Blog

  • ஆசிரியர் தினம்- என் தந்தையின் நூற்றாண்டு வருடம்

    சு. ரவி

    ஓவியம்  சு. ரவி
    ஓவியம் சு. ரவி



    என் தந்தையார் திரு. A.சுப்ரமணியன் அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயிலை P.S. உயர்நிலைப் பள்ளியில் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், தாளளராகவும் பொறுப்பேற்றுத் தமது 58 ஆம் வயதில், 1973 ஆம் ஆண்டு மறைந்தார்.

    இவ்வருடம் அவருடைய நூறாவது பிறந்த ஆண்டாக அமைகிறது.

    கணிதப் பாடத்தையே கவிதை போலச் சொல்லிக் கொடுக்கும் அவருடைய ஆங்கில இலக்கிய வகுப்புகள் எப்படி இருக்கும் என அவரிடம் பயின்ற மாணவர்கள் வியந்து பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.

    ஆழ்ந்த இறைபக்தி, அமைதியும் சாந்தமும் தவழும் முகம், அதிநுட்பமான கணித அறிவு, அற்புதமான குரல்வளம், இணையிலா இசைஞானம், ஒவ்வொரு கடைநிலை மாணவனும் உயரவேண்டும் என்ற உண்மையான அக்கறை,
    தூய வெண்ணிற வேட்டி, அரைக்கைச் சட்டை, மேல்துண்டு என எளிமை…

    மானவர்களுக்கு மட்டுமல்ல, உடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் கூட முன் மாதிரியாக இருந்து வழிகாட்டியவர்.

    வீட்டிலோ எங்கள் நினைவுக்கு எட்டியவரையில் அன்பு என்கிற சூழலன்றி வேறு நாங்கள் கண்டதில்லை. விளையாட்டாக என்னைச் சீண்டுவது போலக் கணக்குகளைக் கொடுத்து, சமயோசிதமாகவும், Out of the box &
    Lateral சிந்தனைகள் மூலமாகவும் நான் தீர்வு கண்கிறேனா என்று சோதித்துப் பார்ப்பார்.

    நான் வரையும் ஓவியங்களுக்கும், எழுதும் கவிதைகளுக்கும் முகத்தெதிரே பாராட்டாமல் என் தாயிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்.

    பிற்காலத்தில், நான் ஒரு பகுதி நேர ஆசிரியனாகச் சில அமைப்புகளில் பணியாற்ற எனக்கு அவரே உந்துசக்தியாக இருந்தார்.

    இப்படிப் பட்ட ஒரு ஆசிரியப் பெருந்தகைக்கு மகனாகப் பிறந்ததை எண்ணிப் பெருமையோடு எந்தந்தையின் எண்ணெய் வண்ண ஓவியத்தை அவருடைய நூற்றாண்டு வருடத்திய இந்தத ஆசிரியர் தினத்தில் பகிர்ந்து கொள்கிறேன்!

    சு.ரவி

    Share
  • உளிகளின் மேல் கோபமில்லை

    தாரமங்கலம் வளவன்

    என் குளம்புகளில் லாடம் அடித்த
    சுத்தியல் மீது எனக்குக் கோபமில்லை
    என் மண்டையில்
    குட்டிய கைகளுடன் எனக்குக் கோபமில்லை
    என்னைச் செதுக்கிய
    உளிகளின் மேல் எனக்குக் கோபமில்லை!

    Share
  • Teachers’ day share

     

    My humble homage to the teaching fraternity!

    Su.Ravi

     

    as1

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 21

    சு.கோதண்டராமன்.

     

    சோமம்

    hindugod_soma

    ரிக் வேதத்தில் சோமம், சுரா என்று இரு வகையான பானங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் சுரா என்பது போதை தருவது. இது இகழப்பட்டுள்ளது.

    சுராவினால் போதை அடைந்தவர்கள் போலச் சண்டையிடுகிறான் (8.2.12); சுரா பாவம் செய்யத் தூண்டுகிறது (7.86.6); சுரா அருந்தும் செல்வந்தனோடு இந்திரன் நட்புக் கொள்ளான்(8.21.14) – என்ற வேத வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

    இதற்கு மாறாக, சோமம் விரிவாகப் புகழப்பட்டுள்ளது. ரிக் வேதம் 9வது மண்டலம் முழுவதும் (1017 பாடல்கள்) சோமத்தின் புகழ்ச்சி மட்டுமே. மற்ற தொகுதிகளிலும் சோமத்தைக் குறித்த புகழ்ச்சிகள் பல உள்ளன.

    தேவர்கள் எல்லோரும், குறிப்பாக, இந்திரன், சோமத்தில் பிரியமுள்ளவராகக் கூறப்பட்டிருக்கிறார்கள். சோமத்தை அருந்தியதால் ஏற்பட்ட உற்சாகத்தில் இந்திரன் பல எதிரிகளை வென்றதாகவும், பல அருஞ் செயல்களைச் செய்ததாகவும் வேதம் கூறுகிறது. வாயு தேவனுக்கு சோமத்தில் முதல் உரிமை உண்டு. காலை நேரத்து சவனத்தில் (பிழிதலில்) அச்வினி தேவர்களுக்கு சிறப்பிடம் உண்டு. தேவ நிலைக்கு உயர்ந்த மனிதர்களாகிய ரிபு சகோதரர்களுக்கும் மற்ற தேவர்களைப் போல சோமம் அளிக்கப்படுகிறது.

    யக்ஞமும் சோமமும்
    சோமம் என்பது வேள்வியின் ஒரு அத்யாவசியமான அங்கம். சோமம், ஸ்தோமம் (பிரார்த்தனை), நமஸ்காரம், புத்தி இவை அனைத்தும் சேர்ந்தால்தான் யக்ஞம் குறைவற்றதாக ஆகிறது. யக்ஞஸ்ரீ என்ற சிறப்பும் சோமத்துக்குக் கொடுக்கப்படுகிறது.

    சோமனும் சந்திரனும்
    சோமச் சாற்றுக்கு இந்து என்ற பெயரும் உண்டு. சோமன் என்பதும் இந்து என்ற சொல்லும் பல இடங்களில் சந்திரனைக் குறிப்பதாகவும் இருக்கின்றன. இந்து சோமனைத் தழுவுகிறது என்ற மந்திரம் (9.12.5.). இரண்டும் வேறு வேறானவை என்று காட்டினாலும் சில இடங்களில் சோம பானம் சந்திரன் இரண்டுக்கும் பொதுவான புகழ்ச்சியான மந்திரங்களும் உள்ளன.

    somamசோமத் தாவரம்
    சோமம் என்பது மலைப் பிரதேசங்களில் விளையும் ஒரு தாவரம், அதன் தண்டு சாறுள்ளது என்பது மட்டும்தான் ரிக் வேதத்திலிருந்து அறிய முடிகிறது. பாரசீக சமயத்தின் வேத நூலாகிய ஜெண்ட் அவஸ்தாவில் இது ஹோமா என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது என்ன தாவரம், தற்காலத்தில் அதன் பெயர் என்ன என்பதை அறிய உலகளாவிய ஆராய்ச்சி நடைபெறுகிறது. சிலர் வடமேற்கு இந்திய மலைப்பகுதிகளில் விளையும் எபிட்ரா சினிகா (Ephedra sinica) என்ற கோரை போன்ற செடிதான் அது என்று கருதுகிறார்கள். ஆனால் அறிஞர்களிடையே ஒத்த கருத்து இல்லை.

    சாறு எடுத்தல்
    அந்தத் தாவரத்தை வண்டியில் கொண்டுவந்து, இரு பாறைக் கற்களுக்கு இடையில் வைத்து சாறு வரும் வரை நசுக்கி, பசு அல்லது ஆட்டுத் தோலின் மீது பரப்பப்பட்ட ஆட்டு ரோமத்தால் ஆன ஒரு வடிகட்டியின் மீது வைத்துக் கைகளால் முறுக்கிப் பிழிகிறார்கள். (பிழியாத சோமத்தை விட பிழிந்த சோமம் மேலானது என்ற மந்திரத்திலிருந்து (6.41.4) அம்சு எனப் பெயரிடப்பட்ட அந்தத் தண்டுகளை அப்படியே சுவைப்பதும் வழக்கில் இருந்திருக்கக் கூடும் என்பதை அறிகிறோம்). பிற்காலத்தில் அதை மர உரலில் இட்டு உலக்கையால் நசுக்கிச் சாறு எடுப்பது வழக்கத்திற்கு வந்ததை முதல் மண்டலத்திலுள்ள ஒரு சூக்தம் கூறுகிறது. அது சுத்தம் செய்யப்பட்டு அடியில் உள்ள ஒரு மரப் பாத்திரத்தில் சேருகிறது. அதில் நீர், பால், தயிர் இவை கலக்கப்படுகின்றன. இது அருந்தத் தயாராக உள்ள பானம். சோமஸ்ய சமிதார (சோமத்தை எரிப்பவர்) என்ற சொல் இது நெருப்பின் மேல் வைத்துச் சூடாக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இதன் சுவை இனிப்பானது, தேன் போன்றது எனக் கூறப்பட்டிருக்கிறது. இது பழுப்பு நிறமானது என்றும் பச்சை நிறமானது என்றும் இருவகையாகவும் கூறப்பட்டுள்ளது. பால் முதலியன கலப்பதற்கு முன் பச்சையாகவும் கலந்த பின் பழுப்பு நிறமாகவும் இருந்திருக்கக் கூடும்.

