Author: மாதவன் இளங்கோ

  • (என்னைக்) கொல்ல நினைக்கும் எவனோ ஒருவனுக்கு..

    மாதவன் இளங்கோ

    எவனோ ஒருவன் என்னை கொலை செய்ய ஏங்குகிறான்!

    ஏழை செல்வந்தனாக ஏங்குவது போல

    செல்வந்தன் மேலும் செல்வந்தனாக ஏங்குவது போல

    எழுத்தாளன் அங்கீகாரத்திற்கு ஏங்குவது போல

    குழந்தைகள் பொம்மைகளுக்கு ஏங்குவது போல

    சிங்கம் மானுக்கு ஏங்குவது போல

    அவன் என்னைக் கொன்றுவிட ஏங்குகிறான்!

    ஏக்கம் மட்டுமல்ல; துடிக்கிறான்!

    சிந்திக்கிறான்; திட்டமிடுகிறான்;

    அத்தனையும் ஒளிந்துகொண்டே செய்கிறான்!

    evano oruvan

     

    அவனுக்கு என்னை தெரியாது

    எனக்கும் அவனைத் தெரியாது

    இருப்பினும் அவன் என்னைக் கொன்றுவிட ஏங்குகிறான்!

    இன்னும் சொல்லப்போனால்,

    அவன் கொன்றுவிடத் துடிக்கும் மனிதர்களின் பட்டியலில்

    நான் இருப்பது கூட

    அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

     

    அவன் என்னை தாராளாமாகக் கொல்லலாம்!

    அதற்கான உரிமையை நான் அவனுக்குத் தருகிறேன்

    எனினும் அவனுக்கு நான் சொல்வதற்கென்று

    சில விஷயங்கள் இருக்கின்றன:

     

    “என்னைக் கொன்றுவிடத் துடிக்கும் எவனோ ஒருவனே,

    நீ என்னை தாராளமாகக் கொல்லலாம்!

    அதற்கான உரிமையை நானுனக்குத் தருகிறேன்!

    எனக்குத் தெரியும் –

    நீ என் இசைவிற்கோ

    நீ என் அனுமதிக்கோ

    காத்திருக்காதவன்!

    அதுபற்றி உனக்குக் கவலையுமில்லை!

    ஆயினும் நான் உன்னை அனுமதிப்பதன் மூலம்

    உன் வேலை சுலபமாகும் என்பதை

    நீ நிச்சயம் மறுக்கமாட்டாய்!

     

    இன்னொன்று –

    நீ என்னை எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம்!

    பல வழிகளில்..

    பல இடங்களில்..

    எந்த வழி, எந்த இடம்

    என்பது உன் விருப்பம்.

     

    என் ரயில் பிரயாணத்தில்

    நான் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் போது

    குண்டு வைத்துக் கொல்லலாம்!

     

    நான் பயணிக்கும் விமானத்தை

    எங்கோ கடத்திக் கொண்டுபோய்

    இடித்துக் கொல்லலாம்!

     

    நான் ஒரு பேரங்காடியில்

    என் மகளுக்கு பொம்மை வாங்கிக்கொண்டிருக்கும் போது

    சுட்டுக் கொல்லலாம்!

     

    இன்னும் எத்தனையோ வழிகளிலும் கொல்லலாம்!

    அதுபற்றி உனக்கு நான் சொல்லியா தெரியவேண்டும்?

     

    உனக்கு மற்றொன்றையும் கூற ஆசைப்படுகிறேன் –

    நீ கொல்வதற்கு முன்

    தயவுசெய்து, என்னை அறிந்துகொள்!

    உன் பட்டியலில்

    நான் இருப்பதை தெரிந்துகொள்!

    என்னைக் கொல்வதற்கான

    காரணங்களை வைத்துக்கொள்!

    அறிந்து கொல்!

    தெரிந்து கொல்!

    காரணங்களை வைத்துக் கொல்!

    துருவ கரடிக்குக் கூட

    அதன் குட்டிகளைக் கொன்று

    தின்றுவிட வேண்டியதன்

    காரணமிருக்கிறது;

    அவசியமிருக்கிறது!

    உனக்கு என்மீது தனிப்பட்ட முறையில்

    எந்தவித பிரச்சினையுமில்லை!

    அதை நானறிவேன். நீயுமறிவாய்.

    நீயும் நானும் தான் சந்தித்ததே கிடையாதே!

    அதனால் என்னைக் கொல்ல

    எந்தக் காரணமும் உன்னிடம் இருக்காது!

    ஆனால் நான் கேட்பதெல்லாம்

    அந்தக் காரணம் ஒன்று மட்டும் தான்!

    அரசாங்கம், முதலாளித்துவம்

    மதம், சாதி என்பது போன்ற

    பொதுவான காரணங்கள் எனக்கு வேண்டாம்!

    நீ என்னை கொல்ல விழைவதற்கான

    தனிப்பட்ட காரணம் என்ன?

    சொல்; பின் கொல்!

     

    உன்னிடம் அதற்கான காரணங்களே இல்லையென்றாலும்

    நீ என்னை கொல்ல இன்னொரு வழி இருக்கிறது. 

    உண்மையில் இதைவிட எளிதானதொரு வழியை

    உன் குருநாதர்கள் கூட உனக்கு

    கற்றுக் கொடுத்திருக்கமாட்டார்கள்!

    உண்மையில் இந்த வழியில்

    ‘நீ கொலையே செய்யப்போவதில்லை!’

    ஆனால் நீ நினைப்பது நிறைவேறும்!

    ஆச்சர்யமாக இருக்கிறதா?

    தொடர்ந்து வாசி.  

     

    முதலில் நான் உன் பட்டியலில் இருக்கிறேன்

    என்பதை உறுதிபடுத்திக் கொள்!

    என்பற்றிய தகவல்களைச் சேகரி –

    நான் ஏற்கனவே கூறியது போல்

    என்னைத் தெரிந்து கொள்!

    எனக்கு ஒரு நாற்பது வருடங்கள் கொடு!

    கோபப்படாதே! சொல்வதைக் கேள்!

     

    அந்த நாற்பது வருடங்கள்,

    நீ என்னை நேரடியாகவோ மறைமுகமாகவோ

    பின்தொடர்வது உன் விருப்பம்!

    பின்தொடர்வது சிரமமாக இருந்தால்

    என்னுடன் நீ (என் காரில் கூட) பயணிக்கலாம்

    என் இல்லத்திற்கு வந்து என் குடும்பத்துடன் உணவருந்தலாம்

    நீ எங்களில் ஒருவனாகக் கூட ஆகலாம்!

    அத்தனையும் சாத்தியம்!

    ஆனால் உன் குறிக்கோளில் இருந்து

    நீ பின்வாங்க வேண்டியதில்லை!

     

    உனக்கு என்னை பின்தொடர விருப்பமில்லையெனில்

    நான் கூறிய நாற்பது வருடங்கள் கழித்து

    என்னை வந்து சந்தி!  

    பெரும்பாலும் நான் இறந்திருப்பேன்!

    பெரும்பாலும் நீ கூட இறந்திருப்பாய்!

    நீ அதிர்ஷ்டக்காரனாயிருந்தால்,

    இருபது ஆண்டுகளிலேயே கூட

    என்னைப் பற்றிய அந்த நற்செய்தி

    உன்னை வந்தடைய வாய்ப்பிருக்கிறது!

    அவ்வளவு ஏன்,

    நீ இதை வாசித்துக்கொண்டே இருக்கும்போது கூட

    வந்தடைய வாய்ப்பிருக்கிறது!

    நீ உன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே

    நான் இறப்பதை காணும் வாய்ப்பு

    உனக்கு கிட்டும்!

    அதனால் தான் கூறினேன் –

    இந்த வழியில்,

    நீ கொலையே செய்யப்போவதில்லை என்று!

    ஆயினும் உன் எண்ணம் நிறைவேறும்!

    நிறைவேறாமல் போவதற்கான வாய்ப்பே இல்லை!

     

    உனக்கு இன்னொன்று தெரியுமா?

    உன் பட்டியலில் இருக்கும்

    பெரும்பாலோனோருக்கு

    நீ கொல்லும் போது

    உண்டாகும் வலியைவிட –

    ‘வலிமிகுந்தது அவர்களின் வாழ்க்கை!’

     

    எனவே தான் சொல்கிறேன் –

    உன் கொலைத்தொழிலை

    காலத்தின் கையில் கொடுத்துவிடு!

     

    இப்படிக்கு, 

    நீ கொல்லத் துடிக்கும் ஒரு சாமானியன்.

    Share
  • சுருட்டிக்கொள்ளாத வால்

    மாதவன் இளங்கோ

    அந்த உயர்ரக நாயை சமீபத்தில் ஒரு நாய் கண்காட்சியில் வாங்கினேன். நாக்கைத் தொங்கவைத்துக்கொண்டும், வாலை ஆட்டிக்கொண்டும், பாசத்துடன் என் அருகில் வந்து நின்ற அதன் கருப்புநிற கண் அழகிலும் அதன் சுறுசுறுப்பிலும் மயங்கி அதை வாங்கிவிட்டேன். இருப்பினும் அந்த வாலை ஒழுங்காக கவனிக்கத் தவறிவிட்டேன்.

    நல்ல நாய்தான். ஆனால், அந்த வால்?

    அந்த நாய்க்கு ‘ரேகோ’ என்ற பெயர் வைத்தேன். ரேகோ அதிபுத்திசாலித்தனமான நாய் என்றும், அதற்கு பிஸ்கட் மற்றும் மாமிசம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று நாயை விற்றவன் கூறினான். பிஸ்கட் தருகிறேன் என்றால் போதும் எதையும் செய்துவிடும். பந்தைத் தூக்கிப் போடுவேன், ஓடிச்சென்று கவ்விக்கொண்டு வரும். பிஸ்கட் தருவேன். அமைதியாய் உட்கார் என்பேன், உட்காரும். பிஸ்கட் தருவேன். நான் தேடிக்கொண்டிருந்த செருப்பை கூட ஒருமுறை கண்டுபிடித்துக் கொண்டு வந்தது. பிஸ்கட் தந்தேன். அதன் அறிவைப் பற்றி நண்பர்களிடம் பெருமையோடு பேசினேன்.

    ஆனால், அந்த வால்?

    அது ஏன் எப்போது பார்த்தாலும் சுருண்டுகொள்கிறது? ‘வாலை சுருட்டிக்கொள்ளாதே’ என்றேன். கேட்கவில்லை. ‘பிஸ்கட் stressதருகிறேன்’ என்றேன். கேட்கவில்லை. என் மீதான மரியாதையும், அன்பும் பிஸ்கட் தரும் வரையில் மட்டும் இல்லை, நான் இடும் கட்டளைகள் அதற்குப் பிடித்ததாகவும் இருக்கும் வரையில் தான் என்று புரிந்து கொண்டேன்.

    அன்பாக எடுத்துச் சொன்னேன். கேட்கவில்லை. கெஞ்சினேன். சாட்டை செய்யவில்லை. வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். அதன் நான்கு கால்களிலும் விழுந்து கதறினேன். ம்ஹும்! பயனில்லை. கோபம் கொண்டு அடித்தும் நிமிரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

    வகைவகையான பிஸ்கட்டுகள் வாங்கித் தந்தேன். அத்தனையும் தின்றுவிட்டு வாலை சுருட்டிக்கொண்டு, வாயைத் திறந்து, நாக்கைத் தொங்கப்பொட்டுக்கொண்டு எப்போதும் போல் கர்வத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தது.

    நான் ஒரு சைவி. இருப்பினும் சமரசம் செய்துகொண்டு அதற்கு மாமிசத்துண்டுகளை நானே சென்று வாங்கி வந்து கொடுத்தேன். மசியவில்லை. அந்த பாழாய்ப்போன வாலை நிமிர்த்த நேர்மையுடன் நான் எடுத்த அத்தனை பகீரத பிரயத்தனங்களும், என் தியாகங்களும் வீணாய்ப் போயின.

    ஒருநாள் வாலோடு ஒரு குச்சியை சேர்த்துக் கட்டி வைத்துவிட்டேன். வால் சுருண்டுகொள்ளவில்லை. அழகாக நீண்டிருந்தது. அது எனக்குப் பிடித்திருந்தது. ரசித்தேன். ‘பார், எவ்வளவு அழகாக இருக்கிறது!’ என்று அதற்கும் கண்ணாடியில் காண்பித்தேன். அது ஆமோதிப்பது போலும் இல்லாமல் மறுப்பது போலும் இல்லாமல் வித்தியாசமான பார்வை வீசியது. ஆனால், அந்தப் பார்வையில் கர்வம் மட்டும் மாறவில்லை.

    நிறைய மாமிசம் வாங்கித்தந்தேன். உயர்தர ‘சோப்பு’ போட்டு என்னுடைய பிரத்யேக குளியல் தொட்டியில் எல்லாம் வைத்து க் குளிப்பாட்டினேன். கடைக்கு அழைத்துச் சென்று வேண்டியதையெல்லாம் வாங்கித் தந்தேன். உண்மையில் ஒரு நாயை அப்படி இதுவரை யாருமே கவனித்திருக்க மாட்டார்கள். அந்த ஒரு வாரம் அவ்வளவு மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டேன். செய்ய வேண்டியதை எல்லாம் நேர்மையோடும் அன்போடும் செய்தேன்.
    இதற்கு மேல் ரேகோ வாலை சுருட்டிக்கொள்ளாது, வால் இனி நீண்டுதான் இருக்கும் என்று நம்பினேன். அது நன்றியுள்ள பிராணி ஆயிற்றே என்று எண்ணி, அன்போடு தடவிக்கொண்டே, அந்தக் குச்சியை மெதுவாகப் பிரித்து எடுத்தேன். அடுத்த நொடி சுருண்டுவிட்டது அந்த ‘திமிர்பிடித்த நாயின் திமிர்பிடித்த வால்’!

    வெறுத்துப்போய் அந்தக் குச்சியை அதன் மேலே வீசியெறிந்தேன்.dogtail2

    நண்பனிடம் என் கவலையைப் பகிர்ந்துகொண்டேன். “எல்லா நாய்களும் அப்படித்தான். ‘ நாய் வாலை நிமிர்த்த முடியாது’. அது சுருட்டிக்கொள்ளத்தான் செய்யும். அதை மாற்ற முயன்று நேரத்தை விரயம் செய்யாதே.” என்று அறிவுரை வழங்கினான். இது முன்னரே தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணி வருந்தினேன்.

    உயர் ரக நாய் என்று கூறி என்னிடம் விற்றவன் மேல் எனக்கு அத்தனை கோபம் வந்தது. மற்றவர்களை மதிக்காமல், தனக்குத் தான் மட்டும்தான் என்றும், தன்னை மாற்றிக்கொள்ளவே மாட்டேன் என்று கர்வம் பிடித்து சுருண்டு கிடக்கும் இந்த வாலைக் கொண்ட நாய் என்ன பெரிய உயர் ரகம்?

    இறுதியில் அந்த நாயைத் துரத்தி அடித்துவிடுவது என்று முடிவு கட்டினேன்.

