Blog

  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 20

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 20

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 77Mukkonakkilikal - 78Mukkonakkilikal - 79Mukkonakkilikal - 80

     

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

     

     

     

    Share
  • நீயே தவம்!

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக (45)

    நீயே தவம்!

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE/[/mixcloud]

    10616225_590718837705442_5172244511758978034_n
    நீயே தவம் நீயே வரம்
    நீயே நெஞ்சில் நிரந்தரம்
    நினைவில் கனவின் மலர்கள் விரியும் தினம் தினம், உன்
    நிழலினொளியில் தானே எந்தன் சுதந்திரம்!

    மது மயங்கும் மதுவே கண்ணாய்த் திறந்தது
    மனது பாவம் விண்ணைத் தாண்டிப் பறந்தது
    இதயம் முழுதும் அன்பின் வெள்ளம் நுழைந்தது
    எனது உனது என்னும் எண்ணம் மறந்தது

    தலைகோதும் தென்றல் காற்றே! அலைதூண்டும் நிலவே!
    நிலைமாறும் நெஞ்சுக்குள்ளே நின்றாடும் உறவே!
    இடைவிடாமல் அன்பால் என்னைக்
    கொல்லும் முல்லைப் பூவே! புயலே!

    உனதுமுகம் கனவினில் வரும்நிலவா?
    கனவிலொரு மறைவினில் எழும்மலரா?
    உனதுமனம் காதலின் திருவனமா?
    வனம்முழுதும் கணந்தொறும் வளர்ந்திடும் கடவுளும் தொழும் சுகமா?

    கவிதையுருவாகும் பேரழகே
    காலம்தடு மாறும் கண்ணழகே
    தவித்தமனம் தத்தித்தத்தி அடைந்திடும் மெத்தைமடி தனிலெனைத்
    தாலாட்டிடும் குரலே! நெஞ்சில்நிதம்
    தாளமிடும் விரலே!

    (நீயே தவம்)
    சொல்லில் சொல்ல முடியாதம்மா உன் நேசம்
    விலக விலக வளரும் விந்தை உன் பாசம்
    எல்லை தாண்டி உந்தன் அன்பின் எழில் வீசும்
    எண்ணமெங்கும் கன்னம் குழையும் ஒரு வாசம்

    உயிரெல்லாம் உனதே என்னும் உணர்வொன்றே எனது
    பயிர்போல மழையே உனையே பார்த்து ஏங்கும் மனது
    எல்லைகள் தீரும் வேளை
    எதிரே வந்தாய் இதுவே உறவு

    கண்களென்ன மின்னல்களின் கனவா?
    கனியிதழ்கள் அமிழ்தம் தரும் சுனையா?
    வானவில் பட்டுப்பட்டுக் கன்னங்களில் தொட்டுவிளையாடுவது
    நாணமெனும் சுவையா?

    நீயெனது உயிர்வருடும் விரலா?
    உயிருள்ளில் ஊடுருவும் விழியா?
    விழியாலே கொஞ்சிக்கொஞ்சி நெஞ்சிலெங்கும் பஞ்சுப்பஞ்சுப் பறப்பதைப்
    பார்த்துச் சிரிக்கும் ரதியா?

    (நீயே தவம்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்
    crazy
    “பாரதக் குட்டு பரந்தாமன் சக்கிரத்,
    தேரதின் சுற்றலைத் திட்டமிட , -வாரணக்,
    COPYISTடும், வேதக் கதைவசன கர்த்தாவும்,
    HAPPYயாய்WAI TINGFOR ஹரி”….கிரேசி மோகன்….

    பாரதக் குட்டு -Writers Block ….

    Exactly!  Writers and thinkers block. It is the space gained by vyasa to write his next verse. 
    (Vinayaka has a condition that Vyasa should not stop dictating his verses, and Vyasa poses a counter condition that vinayaka should understand the work before writing it. So, vyasa composed complicated verses to gain time ) 
    This is one such occasion.  🙂
    Mind blowing verses in a short time. Spring of imagination flows. 

    Thanks and regards, 

    Keshav

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டெம்பர் 8, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. பாலமுருகன்அவர்கள்

     

    sa.balamurugan

    நம்நாடு தொன்மை நிறைந்த நாடு, தொன்மையான மரபுச் செல்வங்கள் குவிந்து கிடக்கும் நாடு.  பெரும்பாலோருக்கு அவற்றின் அருமையும் பெருமையும் தெரிவதில்லை. அவற்றைப்  பாதுகாக்கவும் முன் வருவதில்லை.  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியகத்தின் துணை வட்டாட்சியரான  திரு. பாலமுருகன் அவர்கள்  “நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும்” பற்றிய முறைகளைப் பற்றிய திட்டம் ஒன்றை வகுத்துக் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டதுடன், அதனை அத்துறை ஆய்வறிஞர்கள் கருத்தரங்கிலும்  வழங்கியுள்ளார்.  தமிழக மரபுச் செல்வங்களைக்  காக்க முன்னெடுத்த இவரது  முயற்சிக்காக இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

    தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று பாரதி பெருமிதம் கொண்டு பாடியதை இக்கால மக்கள் அறிவோம்.
    ஆனால் …..
    தென்குமரி வட பெருங்கல்
    குணகுட கடலா எல்லைத்
    தொன்று மொழிந்து தொழில் கேட்ப…”
    — மதுரைக்காஞ்சி   (70-72)

    என்ற மதுரைக்காஞ்சி பாடலிலேயே நம் நாட்டின் தொன்மை குறிப்பிடப்படுகிறது. இங்கே ‘தொன்று மொழிந்து’ என்பது பாண்டிய மன்னன்  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் குறித்து, ‘மிகவும் பழங்காலந்தொட்டுத் தொடர்புடையராயுள்ளமையைப் பாராட்டிச்  சொல்கிறது’ இந்தப் பாடலின் வரிகள்.  இதனால் தமிழத்தின் தொன்மை நன்கு புலப்படுகிறது.  உண்மை நிலை இவ்வாறிருந்தும் நம் மரபுச் செல்வங்களைப் பாதுகாப்பது பற்றி வெகு சிலரே அக்கறை காட்டுகிறார்கள்.  அவர்களிலும் பலர் வாய்ச்சொல்லோடு நிறுத்தியும் விடுகிறார்கள்.  பாதுகாக்கும் செயலில் இறங்குபவர்கள் அதனினும் குறைவு.  அவ்வாறு ஆர்வமுள்ளவர்கள் தொழில் முறையில் தொல்லியல் துறையில் பணியாற்றுபவர்களாக இல்லாததும் வியப்புக்குரியதாக இருக்கிறது.  இத்தகைய செயல் மரபுச் செல்வங்கள் மீது இவர்கள் கொண்ட ஆர்வத்தைக் காட்டுகிறது.  இந்த ஒரு சில ஆர்வலர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவகத்தில் துணை வட்டாட்சியராகப் பணிபுரியும் திரு. பாலமுருகன் அவர்கள்.

    துணை வட்டாட்சியரான இவரது பணியில் இவரது பொறுப்பு மின் ஆளுமைத்திட்ட ஒருங்கிணைப்பாளராக செயலாற்றுவது. படித்தது  எம்.சி.ஏ மற்றும் எம்.எஸ்.சி. புவியியல். எந்த வகையிலும் தொல்லியியல் துறைக்கும் இவருக்கும் தொடர்பு இல்லை என்றாலும்  தமிழ்நாடு, சமூகம், பண்பாடு, வரலாறு போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். ஓய்வு பெற்ற தமிழ், தலைமை ஆசிரியரின் மகனான பாலமுருகனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற ஊர்.  அவரது  ஊரில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயமும் மலைக்கோயிலும் இவரை வரலாறு, கல்வெட்டு, நடுகற்கள் போன்றவற்றின் மீது கவனம் கொள்ள வைத்தன என்கிறார் இவர்.

    இப்பொழுது அவரது ஊரில் உள்ள கோயில் வரலாற்றை கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து எழுதி வருகிறார். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற வரலாற்றுத் தடங்களையும் ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிடவும் இவர் திட்டமிட்டுள்ளார்.  தமிழ், தமிழக வரலாறு, தொல்லியல், சூழலியல் தொடர்பான துறைகளில் ஆர்வமுள்ள பாலமுருகன், குறிப்பாக வரலாறு மற்றும் தொல்லியல்  முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அதைப்பாதுகாப்பதற்கும் முயற்சிகளை முன்னெடுக்க ஆர்வமாக உள்ளார்.

    மேலும், தேவிகாபுரம் பற்றிய வரலாறு, புகைப்படங்கள் பற்றி விக்கிபீடியாவிலும் பங்களித்து வருகிறார். அண்மையில் நடந்த தமிழ்விக்கிபீடியா ஊடகப்போட்டியில் இவரது தேவிகாபுரத்தில் கைத்தறி பட்டுசேலை நெசவு குறிக்கும் புகைப்படம் தமிழர் தொழிற்கலைப்பிரிவில் பரிசு பெற்றுள்ளது.

    days-of-the-hero

    கடந்த ஜூன் மாதம் “நடுகற்கள்” என்ற தலைப்பில் தொல்லியல் துறை நடத்திய, தென்னிந்தியவின் சமூக வரலாற்றை அறிய உதவும் நடுகற்கள் பற்றிய இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் (The Days of Heroes) ஒன்றில் அத்துறையின் ஆய்வறிஞர்கள் பலர் பங்கு பெற்றனர். இக்கருத்தரங்கத்தில் “நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும்” என்ற தலைப்பில் பாலமுருகன் தனது கருத்துக்களையும் ஒரு கட்டுரையாக முன்வைத்துள்ளார்.

    தமிழ் மரபில் இறந்து போன வீரர்களுக்கு ஈமக்கடன் ஈந்து கல் நட்டு வழிபடுவது தொன்மையான வழக்கம்.  இவ்வாறு நடப்பட்ட நடுகற்கள் வீரர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக இறந்தவர் நினைவாகவும் நடப்படுவதுண்டு. நீத்தோர் நினைவாக நடுகற்கள் நடும் மரபு சங்க காலம் முதற்கொண்டு தமிழகத்தில் இருந்து வந்துள்ளதை  “காட்சி கால் கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று இரு மூன்று மரபிற் கல்லொடு புணர” எனத் தொல்காப்பியம் வழி அறிய முடிகிறது.  பெரும்பாலும் நடுகற்கள் ஊர்களின் புறத்தே காணப்படுகின்றன. ஒரே போரில் இறந்த பல போர்வீரர்களுக்கும் நடுகற்கள் ஒரே இடத்தில் காணப்படுவதும் உண்டு. தமிழக  தொல்லியல் துறையினரால் புலிமான்கோம்பையில் (தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம்) கி. மு. 3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டன. இந்நடுகற்களே இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டவற்றில் மிகப்பழமையானவை என்ற பெருமை வாய்ந்தவை.

    sa.balamurugan2தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரவிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான வரலாற்று நினைவுச்சின்னங்களில் ஒரு சில மட்டுமே அரசாலும் ஆர்வலர்களாலும் பாதுகாக்கப்படுகின்றன. வரலாற்று ஆர்வலர்கள் தற்போது நடுகற்கள் பற்றிய தரவுகளைத் திரட்டவும், ஆய்வு செய்யவும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் ஊர்தோறும் உள்ள நடுகற்களின் அமைவிடம், அவற்றின் தற்போதைய நிலை அவற்றைப் பாதுகாக்கவும் பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உருவாகியுள்ள தேவையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்ற  வழிமுறைத் திட்டங்களை  தனது கட்டுரையின் வாயிலாக பாலமுருகன் கருத்தரங்கில்  பகிர்ந்து கொண்டார்.

    நடுகற்கள் முதலான மரபுச்சின்னங்களைப் பாதுகாப்பதும் அவற்றை முறையே பேணுவதும் அரசாங்கத்தின் கடமை என்றாலும் அரசாங்கமே அனைத்தையும் பேண முடியாது என்பதே உண்மை. எனவே, வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்க முடியும். அதனால் வரலாற்று ஆர்வலர்கள் செய்யவேண்டியன:

    1. மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் ஏற்படுத்துதல்

    2. மாவட்டத்தில் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் (நடுகற்கள், கோட்டைகள், சிலைகள், பழைய மண்டபங்கள், இராச பாட்டை மற்றும் பல) பற்றிய கணக்கெடுத்தல்

    3. நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் தொடர்பான பயிற்சி அளித்தல்

    4. நடுகற்கள் பற்றிய முழுமையான தொகுப்புப்புத்தகம் உருவாக்கி  விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

    5. நடுகற்கள் தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய தனி வலைத்தளம் அமைத்தல்

    6. நடுகற்கள்/மரபுச்சின்னங்களை வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவித்தல் தொடர்பாக அரசை வலியுறுத்துதல், அதன் தொடர்பாக அரசு உதவியுடன் மாவட்ட மரபுச்சின்னங்கள் வரைபடம் (District Heritage Map) உருவாக்குதல்

    என்ற வழிமுறைகளை விளக்கியுள்ளார் பாலமுருகன்.  மேலும் மரபுச்சின்னங்கள் வரைபடம்  தயாரித்தலைப் பற்றிய விரிவான திட்டத்தையும் குறிபிட்டுள்ளார் பாலமுருகன். அத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுகற்களையும் கணக்கெடுப்பு பணி செய்து முடித்த பின்பு மாவட்ட வாரியாகப் பிரித்து மாவட்ட வரைபடத்தில் அந்நடுகற்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளச் செய்யவேண்டும். இதற்கு மாவட்ட மரபுச்சின்ன வரைபடம் (District Heritage Map) எனப் பெயரிடலாம். இதற்குத் தற்போது புவியிடங்காட்டு முறைமை [Global positioning system (GPS)] / புவியியல் தகவல் முறைமை [geographic information systems (GISs)] என்ற தொழில் நுட்பம் பெரிய அளவில் உதவும். இத்தொழில் நுட்பத்தின் மூலம் ஒரு நடுகல்லின் அதன் அமைவிடம் நிலநேர்க்கோடு, நிலக் கிடைக்கோடு (Latitude and Longitude) என்ற அளவில் வரைபடத்தில் குறிக்கலாம். இதன் மூலம் இந்நடுகற்கள் பிற்காலத்தில் இடம்பெயர்வு ஏற்பட்டாலும், அவை காணாமல் போனாலும் கண்டுபிடிக்க உதவும்.

