Author: செல்வன்

  • இந்த வார வல்லமையாளர் (261)

    டிராபிக் ராமசாமி (அகவை 82) (கே. ஆர். ராமசாமி) ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச்சேவகர். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்.

    டிராபிக் ராமசாமி ஏராளமான பொதுநலவழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். 2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவரே. சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது. சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அமல் செய்யப்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் ராமசாமி.

    1

    ராமசாமி தொடர்ந்த வழக்குகளால் கோபம் கொண்ட எதிர்த்தரப்பினரால் பலமுறை தாக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது பணிகளை அவர் கைவிட்டதில்லை. 2000 ஆம் ஆண்டில் இவர் வழக்கறிஞர்களுக்கு எதிராகப் போட்ட வழக்குக்காக வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார்.
    2002 ல் மீன் விற்பனையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்..இவர் மீது பல்வேறு பொய்வேறு வழக்குகள் காவல்துறையினரால் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ராமசாமிக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    10 மார்ச் 2015ஆம் நாளன்று, சென்னை, புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு சாலை அருகே நின்று பேட்டி அளிக்கும் போது, வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வேப்பேரி காவல் நிலையத்தில் வீரமணி கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் டிராபிக் ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    வயது முதிர்வு காரணமாக தற்போது இவர் குழப்பமான மனநிலையில் சில போரட்டங்களை அறிவித்து விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். சில சமயம் எல்லை மீறி போராட்டங்களை அறிவிப்பதும் உண்டு. ஆனால் “எங்கே எவனுக்கு எது நடந்தால் எனக்கென்ன” என்ற சமூக அக்கறையற்ற சமுதாயத்தில் இவரை போன்ற மக்கள் நலத்தொண்டர்கள் அவசியம் எனும் நோக்கில் இந்த பெரியவருக்கு இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை உவகை கொள்கிறது

    (தகவல் உதவி: நன்றி தமிழ் விக்கிபிடியா)

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (260)

    இவ்வார வல்லமையாளராக பேராசிரியர் கண்மணி அவர்களை அறிவிக்கிறோம்.

    நாம் அனைவரும் “பழைய சோறு” என அறியும் உணவு இவரால் “ஐஸ் பிரியாணி” என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    அரை நூற்றா ண்டுக்கு முன்பு வரை என் அருமை எல்லோருக்கும் தெரிந்து தானே இருந்தது.
    எதனால் இந்த திடீர் மாற்றம்?
    என்னை எல்லோரும் ஒதுக்கி விட்டார்கள்.
    வெறும் வயிற்றில் ஒரு செம்பு நிறைய என்னை ஊற்றிக் குடித்துவிட்டு தெம்பாக வேலை பார்த்த பாட்டாளி வர்க்கத்திற்கு இப்போது என் நினைவே இல்லாமல் போய் விட்டதே !? அந்த அளவிற்கு போலி நாகரிகம் மேலாதிக்கம் செலுத்துகிறது.

    வட்டில் நிறைய என்னைப் போட்டு கெட்டித்தயிர் ஊற்றி பச்சை மிளகாயைக் கல்உப்போடு சேர்த்துக் கடித்துச் சுவைத்தவர் அளவிட முடியுமா?
    பச்சை வெங்காயத்தைக் கூட்டி பசியாற்றியதோடு ஆரோக்கியத்தையும் கட்டிக் காத்ததெல்லாம் பழைய கதையாகி விட்டது.
    ஊறுகாயும் ,வடகமும் ,வத்தலும் என எத்தனை எண்ணிலடங்கா கூட்டாளிகள்.எல்லாம் எளிமையின் சின்னங்கள்.
    ஒருவேளை இந்த எளிமை தான் என்னை ஓரங்கட்ட வைத்து விட்டதோ?!

    என்னோடு சேர்த்து வைத்துச் சுவைத்த பக்கஉணவுகள் —-அவற்றுக்கு எல்லாம் இன்னும் மவுசு குறையவில்லை.
    மாதா ஊட்டாத சோறு மங்கா ஊட்டும் என்பார்களே —ஒரு ராஜபாளையம் சப்பட்டை —தோல் சீவி துண்டு போட்டால் —இந்த இணைக்கு ஈடு எது?
    பங்குனி சித்திரை கத்தரி வெயிலின் போது களைப்பு நீங்க என்னளவிற்குத் தகுதியான வேறு உணவு எது?
    சப்பட்டை சீசன் ஓய்ந்து பஞ்சவர்ணம் வந்தால் தோலைச் சீவ வேண்டியதில்லை.—உரித்து விட்டு என்னோடு கடித்துச் சாப்பிடுவது தானே ருசி.
    எல்லா மாம்பழமும் வரத்து குறையும்போது வரத்தொடங்கும் காசாலட்டு;சும்மா கழுவித் தோலோடு வைத்துக்கொண்டு ஒருவாய்சோற்றுக்கு ஒருகடி

    சைவம் மட்டும் அல்லாமல் அசைவத்திற்கும் ….அசராமல் ஈடு கொடுத்தேன்.
    ஒரு விரலளவு சீலா கருவாடு போதும்;அப்படியே எல்.பி.ஜி .காஸ் அடுப்பிலேயே சுட்டு விடலாம்…பானை சோறும் காலி.
    இன்னும் வக்கணையாக வேண்டுமென்றால் ……
    “மையூன் தெரிந்த நெய்”யில் வெடித்து வேகத் தொடங்கும் …..வெடிகறி
    இப்படியே இன்னும் நீட்டிக்கொண்டே போகலாம்.
    நீர்ச்சோறு /பழையது என்றெல்லாம் பெயர் பெற்ற எனக்கு மாணவர் கூட்டம் வைத்த பெயர் தான் ஐஸ் பிரியாணி.
    என்னோடு போட்டி போட …..ஹைதராபாதி /செட்டிநாடு /ஆம்பூர் …..இன்னும் என்னென்ன …..
    பருப்புச் சோறுக்கு நெய் ஊற்றித் தயிரோடு உண்ணும் கூட்டத்தைப் பார்த்து ரசித்துச் சிரித்து விடலாம்…….குழந்தைக் கூட்டம் என்று ….
    ஆனால் அதைக் கூகைக்குப் பலியாகப் படைத்த சமுதாயம் தமிழ்ச் சமுதாயம் என்றால் ……கொடுமை …கொடுமை என்று கூக்குரலிடத் தோன்றுகிறது.
    உஷ்ஷ் ….எழுத்து கத்தக் கூடாது .
    அமைதி …அமைதி ……அமைதி ”

    மையூன் புழுக்கல் எனும் சங்கத்தமிழ் சொல்லாடலுக்கும் மிக புதுமையான, ஆனால் ஏற்கும் வண்ணம் புழுக்கல் என்பது அரிசி அல்ல, இறைச்சி புழுக்கலே எனும் விளக்கமும் அளித்தார். “உரை ஆசிரியர்களின் உரை என்பது விளக்கு கம்பம் போல, அதை ஒரு பாதைகாட்டியாக தான் பயன்படுத்தவேண்டுமே ஒழிய, அதையே சாசுவதமாக பிடித்து நின்றுவிடகூடாது” எனும் சிறப்பான வழியும் காட்டுகிறார்.

    இவரது தமிழின் மேன்மையை பாராட்டி இவரை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share
  • இந்த வார வல்லமையாளர் (259)

    இவ்வார வல்லமையாளராக தகடூர் கோபி அவர்களை அறிவிக்கிறோம்.

    இவர் தமிழ் மேலும் கணிணி மேலும் அயராத ஆர்வம் கொன்டவர்., இவரது ஹை கோபி தட்டச்சுபலகை தமிழ்தட்டாச்சு அதிகம் பரவாத 2000களின் துவக்கத்தில் பல பயனர்களுக்கு உதவி, தமிழில் தட்டச்ச உதவியது.

    இவர் கணிணிபொறியாளராக பல நிறுவனங்களில் பணியாற்றி இறுதியாக சிங்கபூரில் பணியாற்றினார். திருமுருக கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் மேல் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தவர்.

    1

    இவர் நேற்று மாரடைப்பில் காலமானார். இவரது மறைவு குறித்து வல்லமை நிறுவனர் அண்ணாகண்ணன் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்

    “தமிழ்க் கணிமைக்கு முக்கியப் பங்காற்றிய தகடூர் கோபி, மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரடைகிறேன். அவர் உருவாக்கிய தகடூர் எழுதியில் அவருக்கு இரங்கல் செய்தியை எழுதுகிறேன். சுமார் 15 ஆண்டுகளாக நட்பு, தமிழ்க் கணிமைக் கூட்டங்கள் சிலவற்றில் சந்திப்பு, இணையம் வழியாக நீடித்த உறவு என எங்கள் தொடர்பு நீண்டது. எங்கள் வல்லமை மின்னிதழில் உள்ள தட்டச்சுப் பக்கத்தில் அவரது தகடூர் தட்டெழுத்துச் செயலியை அமைத்துள்ளோம். அதில் உள்ள புதிய தட்டெழுத்துத் தெரிவில் என்னால் மிக விரைவில் தட்டி எழுத முடியும். வேறு எந்த எழுதியிலும் இதே விசையமைப்பு இல்லை. எனவே, அங்கங்கே நிறுத்தி நிறுத்தி எழுத வேண்டி வரும். எனவே, இந்தத் தகடூர் எழுதியை இதர எழுதிகளைப் போல், தனியே தரவிறக்கி, எந்தச் செயலியிலும் தட்டும் வசதியைக் கொண்டு வாருங்கள் என நீண்ட காலமாகக் கேட்டு வந்தேன். நேரம் அமையாததால் செய்ய முடியவில்லை என்று வருந்தி வந்தார். இளம் வயதில் மிகப் பெரிய உயரங்களை எட்டிய தகடூர் கோபி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.”

    வல்லமையாளர் தகடூர் கோபியின் வழியில் தமிழ்ப்பணியாற்ற உறுதிகொள்வோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share
  • இந்த வார வல்லமையாளர் (257)

    இவ்வார வல்லமையாளராக பைக் பந்தய வீராங்கனை சைபி அவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்

    சைபி… சாதனைகள் பல செய்திருக்கும் ஸ்டாண்டிங் பைக் ரைடர். டெய்லரிங் கடை, அவினாசி அத்திக்கடவு திட்டத் தன்னார்வலர் என இவருக்கு வேறு முகங்களும் உண்டு. கல்லூரி மாணவரான மகன் ரித்தின், ப்ளஸ் ஒன் படிக்கும் மகள் ரோஸ்மேரி ஆகியோருக்கு இவர் சிங்கிள் பேரன்ட்.  தன்னைச் சூழ்ந்த பிரச்னைகளை உதறி, நிமிர்ந்தெழுந்த கதையைச் சொல்கிறார் சைபி.

    “நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் இருக்கிற மண்வயல் கிராமத்துல ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அப்பா மேத்யூ, அன்பின் உருவம். அம்மா மேரி தன்னம்பிக்கை மனுஷி. எனக்கு ரெண்டு தம்பிகள், ஒரு தங்கை. வளர்ப்பில் எந்தப் பாலினப் பாரபட்சமும் காட்டாமல் எல்லோரையும் தைரியமா வளர்த்தாங்க. லீவு நாள்கள்ல மலைப்பகுதியில் இருக்கும் விவசாய நிலத்துக்குப் போயிட்டு வர்றதுக்காக, அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். அந்த மலையில சும்மா சல்லு சல்லுனு சைக்கிள்ல பறப்பேன். விமானத்துல போற மாதிரி இருக்கும்’’ என்கிற சைபி, பத்தாம் வகுப்புவரை படித்திருக்கிறார்.

