Blog

  • மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்

    இரா.உமா

    “எந்நாடு போனாலும்
    தென்னாடுடைய சிவனுக்கு
    மாதவிலக்கான பெண்கள் மட்டும்
    ஆவதே இல்லை”

    கவிஞர் கனிமொழி

    mathavidai
    மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.

    பெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    கீதா இளங்கோவன்
    கீதா இளங்கோவன்

    ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா?’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்? இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது?

    மற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்க’ என்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.

    அறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுக’ என்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்?

    தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி & பாலியல் கல்வி.

    இந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி & பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.

    கூவிலபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற் குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது. பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும். பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறது’ என்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.

    மருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.

    மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.

    மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

    சமூகத்தில் ஆண்கள் & பெண்கள், படித்தவர்கள் & படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை. மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.

    நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 25, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு போராளி ஹீடி எப்ஸ்டீன் அவர்கள்

    Hedy Epstein
    அமெரிக்க மிசௌரி மாநிலத்தில் காவல் துறையின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடியதால் கைது செய்யபட்டவர் போராளி ‘ஹீடி எப்ஸ்டீன்‘ (Hedy Epstein). தனது 90 ஆவது வயதிலும் துடிப்புடன்   அயர்வின்றி மனித உரிமைகளுக்காகப்  போராடி வரும்  மனித உரிமைப் போராளி ஹீடி எப்ஸ்டீன் அவர்கள்  இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

     

     

    hedyepstein_collage
    இவர் ஆகஸ்ட் 15, 1924 ஜெர்மனியில் பிறந்தவர்.  யூத மதத்தைச் சேர்ந்தவர்.  இவரது குடும்பத்தினர் பரம்பரைப் பரம்பரையாக அங்கு வணிகத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.  பெற்றோருக்கு ஒரே குழந்தையான இவரது 8 ஆவது வயதில் ஜெர்மனியில் சர்வாதிகாரி  ஹிட்லர் பதவியேற்று இருக்கிறார்.  ஹிட்லரின் அடக்குமுறையால் பிற யூதர்களின் குடும்பம் அல்லலுற்றது போலவே இவர்களும் துன்பம் அடைந்திருக்கிறார்கள்.  குடும்பமாக வெளியேற முயற்சித்தும் அகதிகளாக அவர்களுக்கு வேறு நாட்டிற்குச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.  கிண்டர் ட்ரான்ஸ்போர்ட்  என்ற மக்கள் நல நிறுவனம் ஆயிரக்கணக்கான சிறுவர்களை இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்று அவர்களை அனாதைவிடுதிகள் போன்ற இடங்களில் தங்கவைத்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டது.  இதை அறிந்த ஹீடி எப்ஸ்டீனின் பெற்றோர்கள் இவரிடம் பேசி நிலைமையை உணர்த்தி, இவரை மட்டும் அந்த தொண்டு  நிறுவனத்தின் உதவியுடன் இவரது 14 வயதில் தப்ப வைத்தனர்.  அதன் பிறகு அவருடைய பெற்றோர்களையும் மற்ற குடும்ப நண்பர்களையும் அவர் பார்த்ததில்லை.  அவர்கள் யாவரும் ஹோலோகாஸ்ட் முகாமில் உயரிழந்தனர் என்று நம்பப்படுகிறது.

    அவ்வாறு ஜெர்மனி அரசால் முகாமில் அடைபட்டு இருந்த பொழுது அவரது அன்னை எழுதிய கடைசிக் கடிதமான அஞ்சல் அட்டையில் அவர் தங்களது துயரங்கள் எதையும் சொல்லி இவரை வருத்த விரும்பாமல், அன்பு மகளுக்கு நாங்கள் கிழக்கு நோக்கிப் பயணமாகிறோம், இறுதியாக விடைபெற்றுக் கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறார்.  போர் முடிந்தவுடன் ஜெர்மனி திரும்பியும் அவர்களை இவரால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.  பிறகு ஹிட்லரின் கொடுஞ்செயலில் இறந்திருப்பார்கள் என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

    ஜெர்மனியில் இவர் கொஞ்ச நாட்கள் பல பணிகளில் ஈடுபட்டாலும் அவையாவிலும் இவர்  நோக்கம் மனித உரிமைகளுக்காகப் போராடுவதை அடிப்படையாகக் கொண்டிருந்திருக்கிறது.  பிறகு அமெரிக்காவிற்கு குடியேறி தற்பொழுது மிசௌரி மாநிலத்தில் வசிக்கிறார்.   தொடர்ந்து மனித உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அவற்றில் சில சிறைக்கைதிகளின் அனுமதியின்றி அவர்கள் மீது மருத்துவ ஆராய்ச்சி நடத்திய வழக்கில் தகவல் சேகரிக்க உதவியது, வீட்டுவசதியில் இனவேறுபாடு என்ற பிரிவற்ற சமத்துவம், கருச்சிதைவு உரிமை, போர்களை எதிர்த்துப் போராடுவது போன்றவை ஆகும்.  தனது போராட்டங்களுக்கு ஆதரவாக உரை நிகழ்த்த, போரை எதிர்த்து அமைதி காக்கும் முயற்சி போன்றவற்றிற்காக கட்டமேலா, நிக்கராகுவா, கம்போடியா போன்ற நாடுகளுக்கு 1989 ஆம் ஆண்டில் பயணம் செய்தவர்.

    யூத மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இஸ்ரேலின் நடவடிக்கையை எதிர்ப்பவர்.  பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தும் அநீதிகளுக்ககாக 2003 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் வெஸ்ட் பேங்க் பகுதிக்குச் சென்று அங்கு அமைதியான  போராட்டம் செய்பவர், உண்ணாவிரதம் இருப்பவர்.  யூதராக இருந்தும் இஸ்ரேலுக்கு இவர் ஆதரவு தராத காரணத்தினால் யூத மக்கள் இவர் மீது கோபம் கொண்டு அவரது சொற்பொழிவுகளை நடத்த விடாமல் இடையூறு செய்வதுண்டு.  இவ்வாறு உலக நாடுகளுக்குப் பயணம் செய்து அமைதிக்காகப் போராடும் இவருக்கு இவர் வசிக்கும் ஊரிலேயே அமைதி குலையும் நிலையும் அதற்காகப் போராடும் தேவையும் ஏற்பட்டது.

    ஆகஸ்ட் 9, 2014 முதல், கடந்த அரை மாதமாக அமெரிக்க மக்களின் விவாதத்திற்குரியதாக, தொடர்ந்து ஊடகச் செய்திகளில் அலசப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சி மிசௌரி மாநிலத்தைச் சேர்ந்த ‘மைக்கேல் பிரவுன்’ என்ற  18 வயது  இளைஞர் காவல்துறை அதிகாரி ‘டேரன் வில்சன்’ என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சி.  சுடப்பட்டவர் ஆயுதம் எதையும் வைத்திராத ஒரு கறுப்பின இளைஞர் என்பதும், அவரை சரமாரியாக ஆறுமுறை சுட்டுக் கொன்றவர்  வெள்ளையர்  என்பதால்  அந்த நிகழ்ச்சி நடந்த ஃபெர்குசான் நகர மக்கள் கொந்தளித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து காவல் துறையினரால் கறுப்பின இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, அதிலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த அதிகாரியால் உயிரிழக்க நேரிடுவது ஒடுக்கப்படிருந்த சிறுபான்மையினர் மீது இன்றும் தொடர்ந்து நிகழ்ந்தப்படும் அடக்குமுறை  என்ற கோணத்திலேயே பார்க்கப்படுகிறது.   இது ஒரு பெரும் போராட்டமாக வெடித்து மக்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது, அத்துமீறிய நிகழ்வுகள் நடந்தால் காவல்துறை அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தாக்குவதும் தொடர்ந்து வருகிறது. இரவில் ஊரடங்கு உத்தரவு, போராளிகளைக் கலைக்க கண்ணீர்ப்புகை போன்ற வழியில் கலவரம் முற்றும் நிலைக்கும் போனது.  நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், பல தரப்புகளில் இருந்தும்  ஃபெர்குசான் நகரக் காவல்துறை கண்டனதிற்கு உள்ளானது.

    நகரக்காவல்துறை நிலைமையைக் கையாள்வதை நிறுத்தச் சொல்லி மாநில ஆளுநர் நெடுஞ்சாலை காவல்துறையிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அதுவும் பலனளிக்காமல் போன பிறகு இராணுவத்தை வரவழைக்க ஏற்பாடு செய்தார்.  ஏற்கனவே போராடுபவர்களை தீவிரவாதிகளைப்  போல நடத்திப் போர்க்கால ஆயுதங்கள் கொண்டு அடக்கப்பட்டதில் கொதித்திருந்த போராளிகள், இராணுவத்தை  ஆளுநர் வரவழைக்கிறார் எனத் தெரிந்ததும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க ஒருவருடன் ஒருவர் கை கோர்த்து அரசு அலுவலகம் முன் நின்று வாசலை வழிமறித்து முற்றுகை இட்டனர்.

    இவ்வாறு சென்ற திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18, 2014) அன்று முற்றுகை இட்டவர்களில் மனித உரிமைப் போராளி  ஹீடி எப்ஸ்டீனும் ஒருவர்.  காவல்துறையினர் அவர்களைக் கலைந்துபோகச் சொன்னதையும் பொருட்படுத்தாது முற்றுகையிட்டோர் தொடர்ந்து போராடவும் அவர்களில் 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் (ஒருவரைத் தவிர மற்றவர்களை சிலமணி நேரத்திற்குப் பின்னர்  விடுதலை செய்துவிட்டனர்).  வரும் அக்டோபர் 21, 2014 அன்று நீதிமன்றதிக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையில்  ஹீடி எப்ஸ்டீனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    ஹீடி எப்ஸ்டீனைக் கைது செய்த பொழுது அவர் காவல்துறையிடம் சொன்னது மக்களைக் கவர அது “டுவிட்டர்” சமூகவலைதளத்தில் பலரால் பரப்பப்பட்டது. வியந்து பாராட்டப்பட்டது.

    ferguson arrest
    “நான் என் பதின்ம வயதிலிருந்து மனித உரிமைகளுக்காகப் போராடி வருகிறேன், எனது 90 வயதிலும் நான் போராட்டத்தில் இறங்க வேண்டியிருக்கும் என்று நான் எதிர்பார்த்ததில்லை…. நாம் இப்பொழுது அநீதிகளை எதிர்த்தால்தான்  பிற்காலத்தில் மக்களும் தங்களது 90 வயதுகளில் போராடவேண்டிய நிலை வராமலிருக்கும்”

    ஹீடி எப்ஸ்டீன் அம்மையார் கைதாகும் நிகழ்ச்சியைப் பற்றிய தொலைகாட்சி செய்தி வழங்கிய காணொளி:
    http://youtu.be/cS3wGvsYik8

    தன்னைவிட வேறுபட்டு இருப்பவர்களின் மீது நிகழ்த்தும் அடக்குமுறையும், அவர்களை தங்களைவிடத் தகுதியில் குறைந்தவர் என்ற எண்ணம் கொண்டு ஏளனப்படுத்துவதும், அவர்களை மதிக்காது நம்பிக்கையற்று நோக்குவதும், கண்காணிப்பதும் இன்றுவரை நிகழும் ஒரு மனிதாபிமானம் அற்ற செயல்.  ஒருவரது இனத்தின் பின்புலம் காரணமாக இன்றும் அடக்குமுறை அமெரிக்காவில் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. இது போன்ற அநீதிகள் என்னை மிகவும் பாதிக்கிறது என்று கூறுகிறார் ஹீடி எப்ஸ்டீன்.