    எடுத்துக்காட்டாக அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் உள்ள 15 நடுகற்களையும் தொழில்நுட்ப உதவி கொண்டு வரைந்த வரைபடத்தின் மாதிரிகளையும் கருத்தரங்கில் காட்சிப்படுத்தியுள்ளார். அத்துடன் 1. மரபுச் சின்னங்களின் தொகுப்புப் பட்டியல் மற்றும் 2. மரபுச் சின்னங்கள் கணக்கெடுப்புப்  படிவம் ஆகியவற்றையும் வடிவமைத்துக் காட்டியுள்ளார்.

    sa.balamurugan3sa.balamurugan4

    மரபுச் செல்வங்களை பாதுகாப்பது என்று பேசிக் கொண்டே இருக்கும் பெரும்பாலோர்  போல அல்லாமல், செயல்முறை நடவடிக்கையில் இந்த இந்த வழிமுறையில் முன்னெடுத்துச் செல்லலாம் என்று வழி வகுத்துக்  காட்டிய பாலமுருகன் அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    வல்லமையாளரைப்  பாராட்ட விரும்புவோருக்காக அவரது தொடர்புத் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
    ச.பாலமுருகன் (S.Balamurugan)
    துணை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியகம், திருவண்ணாமலை
    Phone: 90475 78421
    Email: balu_606902@yahoo.com
    இணைய முகவரிகள்
    1. www.devikapuram.in
    2. www.devigai.blogspot.in
    3. www.facebook.com/devikapuram (The birth place of King krishnadeveraya)

    குறிப்பு: தகவல் வழங்கிய அகர முதல இதழுக்கு நன்றி.  திரு. பாலமுருகனின் கருத்தரங்கக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் அகர முதல இதழில் இந்த சுட்டியைச் சொடுக்கிப் படிக்கலாம்

    நடுகற்கள் பற்றிய தகவல்:
    http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/natukal.htm

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     
    Share
  • என்னத்தைச் சொல்ல! – 3

    இன்னம்பூரான்.

     

    பகை படையெடுக்கலாம். உள்ளிருந்தும் புகையலாம். ஏன்? பாலிலும் வரலாம்.

    சூடான செய்தி: ஆவின் பாலில் இலவச குளிர்பானமாக வந்து அமைச்சர் தலையை காவு வாங்கலாம் ! வாங்கிடிச்சுண்ணு சில மணி நேரம் முன்னால் தினமலர் கூறியது.

    இன்னம்பூரான்செய்தித்துகள் கூட்டம்:
    ‘மேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் ஆவின் பால், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பதப் படுத்தப்பட்டு, தினமும், 2 லட்சம் லிட்டர் வீதம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 20ம் தேதி, திண்டிவனம் அருகே, கோவிந்தாபுரத்தில், சென்னை ஆவினுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை, போலீசார் சோதனை செய்ததில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, வேலூர், ஆவினில் வேலை செய்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., ஜ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், போலீசார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவினுக்கு சென்று, ஐந்து நாட்களாக விசாரணை செய்தனர்.சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில், தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை அனுப்பியிருந்தனர்… சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஆவின் பால் நிறுவனம், திருவண்ணாமலை பகுதியில் இருந்து, தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால், டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. பால் நிரப்பி அனுப்பும் டேங்கரை, மறைவான இடத்தில் நிறுத்தி, குறிப்பிட்ட அளவு பாலை திருடி, அதே அளவில், தண்ணீரை டேங்கரில் நிரப்புவது தினமும் நடந்து வந்துள்ளது…கோவிந்தாபுரம் அருகே வயல்வெளியில், ஆவின் டேங்கர் லாரியில் (டி.என்.19: எக்ஸ் 3618) இருந்து, 40 லிட்டர் கொள்ளளவுள்ள, 40 கேன்களில், திருடிய பாலை நிரப்பி, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, எடுத்து செல்ல தயாராக வைத்திருந்தனர். திருடிய பாலுக்கு மாற்றாக, அதே அளவில், டேங்கரில் தண்ணீர் ஊற்றி நிரப்பியிருந்தனர்.இதில், ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்தது… தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது, மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன… பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

    எல்லாம் மார்க் ட்வைய்ன் சங்கேத மொழிகள் தான். நல்லவேளை, ‘பாலில் தண்ணீர் கலப்பதாகச் சொல்லப்படுகிறதாம். தண்ணீரில் பால் கலப்பதாகவும் கேள்விப்படுகிறோம். ஆவினம் ஆவின் மீது வழக்குத் தொடரப்போகிறதாம். தருமமிகு சென்னையின் மஹாலிங்க நகரில் வாந்தி பேதியாம். அதற்கு காரணம் பாலில் கலந்த சாக்கடை நீர் என்று சில ஊடகங்கள் கூறுவதை வன்மையாகக் கண்டித்த ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் காரணம் கூற அடக்கத்துடன் மறுத்து விட்டனவாம். வாம்! வாம்!’ என்று எந்த நாளிதழும் எழுதவில்லை.’ கற்பனை போதும்.

    இந்த நாசகார வேலையில் எத்தனை பேர் எத்தனை வருடங்களாக ஈடுபட்டிருந்தனர்? அந்த காலத்தில் அரசியில் கல்லும் கிராமஃபோன் ஊசியும் கலப்பது உண்டு. தேயிலையில் குதிரைச்சாணி கலப்பதற்கே என்று இருந்த களவு தொழிற்சாலைகள் என்ன ஆயின? ஆகமொத்தம் மக்களுக்குத் தெரியாமலா இந்த கலவை நடந்திருக்கும்?

    இது எல்லாம் உள்ளிருந்து புகைச்சலா? என்னத்தைச் சொல்ல?

    இன்னம்பூரான்
    06 09  2014

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:http://photos.thenews.com.pk/tasveer_images/2012-11-17/large/2_201211170304100202.jpg

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • தாமரைக் கண்ணாள்…

    இசைக்கவி ரமணன்

    தாமரைக் கண்ணாள்…

    (நேற்று மதியம். வேலை. அயர்வு. கொஞ்சம் காற்று தேவைப்பட்டது. இலக்கின்றிச் சற்றே ஊர்சுற்றப் போனேன். ஒரு முண்டகக் கண்ணி ஆலயம் அழைத்தது. முகமே மொத்த உருவமாக, அகன்ற கமலக் கண்களே முகமாக அமர்ந்திருக்கும் அவள் எதிரே சற்று அமர்ந்தேன், உயிரில் ஓர் ஆசுவாசம் நேர்ந்தது)

    470

     

    தாமரைக் கண்ணியின் முன்னிலையில்1545644a-6cc1-4b2c-8b67-9ce52cb2b54a_S_secvpf

    தவழும் குழந்தை போலுள்ளேன்

    நான்மறை போற்றும் நாயகியை

    நாவில் அமர்ந்து மொழிபவளை

    ஒமெனச் சொல்லி உயிர்முனையில்

    உணர்வை நிறுத்திச் சுடர்பவளை

    நாமம் உருவம் அருவமெலாம்

    நடத்தும் விழிகளில் நான் கரைந்தேன்!

     

    ஒளியின் ஊற்றே இவள்விழியோ?amman

    உயிருக் குயிர்தரும் சாமரமோ?

    களியின் வசந்தக் கதவுகளோ?

    கருணைக் கடலின் கரையலையோ?

    தெளிவே அருளத் திறந்தவிழி

    தேவையைத் தீபமாய் ஏற்றும்விழி

    அளித்து மகிழவே அகன்ற விழி

    அமிழ்தின் வழியதைப் பணிகின்றேன்!

     
    காணக் காண வினைகளெலாம்eb608269-8b12-4845-8268-b62b2a8b2cd6_S_secvpf

    காடு காடாய் எரியுதடா!

    பேணப் பேணச் சிறியமனம்

    பெருவெள் ளத்தில் புரளுதடா!

    பூண இயலாப் பூரணத்தில்

    பொருந்திக் கரைந்து போவென்றே

    ஆணை யிட்டே ஈர்க்கின்ற

    அழகு விழிகளைப் பணிகின்றேன்!

     

    விரிந்த விழிகளின் பொன்னொளியில்amma

    வீழ்ந்து மறைவதே வெற்றியடா!

    தெரிந் தழைக்கும் தெய்வத்தின்

    திசையில் கிடத்தல் முக்தியடா!

    பரிந்து நமையே பார்ப்பவளைப்

    பார்த்து வாழ்வதே பக்தியடா!

    சரிந்த கணத்தினில் சந்தித்த

    சக்தியின் விழிகளைப் பணிகின்றேன்!

     

    எங்கோ எதற்கோ திரிந்தவன் முன்durga_face

    எதேச்சையாக எதிர்ப்பட்டாள்

    தங்க இடமின்றித் தவித்தவனைத்

    தழுவி முகந்து மடிவைத்தாள்

    சிங்க முதுகில் நின்றபடி

    சிரித்துப் பிடரி சிலுப்புமென்

    தங்க மனதுத் தாயவளின்

    தாமரைக் கண்களைப் பணிகின்றேன்!

     

     

     

    07.09.2014 / ஞாயிறு

    Share
  • குறளின் கதிர்களாய்…(39)

    -செண்பக ஜெகதீசன்

    சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
    சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (திருக்குறள் – 267: தவம்)

    jag

    புதுக் கவிதையில்…

    சுடவைத்துச் சுடவைத்துப்
    பொன்னை உருக்கி நகைசெய்தால்,
    பொலிவாகும் மேலும்…

    இது போல
    இடுக்கண் பலவந்து மேலும்
    இன்னல் கொடுத்தாலும்,
    இன்னும் மேம்படும் துறவு…!

    குறும்பாவில்…

    சுடச்சுட மெருகேறும் பொன்போல,
    துன்பம் பலவந்து
    தூயதாக்கும் துறவை…!

    மரபுக் கவிதையில்…

    திரும்பத் திரும்பச் சுடவைத்துத்
    தீயினில் காட்டி உருகவைத்து,
    விருப்பம் போல நகைசெய்தால்
    வியக்கும் வகையில் பொலிவுறுமே,
    சிரமம் மிக்க துன்பங்களும்
    சேர்ந்தே வந்து தொடர்வதனால்,
    தரமது உயரும் துறவினுக்கே
    தானே சிறக்கும் தவவாழ்வே…!

    லிமரைக்கூ…

    பொன்மிளிரும் தொடர்ந்து தீயினில் சுட்டால்,
    தவவாழ்வு சிறந்திடுமே
    தாக்கும் துன்பத்தைத் தொடர்ந்திட விட்டால்…!

    கிராமிய பாணியில்…

    பவுனுயிது பவுனுயிது
    பத்தரமாத்துப் பவுனுயிது,
    பதுக்கி அதயே வைக்காம
    புதுசா சொலிக்கும் நகசெய்ய
    ஒலைல வச்சு சூடாக்கி
    உருக்கணுமே
    திரும்பத் திரும்ப தீயிலதான்…

    இதுபோல
    தும்பம் தொடந்துவந்தாலும்
    அதத்
    தாங்கும் மனசு வருவதாலே
    தொறவு பெரும தெரிஞ்சிருமே,
    சனங்க மதிக்கும் சாமியார…!

    Share
  • அப்பாவை அணைத்திடுவோம்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    தேரிலே சாமி வந்தால்
    தோளிலே தூக்கி வைத்துப்
    பாரடா என்று காட்டும்
    பாங்கினை மறக்க மாட்டேன்!                         father and son

    ஊரிலே உள்ளார் எல்லாம்
    உன்மகன் உதவானென்று
    நேரிலே வந்து சொன்னால்
    நிமிர்ந்தொரு பார்வை பார்ப்பார்!

    கவலைகள் படவும் மாட்டார்
    கண்டதை உண்ண மாட்டார்
    தெருவிலே சண்டை வந்தால்
    திரும்பியே பார்க்க மாட்டார்!

    அடிதடி வெறுத்து நிற்பார்
    ஆரையும் தூற்ற மாட்டார்
    உரிமையாய் உதவி நிற்பார்
    ஊரிலே எங்கள் அப்பா!

    பொய் அவர்க்குப் பிடிக்காது
    புளுகுவதை வெறுத்திடுவார்
    மெய்பேசி நின்று விட்டால்
    விரும்பியவர் அணைத்து நிற்பார்!

    உண்மையே பேசு என்பார்
    உழைப்பையே நம்பு என்பார்
    எண்ணமெலாம் இனிதாக
    இருக்கவே வேண்டும் என்பார்!

    அன்பாக இரு என்பார்
    அனைவர்க்கும் உதவென்பார்
    அசடனாய் வாழாதே
    அறிஞனாய் உயரென்பார்!

    பலகதைகள் ஊடாக
    பண்புகளை வளர்த்திட்டார்
    பாரில் நான் வாழ
    பாதையே அப்பாதான்!

    அப்பாவை அருகில்வைத்தால்
    அனைவருக்கும் அதிர்ஷ்டம்தான்
    அப்பாவை அலைய விட்டால்
    அனைவர்க்கும் அசிங்கம்தான்!

    அப்பாவை அணைத்திடுவோம்
    அவரருகில் நாமிருப்போம்
    எப்போதும் அப்பாவை
    ஏற்றியே போற்றிடுவோம்!!

    Share
  • லஞ்சம், ஊழல் ஒழியுமா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    180px-Logo_Court_Hammer_Logo‘இந்து’ ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் அந்தப் பத்திரிக்கையில் வந்த சில செய்திகளை அதே தேதியில் மீண்டும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. லஞ்சத்தையும் ஊழலையும் கிரிமினல் குற்றங்களையும் அரசு ஊழியர்களிடமிருந்து ஒழிக்க 1964 செப்டம்பரில் மத்திய அரசு புதுச் சட்டங்களை இயற்றத் தீர்மானித்ததாக செப்டம்பர் 5, 1964-ஆம் தேதியிட்ட ஐம்பது வருஷங்களுக்கு முந்தைய ‘இந்து’வில் வந்த செய்தியை செப்டம்பர் 5, 2014 தேதியிட்ட இந்து வெளியிட்டிருக்கிறது. அவை என்னென்ன சட்டங்கள் தெரியுமா? பிரிட்டிஷ் அரசு காலத்திலேயே 1944-இல் இயற்றிய இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code), ஊழல் தடுப்புச் சட்டம் (The Code of Criminal Procedure), 1952-இல் இந்திய அரசு இயற்றிய குற்றத் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act and Criminal Law Amendment Act) என்று இன்னும் சில சட்டங்களில் இந்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. சுதந்திரம் அடைந்து பதினேழு வருஷங்களுக்குப் பின், இந்தச் சட்டங்கள் வலுவற்று இருந்ததால் அவற்றைத் திருத்தி எழுதி வலுவுள்ளதாக மாற்ற அப்போதிருந்த அரசு முயன்றிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களையும் அரசு ஊழியர்களோடு சேர்த்து இந்தச் சட்டங்களின் கீழ் கொண்டுவந்தது முக்கியமான திருத்தம்.

    பிரிட்டிஷாரை வெளியேற்றி நாட்டுக்குச் சுதந்திரம் பெற எத்தனையோ பேர் சுதந்திரப் போரில் குதித்தார்கள். சுயநலம் எதுவுமில்லாமல் மிகத் தீவிரமாகப் போரில் கலந்துகொண்டார்கள். அப்படிக் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் சுதந்திர இந்திய அரசில் பங்கேற்றபோது ஊழல் செய்ய முற்பட்டார்கள். சுதந்திரப் போரில் தீவிரமாகப் பங்கேற்காதவர்களும் அரசில் நிறைய ஊழல்செய்ய ஆரம்பித்தர்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இயற்றப்பட்ட சட்டங்கள் ஊழல்களையும் லஞ்சத்தையும் ஒழிக்கப் போதவில்லை என்பதால் மறுபடி அவற்றைத் திருத்தி அமைக்க அரசு முற்பட்டது.

    அறுபதுகளில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துகொண்டிருந்தது. அப்போது அங்கொருவர், இங்கொருவர் என்று ஒரு சிலர் ஊழல் புரிந்தார்கள்; லஞ்சம் வாங்கினார்கள்; குற்றங்களில் ஈடுபட்டார்கள். அதன் பிறகு நிறைய மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளும் ஆட்சியைப் பிடித்தன. அது ஒன்றே காரணம் இல்லையென்றாலும் அதுவும் ஊழல் அதிகரிக்க வழிகோலியது.