    இதற்கு மேல் இந்த நன்றிகெட்ட நாய்களை வாங்கக்கூடாது, வாங்கினால் ஒரு பூனையைத் தான் வாங்க வேண்டும். ஆனால், பூனை வால் சுருட்டிக்கொள்ளும் இயல்புடையதா? நண்பனிடம் கேட்க வேண்டும்.

    இல்லை. இதோ, இது தான் என் இறுதியான முடிவு – வாலை சுருட்டிக்கொள்ளாத எந்த பிராணியானாலும் பரவாயில்லை, நான் வாங்கத் தயாராயிருக்கிறேன். அது, புலியாக இருந்தாலும் பரவாயில்லை. அதன் மீது எனக்குத் துளி பயமில்லை.

    எந்தப் பிராணி என்பது முக்கியமில்லை. ‘சுருட்டிக்கொள்ளாத வால்’ எனக்கு மிக முக்கியம்!

    Share
  • வர்ணம்

    அன்று காலை. பெல்கிய நாட்டின் லூவன் நகரில் ஒரு மின்னணு சாதன அங்காடியில் அந்த மனிதருக்காக (attender) காத்துக் கிடந்தேன். வந்தவர் என்னைத் தவிர்த்து விட்டு எனக்கருகே நின்ற, எனக்கடுத்து வந்த சீமாட்டியிடம் என்னவென வினவிவிட்டு கவனித்தார். சில மணித்துளிகள் காத்திருப்பில் கழிந்தது. திரும்பி வந்தவரிடம் மீண்டும் கேட்க முற்பட்டேன்.

    “ஒரு நிமிடம்!” என அவர் மொழியில் தெரிவித்துவிட்டு, இன்னொரு கனவானை கவனிக்கச் சென்றார். அவரும் எனக்கடுத்து வந்தவரே! இன்னும் சில மணித்துளிகள் விழுந்து முடிந்திருந்தது. திரும்பி வந்தவர் மீண்டும் இன்னொரு கனவானை நோக்கிச் சென்றார்.

    பொறுமை இழந்தவனாய் உரக்க உரைத்தேன், “மன்னிக்கவும்.” நான் குறுக்கே நுழைந்து தொல்லை தருகிறேன் என்பது போன்று என்மீது கோபப்பார்வை வீசியவரிடம் தொடர்ந்து கூறினேன், “மன்னிக்கவும். நான் வந்து வெகுநேரம் ஆயிற்று.”

    “மன்னிக்கவும். கவனிக்கவில்லை!” என்றார்.

    “பரவாயில்லை. தங்கள் கவனத்தை கவரும் அளவிற்கு என் முகம் ‘பளிச்சென’ இல்லாததற்கு தாங்கள் என்ன செய்வீர்கள் பாவம்!” என்று உடனே கூறினேன் சிறுபுன்னகையுடன் – அவர் மொழியில்.

    யாரோ அறைந்ததுபோல் சில நொடிகள் உறைந்து போனார். பின் என்ன தோன்றியதோ தெரியவில்லை. என் கைகளைப் பற்றி, “மன்னிக்கவும்!” என்றார் – பலமுறை!

    எனக்கு இன்னமும் புரியவில்லை. இந்த மன்னிப்பு ‘என்னைக் காத்திருக்க வைத்ததற்கா?’ அல்லது ‘அவர் மொழியில் பேசியதற்காகவா’ அல்லது ‘நான் பளிச்சென இல்லை என்பதற்கா?’, அல்லது ‘அவரது இருண்ட ஆழ்மனம் எனக்கு தெரிந்துவிட்டது என நினைத்துக் கொண்டதாலா?’ எனக்கு இன்னமும் புரியவில்லை.

    வளர்ந்த நாடாயிருந்தாலென்ன? வளரும் நாடாயிருந்தாலென்ன? வளரா நாடாயிருந்தாலென்ன?

    ‘மனித மனங்கள் வளராத வரை!’.

    Share
  • பேரமைதி

     

    மாதவன் இளங்கோ

     

    கூடு நோக்கிப்
    பறந்து சென்ற
    பறவையொன்றின்
    சிறகு ஒன்று
    முறிந்து விட,
    தடம்மாறி
    ஒற்றைச் சிறகோடு (more…)

    Share
  • ‘ப்ரமான் சூபியங்க’

    அன்று அதிகாலை ஒரு முழுநாள் தேர்வுக்காக லூவன் நகரிலிருந்து ப்ரசல்சு நகரம் செல்ல வேண்டியிருந்தது.

     லூவன் எகானோம் டாக்சி நிறுவனம், சொன்னதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வண்டி அனுப்பி இருந்தார்கள். பென்சு காரில் ஏறி அமர்ந்தவுடன் கோனிங்கு போடெவெய்ன்லான் நெடுஞ்சாலையில் காரை விரட்டினார் என் சாரதி.

     ‘ஹுய மார்ஹன்’ என்பதற்குப் பதிலாக ‘குட் மார்னிங்’ என்று கூறிய பாங்கும், அவரது உருவ அமைப்பும் அவர் நிச்சயம் ஃபிளம்மியர் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது.

     “ஆர் யூ ஃப்ரம் போலன்ட்?” என்று கேட்டேன்.

     “இல்லை, ரஷ்யா!” என்று கூறியவர், “தாங்கள் பாகிஸ்தானியா?” என்றார்.

     “எப்படி இருவருமே ‘சரியாக’ தவறாகக் கேட்கிறோம்?” என்று நினைத்துக்கொண்டே, “இல்லை, இந்தியன்!” என்றேன்.

     சிறிது நேர  மௌனத்திற்குப் பிறகு, “தாங்கள் ரஷ்யா சென்றதுண்டா?” என்று கேட்டார்.

     “இல்லை, நண்பரே. ஆனால், நானும் என் பள்ளி நண்பனும் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்பட்டதுண்டு.” என்றேன்.

     அவர் புன்னகைத்தார். நான் தொடர்ந்து, “நீங்கள் ‘தாய்’ (தி மதர்) நாவலைப் படித்ததுண்டா?” என்று கேட்டேன்.

     அவர் மிகுந்த ஆச்சர்யத்துடன், “உங்களுக்கு மதர் நாவலைப் பற்றி எப்படித் தெரியும்?” கேட்டார்.

     “மாக்சிம் கோர்கி என் அபிமான எழுத்தாளர்!” என்றேன்.

     பரவசத்தோடு, “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு எந்த கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும்?” என்று கேட்டார்.

     “அந்தத் தாய் – பெலகேயா நீலவ்னா!” என்றேன்.

     “எனக்கு பாவெல்!” என்றார்.

     தாய் பற்றிய சிலமணித்துளி உரையாடலில் இலக்கை சென்றடைந்தோம்.

     “என் பெயர் ‘ப்ரமான் சூபியங்க’ (Roman Zubenko)” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, என் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, என் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு, “மாலையும் நானே வர விரும்புகிறேன்!” என்று கூறிவிட்டு சென்றார். மாலையும் வந்தார். மீண்டும் பேசினோம். பேச்சு தாய், மாக்சிம் கோர்கி, ஆன்டன் செக்கோவ், ரஷ்யா, இந்தியா என்று சுற்றிவந்தது. இதோ, இன்று, இதை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் கூட ஜி-டாக்கில் ஆன்லைனில் இருக்கிறார்.

     மறக்க முடியாத நாள்! மறக்க முடியாத மனிதர்!

     “மொழி இனத்தை இணைக்கிறது. இலக்கியம் உலகையே இணைக்கிறது.”

    Share
  • முடிதிருத்தகமும் மனிதமும்..

    மாதவன் இளங்கோ

    பெல்கிய நாட்டின் லூவன் நகர பிரசல்ஸ் தெருவில் உள்ள ஒரு முடிதிருத்தகம். இப்போதுதான் அங்கிருந்து வருகிறேன்.

     சிறுவயதிலிருந்து இன்று வரை மாறாத பல பழக்கங்களில் ஒன்று – ‘முடிதிருத்தும் போது தூங்கிவிடுவது’. ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடிப்பதற்குள் வெட்டி முடித்து விட்டார் அந்தக் கலைஞர். அதோடு விடாமல், இன்னும் மூன்று வருடங்களில் உனக்கு அநேகமாக முடியனைத்தும் கொட்டிவிடும் போலிருக்கிறது என்று சிரித்துக்கொண்டே ஆரூடம் வேறு சொல்லி வழியனுப்பி வைத்தார். இந்த இரண்டு காரணங்களுக்காகவே நிறைய முடி வளர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

     ‘உங்கள் ஆரூடம் ஒருவேளை பலித்துவிட்டால், நீங்கள் ஒரு வாடிக்கையாளரை இழக்க நேரிடும்! அதனால், எனக்கு நன்றாக முடி வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.’ என்று நானும் சிரித்துக் கொண்டே கூறிவிட்டுத் திரும்பினேன்.

     ஆங்கிலத்தில் முடிதிருத்துபவர்களை ‘Tonsorial Artist’ என்பார்கள். உண்மையாகவே அது ஒரு கலை என்பதில் எனக்குத் துளி ஐயமில்லை. ஏனென்றால், நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு பாடிக்கூட இத்தனை அழகாய் என்னைத் தூங்க வைக்க முடியாது. 😉

     இன்று நான் சென்று வந்தது, நான் வழக்கமாகச் செல்லும் பாகிஸ்தானியர் ஒருவரின் முடிதிருத்தகம். உள்ளூர்காரர்களிடம் சென்றால் சொத்தையே எழுதிக்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர்களிடம் எப்போதுமே செல்வதில்லை. இந்த நகரத்துக்கு வந்த புதிதில், ஒரே ஒருமுறை தலைமுடி வெட்டிக்கொள்ளச் சென்று, மொட்டை அடித்துக்கொண்டு திரும்பியதோடு சரி. பிறகு அவர்கள் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

     சரி, அதை விடுங்கள். நான் கூற வந்தது இதுதான் –

     பதினைந்து மணித்துளிகள் ஒரு பாகிஸ்தானியரிடம் தலையைக் கொடுத்து, நிம்மதியாய் தூங்கிவிட்டு வந்திருக்கிறேன். தலையில் முடியிருக்கும் வரை, இந்த ஊரில் நான் இருக்கும் வரை, இன்னும் பலமுறை அவரிடம் செல்வேன் – அந்த பதினைந்து மணித்துளி உறக்கத்துக்காய்.. நிம்மதிக்காய்.. நிம்மதியான உறக்கத்துக்காய்..

     அரசியல்வாதிகளும், மதவாதிகளும் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் – மனிதர்களைப் பிரிக்க. நிஜத்தில் மனிதமே நிலைத்து நிற்கிறது. நிற்கும். வெல்லும்!

    Share
  • ரசிகை மணிமொழிக்கு ஒரு மடல்..

    கலாரசிகை மணிமொழிக்கு,

    வணக்கம். தங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன். உண்மையிலேயே பேருவகை அளித்த மடல்.

    உங்கள் கடித்தத்தைப் படித்து முடித்தவுடன், சுஜாதா அவர்கள் ஒரு சிறுகதையில் லாட்டரியில் பரிசு கிடைப்பதற்கான சாத்தியம் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது –

    “ஒரு குரங்கு டைப் அடிக்கற இயந்திரத்துக்கு முன்னால் உட்கார்ந்துவிட்டு, தக்கா புக்கான்னு அடிச்சு, அடிச்ச விஷயம் அகஸ்மாத்தா கம்பராமாயணத்தில் ஒரு பாட்டா அமையதறதுக்கு எவ்வளவு சான்ஸ் இருக்கோ, அவ்வளவு சான்ஸ் தான் இந்த லாட்டரியில..” என்று எழுதியிருப்பார்.

    என்னைப் பொறுத்தவரையில், என் போன்ற ஓவியர்களுக்கு இதுபோன்ற கடிதங்கள் வருவதென்பதும், லாட்டரியில் பரிசு விழுவதென்பதும் ஒன்று தான்! என்னை ‘தக்கா புக்காவென தட்டச்சும் குரங்கு’ என்று கூறவில்லை. உங்களைப் போன்ற கலாரசி(கர்)கைகள் எல்லாம் பேரதிசயம் என்றே கூற வருகிறேன்!

    எவ்வளவு அழகாக என் ஓவியங்களை உள்வாங்கியிருக்கிறீர்கள்?

    உங்கள் கடிதத்தைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறேன். உண்மையில் இந்தக் கடிதமே ஒரு அழகிய ஓவியம்! என் படைப்புகளைப் பற்றி நீங்கள் பாராட்டி எழுதியதற்காகச் சொல்லவில்லை. உண்மையில், நீங்கள் தான் அந்த ஓவியங்களை வரைந்து முடித்துள்ளீர்கள்.

    உங்கள் கேள்விக்கு வருவோம். “அது என்ன ‘து..தூ.. (TuToo)’ என்று ஒரு புனைபெயர்? குறில் நெடிலென கவித்துவமாயும் இருக்கிறது; ஒன்றும் புரியாததாயும் இருக்கிறது?

    கவிதைக்கான அனைத்து லட்சணங்களும் என் புனைபெயரிலேயே வந்து விட்டது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். 🙂

    கவிஞனுக்கும், ஓவியனுக்கும் அடிப்படையில் வேறுபாடு எதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. கவிஞன் ஒரு ஓவியத்தை  மனக்கண்ணால் தரிசித்துவிட்டு கவிபடைக்கிறான். ஓவியன், கவிதையைக் மனதிலேயே எழுதிமுடித்துவிட்டுப் பின் ஓவியம் வரைகிறான். ஒரு கவிஞனுக்குள் நிச்சயம் ஒரு ஓவியனும், ஒரு ஓவியனுக்குள் நிச்சயம் ஒரு கவிஞனும் இருந்தே ஆகவேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

    சரி, என் புனைபெயருக்கு வருவோம். இதற்கான பதிலை நிச்சயம் ஒரு வரியில் என்னால் கூற முடியாது. அது ஒரு பெரிய கதை! சிறிது நேரம் இந்த ஓவியனுக்குள் இருக்கும் கதாசிரியனையும் பொறுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன், மணிமொழி.

    அன்றைய தினத்து நினைவுகளின் வண்ணங்கள் இன்னும் என் மனதில் திட்டுத் திட்டாக ஒட்டிக் கொண்டு இருக்கின்றன.

    அன்றைக்கு அலுவலகத்தில் “அட போங்க! என்ன வாழ்க்கையோ?” என்று ஒரு நான்கு நண்பர்களிடமாவது சொல்லிப் புலம்பி இருப்பேன். காலை வீட்டிலிருந்து கிளம்பும் போது, வீட்டாருடன் பெரிய வாக்குவாதம். என் அண்ணன், அண்ணி, தாய்மாமா, பற்றாக்குறைக்கு என் மாமனார் வேறு. என்னைக் கிட்டத்தட்ட ஒரு விசாரணைக் கைதியைப்போல் நிறுத்திக் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பின்னர் அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.

    அதற்கு முந்தைய வாரம் மும்பையில் நடந்த சர்வதேச ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க வந்திருந்த என் ஆதர்ச ஓவியர் ராம் எங்கள் வீட்டில்தான் தங்கினார். நான் அலுவலகத்துக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்து விட்டு கண்காட்சியில் அவரோடு இருந்தேன்.

