Author: தேமொழி

  • புலியே! புலியே!

    தேமொழி.

    tiger

    புலியே! புலியே!

    –வில்லியம் ப்ளேக்
    புலியே! புலியே! கவின்மிகு கானக
    இருளில் சுடரென ஒளிரும் புலியே
    தெய்வீக கரமோ விழியோ கொண்டுன்
    அச்சமூட்டும் வடிவைச் செதுக்கியவர்தான் யாரோ?

    அகிலத்தின் ஆழ்தொலைவிலுள்ள எந்த ஆற்றல்
    கனல் உமிழும் கங்காக்கியது உன் கண்களை?
    உன் கண்களின் கனலைக் கண்டும் விரும்பி
    துணிவுடன் உன்னைப் படைத்ததும்தான் ஏனோ?

    எத்தகைய உறுதியான தோள்களும், வித்தையும்
    துடிக்குமுன் இதயத்தை இயங்கவைத்திருக்கும் ?
    உயிர்த்தெழுந்த உன்னைக் கண்டு அஞ்சி ஓடிடாது
    தொடர்ந்துன்னைப் படைத்திட்ட துணிவுதான் என்ன?

    சுத்தியலா, சம்மட்டியா? கனல்கக்கும் கொதிக்கும்
    உலைகலன்தானா? எதுவழங்கியது ஆற்றலுனக்கு?
    கொல்லன்பட்டறையின் எந்தத் திறமை துணிந்தது
    உன்போன்றதொரு ஆபத்தினை உருவாக்கிட ?

    அச்சமூட்டும் ஆபத்தான உன் ஆற்றலினால்
    அகண்டமும் அகிலமும் கலங்கியதைக் கண்டு
    படைத்தவர் உன்னைப் படைத்ததற்கு மகிழ்ந்தாரா?
    ஆட்டையும் படைத்து உன்னையும் படைத்ததேனோ?

    புலியே! புலியே! கவின்மிகு கானக
    இருளில் சுடரென ஒளிரும் புலியே
    தெய்வீக கரமோ விழியோ கொண்டுன் போன்ற
    அபாயத்தைத் தோற்றுவித்தவர் துணிவுதான் என்னே!

    லண்டனில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் (1757 – 1827) அவர்கள் எழுதிய “தி டைகர்” என்ற கவிதை.
    மொழிபெயர்ப்பு: தேமொழி

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    The Tyger

    –William Blake

    Tyger Tyger, burning bright,
    In the forests of the night;
    What immortal hand or eye,
    Could frame thy fearful symmetry?

    In what distant deeps or skies.
    Burnt the fire of thine eyes?
    On what wings dare he aspire?
    What the hand, dare seize the fire?

    And what shoulder, & what art,
    Could twist the sinews of thy heart?
    And when thy heart began to beat,
    What dread hand? & what dread feet?

    What the hammer? what the chain,
    In what furnace was thy brain?
    What the anvil? what dread grasp,
    Dare its deadly terrors clasp!

    When the stars threw down their spears
    And water’d heaven with their tears:
    Did he smile his work to see?
    Did he who made the Lamb make thee?

    Tyger Tyger burning bright,
    In the forests of the night:
    What immortal hand or eye,
    Dare frame thy fearful symmetry?

     

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: பசி பெரிது ஆயினும் புல் மேயாதாகும் புலி

     

    ஒற்கந்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர்
    நிற்பவே நின்ற நிலையின்மேல் – வற்பத்தால்
    தன்மேல் நலியும் பசிபெரி தாயினும்
    புன்மேயா தாகும் புலி.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர்
    நிற்பவே, நின்ற நிலையின்மேல்;-வற்பத்தால்
    தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்,
    புல் மேயாது ஆகும், புலி.

    பொருள் விளக்கம்:
    வறுமை தனக்கு ஏற்பட்ட பொழுதும், உயர் பண்புள்ள சான்றோர், சற்றும் மாறாது நிற்பார் தாம் கொண்ட நற்பண்பின் நிலையிலேயே. (இப்பண்பானது) பஞ்சகாலத்தில் தனது உடலை நலிவடையச் செய்யும் பசி பெரிதும் வருத்தினாலும் புல்லை உண்ணாத புலியின் பண்பினை ஒத்ததாகும்

    பழமொழி சொல்லும் பாடம்:
    சான்றோர் எத்தகைய நிலையிலும் தனது நற்பண்பை இழக்கமாட்டார். வறுமை நேரினும் அதற்காகத் தனது தரம் தாழ்ந்து போகமாட்டார். “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்று இந்நாளும் வழக்கில் இருக்கும் இந்தப் பழமொழி விளக்குவது போல, தனது வாழ்வே சீரழிந்து போயிருப்பினும், நற்பண்பின் இருப்பிடமானோர் சிறுமை தரும் ஒழுக்கமற்ற செயல்களைச் செய்யவும் முற்படுவதில்லை. இத்தகைய  நற்பண்பின் இருப்பிடமானவரின் பண்பை கூற வரும் வள்ளுவர்,

    அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர். (குறள்: 954)

    கோடி கோடியாக செல்வத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் நற்பண்பு கொண்ட சான்றோர் சிறுமை தரும் கீழ்த்தரமான செயல்களைச் செய்யார், எத்தகைய சூழலிலும் நற்பண்பைக் கைவிடுவது சான்றோர் இயல்பு அல்ல என்று சுட்டிக் காட்டுகிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டம்பர் 14, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திரு. ரவிக்குமார் அவர்கள்

    ravikkumar

    சென்ற ஆசிரியர் தின விழாவையொட்டி, தமிழ்நாட்டில் வெளிவரும் சிறந்த தமிழாய்விதழ்களில் ஒன்றான “மணற்கேணி ஆய்விதழ்” சார்பாக “நிகரி விருது” அளித்து, வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த ஆசிரியர்களாக, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களையும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் தலைமைஆசிரியர் துளசிதாசன் அவர்களையும் இனங்கண்டு பாராட்டிய திரு. ரவிக்குமார் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

    சமத்துவ ஆசிரியர் விருதுகளை வழங்கிய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன், “சமுதாய அக்கறையை மாணவர்களிடம் விதைப்பவரே உண்மையான ஆசிரியர்” என்று பாராட்டினார். சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கான மாறுதல்களைக் கொண்டுவர விரும்பினால் அதை இளைஞர்களிடம் இருந்தே துவக்க வேண்டும் எனச் சொன்ன அறிஞர்கள் பலர். “இளைய பாரதத்தினாய் வா வா வா” என்று எழுச்சியூட்டிப் பாடினார் பாரதி, அக்கொள்கையைக் கொண்ட மனிதருள் மாணிக்கம் ஜவஹர்லால் நேருவும் இக்கருத்தைக் குறிப்பிட்டே குழந்தைகளிடம் அன்பு செலுத்தினார், சிறுவர்களுக்கு கல்விக் கண் திறந்து இதனை முயற்சித்தார் கர்மவீரர் காமராசர், இளைஞர்களை கனவுகாணச் சொல்லி ஊக்குவித்தார் அப்துல் கலாம். அறிஞர் அனைவரும் முதிர்ந்த மூங்கில்களைக் காட்டிலும், விளையும் பச்சை மூங்கில்களை வளைப்பது சுலபம் என்பதை அறிந்து தங்கள் அறிவுரைகளை இளைஞர் குழுவிடம் எடுத்துச் சென்றனர்.

    அரசியல் களத்தில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஒரு அரசியல்வாதியைக் காட்டிலும், சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் ஒரு சமூக சீர்திருத்தவாதியே துணிச்சல் மிக்கவர் என்றார் அம்பேத்கர். இந்நோக்கில் பள்ளி ஆசிரியர் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உணர்ந்து, வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த ஆசிரியர்களைப் பாராட்டி ஊக்குவித்து ஆசிரியர் தின நாளில் அவர்களைக் கௌரவித்து மணற்கேணி ஆய்விதழ் சார்பாக “நிகரி விருது” அளித்து வரும், மணற்கேணி இதழ் மற்றும் அதன் நிறுவனருமான திரு. ரவிக்குமார் அவர்களின் பணி பாராட்டிற்குரியது. விருதின் நோக்கம் குறித்து எழுத்தாளர் ரவிக்குமார் விழாவில் ஆற்றிய உரையில், “மதிப்பெண் மட்டுமே நோக்கமாகக் கொண்டு சென்று கொண்டிருக்கும் இன்றைய கல்வி முறையில், பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி வகுப்பறையைச் சமத்துவமாக நடத்துகிற ஆசிரியர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கான பிரக்ஞையுடன் கூடிய ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்,” என்றார்.

    இனி தொடர்வது, தமிழகம் நன்கறிந்த “மணற்கேணி திரு. ரவிக்குமார்” பற்றியும் அவரது “மணற்கேணி ஆய்விதழ்” பற்றியும், அதன் “நிகரி விருது” பற்றியும் ஒரு சிறு அறிமுகம்.

    எழுத்தாளர் திரு. ரவிக்குமார் ஒரு வழக்கறிஞர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். மேலும், சமூகப் பணியாளரும், மணற்கேணி பதிப்பகத்தின் நிறுவனரும், மணற்கேணி தமிழ் ஆய்விதழின் ஆசிரியருமான இவர் 1961 இல் சீர்காழி வட்டம், மாங்கணாம்பட்டு என்ற சிற்றூரில் துரைசாமி – கனகம்மாள் இணையரின் மகனாகப் பிறந்து, பள்ளி நாட்களிலேயே ஆசிரியர் மூலம் பகுத்தறிவு சிந்தனைப் பாதையில் நடக்கத் துவங்கியவர். அண்ணாமலை பல்கலைக்கழக நாட்களில் நக்சல்பாரி அரசியலிலும், முற்போக்கு மாணவர் சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டவர். பேராசிரியர் அ. மார்க்கஸ், பொ. வேலுசாமி அவர்களுடன் 1990 களில் இணைந்து நடத்திய “நிறப்பிரிகை இதழில்” இவர் வடித்த எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தி மக்களின் கவனத்தைக் கவர்ந்தார். தமிழகத்தின் தலித் அரசியலில், தலித் பண்பாட்டு எழுச்சியில், மனித உரிமை நடவடிக்கைகளில் இவர் காட்டிய ஈடுபாடு, பல ‘உண்மை அறியும் குழு’க்களை நிறுவவும், காவல்துறையினரின் அத்துமீறல்களை வெளிக்கொணரவும் உதவியது.

    ‘தடா’ ஒழிப்பு, மரணதண்டனை ஒழிப்பு மாநாடு போன்றவற்றில் 1990 ஆண்டுகளில் முன்னணியில் செயல்பட்ட இவர்; ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கம்’, ‘மக்கள் கல்வி இயக்கம்’, ‘மனித உரிமை இயக்கம்’, ‘பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்’ எனப் பல சமுதாய இயக்கங்கள் உருவாக ஆலோசகராகப் பின்னணியில் இருந்தும் பங்களித்துள்ளார். ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ காவல்துறையின் அடக்குமுறைகளைச் சந்தித்த பொழுதும், இந்துத்துவ சக்திகளால் இஸ்லாமியர், கிறிஸ்துவர் பாதிக்க நேர்ந்த பொழுதும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்துப் போராடியவர் திரு. ரவிக்குமார். காட்டு மன்னார் கோவில் சட்டமன்ற தொகுதியில் 2006 ஆம் ஆண்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற வாய்ப்பைத் தக்கவாறு பயன்படுத்தி, சமூகப்பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்குப் பாடுபட்டதன் விளைவாக நரிக்குறவர்கள், புதிரை வண்ணார், பதிவுபெற்ற பாரம்பரிய மருத்துவர்கள், அரவாணிகள், நாட்டுப்புற கலைஞர்கள், வீட்டுப் பணியாளர்கள், நலவாரியங்களும் உருவாகின. அந்நாளைய முதல்வராக ஆட்சியில் இருந்த கலைஞரின் கான்கிரீட் வீடுகட்டும் திட்டத்திலும் பெரும் பங்கு வகித்தார். அவரது சமூகப்பணிகளுக்காக, ‘அண்ணா விருதை’ 2010 ஆம் ஆண்டில் பெற்றவர் திரு. ரவிக்குமார்.

    ravikkumar with kalaingar

    மணற்கேணி: தனித்துவம் பெற்ற மணற்கேணி இருமாத ஆய்விதழ் துவக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் எண்ணிக்கை முப்பதையும் தாண்டியுள்ளது.

    மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் நிகரி – சமத்துவ ஆசிரியர் விருது:
    நிகரி விருது – நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து பாராட்டுவது விருதின் நோக்கம்.

                         manarkaenimanarkaeni logo
    2013 ஆம் ஆண்டு பேராசிரியர் அ.ராமசாமி அவர்களும் , கடலூர் ஆசிரியர் த.பாலு அவர்களும் நிகரி விருதுகளைப் பெற்றனர்.
    2014 ஆம் ஆண்டு பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களும் ‘ஆயிஷா’ இரா. நடராசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப்பட்டனர்.
    2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை அவர்களும், சமயபுரம் எஸ்.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அவர்களும் விருதளித்துப் பாராட்டப் பட்டுள்ளனர்.

    Untitled

    “பள்ளிப் பருவம்” என்ற மணற்கேணி பதிப்பக நூலின் பதிப்புரையில், திரு. ரவிக்குமார் அவர்கள் ‘நிகரி’ விருது தோற்றுவித்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறார், “பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் பெற்றோர்கூடத் தம் பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறவேண்டும் என விரும்புகிற காலம் இது. அதனால்தான் ஆட்சியாளர்கள் ‘சமச்சீர் கல்வி’யைப் பற்றி அக்கறை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. சமூக, பொருளாதார பாகுபாடுகளைப் பள்ளிகளுக்குள் அனுமதித்துக்கொண்டு, அதைப்பற்றிக் கவலைப்படாமல், பாடத் திட்டங்களை மட்டும் ஒரேமாதிரியாக அமைத்துவிட்டால் கல்வியில் சமத்துவம் வந்துவிடும் எனக் கூறுவது கல்வியில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை மறைப்பதற்கானதொரு தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். தமிழ்நாட்டில், ‘சமச்சீர் கல்வி’ குறித்த கல்வியாளர்களின் பேச்சுகள்கூட பாடத் திட்டங்களைத் தாண்டிச் செல்லாதது நமது துரதிர்ஷ்டம். சமத்துவக் கல்வியை வலியுறுத்தும் நோக்கில் ‘நிகரி – சமத்துவ ஆசிரியர்’ விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிவிருக்கும் மணற்கேணி, கல்வி குறித்த நூல்கள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. அதன் துவக்கமாக “பள்ளிப் பருவம்” என்ற நூல் அமைந்தது,” என்று குறிப்பிடுகிறார்.