    மனித உரிமைகளுக்காகத் தனது தள்ளாத வயதிலும் போராட்டத்தில் இறங்கும் ஹீடி எப்ஸ்டீன்அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அவருடைய போராட்டத்தையும் கைதான செய்தியையும் அறிந்து  தொலைபேசி வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் அவருக்குப்  பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.  காலை ஆறுமணி முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து அழைத்து பாராட்டுபவர்களுக்கும் அவர் பதிலளித்து வருகிறார்.  அவரைப்பாராட்ட விரும்புவோருக்காக கீழே அவரைத் தொடர்பு கொள்ள உதவும்  தகவல்களும் கொடுக்கப் பட்டுள்ளது.

     

     

    மேலதிகத் தகவல்கள்:
    Hedy Epstein
    Wikipedia Link: http://en.wikipedia.org/wiki/Hedy_Epstein
    Personal Website: http://www.hedyepstein.com/
    Mail: 5547 Waterman, #1E , St. Louis, MO 63112, USA
    Phone: (314) 361-6820
    Email: hedy@hedyepstein.com

     

     

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 19

    –சு.கோதண்டராமன்.

    வருணன்

    varuna
    வருணன், மித்ரன், அர்யமான், பகன், அம்சன் என்ற  ஐந்து தேவர்களை ஆதித்யர் என்று வேதம் சிறப்பித்தாலும் பகனுக்கும் அம்சனுக்கும் தனியான மந்திரங்கள் இல்லை. மித்ரன் வருணன் அர்யமான் மூவரும் சேர்த்தே சில இடங்களில் போற்றப்படுகிறார்கள். பல இடங்களில் மித்ரனும் வருணனும் சேர்த்துப் பேசப்படுகிறார்கள். இவர்களிலும் வருணனே மிகுதியாகத் துதிக்கப்படுகிறார். மற்ற இருவரது தன்மைகள் சாதனைகள் வருணனின் தன்மைகள் சாதனைகளிலிருந்து வேறுபடாமல் உள்ளன. அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு கீழே தரப்படுகின்றன.

    வலிமை மிக்கவராதலால் அசுரர் என்றும் அறிவு மிக்கவராதலால் கவிதமர் என்றும் அதிசய சக்திகள் பெற்றிருப்பதால் மாயாவான் என்றும் வருணன் கூறப்படுகிறார். ராஜா, சம்ராட் என்ற சிறப்பு ரிக் வேதத்தில் இவருக்குத் தான் மிகுதியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    மித்ர வருணர்களும் நர என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களும் மனிதர்களாக, நீதி தவறாமல் ஆட்சி செய்த அரசர்களாக, இருந்து உயர்ந்தவர்களாக இருக்கக் கூடும். ஆனால் வேதத்தில் கூறப்பட்ட இவர்களது சாதனைகள் முழுவதும் தெய்விகச் சாதனைகளாக உள்ளனவே அன்றி இந்திரனைப் போல மானிடச் சாதனைகள் எதுவும் இவர்கள் செய்ததாகக் கூறப்படவில்லை.

    எல்லாத் தேவர்களும் ருதத்தை(தர்மத்தை)க் காப்பாற்றுவோராகக் கூறப்பட்டாலும் வருண மித்ரனுக்கு ருதத்தில் முக்கியப் பங்கு உண்டு. அவர்கள் ருதத்தின் தலைவர்கள். ருதத்தைக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள். ஒவ்வொரு அடியிலும் விரதத்தை அனுசரிக்கிறார்கள். இவர்களே பெரிய ருதம் ஆக இருக்கிறார்கள். இவர்கள் நிலையான தர்மங்களை மீறுவதில்லை. தர்மத்தாலும் மாயையாலும் விரதங்களைக் காக்கிறார்கள், ருதத்தால் ஆள்கிறார்கள்.

    இயற்கை நியதியின் தலைவராக வருணன் செய்த செயல்களாவன- பலியிடப்பட்ட மிருகத்தின் தோலை விரிப்பது போல பூமியை விரித்தார். சூரியன் பூமியைச் சுற்றி வரச் செய்தார். அந்தரிக்ஷத்தில் நின்று கொண்டு சூரியனைக் கொண்டு பூமியை அளக்கச் செய்கிறார். சூரியனை ரதம் போல விண்ணில் அமைத்தார். சூரியனுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தார். வருடம் மாதம் நாள் பகல் இரவு யக்ஞம் ரிக் இவற்றை ஏற்படுத்தினர்.

    மரங்களின் மீது அந்தரிக்ஷத்தை விரித்தார். குதிரைகளிடம் வலிமையையும், மாடுகளிடம்  பாலையும், இதயத்தில் செயல் வேகத்தையும், நீரில் அக்னியையும், ஆகாயத்தில் சூரியனையும், மலை மீது சோமனையும் வைத்தார்.

    மழை பெய்வதும் பயிர் வளர்வதும் அவரால். வருணனின் ருதத்தின் படியே நதிகள் நிற்காமல், ஓய்வெடுக்காமல் ஓடுகின்றன. ஆற்று நீர் சமுத்ரத்தை நிரப்புவதில்லை. காரணம் இது அறிவுள்ள வருணனின் ஏற்பாடு.

    ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது,   பூமியை அளந்தது, எல்லா உயிரினங்களையும் தலைவராக நின்று பரிபாலித்தது ஆகியவையும் வருணனின் சாதனைகளாகப் பேசப்படுகின்றன. விண்ணும் மண்ணும் வருணனின் தர்மத்தால் நிலைநாட்டப்பட்டவை. வருணன் தேவர்களுக்கும் பாதுகாவலர்.

    பிரபஞ்சத்தைப் படைத்து அதில் ருதத்தை ஏற்படுத்திய வருணன் மனிதருக்கும் சில விரதங்கள் விதித்துள்ளார். வருணனின் விரதங்கள் மீறத் தகாதவை. உடல் முழுவதும் களிமண் பற்றுப் போட வேண்டிய நோய், துருத்தி போல் உடல் வீங்குவது, பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலை, வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க முடியாத நிலை இவை வருணனின் விரதங்களை மீறுவதால் உண்டாகும்.

    மித்ர வருணர்கள் கண்களை விட நன்றாகப் பாதையை அறிந்தவர்கள். கண்ணை மூடிக் கொண்டும் அவர்களால் பார்க்க முடியும். அவர்களுக்குத் தெரியாமல் ஒருவன் தவறு செய்ய முடியாது.

    ருதத்தை மீறியவர்களை, அதாவது பாவம் செய்தவர்களை வருணன் பாசம் என்னும் கயிற்றினால் கட்டுகிறார். அந்தக் கட்டிலிருந்து விடுவிக்கக் கூடியவர் அவரே. (பிற்காலத்தில் இந்தப் பாசம் யமனுக்கு உரியதாக ஆக்கப்பட்டது.) பாவங்களைத் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தண்டிக்கிறார்.

    மற்றவர்கள் செய்த தவறுகளின் பலனை நாங்கள் அனுபவிக்காதிருப்போமாக[1], மூதாதையர் செய்த பழிக்கும் எங்கள் பழிக்கும் தண்டனை தராதே [2] என்று அவர் வேண்டப்படுகிறார்.

    தண்டிப்பவராக இருந்தாலும் கருணையும் மிகக் கொண்டவர் வருணன். பாவிகளிடத்திலும் கருணை காட்டுபவர். வேண்டினால் மன்னிக்கிறார். நண்பர்களிடத்தும், உறவினர்களிடத்தும், அயலாரிடத்தும் செய்த பாவங்களைப் போக்குகிறார். வருணா, உன்னுடைய விரதத்தில் நாங்கள் பிறழாமல் இருப்போமாக என்ற பிரார்த்தனை அடிக்கடி வருணனிடம் வைக்கப்படுகிறது.

    மித்ர வருணர்கள் அறிவற்றவனை அறிவாளி ஆக்குகின்றனர். அறிவுள்ளவனை விழிப்படையச் செய்கின்றனர். நல்ல பாதையில் அழைத்துச் செல்கின்றனர்[3].

    தெய்வங்களுக்குச் செய்த பாவங்களினாலும், அறியாமையால் உன் தர்மத்தை மீறினதாலும் நாங்கள் செய்த தவறுகளுக்காகக் கோபித்துக் கொள்ளாதே [4] என்ற இந்த மந்திரம் சந்தியா வந்தனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

    யத்கிஞ்சேதம் வருண தைவ்யே ஜனே அபித்ரோஹம் மனுஷ்யாச்சராமஸி, அசித்தீ யத்தவ தர்மாயுயோபிம மா நஸ் தஸ்மாதேனஸோ தேவ ரீரிஷ:   

    என் உறவினர்கள் வறுமை அடையக் கூடாது. நாங்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றும் வருணன் வேண்டப்படுகிறார். க்ஷேமத்திலும் யோகத்திலும் நலம் உண்டாகட்டும் என்றும் பிரார்த்திக்கப்படுகிறார்.

    வருண மித்ரர்கள் துன்பத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள்.  உழைக்கத் தூண்டுகிறார்கள். அறியாதவர்களுக்கு அறிய வைக்கிறார்கள். அறிந்தவர்களைப் பாவங்களிலிருந்து நீக்கி நல்ல பாதையில் அழைத்துச் செல்கிறார்கள்.

    குறிப்புகள்:
    1    2.28.9.
    2    7.86.5.
    3    7.60.6.
    4    7.89.5.