    தன்மைகள்
    சோம பானம் போதை தருவதாகவோ, செயலற்று முடக்குவதாகவோ, கலாட்டா செய்யும் தன்மையை உண்டாக்குவதாகவோ, பழக்கத்தை நிலைநாட்டுவதாகவோ சொல்லப்படவில்லை. இது அமரத்துவமும் ஆனந்தமும் தரக் கூடியதாகக் கூறப்பட்டிருக்கிறது.

    வேத ரிஷிகளின் பாடல்கள் அவர்கள் உலகில் ஒவ்வொரு பொருளையும் முதன் முதலாகப் பார்க்கும் குழந்தை போலக் கூர்ந்து கவனித்து அதன் அழகை ரசித்து அனுபவித்ததைக் காட்டுகின்றன. அக்னி எரியும் அழகை ரசித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், சோமச் சாறு ஓடி வருவதை ரசித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளனர். கண்ணுக்குத் தெரியாத காற்றை ஒளி வடிவமாகக் காண்கிறார்கள் (காற்றுத் தேவனின் உடல் வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்ததாகப் பாரதி கூறியது வேதத்தின் தாக்கம்தான்). அவர்களது தான் என்னும் உணர்வு உடலைச் சார்ந்ததாக இராமல் பரந்ததாக உள்ள நிலையில் நானே இந்திரன், நானே வருணன், உலகைப் படைத்தது நானே என்று கூறி பரம்பொருளுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள், நாங்கள் சோமத்தைக் குடித்து அமரராகிவிட்டோம் என்று கூறுவதன் மூலம், பாரதி கூறியது போல, வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும் வகை உணர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இதெல்லாம் சாத்தியமானது சோம பானத்தின் தாக்கத்தால் என்றால், சோமம் என்பது மனதை விரிவுபடுத்தும் பொருள்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

    மனதை விரிவுபடுத்தும் மருந்துகள் பற்றி விக்கிபீடியா கூறுவதைப் பார்ப்போம்.

    முதலில் புலன்கள் தீவிரம் அடைகின்றன. சாதாரணமாகக் கவனத்தில் வராத விஷயங்கள் சிறப்பான கவனம் பெறுகின்றன. பழகின விஷயங்கள் கூட முதன் முதலாகப் பார்ப்பது போல ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் முக்கியத்துவம் உள்ளதாகவும் தோன்றுகின்றன. பொருளின் நிறம், வடிவம், அழகு, ஒலியின் இனிமை முதலியன மிகுதியான தெளிவுடன் தோன்றுகின்றன. ரசனை மிகுதிப்படுகிறது. உடலிலும் சுற்றுப்புறத்திலும் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட பெரிதாகத் தோன்றுகின்றன. காதால் பார்ப்பது, கண்ணால் கேட்பது முதலிய புலன் மாறிய நிகழ்வுகள் ஏற்படுகின்றன. காலம் மிக மெதுவாக ஊர்கிறது அல்லது அசைவற்று நின்று நிகழ்காலம் அமரத்துவம் உடையதாக ஆகிவிடுகிறது. தான் என்னும் உணர்வு அற்றுப் போகிறது. தனக்கும் சுற்றுப்புறத்துக்கும் இடையே உள்ள தடுப்பு நீங்கி விடுகிறது.

    சோமமும் அத்தகைய பொருளாக, மனதை விரிவுபடுத்தி, சாதாரண நிலையிலிருந்தும் உயர்த்தி, அச்சம், கவலை, கோபம், பொய்மை, ஆசை இவை எதுவும் இல்லாத அமைதியான, ஆனந்தமான மனநிலையைத் தரக்கூடியதாக இருக்கக் கூடும்.

    மன விரிவை தியானத்தின் மூலமும் அடைய முடியும் என்று யோக சாத்திரம் சொல்கிறது. ரிஷிகள் இதை தியானம், சோமம் இரண்டையும் பயன்படுத்தி அடைந்திருக்கலாம்.

    அமரத்துவம்
    வேதம் மூன்று வகையான அமரத்துவங்களைக் குறிப்பிடுகிறது என்று பார்த்தோம். சந்ததி பெருகுவதால் உணரப்படும் அமரத்துவம், பிறர் நலனுக்காக அருஞ்செயல்கள் செய்து புகழ் பெறுவதன் மூலம் கிடைக்கும் அமரத்துவம் என்ற இரண்டு தவிர சோம பானத்தினாலும் அமரத்துவம் அடையலாம். இதை அருந்திக் கால உணர்வு அற்றுப் போவதால் உணரப்படும் அமரத்துவம் தற்காலிகமானது.

    சோமம் நிரந்தர அமரத்துவத்தையும் தரவல்லது. எப்படி எனில் அது அறிவையும் ஆற்றலையும் தூண்டுகிறது என வேதம் கூறுகிறது. இதை அருந்திய உற்சாகத்தில் இந்திரன் பல எதிரிகளை வென்றார், பல அருஞ் செயல்களைச் செய்தார், புகழ் பெற்றார், அமரத்துவம் அடைந்தார்.

    இவ்வாறு ஆற்றலையும் அறிவையும் பெருக்குவதன் மூலம் அருஞ்செயல்கள் செய்ய வைத்து நிரந்தர அமரத்துவத்துக்கும் வழி வகுக்கும் சோமத்தைப் பற்றி ரிஷிகள் மிகுதியாகப் பாடியது ஒன்றும் வியப்பில்லை.

    நான்கு மன நிலைகள்
    ரிஷிகளின் பாடல்கள் நான்கு வகை மன நிலைகளில் பாடப்பட்டதை வேதத்தை ஆழ்ந்து கற்பவர் உணர முடியும். முதல் நிலையில் அவர்கள் சாதாரணப் புலவர்களைப் போலப் பாடுகிறார்கள். உவமைகள், உருவகம், மிகைப்படுத்தல் முதலிய அணிகள் கொண்டதாக உள்ளன அப் பாடல்கள். தீனியை நோக்கி ஓடும் குதிரை போல காட்டில் தீ விரைந்து பரவுகிறது என்று கூறுவதும், சோமச் சாற்றில் நீர் கலக்கும் போது சோமம் நீராகிய ஆடை அணிந்திருப்பதாகக் கூறுவதும், அக்னியின் புகையாகிய கொடி வானுலகை எட்டுகிறது என்று கூறுவதும் இதற்கு எடுத்துக் காட்டுகள்.

    அவர்கள் தியானத்தில் ஆழ்ந்ததாலோ அல்லது சோமத்தை அருந்தியதாலோ பரவச நிலை அடையும் போது பாடு பொருள் எதுவாக இருந்தாலும் அதைத் தேவனாகக் கருதிப் பாடத் தொடங்குகின்றனர். அக்னியை, இந்திரனை, குதிரையை, நதிகளை, நீரை, மேகத்தை, ஏன், தவளையைக் கூடத் தேவ நிலைக்கு உயர்த்துகின்றனர். இது இரண்டாவது நிலை.

    சோமத்தைத் தேவனாக ஆக்கிப் பாடும் பாடல்களில் விருத்திரனை அழித்தது முதலிய இந்திரனின் செயல்கள் சோம தேவன் பேரிலும் ஏற்றிக் கூறப்படுகின்றன. இந்திரனைப் போலவே சோம தேவனுக்கும் மருத்துகளைத் துணைவராகக் கொண்டவர், வலிமை மிக்கவர் என்ற அடைமொழிகள் உண்டு.

    சோம தேவன் ருத்ரனுடன் சேர்ந்து மருந்துகளால் நோய் நீக்குகிறார். வருணனைப் போலவே அவரும் இயற்கை நியதியைக் கட்டிக் காக்கிறார். சூரியன் போல எல்லாரையும் பார்க்கிறார். அக்னியைப் போல அவரும் கவி (அறிவாளி), வேள்வியின் மையம் என வர்ணிக்கப்படுகிறார்.

    பேச்சையும் புத்தியையும் தூண்டுகிறார், அவரால் பாதிக்கப்படாதார் இல்லை. போரில் வெல்ல முடியாதவர். இருளை நீக்குகிறார். செல்வம், வசதி முதலியன கொடுக்கிறார், பிரார்த்தனைகளுக்கு இரங்கி சிறப்புகளுக்குள் மேலான ரயி எனப்படும் செல்வம் கொடுக்கிறார், மந்திரங்களின் தலைவர் என்றும் மனத்தின் தலைவர் என்றும் போற்றப்படுகிறார்.