    அதுவே என் வீட்டாருக்கு அப்போது இமாலயப் பிரச்சினை.

    “இயந்திரவியல் முடித்துவிட்டு பஜாஜ் நிறுவனத்தில் வாகன வடிவமைப்பாளராகப் பணியாற்றும் எனக்கெதற்கு இந்த ஓவியக் குப்பைகள் எல்லாம்?” என்பது அவர்கள் வாதம்.

    மும்பை காண்டிவிலியில் நாங்கள் வசித்துவந்த வீடு என் தந்தை கட்டியது. மிகப் பெரிய இரண்டடுக்கு வீடு. கீழ் வீட்டில் என் அண்ணனும், மேலே நானும் குடியிருந்தோம். அவருடைய குழந்தைகள் எப்போதும் என் வீட்டில்தான் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

    நான் சிறுசிறு வீட்டுப் பராமரிப்பு வேலைகளைக்கூட செய்வதில்லை என்பது என் அண்ணனின் குற்றச்சாட்டு. மளிகைக் கடைக்குச் செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது போன்ற வேலைகளைச் செய்வதில்லை என்பது என் மனைவியின் குற்றச்சாட்டு. தங்கள் வீட்டில் நடக்கும் முக்கியமான குடும்ப நிகழ்வுகளில்கூட நான் பங்கேற்பதில்லை என்பது சென்னையிலிருந்து வந்திருக்கும் என் மாமனாரின் குற்றச்சாட்டு. என் அண்ணனின் குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்தவிடாமல், ஓவியம் வரையச் சொல்லி கட்டாயப்படுத்துகிறேன் என்று என் அண்ணன் மூலமாக பழி சுமத்திய என் அண்ணி.

    இவையனைத்திற்கும் மூலகாரணமே ஓவியக்கலையில் எனக்கு இருந்த நாட்டம் தான். என் ஓவியப்படைப்புக்களைப் பார்த்தாலே அவர்களுக்கு ஏனோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

    நிலைமை இப்படி இருக்க, ஒரு ஓவியர் வந்து வீட்டில் ஒரு வாரம் தங்கினால் சும்மா இருப்பார்களா? யோசித்துப் பாருங்கள்.

    அதிலும் அவருக்காக நான் விடுப்பு வேறு எடுத்துக்கொண்ட விஷயம் என் மாமனாரை  ரொம்பவுமே பாதித்துவிட்டதுபோல் தெரிந்தது.

    “வீட்டக் கொஞ்சம் பாருங்க மாப்ள. ஏதோ பெயின்டிங் முடிக்கணும்னு சொல்லி, என் மொத பொண்ணு சீமந்தத்துக்குக் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டீங்க. இன்னைக்கி எவனோ ஒருத்தனுக்காக அலைஞ்சிட்டு இருக்கீங்க! இது என்ன நியாயம்?” என்றார் என் மாமனார்.

    “பெரியவங்க கஷ்டம் இவங்களுக்கு புரியாது ராமநாதன். சிவா, எவ்வளோப்பா செலவு பண்ண அந்த பெயிண்ட் அடிக்கற தாடிகாரப் பயலுக்கு?” – இது என் தாய்மாமா கிருஷ்ணமூர்த்தி.

    “பெயிண்ட் அடிக்கிறவரா? கலைத்தாய் இவர் மேல கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம்” என்று நினைத்துக்கொண்டு அமைதியாக நின்றேன்.

    என்னைச்சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில் அமைதியைக் கடைப்பிடிப்பது என் வழக்கம். ஏனென்றால் அந்த சமயங்களில் நாம் பேசுவதால் எந்த உபயோகமும் இல்லை. அது பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். மேலும், நாம் செய்து கொண்டிருப்பது என்னவென்றே தெரியாமல் நம்மை விமர்சனம் செய்துகொண்டிருப்பவர்களிடம் பிரதிவாதம் செய்வது என்பது, குருடனுக்கு பச்சை நிறம் எப்படி இருக்கும் என்று விளக்குவது போன்றது.

    “”உங்கப்பா கஷ்டப்பட்டு சேத்ததெல்லாம் அழிச்சிடாதப்பா. அவ்ளோதான் சொல்லமுடியும். நல்ல வேலைல வேற இருக்க. அதுல ஒழுங்கா ஷைனாகற வழிய பாரு சிவா.”

    ஏதோ வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடப்பவனிடம் பேசுவது போன்று தொடர்ந்து விடாமல் அறிவுரைகளை பொழிந்துகொண்டிருந்தார் என் மாமா.

    ராமை அந்தேரிக்கு அழைத்துச் சென்றதிலும், அவருடன் உணவு அருந்தியதிலும் என் சொத்தே அழிந்துவிட்டது போன்ற பிரமையை உருவாக்கிய அவர் பேச்சு எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இருந்தாலும் என் வாதங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை – மேலே கூறிய அதே காரணங்களுக்காக.

    இவர்களாவது பரவாயில்லை. என்னைக் காதலித்து மணந்துகொண்ட என் மனைவிக்கு என்ன ஆயிற்று? அவளால் கூட என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

    திருமணத்திற்கு முன்பே, என் கனவுகளைப் பற்றி எவ்வளவு விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டேன். அத்தனைக்கும் துணையாய் இருப்பேன் என்று கூறிய அவள் இன்று,

    “அவர் வேணும்னா அவர் உண்டு அவர் பெயிண்டிங் உண்டுன்னு ஜாலியா இருக்கட்டும். நான் சென்னைக்கு போயி வேலை பார்க்கப்போறேன்” என்று நாகூசாமல் சொன்னாள்.

    அதற்குக் காரணம் அவளுடைய பொசசிவ்னெஸ் என்றே நினைக்கிறேன். என்னுடைய ஓவியக்கலையைக் கிட்டத்தட்ட அவள் சக்களத்தியாகவே பார்க்கிறாள். அதிலும் ஏதாவது ஒரு பெண்ணின் படம் வரைந்தால் போதும் – முடிந்தது கதை! எல்லாவற்றுக்கும் மேலாக, அவளுடைய அக்காவின் சீமந்தத்திற்கு நான் போகாதது, நான் இழைத்த தவறுகளிலேயே ‘ உலக மகா தவறு!’.

    அன்றுதான் முதன்முதலாக என் பெற்றோர்கள் இல்லாத வெற்றிடத்தை முழுவதுமாக உணர்ந்தேன். சிறுவயதில் இருந்தே எனக்கு ஓவியம் என்றால் அவ்வளவு நாட்டம். நான் ஆறுவயதில் மூன்று கோடுகளைப் போட்டதற்கே கைதட்டி ரசித்து, என்னை ஊக்கப்படுத்துவதற்காகவே, வண்ண வண்ண பென்சில்களையும், ஸ்கெட்சுகளையும், தூரிகைகளையும், வெள்ளைத் தாள்களையும் வாங்கி வந்து குவித்தவர்கள் அவர்கள்.

    அத்தனை அவிவேகிகளும் சேர்ந்து என்னைக் கேள்வி கேட்பதைப் பார்த்துக்கொண்டு அவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? இல்லை, அவர்களுக்கெல்லாம் என் தந்தை முன்பு பேசத்தான் துணிவு இருந்திருக்குமா?

    ஓவியர் ராம் போன்றவர்கள் வீட்டிற்கு வருவது எவ்வளவு பெரிய பாக்கியம். இதுபோன்ற வாய்ப்புக்கள் என்னைப்போன்ற வளரும் கலைஞர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? என் ஓவியங்களை எல்லாம் பார்த்து எவ்வளவு ரசித்தார், பாராட்டினார். அந்த மகா கலைஞன் இந்த அற்பனின் ஓவியம் ஒன்றை ‘மாஸ்டர் பீஸ்’ என்று கூறியதோடு மட்டுமில்லாமல், அந்த சர்வதேசக் கண்காட்சியில் என் ஓவியங்கள் சிலவற்றையும் வைத்து அழகு பார்த்தாரே! அந்தப் பெருந்தன்மையைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கும்? எத்தனை  பெரிய கலைஞர்களை அங்கே எனக்கு அறிமுகப்படுத்தினார்!

    அதற்கு முன்புவரை எத்தனை  பத்திரிக்கைகளுக்கு எனது ஓவியங்களை அனுப்பி இருப்பேன்? அவற்றிற்கெல்லாம் பதில் கடிதம் கூடக் கிடைத்ததில்லை. ஆனால், ராம் என்னுடைய ஓவியங்களை அவரே அவருக்குத் தெரிந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு அனுப்பினாரே! அவரோடு நானிருந்தது எனக்கல்லவா பயன்பட்டது. அவர் நினைத்திருந்தால் ஒரு விடுதியில் தங்கியிருக்கலாம். ஆனால், ஒரு ரசிகன் மீதிருந்த அதீத அன்பினாலல்லவா அவர் என்னோடு வந்து தங்கினார்.

    ஒரு கலைஞனுக்குத் தான் எத்தனை பிரச்சினைகள் பாருங்கள் மணிமொழி – வீட்டிலும், சமுதாயத்திலும்? சமுதாயத்தில் தொடர்ந்து அவன் படைப்பின் மேலெழும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. அதுவாவது பரவாயில்லை என்பேன். வீட்டில், முதலில் ஒரு படைப்பை உருவாக்குவதற்கே போராட வேண்டியிருக்கிறது.

    இப்படி ஏதேதோ எண்ணவோட்டங்களில் அன்றைக்கு தொலைந்து போயிருந்த என்னை உலுக்கியது என் உடன் பணிபுரிந்த நண்பர் சேகரின் கணீரென்ற குரல்.

    “என்னங்க ஷிவா, ப்ரூட் ஜூஸ் குடிக்கபோறேனு சொல்லிட்டு வந்து கேன்டீன்ல இவ்ளோ நேரம் உக்காந்து என்ன கனவு கண்டுட்டு இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே என் முன்னால் வந்து அமர்ந்தார்.

    “அதான் காலைலயே சொன்னேனேங்க.”

    “அட விடுங்க ஷிவா. இதெல்லாம் ஒரு பிரச்சினையா? உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கொடுக்கட்டுமா? நீங்க மொதல்ல எங்கூட MBA பார்ட் டைம் கோர்ஸ் ஜாய்ன் பண்ணுங்க.”

    “என்ன ஷேகர் சொல்றீங்க? இதுக்கு எங்க வீட்ல இருக்கறவங்களே பரவாயில்லை போல இருக்கே?”

    “நோ.. நோ. நான் இன்னும் முடிக்கல. MBA கிளாஸ் போறேன்னு சொல்லிட்டு ஈவினிங்லயும், வீகென்டுலயும் ஒரு சின்ன ரூம் ரென்டுக்கு எடுத்து அங்க பெயிண்ட் பண்ணுங்க.”

    “இது ரியலிஸ்டிகாவே படலையே ஷேகர். வேற ஏதாவது ஐடியா கொடுங்க.”

    “ஷிவா, அவனவன் எதுக்கெல்லாமோ சின்ன வீடு வெச்சிருக்கான். நீங்க உங்க ட்ரீம்ஸ்காக ஒரு ஸ்மால் ரூம் ரென்ட் எடுக்கறது தப்பா? இன்னைக்கி எத்தனையோ ஆர்டிஸ்ட் புனைபெயர்ல வரையறாங்க, எழுதறாங்க. நீங்க பாட்டுக்கு சைலன்டா உங்க வேலைய பாருங்க ஷிவா”

    சிந்தனையில் ஆழ்ந்த என்னிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார் ஷேகர், “நம்ம மக்கள் எப்பவுமே ஜெயிச்சவன் கொடுக்கற பேட்டிய ஆ..னு வாயத் தொறந்து டிவி-ல பாத்து கைதட்டுவாங்க. நம்ம வீட்லயே ஜெயிக்கறதுக்குப் பாடுபடறவன கண்டுக்க மாட்டாங்க. ஆனா கிண்டல் மட்டும் நல்லா பண்ணுவாங்க.”

    “அப்போ ஏன் ராம் மாதிரி ஆளுங்கள கண்டுக்க மாட்டேங்கறாங்க.”

    “தட்ஸ் பிகாஸ் தே டோன்ட் நோ அபோவ்ட் திஸ் ஆர்ட். இதுல வேற நீங்க மாடர்ன் ஆர்ட் ஆசாமி. அவங்களுக்கு என்ன புரியும்? எதையோ கிறுக்கி டைம் வேஸ்ட் பண்றான்னு நெனெக்கிறாங்க. இதுவே நீங்க ஒரு கீபோர்டிஸ்டா இருந்து A.R.ரஹ்மான் உங்க வீட்டுக்கு வந்தா இப்படி பிகேவ் பண்ணுவாங்களா யோசிச்சு பாருங்க? அவ்வளோ ஏன்? இந்த ராம் மட்டும் ஒரு டிவி சீரியல்ல நடிசிருந்தார்னா இப்போ நெலமையே வேற மாதிரி இருந்திருக்கும்.” என்று சேகர் பேசிய விஷயங்கள் எனக்கு நியாயமாகப்பட்டது.

    அதிலும் புனைபெயரில் வரைவது என்பது சிறந்த யோசனையாகப்பட்டது. மாலை வீட்டிற்குச் செல்லும் வழியில் பல புனைபெயர்கள் தோன்றின. எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை.

    இப்படிச் சிந்தனையில் ஊறியபடியே வீட்டிற்குள் நுழைந்த போது, எங்கள் வீட்டு ரோஜா செடிகளுக்கு மத்தியில் நான் கண்ட காட்சி என்னை உலுக்கியது.

    ராம் என்னிடம் மாஸ்டர் பீஸ் என்று பாராட்டிய என்னுடைய ஓவியம் கீழே கேட்பாரற்று விழுந்து கிடந்தது. சற்றுநேரத்திற்கு முன்பு என் மனைவியோ அல்லது அண்ணியோ, உலரவைப்பதற்காகக் கம்பியில் தொங்கவிடப்பட்ட துணியிலிருந்து விழுந்த தண்ணீர்த் துளிகள், சொட்டுச் சொட்டாய் என் ஓவியத்தை அழித்துக்கொண்டிருந்தன.

    ஓடிச்சென்று அதை எடுக்க குனிந்தபோதுதான் கவனித்தேன். என் ஓவியம் அப்படியொன்றும் உருக்குலைந்து போய்விடவில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்தத் துளிகள் ஒவ்வொன்றும் தூரிகைகளாய் மாறி என் ஓவியத்தை மேலும் அழகுபடுத்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தபோது, “துளிகளே தூரிகைகளாய்…” என்கிற கவித்துவமான தலைப்போடு சேர்த்து, அந்தத்துளிகள் வரைந்த ஓவியத்தைப் பற்றிக் கவிதை வரிகளும் கொட்டின.

    அப்போது பிறந்தது து..தூ.. (TuToo) என்கிற என் புனைபெயர் மட்டும் அல்ல; எனக்குள் இருந்த கவிஞனும்தான்.

    நாம் நிச்சயம் சந்திக்கவேண்டும், மணிமொழி. ஓவியங்களால் சூழப்பட்ட இந்தச் சிறு வீடு உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறது.

    என்றென்றும் அன்புடன்,

    து..தூ.. (என்கிற) சிவா.

