினைந்து கிலோமீட்டர் ட்ரெக்கிங் செய்ய பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு – அதில் சிலை நீர்த்தேக்கத்தை ஒட்டி – நீரின் மீதே பலகைகளைக் கொண்டு பரோட் வாக் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே சென்றால் மூன்று நான்கு மணிநேரம் அடர்ந்த காட்டிற்குள் போவது போல இருக்கும். சிங்கையின் நடுவில் இப்படி ஒரு இடமா என்று நண்பர்கள் பலரும் அசந்துபோய் விடுவார்கள். எங்கும் பச்சை பசேல் என்று நீண்டு நிற்கும் மரங்கள் – எட்டிப் பார்த்தாலும் கட்டிடங்களைப் பார்க்க முடியாது !!  அதுவும் நடுவில் இரண்டு குன்றுகளுக்கு நடுவில் கயிர் பாலம் ஒன்றை அமைத்து அதன் மேலே நின்று அந்த இயற்கைக் காட்சிகளை ரசிப்பது மிகவும் அருமை . நம்ம ஊரில் இப்படி ஒரு இடம் இருந்தால் குடிமகன்கள் என்ன செய்வார்கள் என்று இங்கே சொல்ல முடியாது!!

    அப்படி ஒரு முறை நண்பர் ஒருவரை கூட்டிச் செல்லும்போது – ஒரு வினோத நிகழ்வு !! பொதுவாக சிறு வயது முதலே  எனக்கு மிருகங்கள் அதுவும் பாம்பு , ஓநாய் , உடும்பு , முதலை என்றால் கொள்ளைப் பிரியம் ! அப்பா அம்மா சனிக்கிழமை தோறும் ஸ்நேக் பார்க் கூட்டிச் செல்ல வேண்டும்  என்று அடம் பிடிப்பேன், சற்று பெரியவன்  ஆனதும் அவர்களுக்கு தெரியாமல்  முதலைகள் பிடிக்க விட்டேக்கர் முதலைப் பண்ணை போவது உண்டு . ஒரு முறை வீட்டிற்கு வெளியில் வேலியில்   இருந்த பச்சைப் பாம்பை கையில் பிடித்து எடுத்து வர – அதை பார்த்து எங்கள்  பாட்டி பிடித்த ஓட்டம் !! அப்பப்பா !

    அப்படி இருக்க நாங்கள் எல்லோரும் பன்னிரண்டு கிலோ மீட்டர் ட்ரெக்கிங் முடித்து விட்டு கடைசி சிறு தொலைவு கார்  நிறுத்தும் இடம் செல்லும் வழியில் இங்கும் அங்கும் இருக்கும் இயற்க்கை காட்சிகளை – காய்ந்த இலை நடுவில் நிற்கும் செடி ஒன்றின் அழகு , இறந்த மரத்தின் மீது முளைக்கும் ஒரு வித அழகிய காளான் – என்று படம் பிடித்துக்கொண்டே வரும் போது – முதலில் சென்று கொண்டிருந்த ஜூனியர் திடீர் என்று ” அப்பா , பாம்பு பாம்பு என்று பாதையில் எதையோ கை காட்டினான் !!! அவன் காட்டிய இடத்தில நல்ல  நீல நிறத்தில் பைப் போல ஏதோ இருந்தது. அருகில் சென்று பார்த்தால் – இரு பக்கமும் ஆரஞ்சு நிறம் கொண்ட பாம்பு !!!!

    கொள்ளை அழகு அருகில் சென்று கைபேசி காமெராவில் படம் பிடித்தேன்.  ஆஹா என்று ஒரு கலர் – அதுவும் அந்த நீல நிறம் – என் டி  ராமாராவ் கிருஷணர் வேஷம் போடுவாரே அதே கலர் !!! தலை மற்றும் வால்  …மக்கள் திலகம் லிப்ஸ்டிக் வண்ணம் . இன்னும் அருகில் சென்று மீண்டும் படம் பிடித்தேன். அது எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆவல் அதிகமாக, அதைப் பிடிக்க கையை நீட்டினேன்.. அப்போது எனது அருமை மகன் – ” அப்பா வேண்டாம் அப்பா, நான் படித்து இருக்கிறேன் – மோர் கலர்புல் தி சினேக் மோர் வேநோமொஸ்  இட் இஸ் ! ” என்றான் .நான் அதிகம் டிவி பார்ப்பது ( கிரிக்கெட் இல்லாதபோது ) டிஸ்கவரி / நேஷனல் ஜியோகரபிக் …   ஜூனியர் என்னுடன் சேர்ந்து ஆர்வத்துடன் பார்ப்பார் !! அதனால் அவனுக்கும் இதில் மிகுந்த ஆர்வம் ஆனால் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவன்

    ஒரு பக்கம் மகனுக்கு முன் பாம்பை கையில் எடுத்து கொஞ்சம் பந்தா  காட்ட ஆசை , அதுவும் இந்த  பொடியன் சொல்லி நமக்கு அறிவா ? என்ற எண்ணம் வேறு – அப்போது தந்தைக்கு உபதேசம் செய்த குமரன் புண்ணியத்தில் – வேண்டாம் என்று ஏதோ சொல்ல – அப்படியே படம் மட்டும் எடுத்துக் கொண்டு நகர்ந்தோம் !! படத்தை கைதொலைபேசி கொண்டே முகநூலில் பகிர்ந்தேன் – உடனே நபர் ஒருவர் கூகிள் உதவியுடன் – அது மிகக் கொடிய மலையன் கோரல் பாம்பு என்றும் – அதன் விஷத்துக்கு மருந்தே கிடையாது என்றும் பின்னூட்டம்  போட்டார் !!  தலை அன்று தப்பியது பொடியன் புண்ணியத்தில்…..

    தொடரும்

     

     

     

    Share
  • ரகசியம்

    தமிழ்த்தேனீ 

    “அப்பா  எப்பவுமே  நீங்க சொல்றதைத்தான் நாங்க கேக்கணும்னு கிடையாது. நாங்களும் வளந்துட்டோம். நாங்க சொல்றதை  இனிமே  நீங்க  கேளுங்கோ.  அம்மாவை  திட்டிண்டே  இருக்காதீங்கோ”, என்று  கடுமையாகக் கூறிய மகன் தேசிகனை  அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தார்  ராமசேஷன்.

    வாழ்க்கையில்  எதற்குமே  கலங்காத, எந்த நேரத்திலும் நிதானத்தைக் கைவிடாத பொறுமைசாலி. எவ்வளவோ  கஷ்டங்களை  எதிர்கொண்ட போதும், ‘எப்பிடி இருக்கீங்க ?’  என்று கேட்கும்  அனைவரிடமும், “எல்லாப் ப்ரச்சனைகளோடும்  நலமாக இருக்கிறேன்” என்று புன்னகையுடன் கூறும் பக்குவம் உள்ள  ராமசேஷன், பதினெட்டு வயதில், 90 ரூபாய் சம்பளத்தில்  ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து உழைத்தவர்.

    சிறுக சிறுக சேர்த்து பெற்றவர்களின்  கடைசிக் காலம் வரை  அவர்களை  மனம் நோகாமல் இதமாக நடத்தி  தந்தையார்  இறந்த போதிலிருந்து கடைசீவரை  தன் தாயார் மைதிலியை யாரிடமும்  விடாமல்  தானே  பார்த்துக்கொண்டு, கிட்டத்தட்ட  நாற்பது ஐந்து  ஆண்டுகள் வாழ்ந்தாயிற்று, இது வரை  யாரிடமும்  எதற்காகவும் தலை குனிந்ததில்லை, யாசகம் கேட்டதில்லை, மனசாட்சி, தெய்வம் இரண்டைத் தவிர  யாரிடமும் பயப்படாமல் வாழ்க்கையை கழித்தாயிற்று.

    அந்தக் கஷ்டங்களின்  நிழல்கூட   மனவி குழந்தைகளைத் தாக்காமல், தானே  மொத்தப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டு இரு பெண் குழந்தைகளையும் ஒரு  பிள்ளையையும் தன்  சக்திக்கு மேலாக  படிக்கவைத்து  ஆளாக்கி, பெண்களுக்கு நல்ல இடத்தில்  திருமணம் செய்து, பிள்ளைக்கும் அவன் விரும்பிய பெண்ணையே  திருமணம் செய்து வைத்தார்.

    பொறுப்புகளை  வெற்றிகரமாக  செயல் படுத்திய  இவருக்கு திருமணமாகி, விளையாட்டு போல முப்பத்தாறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அவர் மனைவி மங்களத்துக்கு   தெரியும்  அவருடைய  அந்தரங்கம்.

    ராமசேஷனும் மங்களமும்  இருவரும் திருமணநாளில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை சேவித்துவிட்டு வருகிறோம்  என்று கிளம்பிப் போய் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து அவர்களின் பிள்ளை தேசிகனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டனர்.

    தேசிகன், “என்ன அம்மா தரிசனம் நன்றாக கிடைத்ததா? ரொம்ப அலையாதீங்கோ, வேளைக்கு  சாப்டுக்கோங்கோ” என்றான் கரிசனத்துடன்

    “சரிடா,  இதோ போனை அப்பாகிட்ட குடுக்கறேன்”, என்று மங்களம் போனை ரமசேஷனிடம் கொடுத்தாள். தேசிகன்  , “அப்பா,  அம்மாவை  ஜாக்கிரதையா பாத்து கூட்டிண்டுபோய்ட்டு வாங்கோ. அம்மாவை  ஏதாவது சொல்லிண்டே இருக்காதீங்கோ. கொஞ்சம் இதமா நடந்துக்கோங்கோ” என்றான்.

    ராமசேஷன், “சரிப்பா நான் உங்க அம்மாவை  ஒண்ணும் சொல்ல மாட்டேன், பத்திரமா கூட்டிண்டு வரேன், நீங்க எல்லாரும்  பத்திரமா இருங்கோ, என் பேரன் கிருஷ்ணனை பத்திரமா பாத்துக்கோங்கோ  ரெண்டு பேரும்” என்றார்.

    அவருடைய மருமகள் தொலைபேசியில் வந்தாள்.

    “அப்பா,  அம்மா, இங்கே நாங்க ரெண்டு[பேரும்  நன்னா இருக்கோம். உங்க பேரன் பண்ற லூட்டிதான்  தாங்க முடியலை. தாத்தா, பாட்டி எப்போ வருவான்னு நச்சரிக்கறான். சீக்கிரம் தரிசனத்தையெல்லாம் முடிச்சிண்டு  வாங்கோ”,  என்றாள்.

    “சரிம்மா  நாங்க  நாளைக்கு  வந்துடுவோம். சரி போனை வெச்சிடறேன்”, என்றார் ராமசேஷன். 

    எப்பவுமே  மரியாதைக் குறைவா பேசாத, அதிர்ந்து கூடப் பேசாத குணம். எல்லாருக்கும் நல்லது செய்யணும். நாட்டுக்கு ஏதாவது செய்யணும். எல்லா  உறவுக்காரங்ககிட்டேயும் அன்பா, பாசமா பழகற பிள்ளை. அதுனாலே  எல்லாருமே  ராமசேஷனும் மங்களமும் ரொம்பக் கொடுத்து வெச்சவா, நல்ல பிள்ளையைப் பெத்திருக்கா  அப்பிடீன்னு சொல்லுவா. அமெரிக்காவிலே  பெரிய கம்பனீலே பெரிய பதவீலே  இருக்கான்.

    எல்லாரும் சொல்றா ரொம்ப புத்திசாலி,  வேலையிலே  கெட்டிக்காரன், அப்பிடீன்னு. அவன் வேலை செய்யிற  கம்பனியிலேயே  இவனுக்கு  ரொம்ப மரியாதை தரா, எல்லாரும் சொல்லும்போது  ராமசேஷனுக்கு  ரொம்ப இதமாவே இருந்துது மனசு, அவருக்கு  அவருடைய  பிள்ளை தேசிகன்  நேர்மையான, நல்ல பிள்ளை  என்று தெரியும், பாசமான பிள்ளை. ஆனாலும்  கொஞ்ச நாளா  அவன்  மனசுலே  என்ன இருக்குன்னு  தெரிஞ்ச போது கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்துது. அவன்  என்ன புரிஞ்சிண்டான்னே  தெரியலை, ஒண்ணு புரியறது, இந்த மேல் சாவனிசம், பீமேல் சாவனிசம்  இதெல்லாம் படிச்சிட்டு,  பழங்காலத்திலே  புருஷாள்ளாம் எப்படி பொண்டாட்டியை அடிமையா  நடத்தி இருக்கா, எப்பிடி  இவ்ளோ மோசமா  நடந்துக்க அவாளுக்கு  மனசு வந்துது, இப்பிடியெல்லாம் அவர் காது பட பேசுவதைக் கேட்டிருக்கிறார்.