    சோமனே பரம்பொருள்
    மூன்றாவது கட்டமாகிய பேரருள் நிலையில் ரிஷிகளுக்கு எல்லாமே பரம்பொருளாகத் தெரிகிறது. தான் என்னும் உணர்வு உடலைச் சார்ந்ததாக இராமல் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பதான தோற்றம் ஏற்படுகிறது. காக்கைச் சிறகினிலும், கேட்கும் ஒலிகளிலும், தீயில் கை வைத்த போதும் பாரதி இறை இன்பத்தை அனுபவிக்க முடிந்தது போல இவர்களும் சோமச் சாற்றில் பரம்பொருளைக் காண்கின்றனர்.

    சோமன் உஷஸ் என்னும் வைகறைப் பொழுதைச் சூரியனுக்குத் துணையாக ஆக்கினார், சூரியனில் ஒளி வைத்தார், பூமியையும் விண்ணையும் நிலை நிறுத்தினார் என்று கூறுகின்றனர். மழை, மகப்பேறு, உணவு தருபவர் என்றும், ஆடை இல்லாதவர்க்கு ஆடை அளிப்பவர் என்றும், குருடனைப் பார்க்க வைக்கிறார், நொண்டியை நடக்க வைக்கிறார், பசுவினிடத்தில் பாலை வைத்தார், தேவர்களைப் பிறப்பித்தார் என்றும் அவர் கூறப்படுகிறார்.

    தத்துவம்
    சோமச் சாறு வடிகட்டப்படும்போது, அதில் ரிஷி ஒரு தத்துவத்தைக் காண்கிறார். ஆட்டு ரோமத்தால் வடிகட்டிய சோமம் ஆனந்தம் தருவது போல தர்மம் என்னும் வடிகட்டி மூலமாகப் புகுந்து வரும் நல்ல பேச்சு எல்லோருக்கும் ஆனந்தம் தரவல்லது என்கிறார்.

    வருணனின் அற்புத சக்தியால் நாக்கின் நுனியில் தர்மத்தால் ஆகிய ஒரு வடிகட்டி அமைந்துள்ளது. அறிவாளிகள் அதை நெருங்கிப் பயன் அடைகின்றனர். முடியாதவர்கள் பள்ளத்தில் வீழ்கிறார்கள் (9.73.9).

    ஒரு வகை தியானம்
    சோமச் சாறு கைகளால் பிழியப்படுவதையும், அது ஆட்டு ரோம வடிகட்டி மூலம் பாத்திரத்தில் விழுவதையும், அப்போது சத்தம் ஏற்படுவதையும் விதவிதமாக வர்ணிக்கிறார்கள் ரிஷிகள். ஒரு எளிய செயல், இதில் வர்ணிப்பதற்கு என்ன இருக்கிறது, அவர்களைக் கவரும் அளவுக்கு அதில் என்னதான் இருந்திருக்கும் என நாம் வியக்கும் போது ஜப்பானியரின் சாஜி என்னும் தேநீர்ச் சடங்கு நினைவுக்கு வருகிறது.

    இதில், விருந்தினருக்குத் தேநீர் அளிப்பதை, நான்கு மணி நேரம் ஆகும் ஒரு விரிவான சடங்காக்கி, ஒவ்வொரு அசைவுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும் கவனம் செலுத்தி, அதை ஒரு தியான முறையாக ஆக்குகின்றனர். அதைப் போல, சோமச் சடங்கும் மனத்தை ஒரு நிலைப்படுத்திச் செய்யப்படும் ஒரு வகைத் தியான முறையாக இருந்திருக்கக் கூடும். சோமத் துளிகள் ஒவ்வொன்றிலும் பரம்பொருளைக் காண்பதால் அதை வர்ணிப்பதில் ரிஷிகளுக்கு அலுப்பு ஏற்படுவதில்லை.

    சோமம் ஆனந்தத்தின் பிரதிநிதி
    பரவச நிலையில் ஒவ்வொரு தேவனும் ரிஷிகளுக்குப் பரம்பொருளாகத் தெரிவது போல, சோமமும் பரம்பொருளாகத் தெரிகிறது. சோமம் என்பது ஒரு தாவரத்தைப் பிழிந்து வருவது என்று குடிக்கிறவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ரிஷிகள் எதைச் சோமம் என்று கருதுகிறார்களோ அதை யாரும் அறிய மாட்டார்கள் [7] என்கிறது வேதம். சோமம் ஆனந்தத்தின் பிரதிநிதி. ஆனந்தம் என்பது பொருளைச் சார்ந்தது அல்ல. அது உள்ளத்திலிருந்து பீறிட்டு எழுவது. வெளியில் உள்ள பொருள் அதற்கு ஒரு தூண்டுதல் மட்டுமே. நமக்குச் சாதாரணமாகத் தோன்றும் பொருள்களைப் பார்த்துக் குழந்தை மகிழ்ச்சியால் மலர்கிறது. அது போல ரிஷிகள் ஆற்றையும், சூரியனையும், இரவையும், மரங்களையும் பார்த்தும், காற்றை ஸ்பரிசித்தும் ஆனந்தம் அடைகிறார்கள். விண்ணையும் மண்ணையும் படைத்த அவன், அளவிடமுடியாததாகவும் ஒழுங்குற அமைந்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லாமல் நிற்பதாகவும் இவற்றைப் படைத்த அவன், நிச்சயமாக ஒரு திறமையான கலைஞன்தான்[8] என்று பரம்பொருளை வியக்கிறார்கள்.

    எதையும் பார்த்து வியந்து ஆனந்தம் அடையும் இத்தகைய குழந்தை மனநிலையையே ஒரு கட்டத்தில் ரிஷிகள் சோமமாகக் காண்கிறார்கள்.

    படம் உதவிக்கு நன்றி:
    http://www.bellaterreno.com/art/a_religion/hindu/hinduismgod_soma.aspx
    http://www.bellaterreno.com/art/images/sitegraphics/hindugod_soma.gif

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(122)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன்.

    இவ்வுலகத்தின் சுழற்சியோடு சுழலும் மக்களின் வாழ்க்கைச் சுழற்சியின் அச்சாணியாகத் திகழ்வது பணமாகும்.

    இப்பணத்தின் முக்கியத்துவம் கணக்கிலடங்காத வகையில் பலராலும் பல்வேறு வகைகளில் அழகாக எடுத்தியம்பப்பட்டிருக்கின்றது.

    விரும்பியோ விரும்பாமலோ இவுலக சரித்திரத்தில் பெரிய பிரித்தானியா என்றழைக்கப்பட்ட இப்போதைய ஐக்கிய இராச்சியம் பெரும் பங்கு வகித்திருக்கிறது.

    நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ இங்கிலாந்த்து இன்று பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் பூசல்களுக்குக் காரணமாக இருப்பதும் ஒரு சரித்திர உண்மையே !

    இந்த அடிப்படைக் காரணத்தினால் இன்றைய உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாக, உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து இருப்பதும் தவிர்க்கப்படமுடியாத உண்மையே !

    உலகின் பல்வேறு நாடுகளில் இங்கிலாந்து கொண்டிருந்த அன்றைய ஆதிக்கத்தின் விளைவாகவே இன்றைய இங்கிலாந்து ஒரு பல்வேறு இனங்களை உள்ளடக்கிய, பல்வேறு மதங்களை உள்ளடக்கிய, பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களை உள்ளடக்கிய ஒரு பல்லினக் கலாச்சார மையமாகத் திகழ்கிறது.

    இன்றைய வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றில் இருந்து இங்கிலாந்த்தை நோக்கிப் படையெடுக்கும் இளையதோர் சமுதாயம் இருப்பது கண்கூடான ஒரு உண்மை.

    பலநாடுகளின் கல்விமுறைகள் அக்கல்விச்சாலைகளில் இருந்து பட்டம் பெற்றோர் இங்கிலாந்தில் பணிபுரிவதற்கு ஏதுவான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    பல நாடுகளில் இங்கிலாந்து செல்வதற்குத் தேவையான வகையில் அவர்களின் அறிவை விஸ்தரித்துக் கொள்வதற்காகப் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டு அவற்றின் மூலம் அவர்கள் பொருளாதார இலாபம் அடைந்து வருவதும் கண்கூடாகக் காணக்கூடியதொன்றாகவே இருக்கிறது.

    bank3சரி,  இதற்கெல்லாம் ஆதாரமான இங்கிலாந்தின் சட்டபூர்வமான தேசிய வங்கியின் சரித்திரத்தைச் சிறிது பின்னோக்கிப் பார்ப்பதற்காவே இத்தகையதோர் ஆரம்பத்துடன் இம்மடலில் உங்களைச் சந்திக்கிறேன். 1690களில் ஜரோப்பிய கடலில் ஆதிக்கம் செலுத்திய கடற்படைக்குச் சொந்தமான நாடு அன்றைய பிரஞ்சு தேசமாகும். அவர்களின் அக்கடற்படையின் ஆதிக்கத்தின் அனுகூலத்தினால் பிரான்சு நாட்டிடம் படுதோல்வியடைந்தது இங்கிலாந்து.

