தமிழார்வம் : [2]: திரிகடுகம்: ‘நல்லாதன் மருந்து’

0

 

இன்னம்பூரான்

சிறப்புப் பாயிரம்

உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
அலகு இல் அக நோய் அகற்றும், நிலை கொள்
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
மருவு நல்லாதன் மருந்து.

செல்வத் திருத்துளார் செம்மல், செரு அடு தோள்
நல்லாதன் என்னும் பெயரானே-பல்லார்
பரிவோடு நோய் அவியப் பன்னி ஆராய்ந்து,
திரிகடுகம் செய்த மகன்.

2.1. உடல் நலம் பேணுவதற்கு, திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு திப்பிலி ஆகிய மூன்று மூலிகைகளும் இன்றியமையாதவை. தமிழ்ச்சங்கத்திற்கு ‘நல்லாதன்’ பரிவுடன் கொடுத்த அருமருந்தாகிய திரிகடுகம் என்ற இந்த நூல், மும்மூன்று அறநெறிகளை பகர்ந்து, அவை மனநலம் பேணுவதற்கு ஆதாரமாக அமைந்துளன என்று சிறப்புப் பாயிரம் அருமை சாற்றுகிறது  ‘உயிர் நலம்’ பேணுவது என்பது விருத்தியுரையில் உள்ள பாடம்:

“… மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைஒத்து, இந் நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப்பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம். இந்த ஒப்புமைகருதியே இந் நூல் திரிகடுகம் என்னும் பெயர் பெற்றுள்ளது…”

சிறப்புப்பாயிரம் ‘உரையில்’ (1934) காணக்கிடைக்கவில்லை. நல்லாதனார்  பரிவுடன் ஆராய்ந்து, ஆராய்ந்து அளித்த இந்த நூல் ஆத்ம 4:56 AM 10/31/2012விசாரணைக்கும் உதவும் என்பதை விருத்தியுரை கூறுகிறது என்று எனக்கு தோன்றுகிறது.   ‘மன மர்ம’ முடிச்சுகளை தளர்த்தி விட (‘அகநோய் அகற்ற’) இந்த ‘திரிகடுகம்’ என்ற நூல் உதவும் என்று தாம் சிறப்புப் பாயிரம் கூறுகிறது என்ற எண்ணம் என் மனதில் மேலோங்கி நிற்கிறது.

2.2. “திரிகடுகம்’ ஒரு உவமையாகு பெயர். ஒன்றன் பெயர் தனக்குரிய பொருளை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். ( எடுத்துக்காட்டு: நாடு தவிக்கிறது.)” (தமிழ் இணையக்கழக பாடபுத்தகம்)

பொருள் முதல் ஆறோடு அளவை சொல் தானி கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதைத்
தொல்முறை உரைப்பன ஆகுபெயரே  [நன்னூல் 290]

“பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயரை அடிப்படையாகக் கொண்டவையும், எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் முதலான அளவைப் பெயர்களும், சொல், தானி, கருவி, காரியம், கருத்தா முதலானவையும் தம்மோடு தொடர்புடைய வேறு பொருளுக்குப் பெயராகிப் பழங்காலம் முதல் சொல்லப்பட்டு வருவன ஆகுபெயர் என்பது இதன் பொருள்.” (தமிழ் இணையக்கழக பாடப்புத்தகம்)

(தொடரும்)

இன்னம்பூரான்
30 10 2012

1. மாணவர் தளம்: தமிழார்வம்

2.தமிழார்வம்: ‘திரிகடுகம் போலும் மருந்து’

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *