-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
தேரிலே சாமி வந்தால்
தோளிலே தூக்கி வைத்துப்
பாரடா என்று காட்டும்
பாங்கினை மறக்க மாட்டேன்! 
ஊரிலே உள்ளார் எல்லாம்
உன்மகன் உதவானென்று
நேரிலே வந்து சொன்னால்
நிமிர்ந்தொரு பார்வை பார்ப்பார்!
கவலைகள் படவும் மாட்டார்
கண்டதை உண்ண மாட்டார்
தெருவிலே சண்டை வந்தால்
திரும்பியே பார்க்க மாட்டார்!
அடிதடி வெறுத்து நிற்பார்
ஆரையும் தூற்ற மாட்டார்
உரிமையாய் உதவி நிற்பார்
ஊரிலே எங்கள் அப்பா!
பொய் அவர்க்குப் பிடிக்காது
புளுகுவதை வெறுத்திடுவார்
மெய்பேசி நின்று விட்டால்
விரும்பியவர் அணைத்து நிற்பார்!
உண்மையே பேசு என்பார்
உழைப்பையே நம்பு என்பார்
எண்ணமெலாம் இனிதாக
இருக்கவே வேண்டும் என்பார்!
அன்பாக இரு என்பார்
அனைவர்க்கும் உதவென்பார்
அசடனாய் வாழாதே
அறிஞனாய் உயரென்பார்!
பலகதைகள் ஊடாக
பண்புகளை வளர்த்திட்டார்
பாரில் நான் வாழ
பாதையே அப்பாதான்!
அப்பாவை அருகில்வைத்தால்
அனைவருக்கும் அதிர்ஷ்டம்தான்
அப்பாவை அலைய விட்டால்
அனைவர்க்கும் அசிங்கம்தான்!
அப்பாவை அணைத்திடுவோம்
அவரருகில் நாமிருப்போம்
எப்போதும் அப்பாவை
ஏற்றியே போற்றிடுவோம்!!

Leave a Reply