    “அதுக்கப்புறம் வீட்டில் திருமணம் செஞ்சுவெச்சாங்க. ரெண்டு குழந்தைங்க பிறந்தாங்க. அந்தக் காலகட்டத்தில ஆக்கிரமிப்பு காரணமா எங்க நிலத்துல பாதியை இழந்துட்டோம். விவசாயமும் கைகொடுக்கலை.  நாடெங்கும் விவசாயிகள் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நிலைமை ரொம்ப மோசமாச்சு. நான் குடும்பத்தை நடத்த டெய்லரிங் கத்துக்கிட்டேன். என் கணவர், ஒருநாள் குடும்பத்தை விட்டுட்டு எங்கேயோ போயிட்டார். ரெண்டு குழந்தைங்களோட தனிமனுஷியா நின்னப்போ, அந்தத் துயரமே எனக்குத் தூண்டுகோலா இருந்தது. அவினாசி வந்து டெய்லரிங் கடை ஆரம்பிச்சேன். சுடிதார், பிளவுஸ்னு நேர்த்தியா தைச்சுக்கொடுத்ததால நிறைய வாடிக்கையாளர்கள் கிடைச்சாங்க. குடும்பம் நடத்தவும் வழி கிடைச்சது’’ என்பவர் தன் பைக் சாகசங்கள் பற்றிப் பகிர்கிறார்.

    ‘`மலை ரோட்டுல சைக்கிள் ஓட்டின ஆர்வமோ என்னமோ தெரியலை… பைக் ஓட்ட ஆசை வந்தது. அதைத் தொடர்ந்து மெள்ள மெள்ள கார், ஆட்டோ, ஜீப்னு கிடைக்கிற வாகனங்களையெல்லாம் ஓட்டிப் பழகினேன். முதல்ல பழகினதே `டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்’தான். அப்புறம் `டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்’ வாங்கினேன். அவினாசியிலிருந்து ஊட்டியில இருக்கிற அம்மாவைப் பார்க்கப்போறதுக்குக்கூட பைக்லதான்னு ஆகிடுச்சு. பைக் ஓட்டுறப்போ கெத்தா இருக்கும்.

    ‘ஒரு பொம்பளை பைக் ஓட்டுறதா’னு சாலைகளில் என்னை ஓவர்டேக் செய்யற ஆண்களுக்கு ஒரு சாதனை உணர்வு இருக்கும். நமக்குத் தேவை, பாதுகாப்பான டிரைவிங். அதனால அதையெல்லாம் நான் கண்டுக்கிறதில்ல. டென்ஷனா இருக்கும்போது ஒரு ரவுண்டு பைக்ல போயிட்டு வருவேன். இப்படித்தான் பைக் என்னில் பாதியானது’’ என்பவர், அதையே சாதனைக்களமாக மாற்றிய அனுபவத்தையும் சொல்கிறார்.

    “பைக் ஓட்டுறதுல ஏதாவது சாதனை பண்ணலாம்னு யூடியூப்ல தேடினேன். நிறைய பெண்கள் பைக்ல கிலோமீட்டர் கணக்குல டிராவல் பண்ணித்தான் சாதனை பண்ணியிருந்தாங்க. ஸ்டாண்டிங்லேயே பைக் ஓட்டுற சாதனை பண்ணலாமேனு நினைச்சு, அதுக்காகப் பயிற்சியெடுக்க ஆரம்பிச்சேன். தினமும் டெய்லரிங் ஷாப் வேலையை முடிச்சுட்டு ஒரு மணி நேரம் பிராக்டீஸ் பண்ணுவேன். நம்பிக்கை வந்ததும் ‘யூஆர்எல் வேர்ல்டு ரெக்கார்ட்’ஸுக்கு விண்ணப்பிச்சேன். அதுக்காக ஆர்வமுமா தயாரானேன்.

    ‘பொம்பளைக்கு எதுக்கு இந்த வேலை?’, ‘என்னது… நின்னுட்டே பைக் ஓட்டப்போறியா?’னு பலரும் என்னைக் கேவலமா பார்த்தாங்க. நான் அதையெல்லாம் பொருட்படுத்தலை. பல்சர் மாதிரியான பைக் என்றால் இன்னும் நிறைய சாகசங்கள் பண்ண முடியும். என்னோட பைக்ல இதெல்லாம் செய்றது கொஞ்சம் கஷ்டம். ஆனாலும், நான் முயற்சியைக் கைவிடலை. என் பையனும் பொண்ணும், ‘உன்னால நிச்சயம் முடியும்மா’ன்னு, எனக்காக அதிகாலை மூணு மணிக்கெல்லாம் அலாரம் வெச்சுடுவாங்க. நான் எழுந்து பைக் ஓட்டிப்பழகுவேன். அந்தப் பயிற்சி எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்துச்சு. `யுஆர்எல்’ அமைப்பிடம் 500 கிலோமீட்டர் ஓட்டறதா விண்ணப்பிச்சிருந்தேன். அவங்க,

    200 கிலோமீட்டர் போதும்னு சொல்லிட்டாங்க. இப்போ அந்த ரெக்கார்டை முடிச்சாச்சு. என் சாதனையை முறியடிக்க இன்னும் மூணு வருஷமாச்சும் ஆகும்’’ எனக் கூறுகையில் பெருமையும் பரவசமும் விரிகிறது சைபிக்கு.

    ‘`என்ன இருந்தாலும் என் சாகசத்தைப் புரிஞ்சிக்கிற அளவுக்குச் சமூகம் இல்லை. என்னைத் தட்டிக்கொடுக்கக்கூட ஆள் இல்லை. ஆனாலும், என் குழந்தைகள் என்னைப் பாராட்டினாலே போதும்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன். பைக் டிரைவிங் சாதனைக்காக ஓவர் டைம்தான் பார்க்க வேண்டியிருக்கு. சமாளிக்கிறது பெரும்பாடுதான். இருந்தாலும், அட்வான்ஸ்டு டைப் பைக் வாங்கணும், கின்னஸ்ல இடம் பிடிக்கணும்னு ஆசை.

    பைக் மேல நின்னுட்டு ஓட்றது, படுத்துட்டே ஓட்றதுனு இப்போ பல புதிய முயற்சிகளை ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் நிறைய சாகசங்கள், சாதனைகள் பண்ணப்போறேன். வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டுட்டேன். இந்த சாகச வெற்றி, அந்தக் காயங்களையெல்லாம் மறந்துபோகச் செய்யுது. என் பொண்ணுக்கும் ரேஸ் பைக் ஓட்டுறதுதான் லட்சியம். என் பையன், ‘உன்னை மாதிரி ஏதாச்சும் சாதனை பண்ணணும்மா’னு சொல்றான். பணம் இல்லைன்னாலும் வாழ்க்கையில இந்த சந்தோஷம் நிறைய கிடைச்சிருக்கு (நன்றி: விகடன்)

     

    வல்லமையாளர் சைபிக்கு நம் நல்வாழ்த்துகள்

     

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share
  • இந்த வார வல்லமையாளர் (257)

    இவ்வார வல்லமையாளராக விஞ்ஞானி சிவன் அவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    தமிழகத்தைச் சேர்ந்த கே.சிவன் இஸ்ரோ தலைவராகியுள்ளார். இந்த பதவியில் அமரும் முதல் தமிழர் இவர்தான். கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை என்ற கிராமத்தில், அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படிப்பைத் தொடங்கி நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான இஸ்ரோ தலைவல் பதவியில் அமர்ந்துள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமிற்கு பிறகு, அகில இந்தியாவிலும் சிவன் என்ற பெயர் ஒரே நாளில் பரவிவிட்டது. சிவனை தமிழர்களாகிய நாம் கொண்டாடுவதில் வியப்பேதுமில்லை.
    ஆனால், அண்டை மாநிலம் கூட அவர் தமிழராக இருந்தாலும் மலையாளிதான் என்று உரிமை கொண்டாடுவது வியப்பை அளிக்கிறது. இஸ்ரோ தலைவராக சிவனை அறிவித்ததும், அவரை அதிகம் கொண்டாடியது கேரள மாநிலம்தான். முன்னணி மலையாள பத்திரிகையான மனோரமா வெளியிட்ட செய்தியில், ”கன்னியாகுமரியில் பிறந்தாலும் சிவனுக்கு திருவனந்தபுரம்தான் தாய் வீடு. 30 ஆண்டுகளாக மலையாள மண்ணுடன் கலந்து விட்டவர் சிவன்” என்று கூறியுள்ளது. மேலும் ‘உறக்கம் அறியா விஞ்ஞானி’ என்றும் அந்த பத்திரிகை அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

    1983ம் ஆண்டில் இருந்து இஸ்ரோவில் பணி புரிந்து வரும் சிவன், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வுக் கூடத்தின் தலைவராக பணியாற்றி வந்தார். அப்துல் கலாமுக்கு பிறகு அண்டை மாநிலங்கள் கூட தமிழர் ஒருவருக்கு உரிமை கொண்டாடுவது சிவனைத்தான். தமிழர்கள் எப்படி வாழ வேண்டும். எந்த விஷயத்தில் சாதிக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் கே.சிவன்.

    இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டப் பிறகு அளித்த பேட்டியில், ” இந்த பதவி எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டமும் எனக்கு இருந்தாகவே கருதுகிறேன்’ என்று பணிவுடன் குறிப்பிட்டார். மேலும், ”என் மீது அரசு வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன். பொறுப்பை உணர்ந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கானத் திறமையானவர்கள் இஸ்ரோவில் நிறைந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பெரிய சாதனைகள் நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்ரோவை உலக நாடுகளே உன்னிப்பாக கவனிக்கின்றன. குறைந்த செலவில் ராக்கெட் ஏவும் திறன் இஸ்ரோவுக்கு உள்ளது. சந்திராயன் ௧, ஆதித்யா திட்டங்களை வெற்றிக்கரமாக்குவதுதான் இலக்கு” என்று கூறியுள்ளார். (நன்றி: விகடன்)

    பரிந்துரை செய்த அணுவிஞ்ஞானி ஜெயபாரதன் அவர்களுக்கு நன்றி.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share
  • இந்த வார வல்லமையாளர் (256)

    இந்த வார வல்லமையாளராக இளமுனைவர் திரு பொன்.சரவணன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    திருத்தம் சரவணன் எனும் பெயரில் வலைபதிவுகளில் எழுதிவரும் சரவணன், கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றுகிறார். தமிழ் இலக்கியங்களை புதுமையான பார்வையில் திருத்தி எழுதும் இவரது வழிமுறையை ஒட்டி தன் பெயரை ‘திருத்தம் சரவணன்’ என மாற்றிக்கொண்டதாக குறிப்பிடுகிறார்.

    சங்க இலக்கியத்தில் கழுதை, சங்க இலக்கியத்தில் குதிரை எனும் இவரது கட்டுரைகளை பாராட்டி இவரை வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

    1

    கட்டுரையில் இவர் குறிப்பிடுவதாவது

    “கழுதை – என்றாலே தெருக்களில் ஆங்காங்கே திரிந்தவாறு காகிதங்களையும் சுவரொட்டிகளையும் தின்றவாறும் கண்ட இடங்களில் படுத்துக்கொண்டும் இருப்பதான அந்த ‘பாவப்பட்ட’ விலங்குதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இப்போது காகிதங்களுக்குப் பதிலாக நெகிழிப்பைகள் பெருகிவிட்டதால் பாவம் இந்தக் கழுதைகள் அறியாமல் அவற்றைத் தின்று செரிக்கமுடியாமல் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றன. விளைவு? துணியை வெளுக்கும் தொழிலைச் செய்வோரிடம் தவிர வேறெங்கும் கழுதைகளையே பார்க்கமுடியாத நிலை தோன்றிவிட்டது. கழுதைப்பாலுக்கு அவ்வப்போது மவுசு கூடுவதால் கழுதைகளை இன்னும் உயிருடன் நடமாட விட்டிருக்கின்றார்கள். ஒருகாலத்தில் பொருள் போக்குவரத்துக்கு மிகவும் உதவியாய் இருந்துவந்தது கழுதை இனம் தான். மாடுகளும் உதவும் என்றாலும் அதற்கு வண்டி கட்டவேண்டும். கழுதைக்கு மட்டும் தான் வண்டியே தேவையில்லை. எவ்வளவு பெரிய பாரத்தினையும் தாங்கிக்கொண்டு செல்லும். பொதி சுமப்பதற்கென்றே பிறந்த இந்த விலங்கினைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளை இங்கே விரிவாகக் காணலாம்.

