பழமொழி கூறும் பாடம்

0

தேமொழி.

பழமொழி: அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்

 

தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா ததனை அகற்றலே வேண்டும்
அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
தமரேயும், தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தில்,
அமராததனை அகற்றலே வேண்டும்;
அமை ஆரும் வெற்ப! அணியாரே தம்மை,
தமவேனும், கொள்ளாக் கலம்.

பொருள் விளக்கம்:
தனது சுற்றத்தாராகவே இருப்பினும், தன்னைப் புகழ்ந்து பேசும் பொழுதில், அவை பொருத்தமற்ற புகழுரைகளாக இருக்கும் பொழுது தடுத்துவிடல் வேண்டும். மூங்கில் செறிந்திருக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவரே, ஒருவரும் அணிய விரும்புவதில்லை,  அவை தன்னுடையதாகவே இருப்பினும் பொருந்தாத அணிகலன்களை.

பழமொழி சொல்லும் பாடம்:
தனக்குப் பொருத்தமற்ற புகழுரைகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இதனை,

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. (குறள்: 439)

எந்தக் காலத்திலும் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு நன்மை தராத செயல்களை விரும்பக்கூடாது என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.