    தமிழக கல்வி நிறுவனங்களில் நடைபெற்று , கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நாளேடுகளில் வெளியான சாதிவெறி நடவடிக்கைகள் பற்றிய ஒருசில சான்றுகளைக் குறிப்பிட்டு (http://manarkeni.blogspot.com/2014/09/blog-post.html), ஆதிதிராவிட / பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்காக எத்தனையோ முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தபோதிலும் பொதுவான கல்வியறிவு பெற்றோரின் சதவீதத்துக்கும் இந்தச் சமூகத்தினரில் கல்வி அறிவு பெற்றோரின் சதவீதத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதைக் காணமுடிகிறது. இதற்கு அரசாங்கமும் சமூகமும் சேர்ந்து பொறுப்பேற்கவேண்டும். ஏனெனில் அரசாங்கம் போடும் சட்டங்கள் சாதிய சமூகத்தின் முன்னால் செயலற்றுப் போய்விடுகின்றன. அவற்றைச் செயல்படவைக்கும் அரசியல் உறுதி இருந்தாலொழிய இந்த நிலையை மாற்ற முடியாது என்கிறார் திரு. ரவிக்குமார். எனவே இந்த மாறுதல் நோக்கிய முயற்சிக்கு செயல்வடிவம் கொடுத்து, சமத்துவத்தை ஊக்குவிக்க எடுத்த நடவைக்கையின்விளைவே ஆசிரியர்களுக்கான நிகரி விருது. இவர் இவ்வாறு சமூகத்தை மாற்றக்கூடிய நம்பிக்கையைத் தனது கவிதை ஒன்றிலும் வெளிப்படுத்துகிறார்.

    வானத்தை நோக்கி விட்டெறியும் கனவு
    சிலநேரம்
    இன்மையிலிருந்து இன்மையைநோக்கிப் பாயும்
    எரிகல்லாய் தடயமற்றுப் போகிறது
    சிலநேரம்
    மின்மினிப் பூச்சியாய் தலையைச் சுற்றி வருகிறது
    சிலநேரம் பனியாக மாறி இலைகளில் படிகிறது

    வானை நோக்கி விட்டெறியும் கனவு
    நட்சத்திரமாக மாறுவது
    எப்போதோதான் நடக்கும்.
    என்றபோதிலும் மனந்தளராதே
    உன் முன்னோர் எறிந்த கனவுதான் நிலவு
    சூரியனும்கூட அப்படியென்றுதான் சொல்கிறார்கள்

    தனது சமத்துவக் கனவிற்கு “நிகரி விருது” மூலம் செயல்வடிவம் கொடுத்து, தளரா நம்பிக்கையுடன் சமூகப்பணி செய்து வரும் திரு. ரவிக்குமார் அவர்களைப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _____________________________________________________________________________________________

    மேலதிகத் தகவல்களின் இணைப்பு …

    ரவிக்குமார் அவர்களின் படைப்புகள்:

    கட்டுரைத் தொகுப்புகள்: –
    1.கண்காணிப்பின் அரசியல், விடியல் பதிப்பகம், 1995
    2.கொதிப்பு உயர்ந்துவரும் , காலச்சுவடு, 2001
    3.கடக்க முடியாத நிழல்,காலச்சுவடு,2003
    4.மால்கம் எக்ஸ்,காலச்சுவடு,2003
    5.வன்முறை ஜனநாயகம், தலித் வெளியீடு, 2004
    6.சொன்னால் முடியும், விகடன்,2007
    7.இன்றும் நமதே, விகடன்,2008
    8.சூலகம், உயிர்மை, 2009
    9.கற்றனைத்தூறும், உயிர்மை, 2009
    10.பிறவழிப் பயணம், உயிர்மை,2010
    11.பாப் மார்லி, உயிர்மை, 2010
    12.அண்டை அயல் உலகம், உயிர்மை,2010
    13.ஆள்வதன் அரசியல், உயிர்மை, 2010
    14.தமிழராய் உணரும் தருணம், ஆழி பதிப்பகம், 2010
    15.துயரத்தின்மேல் படியும் துயரம், ஆழி பதிப்பகம்,2010
    16.காற்றின் பதியம், மணற்கேணி,2010
    17.கடல்கொள்ளும் தமிழ்நாடு,மணற்கேணி,2010
    18. மீளும் வரலாறு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,2010
    19.காணமுடியாக் கனவு, ஆழி பதிப்பகம், 2011
    20.சொல்லும் செயல், மணற்கேணி, 2011
    21.அ-சுரர்களின் அரசியல்,மணற்கேணி,2014

    கவிதை: –
    1.அவிழும் சொற்கள், உயிர்மை, 2009
    2.மழை மரம், க்ரியா,2010

    சிறுகதை: –
    1.கடல் கிணறு, மணற்கேணி,2014

    மொழிபெயர்ப்பு: –
    1.உரையாடல் தொடர்கிறது, விடியல்,1995
    2.கட்டிலில் கிடக்கும் மரணம்,மருதம்,2002
    3.வெளிச்சமும் தண்ணீர்மாதிரிதான்,தலித் ,2003
    4.பணிய மறுக்கும் பண்பாடு,காலச்சுவடு,2003
    5.வரலாறு என்னும் கதை, மணற்கேணி,2011
    6.வலசைப் பறவை, மணற்கேணி,2011
    7.அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்,மணற்கேணி,2011
    8.மாமிசம்,மணற்கேணி,2014
    9.அதிகாரத்தின் மூலக்கூறுகள், மணற்கேணி,2014
    10.வெள்ளை நிழல் படியாத வீடு, மணற்கேணி,2014
    11.குரல் என்பது மொழியின் விடியல்,மணற்கேணி,2014

    ஆங்கிலம்: –
    Venomous Touch,Samya,2010

    தொகுப்புகள்: –
    1.தலித் கலை இலக்கியம் அரசியல், தலித் கலைவிழாக்குழு,1996
    2.தலித் என்னும் தனித்துவம், தலித் வெளியீடு ,1998
    3.அயோத்திதாச பண்டிதர் சிந்தனைகள், 4 தொகுதிகள், தலித் சாகித்ய அகாடமி,1999
    4.ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், தலித் சாகித்ய அகாடமி , 1999
    5. தலித் காலம், தலித் வெளியீடு,1998
    6.மிகைநாடும் கலை,காலச்சுவடு,2003
    7.தொல்.திருமாவளவன் எழுத்துகள், 17 தொகுதிகள்,கரிசல்,2008
    8.ஒடுக்கப்பட்ட இந்துக்கள், கரிசல்,2008
    9.எங்கள் காலத்தில்தான் ஊழிநிகழ்ந்தது, மணற்கேணி,2010
    10.நூர்ந்தும் அவியா ஒளி,மணற்கேணி,2010
    11.சுவாமி சகஜானந்தா, மணற்கேணி,2010
    12.எல்.இளையபெருமாள், மணற்கேணி,2010
    13.பள்ளிப்பருவம், மணற்கேணி,2014
    14.நூல் ஏணி,மணற்கேணி,2014

    ஆங்கில தொகுப்புகள்: –
    1.We the Condemned, PUCL,1998
    2.Waking is another dream, Navayana,2011
    3.Tamil Dalit writing,Oxford,2012

    ***

    வல்லமையாளரின் தொடர்புக்கு:
    திரு. ரவிக்குமார்
    ஆசிரியர், மணற்கேணி
    எண் 2, நோபிள் மேன்ஷன்
    10, டாக்டர் நடேசன் சாலை
    திருவல்லிக்கேணி
    சென்னை 600005

    Manarkeni Publication
    B-1-4 Templeway Avenue
    East coast road
    Lawspet
    Pondicherry 605 008

    tamildalithistory@gmail.com
    adheedhan@gmail.com
    Mobile: 94430 33305

    http://manarkeni.blogspot.com/
    http://nirappirikai.blogspot.com/

    ***

    கட்டுரைக்கான செய்தி மற்றும் தகவல் பெற்ற இடங்கள்:
    செய்தி: சமுதாய அக்கறையை விதைப்பவரே உண்மையான ஆசிரியர்: துணைவேந்தர்
    http://www.dinamani.com/edition_trichy/trichy/2015/09/06/சமுதாய-அக்கறையை-விதைப்பவரே-/article3013434.ece

    நிறப்பிரிகை மற்றும் மணற்கேணி இணையதளங்கள்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்

     

    தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
    அமரா ததனை அகற்றலே வேண்டும்
    அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்
    தமவேனும் கொள்ளாக் கலம்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    தமரேயும், தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தில்,
    அமராததனை அகற்றலே வேண்டும்;
    அமை ஆரும் வெற்ப! அணியாரே தம்மை,
    தமவேனும், கொள்ளாக் கலம்.

    பொருள் விளக்கம்:
    தனது சுற்றத்தாராகவே இருப்பினும், தன்னைப் புகழ்ந்து பேசும் பொழுதில், அவை பொருத்தமற்ற புகழுரைகளாக இருக்கும் பொழுது தடுத்துவிடல் வேண்டும். மூங்கில் செறிந்திருக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவரே, ஒருவரும் அணிய விரும்புவதில்லை,  அவை தன்னுடையதாகவே இருப்பினும் பொருந்தாத அணிகலன்களை.

    பழமொழி சொல்லும் பாடம்:
    தனக்குப் பொருத்தமற்ற புகழுரைகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இதனை,

    வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை. (குறள்: 439)

    எந்தக் காலத்திலும் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு நன்மை தராத செயல்களை விரும்பக்கூடாது என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

    பழமொழி: போமாறறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாதவாறு

    ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
    தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
    போமா றறியா புலன்மயங்கி ஊர்புக்குச்
    சாமாகண் காணாத வாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று
    தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,
    போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு,
    சாம் மா கண் காணாதவாறு.

    பொருள் விளக்கம்:
    ஆகுமா இந்தப் பெரியோர்களால் என்று பெரியோர் முன்னிலையில் (இறுமாந்து) நின்று, தாமாகவே சிறுபுத்தி உள்ளவர் (பெரியோரிடம்) இருந்து மாறுபட்டுச் செயல்படுவது, செல்லும் வழி பற்றிய புரிதல் சிறிதும் இன்றி, தனது மதியை இழந்தவர் போல அவர் செயல்படும் நிலையானது, ஊரினுள் புகுந்து அடிபட்டுச் சாகும் வனவிலங்கின் கண்ணிழந்த செய்கையை ஒத்தது.

    பழமொழி சொல்லும் பாடம்:
    ஆன்றோர் தமது பட்டறிவால் அறிந்து கூறும் நன்மை தரும் அறிவுரையை இகழ்வாக எண்ணிப் புறக்கணித்து, பெரியோர்களது அறிவுரைக்கு மாறாக நடப்பவர் தமது அழிவைத் தாமே தேடிக் கொள்பவர். பெரியோர் அறிவுரையை மதிக்காது அழிவைத் தேடிக் கொள்பவருக்கு அறிவுரை கூற விரும்பிய வள்ளுவர்,

    பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
    பேரா இடும்பை தரும். (குறள்: 892)

    பெரியோரை மதிக்காமல் நடந்து கொள்பவர் நீங்காத துன்பத்தையே எதிர்கொள்ள நேரிடும் என்று கூறுகிறார். இதையும் விட ஒருபடி மேலே சென்று,

    எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (குறள்: 896)

    தீயால் சுடப்பட்டால் கூட பிழைத்துக் கொள்ள இயலும், ஆனால் பெரியோரை அவமதித்து, அவரை எதிர்த்துக் குற்றம் செய்பவர் உயிர்வாழ்தல் இயலாது என்றும் எச்சரிக்கிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டம்பர் 7, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள்

    சங்கர் மகாதேவன் - 1

     

    சென்னை தியாகராய நகரில் உள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பு கடந்த வாரம் (ஆகஸ்ட் – 30) ஏழை எளிய குடும்ப் பெண்களுக்கு தையல், கணினி மற்றும் அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி அளித்து, அதற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கி, அதிகம் படித்திராத எளிய குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவியுள்ளது. இத்தகைய சமூகப்பணிகளுக்குத்  தூண்டுகோலாய் இருந்து வந்துள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனரும் மற்றும் அமைப்பின் அறங்காவலருமான திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்களின் சமூகப்பணியைப் பாராட்டி அவரை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

    இதுவரை நான்கிற்கும் மேலான தொழிற்பயிற்சி நிலையங்கள், பத்திற்கும் மேலான பள்ளிமாணவர்களுக்கான நலத்திட்டங்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உதவி, பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி என சமூகத் தொண்டு செய்துள்ளது “உதவும் உள்ளங்கள்” நிறுவனம். இந்த அமைப்பின் குழுவினர்கள், தன்னார்வலர்கள் பலரை ஒருங்கிணைத்தும், நன்கொடைகள் சேகரித்தும் தேவையுள்ளோர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். “உதவும் உள்ளங்கள்” சேவை நிறுவனத்தின் நிறுவனரான திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள் முன்னாள் வங்கி ஊழியர். இவர் 2000 ஆம் ஆண்டு உதவும் உள்ளங்கள் அமைப்பைத் தோற்றுவித்து தமது குழுவினர் துணையுடன் சமூகப்பணி செய்து வருகிறார். சமீபத்தில் வங்கிப்பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சமூகப்பணிக்கு முழுநேரத்தையும் செலவிட்டு வருகிறார்.

