Blog

  • கோகுலாஷ்டமி வெண்பாக்கள்

     

    கிரேசி மோகன்

    crazy
    கண்ணா நலம்தானா கன்று நலம்தானா
    அண்ணா பலராமன், ஏரார்ந்த -கண்ணி
    யசோதையாள் நந்தகோபன் யாதவரைக் கேட்டு
    விசாரித் ததாக விளம்பு.

    சூப்பிய காலை சுவைத்தபடி ஆலிலையின்
    TOPப்பில் துயிலும் திருமாலே -HAPPY
    பிறந்தநாள் வாழ்த்து பிறவிப் பிணியை
    இறந்தநாள் ஆக்குவாய் இன்று….

    வந்தனம் கேசவா நந்த குமாரனே
    உன்தன மங்கை உடனிருக்க -வந்துநம்
    வீட்டில் எழுந்தருளி ஊட்டியதை உண்டுநான்
    காட்டியக் கீக்கிடத்தில் குந்து…

    இன்று சிறைவந்(து) இரவோ(டு) இரவாய்
    கன்றுகள் மேய்த்திட கோகுலம் -சென்று
    புகுந்தநாள் நாளை முகுந்தனுக்கு நெஞ்சம்
    உகந்தநாள் ராதை உதிப்பு..

    அஷ்டமி ரோகிணியில் ஆயர்தம் பாடியில்
    இஷ்ட இடைச்சியர் இல்லம்போய் -துஷ்டனாய்
    சாமள வண்ணன் சளைக்காது வெண்ணெய்வாய்
    ஆமளவு உண்ண உதிப்பு….

    அய்யர்க்கு நேற்றவன் அய்யங்கார்க்(கு) இன்றவன்
    கையிருப்பு பக்ஷணம் கொள்வதற்கு -மையிருட்டு
    வண்ணனவன் இல்லம் வருவான் தினம்தினம்
    கன்னமிடும் கோல்கைக் கொண்டு….
    கண்ணன் காப்பு
    —————————

    கஷ்டம் கலைந்திடும் நஷ்டம் நகர்ந்திடும்
    இஷ்டம் நமக்கு இணங்கிடும் – அஷ்டமி
    ரோகினியில் தோன்றிய லேகிய வண்ணனின்
    காகநிறக் காலிரெண்டும் காப்பு….
    தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
    வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
    அப்பம் அதிரசம் முப்பழங்கள் அப்பயல்முன்
    கப்பம்நீ கட்டிடக் காப்பு….

    மாதவனை கேசவனை மாலொழிய வந்தவனை
    ஆதவனை ஆயர் அணிவிளக்கை -யாதவனை
    ரோகினி அஷ்டமியாய் ஆகிய கீதையை
    காகீ எனக்கத்தக் காப்பு….

    நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
    கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
    அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
    குப்பம் நுழைந்தவனே காப்பு….

    கட்டு மயிற்பீலி கொண்டை யிலணிந்து
    பட்டுப்பீ தாம்பரம் பூண்டாவை -வெட்ட
    வெளிதனில் மேய்க்க வேய்ங்குழல் ஊதும்
    களிமிகு கண்ணனே காப்பு….

    பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
    விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
    சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
    காயாம்பூ வண்ணனே காப்பு….

    காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
    தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
    அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
    கண்ணனே வேண்டினேன் காப்பு….

    பூதனை மார்பை புசித்தவள் ஆவியை
    வேதனை இன்றி விரட்டியவா -தீதினை
    ஓட்டவும் தர்மம் உயரவும் பாண்டவ
    கூட்டம் பிணைந்தவா காப்பு….

    தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
    சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
    மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
    கீதா உபதேசா காப்பு….

    எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
    புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
    நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்,
    குகனணைந்து ஐவரானோன் காப்பு….

    தீரன் யமுனா தரங்கக் கரையோரன்
    சேரும் இளமாதர் ஜீவான்ம -சோரன்
    அழகில் சுகுமாறன் அன்பில் உபகாரன்
    கழுகில் வரும்நேரம் காப்பு….

    குவலயா பீடத்தின் கொம்பொசித்துக் கம்சன்
    கவலையால் பீடிக்கக் கொன்றோன் – ’அவலையா
    தந்தாய் எடுத்துக்கொள் தோழாயென் செல்வமுன்
    கந்தையைக் கட்டென்றோன்’ காப்பு….

    கூவும் கஜேந்திரனை காத்த புஜேந்திரா
    ஏவிய சக்கரத்தை ஏந்தியவா -காவிய
    பாகவதக் கண்ணா பரந்தாமா நாரணா
    காகவத காகுத்தா காப்பு….

    ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
    நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
    திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
    கருத்தில் கலந்துவளைக் காப்பு….

    உதித்தவா நேற்று மிதித்தவா இன்று
    நதிக்கரை நந்தகோபன் நாட்டை -எதிர்த்ததாய்
    மாமா அனுப்பிய மல்லர் களையன்று
    கோமாளி ஆக்கியவா காப்பு….

    கால்கள் பலநூறு கண்டேனென் வாசலில்
    வால்கள் புடைசூழ வந்தமுகுந்தன்-நூல்போல்
    அணிவகுப்பாய் சென்று அடுக்களை உள்ளில்
    விநியோகம் செய்தான் விருந்து….

    உறியிழுத்தாய் பின்னர் உரலிழுத்தாய் பின்னர்
    மரமிழுத்தாய் பின்னர் மதகில் – அரவிழுத்தாய்
    பின்னர் நகிலிழுத்தாய் பெண்கள் துகிலிழுத்தாய்
    கண்ணா எனையிழுப்பாய் காப்பு….

    சகடா சுரனை சுமந்தா காய
    முகடில் முறித்த முகுந்தா -பகடையில்
    தோற்றவர்க்காய் தேரேறி நூற்றவர் மாய்ந்திட
    கூற்றவனாய் நின்றவனே காப்பு….

    கோடி குருமார்கள் கூறிய வேதாந்தம்
    தேடிப் படித்தும் திருப்தியில்லை -நாடியில்
    ஏதோ அதிருப்தி என்னென்று சொல்வது
    கீதோ பதேசகா காப்பு….

    தரையில் புரளபீ தாம்பர ஆடை
    சுருளும் முடிநுதல் சாய -முரளி
    மனோகரா வந்துன் மதிவதனம் காட்டு
    கனாவரும் நேரத்தில் காப்பு….

    கன்னத்தில் அன்னையிட்ட கண்மை திருஷ்டியது
    வண்ணக் கருமையில் வாடிட -எண்ணற்ற
    இம்சைக்(கு) இடமாகி இன்னல் கடந்தோனே
    கம்சன் மருகோனே காப்பு….

    வையங்கள் ஏழை வயிறார உண்டும்
    ஐயம் மிகக்கொண்டு அய்யனே -கையால்
    பிடித்துக் கமல பதத்தை அன்று
    கடித்துக் களித்தவனே காப்பு….

    நான்மறை ஓதிடும் நான்முகன் வாழ்ந்திடும்
    தாமரை நாபியும், பூமகள் -போய்மறையும்
    சந்தனம், ஸ்ரீவத்ஸம், சாற்றும் திருத்துழாய்யு
    கந்திடும் திண்மார்பும் காப்பு….

    மோதகப் பிள்ளை முழுங்க, பதைபதைத்து
    பீதகப் பட்டாடை பாழாக -காதினை
    கைகளால் பற்றி கரணமிட்(டு) ஆழியை
    கொய்தகோ பாலனே காப்பு….

    தேர்கடவி பாரதப் போர்முடிக்க பார்த்தனின்
    சீர்கெடலை கீதையால் செப்பனிட்டோன், -மோர்குடத்தை
    கல்லால் உடைத்தன்று கோபியர் கோபத்திற்க்
    குள்ளான கண்ணனே காப்பு….

    சாக்கிரதை யாக சகாக்களுடன் சென்றாயர்
    தூக்கிலிட்ட வெண்ணை திருடியுண்ட -போக்கிரிப்
    பையனே பேய்மழைக்குப் பர்வதம் தாங்கியக்
    கையனே கண்ணனே காப்பு….கிரேசி மோகன்….

    படத்திற்கு நன்றி : கேசவ்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 132

    மலர் சபா

     

    மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

    கூத்து உள்படுதல்
    2b
    அழகிய பொன்னால் செய்த பரல்களையுடைய
    சிலம்பும் வளையும் மேகலையும் ஒலித்து நிற்க
    வஞ்சம் புரிகின்ற வாள்தொழில் செய்யும்
    அசுரர்கள் அழியும் வண்ணம்
    கொற்றவையாகிய நீ
    மரக்கால் மீது நின்று
    கூத்தாடினாய் போலும்!

    அவ்வாறு அசுரர்களை அழிக்க
    மரக்கால் மீது நின்று
    நீ வாள் கொண்டு ஆடும் வேளையில்
    உன்னுடைய காயாம்பூ மேனியைப் போற்றித்
    தேவர்கள் தம் கைகளால் சொரியும் மலர்கள்
    மழை போல் காணப்படும் போலும்!

    வெட்சி

    பகைவரும் அச்சப்படும் சிற்றூர் ஒன்றிலுள்ள
    ஒப்பற்ற வீரன் ஒருவன்
    ஆநிரை கவரச் செல்லும் உரிய காலைப் பொழுதில்
    அப்போர்க்கு வெட்சி மாலை சூடுவதற்கு
    வெள்ளிய வாள் ஏந்திய
    கொற்றவையாகிய உழத்தியின் துணை
    வேண்டும் போலும்!

    அவ்வாறு வெள்ளிய வாள் ஏந்தி
    கொற்றவையாகிய உழத்தி வரும் போது,
    பகைவர் ஊரைச் சேர்ந்த காட்டில் உள்ள
    கருங்குருவி ஒன்று
    அவர்கள் பின்னால் வந்து
    பின்னர் வரக்கூடிய கேட்டினை
    முன்னரே அறிவிக்கும் போலும்!

    வெட்சிப் புறநடை

    கள் விற்பவள் பழங்கடன் கொடுக்காதவனுக்குக்
    கள் கொடுக்க மறுக்க
    அதனைப் பொறுக்காத வீரன்
    வில்லினை ஏந்தி,
    பறவை பின்னால் வர
    ஆநிரை கவர எண்ணிச் செல்வான்.

    அங்ஙனம் பறவை பின் தொடரச்
    செல்லும் வேளையில்,
    சிங்கக் கொடியைக் கையில் கொண்டு
    கொற்றவையும் முன் செல்வாள் போலும்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    “இளங்கன்று இறையறியாது”
    ————————————-

    crazy

    “மூடநெய் பெய்யும், முழங்கை வழித்துண்டு,
    மாடுமை வண்ணனை மேய்ந்திட, -ஒடிவந்த,
    கன்று பொறாமையில், “கோனாரைக் கொஞ்சுதலேன்,
    நன்றா!” எனவிறைப்பாய் நின்று”….கிரேசி மோகன்….

    crazy1

    மாட்டிக்கிட் டான்மாட்டுக், கிட்டக்’கிட் டானி’ன்று,
    போட்டக் குளம்படியில்: ,பாரத -ஆட்டத்தில்,
    பாண்டவன் சேயை பரிதவிக்க விட்டாயே!,
    வேண்டும்கட் டிக்கவேண்டும் வேணு’’….கிரேசி மோகன்….

    கிட்டான் -செல்லமாகக் கண்ணன்….
    பாண்டவன் சேய்-அபிமன்யு பத்ம வியூகத்தில் அகப்பட்டுக்கொண்டது….

    Share
  • ஒரு ரயில் பயணத்தில்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (26)

     

    ஒரு ரயில் பயணத்தில்….

    {கேட்டு மகிழ}

    10301055_285979498239973_6877421676757917975_n

    தூசு, சத்தம், துர்நாற்றம்
    கூட்டம், குப்பை, தள்ளாட்டம்
    ஈசல் பறக்கும் நெஞ்சங்கள்
    ஈக்கள் மொய்க்கும் வியாபாரம்

    ஓசை மிகுந்த குலுக்கலிலே
    தூளிக் குழந்தை அயர்கிறது
    நேசம் நெருக்கம் இவையெல்லாம்
    பேசும் குரலில் மிளிர்கிறது

    இறங்குவ தொன்றே நினைத்தபடி
    இதையும் அதையும் செய்கின்றார்
    இறங்கி விடாத பண்டத்தை
    ஏனோ விரும்பித் தின்கின்றார்

    இடிக்கக் கூட முடியாமல்
    இத்தனை நெரிசல் ரயிலில்தான்
    புழுதி விசிறும் வெய்யிலிலும்
    பொறுமை காப்பது இந்தியர்தான்

    இத்தனை நெருக்கடி மத்தியிலும்
    இருக்கையில் எழுந்து நின்றபடி
    சித்திர நடனம் செய்கின்ற
    சிறுமியை வியந்து பார்க்கின்றேன்!

