பழமொழி கூறும் பாடம்

0

தேமொழி.

 

பழமொழி: தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு

 

வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்
புனப்பொன் அவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய்
தனக்கின்னா இன்னா பிறர்க்கு.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
வினைப் பயன் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு,
நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்;
புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்!
தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு.

பொருள் விளக்கம்:
செய்யும் செயலால் ஒரு பயனும் இல்லாத பொழுது, பகைமை பாராட்டி, (துன்பத்தைக் கொடுக்கும் செயல்களை) திட்டமிட்டு, பிறருக்குத் துயர் தரும் செயல்களை செய்யாதிருத்தல் வேண்டும். புலங்களில் மலர்ந்துள்ள பூக்களில் காணும் பொன்னையொத்த மகரந்தத் துகள்கள் போன்ற தேமலையுடைய பூங்கொம்பு போன்றவளே, தனக்குத் துன்பம் தருவனவையே, பிறருக்கும் துன்பம் தரும் (என அறிவாயாக).

பழமொழி சொல்லும் பாடம்:
தனக்குத் துன்பம் தருவதே பிறருக்கும் துன்பம்தரும் ஆதலால், பிறரைத் துன்புறுத்தாதிருக்க வேண்டும். காழ்ப்புணர்வு கொண்டு துன்பம்தரும் வழிகளைத் தேடித்தேடி பிறருக்குத் துன்பம் தருதல் பயனற்ற செயல், தனக்குத் துயர் தரும் செயல்களே பிறருக்கும் துயர் தரும் என்பதை உணரவேண்டும் என்பதைக் கூறும் ,

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். (குறள்: 318)

தனக்கு இவையிவை துன்பம் தரும் என நன்கறிந்தவர், பிறருக்கு அச்செயல்களை ஏன் செய்யவேண்டும் என்ற திருக்குறள் கருத்தினை இங்கே ஒப்பு நோக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.