    சங்கர் மகாதேவன் - 2

    தற்பொழுது நானூற்றுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, உதவும் உள்ளங்கள் அமைப்பு சமூகப்பணியாற்றி வருகிறது. உதவும் உள்ளங்களின் சேவைகள் பொதுவாகக் கல்வி உதவி, மருத்துவ உதவி, வாழ்வாதார தொழிற்பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் அடங்குகிறது.

    சங்கர் மகாதேவன் - 3
    மருத்துவ உதவி

    சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்துடனும், பாளையங்கோட்டையில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து திருல்வேலியில் புற்றுநோய்க்கான மருத்துவப்பணிகளிலும் உதவும் உள்ளங்கள் அமைப்பு பங்காற்றி வருகிறது. இதனால் புற்றுநோயினால் பாதிக்கப்பட பதினறாராயிரம் பேர் ஆரம்பக்கட்ட நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார்கள். தொழுநோயாளிகளுக்கு உதவித்தொகை என்று மருத்துவ உதவிகளும் உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

    சங்கர் மகாதேவன் - 5
    கல்வி உதவி

    சுனாமியில் பாழடைந்த பள்ளிகளுக்குக் கட்டிட சீரமைப்பு உதவி, கழிப்பறையற்ற பள்ளிகள் ஒருசிலவற்றிற்குக் கழிப்பறை கட்டும் உதவி, மாணவர்களுக்கு மேற்கல்வி பயில உதவித்தொகையளித்தல், தேவையான குழந்தைகளுக்கு காலையுணவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், பள்ளிப்பாடங்களில் பயிற்சி, நேர்முகத் தேர்வு பயிற்சி வகுப்புகள், அவர்கள் வேலைவாய்ப்புக்கு உதவி, பெண்களுக்குக் கணினி, தையல், அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி எனக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி உதவிகளும், உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

    சங்கர் மகாதேவன் - 4
    தொழிற்பயிற்சி

    இத்தகைய சமூகப்பணிகளுடன், 1998 ஆம் ஆண்டுமுதல், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்கு “ஆனந்த தீபாவளி’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, சென்னையில் உள்ள 18 இல்லங்களைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு ஆகியவையும் பரிசாக வழங்குவதை உதவும் உள்ளங்கள் அமைப்பு செய்து வருகிறது.

    சங்கர் மகாதேவன்
    ஆனந்த தீபாவளி நிகழ்ச்சி

    இந்திய செஞ்சிலுவை அமைப்பு, இரத்த வங்கி, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு ஆகியவற்றிலும் உறுப்பினராகத் தொடர்ந்து பங்களித்து வரும் திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள், துன்பத்தில் உழலும், உதவும் தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என்ற எளிய கொள்கையின் அடிப்படையில் உதவும் உள்ளங்கள் அமைப்பைத் துவக்கி, அதன் மூலம் இன்று பல்லாயிரம் மாணவர்களும், பெண்களும், நோயாளிகளும் பலன்பெறும் வண்ணம் சேவை அமைப்பினை வழி நடத்திச் செல்கிறார்.  அவரது சமூகப்பணியைப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்பு கொள்ள:
    Udhavum Ullangal
    No.77, 1st Main Road,
    C.I.T Nagar, Nandanam,
    Opp FIAT Car Showroom
    Chennai – 600 035
    Phone numbers:
    +91-44-24344743
    +91-9444194743

    Email: info@udhavumullangal.org.in, uu1sankar@gmail.com
    http://www.udhavumullangal.org.in/
    https://www.facebook.com/udhavumullangal

    தகவல்கள் மற்றும் படங்கள் உதவி:
    உதவும் உள்ளங்கள் வலைத்தளம்
    மற்றும் …
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1334519

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தெளியானைத் தேறல் அரிது

     

    ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
    மாறி யொழுகல் தலையென்ப – ஏறி
    வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப!
    தெளியானைத் தேற லரிது.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை
    மாறி ஒழுகல் தலை என்ப;-ஏறி
    வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!-
    தெளியானைத் தேறல் அரிது.

    பொருள் விளக்கம்:
    ஆற்றமாட்டாத சினம் கொண்டவர் அறிவற்ற மூடர், அவரை விட்டுவிலகி வாழ்வதே நன்மைதரும் (என்பது பெரியோர் வாக்கு). காற்று நீரை வளைத்து வீசுவதால் கரைமேல் அலை உலவும் நாட்டைச் சேர்ந்தவரே, தெளிவற்ற சிந்தனை உடையவரை நம்புதல் நன்மை தராது.

    பழமொழி சொல்லும் பாடம்:
    கடுஞ்சினத்தை கட்டுப்படுத்தத் தெரியாத அறிவற்றவரின் உறவைத் தவிர்க்க வேண்டும். ஆற்றமாட்டாத சினங்கொண்டவருடன் கொள்ளும் உறவு அவரைச் சேர்ந்தவரையும் அழித்துவிடும் என்பதை,

    சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும். (குறள்: 306)

    சினம் என்னும் அழிவுதரும் குணம் அவரை தெப்பம் போலக் காக்கும் சுற்றத்தையும் அழித்துவிடும் என வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு

     

    வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு
    நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
    புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய்
    தனக்கின்னா இன்னா பிறர்க்கு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வினைப் பயன் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு,
    நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்;
    புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்!
    தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு.

    பொருள் விளக்கம்:
    செய்யும் செயலால் ஒரு பயனும் இல்லாத பொழுது, பகைமை பாராட்டி, (துன்பத்தைக் கொடுக்கும் செயல்களை) திட்டமிட்டு, பிறருக்குத் துயர் தரும் செயல்களை செய்யாதிருத்தல் வேண்டும். புலங்களில் மலர்ந்துள்ள பூக்களில் காணும் பொன்னையொத்த மகரந்தத் துகள்கள் போன்ற தேமலையுடைய பூங்கொம்பு போன்றவளே, தனக்குத் துன்பம் தருவனவையே, பிறருக்கும் துன்பம் தரும் (என அறிவாயாக).

    பழமொழி சொல்லும் பாடம்:
    தனக்குத் துன்பம் தருவதே பிறருக்கும் துன்பம்தரும் ஆதலால், பிறரைத் துன்புறுத்தாதிருக்க வேண்டும். காழ்ப்புணர்வு கொண்டு துன்பம்தரும் வழிகளைத் தேடித்தேடி பிறருக்குத் துன்பம் தருதல் பயனற்ற செயல், தனக்குத் துயர் தரும் செயல்களே பிறருக்கும் துயர் தரும் என்பதை உணரவேண்டும் என்பதைக் கூறும் ,

    தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
    மன்னுயிர்க்கு இன்னா செயல். (குறள்: 318)

    தனக்கு இவையிவை துன்பம் தரும் என நன்கறிந்தவர், பிறருக்கு அச்செயல்களை ஏன் செய்யவேண்டும் என்ற திருக்குறள் கருத்தினை இங்கே ஒப்பு நோக்கலாம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 31, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு அன்பு ஜெயா அவர்கள்

    Anbu Jeya

     

    வல்லமை இதழின் இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சிட்னி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திருவாளர் அன்பு ஜெயா அவர்கள். மருந்தாக்கியல் துறையில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவராயினும் தமிழின்பால் ஆர்வம் மிக்கவர். உயரதிகாரியாகப் பணியாற்றிய இவர் தனது பணி ஓய்விற்குப் பிறகு தான் பங்கேற்ற தமிழ் சார்ந்த தன்னார்வப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அந்த வரிசையில், சென்ற வாரம் (ஆகஸ்ட், 24 அன்று)மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்று, ஆஸ்திரேலியாவில் தமிழ் வளர்ச்சிப் பணிகள் பற்றிய சிறப்புரையாற்றினார். அயல்நாட்டில் தமிழ் வளர்க்கும் அரும்பணியை ஆற்றிவரும் திரு. அன்பு ஜெயா அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    சென்னையைச் சேர்ந்த முனைவர் அன்பு ஜெயா அவர்கள், மதுரை மருத்துவக் கல்லூரியிலும், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேலஸ் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றவர். இரண்டாம் மொழி கற்பித்தலில் பயிற்சி பெற்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிட்னி பாலர் மலர் தமிழ்ப்பள்ளிகளில் தன்னார்வலராகவும், அதன் மக்கள்தொடர்பு அதிகாரியாகவும், ஹோல்ஸ்வொர்த்தி கிளை தமிழ்ப்பள்ளியின் முதல்வராகவும் எனத் தொடர்ந்து பற்பல பொறுப்புகளை ஏற்றுத் தமிழ்ச்சேவை செய்து வருபவர். தற்பொழுது பாலர் மலர் தமிழ்ப்பள்ளி ஆலோசகராகவும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கூட்டமைப்பின் புத்தகக் குழுவில் பங்கேற்று, பாடப்புத்தகங்கள் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

    தமிழ் ஆஸ்திரேலியன்” மாதஇதழின் (http://www.tamilaustralian.com.au/) இணையாசிரியரான அன்பு ஜெயா அவர்கள், ஆஸ்திரேலியாவிலும், புலம்பெயர்ந்த தமிழர் வாழும் அயல்நாடுகளிலும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் நடத்தி வருகிறார். தமிழை இரண்டாம் பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு உதவியாகத் தனது இணையதளத்தில் (http://www.anbujaya.com/) பல பயிற்சிகளை தொகுத்து அளித்துள்ளார். தமிழ் பயிற்றுவிக்கும் அயலக பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இத்தளம் பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ளது.

    வாரம் ஓரிரு மணிநேரங்களே தமிழ்கற்கும் சூழ்நிலையில் வளர்பவர் அயலகத்தில் வளரும் தமிழ்க்குடும்பங்களின் பிள்ளைகள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சிறுவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பொழுது, தாயகத்தில் கற்பிக்கும் முறையில் இருந்து சற்று வேறுபட்ட உத்திகளைப் பயன்படுத்தவேண்டியத் தேவையுள்ளது. இத்தேவை குறித்தும், அதற்கு உதவும் உத்திகள் குறித்தும் “சிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்” என்று அன்பு ஜெயா விவரிக்கும் கட்டுரையும் இத்தளத்தில் இடம் பெறுகிறது. இக்கட்டுரையை அவர் மலேசியாவில் 2013 ஆம் ஆண்டு நடந்த 10 ஆவது உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார். மறு ஆண்டு, கோவையில் நடந்த “தாயகம் கடந்த தமிழ் 2014” எழுத்தாளர் மாநாட்டில், “ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் சமர்ப்பித்தார்.

    இந்த ஆண்டு, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற ஆஸ்திரேலியா பாலர் மலர் தமிழ்ப்பள்ளி ஆலோசகரான திரு. அன்பு ஜெயா அவர்கள்,

    Anbu Jeya Madhurai

    “ஆஸ்திரேலியாவில் தமிழர்களின் வளர்ச்சியும் தமிழ்மொழியின் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஆஸ்திரேலியாவில்தான் முதன்முதலில் தமிழ் வளர்ச்சிக்கான பன்மொழிக்கொள்கை கொண்டுவரப்பட்டது என்றும், தாய் மொழியைத் தவிர வேற்று மொழியொன்றை அறிந்துகொள்ள இத்திட்டம் வழிவகுக்கிறது என்றும் கூறினார். அந்த பாடத்திட்டத்திற்கேற்ப ஏழாம் வகுப்பு நூல்கள் உருவாக்கப்பட்டுவிட்டன என்றும், அடுத்த கட்டமாக எட்டாம் வகுப்புக்கான நூல்கள் உருவாகும் பணி தொடர உள்ளது என்றும் கூறினார். மேலும், திருக்குறள் நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு மாணவர்களுக்குத் தமிழின் சிறப்பு உணர்த்தப்படுகிறது என்றும், மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசனைகளும் பெறப்பட்டு ஆஸ்திரேலியாவின் தமிழ்வளர்சிப் பணி தொடரும் எனவும் கலந்துரையாடலில் ஆஸ்திரேலியாவில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் தமிழ் வளர்ச்சிப்பணிகள் பற்றியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

    ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பேர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் உள்ளன. பன்மொழிச் சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்மொழியில் சொல்வளம் பெற இத்தகைய வானொலிகள் பெரும் பங்காற்றுகின்றன. தமிழ் ஓசை, கலப்பை, தென்றல், மெல்லினம் போன்ற அச்சு இதழ்களும் ஆஸ்திரேலியாவில் வெளி வருகின்றன. தமிழ்க் கல்வியினைப் பொறுத்தவரை தமிழ் அமைப்புகள் சில சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழைக் கற்பிக்கின்றன போன்ற தகவல்களையும் வழங்கி ஆஸ்திரேலிய தமிழ்வளர்ச்சியின் நிலையை எடுத்துரைத்தார்.

    புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களின் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகத் தொடர்ந்து கடந்த கால்நூற்றாண்டாகத் தன்னார்வப் பணியாற்றிவரும் வல்லமையாளர் அன்பு ஜெயா அவர்களைப் பாராட்டி அவர் பணிகள் சிறப்புறவும், அதனால் அயலகத் தமிழர்கள் பயன் பெறவும் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Contact Links:
    website: http://www.anbujaya.com/
    blog: தமிழ்ப் பந்தல்: http://tamilpandal.blogspot.com.au/
    facebook: https://www.facebook.com/anbu.jaya
    google.plus: https://plus.google.com/116850260359140513353/posts
    youtube: https://www.youtube.com/channel/UCAS3JlgjchEQxRMM8enxneQ
    http://tamilaustralian.com.au/magazine/?feb2014
    email: anbujaya2005@gmail.com
    Sources:
    http://epaper.dinamani.com/575841/Dinamani-Madurai/25-08-2015#page/1/1
    http://epaper.dinamalar.com/Gallery.aspx?id=25_08_2015_273_014_002&type=P&artUrl=25082015273014&eid=356
    http://www.dinamani.com/edition_madurai/madurai/2015/08/25/ஆஸ்திரேலியாவில்-தமிழ்ச்சொ/article2992538.ece

    Share
  • மகளிர் சமத்துவ நாள்

    –தேமொழி.

    wedஅமெரிக்காவில் ஆகஸ்ட் 26 ஆம் நாள், “மகளிர் சமத்துவ நாள்” (Women’s Equality Day) எனக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அமெரிக்காவின் 95 ஆவது மகளிர் சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நாள் அமெரிக்கப் பெண்மணிகள் 1920 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றதைக் கொண்டாடும் நாளாகும்.