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://barbarapijan.com/bpa/Nakshatra/24shatataraka.htm

    Share
  • பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

    கே. ரவி

     

    ஆதிசங்கரர்இன் பஜகோவிந்தம் பாடல் எப்பொழுதும் என் மனத்துக்கு நெருக்கமான பாடல். அதன் ஈர்ப்பில் நான் எழுதிய ஒரு தமிழ்ப்பாடலை, ரெஹான் இசையில், சுஜாதா குரலில் கேட்கலாமே:

     

    பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

     

    Meerabai_1

     

    பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

    பாடல்களில் உயர் பாடலிதே

    நிஜமும் நிழலும் நிதர்சன மாகும்

    நித்யா னந்த கீதமிதே

     

    உடலும் உயிரும் உறவென் றெண்ணும்

    மடமை அழிக்கும் மார்க்கமிதே

    கடவுள் நாமம் கடவுள் த்யானம்

    கதிவே றில்லை மானிடனே

     

    ஆசைகள் ஆகும் ஓசைகள் யாவும்

    அடங்கிடும் தேவ மந்த்ரமிதே

    பாசச் சுழலில் மோகத் தழலில்

    பரிதவிக் காதே மானிடனே

     

    மறுபடி ஜனனம் மறுபடி மரணம்

    மதியில்லை யாசொல் மானிடனே

    உறுதுணை அவனே உயிர்நிலை அவனே

    உணர்ந்திடு வாயா நீயுடனே

     

     

     

    Share
  • காதல் நாற்பது (18)

    ஒருபிடிக் கூந்தல் உனக்கு மட்டும்!

     

    jay

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் :
    சி. ஜெயபாரதன், கனடா

    எந்த மனிதனுக்கும் நானிதைப் போல்
    ஒருபிடிக் கூந்தலை அறுத்துத்
    தருவ தில்லை
    எல்லோரிலும் மிக்க இனிய
    உன்னைத் தவிர !

    சிந்தித்து
    எந்தன் விரல்களில்
    பழுப்பு நிற
    முழு நீளக் கூந்தலைச் சுற்றி
    “வாங்கிக் கொள்” என்று
    வாய்மொழிந்தேன்!
    நீங்கின என்னிளமை நாட்கள்
    நேற்றோடு!
    முழங்கால் வரைக் கூந்தலினி
    விழா தெனக்கு!
    மலர் ரோஜாவைத்
    தலையில்
    சூடிக் கொள்வ தில்லை நான்,
    மங்கையர்
    சிங்கா ரிப்பது போல்!

    வெளுத்த இரு கன்னங்கள் மீது
    துளும்பிடும்
    கண்ணீர்க் கறை மறைத்திடும்
    தலைமயிர் இப்போது!
    கீழே தொங்குவதால்,
    சோகத்தின் கைத்திறன் மூலம்
    சொல்லித் தரும் எனது
    சிரத்தின் சாய்வு!

    மரணக் கத்திகள்
    முடியை நறுக்குமென
    முதலில் எண்ணினேன்!
    ஆயினும் காதலிப்பது
    நியாய மானது
    நீ யதை ஏற்றுக் கொள்வாய் !
    நெடுங் காலமாய்த்
    தூயதாய் இருக்கக் கண்டேன், என்
    தாயிங்கு
    மாயும் போதவள்
    விட்டுச் சென்ற
    முத்தம் !

    ********************

    Poem -18
    Sonnets from the Po
    rtuguese
    By: Elizabeth Browning

    I never gave a lock of hair away
    To a man, dearest, except this to thee,
    Which now upon my fingers thoughtfully,
    I ring out to the full brown length and say
    “Take it.” My day of youth went yesterday;
    My hair no longer bounds to my foot’s glee,
    Nor plant I it from rose or myrtle-tree,
    As girls do, any more: it only may
    Now shade on two pale cheeks the mark of tears,
    Taught drooping from the head that hangs aside
    Through sorrow’s trick. I thought the funeral-shears
    Would take this first, but Love is justified,–
    Take it thou,–finding pure, from all those years,
    The kiss my mother left here when she died.

    **********

    Share
  • காற்று வாங்கப் போனேன் (37)

    கே.ரவி

    கடவுள் நம்பிக்கை பற்றி கேட்டதற்குத் தர்க்கம் பற்றி ஒரு பேருரையாற்றிவிட்டுக் குரல் தழுதழுக்க ஒரு கவிதை சொல்லிப் போன பகுதியை முடித்து விட்டேனோ? தர்க்கத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா? உண்டு, இல்லை. இது என்னப்பா பதில்?

    கவிஞர் கண்ணதாசனே பாடவில்லையா: “உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை”.

    கவிச்சக்ரவர்த்தி கம்பர் தம் காவியத்தில் ஒரு புதுமை செய்தார். காவியத்தின் நுழைவாசலில் மட்டும் கடவுள் வாழ்த்துப் பாடி முடிக்காமல், காவியத்தின் ஒவ்வொரு காண்டத்துக்கும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடினார். பாரதி கம்பரை ஆழ்ந்து கற்றவன். அதனால் அவனும் ‘பாஞ்சாலி சபதம்’ காவியம் படைத்த போது, அதன் ஒவ்வொரு சருக்கத்துக்கும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் வைத்தான்.

    கண்ணதாசனும் கம்பரை நன்கு கற்றுத் தோய்ந்தவர். கம்பர் பாடிய ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல்தான் கண்ணதாசனின் மேற்சொன்ன வரிகளுக்கு உள்ளூக்கம் தந்திருக்க முடியும். கம்பர் பாட்டைப் பார்ப்போம்:

    ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்

    அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்

    இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்

    நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

    எப்படியோ தர்க்கத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு என்று தர்க்க ரீதியாக நிறுவி விட்டேன். சரிதானே?

    தர்க்கத்தால் கடவுள் இருப்பை நிறுவவே முடியாது என்ற தீர்மானத்தைத் தர்க்கத்தால் நிறுவியவன் ஜெர்மானிய தத்துவ மேதை, இமானுவெல் கன்ட்.

    கவிச்சக்கரவர்த்தியின் முதல் கடவுள் வாழ்த்துப் பாடலின் அர்த்தப் பொதிவு, இமானுவெல் கன்டைப் படித்துணர்ந்த பிறகே, எனக்கு மெல்லப் புரியத் தொடங்கியது:

    உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

    நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா

    அலகிலா விளையாட்டு உடையார் அவர்

    தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

    kambarஅதாவது, இந்த உலகத்தை ஒருவன் படைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அது தானாகவே இருப்பது. தானே தோன்றி, விரிந்து, வளர்ந்து கொண்டிருக்கிறது. பிக்பேங் (Big Bang) எனப்படும் ஒரு புள்ளி வெடிப்பில் சிதறுண்டு, விரிந்து கொண்டே இருக்கும் புதிர் அது. இப்படியெல்லாம் விஞ்ஞானம் பேசுகிறது. அந்தப் பகுத்தறிவுக் குழந்தையின் மழலைப் பேச்சின்படி இந்த உலகெலாம் தாமே, அதாவது, படைத்தவன், காப்பவன் என்பதாக யாரும் தேவைப்படாமல் தாமே இருக்கின்றன என்று நம்மை நினைக்க வைக்கும் வகையில் இந்த உலகெலாம் ஆக்கி, அவை தாமாகவே விரிந்து வளரச் செய்து, அவற்றை நீக்கி, இப்படியாக ஓர் ஓயாத விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் அவர் தலைவர். இதைத்தானே கம்பன் சொல்கிறான்.

    அப்பொழுது இவ்வளவுதான் புரிந்து கொண்டேன். ‘தாமுளவாக்கல்’ என்பதற்குள்ள வேறு பரிமாணங்கள் பற்றியும், ‘நிலைபெறுத்தலும்’ என்ற சொற்றொடரில் ‘று” என்ற வல்லின எழுத்து உள்ளது பற்றியும், ‘அலகிலா’ எந்ற சொல்லின் அடர்ந்த கருத்துச் செறிவு பற்றியும் அப்பொழுது நான் ஆய்வு செய்து பார்க்கவில்லை. அதை இங்கே இப்போது விவரிக்க இடமில்லை. அப்போது இந்த அளவாவது கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடலை எனக்குப் புரிய வைத்தவன் மேற்சொன்ன ஜெர்மானிய தத்துவ மேதைதான்.

    ஒருநாள், மயிலை கபாலி கோயில் எதிரில் உள்ள ஒரு மண்டபத்தில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.A.sa கூர்மையான பார்வையோடும், கணீரென்ற குரலோடும் தாடிக்காரர் ஒருவர் அந்தச் சொற்பொழிவில் கம்பனின் மேற்சொன்ன கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றைப் பற்றி ஒன்றரை மணி நேரம் பேசினார். மெய்மறந்து அமர்ந்திருந்தேன். அப்போதுதான், இமானுவெல் கன்ட் எனக்குப் புரிய வைத்ததையும் கடந்த, ஆழ்ந்த பொருள் அந்தப் பாடலில் பொதிந்திருப்பதை உணர்ந்தேன். அந்தத் தாடிக்காரர்தான், ‘இலக்கியக் கலை’ என்ற அருமையான நூலின் மூலம் என் இலக்கிய ரசனையை நெறிப்படுத்திய மேதை அமரர் அ.ச. ஞானசம்பந்தம். அதற்குப் பிறகு இரண்டு முறை அவர் வீட்டுக்குச் சென்று கம்பராமாயணத்திலும், பெரியபுராணத்திலும் நான் சில விளக்கங்கள் கேட்ட போது நேரம் ஒதுக்கி அவர் அன்புடன் எனக்குப் பாடம் சொன்னதை என்னால் மறக்க முடியாது.

    இவ்வளவுக்குப் பிறகும், அனுபவ ரீதியாகக் கடவுள் நம்பிக்கை என்னைப் பற்றவில்லை.