    கழுதை – வேறு பெயர்களும் காரணங்களும்:

    கழுதை என்னும் விலங்கினைக் குறிக்க கழுதை என்னும் பெயரைத் தவிர, அத்திரி, வேசரி ஆகிய பெயர்களையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றுள் அத்திரியும் வேசரியும் கோவேறு கழுதையைக் குறிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளன.

    கோவேறு கழுதை என்பது கழுதைக்கும் குதிரைக்கும் கலப்பினமாகப் பிறந்ததாகும். அத்துதல் என்பது தனித்தனியான இரண்டு பொருட்களை இணைத்து ஒன்றாக்குதல் என்னும் பொருளைத் தரும். கழுதை இனத்தையும் குதிரை இனத்தையும் கலந்து உருவாக்கிய இனம் என்பதால் கோவேறு கழுதைக்கு ‘அத்திரி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

    சங்க இலக்கியத்தில் கழுதை:

    சங்க இலக்கியங்களில் கழுதையைப் பற்றியும் கோவேறுகழுதையைப் பற்றியும் சில பாடல்களில் கூறப்பட்டுள்ளன. கழுதைளைப் பற்றிக் கூறும்போது அதன் செவிகள் நீளமானவை என்றும் உட்குழிந்த நிலையில் இருப்பவை என்றும் கூறப்பட்டுள்ளது. கழுதைகளின் வாயானது வெளுப்பாக இருந்ததாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. உப்பளங்களில் விளைந்த உப்பின் மூட்டைகளையும் மிளகுப் பொதிகளையும் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு வணிகர்கள் சென்றதைப் பதிவுசெய்துள்ளன. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள், தோற்ற மன்னர்களின் ஊர்களில் இருந்த தெருக்களில் எல்லாம் கழுதைகளைப் பூட்டி உழுது அவர்களை அவமானப்படுத்திய செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன. கோவேறுகழுதைகளைப் பற்றிக் கூறுமிடத்து, கடற்கழிகளிலும் கடற்கரைகளிலும் அத்திரி பூட்டிய தேரில் தலைவன் தலைவியைச் சந்திக்க வந்துசென்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வையை ஆற்றில் புனலாட்டு விழாவின்போது அத்திரிகளைப் பயன்படுத்திய செய்தியும் கூறப்பட்டுள்ளது. இனி கழுதைகளைப் பற்றியும் கோவேறுகழுதைகள் ஆகிய அத்திரிகளைப் பற்றியும் சங்க இலக்கியங்கள் கூறுகின்ற செய்திகளைத் தனித்தனித் தலைப்புக்களின் கீழ் விரிவாகக் காணலாம்.

    கழுதை:

    இந்தியாவில் குறிப்பாகச் சங்ககாலத் தமிழர்களால் வளர்க்கப்பட்ட கழுதைகளின் விலங்கியல் பெயர் ஈகூஸ் ஆப்ரிகானஸ் அசினஸ் ( ஏஃஊச் ஆfரிcஅனுச் ஆசினுச் ) ஆகும். கழுதைகளில் கருப்பு, பழுப்பு, வெளுப்பு உட்பட பல்வேறு நிறங்கள் உண்டென்றாலும் உடலமைப்புக் கூறுகளும் பயன்பாடும் அனைத்துக்கும் பொதுவானவையே. இதைப்பற்றிய சில செய்திகளைக் கீழே காணலாம்.

    கழுதையின் உடலமைப்பு:

    கழுதையின் செவிகள் குதிரைகளைக் காட்டிலும் நீளமானவை. சொல்லப்போனால், குதிரைக்கும் கழுதைக்கும் இருக்கும் முதல் வேறுபாடே செவிகள் தான். கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல் கழுதையின் நீண்ட செவிகளைப் பற்றிக் கூறியுள்ளது.

    நெடும் செவிக் கழுதை – அகம். 343

    கழுதையின் செவிகளைப் பற்றிக் கூறுமிடத்து, அவை உட்குழிந்து காணப்படும் என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

    அணர் செவிக் கழுதை – பெரும்.80

    இப்பாடலில் வரும் அணர்தல் என்ற சொல் உட்குழிதல் என்ற பொருள்படும்.

    கழுதையின் வாயைப் பற்றிக் கூறுமிடத்து, அவை வெண்மை நிறத்துடன் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்களில் பதிவு செய்துள்ளனர் சங்கப் புலவர்கள்.

    வெள் வாய்க் கழுதை – புறம். 15, 350.

    கழுதையின் பயன்பாடு:

    சங்ககாலத்தில் தமிழர்கள் பொதிசுமந்து செல்வதற்கே கழுதைகளைப் பெரிதும் பயன்படுத்தி இருக்கின்றனர். பெரும்பாலும் உப்பளங்களில் விளைந்த உப்பினை மூட்டைகளாகக் கட்டிக் கழுதையின் முதுகில் ஏற்றிப் பல இடங்களுக்குக் கொண்டு சென்றுள்ளனர். கடுமையான வெயிலைப் பொறுத்துக்கொண்டு கரடுமுரடான நிலங்களில் உப்புமூட்டைகளைச் சுமந்துகொண்டு கழுதைக் கூட்டம் சென்ற காட்சியினைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துவதைப் பாருங்கள்.

    அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின்
    உணங்கு திறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
    குட புல மருங்கின் உய்ம்மார் புள் ஓர்த்து
    படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்
    நிரை பர பொறைய நரைப்புறக் கழுதை
    குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்
    வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை – அகம். 207

    கிழக்குக் கடலோரங்களில் கடல்நீர் பரந்த உப்பளங்களில் காய்ச்சலால் உண்டான வெண்கல் அமிழ்தமான உப்பினை மேற்குப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டி, நல்நிமித்தம் பார்த்து, படைகொண்ட ஆடவர்கள் சூழ, உப்புமூட்டைகளைச் சுமந்தவண்ணம் வரிசையாகச் செல்கின்ற வெண்ணிற முதுகினை உடைய கழுதைகள் உதைத்ததால் பிறழ்ந்த கற்களையும் கடுமையான வெப்பத்தையும் உடைய அச்சந்தரும் வழியில்… என்று அந்த வழியைப் பற்றி விவரிக்கிறது மேற்காணும் பாடல்வரிகள்.

    உப்பு மட்டுமின்றி பல்வேறு விளைபொருட்களையும் கழுதைகளின் முதுகில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். மஞ்சள்நிறத் துணிகளில் மிளகுகளைப் பெரும்பொதிகளாகக் கட்டிக்கொண்டு அவற்றைக் கழுதைகளின் முதுகில் ஏற்றிக்கொண்டு வணிகர்கள் வேறிடம் நோக்கிச் செல்கின்றனர். அப்போது அந்தப் பொதிமூட்டைகள் பார்ப்பதற்குப் பழுத்த பலாப்பழங்களைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

    தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
    சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்
    புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
    அணர்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கு – பெரும்.80

    பரந்து விரிந்து வளர்ந்திருந்த பலாமரத்தின் அடியில் காய்த்திருந்த பல சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தின் மேற்புறம் போலத் தோன்றுகின்ற மிளகுப்பொதியினைத் தாங்கியதும் முதுகில் வடுக்களையுடையதும் உட்குழிந்த செவிகளையுடையதும் ஆன கழுதைக்கூட்டம் செல்கின்ற காட்சியை மேற்பாடல் வரிகள் விளக்குகின்றன.

    கழுதைகளைப் பொதிசுமப்பதற்கு மட்டுமின்றி உழவுக்கும் பயன்படுத்துவது பொதுவான வழக்கமே. ஆனால், சங்க காலத்தில் உழவர்கள் கழுதைகளைக் கொண்டு தமது விளைநிலங்களில் உழவு செய்ததாகப் பதிவுகள் இல்லை. காரணம், மாடுகளைப் பூட்டி உழுதல் என்பது பெருமைக்குரியதாகவும் கழுதைகளைப் பூட்டி உழுதல் என்பது பெருமையற்றதாகவும் அக்காலத்தில் கருதப்பட்டது. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள், தோற்றுப்போன மன்னர்களை அவமானப்படுத்துவதற்காக, அம்மன்னர்களின் கோட்டைக்குட்பட்ட நிலங்களில் கழுதைகளைப் பூட்டி உழுது வெள்ளைவரகு, கொள்ளு போன்றவற்றை வித்தியதாகக் கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன.

    உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து
    நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து
    அணங்கு உடை மரபின் இரும் களம்தோறும்
    வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி
    வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
    வைகல் உழவ வாழிய பெரிது என – புறம். 392

    கடும்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
    வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டிப்
    பாழ் செய்தனை – புறம். 15

    கோவேறு கழுதை:

    கோவேறுகழுதை என்பது கழுதைக்கும் குதிரைக்கும் கலப்பினமாகப் பிறந்தது என்பதால் இரண்டின் குணங்களையும் கொண்டிருக்கும். எனவே இதன் விலங்கியல் பெயர் ஈகுஸ் அசினஸ் x ஈகுஸ் கபாலஸ் ( ஏஃஊச் அசினுச் x ஏஃஊச் cஅபல்லுச் ) ஆகும். கழுதைகள் பொதிசுமக்கும் திறன் கொண்டவை; ஆனால் கழுதைகளால் வேகமாக ஓடவோ நெடுந்தூரம் ஓடவோ இயலாது. குதிரைகள் வேகமாக நெடுந்தூரம் ஓடும் திறன் கொண்டவை. ஆனால், அவற்றால் பொதிசுமக்க இயலாது. குதிரை மற்றும் கழுதைகளின் கலப்பினமான கோவேறு கழுதைகளால் பொதிசுமக்கவும் முடியும்; நன்கு வேகமாக ஓடவும் முடியும். சங்க இலக்கியங்களில் அத்திரி என்றும் வேசரி என்றும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.