    இத்தோல்வி கொடுத்த பாடத்தினால் தாம் ஒரு அதிசிறப்பான கடற்படைய நிறுவ வேண்டிய தேவைக்கு அப்போதைய இங்கிலாந்து அரசரான 3ஆம் வில்லியம் மன்னர் தள்ளப்பட்டிருந்தார்.

    இத்தேவைக்குரிய பணத்தை அப்போதைய இங்கிலாந்து அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. இத்தேவையே இன்றைய ” இங்கிலாந்து வங்கி   (Bank of England) க்கு அத்திவாரமிட்டது எனலாம்.

    பிரத்தியேக மக்கள் அரசுக்கு பொன் கட்டிகளைக் கொடுத்து வங்கி மூலம் அதற்குரிய காகிதக் கற்றைகளை பெற்றுக் கொள்வார்கள். பின்பு இக்காகிதக் கற்றைகள் மீண்டும் கடனாகக் கொடுக்கப்படும்.

    இத்தகைய முறையின் மூலம் அப்போதைய இங்கிலாந்து அரசு கப்பற்படையை ஸ்தாபிப்பதற்கான தொகையை விட இரண்டு மடங்கான தொகையை பன்னிரண்டே நாட்களில் சேகரித்துக் கொண்டது.

    bank1இவ்வங்கியின் ஸ்தாபகத்தின் மூலகர்த்தா அப்போதைய ஹலிவாக்ஸ் (Halifax) எனப்படும் பகுதியின் முதலாவது பிரபுவான சார்லஸ் மொண்டகே (Charles Montague) என்பவராவார்.

    இவங்கிக்கான முதலாவது அரச முத்திரை 1694 யூலை மாதம் 27ம் நாள் வழங்கப்பட்டது.

    இவ்வங்கியின் முதலாவது கவர்னராக ஜான் கொப்லான் (John Houblon) என்பவர் நியமிக்கப்பட்டார்.

    இவரது படம் இங்கிலாந்து 50 பவுன் தாளில் 1994ம் ஆண்டு பதிவிடப்பட்டது.

    இவ்வங்கியின் முதலாவது தரிப்பிடமாக லண்டன் நகரின் பகுதியான வால்புறூக் தெரிவு செய்யப்பட்டது. இக்கட்டிடத்தின் அடிப்பகுதியில் பழைய ரோமேனிய புராதனக் கண்டுபிடிப்பான மித்திராஸ் கோவிலின் எச்சங்கள் 1954ம் ஆண்டு சித்திர ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடக் கூடிய ஒரு நிகழ்வு.

    bank2தற்போது அமைந்திருக்கும் திரட்நீடில் எனும் தெருவிற்கு மாறுவதற்கு முன்னால் 1780ம் ஆண்டில் சமூகவெறியாட்டம் போட்ட கும்பல் ஒன்றின் தாக்குதலுக்குள்ளானது. அன்றிலிருந்து 1973ம் ஆண்டு வரை இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்பு ரோந்தில் இங்கிலாந்து இராணுவத்தின் படைப்பிரிவின் ஒரு பகுதியினர் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    1844ம் ஆண்டில் இங்கிலாந்து வங்கிக்கு இங்கிலாந்து பவுன்  காகிதக் கற்றைகளை விநியோகிக்கும் முழு உரிமையும் அளிக்கப்பட்டது.

    1997ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு  பதவிக்கு வந்த லேபர் அரசாங்கத்தின் நிதியமைச்சரான கோர்டன் பிரவுன் அவர்களால் இங்கிலாந்து வங்கிக்குப் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

    இதுவே இங்கிலாந்து வங்கியின் வரலாற்றுச் சுருக்கமாகும். ஒரு நாட்டின் செல்வச்செழிப்புக்குக் காரணம் அந்நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளே.

    தாம் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனும் சுயநல நோக்கினால், தொலைநோக்கான பொதுநலக் கொள்கைகளை முன்வைக்காது குறுகிய கொள்கைகளை முன்வைப்பதற்கு  பதவியிலிருக்கும் அரசுகள் முனைந்து வந்த காரணத்தினாலேயே இங்கிலாந்து வங்கிக்கு முழுச்சுதந்திரம் அளிக்கப்பட்டது.

    இது இங்கிலாந்தின்  அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அனைத்துத் தரப்பினராலும் கணிக்கப்படுகிறது.

    இவ்வங்கியின் தற்போதைய கவர்னராக முந்தைய கனேடிய வங்கியின் முகாமையாளரான “மார்க் கானி (Mark Carney) பதவி வகிக்கிறார்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஓடையின்னா நல்லோடை …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    ராஜாத்தி ரோஜாக்கிளி

     

    ஓடையின்னா நல்லோடை……
    கொஞ்சும் தமிழ் கொலுவிருக்க…
    ஓடை   நீரினில் அலைகள் தாளமிட…
    சொந்தம் இரண்டு நெருங்கியிங்கே..
    உறவுத் தேரினில் ஏறிவருவதுபோல்..

    ஓடையின்னா நல்லோடை
    ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
    தங்கக் கொழுந்தனுக்கு
    சாந்துப்பொட்டு வைக்க வேணும்
    தந்தன்னா.. தானே தந்தன்னா..

    muthulingam..  சந்திரபோஸ்  ஜெயச்சந்திரன்  sjanaki

    கிராமத்துக் காதலை அழகாக ஒரு கவிதையாய் சொல்லியிருக்கும் கவிஞர் முத்துலிங்கம்! மனதை ஈர்க்கும் இசை அமைத்திருக்கிறார் சந்திரபோஸ்! மகரந்தப் பந்தலிட்டு பாடியிருக்கிறார்கள்.. ஜெயச்சந்திரன் மற்றும் ஜானகி

    கன்னி மனசையும் காதல் வயசையும்
    சேத்து வச்சு யாரு தச்சது
    சின்னக் கழுத்தையும் முத்துச் சரத்தையும்
    நீதானே சேத்து வச்சது

    வழக்குச் சொற்கள் வாய்மலர.. அவையே சிறப்புச் சொற்களாய் அணிவகுக்க..வசந்தகீதம் இதுவென்று வருகின்ற தலைமுறைக்கும் சொல்லலாமே!

    ஏலம் மணக்குற கூந்தல்வனத்திலே
    வாசமல்லி வச்சுவிடவா..
    பஞ்சும்வலிக்கிற பாதம் நடக்கவே
    பூவாலே பாலம் கட்டவா..

    ஆண்மையின் ஆலிங்கனத்தில்
    பெண்மை பேசத் தயங்கும்!
    உண்மையைச் சொல்வதென்றால்
    கண்களங்கே மயங்கும்!
    இதமான இசையிலே இன்பத்தமிழ் பவனி
    இதயத்திற்கு நெருக்கமான இரு குரல்களில்!!

    http://youtu.be/ta7U9vgPAr8

    காணொளி: http://youtu.be/ta7U9vgPAr8

    திரைப் படம்: ராஜாத்தி ரோஜாக்கிளி (1985)
    இசை: சந்தரபோஸ்
    குரல்கள்:  ஜானகி, ஜெயச்சந்திரன்

     

    ஓடையினா நல்லோட
    ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
    தங்க கொழுந்தனுக்கு
    சாந்து பொட்டு வைக்க வேணும்
    தன ந தானே தன ந

    ஓடையினா நல்லோட
    ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
    தங்கப் பசுங்கிளிக்கு
    சாந்து பொட்டு வைக்க வேணும்
    தன ந தானே தன ந
    தன ந தானே தன ந

    ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே
    வாச மல்லி வச்சி விடவா…
    ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே
    வாச மல்லி வச்சி விடவா…
    பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே
    பூவாலே பாலம் கட்டவா…
    பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே
    பூவாலே பாலம் கட்டவா…

    தன ந தானே தன ந
    தன ந தானே தன ந

    கன்னி மனசையும் காதல் வயசையும்
    சேத்து வச்சி யாரு தைச்சது…
    கன்னி மனசையும் காதல் வயசையும்
    சேத்து வச்சி யாரு தைச்சது…
    சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும்
    நீதானே சேத்து வச்சது..
    சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும்
    நீதானே சேத்து வச்சது..

    தன ந தானே தன ந
    தன ந தானே தன ந

    ஓடையினா நல்லோட
    ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
    தங்க கொழுந்தனுக்கு
    சாந்து பொட்டு வைக்க வேணும்
    தன ந தானே தன ந
    தன ந தானே தன ந

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    கண்ணன் பச்சையான காரணக் கற்பனை….

    crazy

    “பசுவுடன்மை வண்ணன் பின்னிப் பிணைய (Ref . உங்கள் பக்த்தவத்சலன் )
    பசுமையாய் ஆனானோ கேசவ் ; -கொசுவத்து,
    மஞ்சளுடன் கொண்டவுடல், நீலம் கலந்தானான்,
    பிஞ்சுமகன் பச்சைப் புயல்”….கிரேசி மோகன் …

    கொசுவத்து -பீதாம்பர மஞ்சளைக் குறிக்கிறது ….