    நான் 1981-ல் மதுரைக்குப் போய் ரமணனைச் சந்தித்தேன். அவனிடம் ‘ஸ்பரிசம்’ படத்துக்கு ஒரு காதல் பாடல் தரச் சொல்லிக் கேட்டேன். அவனும் தந்தான். அந்தப் பாடலைப் பிறகு, தீபன் சக்கரவர்த்தியும், எஸ்.பி.ஷைலஜாவும் பாட நான் இசையமைத்துப் பதிவு செய்து, அந்தப் பாடல் காட்சியும் படத்தில் இடம்பெற்றது. அந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    [அந்தப் பாடலை நீங்களும் கேட்டு மகிழச் சொடுக்கவும்:

    http://www.inbaminge.com/t/s/Sparisam/Aayiram%20Malargal%20Paniyil.eng.html]

    [எஸ்.வி.சேகரும், ஶ்ரீலட்சுமியும் ஆடிப்பாடும் காட்சியைக் கண்டும், பாடலைக் கேட்டும் மகிழச் சொடுக்கவும்: https://www.youtube.com/watch?v=ntAyp79sYVU]

    ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து

    ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து

    பாவையென் மனதில் நுழைந்து தவழ்ந்து

    மேனியில் ஆயிரம் மின்னலை வெள்ளம் அம்மோய் … ஸ்பரிசம்

     

    மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ

    கனவில் பவனி வரும் – கண்கள்

    கார்த்திகை தீபங்களோ

    காலக் கதவினை மெல்லத் திறந்து

    கடந்த பாதையை மறந்து – இந்தக்

    கணத்தில் நாம் பிறந்து வளர்ந்து

    தவழ்ந்தோம் … ஸ்பரிசம்

     

    வைரப் படைக்கெலாம் நடுவே நாம்

    கைகள் இணைக்கலாம் நடக்கலாம்

    தென்றல் திகைக்கலாம் அதற்குமேல்

    தேவர் இருக்கலாம் அவர்க்கெல்லாம்

    பாடல் கொடுக்கலாம்

    இந்த்ரப் பதவி கிடைக்கலாம் உடனேநாம்

    அதையும் மறுக்கலாம்

    பறக்கலாம் சிரிக்கலாம் வா … ஸ்பரிசம்

     

    இந்தப் பாடலைப் பாடிக் காட்டிவிட்டு, ரமணன் என்னிடம் மதுரை மீனாட்சி கோவிலுக்குப் போகலாமா, நான் வருவேனா என்று கேட்டான். நான் என்ன பதில் சொன்னேன் தெரியுமா?

    ” வந்தால் போச்சு. அந்தக் கோவிலில் நல்ல சிற்பக் கலையம்சம் மிக்க வேலைப்பாடுகள் உண்டாமே. பார்த்துவிட்டு வரலாம்.”

    எப்படி இருக்கிறது என் பதில்? அதில் எவ்வளவு அலட்சியம்! ஆணவம் என்று கூடச் சொல்லலாமோ? நினைத்தாலே கூச்சத்தில் இப்பொழுது உடல் நடுங்குகிறது.

    ஷோபனாவும், என் சகவாச தோஷத்தால் கிட்டத்தட்ட அந்த மனநிலையில் தான் இருந்தாள். ஆனால், அதில் அறிவின் ஆணவத்தைக் காட்டிலும், குழந்தைத் தனமான அறியாமையே தெரிகிறது. 1977-ல் அவள் ஓர் ஆங்கிலக் கவிதை எழுதியிருந்தாள்:

    I wish there were a God somewhere

    That I can bow and plead – Then

    My tears will bring the Grace of care

    They’ll die a death of need

     

    Tear after tear, year after year

    They’ve rolled and gone awaste – When

    My fate evades a thought too dear

    They die for me in haste

     

    I do not ask of them to die

    I know not that they come

    But when they die I only sigh

    “What fruitless martyrdom!”

     

    I wish there were a God somewhere
    That I can bow and plead
    Then my tears would bring the Grace of care
    They’ll die a death of need

    என்

    விருப்பமெல்லாம் எங்கேனும் – நான்

    வணங்கி இறைஞ்ச ஒரு கடவுள்

    இருக்க வேண்டும் என்பதே – இருந்தால்

    பரிவின் கருணையை வரவழைத்துப்

    பொழியும் கண்ணீர்த் துளிகளெல்லாம் – ஓர்

    அவசியத்தாலே மறைந்துவிடும் – அந்த

    மரணத்துக்கொரு பயனிருக்கும்

    பிறகு கடவுள் நம்பிக்கை எப்படி என் நெஞ்சில் நுழைந்தது? அந்தக் கேள்விக்கு அடுத்த சந்திப்பில் பதில் சொல்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • இந்திய அரசியலில் தனி நபர் துதி

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கா என்ற நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து அங்கு இரண்டே இரண்டு அரசியல் கட்சிகள்தான். அமெரிக்க அரசியல் முறை முன்னூறு ஆண்டுகளாகக் காலத்தை வென்று இன்னும் அதே வ்லுவோடு விளங்கிவருவதால் அது ஒரு சிறந்த அரசியல் அமைப்பு என்று கொள்ளலாம். அரசியல் அமைப்பு மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் அன்றிலிருந்து இன்றுவரை இரண்டுதான். அந்த இரண்டு கட்சிகளுக்கும் தலைவர்கள் உண்டு. ஆனால் அவர்கள்தான் ஜனாதிபதியாக வருவார்கள் என்ற கட்டாயமில்லை. சொல்லப் போனால் கட்சித் தலைவர் யாரும் ஜனாதிபதியாக வந்ததாக ஞாபகம் இல்லை. அதற்கு மேலாக அவர்கள் சொல்வதைத்தான் கட்சியைச் சேர்ந்தவர்கள் கேட்க வேண்டுமென்பதில்லை. ஜனநாயகக் கட்சியில் பெரும்பாலோர் இடதுசாரிக் கொள்கை உடையவர்களாவும் குடியரசுக் கட்சியில் உள்ளவர்கள் வலதுசாரிக் கொள்கை உடையவக்ர்ளாகவும் இருப்பார்கள் என்பது சாதாரணக் கணிப்பு. ஆனால் அவர்கள் எல்லோரும் எல்லா விஷயத்திலும் இடதுசாரிகளாகவும் வலதுசாரிகளாகவும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பிரச்சினை என்று வந்துவிட்டால் எல்லா ஜனநாயக்க் கட்சிக்காரர்களும் ஒரே மாதிரியாக ஓட்டுப் போடுவார்கள் என்று சொல்ல முடியாது. இரண்டு சபைகளிலும் ஏதாவது ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் தங்கள் தங்கள் தனிப்பட்ட கொள்கைக்கேற்ப இரண்டு கட்சிக்காரர்களும் ஓட்டுப் போடுவார்கள்.

    கட்சித் தலைவர் சொல்வதையோ ஜனாதிபதி சொல்வதையோ கேட்டு நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஜனாதிபதி தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் செய்யும் எதையும் ‘ஆஹா, ஓஹோ’ என்ரு புகழ வேண்டியதில்லை. அமெரிக்க ராணுவத்தின் ஒரு சிறப்புப் பிரிவு ஜனாதிபதி ஒபாமாவின் கட்டளையை மேற்கொண்டு வெகு காலமாக அமெரிக்கா தேடிக்கொண்டிருந்த ஒசாமா பின் லேடனை அவன் இருக்கும் இடத்திலேயே சூழ்ந்துகொண்டு கொன்றதை அவர் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் யாரும் பெரிதாகப் பேசவில்லை. ஒபாமாவைத் தலையில் வைத்துக்கொண்டு யாரும் புகழ் மாரி பொழியவில்லை.

    இந்தியாவில் எல்லாம் இதற்கு நேர் மாறாக இருக்கிறது. தேசிய அளவில் உள்ள கட்சிகளானாலும் சரி மாநில அளவில் உள்ள கட்சிகளானாலும் சரி கட்சித் தலைவர் சொல்வதை எல்லோரும் கேட்டாக வேண்டும். காங்கிரஸைப் பொறுத்தவரை சோனியா காந்தி சொல்வதுதான் எல்லோருக்கும் வேதவாக்கு. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுமாசமாகத் தோல்வியுற்றாலும் இன்னும் சோனியாவின் அறிவுரைகளைத்தான் கேட்க நினைக்கிறார்கள். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதிலும் அவரை சோனியா பின்னால் இருந்து ஆட்டி வைத்தார் என்பதோ தன் மகன் ராகுலை அடுத்த பிரதமராக்க முயன்றார் என்பதோ காங்கிரஸின் படுதோல்விக்குக் காரணம் என்று சொல்ல எந்தக் காங்கிரஸ் தலைவர்களும் முன்வரவில்லை. காங்கிரஸ் தோல்விக்கு யார் காரணம் அல்லது எது காரணம் என்று ஆராய அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவர் ஏ.கே. அந்தோணி காங்கிரஸ் வேட்பாளர்கள் உற்சாகமாகத் தேர்தலில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் மோதியின் தீவிரத் தேர்தல் பிரச்சாரமும்தான் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். காங்கிரஸின் தோல்வியில் ராகுலின் பங்கு என்ன என்று கேட்டபோது ராகுலுக்கும் காங்கிரஸின் தோல்விக்கும் எந்த சம்பந்தமும் என்று கூறியிருக்கிறார். இவர் கூட இப்படிப் பேசுவதற்கு நம் அரசியல் கலாச்சாரம்தான் காரணம்.

    மோதி பதவிக்கு வந்த பிறகு அவர் மட்டுமல்ல அவருடைய கட்சிக்காரர்களும் எல்லாமே அவர்தான் என்பது போல் நடந்துகொள்கிறார்கள். அவரை அதிகமாகப் புகழ்வதும் அவருடைய ஆணைகளைத் தலைமே தாங்கி நடப்பதுவும் அவருடைய கட்சிக்காரர்களின் செயலாக இருக்கிறது. அவர் செய்யும் எல்லா முடிவுகளுமே சரியான முடிவுகள் போல் பேசுகிறார்கள்.

    தமிழ்நாட்டுக் கட்சிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தி.மு.க. கட்சியில் தலைவர் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் எது பற்றியும் எந்த விதக் கருத்தும் இருப்பதாகத் தெரியவில்லை அடுத்து அ.தி.மு.க. நேற்று மதுரையில் நடந்த முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரித்ததில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டாட திண்டுக்கல். உட்பட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த் விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த் விழாவில் எல்லாம் அம்மா மயம். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பார்கள். அது போல் இந்த மாநாட்டில் அம்மாவைத் தெய்வமாகவே ஆக்கி எல்லாப் புகழையும் அவருக்கே காணிக்கை ஆக்கினார்கள்.

    இது என்ன தனி மனித துதி? இதுதான் இந்திய ஜனநாயகமா? என் தாய்த்திருநாடே உன்னை யார் இந்த ஆட்டுமந்தைக் கலாச்சாரத்திலிருந்து காப்பாற்றப் போகிறார்கள்?

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 133

    -மலர்சபா

    மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

    கொடை

    இளமையும் கருமை நிறமும் கொண்டaa
    எயினர் மகளே!
    நின் தமையன்கள் முன்பு
    பகைவர்களை வென்று
    கவர்ந்துவந்த பசுக் கூட்டங்கள்
    கொல்லன், துடியன்,
    பாட்டுகள் தாளத்துடன் புணர்க்கவல்ல
    நல்ல யாழ்ப்பாணன்…ஆகியோர்
    வீட்டின் முன்வாயிலில் நிறைந்துநிற்கின்றன.
    காண்பாயாக!

