தாமரைக் கண்ணாள்…
இசைக்கவி ரமணன்
தாமரைக் கண்ணாள்…
(நேற்று மதியம். வேலை. அயர்வு. கொஞ்சம் காற்று தேவைப்பட்டது. இலக்கின்றிச் சற்றே ஊர்சுற்றப் போனேன். ஒரு முண்டகக் கண்ணி ஆலயம் அழைத்தது. முகமே மொத்த உருவமாக, அகன்ற கமலக் கண்களே முகமாக அமர்ந்திருக்கும் அவள் எதிரே சற்று அமர்ந்தேன், உயிரில் ஓர் ஆசுவாசம் நேர்ந்தது)
தாமரைக் கண்ணியின் முன்னிலையில்
தவழும் குழந்தை போலுள்ளேன்
நான்மறை போற்றும் நாயகியை
நாவில் அமர்ந்து மொழிபவளை
ஒமெனச் சொல்லி உயிர்முனையில்
உணர்வை நிறுத்திச் சுடர்பவளை
நாமம் உருவம் அருவமெலாம்
நடத்தும் விழிகளில் நான் கரைந்தேன்!
உயிருக் குயிர்தரும் சாமரமோ?
களியின் வசந்தக் கதவுகளோ?
கருணைக் கடலின் கரையலையோ?
தெளிவே அருளத் திறந்தவிழி
தேவையைத் தீபமாய் ஏற்றும்விழி
அளித்து மகிழவே அகன்ற விழி
அமிழ்தின் வழியதைப் பணிகின்றேன்!
காடு காடாய் எரியுதடா!
பேணப் பேணச் சிறியமனம்
பெருவெள் ளத்தில் புரளுதடா!
பூண இயலாப் பூரணத்தில்
பொருந்திக் கரைந்து போவென்றே
ஆணை யிட்டே ஈர்க்கின்ற
அழகு விழிகளைப் பணிகின்றேன்!
விரிந்த விழிகளின் பொன்னொளியில்
வீழ்ந்து மறைவதே வெற்றியடா!
தெரிந் தழைக்கும் தெய்வத்தின்
திசையில் கிடத்தல் முக்தியடா!
பரிந்து நமையே பார்ப்பவளைப்
பார்த்து வாழ்வதே பக்தியடா!
சரிந்த கணத்தினில் சந்தித்த
சக்தியின் விழிகளைப் பணிகின்றேன்!
எதேச்சையாக எதிர்ப்பட்டாள்
தங்க இடமின்றித் தவித்தவனைத்
தழுவி முகந்து மடிவைத்தாள்
சிங்க முதுகில் நின்றபடி
சிரித்துப் பிடரி சிலுப்புமென்
தங்க மனதுத் தாயவளின்
தாமரைக் கண்களைப் பணிகின்றேன்!
07.09.2014 / ஞாயிறு