    வேரில்லாத பேச்சுக்கள்
    வேடங் காட்டும் வீச்சுக்கள்
    யாரென் றிலக்கே இல்லாமல்
    வீசப் படுகிற ஏச்சுக்கள்

    சாமியாடும் சில தலைகள்
    சதா பேசும் சில தலைகள்
    சாமரம் போடும் சில தலைகள்
    தளைகள் மண்டிக் கிடக்கும் தலைகள்…

    சுமையை
    இறக்கி வைப்பார் சிலர்
    ஏற்றி வைப்பார் சிலர்
    ஏற்றவும் இறக்கவும் மனமின்றி
    சுமந்து சுமையாய்ச் சிலர்…

    நாற்றம் பிடித்த கழிவறைகளுக்கு
    நடுவே
    டோக்கன் போடும் பக்தனாக
    நின்றபடி
    துப்பல் தேசத்தின் தொண்டர் குழாத்தின்
    தூரிகை லாகவம் பார்த்தபடி
    அத்தனை கூட்டத்திலும் நாற்றத்திலும்
    அவசரத்திலும்
    அவுக் அவுக்கென்று பிரியாணியை
    அள்ளிப் போட்டுக் கொள்பவரையும்
    ரசித்தபடி

    பொருள்களோடு பொருட்டின்றி
    நின்று கொண்டிருக்கின்றேன்…

    எப்படி என்னால் முடிந்தது?

    இப்போது
    உன் பத்து விரல்களும்
    என் கன்னத்தைப்
    பற்றிக்கொண்டால்
    எப்படி இருக்குமென்று பாவித்தேன்

    நனவின் நடப்பை
    கனவுத் துடுப்பால்தானே
    கடக்க வேண்டும்?!

     

     

     

    Share
  • ஜெயிச்சிட்டே! கண்ணா நீ ஜெயிச்சிட்டே! – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    வழக்கமான சினிமாப் பாடல்தான்! ஒரு பாத்திரம் பேசுவதற்கு பதிலாக பாடுகிறது! பாடல் வரிகள் மட்டும் அந்தக் கதாப் பாத்திரத்தையும் மீறி வாழ்க்கையின் கீதையை நமக்குக் காட்டுகிறது! வேதாந்தம் புரிகிறது! ஆதி அந்தங்கள் தெளிவாகிறது! மனிதன் கடவுளை உணருகிறான்! அந்த உணர்வைத்தான் பாடலை வடித்துள்ளார் கவிஞர் வாலி!

    ஜெயிச்சிட்டே! கண்ணா நீ ஜெயிச்சிட்டே!kaviri
    திறந்துட்டே கண்ணை திறந்துட்டே
    உன்னிடத்தில் தோற்றதில் வெற்றி எனக்கு
    என்னை தெளிய வைத்தாய் தன்னை புரிய வைத்தாய்
    என் நன்றி உனக்கு .
    …………………..
    தன்னை அறிந்தவர்க்கு தானாகி நிற்பவனே..
    என்னை அறிந்து கொண்டேன்.. மன்னனே..
    எனக்கு கீதை எடுத்துரைத்த கண்ணனே!
    ஜெயிச்சிட்டே! கண்ணா நீ ஜெயிச்சிட்டே!

    எட்டடுக்கு கட்டிடத்தில் எத்தனை ஓட்டை..
    இதில் நல்ல ரத்தம் உள்ளமட்டும் எத்தனை சேட்டை
    ……………..
    கொண்டு வந்ததென்ன கொண்டு செல்வதென்ன
    ஒன்றுமில்லையே முடிவிலே
    இதை உணர்ந்த பிள்ளை உன் மடியிலே!

    ‘கலியுகக் கண்ணன்’ திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் அவர்கள் கதாநாயகனாக தோன்றி திரையில் நடித்த காட்சியும் வி. குமார் அவர்கள் வழங்கியிருக்கும் கம்பீர நாட்டையிது!!

    1aகண்ணனைப் பற்றித் தொடங்கும் பாடல்! வாழ்க்கைத் தத்துவங்கள் கொட்டிக்கிடக்கிறது! இது கவிஞர் கண்ணதாசன் பாடல் என்றே எண்ணியிருந்தேன்.. வரிகளில் உள்ள அர்த்தபுஷ்பங்கள் அப்படி எண்ண வைத்தன. ஒரு முறை கவிஞர் வாலி அவர்களைச் சந்தித்து உரையாடியபோது அவரிடமே.. இப்பாடல் பற்றி கேட்டேன். அப்போது ஆம். நான் எழுதிய பாடல் என்றார். நான் நம்பவில்லை.. அவருடன் வாதம் செய்தேன்.

    அப்போது கிடைத்த தகவல்கள் என்னை அதிர வைத்தன. இந்தப் படம் கவிஞர் வாலி அவர்கள் இதில் பாடல்கள் தவிர வசனமும் அவரே எழுதியதும் அறிந்து வியந்து போனேன். 1974ல் வெளிவந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 18, 2014

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் அவர்கள்

    Mohanarangan Srirangam

     

    ஆன்மிக சிந்தனையாளர் திரு. மோகனரங்கன் அவர்கள் பரந்துபட்ட பல ஆன்மிக நூல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவர்.  அவ்வாறு தான் படித்ததைப்  படித்தவாறே ஏற்றுக் கொள்ளாது அவற்றை  வெவ்வேறு கோணங்களில் ஆராய்பவரும் கூட. சிந்தனையின்  முடிவில் அவர்கொண்ட கருத்துகள் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கு  மாறுபட்ட கோணத்தில் இருந்தாலும் அவற்றைப் பிரதிபலிப்பதில் சற்றும் தயக்கம் காட்டாதவர்.  இந்தப் பிரதிபலிப்பின் நீட்சியாக, தொடர்ந்து இவரது எழுத்தைப் படிப்பவர்களும் சிந்திக்கத் தூண்டப் படுகிறார்கள்.  தனது எழுத்தின் மூலம் வாசகர்களின் ஆன்மிக சிந்தனைக்கு வினையூக்கியாக இருக்கும் மோகனரங்கன் அவர்கள்  இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார். இவரது ஆன்மிக சிந்தனைகளின் பிரதிபலிப்பை வியந்து இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் வாசகர் முனைவர் ராஜம் அவர்கள்.

    சென்னை வங்கி ஒன்றில்  பணிபுரியும்  திரு. மோகனரங்கன் திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்தவர். மிக இளம் வயதிலேயே இலக்கியம், தத்துவம், இறையியல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர், அத்துடன்  வரம்பற்ற வாசிக்கும் பழக்கமும் கொண்டவர்.  ஆன்மிக சிந்தனையாளர்கள் ராமகிருஷ்ணர், ரமணர், விவேகானந்தர் என்று ஒரு பக்கமும், நாத்திக சிந்தனையாளர் அயன் ரேண்ட் பற்றியும் தத்துவ மேதை அரிஸ்டாட்டில் பற்றி மறுபக்கமும் ஆர்வத்துடன் படிப்பவர்.  அதேபோலத்தான் இலக்கியத்திலும் இவரது ஆர்வம் பல துறைகளையும் தொட்டுச் செல்லும்.  தமிழிலக்கியத்தில் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள்  என்ற வைணவ இலக்கியங்களையும், பெரிய புராணம் போன்ற  சைவ இலக்கியங்களையும் ஒரு சேர படிப்பவர்.  விக்டர் ஹ்யூகோ பற்றியும் விளக்கம் தருகிறாரே இவர் என்று வியந்தால்  அக்கால ஸ்ரீ  ராமானுஜர் தத்துவங்களைப் பற்றியும்  இக்கால அக்னிஹோத்ரம் ஸ்ரீராமானுஜ தாதாசாரியார் பற்றியும் விரிவுரை வழங்குவார்.  பொருளாதாரக் கொள்கை , கம்யூனிசக் கொள்கை  …இல்லை…இல்லை இவற்றையும் இவர் விட்டு வைத்ததில்லை. பலநூல் படிப்பும் அவற்றை ஒப்பிட்டு ஆராயும் பாங்கும் இவரது சிந்தனையை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் குடத்திலிட்ட விளக்காக தான் அறிந்து கொண்டதை மறைத்துவிடாமல் குன்றிலிட்ட விளக்கொளி போல பலர் பயன்பெற தனது பதிவுகள் மூலம் பகிர்ந்து கொள்வது இவரது சிறப்பு.

    இதற்குக் காரணம் “படிப்புதான் உண்மையான யோகம்”என்று இவர் கொண்டுள்ள கருத்தாகும்.  அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே …

    “நீ உண்மையிலேயே உயர வேண்டுமா?

    இந்த வாழ்க்கையில், புறச் சாதனைகளில், அகச் சாதனைகளில், ஆன்மிகத்தில் – எதில் நீ உயர வேண்டும், உன்னை நீ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று உண்மையாக, மனசார நீ விரும்பினால் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள் – படிப்பது தவிற வேறு மார்க்கம் இல்லை.

    எதைப் படிப்பது என்று கேட்காதே. உனக்கு முக்கியம் என்று படுகிற துறை யாதாயினும் சரி. அதில் ஊரானை, அவன் பெரும் மகாமுனிவனாகவே இருக்கட்டும், நம்பி அவன் வாயைப் பார்த்துக்கொண்டு நிற்காதே.”  

    குறிப்பாக ஆன்மிக நூல்களைப் படிப்பவர்களுக்கு இவரது சிந்தனை மற்றொரு கோணத்தைக் காட்டும் என்பதை கீழ்வரும் கட்டுரையின் பகுதி வெளிப்படுத்துகிறது …

    “கற்றலும் நம்பிக்கையும்
    பழைய மரபுகளைப் பற்றி ஆர்வம் கொண்டு அதைக் கற்பவர்கள் கட்டாயமாக அந்த மரபுகளைத் தம் வாழ்நெறியாகத்தான் கொண்டிருக்க வேண்டும் என்பது இல்லை.பண்டைய நெறிகளைக் கற்று அறியும் ஆர்வம்தான் போதிய காரணம். ஆனால் பழம் மரபுகளில் பெரும் நம்பிக்கை கொண்டு அவற்றைத் தம் வாழ் நெறியாகவே கொள்பவர்கள் அறிவதற்காக மட்டும் அந்த மரபுகளில் தோய்வது இல்லை. அந்த மரபு சார்ந்த நெறிகள் சொல்லும் உலகம் அப்படிப்பட்ட நம்பிக்கையாளர்களுக்கு இன்றும் உண்மையான ஓர் உலகமாக ஒரே உலகமாகப் போய் விடுகிறது. அந்த மரபு சொல்லும் உலகக் கோட்பாடுதான் ‘தி உண்மை’ என்ற கடும் கருதல் விரதத்திற்குத் தங்களை ஈடு கொடுத்துவிடுகின்றனர். அப்படி, சொல் செயல், மனம் எல்லாவற்றையும் ஒரு நெறியில் காவு கொடுத்து, அதில் தன்னையே இழக்கும் வெறியான மனப்பான்மைக்குத்தான் பண்டைய நெறிகள் பெரும்பான்மையும் நம்பிக்கையாளர்களை மறைமுகமாகவோ நேரடியான ஆணைகள் மூலமாகவோ ஊக்குவிக்கின்றன. எனவே ஒரு நம்பிக்கையாளராக மத மரபுக் கருத்துகளைப் பயில்வோர் ஒரு விதத்தில் Probation for religious exclusivism if not fanaticism என்ற நிலையில் தம்மைப் பெய்து விடுகின்றனர்.