    மேலும் நீல வர்ணத்தில் மஞ்சள் வர்ணம் MIX ஆனால் பச்சை….
    கரெக்டா கேசவ்….!கிரேசி மோகன்….

    Share
  • கூ சிக்கூ!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (41)

     

    கூ சிக்கூ!

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95/[/mixcloud]

    images (1)
    கூசிக்கூ கூசிக்கூ சிக்கு சிக்கூ! ஆஹா
    கூசிக்கூ கூசிக்கூ சிக்கு சிக்கூ!

    கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதும் கொஞ்சம் கட்டிக்கொள்ளுவதும் கூசிக்கூ
    கண்ணிமைக்கும் நேரத்தினில் சின்ன முத்தம் தருவது கூசிக்கூ
    கண்ணும் கண்ணும் உண்ணுவது கூசிக்கூ
    நெஞ்சை நெஞ்சம் கெஞ்சுவது கூசிக்கூ
    அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு அங்கே இங்கே கிள்ளிக்கொண்டு
    அப்பாவி போலமுகம் அழகு காட்டுவது (கூச்சிக்கூ!)

    இரவினில் நடந்தது பகலிலும் தொடர்வது கூசிக்கூ, ஆஹா
    விளிம்பினில் ததும்பி வழிந்திடும் மதுவே கூசிக்கூ
    வயதுகள் தொலைவது கூசிக்கூ
    காலம் இடம் மறப்பது கூசிக்கூ
    இந்தக்கணம் மிகநிஜம் இந்தசுகம் நிரந்தரம்
    என்றுவந்த சொந்தமொன்றில் சொர்க்கம் மயங்குவது (கூச்சிக்கூ!)

    நெஞ்சிலுள்ள நரம்புகள் அத்தனையும் யாரோ
    வீணை மீட்டுவது கூசிக்கூ
    கொஞ்சலென்னும் மொழியில் கோடிக்கோடிக் கவிதை
    கொட்டித் தீர்ப்பதே கூசிக்கூ
    சின்னச்சின்ன முத்தச்சத்தம் கூசிக்கூ
    முனகி மயங்குவது கூசிக்கூ
    உன்னையன்றி யாருமில்லை நம்மையன்றி ஏதுமில்லை
    என்றவொரு வாசகத்தைத் திக்கித்திக்கிப் பேசுவது கூசிக்கூ

    நீ
    சொல்லித் தந்த மந்திரம் கூசிக்கூ, நெஞ்சைக்
    கொஞ்சும் கண்ணின் தந்திரம் கூசிக்கூ
    காதலென்னும் போதையினில் காலமின்றி வாழுவதும்
    நட்டநடு அம்பலத்தில் ரகசியமானது கூசிக்கூ!

     

    படத்திற்கு நன்றி

     

    Share
  • விடைபெற்றான் வீட்டுமன்

    இசைக்கவி ரமணன்

     

    img311

    ஒன்பது துளைகள் வைத்தவன் வைத்தான்

    உயிர் ஒரு சிறிதும் கசியவில்லை

    உடல்விழும் தருணம் உயிர்பறந்தோட

    ஒருதுளை கூடத் தேவையில்லை!

     

    ஒருபெரும் வீரன் தைத்தான் தைத்தான்

    உயிர்பிரியாமல் தடுக்க

    உள்ளம் உயிருக்கு விடைதரும் வரையில்

    உடலைப் பூமியில் இருத்த!

     

    தொன்மைப் பாட்டன் துண்டுப் புண்ணியம்

    போலச் சரத்தில் கிடந்தான்

    தோள்வரைப் பெயரன் தொடுத்த அம்புகள்

    துளைக்கத் துளைக்க நெகிழ்ந்தான்

     

    தூரே எரிந்து தொலையும் கதிரினும்

    கொடுமை குருதிச் சிவப்பு

    துகில்விழும் நேரம் சும்மா இருந்த

    நாணம் அதைவிடச் சிவப்பு

     

    வீழ்வதும் வெல்வதும் வீரர்க் கியல்பு

    வெற்றியும் தோல்வியும் ஒன்றே

    வீழ்ந்த தெவர்க்கு? வெற்றி எதற்கெனும்

    விவேகம் ஒன்றே தீர்ப்பு

    பாழ்சப தத்தால் பாதகர் பக்கம்

    பாட்டன் பாவம் தவித்தான்

    பலவித மாயறம் பார்த்தவன் சபையினில்

    பாஞ்சா லியைக்கை விட்டான்

     

    சபதமும் தவறு சபையினில் அவளைக்

    கதற வைத்ததும் தவறு

    சண்டா ளரினைத் தண்டிக்காமல்

    ஏவல் செய்ததும் தவறு

    மிகவோர் உயரிய தளத்தி லிருந்து

    மேதினிக் கிறங்கி வந்தான்

    மீண்டும் எறிந்திட நின்ற கங்கையை

    மன்னவன் தடுக்க உயிர்த்தான்

     

    அங்கே பிசகிய விதிதான் இங்கே

    அம்புக ளாகத் தைக்கும்

    அறம் பிழைத்ததால் உடலில் உயிரை

    அணுவணு வாக வதைக்கும்

    பங்க மடைந்து பாவம் கழுவப்

    படுத்தான் அம்பில் பாட்டன்

    பரந்தாமனே பக்கத்திருந்து

    பரிவுடன் பார்க்கப் பார்த்தான்!

     

    இமையின் முடியே சரமாய்த் தைத்தும்

    இருவிழி திறந்தே இருந்தது

    இடைவெளி வழியே எதிரே சிரித்த

    இடையனைப் பார்த்துப் பனித்தது

    அமைந்த வானைப் பார்த்துத் தன் கதை

    அனைத்தும் ஒருமுறை படித்தது

    அங்கே கங்கைத் தாய்வருவாளா

    அகல முயன்று தவித்தது

     

    செய்த பிழைகளை எய்த அம்புகள்

    சிறிது சிறிதாய்க் கழுவ

    சிதையும் உடலின் சித்தத்தினிலே

    செப்பரு ஞானம் விரிய

    எய்தது தானே என்னும் தெளிவில்

    விதியும் கதியும் கலக்க

    எழுந்து விழுந்தவன் விழுந்து எழுந்தான்

    எஞ்சிய வர்கள் வியக்க!

     

    03.09.2014 / புதன் / 16.30

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    crazy

    கஜத்திற்(கு) உபயம், கராமுக்(கு) அபயம்,
    நிஜத்திற்கு தர்மம்தான் நீதி; -புஜத்தில்,
    கருடனை ஏந்தி, களிறினைக் காத்த,
    புருடனில் உத்தமனைப் போற்று”….கிரேசி மோகன்….

    கராம்-முதலை….

    புருடனில் உத்தமன்-புருஷோத்தமன்….

    Share
  • சிட்டு

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (40)

    சிட்டு

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F/[/mixcloud]

    hqdefault
    அந்தச்
    சிட்டுக்குருவி பட்டுச் சிறகைக் கொஞ்சம் விரித்தது – அதன்
    செக்கச் சிவந்த சின்ன இதழின் சிமிழ் திறந்தது
    எட்டுத் திக்கும் முத்தம் பட்டுத் தித்திப்பானது, என்
    எழுத்தெல்லாம் அதில் விழுந்து தடம்புரண்டது!

    உயிர்குடித்து உயிர்கொடுக்கும் கண்ணைச் சொல்வதா? என்
    உள்ளமெங்கும் உலவுகின்ற பண்ணைச் சொல்வதா?
    பயிர்வளர்த்துத் தலையைக்கோதும் தென்றலென்பதா? இது
    பரிவெல்லாம் ஏங்குகின்ற மன்றமென்பதா?

    நெஞ்சில் வந்த நிலவுநின்று நெகிழ்ந்துபோனது, அதன்
    நீல ஒளியில் கோல வானம் மகிழ்ந்துபோனது
    பஞ்சுமேகம் கையணைப்பில் பாவையானது! அதன்
    பார்வையொன்றே என்னுயிரின் தேவையானது!

    பஞ்சைமிஞ்சும் பாதமுனையில் பனியின் முத்தமா? என்னைப்
    பார்க்கும் கண்கள் இமைக்கும்போது பதறும் சொர்க்கமா?
    நெஞ்சை உனக்கு இழந்துவிட்டேன் நேரில் மொத்தமா! இனி
    நினைவும் கனவும் சிட்டுக்குருவி பாடும் சத்தமா!

     

     

    Share
  • பிள்ளையாரும் – பிள்ளை யாரோவும்…..

    கிரேசி மோகன்

       படமும் பாடலும்
    ———————————-
    crazy

       பிள்ளையாரும்- பிள்ளை யாரோவும்….
    ———————————————————————-
    “பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை,
      நாலும் கலந்துனக்கு நானளிப்பேன், -WALLலதில்,
      தொங்கு மதில்கணேசா, சங்கத் தமிழ்வேண்டாம்,
      அங்கமதில் நிக்கர் அளி”….கிரேசி மோகன்….