    மிகுந்த போராட்டத்திற்கிடையே, 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடைகள் பலவற்றை எதிர்கொண்டு அமெரிக்கப் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றார்கள். சூசன் பி. ஆண்டனி, எலிசபெத் காடி ஸ்டாண்டன், மற்றும் லுக்ரெஷிய மாட் (Susan B. Anthony, Elizabeth Cady Stanton, and Lucretia Mott) ஆகிய பெண்மணிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் மிக முக்கியமானவர்கள்.

    பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையைத் தந்த அமெரிக்க அரசியலமைப்பின் 19 வது சட்டவரையறை திருத்தம் (19th Amendment to the U.S. Constitution: Women’s Right to Vote), 1919 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரசில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் இது நிறைவேறுவது பற்றிய நம்பிக்கையின்மையும், சந்தேகங்கள் பலவும் தோன்றிய காலமது. மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலாக ஒப்புதல் அளிக்கப்பட்டு சட்டமாக மாற 36 மாநிலங்கள் இச்சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். பழமைவாதத்தில் ஊறிய அமெரிக்க தென்மாநிலங்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மனிதஉரிமைகளைப் பொறுத்தவரையில் பிற்போக்கான கொள்கைகளின் இருப்பிடமான அமெரிக்க தென்மாநிலங்கள், கருப்பின மக்களின் அடிமைத்தளையை நீக்குவதையும் எதிர்த்து போர்க்கொடி உயர்த்தி உள்நாட்டுப் போரைத் துவக்கியதையும், அந்நிகழ்வு அமெரிக்க வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்தியதையும் இங்கு நாம் நினைவுகூரலாம்.

    இச்சட்டத்திற்கு, 1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாட்டின் 35 மாநிலங்களின் சபைகளே இசைவு தெரிவித்திருந்தன. பெண்களுக்கு வாக்களிக்கும் சட்டம் வெற்றிபெறுவதை நிர்ணயிக்கும் நிலை இறுதியில் ‘டென்னசி’ மாநிலத்தின் கைகளில் வந்து விழுந்தது. அந்த மாநிலத்தின் அரசியல்வாதிகள் எடுக்கவிருக்கும் முடிவில் பெண்கள் வாக்களிக்கும் சட்டத்தின் வெற்றிவாய்ப்பு ஊசலாடியது. அவர்களிலும் 48-48 என்ற நிலையில் சரிபாதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், சரிபாதியினர் எதிர்த்தும் வாக்களித்திருந்த நிலையில், இச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்தவர் ‘ஹாரி பர்ன்’ (Harry Burn) என்ற அவை உறுப்பினர். அப்பொழுது 24 வயதே ஆன ஹாரி பர்ன் தனது ஆதரவைத் தெரிவித்ததன் காரணம், அவரது அன்னை அவருக்குக் கடிதம் எழுதி பெண்கள் உரிமைக்கு ஆதரவாகச் செயல்படும் ‘நல்ல பையனாக’ (“be a good boy”) அவரை நடந்து கொள்ளச் சொன்னதால்தான் என்பது வியப்புக்குரிய செய்தி. ஹாரி பர்ன் என்ற ‘தாய் சொல்லைத் தட்டாத தனயனால்தான்’ பெண்கள் வாக்குரிமை சட்டம் வெற்றி பெற்றது என்பது அமெரிக்க வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு திருப்புமுனை.

    வாக்குரிமை பெற்றாலும், அதனைத் தொடர்ந்து 95 ஆண்டுகள் கடந்த பின்னரும், அரசியலைப் பொறுத்தவரை அமெரிக்கப் பெண்களின் முன்னேற்றம் கேள்விக்குறியாகவே இன்றும் இருந்து வருகிறது. உலகில் பல நாடுகளிலும் பெண்கள் தலைமை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுவிட்டாலும், முன்னேறிய நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா இதுவரை ஒரு பெண்மணியை அமெரிக்கத் தலைவராக அடைந்ததில்லை. மாநில, நகர அளவிலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை, ஆண் ஆட்சியாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்பதும் பெருங்குறையே. இருப்பினும், கடந்த 35 ஆண்டுகளாக ஆண்களைவிட அதிக அளவில் பெண்களே வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். அமெரிக்க ஆட்சியாளர்களில் ஐந்தில் ஒருவரோ அல்லது நான்கில் ஒருவரோதான் (20-25%) மகளிர் என்பது இந்த நூற்றாண்டிலும் கவலை தரும் நிலையே.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: நெய்த்தலைப் பால் உக்குவிடல்

     

    விழுத்தொடைய ராகி விளங்கித்தொல் வந்தார்
    ஒழுக்குடைய ராகி ஒழுகல், – பழத்தெங்கு
    செய்த்தலை வீழும் புனலூர! அஃதன்றோ
    நெய்த்தலைப்பா லுக்கு விடல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்
    ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்கு
    செய்த்தலை வீழும் புனல் ஊர!-அஃது அன்றோ
    நெய்த்தலைப் பால் உக்குவிடல்.

    பொருள் விளக்கம்:
    பெருமைதரத்தக்க பாரம்பரியப் பின்னணியுடன், பழம்பெரும் குடிப்பிறப்பைக் கொண்டவர் ஒருவர், சிறந்த ஒழுக்கம் நிறைந்த வாழ்வையும் கடைபிடித்தல் (எத்தகையது எனில்), முதிர்ந்த தேங்காய்கள் வயலில் விழும் வளமும், நீர் வளமும் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே; அத்தகைய நிலையன்றோ, பசும் நெய்யில் சிந்திய பால் கலந்துவிட்டது போன்ற நன்மை தருவதை ஒத்தது.

    பழமொழி சொல்லும் பாடம்:
    நற்குடிப்பிறப்பைக் கொண்டவர், குடிப்பிறப்பின் பெருமையைக் காக்கும் நல்லொழுக்கமும் கொண்டிருப்பதே சிறப்பைத் தரும். நற்குடிப்பிறப்பிற்கேற்ற நல்லொழுக்கத்தின் இன்றியமையாமையை வள்ளுவர்,

    ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும். (குறள் – 133)

    ஒருவர் ஒழுக்கமுடையவராக வாழ்வதே நற்குடிப்பிறப்பிற்கேற்ற பண்பாகும், தவறினால் அத்தகவையவர் இழிபிறப்பினராகக் கருதப்படுவர் என்றும்,

    சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
    குலம்பற்றி வாழ்தும்என் பார். (குறள்: 956)

    குற்றமற்ற குடிபிறப்பினராக வாழவிரும்புபவர் வஞ்சகச்செயல்களை ஒத்த தகாத செயல்களைச் செய்யார் என்றும் பெருமைமிக்க நற்குடிப்பிறப்பினரின் நல்லொழுக்கத்தின் தேவையை உணர்த்துகிறார்.

    Share
  • லேஸ்லோ க்ரேசேஹார்க்கை

    — தேமொழி.

    லேஸ்லோ க்ரேசேஹார்க்கை - László Krasznahorkai‘லேஸ்லோ க்ரேசேஹார்க்கை’ (László Krasznahorkai) என்ற ‘ஹங்கேரிய மொழி’ (Hungarian) எழுத்தாளர் சிறந்த இலக்கியப் படைப்பாளருக்கான 2015 ஆண்டின் ‘மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு’ (Man Booker International Prize) பரிசினைப் பெற்றுள்ளார்.

    ஹங்கேரியைச் சேர்ந்த 61 வயதாகும் லேஸ்லோ க்ரேசேஹார்க்கை, சமூகத்தின் இருண்டபகுதியை, ஆழ்ந்த தீவிரமான முறையில் விவரிக்கும் புனைகதைகளின் மூலமும், மாறுபட்ட எழுத்து நடையின் மூலமும் வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தவர். இவரது படைப்புகள் ‘பின் நவீனத்துவம்’ பிரிவில் அடங்குவன. இவரது புகழ்பெற்ற கதைகள் சில ஹங்கேரிய மொழியில் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன.

    ‘ஷத்தன்டங்கோ’ (Satantango), ‘தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’ (The Melancholy of Resistance) ஆகிய இரு நூல்களும் அவ்வகையில் திரைப்படங்களாக வெளிவந்தவற்றில் குறிப்பிடத்தக்கன. இவரது நூல்களில் சில ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கியப் பங்களிப்பிற்காக இருபதுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றவர் லேஸ்லோ க்ரேசேஹார்க்கை. அவற்றில் ‘காசத் பரிசு’ (Kossuth Prize), ‘வெலேனிக்கா பரிசு’ (Vilenica Prize) ஆகியவையும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இவரது முதல் புதினமான ஷத்தன்டங்கோ மூலமே இவர் முன்னணி எழுத்தாளர்களின் வரிசையில் இடம் பிடித்தவர்.

    மான் புக்கர் இன்டர்நேஷனல் பரிசு என்பது உலகளாவிய முறையில், ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் ஆசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரது கற்பனையில் உருவான சொந்த படைப்புகள், உலக புத்திலக்கியத்தில் ஆற்றிய பங்கினைப் பாராட்டி வழங்கப்படுகிறது. வாழும் எழுத்தாளர் ஒருவரின் இலக்கியப் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படும் இப்பரிசு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

    எழுத்தாளரின் பரிசுக்குரிய தகுதி பற்றி ஆராய பரிசுக் குழுவின் நடுவர்களே படைப்பாளிகளைத் தேர்ந்தெடுப்பார்கள், பிறரது பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பது இப்பரிசுக்காக நடத்தப்படும் போட்டியின் விதி. எழுத்தாளரின் இலக்கியத்திற்கான தொடர் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படும் பரிசு என்பதால் இதைக் குறிப்பிட்ட ஒருநூலுக்கான பரிசு என்பதைவிட எழுத்தாளரின் தொடர்ந்த இலக்கியப் பணி பாராட்டப்படுகிறது என்ற வகையில் இப்பரிசு அமைகிறது.

    மான் புக்கர் இன்டர்நேஷனல் பரிசு 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதன் முதலில் பரிசு பெற்றவர் அல்பேனியா எழுத்தாளர் ‘இஸ்மாயில் கடரே’ (Ismail Kadare), இவரது அல்பேனிய மொழி இலக்கியங்களுக்காகப் பாராட்டப்பட்டார். இப்பொழுது ஆறாவது விருதாளராக லேஸ்லோ க்ரேசேஹார்க்கை, ஹங்கேரி மொழியில் படைத்த இலக்கியங்களுக்காக இப்பரிசைப் பெற்றுள்ளார். பரிசுபெற்ற ஏனைய எழுத்தாளர்கள் கனடா, அமெரிக்கா, நைஜீரியா என்ற பலநாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அவர்கள் படைத்த ஆங்கில இலக்கியங்களுக்காகப் பரிசு பெற்றனர்.

    இப்பரிசுத் தொகையின் மதிப்பு 60,000 பிரித்தானிய வெள்ளிகள், எழுத்தாளர் வாழ்நாளில் ஒருமுறைதான் தேர்ந்தெடுக்கப்படுவார். நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருக்கும் 15,000 பிரித்தானிய வெள்ளிகள் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்தப் பரிசுக்காக கருதப்பட்ட எழுத்தாளர்களில் ‘அமிதவ் கோஷ்’ (Amitav Ghosh) என்ற இந்திய எழுத்தாளரும் அடங்குவார்.

    [குறிப்பு: ‘மான் புக்கர் புனைகதை விருது’ (Man Booker Prize for Fiction) என்னும் வேறோர் விருதை, இந்தியாவைச் சேர்ந்த அருந்ததி ராய் (The God of Small Things), கிரண் தேசாய் (The Inheritance of Loss), அரவிந்த் அடிகா (The White Tiger) ஆகியோர் வென்றுள்ளனர்.]

    ஷத்தன்டங்கோ (Satantango), தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ் (The Melancholy of Resistance), வார் அண்ட் வார் (War & War), செய்போ தெர பெல்லோ (Seiobo There Below), அனிமல் இன்சைட் (Animalinside), எசர்கோர்ல் ஹேக் தெரல் தொ, நியூகத்ரோல் உத்தக், கெலத்ரோல் ஃபால்யோ (Északról hegy, Délről tó, Nyugatról utak, Keletről folyó), தி பில ஃபார் பால்மா வெச்சியோ அட் வெனிஸ் (The Bill: For Palma Vecchio, at Venice), அஸ் உட்ல்லுசோ ஃபார்க்கஸ் (Az utolsó farkas), மியுசிக் அண்ட் லிட்டரேச்சர், இஸ்யு (Music & Literature: Issue 2), அஸ் உர்கை ஃபோகொலி (Az urgai fogoly) ஆகிய நூல்களை லேஸ்லோ க்ரேசேஹார்க்கை எழுதியுள்ளார்.

    இவரது நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவியவர்கள் ‘ஜார்ஜ் செர்ட்டஸ்’ (George Szirtes) மற்றும் ‘ஒத்திலியே மொசாட்’ (Ottilie Mulzet) ஆகியோர். மான் புக்கர் இன்டர்நேஷனல் வழங்கிய மொழிபெயர்ப்பாளருக்கான பரிசுத் தொகையை இவரது இந்த இரு மொழி பெயர்ப்பாளர்களும் பகிர்ந்து கொண்டனர்.