    கடற்கரை மணற்பரப்பிலும், கடலின் கழிமுகப் பகுதிகளில் காணப்படும் சேற்றுநிலங்களிலும் நீரிலும் கூட அத்திரிகள் பாய்ந்தோட வல்லவை. அதனால் தலைவன் தலைவியைச் சந்திக்க அத்திரி பூட்டிய தேரில் வந்து செல்வது வழக்கம். இதைப்பற்றிக் கூறும் சில சங்கப்பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    கொடு நுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
    வடி மணி நெடும் தேர் பூண ஏவாது …. – அகம். 350

    கழிமுகப் பகுதியில் இருந்த சேற்றின்மேல் ஓடிவந்ததால், அத்திரியின் உடலெல்லாம் சேறுபூசி இருந்ததாகவும் அதன் குளம்புகளின் கீழே செந்நிற இறால்கள் சிக்கி இருந்ததாகவும் கூறும் பாடல்வரிகள் கீழே:

    கழி சேறு ஆடிய கணைக்கால் அத்திரி
    குளம்பினும் சேஇறா ஒடுங்கின – நற். 278

    கழிமுகப் பகுதியில் இரவிலே தலைவன் அத்திரியின்மீது ஏறி வரும்போது கடற்கழி நீரில் இருந்த சுறாக்கள் அத்திரியின் காலைக் கடித்துப் புண் உண்டாகியதால் அது தளர்வாகச் சென்றதைக் கூறும் பாடல்வரிகள் கீழே:

    கழிச்சுறா எறிந்த புண் தாள் அத்திரி
    நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ – அகம். 120

    வையை ஆற்றில் புதுப்புனல் வந்தபோது புனலாட்டுத் திருவிழாவிற்கு ஆடவரும் பெண்டிரும் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். அப்போது அவர்களுடன் குதிரைகளும் யானைகளும் கோவேறுகழுதைகளும் மக்களையும் பொருட்களையும் சுமந்துகொண்டு ஆற்றின்கரையே இடிந்துவிழுவதைப் போலச் செல்கின்றன. இதைப்பற்றிக் கூறும் பரிபாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    மாவும் களிறும் மணி அணி வேசரி
    காவு நிறைய கரை நெரிபு ஈண்டி – பரி. 22

    முடிவுரை:

    கழுதைகள் மற்றும் கோவேறுகழுதைகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள செய்திகளை மேலே கண்டோம். சங்ககாலத்தில் மட்டுமின்றி இன்றுவரையிலும் கழுதைகள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டே வந்துள்ளன. கழுதைகள் தொடர்பாக வழங்கப்பட்டுவரும் பழமொழிகளே இதற்கொரு சான்றாகும். கழுதை கெட்டால் குட்டிச்சுவர், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது ஆகியவை அப்பழமொழிகளில் சிலவாகும். இப்பழமொழிகள் உணர்த்தும் உண்மையான பொருட்களை அறிந்துகொள்ள ‘கழுதையும் கட்டெறும்பும் குட்டிச்சுவரும் ‘ என்ற ஆய்வுக்கட்டுரையினைப் படிக்கலாம்.”

    வல்லமையாளர் பொன்.சரவணன் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share
  • இந்த வார வல்லமையாளர் (255)

    இந்த வார வல்லமையாளராக திரு கவுதம சன்னா அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    கவுதம சன்னா ஒரு சிறந்த சமூக- அரசியல் எழுத்தாளர் ஆவார். அரசியல் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் பல நூல்களையும், படைப்புகளையும் எழுதியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராக மக்கள் தொண்டாற்றி வருகிறார். வசிப்பிடம் சென்னை ஆகும்.

    இவர் பேராசிரியர் யூகோ கொரிங்கே அவர்களுக்கு அளித்த பேட்டி சவுத் ஆசியனிஸ்ட் பத்திரிக்கையில் வெளியிடபட்டு உலகெங்கும் தமிழ் பேசும் பட்டியல் இன மக்களின் உரிமைப்போரின் வரலாற்றை கொண்டு செல்லும் வண்ணம் அமைந்தது. அதில் பல புரட்சிகரமான முற்போக்கு கருத்துக்களை சன்னா முன்வைக்கிறார்.

    அம்பேத்கர் நூற்றாண்டு விழாவின் போதுதான் பட்டியல் இன மக்களின் உரிமைப்போர் தமிழகத்தில் தொடங்கியது எனும் பொதுக்கருத்தை உடைத்து, அயோத்தி தாச பண்டிதர் காலத்தில் 19ம் நூற்றாண்டிலேயே பட்டியல் இன மக்களின் விடுதலைக்குரல் தமிழகத்தில் முழங்க துவங்கியதை சன்னா அப்பேட்டியில் சுட்டிக்காட்டுகிறார். பட்டியல் இன மக்களின் தலைவர் சிவராஜை பற்றி பின்வருமாறு கூறுகிறார்

    “சிவராஜ் (குடியரசு கட்சி தலைவர்) ஒரு முக்கியமான தலைவர். அவர் அம்பேத்கருக்கு அடுத்த நிலையில் அவருடன் இருந்தவர். ஆனால் அவரைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை சொல்லுங்கள்? அவர் அம்பேத்கரை விட ஒரு வருடம் மட்டுமே மூத்தவர், ஆனால் அவரைப்பற்றி எழுதுபவர்கள் யாருமே இல்லை. அம்பேத்கரின் மறைவுக்கு பின் அவர் அமைக்க விரும்பிய குடியரசுக் கட்சியை என் சிவராஜ் அமைத்தார். அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியை அமைக்க விரும்பி அதற்கான விதிகளையும், கொள்கைகளையும் எழுதினார். ஆனால் அக்கனவு நனவாகும் முன்னரே மறைந்தார். குடியரசுகட்சியை உருவாக்கி அகில இந்திய அளவில் கொண்டு சென்றதில் பெரும்பங்கு என். சிவராஜுக்கு உண்டு. அப்போது அதிகம் புகழ் பெற்ற தலைவர்கள் தமிழகத்தில் பலர் இருந்தார்கள். அம்பேத்கர் 1956ல் இறந்தார். குடியரசுக்கட்சி 1957ல் உதயமாகிறது. 1962 தேர்தலில் திமுக குடியரசுக் கட்சியுடன் கூட்டணி சேர்கிறது. கூட்டணி உருவாகும் சமயத்தில் தமிழகத்தில் இருந்த முக்கிய தலித் தலைவர் ஆர்ய சங்கரன் ஆவார். அவருக்கு பின் பள்ளிகொண்டா எம். கிருஷ்ணசாமி, ஜி.மூர்த்தி, சக்திதாசன், சேப்பன், எல். இளையபெருமாள், வை.பாலசுந்தரம் மற்றும் பல தலைவர்களும் பிற்காலத்தில் வந்த இயக்கங்களுக்கு வழிகோலினார்கள். இந்த தலைவர்களை யாருமே அங்கீகரிக்கவில்லை. திமுகவுடன் கூட்டு சேரும் அளவுக்கு அக்காலகட்டத்தில் குடியரசுக்கட்சி வலுவானதாக இருந்தது. என்.சிவராஜ் வேலூரில் போட்டியிட்டு இரண்டாமிடத்தை பிடித்தார்”

    தமிழ் தேசியம் குறித்து பின்வரும் கருத்தை முன்வைக்கிறார்

    “தமிழகத்தில் மக்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் என்றால் தலித் கட்சி என மட்டுமே நினைக்கிறார்கள். அம்பேத்கரின் எழுத்தை பார்த்தால் அவர் தலித்துகளை “பெரும்பான்மை, ஆனால் சிதறிய பெரும்பான்மை” என குறிப்பிடுகிறார். நாடு முழுக்க பார்த்தால் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் (தொகுதி, ஊர், நகரம்) என்பது போன்ற சிறிய வட்டங்களில் பார்த்தால் அவர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். ஆக தொகுதி என வருகையில் அவர்கள் சிறுபான்மையாகவே இருக்கிறார்கள். இந்திய அளவில் தலித்துகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் ஒவ்வொரு பகுதியிலும் அவர்கள் சிறிய கட்சிகளாகவே இருக்கமுடியும். இத்தகைய ஒட்டுவங்கியை வைத்துக்கொண்டு தலித் கட்சிகள் ஆட்சியை பிடிக்க முடியாது. இது நடக்கவேண்டுமெனில் மேலும் பல வேலைகளை நாம் செய்யவேண்டும். அதே சமயம் தலித்துகள் பெரும்பான்மை சமூகத்தில் அங்கீகாரத்தை பெற்றால் அவர்கள் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உதாரனமாக அம்பேத்கர் துவக்கிய “சுதந்திர தொழிலாளர் கட்சியில்” தலித்துகளும், தலித் அல்லாதவர்களும் இருந்தார்கள். அதன்பின் அவர் அதை “எஸ்.சி தொழிலாளர் அமைப்பாக” மாற்றுகிறார். எஸ்.சி அரசியல் செய்யவேண்டும் என்ற நிலை வந்தவுடன் அவர் தலித்துகளை ஒரு அரசியல் சக்தியாக மாற்றியபின்னரே மற்றவர்களுடன் அவர்களை இணைந்து பணியாற்றவைக்க முடியும் என நம்பினார். இதன்பின் இந்திய குடியரசுகட்சிக்கான ஆலோசனையை அவர் முன்வைக்கிறார்.

    இந்த வேறுபாடுகளை பார்க்கவும்: முதலில் சுதந்திர தொழிலளர் கட்சி. அதன்பின் எஸ்.சி தொழிலாளர் அமைப்பு, அதன்பின் இந்திய குடியரசுக்கட்சி. ஆக அவர் முதலில் ஒரு பொதுவான அடையாளத்தை அமைக்க முயன்றார். அது வெற்றியடையவில்லை. அதன்பின் சாதி அடையாளத்தை உருவாக்குகிறார். அது ஒரு அளவு வெற்றியும் பெறுகிறது. ஆனால் சாதிய அடையாளத்தை மட்டும் வைத்த்க்கொன்டிருந்தால் அதுவே ஒரு தடைக்கலாக மாறும் என்பதை உணர்ந்து இந்திய குடியரசுக்கட்சி எனும் ஜனநாயக அமைப்பை உருவாக்குகிறார். இதுபோன்ற சிந்தனைகளை அனைத்து இந்திய கட்சிகளிலும் காணலாம். பலவிதங்களில் அவர்கள் இதேபோன்ற உத்திகளை கையாண்டார்கள். தமிழ்நாட்டில் முதலில் ரிபப்ளிக்கன் கட்சி உருவானது, அதன்பின் ஆதிதிராவிடர் கட்சிகள் உருவாகின, அதன்பின் பள்ளர்களுக்கான இயக்கம், பறையர்களுக்கான இயக்கம், அருந்ததியினருக்கான இயக்கம் ஆகியவை உருவாகின. இப்படி உருவானபின் கொஞ்ச காலம் இயக்கங்களாக் அவை தொடர்கின்றன. ஆனால் சாதி அடிப்படையிம் மட்டுமே அவற்றால் இயங்கமுடியாது என வருகையில் அவை விடுதலை சிறுத்தைகள். புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சி என்பது போன்ற கட்சிகளாக உருவெடுக்கின்றன. பொதுவான பெயர்களில் கட்சிகளை துவக்கி, பொதுமக்களை திரட்ட முயலுகையில் பொதுவான ஒரு காரணியை வைத்தே அணுக முடிகிறது. இதுவே நல்ல வாய்ப்பு என்பதால் தமிழ் தேசியம் என்பது மக்களை திரட்டும் மிக நல்ல ஒரு அடித்தளமாக அமைகிறது. இதனால் பல தலித் கட்சிகள் தமிழ் தேசியத்தை முன்வைக்கின்றன. பொதுவான அடையாளத்தை தேடும் முயற்சியின் ஒரு பகுதியே இது என கூறலாம். அதே சமயம் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கபட்ட போது அனைவரும் அவர்களுக்காக குரல் கொடுத்தாலும், ஒடுக்கபட்டவர்கள் எனும் அடிப்படையில் தலித்துகள் அவர்களுக்கு குரல் கொடுத்தபோது அதில் இருந்த உணர்ச்சிகரமான பிணைப்பு மற்ற கட்சிகள் குரல் கொடுத்தபோது இல்லாமல் போனது. இங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தலித்துகள், அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தமிழர்களில் 80% என கூறலாம்.புலிகள், புலிகள் அல்லாதவர்கள் என அனைத்து தமிழருமே அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தார்கள்.

    சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் பொதுவான தமிழ் அடையாளத்தை முன்வைத்தபோது அதேபோன்ற ஒரு பொதுவான அடையாளத்தை தமிழ்தேசியம் இங்கேயும் பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் தலித்துகள் தமிழ் தேசியத்தை கையில் எடுக்கிறார்கள். தமிழ் தேசியம் தலித்துகளுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்குமா என்ற கேள்வி இருந்தாலும் அது பொதுவான அடையாளத்தை நோக்கி நகரும் ஒரு முயற்சியே ஆகும். இது ஒப்புக்கொள்ளபட்டு ஏற்றுக்கொள்ளபப்ட்டால் சாதி உணர்வுகள் குறைந்து, சாதிய அரசியலும் குறைந்து உண்மையான ஜனநாயகம் மலரும். இந்த அடிப்படையிலேயே தமிழ் தேசிய அரசியலை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.”

    தலித் அல்லாதவர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் அளிப்பது பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்

    ” நாங்கள் தலித் அல்லாதவருக்கு கட்சியில் பதவிகளை கொடுப்பது பிற கட்சிகளுக்கும், சாதியினருக்கும் “நீங்களும் இக்கட்சியின் ஒரு அங்கம்” எனும் செய்தியை அளிக்கிறது. இதுவரை மற்ற சாதியினர்க்கும், கட்சிகளுக்கும் நெருக்கமாகும் வாய்ப்பு எங்களுக்கு மிக குறைந்த அளவிலேயே இருந்துவந்தது. பிற சாதிக்கட்சி தலைவர்களுடன் எங்களால் நேரடியாக பேச முடியவில்லை. அந்த தலைவர்களுக்கும் தலித் தலைவர்களுடன் பேசும் மனநிலையும் இல்லை. இத்தகைய மனத்தடை நீடித்து வந்தது. ஆக இம்மாதிரி சமயங்களில் கூட்டணி பற்றி பேசுவதற்கும், தொகுதிகளை பற்றி பேசுவதற்கும் எங்கள் கட்சியில் உள்ள தலித் அல்லாதோர் பெருமளவு உதவியாக இருக்கிறார்கள். இதன் இன்னொரு பலனும் என்னவெனில் எங்காவது ஜாதிக்கலவரம் நிகழ்ந்தால் எங்கள் கட்சியில் உள்ள தலித்-அல்லாத தலைவர்கள் களத்தில் உள்ள தலித் அல்லாதவருடன் எளிதில் பேச முடிகிறது. இது அமைதியை உருவக்கவும், பிரசனைகளை தீர்க்கவும் உதவுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள தலித் அல்லாதோர் இதில் பெரும்பங்கு வகித்துள்ளார்கள். அவர்கள் பங்கை அங்கீகரிப்பதன் மூலமும், மதிப்பதன் மூலமும் இதுவும் ஒற்றுமை நிலவும் சமூகத்தை உருவாக்கும் முயற்சியே என்பதை புரிந்து கொள்ளலாம்.”

    தமிழக பட்டியல் இன மக்களின் போராட்ட வரலாற்றை இத்தனை தெளிவாக உலக மக்களுக்கு எடுத்துரைத்த சன்னா அவர்கள் பல்வேறு சமூக, மக்கள் நல போராட்டங்களில் கலந்துகொண்டும் தமிழ் பவுத்தத்தின் மீட்டெடுப்பில் ஆர்வம் செலுத்தியும் பங்காற்றி வருகிறார். இத்தகைய கூர்ந்த சிந்தனையாளரை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சியும், உவகையும் அடைகிறது.

    வல்லமையாளர் கவுதம சன்னாவுக்கு நம் நல்வாழ்த்துகள்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர் (254)

    இவ்வார வல்லமையாளராக சிற்பி இராசன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம்.

    இவரை பற்றி பதிவு எழுதி அறிமுகபடுத்தியுள்ள சண்முகநாதன் அவர்கள் குறிப்பிடுவதாவது

    `சிற்பி ராஜன்’ என்ற பெயர் பதிக்கப்பட்ட ஐம்பொன் சிற்பங்களுக்கு, உலக கலைப்பொருள் வர்த்தகத்தில் பெரும் மரியாதை உண்டு. இறை மறுப்பாளரான ராஜன் கைபட்டு உருவாகும் சிற்பங்களில் தெய்வீகம் ததும்புகிறது. பாரம்பர்ய செறிவு மாறாமல், நவீன உத்திகள்கொண்டு அவர் உருவாக்குகிற இறைச் சிற்பங்கள், உலகின் பெரும்பாலான மியூசியங்களில் இந்தியக் கலாசாரத்தின் சின்னங்களாக இருக்கின்றன. காஞ்சி சங்கர மடம் முதல் குஜராத்தில் உள்ள சுவாமி நாராயண் கோயில் வரை இந்தியாவெங்கும் உள்ள பெரும்பாலான கோயில்களின் உற்சவர்கள் தயாரானது, இந்த பெரியார் தொண்டரின் பட்டறையில்தான்.

    பரம்பரை ஸ்தபதிகளே நிறைந்திருக்கும் சிற்பத் தொழிலுக்கு, தறி ஓட்டுபவரையும், விவசாயத் தொழிலாளரையும், செங்கல்சூளையில் வேலை செய்தவரையும் கொண்டுவந்து, ஒளிவுமறைவில்லாமல் முழுக் கலையையும் கற்பித்து தனி அடையாளங்கள்கொண்ட சிற்பிகளாக ராஜன் அவர்களை உருவாக்கியிருக்கிறார். ராஜனின் பட்டறையில் தொழில் பழகிய 216 சிற்பிகள் சுவாமிமலை மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகளில் சோழர் காலத்துச் சின்னங்களான ஐம்பொன் சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், தலித்துகள். சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையே சமஸ்கிருதம்தான். ராஜன், அதைப் பயின்றிருக்கிறார். அவரது மாணவர்களுக்கும் பயிற்றுவித்திருக்கிறார்.

    “நிறைய பேர் கேட்பாங்க… `கடவுளே இல்லைனு சொல்ற பெரியார் கட்சி ஆளு, ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?’னு. நான் எந்தத் தொழிலுக்குப் போயிருந்தாலும் பெரியார் தொண்டன்தான். ஐம்பொன் சிற்பம் செய்றது என்னோட தொழில். என் பார்வைக்கு இது, கலை வடிவான சிலை. இதை வாங்குறவர் கடவுளாகப் பார்க்கிறார். என் பட்டறையோட முகப்பிலேயே பெரியார், அம்பேத்கர் படங்களைப் பெருசா ஃபிரேம் பண்ணி மாட்டிவெச்சிருக்கேன். நாத்திகம் பேசித்தான் சிற்பத்தை வியாபாரம் பண்ணுவேன். ஆயுதபூஜை, தீபாவளியெல்லாம் எங்க பட்டறையில கொண்டாடுறதே இல்லை. பெரியார் பிறந்தநாள், அம்பேத்கர் பிறந்தநாள், மே தினம் இந்த மூணு நாளையும் ரொம்பவே சிறப்பா கொண்டாடுவோம். அன்னைக்கு எல்லாருக்கும் மாட்டுக்கறி பிரியாணி விருந்து நடக்கும். முக்கியமான ஆளுமைகள் வந்து, எங்க பிள்ளைகள் மத்தியில பேசுவாங்க. என்கிட்ட சிற்பம் கத்துக்கிட்டுப்போன 216 பிள்ளைகளும் அப்படித்தான் இருக்காங்க. அவங்க மூலமா உருவாகுற அடுத்த தலைமுறையும் அப்படித்தான் இருக்கும்” – புத்தனைச் செதுக்கியபடி புன்னகை மாறாமல் பேசுகிறார் ராஜன்.

    உலகில் எந்த நாட்டில் கண்காட்சி நடந்தாலும் ராஜனையே பிரதிநிதியாக அனுப்புகிறது இந்திய அரசு. லண்டன், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி என உலகம் சுற்றுகிறார். வெளிநாடுகளுக்குப் போய் அங்கிருப்பவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார். சிற்பத் திறனைப் பாராட்டிக் கிடைத்த விருதுகள், அங்கீகாரங்களை எல்லாம், `இது எனது தொழில்; நான் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கவில்லை’ என்று புறம் தள்ளியிருக்கிறார்.

    “எங்களோடது ரொம்பவே செழிப்பான குடும்பம். அப்பா பெரிய விவசாயி. மொத்தம் 12 பிள்ளைங்க. நான் பதினோறாவது ஆளு. எல்லாப் பசங்களும் நல்லாப் படிச்சு பெரிய வேலைக்குப் போனாங்க. ஒருத்தன் பேராசிரியர். ஒருத்தன் பெல் நிறுவனத்துல பெரிய அதிகாரி… நானும் நல்லாப் படிக்கணும்னு வீட்டுல எதிர்பார்த்தாங்க. பி.யூ.சி இங்கிலீஷ் மீடியத்துல ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணினேன். `இன்னும் ஒரு வருஷம் மட்டும் படிடா’னு சொன்னாங்க. ஆனா, அதுக்கு மேல எனக்குப் படிப்புல நாட்டம் இல்லை. எனக்குனு ஒரு வாழ்க்கை… மனசுக்குப் பிடிச்ச தொழில்னு தேட ஆரம்பிச்சுட்டேன். அந்த வயசுலயே, ரோட்டுல இருந்து எடுத்த தார்ல, களிமண்ணுல உருவங்கள் செஞ்சு ஸ்கூல்ல வைப்பேன்.

    அப்போ சினிமாவுல `கலைகங்கா’னு ஒரு ஆர்ட் டைரக்டர் இருந்தார். அவரோட சகலைக்கு எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் வீடு. நான் தார் உருண்டையில செஞ்சு வச்சிருந்த சிலையைப் பார்த்துட்டு, `இவனை கலைகங்காக்கிட்ட சேர்த்துவிடுறேன். பெரிய கலைஞனா வருவான்’னு சொன்னார். `இனிமே நீ வீட்டுப்பக்கம் வரக் கூடாது’னு அவரை விரட்டி விட்டுட்டாங்க. நான் தனியாப் போய் அவரைப் பார்த்து, `எப்படியாவது என்னை அவர்கிட்ட சேர்த்து விட்டுடுங்க’னு கெஞ்சினேன். கூட்டிட்டுப் போனார்.

    நான் பண்ணின சிற்பத்தையெல்லாம் பார்த்த கலைகங்கா, `நான் உன்னை இப்ப சினிமாவுல சேர்த்துவிட்டா, மாசம் 600 ரூபாய் சம்பளம் கிடைக்கும். ஆனா, நீ வளர முடியாது. நேரா சுவாமிமலை போ… அங்கே ஐம்பொன் சிற்பம் செய்யக் கத்துக்கொடுக்கிற கல்லூரி இருக்கு. அதுல சேர்ந்து முழுசா கத்துக்கோ, நல்லா வருவே’னு சொன்னார்.

    அப்போ எனக்குப் பதினாறரை வயசு. சுவாமிமலையில பூம்புகார் பயிற்சி நிறுவனத்துல, `எங்க அப்பா விஸ்வகர்மா’னு பொய் சொல்லி சேர்ந்தேன். இல்லைன்னா சேர்க்க மாட்டாங்க. ஆனா, நான் விஸ்வகர்மா இல்லேன்னு தெரிய வந்தபிறகு, என்னைப் பட்டறைக்குள்ளேயே விடலை. `பேங்க்குக்குப் போ’, `கறி வாங்கிட்டு வா’ன்னு வெளிவேலைக்கு அனுப்பினாங்க. ஆனா, எனக்கிருந்த வேகமும் வெறியும் ரொம்ப சீக்கிரமே கலையைக் கத்துக் கொடுத்திடுச்சு. மாசம் 30 ரூபா உதவித்தொகை. பயிற்சி முடிஞ்சதும், ஒரு பட்டறையில போய் வேலை செய்வேன். அங்கே தினமும் ஒண்ணரை ரூபா கொடுப்பாங்க. மொத்த மாத வருமானம் 75 ரூபா. வளமான வாழ்க்கையை மறந்துட்டு அதுக்குள்ளயே வாழப் பழகிட்டேன். அந்த அளவுக்கு கலை தாகம்.