    மயிலின் அடியைஒத்த
    முற்றிடாத நகையுடையவளே!
    நின் தமையன்கள் முன்பு
    கரந்தையர் அலற அலறக்
    கவர்ந்து வந்த பசுக்கூட்டங்கள்
    கள்விற்பவள், நல்ல உளவறிந்து கூறும் ஒற்றன்,
    நல்லசகுனப்பொருத்தம் கூறும் சோதிடன்…ஆகியோர்
    வீட்டின்முன் நிறைந்து நிற்கின்றன.
    காண்பாயாக!

    குளத்துக்கண் உள்ள தாமரை மலர் போன்ற
    மையுண்ட கண்களை உடையவளே!
    நின் தமையன்கள் முன்பு
    பகைவர்கள் வருந்தி அலறிக் கூவி
    ஊரையே கூட்டிய வண்ணம்
    கவர்ந்து வந்த பசுக்கூட்டங்கள்
    கொச்சை மொழியும், நரைத்த தாடியும் உடைய
    முதிய மறவர் மறத்தியர்
    வீட்டு முன்றிலில் நிறைந்து நிற்கின்றன.
    காண்பாயாக!

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் பாடல்கள் இங்கே:  14 – 16
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி
    http://ta.wiktionary.org/wiki

    Share
  • சென்னையின் வயது 375!

    -ரா. பார்த்தசாரதி

    சென்னையின் வயது முன்னூற்று எழுபத்து ஐந்து ஆண்டுகள் !
    இங்கே நாம் காணும் பல  வளர்ச்சிகள், காணப்படும்  அதிசயங்கள், கெட்டும்  பட்டிணம்  சேர்  என்ற  பழமையான  பழமொழிகள் பலதரப்பட்ட  மக்கள் வளர்ச்சி அடைந்ததற்கு எடுத்துகாட்டுக்கள் !

    சென்னைக்குத் தனிமொழி,
    நடிகர் ரஜனிக்கும் தனிவழி!
    தேன் மதுரத் தமிழ் எல்லா மொழியிலும்  இருப்பதுண்டு ,
    வாஞ்சைகொஞ்சும்  நெல்லைத் தமிழ்,
    மரியாதை மிளிரும் கொங்குத் தமிழ்,
    நாஞ்சில் தமிழ், மதுரைத் தமிழ், கலப்பு மிகுந்த சென்னைத் தமிழ்!

    சென்னைத் தமிழ் சற்றே வித்தியாசமாய் இருந்தாலும்
    பலதரப்பட்ட மொழியினரும், சமயத்தவர்களும் இருந்தாலும்,
    வேற்றுமையில் ஒற்றுமை இன்றும் இங்கே பரவி இருக்கின்றதே!

    பன்மொழிச் சொற்கள் கலப்பு, பல்வேறு இனம்,
    பலவிதக் கலாசாரத் தொடர்பு, இவையே சென்னையின் அடையாளம்!
    திரைப்படம் வாயிலாகச் சென்னைத் தமிழ் பல பகுதிகளில் பரிச்சயம்!
    இதுவே சென்னைத் தமிழ் உலாவிவரும் அதிசயம் !

    புராதனக் கோவில்கள், கலங்கரை விளக்கங்கள் !
    பழமை மிகுந்த மாளிகைகள்,  துறைமுகங்கள் !
    கன்னித் தமிழ் மாறா நூலகங்கள், உருவச்சிலைகள் !
    பாலங்கள், சிறந்த கடற்கரைகளும் காணப்படுகின்றதே!

    பல பிரபலங்களைச் சென்னை தன்னகத்தே கொண்டதே !
    கனகசபைப் பிள்ளை, பிரகாசம் பந்துலு, முத்துஸ்வாமி தீட்சதர்,
    கணிதமேதை ராமனுஜம், பாலசரஸ்வதி, மற்றும்
    இந்தியாவில் முதல் மருத்துவப் பட்டம் பெற்ற முத்துலட்சுமி ரெட்டி ! 

    நிறை பற்றிப் பேசினாலும் குறையில்லா நகரம்இல்லை !
    குப்பைக் கிடங்காய்க் கூவம் ஆற்றைச் சுத்தபடுத்த முடியவில்லை!
    புராதனக் கட்டிடங்கள் பல பராமரிக்கப்படவில்லை!
    சாலைகளும், போக்குவரத்தும் முறைப்படுத்தவில்லை !

    பாலங்கள் அதிகமானாலும், ஆங்காங்கே பள்ளங்கள் அதிகம்!
    உயரிய கட்டிடங்கள் அதிகமானாலும் உண்மைத்தரம் இல்லை !
    தொழிற்சாலைகள் வளர்ந்தாலும், தொழிலாளர்களின் நலன் இல்லை !
    அரசிடமும், அரசியல்வாதிகளிடமும்,
    லஞ்சம் தலைதூக்காமல் இல்லை !

    சென்னையில் கேளிக்கைப் பூங்காக்களும், மலர்ப் பூங்காக்களும் உள்ளதே!
    என்றும் இதை அமைதிப்பூங்காவாக ஆக்குவது நமது கடமையே !
    சென்னைவாசிகள் மனம்வைத்தால் இவைகள் என்றும் சாத்தியமே !
    நற்செயலால் நமது நகரத்தைச் சொர்க்கமாக்கக் கை கொடுப்போமே !

    Share
  • ஷண்முக விலாஸ் – ராமனாதன்

    –மாதவ. பூவராக மூர்த்தி.

    ஹோட்டல் பற்றி அடிக்கடி எழுதுவதால் இந்தத் தலைப்பு உங்களுக்கு இன்னொரு ஹோட்டல் மனிதரைப் பற்றி என்று நினைக்க வைக்கக் கூடும். இல்லை,  ஆனால் இவரும் நிறையப் பேருக்குச் சாப்பாடு போட்டவர். இன்று நான் உங்களோடு முகநூலில் சரளமாகக் கட்டுரைகளை அடித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு “சின்ன ஸார்” என்று எங்களால் அன்போடு அழைக்கப் படும் திரு ராமநாதனும் அவரின் ஷண்முக விலாஸ் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டும் தான் காரணம்.

    12th-typewriter_12_1752701eஅது ஒரு காலம் அப்போதெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி முடிந்தவுடன், பாஸ் ஆனவர்கள் கல்லூரி படிக்க இயலாதவர்கள், பெயிலானவர்களின் சரணாலயம்தான் இந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்கள்.  எங்களூரின் மத்தியில் அமைந்திருந்த அந்த இன்ஸ்டியூட்தான் பலரை டைப்பிஸ்ட்களாகவும், ஸ்டெனோவாகவும் பெரிய கம்பெனிகளில் சேர்த்துவிட்டது. சென்னை, கல்கத்தா, பாம்பே, ஜெம்ஷெட்பூர் போன்ற பெருநகரங்களில், பெரியநிறுவனங்களில் ஓய்வு பெறும் போது அதன் தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் டைப்ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட் படித்தவராக இருப்பார்கள்.

    கல்லூரி படிக்கிறவர்களும் படிப்பு உதவுகிறதோ இல்லையோ டைப்ரைட்டிங், ஷார்ட்ஹாண்ட் உதவும் என்று உபரியாக இன்ஸ்டிடியூட்டில் சேருவார்கள், சேர்க்கப்படுவார்கள். நானும் அப்படித்தான் சேர்ந்தேன். ஆனால் எதையும் முழுதாக முடிக்காத என் வரலாறு இதிலும் தொடர்ந்து.  லோயர் பாஸ் ஆனபிறகு ஹையருக்குப் போய் கோட் அடித்து முடித்துக் கொண்டேன். இருந்ததாலும் அந்த அனுபவம்தான் என்னை வங்கியில் கிளார்க் கம் டைப்பிஸ்ட் ஆக்கியது.

    அது ஒரு காலம் மிகவும் இனிமையான காலம் என்று தான் சொல்ல வேண்டும்.  எதிர்காலம் பற்றிய கனவுகள் எதுவும் இல்லாமல் நிகழ்காலச் சின்னச்சின்னச் சந்தோஷங்களில் லயித்த காலம். கனவுகள் மனதில் வழிந்து கொண்டிருந்தது. வாலிபம் வந்த வயது பள்ளிக் கட்டுப்பாடுகள்.

    தொலைந்து கல்லூரியில் சேர்ந்த பிறகு கிடைத்த மாணவ சுதந்திரம், டிராயர் போக வேஷ்டி,முழுக்கைச் சட்டை, கைகளில் புதிய வாட்ச், புதிய சைக்கிள். அவ்வப்போது பார்த்த புதுப்படங்களில் வந்த பாடல்களைச் சந்தோஷமாக உதடுகள் முணு முணுத்த காலம். காலேஜ் நண்பர்கள் சேர்ந்தார்களே என்றுநானும் ஷண்முக விலாஸில் சேர முடிவெடுத்தேன்.

    ஒரு நாள் மாலை நாலு மணிக்குப் போய் சின்ன ஸார் என்று எங்களால் அழைக்கப் படும் ராமநாதன் அவர்களிடம் பேசி பணம் கட்டிவிட்டு வந்தேன்.“எத்தனை       மணி ஷிப்ட் வருவே?” என்றார். ஆறு மணிக்கு என்று சொன்னேன்.

    காலை ஆறுமணிக்குச் சைக்கிளில் போய் இறங்கினேன். உள்ளே எனக்கு முன் வந்து சிலர் பலவிதமான வேகத்தில் பல விதமான நிலைகளில் டைப்ரைட்டர் முன் அடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பால பாடம், சிலர் லோயர், சிலர் ஹையர், நிறைய மிஷின்கள் காலியாக இருந்தன. புதுப் புதுமெஷின்கள். நான் வந்து நின்றதும் மூலையில் ஒரு மிஷினை பிரஷ்ஷால் துடைத்துக் கொண்டிருந்தவர் எழுந்து வந்தார். ஹாலில் புது மிஷின்களைக் கடந்து அழைத்துப் போய் ஒரு பழைய மிஷின் முன் நிற்க வைத்தார். எல்லா மிஷின்களும் ஒரே அளவான டேபிளில் வைக்கப் பட்டிருக்கின்றன.எல்லாவற்றிற்கும் முன் உயரமான ஸ்டூல்கள் இருந்தன.

    அந்த நேரத்திலேயே சின்ன ஸார் ஃப்ரெஷ்ஷாக இருந்தார். அன்று மட்டுமல்ல அதன் பிறகு ஷண்முக விலாஸில் நான் கழிந்த பல மாதங்களிலும் அவரைஅப்படியே காணக்கிடைத்தது. நிர்மா வேஷ்டி, அதைவிட வெண்மையான கட் பனியன், கோவைப் பழம் போன்ற சிவந்த அழகான உதடுகள். சுருட்டைமுடியுடன் கூடிய தலை. நெற்றியில் ஒரு விபூதிக் கீற்று.