    ‘தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’ அல்லது ‘எதிர்ப்பினால் விளையும் துயரம்’ என்ற பொருள்படும் புதினம் பற்றி சற்றே விரிவான முறையில் இக்கட்டுரையில் காணலாம். லேஸ்லோ க்ரேசேஹார்க்கை அவர்கள் ‘தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’ (The Melancholy of Resistance) என்ற புனைகதைப் புதினத்தை , 1989 ஆம் ஆண்டு ‘ஏஸி எல்லானலாஸ் மெலன்காலியஹா’ (Az ellenállás melankóliája) என்ற தலைப்பில் ஹங்கேரிய மொழியில் வெளியிட்டார். இந்நூல் ஆங்கிலத்தில் ‘ஜார்ஜ் செர்ட்டஸ்’ (George Szirtes) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும், இந்தப் புதினம் ‘வெர்க்மெய்ஸ்ட்டர் ஹார்மனியாக்’ (Werckmeister harmóniák) என்று ஹங்கேரிய மொழியிலும், ‘வெர்க்மெய்ஸ்ட்டர் ஹார்மனிஸ்’ (Werckmeister Harmonies) என்ற ஆங்கிலத் தலைப்பில், புகழ் பெற்ற இயக்குநர் ‘பெலா டார்’ (Béla Tarr) இயக்கத்திலும் தயாரிப்பிலும் 2001ஆம் ஆண்டு ஹங்கேரிய மொழித்திரைப்படமாக வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்றது.

    அப்படத்தின் திரைக்கதையை லேஸ்லோ க்ரேசேஹார்க்கை, இயக்குநர் பெலா டார் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார். வெர்க்மெய்ஸ்ட்டர் ஹார்மனிஸ் என்பது தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ் புதினத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் தலைப்பு. அது இசை மேதை ‘ஆண்ட்ரியஸ் வெர்க்மெய்ஸ்ட்டர்’ (Andreas Werckmeister) அவர்களின் இசைக் கோட்பாடானது, சுருதிபேதங்கள் என்பவை இசையின் ஒரு பகுதி என்று வரையறுப்பது போல, மக்களிலும் குறையற்றவர்கள் இருப்பது கிடையாது என்ற தத்துவ நோக்கை அடிப்படைக் கருத்தாகக் கொண்டது. வாழ்வில் இடர்கள் வந்து செல்வதை, “இது கடந்து சென்றது, ஆனால் முற்றிலும் மறையவில்லை” (“It passes, but it does not pass away”) என்று; இடர் நமக்கு வந்தது முடிந்துவிட்டது, ஆனால் மீண்டும் வராது என்பதை உறுதியாகச் சொல்லமுடியாத நிலையில் வாழ்க்கை அமைந்துள்ளது என்ற தத்துவத்தை நூலின் முதலில் வரும் சொற்றொடர் நூலைப் பற்றிக் குறிப்பால் உணர்த்துகிறது.

    இந்த நூல் பொழுது போக்காகப் படித்துவிட்டுச் செல்லக்கூடிய ஒரு நூலல்ல; ஆழ்ந்து படிக்கும் வகையில் அமைந்த தத்துவக் கருத்துகள் கொண்ட ஒரு கற்பனைப் புதினம். கதைக்களம் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் பிடியில் அகப்பட்ட ஹங்கேரியின் நிலையை மறைமுகமாக உணர்த்தும் உருவக நோக்கில் அமைக்கப்பட்டது எனவும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் கதை நடைபெறுவதாக நகரத்தின் இடக்குறிப்புகள் கூறுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது. இருப்பினும், கதையின் காலம் தொலைக்காட்சி, தொலைபேசி, இரயில் பயணம் என இக்கால வசதிகள் யாவும் பரவலாகிவிட்ட பிற்கால நிகழ்வுகளைக் கொண்டுள்ளதுடன், கதை நிகழும் இடம் ஹங்கேரியின் சிறிய நகரொன்று என்றுதான் காட்டப்படுகிறது. ஆனால் கதையின் எந்த ஒரு இடத்திலும் நகரின் பெயர் கொடுக்கப்படவில்லை. கிழக்கு ஐரோப்பாவின் அரசியலையும், அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் இந்த நூல் தருகிறது என்பது இதன் சிறப்பு.

    இந்த நூலில் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ள ஒன்று எழுத்தாளரின் எழுத்தின் நடையாகும். முக்கியமாக இவரது எழுத்து நடை அனைவரும் படிக்க ஆர்வமூட்டும் வகையில் அமைந்திருக்கவில்லை. எழுத்து வழியாக ஒரு கருத்து வாசிப்பவரை எளிதில் சென்றடையத் தேவையானால் அதற்கென சில வரைமுறைகள் உண்டு. இந்த வரைமுறைகள் கட்டாயம் அல்ல என்றாலும் அது வாசிப்பவரை எழுத்தை நோக்கி ஈர்க்கும் வகையில், புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடித்துவிட்டுத்தான் கீழே வைக்க விரும்பும் வகையில் அமைந்திருப்பது எழுத்தாளரின் எழுத்துப் பரவலுக்கு உதவும். எழுத்து நடை சுஜாதா போலவும் இருக்கலாம் அல்லது சாண்டில்யன் போலவும் இருக்கலாம், அது எழுத்தாளரின் தனித்தன்மையைக் காட்டும். அவர்கள் கூறும் கருத்தும் வரலாறாகவும் இருக்கலாம் அல்லது மர்மக் கதையாகவும் இருக்கலாம் ஆனால் வாக்கியங்கள் மிகவும் எளிமையாக, சிறு சிறு வரிகளாக, ஒவ்வொரு கருத்தும் தனித் தனியே பத்தி பிரிக்கப்பட்டு அமைப்பது வாசகரைக் கவரும் எழுத்தின் அடிப்படைப் பண்பு. இந்த அடிப்படை எதிர்பார்ப்பை முற்றிலும் தகர்த்து எறிகிறது லேஸ்லோ க்ரேசேஹார்க்கையின் எழுத்து நடை.

    இக்கதையில் ஒரு பக்கத்தில் தொடங்கும் வரி அடுத்தப் பக்கத்திலும் முடியலாம், அல்லது அதற்கும் அடுத்த பக்கத்திலும் கூட முடியலாம். குறைந்தது 300 வார்த்தைகளுக்குப் பின்னரே ஒரு வாக்கியம் முடிவடைகிறது. வரிகளில் பல காற்புள்ளிகளைக் கொண்டே பல வாக்கியங்களாக எழுதக் கூடிய செய்தியை ஒரே வாக்கியமாக எழுதும் உத்தியைக் கடைப் பிடித்துள்ளார் ஆசிரியர். அதற்கேற்ப காற்புள்ளிகளை முற்றுப் புள்ளிகளாக மதித்துப் படிக்கும் வகையில் நம்மை மாற்றிக் கொண்டால் படிப்பது எளிதாகிவிடுகிறது. பத்தி என்பதே இல்லாத நூல் இருக்கலாம் என்பதையும் எழுத்தாளரின் எழுத்துமுறை காட்டுகிறது. இதை அப்படியே அவர் நடையிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளரின் திறமைதான் மிகவும் பாராட்டிற்குரியது.

    எழுத்தாளரின் வார்த்தைகளின் தேர்வு பாத்திரங்களின் மனநிலையையும், குணத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைவதுடன், சூழ்நிலையை கண்முன் நிறுத்தும் சரியான வகையில் அமைவதால் நாமும் கதைக் களத்தில் ஒருவராக மாறிவிடும் தோற்றத்தை உருவாக்குகிறது. இவரது வார்த்தைகளைத் தொடர்ந்து வாசிப்பது ஒரு இசை போலக் கூட அமைந்திருக்கிறது, இதனை உரத்து வாசிக்கும் பொழுதோ அல்லது பிறரை வாசிக்கச் சொல்லிக் கேட்கும் பொழுதோ உணரலாம். லேஸ்லோ க்ரேசேஹார்க்கையின் எழுத்து நடையில் கருத்தைக் கவரும் மற்றொன்று, அவர் பல இடங்களில் வாக்கியங்களை தமிழில் நாம் ‘அந்தாதி’ என்று கூறும் வகை போல அமைத்திருக்கும் முறை. ஒரு வாக்கியத்தின் முடிவு அடுத்த வாக்கியத்தின் தொடக்கமாக அமையுமாறு பல இடங்களில் எழுதியுள்ளார்.

    காட்டாக, கீழ்வரும் வரிகளைக் கருத்தில் கொள்ளலாம்…

    “at which point he took a tight grip of Valuska’s arm and continued on his way. He continued on his way, having decided that Valuska …”

    மற்றும்,

    “he had nevertheless to acknowledge that Mrs Harrer’s chattering had not been entirely beside the point. Not entirely beside the point, that was true …”

    தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ் கதை ஒரு நவம்பர் 30 ஆம் தேதி மாலை, அதிகக் குளிர் நிறைந்த நாளொன்றில் தொடங்கி, அடுத்த இரண்டு நாட்களில் ஒரு சிறுநகரையும், அங்கு மூன்று நாட்கள் நடத்தத் திட்டமிடப்பட்ட சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பயன்படுத்தி ஊருக்குள் நுழையும் நூற்றுக்கணக்கான முரடர்களையும், அவர்களில் முப்பதுக்கும் சொச்சமான கேடிகளின் கைகளில் நகரம் சின்னாபின்னம் அடைவதையும் சித்தரிக்கிறது. சர்க்கஸ் நிகழ்த்துவோர் பாடம் செய்யப்பட்ட மிகப்பெரிய திமிங்கிலம் ஒன்றை மிகப் பெரிய ட்ரக் ஒன்றில் காட்சிப் பொருளாக வைத்துக் கட்டணம் வசூலித்து மக்களைப் பார்க்க அனுமதிக்கிறார்கள். அதைத் தவிர்த்து வேறு வித்தைகள் எதுவும் நடத்தவில்லை, அல்லது வித்தைக் காட்சிகள் நடத்த வாய்ப்பு கிடைக்கும் முன்னர் நிலைமை மாறிவிட்டதா என ஆசிரியர் குறிப்பிடவும் இல்லை. திமிங்கிலத்தை மட்டுமே டிசம்பர் முதல்நாள் அன்று சர்க்கஸ் நிறுவனம் காட்சிக்கு வைக்கிறது.

    இதற்கிடையில் நகருக்கு வரப்போகும் ஆபத்தை மக்களில் சிலர் உணர்ந்துவிடுவதால் அச்செய்தி வதந்தி போல நகரத்திலும் பரவத் தொடங்குகிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி இரவு அந்த சிறிய நகர், முரடர் கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி நகர மக்களில் பலரும் உயிரையும் உடமைகளையும் இழக்கிறார்கள். அழிவுக்குக் காரணமான போக்கிரிகள் சிலரும் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதன் பிறகு, இரண்டு வாரம் கடந்த பின்னர் நகரின் நிலையில் ஏற்பட்ட மாற்றம், கதையின் இறுதியில் மிகச் சுருக்கமாகப் பின்னுரை பகுதியில் சொல்லப்படுகிறது. கலவரத்திற்கு முன்னர் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்ட முன்னுரையாக வரும் முதல் அத்தியாயப் பகுதி ஒரு சிறு கதை போலவும், கலவரத்தின் பின்விளைவுகள் ஒரு சிறு தனிக்கதை போலவும் தோற்றம் அளிக்கும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளது.

    நவம்பர் மாதத்தின் இறுதி நாளிலும், டிசம்பரின் முதல் இரண்டு நாட்களில் நகரில் நடைபெறும் கலவரத்தினால் ஏற்படும் மாற்றங்கள் நகரமக்களில் யார் யாரை எவ்விதம் பாதிக்கிறது, பிறகு அவர்கள் நிலை என்னவாகிறது என்பதையே கதை சித்தரிக்கிறது. கதையில் பல நகர மாந்தர்கள் குறிப்பிடப்பட்டாலும் கதையின் முக்கியமான பாத்திரம் என்பது, பதவியையும் அதிகாரத்தையும் அடைவதையே குறிக்கோளாக வைத்திருக்கும் “மிஸ்ஸஸ் துந்தே எஸ்ட்டெர்” (Mrs. Tünde Eszter) என்ற 52 வயதுப் பெண்மணியா; அல்லது நகரில் நடக்கும் அனைத்தையும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டும், முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்கும், வயதிற்கேற்ற மனமுதிர்ச்சியற்று, தன்னுடைய கனவுலகில் காலத்தைத் தள்ளிவரும், நல்ல மனதுடைய அப்பாவி 35 வயது இளைஞன் “யானோஸ் வலஸ்க்கா ஜூனியர்” (János Valuska, Jr.) என்பவனா என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவில் இருவரைச் சுற்றியுமே கதை அமைக்கப்பட்டுள்ளது.

     

    கதையின் முக்கியமான கதாப்பாத்திரங்கள்:
    மிஸ்ஸஸ் யோஃசெப் பிலஃப் (Mrs. József Plauff) – மிஸ்ஸஸ் பிலஃப் என்று அழைக்கப்படும் இவர் கதாநாயகன் யானோஸ் வலஸ்க்காவின் தாயார். வலஸ்க்காவின் தந்தையான யானோஸ் வலஸ்க்கா சீனியர் என்பவரை மணந்து, அவர் இறந்த பிறகு மற்றொருவரை மணந்து அவரும் இதயநோயால் இறந்த பிறகு, மகன் வலஸ்க்காவை 27 வயது வரை பராமரித்தவர் இத்தாய். அவன் பொறுப்பற்றவனாக தனக்கு அவமானம் தரும் வகையில் நடப்பதாலும், குடிகாரனாக இருப்பதாலும் அவனை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டுத் தனிமையில் வாழ்கிறார். தனது துயரை மறக்க தோட்டம், வீட்டு அலங்காரம் என எதை எதையோ செய்து பார்த்தும் அவை எதுவுமே உதவாமல், மகன் தந்த ஏமாற்றத்தால் நிம்மதி இழந்து வாழ்க்கையைக் கடத்தும் 58 வயதுப் பெண்மணி இவர்.