     

    Share
  • சிராய்ப்பு

    (குறுங்கதை)

    அது ஒரு குறுகிய தெரு. அந்தத் தெருவில் வசிக்கும் மழலைகள் சில அந்த இளம்பச்சை நிற வண்ணம் தீட்டப்பட்ட வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தன.

    அந்த வீட்டிற்குள் எப்போதும் போல் இணையவெளியில் உலவிக் கொண்டிருந்தான் கார்த்திகேயன் – வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளில் ஒன்றின் தகப்பன். அந்தக் குழந்தைக்குக் கூட ஏதோ ‘ஷா’வில் முடியும் பெயர். சரியாக நினைவுக்கு வரவில்லை.

    வாசலில் வாகனசத்தம் கேட்கும்போதெல்லாம் வெளியே வந்து அவனது காரை அந்த வாகனங்கள் எப்படிக் கடந்து போகின்றன என்பதை பார்த்துவிட்டு, மீண்டும் உள்ளே சென்று வலைமேயத் தொடங்கிவிடுவான்.

    சமையலறையிலிருந்து திடீரென்று அவன் மனைவி சித்ரா பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடுவதை சலனமில்லாமல் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் கணிப்பொறியில் மூழ்கினான்.

    வெளியே சென்ற மனைவி, குழந்தையைக் கொண்டுவந்து நாற்காலியில் கிடத்திவிட்டு, உள்ளே ஓடினாள்.

    அப்போதுதான் குழந்தை அழுதுகொண்டிருப்பதை கவனித்தான் கார்த்திக்.

    “என்ன ஆச்சுடி குட்டி” என்று கேட்டுக்கொண்டே குழந்தையிடம் சென்றான்.

    “இடி விழுந்தாகூட உங்க அப்பாவுக்கு அது கேக்காதுடீ குட்டி!” என்று உரக்கக் கத்திக்கொண்டே வந்து அடிபட்ட இடத்தில் மருந்திட்டாள் சித்ரா.

    “சின்ன ஸ்க்ராட்ச் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு பதைபதைப்பு? குழந்தைய நீதான் கெடுக்கற. நானெல்லாம் சின்ன வயசில்ல அடிபட்டா, மண்ணை எடுத்து அடிபட்ட எடத்துல போட்டுப்பேன். தானா சரியாயிடும். கூல்!” என்றவனை முறைத்துவிட்டு உள்ளே குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டாள். அவனும் வெளியே சென்று காரை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் வலைமேயச் சென்றுவிட்டான்.

    அன்று மாலை ஏழு மணி இருக்கும்.

    “குழந்தைக்கு லேசா உடம்பு சுடுது. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்” என்று கூறிவிட்டு டிரைவரை அழைத்துக் கொண்டு காரில் சென்று அமர்ந்தாள் சித்ரா.

    அதைக் கேட்ட அடுத்தகணம், பதைபதைத்துக்கொண்டு வெளியே வந்த கார்த்திக், “டாக்டர் வீடு இருக்கற தெருவுல ரெண்டு பக்கம் முள்ளுச்செடிங்க நிறைய இருக்கு. தெருமுனையிலேயே காரை விட்டுட்டு நடந்து போய்டுங்க, மகேந்திரன்” என்று டிரைவருக்கு அறிவுரை கூறி அனுப்பிவிட்டு, வாட்டத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தான் கார்த்திக்.

    கார் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் மகேந்திரனின் கைபேசிக்கு கார்த்திக்கிடமிருந்து மூன்றுமுறை அழைப்புகள் வந்தது.

    மருத்துவமனை இருந்த தெருமுனையில் காரை நிறுத்தினான் மகேந்திரன்.

    சித்ரா காரிலிருந்து இறங்கிவிட்டு, “இன்னொருமுறை அவர்கிட்டர்ந்து கால் வந்தா, கார் மேல ஸ்க்ராட்ச் ஆயிடும்னு கவலைபடாம இன்டர்நெட்ல எதையாச்சும் பண்ண சொல்லுங்க. ஸ்க்ராட்ச் தானே! மண்ணை அள்ளிப் பூசி  சரி பண்ணிக்கலாம்! ” என்று கூறிவிட்டு, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அந்த இருட்டில் தனியாக மருத்துவமனைக்கு நடந்து சென்றாள்.

    Share
  • சுழற்சி

    மாதவன் இளங்கோ

    சென்னை வடபழனியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்த அந்த வீடு, கிட்டத்தட்ட ஒரு வருடம் நான்கு நாட்களுக்கு முன்பு அது இருந்த அதே நிலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

    இது நிச்சயம் என்னுடைய கதை அல்ல. நான் மேலே குறிப்பிட்ட அந்த வீட்டில், ஒரு வருட காலமாக வசித்து வந்த கார்த்திக் – திவ்யா தம்பதியினரின் கதை.

    அன்று அந்த வீட்டின் ஒரு மூலையில் புத்தகக் குவியல், மறு மூலையில் பாத்திரக் குவியல், இன்னொரு மூலையில் இருந்த திவானின் மீது கண்ணாடிப் பொருட்கள் என்று வகைப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர் கார்த்திக்கும், திவ்யாவும்.

    இது தவிர, பலதரப்பட்ட கடைகளின் பிளாஸ்டிக் உறைகள் –

    உடைந்துபோன பென்சில், தலை வேறு முண்டம் வேறாகக் கிடக்கும் மைதீர்ந்த பேனாக்கள், ஸ்கெட்ச் போன்ற எழுதுபொருட்கள் –

    கம்பிவடங்கள், தேய்ந்து போன குறுந்தகடுகள், தொலைந்து போய் விட்டதாய் அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த உடைந்து போன தொலையியக்கி ஒன்று, என்றைக்கோ உயிரை விட்டிருந்த மின்கலங்கள் போன்ற மின் கழிவுகள் –

    வெவ்வேறு அளவிலான அட்டைப்பெட்டிகள், நைந்து போன கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள், அறிமுக அட்டைகள், தொலைபேசி கட்டண ரசீதுகள், கடன் அட்டை கணக்கு அறிக்கை போன்ற காகிதக் குப்பைகள் –

    இப்படி அனைத்து வகையான எண்ணிலடங்கா குப்பைகள் அந்த வீடெங்கும் இறைந்து கிடந்தன.

    என்றோ படித்து முடித்துவிட்டுப் பரண் மேல் போட்டு வைத்திருந்த  புத்தகங்களை எடுத்து தூசுதட்டி, புத்தகக் குவியலின் மீது எறிந்து கொண்டு இருந்தான் கார்த்திக். அவன் ஒவ்வொரு முறை எறிந்த போதும் புத்தகக் குவியலைச் சுற்றி இருந்த தூசிப்படலம் சீற்றத்துடன் மேலெழுந்து, சில நொடிகளில் வலுக்குன்றி மெதுவாய் அடங்கியது. ஒரு சில கனத்த புத்தகங்களை எறிந்தபோது உருவான தூசிச்சுனாமி அவன் நாசிவரை சென்று சீண்டிப் பார்த்தது.

    “ஏன் இப்படி புக்ஸ எல்லாம் தூக்கிப் போட்டுட்டே இருக்க?” என்று மூக்கை விரல்களால் பொத்தியபடி கேட்டுக்கொண்டே சமயலறையில் இருந்த இரண்டு ஒட்டா தவாக்களை கொண்டு வந்து பாத்திரப் பகுதியில் வைத்தாள் திவ்யா.

    அன்றைக்கு மட்டும் முப்பத்து மூன்றாவது முறையாக தும்மிவிட்டு, “அதுக்கென்ன பா. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வந்து எல்லாம் ப்ராபரா எடுத்து பேக் பண்ணிடுவாங்க. நாம கேடகரைஸ் மட்டும் பண்ணா போதும்” என்றான் கார்த்திக்.

    “அதுக்காக புக்ஸ போயி யாராவது தூக்கிப் போடுவாங்களா?”

    “ஏன் சாமி கண்ண குத்துமா?” என்று கடவுளை வம்புக்கு இழுத்தான் கார்த்திக்.

    “இல்ல. சரஸ்வதி சபிச்சுடுவா. அடுத்த பிறவியில உனக்குப் படிப்பே வராது.” என்று புன்னகைத்துக் கொண்டே குழந்தைத்தனமாக அச்சுறுத்தினாள் திவ்யா.

    “அது சரி. அடுத்த பிறவிக்கு பயந்துகிட்டு மேல கீழனு ஏறி எறங்கிட்டு இருந்தா, இந்தப் பிறவியில என் முதுகு என்ன ஆகறது?”

    “ஆளவிடு சாமி. உன் லெக்சர் செஷன ஆரம்பிச்சிடாத.” என்று நொந்துகொண்டவளிடம் அங்கே தூசிபடிந்து கிடந்த ‘உடைந்த நிலாக்கள்’ என்ற புத்தகத்தை எடுத்துக் காட்டினான் கார்த்திக்.

    “ஹே, திவி, இந்த புக் உனக்கு நியாபகம் இருக்கா?”

    “ஒ, யா. நாம இங்க வந்த பர்ஸ்ட் டே வாங்கினதுன்னு நெனெக்கிறேன்.”

    “எஸ். அன்னைக்கு நைட் நாம ரெண்டு பேரும் சேர்ந்து இத படிச்சோம்.”

    “யா. அப்ப நீ பொயெடிகா சொன்னது கூட எனக்கு நியாபகம் இருக்கு. ‘உடைந்த நிலாக்களைப் பற்றி வாசிக்கும் உடையாத நிலாக்கள்’”.

    காதலை எதிர்த்த தம் குடும்பங்களைத் துறந்து, திருமணம் செய்து கொண்ட அந்த நிலாக்களின் நினைவுகள் ஒரு வருடம் பின்னோக்கிப் பயணித்தது.

    “நாம பர்ஸ்ட் என்ன வாங்கினோம்னு நியாபகம் இருக்கா திவி உனக்கு?”

    “ஐ திங்க் ஃபேன். அந்த டைம்ல பயங்கர வெயில். சோ, பர்ஸ்ட் ஃபேன் வாங்கிட்டு, அந்த எலக்ட்ரிகல்ஸ் கடைலயே லைட்செல்லாம் வாங்கிட்டு வந்து நாம ரெண்டு பேரும் சேர்ந்து பிக்ஸ் பண்ணோம்.”

    அவள் குறிப்பிட்ட அன்றைய தினம் அந்த வீட்டில் இருந்தவற்றை மிக எளிதாகப் பட்டியலிட்டு விடலாம்.

    இரண்டு பெட்டிகள். ஒரு பை.

    இரண்டு தலையணைகள். ஒரு மெத்தை. அதுவும் கூட தரையில்தான் கிடந்தது.

    மெத்தைக்கு அருகே இரண்டு தண்ணீர் பாட்டில்கள்.

    உடைந்த நிலாக்கள் புத்தகம், அதைப் படித்துக்கொண்டிருந்த அந்த இருவர். கொஞ்சம் சிரிப்பு. நிறைய சோகம்.

    அன்று மட்டும் திவ்யா அவளின் பெற்றோரையும், தம்பியையும் நினைத்து ஒரு பத்து முறையாவது அழுதிருப்பாள். அன்று மட்டுமல்ல, அவள் அழுவதும், அவன் அவளை அணைத்துத் தேற்றுவதும் நாள்தோறும் நடந்துகொண்டுதானிருந்தது.

    காதலில் வெற்றி கிட்டினாலும் கிட்டத்தட்ட வெற்றிடத்தில் ஆரம்பித்த அவர்களின் வாழ்க்கையில், சிறிது சிறிதாகப் பொருட்களும், மனிதர்களின் அன்பும் வந்து குவிந்து கொண்டிருந்தன.

    முதலில் சமையலறை நிரம்பியது. அடுத்ததாகப் படுக்கையறை, பின்னர் வரவேற்பறை என்று படிப்படியாக ஒவ்வொரு அறையிலும் பொருட்கள் பல்கிப் பெருகியது.

    முதலில் கல்லூரி நண்பர்கள் வந்தார்கள், பின்பு உடன் பணிபுரிபவர்கள் வந்து வாழ்த்தினார்கள். அவனது சகோதரி வந்தாள்; அவளது சகோதரன் வந்தான். இருவரது சித்தி சித்தப்பாவும், அத்தை மாமாவும் வந்தார்கள். அவ்வளவு ஏன், அவளது பாட்டி கூட வந்துவிட்டாள்.

    ஆனாலும் அவளின் அழுகை நின்றபாடில்லை. அவனுக்கும் தேற்றுவது சலிக்கவில்லை. அவளுடைய அழுகைக்கான காரணத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    ஒரு புரோகிதன் இன்னொரு புரோகிதனின் மகளை மணக்கலாம். ஒரு நாவிதன் இன்னொரு நாவிதனின் மகளை மணக்கலாம். ஒரு வைசியன் இன்னொரு வைசியனின் மகளை மணக்கலாம். ஆனால் ஒரு மென்பொருள் வல்லுநரான அவன், இன்னொரு மென்பொருள் வல்லுநரின் மகளான அவளை விரும்பியது தவறாம். ஏனென்றால் அவன் சத்ரியன் மகனாம். இன்னும் சொல்லப்போனால், அவளே கூட ஒரு மென்பொருள் வல்லுநர் தான். இந்தப் பாழாய்ப்போன சமூகத்தின்  தர்க்கம் எங்கோ இடிக்கத்தான் செய்கிறது.

    திருப்பதி, மதுரை, வேளாங்கண்ணி போன்ற வெளியூர்களுக்கும், உள்ளூரிலேயே இருக்கும் மயிலாப்பூர், திருவல்லிகேணி போன்ற இடங்களுக்கும் அவர்கள் சென்று வந்ததனால், கடவுளர் படங்களால் பூஜையறை (பூஜை அலமாரி என்று தான் சொல்லவேண்டும்) நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பொம்மை, சிலையென்று வேறு வாங்கியதில், கிட்டத்தட்ட நவராத்திரி கொலு வைக்குமளவிற்கு அவை பெருகிவிட்டதால் இட நெருக்கடியின் காரணமாகப் பரணுக்கு புலம்பெயர்ந்துவிட்டன.

    அந்த இளம் தம்பதியினர் உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களுக்குச் சென்றதாகத் தெரியவில்லை.

    இரவு நேரங்களில் பலமுறை தாம்பரத்திலிருக்கும் அவளது வீட்டிற்கு மிக அருகே சென்று காருக்குள் இருந்தபடியே, உயர்த்தப்பட்ட ஜன்னலினூடே அவளது தாயைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பற்றி இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் பேச்சுகளுக்கிடையே அவளுடைய அழுகைச் சத்தம் அடிக்கடி எட்டிப் பார்க்கும்.

    ஒருநாள் கார்த்திக்கின் தாயும் தந்தையும் வந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் இவர்களுக்கு அப்படியொரு திகைப்பு; அப்படியொரு களிப்பு. அவள் விதம்விதமாய்ச் சமைத்தாள். இருவரும் அவர்களோடு சிரித்தார்கள்; மகிழ்ச்சியில் திளைத்தார்கள்; கொண்டாடினார்கள்.