    அப்போது இத்தனை தனியார் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இவற்றை ஆரம்பிக்க, நடத்த, மாணவ, மாண்விகளைச் சேர்க்க என்று இப்போது லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சாதாரணமாக நடைபெறுகிறது. ஆசிரியர்கள் பணம் பெற்றுக்கொண்டு தேர்வுகளில் மதிப்பெண்கள் கொடுப்பது போன்ற செயல்கள் அப்போது நடந்திருக்கலாம். ஆனாலும் இப்போது போல் அவை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் புகுமுக வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அட்மிஷன் கொடுப்பது அன்று சரியாகப் பின்பற்றப்படவில்லை. என்னோடு படித்த ஒரு பெண், ‘தேவையான அளவு மதிப்பெண்கள் (minimum) வாங்கிவிடு. அதன் பிறகு மருத்துவக் கல்லூரியில் உனக்கு அட்மிஷன் வாங்குவது என் பொறுப்பு’ என்று தன் தந்தை கூறியதாகப் பெருமையாகக் கூறிக்கொள்வாள். ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ‘என் மகளுக்கே அட்மிஷன் கொடுக்கவில்லை. நான் சம்பந்தப்பட்டவர்களைக் கூப்பிட்டுக் கூறிய பிறகுதான் கொடுத்தார்கள்’ என்றார். இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அவை அரிதாகத்தான் நடந்தன. அன்று நிறையப் பணப் புழக்கம் இல்லை.

    மத்திய, மாநில அமைச்சர்களும் நண்பர்களுக்கு, வேண்டியவர்களுக்குச் சில சலுகைகள் கொடுத்தார்களே தவிர இப்போதுபோல் பணம் பெற்றுக்கொள்ளவில்லை. உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு சலுகைகள் செய்து கொடுப்பது (Nepotism) எந்த நாட்டிலும் இல்லாமல் இருக்காது. புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இது இருந்தது பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பல சட்டங்கள் இயற்றி ஐம்பது ஆண்டுகள் ஆன பிறகும் ஊழலும் லஞ்சமும் பல மடங்கு பெருகிப் பேயாட்டம் போடுவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை. ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் இவற்றை ஒழிக்காதது மட்டுமல்ல, இவை பல மடங்கு பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன்?

    இடையில் எழுபதுகளில் ஜனதா கட்சியும், தொண்ணூறுகளில் பா.ஜ.க.வும் மற்ற கட்சிகளோடு சில ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அமைத்ததைத் தவிர சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ்தான் மத்தியில் ஆட்சிபுரிந்து வந்திருக்கிறது. ஊழலும் லஞ்சமும் ஒழிக்கப்படாமல் போனதற்கு காங்கிரஸ் மட்டும்தான் காரணமா? இடையில் மாற்று ஆட்சி அமைத்த மற்றக் கட்சிகளும் ஒன்றும் செய்யவில்லையே.

    rti-new

    தொண்ணூறுகளில் என் தந்தை இறந்த பிறகு அவருடைய பிறப்புச் சான்றிதழ் பெற தாலுக்கா அலுவலகத்திற்கு நான் பல முறை சென்றேன்; அங்கு வேலைபார்க்கும் பலரின் கேலிக்கு உள்ளானேன். இப்போது பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை கணினி மூலமே பெற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். ஊழல் ஒழிய இது ஒரு படி. நிர்வாகம் கணினி மூலம் வெளிப்படையானால் (transparent) அலுவலர்களின் பை நிறைவதைக் குறைக்கலாம். தகவல் பெறும் உரிமை என்னும் சட்டம் நிர்வாகத்தை வெளிப்படையாக்க உதவும். இவற்றாலெல்லாம் லஞ்சம், ஊழல் ஒழியலாம் என்னும் நம்பிக்கையை மக்கள் மனதில் வளர்க்கலாமா என்று தெரியவில்லை.

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 39

    கே.ரவி

    போன பகுதியில் சொன்னேனே, ஷோபனாவின் தம்பி தன் வாழ்வைத் தானே முடித்துக் கொண்டான் என்று, அந்தச் சம்பவம் நடப்பதற்கு முதல்நாள், 1981-ஆம் ஆண்டு ஜூன் மாதம், என் மனத்தில் ஒரு கவிதை உதித்தது. அந்தக் கவிதைக்கும் அந்தத் துயர நிகழ்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், உதித்த போதே, ஏனோ, அந்தக் கவிதை எனக்கு ஒரு நடுக்கம் தந்தது. அதைத் தாளில் எழுதவில்லை. மறுநாள், மாலை அதை ஒரு தாளில் எழுதத் தொடங்கினேன். எழுதி முடிக்கும் போதே வாசலில் ஓர் அழுகுரல் கேட்டு ஓடினேன். ஷோபனாவின் சித்தி மகள் ப்ரீத்தி அழுது கொண்டே தன்னுடைய அண்ணன் தன்வாழ்வைத் தானே முடித்துக் கொண்டுவிட்டான் என்ற துயரச் செய்தியைச் சொல்லி என் தோள் மேல் சாய்ந்து கொண்டு கதறினாள். இதை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு. அன்று நான் எழுதி வைத்த கவிதையைப் பிறகு வெகு நாட்கள் பிரித்துப் படித்துப் பார்க்கத் துணிவின்றி வைத்து விட்டேன். போன பகுதியில் சொன்னதுபோல், 1983-ஆம் ஆண்டு சாயி பாபா கோயில்; சபரிமலைக்கு வர ஒப்புதல்; டாக்டர் நித்யானந்தம் காட்டிய ஆன்மிகப் பாதை; இப்படி ஒரே சமயத்தில் என் மனத்தில் ஒரு மாற்றம் உருவான பிறகே, ஒருநாள் அந்தக் கவிதையை எடுத்துத் துணிந்து படித்துப் பார்த்தேன். வியப்பாக இருந்தது. ஆன்மிக நாட்டம் என்னுடைய மனத்தின் மேல்தளத்தில முளைவிடும் முன்பே, ஏதோ ஓர் இனம் தெரியாத, உடல் கடந்த உன்மத்தம், ஓர் உள்ளுளைச்சல், ஓர் ஆழ்மன வேதனை என்னை உலுக்கி இருக்கிறது என்பதை அந்தப் பாடல் எனக்கு உணர்த்தியது. தெய்வ நம்பிக்கை இல்லை என்று நான் கற்பித்துக் கொண்டது கூடச் சரியில்லையோ?

    சரி, அந்தக் கவிதையை இப்போது சொல்கிறேனே, நீங்கள் படிக்கவும்,

    கேட்கவும் (சொடுக்கினால் கேட்கலாம்):

    உள்ளே

    இருந்து கொண்டே சிரிப்ப தென்றால்

    இலக்கியம் என்பார் – என்னைப்

    பிளந்து கொண்டு வெளியே வந்தால்

    பிச்சி என்பாரோ

    சொற்களுக்குள் அடைபடாதே சூலமேந்திப் புறப்படு

     

    அந்தி வானச் செந்தழல்போல் விழிசிவந்திடு

    அர்த்த ஜாமக் காரிருள்போல் குழல்விரித்திடு

    நீலம்பாய்ந்த அலைகடல்போல் வடிவெடுத்திடு

    பிச்சியென்றும் பேதையென்றும் பேரெடுத்திடு

    சொற்களுக்குள் அடைபடாதே சூலமேந்திப் புறப்படு

     

    நிச்சயத்தை நிர்ணயத்தை நீயுடைத்திடு

    அச்சமென்ற திரைவிலக்கி ஆர்ப்பரித்திடு

    உச்சிவெய்யில் துச்சமென்று புன்னகைத்திடு

    பிச்சியென்றும் பேதையென்றும் பேரெடுத்திடு

    சொற்களுக்குள் அடைபடாதே சூலமேந்திப் புறப்படு

     

    மெளனமென்ற கானகத்தில் மூண்டுவிட்ட தீ

    மூங்கிலோடு மோதவந்த காற்றுமோகி னீ

    மொழிச்சதங்கை சிதறிப்போக நடனமாடு நீ

    விழியெதற்கு மொழியெதற்குன் உலகமே தனி

    உன்னைப்

    ப்ரதிபலிக்கக் காத்திருக்கும் சிறிய பனித்துளி

    நானுன்னைப்

    ப்ரதிபலிக்கக் காத்திருக்கும் சிறிய பனித்துளி

    இப்பொழுதும் ஏனோ இந்தக் கவிதையைச் சொல்லும் போதும், எண்ணும் போதும் உள்ளுக்குள் ஒரு நடுக்கம் வருகிறது. எல்லாவற்றுக்கும் நமக்குக் காரண, காரியம் தெரிந்து விடுகிறதா என்ன?

    as2அப்படியானால், ஆன்மிகத் தாகம் என் நெஞ்சின் ஆழத்தில் எப்பொழுதுமே பொதிந்திருந்ததோ? அந்தக் கவிதை வருவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே வந்த இன்னொரு கவிதை நினைவில் நிழலாடுகிறது. ஆம், ஆன்மிக நாட்டமே எப்பொழுதும் என் ஆழ்மனத்தின் அடிநாதமாக இருந்திருக்கிறது என்பதை அந்தப் பழைய கவிதை உறுதி செய்கிறது.

    அந்தக் கவிதை உதித்தது 1978-ஆம் ஆண்டு மார்ச் மாதம். தொலைக்காட்சியில், நந்தனாராகத் தண்டபாணி தேசிகர் தோன்றி, “ஐய்யே மெத்தக் கடினம்” என்று பாடியதைப் பார்த்துக் கேட்டு ரசித்த அன்று இரவே அக்கவிதை உதித்தது. அதை இப்பொழுது நீங்கள் படிக்கத் தருகிறேன்.

    (சொடுக்கினால் கேட்கலாம்):

    நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்

    நந்தி விலகவில்லை

    அனுபவத்தின் முன்னே – எந்தன்

    அறிவு பெருந்தொல்லை

     

    உலக வீதியில் ஓடியாடியே

    ஓய்ந்து போனதென் மனம் – இன்று

    உண்மை வீதியில் உனது வாசலில்

    உருகி நிற்பதென் தவம்

    தெய்வம் என்றுநான் தேடவில்லை – வெறும்

    தீபம் ஒன்றுதான் தேடி நிற்கிறேன்

    நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்

    நந்தி விலகவில்லை

     

    கண்கள் கூப்பிக் காத்து நிற்கிறேன்

    கவிதையாகவே அழுகிறேன்

    எண்ணம் என்பதே ஏக்கமாக – நான்

    இருப்ப தென்பதே மறந்து போக

    நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்

    நந்தி விலகவில்லை

     

    உன்

    நகலை மட்டும் ஏந்திக் கொண்டு

    மனிதர் கூட்டம் போவதுண்டு

    நிழலும் தெரியவில்லை – என்

    நினைவு தெளியவில்லை

    தேகம் என்பதே தேய்ந்து போக – ஒரு

    தாகம் என்பதே வடிவம் ஆக

    நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்

    நந்தி விலகவில்லை

     

    கண்கள் பார்ப்பதாம் – செவிப்

    பறையர் கேட்பதாம்

    ஜாதி பேதங்கள் செய்கிறார் – இவை

    யாவும் ஒன்றிடும் ஞான மன்றில் நீ

    ஒளிந்திருப்பதை அறிந்துதான்

    ஐந்து வாசல் தாண்டி – நானும்

    ஆர்வத்தோடு வந்தேன் -உன்

    ஞான வாசல் முன்னே – த்வஜ

    ஸ்தம்ப மாகிவிட்டேன்

    இந்தப் பாடல்கள் சொல்லும் கதையென்ன? அந்தக் காலக் கட்டத்தில் எனக்குள் ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த கதையைத்தான் இவை சொல்கின்றன. என்ன போராட்டம்? யாருக்கும் யாருக்கும் போராட்டம்?

    கடவுள், தெய்வம், உயிர்நிலையாகிய ஆன்மா! இவற்றைப் பற்றிய போராட்டம். அறிவுக்கும் ஆழ்மனத்துக்கும் இடையில் போராட்டம்! நம்ம புத்தி சிகாமணிக்கும், மனோன்மணிக்கும் நடுவில் நடந்த கணவன்-மனைவி பூசல்தான் அது என்று புரிந்து கொண்டேன். இந்தப் பூசலைத்தான் டாக்டர் நித்யானந்தம் மூலமாக ஷிர்டி சாயிபாபா தீர்த்து வைத்தாரோ? இந்தக் கதையைத்தான் இப்படித் திக்கித் திணறிச் சொல்ல முற்பட்டேனோ? சொல்லி விட்டேனா? புரிந்து விட்டதா?

    ஆன்மிக நாட்டம் ஏற்பட்டதற்குச் சில மாதங்களுக்கு முன், 1982, ஆகஸ்ட் மாதம், ஒருவழியாக, ‘ஸ்பரிசம்’ திரைப்படம் வெளியானது. அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அது நல்ல முறையில், நல்ல திரையரங்கங்களில் வெளியிடப்படாததும், மலையாள டப்பிங் படமோ என்று எண்ண வைத்த தலைப்புமே அதன் தோல்விக்குப் பெரிதும் காரணமாயின. ஆனாலும் அதன் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனக்கு ஒரு குறை, அதில் இடம் பெற்ற ஓர் அருமையான பாடல் அதிகம் கவனிக்கப் படாமல் போனதே. ஆம், பெற்றோர்களின் கண்டிப்பால் கதாநாயகனைக் கதாநாயகி சந்திக்க முடியாமல் தனிமையில், வீட்டுச் சிறையில் வாடிய துயரத்தை, எனக்குத் தெரிந்த வரை இவ்வளவு அழகாகவும், சுருக்கமாகவும் வேறு எந்தப் பாட்டின் பல்லவியும் சொல்லி யிருக்க முடியாது.

    உறக்கமிலா இரவுகள் இரக்கமிலா உறவுகள்

    (சொடுக்கினால் கேட்கலாம்)

     

    நச்சென்று, பொட்டில் தெறித்தாற் போல் இருக்கிறதா? இது பொன்னெழுத்தில் பொறிக்கப் பட வேண்டிய பல்லவி என்பதைக் காவிரி மைந்தன் போன்ற திரைப்படப்பாடல் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். நான் கேட்டவுடன் அந்த அருமையான பாடலை எழுதித் தந்தவர் நண்பர் வ.வே.சு.தான்.

    படம் வெற்றி பெறாத ஏமாற்றத்திலிருந்தும், அதனால் ஏற்பட்ட பண நெருக்கடியிலிருந்தும் நான் சில மாதங்களிலேயே சற்று விடுபட்டேன். அப்படி விடுபட்டு, மீண்டும் அமைதி திரும்பிய நிலையில்தான் ஆன்ம விடுதலை நோக்கி என் மனம் திரும்பியது என்று கூடச் சொல்லலாம்.