    அவர் ஸ்டூலில் உட்கார்ந்து “பேப்பர் கொண்டு வந்திருக்கியா?” என்றார்.”இல்லை” என்று தலையாட்டினேன். பக்கத்து டிரேயிலிருந்து ஒரு பேப்பர் எடுத்து நிமிஷமாய் மிஷினுக்குள் சொருகினார். அது விருட்டென்று போய் இருத்திக் கொண்டது. எதையோ அசைக்க மேல் மார்ஜின் போக இடது ஓரத்தில்தயாராக நின்றது.  அதில் கட கட என்று நான்கு வரி இடம் விட்டு அடித்து ஐந்தாவது வரியில் நிறுத்தினார்.

    230313  halda typewriterஅவர் எழுந்து என்னை உட்கார வைத்தார். என் கையைப் பிடித்து அந்தப் பழைய மிஷினின் கீ போர்டில் வைத்தார். இடது கை சுண்டு விரலை A என்றபட்டனில் பொருத்தினார். அதன் அடுத்த இடங்களில் மீதி மூன்று விரல்களைப் பொருத்தினார். இரண்டு பட்டன் தள்ளி வலது கையின் ஆட்காட்டி விரலை‘J” வில் வைத்து அடுத்த மூன்று விரல்களுக்கும் இடம் தந்தார். “நான் அடிச்ச மாதிரி Asdfgf ;lkjhj வரிசையா அடி” என்றார்.

    நான் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தால் புது மெஷினில் எடுத்த வுடனே வார்த்தைகள் அடிக்கச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று ஆசையோடு வந்த எனக்கு சட்டை போடாத இந்த வயசான மிஷினுக்கு முன்னால் உட்காரவைத்தது ஏமாற்றமாக இருந்தது. எனக்கு முன்னால் சேர்ந்த நண்பர்கள் இதைப் பற்றிஎன்னிடம் சொல்லவே இல்லை. இன்ஸ்டிடியூட்டில் நிறையப் பாவாடை தாவணி போட்ட பெண்கள் வருகிறார்கள் என்றும் அதில் நிறையப் பேர் பார்க்கஅழகாக இருக்கிறார்கள் என்றும் சொல்லத்தெரிந்த அந்த மடையர்களுக்கு இதைச் சொல்ல நேரமில்லை போலிருக்கிறது.

    நான் மனசுக்குள் வேண்டிக்கொண்டு அடிக்க முயற்சித்தேன். சுண்டு விரல் தனியாக அழுந்த மறுத்தது. மோதிர விரலை துணைக்கு அழைத்தது.அதன்விளைவாக இரண்டு டைப் கம்பிகள் நான் எதிர்பாராத விதமாக எழுந்துகொண்டிருந்தது.அழுத்தியபடியே சின்ன ஸாரைப் பார்த்தேன். அவர் “ஒவ்வொருவிரலா அழுத்தணும்.” என்றார். அடுத்த முயற்சியில் ஒரு கம்பி எழும்பியது போதிய அழுத்தமில்லாததால் பேப்பர் வரை சென்றுவிட்டு வந்தது. எழுத்து விழவில்லை.

    கொஞ்சம் வேகமாகப் பிரஸ் பண்ணு” என்றார். பண்ணினேன். நச் என்று எழுத்து விழுந்தது. சந்தோஷமாக இருந்தது. நான் முதல் எழுத்தை அடித்து விட்டபெருமையில் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

    எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தேனோ. “அடுத்த லெட்டர் அடி “என்றார். மோதிர விரலை மட்டும் அழுத்த நான் எடுத்த முயற்சியில் வெற்றிபெற்றபோது எழுத்துப் பேப்பரில் தெரிந்தது. ஆனால் நான் ஸ்டூலில் இருந்து எழும்பி கோணலாக நின்று கொண்டிருந்தது இன்றைக்கு நினைத்தாலும்சிரிப்பு வருகிறது.

    சின்ன ஸார் புறப்பட்டார். நான் அடுத்தக் கையையை பயன்படுத்தி முதல் எழுத்தை அடித்தேன். பக்கத்தில் இடம் இல்லாமல் விழுந்து தொலைத்தது.சின்ன ஸாரைக் கூப்பிட்டேன். இடம் வேணும் என்றேன். பின்னால தள்ளி உட்காரு என்றார். இல்ல சார் ஒரு எழுத்துக்கும் அடுத்ததுக்கும் நீங்க விட்டமாதிரி இடம் என்றேன். “ஸ்பேஸ் பாரை பிரஸ் பண்ணு” என்று பண்ணிக் காட்டினார்.

    அந்த வரிசை முழுவதும் மெதுவாகப் பார்த்து பார்த்து அடித்து முடித்தேன். அடுத்த வரிக்கு வரத்தெரியவில்லை. அந்தப் பக்கம் வந்த சின்ன ஸார் என்னஅடுத்த லைன் அடி என்றார். எப்படி? என்றேன். அவர் லீவரை ஒரு தட்டு தட்டினார். அடுத்த லைனில் ஆரம்பத்திற்கு வந்து சமர்த்தாக நின்றது. அவர் என்முதுகில் சின்னதாக ஒரு தட்டு தட்டிவிட்டுப் போனார்.

    ரொம்ப நேரம் அடித்தேன். ஒரு பத்து வரி அடித்திருப்பேன். திரும்பிப் பார்த்தால் பதினைந்து நிமிடம் தான் ஆகியிருந்தது. ஸ்டூலில் உட்கார்ந்தது அசெளகர்யமாக இருந்தது. எழுந்து போய்த் தண்ணீர் குடித்து வந்தேன். வெளிச்சம் போறாத மாதிரி இருந்தது. ஒரு வழியாக முதல் கிளாஸ் முடிந்தது. வெளியே வந்தால் வெயில் வந்திருந்தது. கையை ஒரு மாதிரி வைத்திருந்ததால் லேசாக வலித்தது.

    இரண்டாவது நாள் ஆர்வமாக ஒரு பக்கம் முழுவதும் அடித்தேன். தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தேன் வேகமாக. சின்ன ஸார் அருகில் வந்து“பூவராகா பேப்பர்ல அடிக்கணும், ரோலர்ல அடிக்கக் கூடாது” என்றார். நிமிர்ந்து பார்த்தால் மிஷினில் பேப்பர் காணும். சத்தத்தை வைத்தே கண்டுபிடித்துவிட்டார்.

    நான் எழுந்து குனிந்து பேப்பர் எடுத்து மிஷினில் செருகி ஸ்டைலாகத் திருப்பி மேல் மார்ஜின் விட்டு அடிக்க ஆரம்பித்தால் நான் அடிக்க ஆரம்பிப்பதற்குமுன்னாலேயே பக்கம் முழுவதும் அடித்திருந்தது. இது எப்படி என்று யோசனை பண்ணிக் கொண்டிருந்தேன். திரும்பினேன். அவர் பேப்பரைப்பார்த்துவிட்டு லேசாகச் சிரித்தார். “பேப்பரைத் திருப்பி வை” என்றார். தவறு செய்து கற்றுக் கொண்டேன்.

    அந்த மாதம் முழுவதும் இதே பாடங்கள் தான். பக்கத்தில் இருந்த பெண் மிக வேகமாக அடிப்பதைப் பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தேன்.கொஞ்ச நாளில் அந்த மிஷின் என் பழக்கத்துக்கு வந்து விட்டது. சைக்கிள் கடையில் வாடகை சைக்கிள் கற்றுக் கொடுக்கும்போது பழைய சைக்கிள் தானேகொடுப்பார்கள் என்ற ஞானம் வந்தது.

    சின்ன வார்த்தைகள் pack, jug, mug, cup, jar என்பது மாதிரி அடிக்க ஆரம்பித்தேன். இரண்டு மாதம் கழித்து நான் ஆரம்பித்தபோது ஸார் வந்து இன்னிக்கு இந்த சென்டன்ஸ் அடி என்று ஒரு வாக்கியத்தை அடித்துக் காட்டினார். Pack my box with five dozen liquor jugs.

    இந்த வாக்கியத்தில் abcd என்ற ஆங்கில எழுத்துக்கள் 26 வரும். அதை மிக வேகமாகப் பயிற்சி செய்தேன்.அதன் பிறகு எப்போது பார்த்தாலும் எதிலும் விரல்கள் அந்த வாக்கியத்தில் லயித்துப் போய் அன்னிச்சையாக அடித்துக் கொண்டிருக்கும்.

    ஞாயிற்றுக் கிழமைகளில் தியரி மெக்கானிசம் வகுப்பு எடுப்பார். எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். அவர் மெஷினை பார்த்துக்கொள்வதே ஒரு கலையாக இருக்கும். பிரஷ் வைத்து துடைப்பார். ரோலரை இரண்டு மூன்று முறை அசைத்து பிரித்து எடுத்து நன்றாகச் சுத்தம் செய்து மீண்டும் மாட்டி விடுவார். மறுநாள் பார்த்தால் அது ஸ்மூத்தாக நகரும்.

    டெஸ்ட் வைப்பார்கள். வேகம் அடிக்கும் போது ஒரே வார்த்தை இரண்டு இடங்களில் நாலு வரி இடைவெளியில் வரும். வேகமாக அடிக்கும்போது முதல்வார்த்தை அடித்துத் தொடர்ந்து நாலு வரிக்குக் கீழ் அடித்து வைப்பேன்.

    அடுத்த நாள் திருத்திய பேப்பரில் தவறுகள் சிவப்பு மையினால் குறித்து என் மேஜையில் காத்திருக்கும். லோயர் எக்ஸாம் வந்தது பணம் கட்டினேன்.பரிட்சை வந்தது. எழுதி விட்டு கையோடு ஹையருக்குச் சேர்ந்தேன். ரிசல்ட் வந்தது பாஸாகிவிட்டேன்.

    இடையில் இரண்டு முறை என் டயமிங் மாற்றிக் கொண்டேன். எல்லா நேரமும் ஏதாவது அசெளகர்யமாக இருந்தது. இன்ஸ்டிடியூட் வாழ்க்கை நன்றாகஇருந்தது. மறக்க முடியாததாக இருந்தது.

    நாங்கள் எல்லாரும் சைட் அடித்த வைதேகிக்கு கல்யாணம் நிச்சயமானது. ஒரு வாரம் எல்லா மிஷின்களும் சோக கீதம் வாசித்தது. கீதா தன்னைப்பார்த்த சிரித்த சந்தோஷத்திற்காக ஶ்ரீராம் எனக்குக் காளியாகுடியில் ஸ்வீட் வாங்கிக் கொடுத்தான். பானுவின் காதல் அவர்கள் வீட்டில் தெரிந்து அவள் தொடர முடியவில்லை. நிறுத்தி விட்டார்கள்.