    ஆனாலும், அவளின் அழுகை ஓய்ந்தபாடில்லை. அழும் நேரம் மட்டும் மாறியிருந்தது. அவன் அலுவலகத்திற்குச் சென்றவுடன் தனியாய் இருக்கும்போது மட்டும் குமுறினாள். அவனாவது நிம்மதியாய் இருக்கட்டுமே என்று நினைத்திருக்கலாம். பூஜை அலமாரியின் முன்பு நின்று மேலே (முதலில்) குறிப்பிட்ட ஊர்களின் பெயர்களைச் சொல்லி அங்கு வருவதாய் வேண்டி வேண்டி அழுதாள்.

    யாரேனும் வந்தால் அதீத மகிழ்ச்சியும், யாருமில்லாத நேரத்தில் அதீத துக்கமும் என்று அவளுடைய மனநிலை மாறி மாறிச் சுழன்று கொண்டே இருந்தது.

    கடைசியில் வந்தே விட்டார்கள் – அவளின் பெற்றோர்கள். அவள் அழுதாள். அவர்கள் தேற்றினார்கள். அவன் ஆனந்தத்திலும் அமைதியாய் கைகட்டி நின்றான். அவள் மீண்டும் அழுதாள். அவளது இத்தனை நாள் சிரிப்பின் ஆழத்தில் புதைந்து கிடந்தது என்னவோ துக்கத்தின் ஈரம் மட்டுமே. ஆனால், அன்றைய நாள் அழுகையின் ஆழத்தில் ஆனந்தமே புன்னகைத்தது. அவளது ஒவ்வொரு அழுகையின்போதும் துளித் துளியாய் வெளியேறிய துக்கத்தின் ஈரம், அன்று முழுவதுமாய் வெளியேறி விட்டது போலும்.

    கடந்த ஒரு வருடத்தில் பொருட்களின் எண்ணிக்கையும் மனிதர்களின் வரவும் அதிகரித்து விட்டிருந்தபடியால், மனதிற்கு நிறைய பிடித்திருந்தாலும் அந்த வீடு அவர்களுக்குப்  போதுமானதாய் இல்லை. அதனால் வேளச்சேரியில் அதை விட சற்றுப் பெரிய அளவிலான அடுக்கு வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு செல்வதற்காகத்தான் அன்றைக்கு அவ்வளவு பரபரப்பாகத் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

    நள்ளிரவு வரை பொருட்களை வகைப்படுத்தி வைத்துவிட்டு அவளின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.

    அடுத்தநாள் இருவரும் வந்தார்கள், கூடவே அவளுடைய தந்தை, தம்பி மற்றும் அவனுடைய நண்பனும் வந்திருந்தார்கள். அவர்கள் வந்த சில நிமிடங்களிலேயே ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ வந்து எல்லா பொருட்களையும் அட்டைப்பெட்டிகளுக்குள் அடுக்கி வைத்து, அதன் மேல் வகை விவரத்துணுக்குகளை ஒட்டி, ஒவ்வொன்றாய் வெளியே எடுத்துக்கொண்டு போனார்கள். நம்பவே மாட்டீர்கள், ஐம்பது நிமிடங்களில் அனைத்தையும் நேர்த்தியாக முடித்து வீட்டைக் காலி செய்துவிட்டார்கள்.

    “என்ன இவ்ளோ சீக்கிரம் பேக் பண்ணி கொண்டுபோயிட்டாங்க?” என்று வியந்தாள் திவ்யா.

    “அதுக்குத்தான் ப்ரோபெஷனல்ஸ் வேணுங்கறது. சரி, மத்தவங்கல்லாம் போகட்டும். நாம கடைசியா ஒருமுறை செக் பண்ணிட்டு பைக்ல  போய்டலாம்” என்று கூறி மற்ற அனைவரையும் அனுப்பிவைத்துவிட்டு, இருவரும் சோகம் ததும்பிய முகத்தோடு வீட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

    நான் மேலே குறிப்பிட்டிருந்த குப்பைப் பட்டியலில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை இன்னும் இங்கேயும் அங்கேயும் இறைந்து கிடந்தன. வீட்டைக் காலி செய்த பின்பு எக்காரணத்தைக் கொண்டும் வீட்டைப் பெருக்கவோ, கழுவித் துடைக்கவோ கூடாது என்று கண்டிப்பான உத்தரவைப் போட்டிருந்தார் வீட்டு உரிமையாளர்.

    “ரொம்ப ராசியான வீடு கார்த்திக். போறதுக்கே மனசே இல்ல. எவ்ளோ நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கு இந்த வீட்ல…” என்றாள் திவ்யா.

    “என்ன பண்றது. யாராவது வந்தா தங்கக் கூட இடமில்லையே.”

    “இந்த ஒரு வருஷத்துல நாம நெனெச்செ பாக்காதது எல்லாம் நடந்துடுச்சி கார்த்திக். நம்ம மேரேஜ். நீ செத்தாலும் உன்ன பாக்க வரமாட்டேன்னு சொன்ன என் அப்பா இன்னைக்கு நாம வீடு காலி பண்றதுக்கு வந்து ஹெல்ப் பண்ணிட்டு இருக்கார். நாம இந்த வீட்டுக்கு வந்தப்ப எவ்ளோ காலியா இருந்திச்சி. இன்னைக்கு ஒரு டெம்போவே பத்தாத அளவுக்கு நிரம்பிடிச்சி. இவ்ளோவும் யாரோட ஹெல்பும் இல்லாம பண்ணியிருக்கோம். உன்னோட ஹார்டு வொர்க் கார்த்திக். எவ்ளோ பெயின். எவ்ளோ சந்தோசம்.”

    “லைபே அப்படித்தான் திவி. சந்தோஷம், துக்கம், அப்ஸ் அண்ட் டவுன்ஸ், நல்லது, கெட்டதுனு சுத்திட்டே தான் இருக்கும். இப்படி மாறி மாறி வந்து நான் இருக்கேன்னு உணரவெக்கும். இதோ இந்த ஃபேன்-லர்ந்து வர்ற காத்து வெதருக்கு ஏத்த மாதிரி சூடாவும், சில்லுனும் மாறி மாறி வீசி ஃபேன் இருக்கறத உணர்த்தறது மாதிரி.”

    “ப்பா… தத்துவம் பா. ரொம்ப புக்ஸ் படிக்காதன்னு சொன்னா கேக்கறியா? இன்னைக்கு டெம்போல பாதி எடத்த உன் புக்ஸ்தான் அடைச்சிருக்கு. ” என்று கூறிவிட்டு ஹாலுக்குள் நுழைந்தவள் சடாரெனத் திரும்பி, “கார்த்திக், ஃபேனை மறந்துட்டோமே?” என்று கேட்டாள்.

    “ப்ரீயா விடு திவி. ஒரு வருஷம் இருந்திருக்கோம். ஃபேன், லைட்டெல்லாம் இங்கயே விட்டுடலாம். ஓனர் வேற தங்கமான மனுஷன்.” என்றான்.

    “போப்பா. நாம மொத மொதல்ல வாங்கினதே இந்த ஃபேன் தான். அத பிக்ஸ் பண்ண ஸ்டூல் கூட கிடையாது அன்னைக்கி. இப்போ பாரு. எல்லாம் இந்த பேன் வந்த ராசி. அதுக்கு பதிலா ஓனருக்கு எதாச்சும் காஸ்ட்லியா கிப்ட் வாங்கிக் கொடுத்திடலாம். ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள்.

    “ஒகே ஒகே. சென்டி போடாத. கழட்டி எடுத்திட்டுப் போய்டலாம்” என்று கூறிவிட்டு சுவிட்சை தட்டினான்.

    கார்த்திக் மின்னோட்டத்தை நிறுத்திய அடுத்த நொடி –

    அவளின் சுக துக்கங்களில் அவளுக்கே தெரியாமல் பங்கெடுத்து, ஒவ்வொருமுறை அவள் அழுதபோதும் அவளது கண்ணீரின் ஈரம் தாங்கிய அந்த அறையின் காற்றை, சுழற்றி சுழற்றி வேகமூட்டி புறந்தள்ளி, அவளது தாயிடம் கொண்டுபோய் சேர்க்கச் சிறு உதவிபுரிந்த என்னை இங்கேயே விட்டுவிட்டு போய்விடுவாளோ?‘ என்று அதுவரை எண்ணி ஏங்கிச் சுழன்றுகொண்டு இருந்த நான், குதூகலத்துடன் என்னுடைய சுழற்சியை படிப்படியாகக்  குறைத்துக் கொண்டு, அவர்களோடு புறப்படத் தயாரானேன்.

    Share
  • அமைதிகளின் சத்தங்கள்..

    மாதவன் இளங்கோ

     

    இரைச்சல் விழுங்கிய

    இசையின் அமைதி..

    பெரும்கூட்டத்தில் சிக்குண்ட

    தனிமைவிரும்பியின் அமைதி..

    மூடத்தனங்களுக்கு இடையே

    மேதைமையின் அமைதி.. (more…)

    Share
  • மர்ம பாலம்

     

    மாதவன் இளங்கோ

     

    அது ஒரு நீண்ட பாலம்.

    அவனொரு விந்தை மனிதன்.

    பாலத்தைக் கடக்க

    அடியெடுத்து வைத்த ஒருவனுக்காய்

    மகிழ்வுற்றான் –

    வாழ்த்தினான்.

    பாலத்தைக் கடந்து

    விலகிப் போன ஒருவனுக்காய்

    துயருற்றான் –

    பிரார்த்தித்தான்.

    பாலத்தின் நடுவே

    கடக்கவியலாமல் அயர்வுற்று

    விடைபெற்றுக்கொண்ட வேறொருவனுக்காய்

    மீளாத்துயருற்றான்.

    பிரார்த்தித்தான்.

    அவனும் அதே பாலத்தின்

    ஏதோ ஒரு புள்ளியில்

    நின்றுகொண்டு

    ‘தெளிவாகத் தெரியுமந்த’

    பாலத்தின் மறுமுனைக்கும்

    தனக்குமான தூரத்திற்கு

    எதிர்காலம் எனப்பெயர் வைத்து,

    அது வருவதற்குள் முடித்துவிட

    ஒரு நீண்ட பட்டியலொன்றை

    தயாரித்தான்.

    எண்ணற்ற கனவுகளும்

    எண்ணற்ற கவலைகளும்

    எண்ணற்ற எதிர்பார்ப்புகளும்

    எண்ணற்ற ஏக்கங்களும்

    எண்ணற்ற திட்டங்களும்

    எண்ணற்ற குறிக்கோள்களும்

    நிறைந்த பட்டியல் அது.

    பாரம் நிறைந்த அந்தப் பட்டியலை

    தன் தலையில் சுமந்துகொண்டு

    பாலத்தின் மறுமுனை நோக்கிய

    தன்னுடைய பயணத்திற்கு

    வாழ்க்கை என்றொரு பெயர் வைத்தான்.

    எண்ணற்ற உறவுகளும்

    எண்ணற்ற துரோகங்களும்

    எண்ணற்ற மகிழ்ச்சிகளும்

    எண்ணற்ற துயரங்களும்

    எண்ணற்ற சாதனைகளும்

    எண்ணற்ற சோதனைகளும்

    எண்ணற்ற அனுபவங்களும்

    எண்ணற்ற பாடங்களும்

    நிறைந்த பயணம் அது.

    பயணத்தின் நடுவே

    பட்டியல் நீண்டுகொண்டே போனது.

    பயணத்தின் சுமை

    கூடிக்கொண்டே போனது.

    நடையின் வேகம் குறைந்து

    மெதுவாக பயணித்து

    முன்சென்று கொண்டிருந்தான்

    அந்த விந்தை மனிதன்!

    நடந்து நடந்து அவனுடல்

    ஓய்ந்துகொண்டே போக

    அவன் உருவாக்கிய எதிர்காலம்

    தேய்ந்துகொண்டே போனது.

    பாலத்தின் மறுமுனையும் வந்தது

    அங்கே மலைபோல் குவிந்து கிடந்த

    பட்டியல்களின் மேல்

    எடை பன்மடங்கு கூடியிருந்த

    தன பட்டியலையும்

    இறக்கி வைத்துவிட்டு,

    திரும்பிப் பார்த்தான்.

    அந்த மர்ம பாலம் –

    காணாமல் போயிருந்தது.

    அவனைப் பார்த்து

    மர்மமாய் புன்னகைத்தது –

    வெற்றிடம்!

    Share
  • பனிப்போர்வை

     

    மாதவன் இளங்கோ

     

    சென்னை மாநகரில் அன்று கடும் பனிப்பொழிவு.

    நான் சென்னைக்குச் சென்ற ஒரு வாரத்திற்கு முன்பு ஹாலந்தில் இருந்தபோது மட்டும் இந்தச் செய்தி என்னை வந்தடைந்திருந்தால், எள்ளி நகையாடியிருப்பேன். “சென்னையில் பனிப்பொழிவா? இதென்ன ‘காதை கிழிக்கும் அமைதி’, ‘ஊரறிந்த ரகசியம்’, ‘தெளிவான குழப்பம்’ போன்றதொரு முரண்தொடையாக இருக்கிறதே?” என்று வினவி விட்டு வந்த செய்தியை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்திருப்பேன்.

    நான் பிறந்தது என்னவோ வேலூர் மாவட்டம் ஏலகிரிமலைக்கு அருகே உள்ள ஒரு கிராமமாக இருந்தாலும், ஐரோப்பாவிற்குக் குடியேறி பன்னிரண்டு வருடங்களும், ஹாலந்து நாட்டில் குடியுரிமை பெற்று நான்கு வருடங்களும் ஆகிவிட்டது. ஐரோப்பாவுக்கு வந்த இந்தப் பன்னிரண்டு வருடங்களில் எத்தனை பனிப்பொழிவுகளைச் சந்தித்திருப்பேன்! இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சென்னையில் நிகழ்ந்த பனிப்பொழிவை என்னால் நான் மரிக்கும் வரை மறக்கவே இயலாது. நான் மட்டும் அல்ல; உங்களாலும் அதை மறக்க முடியாது என்பதை நான் அறிவேன். இதுபோன்ற அதிசயங்கள் எல்லாம் மீண்டும் நம்மூரில் நிகழுமா என்று தெரியவில்லை. எனவேதான் அதை உடனே எழுதிப்  பதிவு செய்ய வேண்டுமென்று தோன்றியது.

    இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில், இங்கே ஆம்ஸ்டர்டாமில் பனி பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும், முதன்முறையாக பனிப்பொழிவை எதிர்கொண்ட சென்னையில் நான் கண்ட குழப்பங்கள், ஆர்பாட்டங்கள், பாதிப்புகள், இழப்புகள், துயரங்கள் இவை எதுவுமின்றி சலனமில்லாமல் பொழிந்து கொண்டிருக்கிறது.

    என் மகள்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தான் இங்கு கோடை விடுமுறை என்றாலும் நாங்கள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விடுமுறை எடுத்து இந்தியாவிற்கு செல்வதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

    இதற்குப் பல காரணங்கள்.

    சென்னையில் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கோடைகாலமே நிலவுகிறது. ஜூலை மாதம் வந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மேலும், ஐரோப்பாவில் கடுங்குளிர் மாதங்களான டிசம்பர் மற்றும் ஜனவரியில், அங்கு வாழ்வது என்பதே ஒரு பெரிய சாபம்.