    நான் ஆன்மிகப் பாதைக்கு ஆற்றுப் படுத்தப் பட்டதற்கு இன்னொரு திசையிலிருந்து நான் பெற்ற தெளிவும் உதவியது. மேற்கத்திய நாடுகளில் தோன்றிய தத்துவ மேதைகளில், ரெனே டேகார்ட், இம்மானுவெல் கன்ட் ஆகியோருக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த தத்துவ மேதைகளில், சோரென் கீர்க்ககார்ட் என்ற டேனிஷ் சிந்தனையாளரும், ஹென்ரி பெர்க்ஸன் என்ற ஃப்ரெஞ்ச் தத்துவ மேதையும், விட்ஜன்ஸ்டைன் என்ற ஆஸ்ட்ரிய சிந்தனையாளரும் குறிப்பிடத் தக்கவர்கள். அதே போல் இந்தியச் சிந்தனையாளர்களில், ‘மாண்டூக்ய காரிகா’ என்ற பெயரில், மிகச்சிறிய, ஆனால் மிக ஆழமான, நூலின் ஆசிரியர் கெளடபாதர் என்னை மிகவும் பாதித்தார். அவர், ஆதிசங்கரரின் குருநாதர் என்று சுட்டப்படும் கோவிந்த பாதரின் குருநாதர் என்று சொல்லப்படுகிறது. இவர்களுடைய சிந்தனைகளை 1975-78 ஆண்டுகளில், விவேகானந்தா கல்லூரியில், தத்துவத் துறையில், முதுகலை, எம்.ஃபில். வகுப்புகளில் பயின்ற போது படித்து ஓரளவு புரிந்து கொண்டேன். இதனால் ஏற்பட்ட தெளிவும் என் மனமாற்றத்துக்குப் பெரிதும் உதவியது. அவர்களுடைய வாதங்களையும், சிந்தனைகளையும் எடுத்துச் சொல்ல இது இடமில்லை. ஆனால் அவர்கள் மூலம் நான் பெற்ற தெளிவுகளையும், டாக்டர் நித்யானந்தம் அவர்களால் ஊக்குவிக்கப் பட்ட மெய்யனுபவங்களையும், கொஞ்சமேனும் இங்குக் கோடிட்டுக் காட்டாவிட்டால், உங்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால், என் கவிதை வரலாறு முழுமையடையாது. ஆனால் அவற்றையெல்லாம் ஒரே மூச்சில் சொல்லிவிட முடியாது. அடுத்துவரும் பகுதிகளில், அந்தத் தெளிவுகளும் அனுபவங்களும் எப்படி என் கவிதை வாழ்க்கையுடன் சம்பந்தப் பட்டு, அதை நெறிப்படுத்தின என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்கிறேனே.

    (தொடரும்)

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 135

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

    பலிக் கொடை

    சங்கரி! அந்தரி! நிலி!
    சடைமுடியிலே சிவந்த கண்களையுடையவளே!          neeli
    பாம்பினை இளம் பிறையுடன் சூடியிருப்பவளே!
    பாலைவழியில் செல்வோரின் எண்ணிக்கை பெருகி
    அவரிடம் சூறையாடும் எம்தொழில் சிறக்க வேண்டுகிறோம்.
    நேர்த்திக் கடனாய் வலிமையான வில்லினையுடைய 
    எயினர் யாம் வழங்கும்
    பலியை ஏற்றுக் கொள்வாயாக!

    விண்ணில் வாழும் தேவர் அமுதுண்ட போதும்
    தத்தம் காலம் முடியும்போது மரணம் எய்துவர்.
    ஆனால் நீயோ எவருமே உண்ணாத நஞ்சினை
    உண்ட பின்பும் உயிரோடிருந்து
    பிறர்க்கு அருள்செய்வாய்!
    ‘துண்’ என்று ஒலியெழுப்புகின்ற துடி முழக்கத்தோடு
    பகைவர் அனைவரும் உறங்கும் இரவில்
    அவர் ஊருக்குள் புகுந்து
    அங்கிருப்பவரைக் கொன்று
    கொள்ளையிடும் கண்ணோட்டமற்ற
    எயினர் யாம்  வழங்கும்
    பலியை ஏற்றுக் கொள்வாயாக!

    உன் மாமனாகிய கம்சனின் வஞ்சகத்தால் தோன்றிய
    இரு மருத மரங்களின் இடையே
    இடையில் கட்டப்பட்ட உரலுடன் நடந்து சென்று
    அவற்றைச் சாய்த்தும்
    உருண்டு உன் மீது ஏற வந்த சக்கரத்தை
    உதைத்து நொறுக்கியும்
    உயிர்களுக்கு அருள் செய்பவளே!
    வழியில் போவோர் பொருளைப் பறித்துக்கொண்டு
    அவர்களுக்குத் துன்பம் செய்வதைத் தவிர
    எவரிடத்தும் கருணை காட்டாத
    எயினர் யாம் வழங்கும்
    பலியை ஏற்றுக் கொள்வாயாக!

    பாண்டிய மன்னனை வாழ்த்துதல்

    வேதங்களை அருளிய முதல்வனாம்
    சிவனின் தம்பி அகத்தியன்
    எழுந்தருளியதால் சிறப்புப் பெற்றது
    பொறைகளையுடைய உயர்ந்த பொதிகை மலை.
    அம்மலையை உடையவனும்
    வெற்றியை விரும்புபவனும் ஆகிய பாண்டியன்
    பகைவருடைய போர்முனை,
    ஆநிரைகளை மீட்க வரும் அவர்கள் தொழில்
    இவை பாழ்படும் வண்ணம்
    வெட்சி மாலை சூடுவானாக!

    வேட்டுவ வரி முற்றியது.
    அடுத்து வருவது புறஞ்சேரி இறுத்த காதை.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் பாடல்கள் இங்கே:  20 – 23
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*

    படத்துக்கு நன்றி:
    http://alimoongoddess.com/2011/08/09/

    Share
  • சமையலறையில் புரட்சி

    மாதவ. பூவராக மூர்த்தி.

     

    “அங்கிள் காபி” என்று என் மருமகள் அழைத்து என்னிடம் சூடான காபியை நீட்டினாள். உள்ளே இண்டக்க்ஷன் ஸ்டவில் காய்ச்சிய பால். மேடை தன் உருவத்தை மாற்றிக் கொண்டது. இந்த அறுபது வயதில் நான் நான்கு தலைமுறை சமையலையும், சமையல் செய்யும் வழிகளையும் சுவைகளையும் கண்டு விட்டேன். என் நினைவுகள் வழக்கம் போல் பின்னோக்கி நகர்ந்தன.

    stoveதாத்தா வீட்டில் பாட்டி விறகு அடுப்பில் வெங்கலப் பானை வைத்து சமைத்த சமையலை சுவைத்திருக்கிறேன். பாட்டி வீட்டில் மண் அடுப்பும் இரும்பு அடுப்பும் உண்டு. மண் அடுப்பு பாட்டியே பண்ணி வைப்பாள். ஓன்டி அடுப்பு என்றும் ஒரு வாய் துவாரத்தில் இரண்டு அடுப்பு எரியும் அடுப்பும் உண்டு. விறகு எரியும் வேகம் பாட்டியால் கொதிநிலைக்கு ஏற்பத்  தீர்மானிக்கப் படும்.

    எரியும் அடுப்பில் விறகை கூட்டியும், சில சமயங்களில் வெளியே எடுத்தும் பக்குவமாக சமைப்பாள். அதோடு வீட்டில் குமட்டி அடுப்பு உண்டு. இந்த அடுப்பு நம் சிங்கிள் பர்னர் கேஸ் அடுப்பு போன்றது. குமட்டி அடுப்பு அநேகமாக பால் காய்ச்சவும், வெந்நீர் வைக்கவும், பயன்படுத்தப் படும்.

    குமட்டி அடுப்பு பற்ற வைப்பதே ஒரு கலைதான். எரிந்த விறகுகளின் மிச்சமான கரியும், விறகுக் கரியும், லீக்கோ கரியும் முக்கிய எரி பொருளாகும். தேங்காய் உரி நாரும் பேப்பரும் இந்த குமட்டி அடுப்பைப் பற்ற வைக்க உதவும். கொஞ்சம் தேங்காய் நாரை மடித்து சுருட்டி குமட்டியின் பில்லை மேல் வைத்து அதன் மேல் காற்று போகும் இடைவெளியில் கரியை அடுக்கி. கீழே பேப்பரை கொளுத்தி விசிறியால் வேகமாக விசிறி விடுவார்கள்.

    பேப்பரின் தீநாக்கு தேங்காய் நாரைத் தழுவி, அதில் பரவி,அதன் சூட்டை கரிக்குள் பரவ விடும். விசிறியின் வேகம் வெளிக்காற்று எல்லாம் கரியை பாரதி சொன்ன அக்னிக் குஞ்சாக மாற்றும். அது மொத்த குமட்டியிலும் விரிந்து கன கன என்று மிளிரும். அதன் மீது பால் அல்லது நீர் வைக்க நிமிஷமாய் கொதிக்கும். இதில் ஒரு அசௌகர்யம் உடனே அதன் சூட்டைக்  குறைக்க முடியாது.

    சமையலறையில் புகை மண்டுவதாலும் நிதான சமையல் சரிப்படாததாலும் விறகுத் தட்டுப்பாடு வந்தபோது மனிதன் வேறு வழிகளை சிந்திக்கத் துவங்கினான். அப்போது மரத்தூள் அடுப்பு வந்தது. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எங்கள் வீட்டில் உபயோகத்தில் இருந்தது.

    மரம் அறுக்கும் சாமில் போய் மரத்தூள் வாங்கி வருவோம். அது பக்கெட் கணக்கில் கிடைக்கும். ஒரு சாக்கு மூட்டையில் கட்டி சைக்கிளில் அல்லது தலையில் தூக்கி வருவோம்.

    அதை நான் வேடிக்கையாக நாச்சியார் கோவில் கல் கருடன் என்பேன். நாச்சியார் கோவிலில் இருக்கும் கல் கருட வாகனத்தை மண்டபத்திலிருந்து நாலு பேர் மட்டும் தூக்கி வருவார்கள். பிறகு எட்டு பதினாறு முப்பத்திரண்டு என தூக்குவோர் எண்ணிக்கை கூடும். அதுபோலஅருணா சாமில் வாசலில் தலையில் வைக்கும் போது லேசாக இருக்கும் மரத்தூள் மூட்டை வர வர தலையை நெருக்கும். வீடு வந்து இறக்கி வைத்த பிறகு தலை மரத்துப் போயிருக்கும்.

    மரத்தூள் அடுப்பில் நடுவில் ஒரு கட்டை வைத்து உட்புறம் முழுவதும் மரத்தூளை கொட்டி ஜாக்கிரதையாக அமுக்கி கொஞ்சம் நீர் தெளித்து கெட்டியாக்கி வைப்பார்கள். பிறகு லாகவமாக அந்த கட்டையை எடுப்பார்கள். முன் பக்கம் இருக்கும் ஓட்டையை அரித்து எடுப்பார்கள். நம் குழந்தைகள் கடல் மணலில் கட்டும் மணல் கோபுர வாசல் போல் எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஒரே ஒரு சவுக்கு விறகை வைப்பார்கள். விறகு பற்றிக் கொண்டதும் அடுப்பு மஞ்சள் நிறத்தில் நின்று எரியும்.

    காலை ஒரு முறை பற்ற வைத்தால் நடுவில் அணைக்க முடியாது. தொடர்ந்து அடுப்பில் ஏதாவது வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பாதி சமையலில் கூட மரத்தூள் சரிந்து அடுப்பு நின்று விடும்.

    அதிலும் அம்மா சமைத்து நான் சாப்பிட்டிருக்கிறேன். அதன் பிறகு மண்ணெணை ஸ்டவ், பம்ப் அடிக்கும் ஸ்டவ்… அதற்கு  பர்னர் பின் (pin) வாங்கி வைக்க வேண்டும்.  சில இடங்களில் ஸ்டவ் வெடித்து மருமகள் தீக்கிரையான செய்திகள் உண்டு.

    அதன் பிறகு நூடன், உம்ராவ் திரி ஸ்டவ் நடைமுறைக்கு வந்தது. இதில் வட்ட வடிவமாக 10 அல்லது 12 திரிகள் இருக்கும்.வட்டத்தின் உட்புறம் திரியின் வெளிப்புறமும் இரண்டு சிலிண்டர்கள் நுண்ணிய துவரங்களுடன் இருக்கும். திரியைக் கொளுத்தி சிலிண்டரைக் கவிழ்த்தவுடன் நீல நிற ஜ்வாலை வந்து மிகச் சிறப்பாக எரியத் துவங்கும். இந்த ஸ்டவ் காபிக்கும் வெந்நீர் வைக்கவும் மாலை நேரங்களில் டிபன் செய்யவும் பயன்படும்.

    வாரம் ஒரு முறை அந்த திரியை முனை தடவி திரியை ஏற்றி இறக்கும் திருகை சரி செய்ய வேண்டும். கிரஸின் தட்டுப் பாட்டில் இந்த சாதனம் இயங்க முடியாமல் போனது.

    அதன் பிறகு கேஸ் இணைப்பு வரத்தொடங்கியது. அம்மாவுக்கு கேஸ் அடுப்பில் சமைப்பதில் ஒரு பயம் இருந்தது. மேலும் மடி சமையலுக்கு அந்த கேஸ் உதவாது என்று ஒரு நம்பிக்கை. அது காபி அடுப்பாக மட்டும் இருந்தது.

    காஸ் அடுப்பில் சமைக்க என் மனைவி தன்னை தயார் படுத்திக் கொண்டாள். அடுப்பில் மேல் வைக்கும் பாத்திரங்களும் மாறிவிட்டன. பாட்டி அம்மா வைத்த வெண்கலப் பானை சாதம் இல்லாமல் போயிற்று. பிரஷர் குக்கர் வந்தது. மூடி வைத்து கஞ்சி வடிக்காமல் சாதம் வெந்து வந்தது.

    இரும்பு வாணலிக்குப் பதில் இண்டோலியம் மற்றும் காப்பர் பாட்டம் கடாய் வந்தது. அம்மாவுக்கு பழக நாளாயிற்று. என் மனைவி அதில் எக்ஸ்பெர்ட் ஆகிவிட்டாள். பொரிக்க வதக்க துவட்ட எல்லாவற்றிற்கும் இந்த கடாய்தான்.

    காஸ் தட்டுப் பாடு வரும் நாட்களில் ஸ்டவும், திவச நாட்களில் குமட்டியும் கை கொடுத்தன ஒரு பத்து வருடம் வரை. இப்போது எல்லாம் கேஸ் அதற்கு மாற்று எலக்டிரிக் ரைஸ் குக்கர். இண்டக்க்ஷன் ஸ்ட்வ்.

    இப்படி எல்லா வகையில் சமைத்தாலும் நாங்கள் சாப்பிடும் சில அயிட்டங்கள் மாறி விட்டன. குமட்டியில் சுட்டு அம்மா செய்த கத்திரிக்காய் கொஸ்து, இட்லி பானையில்  அவித்தெடுத்த இட்லி, இரும்பு கல்லில் வார்க்கும் தோசை, ஊத்தப்பம், உருளியில் செய்யும் அரிசி உப்புமா அதன் சுரண்டி…எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போனது.

    வெங்கலப் பானையில் செய்த சாதம், கற்சட்டியின் வத்தல் குழம்பு, ஈயச் சொம்பில் ரஸம் இவையும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டவை.

    என் பாட்டியின் கைப் பக்குவம் அப்பாவுக்குப் பிடித்திருந்தது. அம்மாவின் சமையல் எனக்குப் பிடித்திருந்தது. என் மனைவின் சமையல் என் மகனுக்குப் பிடித்திருக்கிறது.