    அந்த இன்ஸ்டிடியூட்டில் எத்தனையோ காதல் துவங்கி, வளர்ந்து, மறைந்த கதைகள் உண்டு. ஷார்ட் ஹேண்ட் பெண்கள் வீட்டில் அம்மாவுக்குத்தெரியாமல் ஷார்ட் ஹேண்ட் பாஷையில் பேசிக்கொள்வார்கள். Any circlst kstroking or gdarking என்பார்கள்.

    நான் டைப்ரைட்டிங் கனவுகள் நிறையக் கண்டிருக்கிறேன். ஒரு முறை நான் பரிட்சைக்குப் போனபோது மிஷினின் எல்லாக் கீ கம்பிகளும் ஒரு கூடையில்நிரப்பி என்மேல் கொட்டப்பட்டது போல். ஸ்டார்ட் என்றதும் என் விரல் கீ போர்டில் மாட்டிக் கொண்டதாகவும் கனவுகள் என்னைப் பயமுறுத்தின. சிலஅதிகாலைக் கனவுகள் பலித்து என்னை ஹையர் பரிட்சையில் பெயிலாக்கியது.

    சின்ன ஸார் என்னைச் சமாதானப் படுத்தி மறுபடியும் பணம் கட்டி எழுதச்சொன்னார். தோல்வியைச் சந்திக்க முடியாமல் டைப்பிங்கை விட்டு விட்டேன்.என் வாழ்க்கையின் ஒரு வசந்த காலம் முடிவு பெற்றது.

    இருந்தும் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஊருக்குப் போகும்போது அந்தத் தெரு வழியாகப் போனால் ஷண்முகவிலாஸின் இனிய நினைவுகள் என் நெஞ்சை நிறைக்கும். சின்ன ஸார் வந்து போவார்..ஹால் முழுவதும் நிறைந்து கிடந்த டைப்ரைட்டர் ஒலி என் சுகமான நினைவுகள் பகிர்ந்து கொள்ளும்போது வரும் பரவசமே தனித் தான். என்ன சொல்கிறீர்கள்?

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:
    http://www.sampspeak.in/2013/08/ode-to-typewriter-of-typing-institutes.html
    http://www.thehindu.com/opinion/blogs/blog-by-the-way/article5709646.ece

    Share
  • எல்லாம் விட்டல், எங்கும் விட்டல்

    — விசாலம்.

    தன் கண்களை மூடியபடி  அந்த விட்டலைக்கண்டு ரசித்துக்கொண்டிருந்தார் அவர். அந்தப் பேரானந்தம் அவர் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. அவருடைய அழகான முகம் இன்னும் சுடர் விட்டுப் பிரகாசித்தது. அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஒரு பெண். . அவர் அழகிலும் அவர் இசையிலும் மனதைப்பறிக்கொடுத்த அவள் அவரது பஜனை சத்தம் கேட்டு அந்தப்பக்கம் நடந்து வந்தாள். அவரது சாந்த முகம் அவளை மேலும் கவர்ந்தது. அவரையே ரசித்தபடி காம இச்சையினால் அங்கேயே  அவர் எப்போது கண் திறந்து  பார்ப்பார் என்று பொறுமையாக அமர்ந்திருந்தாள். கொஞ்சநேரம் கழிந்தது அவர் தன்  கண்களைத் திறந்தார்.  எதிரில் ஒரு பெண் அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவருக்கு அவள் ருக்மிணியாகத்  தென்பட அப்படியே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

    “என்ன ரகுமாயி ஏன் நீங்கள் தனியாக வந்திருக்கிறீர்கள்? என் விட்டல் வரவில்லையா,  என் விட்டல் எங்கே? “என்றுப் பல கேள்விகளை அடுக்கினார். அந்தப்பெண்ணின் கண்கள் திறந்தன. தன் நிலையைக்கண்டு வெட்கத்தில் தலை குனிந்தாள். அப்படியே அவரை நமஸ்கரித்து “நான் தவறான எண்ணத்தில் இங்கு வந்தேன். என்னை மன்னித்து உங்கள் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர் காலில் விழுந்தாள். அவர் யார் ?   அவர்தான் ஸ்ரீதுகாராம்.

    வைசிய குடும்பத்தில் பிறந்ததால் ஒரு மளிகைக்கடையும் வைத்திருந்தார்.  ஆனால் அதில் லாபம் வரவில்லை. எப்படி லாபம் வரும்? அவர்தான் “ராதா கிருஷ்ண ஹரே”  என்று யார் சொல்லிக்கொண்டு வந்தாலும் இலவசமாகக்    கேட்கும் பொருளைக்கொடுத்துவிடுவாரே!

    விட்டல் மேல் அத்தனை பக்தி. அவரது ஒவ்வொரு மூச்சிலும் விட்டலனே பரவி இருந்தான். அவரது கடை வாசலில் யாராவது சாது வந்தால் போதும் அவரை உள்ளே அழைத்து அவரது வயிறை நிரப்பி அனுப்புவார். அவரது மனைவி பாவம்! கடையிலிருக்கும் பொருட்கள் எல்லாம் இப்படிப் போகிறதே!  குடும்பத்தை எப்படி நடத்துவது என்று   வருத்தப்படுவாள். அவரது கடை பஜனை மண்டபமாக இருக்கும். அவர் கையில் எப்போதும் தம்பூரா இருக்கும் சிலசமயம் பஜனையுடன் நடனமும் ஆடத்தொடங்கிவிடுவார்.

    அவரது தெரு வழியாக எதாவது கூட்டம் பண்டரிபூர் போனால் தானும் சொல்லாமல் கொள்ளாமல் கடையைத்திறந்து போட்டபடி அவர்களுடன் போய்விடுவார். இதுதான் சந்தர்ப்பம் என்று திருடர்களும் பல பொருட்களை திருடிக்கொண்டு போவார்கள்.  இதைப்பற்றிக் கேட்டால், எல்லாம்  விட்டல் பார்த்துக்கொள்வான்..அவனுக்கு எப்படி காப்பாற்ற வேண்டும் என்று தெரியாதா என்று சொல்லிவிடுவார். இதுவே பூரண சமர்ப்பணம் . .

    tukaramதுகாராம் ஶ்ரீ நாமதேவரின் மறு பிறவி என்று கருதப்படுகிறது.   துகாராம்  சிறுவயது முதலே ஹரிகீர்த்தனங்கள் இயற்றி  வந்தார். அவைகளைக் கையில் வீணை மீட்டியபடி  பாடியும் வருவார்.  சில சமயம் காலில்  சலங்கையைக்கட்டிக்கொண்டு நர்த்தனமும்  ஆடுவார்.    அவர்  வாயில்  “விட்டல் விட்டல்” என்ற ஒலி வர  அவ்வளவுதான்  தன்னையே மறந்துவிடுவார். மிகவும் கருணை உள்ளம் கொண்டவராதலால்  ஏழைகளிடத்தில் மிகக்கருணைக்காட்டி தான்யங்களைத் தானம் செய்து விடுவார்.

    எந்தப்பெண்மணியைக்கண்டாலும்  அவருக்கு  ஒரு தாயைப்பார்ப்பது போலவே தோன்றும். அவர்  ஹரிகீர்த்தனங்கள் பாட ஆரம்பித்தாலோ  அந்தப்பண்டரிநாதனைத்தவிர  வேறு சிந்தனை  இருக்காது .  சத்தியம்  தவிர வேறு ஒன்றும் பேசமாட்டார். தன்னிடமிருப்பதை அவர் தானம் செய்தாலும்  தனக்கென்று  ஒன்றும் யாசித்து வாங்கவும்  மாட்டார்.

    வீட்டில் குடும்பம்  சில நேரம் பசியால் வாடும் போது  அவர் கிருஷ்ணலீலையைச்சொல்லி அவர்கள்   மனதை  மாற்றிப் பசியை மறக்கடிக்கச் செய்வார் . . அவர் வீட்டில்  பக்தர்களின்  கூட்டம்  வந்தபடியே இருக்கும். பஜனை நடந்தபடியே இருக்கும் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் அவருக்கு அப்படியே மனப்பாடம் தான். அவர் வாயில் ‘அபங்” என்ற மராட்டிமொழியில் பக்தி சங்கீதம் அடுக்கடுக்காக  வந்த வண்ணம் இருக்கும் . இதனால் பலர் அவரைக்காணச்சென்றனர். அவர் தரிசனத்தினால் நல்ல பலன் கிட்டுவதாகவும் சொன்னதால்  அவரது புகழ் ஓங்கத்தொடங்கியது .

    இவர்  இப்படி அசாத்தியப் புகழைப்பெற்று வந்ததைக்காண இயலாமல்  பொறாமையால் சில பண்டிதர்கள் இவரை நிந்திக்க  ஆரம்பித்தனர்.

    “என்னய்யா  இவன்.  எதாவது சாஸ்திரம் இவனுக்குத்  தெரியுமா? வைசியக்குலத்தில் பிறந்து  ஏதோ பாடல்களைப்புனைகிறான்.   சுதந்திரமாகப்பாடியபடி   இஷ்டபடி   திரிகிறான்”

    “ஆம்!  இவனுக்குலௌகீக  கர்மாக்கள் ஒன்றும் தெரியாது.   எதோ பைத்தியம்  போல் அலைகிறான்.  எதோ அபங்காம்.  அதைப்பாடியபடியே  அலைகிறான் “

    “இவன் எப்படிப்போனால் என்ன? இந்தக்கேடு கெட்ட மக்களும் அவன் பின்னாலேயே சுற்றி  பஜனை செய்கிறார்களே!”

    tukaram2இப்படிப்பல  நிந்தனைகள் அவர் காதிலும் விழுந்ததில்  துகராம்  மிகவும் மனமுடைந்து போனார். பின் ஒரு நிமிடம் யோசித்து  வேகமாக  இந்திராயணி நதிப்பக்கம் நடந்தார். தான் இதுவரையிலும்  எழுதி வைத்த  கீர்த்தனைகள் அடங்கிய புத்தகத்தை  நதியில்  வீசி எறிந்தார்.  எறிந்துவிட்டாரே தவிர மனமெல்லாம்   அந்தப்பாடல்களின் மேலேயே இருந்தது. அவர்  அவைகளை வெறும்  புகழுக்காகவும், பணத்திற்காகவும்   இயற்றவில்லை. எல்லாம் அந்த விட்டலனுக்காகவல்லவா செய்யப்பட்டன. அத்தனைஅபங்குகளும்  அவனுக்காகச் செய்யப்பட்ட  மலர்கள் அல்லவா?  கண்களிருந்து தாரைத்தாரையாக நீர் கொட்டியது.   சாப்பாடும் இறங்கவில்லை, தூக்கமும் வரவில்லை.