    விவேகாநந்தரின் கருத்துகள் பற்றிய விமரிசனம்சத்சங்க மஹிமை, சமய நெறிகளும் சமரஸ வாதமும், எது பக்தி? தற்கால ஆன்மிகம், நாத்திகம் பரவ வேண்டும் என்று ஆன்மிக சிந்தனையைப் பல கோணங்களில் ஆராயும் இவர் தொடர்ந்து தனது எழுத்துக்கள் மூலம் வலியுறுத்துவது  “சிந்தனை செய்ய…”

    “அகல்யா கற்பிழந்தாள் என்ற அபத்தக் கதை” என்ற பதிவில்…

    அகல்யாவின் கற்பிழத்தலைப் பற்றி காலம் நெடுக பேசுகிறார்கள். யாராவது காட்டில் இருந்த வேறொரு முனிவரிடமோ, அல்லது அரசன் ஒருவனிடமோ, அல்லது ரிஷி குமாரன் ஒருவரிடமோ உறவு கொண்டிருந்து அதனால் அவளுக்கு இந்தப் பெயர் என்றாலும் புரிந்து கொள்ளலாம். ஆனால் இங்கு இந்திரனிடம் கற்பு இழந்தாள் என்று கூறப்படுகிறது.

    அதையே தாருக வனத்தில் நிர்வாணமாகச் சிவபெருமான் சென்று ரிஷி பத்தினிகளை மயங்கச் செய்தது உயர்ந்த தத்வார்த்தமான ஒன்றின் ஸிம்பாலிஸமாகப் பார்க்கப் படுகிறது.

    கோபியரின் காதலும் கண்ணனிடத்தில் ஈடுபாடும் உயர்ந்த பக்திநிலையைக் குறிக்கும் அவஸ்தைகளாகப் பார்க்கப் படுகிறது.

    அனைவரும் தேவர்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்களே.

    ஆனால் அகல்யாவின் விஷயத்தில் ஏன் அது ‘கற்பிழந்தாள்’ என்று பெரும் மானக்கேடாகச் சித்திரிக்கப்பட வேண்டும்?

    அரசனிடமோ, முனிவனிடமோ, வேறு மானிடர் யாரிடமோ உறவு என்றால் இந்தக் களங்கக் குற்றம் புரிந்துகொள்ள முடியும்.

     “இங்கு உறவு என்பது அந்தக் காலத்தில் கடவுள் என்று கருதப்பட்ட, மானிட மெய்மை அல்லாத ஒரு தத்துவ வடிவினால் ஆய உருவத்திடம்தானே!”

    மற்ற உதாரணங்களில் எல்லாம், தத்வார்த்தமாக ஸிம்பாலிஸம் என்றால் அகல்யா விஷயத்தில் மட்டும் அது அப்படியே காமத்தனமான நடவடிக்கை ஆகிவிடுகிறதா?

    சிந்தனை செய் மனமே!

    […]

    இந்த அபத்தக் கதைகளின் ஆரம்பகால நோக்கமே ஒரு பக்தி நெறி தலைதூக்கி முன்னிருந்த பக்தி நெறியொன்றை வழ்க்கத்திலிருது நீக்கியிருக்கிறது என்பதில்தான் நிறைவேறியிருக்கிறது.

    எவ்வளவு காலம்! காலம் காலமாக நம் நாட்டுப் பண்டிதர்களும், அறிவு ஜீவிகளும், தற்கால எழுத்தாளர் பிரம்மாக்களும் கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்களோ!

    “நாத்திகம் பரவ வேண்டும்” என்ற சிந்தனை நோக்கில் இவர் முன்னிறுத்தும் கருத்துக்கள்,  மதங்கள் மக்களின் சிந்தனையை முடக்குவதால் மாற்றுவழி தேவை என்ற நோக்கில் வைக்கப்படுகிறது…

    மிகவும் ஆழ்ந்து நோக்கினால் மனிதர்களின் இயல்பான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் குந்தகமும் தடையும் விளைவிப்பனவாய் இருக்கின்றன மதங்கள். அதுவும் ஹிந்து மத சமுதாயத்தைப் புனரமைப்பது, சீர்திருத்துவது என்பதெல்லாம் ஒருவர் தம்மைத்தாமே தற்காலிகமாக ஏமாற்றிக் கொள்ளும் வேலை என்றுதான் படுகிறது. ஹிந்து மதத்தை விட்டுப் பிரிந்து தனி மதமாக ஸ்ரீராமகிருஷ்ணர் காட்டிய மார்க்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று சில காலங்களின் முன்பு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவியர் சிலர் முயற்சி செய்ததைப் பற்றிக் கடும் விமரிசன எண்ணத்தை முன்னரெல்லாம் கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் விரும்பியதிலும் ஒரு காரணமும் நியாயமும் இருப்பதை இப்பொழுது உணர்கிறேன். அவர்களைப் பற்றிய விமரிசன எண்ணம் எனக்கு மாறிவிட்டது (Posted: August 9 at 11:43pm)
    https://www.facebook.com/mohanarangan.srirangamv/posts/969343329749350

    எப்படிப்பட்ட தன்மை உள்ள செய்கைகளையும், கருத்துகளையும் பற்றி, தம்மளவில் நல்ல மனிதர்கள் கூட, உள்ளத்தின் அதிர்வுகளுக்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்ளத்த தகுந்த வழியில் மனசாட்சியை மழுங்க அடித்துவிடும் கலையை மத நம்பிக்கைகள் பயிற்றுவிக்கும் (August 9 at 10:57pm)
    https://www.facebook.com/mohanarangan.srirangamv/posts/969328769750806

    ஆன்மிகம் தவிர்த்து பொருளாதார  சித்தாந்தங்கள் பற்றியும் ‘உபரி மதிப்பு’ கட்டுரையில் இவர் சிந்திக்கும் கோணம்…

    “இந்தியாவில்    ஒரு  மணி  நேரம்   ஒருவர்   உழைக்கிறார்.   அதற்கு    ஒரு  மதிப்பு  நிர்ணயமாகிறது.     அதே  நேரம்  அதே  உழைப்பு   அவர்    வேறு  ஒரு  நாட்டில்    செய்தால்     பலமடங்கு    மதிப்பு    பெற முடிகிறது.    அப்பொழுது     உழைப்புக்கான  உரிய  மதிப்பை    முடிவு  செய்வது   எது?     சந்தையின்    தேவை   என்பதுதானே      அனைத்து  மதிப்புகளையும்   நிணயிக்கும்     மூலம்.     சந்தையின்   தேவை    நிர்ணயித்துத்    தரும்    மதிப்பு    உழைப்புக்கு  வந்தடையாமல்    போக   இடைப்பட்ட    தடங்கல்கள்    ஏற்படலாம்.  அப்பொழுது    அந்தத்   தடங்கல்களை     சமாளித்து    உரிய  மதிப்பைப்  பெற்றுத்தரவும்,    எதிர்காலத்தில்   தடங்கல்கள்   ஏற்படாதவாறு   பார்த்துக்கொள்ளவும்     உழைப்பவரின்  ஒருங்கிணைந்த    அமைப்பு     அவசியம்  இல்லையா?”       

    மோகனரங்கன்  ஒரு சிறந்த கவிஞரும் கூட.  உணர்வின் உயிர்ப்பு, காற்றுகளின் குரல் என்ற கவிதை நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.  காற்றுகளின் குரல் கவிதை நூலில்    4000 கி மு விலிருந்து இன்றுவரை, சுமார் 25 நாடுகளிலிருந்து நூறு கவிதைகளை  மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    கட்டளைக் கலித்துறையில் பாடல்கள், சங்கத்தமிழ்  கவிதைகளை ஒத்த கவிதைகள் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார்.

    “If you have knowledge, let others light their candles in it” என்றும் “Sharing will enrich everyone with more knowledge” ஆங்கிலப் பொன்மொழிகளுண்டு.  அதற்கொப்ப தான் அறிந்து கொண்டதை, தான் சிந்தித்த ஆன்மிகத்தின் மாறுபட்ட கோணத்தை தனது பதிவுகளின் மூலம் வழங்கிவரும் மோகனரங்கன் அவரது சிந்தனையைத் தூண்டும் எழுத்துகளுக்காகப் பாரட்டப்பட வேண்டியவர். இவ்வாரத்தின் வல்லமையாளராக மோகனரங்கன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    மோகனரங்கனை “அரங்கனார்” என்றும் அன்புடன் சிலர் அழைப்பதுண்டு…வல்லமை மின்னிதழில் கட்டுரைகள் எழுதியுள்ள இவர் கூகிள் குழுமங்களில்; குறிப்பாக வல்லமை கூகிள் குழுமத்திலும், தனது பேஸ்புக் பக்கத்திலும் எழுதி வருகிறார்.  இவர் எழுத்துக்களை  படிக்க விரும்பினால் …

    இடம் பிடிக்க வேண்டுமெனில்
    வடம்பிடிக்க வாருங்கள்
    “அரங்கன்” தேர் அசைகிறது …

    (இவரது  “உணர்வின் உயிர்ப்பு”, என்ற கவிதை நூலில் உள்ள “கவி தைத் தேர்” என்ற கவிதையில் வரும் வரிகள் இவை.  தமிழினி, நவம்பர் 2002, பக்கம் 27 )

    https://www.facebook.com/mohanarangan.srirangamv
    http://thiruvarangan.blogspot.in/

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share
  • அர்ச்சனை -3

    –சு.கோதண்டராமன்.

    அர்ச்சனை
    சாமி, ஒரு அர்ச்சனை பண்ணணுங்க.

    சரி, பேரு நட்சத்திரம் சொல்லுங்கோ.

    அசுவினி நட்சத்திரம், ஆறுமுகம்,

    அஸ்வினி நக்ஷத்ரே மேஷராசௌ ஜாதஸ்ய ஆறுமுகம் நாமதேயஸ்ய…

    பரணி நட்சத்திரம் பானுமதி,

    பரணி நக்ஷத்ரே மேஷராசௌ ஜாதாயாஹா பானுமதி நாம்யாஹா…

    கார்த்திகை  கந்தவேலு,

    க்ருத்திகா நக்ஷத்ரே ரிஷப ராசௌ ஜாதஸ்ய கந்தவேலு நாமதேயஸ்ய…

    ரோகிணி ருக்மிணி,

    ரோஹிணி நக்ஷத்ரே ரிஷப ராசௌ ஜாதாயாஹா ருக்மிணி நாம்யாஹா…

    மிருகசீரிஷம் மின்னல்கொடி,

    மிருகசீர்ஷ நக்ஷத்ரே மிதுன ராசௌ ஜாதாயாஹா மின்னல்கொடி நாம்யாஹா…

    ……………………

    ………………….

    …………………..

    …………………….

    ரேவதி ரீட்டா,

    ரேவதி நக்ஷத்ரே மீன ராசௌ ஜாதாயாஹா ரீட்டா நாம்யாஹா…

    ஏங்க, எங்க அண்ணனோட சின்னப் பையன் பேரு சொல்லல்லியே?

    இதோ சொல்லிடறேன்,…….. விசாகம் வீராசாமி,

    விசாக நக்ஷத்ரே வ்ருச்சிக ராசௌ ஜாதஸ்ய வீராசாமி நாமதேயஸ்ய…

    நம்ம பொண்ணோட கொழுந்தனார் ஓர்ப்படியா பேரு சொல்லிட்டிங்களா?

    அவங்க என்ன நட்சத்திரம்?

    அவரு பூசம், அவளுக்கு அஸ்தம்

    பூசம் புண்ணியமூர்த்தி,

    பூச நக்ஷத்ரே கடக ராசௌ ஜாதஸ்ய புண்யமூர்த்தி  நாமதேயஸ்ய…

    அஸ்தம் அம்சவல்லி,

    ஹஸ்த நக்ஷத்ரே கன்யா ராசௌ ஜாதாயாஹா அம்சவல்லி நாம்யாஹா,…..  அவ்வளவு தானா இன்னும் இருக்கா?

    அவ்வளவு தாங்க.

    ஸஹகுடும்பானாம் க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்யாணாம் அபிவிருத்யர்த்தம் பரமேச்வர பாதகமலயோஹோ அஷ்டோத்ர சதநாமார்ச்சனாம் கரிஷ்யே.

    ****

    டிர்ரிங், டிர்ரிங்

    ஹலோ

    …..

    அப்படியா ரொம்ப சந்தோஷம். நாங்க இங்கே கோயில்லே தான் இருக்கோம், செஞ்சுடறேன்.

    சாமி, அர்ச்சனையிலே ஒரு பேரு விட்டுப் போச்சுங்க

    சங்கல்பத்துக்கெல்லாம் பின் இணைப்பு போட முடியாது ஐயா. அம்பது பேரு சொன்னீங்க இதையும் அப்பவே சேர்த்து சொல்லி இருக்கலாமே.

    இல்லீங்க, இப்பத் தான் மருமகளுக்கு பிரசவம் ஆச்சு, ஃபோன் வந்திச்சு.