    பயிற்சி முடியுற தருணத்துல, ஆர்ட் தொடர்பான படிப்புப் படிக்கிறவங்களுக்கு உதவித்தொகை கொடுக்கிறாங்கனு ஒரு செய்தி படிச்சேன். ஆங்கில மீடியம் படிச்சதால, எனக்கு அது ஒரு அற்புதமான வாய்ப்பா அமைஞ்சது. எழுபத்தஞ்சாயிரம் ரூபாய்க்கு சிலை செய்ய அரசு ஆர்டர் கிடைச்சுச்சு. சின்னதா ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிச்சு பட்டறையை ஆரம்பிச்சுட்டேன்.

    அப்போ போன டெல்லிப் பயணம் எனக்குள்ள பல கதவுகளைத் திறந்துச்சு. ஐம்பொன் சிற்பத்துக்கு உலக அளவுல பல்லாயிரம் கோடிக்கு வணிகம் இருக்கு. ஆயிரம் ஆண்டு பழமையான மரபுங்கிறதால ஐம்பொன் சிலைகளை வாங்க சர்வதேச சமூகம் ரொம்பவே ஆர்வமா இருக்கு. ஆனா, அந்தத் தேவையை ஈடுகட்டுற அளவுக்கு உற்பத்தி இல்லை. வெறும் 11 பட்டறைகள்தான் சுவாமிமலையில இருக்கு. எல்லோரும் தலைமுறையா தொழில் செய்யிற கலைஞர்கள். ஒரு சிலை ஆர்டர் கொடுத்தா நாலு மாசமோ, அஞ்சு மாசமோ கழிச்சுத்தான் கிடைக்கும்.

    ஒரு பக்கம், இவ்வளவு பெரிய வணிகம் இருக்கு. இன்னொரு பக்கம், சமூக ஒடுக்குமுறைகளைத் தாங்கிக்கிட்டு, அவச்சொற்களைத் தாங்கிக்கிட்டு ஒரு சமூகம் பின்தங்கிப் போய்க்கிட்டே இருக்கு. கலை, பிறப்பு சார்ந்ததோ, மரபு சார்ந்ததோ இல்லை. அதைத்தான் பெரியார் படிப்பிச்சுக்கிட்டே இருக்கார். திறமையும் ஆர்வமும்கொண்ட யாரும் கலைஞனா உருமாற முடியும். இங்கிருக்கிற சிலர் மட்டுமே இதைச் செய்றாங்க; எல்லாரும் கத்துக்கிட்டா பெரிய அளவுல வணிகம் நடக்கும்; சமூக மரியாதையும் மாறுமேனு யோசிச்சேன்.

    தனியா சிற்பப் பட்டறை தொடங்கும்போதே, `உணவு, தங்குமிடத்தோடு இங்கே சிற்பம் கற்றுத் தரப்படும்’னு அறிவிப்புப் பலகையை மாட்டிட்டேன். முதன்முதல்ல, இந்தப் பகுதியோட போஸ்ட்மேன், `சும்மா ஊர்ல சுத்திக்கிட்டிருக்கான்; இவனுக்கு ஒரு வழிகாட்டுங்க’னு ஒரு பையனைக் கொண்டு வந்துவிட்டார். அந்தப் பையன் இன்னும் மூணு பேரை அழைச்சுக்கிட்டு வந்தான். இப்படித்தான் என்கிட்ட பசங்க வந்து சேர்ந்தாங்க.

    பொதுவா, சிற்பக்கலைக்குக் குறைந்தபட்சம் ஓவியமாவது வரையத் தெரியணும்னு சொல்வாங்க. என்கிட்ட வந்து தொழில் கத்துக்கிட்டு, இன்னைக்கு உலக அளவுல வர்த்தகம் பண்ற 99 சதவிகிதம் பேருக்கு, ஆரம்பத்துல சின்னக் கோடுகூட நேராப் போடத் தெரியாது. நிறையப் பேர், எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்காங்க. யாரெல்லாம் கிராமங்கள்ல புறக்கணிக்கப்பட்டாங்களோ, அவங்களை எல்லாம் தேடிப்போய் அழைச்சுக்கிட்டு வந்து தொழில் கத்துக்கொடுத்தேன்.

    நாங்களே சமைப்போம்… சாப்பிடுவோம்… குடிப்போம்… சிற்பமும் செய்வோம். எந்த ஒளிவு மறைவும் இல்லாம, எல்லா நுணுக்கங்களையும் கத்துக் கொடுத்தேன். பயிற்சி முடிச்சப் பசங்க அடுத்தடுத்து பட்டறைகளை ஆரம்பிச்சாங்க. ஆனா, இதை அவ்வளவு எளிதா மத்தவங்க ஜீரணிக்கலை. இரவு நேரத்தில் பட்டறையில கல் எறிவாங்க. நாலைஞ்சு பேர் குடிச்சுட்டு வந்து, `நாளை காலைக்குள்ள ஊரைக் காலி பண்ணலைனா, வெட்டிடுவோம்’னு மிரட்டுவாங்க. எல்லாத்தையும் புறம் தள்ளிட்டு எங்கப் பாதையில நாங்க போய்க்கிட்டே இருந்தோம்…”

    நாத்திகராக இருந்தாலும், நாத்திகம் பேசியே விற்பனை செய்தாலும், ராஜனுக்கு விற்பனை படிப்படியாகப் பெருகியதுதான் வியப்பு. தஞ்சைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ராஜனின் பட்டறைக்கும் வரத் தொடங்கினார்கள். ஏற்றுமதியையும் வியாபாரிகளுக்கு விட்டுத்தராமல் தானே செய்தார். நியாயமான விலை, அற்புதமான சிற்ப நேர்த்தி எனப் பல்வேறு தனித்தன்மைகள் இருந்ததால், உள்ளூர் ஆட்களும் ஆர்டர் கொடுத்தார்கள். வெகு சீக்கிரமாகவே ஒரு ஏக்கரில் பட்டறையை விரிவுபடுத்தி நல்ல முறையில் வணிகம் செய்து வருகிறார்.

    இவரது உழைப்பையும், ஆர்வத்தையும், சிற்பக்கலையை பட்டியல் சாதி மக்களிடமும் கொண்டுபோய் சேர்த்ததையும் பாராட்டி இவரை வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர் (253)

    இவ்வார வல்லமையாளராக இயக்குநர் சமுத்திரகனியை தேர்ந்தெடுக்கிறோம்.

    மதுரையில் மலையாக குவிந்திருக்கும் குப்பைகளை குறித்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது. அதை வல்லமையிலும் மீள்பதிவு செய்திருந்தோம்.

    அதன்பின் விழித்துக்கொண்ட மாநகராட்சி “தூய்மை தூதுவர்கள்” எனும் திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றுவதை முன்னெடுக்கும் வகையிலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி, நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து, ரேடியோ தொகுப்பாளர் ரமணா ஆகியோர் தூய்மைத் தூதுவர்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

    இந்த நிகழ்வில் பேசிய சமுத்திரக்கனி “நமக்குப் பிரச்னை என்றால் மட்டுமே நாம் சத்தம் போடும் காலம் போய் விட்டது. தற்போது எல்லோருக்கவும் குரல் கொடுக்க வேண்டிய அளவுக் குப்பைகள் நம்மை சூழ்ந்துவிட்டது. முன்பு நமது முன்னோர்கள் காலத்தில் நாம் பயன்படுத்திய பொருளின் எச்சத்தை வீட்டுக்குப் பின்னால் போட்டு, அந்தக் குப்பை உரமாக்கி வயலுக்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. வரும் காலத்தில் உணவுக்காகத்தான் உலகச் சண்டை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஒருவன் வரும் காலத்தில் நான்கு இட்லி வைத்திருந்தால், அதைப் பிடுங்கித் தின்னும் காலம் வரப்போகிறது. நம் முன்னோர் விட்டுச் சென்ற பல பொக்கிஷங்களை நாம் காணாமல் செய்துவிட்டோம், அதை மீட்க வேண்டும். அனைவரும் ஒன்று படுவோம் பாரம்பர்யத்தை மீட்போம்’’ என்றார்.

    இவர் விழிப்புணர்வு ஊட்டும் படங்களை எடுப்பதிலும் திறமையானவர். இவர்நடித்த விசாரணை படம் போலிஸின் பிடியில் சிக்கி பொதுமக்கள் படும் அவதிகளை சுட்டிகாட்டியது. அதற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவரது அப்பா படம் ஒரு தந்தையின் கடமையை மிக அழகாக எடுத்துரைத்த படம்.
    சுற்றுசூழலை மேம்படுத்தும் பணியை இவர் திறம்பட ஆற்றுவார் என நம்பியும், வருங்கால இளைஞர்களுக்கு சுற்றுபுறசூழலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் இவரது தேர்வு அமையும் என வல்லமை நம்புகிறது.

    வல்லமையாளர் சமுத்திரகனிக்கு நம் நல்வாழ்த்துகள்

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர் (252)

    இவ்வார வல்லமையாளராக பாக்கியம் ராமசாமி அவர்களை அறிவிக்கிறோம்.

    ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ. ரா. சுந்தரேசன் பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். ஆனால் பாக்கியம் ராமசாமி என்றால் தான் இவர் யார் என தெரியும். அப்படி சொல்லியும் தெரியாதவர்கள் அப்புசாமி, சீதாப்பாட்டி கதாசிரியர் என்றால் டக் என புரிந்துகொள்வார்கள்.

    இவர் தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவர். இவர் உருவாக்கிய அப்புசாமி – சீதாப்பாட்டி கதாபாத்திரங்கள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றவை. அந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டு நகைச்சுவை ததும்பும் கதைகளை எழுதினார். பொதுவாக, அனைவரின் வீடுகளில் இருக்கும் தாத்தா, பாட்டிகளைப் போலத்தான் அப்புசாமியும் சீதாப்பாட்டியும். ஆனால், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டே இருப்பவர்கள்போலக் கதைகளை அமைப்பார். விவரணைகளைத் தவிர்த்து, காட்சிகளாகவே கதையைக் கொண்டுசெல்வார்.

    1

    இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

    இவரது, அப்புசாமி மற்றும் சீதாப்பாட்டி என்னும் கதாபாத்திரங்கள் இறவாப் புகழ் பெற்றுள்ளன. 1963ஆம் ஆண்டில் இவ்விரு கதாப்பாத்திரங்களையும் கொண்டு முதல் கதையைக் குமுதத்தில் எழுதினார். தொடர்ந்து பற்பல நகைச்சுவைச் சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றை உருவாக்கினார். இவற்றில் சில ஜெயராஜ் ஓவியம் கொண்டு சித்திரக் கதைகளாகவும் வெளி வந்துள்ளன.’அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்’, ‘மாணவர் தலைவர் அப்புசாமி’, ‘அப்புசாமியும் 1001 இரவுகளும்’ ஆகியவை பிரபலமானவை. தற்போது அப்புசாமி.கொம் என்ற நகைச்சுவை வலைத்தளத்தை நடத்தி வந்தார்.