    அது மட்டுமல்ல  என் பொண்டாட்டியை  நான் எனக்கு சரி சமானமா  நடத்துவேன், அவளுக்கு உண்டான  மரியாதையை  குடுப்பேன், என்று கொள்கைப் பிடிப்போட நடந்துக்கிறான். இதெல்லாம் பெருமையாதான் இருக்கு.  ஆனா அந்தப் பிள்ளை  தேசிகன் கொஞ்ச நாளாவே  ராமசேஷன் சொல்றது சரியாவே இருந்தாலும்  பிடிவாதமா  அதை மறுத்துட்டு, “அப்பா   சும்மா இருங்கோ  உங்களுக்கு  ஒன்னும் தெரியாது, அம்மா  எது பண்ணாலும் குறை சொல்லுவேள் அது ஒண்ணுதான்  தெரியறது உங்களுக்கு”, அப்பிடீன்னு  ஒரு நாள் பேசினதக் கேட்டவுடனே  அதிர்ச்சியா இருந்தது ராமசேஷனுக்கு. 

    அம்மா  தப்பு பண்ணாலும், சரியா பண்ணாலும் அதுதான் சரின்னு  அம்மா பக்கம் பேசறதை வழக்கமா வெச்சிண்டு இருக்கான். ஒண்ணு புரியறது  அவன்  குழந்தை  இன்னும் இந்த வாழக்கையோட சூக்‌ஷுமத்தை  சரியா புரிஞ்சிக்காத  குழந்தை. அது மட்டுமில்லே, இதமா பேசி அவா காரியத்தை நடத்திக்கறவா யாரு, காரியம் நடக்கணும்னா, அதுக்கேத்த மாதிரி இச்சகம் பேசறவா யாரு,  எந்த ப்ரதிபலனும்  எதிர்பாக்காம  அவனோட நலத்தைப் பத்தி யோசிக்கறவா  யாருன்னு இன்னும் புரியலை,அம்மாவை பத்திரமா பாத்துக்கணும்  இல்லேங்கலை, ஆனா  நல்ல அப்பாவையும்  புரிஞ்சுக்கணும்.

    ஆனாலும் ஒரு திருப்தி.  தன்னோட காலத்துக்கு அப்புறம், அவன் அம்மாவை மனம் கோணாம  அன்பா நடத்துவான் அப்பிடீன்னு  ஒரு திருப்தி. அதுனாலே  அவன்கிட்ட ஒண்ணுமே  பேசாம  அப்பிடியே  விட்டுட்டு ‘சரிப்பா’ என்று சொல்வதை  வழக்கமாகக் கொண்டார் ராமசேஷன். அனாவசியமா, தேவையில்லாம அவன்கிட்ட பேசறதைக் கொஞ்சம்  குறைச்சிண்டார்.

    எதுக்கும் அவன்கிட்ட விவாதமே  வளத்துக்கறதில்லே  என்ற முடிவோட இன்னும் கொஞ்சம் இதமா இருக்க ஆரம்பித்தார் ராமசேஷன்.

    ஸ்ரீரங்கத்திலேருந்து  வந்து ப்ரசாதமெல்லாம் குடுத்துட்டு,  அங்கே கோயில் வாசலில் இருந்து வாங்கி வந்த  ரங்கநாதப் பெருமாள் பொம்மையை  பேரன் கிருஷ்ணணிடம் கொடுத்தார்.

    மறு நாள் அவருடைய பேரன்  கிருஷ்ணன் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் வழக்கமா  விளையாடற கார் பொம்மை  ஒரு பக்கம் உடைஞ்சு போயிருந்தது. அந்தக் கார் பொம்மையை  அவனிடமிருந்து  வாங்கி  மேலே வைத்துவிட்டு, “நேத்துதானே  சொன்னேன் இந்தக் கார் பொம்மையை எடுக்காதேன்னு? உங்க அம்மா எடுத்துக் குடுத்தாளா? இனிமே இந்தக் கார் பொம்மையை  எடுத்தே  அப்புறம் அடிச்சிருவேன் ” என்றான் தேசிகன். 

    கிருஷ்ணன்  அப்பாவை  நிமிர்ந்து  பாத்து,  “அப்பா  நானும் வளந்துட்டேன், எப்பவுமே  நீங்க சொல்றதையே கேக்கணும்னு சொல்லாதீங்க,  ஹும்….. அப்புறம் அம்மாவைத்  திட்டிண்டே  இருக்காதீங்கோ”  என்றான் தன் மழலை மாறாத குரலில்.

    என் மருமகள் களுக்கென்று சிரித்தாள்.

    ராமசேஷன்  ஒன்றும் சொல்லவில்லை! அமைதியாக  தேசிகனையே பார்த்துக்கொண்டிருந்தார். தேசிகன்  தலைகுனிந்தான்.

    (சுபம்)

    Share
  • நீ என்றுமே என் மகன்தான்

     

    தேமொழி

    மணி மாலை ஐந்து மணியை நெருங்கியது.  நார்மா அன்று வேலை செய்தவரை போதுமென்ற முடிவுடன் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு, கணினியை நிறுத்திவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டுக் கிளம்பினாள்.  “பை, பை, நார்மா, நாளை பார்க்கலாம்,” என்று புன்னகைத்தாள் உடன் பணி செய்யும் ரோஸ்.  மெலிதாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்  தலையை அசைத்துவிட்டு வெளியே வந்தாள் நார்மா.  குளிரூட்டிய கட்டிடத்தில் இருந்து வெளியே வந்ததும் கோடை வெயில் தகித்தது.  கார் நிறுத்துமிடத்தை நோக்கி நடந்தாள்.  மகளின் கல்விக்காக கடன் வாங்குவதற்கு வங்கியில் அவள் செய்த விண்ணப்பத்திற்கு நாளை முடிவு தெரிந்துவிடும் என நினைத்துக் கொண்டாள்.  அவள் கணவன் கார்லின் நம்பிக்கைத்ரோகம் இந்த இரண்டு மாதங்களில் அவள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது.

    காரை நெருங்கிய நார்மா கதவைத் திறந்தவண்ணம் வழக்கம் போல பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீடு செல்லத் தீர்மானித்தாள்.   அவளது வண்டி கிளம்பிய பொழுது  கைபேசி ஒலித்தது , அவளது வழக்கறிஞர் வில்லியம் அழைக்கிறான் எனத் தெரிந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, கதவின் கண்ணாடிகளை காற்று நன்கு வரும்படி இறக்கிவிட்டு நார்மா அவனுடன் பேசினாள்.  வில்லியமின் குரலின் தொனியில்  இருந்து அவளால் அவன் உணர்சிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவன் இயந்திரம் போலப் பேசினான்.

    “நார்மா, டி. என்.ஏ மரபணு சோதனையின் முடிவுகள் வந்துவிட்டன.  அதன்படி உன் மகன் டேனியல் உன் கணவன் கார்லின் மகன் அல்ல.”

    நார்மாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.  அதைத்தொடர்ந்து வில்லியம் சொன்னதன் பொருள் அவளுக்கு சுத்தமாக விளங்கவே இல்லை.

    “நார்மா, டேனியல் உன் மகனும் அல்ல.”  

    நார்மா பேச்சிழந்தாள், மறுமுனையில் அமைதியைக் கண்டு வில்லியம், “நார்மா, நார்மா” என்று பதறினான்.

    “சொல்லு வில்லியம், நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை” என்றாள் நார்மா.

    “நீ எங்கிருக்கிறாய் நார்மா?”

    “வேலையில்தான், இப்பொழுதுதான் காரைக் கிளப்பினேன், பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வரப் போகிறேன்.”

    “வேண்டாம், நீ வண்டியை ஒட்டாதே.  அங்கேயே இரு, நான் வந்து உன்னையும் பிள்ளைகளையும்  வீட்டுக்கு அழைத்துப் போகிறேன், உன்னுடன் பேச வேண்டும்.  குழந்தை பிறந்த பொழுது மாறி இருக்க வேண்டும்.  ஒரு கால் மணி நேரத்தில் வந்து விடுகிறேன். அங்கேயே இரு,” என்று அவள் மறுத்துப் பேச வாய்ப்பளிக்காமல் தொலை பேசி இணைப்பைத்  துண்டித்தான் வில்லியம்.

    அவன் கடைசியாகச் சொன்னதன் பொருள் இப்பொழுதுதான் நார்மாவிற்கு புரிந்தது.  டேனியல் அவள் மகன் இல்லை என்றா சொன்னான்?  ஐயோ, அதை நினைத்தால் அவள் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது.  டேனியலின் துறுதுறுப்பான முகம் கண் முன் வந்தது.  கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தும் அதற்கிடையே டேனியலின் புன்னகை நிறைந்த முகம் தெரிந்தது.  இது போன்ற செய்தியைக் கேட்கும் நிலைக்குத் தன்னைத் தள்ளிய கணவன் கார்ல் மீது கோபம் கோபமாக வந்தது.

    கார்ல், நகரில் உள்ள ‘சீமென்ஸ்’ என்னும் ஜெர்மன் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தான். மின்னணுவியல் கருவிகளின் வர்த்தகப் பிரிவில் அவனுக்கு வேலை என்பதால் பெரும்பாலும் ஜெர்மனியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கும் பிற நாடுகளுக்கும் சென்று வருவது கார்லின் பொறுப்பாக இருந்தது.  மாதத்தில் பாதிக்கும் மேலான நாட்கள் வேலை காரணமாக பயணம் செய்வதிலேயே கழிந்துவிடும். அவனது முன்னோர்கள் ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறியவர்கள்.  அதனால் கார்லுக்கு ஜெர்மன் மொழியில் நன்கு பேசவும் தெரியும் என்பது அவன் வேலையில் அதிவேகமாக வளர உதவியிருந்தது. நார்மா, நகரில் உள்ள கிறிஸ்டோஃபர் நியூ போர்ட் பல்கலைக் கழகத்தில் நிர்வாகப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

    அவர்களுக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டது. பிள்ளைகளில் பெரியவள் மகள் டெப்ரா ஒரு தனியார் பள்ளியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தாள்.  மகன் டேனியல் மகளை விட நான்கு வயது இளையவன்.   அவனும் டெப்ரா படிக்கும் அதே தனியார் பள்ளியில் நடுநிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.  நார்மாவிற்கு தனது பிள்ளைகளை புகழ் பெற்ற ‘ஐவி லீக்’ கல்லூரிகளில் படிக்க அனுப்ப வேண்டும் என்று விருப்பம்.  கார்லின் ஆண்டு வருமானம் ஆறு இலக்கங்களில் இருந்ததால் அவளது கனவினை செயல்படுத்த முடிந்தது.  புகழ் பெற்ற பல்கலைக் கழங்களில் படிக்க வைப்பதற்கு தயார்ப் படுத்தும் விதமாக பிள்ளைகளை நல்ல தனியார் பள்ளியில் சேர்க்க முடிந்தது. இதோ, அடுத்த ஆண்டு டெப்ராவிற்கு கார்நெல் பல்கலை கழகத்தில் சேர அனுமதி கிடைத்துவிட்டது.  எல்லாம் அவள் நினைத்த வண்ணம், திட்டமிட்ட வண்ணம் வாழ்க்கையில் நடப்பதாக நினைத்த பொழுது எதிர்பாராத அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வும் நடந்தது.

    எதிர்பாராதது என்று சொல்வது சரியாக இருக்காது.  அவளுக்கு கார்லின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தது.  சென்ற ஆண்டு பதவி உயர்விற்குப் பின்பு அவனது வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரித்தது.  வீட்டிற்கு வருவது குறைந்தது.  இருந்த நாட்களிலும் முன்பு போல பிள்ளைகளை அழைத்துக் கொண்டு புஷ் கார்டன், கொலோனியல் வில்லியம்ஸ்பர்க், விர்ஜீனியா பீச் என ஊர் சுற்றுவதைக் குறைத்துக் கொண்டான்.  திரைப்படம், உறவினர் வீடு, விருந்துகள் எனக் குடும்பத்துடன் எங்கும் செல்வதில் ஆர்வம் காட்டவில்லை.  இதைப்பற்றி நார்மா ஏதேனும் கேட்டால், தனது பதவி உயர்விற்குப் பிறகு பணிச் சுமை அதிகரித்து விட்டது, நிற்கவும் நேரம் இல்லை என்பது போன்ற பதில் வரும்.  அத்துடன் அவள் பொறுப்பாகக் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளையும் வளர்த்து வருவது அவனுக்கு வேலையில் கவனம் செலுத்த உதவியாக இருக்கிறது என்று நன்றி சொல்லுவான்.  மேலும் இதுபோன்று கடுமையாக உழைத்தால் விரைவில் ஜெர்மனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிர்வாகத் துறையில் பணி செய்ய நல்ல வாய்ப்பும் இருக்கிறது என்பான்.