    யானோஸ் வலஸ்க்கா ஜூனியர் (János Valuska, Jr.) – இவனது வாழ்க்கை நிலை இவனது தாய் மிஸ்ஸஸ் பிலஃப்பிற்கு ஏமாற்றத்தை அளித்தாலும், இவன் தன்னைப் பொறுத்தவரை அதைப்பற்றியக் கவலையற்றவன். சூரிய மண்டலம், நிலா, வானம், சூரியன், சூரியக்கிரகணம் போன்றவற்றில் அதிகப்படியான ஆர்வம் கொண்டவன். தான் இரவில் மது அருந்தச் செல்லும் மதுபான விடுதியில் தனக்கென இருக்கும் நண்பர்களான ஓட்டுநர், நாவிதர், சமையல்காரர் போன்ற உழைப்பாளர் கூட்டத்திற்காக அவர்களையே நடிக்க வைத்து தினம் தினம் சூரியகிரகணத்தை செயல்முறையில் விளக்குபவன். பகல் பொழுதில் அஞ்சல் அலுவலக ஊழியனாகப் பணியாற்றி, தனது தோளில் என்றும் நிரந்தரமாகத் தொங்கும் பையில் நாளிதழ்களை எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணி செய்பவன். எதைப் பற்றியும் கவலையற்றவன், யாரையும் நம்புபவன், எவருடைய உள்நோக்கத்தையும் அறியும் திறனற்றவன்.

    விவாகரத்து இன்றி பிரிந்து வாழும் எஸ்ட்டெர் தம்பதிகளிடையே இணைப்புப் பாலமாக இருந்து இருவருக்கும் உதவுபவன். தனிமையில் உடல்நலமற்று வாழும் முதியவர் மிஸ்டர் எஸ்ட்டெருக்கு உணவு கொண்டு வருவது, அவர் மனப்பாரத்தைக் குறைக்கப் பேச்சுத் துணையாக இருப்பது போன்றவை வலஸ்க்காவின் தினசரி நடவடிக்கைகள்.

    பலர் வலஸ்க்காவை முட்டாள் என்று நினைக்க விரும்பினாலும், அவன் மேல் அதிக அன்பும் அக்கறையும் கொண்டு வலஸ்க்காவைத் தனது உற்ற தோழனாக நினைக்கும் மிஸ்டர் எஸ்ட்டெர் மட்டும், அப்பாவியாக இருக்கும் அவன் ‘அரிய அழியக்கூடிய நிலையில் உள்ள வண்ணத்துப் பூச்சி ஒன்று தீப்பிடித்த காட்டில் பறக்கும் போது காணாது போவது’ (‘Like a rare endangered butterfly lost in flight in a burning forest …’) போன்ற பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பவன் என்று எண்ணுபவர்.

    மிஸ்டர் கையோர்கி எஸ்ட்டெர் (Mr. György Eszter) – காரியவாதியான மனைவி மிஸ்ஸஸ் துந்தே எஸ்ட்டெருடன் 30 ஆண்டுகள் வாழ்ந்தவர். இசைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவருக்கு வீட்டில் எடுபிடியாக உதவி செய்யும் மிஸ்ஸஸ் ஹாரர், வலஸ்க்கா ஆகியோர் துணையுடன் காலாத்தைக் கழிப்பவர். கலவரத்தில் வலஸ்க்கா காணாமல் போன பிறகு அவனுக்காக மிகவும் கவலைப்பட்டு அலைகிறார்.

    மிஸ்ஸஸ் துந்தே எஸ்ட்டெர் (Mrs. Tünde Eszter) – தன்னம்பிக்கையையும் துணிச்சலும் கொண்ட பெண்மணி இவள். பிறர் அழிவில் தன்னை உயர்த்திக் கொள்பவள், கதையின் போக்கின்படி மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் எந்த வகையிலும் மிஸ்டர் எஸ்ட்டெர்ரைத் துன்புறுத்தியதாகக் காட்டப்படவில்லை. மாறாக, கிறுக்குப் பிடித்தவர் போல சமயத்தில் கணவர் நடந்து கொண்டாலும், தானுண்டு தனது இசையுண்டு என்று துறவி போல வாழும் கணவரை; சமூகத்தில் மதிப்புடன் வாழும் (someone who was an idol of the educated public, … man generally regarded as an eccentric hermit living in absolute isolation) ஒரு பெரிய மனிதரான மிஸ்டர் எஸ்ட்டெரை விவாகரத்து செய்யவில்லை மிஸ்ஸஸ் எஸ்ட்டெர். தன்னை, தனது உறவை அவமதித்த கணவரை மிகவும் வெறுத்தாலும், அவருடன் இருக்கும் உறவை வெட்டாமல் இருப்பது தனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பது இவளது எண்ணம்.

    நகரத்தின் காவல்துறைத் தலைவருடன் காதல் உறவு கொண்டு அவரைக் கைக்குள் போட்டுக் கொண்டு, அவரது உதவியுடன் நகரசபையின் “தூய்மை மற்றும் துப்புரவு திட்டத்தின்”(A TIDY YARD, AN ORDERLY HOUSE) ஒன்றின் பிரதிநிதியாகவும், நகர கவுன்சிலின் மகளிர் குழுவின் தலைவியாகவும் பதவி பெறுகிறாள். இதனால் டவுன்ஹாலில் நுழைந்து, சமயம் வரும்பொழுது நகரசபையின் முக்கியப்பதவி ஒன்றை அடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றவும், பதவியை அடையவும் திட்டம் போட்டுக் காய்களை நகர்த்தி, வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பேராசை கொண்ட அரசியல்வாதி இந்த மிஸ்ஸஸ் எஸ்ட்டெர்.

    கதையில் வரும் அனைத்து மாந்தர்களையுமே தன்னல நோக்குடன் தனது காரியத்தை சாதிக்கப் பயன்படுத்திக் கொள்ளும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் ஒவ்வொருவரையும் எதனால் வீழ்த்த முடியுமோ, அல்லது விலைக்கு வாங்க முடியுமோ அதைக் கொண்டு காரியத்தைச் சாதித்துக் கொள்பவள். வலஸ்க்காவின் அப்பாவித்தனத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள். சர்க்கஸ் நிகழ்ச்சியால் நகருக்குள் கலவரம் ஏற்படும் பொழுது நகர மேயர் முதல் கொண்டு கலவரம் அடைந்த நிலையில் இருக்கும் பொழுது, அந்த சூழ்நிலையைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதிலேயே மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் குறியாக இருக்கிறாள். மோசமான சூழ்நிலையையும், தடைகளையும் நம்பிக்கையுடன் தனது உயர்வுக்கு தனது திட்டத்திற்குப் பயன்படுத்துவதில் குறியாக இருப்பதும், தக்க சமயத்தில் ராணுவத்தினருக்கு நகரின் நிலையை விளக்கும் பொறுப்பை வலிந்து ஏற்று நகரத்தின் கலவரக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டுவர எதிர்த்து நிற்க உதவும் பாங்கும் (leader of the resistance) இவளது வியக்க வைக்கும் நடவடிக்கைகள். அதனால் நகரசபையினர், இவளைப் போல தலைவர் ஒருவர் நகருக்குத் தேவை என எண்ணி நகர கவுன்சிலின் செயாலாளர் பதவியை வழங்கி, ‘மேடம் செகரட்டரி’ என்று மரியாதையுடன் அழைக்கும் நிலையை அடைகிறாள்.

    தன்னலவாதியாக இருந்தாலும் தனக்கு வலது கை போல உதவும் மிஸ்டர் ஹாரருக்கு நகரசபையில் ஒரு பணிக்கு ஏற்பாடு செய்ய முயற்சிப்பதும், தவறாக கலவரக்காரர்களிடம் சிக்கிக் கொள்ளும் தனது மற்றொரு உதவியாளனான வலஸ்க்கா குற்றங்கள் செய்ய திறனற்றவன் என இராணுவ அதிகாரிக்கு எடுத்துக் கூறி அவன் கொல்லப்படாமல் தடுத்து, அவனை மனநோய் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்வதும், திறமையுடன் தன்னை வெளியேற்றிய கணவரின் வீட்டிலேயே மீண்டும் சமயம் பார்த்து நுழைந்து விடும் திறமை எனக் கனக்கச்சிதமாக செயலாற்றும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெரின் பாத்திரப்படைப்பு வலஸ்க்காவை விட கவனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

    மிஸ்டர், மிஸ்ஸஸ் ஹாரர் (Mr. and Mrs. Harrer) – இத்தம்பதிகளின் வீட்டின் பின்னறை ஒன்றில்தான் வலஸ்க்கா வசிக்கிறான். மிஸ்டர் ஹாரர் ஊரின் மரியாதைக்குரியவர்களில் ஒருவர், கற்தச்சர், மிகப்பெரும் குடிகாரர். மிஸ்ஸஸ் பிலஃப், வலஸ்க்கா ஜூனியர், மிஸ்டர், மிஸ்ஸஸ் எஸ்ட்டெர்; மிஸ்டர், மிஸ்ஸஸ் ஹாரர் ஆகிய இந்த முக்கியமான ஆறு பாத்திரங்களின் மூலமே கதையைச் சொல்லிச் செல்கிறார் லேஸ்லோ க்ரேசேஹார்க்கை.

     

    கதையின் சுருக்கம்:
    கதை தொடங்கும் முதல்நாள் மாலையில் மிஸ்ஸஸ் பிலஃப் நடமாட இயலாத தனது சகோதரிகளை சந்தித்துவிட்டு இரயிலில் வீடு திரும்புகிறார். தாமதமாக வந்து சேரும் இரயிலினால் வீடு செல்லும் கடைசிப் பேருந்தையும் தவறவிட நேருகிறது. என்றும் இல்லாதவகையில் நகர் இருளில் வேறு மூழ்குகிறது. அச்சத்துடன் அவசர அவசரமாக அவர் வீடுதிரும்பும் வழியில் மறுநாள் நகரில் நடைபெறப்போகும் சர்க்கஸ் நிகழ்ச்சிக்காக பெரிய ட்ரக் ஒன்று வருவதையும், ஊருக்குப் புதியவர்களான முரடர் கூட்டம் சாலைகளில் குழுமுவதையும், அவர்களில் ஒரு சிலர் வன்முறையில் ஈடுபடுவதையும் காணுகிறார். அவர் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அவரைச் சந்திக்க வரும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர், தனது உதவியாளனான மிஸ்ஸஸ் பிலஃப்பின் மகன் வலஸ்க்காவை தன்னிடம் இருந்து பிரிந்து வாழும் தனது கணவரிடம் உதவி கோரி அனுப்பப் போவதாகச் சொல்லி மிஸ்ஸஸ் பிலஃப்பின் கருத்தை அறிய விரும்புகிறாள். மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் மீது நன்மதிப்பு கொண்டிராத மிஸ்ஸஸ் பிலஃப் அவளிடம் பட்டும்படாமல் பேசி அவளை வெளியேற்றிவிடுகிறார்.

    மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் தனது வீட்டிற்குத் திரும்பி அவளது காதலரான நகரக் காவல்துறை அதிகாரிக்காகக் காத்த்கிறார். பெரும் குடிகாரரான காவல்துறைத் தலைவர் வந்து அவளுடன் பேசிக்கொண்டிருக்கிறார். சர்க்கஸ் நிறுவனம் எங்கு சென்றாலும் அவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தொல்லை தரும் முரடர் கூட்டம் இந்த ஊருக்கும் வந்துவிட்டதால், அடுத்தநாள் நிகழவிருக்கும் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலவரம் நிகழலாம் என ஏதிர்பார்க்கும் சர்க்கஸ் நிறுவனம் காவல்துறையின் பாதுகாப்பைக் கோருவதாகக் கூறிச் செல்கிறார். கலவரம் நடந்தால் அதனைத் தனக்குச் சாதகமாக்கும் வகையில் திட்டமிடுகிறது மிஸ்ஸஸ் எஸ்ட்டெரின் மனம். அடுத்தநாள் பிரிந்துவாழும் தனது கணவரின் வீட்டில் குடியேற எண்ணி அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுகிறாள்.

    இதற்கிடையில் வலஸ்க்கா மதுபான விடுதியில் நண்பர்களுடன் பொழுதைக் கழித்துவிட்டு விடியப்போகும் நேரத்தில் வீடு திரும்புகிறான். வழியில் சர்க்கஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருக்கும் பாடம் செய்த திமிங்கிலத்தை ஆர்வத்துடன் பார்க்கிறான். தனக்காக மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் அவனது வீட்டில் வழக்கமாகச் சந்திக்க வரும் நேரம் கடந்துவிட்டது நினைவு வந்து அவசரமாக தனது வீட்டிற்குச் செல்கிறான். அவனுக்காக அங்கு காத்திருந்து, தனது கணவரின் துவைத்த துணிகளை அவரிடம் ஒப்படைக்கக் கொடுக்கும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர், தனது கணவரை தனது திட்டத்திற்கு உதவும் வகையில் அவரது நண்பர்களிடம் பேசச் சொல்லி உதவி கோரும் கடிதத்தையும் கொடுக்கிறாள். கடிதத்தை மிஸ்டர் எஸ்ட்டெரிடம் சேர்ப்பிக்கிறான் வலஸ்க்கா.