    ஒரு காட்சியின் உரையாடலில் அப்புசாமியின் குரல் மேலோங்குவதுபோல இருந்தால், அடுத்த காட்சியில் சீதாப்பாட்டியின் குரல் மேலோங்கும். ஒருவரையொருவர் வார்த்தைகளால் வாரிக்கொள்வதுதான் மைய இழை. அதை வைத்துக்கொண்டு தொடர்கதை, நாவல்களில் புகுந்து விளையாடினார் பாக்கியம் ராமசாமி. இருவரின் உரையாடலில் அதிகம் ஆங்கிலம் புழங்கும். அப்புசாமி – சீதாப்பாட்டி இடம்பெற்ற சின்னச் சின்னக் கதைகளையும் இவர் எழுதினார். அதில் ஒரு கதையில், புகழ்பெற்ற எழுத்தாளர் அப்புசாமியைப் பார்க்க வருவார். ரொம்பவும் சம்பாத்தியம் பெற்ற எழுத்தாளரா…. என்கிற உரையாடல் வரும். அப்புசாமி, அந்த எழுத்தாளரைப் பார்த்து, ‘நீர் என்ன ஒரு எழுத்துக்கு ஒரு பைசா வாங்குவீரா…” என்பார். அவரோ பதறியபடி, “அவ்வளவு ரூபாய்… எப்படி?” என்பார். அதற்கு அப்புசாமியோ, “பாத்திரத்தில் பெயர் பொறிப்பவரே அவ்வளவு வாங்குகிறாரே” என்று வாருவார்.

    கதைகளைப் போலவே அவர் எழுதும் கட்டுரைகளிலும் நகைச்சுவை உலவும். உடல் குண்டாவது பற்றிய கட்டுரை ஒன்றை இப்படி முடிக்கிறார். “தான் சாப்பிட்ட பொருளை மாடு விரும்பும்போது வாய்க்குக் கொண்டு வந்து சாவகாசமாக அசைபோடுகிறது. அதைப்போல், மனிதர்களுக்கும் வசதியும் வாய்ப்பும் இயற்கை அமைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பெரும்பாலானவர்கள் ஒல்லியாகவே இருக்கக்கூடும்!”

    பாக்கியம் ராமசாமி முழு வீச்சில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் நகைச்சுவை கதைகளின் முடிசூடா மன்னராக விளங்கினார். ‘அப்புசாமியும் 1001 இரவுகளும்’ நூல் புகழ்பெற்றது. தொழில் நுட்ப மாற்றம் நிகழ்ந்தபோது, க்ட்ட்ப்://ந்ந்ந்.அப்புசமி.cஒம் எனும் இணையத்தில் இயங்கி வந்தார். இதில் அவரது பல கதைகள் படிக்க கிடைக்கின்றன.

    பாக்கியம் ராமசாமிக்கு இசையின் மீது தனி ஆர்வம் உண்டு. அவரின் கதைகளில் அது வெளிப்படும். அப்புசாமியைப் போலவே சீதாப்பாட்டிக்கும் சபாக்களில் பொன்னாடை கிடைப்பதைப் பார்த்து, பொறாமைப்படும் கதை ஒன்றை எழுதியிருப்பார். ‘அப்புசாமி – சீதாப்பாட்டி இசைக் கூடல்’ எனும் அமைப்பை, இசைக்கலைஞர்களைக்கூட உருவாக்கினார். சமூகப் பணிகள் செய்வதற்கு ‘அப்புசாமி – சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை’ எனும் அமைப்பை உருவாக்கினார். இறுதி வரை எழுதியும் இயங்கிக்கொண்டும் இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது.

    தன் 87 வயதில் இவர் கிட்னி தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். .பாக்கியம் ராமசாமிக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

    இவர் மறைந்தாலும் இவர் உருவாக்கிய அப்புசாமியும், சீதாப்பாட்டியும், கீதாப்பாட்டியும், பாமுகவும், ரசகுண்டுவும் என்றும் நம் மனதில் நிறைந்திருப்பார்கள்

    நன்றி: விகடன், தினமலர், விக்கிபிடியா

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (251)

    தமிழகத்திலேயே முதல்முறையாக `திருநங்கை’ என்ற அடையாளத்துடன் பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர், தற்போது முதல் திருநங்கை சித்த மருத்துவராகவும் ஆகப்போகிறார்.  `திருநங்கை’ என்ற அடையாளத்துடனே கல்லூரியிலும் சேர்ந்துள்ளார்,தாரிகா பானு.

    தூத்துக்குடி மாவட்டத்துல இருக்கும் நிலக்குடிதான் இவரது சொந்த ஊர். அம்மா, அப்பா நாலு அண்ணன்கள், கடைசியாக இவர். திருநங்கையாக தன்னை உணர்ந்த இவர் 2014ல வீட்டைவிட்டு வெளியேறினார். இவர் திருநங்கையாக இருப்பது வீட்டாருக்கு பிடிக்கவில்லை என்றும் தன்னால் அடையாளத்தோடு வாழமுடியவில்லை என்பதால் வெளியேறியதாகவும் கூறுகிறார். அதுக்கப்புறம் சென்னைக்கு வந்தபின் தன் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருக்கும் திருநங்கை கிரேஸ் பானுவை சந்தித்தார்.

    கிரேஸ் பானு முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி. திருநங்கைகளின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பவர். தாரிகா பானுதிருநங்கைகளுக்குத் தனி இடஒதுக்கீடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    நமது சமூகச் சூழலில், கிராமப்புறத்தில் பிறந்து மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிப்பதற்கு பல்வேறு போராட்டங்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில், கிராமத்துச் சூழலில் திருநங்கையாக வளர்ந்து, பிறகு குடும்பத்தைவிட்டு வெளியேறி, தனது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் தனக்கு வந்த இன்னல்களை எல்லாம் மீறி தாரிகா பானு இன்று அடைந்திருக்கும் நிலை வரவேற்கத்தக்கது.

    தாரிகா பானுவை, அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதற்காகக் கேட்டபோது, பள்ளியில் இடம் கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் பிறகு, முதன்மைக் கல்வி அலுவலரிடம் சென்று `திருநங்கை’ என்ற மூன்றாம் பாலின அடையாளத்தோடு படிக்க அரசு அனுமதி வழங்கியுள்ள உத்தரவைக் காட்டியிருக்கிறார் கிரேஸ் பானு. அதன்பிறகு அந்தப் பள்ளியிலேயே சேர்ந்து படித்து வெற்றி கண்டார் தாரிகா பானு.

    பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, கல்லூரியில் உடனடியாக சீட் கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரேஸ் பானு வழக்கு தொடர்ந்து நீதி கேட்ட பிறகே சீட் கிடைத்திருக்கிறது. அதன் பிறகு அரசுக் கல்லூரியிலேயே வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு காத்திருப்பு, வழக்கு எனத் தொடர்ந்த போராட்டங்கள். கடைசியாக உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடங்கியுள்ளார் தாரிகா பானு.

    எளிமையாக நமக்கு கிடைக்கும் விசயங்கள் பலவற்றுக்கும் போராட்டம், வழக்கு இவற்றை, ஒவ்வொரு முறை கல்விக்காக முன்னேறும்போதும் தாரிகா பானுவும் கிரேஸ் பானுவும் முன்னெடுத்துள்ளனர். அடிப்படையான கல்வியைப் பெறுவதற்கே 2017-ம் ஆண்டிலும் திருநங்கைகள் போராடவேண்டியுள்ளது. பிச்சை எடுப்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும்தான் பொதுப்புத்தியில் திருநங்கைகள் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், `TG’ என்ற முன்றாம் பாலின அடையாளத்தோடு பொறியியல் கல்லூரியில், கலைக் கல்லூரியில் தற்போது பல திருநங்கைகளும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பலர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் பொறுப்பான வேலைகளிலும் உள்ளனர். சிலர் காவல் துறையிலும் பணிபுரிகின்றனர். ஆனால், அப்படி நல்ல நிலைக்குச் செல்வதற்குப் பல இன்னல்களையும் போராட்டங்களையும் சந்திக்கவேண்டியுள்ளது. இதன் காரணமாகத்தான் கிரேஸ் பானு திருநங்கைகளுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    திருநங்கை தாரிகா பானுபடிப்பை முடித்துவிட்டு சென்னைப் போன்ற பெருநகரங்களில் வேலை தேடுவது என்பதே சிரமமான ஒன்று. தன் குடும்பத்தினருடன் எந்தவிதமான தொடர்புமில்லாமல் பொருளாதாரரீதியாகவும் சமூகத்தில் தங்களுக்கான அடையாளத்தைப் பெறுவதற்கும் திருநங்கைகள் படும் துயரத்தின் வலியை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

    திருநங்கைகள் அனைவருக்கும் தாரிகாபானுவின் வெற்றி முன்னுதாரணமாக இருக்கும் என வல்லமை நம்புகிறது

    வல்லமையாளர் தாரிகா பானுவுக்கு நல்வாழ்த்துகள்

    (நன்றி: விகடன்)

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர் (250)

    இவ்வார வல்லமையாளராக திருமதி நூஃப் மர்வாய் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    நூஃப் மர்வாய் சவூதி அரேபியாவின் முதல் அதிகாரபூர்வ யோகா பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கபட்டு சர்வதேச செய்திகளில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்

    “யோகா என்றால் என்னவென்றே தெரியாத அரபிகளுக்கு யோகாவை பயிற்றுவிப்பது கடினமான சவால்தான். ஆனால் உடல்நலன் மேல் அவர்கள் அக்கறைகொண்டுள்ளதால், யோகாவை அவர்களுக்கு உடல்நலன் நோக்கில் அறிமுகம் செய்து வருகிறேன்.

    நான் சிறுவயது முதல் ஆட்டோஇம்யூன் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தேன். இயல்பான வாழ்க்கையை வாழ்வதே சிரமமாக இருந்தது. இந்த சூழலில் யோகா குறித்து படித்தேன். மேலும் படிக்க, படிக்க அது என் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் என நம்பிக்கை பிறந்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்புக்கு சென்றேன். அங்கிருந்த போது ஆட்டோஇம்யூன் வியாதி என் கிட்னியையும் தாக்கியதால், கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத நிபுணர்களை சந்தித்தேன். அங்கே தங்கி இருந்து ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகக்கலை பயிற்சி மூலம் எனக்கு நல்ல நிவாரணம் கிட்டியது. இப்படியே யோகக்கலையுடனான என் தொடர்பு வலுப்பட்டது.

     

    1

    என் பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்தாலும் யோகா பற்றி தெரியாத உறவினர்கள் என்னை விமர்சனம் செய்தார்கள். இப்போது அவர்களில் பலர் என்னிடம் யோகா பயின்று வருகிறார்கள்.

    நான் சவூதி அரேபியா திரும்பியபோது அரேபியர்களுக்கு யோகக்கலை பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதை அறிந்தேன். அவர்கள் அதை ஒரு பவுத்த தியானக்கலையாக கருதினார்கள். பல டிவி நிகழ்ச்சிகள் மூலம் யோகக்கலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். யோகா மதம் சம்பந்தமானதா என பலர் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்கு யோகம் அளிக்கும் நன்மைகளை அறிவியல்ரீதியில் விளக்கினேன்.
    நூப்
    பிர்தமர் நரேந்திர மோடி ஆட்சியில் யோகக்கலையை பரப்ப பல்வேறு முயற்சிகள் நடந்தன. அதன் விளைவாக ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்தது.

    தற்போது ஜெட்டா, ரியாத், மக்கா, மதீனா உள்ளிட்ட பல நகரங்களில் யோகக்கலை பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அரபியரிடையே யோகா குறித்த விழிப்புணர்வு பரவி வருகிறது. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வருகின்றன” என கூறுகிறார்.