    அவளுக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும், அவன் வீட்டில் இருக்கும் ஓரிரு நாட்களில் எப்பொழுதோ நடக்கப் போவதைப் பற்றி விவாதிக்க விரும்பியதில்லை.  அந்த சமயம் வரும் பொழுது அதைப்பற்றி கவலைப் பட்டுக் கொள்ளலாம் என அமைதியாக இருந்து விடுவாள்.  டெப்ராவின் பள்ளி நாட்கள் முடிய இரண்டு மாதங்கள் இருக்கும் பொழுது நார்மாவிடம் இருந்து திருமணமுறிவு கேட்டு கார்ல் நீதிமன்றம் வழியாக அனுப்பிய அறிவிப்பு கிடைத்தது. ‘அவளுடன் இனி வாழ விருப்பம் இல்லை’ என்பது அவன் கூறிய காரணம்.  வாழ்வின் மத்திய வயதில் சிலருக்கு வரும் ‘மிட் லைஃப்  கிரைசிஸ்’ என்னும் பைத்தியக்காரத்தனம் இவனுக்கும் வந்துவிட்டது போலிருக்கிறது என்று நார்மா எண்ணினாள். கடைசியாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு வீடு வந்து சென்றவன் அதுவரை மீண்டும் வீட்டிற்கு வராத காரணமும் புரிந்தது. இந்த முறை அவன் வீட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் போலாகிறது.

    முதலில் இதை அவள் பிள்ளைகளிடம் சொல்லி அவர்களது மன அமைதியைக் குலைக்க விரும்பவில்லை. கார்லைத் தொடர்பு கொள்ள அவள் செய்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை.  அவளது தொலை பேசி அழைப்பு, மின்னஞ்சல் என அனைத்தையும் தவிர்த்தான்.  இனி நீதி மன்றம் வழியேதான் அவர்கள் தொடர்பு என்பது போலிருந்தது அவனது நடவடிக்கை.  வேறு வழியின்றி கார்லுடன் பணியாற்றும், அவனுடன் பெரும்பாலான பயணங்களில் துணையிருக்கும் ஆண்ட்ரூவைத் தொடர்பு கொண்டாள்.  அவன் ஒருவாறு மென்று விழுங்கி சொன்ன செய்தி மேலும் அதிர்ச்சி அளித்தது.  கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே கார்லுக்கு ஜெர்மனியில் ஒரு தோழி இருப்பதாகத் தெரிந்தது.  அதை ஆண்ட்ரூ சாதாரண நட்பு என நினைத்ததாகச் சொன்னான்.  ஆனால், கார்ல் இப்பொழுது ஜெர்மனியில் உள்ள தலைமையகத்தில் வேறு வேலை ஒன்றைத் தேடிக்கொண்டு இப்பொழுது அந்தப் பெண்ணுடனேயே வசித்து வருவதாகச் சொன்னான்.  அவனுக்கு மீண்டும் அமெரிக்காவிற்கு வரும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை, திருமண முறிவிற்குப் பிறகு அந்தப் பெண்ணையே மணக்க எண்ணியிருக்கலாம் எனவும் சொன்னான்.

    இந்தப் பிரச்சனைக்கு வேறு முடிவில்லை என்பது நார்மாவிற்கு புரிந்தது. பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு தனது பள்ளிநாட்களில் உடன் படித்த, இப்பொழுது திருமணமுறிவு வழக்குகளை கையாள்வதில் சிறந்தவன் எனப் பெயர் வாங்கிய வில்லியமைத் தொடர்பு கொண்டாள்.  தானும் திருமண முறிவிற்கு சம்மதிப்பதாகவும், குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆதரவாக தந்தை என்ற முறையில் கார்லிடம் இருந்து மாதா மாதம் பணம் ஒழுங்காக வருவதற்கு ஏற்பாடு செய்வதை மட்டுமே அவள் விரும்புவதாகத் தெரிவித்தாள்.  கார்ல் மீது ஏற்பட்ட வெறுப்பில், அவன் செய்த நம்பிக்கைத் துரோகத்தில் கொதித்துப் போன நார்மாவிற்கு கார்லிடம் உதவித் தொகை எதிர்பார்ப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை.  ஆனால் டெப்ராவின் கல்லூரிக்காகும் கல்விச் செலவையும், டேனியல்லின் தனியார்ப் பள்ளி கல்வியையையும் அவளது வருமானத்தில் மட்டுமே சமாளிக்க முடியாது.  அத்துடன் தந்தையின் கடமையில் இருந்து கார்ல் எளிதாகத் தப்பி விடுவதையும் அவள் விரும்பவில்லை.  பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்திற்கு அவள் இதைச் செய்தே ஆக வேண்டும்.

    வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.  நீதிமன்றத்திற்கு வந்த கார்ல் நீதிபதியிடம் மகளுக்கு பதினெட்டு வயது தாண்டிவிட்டதால் அவளது செலவிற்கு இனி தான் பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்தான்.  நார்மாவின் வழக்கறிஞர் வில்லியம் நார்மாவின் காதில் மெதுவாக, “இதுதான் கார்லின் திட்டம் போலிருக்கிறது.  இது போன்று தவிர்ப்பதற்காகவே இதுவரைப் பொறுத்திருந்து, மகளுக்கு பதினெட்டு வயது தாண்டியதும் அத்துடன் கையைக் கழுவிக் கொள்வதற்கு திட்டமிட்டு, இப்பொழுது திருமண முறிவிற்கு கார்ல் விண்ணப்பித்திருக்கிறான்,” என்றான்.  நார்மா பல்லைக் கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டாள். ஆனால் கார்ல் அடுத்து சொன்னதை நார்மாவும் வில்லியமும் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அதிர்ச்சி அடைந்தார்கள்.

    கார்ல் மிக அமைதியாக நீதிபதியிடம், டேனியல் தனக்குப் பிறந்தவன் இல்லை.  தனது சாயல் அவனிடம் சிறிதும் இல்லை.  டேனியல் தன் மகன்தானா என்றே சந்தேகமாக இருப்பதால் அவனை வளர்ப்பதற்கு தன்னால் உதவித் தொகை தர இயலாது என்றான்.  அத்துடன் நார்மா தனக்கு துரோகம் செய்திருக்கிறாள் என்ற அடிப்படையில்தான் அவனுக்கு திருமணமுறிவு பெறவேண்டும் என்ற எண்ணமே எழுந்ததாகவும் சொன்னான். நார்மா தன் மேல் விழுந்த பழியை எண்ணிக் கொதித்துப் போனாள். சாடாரென இருக்கையை விட்டு எழுந்தவளை வில்லியம் கையைப் பிடித்திழுத்து இருக்கையில் அமர்த்தினான்.  அவள் உதடு துடித்தது.  அவள் கையை அழுத்தி அமைதியாக இரு என்று சைகை செய்தான்.   கார்லின் அவதூறுக்குப் பதறிய நார்மாவை நீதிபதி திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் கார்லைத் திரும்பிப் பார்த்தார்.  சிறிது மௌனத்திற்குப் பிறகு, கார்லிடம் அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்துதான் பேசுகிறானா என்று கேட்டார்.  கார்ல் அழுத்தம் திருத்தமாக, தெளிவாக தான் புரிந்துதான் பேசுவதாகக் கூறினான். நீதிபதி இப்பொழுது வில்லியமைத் திரும்பிப் பார்த்தார்.  இதற்குள் அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்திருந்த வில்லியம், டி.என்.ஏ. மரபணுச் சோதனை செய்வதற்கு நார்மா தயாராக இருப்பதைத் தெரிந்து கொண்டு நீதிபதியிடம் அவள் விருப்பத்தைத் தெரிவித்தான்.  பரிசோதனை முடிவு வரும் வரை வழக்கும் தள்ளி வைக்கப் பட்டது.

    சோர்ந்து போய் வீடு வந்த நார்மாவிற்கு இதைப் பிள்ளைகளிடம் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.  அவள் ஒரு வழியாகச் சொல்லி முடித்ததும், பிள்ளைகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.  டேனியல் கண்கள் கலங்கி அழுதவாறு தன் அறைக்கு ஓடிவிட்டான்.  பதினான்கு வயது சிறுவனுக்கு இதைவிட அதிர்ச்சி இருக்க முடியாது.  பிள்ளைகளைச் சமாதனப் படுத்தவோ, மற்ற வேலைகளைச் செய்வோ திறனின்றி நார்மா படுக்கையில் சாய்ந்தாள்.  அதிர்ச்சியில் அழ முடியாமல் அவள் மனம் வெறுமையாக இருந்தது.  தொடர்ந்து சில நாட்கள் நார்மாவும் பிள்ளைகளும் இயந்திரம் போல இயங்கி வாழ்க்கையை ஓட்டினார்கள்.

    இப்பொழுது வில்லியமின் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு,  அவளுக்குத் தெரியாமலே டேனியல் தனது மகன்தானா என்று சந்தேகப்பட்டு கார்ல் டி.என்.ஏ. மரபணுச் சோதனை செய்திருப்பான் போலிருக்கிறது என்று நார்மாவிற்கு தோன்றியது.  அதுதான் அவ்வளவு ஆணித்திரமாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறான் போலிருக்கிறது.  ஆனால் டேனியல் அவள் மகனும் இல்லை என்ற இந்த மரபணுச் சோதனையின் முடிவை அவனும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.  

    கடந்து முடிந்தவைகளைப் பற்றிய சிந்தனையில் இருந்த நார்மாவை கார் ஹாரனின் ஒலி நினைவுலகதிற்கு கொண்டு வந்தது.  அருகில் வந்து நின்ற வில்லியமின் வண்டியின் பின் இருக்கைகளில் டெப்ராவும், டேனியலும் அமர்ந்திருந்தார்கள்.  அவர்களை அவனே அழைத்து வந்துவிட்டான்.  தன் காரின் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு, கதவையும் பூட்டிவிட்டு நார்மா வில்லியமிற்கு அருகில் வந்து உட்கார்ந்தாள்.  பிள்ளைகளைத் திரும்பிப் பார்த்து புன்னகைப்பதைத் தவிர்த்தாள்.  அது அவளது அழுத முகத்தை அவர்களிடம் இருந்து மறைக்க அவள் செய்த முயற்சி.  ஆனால் அவர்கள் அவள் முகத்தையே பார்ப்பது அவளுக்குப் புரிந்தது.  வில்லியமின் காரில் பீட்ஸா  மணம் வந்தது.  அவனே அவளது நிலையை உணர்ந்து கொண்டு, அவர்களுக்கு இரவு உணவும் வழியில் வாங்கி வந்திருந்தான்.  அவனுக்கு எப்படி நன்றி சொல்வதெனப் புரியாமல் கலங்கிய கண்களுடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் நார்மா.  அவன் அமைதியாக அவள் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டுக் காரைக் கிளப்பினான்.

    அன்றிரவு பிள்ளைகளின் பொறுமையை சோதிக்காமல், நார்மா ஒரு வழியாக டி.என்.ஏ. மரபணு சோதனை முடிவுகளை  விசும்பிக் கொண்டே மெதுவாகத் தெரிவித்தாள்.  டேனியலின் முகத்தைவிட்டு அவள் கண்களை நார்மாவால் அகற்ற முடியவில்லை.  செய்தியைக் கேட்டதும் அவள் மடியில் முகம் புதைத்து டேனியல் அழுதான்.  நார்மாவும் அவனுடன் சேர்ந்து அழுதாள்.  டெப்ரா அருகில் வந்து அமர்ந்து டேனியலின் முதுகை வருடிக் கொடுத்துக் கொண்டே இறுகிப் போன குரலில், “இப்பொழுது என்ன செய்வது வில்லியம்?” என்றாள்.

    “உன் தந்தையை இனி குழந்தை வளர்ப்பில் பங்கேற்க சொல்லி உதவித் தொகை கேட்டுக் கட்டாயப் படுத்த முடியாது …” என்று தொடங்கிய வில்லியமை டெப்ரா இடைமறித்து, “அவர் பணம் எங்களுக்குத் தேவையில்லை, எங்களால் எங்கள் சக்திக்கு ஏற்றவாறு வாழமுடியும்,” என்று நறுக்கெனப் பதில் சொன்னாள்.

    “டேனியல் என் தம்பி இல்லை என்றால், அவன் யார்? அவன் பெற்றோர்கள் யார்? பிறந்த பொழுது குழந்தை மாறியிருக்கலாம் என்றால் என் தம்பியாக இருப்பவன் எங்கே இருப்பான்?” என்றாள்.

    “அதை டேனியல் பிறந்த மருத்துவ மனையில் இருந்து ஆரம்பித்து துப்பு துலக்க வேண்டும், அந்த சமயம் பிறந்த குழந்தைகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தி தெரிந்து கொள்ளலாம், நான் ஏற்பாடு செய்கிறேன்,” என்று சொல்லிவிட்டு வில்லியம் விடை பெற்றுக் கொண்டான்.  நார்மாவின் காரையும் தன்  நண்பன் உதவியுடன் அவள் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் போனான்.