    பதமும் வகைகளும் தலைமுறைகளுக்குத் தலைமுறை மாறித்தான் வருகிறது. சத்து மாவு, மோர்க்களி, பச்சை மா உப்புமா இவையெல்லாம் எங்கள் அப்பாவின் சிறு வயது பலகாரங்கள்.

    சேமியா, கோதுமை மாவு, அரிசி நொய் உப்புமா,சப்பாத்தி எல்லாம் எங்கள் சிறு  வயதுப் பலகாரங்கள்.

    மாகி, நூடுல்ஸ், பிட்சா, பாஸ்தா என் வாரிசுகளின் விருப்பங்கள்.

    நீண்ட நேரம் சமையல் அறையில் நிற்க யாருக்கும் நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை.

    இதற்கு இடையில் ஓவன் வந்து பொரிக்காமல் வறுக்காமல் சாப்பிட வைக்கிறது. நான்-ஸ்டிக் தவாக்கள் தோசையும் சப்பாத்தியும் எண்ணெய் இல்லாமல் செய்து தருகிறது.

    கேழ்வரகு, அரிசி, கோதுமை பார்லி கஞ்சிகளின் இடத்தை ஓட்ஸ் பிடித்துக் கொண்டிருக்கிறது.

    மொத்ததில் பசியும் சாப்பாடும் எல்லா தலைமுறைக்கும் இருந்து வருகிறது. சுவையும் சாப்பிடும் முறையும் நேரமும் மாறி வரும் அவலத்தைப் பார்க்கும் நிலையில் நான் இருக்கிறேன்.

    அடுப்பும் குமட்டியும் எனக்கு கொடுத்த சுவை இந்த நவீன சமையல் முறைகள் கொடுக்க வில்லை என்பதுதான் உண்மை.

    என் மருமகள் வைத்த காபி ஆறுவதற்கு முன் சாப்பிடுகிறேன். நீங்களும் கொஞ்சம் யோசனை செய்யுங்கள். அடுப்புக்கும் குமுட்டிக்கும் அஞ்சலி செய்வோம். பாட்டிக்கும் அம்மாவுக்கும் வந்தனை செய்வோம். மனைவிக்கும் மருமகளுக்கும் வாழ்த்துச் சொல்வோம்.

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:
    http://sinnutasty.blogspot.com/2011_04_01_archive.html
    http://tthamizhelango.blogspot.com/2013/03/blog-post_4.html
    http://hussainamma.blogspot.com/2012/04/blog-post_26.html
    http://consumergoods.indiabizclub.com/products/kerosene_stove
    http://himalisherpa.com/villa/index.php
    http://gokulmanathil.blogspot.com/2012/02/blog-post_13.html

    Share
  • பெரியபுராணம் காட்டுகிற வேடர் நெறி – வேட்டை அறம்

    சொ.வினைதீர்த்தான்

    ஒரு பதிவுக்காகப் பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் சரித்திரத்திலுள்ள பாடல்களைப் படித்தேன். கீழ்க்கண்ட பாடல் கவர்ந்தது. நம் முன்னோர் அறம் வியக்கவைத்தது.

    download
    திண்ணன் என்று பெயரிடப்பட்ட வேடனாகிய கண்ணப்பர் தக்க பருவம் வந்ததும் வேடர்களுடன் முதல்முதலாக வேட்டைக்குச் செல்கிறார். மிருகங்களை வேட்டையாடுகிறார்கள். கொடிய மிருகங்களை எதிராக ஓடிச் சென்று எதிர்த்துக் கொலைசெய்கின்ற வேடர்கள் (கொடியனவெதிர் முடிகியுறு கொலைபுரி சிலை மறவோர்) வேட்டை நெறி முறைகளைக் கடைப்பிடிதனராம். 1.உடுக்கை போன்ற கால்களையும் மடிந்த மெல்லிய காதுகளையும் உடைய யானைக் கன்றுகள் மேல் வேட்டையைத் தொடர மாட்டார்களாம். 2.ஓசைபட ஓடிக் குதிதோடும் சிறு விலங்குக் குட்டிகளைக் கொல்லமாட்டார்களாம். 3.கருவுற்றதால் வயிறு பெருத்து ஓடமுடியாமல் தள்ளாடிவரும் பெண் விலங்குகளுக்குத் துன்பம் செய்யமாட்டார்களாம்.

    துடியடியன மடிசெவியன துறுகயமுனி தொடரார்;
    வெடிபடவிரி சிறுகுருளைகண் மிசைபடுகொலை
    விரவார்;
    அடிதளர்வுறு கருவுடையன வணைவுறுபிணை
    யலையார்;
    கொடியனவெதிர் முடுகியுமுறு கொலைபுரிசிலை
    மறவோர்.

    கல்வியறிவு இல்லாத கொடிய வேட்டையையே தொழிலாகக்கொண்ட வேடர்களிடம் இருந்த தொழில் அறம் வியக்கவைக்கிறது. கன்றுகள், குட்டிகள், கருவுற்றத் தளர்ந்த பெண்ணின விலங்குகள் வேட்டையாடப்படவில்லை. வேடர்களிடமே விலங்குகள் பால் அறம் பேணப்பட்டபோது அரசர்களிடம் மனிதர்கள் பால் எத்தகைய போர் அறம் இருந்திருக்கும் என்பதை உய்த்து உணரலாம். இன்று காஸா பகுதியில் பிள்ளைகள் குறிவைத்துக் கொல்லப்படுகிறபோதும் நேற்று யாழ்ப்பாணத்தில் குழந்தைகளும் பெண்களும் சீரழித்துக் கொல்லப்பட்டதையும் கண்டு வருந்திய நாம் அன்றைய வேட்டை அறத்தையும் போர் அறத்தையும் போற்றாதிருக்க இயலாது!

    Share
  • காதல் நாற்பது (19)

    உன்னிழலுடன் பின்னிக் கொள்வேன்!

    jay1

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    வெனிஸ் ரியால்டோ நகரின்
    ஆத்மாவுக்கு
    வணிகப் பண்டம் உண்டு !
    அந்தச் சந்தையில் கூந்தலுக்குக் கூந்தல்
    பண்ட மாற்றுச் செய்வேன்.
    என்கவிப் பெருமான் நெற்றி மேலிருந்து
    என்னிதயத் துக்கு
    இத்தாலியக் கப்பலை மிஞ்சும் அளவுக்
    கத்தைக் கூந்தல் கிடைக்கும் !
    கிரேக்கக் கவிஞர் பின்டாரின் விழிகள் போல்
    பழுப்புக் கருமை வண்ணத்தில்
    ஒன்பது தேவதையர் புருவங்க ளிடையே
    மங்கிடும் வெங்கல நிறக் கூந்தல்
    தொங்கிடும்.
    எனதினிய காதலனே !
    உனது வளைந்த கிரீடத்தின் வர்ணம்
    கரிய சுருள் மயிர்க் கொத்தில்
    நிரந்தரமாய்
    இன்னும் உள்ளதா வென
    ஐயமுறுவேன் !
    மெதுவாய் முத்த மிடுகையில்
    விடும் மூச்சுக் காற்றை
    உன்னிழலுடன்
    பின்னிக் கொள்வேன் பாதுகாப்பாய்,
    நழுவிச் செல்லாது !
    தடை யில்லா இடத்திலென்
    கொடையினை எடுத்து வைப்பேன் !
    இயல்பான உடற்கனல்
    உன் நெற்றியில் உள்ளது போல்
    என் நெஞ்சின் மீதும்
    எழாம லிருக்குமா
    என்னுடல்
    சில்லிட்டுப் போகும் வரை ?

    ********************

    Poem -19

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    The soul’s Rialto hath its merchandise;
    I barter curl for curl upon that mart,
    And from my poet’s forehead to my heart
    Receive this lock which outweighs argosies,–
    As purply black, as erst to Pindar’s eyes
    The dim purpureal tresses gloomed athwart
    The nine white Muse-brows. For this counterpart, . . .
    The bay-crown’s shade, Beloved, I surmise,
    Still lingers on thy curl, it is so black
    Thus, with a fillet of smooth-kissing breath,
    I tie the shadows safe from gliding back,
    And lay the gift where nothing hindereth;
    Here on my heart, as on thy brow, to lack
    No natural heat till mine grows cold in death.

    *********

    Share
  • பார்ப்பனர் மீது பகைமை

    –சு.கோதண்டராமன்.

    பார்ப்பனர்தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் திரைப்படங்களில் பரிகசிக்கப்படுகின்றனர். மேடைகளில் இகழப்படுகின்றனர். ஒரு உறுப்பினர் ஏதேனும் தவறு செய்தால் அதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் குறை கூறும் போக்கு தமிழ் நாட்டில் காணப்படுகிறது. ஒரு பார்ப்பான் குடித்து விட்டுத் தரையில் கிடந்தால் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவார்கள். அதுவே வேறு சாதி்க்காரன் செய்தால் அவனது சாதிப் பெயரைச் சொல்வதில்லை. தமிழ்ச் சமூகம் பார்ப்பனர்களிடத்தில் உயர்வான நடத்தையை எதிர்பார்க்கிறது.

    தமிழ்நாட்டில் இன்றுவரை நடந்த சாதிக் கலவரங்களில் ஒன்றில் கூட பார்ப்பனர் பங்கு பெற்றதில்லை. ஆனால் சாதிக் கொடுமை என்று சொன்னால் முதலில் விமர்சிக்கப்படுவது அவர்கள் தாம்.

    பார்ப்பனர்களில் கலப்புத் திருமணம் நடந்துள்ள அளவுக்கு வேறு சாதிகளில் ஏற்பட்டுள்ளதா? சர்வே எடுத்து சதவீதம் பாருங்கள் தெரியும். ஆனாலும் சாதிக் கட்டுப்பாடு என்றால் சாடப்படுவது பார்ப்பனர் தாம்.

    பிரதாப முதலி தவறு செய்தால் ஆசிரியர் அவனைத் தண்டிக்கக் கூடாது, பதிலாக அவனுடைய நண்பன் கனகு முதலியை அடிக்க வேண்டும் என்று பெற்றோர் உத்திரவிடுவதாக  பிரதாப முதலி சரித்திரத்தில் வரும். ஆங்கிலத்தில் whipping boy என்பார்களே, அது போல யார் தவறு செய்தாலும் அடி வாங்குவதற்கு என்று விதிக்கப்பட்டவர்கள் ஆகிவிட்டார்கள் பார்ப்பனர்கள்.

    பாலசந்தர் அரங்கேற்றத்தில் ஒரு பார்ப்பனப் பெண் விபசாரியாக ஆவதைக் காட்டினார். பார்ப்பனர் உள்பட எல்லாரும் கண்டு மகிழ்ந்தார்கள், பாராட்டினார்கள். எழுத்தாளர் சுஜாதா தன் கதைகளில் பார்ப்பனர்களை இழிவுபடுத்தும் காட்சிகளை விவரித்திருக்கிறார். அதை எல்லோரும் படித்து இன்புற்றார்கள். அவரே ஒரு நாடார் பெண் ஓடும்போது ஏற்படும் உடல் அசைவை அவருக்கே உரிய நடையில் வர்ணித்தபோது நாடார் சமூகமே கொதித்து எழுந்தது. அவர் மன்னிப்புக் கேட்டார்.

    தனிப்பட்ட பார்ப்பனர் தாக்கப்பட்டால் வெகுண்டு எழுவர். ஆனால் சமூகம் என்ற வகையில் பார்ப்பனர்களுக்கு சூடு சொரணை கிடையாது. யாரையோ வைகிறான், வைதுவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுவர்.

    ஏனெனில் பார்ப்பனர்களுக்கு சமூக உணர்வு என்று ஒன்று கிடையாது. சமூகம் என்றால் ஒன்றுபடுத்தும் சக்தி ஒன்று இருக்க வேண்டும். பார்ப்பனர்களை ஒன்றுபடுத்துவது எது? மொழியா? அல்ல. தமிழ்நாட்டில் தெலுங்கு மலையாளம், கன்னடம், துளு பேசும் பலர் உள்ளனர். அவரவர் ஆசாரங்கள் வேறு.

    சமயக் கொள்கையா? அல்ல. சைவம் வைணவம் என்று இரு பெரும் பிளவுகளுக்கு இடையே மூண்டிருந்த பகைமைத் தீ அணைந்துவிட்டாலும் இன்னும் புகைந்து கொண்டிருக்கிறது. மாத்வ சம்பிரதாயம் வேறு. பார்ப்பனர்களிலே கோயிலே கதியாகக் கிடப்போரும் உண்டு, கோயிலுக்கே போகாதாரும் உண்டு, நாத்திகவாதிகளும் பலர் உண்டு. வடமர், வாத்திமர் என்று தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்பாத உட்பிரிவுகள் பற்பல.  குடும்பத்துக்குக் குடும்பம் பழக்க வழக்கங்கள் மாறுபடுகின்றன.

    ஒரு தலைமை உண்டா? இல்லை. வைணவர்களில் வடகலை தென்கலைப் பிளவுகள். சைவர்களில் காஞ்சி மடத்தைச் சார்ந்தவர்களும் உண்டு, சிருங்கேரி மட ஆதரவாளர்களும் உண்டு. எந்த மடத்தையும் ஏற்காதவர் எண்ணிக்கை தான் மிகுதி.

    இத்தகைய நிலையில் பார்ப்பனர்களை ஒரு சமூகமாகக் காணவேண்டும் என்றால் அதற்கான ஒரே நியாயம் அவர்களது முன்னோர் வேதம் கற்றிருந்தனர் என்பது தான். இந்தத் தலைமுறையில் வேதம் கற்போர் ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. எதை வைத்து இன்று எல்லாப் பார்ப்பனரையும் ஒரே சமூகமாகக் கூற முடியும்?

    சிவாசாரியார்கள் பார்ப்பனர்களா? அல்ல. இரு திறத்தாரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. பூணூல் அணிந்திருக்கிறார்கள், ஸம்ஸ்கிருத மந்திரம் கூறுகிறார்கள் என்பது தான் அவர்களைப் பார்ப்பனரோடு இணைப்பது. அவர்களுக்கு வேதப் பயிற்சி இல்லை, ஆகமப் பயிற்சி மட்டும் தான் உண்டு என்பதும் அவர்கள் பார்ப்பனராக்கப்பட்டவர் என்பதும் பலர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

    பூணூல் மட்டும் தான் பார்ப்பன அடையாளம் என்றால் பத்தர்களையும் கோமுட்டி, வாணிய செட்டியார்களையும் கூட பார்ப்பனர் என்று கூறலாம். ஸம்ஸ்கிருதம் அறிந்திருப்பது தான் பார்ப்பனீயம் என்றால் இன்று பார்ப்பனர் என்று சொல்லப்படுபவர்களில் ஸம்ஸ்கிருதம் அறிந்தோர் ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. தமிழுக்குத் தொண்டு செய்த பார்ப்பனர்கள் அன்றும் இன்றும் மிகப் பலர். சென்ற நூற்றாண்டு வரை ஸம்ஸ்கிருதம் அறிந்த பிற சாதியினர் தொகை மிகுதி. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஒரு எடுத்துக்காட்டு.