    தமிழரின் யோகக்கலையை அரபுமண்ணில் பரப்பிவரும் நூஃப் மார்வாயின் உடல்நலன் சார்ந்த விழிப்புணர்வை வாழ்த்தும் விதத்தில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. இந்த பரிந்துரையை செய்த அண்ணாகண்ணன் அவர்களுக்கு வல்லமையின் நன்றி.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (249)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக அஜீத் பாய் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அஜித் பாய் அமெரிக்க தகவல் தொடர்புத்துறை (எப். சி சி) தலைவர் ஆவார். இப்பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கர் எனும் பெருமைக்கு உரியவர். இவரது பெற்றோர் கொங்கணி மொழி பேசுவோர். அஜீத் பாய் பிறந்த ஊர் நியூயார்க்.

    வக்கீல் படிப்பில் தேர்ச்சி பெற்ற அஜீத் பாய் அமெரிக்க டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸில் பணிபுரிந்தார். அதன்பின் 2001ல் வெரிசான் கம்பனியில் சேர்ந்தார். அதன்பின் எப்.சி.சியில் பல்வேறு பதவிகளை வகித்தார். இவரது நிர்வாகதிறமையை பாராட்டி ஒபாமா 2012ம் ஆண்டில் எப்.சி.சி கமிட்டியில் உறுப்பினராக ஆக்கினார். அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதும் அஜீத் பாயை எப்.சி.சி தலைவராக நியமித்தார். இந்த பெருமைமிகு பதவிக்கு நியமிக்கடும் முதல் இந்தியராக அஜீத் பாய் ஆனது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    சுதந்திர பொருளாதார கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட அஜீத் பாய் அரசு இணையத்தில் தலையிடுவதை கடுமையாக எதிர்த்துவந்தார். ஒபாமா அரசு கொண்டு வந்த நெட் நியூட்ராலிட்டி விதிமுறைகள் இணையத்தில் அரசின் தலையீட்டை அதிகரித்து, சுதந்திர இணையம் உருவாவதை தடுக்கும் என நம்பினார்.

    இன்று அஜீத் பாய் வெளியிட்ட அறிவிப்பில் இணைய நெட் நியூட்ராலிட்டி விதிகள் முழுமையாக இரத்து செய்யபடும் என அறிவித்துள்ளார். பொருளாதார நிபுணர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், கருத்துரிமை ஆர்வலர்கள் என பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்து அஜீத் பாயை பாராட்டி வருகிறார்கள்.

    இணையம் சுதந்திரமாக இருப்பதே அனைவரின் கருத்துரிமையையும் உறுதி செய்யும் என்பதால் அஜீத் பாய் எடுத்துள்ள இந்த முடிவு உலகெங்கும் உள்ள கருத்து சுதந்திர ஆர்வலர்களின் சுதந்திரத்தைக் காக்கும் விதத்தில் இருக்கிறது. இன்று நெட் நியூட்ராலிட்டி சட்டம், நாளை வேறு ஒரு சட்டம் என இணையத்தை அரசு நசுக்க முற்படுவது கருத்துரிமைக்கு எதிரான செயலாகும்.

    அஜீத் பாயின் இந்த வெற்றிகரமான முடிவும், அவரது வாழ்வின் வெற்றிக்கதையும் உலகெங்கும் உள்ள இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என நம்பி வல்லமை  அஜீத் பாயை பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (248)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக முனாப் கபாடியாவை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    பன்னாட்டு கம்பனிகளில் வேலை செய்வது பலருக்கும் ஒரு கனவு. ஆனால் உலகின் மிகப்பெரிய கம்பனியான கூகிளில் பணிபுரியும் ஒருவர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சமோசா விற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் என்றால் அது நமக்கு வியப்பாக தானே இருக்கும்? அதை செய்தவர் தான் முனாப் கபாடியா.

    இது குறித்து தட்ஸ்தமிழ் இணையதளம் கூறுவது என்னவெனில்

    “2015ஆம் ஆண்டு முனாப் கபாடியா எம்பிஏ படித்து முடித்துவிட்டு கூகிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது தாய் நபிசா அவர்களை டிவி முன் தினசரி பார்ப்பதைத் தவிர்க வேண்டும் எனத் திட்டமிட்டு புதிய புட் பிராஜெக்ட்-ஐ தயாரித்தார். கபாடியாக்கள், போஹ்ரி சமூகத்தைச் சார்ந்தவர்கள், இவர்கள் பொதுவாக எச்சில் ஊறும் தின்பண்டங்களைச் செய்வதில் பிரபலமானவர்கள். இதில் முனாப் கபாடியா-வின் தாயார் நபிசா கைதேர்ந்தவர். அம்மா கையால் செய்த உணவு.. தனது உறவினர்கள் மத்தியில் நபிசா உணவு மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக இருந்த நிலையில், இதனை வெளியுலகத்திற்கும் கொண்டு செல்ல முடிவு செய்தார் முனாப். சோதனை முதலில் இந்த முயற்சியை நேரடியாகச் சந்தைக்குக் கொண்டு செல்வதை விட அதனை முறையாகச் சோதனை செய்து பார்க்க முடிவு செய்தார் முனாப்.

    இதன் படி தனது தெரிந்த வெளிநபர்களை இரவு உணவிற்காக அழைத்தார். அப்போது தனது தாய் சமைத்த உணவை அனைவருக்கும் அளித்து அதன் ருசி, மக்கள் கருத்து, சந்தையில் இதன் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றைத் துல்லியமாக்க கணித்தார். அடுத்தக் கட்டமாக அறிமுகம் இல்லாதவர்களைத் தனது தாயின் உணவை ருரி பார்க்க வைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இணையத்தில் word of mouth என்ற பிரச்சாரத்தின் மூலம் சில பெண்கள் குழுக்களைச் சாப்பிடத் தனது வீட்டிற்கு அழைத்தார். இதற்கு அவர் நிர்ணயம் செய்த கட்டணம் ஒரு நபருக்கு 700 ரூபாய். இதின் பின்னரே தனது பிராஜெக்ட்-க்கு போஹ்ரி கிட்சென் எனப் பெயர் வைத்தார். உடனே பேஸ்புக்-இல் போஹ்ரி கிட்சென் என்ற பக்கத்தைத் திறந்தார். இதன் பின் தனது தாயைவிடவும் முனாப் மிகவும் பிசியாக இருந்தார். தனது கனவிற்கும் திட்டத்திற்கும் வேலை ஒரு தடையாக இருக்கும் காரணத்தால், கூகிள் போன்ற பெரிய நிறுவனத்தில் வேலை செய்தாலும் அதனை விட்டுவிட்டு உணவு சந்தையில் புதிய புரட்சியைச் செய்யக் களமிறங்கினார்.

    இன்றைய நிலையில் இந்த உணவை நீங்கள் ருசிக்க ஆசைப்பட்டால், அதற்கு மூனாப்-ஐ உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவரின் நண்பர்களை யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லையாக நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் அந்த அளவிற்கு இவர் தற்போது மும்பையிலே பேமஸ். பிரபலங்கள் தற்போது இவர் வீட்டு உணவகத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் வந்த சாப்பிட்டுள்ள காரணத்தால், இந்திய மீடியா மட்டும் அல்லாமல் உலக மீடியாக்களிலும் இவர் இடம்பிடித்துள்ளார். மேலும் உணவு சந்தையில் இருக்கும் பல இவர் வெற்றியின் ரகசியத்தைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

    தற்போது இவரது போஹ்ரி கிட்சென் தனது டெலிவரி அங்காடியை மும்பையின் வார்லி பகுதியில் திறந்துள்ளது. இந்நிலையில் முனாப் புதிய ரெஸ்டாரண்ட் திறக்குத் திட்டத்தில் தற்போது உள்ளார். மேலும் தனது மார்கெட்டிங் தந்திரத்தையும் யாருக்கும் பயப்படாமல் கூறிய முனாப், போஹ்ரி கிட்சென் என்பதை ஒரு பிராண்டாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். வெற்றி இதுகுறித்து முனாப் கூறுகையில், “போஹ்ரி கிட்சென் திட்டத்தை ஒரு வர்த்தகமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் துவங்கவில்லை. இதன் வெற்றியே தற்போது அடுத்தடுத்த வளர்ச்சி திட்டத்திற்கு எங்களைக் கொண்டு சென்றுள்ளது. இந்தப் பிராஜெக்ட் முழுவதும் அம்மாவிற்காகத் துவங்கப்பட்டது, அவளின் எண்ணத்தின் படியே அனைத்தையும் வடிவமைக்கப்பட்டது. இதன் வெற்றிக்கு அம்மா-வின் பார்வையே முக்கியக் காரணமாக உள்ளது”. என்று கூறினார்.

    மேலும் அவர் கடையில் முக்கியமான மற்றும் பிரபலமான உணவு அல்லது தின்பண்டமாகப் பார்க்கப்படுவது மட்டன் சமோசா. இதை விற்பனை செய்வதற்காகலவே கூகிள் வேலையை விட்டுவிட்டு அதில் வெற்றிப் பெற்றுள்ளார் முனாப். பிராண்ட் அம்பாசிட்டர்.. எங்களுடைய வர்த்தகத்திற்கு அம்மா (நபிசா) தான் பிராண்ட் அம்பாசிட்டர் என முனாப் கூறினார். சாப்பிட வீட்டுக்கு வரும் அனைவரும் வயிறு நிறைந்து மகிழ்ச்சியுடனும், புன்னகையுடனும் செல்கின்றனர். இதுதான் எங்களின் வெற்றி. பேஸ்புக் இவ்வளவு பிரபலம் ஆன பின்பும் முனாப், போஹ்ரி கிட்சென் பேஸ்புக் பக்கத்திற்கு ஒரு வாரம் 700 ரூபாய் செலவு செய்து புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பன்னாட்டு கம்பனி வேலையை விட்டுவிட்டு சுயதொழில் துவக்கி பலருக்கும் வேலைவாய்ப்பை அளித்த சாதனையாளரான முனாப் கபாடியாவை பாராட்டும் விதத்தில் அவருக்கு இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர் (247)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக மலாலா யூசுப்சையிவை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    மலாலா யூசுப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் பிறந்தார்.  இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்லக்கூடாது என தலிபான் அமைப்பு தடை விதித்திருந்தது. தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும்  தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார். இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாகிஸ்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

    மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது. இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவில் குடியேறினார் மலாலா. இவரது 17ம் வயதில் 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.

    இவ்வருடம் இவருக்கு இன்னொரு சிறப்பும் கிடைத்தது. தன் மேல்படிப்புக்காக உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்பர்டு பல்கலைகழகத்தில் சேர இவருக்கு சீட்டு கிடைத்தது. அத்துடன் இவ்வாரம் “மலாலாவின் மேஜிக் பென்சில்” எனும் நூலையும் எழுதி வெளியிட்டார். குழந்தைகளுக்கான இந்த நூலை இவர் வெளியிட்டது பெண்கல்விக்கு உதவும் வண்ணம் இருப்பதால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    பெண்கல்வி, பெண்முன்னேற்றம், பழமைவாத மூடநம்பிக்கைகளை சாடல் என பெண்களின் முன்னேற்றத்தின் சின்னமாக திகழும் செல்வை மலாலாவை பாராட்டி இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. மலாலா போல பெண்கல்விக்கு பாடுபட அனைவருக்கும் இது ஊக்கம் அளிக்கும் என வல்லமை நம்புகிறது.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    நன்றி

    https://ta.wikipedia.org/wiki/மலாலா_யூசப்சையி

    Share