    அவன் சொன்னபடியே அடுத்த நாளே மருத்துவமனை நிர்வாகத்தினரைச் சந்திக்க ஏற்பாடு செய்தான்.  மருத்துவமனை குழந்தை மாறியிருக்கும் என்ற செய்தியை முதலில் வன்மையாக, ஆணித்திரமாக மறுத்தது.  பின்பு நீதிமன்ற வழக்கின் படி செய்த மரபணு சோதனை என்பதினால் தயக்கத்துடன் தகவல்களை ஆராய அனுமதி அளித்தது.  டேனியல் பிறந்த அன்றே பிறந்த, ராபர்ட் என்ற சிறுவனின் தகவல்கள் மேலும் பொருந்தி அவனைத்  தேடிச் சென்றார்கள்.  ராபர்ட்டின் குடும்பம் அருகில் உள்ள யார்க் டவுனில் தான் வசித்து வந்தனர்.  சந்தேகம் என்ற ஒன்று தோன்றிவிடவே அதைத் தீர்க்க அவர்களும் தயாரானார்கள்.  மீண்டும் மரபணு சோதனைகள், மீண்டும் அவற்றின் முடிவுகள்.  இந்த முறை ராபர்ட்தான் நார்மாவின் குழந்தை என்றும், டேனியல் ராபர்ட் இடத்தில் இருந்திருக்க வேண்டியவன் என்பதும் தெளிவானது.  சிறுவர்கள் இருவருமே முடிவைக் கேட்டு அலறினார்கள்.

    “அம்மா, அம்மா என்னை அனுப்பிவிடாதீர்கள்” என்று ஒருபுறம் அழுதான் டேனியல்.  “அம்மா, நான் உங்களுடன்தான் இருப்பேன், நான் அவர்கள் வீட்டிற்கு போக மாட்டேன்,” என்று ராபர்ட்டும் தன் அம்மாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.  இரண்டு குடும்பங்களும் இரண்டு சிறுவர்களையுமே  தங்களுடன் வைத்துக் கொள்ளவே  விரும்பினார்கள். ஆனால் முடிவில் சிறுவர்களின் முடிவுப்படி அவரவர் வளந்த இடத்திலேயே அவர்கள் தொடர்ந்து வளரட்டும், அவ்வபொழுது பெற்றோர்கள் வந்து மற்ற குழந்தையைப் பார்த்து செல்லலாம் என்ற முடிவுக்கு ஒப்புக் கொண்டார்கள்.

    “அம்மா, நீங்கள் என்னை அனுப்பிவிடுவிடுவீர்களோ என்று பயந்தேன்,” என்று நார்மாவைக் கட்டிக் கொண்டான் டேனியல்.  நார்மா அவன் தலையைக் கோதியபடி, “நீ என்றுமே என் மகன்தான் டேனியல், நம்மைப் பொருத்தவரை நான் உன் அம்மா, நீ என்றும் என் அன்பு மகன்தான்” என்றாள்.  “நீ என்றுமே ….என்றுமே என் தம்பிதான் டேனியல், உண்மை என்ன என்று தெரிந்து கொண்டோம், அவ்வளவுதான்” என்று டேனியலை அணைத்துக் கொண்டாள் டெப்ரா.  
    __________________________________

    Share
  • மௌன ராகம்

    புவனா கோவிந்த்

     

    1962

    “மைதிலி, பூ இப்படி தழைய தழைய வெச்சா உங்க அண்ணாவுக்கு பிடிக்காதும்மா, மடிச்சு வெய்யி” 

    “சும்மா அண்ணா அண்ணானு பூச்சாண்டி காட்டாதே மன்னி… நேக்கு தெரியும் எப்படி வெக்கணும்னு. நான் அழகா இருக்கேனு நோக்கு பொறாமை..ஹம்ம்” என கழுத்தை ஒடித்து சென்றாள் மைதிலி. 

    அதே நேரம் அறையில் இருந்து வெளியே வந்த அவளின் அண்ணன் கிருஷ்ணன் “என்ன மைதிலி ரெடியா? உன்ன காலேஜ்ல விட்டுட்டு நான் ஆபீஸ் போணும்”.

    “இதோ ரெடிண்ணா” என்றபடி கைபையை எடுத்து கொண்டு வந்தாள். 

    ஒரு கணம் அவளை உற்று நோக்கியவன் “ஏய் மைதிலி நில்லு, என்னடி இது வேஷம் கட்றவ மாதிரி ஜடை தாண்டி பூ தொங்கறது. என்ன பழக்கம் இது?” என கோபமாய் கேட்க,

    அண்ணனின் கோபத்தை அறிந்த மைதிலி “இல்லைணா…நான் அப்பவே சொன்னேன்…மன்னி தான்…” எனவும், மன்னி என்றழைக்கபட்ட ராதா செய்வதறியாது திகைத்தாள். 

    ராதா உண்மையை கூற முயல, கை உயர்த்தி பேசவேண்டாம் என்பது போல் முறைத்த கிருஷ்ணன் “கூத்தாடி குடும்பம் தான உன் மன்னியோடது, வேற எப்படி இருக்கும் புத்தி. நீ சரியா போட்டுண்டு வா” என தங்கையை ஒட்டி பேசினான், புது மனைவி என்ற கரிசனம் கூட இல்லாமல். 

    தன் பாட்டனார் மேடை நாடக நடிகராய் இருந்தவர் என்பதை குத்தி காட்டி தன் கணவன் பேசியதும், நடிகர் என்றால் கேவலமா என கேட்க துடித்த நாவை கட்டுப்படுத்தினாள் ராதா. 

    சீர் செனத்தி எதுவும் இன்றி உறவு என்பதால் மட்டும் இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்த இந்த சில மாதங்களில் எல்லோரின் உதாசீனமும் ராதாவுக்கு பழகித்தான் போனது. 

    ஆனாலும் இது போன்ற உண்மை சிறிதுமற்ற குற்றசாட்டுகளின் போது மனம் மிகவும் வேதனையுற்றது. 

    கிருஷ்ணனின் வசதியான மாமன் மகள் ரஞ்சனி இந்த வீட்டுக்கு மருமகளாய் வர இருந்ததை தடுத்த அவன் தந்தை. தூரத்து உறவான ராதாவை குடும்பத்துக்கு ஏற்ற மருமகள் என கொண்டு வந்தது எல்லோர் மனத்திலும் ராதாவின் மேல் நிரந்தர கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. 

    அதிலும் ரஞ்சனியிடம் சிறு வயது முதல் உற்ற தோழி போல் இருந்த மைதிலி சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் அண்ணி ராதாவை பழி வாங்குவாள். 

    “கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கத்தலாம்” அதுவே இல்லை எனும் போது வேறு என்ன என ராதாவும் அப்படியே வாழப் பழகி விட்டாள். 

    மற்றொரு நாள்….

    “சொன்னா கேளு மைதிலி, இவ்ளோ எண்ணை விடாதே… உங்கண்ணாக்கு பிடிக்காது. இல்லேனா உன் சிநேகிதி சொல்லி குடுத்ததை உனக்கு அளவா செய்துக்கோ. உங்க அண்ணாக்கு நான் தனியா சமைச்சுடறேன்” என ராதா கூற, 

    “இங்க பாருங்க மன்னி… இதொண்ணும் உங்காத்துல இருந்து கொண்டு வந்ததில்ல, எங்க அண்ணா சம்பாதிக்கற காசுல வாங்கினது. என் இஷ்டத்துக்கு செய்வேன். இன்னைக்கி நான் செய்யறது தான் அண்ணா சாப்பிடணும், எனக்கு தெரியாம நீங்க சமைச்சா அண்ணாகிட்ட இல்லாதையும் பொல்லாததையும் சொல்லி சிக்க வெப்பேன்” என்றாள் மிரட்டலாய். 

    செய்வதறியாமல் மௌனமானாள் ராதா. தாயில்லா பெண் என தன் மாமனாரும் கணவனும் சேர்ந்து மைதிலிக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறார்களே, போகிற இடத்தில என்ன சொல்வார்களோ என வருந்தினாள். 

    அன்று மதியம்…

    “என்னடி கருமம் இது… வாய்ல வெக்க வெளங்கல… ஒரே காரம் புளிப்பு த்தூ. இப்படி எண்ணைய கொட்டினா சீக்கரம் பரலோகம் போக வேண்டியது தான். எல்லாத்தையும் நீயே கொட்டிக்கோ” என எழுந்த கணவனை “இல்லங்க… அது … ” என ராதா விளக்கம் சொல்ல வர, 

    அதற்குள் மைதிலி “நான் அப்பவே சொன்னேண்ணா… அதுக்கு மன்னி என் ஆத்துகாரர் சம்பாதிக்கறார் நான் கொட்றேன் எண்ணைய நீ யார் கேக்கனு சொல்றா” என வழக்கம் போல் பழியை ராதாவின் போல் போட்டாள். 

    “காசு பணத்த சம்பாதிச்சா தானே அதோட அருமை தெரியும், மூக்கு பிடிக்க மூணு வேளையும் சாப்டுட்டு தூங்கற ஜென்மங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது” என தன் மனைவி மீதே குற்றம் சாட்டினான் கிருஷ்ணன். 

    தான் என்ன சொன்னாலும் தன் கணவன் நம்பபோவதில்லை என உணர்ந்ததினால் எப்போதும் போல் மௌனமானாள் ராதா.

    __________________________________

     

    1972

    “மைதிலி இந்த பைல பழம், பூ, பலகாரம் எல்லாம் வெச்சுருக்கேன், துணிக கூட சேக்காம தனியா வெச்சுக்கோ”

    “எதுக்கு மன்னி இப்படி அடுக்கறேள்? எங்க மாமி சும்மாவே ‘பொன்ன வெக்கற எடத்துல பூ’ங்கறது உங்காத்து மந்திரமானு கேலி பேசறா” என நொடித்தவள், பழங்கள், பூ, இனிப்பு இருந்த பையை எடுத்து வெளியே வைத்தாள். 

    “மைதிலி கிளம்பிட்டயா” என கிருஷ்ணமூர்த்தி வர “போலாம்’ண்ணா” என்றாள். 

    “என்னமா இது வெறும் துணிப்பை தான் இருக்கு போல, தோட்டத்துல இருந்து பழம் எல்லாம் கொண்டு வர சொன்னனே, என்ன ஆச்சு ராதா?” என வழக்கம் போல் மனைவியை முறைக்க, 

    ராதா ஏதோ சொல்ல முற்படுமுன் “நான் கேட்டே’ண்ணா, மன்னி அவா அம்மா ஆத்துக்கு எடுத்து வெச்சுட்டாளாம்” என கூசாமல் பழி சுமத்தினாள் மைதிலி. 

    எரித்து விடுவதை போல் மனைவியை பார்த்தான் கிருஷ்ணன். 

    சில மாதங்களுக்கு பின்…

    “மைதிலி, நீ ஏம்மா இதெல்லாம் செய்யற. கல்யாணம் ஆகி ரெம்ப நாள் கழிச்சு இப்ப தான் உண்டாகி இருக்க, ஓய்வா இரு. உனக்கு மாங்காதானே வேணும், நான் நறுக்கி தரேன் தள்ளு” என ராதா உண்மையான அக்கறையுடன் கூற,

    “ரெம்ப அக்கறை இருக்கறா மாதிரி வேஷம் போடாதேள் மன்னி. நீங்க பத்தாம் மாசமே பெத்துகிட்டதை மறைமுகமா குத்தி காட்றேளா? வருசத்துக்கு ஒண்ணா நாலு பெத்துகிட்டத தவிர என்ன சாதிச்சு இருக்கீங்க… ஹ்ம்ம்” என விஷமாய் வார்த்தைகளை கக்கினாள். 

    “ஏன் மைதிலி இப்படி பேசற. உன் நல்லதுக்கு தானே…”

    “ஆஹா… சினிமால நடிக்கரவா தோத்து போய்டணும் உங்கள்ட்ட…. என் ஆத்துக்காரர் என் மேல உசுரா இருக்கார்னு உங்க பொறாமயால தான் நேக்கு கரு தங்காம இருக்கு. இன்னும் உங்கள வேலை வேற வாங்கினா சபிச்சுடமாட்டீங்க… ஹ்ம்ம்” என சலித்து கொண்டவளை, ஒரு கணம் மௌனமாய் பார்த்த ராதா, அந்த இடத்தை விட்டு அகன்றாள். 

    சற்று நேரத்தில் “ராதா… ஏய் ராதா… என்ன பண்ணிட்ருக்க” என்ற கணவனின் கத்ததில் நடந்ததை யூகித்தவளாய் பெருமூச்சுடன் முன்னறைக்கு வந்தாள் ராதா.

    மௌனமாய் வந்து நின்றவளை முறைத்த கிருஷ்ணன் “ஏண்டி, உன்னால இந்த மாங்காய நறுக்கி தர முடியாதா? பாரு மைதிலி விரல வெட்டிண்டு இருக்கா” என கோபத்தில் கத்தினான். 

    மைதிலி வழக்கம் போல் “நான் கேட்டேண்ணா… மன்னி நேக்கு நெறைய வேலை இருக்குனுட்டா” என வருந்துவது போல் பாவனை செய்தாள். 

    “என்னடி முழிச்சுண்டு நிக்கற, வாய்ல என்ன கொலுகட்டயா பதில் சொல்லு” என கிருஷ்ணன் கேட்க, தான் பதில் சொல்வதால் எதுவும் மாறபோவதில்லை என புரிந்தவளாய் உணர்ச்சியற்ற முகத்துடன் நின்றாள் ராதா. 