    சரி, தேங்கா பழம் அர்ச்சனை சீட்டு வாங்கிட்டு வாங்க. இன்னொரு அர்ச்சனை குழந்தைக்குன்னு தனியாப் பண்ணிடலாம்.

    இந்தக் கொளந்தை பத்து நிமிசம் முன்னாடி பொறந்திருக்கப்படாதா? பொறக்கும்போதே செலவு வெச்சிட்டு வருதே.

     

    படம் உதவிக்கு நன்றி:  http://dhineshmaya.blogspot.com/2010/08/blog-post_1428.html

    Share
  • வடு

    கே.எஸ்.சுதாகர்

    சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தற்செயலாகத்தான் அவரைக் கண்டேன். தன்னந் தனியாக ஒரு மேசையில் அமர்ந்திருந்தார். வழுக்கைத் தலை, வெள்ளை வெளேரென்ற ஆடைக்குள் புதைந்திருக்கும் தளர்ந்த உடல். முகத்தில்கூட சுருக்கங்கள் விழுந்து விட்டன. மூக்குக் கண்ணாடியினூடாக மேசையை உற்றுப் பார்த்தபடி இருந்தார்.

    அவரை எங்கேயோ பார்த்திருப்பதாக மனம் சொன்னது.

    வர்ண ஜால விளக்குகளின்கீழ், வட்ட வட்ட ரேபிள்களில், ஆண்களும் பெண்களுமாகச் சுற்றிச் சூழ இருந்து உணவருந்தும் அந்த ரம்மியமான காட்சியிலிருந்து அவரது ரேபிள் வேறுபட்டுக் காணப்பட்டது. அவர் ஏன் அப்படித் தனித்துப் போனார்?

    “அட தயாளன்! என்ன அவரையே உற்றுப் பார்த்தபடி இருக்கிறாய்? ஆர் எண்டு தெரியுதா?” என்றபடி குணசேகரன் என்னை நோக்கி வந்தான். குணசேகரன் மணப்பெண்ணின் அண்ணன். என்னுடன் பாடசாலையில் ஒன்றாகப் படித்தவன். அவனுக்காகத்தான் நான் கடல் கடந்து, அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கே வந்திருக்கின்றேன்.

    “எங்கட இரத்தினசிங்கம் மாஸ்ரடா!”

    இரத்தினசிங்கம் மாஸ்டர்!

    ஒரு காலத்தில் எப்படிக் கொடிகட்டிப் பறந்தவர். அந்த ஒரு சம்பவத்தின் பின்பு, எல்லோருக்கும் வேண்டாதவராகிப் போய் விட்டார்.

    “பூச்சி இருந்திருந்தானெண்டா – இப்ப எங்களைப் போல – குழந்தை குட்டியளோடை நல்லா இருந்திருப்பான். என்ன குணம்?”

    “நடந்து முடிஞ்சதுகளைப் பற்றிக் கதைச்சு இனிப் பிரயோசனம் இல்லை. நீ வடிவாச் சாப்பிடு தயாளன். சாப்பிட்ட பிறகு ஒருக்கா மாஸ்டரோடையும் போய்க் கதை!” மறப்பதும் மன்னிப்பதும் மனிதகுணம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டு அடுத்த ரேபிளுக்குத் தாவினான் குணசேகரன்.

    ********  *********  ********

    அப்பொழுது நாங்கள் நாலாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தோம். இரத்தினசிங்கம் மாஸ்டர் பாடசாலையில் மிகவும் பொல்லாதவர். எங்களுக்கு சமூகக்கல்வி பாடம் படிப்பிப்பார். அவர் மூக்குப்பொடி போடும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் பயமாக இருக்கும். இரண்டு மூக்கின் துவாரங்களையும் அகல விரித்து ‘ம்’ என்று ஒரே இழுவையாக பொடியை உள்ளே இழுப்பார். பன்றியள் மூக்கை விரித்தால் போல் இரண்டு கறுப்பு வட்டங்கள் விரிந்து சுருங்கும்.

    இரத்தினசிங்கம் மாஸ்டரின் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வருவது மிகவும் அருமை. அநேகமாக அவரின் எல்லா வகுப்புகளின் போதும் பயந்தபடியே காலத்தைக் கழித்தோம்.

    பள்ளிக்கூடத்தின் ஒருபக்க வேலியை மருவியபடி இருக்கும் பாதையில் இருந்துதான் பூச்சி வருவான். அவனும் அவனது நான்கு சகோதரர்களும் வயதுக்கேற்ற உருவங்களில் ஏழ்மையின் அவலம் தெரிய அணிவகுத்து வருவார்கள். சிலவேளைகளில் அவர்களுடன் தந்தையாரும் சைக்கிளை உருட்டிக் கொண்டு கூட வருவார். சைக்கிள் கரியரில் மண்வெட்டி, புல்லு செதுக்கும் உழவாரம், கடகம் என்பவை ஒய்யாரமாக வீற்றிருக்கும்.

    செல்வகுமாரனுக்கு ‘பூச்சி’ என்பது காரணப்பெயர். எந்த நேரமும் சதா புத்தகமும் கையுமாகவே இருப்பான். அதனாலொன்றும் அவன் படிப்பில் படு சுட்டி அல்ல. ‘லஞ்’ இடைவேளையின் போது கூட புத்தகத்துடனே இருப்பான். அல்லாவிட்டால் மேசை மீது குனிந்து படுத்து விடுவான். விளையாட்டில் நாட்டமில்லாத கலகலப்பற்ற சோம்பேறி.

    ஒருமுறை மேசைமீது படுத்திருக்கும் போது, அவனது காதிற்குள் யாரோ ஒரு பூச்சியைப் பிடித்து விட்டுவிட்டார்கள். அலறிக் கொண்டு எழும்பினான் செல்வகுமாரன். “புத்தகப்பூச்சியின்ர காதுக்குள்ளை பூச்சியை விட்டுட்டான்களடா” என்று சத்தமிட்டுக் கொண்டு சிலர் ஓடினார்கள். எங்கள் வகுப்பு ரீச்சர் வந்து நல்லெண்ணெயைக் காதிற்குள் விட்டுப் பார்த்தா. பூச்சி சொல்வழி கேட்கவில்லை. பிறகு உப்புத் தண்ணீர். பூச்சி மெதுவாக வெளியே வந்து மருண்டபடி உலகை எட்டிப் பார்த்தது. ரீச்சர் அதை ஒரே அமுக்காக அமுக்கி நசுக்கிக் கொண்டா. அவன் வேதனையில் துடித்தாலும் அழாமல் இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

    இரத்தினசிங்கம் மாஸ்டர், சிலவேளைகளில் காற்றோட்டம் கருதித் தனது படிப்பித்தலை ஒரு மர நிழலின்கீழ் வைத்துக் கொள்ளுவார். மரத்தின் கீழ் ஒரு கதிரையைப் போட்டு ஒரு குறுநில மன்னனாக நடுவில் இருப்பார். சுற்றிச் சூழ மாணவர்கள் ஒரு வட்டப் பாதையில் நிற்க வேண்டும். அவர் தலையில் பறவைகள் எத்தனை தடவைகள் எச்சமிட்டாலும் அவர் அந்த இடத்தை மாற்றமாட்டார். அவருக்கு என்றுமே நிழல். எங்களில் பாதிப்பேருக்கு வெய்யில். மாஸ்டரின் அருகில் நிழல் இருந்தாலும் – அவரின் கொடூரம் உணர்ந்து அந்த வேகாத வெய்யிலில் நிற்பதற்குத்தான் நாங்கள் முண்டியடிப்போம். அவரின் கற்கை நெறியில் ‘கேள்வி’களின் வகிபாகம் மூண்டின் கீழ் நாலு. கேள்விகள் அவரை மையம் கொண்டு, கடிகாரத்தின் திசையிலே அல்லது அதற்கு எதிராகவோ கடுகதி வேகத்தில் புறப்படும். கேள்விகளைவிட அவரது கையிலிருக்கும் பிரம்பு வீரியம் கொண்டது. சிலவேளைகளில் சரியான விடைகளுக்கும் அடி சரமாரியாக விழுந்திருக்கிறது.

    அன்று ஒரு விசித்திரமான கேள்வி. கேட்டுவிட்டு இயற்கை உபாதையைக் கழிக்க மரத்தின் பின்னால் ஒதுங்கினார்.

    “N P K என்றால் என்ன?”

    எல்லாரும் “என் பீ, என்பீ” என்று கே.பி.சுந்தராம்பாள் பாணியில் ராகமிழுத்தார்கள்.

    மாஸ்டர் திரும்பி வந்து கதிரையில் அமரும் போது, குணசேகரன் அவரைப் பார்த்து சிரிப்பது போல அவருக்குப் பட்டது. ஈரம் பட்ட வேட்டியை ஒரு தடவை குனிந்து பார்த்துவிட்டு, “எங்கை குணசேகரா நீ சொல்லு” என்று அவனை நோக்கிப் பிரம்பை நீட்டினார். மாஸ்டர் ஏதோ ஒன்றைத்தான் இப்படிப் ‘பொடி’ வைத்துக் கேட்கிறார் என நினைத்தான் அவன்.

    “வீட்டிலை சேர்!” என்றான் குணசேகரன். மாஸ்டருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

    “அப்பிடியில்லாட்டி பனை வடலிக்கை சேர்!”

    சிறுத்தை மானைப் பிடிப்பதற்கு பதுங்குவது போல பதுங்கி, பின் துள்ளி எழுந்தார் மாஸ்டர். குணசேகரன் வட்டத்தின் வழியே “இல்லை சேர். இல்லை சேர்” என்று தவளைப்பாய்ச்சல் பாய்ந்து ஓடத் தொடங்கினான். மூன்றாவது ரவுண்டிலே கலைத்துப் பிடித்தார் மாஸ்டர். சற்றே மூச்சை உள்ளே இழுத்துவிட்டுக் கொண்டு கடகடவென்று காலுக்குக் கீழே போட்டுத் தள்ளினார். அவன் ‘ஐயோ ஐயோ’ என்று கத்திக் கொண்டிருக்கும் போது, காத்திராப் பிரகாரமாக அவனது கமக்கட்டினுள் கையை விட்டு அந்தரத்திலே அவனைத் தூக்கினார். ‘ஐயோ ஐயோ’ என்ற சத்தம் பூமியிலிருந்து வானுக்குக் கிழம்பியது. அங்கிருந்தபடியே தொப்பென்று குணசேகரனைக் கீழே போட்டார்.

    “போய் நடுவிலை வெறுங்குண்டியோடை இரு. பாடம் முடியும் வரையும் எழும்பக்கூடாது.”

    குணசேகரன் காற்சட்டையை மெதுவாக நெகிழ்த்தி சுடுமண்ணில் குந்தினான்.

    இந்த அடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில்தான் நான் அநேகமாக பெண்பிள்ளைகளுக்குப் பக்கத்தில் நிற்பேன். அதுவும் பாலசுந்தரிக்குக் கிட்ட நின்றால் கேட்கத் தேவையில்லை. அவள் இரத்தினசிங்கம் மாஸ்டருக்கு உறவு. அவளும் நான் பக்கத்தில் நிற்பதைத்தான் விரும்புவாள். சிலவேளைகளிலை நாகநாதனும் போய் நிற்கப் பார்ப்பான். ‘ஓடு’ என்று அவனைக் கலைச்சுப் போட்டு ‘நீ வா’ என்று என்னைத்தான் கூப்பிடுவாள் அவள்.

    இவ்வளவு கலாட்டாவும் நடந்து கொண்டிருக்கும்போது, செல்வகுமாரன் மூச்சிரைக்க – மாடு நுரை தள்ளும் கோலத்தில் – அங்கே வந்து நின்றான். மாஸ்டர் அவனைக் கண்டும் காணாதது மாதிரி முகத்தை திருப்பி வைத்துக் கொண்டார்.

    “சேர் உள்ளே வரலாமோ?”

    “N P K எண்டால் தாவரங்கள் வளருவதற்குத் தேவையான மிக முக்கியமான கனியுப்புக்கள் என்பது அர்த்தமாகும். நைதரசன் பொசுபரசு பொட்டாசியம் என்பவற்றையே அந்த மூன்று எழுத்துகளும் குறிக்கின்றன” மாஸ்டர் விளக்கம் தந்தார்.

    “சேர் உள்ளே வரலாமோ? வரலாமோ சேர்?” விடாமல் சிணுங்கியபடி நின்றான் செல்வகுமாரன்.