    அது என்ன சாபம் என்றுதானே கேட்கிறீர்கள்?

    குளிர்காலம் வந்துவிட்டால் காலை பத்து அல்லது பதினொரு மணிக்கு உதித்து மாலை மூன்று மணிக்கே ஓய்ந்து, தினமும் சராசரியாக நான்கு அல்லது ஐந்து மணிநேரம் தான் ‘டைம் ரெஜிஸ்டர்‘ செய்கிறான் இந்தக் கதிரவன் என்கிற ஆசாமி. அவன் நிச்சயம் என் மேலதிகாரி காரல் டில்கினை சந்தித்தே ஆக வேண்டும். இடைப்பட்ட நேரத்திலும் மங்கலாக ஒளி வீசுவதோடு நிறுத்திக்கொண்டு, தனக்கு வெப்பம் எனும் குணாதிசயம் இருப்பதையே மறந்து போய்விடுகிறான். என் மனைவி இந்த நாட்டு சூரியனுக்கு வைத்திருக்கும் பெயர் ‘சரியான ட்யூப்லைட்!’. பொருத்தமான ஒன்றுதான்! வடக்கு பிராந்தியங்களில் இன்னமும் மோசம் – தலையே காட்ட மாட்டான். இதற்காகவே வைட்டமின் ‘டி’ பெறுவதற்காக சூரியப் படுக்கைகளை நாடிச்சென்று ஐம்பது, அறுபது ஈரோக்களை வீச வேண்டி இருக்கிறது. சென்னையின் வெயிலையும், ஆம்ஸ்டர்டாமின் குளிரையும் பண்டமாற்றுமுறை செய்ய முடிந்தால்  எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலமுறை நான் நினைத்ததுண்டு.

    இதில் அவ்வப்போது பனிபொழிவு வேறு. நாடு முழுவதும் சுற்றினாலும் இங்கெல்லாம்  சேறு என்பதை பார்ப்பது அரிது. மண்ணே தெரியாமல் நாடு நகரம் முழுதும் ரப்பர் கலந்த தார் பூசி மொழுகி இருக்கிறார்களே! எங்கிருந்து சேறு உண்டாகும்? ஆனால் இந்தப் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டால் மட்டும் நடைபாதைகளில் உண்டாகும் பனிச்சகதியை பார்க்கவேண்டுமே! சில நேரங்களில் அது மிகவும் ஆபத்தானதும் கூட. பனிக்காலங்களில் மருத்துவமனைகளின் எலும்புமுறிவு பிரிவில் மட்டும் கூட்டம் நிரம்பி வழியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். வேடிக்கை என்னவென்றால் விழுபவர்களில் பெரும்பாலும் ‘ஸ்னோபூட்’ அணிந்தவர்களாக இருப்பார்கள். சாதாரண காலணிகள் அணிந்தவர்கள் சாவகாசமாக நடந்து செல்வார்கள். நானும் என் மகள்களும் ‘வழுக்கி விழுந்து விடாமல் கவனமாக எப்படி நடக்கவேண்டும்?’ என்பதை அவர்கள் அடிக்கடிப் பார்க்கும் ‘பிங்கு’ சிறுவர் நிகழ்ச்சியின் பென்குவின்-களிடமிருந்து கற்றுத் தேர்ந்திருக்கிறோம். பனிக்காலங்களில் கிட்டத்தட்ட சாலைகளில் பென்குவின்-களைப் போலத்தான் நடந்து செல்வோம். இயற்கையோடு தன் தொடர்பையே அறுத்துக்கொண்டுவிட்ட மனிதர்களிடமிருந்து இனி எனக்கு கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை; விலங்குகளிடம் நிறைய இருக்கிறது.

    இன்னொரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். குளிர்காலத்தில் ஹீட்டிங்கிற்கு ஆகும் செலவிற்கு இரண்டு முறை இந்தியா சென்று திரும்பலாம். இதுபோன்ற பல பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு வருவோம். மாறாக, தமிழகத்தில் அவ்விரு மாதங்களிலும் ஐரோப்பிய கோடைகாலத்தை போன்று அருமையான தட்பவெப்பம் நிலவும். என் குழந்தைகளுக்கு நிறைய இடங்களைச் சுற்றிக் காண்பிக்கலாம். பொங்கல் பண்டிகை வேறு ஜனவரியில் வருவதால் அவர்களை என் கிராமத்துக்கு அழைத்துச் சென்று நம் உறவினர்களிடம் பழக வைக்கலாம், நமது கலாச்சாரத்தையும் (அப்படியொன்று இன்னமும் உயிரோடு இருந்தால்) அறிந்து கொள்வார்கள். இவையெல்லாவற்றிற்கும் மேலாக நமது அடையாளத்தை அவர்கள் தொலைக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    ஆனால் என்னதான் ஆயிற்று இந்தமுறை தமிழகத்திற்கு?

    நாங்கள் ஆம்ஸ்டர்டாமிலிருந்து சென்னை வந்திறங்கிய  நாளிலிருந்தே பருவநிலை மாற்றத்தை என்னால் நன்றாக உணர முடிந்தது. வழக்கமாக நான் விமானத்திலிருந்து வெளியே வந்த அடுத்தகணம் வெப்பநிலை மாற்றம் காரணமாக என் முகக்கண்ணாடியில் நீராவி படியும். அன்று அவ்வாறு நடக்கவே இல்லை. அதுமட்டுமல்லாமல் வேறு ஏதோவொரு இனம்புரியாத மாற்றத்தையும் என்னால் உணர முடிந்தது.

    என் மனைவி ஆனந்தியிடம் அதைப்பற்றி கூறியபோது, “அதெல்லாம் ஒண்ணுமில்ல சந்தோஷ். லாஸ்ட் இயர் கூட கொஞ்சம் கோல்டா தான் இருந்தது.” என்றாள்.  ‘எனக்குத் தெரியாதா என் தாயகத்தைப் பற்றி?’ என்று நினைத்துக் கொண்டேன்.

    தாயின் கருவறையிலிருந்து வெளியேறிப் பிறக்கும் குழந்தை, இந்தப் பிரபஞ்சம் என்கிற  தாயின் மாபெரும் கருவறையின் வேரிடங்களுக்கு நீந்திச் செல்வதற்கான சுதந்திரத்தைப் பெறுகிறது என்பதை நம்புபவன்; உணர்ந்தவன் நான்.

    பிறக்கும் குழந்தையின் உணர்வை, ஒவ்வொருமுறையும் சென்னையில் தரையிறங்கிய விமானத்திலிருந்து வெளியே வரும்போதும் பெறுபவன் நான். விமானத்தை ‘பேய்ப்பறவை’ என்று தன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் என்னுடைய அபிமான எழுத்தாளர் ஒருவர். அது பேய்ப்பறவை மட்டும் அல்ல; தாய்ப்பறவையும் கூட. மம்மாலியா இனத்தை சேர்ந்த ஒரே பறவை என்றும் வைத்துக்கொள்ளலாம். பத்து மணிநேர பயணத்தில் தன் வயிற்றில் பயணிகள் அனைவரையும் சுமந்து, இறுதியில் பிரசவித்துவிட்டு போவாள். வெளியே வந்து தாயக மண்ணில் கால்வைக்கும் போது, நான் ஏற்கனவே கூறியது போன்றே இன்னொரு தாயின் கருவறைக்குள் நுழைவதாய் உணர்வேன். ‘எனக்குத் தெரியாதா அதன் வெம்மை?’

    இதற்கு முன்பு சென்னையில் சுனாமி வருவதற்கு முந்தைய தினம்  இதுபோன்றதொரு மாற்றத்தை உணர்ந்திருக்கிறேன். அது நடந்ததுகூட  ஒரு டிசம்பர் மாதம்தான் என்று நினைக்கிறேன். திடீரென்று சுனாமி பற்றிய எண்ணங்களும், மனிதர்களின் அவலக்குரல்களும் கேட்பது போலத் தோன்றியது. உடனே என் தங்கையிடமும், சித்தியிடமும் அதுபற்றி கூறி, ‘சுனாமி என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?’ என்று விளக்கமளித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் காலை தொலைக்காட்சியில் வந்த சுனாமி பற்றிய செய்தியைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள் என் தங்கையும், சித்தியும்.

    இதுபோன்று நமக்கு அவ்வப்போது தோன்றுவதையும், உணர்வதையும் கூறினாலே நம்மை  கேலிசெய்து கும்மியடித்துவிட்டுப்  போகிறார்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள். எல்லாவற்றிற்கும் அறிவியல் விளக்கம் கேட்கிறார்கள். பிறந்த குழந்தை அறிவியல் விளக்கம் கேட்டுவிட்டா தாயின் மார்பில் பால் குடிக்கிறது? இதற்காகவே நான் உணர்வதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை நிறுத்திவிட்டேன். இத்தகைய ‘பேரறிவுவாதிகளிடம்’ (இதற்கு அவர்களே வைத்திருக்கும் பதத்தை உபயோகித்தால் வீண் விமர்சனங்களுக்கு ஆளாகி, சிலபல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் இந்தப் பதம்).  நாம் உணர்வதை எடுத்துச் சொல்லி நாமும் முட்டாள் என்று பெயர் எடுத்து, அவர்களையும் அறிவாளிகளாக ஆக்குவதைவிட, எனக்குள்ளே அமைதியாக அவற்றை ஆய்ந்து, எனக்காகவே அறிவாளியாக இருப்பது என்று நான் முடிவு செய்து நீண்ட நாட்களாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள  எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியாது; சிலவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும்; உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும் என்பதை முழுமையாக நம்புபவன் நான். இங்கு ‘முழுமையாக’ என்று எழுதியிருந்ததை அழித்துவிட்டேன். அதென்ன முழுமையாக நம்புவது? நம்புகிறேன்!

    சென்னை வந்திறங்கிய முதல் நாள், “வானம் மேகமூட்டமாக இருக்கிறது, மழை பொழிய வாய்ப்பிருக்கிறது.” என்றார் ரமணன்.

    இரண்டாம் நாள், “பருவநிலை மாற்றம் நம்ப முடியாததாக உள்ளது. வடமாநிலங்களில் நிலவும் கடுங்குளிர் தமிழகத்திலும் நிலவ வாய்ப்பிருக்கிறது.” என்றார். அன்று இரவு, பதினொரு டிகிரி செல்சியசை தொட்டிருந்தது சென்னை.

    விருகம்பாக்கம் ‘ஷ்யாமளா கார்டன்ஸ்‘ குடியிருப்பிலுள்ள என் தங்கை வீட்டில் தங்கியிருந்த நான், “எல்லோரிடமும் தெர்மல் வேர் இருக்கிறதா?” என்றேன்.

    என் மனைவி சிரித்துவிட்டு, “அதெல்லாம் ஹாலன்ட்லையே நாம யூஸ் பண்ண மாட்டோம். இங்க எதுக்கு?” என்றாள்.

    என் தங்கை என்னை சிறிது நேரம் வெறித்துப் பார்த்துவிட்டு, “தெர்மல் வேர் இல்லை அண்ணா. வாங்கலாமா?” என்று கேட்டாள். சுனாமி தினத்தன்று என்னோடு இருந்தவள் அன்றோ? என்னை உணர்ந்தவள், எனக்கு மதிப்பளித்தாள்.

    “வாங்குவது நலம்” என்றேன்.

    பாரிஸ் கார்னர் பூக்கடை அருகேயுள்ள யூனுஸ் சேத் கடைதான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் நாடும் கடை. அங்கு சென்று காரை நிரப்பிக் கொண்டு வந்தோம்.

    அடுத்த இரு தினங்களில் சுழிநிலையை நெருங்கிக்கொண்டிருந்தது சென்னை. “வீட்டில் ஹீட்டர் இருக்கிறதா?” என்று எதேச்சையாகக் கேட்டேன். உடனே என் மைத்துனரை கடைக்கு விரட்டினாள் என் தங்கை.

    வெள்ளைச் சலவைக்கல்லாலான தரையில் யாராலும் வெறும் கால்களால் நடக்க முடியவில்லை. புத்தம்புது செருப்புகளை  வாங்கி வந்து, எல்லோரும் காலுறையும், செருப்பும் அணிந்துகொண்டு நடப்பதைப்  பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.

    பரணுக்கு என்றோ புலம்பெயர்ந்திருந்த பழைய போர்வைகள், கம்பளிகள் எல்லாம் எடுத்துவந்து தரையில் விரித்துப் போட்டாள் என் தங்கை.

    சென்னை மாநகரமே வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தது.

    “தமிழகத்தில் கடுங்குளிர் நிலவுவதால் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை.” என்கிற செய்தி எல்லா தொலைக்காட்சிச் சேனல்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது.

    “கடுங்குளிர் வானிலை நிலவும் போது என்ன மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும், என்னென்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்?” என்பது போன்ற கேள்விகளுடன் பல பேட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள் நிருபர்கள்.

    அதனூடே சமையற்கட்டு உரையாடல்களும் என் காதில் விழுந்து கொண்டிருந்தன.

    “பால் கெடவே இல்லையே?” என்றார் என் சித்தி.

    “பழங்கள் கூட அழுகவே இல்லை. இன்னும் ப்ரெஷ்ஷாகவே இருக்கிறது” – இது என் தங்கை.

    “ஹாலந்தில் இப்படித்தான். குளிர்காலங்களில் பிரிட்ஜை உபயோகிக்கவே மாட்டோம். ஒரே ஒரு அறையின் ஜன்னலை மட்டும் லேசாக திறந்து வைத்து எல்லா பொருட்களையும் அங்கே வைத்துவிடுவோம். நேச்சுரல் பிரிட்ஜ்!” என்று பெருமையாக அயல்நாட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தாள் என் மனையாள்.

    அலைந்து திரிந்து இரண்டு வெவ்வேறு வகையான சூடேற்றும் சாதனங்களை எப்படியோ வாங்கி வந்துவிட்டார் எனது மைத்துனர்.

    அன்றிரவே சுழிநிலைக்கும் கீழே சென்றது சென்னை.

    இரவு யாருக்கும் தூக்கம் வரவில்லை.

    மறுநாள் காலை டிரைவர் வேலுவுடன் காரை எடுத்துக்கொண்டு குளிர்காலச் சென்னை எப்படி இருக்கிறது என்பதைக் காண நகர்வலம் சென்றேன். ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் இப்படிச் சுற்றுவது வழக்கம். அன்றைக்கு இருந்த குளிர் காரணமாக நகர்வல நாட்டம் மும்மடங்கு அதிகரித்திருந்தது.

    யூனுஸ் சேத் ஒரே இரவிலேயே சென்னையில் பல கிளைகளை தொடங்கிவிட்டாரா என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு ஆங்காகே கம்பளிச்சட்டைகள், பாய்கள், பலவித வெப்ப ஆடைகளை குளிரில் நடுங்கியபடி கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தனர் புத்தம்புது நடமாடும் ‘யூனுஸ் சேத்’ கடை முதலாளிகள்.