     

     
     
    Share
  • சிருஷ்டி

    விசாலம்.

    பல்லாண்டுகளுக்கு முன் தவ  வலிமை மிக்க ரிஷிகள், முனிவர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் தவ வலிமையினால் செய்யமுடியாததையும் மிக எளிதாகச் செய்துக்காட்டினர்.  அதில் சிருஷ்டியும் ஒன்று, ஆனால் அந்த  சிருஷ்டி  அவர்களது   சங்கல்பத்தினால்,  தர்சனத்தினால், ஸ்பர்சத்தினால்  உண்டாயிற்று.   உடல் சேர்க்கையினால் அல்ல … தெய்வீக ஆற்றல் பெற்ற மகரிஷிகள்  தேவர்கள், ஈசனின் அருளையும் பெற்றதால்  இது போன்ற சிருஷ்டியைச் செய்ய முடிந்தது.

    Lord-Hanumanசங்கல்பம் மூலம் உண்டான  சிருஷ்டி
    இதற்கு இராமயணத்தைக் கொஞ்சம் பார்க்க வேண்டும். இராவணன் ஒரு நாள்  வருணனின் மகள் புஞ்சிதஸ்கலை என்ற அழகு ஓவியத்தைப் பார்த்து விட்டான். அவளை அடைய முற்பட்டு அதில் வெற்றியும் கண்டான். புஞ்சிதங்கலை மனம் ஒடிந்துப் போய் பிரம்மாவிடம் நியாயம் கேட்கச் சென்றாள். பிரும்மதேவன் அவளுக்கு ஆறுதல் கூறி குரு பகவானின் மந்திர தீர்த்தத்தினால் அவள் புனிதமாகிவிடுவாள் என்றும் பின்னால் நடக்கப்போகும் ஒரு சம்பவத்திற்காகத்தான் காலம் இது போல் செய்துள்ளது என்றும் கூறி விளக்கினார். ராம அவதாரத்தின் நோக்கம் இராவணனை வதைப்பது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் இராவணனின் பாபம் அதிகரிக்கும் இதனால் அவனது அழிவும் ஏற்படும் என்றும் கூறினார்.

    ருசி கண்ட பூனைப்போல் இராவணின் காம இச்சை மேலும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு நாள் அவன் ரம்பை என்ற அப்ஸரஸைப் பார்த்துவிட்டான். அந்த ரம்பையோ குபேரனின் மகனான நளகூபனின் மனைவி. குபேரன் இராவணனுக்கு ஒருவிதத்தில் சகோதரன். ஆனாலும் காமம் அவன் கண்ணை மறைத்தது. சற்றும் சிந்திக்காமல்  ரம்பையைக் கெடுத்து விட்டான். நளகூபனுக்கு வந்தது  கோபம். ” நீ எந்தப்பெண்ணைத் தீண்டினாலும்  உன் சிரம் ஏழாய்ப் பிளக்கும்” என்று கடுஞ்சாபம் கொடுத்தான்.

    இராவணன் இதைப்பொருட்படுத்தவேயில்லை. பிரஹஸ்பதியிடம் சேவை செய்து வந்த பெண்ணைக்கண்டான். அவளையும் விடவில்லை. பிரஹஸ்பதிக்கு கோபம் வந்து பிரம்மாவிடம் சென்று இதைப்பற்றி  முறையிட்டார். பிரும்மா இராவணனுக்கு சாபம் கொடுத்தார்.

    “உனக்கு நல்ல தனமாக சொல்லியும் நீ பல பத்னிகளை கெடுக்கிறாய். திரும்ப திரும்ப அதே தவறை செய்கிறாய். ஆகையால் இதுபோல் இனி நீ செய்தால் உன் சிரசு சுக்கு நூறாக வெடித்துவிடும். அந்தப்பெண்கள் சபிக்க மறந்தாலும் என் சார்பில் இது நடந்துவிடும். ஜாக்கிரதை.”

    ஒரு தடவை புஞ்சிதஸ்கலை  தெய்வ ஆராதனைக்கு பூக்கள் பறிக்க நந்தவனம் சென்ற போது  பல தம்பதிகள் மிக நெருக்கமாகவும் அன்னியோன்னியமகவும் இருப்பதைப்பார்த்து  உணர்ச்சி வசப்படலாயினாள். இதனால் பிரஹஸ்பதியை அவள் அழைக்க அவர் கோபம் கொண்டு அவள் ஒரு பெண்குரஙகாக மாற சபித்துவிடுகிறார். கௌதம ரிஷியின் தர்மபத்னி அஹல்யா  சில காரணங்களினால்  தனக்கு பிறக்கும் குழந்தை அழகில்லாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தாள். அதன் படியே குரங்காய் சாபமுற்ற புஞ்சிகஸ்தலை அஹல்யாவுக்கு குரங்கு ரூபமாக பிறந்து அஞ்சனை என்ற பெயர் பெற்றாள். புஞ்சிகஸ்தலை ஆசைப்பட்டது போல் சிவஸ்வரூபமாக ஒரு குழந்தையை சங்கல்பவசமாக அஞ்சனைக்கு பரமேஸ்வரன் அருளினார். பரமேஸ்வரன் பார்வதி இருவரது உணர்ச்சிகளும் சேர்ந்து உண்டாக்கப்பட்ட  சக்தி  வாயுவுடன் கலந்து தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று தவம் செய்துகொண்டிருந்த அஞ்சனையின் வாய் வழியே உள்ளே நுழைந்தது.  அதே நேரம்  தசரதர் புத்திரகாமேஷ்டியாகம் செய்திட, யாகதேவன் மழலைச்செல்வம்  உண்டாகும் பலனைக் கொடுக்க கனி அமுதைக் கொண்டு செல்ல, அதிலிருந்து ஒரு துளி கீழே விழுந்து அஞ்சனையின் உதட்டில் அமர்ந்தது. அஞசனையும் தன் உதட்டில்  ஏதோ ஒன்று இனிக்கறதே என்று அதைச்சுவைக்க அதுவும் உள்ளே போய் கலந்தது. இராமயணத்தில் முக்கிய அம்சமாக வரும் அனுமன் பிறந்தது இப்படித்தான்.

    ராமாயணத்தில் சுந்தரகாண்டம்  66வது சர்க்கம் மூலம் இதைப்பற்றி அறியமுடிகிறது. இதில் புஞ்ஜிகஸ்தலை என்ற அப்சரஸ்  அஞ்சனை என்ற  பெயரில் ஒரு வானரப்பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குப் பல ரூபங்கள் எடுக்கும் சக்தி இருந்தது.  ஒரு நாள் ஒரு பெண்ணாக ரூபம் எடுத்து மலை உச்சியில்  உல்லாசமாக இயற்கையை ரசித்தபடி உலாவினாள்.  அப்போது வாயுபகவான் அவளைத் தழுவிச்சென்றார். உடனே தழுவியதை அந்தப்பெண் உணர்ந்து “யார் என்னைத் தழுவிச்செல்வது?” என் வினவ  “நான் தான் வாயு, நான் உன்னைத் தழுவ உனக்கு ஒரு விதமானப்பிரச்சனையும்  இல்லை. நான் தழுவிச்சென்றதின் பலனாக ஒரு வீர சூரபுத்திரன் பிறப்பான் அவனால் புகழுண்டாகும்” என்றார். இது  அனுமனின் பிறப்பு.

    சங்கல்பத்தினால் ஏற்பட்டது வாக்கினால் பிறந்த  வேதவதி
    ராவணன்  பல இடங்களுக்குச்சென்று ஜயித்து வெற்றி பெற்று வந்தான்.  பின் திக்விஜயத்திற்கு கிளம்பினான். அப்போது ஒரு பேரழகி  கண்களை மூடியபடி   தன்னை மறந்து தியானம் செய்துக்கொண்டிருந்தாள். ராவணன் அவள் அழகில் மயங்கிபோனான்.

    “நீ யார் ? உன்  அழகில் நான் என்னை மறந்தேன்” என்றான்.

    “நான் வேதவதி “

    “உன்  தந்தை  யார் ?”

    “என் தந்தை பிரஹஸ்பதியின் புத்திரர் சத்வஜர் என்னும் பிரும்மரிஷி. அவர் வேதாப்பியாசம்  செய்ய ஆரம்பித்தவுடனே அவர் வாக்கிலிருந்து நான் தோன்றினேன், வரும் போதே நான் கன்னியாகத்தான் வந்தேன்  இதனால்தான் என் பெயர் வேதவதி“.

    பின்னால் இவள் தான்  கர்ப்பம் இல்லாமலே மீண்டும் சீதையாக பூமியில் வந்தபோது ஜனகரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். வேதவதியின் மேல் வைத்த ஆசையை இராவணன் மறக்கவில்லை அவள்தான் சீதை எனக் கண்டுக்கொண்டு அவள் மேல் திரும்பவும் ஆசைப்பட்டான். இதுவும் இராமயணத்தில்  உத்தர காண்டத்தில் வருகிறது.