    “அப்பா, அத்தை பொய் சொல்றாப்பா. அம்மா நறுக்கி தரேன்னு தான் சொன்னா” என ராதாவின் கடைக்குட்டி வைஷ்ணவி சொல்ல, 

    “கேட்டியாண்ணா, உன் பொண்ணு கூட அவ அம்மாவுக்கு சாதகமாத்தான் பொய் பேசறா… இதுவே நம்ப அம்மா உயிரோட இருந்துருந்தா… ” என இல்லாத கண்ணீரை மறைக்க கண்ணை கசக்கினாள் மைதிலி.

    கிருஷ்ணனின் கோபத்தை தூண்ட அது போதுமாய் இருந்தது “வாய மூடு கழுத… மொளச்சு மூணு இல விடல அதுக்குள்ள பொய் சொல்றியா” என மகளை அடித்து துவைத்தான். அதை தடுக்க சென்ற ராதாவின் மேலும் சில அடிகள் விழுந்தன.

    _________________________________

     

    2012

    காலில் முக்காலி இடித்து கொண்டதில் நகம் பெயர்ந்து சுரீல் என வலி கிளம்ப “ஸ்ஸ்…” என முனகியவர் “யார் இந்த முக்காலிய இங்க போட்டு தொலைச்சது” என்றார் கிருஷ்ணன் எரிச்சலுடன். 

    அதே சமயம் வந்த மைதிலி “நான் அப்பவே சொன்னேன்’ண்ணா மன்னி தான்….” என தொடங்கியவள், தன் அண்ணனின் பார்வையில் மாற்றத்தை உணர்ந்து, தான் செய்த தவறு புலப்பட, என்ன செய்வதென தெரியாமல் நிறுத்தினாள். 

    ரேழியில் இருந்து வந்த கைதட்டல் ஒலி கேட்டு மைதிலியும் கிருஷ்ணனும் திரும்பி பார்த்தனர். அங்கு ராதாவின் இளைய மகள் வைஷ்ணவி நின்றிருந்தாள். 

    “சபாஷ் அத்தை… நீ இப்படி வாயடைச்சு போய் நிக்கறது பாக்க கண் கொள்ளா காட்சியா இருக்கு” என்றவள் தன்  தந்தை புறம் திரும்பி “ஏம்ப்பா நீங்க கூட வாயடைச்சு போய் நிக்கறேள். உங்க அருமை தங்கையோட பேச்சை கேட்டுண்டு, தொண்ட கிழிய அம்மாவையும் எங்களையும் வெரட்டுவேளே, இப்ப என்ன ஆச்சு… பேசுங்கப்பா  பேசுங்கப்பா” என கோபமாய் தன் தந்தையை பற்றி உலுக்கினாள் வைஷ்ணவி. 

    தங்கை மேல் உள்ள பாசத்தில் தன்னை நம்பி வந்த ஜீவனை வதைத்ததை முதல் முறையாய் உணர்ந்தான் கிருஷ்ணன். ஐம்பது வருட  இல்வாழ்க்கையின் தருணங்கள் மனதில் படமாய் ஓட, ராதாவின் அன்பும் சகிப்புதன்மையும், காதலும் தியாகமும், உழைப்பும் பொறுப்பும் கண் முன் விரிந்தது. 

    அந்த புரிதலோடு சேர்ந்து கண்ணில் நீரும் பெருகியது. பத்து நாட்களுக்கு முன் மனைவியின் உடலுக்கு சிதை மூட்டிய போது கூட இரும்பாய் நின்றவர், இன்று உணர்ந்த இழப்பில் கட்டுப்படுத்த இயலாமல் ராதாவின் மாலையிட்ட படத்தின் முன் மண்டியிட்டு கதறினார்.

    ஆம்… ஐம்பது வருடங்கள் கிருஷ்ணனின் மனைவியாய், அந்த வீட்டின் மருமகளாய், நான்கு பிள்ளைகளுக்கு தாயாய் தன் கடமையை செவ்வனே செய்த நிறைவில் எழுபது வயதில் இயற்கை மரணம் எய்தினாள் ராதா. 

    தந்தையின் கதறலில் பிள்ளைகள் நால்வரும் சிலையாய் நின்றனர். அதுவரை பெற்றவரை  சிம்ம சொப்பனமாய் மட்டுமே பார்த்து பழகியவர்களுக்கு அவரின் இந்த நிலை காண சகியாமல் கண்ணில் நீர் கோர்த்தது. 

    முதலில் சுதாரித்தவன் மூத்தவன் ரவீந்திரன் தான். “நீ சும்மாவே இருக்க மாட்டியா வைஷு” என தங்கையை கடிந்து கொண்டான். 

    “அப்பா என்னப்பா இது. அவ தான் புரியாம ஏதோ பேசறானா அதை போய் நீங்க பெருசா எடுத்துகிட்டு… ப்ளீஸ்ப்பா, அழாதீங்கோ” என சமாதானம் செய்தான். 

    “அப்பா சாரி’ப்பா, நான் உங்கள அழ வெக்கணும்னு அப்படி பேசலப்பா. அம்மா இல்லாம போனப்புறம் கூட அத்தை எப்பவும் போல பேசவும் என்னால தாங்கமுடியாமத்தான் அப்படி சொல்லிட்டேன்’ப்பா. என்னை மன்னிச்சுடுங்கப்பா… ப்ளீஸ்’ப்பா” என கெஞ்சலில் தொடங்கி அழுகையில் முடித்தாள் வைஷ்ணவி. 

    ஒன்றும் பேசாமல் மகளை அணைத்து கொண்டார் கிருஷ்ணன். கதறல் நின்றிருந்த போதும் கண்ணில் நீர் வற்ற மறுத்தது அவருக்கு. 

    அந்த நிலையில் தன் தமயனை பார்த்ததும் “இதற்கெல்லாம் தான்தானே காரணம். பெற்றவளை இழந்த பின் எல்லாமுமாய் இருந்த அண்ணன், மனைவியின் பேச்சை கேட்டு தன்னை வெறுத்து விடுவானோ என்ற எண்ணத்தில் தவறு செய்து விட்டோமே” என உறுத்த, கிருஷ்ணனின் காலில் மன்னிப்பு வேண்டி  விழுந்தாள் மைதிலி. 

    பத்து நாட்களுக்கு முன் ராதாவின் உயிர் பிரிந்த தருணத்தில் தன்னில் ஒரு பகுதியை இழந்ததை கூட கிருஷ்ணனால் உணரமுடியவில்லை. 

    சிறுவயதிலேயே அன்னையை இழந்து, இழப்புக்கு மனம் பழகியதும் ஒரு காரணமோ என இப்போது தோன்றியது.

    எது எப்படி இருப்பினும் வாழ்ந்த காலத்தில் அவளை அழ வைத்ததிற்கு இனி, தான் வாழும் காலம் முழுமையும் அவளை நினைத்து அழும் தண்டனையை கொடுத்து சென்றுவிட்டாள் என நினைத்தார் கிருஷ்ணன். 

    தன்னையும் அறியாமல் அவரின் விரல்கள் புகைப்படத்தில் இருந்த அவளின் கண்களை வருடியது. இந்த கணம் அவருக்கு தேவை தனிமை என உணர்ந்தவர்கள் போல் பிள்ளைகள் நால்வரும் விலகி சென்றனர். 

    தன் மனைவியின் படத்தின் அருகே வைத்திருந்த அவள் விரும்பி வாசிக்கும் வீணையின் தந்தியை ஸ்பரிசித்தவருக்கு, அதிலிருந்து கசிந்த மௌனராகம் அவளின் சிரிப்பின் நாதமாய் ஒலித்தது.

    (முற்றும்)

    Share
  • அமெரிக்கத் தேர்தல் வாக்குறுதிகள்

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    சில வாரங்களுக்கு முன்னால் அமெரிக்காவையும் இந்தியாவையும்  ஒப்பிட்டு ‘அங்கும் இங்கும் என்ற கட்டுரை எழுதினேன்.  அதில் முக்கியமாக தேர்தல் வாக்குறுதிகள் என்பதைக் கட்டாயமாகச் சேர்த்திருக்க வேண்டும்.  அதனால் இப்போது எழுதுகிறேன்.  இது முக்கியமாகச் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று.  ஏனென்றால் இந்தியத் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் அமெரிக்கத் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் அத்தனை வித்தியாசங்கள்.
     

    அமெரிக்க அரசியல்  சாசனத்தில் எல்லோரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற ஷரத்து இருக்கிறது.  என்றாலும் மதத்தில் நம்பிக்கை  இல்லாத ஒருவர் கண்டிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் ஜெயிக்க  முடியாது.  அது மட்டுமல்ல, கிறிஸ்தவரல்லாத ஒருவரும் ஜனாதிபதி பதவிக்கு வர முடியாது.  ஜான் கென்னடி 1960-இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வருவது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்று கருதப்பட்டது.  ஆனாலும் முதல் கத்தோலிக்க ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  கிறிஸ்தவரல்லாதவர் வருவது இதைப் போல் அல்ல.  ஆக மத நம்பிக்கையுள்ள, ஒழுங்காகத் தேவாலயத்திற்குச் செல்லும், கிறிஸ்துவக் கோட்பாடுகளில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒருவர்தான் ஜனாதிபதியாக வர முடியும்.  அதனால்தான் ஒபாமாவைப் பிடிக்காதவர்கள் அவர் கிறிஸ்தவரே இல்லை என்றும் அவர் ஒரு முஸ்லீம் என்றும் (கென்யா நாட்டைச் சேர்ந்த அவர் தந்தை ஒரு முஸ்லீம்.  ஒபாமா பிறந்து இரண்டு வருடங்களிலேயே அவர் ஒபாமாவின் தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.  ஒபாமா அவர் தாய், தாயின் பெற்றோர்கள் ஆகியோரால் கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார்.)  கூறி அவருடைய வெற்றி வாய்ப்புக்களைக் குறைக்கப் பார்த்தனர்.  ஆனால் அது ஒன்றும் எடுபடவில்லை.  அவரைப் பற்றிய இப்படிப்பட்ட வதந்திகளைக் கிளப்புபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

     
    காந்திஜி எல்லா  மதங்களும் சமம் என்றும்  இந்து மதமும் இஸ்லாம் மதமும் பாரதத் தாயின் இரு கண்கள் என்றும் இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திய மக்களுக்கு போதித்துவந்தாலும்  தான் ஒரு இந்து என்பதை எப்போதும் மறக்கவில்லை.  அவருடைய அரசியல் வாரிசான  முதல் பிரதம மந்திரி நேருஜி ஒரு போதும் தான் ஒரு இந்து என்று மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை.  அவரைப் பொறுத்த வரை இந்தியத் தொழிற்சாலைகள்தான் கோவில்கள்.  இந்திய அரசியலில் மதத்தை விட ஜாதிகள்தான் அதிக இடம் வகிக்கின்றன.  ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவரை அந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவது அரசியல் கட்சிகள் கைக்கொள்ளும் வழக்கம்.  ஆனால் பிரதமரோ மாநிலத்தின் முதலமைச்சரோ எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் அவ்வளவாக அக்கறைப்படுவதில்லை.  ஜனாதிபதி இந்து சமயத்தைச் சேர்ந்தவர் என்றால் உப-ஜனாதிபதி பதவிக்கு ஒரு முஸ்லீமை நியமிப்பது ஒரு மரபாகிவிட்டிருக்கிறது.  அவ்வளவே.

    கிறிஸ்தவ மதத்தில் அதிலும் கத்தோலிக்கப் பிரிவில் கருத்தடைச் சாதனங்கள் உபயோகிப்பதும் கருச்சிதைவு செய்துகொள்வதும் பெரிய பாவங்களாகக் கருதப்படுகின்றன.  தகாத உறவால், கற்பழிப்பால் ஏற்பட்ட கருப்பம், தாயின் உடல்நிலைக்குக் கேடு ஆகிய இவை மட்டும் கருச்சிதைவு கூடாது என்ற விதிக்கு அப்பாற்பட்டவை.  (இவை கூட இறைவனின் செயலால் விளைந்தவை அதிலும் கருக்கலைப்பு செய்யக் கூடாது என்று கூறும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.)  இவை தவிர மற்ற எந்தக் காரணங்களுக்காகவும் கருத்தடை செய்துகொள்வது இறைவனுக்கு எதிரான செயல்.  கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் இதை வலியுறுத்தி மக்கள் மத்தியில் ஆதரவு தேட முயற்சிக்கிறார்கள்.  ஒபாமா போன்ற தாராளவாதிகள் இதை வற்புறுத்துவதில்லை.  ஆகையால் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் ஒபமாவிற்கு ஓட்டளித்தால் இந்த வகையான கிறிஸ்தவ மதிப்பீடுகள் வலுவிழந்துவிடும் என்று கூறுகிறார்கள்.  தங்களுக்கு ஓட்டளித்தால் அமெரிக்காவில் இந்த மதிப்பீடுகள் மாறாமல் இருக்கும் என்று உறுதி அளிக்கிறார்கள்.  ஒபாமா கொண்டுவந்த, (ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டால்) 2014-லிலிருந்து அமலுக்கு வரவிருக்கும் மருத்துவ வசதிச் சட்டப்படி (Affordable Health Care law) மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கருத்தடைச் சாதனங்களை வழங்க வேண்டும்.  கம்பெனிகள், மருத்துவமனைகள் தங்கள் ஊழியர்களுக்கு இலவசமாகக் கருத்தடைச் சாதனங்கள் கொடுக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒபாமா இப்போதே போட்ட நிபந்தனையை அடிப்படை மதவாதிகள் நடத்தும் மருத்துவமனைகள் எதிர்த்தன.