    அவரைத்தேடியபடி  அவரது  மனைவி  மக்கள் வந்தனர்.    அவர்களும்  பட்டினி கிடந்தனர். இத்தனை வைபவங்களையும் பார்த்தார் அந்தப் பாண்டுரங்கன். தன் பக்தனின் துக்கத்தைத் தாங்கிக்கொள்வாரா அவர்? தாங்கிக்கொள்ளத்தான் முடியுமா?  கருணாசிந்து அல்லவா அவன்! கிருபாநிதியல்லவா  அவன்! தீனாநாத் அல்லவா  அவன்! நதியில் விழுந்து அலைகளுடன்  ஓடிய அபங்குகள் அடங்கிய புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டார்.

    மறுநாள் ஆதவன் மெல்ல எட்டிப்பார்க்க வானம் அப்படியே  சிவப்பு நிறத்தால் தன்னை அழகுப்படுத்திக்கொண்டது.   காலை வேளை, மரங்களில் குயிலின்  ஒலியும்      காகங்களின் “காகா  கா கா ” சத்தமும்   கேட்க  நடுவே பண்டரிபுர   கோயிலில் நடைத்திறக்க  மெள்ள சுப்ரபாதம் ஒலி வந்துக்கொண்டிருந்தது.  துகராமும் அங்கு வந்து பாண்டுரங்கனின் அழகை அள்ளிப்பெற அவன் முகத்தைப்பார்த்தார். என்ன ஆச்சரியம்!   விட்டலின் தலைமேல்  துகாராமின் அபங்க புத்தகம்  வீற்றிருந்தது. துகாராம் அதனை எடுத்துப்பார்க்க,   சந்தேகமேயில்லை, அதில் இருந்தது அவருடைய கையெழுத்துக்கள் தான்  மனம் நெகிழ “பரந்தாமா  என்னே உன் கருணை? நீரில் வீசியதை நீ எடுத்து எனக்குத் திருப்பிக்கொடுத்திருக்கிறாயே  என் அபங்குகள் உனக்கு அத்தனைப்பிடித்ததா? என் மேல் அத்தனை அன்பா உனக்கு” என்றுக் கதறினார்.

    அவரது அன்புக்கண்ணீரரைப் பார்த்த  பக்தர்களும் அங்குக்கூடிவிட்டனர். இந்த விவரம் பண்டிதர்கள் காதிற்கு எட்டியது. அந்தப் பண்டிதர்களும்  தங்கள் தவறுக்கு துகாராமிடம்  மன்னிப்பு  கேட்டுக்கொண்டார்கள். பலர் அவரைத் தங்கள் குருவாகவும்  சிலர்  தெய்வமாகவும்  ஏற்றுக்கொண்டனர். அவரது அபங்கங்களை சிலர்  கச்சேரியில் பாட ஆரம்பிதிருக்கின்றனர். திரு ஓஸ் அருண், திருமதி அருணா சாயிராம், திருமதி ரஞ்சனி, திருமதி காயத்திரி முதலியவர்கள் இவைகளை பிரபலப்படுத்திவருகின்றனர்.

     

     

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  http://antaryamin.wordpress.com/2010/03/31/the-easy-sadhana-by-sri-swami-chidananda/

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 18

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 18

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 69

    Mukkonakkilikal - 70Mukkonakkilikal - 71

    Mukkonakkilikal - 72

     

     

     

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

     

     

     

     

    Share
  • செல்லக்கிளியே மெல்லப் பேசு…

    – கவிஞர் காவிரிமைந்தன்.

     

    mgr
    வாலி வழங்கிய,  கொடை வள்ளல் எம்.ஜி.ஆருக்கே சமர்ப்பணம் என்ற வரி வரையப்பட்டால் அது சத்திய வாசகமே! கொட்டிக்கவிழ்த்திருக்கிறார் தனது தமிழறிவை! அதுவும் வெற்றி பெற்றுள்ள அனைத்து மெட்டுக்களிலும் தன் தமிழைக் கொடிகட்டிப் பறக்கவிட்டிருக்கிறார் என்பதும் மிகையில்லை!  எத்தகையப் பாடலென்றாலும் எழுதிவிடும் ஆற்றல் இறைவன் இவருக்குத் தந்தது!  தத்தகாரம் போன்ற விவகாரங்களில் இவரது நாடகத்துறை அனுபவம் கைகொடுத்து வந்தது!  தாலாட்டு, காதல், வீரம், சோகம், தத்துவம், கொள்கைப் பாடல்கள் என்று எந்த விதத்திலும் தனது பாடல் வரிகளில் பல்லவி முதலாக தீட்டித்தந்திட இவரென்றும் சளைத்ததில்லை!

    கூர்ந்த மதிநுட்பம், கற்பக விருட்சம் போல் கற்பனா சக்தி, அற்புதமாய் பூத்துவரும் சிந்தனைகள், மக்கள் உள்ளப்பாங்கறிந்த பயிற்சி, தன்னிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை நுண்ணியமாய் கண்டறியும் திறன், அதற்கேற்ப வரிகளை வரைந்து மனக்கண் முன்னே இருந்த ஓவியத்தை நிஜத்தினில் வரவைத்துவிடுகிற தனித்திறம் – இதுதான் வாலி என்று ஒரு விளக்கம் தரலாம்!
    vaaalimsvTMS2mgr-6
    பெற்றால்தான் பிள்ளையா என்கிற திரைப்படத்தில் இடம்பெற்று காற்றில் மிதந்துவரும் தாலாட்டுப் பாடலிது!  மக்கள் திலகத்தின் பண்பட்ட நடிப்பை இப்படத்தில் காணலாம் என்பது பத்திரிக்கைகளின் பதிவாகும்!  டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் குரலில் வரும் தென்பொதிகைக் காற்று!  கவிஞர் வாலி வரைந்தளித்த மென்மையான பாடலிது!  மெல்லிசை மன்னரின் கரங்களில் தவழ்ந்து இன்னும் மெருகேறி நம்மையும் தூங்க வைக்கக் கேட்கலாமே!

    செல்லக்கிளியே மெல்லப் பேசு!
    தென்றல் காற்றே மெல்ல வீசு!

    பிள்ளை உறங்க பாடிடும் பாடல்!  பெற்றவர்கூட  உறங்கிட ஒலிக்கட்டும் நமக்காக!

    http://www.youtube.com/watch?v=fH1ToWpJ6lw
    காணொளி: http://www.youtube.com/watch?v=fH1ToWpJ6lw

     

    படம்: பெற்றால்தான் பிள்ளையா  (1966)
    கவிஞர்: வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    குரல்: டி. எம். எஸ்.

    லுலொல்லொலாயீ…….

    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு
    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு

    தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
    தொடரும் கனவுகள் தொடரட்டுமே
    தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
    தொடரும் கனவுகள் தொடரட்டுமே

    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு
    லுலொல்லொலாயீ…….

    திங்கள் முகம் எடுத்து
    செவ்வாய் இதழ் எடுத்து
    வெள்ளை மலர் சிரிப்பில்
    பிள்ளை வருவான்
    திங்கள் முகம் எடுத்து
    செவ்வாய் இதழ் எடுத்து
    வெள்ளை மலர் சிரிப்பில்
    பிள்ளை வருவான்
    தத்தும் நடை நடக்க
    தண்டை குரல் கொடுக்க
    சித்தம் குளிர வைக்க
    முத்தம் தருவான்

    செல்லக் கிளியே மெல்லப் பேசு
    தென்றல் காற்றே மெல்ல வீசு

    ஆரிரரோ….ஆரிராரோ……ஆரிராரோ….
    ஆரிராரோ……ஆரிரரோ….ஆரிராரோ…..

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “மீனகூர்ம ஏனசிம்ம மாவலி வாமன
    மூணுராம கண்ணனாய் மூண்டேழுந்து -ஆணவம்
    அம்பலம் ஆக அதன்முகத்தில் துப்பிடும்
    சம்பவாமி சொல்கின்ற சேய்”….

     

    An Eternal Child Playing An eternal Game In An Eternal Garden…. Sri Aravindhar….

     

    “சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே,
    எந்தையே ஏகப் பரம்பொருளே, -விந்தையே ,
    தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்,
    சீராக ஆடிடும் சேய்”….

     

    “முரணெனப் பட்டாலும் மூலமே நின்னை,
    வரவழைக்க கேசவ் வழியில், -இரணியன்போல்,
    மல்லுக்(கு) அழைத்திடுவேன், முன்வந்(து) உமிழ்ந்திடுவாய்,
    ஜில்லென்று கீதை ஜலம்”….கிரேசி மோகன் ….

     
    Sambhavami yugey, yugey.
    His every avatara, from the matsya to the Krishna avatara and many more, is to put down arrogance born out of power.

     

    Share
  • நிறமில்லாதொரு

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (30)

    நிறமில்லாதொரு
    (பாடல்)

     

    Paintings of rural indian women - Oil painting (15)

    நிறமில்லாதொரு வெட்டவெளியாய் நீண்டு கிடந்தேன் நான்
    நீ வந்தாய் நிறம் தந்தாய் நிலம் கண்டது வான்!
    வடுவில்லாத வானம்போல வாழ்ந்திருந்தேன் நான்
    நீ கொஞ்சம் விலகும்போது சிவந்து போனது வான்!

    உனக்கும் எனக்கும் உறவுவைத்த ஒருவன் அவனங்கே
    உன்னை என்னை உருகவைக்கும் உயிரின் காதலிங்கே
    எனக்கும் உனக்கும் தொடரும் நெருக்கம் ஏது உரிமையிங்கே
    எல்லாமிருந்தும் ஏதுமில்லை என்ன வாழ்க்கை இங்கே? (நிற)

    உயிரினுள்ளே உயிரின் ஒளியாய்ப் பஞ்சுப் பதம்வைத்தாய்
    உள்ளம் முழுதும் வெள்ளிநிலவை மெள்ள ஏற்றிவைத்தாய்
    அயர்விலாமல் பரிவுகாட்டும் அன்பின் அதிசயமே! உன்னை
    அடைந்தும் அடையா துடையும் குமிழாய் வாழ்க்கை விதிவசமே (நிற)

    முள்ளில் நடக்கும் நமது வாழ்வின் முடிவு தெரியாது! இதை
    மூட்டிவைத்துப் பிரிக்கும் விதியின் மூலம் புரியாது
    இருந்தபோதும் இணைந்துவாழ்வோம் விடியும் காலம் வரும், நம்
    விதியைத் தாண்டி வாழ்க்கை ஒன்றை நமது காதல் தரும் (நிற)

    படத்திற்கு நன்றி

    Share