    மனசினால் வந்த சிருஷ்டி
    விசுவாமித்தரருடன் ஸ்ரீராமர் செல்லும் போது விசுவாமித்திர ரிஷி தன் குலத்தைப்பற்றிச்சொல்கிறார். ஒரு முனிவர் தவம் செய்தபோது ஒரு கந்தர்வப்பெண் அவருக்குப் பணிவிடைச்செய்தாள். அவள் பணிவிடையில் மனம்  மகிழ்ந்து முனிவர் அவளிடம் வேண்டியதைக் கேள் என்று கூறுகிறார். அவளும் தனக்கு மிகச்சிறந்த தர்மப்பிரபுவாக ஒரு மகன் வேண்டும் என்கிறாள். அவர் மனம் அறிந்து  முனிவர் தன் மனதிலேயே அதே மாதிரி மகனைப்படைத்து  “பிரும்மதத்” என்ற பெயரும் அளித்தார். அந்தப்பிரம்மதத்தின் பரம்பரையில் வந்தவர்தான் விசுவமித்திரர். இராமயணத்தில் பாலகாண்டம் 33ம் சர்க்கம்

    இப்போது சிருஷ்டியில் வாக்கினால் வந்தவள் வேதவதி
    மனசினால் வந்தவர் பிரும்மதத்தர்
    ஸ்பர்சத்தினால் வந்தவர் ஆஞ்சநேயர்  …
    என்று மூன்று நிலைகளையும் நாம் இங்கு பார்க்கிறோம். இப்போது நினைத்துப்பார்த்தால் இப்படியெல்லாம் அந்தக்கால ரிஷிகள் எப்படி செய்தார்கள்?அவர்களிடம்  இது போல் செய்ய எத்தனை சக்தி இருந்திருக்க வேண்டும் என்று  நினைக்க  நினைக்க மிகவும்  வியப்பாக இருக்கிறது.

     

     

     

    படம் உதவி:  http://www.oknation.net/blog/banarashindu/gallery/39404

    Share
  • நாற்காலியில் இடமில்லை

    –மாதவ. பூவராக மூர்த்தி.

    இந்தக்  காலக் கட்டத்தில் விதவிதமான நாற்காலிகள் வந்து சின்னக் குழந்தைகள் கூட நாற்காலியில் உட்காரும் போது இப்படி ஒரு தலைப்பு கொஞ்சம் புதுமையாகவும் முரணாகவும் இருக்கும். ஆனால் நாற்காலி ஆசை மனிதனின் ஆழ்மனதில் குடிகொண்டிருக்கும் ஒரு எண்ணம் என்று கருதுகிறேன்.

    ஸ்டூல், பெஞ்சு, திண்ணை, ஊஞ்சல், பலகை, தாழ்வாரத்துக்கும் முற்றத்துக்குமான மேடான பகுதி, பாய், ஜமுக்காளம் என்பதே அந்த காலத்தில் உட்கார உபயோகமாகும் வஸ்துக்களாக இருந்தது. நாற்காலிகள் கை வைத்த மர நாற்காலிகள் மிகப் பெரிய மனிதர்கள் வீட்டில் மட்டுமே காணக்கிடைக்கும். அதன் பிறகு சோபா வந்தது. சாய்வு நாற்காலி வயதானவர்களுக்காக வந்தது. இன்று நாம் கம்புயூட்டர் முன் உட்காரப் பயன்படுத்தும் சுழல் நாற்காலிகள், அலுவலகத்தில் மேனஜர் அமர மட்டுமே பயன் படுத்திய காலம்.

    அந்த வயதில் நான் பார்த்த சுழல் நாற்காலிகள் மாணிக்கம் ஸலூனில்தான் உண்டு. சின்ன வயதில் கிராப்பு வெட்டும் அனுபவம் இன்னும் பசுமையாக இருக்கிறது. உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தோன்றியது.

    பிறந்ததிலிருந்து கோவில் வேண்டுதல்கள் என மூன்று வருடங்கள் முடி காணிக்கை கொடுத்தே காலம் கடந்து விட்டது. நான்கு வயதில் ஒரு நாள் அப்பா தான் முடி வெட்டிக்கொள்ளப் போகும் போது கூட என்னையும் அழைத்துக் கொண்டுப் போனார்.

    மாணிக்கம் சலூன் கடைத்தெருவில் ஒரு சந்துக்குப் பக்கத்தில் இருக்கும். மாணிக்கத்தை நான் முதல் முறை பார்க்கும் போது அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கும். உள்ளே இருப்பவர்கள் எத்தனைப் பேர் என்று தெரியாத மாதிரி வாசல் கண்ணாடித் தட்டியில் பச்சை வர்ணம் பூசியிருக்கும். ஸ்பிரிங் கதவு மட்டும் நிலையில் நடுவில் பொருத்தப்பட்டிருக்கும். கதவு திறக்கும்போது மட்டும் உட்புறம் ஒரு கணம் தெரிந்து மறையும்.

    மாணிக்கம் வெற்றிலை போடுபவர். அடிக்கடி கதவை லேசாகத் திறந்து துப்ப வருவார். அப்போது வாசலில் நின்று யோசனையுடன் இருப்பவர்களைப் பார்த்து “வாங்க சாமி, அடுத்தது நீங்க தான் என்பார்”.

    அவர் வார்த்தையை நம்பி உள்ளே போனால் இருக்கும் மூன்று நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மூவரும், கண்ணாடிக்கு கீழே போடப்பட்ட பெஞ்சில் ஒரு நாலு பேரும் இருப்பார்கள். நாம் யோசனையுடன் போனால் தம்பிக்கு ஷேவிங் மட்டும் தான் என்பார்.

    barber shopசலூனின் உட்புறம் நான் பார்த்த முதல் சொர்க்கம். காரணம் முகம் பார்க்க எங்கள் வீட்டில் ஒரு பெரிய கண்ணாடி கூடத்தில் இருக்கும். அது வீட்டுப் பெரியவர்களின் உயரத்துக்குத் தகுந்தபடி ஒரு ஐந்து அடியில் ஒரு ஆணியில் கம்பிகட்டி சற்றுச்  சாய்வாக ஒரு கட்டையில் நிற்க வைத்து இருப்பார்கள். கண்ணாடிக்கும் சுவருக்கும் இடையில் கிராப்பு சீப்பு வைக்கப்பட்டிருக்கும்.

    என்போன்ற உயரக்குறைவான குழந்தைகள் கையில் வைத்துக் கொள்ளும் முகம் பார்க்கும் கண்ணாடியில்தான் பௌடர், பொட்டு அல்லது விபூதி வைத்துக் கொள்வோம். என்னை முழுவதுமாக பார்த்துக் கொள்ள நான் கூடத்துக் கண்ணாடியின் முன் தாழ்வாரத்தில் நின்றால் தான் என் உயரத்துக்கு என்னைப் பார்க்க முடியும். அந்த தொலைக்காட்சியில் நான் பார்த்த உருவம் இந்த சலூனில் மிக அருகில் பார்க்கும்போது நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்று என்னை பெருமிதம் அடையச்செய்யும்.

    நான்கடையின் வாசலில் நுழைந்து கடையின் உள்ளே போனபிறகு அந்தத் தெருமுழுவதும் அந்தக் கடை விரிந்திருப்பதாகத் தோற்றம் தரும். காரணம் இரண்டு பக்கச் சுவர்களிலும் பொருத்தப் பட்டிருக்கும் நிலைக்கண்ணாடிகளில் மாறி மாறித் தோற்றம் விழுந்து வெகு தொலைவை வரை நாம் தெரிந்துகொண்டிருப்போம்.

    பெரும்பாலும் சலூன்களில் கடிகாரம் இருக்காது. நேரம் ஆவது தெரியாமல் இருக்க இது ஒரு உத்தி. தினத்தந்தி, ராணி, மற்றும் அழகிய பெண்களின் உருவம் போட்ட ஆங்கில பத்திரிக்கைகள் பெஞ்சில் நிறைந்து நம் கவனம் ஈர்க்கும். எங்கள் வீடுகளில் வராத அந்த தினத்தந்தியில் நான் வருடக் கணக்காக சலூன் போகும்போது மட்டும் கன்னித்தீவு படித்திருக்கிறேன்.

    சுவரில் சிங்கப்பூர் காலண்டரில் சீன ஜப்பான் அழகிகள் குறைவான உடைகளில் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது என் பதின்ம வயதுகளில் தான் என் கண்ணில் பட்டு மனதில் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது.

    barber shop1கண்ணாடி முன் மேஜையில் நிறைய சின்ன பாட்டில்களும் டப்பாக்களும் வைக்கப்பட்டிருக்கும். ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலின் வாயில் வளைவான ஒரு குழாய் பொருத்தப் பட்டிருக்கும். மாணிக்கம் அதை எடுத்து நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் மேல் பீச்சுவார். சிதறல்கள் முகத்தில் தலையில் பட்டவுடன் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

    வைத்தியர் சங்கம் என்று ஒரு அறிவிப்புப் பலகை இருக்கும். அதில் ஷேவிங், கட்டிங் கட்டணம் எழுதியிருக்கும் ஒரு தேதி குறிப்பிட்டு இன்று முதல் என்று எழுதியிருக்கும். பிரதி அமாவாசை, செவ்வாய் கிழமை கடை விடுமுறை என்று போடப்பட்டிருக்கும்.