    இரத்தினசிங்கம் மாஸ்டரின் காது விரிந்து சுருங்கியது. செல்வகுமாரனின் இடைவிடாத ரீங்காரம் அவரின் காதுகளை இம்சை செய்திருக்க வேண்டும். மூக்குப்பொடியை எடுத்து அதீதமாக உள்ளிழுத்ததில் காது மடலிற்குள் செருகியிருந்த பென்சில் கீழே விழுந்தது.

    “போ! போய் அந்த மண் கும்பானுக்குக் கிட்ட வெய்யிலிலை நில்” கர்ச்சித்தார் சிங்கம். செல்வகுமாரன் தலையைக் குனிந்தபடி போய் மண்மேட்டிற்குக் கிட்ட நின்றான். சூரிய ஒளி நேரே அவன் முகத்தில் விழுந்தது. கண்கள் கூசியது. வெப்பம் அதிகமாக தலை மெல்ல சுற்றுவது போல இருந்தது அவனுக்கு.

    புத்தகத்தை மாணவன் ஒருவன் வாசிக்க, காது குடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார் மாஸ்டர்.

    ‘ஆ!’ என்றொரு மெல்லிய சத்தம். சுற்றுமுற்றும் பார்த்தான் குணசேகரன். மண் திட்டியில் நின்ற செல்வகுமாரனைக் காணவில்லை.

    “சேர்! செல்வகுமாரன் விழுந்திட்டான் சேர்” கத்திக் கொண்டே காற்சட்டையைத் தூக்கிக் கொண்டு எழும்பினான் குணசேகரன். மண் திடலிற்குப் பின்புறமாக, மண்டை அடிபட விழுந்து கிடந்தான் செல்வகுமாரன். கூரிய கல்லொன்று அவனது தலையைக் குத்திக் கிழித்திருந்தது. மயங்கிப் போன நிலையில் இருந்த அவனைத் தூக்கிக் கொண்டு இரத்தினசிங்கம் மாஸ்டர் ஒஃபீஸ் நோக்கி ஓடினார். அவரது வேட்டி சட்டை எல்லாம் இரத்தமயமாகிக் கிடந்தது. செல்வகுமாரனுடைய தலை கவிழ்ந்து தொங்கியது.

    நாங்கள் செய்வதறியாது திக்கொன்றாய் ஓடினோம்.

    அதிபரின் அறையின் முன்னால் வாங்கொன்றில் அவனைக் கிடத்தியிருந்தார்கள்.

    “ஆராவது கெதியிலை போய் கந்தசாமியின்ரை காரைப் பிடிச்சுக் கொண்டு வாங்கோ. மேற்குப் புற கோயில் வீதியிலை கந்தசாமி நிற்பான்” அதிபர் சத்தம் போடுகின்றார். பாடசாலைக்கு முன்பாக நிறையப் பேர் கூடிவிட்டார்கள். தியாகராஜா மாஸ்டர் சைக்கிளை எடுத்துக் கொண்டு பாடசாலை வளவை விட்டு வெளியேறுகின்றார்.

    “உவர் இனி நத்தை மாதிரி ஊர்ந்து போய் வாறதுக்குள்ளை எல்லாம் முடிஞ்சிடும்.”

    சைக்கிள் பெரலிலை காலை வைச்சுக் கொண்டு கெந்தி ஏறும்போதே தியாகராஜா மாஸ்டர் விழப் பாத்திட்டார். பத்தாம் வகுப்புப் படிக்கும் யோகன் அதிபருடன் கதைத்துவிட்டு, சைக்கிளை எடுத்துக் கொண்டு தியாகராஜா மாஸ்டரையும் உன்னிக் கொண்டு விண்ணெண்று பறக்கின்றான்.

    இருவரும் போய்க்கொண்டிருக்கும் போதே மறுபுறத்திலிருந்து கந்தசாமியின் கார் வந்தது. யாரோ தகவல் குடுத்திருந்தார்கள். கந்தசாமி காரின் பின்புறம் திறந்து, துணிகளை எடுத்துவந்து சீற்றினில் பரப்பினான். இரத்தினசிங்கம் மாஸ்டர் கந்தசாமியின் உதவியுடன் செல்வகுமாரனைத் தூக்கிக் கொண்டு காரின் பின்புறம் ஏறினார். அதிபர் யாருடனோ தொலைபேசியில் கதைத்துவிட்டுக் காருக்குள் ஏறினார். கார் வைத்தியசாலை நோக்கிப் பறந்தது.

    அதன்பிறகு செல்வகுமாரனின் தந்தையும் தாயும் தலையிலடித்துக் குழறியபடி வந்தார்கள். அவர்களின் மற்றப்பிள்ளைகளும் பெற்றவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். பாடசாலை வளவிற்குள் நெடுநேரமாக ஆக்கள் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் எல்லாரையும் வகுப்பறைக்குள் போய் இருக்கும்படி உப அதிபர் சொன்னார்.

    எங்கள் புத்தகம் கொப்பிகள் மரத்தடியில் போட்டபடி கிடந்தன. அவற்றை எடுப்பதற்காக மரத்தடிக்குப் போனேன். மண் திடலிற்குக் கிட்ட பாலசுந்தரி குனிந்து எதையோ பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் நெஞ்சு விம்மித் தணிகிறது. நான் பின்னாலே சென்று பார்த்தேன். கூரான கல்லில் இரத்தக்கறை படிந்திருந்தது. கல்லுக்குப் பக்கத்தில் உடைந்த மண்டையோட்டின் துண்டு ஒன்றை எறும்புகள் மொய்த்தவண்ணம் இருந்தன. அவள் கண்கள் கலங்கியபடி குந்தியிருந்தாள். ‘வா வகுப்புக்குப் போவம்.’ அவள் அழத் தொடங்கினாள். அவளையும் கூட்டிக் கொண்டு வகுப்பறைக்கு வந்து சேர்ந்தேன். அதன் பிறகு எங்களுக்குப் படிப்பு நடக்கவில்லை.

    மதியம் கழிந்த நிலையில் – அதிபர் ஹொஸ்பிட்டலில் இருந்து பாடசாலைக்குத் தொலைபேசி எடுத்தார். பூச்சி இறந்து போய் விட்டதாக தகவல் சொன்னார். காரில் போகும் போது, இடைவழியில் கண் முழித்து ஒரு தடவை ‘அம்மா’ என்று கூப்பிட்டதாகவும், ஹொஸ்பிட்டல் போய் சேர்வதற்குள் அவன் இறந்து போய் விட்டதாகவும் பேசிக் கொண்டார்கள்.

                                ********  ********  *******

     இரத்தினசிங்கம் மாஸ்டருக்குப் பக்கத்தில் போய் நின்றேன்.

    “சேர்! என்னைத் தெரியுதா சேர்”

    “தம்பியை மட்டுக் கட்டேலாமல் கிடக்கு.”

    “என்ரை பெயர் தயாளன். உங்களிட்டைப் படிச்சனான்.”

    “என்ரை கண் பார்வையும் இப்ப மங்கிப் போச்சு. எந்த ஆண்டு மட்டிலை என்னட்டைப் படிச்சிருப்பீர்?”

    “சேருக்குப் பூச்சியை நினைவிருக்கா? செல்வகுமாரன் எண்டு பெயர். சின்ன வயசிலேயே தவறிப் போனான்.”

    மாஸ்டரின் முகம் சுருங்கிப் போனது.

    “அதடா தம்பி என்ரை வாழ்க்கையிலை நடந்த ஒரு கெட்ட கனவு. அப்படியே மனசில ஆழமாப் பதிஞ்சு கிடக்கு. ஒரு மாறாத வடுப் போல. உம்முடைய பெயர் என்ன சொன்னனீர்? தயாளனோ? இப்படி ஒருக்காக் கொஞ்சம் திரும்பும் பார்ப்போம்.”

    நான் அவரை நோக்கித் திரும்பினேன்.

    “உம். இப்ப தெரியுது” பெருமூச்சு விட்டார் மாஸ்டர்.

    இப்பொழுது எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டார்? எனக்கு வியப்பாக இருந்தது.

    “மண்ணிலை பிறக்கேக்கை எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத்தான் பிறக்கினம் எண்டு சொல்லுவினம். எனக்கு அதிலை நம்பிக்கை இல்லை. ஒரு சிலர் குறைகளோடையும் வந்து பிறந்து விடுகிறார்கள். நான் அடங்காத கோபத்தோடை வந்து பிறந்து விட்டேன். என்னுடைய குடும்பத்திலை என்னைப் போல இப்படியான குணத்தோடை ஒருத்தரும் இல்லையெண்டுதான் சொல்லுகினம். அம்மா கூடச் சொல்லுவா – இந்தச் சண்டாளனைப் போல ஒருத்தரும் எங்கடை பரம்பரையிலை இல்லையெண்டு. ஆனாத் தம்பி, எங்கையோ ஒரு அடி ஆழத்திலை – எங்கட பரம்பரையிலை – என்னைப் போல ஒரு ஆள் இருந்திருக்க வேணும். அது பரம்பரை அலகுகளுக்கூடாக என்னை வந்து சேர்ந்திருக்க வேணும்.

    இப்ப உம்மையே எடுத்துக் கொள்ளுவம். உம்முடைய காதைப் போல – சுளகுக் காதோடை ஆராவது உம்முடைய குடும்பத்திலை இருக்கினமா?”

    பிள்ளையார் காது! சுளகுக்காது!! இதை வைத்துத்தானா என்னை அவர் அடையாளம் கண்டு கொண்டார்!

    “சேர் என்னுடைய அம்மா சொல்லுறவா, என்னுடைய அம்மம்மாவின் தம்பி ஒருவருக்கும் இப்படிக் காது இருந்ததாம்.”

    “பார்த்தீரா தம்பி! மனிதனுடைய உடற்கலங்களிலை இருக்கிற நிறமூர்த்தங்களிலை உள்ள பரம்பரை அலகுகள் செய்யிற வேலையை. எப்பவோ ஒருக்கா அது தன்னுடைய வேலையைக் காட்டிப் போடுது. உடலிலை ஏற்படுகிற இந்தக் குறைபாடு ஒருவருடைய வாழ்நாளிலை மாற்றமடைகிறதில்லை. ஆனா உள்ளத்திலை ஏற்படுகிறது சிலருக்கு காலத்தோடை குறைஞ்சு போய் மறைந்து விடுகிறது” மாஸ்டர் சலித்துக் கொண்டார்.

    என்னுடைய நண்பர்கள் – மாஸ்டரிடம் படித்தவர்கள் ஒவ்வொருவராக வந்து என் பின்னே நிற்கின்றார்கள்.

    “தம்பி தயாளன், என்ரை கழுத்திலை இருக்கிறதை ஒருக்கா தடவிப் பாரும்” சிரித்தபடியே கழுத்தை என் முன்னே நீட்டினார்.

    அவருடைய கழுத்திலே ‘கோல்ஃ போல்’ (Golf ball) அளவிற்கு ஒரு உருண்டை திரண்டு இருந்தது. அது பந்து போல அங்கும் இங்கும் உருண்டு ஓடியது.

    “சேர் இதை ஒப்பரேஷன் செய்யலாமே!”

    “செய்யலாம்தான். செய்தால் செத்துப் போவன். இந்த வயதிலேயே சாகிறதுக்குப் பயப்பிடுகிற எனக்கு, ஒரு பையனைக் கொல்லுறதுற்கு மனம் வருமா? பிள்ளையள் ஒழுங்காகப் படிக்கவேணும் எண்டதுக்காகத்தான் வாத்திமார் அடிக்கிறவை. கோபம் கொள்ளுறவை. என்ரை இரண்டு பிள்ளையளுக்கும்கூட படிப்பிலை கவனம் செலுத்தாத வேளையிலை அடி போட்டிருக்கிறன். என்ன கொஞ்சம் கண் மண் தெரியாமல் அடிச்சுப் போடுவன்.

    என்னவோ விதித்தபடிதான் எல்லாம் நடக்கும். அந்தப் பையனின் பெற்றோர் சகோதரர் நண்பர்களுக்கு இருக்கும் வலி என்னவென்று புரிகிறது. இந்தக் கோபத்தை நிறுத்துகிறதுக்கு நான் நேராத கோயில் இல்லை. செய்யாத வைத்தியமில்லை. யோகா கூட செய்து பாத்தனான். குறைந்ததேயொழிய முற்று முழுதாக என்னை விட்டுப் போகவில்லை. கோபம், வெறி எல்லாம் காலம் என்ற நீட்சியுடன் மூப்பை நோக்கி நகர பரிணாமமடைந்து முற்று முழுதாக மறைந்து விடுகிறது. இப்ப எனக்கு எதுவுமே இல்லை.”