    அந்தக் குளிரிலும் பாண்டிபஜார் துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குச் சென்று குங்குமம் வைக்கும் வரை அல்லது அடுத்த பொங்கல், தீபாவளி வரும்வரை விட்டுவைக்குமா குளிர்?  பாவம். புத்தம்புது கம்பளிச்சட்டைகளையும், மேலாடைகளையும், தொப்பிகளையும்,  கையுறைகளையும், காலணிகளையும் வாங்கிய அடுத்தகணமே அணிந்து கொண்டும்; இன்னும் வாங்காதவர்கள் குளிர் தாங்கமுடியாமல், நீர்மத்தில் ஒழுங்கற்று இங்குமங்கும் ஓடும் துகள்களாய் மாறி இருந்தார்கள்.

    மேற்குறிப்பிட்ட அத்தனை சமாச்சாரங்களையும் அணிந்தவாறு, வாயிலும் மூக்கிலும் புகைவிட்டுக்கொண்டு, பற்கள் தட்டச்சு அடித்தபடி, ஆளுயர மேலுறைக்குள் புதைந்தபடி செல்லும் மனிதர்களை அன்றாடம் ஐரோப்பாவில் கண்டு பழகிய எனக்கு, நம் சென்னையில் இப்படிப்பட்ட காட்சிகளைக் காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது. கையுறைகளை கழற்றிவிட்டு, என்னையும் மறந்து எனது கைபேசியைக் கொண்டு புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டேன்.

    அப்போது திடீரென குளிர்காற்று முகத்தில் அறைந்து முகத்தின் மேலடுக்கு உறைந்தது. சுழிநிலைக்கு கீழே செல்வது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. முறையான உடையணிந்து இருந்தால் ஓரளவு தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பத்து-பதினைந்து  டிகிரி இருந்தாலும் கூட, காற்று அடித்தால் அவ்வளவுதான். அன்று அதுவும் நடந்துகொண்டிருந்தது. வெப்பத்தை மட்டுமே காலங்காலமாகத் தாங்கிக் கொண்டிருந்த அந்த சென்னைக் காற்று ஒரு மாறுதலுக்காக குளிரைத் தாங்கும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அனைவர் மீதும் மோதி மோதி உறையவைத்து விளையாடிக்கொண்டிருந்தது.

    பாண்டிபஜார் பூக்கடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த மாலைகளில் உறைந்து போயிருந்த துளிகளை படம்பிடித்துக்கொண்டிருந்த என் காதில் அந்த ஆட்டோ பேர உரையாடல் காதில் விழுந்து என் கவனத்தை திசை திருப்பியது.

    “ரொம்ப குளிருப்பா. சீக்கிரம் போகணும். உன்கிட்ட பேரம் பேச நேரமில்லை. முடிவா எவ்ளோ சொல்லு.”

    “சார். குளிர்லையே ஆட்டோ ஓட்டுறோம். பாத்து குடு சார்.”

    சாக்கு போக்கு சொல்வதற்கு இந்த ஆட்டோக்காரர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். விலை உயர்வு செய்வதில் மத்திய அரசின் பெட்ரோலியத் துறையையே விஞ்சி விடுவார்கள் இவர்கள். அவர்களாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாகத்தான் பெட்ரோல் விலையை உயர்த்துவார்கள். இவர்கள் கூறும் காரணமெல்லாமே வித்தியாசமாக இருக்கும். மழைபெய்தால், வெயிலடித்தால், புயலடித்தால், பொங்கல் வந்தால், தீபாவளி வந்தால், ஆடி மாதம் என்பதால் – இப்படி எல்லாவற்றிற்கும். இந்தப் பட்டியலில் இப்போது குளிரும் சேர்ந்துவிட்டது. சில சமயங்களில் டீசல் வண்டி வைத்திருப்பவர்கள் கூட பெட்ரோல் விலை உயர்ந்தால் சவாரி விலையை உயர்த்துவார்கள்.

    இப்படித்தான் ஒருமுறை ஒரு ஆட்டோக்காரரிடம், “ராமசாமி சாலை செல்லவேண்டும். நூறு ரூபாய் தருகிறேன்.” என்று கூறினேன். அதுவே அங்கு செல்வதற்கு அதிகம்.

    “அதெல்லாம் ஒன் வே பண்ணிட்டாங்க சார். சுத்திட்டு போனும். அம்பது ரூபா போட்டுக் குடு சார் போலாம்.” என்றார்.

    கடைசியில் 125 ரூபாய்க்கு பேசிச் சென்றேன். சுற்றிக்கொண்டு செல்லவேண்டும் என்றவர் அந்த ஒருவழிச் சாலையிலேயே போக ஆரம்பித்தார்.

    “என்னப்பா? சுத்திட்டு போகணும்னு அதிகமா வாங்கிட்டு, ஒன்வேலயே போறியே?” என்று கோபமாகக் கேட்டேன்.

    “சார். மாட்டினா மாமாக்கு தர்றதுக்குத்தான் சார் காசு” என்று அவர் கூறியதைக் கேட்டு விக்கித்துப் போனேன். இப்படிப்பட்டவர்கள் குளிருக்குக் காசு கேட்காமல் இருப்பார்களா? ஆட்டோவில் செல்லும் போது இலவச குளிரூட்டப்பட்ட காற்றுக்கு பணம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ஆட்டோக்காரர்களை விடுங்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லோருமே வியாபாரிகளாகத்தான்    பிறக்கிறார்கள்; சென்ற வருடம் பிறந்து ஆண்டு நிறைவைக் கண்டிராத குழந்தைகூட வியாபாரம் பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று நினைத்துக்கொண்டே காரையும் வேலுவையும் தேடியவாறு நடக்கும்போது, என் எதிரே திடீரென வந்து குதித்துக் கத்திய அந்த மனிதரைக் கண்டவுடன் மிரண்டு போய்விட்டேன். அழுக்குப் படிந்த முகத்துடனும், நீண்ட தாடியுடனும், தீர்க்கமான கண்களுடனும்,  அந்தக் குளிரிலும் சட்டைகூட போடாமல், “மாயன் சரியாத்தான் சொன்னான். மாயன் சரியாத்தான் சொன்னான்!” என்று கத்தும் இந்த மனிதர் யார்?

    இதுபோன்ற மனிதர்களை திருவண்ணாமலையில் அதிகம் பார்த்திருக்கிறேன். சென்னையில் இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? இவர் சாமியாரா? பித்துப் பிடித்தவரா? இல்லை பிச்சைக்காரரா? என்று யோசித்துக்கொண்டே ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன்.

    “ஹா ஹா ஹா!” என்று சிரித்துவிட்டு, “என்னை என்ன பிச்சைகாரன்னு நெனச்சியா? நான் ராசன் டா! மகராசன்! நீங்கல்லாம் தாண்டா பிச்சைக்காரனுங்க. சொல்றேன் கேட்டுக்கோ! மாயனுங்க கணக்கு தான் சரி! உங்க கணக்குதான்டா தப்பு! மக்கு பசங்களா! ரெண்டாயிரத்து பன்னெண்டு இல்லைடா! ரெண்டாயிரத்து பதினாறுல இருக்குடா உங்களுக்கு கச்சேரி! இன்னும் ஒரு வருஷம் தான். ஒரே ஒரு வருஷந்தான்! அப்புறம் இருக்கு உங்களுக்கு பிரச்சினை. அது என்ன பிரச்சனைன்னு நீ கேக்க வருவ. ஆனா, தப்ப வழியே கிடையாது! மாயனுங்க கணக்குதான் சரி! ஹா ஹா!” என்று உரக்கச் சிரித்துக்கொண்டே ஓடினார்.

    அவரைப் பார்த்துக்கொண்டே குழம்பிய மனதுடன் நின்றுகொண்டிருந்த என்னைத் தேடிவந்த வேலு, “என்ன ஆச்சி சார்? அந்த பைத்தியக்காரன் எதனா பிரச்சின பண்ணானா?” என்று பதைபதைத்தபடி கேட்டார்.

    “அதெல்லாம் இல்ல வேலு. காசு கொடுத்தாலும் வாங்கிக்கல. இந்தக் குளிருல துணிகூட போடாமே இருக்கறத பாக்க கஷ்டமா இருக்கு!”.

    காரை திருப்பி வீட்டிற்கு விரட்டிக்கொண்டு சென்றோம். எல்லா பண்பலைகளிலும் சென்னையின் குளிர் பற்றிய செய்திதான். இடையிடையே புத்தம் புதியதாய்க் கிளம்பியிருந்த சூடேற்றும் சாதனங்களைப் பற்றிய விளம்பரங்கள் வேறு.

    “அமெரிக்கா குளிரையே தாங்கும் சார் இந்த சொட்டரு!” என்று ரங்கநாதன் தெருவில் கூவிக்கொண்டிருந்த சிறுவனுக்கும், “ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட சாதனம்!” என்று பிளிரிக்கொண்டிருந்த இவர்களின் வியாபார உத்திக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.

    வீட்டிற்குள் நுழைந்தால், சுடச்சுட போண்டாவுடனும், தேநீருடனும் தொலைகாட்சியில் செய்திகளில் பார்வைகளை பதித்துக் கிடந்தது ஒட்டுமொத்த குடும்பமும்.

    “இன்னும் டூ டேஸ்ல சென்னைல ஸ்னோஃபாலாம்!!” என்று கைகளை உயர்த்தியபடி என்னைப் பார்த்து கத்தினார்கள் என் குழந்தைகளும், தங்கையும்.

    “இது என்ன விந்தையான செய்தி?” என்று அதிசயத்துப்போய் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பினால், பருவநிலை மாற்றங்களை பற்றி அவருக்கே உரித்தான பாணியில் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தார் ரமணன் அவர்கள். ஆங்கிலத் தொலைக்காட்சிகள் இது பற்றி அனிமேஷன் வித்தைகளோடு விளக்கிக் கொண்டிருந்தன.

    “இந்தியால எப்படிம்மா ஸ்னோஃபால் வருது” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் என் மகள்.

    “குளோபல் வார்மிங்தான் ரீசன்.” என்றாள் என் மனையாள்.

    “குளோபல் வார்மிங்னா ஹாட்டா இல்ல ஆகணும். ஏன் கோல்ட் ஆகுது” என்கிற நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டாள் என் இளைய மகள். அது நிச்சயம் என் மனைவிக்கு அவுட்ஆஃப்சிலபஸ் ஆயிற்றே என்று நான் நினைத்த அடுத்தகணமே,

    “சும்மா கேள்வி கேட்டு டைம் வேஸ்ட் பண்ணாம போயி டேபிலட்ல கேம்ஸ் விளையாடு போடி!” என்று குழந்தையை துரத்தினாள்.

    வழக்கமாக மடிக்கணினியில் இணையத்தில் மூழ்கி இருக்கும் சமயங்களில் குடும்ப விவகாரங்களில் தலையிடும் கெட்ட பழக்கம் எனக்கு இருந்ததில்லை. அதனால் அமைதியாக என் வேலையை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படி என்ன முக்கிய வேலை?

    வேறென்ன? பாழாய்ப்போன இந்த ஃபேஸ்புக் தான்! இந்த ஃபேஸ்புக் சுவரை பார்க்கும் போதெல்லாம், நான் பிறந்த நிலாவூர் கிராமத்தில் இருக்கும் என் தாத்தா வீட்டு எடுபிடி மங்குண்டு தான் எனக்கு நினைவுக்கு வருவார். எனக்கு விளையாட்டு காட்ட, வட்டம், முக்கோணம், நட்சத்திரம் மற்றும் விதவிதமான வடிவங்களில் மாட்டுச் சாணத்தை தட்டி அதை சுவரில் அறைவார். அவை காய்ந்த பிறகு அடுப்பில் தூக்கிப்போட்டு எரிப்பது எனக்கு பிடித்தமானதொரு விளையாட்டு. என் ஃபேஸ்புக் சுவரிலும் அப்படி அன்றாடம் நிறைய நண்பர்களும், நண்பர்களுக்கு நண்பர்களும், உறவினர்களும், நான் வேண்டாவெறுப்போடு தொடர்ந்து வரும் சில பிரபலங்களும் என்று எல்லோரும் வகைவகையாக நிலைத்தகவல்கள், அவர்களின் சாதனைகள், சோதனைகள், அறிவுரைகள் என்று தட்டி ஒட்டி இருப்பார்கள்.

    நம் தரப்புக்கு அன்று நாம் எடுத்திருந்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று முகநூலின் உள்ளே நுழைந்தால் அதுபோன்ற பல புகைப்படங்களை ஏற்கனவே பகிர்ந்து முடித்திருந்தார்கள். ‘இதற்கென்றே ஒரு கூட்டம் அலையும் போல் உள்ளதே’ என்று நினைத்துக்கொண்டே சுட்டியை மேலும் கீழும் உருட்டினேன். சுவர் முழுதும் சென்னை வானிலை அறிக்கை வாசித்திருந்தார்கள் நண்பர்கள்.

    இடையே ஹாலந்து நண்பன் ஒருவன் ஆம்ஸ்டர்டாம் நகரில் நிகழ்ந்த பனிப்பொழிவு புகைப்படத்தை தரவேற்றியிருந்தான். “விரைவில் சென்னையிலும்…” என்கிற வாசகத்துடன் அந்தப் படத்தையும் பகிர்ந்துவிட்டு வெளியே வந்தேன். சில மணித்துளிகள் கழித்து எத்தனை விருப்பங்களும், பின்னூட்டங்களும் விழுந்திருக்கின்றன என்று பார்க்கவேண்டும்.

    அந்த காலத்தில் எல்லாம் திருமணத்திற்கு வந்து மொய் போடுபவர்களின் கணக்கை எழுதி வைப்பார்கள். அதுபோன்றதுதான் இந்த முகநூல் லைக்குகளின்; கமெண்டுகளின் கணக்கும். நமக்கு லைக் போடுபவர்களுக்கு தவறாமல் நாமும் போட்டுவிடவேண்டும். இல்லையெனில் கோபித்துக் கொள்வார்கள். ஆனால், களைப்பு மிகுதியால் கணக்கெழுதாமல் கைபேசியோடு கண்ணயர்ந்து உறங்கிவிட்டேன்.

    நள்ளிரவில் கைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன். என் சாரதி.

    “சார், உங்க வீட்டுக்கு கீழதான் சார் நிக்கறேன். ரொம்ப குளிரு சார். பசங்களால தாங்க முடியல.”

    “ஒரு நிமிஷம் வேலு. நான் கீழ வரேன்.” என்று கூறிவிட்டு ஹாலந்தில் அன்றாடம் அலுவலகத்திற்கு செல்வதற்குமுன் போருக்கு போவதுபோல் தயாராகுவேனே, அதேபோன்று மேலுறை, கையுறை, காலுறை சகிதமாய் வெளியே சென்றால் அங்கே வேலு காலில் வெறும் செருப்பு மட்டுமே அணிந்து, சால்வை போத்தியபடி நின்றுகொண்டிருந்தார்.

    அப்போதுதான் எனக்கு உறைத்தது. “அடடா, இவருக்கும் ஷூ, ஸ்வெட்டர் வாங்கி இருக்கலாமே! சில சமயங்களில் எவ்வளவு சுயநலத்தோடு நடந்துகொள்கிறோம்?” என்று தோன்றியது.