    தாக்கப்படுதல் என்ற ஒரு தன்மை தான் பார்ப்பனர்களை ஒன்றுபடுத்துகிறது.

    மேடையில் பார்ப்பனர்களைத் தாக்குவோர் தங்கள் அந்தரங்க ஆலோசகராக, வழக்கறிஞராக, மருத்துவராக, ஆடிட்டராக பார்ப்பனர்களை அமர்த்திக் கொள்வது உலகறிந்தது.

    கேட்டால் பார்ப்பனர்கள் மீது எங்களுக்குப் பகை இல்லை. பார்ப்பனீயம் தான் எங்கள் எதிரி என்பார்கள். அது என்ன ஈயம்? விளக்கம் கேட்டால் பதில் கிடைக்காது. அவர்களுக்கே தெரியாது.

    மற்றவர்களுக்கு வேதம் கற்பிக்க மறுப்பது தான் பார்ப்பனீயம் என்ற வாதம் தற்போது எடுபடாது. எந்தச் சாதியாக இருந்தாலும் பூணூல் அணிவித்து வேதம் கற்பிக்கத் தயாராக உள்ள பார்ப்பன நிறுவனங்கள் இன்று உள்ளன. பார்ப்பனரல்லாதார் எத்தனை பேர் அதில் சேர்ந்துள்ளார்கள்?

    இணையத்தில் வேதம் தங்கு தடையின்றிக் கிடைக்கிறதே, வேதத்தை இகழ்வோர் எத்தனை பேர் அதைப் படித்துவிட்டு ஆதாரத்துடன் இகழ்கிறார்கள்?

    கோயில் பூசைக்கு மற்றவர்களை அனுமதிக்கவில்லை என்பது அந்த ஈயங்களில் ஒன்று. இன்று எல்லாச் சாதியினருக்கும் ஆகமப் பயிற்சி அளிக்கப்படுகிறது. எத்தனை பேர் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? பயிற்சி பெற்ற சிலரும் அதில் போதிய வருவாய் வருவதில்லை என்று அதை விட்டு விட்டு வேறு தொழிலை நாடுவதைப் பத்திரிகைகள் மூலம் அறிகிறோம்.

    ஒரு நேர்முகத் தேர்வில் தோற்றுப் போன ஒருவன் பார்ப்பானுக்குப் பார்ப்பான் உதவி செய்துவிட்டான். எனக்குக் கிடைக்கவில்லை என்று புலம்பினான். நேர்முகம் நடத்தியவர் பார்ப்பனர் அல்ல என்று அவனுக்குத் தெரிந்தது. உடனே பேச்சை மாற்றிக் கொண்டு பார்ப்பான் ஏதோ சாமர்த்தியம் செய்து காசைக் கீசைக் கொடுத்து வேலை வாங்கிவிட்டான் என்று சொல்லத் தொடங்கினான். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பார்ப்பனீயத்தைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பதில் அவர்களுக்கு ஒரு சமாதானம் ஏற்படுகிறது.

    பார்ப்பனீயம் என்று இவர்கள் சொல்வதின் உண்மையான வடிவம் என்ன என்றால் அவர்கள் எந்தத்துறையில் ஈடுபட்டாலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். விரைவில் முன்னேறி விடுகிறார்கள் என்பது தான். இது தோல்வியுற்றவர்களுக்கு ஏற்படும் பொறாமை உணர்வு. இதை மறைத்து அதற்கு வரலாற்றைத் துணைக்கு அழைக்கிறார்கள்.

    3000 ஆண்டுகள் முன்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கைபர் போலன் கணவாய்கள் வழியாக வந்து வட இந்தியாவிலிருந்த திராவிடர்களைத் தெற்கே துரத்தியதும் அல்லாமல் தெற்கிலும் குடியேறினர் என்று என்றைக்கோ ஒரு விஷமக்கார ஆங்கிலேயன் எழுதி வைத்த,  புளித்துப் போன வாதத்தைக் கூறிக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதில் இவர்களுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது. அவன் எழுதியது சரி தானா என்று எத்தனை பேர் சுயமாக வரலாற்றை ஆராய்ந்திருக்கிறார்கள்?

    பார்ப்பனர் மீது வெறுப்பு என்பது தமிழ்நாட்டுக்கே உரியது. கேரளம் முதலான பிற தென் மானிலங்களில் உள்ள பார்ப்பனர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அங்கு இந்தத் துவேஷம் காணப்படாதது ஏன்? இவர்கள் கூற்றுப்படி வட இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களும் கைபர் கணவாய் மூலம் வந்தவர்கள் தாமே?

    இந்த வெறுப்பு பற்றி முழுமையாக ஆராய்வோம். இதற்கு வரலாற்று ரீதியான பொருளாதாரக் காரணம் உண்டு. தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களில் ஒரு பகுதியினர் (எல்லோரும் அல்ல) வந்தேறியவர்கள் தாம். பாரசீகத்திலிருந்து அல்ல. தென்னிந்தியாவின் வடபகுதியிலிருந்து. 3000 வருடங்கள் முன்பு அல்ல. சுமார் 1500 வருடங்கள் முன்பு. கடந்த 3000 வருட இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால் கடந்த காலங்களில் பார்ப்பனரும் அல்லாதாரும் இணக்கமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். பகைமை உணர்வு ஏற்பட்டது ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தான். முழுமையாக ஆராய்வோம்.

    பூர்விகக் குடிகள் – தொல்காப்பியர் காலம்  
    தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்தில் அந்தணர்கள் இருந்திருக்கிறார்கள். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுவகைத் தொழில் கொண்ட பார்ப்பனப் பக்கத்தையும், நான்மறைகளையும் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [புறத்திணை இயல் 16, மரபியல் 71 ,  பாயிரம்.]

    பூர்விகக் குடிகள் – சங்க காலம்
    சங்க காலத்தில் அந்தணர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டனர் என்பதற்கான பல சான்றுகள் அக்கால இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் என்று ஒரு புலவர் ஓர் அரசனிடம் கூறுவதாக உரைக்கிறது புறம் 43. புறம் 99இல் ஔவையார் அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோர் அமரர்ப் பேணி ஆவுதி அருத்திய (தேவர்களை மகிழ்விக்க வேள்வி செய்த) பெருமையைப் பேசுகிறார். புறம் 166, நான்கு வேதம், ஆறு ஆங்கம் ஓதி உணர்ந்த அந்தணர்கள் அறம் ஒன்று மட்டுமே புரிந்ததையும் 21 வகையான வேள்விகள் பற்றியும் குறிப்பிடுகிறது. புறம் 367 முத்தீ பற்றிக் குறிப்பிடுகிறது.

    சங்க காலப் புலவர்களில் பலர் அந்தணர்கள். புறநானூற்றுப் புலவர்களில் மூவர் –  தாமோதரனார், பெருஞ்சாத்தனார், பேரிசாத்தனார் – வடம வண்ணக்கண் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். வடம என்ற சொல் வடநாட்டிலிருந்து வந்தவர் என்று குறிப்பதாகக் கொள்ளலாம். இவ்வாறு வடம என்ற அடைமொழி பெறாத அந்தணர்களும் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் கபிலர், கவுணியன் விண்ணந்தாயன். அவர்கள் இந்த மண்ணின் பூர்விகக் குடிகளாக இருத்தல்  வேண்டும்.

    பூர்விகக் குடிகள் – களப்பிரர் காலம்
    களப்பிரர் காலத்தில் வாழ்ந்த பூர்விகக் குடி அந்தணர்களில் ஒரு பிரிவினர் சோழியர் என அழைக்கப்பட்டனர். ஒரு காலத்தில் இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கவேண்டும். குறைந்தது, சோழநாடு முழுவதும் பரவி இருக்கவேண்டும். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர். இன்று தில்லை தவிர்த்தப் பிற பகுதியில் இருந்த சோழியப் பிராமணர்கள் புதிதாக வந்தவர்களுடன் கலந்து விட்டனர்.

    1. தீட்சிதர்கள்    
    நடராஜாவை முதல்வராகக் கொண்ட, தில்லை மூவாயிரவர் என்று முற்காலத்தில் சிறப்பிக்கப்பட்ட இவர்கள் இன்று எண்ணிக்கையில் சில நூறுகளாகக் குறைந்துவிட்ட போதிலும் பிற அந்தணர்களுடன் திருமண உறவு கொள்ளாமல் தங்கள் தனித் தன்மையை இன்றும் பாதுகாத்து வருகின்றனர். தங்கள் சிகையைப் பக்கவாட்டில் முடிந்து கொள்ளும் இவர்களது முறை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது. முன் குடுமிச் சோழியன், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற வழக்காறுகளில் குறிப்பிடப்படுபவர்களும் சோழநாட்டின் பூர்வீகக் குடிகளுமான சோழியர்களில் ஒரு பிரிவினராக இவர்கள் இருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். ஆனால் இன்று அவர்கள் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் தீட்சிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தீட்சிதர் என்பது ஒரு குலப் பெயரல்ல. விரதம் பூண்டவர் என்று பொருள்படும் இப்பட்டம், யாகம் செய்தவர்களுக்கும் அவர்கள் பரம்பரையினருக்கு மட்டுமே உரியது. மற்ற தீட்சிதர்களுக்கும் தில்லை தீட்சிதர்களுக்கும் தொடர்பு இல்லை. மற்றச் சோழியர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே இவர்கள் முன் குடுமியைப் பக்கவாட்டுக் குடுமியாக மாற்றிக் கொண்டிருக்கக் கூடும். [முன் குடுமி வழக்கம் கொண்ட கேரள நம்பூதிரிகளும் இந்தச் சோழியரே என்றும் ஆதி சங்கரர் அந்தக் குலத்தில் தோன்றியவர் என்றும் காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறுகிறார். தெய்வத்தின் குரல் பாகம் 5 சங்கரர் வரலாறு]

    2. நம்பியார்கள்    
    சைவத்தைச் சார்ந்த 300 சோழிய அந்தணர்கள் ஆவுடையார்கோவிலை ஒட்டிய பகுதியில் வாழ்ந்தனர். தில்லை மூவாயிரவர் போல, இவர்கள் ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் எனப்பட்டனர். இன்று அக்கோவிலில் பூசை செய்பவர்கள் மட்டும் நம்பியார் என்ற பட்டப் பெயர் கொண்டவர்கள். இவர்கள் இன்றும் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் முன்குடுமியைக் கைவிட்டு விட்டனர். ஆனால் ஆவுடையார் கோவிலில் உள்ள சிற்பங்கள் அங்கு முன்பு வாழ்ந்த பார்ப்பனரும், பிறரும் முன்குடுமி கொண்டிருந்தார்கள் என்று காட்டுகின்றன.

    3. தென்கலை வைணவர்கள்    
    பழந் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு நம்பி என்ற பட்டம் பெருவழக்காக இருந்ததைப் பார்க்கிறோம். தென்கலை வைணவர்களும் சோழியர்களே. அவர்களும் நம்பி என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்தனர். ராமானுஜரின் உறவினர்களும் குருமார்களும் பலர் நம்பி என்ற பின்னொட்டு தாங்கியவர்கள்.

    4. ஆனைக்கா அந்தணர்கள்
    திருவானைக்காவில் பூஜை செய்பவர்கள் பிரதமசாகி, அய்யாநம்பி, திருணபட்டன் எனப் பல்வகைப் பட்டப் பெயர்களைக் கொண்டவர்கள். இவர்கள் இன்று வடமர்களுடன் கலந்து விட்டாலும் இவர்களது முன்னோர்கள் முற்காலத்தில் சோழியர்களாகவே இருந்திருத்தல் வேண்டும். (பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை திருவெள்ளறைக் கோவிலின் முதிய பட்டர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு சொலவடை சொன்னார். ஆதி ரங்கம், அடுத்து வெள்ளறை, அடுத்தது ஆனைக்கா என்று பொருள்படும் அது எனக்கு மறந்து விட்டது. மறவாதது, இம்மூன்று தலங்களிலும் பூசை செய்பவர்கள் சோழியர்கள் என்று அவர் கூறியது.)

    5. வீழி அந்தணர்    
    ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் போல் திருவீழிமிழலை அந்தணர் ஐநூற்றுவர் என்ற வழக்கும் உண்டு. இவர்களும் பண்டைச் சோழியர்களாகவே இருத்தல் கூடும். ஆனால் இன்று அங்கு சோழியர் என்று சொல்லிக் கொள்வோர் இல்லை.

    6. நயினார், பட்டர், திருசுதந்திரர்
    திருவாரூரில் பூசை செய்பவர்களில் சிலர் நயினார் என்றும், சிலர் பிரமராயர் என்றும் கூறப்படுகின்றனர். திருச்செந்தூரில் பூசை செய்யும் திருசுதந்திரர் என்பவர்களும் மதுரைக் கோவிலில் பூசை செய்யும் பட்டர்களும் இத்தகைய பழந் தமிழ்க் குடிகளே. பிற ஊர்க் கோவில்களில் பூசை செய்பவர்களும் கல்வெட்டுகளில் பட்டர் என்றே குறிக்கப் பெற்றுள்ளனர். ஆனால் இன்று மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ளவர்கள் தவிர ஏனையோர் தங்களைச் சிவாசாரியர்கள் அல்லது குருக்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

    7. களப்பிரர் கால அந்தணர்கள்
    சைவ சமய வரலாற்றில் அம்மையாருக்கும் சம்பந்தருக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த அந்தணர்களின் பங்கு முக்கியமானது. தில்லை மூவாயிரவர், ஆவுடையார் கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர், திருவானைக்கா சோழியர்கள், செந்தூர் ஈராயிரவர் தவிர பிற அந்தணர்கள் அக்காலச் சமய மாற்றங்களுக்கு உடன்பட்டிருக்க மாட்டார்கள் என்பது சைவச் சோழியர்களின் எண்ணிக்கை சுட்டப்பட்டதிலிருந்து அறியலாம்.

    அது என்ன சமய மாற்றங்கள்?
    தொல்காப்பியத்தில் சிவன் வழிபாடு இல்லை. சங்க இலக்கியங்களிலும், அம்மையார் பாடல்களிலும் சிவன் என்ற பெயர் இல்லை. சிவன் என்ற பெயர் ஏற்பட்டதும் ஐந்தெழுத்து பிரபலமானதும் சைவம் வைணவத்திலிருந்து வேறுபட்ட தனிச் சமயமாக ஆனதும் அம்மையாருக்கும் சம்பந்தருக்கும் இடைப்பட்ட காலத்தில் தான்.

    சைவம் அரச ஆதரவைப் பெற்றது. இத் தெய்வம் வேதத்தில் இல்லாதது என்பதால் வேள்விகளில் சிவனுக்கு அவிர்ப்பாகம் கொடுப்பதை மற்ற அந்தணர்கள் எதிர்த்திருக்கக் கூடும். இறுதியில் சைவ அந்தணர்கள் வெற்றி பெற்றனர். இதுவே தக்கன் கதை நமக்கு உணர்த்தும் வரலாற்றுச் செய்தியாகும். அம்மையாரால் குறிப்பிடப்படாத இப் புராண நிகழ்ச்சி, தேவாரத்தில் பெருமளவு குறிக்கப்படுவதிலிருந்து இது இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.