    பெண்கள் கருச் சிதைவு செய்துகொள்வதை யார் எதிர்க்கிறார்கள், யார் எதிர்க்கவில்லை என்பது பெரிதாக விவாதிக்கப்படுகிறது.   உப-ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் பைடனையும் ரயானையும் கேட்ட போது பைடன், ‘கருச் சிதைவு செய்துகொள்வதை என் மதம் எதிர்ப்பதால் எனக்கு அதில் ஒப்புதல் இல்லை.  ஆனால் நான் என்னுடைய மதக்கொள்கைகளை இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் மீதும் மற்ற மதத்தவர்கள் மீதும் திணிக்கும் எண்ணம் எனக்கில்லை.  அதனால் கருச் சிதைவு கூடாது என்று சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை’ என்றார்.  ஆனால் ரயான் ‘என் மனைவி முதல் முறையாகத் தாயாகத் தயாராக இருந்தபோது எடுத்த ஸ்கேனில் என் குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்டேன்.  அப்படி உயிர் பெற்ற கருவை ஏப்படிச் சிதைப்பது.  கருச் சிதைவை நான் எப்போதுமே ஆதரிக்கப் போவதில்லை’ என்றார்.

    அமெரிக்காவில் திட்டமிட்டுப்  பெற்றோராதல் (Planned Parenthood) என்ற ஒரு அமைப்பு இருக்கிறது.  இதற்கு மத்திய அரசிடமிருந்து மானியம் கிடைக்கிறது.  இது பெண்களுக்குக் கருத்தடைச் சாதனங்கள் வழங்குவதோடு பிள்ளை பெற்றுக்கொள்வதிலும் யோசனை கூறுகிறது.  ராம்னி தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த அமைப்புக்குரிய மானியத்தை உடனே நிறுத்துவேன் என்கிறார்.  கிறிஸ்தவ மத அடிப்படைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்காத இப்படிப்பட்ட அமைப்புகளுக்கு அரசு உதவி இல்லையாம்.

    இந்தியாவில் எல்லா  ஊர்களிலும் கருச் சிதைவு க்ளினிக்குகள் இருக்கின்றன.  கருச்சிதைவு செய்துகொள்ள  விரும்பும் பெண்களை யாரும் தடுக்கப் போவதில்லை.  சட்டம் இருக்கிறதோ என்னவோ.  ஆனால்  அரசியல்வாதிகளோ மக்களோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

    ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதா, ஓரினச் சேர்க்கைத் திருமணங்களை சட்டப்படி அனுமதிப்பதா என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையில் அமெரிக்காவில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.  மறுபடி குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பைபிளில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதுதான் சரி என்று கூறியிருப்பதால் ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் இறைவனுக்கு எதிரான செயல் என்றும் அதை எப்போதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் கூறிவருகிறார்கள்.. சில மாநிலங்களில் ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும்.  ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது.  வருடம் முடிந்ததும் ஒவ்வொரு பிரஜையும் மத்திய அரசுக்கு தங்கள் வருமான வரி பற்றித் தாக்கல் செய்ய வேண்டும்.  அப்படிச் செய்யும் போது திருமணம் செய்துகொண்டு ஆணும் பெண்ணுமாக வாழும் தம்பதிகள் சேர்ந்து தாக்கல் செய்யலாம்.  அவர்களுக்குச் சில சலுகைகளும் உண்டு.  ஒரு பெண்ணும் ஒரு பெண்னும் அல்லது ஒரு ஆணும் ஒரு ஆணுமாக சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கு – இவர்கள் வாழும் மாநிலத்தில் அவர்கள் தம்பதிகளாகக் கருதப்பட்டாலும் – ஈரினச் சேர்க்கைத் தம்பதிகளுக்குரிய எந்த சலுகையும் இல்லை.  இன்னொரு விதமாகச் சொன்னால் மத்திய அரசு இந்த ஓரினச் சேர்க்கைகளை ஆதரிக்கவில்லை.  தேர்தலில் இது ஒரு விஷயமாக விவாதிக்கப்படுவதால் சில மாதங்களுக்கு முன் பைடனிடம் இது பற்றிச் சிலர் கேட்ட போது ‘எனக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை’ என்று சொல்லியதைத் தொடர்ந்து ஒபாமாவும் அதை ஆதரிப்பதாகக் கூறினார்.  அதனால் ஒபாமா மீண்டும் பதவிக்கு வந்தால் இது மத்திய அரசாலும் ஒப்புக்கொள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது.

    இந்தியாவில் ஓரினச் சேர்க்கைகள் அமெரிக்காவில்  இருக்கும் அளவிற்கு இல்லை  என்று நான் சொல்லுகிறேன்.  இந்திய சமூகத்தில் அமெரிக்க சமூகத்தில் இருப்பது போல் தங்கள் அபிலாஷைகளை வெளியே சொல்வதற்கு சுதந்திரம் இல்லையாதலால் ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் நிலைமையை வெளியே சொல்வதில்லை  என்று அமெரிக்கர்கள் கூறுகிறார்கள்.  எது எப்படியானாலும் இந்தியாவில்  இது ஒரு தேர்தல் பிரச்சினையாகக் கருதப்படவில்லை.

    அமெரிக்காவில் இப்போது  கல்வி பெறுவது பெரிய  செலவினமாகிவிட்டது.  பல்கலைக்கழகங்கள் முன்னைக்கு இப்போது கல்விக்  கட்டணத்தை மிகவும் அதிகரித்திருக்கின்றன.  நல்ல பல்கலைக்கழகங்களுக்கு வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  செல்ல முடிகிறது.  மற்றவர்கள் தங்கள் படிப்பை முடித்துவிட்டு வரும்போது பல ஆயிரக் கணக்கான  டாலர் கடனோடு வெளியில் வருகிறார்கள்.  அதைத் திருப்பிக் கட்ட மிகவும்  சிரமப்படுகிறார்கள்.  மாணவர்களுக்கு  படிப்புச் செலவுக்குரிய கடனை அரசே வழங்கும் என்றும் வட்டி விகிதமும் கணிசமாகக் குறைக்கப்படும் என்றும் ஜனநாயகக் கட்சி கூறுகிறது.   (இப்போதும் மாணவர்கள் படிப்பிற்கு வாங்கிய கடனுக்குக் கொடுத்த வட்டியை வருமான வரி தாக்கல் செய்யும் போது வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ளலாம்.)  ஆனால் குடியரசுக் கட்சி ராம்னி மாணவர்களிடம், ‘எந்தப் பல்கலைக்கழகத்தில் குறைந்த கட்டணம் இருக்கிறது என்று தேர்வு செய்து அதில் சேருங்கள், உங்கள் பெற்றோரிடம் உதவி பெறுங்கள்’ என்கிறார்.

    இப்போது அமெரிக்காவில்  ஏழரை சதவிகிதம் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது.  பல லட்சம் வேலைகளை உருவாக்கி இந்த நிலைமையை மாற்றுவோம், ஜனநாயகக் கட்சியினரால் இது முடியாதது என்பது குடியரசுக் கட்சியினரின் வாதம்.   ஜனநாயகக்கட்சியினரோ குடியரசுக்கட்சியினர் சொல்வது போல் அவ்வளவு வேகமாக வேலைகளை உருவாக்க முடியாது, எப்படியும் பொருளாதாரம் முன்னேறி வருவதால் சீக்கிரமே வேலையில்லாத் திண்டாட்டம் நீங்கிவிடும் என்கின்றனர்.

    அமெரிக்கா குடியேறிகளால் உருவான நாடு என்பார்கள்.  இப்போதும் உலகின் பல கோடிகளிலிருந்து குடியேறிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  அமெரிக்கா அறிவாளிகள், திறமைசாலிகள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அவர்கள் அமெரிக்காவிற்கு வர விரும்பினால் அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்கிறது.  அதே சமயத்தில் அனுமதி இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்புவதிலும் தயக்கம் காட்டுவதில்லை.  அமெரிக்காவிற்கும் அமெரிக்காவிற்குத் தெற்கே இருக்கும் மெக்ஸிகோ நாட்டிற்கும் இடையே உள்ள எல்லை நீண்டதாயினும் அந்த எல்லையைத் தாண்டி மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவிற்குள் வருவது ஓரளவு எளிதாக இருப்பதால் மெக்ஸிகோவினர் இங்கு சரியான விசா இல்லாமல் வருகிறார்கள்.  இப்படி நூற்றி இருபது லட்சம் பேர் இருப்பதாகக் கூறுகிறார்கள்.  அவர்களை அப்படியே ஈவு இரக்கம் இல்லாமல் வெளியேற்றுவதா அல்லது குற்றம் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பதா என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் மிகுந்த வேற்றுமை இருக்கிறது.

    1971-இல் பங்களா தேஷ்  அப்போதைய பாகிஸ்தானிலிருந்து  பிரிந்த போது நிறையப்  பேர் அங்கிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக ஓடிவந்து மேற்கு வங்காளத்திலும் அசாமிலும் தங்கினர்.  அவர்களைத் திருப்பி அனுப்புவது பற்றித் தேர்தல் சமயத்தில் மத்திய அரசு எந்தக் கருத்துக் கணிப்பையும் எடுக்கவில்லை.  இது அகில இந்தியப் பிரச்சினையாக இல்லை..

    தேர்தலைச் சாக்காக  வைத்துக்கொண்டு அமெரிக்காவிலும்  பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கிறார்கள்.  பெரிய பெரிய பணக்காரகள் தாங்கள் யார் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள்.  அரசியல் கட்சிகள் அதை தேர்தல் விளம்பரங்களில் செலவிடுகின்றன.  ஆனால் எந்தக் கட்சியும் வாக்காளர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுத்துத் தங்களுக்கு ஓட்டுப் போடச் சொல்லுவதில்லை.   இந்தியாவில் தேர்தல் சமயத்தில் எப்படிப் பணம் நேரடியாக ஓட்டளிப்பவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது என்பதைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

    அமெரிக்காவில் ஊழல் புரிபவர்களை சட்டம் பார்த்துக்கொள்வதால்  ஊழலை ஒழிப்பதாக எந்தக் கட்சியும்  சவால் விடுவதில்லை.

    ராஜிவ் காந்தி இறந்த  போதே அவர் சம்பந்தப்பட்ட  போபர்ஸ் ஊழல் விசாரணையும்  இறந்துவிட்டது என்று நினைக்கிறேன்.  சோனியா காந்தியின் மருமகன் நில விஷயத்தில் ஊழல் புரிந்ததாகச் செய்தி வந்திருக்கும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஊழலை ஒழிக்கப் பாடுபடுகிறது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் அவர்.  ஊழல் நிறைந்த காங்கிரஸ் கட்சி என்று காங்கிரஸைக் குறைகூறும் பி.ஜே.பி.யின் அரசியல் தலைவர்கள் ஊழல்புரிவதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.  நம் நீதிமன்றங்கள் செயல்படும் வேகம் ஊழல் புரிந்தவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்திருக்கிறது; அவர்கள் இறக்கும் வரை அவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

    ஊழலே வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட பிறகு  தேர்தல் சமயத்தில் அது  பற்றிப் பேச என்ன இருக்கிறது?

    இந்தியாவில் அரசியல்வாதிகள் எளிமையாக இருக்கிறார்களோ இல்லையோ எளிமையாக இருப்பதாகக்  காட்டிக்கொள்வார்கள்.  அமெரிக்காவில்  அப்படியல்ல.  தேர்தலுக்கு  நிற்பவர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் அல்லது கணவன்மார்களும் மிக ஆடம்பரமாக உடையணிந்துகொண்டு வருவார்கள்.  அதிலும் பெண்கள் எக்கச்சக்க மேக்கப் போட்டுக்கொண்டு வருவார்கள்.  முடியலங்காரம் செய்துகொள்ளாத யாரும் அமெரிக்காவில் இல்லை என்று சொல்லலாம்.  ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா நேரத்திற்கு ஒரு உடை அணிந்துகொண்டு வருகிறார்.  நான்கு வருஷங்களுக்கு முன்பிருந்ததை விட – அதாவது ஒபாமா முதலில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் போதிருந்ததை விட – இப்போது நிறைய உடற் பயிற்சிகள் செய்து உடலை ட்ரிம்மாக வைத்துக்கொண்டிருக்கிறார் மிஷல் ஒபாமா.  எவ்வளவு இளமையாகத் தன்னை காட்டிக்கொள்ள முடியுமோ அவ்வளவு இளமையாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்.