    “சேர் உங்கடை கழுத்திலை இருக்கிற அந்தக் கட்டி எப்பிடி வந்தது சேர்?” பின்னாலே நின்றவர்களில் ஒருவன் கேட்டான்.

    “நல்ல கேள்வி. சொல்லுறன். செல்வகுமாரன் இறந்து ஒரு கிழமை இருக்கும். நான் தெருவாலை போய்க் கொண்டிருக்கேக்கை ஒரு மாணவன் பனை வடலிக்குள்ளை இருந்து எனக்குக் கல்லால் எறிந்தான். அதாலை வந்த காயம் இது. என்னுடைய கோபம் குறையக் குறைய இது பெருத்துக் கொண்டே போகிறது” இரத்தினசிங்கம் மாஸ்டர் புன்முறுவல் செய்கின்றார்.

    எனது நாத் தழுதழுக்கிறது. ஓவென்று அழுது விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

    “சேர்! சேர்!!”

    “சொல்லும். சொல்லும் தம்பி.”

    “அந்தக் கல்லை எறிந்தது நான்தான் சேர்!”

    “எனக்கும் தெரியும்!” என்றார் மாஸ்டர் – ஒரு குழந்தையைப் போல.

    Share
  • அண்ணாச்சி

    கே. ரவி

     

    [ஒரு சொல் போதும் ஒரு பாடல் பிறக்க. ‘உலகெலாம்’ என்று இறைவனே ஒரு சொல் எடுத்துக் கொடுக்க, அதிலிருந்து பெரியபுராணக் காவியமே உதித்தெழவில்லையா? அப்படிப் பலமுறை ஒரே சொல் என் நெஞ்சில் பாடல் ஊற்றெடுக்க வைத்துள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்னால், சபரி மலையில் இருந்து இறங்கிப் பம்பைக் கரையில் என் குழுவினரோடு நடந்து வரும் போது, ஒலிபெருக்கியில் யாரோ இருவர் பேசிக் கொண்டது சத்தமாகக் கேட்டது. “என்ன நராஜகோபால் அண்ணாச்சி வரலியா?” “சாமி, அண்ணாச்சி பழனிலே இருக்கார்.சாயந்தரம் புறப்பட்டு வரார்.”

    அண்ணாச்சி பழனியிலே என்ற சொல் போதும். அப்பொழுதே, என் குழுவினரோடு பாடிக் கொண்டே திரிவேணி பாலத்தை அடைந்தேன். நீங்களும் இங்கே சொடுக்கிக் கேட்கலாம்.]

    download

    அண்ணாச்சி பழனியிலே தம்பி அத்வானக் காட்டினிலே

    ஒண்ணாக வைத்துக் கொண்டாடுவோம் ரெண்டு கண்ணாக வீட்டினிலே

    புள்ளி மானத் தேடி வேட்டைக்குப் போயி

    வள்ளிமானக் கொண்டுவந்தான் – அண்ணங்காரன்

    வள்ளிமானக் கொண்டுவந்தான்

    புலிப்பால் தேடிக் காட்டுக்குப் போயி

    புலிமேல் ஏறிவந்தான் – சின்னத்தம்பி

    புலிமேல் ஏறி வந்தான்

    கோவத்தி லேவெறுங் கோவணத் தோடே

    குன்றேறி நின்று கொண்டான் – அண்ணங்காரன்

    குன்றேறி நின்று கொண்டான்

    யோகத்தி லேதவக் கோலத்தி சபரி

    மலைமேல் அமர்ந்துகொண்டான் – மணிகண்டன்

    மலைமேல் அமர்ந்துகொண்டான்

    காமனை எரித்த கண்ணில் இருந்து

    கனல்வடி வாயுதித்தான் – கந்தசாமி

    கனல்வடி வாயுதித்தான்

    மோகினி சுதனாய் அவதரித் தேநம்

    மோகம் எரித்திடுவான் – ஐய்யப்பன்

    மோட்சம் அளித்திடுவான்

    ‘சரவண பவ’வெனும் மந்திரத் தில்வேத

    சாரம் உரைத்திடுவான் – வேதாந்த

    சாரம் உரைத்திடுவான்

    சரணமென் றேமனம் உருகி யழைத்தால்

    தரிசனம் தந்திடுவான் – ஐய்யப்பன்

    ‘தத்வமஸி’ என்பான்.

    Share
  • தாள்பணிந்து நிற்போமே!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

          தனிமையை நாடிநாளும்
          தன்னிலை இழந்துநின்று
          பெரியனாய் உயர்ந்துநின்றார்             ramakrishna
          பெருமகன் ராமகிருஷ்ணர்!

          மனைவியைக் கண்டபோதும்
          மனதினை விட்டிடாமல்
          துணிவுடன் துறவையேற்றார்
          தூயவர் ராமகிருஷ்ணர்!

          அன்னை பராசக்தியாக
          அவர்கண்டார் தம்மனையை
          ஆதலினால் பரமஹம்சர்
          அதியுயரப் போய்விட்டார்!

          முன்னமவர் அன்னையினை
          முழுதுமாய் கண்டதனால்
          அன்னவரின் எண்ணமெலாம்
          அன்னையாய் இருந்ததுவே!

          ராமகிருஷ்ண பரமஹம்சர்
          நாளும்காளி கோவில்நின்று
          ஊணுமின்றி உறக்கமின்றி
          உண்மைகாண உணர்விழந்தார்!

          பாரதத்தாய் மடியில்வந்த
          ராமகிருஷ்ண பரமஹம்சர்
          பாரினுக்கு விடிவுதரும்
          பகலவனாய் ஒளிகொடுத்தார்

          படிப்பறியாப் பரமஹம்சர்
          படிப்படியாய்ப் படிப்பித்தார்
          படிப்பித்த பாடமெலாம்
          பாரினுக்கு வேராச்சு!

          வேராக அவர்நின்றார்
          நீராக அவர்நின்றார்
          ஊரூராய் அவர்வார்த்தை
          உருவேற்றி நின்றதுவே!

         சீடர்பலர் வந்தார்கள்
         சீலத்தைக் காட்டிநின்றார்
         ஞாலமெலாம் அவர்புகழை
         நாளுமவர் பரப்புகிறார்!

        ஆல விருட்சம்என
        அவர்தொண்டு விரிகிறது
        சீலமுடை ராமகிருஷ்ணர்
        தாள்பணிந்து நிற்போமே!

    Share
  • ஆடிப்பெருக்கு!

    -மாதவ. பூவராக மூர்த்தி

    இன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் பதினெட்டாம்நாள். சென்னையில் இருக்கும் நான் மயிலாடுதுறையில் இருந்தேன். வாழ்வில் பின்னோக்கிச் சென்று பிள்ளைப் பருவத்தில் இருக்கும் காலப்பயணத்தைச் சாத்தியமாக்கிய என்மனதிற்கும் நினைவுகளுக்கும் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

    aadiperukku1என் நினைவுகளைத் தூண்டிய சாதனம் என்வீட்டு வாசலில் வந்துவீழ்ந்த இந்து நாளிதழின் தமிழ் இணைப்பு ஆடிப்பெருக்குஸ்பெஷல். என்கைகளில் பிரித்து ஆடிப்பெருக்கு கட்டுரையைக் கண்கள் காணும்போது மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டு ஆர்ப்பாட்டங்களுடன் பின்னோக்கிப் பறந்து மாயவரத்திற்குப் போய் என்னை இறக்கிவிட்டது.

    என் சொந்தஊரான சீர்காழிக்கு அருகில் உள்ள மாதானம் முத்துமாரியம்மன் தீமிதித் திருவிழா (ஆடி கடைவெள்ளி அன்றுநடைபெறும்) பற்றிய குறிப்பு என் சிறுவயது நினைவுகளைத் தூண்டும் மற்றொரு சாதனமானது.

    மேட்டூர் திறந்துவிட்டு இரண்டு மூன்று முறை புதுவெள்ளம் வந்தாலும் ஆடியில் பதினெட்டாம் பெருக்கிற்காகத் திறந்த நீர் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னாலே வந்து கரைததும்பி ஓடிக்கொண்டிருக்கும்; பள்ளிகளுக்குவிடுமுறை. அதற்கு முன்வரும் சனி,ஞாயிறு நாங்கள் எங்கள் சப்பரங்களைப் பரணிலிருந்து எடுத்துப்போனது வந்தது பார்த்துத் தயார்பண்ண ஆரம்பித்து விடுவோம்.

    ரவி பேப்பர் மார்ட்டிலிருந்து கலர்தாள்வாங்கி,வீட்டில் வரும் ஹிண்டு அல்லது தினமணி பேப்பரைப் பக்கங்களில் ஒட்டி முன்கோபுரத்திலும் அதைஒட்டி அதன்மேல் பச்சை,மஞ்சள், நீலம்,சிவப்புத் தாள்களை வெட்டிப் பூக்களின் வடிவம், கோபுரவளைவுகள், தூண்கள் என எங்கள் கற்பனைச் சிறகுகளை விரித்து ஆர்வத்தோடு செய்த கலைப்படைப்புகளை ஒட்டித் தூரப்போய் நின்று அதன் அழகுபார்த்து வியந்துபோவோம்.

    சின்னவயதில் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம்அளவில் நம் அன்றாட விளையாட்டுகளில் கலந்துபோகும் மாயம்தான் இந்தச் சப்பரம். நம் ஊரில் நமக்கு அருகில் இருக்கும் கோவில்களில் நடக்கும் விழாக்கள் நம்மனதில் பதிந்து நம்மையும் அதுபோலச் செய்யத் தூண்டும். கோவில் திருவிழாவில் தேர் ஒருநாள் காலை வலம்வரும். வடம் பிடித்து நிலையிலிருந்து புறப்பட்டு வீதிவலம் வரும்போதும் பார்த்தும் இழுத்தும் உடன்சென்றும் உள்ளிருக்கும் இறைஉருவை வணங்கியும் கழித்தநாட்கள். சப்பரம் என்பது தேரைப்போல மரத்தால் செய்யாமல் கம்பினால் வடிவமைத்துக் கோவில்கோபுரம் போல் தென்னங்கீற்றினால் அலங்கரித்து இரவுநேரம் வீதியுலாவரும். எங்கள் சப்பரம் அந்த வடிவத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

    ஆடிப்பெருக்கு காலை காவிரியில் புனிதநீராடல் ஒரு பெரிய திருவிழா. அம்மாவும் பக்கத்துவீட்டு மாமி மகளும், ஆச்சியும் குளித்துவிட்டுக் காவிரி அம்மனுக்குப் பூஜை செய்துவிட்டு வருவார்கள்.

    மனதை மயக்கும் அந்த மாலைநேரம்தான் நான் உங்களுடன் பதிவு செய்யவிரும்புவது. ஃபேர்அன்லவ்லி, டவ் போன்ற அழகு சாதனங்களில் தங்கள் முகத்தைக் கெடுத்துக்கொள்ளாத பெண்கள். கஸ்தூரி மஞ்சளும் கடலைமாவும் அவர்களின் முகத்தை மலரச்செய்யப் போதுமானவையாக இருந்தகாலம். முத்துப் பல்வரிசை முகிழ்க்கும் சிரிப்பும், கள்ளம் கபடமில்லாத மனமும் பருவத்துக்கனவுகள் நிறைந்திருக்கும் கண்களும், அவர்களுக்குக் கொடுக்கும் வனப்பை அதன் நிரந்தரத்தை இந்த முப்பது ரூபாய் கிரீம்களும், முன்னூறு ரூபாய் பேஸ்டுகளும் கொடுத்துவிடுமா என்ன?

    மாலை நேரத்தில் காவேரிக்குப்போகும் ஏற்பாடுகளில் அவரவர்கள் மும்முரமாக இருக்கும் மதியம் ரொம்ப எனக்குப் பிடித்தது. நாங்கள் எங்கள் சப்பரத்துக்கு ஃபைனல் டச் கொடுத்துவிடுவோம். ஒருமுறை வாசலில் இறக்கி இழுத்துப் பார்ப்போம்.