    பெரும்பாலான ஊர் வம்புகளும், நடப்புகளும் அரசியலும் நான் சலூனில் இருந்த போதுதான் தெரிந்து கொண்டேன். கத்தியை  முகத்துக்கு மிக அருகில் வைத்து இருக்கும் போது மாணிக்கம் தன் கருத்தைச் சொல்லி நம் ஆமோதிப்பை வேண்டுவார். காயப்படவேண்டாமே என்று நாம் தலையசைக்க வேண்டியிருக்கும்.

    மூன்று நாற்காலிகளில் உட்கார்ந்திருப்பவர்கள் முழுவதுமாக மூடிவைத்திருப்பதால் அவர்கள் யாரென்று கட்டிங் முடிந்து துணியைப் பிரித்தவுடன் அவர் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்திருக்கும் போதுதான் தெரியும். மாணிக்கம் அவர் கையில் சீப்பு கொடுப்பார். அவர் நாற்காலிக்கு அருகில் கண்ணாடிக்கு மிக அருகில் போய் தலை சீவுவதைப் போல சீவிக்கொண்டே தன் முக அழகில் மயங்கிப் போவார். மாணிக்கம் அவரை நகர்த்த சுழல் நாற்காலியை லேசாக அசைப்பார். அவர் நகர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணம்கொடுத்து மீதி வாங்கிக்கொண்டு கண்ணாடியில் இன்னொமொரு முறை ரசித்துக் கொண்டே இறங்குவார்.

    அப்பா அடுத்தது உட்காருவார். தெருமுழுக்க அப்பா முகம் தெரியும். தலைமீது தண்ணீரை அந்த பாட்டிலால் போட்டு மாணிக்கம் கட்டிங் ஆரம்ப்பிப்பார். நனைந்த முடிகள் அப்பாவில் நாற்காலியைச் சுற்றிலும் சிதறும். புல் வெட்டுவது போல் ஒரு மிஷினை உபயோகப் படுத்துவார். அதன் பின் மாணிக்கம் கடையின் மூலையில் தொங்கவிட்டிருக்கும் பெல்டில் கத்தியைத் தீட்டுவார். அவர் முகத்தைப் பார்க்கவே மதுரை வீரனைப் போல இருக்கும். பயமாக இருக்கும். அவர் கத்தியை அப்பா முகத்தில் பூசிய நுரையில் மீது படரவிடுவார். முடிந்தவுடன் படிக்காரத்தால் முகத்தில் தேய்த்து விடுவார். அப்பாவின் முகம் ஜொலிக்கும்.

    அப்பா அவரது அரியணையிலிருந்த்து இறங்கியவுடன் அவரது வாரிசான என்னை அதில் அமரச்செய்வார். நாற்காலியில் சுழலும் அனுபவம் பெற முயலும் என் ஆர்வத்துக்குத் தடை போடுவார் மாணிக்கம். “வாங்க தம்பி உட்காருங்க” என்று சொல்லிய வாறே கீழிருந்து ஒரு மரப்பலகை எடுத்து நாற்காலியின் கைப்பிடிகளுக்கு இடையில் வைத்து அதில் என்னைத் தூக்கி உட்காரவைப்பார். என் கைகளை வளைத்து மெதுவாக என் தொடைகளின் மேல் வைத்து விட்டு வெள்ளைத்துணியால் என்னை முகம் மட்டும் தெரியுமாறு மூடிவிடுவார்.

    மண்ணில் புதையுண்டு போனமாதிரி முகம் மட்டும் தெரியும். நாற்காலியில் உட்காரமுடியவில்லை என்கிற வருத்தத்தைக் கண்ணாடி தெளிவாக எனக்குக் காட்டும். அப்பா பக்கத்தில் நிற்பார். மாணிக்கம் தண்ணீர் பீச்சும்போது முகத்திலும் தெறித்துச் சில்லிடும். அந்த மிஷினை  அசைத்துக் கொண்டே ஒரு கையால் தலையை முன்பக்கம் அழுத்துவார். பின் மண்டையில் மிஷின் ஓட்டப்படும். குறுகுறு என்கும். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் ஆசையில் தலையை மெதுவாகத் தூக்குவேன். தெரிவதற்கு முன் மாணிக்கத்தின் கை அதை அழுத்தி விடும். என் பல முயற்சிகள் பல தடவை முறியடிக்கப்படும். சில சமயம் மாணிக்கம் “ஸ்” என்று சப்தமெழுப்புவார், “அசைக்கக்கூடாது” என்பார். சில உதிர்ந்த முடிகள் கண்ணுக்கு அருகிலும், கன்னத்திலும் விழுந்து உறுத்தும். கை வெளியே எடுக்க முயற்சிப்பேன். முடியாது… ஒரு வழியாக முடித்து என் தலைக்கனம் குறைத்து அழகாகச் சீவி விடுவார்.

    கொஞ்சம் கொஞ்சமாகக் காம்ப்ளான் குடிக்காமலேயே வளர்ந்தேன். அந்த நாள் நான் சற்றும் மறக்க முடியாத நாள். அந்த முறை முடிவெட்டத் தனியாக போயிருந்தேன். “தம்பி வாங்க” என்று அழைத்து எனக்கு அரியணை தரலாம் என்று முடிவு செய்து நாற்காலியின் குஷனை ஒரு தட்டு தட்டி உட்காரலாம் என்பது போல் செய்கை செய்ய நான் ராஜராஜ சோழன் போல் அரியணையில்  ஏறி அமர்ந்து ஒரு பெருமிதத்துடன் என் எதிரில் தெரிந்த கண்ணாடியில் என் உருவத்தை, அதன்  கம்பீரமானப் பொலிவைப் பார்த்துக் கொண்டேன். எனக்குப் பிடித்திருந்தது.

    அதன் பிறகு எத்தனையோ சுழல் நாற்காலிகள், பல் டாக்டரிடம், கண்டாக்டரிடம், அலுவலகத்தில் …. அவைகள் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்க வில்லை. எனக்கு முதல் சந்தோஷத்தைக் கொடுத்த மாணிக்கம் சலூனின் சுழல் நாற்காலி அனுபவம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது மறுபடியும் அதை உணர்கிறேன்.

    படம் உதவிக்கு நன்றி:
    http://www.rangaprabhu.com/buzz/
    http://swipelife.com/2011/03/shop-review-chief-barber-shop/

    Share
  • குறளின் கதிர்களாய்…(38)

    -செண்பக ஜெகதீசன்

    கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

    போக்கு மதுவிளிந் தற்று.     (திருக்குறள்-332: நிலையாமை)

    புதுக் கவிதையில்…

    கூடிடும் கூட்டம் அவையில்          shenbaga jegadesan for kuthattu
    கூத்தாடும் காட்சி காண,
    கலைந்திடும் அதுவே
    காட்சி முடிந்ததும்…

    இதுதான் கதை-
    பெருஞ்செல்வம் சேர்வதும்
    பின்னர் விட்டுப்போவதும்…!

    குறும்பாவில்…

    கூத்துசபை வரும் கூட்டம்
    போவதுபோல் போய்விடும்,
    செல்வந்தனிடம் சேரும் பணமும்…!

    மரபுக் கவிதையில்…

    கலையாம் கூத்து நடக்கையிலே
        காண வந்திடும் ரசிகர்களும்
    கலைந்தே செல்லுவர் முற்றிலுமாய்
        காட்சி முடிந்ததும் சபைவிட்டே,
    மலைபோல் செல்வம் சேர்ந்துவந்து
        மனிதனைச் செல்வனாய் ஆக்கிடினும்
    நிலைப்ப தில்லை அவனிடமே
    நீங்கிச் சென்றிடும் அவனைவிட்டே…!

     லிமரைக்கூ…

    கூத்து முடிந்ததும் அவைகலையும் கூட்டம்,
    சேர்ந்த பணமும்
    சிலநாளில் கைவிட்டு ஓடியேவிடும் ஓட்டம்…!

    கிராமிய பாணியில்…

    கூத்து கூத்து தெருக்கூத்து
    கூட்டம் கூடிடும் தெருக்கூத்து,
    ஆட்டம் பாட்டம் முடிஞ்சதுமே
    பாக்க வந்த கூட்டமெல்லாம்
    பறந்து போவும் எடத்தவுட்டே…

    பணத்து கதயும் இதுதானே,
    சேந்து வந்த பணமெல்லாம்
    கூத்துசப கூட்டம்போல
    சேந்து போயிரும் பாத்துக்க…!

     

    Share