    இது இந்தியாவில் இல்லை  என்று சொல்லலாம் அல்லவா?
     
    படத்திற்கு நன்றி:
     
    http://www.bbc.co.uk/news/world-us-canada-20091303
     

    Share
  • மாத்தி யோசி

     

    முகில் தினகரன்
     

    ‘ஏங்க…ஒரு நிமிஷம் இருங்க…உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

    குனிந்து காலில் ஷூவை மாட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் திவாகரன் தலையைத் தூக்கி ‘சாவித்திரி….நான் ரொம்ப அவசரமாக் கிளம்பிட்டிருக்கேன்…சாயந்திரம் சொல்லக் கூடாதா உன்னோட அந்த முக்கியமான விஷயத்தை…?”

    ‘ப்ச்…இது நம்ம பொண்ணு கலைவாணி சம்மந்தப்பட்ட விஷயம்ங்க” என்று அவள் சொன்னதும் பரபரப்பானார் அவர்..

    ‘என்னது…கலைவாணி சம்மந்தப்பட்ட விஷயமா?…என்ன சொல்லு…சொல்லு”

    ‘நம்ம பொண்ணு மொட்டை மாடில உட்கார்ந்து படிச்சிட்டிருக்கும் போது….எதிர்த்த வீட்டுப் பையன்….”

    இன்ஸ்பெக்டர் நெற்றியைச் சுருக்க,

    ‘அதாங்க..எப்பப் பாரு மோட்டார; பைக்குல ‘டர்;..டர்;”ன்னு போயிட்டு வந்திட்டிருப்பானே?….அவன்தான்… அவங்க வீட்டு மாடில நின்னுட்டு இவளையே நோட்டம் விட்டுக்கிட்டு….அப்பப்ப கை காட்டிட்டு…சேட்டை பண்ணிட்டே இருக்கானாம்…நேத்திக்கு…. நேத்திக்கு….” அவள் தயங்க,

    ‘என்ன நேத்திக்கு?” கத்தலாய்க் கேட்டார் இன்ஸ்பெக்டர்;.

    ‘ஃப்ளையிங் கிஸ் குடுக்கறானாம்…பாவம் இவ…இப்ப மொட்டை மாடிக்குப் போகவே பயப்படறா..”

    ரத்தம் கொதித்தது இன்ஸ்பெக்டருக்கு ‘ராஸ்கல்…என்ன தைரியமிருந்தா ஒரு இன்ஸ்பெக்டரோட மகள்கிட்டேயே உன் வேலையைக் காட்டுவே?” ஆவேசமாய் எழுந்து தெருவில் இறங்கி எதிர் வீட்டை நோக்கி நடந்த கணவனை ஓடி வந்து தடுத்தாள் சாவித்திரி.

    ‘எங்க போறீங்க,…கொஞ்சம் பொறுமையா இருங்க…இது நம்ம பொண்ணு சம்மந்தப்பட்ட விஷயம் கொஞ்சம் நிதானமாத்தான் கையாளணும்”

    அவள் பேச்சை சிறிதும் சட்டை செய்யாமல் எதிர்; வீட்டு கேட்டிலிருந்த காலிங் பெல்லை தன் கோபத்திற்கு வடிகாலாக்கி அழுத்தினார்.

    கர்ண கடூரமாய் அலறிய அந்த காலிங் பெல்லின் ஒலி எதிர் வீட்டு இளைஞனின் தந்தையை உடனே வாசலுக்குக் கொண்டு வந்தது.

    வந்தவரிடம் அவரது அருமைப் புத்திரனின்  சேட்டைகளைச் சொல்லி ‘பார்த்து அடக்கி வைங்க…இல்லைன்னா நான் என் போலீஸ் வேலையைக் காட்ட வேண்டி வந்துடும்…” எச்சரித்தார் இன்ஸ்பெக்டர்..

    அந்த நபரோ இன்ஸ்பெக்டரின் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் சிறிதும் அஞ்சாதவராய் ‘ஹல்லோ…மிஸ்டர் இன்ஸ்பெக்டர்… இது ரெண்டு பேர் சம்மந்தப்பட்ட விஷயம்…. அப்படியிருக்க என் பையனை மட்டும் எப்படித் தப்பு சொல்ல முடியும்?….உங்க பொண்ணை விசாரிச்சீங்களா?…விசாரிங.க..அதுகிட்டேயும் ஏதாவது தப்பிருக்கும்…ஏன்னா பொண்ணுக சைடுல இருந்து வரவேற்பு இல்லாம பசங்க எதுவும் செய்ய மாட்டாங்க”

    சற்றும் தயக்கமின்றி அவர் தன் மகளின் மேல் அபாண்டத்தை வீச ஆக்ரோஷமானார் இன்ஸ்பெக்டர் திவாகரன்.

    ‘யோவ்..ஏதோ வயசுல பெரியவரா இருக்கியேன்னு மரியாதை குடுத்துப் பேசினா ரொம்ப ராங்கா பேசறியே… உன்னையும்…உன் பையனையும் ஏதாவதொரு கேஸ்ல புக் பண்ணி… ஸ்டெஷனுக்குக் கொண்டு போய் லாடம் கட்டினாத்தான் திருந்துவீங்க போலிருக்கு”

    ‘அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க இன்ஸ்பெக்டர்.….உன்னைய விடப் பெரிய ஆளுங்கெல்லாம் என் கைக்குள்ளார இருக்காங்க….நான் நெனைச்சா..உன்னையே தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திடுவேன் தெரியுமா?”

    மீசை துடித்தது இன்ஸ்பெக்டருக்கு.  ‘ராஸ்கல்…என்னவொரு தெனாவெட்டு”

    ‘த பாருய்யா…கடைசியாக் கேட்கறேன்….உன் பையனை நீ கண்டிச்சு வைக்கறியா?..இல்லை நானே கண்டிக்கட்டுமா?”

    ‘வேண்டாம் இன்ஸ்பெக்டா;…அவன் என்னைய மாதிரி சாது இல்லை…இன்ஸ்பெக்டர்ன்னு கூடப் பார்க்காம எடுத்த எடுப்புல வீசிடுவான்”

    ‘நாயே…உன்னைய….” பற்களைக் கடித்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் அந்த நபரை நோக்கிப் பாய ஓடி வந்து தடுத்தாள் சாவித்திரி.

    ‘விட மாட்டேண்டி இவனுகளை… பார்த்துடறேன் ஒரு கை…” திமிறியவருடன் மல்லுக் கட்டினாள்.

    சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு கணவனை அங்கிருந்து நகர்த்தி வீட்டிற்குள் கொண்டு வந்தாள்.

    அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

    புறநகர்ப் பகுதியிலிருந்த அந்த லாட்ஜில் திடுமெனப் புகுந்த காவல் துறை ஒவ்வொரு அறையாய் அலசியது.

    கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட அழகிகளும்…பணக்கார வீட்டு இளைஞர்களும் அரைகுறை ஆடையுடன் சிக்க எல்லோரையும் வரிசையாய் ஜீப்பில் ஏற்றினார் இன்ஸ்பெக்டர் திவாகரன்.

    கடைசியாய் ஏறிய இளைஞனைக் கூர்ந்து பார்த்த இன்ஸ்பெக்டர் ‘தம்பீ….நீ? ”

    ‘யெஸ்… உங்க எதிர்; வீட்ல குடியிருக்கற பையன்தான்” என்றான் வெகு அலட்சியமாய்

    ‘ஆஹா…கெடைச்சுதுடா சான்ஸ்…இது போதும் இவனையும் இவன் அப்பனையும் மானம் கெட வைக்க” மனம் குதூகலித்தது இன்ஸ்பெக்டர் திவாகரனுக்கு.

    அதே நேரம் மனதின் இன்னொரு மூலையிலிருந்து இன்னொரு குரல் எழும்பியது ‘பழி வாங்கும் குணம் என்பது ஒரு அநாகரீகமான குணம்…அது உனக்கு இருக்கலாமா?…இவனைப் பெத்தவன்தான் ஒரு மூடன்…முட்டாள்…மகனை வளர்க்கத் தெரியாமல் வளர்த்து அவனுடைய எதிர்காலத்தையே பாழாக்கிக் கொண்டிருக்கற ஒரு பைத்தியக்காரன்… அவனைப் பழி வாங்குவதாய் நினைத்து ஒரு இளைஞனின் எதிர்காலச் சூன்யத்திற்கு நீயும் காரணமாகலாமா?…யோசி திவாகர்…எதையும் மாத்தி யோசி..மாத்தி யோசி”

    சில விநாடிகள் குழப்பத்தில் உழன்றவர்; சட்டென்று தெளிந்து ‘தம்பி…நீ வண்டில ஏற வேண்டாம்…என் கூட வா”

    ‘ஏன் இன்ஸ்பெக்டர்?…எதுக்கு என்னையத் தனியா கூப்படறீங்க?”

    அவன் அப்படிக் கேட்டது பக்கத்தில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளுக்கு எரிச்சலை உண்டு பண்ணி விட ‘டேய்…அய்யா கூப்பிட்டா போகாம…கேள்வியா கேட்கறே?” லத்தியால் அவனை விளாசினார;.

    அடுத்த நிமிடமே இன்ஸ்பெக்டரைப் பின் தொடர்ந்தான்.

    லாட்ஜின் ரிசப்ஷன் ஷோபாவில் அவனை அமர வைத்து ‘கூப்படு தம்பி உங்கப்பாவை…கூப்பிட்டு உடனே இங்க வரச் சொல்லு”

    தயங்கியபடியே கூப்பிட்டவன் தலை குனிந்து அமர;ந்தான். உள்ளுக்குள் தாறுமாறான எண்ணங்கள் தறிகெட்டு ஓடின. ‘என்ன பண்ணப் போறான் இந்த ஆளு?… நான் இவன் பொண்ணைப் பார்த்து செஞ்ச சேட்டைக்கெல்லாம் பழி வாங்கும் விதமா என்னையும் எங்கப்பாவையும் போட்டோ எடுத்து நாளைக்கு எல்லாப் பத்திரிக்கையிலும் போட்டு…மானத்தை வாங்கப் போறான் போலிருக்கு”

    இருபதே நிமிடத்தில் அலறியடித்துக் கொண்டு வந்த அவன் தகப்பனிடம் கான்ஸ்டபிள் விபரத்தைக் கூறி இன்ஸ்பெக்டரிடம் அழைத்து வர,

    திவாகரனைக் கண்டதும முகம் மாறினார் அவர் ‘அய்யய்யோ…இவனா?”

    ஆனால் இன்ஸ்பெக்டர் திவாகரனோ ஒரு சிறிய புன்னகையுடன் அவரை நெருங்கி அவர்; தோளில் கையைப் போட்டு ‘பயப்படாதீங்க மிஸ்டர்…பயப்படாதீங்க…. நான் உங்களை மாதிரியில்லை…காக்கி உடுப்பையும்…சல்யூட்டையும் மட்டும்தான் விறைப்பாய் வைத்திருப்பேன்…மனசை அல்ல”

    அந்த நபர் குழப்பமாய் இன்ஸ்பெக்டரையே பார்க்க,

    ‘சார;…இந்தக் காலம் நம்ம காலம் மாதிரியில்லை…இளவயசுப் பசங்க கெட்டுப் போறதுக்கான சாத்தியக் கூறுகள் இப்ப ஏராளம்…நாம்தான் அவர்களை அப்படியெல்லாம் கெட்டுப் போகாத மாதிரி வழி நடத்திக் கூட்டிட்டுப் போகணும்…நாம அதைச் செய்யாம பசங்களுக்கு சுதந்திரம் குடுக்கறதா நெனைச்சுக்கிட்டு அவங்க எதிர;காலத்தைக் கோணலாக்கிட்டிருக்கோம்…அன்னிக்கு கொஞ்சமும் யோசிக்காம என் பொண்ணு மேல எப்பேர்ப்பட்ட ஒரு அபாண்டத்தை வீசினீங்க?…அதை நான் மனசுல வெச்சுக்கிட்டு எனக்குக் கெடைச்ச இந்த சான்ஸை வேற மாதிரி உபயோகிச்சா உங்க மகனோட எதிர்காலம் என்னவாகும்னு யோசிச்சுப் பாருங்க…”

    ‘சார்…அது…வந்து…அன்னிக்கு….”

    ‘த பாருங்க…பழி வாங்க கெடைச்ச சந்தர்ப்பத்தை ஏன் அவங்களைத் திருத்தறதுக்கு கெடைச்ச சந்தர்ப்பமா ஆக்கினா என்னன்னு மாத்தி யோசிச்சேன்…அதனாலதான்… மத்தவங்களையெல்லாம் ஸ்டேஷனுக்கு அனுப்பிட்டு உங்க பையனை மடடும் தனியா வெய்ட் பண்ண வெச்சேன்!”

    பேசிக் கொண்டிருக்கும் போதே ‘தடால் ” என தன் காலில் விழுந்த தந்தையையும் மகனையும் தொட்டுத் தூக்கிய இன்ஸ்பெக்டர் ‘பரவாயில்லை…என் எண்ணம் ஜெயிச்சிடுச்சு…நீங்க உணர்ந்துட்டீங்க…இது போதும் எனக்கு” என்று சொல்லிவிட்டு  வேக வேகமாய் நடந்து ஜீப்பில் ஏறினார்..

    (முற்றும்)

     

    Share
  • மனக் கிளியே !

     

    செழியன்

    மனக்  கிளியே !  (மனைவியே)
    புரிதலும் -தெரிதலும்  கொண்ட
    உன்னிடத்தில்
    என்னுடைய  கல்லூரி காதலை
    சொல்லும்  போதெல்லாம்
    எனக்கில்லையே …..
    மன…..கிலியே .!

     

    Share
  • தமிழார்வம் : [2]: திரிகடுகம்: ‘நல்லாதன் மருந்து’

     

    இன்னம்பூரான்

    சிறப்புப் பாயிரம்

    உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
    அலகு இல் அக நோய் அகற்றும், நிலை கொள்
    திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
    மருவு நல்லாதன் மருந்து.

    செல்வத் திருத்துளார் செம்மல், செரு அடு தோள்
    நல்லாதன் என்னும் பெயரானே-பல்லார்
    பரிவோடு நோய் அவியப் பன்னி ஆராய்ந்து,
    திரிகடுகம் செய்த மகன்.

    2.1. உடல் நலம் பேணுவதற்கு, திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு திப்பிலி ஆகிய மூன்று மூலிகைகளும் இன்றியமையாதவை. தமிழ்ச்சங்கத்திற்கு ‘நல்லாதன்’ பரிவுடன் கொடுத்த அருமருந்தாகிய திரிகடுகம் என்ற இந்த நூல், மும்மூன்று அறநெறிகளை பகர்ந்து, அவை மனநலம் பேணுவதற்கு ஆதாரமாக அமைந்துளன என்று சிறப்புப் பாயிரம் அருமை சாற்றுகிறது  ‘உயிர் நலம்’ பேணுவது என்பது விருத்தியுரையில் உள்ள பாடம்:

    “… மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைஒத்து, இந் நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப்பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம். இந்த ஒப்புமைகருதியே இந் நூல் திரிகடுகம் என்னும் பெயர் பெற்றுள்ளது…”

    சிறப்புப்பாயிரம் ‘உரையில்’ (1934) காணக்கிடைக்கவில்லை. நல்லாதனார்  பரிவுடன் ஆராய்ந்து, ஆராய்ந்து அளித்த இந்த நூல் ஆத்ம 4:56 AM 10/31/2012விசாரணைக்கும் உதவும் என்பதை விருத்தியுரை கூறுகிறது என்று எனக்கு தோன்றுகிறது.   ‘மன மர்ம’ முடிச்சுகளை தளர்த்தி விட (‘அகநோய் அகற்ற’) இந்த ‘திரிகடுகம்’ என்ற நூல் உதவும் என்று தாம் சிறப்புப் பாயிரம் கூறுகிறது என்ற எண்ணம் என் மனதில் மேலோங்கி நிற்கிறது.

    2.2. “திரிகடுகம்’ ஒரு உவமையாகு பெயர். ஒன்றன் பெயர் தனக்குரிய பொருளை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். ( எடுத்துக்காட்டு: நாடு தவிக்கிறது.)” (தமிழ் இணையக்கழக பாடபுத்தகம்)

    பொருள் முதல் ஆறோடு அளவை சொல் தானி கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
    ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதைத்
    தொல்முறை உரைப்பன ஆகுபெயரே  [நன்னூல் 290]

    “பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயரை அடிப்படையாகக் கொண்டவையும், எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் முதலான அளவைப் பெயர்களும், சொல், தானி, கருவி, காரியம், கருத்தா முதலானவையும் தம்மோடு தொடர்புடைய வேறு பொருளுக்குப் பெயராகிப் பழங்காலம் முதல் சொல்லப்பட்டு வருவன ஆகுபெயர் என்பது இதன் பொருள்.” (தமிழ் இணையக்கழக பாடப்புத்தகம்)

    (தொடரும்)

    இன்னம்பூரான்
    30 10 2012

    1. மாணவர் தளம்: தமிழார்வம்

    2.தமிழார்வம்: ‘திரிகடுகம் போலும் மருந்து’

     

    Share
  • “அத்தை எங்கே கூப்பிடு “

     

    விசாலம்

    அது நான் சிறுமியாக  இருந்த காலம் .எங்கள் குடும்பத்துடன் என் அத்தையும் கூட இருந்தார் .எங்கள் குடும்பத்திற்கே  அவர் ஒரு தூண் என்றே சொல்லலாம் நான் பிறப்பதற்கு முன்னாலேயே  ,அவர் எங்கள் குடும்பத்திற்குள் புகுந்து விட்டார் .  1930லிருந்து என் அப்பாவுடன்  வந்தவர்  அவருடனேயே தங்கி விட்டார் .தனக்கென்றே வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து காட்டியவர் . அவர் அந்தக்காலத்திலேயே ஆண் ஆதிக்கத்தை வெறுத்தவர் . தன் கணவருக்குக்கீழ்படிந்து  வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து, விறகடுப்பு  ,புகை  தினமும் 15 பேருக்குச்சமையல்  என்று சமையல் அறையைவிட்டு வெளியே வாராமல் இருந்தாலும் அவருக்கு வாய்த்த கணவர் ஒரு ஹிட்லர் போல் இருந்தாராம் அவரிடம் முதலில் பயந்து பயந்து . அடி உதைகளும் வாங்கிக்கொண்டு  பொறுமையுடன் தான் இருந்தார் அவர் ..ஆனால் பின்னால் தான் இந்த கஷ்டத்திலிருந்து விடு பட தனியாக இருந்து காட்டவேண்டும் என்று அந்தக்காலத்தில் நினைத்த புரட்சிப்பெண் அவர் .அவர் என் அப்பாவிடம்  அடைக்கலம் பெற்ற சம்பவத்தை என்னிடம் கூறினார்

    ஒரு நாள் என் அத்தை  தோசைக்கு மிளகாய்ப்பொடி உரலில் இடித்துக்கொண்டிருக்க அந்த ஹிட்லர் கணவர் அவரை அழைத்தாராம்  . அங்கு கூடத்தில் சீட்டுக்கச்சேரி களைக்கட்டிக்கொண்டிருந்தது சீட்டு விளையாடுபவர்களுக்குச்  சூடான காபி கொண்டுவர குரல் கொடுத்தார் ”ஏண்டி எத்தனை தடவ கூப்பிடறது உன்னை …. செவிடாடி நீ! முண்டம் முண்டம் ‘ என்றுச்சொல்லி கத்தினாராம் . என் அத்தைக்கு இதைத்தாங்கிக்கொள்ளும் இதயம் இல்லை . எல்லா நண்பர்களுக்கெதிரில் இப்படி ஒரு அவமானமா என்று புழுங்கினார். பின் “நான் மிளகாய்ப்பொடி இடிச்சுண்டிருக்கேன் .இப்ப என்னாலே அங்க வரமுடியாது ‘ என்று பதில் கொடுத்தாள் .

    ஹிட்லர் அத்திம்பேருக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன .  ,, பாதி ஆட்டத்தில் எழுந்து உள்ளே வந்தாராம்   அத்தையின் முடியைப்பிடித்து இழுத்தார் . போன ஜன்மத்தில் துச்சாசனனாக இருந்திருப்பாரோ என்னமோ !  கோபம் என்று ஒன்று வந்தால் கண்மண் தெரியாதே . யோசிக்கும் சக்தி எங்கேயோ ஓடி ஒளிந்துகொண்டுவிடும் போலிருக்கு . அங்கு பொடித்து வைத்த மிளகாய்ப்பொடியை கையில் அள்ளினாராம் நேராக என் அத்தையின் கண்களில் வீசினாராம்  ஐயோ இது என்ன கொடுமை கண்கள் போயிருந்தால் என்ன செய்வது ?

    ” ஆ  ஆ எரியறதே  கண்ணு போச்சே  இப்படி ஒரு மனுஷனா நீ ” என்று முதல் தடவையாக “நீ ” என்று அவரை அழைத்து கண்களை அலம்ப கொல்லையை நோக்கி ஓடினாராம் .

    கண்களில் எரிச்சல் அதிகமாக எதிர் வீட்டு மாமியுடன் கண் டாக்டரிடம் தானே சென்று வந்தார் .மறு நாள் இரண்டு புடவைகளுடன் ரயில் ஏறி பம்பாய்க்கு என் அப்பாவிடம் அடைக்கலம் புகுந்தார் .அவரது கணவரும் அவரைத்தேடி வந்தோ அல்லது செய்த காரியத்திற்கு மன்னிப்பு கேட்டோ செய்யவில்லை . தன்னிஷ்டப்படி ஜாலியாக இருக்க ஆரம்பித்தார் அந்த மனிதர்  .

    என் அத்தையின் வயது அப்போது சுமார் 25 இருக்கலாம்   .அன்றைய தினத்திலிருந்து எங்கள் குடும்பத்திற்கு எல்லாமே எங்கள் அத்தைதான் அவரை வாழாவெட்டி என்று ஒருவரும் சொன்னதில்லை தவிர அவர் ஆசிகளுடன் ஆரம்பிக்கும் காரியம் மிகவும் நலமாகவே முடியும் . அவரில்லாமல் எங்கள் குடும்பமே இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது .அவரது புக்காத்தில் 14 வயதில் நுழைந்தவர் ஒரு பத்து வருடம் நரக வாழ்க்கை வாழ்ந்து புரட்சியுடன் வீட்டை விட்டு தன் தம்பியின் குடும்பத்திற்கே தன்னை அர்ப்பணித்த அவர் எனக்கு தெய்வம் போல் தெரிகிறார் .எங்கள் வீட்டு டாக்டர்  வக்கீல் . ஆடிட்டர்  சமையல் ஹெட்டு எல்லாமே அவர்தான் .

    அவரது டாக்டர் அவதாரத்தில் கேட்டவை

    “ஏண்டி லொங்கு லொங்குன்னு இருமறே .இஞ்சியை நெருப்ல சுட்டு பனங்கல்கண்டு சேத்து அரைச்சு தரேன் சளி துப்ப வந்துடும் கபம் போயிடும் .

    தொண்டை வலியா  இரு  இதோ ஒரு மருந்து தரேன்  என்று சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்து அதை வறுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைப்பார் பின் அதில் தேன் கலந்து தருவார்

    உடல் வலியுடன் வீக்கம் இருந்தால் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து வீங்கிய இடத்தில் ஒத்தடம் கொடுப்பார் மழைக்காலத்தில் மிளகு கஷாயம் நிச்சயம் உண்டு

    “மாமி உடம்பு ரொம்ப பருத்து போறது  என்ன செய்யலாம் என்று  ஒரு மாது வந்து சந்தேகம் கேட்க அதற்கும் பதில் ரெடியாக இருக்கும்

    “வா  ஜானகி வா   உடம்பு குண்டாப் போச்சுன்னு கவலைப்படாதே . கொஞ்சம் சிக்கை பொடி செஞ்சிக்கோ  ராத்திரி ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் கலக்கி  படுக்கப் போறச்ச சாப்பிட்டு வா .வேண்டாத கொழுப்பு கரைஞ்சுபோய்டும்  .

    என் அம்மாவிடம்  ” இத பார்   சரஸ்வதி  அடுத்த மாசம்  தீபாளி வரது இந்த மாசம்  நூறுக்கு மேலே சிலவு போகாம பாத்துக்கப்போறேன் அப்பத்தான் தீபாளிக்கு குழந்தைகளுக்கு டிரெஸ்க்கு தாராளமாக சிலவு செய்யமுடியும்  . இரண்டு மாசம் முன்னாடியே  ஒரு நூறு சேர்த்துட்டேன்  “என்று ஆடிட்டர் ரோலை எடுத்துக்கொள்வார்

    இது போல் பல அவதாரங்களுடன் எங்களுக்காகவே உழைத்த என் அத்தையின்  ஞாபகம் எனக்கு அடிக்கடி வருகிறது . இந்தக்காலத்தில் இது போல் அத்தை  மாமா உறவுகள் திரும்பி தழைக்குமா  ? தன் வாழ்க்கையே குடும்பத்திற்காக  தன் திருமணம் பற்றிக்கூட எண்ணாமல்  மருமாள் மருமானுக்காகவும்   தன் சகோதர குடும்பத்திற்காகவும் வாழும் அத்தைகள் இன்று கிடைப்பார்களா? அத்தை மடி மெத்தையடி என்ற பாட்டு திரும்ப பாட வாய்ப்பு வருமா ? யோசிக்கத்தான் வேண்டும் .    .

    Share