    புதிய குடியேற்றம்
    அம்மையார் காலத்துக்குப் பின் வந்து குடியேறியவர்களில் வடமர் என்ற குழு மட்டும் தமிழ்ப் பெயரைத் தாங்கி நிற்கிறது. (சங்க காலத்திலும் வடமர் இருந்தனர் என்று பார்த்தோம்.) மற்றவற்றின் பெயர்கள் வடமொழியில் உள்ளன. எண்ணிக்கையில் மிகுந்தவர்களும் வடமர்களே. பல்லவர் காலத்தில் வந்த பிரகசரணம் (தண்டந்தோட்டம் கல்வெட்டு), வாத்திமர், கேசியர், ராஜேந்திர சோழன் காலத்தில்  குடியேற்றப்பட்ட அஷ்ட ஸஹஸ்ரம் ஆகிய குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் உரியதாக தலா பதினெட்டு கிராமங்கள் உண்டு. வடமர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கிராமங்கள் இல்லை. அவர்கள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். குறிப்பாக, சோழநாட்டில் வாழ்ந்த வடமர் எண்ணிக்கை மிகுதி.

    இவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பல்வேறு காலங்களில் வடபுலத்திலிருந்து குடியேறியவர்களாக இருக்க வேண்டும். வடமருக்கு மட்டும் தமிழ்ப் பெயரும் மற்றவர்க்கு வடமொழிப் பெயரும் இருப்பதிலிருந்து பின்வருமாறு ஊகிக்கலாம். முதலில் வந்தவர்களுக்கு இங்குள்ள தமிழர்கள் தமிழில் வடமர் என்று பெயர் சூட்டினர். பின்னர் வந்தவர்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்றாலும் அவர்கள் தங்களைச் சாராதவர்கள் என்று வேறுபடுத்திக் காட்டுவதற்காக வடமர்கள் தங்கள் மொழியில் அவர்களுக்குப் பெயரிட்டு இருக்கலாம். எல்லோரும் வருணத்தால் அந்தணர் எனினும் இக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கவில்லை. பின்னர் வந்த ஒவ்வொரு குழுவுக்கும் 18, 18 கிராமங்களை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மையான இடங்களில் வடமர் வாழ்ந்தனர்.

    சோழ நாட்டில் இவர்களுக்கென இறையிலி நிலங்கள் பெருமளவில் வழங்கப்பட்டிருப்பதை நோக்கும் போது, களப்பிரர் காலத்தில் சமணத்தால் சீரழிந்த வைதிக சமயத்திற்குப் புத்துயிர் கொடுக்கவென, வலிமை குன்றிய நிலையில் இருந்தபோதும் சோழ அரசர்கள் இவர்களைப் பெருமளவில் குடியேற ஊக்குவித்திருக்கலாம் என்பது அறியப்படுகிறது.

    ஜெயமோகன் 9.8.2014 அன்று அவரது வலைத்தளத்தில் எழுதியதிலிருந்து ஒரு பகுதி.

    கேரளத்துக்கு வந்த ஆந்திர தேசத்து வைதீகர்கள் கேரள மன்னர்களால் விரும்பி வரவேற்கப்பட்டார்கள். ஏன் என்பதை நாம் வரலாற்றுக் கோட்பாட்டாளரான டி.டி.கோஸாம்பியின் பார்வையில் விளங்கிக்கொள்ள முடியும். அக்காலகட்டத்தில் பலவகையான இனக்குழுக்களை ஒன்றாகத்திரட்டி ஓர் அரசமைப்பை உருவாக்கும் முக்கியமான கருத்தியல் சக்தியாக வைதிகம் விளங்கியது. இந்திய நிலப்பகுதியெங்கும் பிராமணர்களின் சாத்வீகமான அதிகாரப்பரவலாக்கம் மூலமே படையெடுப்புகள் இல்லாமல் இனக்குழுக்கள் வெல்லப்பட்டு, ஒற்றைச்சமூகமாக திரட்டப்பட்டு, அரசு உருவாக்கம் நிகழ்ந்தது என்கிறார் டி.டி.கோஸாம்பி அந்த வழிமுறையையும் டி.டி.கோஸாம்பியே சொல்கிறார். பெருமதம் சார்ந்த கோயில்களை நிறுவுவதும் நாட்டார் வழிபாட்டுத்தெய்வங்களை பெருந்தெய்வங்களாக மாற்றுவதும் முதல்படி. அந்த நம்பிக்கையின் மையச்சரடில் பல்வேறு சாதிகளை அடுக்குவது அடுத்த படி. அவர்கள் அனைவரும் ஏற்கும் கருத்தியல் அதிகாரம் இவ்வாறாக நிறுவப்படுகிறது. அந்த அதிகாரத்தை தங்களை ஆதரிக்கும் மன்னர்களுக்கு வைதீகர்கள் அளிக்கிறார்கள். அவ்வாறாக க்ஷத்ரிய – வைதிக கூட்டு உருவாகிறது. இதுவே நம் மரபின் அதிகாரக்கட்டுமானத்தின் சூத்திரம்.

    அது போல, சோழ மன்னர்களும் புறச்சமயத்தோரான களப்பிரர்களுக்கு எதிராகத் தங்கள் அதிகாரத்தைச் சைவம் மூலம் நிலைப்படுத்துவதற்காக, வட மாநிலங்களிலிருந்து அந்தணர்களை வரவழைத்திருக்கலாம்.

    புதிதாகக் குடியேறிய எல்லோருமே சைவத்துக்கு ஆதரவு அளித்தார்கள் எனக் கூற முடியவில்லை. சிலர் வைணவத்தின் பக்கம் சார்ந்தனர். அவர்களே வடகலை வைணவர்கள் எனப் பெயர் பெற்றனர். இவர்கள் வைணவத்தைப் பின்பற்றிய போதிலும் தென்கலை வைணவர்களுடன் சமய நடைமுறைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தனர். சமூக அளவிலும் அவர்கள் தென்கலையாருடன் உறவு கொள்வதைத் தவிர்த்தனர். வடகலை வைணவர்கள் இறந்தால் தீட்டுக் காக்கும் வழக்கம் வடமரிடையே இருந்ததாகக் கூறப்படுவதிலிருந்து [The people of India –Tamilnadu, vol.  3 – Page 1407– Author V.S.Deep Kumar, Editor K.S.Singh .] இவர்கள் வடமர்களே என்பதும் சமய வேற்றுமை காரணமாகப் பிற்காலத்தில் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர் என்பதும் தெரிகிறது. [தென்கலை வைணவர்கள் தமிழுக்கும் கோவில் வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வடகலையார் வைதிகச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இவற்றிலிருந்து வடமர்களில் வைணவத்தைத் தழுவியோரே வடகலை வைணவராயினர் என்பது தெரிகிறது]

    வடக்கிலிருந்து வேதியர்கள் இக்காலத்தில் குடியேறியதை எப்படி அறிகிறோம்? அம்மையார் காலம் வரை இல்லாத திருநீறு பூசும் வழக்கமும் கணபதி வழிபாடும் தேவாரக் காலத்தில் ஏற்பட்டு விட்டன. (அம்மையார் ஈசனைச் சுடலைச் சாம்பல் பூசியவனாக வர்ணிக்கிறாரே அன்றித் தானோ பிற அடியாரோ திருநீறு பூசியிருப்பதாகக் கூறவில்லை.) இவ்விரண்டும் இந்தியாவில் தமிழ்நாடு தவிர, மராட்டியப் பகுதியில் மட்டும் தான் உண்டு. எனவே ஒரு வேதியக் கூட்டம் அப்பகுதியிலிருந்து வந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

    இவ்விரண்டும் அந்தணர் அல்லாத பிறரால் வந்திருக்கக் கூடாதா என்ற கேள்வி எழலாம். மராட்டியப் பகுதியின் சித்பாவன் பிராமணர்களின் உடல் அமைப்பு தமிழ் நாட்டில் சில பிராமணரிடம் காணப்படுகிறது என்று நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். [A History of South India –K.A.N.Sastry] மேலும், தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதை நதிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். எனவே வந்தவர்கள் நர்மதை நதிக்கரையை ஒட்டிய விதர்ப்பா பகுதியைச் சேர்ந்த அந்தணர்கள் என்று தெரிகிறது.

    திருநாகைக் காரோணம், குடந்தைக் காரோணம், திருவொற்றியூர் காரோணம் என்ற பெயர்களை குஜராத் மாநிலத்தின் கார்வான் பகுதியில் தோன்றிய லகுலீச பாசுபத சமயத்தோடு தொடர்பு படுத்தும் வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. இந்தப் பாசுபதர்கள் தாம் சைவத்தை ஒரு தனிச் சமயமாக உருவாக்கினர். அதன் தாக்கம் தமிழ்நாட்டில் தான் மிகுதியாக ஏற்பட்டது என்பதையும் கவனிக்க.

    மராட்டிய வடமர்கள் தவிர விந்தியமலைக்கு அப்பாலிருந்தும் சில அந்தணர்கள் குடியேறி இருக்க வேண்டும். என்பதைப் பின் வரும் கதைகளிலிருந்து ஊகிக்கலாம்.

    யாக்ஞவல்கியர் என்பவர் வைசம்பாயனரின் சீடர். சில காரணங்களால் சீடனைக் கோபித்த அவர் நான் கற்றுக் கொடுத்த வேதத்தைக் கக்கிவிட்டு வெளியேறு என்று உத்திரவிட்டார். அவர் அதைக் கக்கியதாகவும் மற்ற சீடர்கள் புறா உருக் கொண்டு அதை உண்டதாகவும் கூறுவர். அதுவே கிருஷ்ண யஜுர் வேதமாகும். பின்னர் யாக்ஞவல்கியர் சூரியனைக் குருவாகக் கொண்டு மீண்டும் வேதத்தைப் பயின்றார். அது சுக்ல யஜுர்வேதம் எனப்படுகிறது. வட இந்தியாவில் யஜுர் வேதக்காரர்களில் சுக்லப் பிரிவினர் மட்டுமே உண்டு. தமிழ்நாட்டில் சுக்ல யஜுர் வேதக்காரர்கள் மிகக் குறைவு. அவர்கள் சென்ற நூற்றாண்டு வரை மத்தியான்னப் பறையர் என்று அழைக்கப்பட்டனர்.

    அடுத்த கதை பெரிய புராணத்தில் உள்ள சோமாசி நாயனாரைப் பற்றியது. அவரைப் பற்றிச் சேக்கிழார், சிவனடியார் எத்தன்மையராக இருப்பினும் அவரை வணங்குபவர் என்று சுருக்கமாகக் கூறியுள்ளார்.

    எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்
    அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்
    சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை
    நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்

    இது தொடர்பாக செவிவழிச் செய்தி ஒன்று உண்டு. சோமாசியார் ஒரு வேள்வி செய்தார். அதற்குச் சிவபெருமான் நேரில் வந்து அவிர்ப்பாகம் பெறவேண்டுமென்று விரும்பினார். பல அந்தணர்கள் புடை சூழ வேள்வி நடந்து கொண்டிருக்கும்போது உணவு வேண்டி ஒரு சண்டாளன் வந்ததைக் கண்ட சோமாசியார், வித்தையிலாப் புலையனும் அஃதென்னும் வேதம் என்பதற்கிணங்க அவிர்ப்பாக உணவை அந்தச் சண்டாளனுக்கு அளித்தார். மற்ற அந்தணர்கள் அதை எதிர்த்தனர். சண்டாள வடிவில் இருந்த சிவன் அந்தணர்களைப் பறையர்களாக மாற்றிச் சபித்தார். அவர்கள் தவறை உணர்ந்து மன்னிக்க வேண்டிக் கொண்டதன் பேரில் சாபத்தின் கடுமையைக் குறைத்து, மத்தியானத்தில் மட்டும் நீங்கள் பறையர்களைப் போல் நடந்து கொள்வீர்களாக என்றார்.

    இந்த இரண்டு கதைகளையும் சேர்த்துப் பார்க்கையில் கீழ்க்கண்டவாறு  நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    விந்தியத்திற்கு வடக்கிலிருந்து இங்கே குடியேறி இருந்த பிராமணர்களைக் கொண்டு சோமாசியார் வேள்வி செய்திருக்கலாம். அவர்கள் ருத்திரனை யாகத் தலவனாகக் கூறும் ருக்வேத வழியைப்(ருக் 1.43.4, 4.3.1, 1.72.6) பின்பற்றாமல், ருத்திரனுக்குக் காயமுற்ற பிராணிகள், மீந்து போனது, தரையில் சிந்தியது இவை தான் கொடுக்கப்படவேண்டும் என்ற சதபத பிராமண [சதபத பிராமணம் 1.7.4.9 as quoted in The concept of Rudra Siva through the ages by Mahadev chakravarti] வழி வந்தவர்களாக இருக்கக் கூடும். ருத்திரனின் மறு பெயராகக் கருதப்பட்ட சிவனுக்குப் பிரதானமான இடம் கொடுத்ததை ஏற்றுக் கொள்ளாமல், தட்சன் கதையில் நடந்தது போல, எதிர்த்திருக்கலாம். அதன் காரணமாக அவர்களை உள்ளூர் அந்தணர்கள் புறம் தள்ளி இருக்கலாம்.

    குடியேறிய வடமர்கள் வேதம் ஓதிக் கொண்டும் வேள்விகள் செய்து கொண்டும் இருந்தார்களே அன்றிக் கோவில் பூசகர்கள் பணியில் ஒரு போதும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. கோவிலுடன் அவர்களது தொடர்பு அங்கு அத்தியயன பட்டர் பணி – வேத பாரயணம் செய்தல்- மட்டுமே.

    சிவாச்சாரியார்கள்
    சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகியது. எனவே கோயிலில் பணி புரிவதற்குரிய பூசகர்களின் தேவையும் மிகுந்தது. எனவே பிற சாதியினர் பூசகராக ஆக்கப்பட்டிருப்பர் என்று நினைக்க இடமுண்டு. சிவன் கோவில் பரிசாரகர் பிராமணப் பிள்ளை எனச் சோழநாட்டில் அழைக்கப்படுவது இதற்கு வலுச்சேர்க்கிறது.

    சோழர் காலக் கல்வெட்டுகளில் பூசகர்கள் சிவப் பிராமணர்கள் எனக் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் பெரும்பாலும் நம்பி, பட்டர், பட்டஸ்ய என்னும் பின்னொட்டைக் கொண்டிருந்தது. இப்பெயரைக் குடியேறிய பிராமணர்கள் வைத்துக் கொள்வதில்லை. பட்டர், நம்பி என்பன பழமையான அந்தணரைக் குறிப்பன. வைணவப் பூசகர்கள் பட்டாசாரியர் என அழைக்கப்படுகின்றனர். பட்டஸ்ய என்பது பட்டருடைய என்று பொருள் தருவது. இது புதிதாக அந்தணராக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயராக இருக்கலாம்.

    மயூரசன்மன் என்னும் கடம்ப மன்னன் காலத்தில் சில ஆந்திர பிராமணர்கள் பிராமணர் அல்லாதார் சிலரைப் பூணூல் அணிவித்து அந்தணராக்கி அவர்களுக்குப் புதிய பின்னோட்டுப் பெயர் அளித்ததாகக் கூறப்படுகிறது. [The peoples of India Vol – I  page 169] அது போலத் தமிழகத்திலும் செய்யப்பட்டிருக்கலாம்.