    முதல்நாள் இரவே பெண்கள் அரைத்த மருதாணி இட்டுக் கொள்வார்கள். எங்களுக்கும் அம்மா இட்டுவிடுவாள். விரல்களில் கொப்பிமாட்டி, உள்ளங்கையில் வட்டம் இட்டு எங்கள்கைகள் கட்டிப் போடப்படும். அக்காவுக்கும், தங்கைக்கும், சின்னஅத்தைக்கும், சித்திக்கும், பக்கத்துவீட்டு மாலாவுக்கும் கால்களில் பட்டைபோட்டுக் கால்விரல்களும் மருதாணிப் பச்சையால் மெருகேறும். காலைக் கண்விழித்தஉடன் காய்ந்துபோன மருதாணி பிய்த்து எடுத்துக் கிணற்றுநீரில் கழுவியவுடன் பச்சை சிவப்பாகும். தோலின் நிறத்தில் இந்தச்சிவப்பு ஒரு அழகை உண்டாக்கும்.

    அம்மா காலைச்சாப்பாடு முடிந்தகையோடு காவேரிக்கு எடுத்துச்செல்லும் சித்ரான்னங்களைத் தயார்செய்யத் துவங்கிவிடுவாள். மற்றவர்கள் அதற்கு உதவிசெய்வார்கள். தெருவே பரபரப்பாகும். பாவாடைத் தாவணிகள் சரசரக்கக் கொலுசின் சிலுங்களுடன் எலுமிச்சம்பழமோ,தேங்காயோ கறிவேப்பிலையோ கேட்கவரும் பெண்களின்குரலில் ஒருஆர்வம் வெளிப்படும்.

    மூன்று மணிக்குப் பின்னல்போடும் வேளைகளில் பாட்டியும் அத்தையும் மும்முரமாகி விடுவார்கள். பட்டுக்குஞ்சலம், ராக்கோடி, நெத்திச்சுட்டி எனத் தங்களை இன்னும் அழகாக்கிக் கொள்ளும் அவர்கள் மாயவித்தைக்கு எல்லையுண்டா?

    தோடும் ஜிமிக்கியும், கைவளையல்குலுங்கும்ஓசை. பாவாடைத் தாவணியில்முந்தானையை ஒருமுறை வலதுகையால்இழுத்துப் பிடித்துகூடத்துக் கண்ணாடியில் கே.ஆர்விஜயாவும், பத்மினியும், தேவிகாவும் வந்துபோவார்கள்.

    டிபன்கேரியரிலும் எவர்சில்வர் தூக்கிலும் பார்சல் செய்துவிட்டு அம்மா முகம் கழுவப்போவாள். வாழை இலையைக் கொல்லையிலிருந்து பறித்து அப்பா சின்னஏடுகளாக வெட்டி அதை அழகாகச் சுருட்டி வாழைநாரால் கட்டிவைப்பார்.

    ஒரு நாலரைமணிக்குக் கொஞ்சம் வெயில் தாழ்ந்தவுடன் காவிரிநோக்கி எங்கள்பயணம் தொடங்கும். தெருவும் ஊரும் காவிரியில் பலதுறைகளில் வந்துபடரும். வாழைப் பட்டையில் விளக்கேற்றிக் காவிரியின் போக்கில் விடும்போது அவை மிதந்துபோகும் அழகும், சின்னச் சுழலில் சுற்றும் வசீகரமும் இன்னும் என்மனதில்!

    படித்துறையில் காலை நனைக்கும் பெண்களின் அழகு அந்தப் பொன்னந்தி மாலையில் மனதிற்குகந்த காட்சி. மருதாணி அலங்கரிக்கும் அந்தச் சிவப்பு, கொலுசின்வெள்ளை, பாவாடையின் நனைந்த பட்டுச்சரிகை மஞ்சள்,சிவப்பு, பச்சைஎனக் கண்ணைப்பறிக்கும் பாவாடை, பஃப் வைத்தரவிக்கை, உச்சி வகிடெடுத்துக் குனியும் தலையில் சரியும் நெத்திச்சூடி, நீரில் நனைத்த கையில் இன்னும் சிவக்கும் மருதாணிக் கோலம் . அழகேஅழகுதேவதை!

    தேவதையின் அழகை எப்படிவர்ணிப்பேன்..? அரைத்த மஞ்சள் மிளிரும் முகம், பிடித்த மை அப்பிய கண்கள்; அது இமை தாண்டி ஈசிய அழகு. அம்மாவின் தலைமயிரைப் பற்றியும், டீச்சரின் தலைமுடியைப் பற்றியும் கவலைப்படாத பையன்கள் நாங்கள். இந்து லேகா ப்ருங்கா இல்லாமல் செம்பருத்தி, சீகைக்காய் போட்டு வளர்ந்த கூந்தல். வீட்டில் பறித்து அரைத்த மருதாணி, பனகல் பார்க்கில் ஸ்டூலில் உட்கார்ந்துபோடும் கோன் அல்ல. பருவத்துக்குக்கேற்பப் பூக்கும் தோட்டத்துப் பூக்களில் தொடுத்தசரம் தலையில். பார்த்தால் பளிச்சிடும் குங்குமம் நெற்றியில். கடைவாயில் புன்சிரிப்பு, கருவிழியில் ஒரு நெருக்கம் உணர்த்தும் “ஏதிலார் போலப் பொதுநோக்கு”ப் பார்வை!

    எங்கள் சப்பரம் இழுக்கப்பட்டுக் கூட்டம் குரலெழுப்பிக் காவிரிக்கரை kalantha sadamவந்தவுடன் அம்மா எல்லாரையும் அழைத்துக் கையில் வாழை இலை தருவாள். பச்சை இலையில் மஞ்சள் நிறத்தில் எலுமிச்சைசாதம், வெள்ளை நிறத்தில் கறிவேப்பிலையும் சிவப்பு மிளகாயும் முந்திரியும் கடலையும் விரவிக் கிடக்கும் தேங்காய்ச்சாதம், பொன்னிறத்தில் புளிசாதம், சிவப்பு வட்டமாய் வாழைக்காய் வறுவல்,வெள்ளை நிறத்தில் புள்ளிகள் இல்லாமல் போட்ட நெளிக்கோலமாய்க் காட்சியளிக்கும் கருவடாம். கல்கண்டுசாதம், வெண்ணை உருண்டையாய்க் கடைசியில் இலையில் விழும் தயிர்சாதம். அதற்கு உறுதுணையாய் மோர்மிளகாய், மாங்காய் ஊறுகாய் எனச் சத்தமும் சந்தோஷமுமாய் தரையெல்லாம், படியெல்லாம் இறைத்த பருக்கைகள். தரையில் காக்கைகளும் மணலில் எறும்பும் கொத்தியும் பற்றியும் இருக்கும் நேர்த்தி! நீரில் மீன்கள் துள்ளித் திரிந்து கொத்திச்செல்லும் அழகும், அவைகளின் மினுமினுப்பும் இன்னும் என்மனதில் மின்னலடிக்கிறது!

    எல்லோரும் சின்னப்பெண்களும் உண்டவாய்க்கு வெற்றிலை தரிப்பார்கள். இதழ்சிவக்கும் சிரிப்பழகு எங்கும் நிறைந்திருக்கும். ஆடிப்பெருக்கெடுத்து எங்களை வாழவைக்கும் எங்கள் பொன்னிக்கு நாங்கள் செய்யும் நன்றி, தொழுதல்தான் இந்தப் பதினெட்டாம் பெருக்கு. கல்கி பதினெட்டாம் பெருக்கைப் பொன்னியின் செல்வனில் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவார். நான் என் கண்முன் ஹிண்டு பேப்பர் கொண்டுவந்த கட்டுரைக் காட்சிகள் மனதில் விரிந்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்; இல்லை நானும் ஒருமுறை அங்கேவாழ்கிறேன். கையலம்பியபின் காவிரி நீரின் குளிர்ச்சியும், எண்ணெய்ப் பிசுக்கும் இன்னும் என் உள்ளங்கையில். நடந்தாய் வாழி காவேரி!

    Share
  • காற்று வாங்கப் போனேன் (34)

    கே.ரவி

    கவிதையை வரவேற்க இயற்கையே கைகட்டிக் காத்திருக்கும் என்பதுபோல் பேசிவிட்டாயே! யாரோ முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. ஏன் அப்படி நடக்காதா அல்லது நடக்கக் கூடாதா? கவிதையே பராசக்தியின் ஊஞ்சல்; அவள் அமர்ந்து உலாவரும் சிவிகை அல்லது பல்லக்கு. இது உண்மையானால், அவளே கவிதையின் ஊற்றுக்கண் என்பது சரியென்றால், ஒரு கவிதை வரும் போது இயற்கை கைகட்டிக் கொண்டு நின்று வரவேற்றுத்தானே ஆக வேண்டும். என் இனிய நண்பன், கவிஞன் பா.வீரராகவன் எந்த அரங்கத்தில் என்ன கவிதை படித்தாலும், அதற்கு முன்னால் தன் கவிதை ஒன்றைக் கட்டாயம் சொல்லுவான்.

    மனமாரச் சொன்னகவி எல்லாம்ar
    மன்றத்தில் புகழ்கொள்வ தில்லை
    எனதானால் இக்கணமே வீழும் – அன்றி
    உனதானால் எந்நாளும் வாழும்
    எனதில்லை உனதென்றே அர்ப்பணித்தேன்
    நின்னருள் நின்செயல் நின்கடனே

    கவிதைகளைச் செய்பவளும், கவிதைக்காக ஏங்கும் நெஞ்சங்களில் கவிதை வெள்ளம் பெய்பவளும், சில காதல் நெஞ்சங்களைத் தோட்டங்களாக்கி அங்கே கவிதை மலர்கள் கொய்பவளும், கனவுத் தறியில் கவிதை இழைகள் நெய்பவளும் …..! எல்லாம் அவளே. அவள்தானே இயற்கையன்னை, பராசக்தி.

    அவள் கவிதைச் சிவிகையில் அமர்ந்து வரும் நேரம், கவிதை வரும் நேரம் …..!

    கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்
    கனவுகளும் நினைவுகளும் கலந்துதடு மாறும்
    கவிதை வரும் நேரம் இது கவனம்மிக வேண்டும்
    கருத்தில் ஒரு நெருப்புமலர் கட்டவிழும் நேரம்
    கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்

    மலருதிரும் ஓசையிலும் மனமதிரும் நேரம்
    மதகுடைய வேண்டியொரு நதிபுரளும் வேகம்
    மண்மரகதங்களும் விண்ணதிசயங்களும்
    பண்வடிவம் ஏற்கத் தவம் செய்யும் கோலம்
    கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்

    சுவர்க்கோழி சில்வண்டு ஸ்ருதிசேர்ப்ப தைக்கண்டு
    சிரக்கம்பம் செய்யும் சிறுதென்னம் பாளை
    புதிதாக வருகின்ற பூந்தென்றல் காற்றுக்குச்
    சதகோடி விண்மீன்கள் மாலை மரியாதை
    கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்

    தவிக்கின்ற நெஞ்சத்தில் தணலாய் எழுந்து – பசுந்
    தளிர்க் கரங்களில் பனித் துளியாய்ப் படர்ந்து
    கவிழ்கின்ற மேகங்க ளுக்குள் கலந்து
    சிரிக்கின்ற தேயொரு கவிதைக் கொழுந்து
    கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்

    கவிதையைச் சுமந்து வரும் பூந்தென்றல் காற்றுக்குச் சதகோடி விண்மீன்கள் மாலையிட்டு மரியாதை செய்யுமாமே!

    இதற்குக் காரணம் என்ன? கவிதை உதிக்கும் கணத்தில், ஓர் அதிசயம் நடக்கிறது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் அந்த அதிசயம் நடக்கும் போதுதான் கவிதை உதிக்கிறது. அது என்ன அதிசயம்?

    இந்த உடற்கூட்டுக்குள் அடங்க மறுத்து, இந்த உலக எல்லைகளையும் ஏற்க மறுத்து, எல்லையற்ற வானமாய்த் தானே விரியத் துடிக்கும் ஆதங்கம், பிடிவாதம், வெறி, நெஞ்சில் உண்டாகி, அது மிகும் போது, அதன் கனம் தாங்காமல், நினைவுக்குமிழ் வெடித்துச் சிதற, அதனால் மிக லேசாகி, ஒரு விடுதலை உணர்வோடு அந்த உயிர்த்துடிப்பு உயர உயரப் பறந்து செல்கிறது. ஏதோ ஓர் உயரத்தில், முன்பு யாரோ ஒரு மஹாகவியின், அல்லது, மஹரிஷியின் சங்கல்பத்தில் உருவாகி, ஏதாவது ஓர் உயிர்த்துடிப்பு வந்து தன்னைப் பற்றிக் கொள்ளாதா என்று காத்துக் கொண்டிருக்கும் சலன அலைகளை அது சந்திக்க நேரிடலாம். அந்தச் சந்திப்பே ஒரு யுகசந்திப்பு. அந்தச் சந்திப்பே ஒரு சங்கமம் ஆகும் போது, அந்தச் சங்கமத்தில் ஜனிப்பதுதான் உயர்கவிதை. அப்படியோர் யுகசந்திப்பின் சங்கமத்தில் ஜனித்து வரும் ஒரு மகத்தான கவிதையின் பிறப்பை உலகமே, இயற்கையே ஒரு மாபெரும் வைபவமாகக் கொண்டாடுகிறது. இதுதான் கவிதையின் ஜனன ரகசியம்.