    வலஸ்க்கா உண்மையை அறிந்திருப்பான் என யூகிக்கும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் அவனை திசை திருப்ப காவல்துறை அதிகாரியின் பிள்ளைகளைக் கவனித்துவிட்டு அவனது வழக்கமான வேலைகளுக்கு திரும்பச் சொல்கிறாள். இடையில் நகரே குலுங்கும் வண்ணம் பெரிய ஓசைகள் எழுகிகின்றன. மிஸ்டர் எஸ்ட்டெர் பற்றிய கவலையுடன் வெளியேறுகிறான் வலஸ்க்கா. மிஸ்டர் எஸ்ட்டெர் தனது நண்பர்களுடன் கொண்ட உரையாடல்களால் எச்சரிக்கை அடைந்து, பாதுகாப்பிற்காக ஜன்னல்களை மரப்பலகைகள் வைத்து மறைத்துவிட்டு வலஸ்க்காவிற்காகக் காத்திருக்கும் வேலையில் அசதியால் உறங்கிவிடுகிறார். அவரை சந்திக்க வரும் வலஸ்க்கா முரடர்கள் கையில் மாட்டிக் கொள்கிறான். அவனையும் இழுத்துக் கொண்டு செல்லும் முரடர் கூட்டம் ஊரில் உள்ள திரையரங்கம், அஞ்சல் அலுவலகம், தொலைபேசி அலுவலகம், மருத்துவமனை என ஒன்றுவிடாமல் அடித்து நொறுக்குகிறது. வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களை இரும்புத் தடிகொண்டு நொறுக்குகிறது, கார்களைக் கவிழ்க்கிறது, அகப்படும் மக்களைக் கொலை செய்கிறது. முப்பது பேர் கொண்ட முரட்டுக் கூட்டத்தை, நகரின் காவல்துறை சரியான தலைமை இல்லாத காரணத்தால் தடுக்கமுடியாமல் போகிறது. முரடர் கூட்டம் கலைந்து செல்லும்பொழுது அசதியில் இருக்கும் வலஸ்க்காவை தனியே விட்டுவிட்டுப் போய் விடுகிறது. இராணுவம் உதவிக்கு வரவழைக்கப்படுகிறது. அவர்களிடம் கலவரக்காரர்களின் குறிப்புக்கள் கொடுக்கப்படும் பொழுது வலஸ்க்கா பற்றிய குறிப்பும் அதில் மாட்டிக் கொள்கிறது.

    மிஸ்டர் ஹாரர் வீடு திரும்பி, முரடர்களின் வன்முறையால் தாக்கப்பட்டு சேதமடைந்திருந்த தனது வீட்டில் அச்சத்துடன் இருக்கும் மனைவியிடம் வலஸ்க்கா பற்றி கூறி மிஸ்டர் எஸ்ட்டெருக்கு தகவல் கொடுக்க அனுப்பிவிட்டு, மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் கொடுத்த ஆலோசனைப்படி வலஸ்க்காவைச் சந்தித்து ஊரைவிட்டு ஓடி மறைந்து வாழ எச்சரிக்கச் செல்கிறார். இரயிலடியில் அவனைச் சந்தித்து எச்சரிக்கிறார். மிஸ்ஸஸ் ஹாரர் மூலம் வலஸ்க்கா பற்றிய தகவல் அறிந்து மிஸ்டர் எஸ்ட்டெர் வலஸ்க்காவைக் காப்பாற்ற, இராணுவத்திடம் முறையிட நகரசபைக்கு ஓடுகிறார். வழியில் முதல் நாளிரவு கலவரத்தில் உயிரிழந்தவர்களில் வலஸ்க்காவின் தாயும் ஒருவர் எனத் தெரிகிறது.

    இராணுவம் வந்தபொழுது அச்சத்தில் இருந்த மேயரும், போதையில் இருந்த காவல்துறை அதிகாரியும் செயலிழந்த நிலையில் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர், சூழ்நிலையை தனது கையில் எடுத்துக் கொண்டு இராணுவத்திற்கு உதவும் வகையில் தகவல்கள் கொடுத்து உதவுகிறாள். அதனால் இராணுவ அதிகாரியின் நன்மதிப்பையும் நட்பையும் பெறுகிறாள். இராணுவ விசாரணை நடக்கும்பொழுது வலஸ்க்கா குற்றம் செய்யும் திறனற்றவன் என்று எடுத்துக் கூறி அவனை மனநல விடுதிக்கு அனுப்ப ஏற்பாடு செய்து காப்பாற்றுகிறாள். அவளது திறமையான வழிப்படுத்துதலைக் கண்டு நகரசபையின் செயலாளர் பதவி அவளைத் தேடி வருகிறது. தனது கணவரின் வீட்டிற்கு மீண்டும் குடிபெயர்கிறாள் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர்.

    வலஸ்க்காவின் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை அறிந்து நிம்மதி அடைந்த மிஸ்டர் எஸ்ட்டெர், வீட்டிற்குள் நுழைந்துவிட்ட மனைவியைப் பொருட்படுத்தாமல் தனது இசை ஆராய்ச்சி பக்கம் கவனத்தைத் திருப்புகிறார். மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் நகரமக்களால் மதிக்கும் நிலையை அடைகிறாள். தனக்கு உதவி செய்த மிஸ்டர் ஹாரருக்கு நல்ல பதவியை அளிக்க ஏற்பாடும் செய்கிறாள். மேலும், வலஸ்க்காவின் தாயாரின் மரணத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்று மிஸ்ஸஸ் பிலஃப் பற்றி பாராட்டிப் பேசுகிறாள்

     

    லேஸ்லோ க்ரேசேஹார்க்கின் வர்ணனைகள் சூழ்நிலையைக் கண்ணெதிரே கொணரவும், ஒரு கதாப்பாத்திரத்தின் குணநலன்களை விவரிக்கவும் திறமையாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இருப்பினும் கதையின் சில இடங்களில் தேவையற்ற வகையில் அமைந்த வர்ணனைகள் வாசிப்பவர்களுக்கு அயர்ச்சி ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முழுக்கதையையுமே படித்து முடித்த பின்னர் காட்சிகளை ஆராயும்பொழுது, கதையின் முதல்காட்சியில் வரும் மிஸ்ஸஸ் பிலஃப்பின் இரயில் பயணமும், அதில் அவர் எதிர் கொள்ளும் மாந்தர்களுமே கதைக்கு எந்த விதத்திலும் உதவில்லை என்பது தெரிகிறது. அதைப்போன்றே மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் உறங்கும் பொழுது தேவையற்ற வகையில் விவரிப்பு விரிந்து சென்று அறையில் அலையும் எலிகளைப் பற்றியெல்லாம் குறிப்பிடுவதும் கதையோட்டத்திற்குக் கொஞ்சமும் உதவும் வகையில் இல்லை. மற்றொரு காட்சியில் மிஸ்ஸஸ் ஹாரர், மிஸ்டர் எஸ்ட்டெர் வீட்டிற்கு கலவரம் நடக்கும் நள்ளிரவில் ஓடிவந்து வலஸ்க்கா கலவரம் செய்யும் முரடர்கள் கையில் சிக்கிவிட்டான் என்று கூறுவதை விட்டுவிட்டு ஆதியில் தொடங்கி அந்தம் வரை நீள நீளமாக விவரிப்பது கேட்பவர் யாராக இருந்தாலும் பொறுமையை இழக்கச் செய்யும் செயலே.

    மிஸ்ஸஸ் ஹாரர் வழியாக கலவரத்தை விவரிக்க ஆசிரியர் மேற்கொண்ட உத்தியாக அது இருந்தாலும் தொடர்ந்து, முரடர்களின் கைப்பாவையாக மாட்டிய வலஸ்க்கா மூலமாகவே கலவரக்காரர்கள் செய்யும் அட்டூழியத்தை விளக்கும் காட்சியும் தொடர்வதால் மிஸ்ஸஸ் ஹாரர் வாய்மொழியாக வரும் பகுதியை தவிர்ப்பதனால் கதையோட்டத்தில் இழப்பு ஏதும் ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது. மற்றொரு இடத்தில் கலவரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஜன்னல்களில் மரச்சட்டங்களை மிஸ்டர் எஸ்ட்டெர் ஆணிவைத்து அடிப்பதைச் சித்தரிக்கும் காட்சியும் தேவையற்ற அளவுக்கு மீறிய விவரிப்பு என்ற வகையில் அடங்கும். இது போன்று மேலும் சில இடங்கள், கதையோட்டத்திற்கும் உதவாமல், கதாபாத்திரதத்தின் குணநலனையும் விவரிக்க உதவாமல் மேம்போக்காகக் கதையின் போக்கை தொய்வடையச் செய்யும் வகையில் அமைந்திருப்பதைக் குறிப்பிடலாம்.

    ஹங்கேரிய மொழியில் அமைந்த மூலநூல் மிகவும் சிறப்பாக இருந்திருக்கக் கூடும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் மிகவும் பாராட்டத் தக்க வகையில் மொழியாக்கம் செய்துள்ளார் என்றாலும் ஆழமான, மிகத் தீவிரமான வாசிப்பை எதிர்பார்க்கும் இந்தப் புதினத்தை தீவிரமான இலக்கிய இரசிகர்கள் மட்டுமே விரும்புவார்கள் என்று கூறும் வகையில்தான் இந்த நூல் அமைந்துள்ளது.

     

    நன்றி: “இலக்கிய  வேல்”  இலக்கிய மாத இதழ் (ஜூலை & ஆகஸ்ட் – 2015 )

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 24, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  இயக்குநர் நந்தினி அவர்கள்

    Nan FAVFAV

    ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ என்ற தமிழின் முதல் எண்ணிம படக்கதை புதினத்தை (Tamil’s First Digital Graphic Novel ) மின்னூலாக வெளியிட்டமைக்காக இயக்குநர் நந்தினி அவர்கள் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுகிறார்.

    “திருதிரு துறுதுறு” படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநராக அறிமுகமாகிய நந்தினி, தமிழக திரைப்பட விளம்பரப்பட கல்வி நிலையத்தின் மாணவியும், 2003 ஆம் ஆண்டு அக்கல்வியில் தங்கப்பதக்கமும் பெற்றவர் (Gold Medalist (2003) from Film and Television Institute of Tamilnadu). இவர் மாணவராக இயக்கிய “ஓட்டம்” என்ற குறும்படத்திற்காக, சிறந்த மாணவ இயக்குநருக்கான தமிழக அரசின் விருதை, 2003 ஆண்டு தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களிடம் இருந்து பெற்றவர். இப்பொழுது ‘மேக் பிலீவ் ப்ரொடக்ஷன்’ (Make Believe Productions – www.makebelieveonline.com) என்ற நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் நிர்வாக பங்குதாரராக, பல விளம்பரப் படங்கள், வணிக நிறுவனங்களின் மக்கள்தொடர்பு படங்களை இயக்கி வருகிறார். இவரது “திருதிரு துறுதுறு” படமும் இந்தியாவிலேயே முதன்முதலாக டிஜிட்டலாகத் தயாரிக்கப்பட்டு, டிஜிட்டலாகவே வெளியிடப்பட்ட படம்.

    State Award small

    Nan FAVFAV6

    Nan FAVFAV5

    இந்தியா மற்றும் தமிழகத்தின் படக்கதை நூல்கள் யாவும் அயல்நாட்டுக் கதைகளின் மொழிபெயர்ப்பாகவும், சிறுவர்களுக்காகத் தயாரிக்கப்படுவதுமாகவே இருந்து வருவது வழக்கம். அப்போக்கில் இருந்து மாறுபட்டு இயக்குநர் நந்தினி அவர்கள் பெரியவர்களுக்காக கதை எழுதி, இயக்கி அதை எண்ணிம வடிவிலும் படக்கதையாக வெளியிட்டுள்ளார். இக்கதையை வெளியிட ஒன்றரை வருட உழைப்பினை இவரும் இவரது குழுவினரும் கொடுத்துள்ளனர். திரைப்படமாக இல்லாமல் படக்கதையாகவா? படக்கதைகள் படிப்பவர் அதிகம் இல்லையே, வழக்கமான காகித நூலாகவே வெளியிடலாமே என்பது போன்ற ஆர்வத்தை மட்டுப்படுத்தும் பல கருத்துக்களை எதிர்கொண்ட பொழுதும் தளராது இப்படத்தை உருவாக்கியுள்ளார் நந்தினி.

    மூக்குத்தி2

    முதலில் திரைக்கதையாக எழுதி உருவாக்கிய கதையை படக்கதை நூலாக வெளியிடலாம் என்று வெளியிட முடிவெடுத்தவர், திரைப்படமாக வந்தால் ஆண்டுக்கு 300 படங்கள் வெளியாகும் சூழ்நிலையில் இக்கதை தனித்து தெரிய வழியின்றி, அதிகப் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். கலைஞர்களின் திறமை ஊடகங்களின் கட்டுப்பாட்டிற்குள் அடங்காது. திரைப்படம், இசை, கலை, எழுத்து, எனப் பலதுறைகளிலும் ஆர்வமுள்ள கலைஞரான இவரால் எந்த ஊடகத்திலும் அவரது கற்பனையை வெளிப்படுத்த முடியும் என்று கூறும் நந்தினி, தனது எண்ணத்தில் கதை எவ்வாறு உருவாகியுள்ளது என்பதைக் கூற படக்கதையாகச் சொல்வது நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் கூறுகிறார்.

    புதிதாகத் திருமணமான காதலர்கள் வேலையின் காரணமாக வெளியூருக்குப் பயணமாகிறார்கள். அங்கு இளம் மனைவிக்குக் கிடைக்கும் சிவப்புக்கல் மூக்குத்தியும், அதற்குப் பிறகு அவள் எதிர்கொள்ளும் மர்ம நிகழ்ச்சிகளும், கொலைகளும், அவளது மாறான நடவடிக்கைகளின் காரணத்தை பற்றியும் அவளது கணவன் துப்பறிவதுதான் சிவப்புக்கல் மூக்குத்தியின் கதை.

    மூக்குத்தி3

    நந்தினி வெளியிட்டுள்ள சிவப்புக்கல் மூக்குத்தி படக்கதை புதினத்தைப் படிக்க விரும்புபவர், “எம் பி காமிக் ஸ்டூடியோ” (http://www.mbcomicstudio.com/#buy-skm) இணையதளத்தின் வழியாக, இந்திய விலை ₹ 249/அயல்நாட்டினர் விலை $ 3.99 க்கு அதை வாங்கலாம். இந்தப் படக்கதை புதினம் தமிழிலும் ஆங்கிலத்திலும் (‘Girl with a Red Nose Ring’) கிடைக்கிறது. மேலும் பிற மொழிகளிலும் வெளியிடத் திட்டமும் வைத்துள்ளார் நந்தினி.