    திருவலஞ்சுழிக் கல்வெட்டு ஒன்றில் ஒரு சிவாசாரியரின் பெயர் திருவெண்காடன் செட்டி பெரியான் என்று கூறப்படுவது இதை வலுப்படுத்துகிறது. மேலும், அந்தணக் குடும்ப உறுப்பினர்களைக் குறிக்கும்போது சூத்திரம், கோத்திரம் சுட்டுவது இயல்பாகும். ஆனால் வலஞ்சுழியில் காணப்படும் கல்வெட்டுகள் சிலவற்றில் இந்நிலை இல்லை. [வலஞ்சுழிவாணர்– மு.நளினி, இரா.கலைக்கோவன்.] பூர்விக இடத்தைப் பொறுத்து இன்றைய சிவாசாரியர்கள் திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று வகையினர். இந்த மூன்று இடங்களிலும் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து சிவாசாரியர்கள் வரவழைக்கப் பட்டுக் குடியமர்த்தப்பட்டனர் என்று சித்தாந்த சாராவளிக்கு உரை எழுதிய அனந்த சிவாசாரியர் கூறுகிறார்.[புதுவை மண்ணில் ராசராசன் கண்ட கலைக்கோயில் – அரு. அப்பாசாமி பக்.147] தமிழ்நாட்டுச் சிவாசாரியர்கள் பண்பாட்டு வகையில் தமிழர்களாகவே இருப்பதால் அவர்கள் இந்த மூன்று இடங்களில் ஆந்திர ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட பிற சாதித் தமிழர்களாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. புதிதாகப் பூசகர் ஆக்கப்பட்டவர்கள் பழைய பட்டர்களுடன் திருமண உறவு கொண்டிருக்கலாம்.

    பிராமணரின் பல வழக்கங்களைக் கடைப்பிடித்த போதிலும் இன்றும் சிவாசாரியர்கள் தங்களைப் பிராமணரிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்.

    தமிழ் நாட்டில் ஸம்ஸ்கிருதம் வைதிகச் சமயத்தவரால் புகுத்தப்பட்டது அல்ல
    தொல்காப்பியர் காலத்திலேயே வடசொற்கள் இருந்ததை அறிகிறோம். சங்க காலத்திலும் வேதம், வேதியர், ஸம்ஸ்கிருதம் யாவும் இருந்தன. வட சொல் பயன்பாடு மிகுதிப்பட்டது களப்பிரர் காலத்தில் தான். வடக்கிலிருந்து வந்த சமண சமயம் சூரசேனி என்னும் பிராகிருதத்தையும், சாக்கியம் பாலி என்னும் பிராகிருதத்தையும் கொணர்ந்தன. மகாயான புத்த மதமோ ஸம்ஸ்கிருதத்தையே முழுவதும் பயன்படுத்தியது.

    பிராகிருதம் என்பது ஸம்ஸ்கிருதத்தின் கொச்சை வடிவம், அக்கால வட இந்தியாவின் பேச்சு மொழி. தென்னாட்டில் ஸம்ஸ்கிருதம் இலக்கிய மொழியாக இருந்தது. பிராகிருதம் வழக்கில் இல்லை. காளிதாசரின் நாடகங்கள், உயர்குடி ஆண் பாத்திரங்கள் ஸம்ஸ்கிருதத்தில் பேசுவதாகவும் பெண்களும் தாழ்குடியினரும் பிராகிருதத்தில் பேசுவதாகவும் அமைந்துள்ளன. சமண சாக்கிய இலக்கியங்கள் பிராகிருதத்தில் அமைந்துள்ளன.

    வடக்கிலிருந்து வந்த சமண சாக்கியர் தமிழ் மக்களுடன் பிராகிருதம் மூலமாகத் தொடர்பு கொண்டிருக்க முடியாது. ஆயினும் தமிழ்நாட்டில் ஸம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் அந்தணர்களிலும் மற்றவர்களிலும் சிலர் இருந்திருக்க வேண்டும். எனவே தம் கொள்கைகளைப் பரப்பப் பிராகிருத மொழியை விட ஸம்ஸ்கிருதமே ஏற்ற ஊடகம் என உணர்ந்து அவர்கள் அதையே பயன்படுத்தி இருக்கக் கூடும்.

    திருஞான சம்பந்தரின் பாடல்களை விட அப்பரின் பாடல்களில் தான் வடசொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மருள் நீக்கியார் என்ற தமிழ்ப் பெயர் தாங்கிய அப்பர், சமண சமயத்தில் சேர்ந்த பின் தருமசேனர் என்ற வடமொழிப் பெயர் பெற்றதையும், தருமபாலர், புத்தமித்திரர் போன்ற வடமொழிப் பெயர் தாங்கிய புறச் சமயத்தார் அனைவரும் பச்சைத் தமிழரே என்பதையும்  கவனிக்க வேண்டும்

    எனவே தான் மண்ணின் மொழியில் பாக்கள் இயற்றிய ஞானசம்பந்தர் தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன் என்று பெருமிதத்தோடு கூறிக் கொள்கிறார். திருமூலரும் என்னை நன்றாக இறைவன் படைத்தான் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு என்று கூறிப் பரவசப்படுகிறார்.

    ஆலயங்களில் ஸம்ஸ்கிருதம் புகுந்தது எப்படி?
    சமணத்திலிருந்து புதிதாகச் சைவத்துக்கு வந்தவர்களைக் கவர்வதற்காக ஸம்ஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மதம் மாறியவரின் உற்சாகம் என்பதற்கிணங்கப் புதிதாக அந்தணராக்கப்பட்டவர்கள் பழைய அந்தணர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக ஸம்ஸ்கிருதத்தை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கி  இருக்கலாம்.

    சோழ அரசர்கள் அந்தணர்களுக்கு வரியில்லாத நிலங்களை மானியமாக அளித்தார்கள் என அறிந்தோம். இந்த நிலங்கள் எங்கிருந்து வந்தன? நிலம் புதிதாக உற்பத்தி செய்ய முடியாதது. ஏற்கெனவே பழந்தமிழ்க் குடிகள் விவசாயம் செய்த நிலத்தைத் தான் அரசர்கள் அந்தணர்களுக்குக் கை காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் அரசருக்கு வரி செலுத்துவதற்குப் பதிலாக இந்தப் புதிய அந்தணர்களுக்கு வரி செலுத்த வேண்டும் என உத்திரவிட்டிருக்க வேண்டும்.

    இதில் விவசாயிகளுக்குப் பொருளாதார நட்டம் ஏதுமில்லை. அரசனுக்குச் செலுத்துவதற்குப் பதிலாக அந்தணருக்குச் செலுத்தினர். அந்தணரும் வந்ததைக் கொண்டு எளிமையாக வாழ்ந்து தத்தம் கடமையைச் செய்து கொண்டிருந்தனர்.

    17ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் சாதிப் பெயரைப் பின்னொட்டாகப் போட்டுக் கொள்வது வழக்கில் இல்லை. கம்பர் படையாச்சி, ஓட்டக்கூத்தர் முதலியார் என்று எங்கேனும் சொல்லப்பட்டிருக்கிறதா? அருணகிரிநாதரின் சாதியை அவர் பெயரைக் கொண்டு சொல்ல முடிகிறதா?

    சாதிப் பின்னொட்டுகள் தலைதூக்குவது ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தான். ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்ட ஆங்கிலேயர் நில உடைமையை ஆவணப்படுத்தத் தொடங்கும்போது இந்த இறையிலி நிலம் யாருக்கு உரியது என்று விசாரிக்கத் தொடங்கினர். இங்கிலாந்து நாட்டு முறைப்படி உழுது விளைவித்தவரைக் குத்தகைதாரர் என்றும் உட்கார்ந்து சாப்பிட்டவரை உரிமையாளர் என்றும் ஆவணப்படுத்தினர். இது பரம்பரையாக உழுது பயிரிட்டவர்களுக்குக் கசப்பை ஊட்டியிருக்க வேண்டும். பார்ப்பன வெறுப்பின் வேர் இங்கே தான் இருக்கிறது.

    ஆங்கிலேயர் தங்கள் நாட்டில் உள்ளது போல இங்கு சர்நேம் இல்லாதது கண்டு வியந்தனர். மக்களுக்கு சர்நேம் ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்தினர். அப்பொழுது ஒவ்வொரு குழுவினரும் ஒரு உயர்ந்த பெயரைத் தேர்ந்தெடுத்தனர். ஐயன், முதலி, படையாட்சி, தேவன், செட்டி (சிரேஷ்டி- உயர்ந்தவர்) என்று எல்லாப் பட்டப் பெயர்களும் உயர்வைப் பறை சாற்றுவதாகவே உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை இந்தப் பெயர்கள் எளிமையாகவே இருந்தன. அதன் பின்னர் தான் இவற்றில் அர் ஆர் விகுதி சேர்க்கப்படலாயிற்று- ஐயர், முதலியார், படையாட்சியார், தேவர், செட்டியார் என. 19ஆம் நூற்றாண்டுக் கதைகளைப் பார்க்கவும். பாரதியின் கதைகளிலும் காணலாம்.

    மக்களைப் பிரிப்பதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றுவிட்டனர். தங்கள் கம்பெனியிலும் அரசாங்கத்திலும் வேலை செய்ய வல்ல இளைஞர்களைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தபோது கல்வியே தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்கள் அவர்களுக்குக் கை கொடுத்தனர். மற்றவர்கள் தயங்கியபோது இவர்கள் மேலைநாட்டுக் கல்வியைத் துணிந்து ஏற்றனர். அவர்களது பொருளாதாரம் மேலோங்கத் தொடங்கியது. மற்றவர்களுக்குப் பொறாமை ஏற்படலாயிற்று.

    பார்ப்பனர்களிலும் ஏழைகள் உண்டு, மண்டுகள் உண்டு, குணக்கேடர்கள் உண்டு. ஆயினும் பெரும்பாலான பார்ப்பனர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள், பதவி உயர்வு பெருகிறார்கள். பிற சாதியினர், பிற மதத்தவர் கூடத் தங்கள் நிறுவனங்களில் பார்ப்பனரை வேலைக்கு அமர்த்திக் கொள்ள விரும்புகிறார்கள். ஏன்? பார்ப்பனர்களின் வெற்றியின் ரகசியத்தைத் தெரிந்துகொண்டால் அவர்கள் மீது தேவையற்ற காழ்ப்புணர்வு குறையும், எல்லோரும் முன்னேற முடியும்.

    பார்ப்பனர்களுக்கு என்று கடவுள் விசேஷமான அறிவைக் கொடுக்கவில்லை. அறிவாளிகள் எல்லாச் சமூகத்திலும் உண்டு. பார்ப்பனர்களின் சிறப்புக்குக் காரணம் அவர்களது வாழ்க்கை முறையில் உள்ள சிறப்பு தான்.

    அது என்ன வாழ்க்கை முறை?
    வேதம் கற்கும் முறை பற்றி அறிவீர்கள். குரு ஒரு சொல்லை ஒரு முறை சொல்ல, மாணவர்கள் அதை இரு முறை திருப்பிச் சொல்கிறார்கள். அதில் எந்தத் தவறும் அனுமதிக்கப்படுவதோ, மன்னிக்கப்படுவதோ இல்லை. சரியான உச்சரிப்பில் சரியான ஸ்வரத்தில் மாணவன் திரும்பச் சொல்லும் வரையிலும் குரு விடுவதில்லை. இப்படி அடிக்கடிச் சொல்வதால் அது மனப்பாடம் ஆகிறது. தவறில்லாத நூறு சதவீதம் முழுமை தான் லட்சியமாகக் கொள்ளப்படுகிறது. 35 சதவீதம் வாங்கினால் பாஸ், 60 சதம் வாங்கினால் முதல் வகுப்பு என்று கூறும் பள்ளிப் படிப்புப் போன்றது அல்ல அது. இதில் பயின்றவர்கள் எந்தக் கல்வியையும், கலையையும் எளிதாகக் கற்க முடியும். தற்காலத்தில் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் வேதக் கல்வியை விட்டுவிட்டபோதிலும், கடுமையான வேதப் பயிற்சிக்கு உட்பட்டு வெளிவரும் புரோகிதர்களால் வழிநடத்தப்படுவதால் அவர்களுக்கு எந்த வேலையைச் செய்தாலும் சிரத்தையோடு செய்வது இயல்பாகவே அமைந்து விடுகிறது.

    சந்தியா வந்தனம் முதலாக பல சடங்குகளைப் பார்ப்பனர்கள் அனுசரிக்கிறார்கள். இவை ஒவ்வொன்றிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. தாமாகவே விரும்பி தம்மைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக் கொண்டு சடங்குகளைச் செய்வதால் மற்ற விஷயங்களிலும் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி ஏற்படுகிறது. எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகி, செய்ய வேண்டியதைத் திட்டமிட்டு, ஒவ்வொரு சிறு அம்சத்துக்கும் கவனம் செலுத்திச் செய்யும் பழக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு சடங்குகள் பல கட்டுப்பாடுகளை விதித்துச் சிரத்தையை வளர்க்கும் சிறந்த பயிற்சிக் கூடங்களாக உள்ளன.

    தற்காலக் கல்வி முறையில் சிரத்தைப் பயிற்சி வேறு வகையில் அளிக்கப்படுகிறது. இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதில் தொடங்கி, பல வகையான கட்டுப்பாடுகளுக்கு மாணவர்களை உட்படுத்தும் பள்ளி சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது என்பதைப் பார்க்கிறோம். அதில் பயிலும் எல்லாச் சாதி மாணவர்களும் மேல் நிலை அடைவதைப் பார்க்கிறோம். கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஏனோ தானோ என்று நடத்தும் இடங்களில் சுதந்திரமாகத் திரியும் மாணவர்களின் கல்வித் தரம் தாழ்வதையும் பார்க்கிறோம்.

    சாதிகளற்ற சமுதாயத்தை விரும்பிய பாரதி பார்ப்பானைப் பூணூலைத் துறக்கச் சொல்லவில்லை. ஒரு தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவிக்கிறார். அவர் தன் பூணூலை நீக்கிக் கொண்டதாகத் திரைப்படத்தில் காட்டுவது உண்மையா என்பதில் எனக்கு ஐயம் உண்டு.

    அவர் சொல்கிறார், காஷ்மீரில் இந்துக்களிடையே சாதிகள் கிடையாது. எல்லோரும் பிராமணர்கள் தாம். அது போல இந்தியா முழுவதும் மற்ற எல்லா சாதியினரையும் மச்ச மாமிசங்களைக் கைவிடச் சொல்லி ஒரு பூணூலை அணிவித்தால் சாதிப் பிரச்சினை தீர்ந்து விடும் என்கிறார்.

    வெவ்வேறு நீளமுள்ள இரு கோடுகளைச் சமப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு இரு வழிகள் உண்டு. பெரிய கோட்டை அழிக்கலாம் அல்லது சிறிய கோட்டை நீட்டலாம். பார்ப்பனர்களைத் தரம் தாழ்த்துவதன் மூலம் அடையப்படும் சமத்துவத்தை விட அவர்களது வெற்றியின் அடிப்படையைத் தெரிந்து கொண்டு அவர்களது நிலைக்கு உயர்வது ஒட்டு மொத்த சமூக முன்னேற்றத்துக்கான வழியாகும்.

    படம் உதவிக்கு நன்றி:  http://thamizhoviya.blogspot.com/2011/11/blog-post_07.html

    Share