    என்னய்யா கதையளக்கிறாய்? இதை யார் சொன்னது. யாரா? கவிதைதான். கவிதையே தன் ஜனன ரகசியத்தை எனக்கு அறிவுறுத்தியது.

    வெறிகொண்டு விட்டேன் கவிதை வெறி கொண்டு விட்டேன்
    நர்த்தனச் சொற்களில் நானுலா போகவும்
    நடனமே நடையாகவும் – விழி
    மத்தளம் கொட்டி வியப்பிலே மூழ்கவும்
    மீண்டும் மீண்டும் பாடவும்
    வெறிகொண்டு விட்டேன்
    துரிதகதியில் மனம் துணிவு பெறவும் நடை
    துவளாத லயம் சேரவும்
    பரிதியுதயம் வெண் பனியில்நிகழும் தனிப்
    பரவசம் உருவாகவும்
    சிறிதுசிறிதாய் இழை பிரியுமுணர்வே ஒரு
    சித்திரத் தறியாகவும்
    சிந்தனைக் குள்ளே சிறகடிக்கும் வண்டுயிர்ச்
    சங்கிலே நின்றூதவும்
    வெறிகொண்டு விட்டேன்
    வானைப் பிளக்கும் வைரக் கரங்கள்
    இடிமுழக்கம் செய்வதாய் – அலை
    வாரித் தெறிக்கும் கடல்திகைக் கும்படி
    வார்த்தைப் பிரளயம் நிகழ்வதாய்த்
    தேன்பிலிற்றும் சொற்களுக்குள் – ஒளித்
    திகிரியே உருகி விழுவதாய் – அண்டக்
    கோளமெல்லாம் குலைநடுக்கத்துடன் நேர்க்
    கோட்டிலே வந்து நிற்பதாய்ப்
    பாட்டிலே என்மனக் கூட்டிலே பலகோடி
    வீணைகள் தாமே ஒலிசெய்வதாய்
    ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்வரமாகவே விண்
    மீன்களெல்லாம் நின்றதிர்வதாய்த்
    திமிர்பிடித்த யானை சிறகெடுத்துப் பறக்கும்
    தினவிலே எக்காளக் கனவிலே
    சுக்கு நூறாக வெடித்துச் சிதற
    வெறிகொண்டு விட்டேன்
    கனவுகளாய் மனவாசல் தோறும்
    சிதறிக் கிடக்கிறேன்
    படிக்க முயன்றால் பறந்து விடுவேன்
    பணிந்து கேட்கிறேன்
    காலடி ஓசை கேட்டால் கூட க்
    கலைந்து போய்விடுவேன் – மூச்சுக்
    காற்றில் பாதை அமைத்தால் உள்ளே
    நுழைந்து வளர்ந்திடுவேன்

    எப்படியிருக்கிறது கதை! புத்தி சிகாமணி எதுவுமே பேசாமல் உம்மென்று இருக்கிறானே! அவன் கூட தியானத்தில் இருக்கிறானோ!

    இப்படிக் கவிதை வெறி ஒருபுறம். வக்கீல் தொழில், குடும்பம், காதல் மனைவி, மறுபுறம். இழுபறிதான். ஆனால், ஷோபனா அடிக்கடி ஒன்று சொல்வாள். அவள் மேல் எனக்குள்ள காதலே, என் அக எழுச்சிக்கு, அதாவது, கவிதை வானில் மென்மேலும் சிறடித்துப் பறப்பதற்கு ஒரு தடையாகி விடக் கூடாது என்பதே அவள் கவலை. மேலே கண்ட கவிதையை நான் எழுதுவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன், என்னுடைய 25-ஆவது பிறந்த நாளன்று, சரியாகச் சொல்வதென்றால், அதற்கு முதல்நாள் மாலை, 12-01-1978 மாலை, அவள் இந்தக் கவலையை ஒரு கவிதையாகவே ஆங்கிலத்தில் வடித்துத் தந்தாள்:

    It’s a long time since I wrote to you
    In the words of song and honey dew
    But now my Love lends to my words
    The lilt of life and song of birds

    In the rush of time I wonder most
    What made me worth your heart as host;
    Though I may stumble, every time
    You straighten me with thoughts sublime

    What bade you bear my wounds and woe?
    What shade of rest do I give you?
    For every frown upon my face,
    Why should your heart pound twice apace?

    Let not Love be your tragic flaw
    As blessed muse I speak this law
    The gale of Life may lash me down
    You stay away, do not be blown

    You wear a halo round your crown
    Don’t crowd it with a worldly frown
    As blessed Muse I speak this law
    Let not Love be your tragic flaw

    இந்தக் கவிதையை நான் எப்படித் தமிழாக்கம் செய்வேன்?

    உனக்குநான் எழுதி வெகு நாட்களாயின
    பாடற் சொற்களைத் தேனில் நனைத்து
    இன்றென்
    காதலே சொற்களுக்குக் கொடை வழங்கியது
    உயிர்த்துடிப்பும் பறவையின் கானமும் குழைத்து
    இப்படித் தொடங்கி வளர்ந்த அந்தக் கவிதையில் இரண்டு வரிகள் அமர வரிகள்.

    “காதலே உன் வீழ்ச்சிக்குக் காரணம் ஆகிவிட வேண்டாம்; அருள்பெற்ற வாணியாய் இந்த விதிசெய்கிறேன்”

    மன்னிக்கவும். அந்த ஆங்கிலக் கவிதையை அப்படியே மொழிபெயர்க்க முடியவில்லை. தோற்றுவிட்டேன். வேறு சொற்களில் அடைபட மறுக்கும் அதன் ரெளத்திரத்தை நான் மதிக்கிறேன். கவித்திறத்தை மிஞ்சிய அதன் பவித்திரத்தை நான் வணங்குகிறேன்.

    அடாடா, எனக்கு எல்லாமே கவிதைதானா? ஆம், பள்ளியில் கவிதை, பத்திரிகை நடத்தினால் கவிதை, காதலில் கவிதை, களித்தால் கவிதை, கவலைப் பட்டாலும் கவிதை, திரைப்படம் எடுத்தால் கவிதை, நாடகம் போட்டால் கவிதை ….

    “இரு, இரு! கொஞ்சம் பொறு அப்பா. நாடகம் போட்டால் என்று பள்ளி நாடகத்தைத்தானே சொல்கிறாய்?” கேள்வி எழுகிறது.

    பள்ளியில் போட்ட நாடகத்தைச் சொல்லவில்லை. திருமணம் ஆன பிறகு ஒரு நாடகம் போட்டோம். அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 17

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 17

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 65Mukkonakkilikal - 66Mukkonakkilikal - 67Mukkonakkilikal - 68

     

     

     

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

     

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

     

     

    Share
  • கனவிலே கண்ணன்

    இசைக்கவி ரமணன்

     

    கனவிலே கண்ணன் (பாடல்)

     images (1)

     

    கனவிலே கண்ணன்
    நினைவிலே கண்ணன்
    கனவும் நினைவும் கலந்து மயங்கும்
    கவிதை யாவும் கண்ணன்
    கனவும் நினைவும் கண்ணன்
    கவிதை யாவும் கண்ணன்

    தன்னை உருக்கிக் கரைந்து போகும்
    தவத்தின் கனலில் கண்ணன்
    தானில்லாத லஹரியில் வந்து
    தழுவும் உறவு கண்ணன்
    கவலை யாவும் கன்னியராகி
    அவர்கள் நடுவில் கண்ணன்
    திசைதொலைந்து திணறும்போது
    தெருவின் முனையில் கண்ணன்

    தவத்தின் கனலில் கண்ணன்
    தழுவும் உறவு கண்ணன்
    கவலை நடுவில் கண்ணன்
    தெருவின் முனையில் கண்ணன்

    சொல்ல மறந்த வார்த்தையுள்ளே
    சுழலும் ஜோதி கண்ணன்
    சொல்லி முடிந்து ஓய்ந்த பின்னும்
    தொடரும் மெளனம் கண்ணன்
    எல்லை யாவும் தீர்ந்த போது
    இன்னும் இன்னும் கண்ணன்
    எதிரில் தோன்றி மறைந்து சிரிக்கும்
    இதய வாசன் கண்ணன்

    சுழலும் ஜோதி கண்ணன்
    தொடரும் மெளனம் கண்ணன்
    இன்னும் இன்னும் கண்ணன்
    இதய வாசன் கண்ணன்

     

    Share
  • சில நாட்கள்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (25)

     

    சிலநாட்கள்

    {கேட்டு மகிழ}

    0_5cd93_2d2431e3_orig[1]

    சிலநாட்கள் இப்படித்தான்
    கையில் எடுத்ததெல்லாம் கீழே விழும்
    காகிதம் கூட கனக்கும்
    எத்தைச் சொன்னாலும் தப்பாய்ப் போகும்
    அவளுக்கே கூட
    என் சொற்கள் சலிக்கும்

    சில நாட்கள் அப்படித்தான்
    உறங்கவே முடியாத உற்சாகம்
    ஒவ்வொர் அடியிலும் வெற்றிக் கல்
    அவளாகவே வந்து
    கழுத்தைக் கட்டிக்கொள்வாள்

    நாட்களே ஏனிப்படி இருக்கிறீர்கள்?
    ஏன் நடிப்பு? ஏதுக்கு நொடிப்பு?

    தேதியைக் கிழித்தான் சிறுவன்
    மீதி,
    நாட்காட்டியில்
    மிஞ்சிக் கெஞ்சிக் கொண்டிருந்தது
    செய்த கப்பலைச் செலுத்த வேண்டி
    மணலில் சரிந்து நதியில் இறங்கினான்

    வளர்ந்தும் குறுகியும் தளர்ந்தும்
    கரைதிமிறும் வெள்ளமாகவும்,
    அவ்வப்போது
    கரையோடு ஒதுங்கி ஆதங்கம் பேசியும்
    வறண்டும் கூட
    வளைந்து வளைந்து தொடரத்தான் செய்கிறது நதி.

    ஆற்றுக்குக் கடலும் முடிவில்லை என்றால்
    அது நடுவே நின்றாலென்ன?
    அடித்துக்கொண்டு சென்றாலென்ன?
    நதிபோலத்தானே நமது நாட்களும்?
    நகர்த்த முடியாத நிறுத்த இயலாத
    நிரந்தரத் தொடர்ச்சிதானே?

    ஒருநாள்
    கெண்டைகள் விழிகண்டு துள்ள, கூந்தலில்
    மண்டும் வண்டுகள் கண்ணில் மயங்கவும்
    மின்னற் கைகளால் விலக்க, நீரில்
    கண்ட முகத்தைக் கண்டு நாணிக்
    கல்லெறிந்து முகம் தேடியபடி
    ஆற்றங் கரையில் ஆறே உயிர்த்ததுபோல்
    தன்னைப் புறந்தள்ளிப் பாயும் கவிதையில்
    தானே மயங்கிக் கிடக்கும் கவிஞன்போல்

    அந்த மாலைப் பொழுதுகளில்
    அவள் தென்படுவாள்
    அடுத்தநாள் மாலை
    அந்த மாலையாய் இருக்காது
    அதற்கு அடுத்த நாள்
    மாலையே இருக்காது
    ஆனாலும் மாலை மீண்டும் வருமென்று
    ஆற்றுக்கும் மீனுக்கும் காற்றுக்கும் தெரியும்

    நேற்றைய நிகழ்வின் நினைப்புத்தானே
    இன்றைய வெறுமையை, நாளைய மறுப்பைக்
    கடப்பதற்கான சுவாசம்?

    அவற்றைத் தாண்டி அங்கே நின்றால்
    ஆற்றங் கரையில் அவள் இருப்பாள்
    அலைகள் புரளப் புன்னகைத்தபடி..

    அப்படித்தானே கண்ணே?

    படத்திற்கு நன்றி

     

    Share