    புதிய கதைகள், காதல், திகில், மர்மப்படங்கள் எனப் பல வகைப் பின்னணிகள் கொண்ட கதைகள், அத்துடன் அவற்றை எண்ணிம படக்கதைகளாக வெளியிடும் முயற்சிகளுக்கு வருங்காலத்தில் நல்ல வாய்ப்பிருக்கிறது என்றும், இம்முயற்சியில் எழுத்தையும், காட்சியையும் அழகியலோடு ஒன்றிணைக்க முடிவதால் தமிழ்ப் படங்களுக்கும் தமிழ்ப்படக் கதைகளுக்குமான இடைவெளி குறையும். இதனால் நல்ல படங்களை படக்கதைகளாகவும், நல்ல படக்கதைகளை திரைப்படங்களாகவும் எடுக்க முடியும் என்று கூறும் நந்தினியின் புதுமையான முயற்சிக்காக, அவரை நாம் வல்லமையாளர் என்று பாராட்டி வாழ்த்துவோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தகவல் பெற்ற தளங்கள்:
    தமிழ் நெட்டிசன்களை ‘நம்பும்’ நந்தினியின் டிஜிட்டல் காமிக்ஸ் நாவல் முயற்சி, க.சே.ரமணி பிரபா தேவி
    http://tamil.thehindu.com/opinion/blogs/தமிழ்-நெட்டிசன்களை-நம்பும்-நந்தினியின்-டிஜிட்டல்-காமிக்ஸ்-நாவல்-முயற்சி/article7503293.ece

    நந்தினியின் ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ – டிஜிட்டல் தமிழ் காமிக்ஸ்!
    http://www.inneram.com/opinions/readers/3372-sivappu-kal-mookkuthi.html

    Girl with a Red Nose Ring: Filmmaker speaks about her first digital Tamil graphic novel
    http://www.dnaindia.com/website/report-girl-with-a-red-nose-ring-filmmaker-speaks-about-her-first-digital-tamil-graphic-novel-2111282

    படம் உதவி: நந்தினியின் ஃபேஸ்புக் சமூக வலைத்தளம்
    _____________________________________________________________________________
    நந்தினியைப் பற்றிய மேலதிகத் தகவலுக்கும், தொடர்புக்கும்:
    https://www.facebook.com/sivappukalmookuthi/photos_stream
    http://mbcomicstudio.com
    http://makebelieveonline.com/about.html
    https://nandhinijs.wordpress.com/
    http://nandhinijs.blogspot.com
    https://www.facebook.com/nandhinijs

    https://plus.google.com/+NandhiniJS
    http://www.youtube.com/user/nanfilmmaker
    makebelieveonline@gmail.com
    _____________________________________________________________________________

    Share
  • சினமென்னும் நச்சுமரம் …

    தேமொழி.

     

    நச்சு மரமொன்று

    –வில்லியம் ப்ளேக்

    சினம் கொண்டேன் ஆருயிர் நண்பனிடம்
    சீறினேன், கொட்டினேன் மனக்குமுறலை
    குறைந்ததே சினம், மறைந்ததே மாயமென!!!
    சினம் கொண்டேன் பிறவிப் பகைவனிடம்
    சீறவழியில்லை, குமைந்தேன் மனதிற்குள்
    குறையாத மனச்சுமையோ வளர்ந்தது வஞ்சமென !!!

    அச்சமெனும் நீரூற்றியே வளர்த்தேனதை நாளும்
    கண்ணீர்விட்டே வளர்த்தேன் இரவுபகலாய் நானும்
    குரூரப் புன்னகை எனும் கதிரொளிபெற்று
    குன்றாத வஞ்சகமே சூழ்ச்சியென துளிர்த்தது

    அருமையாக வளர்ந்தது இரவுபகலாக
    ஆப்பிளாகக் கனிந்தது அருஞ்சுவையாக
    பட்டது அது பகைவனின் கவனத்திலும்
    நட்டது நானென்று நன்கறிவான் அவனும்

    கள்ளமனதுடன் நுழைந்தான் தோட்டத்தில்
    காரிருளில் சிக்கிவிட்டான் என்பொறியில்
    புலர்ந்தபொழுதில் கண்டேனவனை, நச்சுக்கனி
    வீழ்த்திய மரமாய் வீழ்ந்திருந்தான் மரத்தின்கீழே

    லண்டனில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் (1757 – 1827) அவர்கள் எழுதிய “பாய்சன் ட்ரீ” என்ற கவிதை.
    மொழிபெயர்ப்பு: தேமொழி

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    William Blake1

    A Poison Tree

    –William Blake

    I was angry with my friend:
    I told my wrath, my wrath did end.
    I was angry with my foe:
    I told it not, my wrath did grow.

    And I watered it in fears,
    Night and morning with my tears;
    And I sunned it with smiles,
    And with soft deceitful wiles.

    And it grew both day and night,
    Till it bore an apple bright.
    And my foe beheld it shine.
    And he knew that it was mine,

    And into my garden stole
    When the night had veiled the pole;
    In the morning glad I see
    My foe outstretched beneath the tree.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 17, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள் 

    Dr. Tessy Thomas profile

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகச் சிறப்பிக்கப்படுபவர் “இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி“(Missile Woman of India) எனவும், “அக்னிபுத்திரி” எனவும் அன்புடன் அழைக்கப்படும் “டாக்டர் டெஸ்ஸி தாமஸ்” அவர்கள். இவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன் அவர்கள். அவருக்கு வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

    வல்லமையாளர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள், பணியிடத்தில் “இந்தியாவின் ஏவுகணை மனிதர்” (Missile Man of India) என்றழைக்கப்பட்ட மறைந்த மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களைத் தனது வழிகாட்டியாக அடையும் பேறு பெற்றவர்.

    இந்தியாவில் ஏவுகணை திட்டப்பணி ஒன்றிற்குத் தலைமை தாங்கும் முதல் பெண் அறிவியலாளர் என்ற பெருமை கொண்ட டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்கள் பற்பல விருதுகளும், பாராட்டுகளும், கௌரவங்களும் பெற்றவர். கல்யாணி பல்கலைக் கழகமும், இந்துஸ்தான் பல்கலைக்கழகமும் (Kalyani University & Hindustan University) இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன. சென்ற வாரம் “ஸ்ரீ பத்மாவதி மகிள விஸ்வ வித்யாலயம்” (Sri Padmavati Mahila Viswa Vidyalayam -SPMVV) இப்பல்கலைக்கழகங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டு, தனது 16 வது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

    Dr. Tessy Thomas

    இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிய அக்னிபுத்திரி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் (Research and Development – R&D) ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளக்க உதவும் மிக முக்கியமான அளவீடுகளில் ஒன்று எனக் குறிப்பிட்டார், மேலும்…

    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். இளைஞர்கள் எத்துறையைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் தரமான செயல்களிலும், ஆக்கபூர்வமான பணிகளிலும் ஈடுபட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும். இந்திய மக்களில் 60 விழுக்காட்டினர் 35 வயதிற்கும் குறைவானவர்கள் என்பதால், சிறந்த பயிற்சி பெற்ற மனிதவள மேம்பாட்டைப் பெற இந்தியாவிற்குத் திறன் இருக்கிறது. பட்டம் பெற்று பணியுலகத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் தாங்கள் ஏட்டில் கற்ற கல்வியைச் செயல்படுத்த முனைவதுடன், சிறந்த நூல்களையும் படித்து ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் புரிதலுடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்.

    நாட்டு மக்களுக்குத் தரமான கல்வி வளர்ச்சியை வழங்குவதில் விணையூக்கியாகச் செயல்படும் கல்விநிறுவனங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. தற்கால உலக நடப்புகளில் ஆசிரியர்கள் அதிகக் கவனம் செலுத்தி அறிவதுடன், அதை மாணவர்களும் அறியச் செய்து அவர்களது திறமையை உயர்த்தத் தொடர்ந்து பாடுபட்டு மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். இக்காலத்தில் பெண்கல்வி அதிகரித்திருந்தாலும் தொடர்ந்து அவர்களது பங்களிப்பு அறிவியல் துறைகளிலும், தொழில்நுட்பப் பணிகளிலும் குறைவாகவே இருந்து வருவதால், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் வண்ணம் பெண்களை ஊக்குவிக்க வேண்டும்.

    உணர்வுசார் நுண்ணறிவுப் பயிற்சி, தொழில்நுட்ப வாய்ப்புகள், மேலாண்மை, வழிநடத்துதல், நிர்வாகத் திறன், வளாகத்தில் குழந்தை பராமரிப்பு வசதிகளை அவர்களுக்கு வழங்க எடுக்கப்படும் முயற்சிகள் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். எதிர்காலத்தில் மாணவர்கள் எத்துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் சிறந்து விளங்க முயலவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

    டாக்டர் டெஸ்ஸி தாமஸ் மேம்பட்ட அமைப்புகள் ஆய்வக இயக்குநர் (Director of Advanced Systems Laboratory – ASL), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் அக்னி – 5 ஏவுகணைக்கான திட்டப்பணி இயக்குநர் (Agni-V Project Director, Defence Research & Development Organization) ஆவார். ஐம்பது வயதைக் கடந்துள்ள அக்னிபுத்திரி கேரளத்தின் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தும்பா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கும் தளத்துக்கு அருகில் வளர்ந்தவர். சீறிப்பாய்ந்த ராக்கெட்கள் கொடுத்த ஆர்வத்தின் காரணமாக ஏவுகணைத் தொழில்நுட்பம் பற்றிக் கற்க விரும்பி அத்துறையைத் தேர்ந்தெடுத்தவர். திருச்சூரில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் (B.Tech) பட்டப்படிப்பை முடித்தார். புனேயில் உள்ள “போர்த்தளவாட தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில்” (Institute of Armament Technology, Pune, இது தற்காலத்தில், உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் / the Defence Institute of Advanced Technology என அழைக்கப்படுகிறது) ஏவுகணைக் கல்வியில் தொழில்நுட்ப முதுநிலைப் பட்டம் (M.Tech) பெற்றார்.

    நான் பணி புரியும் அறிவியல் தொழிநுட்பத்துறை பாலின பேதம் (Gender Discrimination) பற்றி அறியாதது என்று பி.பி.சி. நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டவர் அக்னிபுத்திரி. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளராக 1988 ஆண்டுமுதல் பணியாற்றி வரும் அக்னிபுத்திரி அக்னி-1 ஏவுகணையின் வடிவமைப்புப் பணிகளில் பங்கேற்றவர். தொடர்ந்து அக்னி-3 மற்றும் அக்னி-4 ஏவுகணைகளின் இணை திட்டப்பணி இயக்குநராகப் பணியாற்றினார். பிறகு 2009ஆம் ஆண்டு 5,000 கிமீ வீச்சுள்ள அக்னி-5 திட்டப்பணிக்குத் திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்று, ஏப்ரல் 2012 இல் இவரது தலைமையில் அக்னி-5 வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

    Dr. Tessy Thomas 0

    உலகில் ஏவுகணை தொழில்நுட்பப் பணியாற்றும் ஒருசிலரில் டெஸ்ஸி தாமஸ்ஸும் ஒருவர். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறிய பெண்மணிக்கு டெஸ்ஸி தாமஸ் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சுங்கால் பாராட்டப்பட்டவர் அக்னிபுத்திரி. இந்தியாவைப் பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறச் செய்த அக்னிபுத்திரிக்கு லால்பகதூர் சாஸ்திரி-தேசிய விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் போரைத் தவிர்த்து இந்தியாவை அமைதிப்பாதைக்கு வழிவகுக்கும் ஒரு திட்டம் என்பதும், “இந்திய ஏவுகணைகள் அமைதிக்கான ஆயுதங்கள்” (weapons of peace) என்பதும் இவர் கருத்து. வெற்றியை அடைந்த பிறகு ஒருவர் எதிர்கொள்ளும் சவால், கிடைத்த வெற்றியின் களிப்பால் பெருமையில் திளைத்துவிடாமல், வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது என்பது அக்னி புத்திரி வழங்கும் அறிவுரை.

    Sastri-Award
    அக்னிபுத்திரி பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்க சில:
    = India Today Woman Summit & Awards 2009
    = Shastri Award 2012
    = CNN-IBN Indian of the Year 2012
    = JFW Women Achievers Award 2013
    = Maharana Udai Singh Award 2013
    = GR8! Women Awards 2014
    = Dr. Y. Nayudamma Memorial Award – 2014

    சேவையின் மறுவுருவமான அன்னை தெரசாவின் பெயரைச் சூட்டப்பட்டவர் டெஸ்ஸி தாமஸ். இந்திய பெண் அறிவியலாளர் அமைப்பு (The Indian Woman Scientists Association), “பணிபுரியும் ஏனைய பல பெண்களைப் போல இவரும் பணியின் கடமைகளையும், குடும்பப் பொறுப்பையும் கயிற்றின்மீது நடக்கும் வித்தைக்காரர் போன்று கவனமுடன் கையாண்டவர், அன்னையாகவும் அறிவியல் ஆய்வாளராகவும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். டெஸ்ஸி தாமஸ் பெண் அறிவியலார்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்கி அவர்கள் இரு உலகங்களிலும் தடம் பதித்து தங்கள் கனவுகளை வெற்றிகரமாக அடையத் தூண்டுதலாக அமைந்துள்ளவர்” என்று பாராட்டியுள்ளது. பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறையில் ஆர்வம் கொண்டு முன்னேற முன்மாதிரியாக விளங்கும் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களின் வல்லமையைப் பாராட்டுவதில் வல்லமை இதழும் பெருமை கொள்கிறது.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    இக்கட்டுரைக்கான தகவல் பெற்ற இடங்கள்:
    Need to encourage women in R&D: ASL Director, August 11, 2015, The Hindu
    http://www.thehindu.com/news/national/andhra-pradesh/need-to-encourage-women-in-rd-asl-director/article7523888.ece

    அக்னிபுத்திரி
    https://jayabarathan.wordpress.com/2012/04/28/agni-puthri/

    Share