    உடனே மேலே சென்று பூனை போல் லாவகமாய் எனது கம்பளிச்சட்டைகள் சிலவற்றையும், அடர்த்தியான போர்வைகளையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

    “இந்தாங்க வேலு. வீட்டுக்கு போலாம் வாங்க.”

    என் தங்கையுடைய அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து அழைக்கும் தூரத்தில் இருந்தது அவரது வீடு. வேலுவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியுமென்றாலும் அவர் வீட்டுக்குச் சென்றதில்லை. அவர் அழைத்துச் சென்ற இடத்தில் சமையற்கட்டு அளவிலான சிறு வீடுகள் நிறைய இருந்தன.

    அவர் வீட்டிற்குள் குளிரில் நடுங்கிக்கொண்டு ஸ்டவ்வைச் சுற்றி அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும், அவரது வயதான தாயாருக்கும் கொண்டுவந்த போர்வைகளைக் கொடுத்தபோது மனம் முப்பது வருடங்கள் பின்னோக்கி பாய்ந்து பயணித்தது.

    நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அரையாண்டுத் தேர்வில் பெரும்பாலும் எங்கள் தாத்தா வீட்டிற்குச் செல்வோம். மஞ்சம்பில் வீடுதான். இரவில் வாட்டும் கடுங்குளிரிலிருந்து தப்பிக்க சமையற்கட்டிலேயே படுத்துக்கொள்வோம். அதிகாலை நான்கு மணிக்கே விழித்து எங்கள் அனைவருக்கு தேநீர் தயார் செய்து கொடுப்பார் என் தாத்தா. அதைக் குடித்துவிட்டு அடுப்பிற்கு அருகே அமர்ந்து ஒவ்வொரு சுள்ளியாக பொறுக்கி அடுப்பில் போட்டு குளிர் காய்வோம்.

    வேலுவை இரும்புத்தொட்டி ஏதேனுமிருந்தால் எடுத்துவரச் சொன்னேன். அந்தத் தெருவில் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த வீட்டிற்கெதிரே இருந்து சிறிது மணலை அள்ளிவந்து வீட்டில் கொட்டிவிட்டு, அதன்மீது வேலு கொண்டுவந்த சிறு இரும்புத் தொட்டியை வைத்து, விறகுகளை போட்டுக் கொளுத்தி அவர்களோடு சேர்ந்து நானும் சிறிது நேரம் அங்கு அமர்ந்து குளிர் காய்ந்து, வேலுவின் மனைவி போட்டுக்கொடுத்த அருமையான தேநீரைப் பருகிவிட்டு வீட்டுக்கு வந்த படுத்தபோது மணி நான்கு. மனதில் ஒரு வேள்வி நடத்தி முடித்த திருப்தி!

    கடைசியில் அந்த நாள் வந்தே விட்டது. சென்னை மாநகரில் அன்று கடும் பனிப்பொழிவு.

    சென்னை வெயில் வாட்டியபோதெல்லாம் வான் பார்த்து கண்களை மூடி, “ஐரோப்பாவைப் போன்று இப்போது இங்கே பனிபெய்து என் முகத்தில் பனித்துகள்கள் பளிச்சென்று விழுந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று எத்தனையோ முறை நினைத்திருக்கிறேன். அன்று உண்மையாகவே விழுந்தது. அந்தக் குடியிருப்பிலிருந்த அனைவரும் – சிறுவர் முதல் பெரியவர் வரை –  அத்தனை பேரும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆச்சர்யத்துடனும், குதூகலத்துடனும் வானிலிருந்து கொட்டிக்கொண்டிருக்கும் அந்தத் துகள்களை வரவேற்றுக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

    அன்று மாலைக்குள்ளாகவே வானம் துகள்துகளாகக் கொட்டித் தீர்த்துவிட்டது. எல்லோரும் வெளியே பனிப்பந்துகள் செய்து வீசியெறிந்து விளையாடிக்கொண்டிருக்க, நாம் எப்போதும்போல் முகநூலுக்குள் நுழைந்தோம். மெரினா கடற்கரைப் புகைப்படங்கள் சிலவற்றை சுடச்சுட பகிர்ந்திருந்தது ‘உலக தமிழ் மக்கள் இயக்கம்’ பக்கமும் மற்ற சில பக்கங்களும்.

    ஒயிட் கிறிஸ்துமஸை‘ எதிர்நோக்கியிருந்த சாந்தோம் தேவாலயம் அழகாயிருந்தது.

    காந்தி சிலை – சாகும் வரை கோவணத்துடன் வாழ்ந்தவருக்கு சால்வை போர்த்தியிருந்தாள் இயற்கை அன்னை. ஆயினும், சிலம்பை தூக்கிக்கொண்டு நிற்கும் கைம்பெண் கண்ணகிக்கு திராவிடக் கட்சிகள் வழங்கியிருந்த கறுப்புச் சேலையை களைந்துவிட்டு, வெள்ளைச் சேலை வழங்கியிருந்தாள். இயற்கைக்கும் சிறிது மூடநம்பிக்கை உண்டு போலும்.

    மாநகராட்சியின் கருந்தார் பூச்சுக்காக  நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக வழிமேல் விழிவைத்து, ஏங்கிக் காத்திருந்த வேளச்சேரி தரமணி சாலைக்கு கிடைத்திருந்த வெண்பனிப் பூச்சு யோகம், உறைந்துபோன கூவம், வீட்டு வாசலுக்கு முன்பு பால்காரர் போட்டிருந்த ஒரு வெண்பனிக்கட்டிப் பொட்டலம், வீட்டு உப்பரிகையில் தாங்கள் அழகாய் செய்திருந்த ‘ஸ்னோமேன்‘, ஒரு நாளிதழின் முதல்பக்கத்தில் முதன்முறையாக இடம்பிடித்திருந்த வானிலை ஆய்வு மைய இயக்குநரின் புகைப்படம் என பலவிதமாய் சென்னையின் அன்றைய தின அதிசயங்களை க்ளிக்கித் தள்ளி புகைப்படங்களை சுவர்தட்டியிருந்தார்கள் நண்பர்கள்.

    முகநூலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, தொலைக்காட்சி நியூஸ் சேனல் ஒன்றினுள் மூழ்கிக்கிடந்த மைத்துனருடன் இணைந்துகொண்டேன்.

    இப்போதெல்லாம் எந்தப் பிரச்சினையென்றாலும், குறைந்தபட்சம் ஒரு சமூக ஆர்வலர், ஒரு நடிகர், ஒரு வியாபாரி, ஒரு எழுத்தாளர், இரண்டு அரசியல்வாதிகள், தொலைபேசி மூலம் சில பொதுமக்கள் என்று எல்லா தொலைகாட்சிகளிலும் வந்து விவாதித்து சித்ரவதை செய்வது வாடிக்கையாகி விட்டது.

    அப்படியொரு அவஸ்தையான, காரசாரமான விவாதம் ‘இன்றைய முழக்கம்’ தொலைக்காட்சியில், “நெஞ்சில மஞ்சா..” நிகழ்ச்சியில் அன்று நடந்து கொண்டிருந்தது.

    “குளிர் தாங்க முடியலைங்க. கவர்மெண்டு ஒண்ணுமே செய்யமாட்டேங்குது. விறகு வாங்கினாலும் பச்சையா கெடக்கு. என்ன பன்றதுனே தெரியல. மொதலாளி வீட்டுல ஹீட்டர் இருக்குனு போனா, கரண்டு பன்னெண்டு மணிநேரம் கட் பண்றானுங்க. சென்னைல இருக்கறவங்க மட்டும் உயிரோட இருந்தா போதும்னு கவர்மெண்ட் நெனைக்குது. என்ன பண்றதுனே தெரியலைங்க! குளிருலையே செத்துடுவோம் போல இருக்குங்க.” என்று தொலைபேசி மூலம் ஒரு சாதாரணர் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருந்த போது என் மைத்துனர் சுடச்சுட போண்டா ஒன்றை எடுத்து வாயில் விட்டார்.

    தொழிலதிபர் ரெங்கமணி ஆவுடையப்பன் “தற்போது கூட ஜப்பானில் ஒரு வுட் ட்ரையர் கண்டுபிடித்துள்ளார்கள். பச்சை மரத்தை உள்ளே அனுப்பினால், காய்ந்த விறகாக வெளியே வந்துவிடும். அரசாங்கம் அத்தகைய இயந்திரங்களை உடனே இறக்குமதி செய்தால் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும். எங்களுடைய  நிறுவனம் அதற்கான உதவிகள் செய்யத் தயாராயிருக்கிறது.” என்று ஆலோசனை வழங்கிய அதே வேளையில், அவரது IIM அகமதாபாத் மூளை அந்த வணிக திட்டம் எப்போது சமபாட்டுப் புள்ளியைத் தொடும் என்பதை கணித்து முடித்திருந்தது.

    சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான கட்டுத்தறி திடீரென கத்தத் தொடங்கினார், “குளிருக்காக மரங்களை வெட்டுவதென்பது அபாயகரமானது. நாளைய சந்ததியினருக்கு மரங்களை விட்டு வைக்கவேண்டும். என்னமாதிரியான ஒரு சமூகத்தில் நாம்…. ”

    தொலைபேசி மூலம் யாரோ ஒரு சாதாரணர் குறுக்கே புகுந்து, “யோவ், கட்டுத்தறி! நீ என்ன பெரிய அறிவாளின்னு காமிக்கிறையா? இன்னைக்கு சாகரவங்கள காப்பாத்த சொன்னா நாளைக்கி நாளானன்னைக்கு பெனாத்தற…” என்று சூடாகப் பேசிய போது அவரை இடைமறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கருணாகர மூர்த்தி, “நண்பரே உங்கள் வார்த்தை பிரயோகம் சரியில்லை.” என்று கூறியபோதே இணைப்பு துண்டிக்கப்பட்டு, “டூன்..டூன்..டூன்..” என்று சத்தம் வந்தது.

    ஒருங்கிணைப்பாளர் கருணாகர மூர்த்தி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-விடம் திரும்பி, “திரு.பச்சைமாமலை, அமைச்சர் திரு.பொய்கைவீரன் அவர்கள் பல நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் இதுகுறித்து உங்கள் பார்வை என்ன?”. அவர் இந்தக் கேள்வியை கேட்டுக்  கொண்டிருந்தபோது, பச்சைமாமலை அவர்கள் தனது புத்தம் புதிய வெள்ளை சட்டைக்குள் உடலை நுழைத்து தலையை காண்பித்து சிரித்தபடி அமர்ந்து, எனது தங்கையின் 41 அங்குல தொலைகாட்சிப் பெட்டித்திரை முழுவதையும் நிரப்பியிருக்க, கீழே அவரை பற்றிய ‘ஹைக்கூவை’ காண்பித்துக் கொண்டிருந்தது ‘இன்றைய முழக்கம்’.

    திரு. பச்சைமாமலை

    எம் எல்

    தமிழர் முன்னேற்ற கட்சி 

    “சில எழுத்தாளர்களுக்கும்,  சமூக ஆர்வலர்களுக்கும்  இதுவே வேலையாகிவிட்டது. இவர்களாக ஒரு தீர்வையும் வழங்க மாட்டார்கள். அரசாங்கமோ அல்லது வேறு எவரேனும் ஒருவர் கொடுக்கின்ற தீர்வில் குறை கண்டுபிடித்தே வாழ்க்கையை ஓட்டும் ஒட்டுண்ணிகள்!” என்று வார்த்தைஜாலம் காட்டி அடுத்த தேர்தலுக்கு தொலைபேசியில் பேசியவரின் ஓட்டை தக்க வைத்துக்கொண்டு, தன் பேச்சை தொடர்ந்தார் பச்சைமாமலை, “என்னைப் பொருத்தமட்டிலும் நடக்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கு காரணம் ம.மு.க-வினர் (மறத்தமிழர் முன்னேற்றக்  கட்சி) தான். நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர்கள் முன்பே இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். மின்சார பிரச்சினைக்கும் அவர்களே காரணம். மின்சாரம் இருந்திருந்தால் இத்தனை பேர் குளிரில் வாடியிருக்கமாட்டார்கள். ஆனால் எங்கள் மாண்புமிகு ஐயா அவர்கள் தொலைநோக்கோடு, அடுத்த தலைமுறையினரும் பாராட்டும் வண்ணம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.”

    இதைக் கேட்டுக்கொண்டிருந்த ம.மு.க கட்சி அரசியல்வாதியும், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சருமான L.A.P.D கோதண்டம், சிறிது ஆவேசமாகவே பேச ஆரம்பித்தார், “இந்த மாண்புமிகு என்பது அவரோட ஐயாவோட பதவிக்கா? இல்லை அவரோட ஐயாவுக்கேவா? மாண்புமிகு முதல்வர் ஐயா என்று கூற பழகிக் கொள்ளவேண்டும், சட்டப்பேரவை உறுப்பினர் அவர்கள். நான் கேட்கிறேன்… ம.மு.க பற்றி பேச த.மு.க.வினருக்கு என்ன தகுதி இருக்கிறது? மின்சாரம் தான் பிரச்சினை என்கிறார்களே, எத்தனை பேர் வீட்டில் இன்று ஹீட்டர் இருக்கிறது? அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், அனைவருக்கும் ஹீட்டர் இலவசமாக வழங்கப்படும் என்று எங்கள் தலைவர் நேற்று மாலையே அறிக்கை விடுத்து தனது தாயுள்ளத்தை காண்பித்துள்ளார். அதைச் செய்வார்களா இவர்கள்?”

    இவர்களுக்குள் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போது இவர்களுக்கிடையே, ‘ஊர் ரெண்டு பட்டால்..” எனும் விதமாகவும், ‘முட்டாள்களுக்கிடையே அமர்ந்திருக்கும் தான் மட்டுமே இங்கு அறிவுஜீவி’ எனும் விதமாகவும் அமர்ந்திருந்த எழுத்தாளர் முகத்தில் ஒரே புன்னகை!

    இன்னொரு தொலைக்கட்சியில் தனது விநோதமான யோசனையைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் பொய்கை வீரன், “சாலைகளிலும், நடைபாதைகளிலும் படர்ந்து கிடக்கும் பனியை மாநகராட்சி குடிநீர் வண்டிகளில் கடல்நீர் கொண்டு வந்து சுத்தம் செய்யும் பணி விரைவில் தொடங்கும்.”

    “பரவாயில்லை. கடல் நீரில் உப்பு கலந்திருக்கிறது என்கிற அளவிற்காவது அமைச்சருக்கு அறிவிருக்கிறதே!” என்றாள் என் தங்கை.

    “யோசனையாம் யோசனை. மண்ணாங்கட்டி.” என்று நொந்துகொண்டார் என் மைத்துனர்.

    இதற்கிடையே இன்றைய முழக்கத்தில் சற்றுமுன் வந்த செய்தி ஒன்று மின்னிக் கொண்டிருந்தது :

    போரூர் ஏரி உறைந்து போனதால் அதில் பனிச்சறுக்கு விளையாட்டை நடத்த சென்னை மாநகராட்சி ஸ்னோ ஒயிட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது

    இன்னொரு தொலைக்காட்சியில்:

    சாலையோரத்தில் பனிப்போர்த்தி மறைத்திருந்த குழிக்குள் விழுந்த கிழவி பலி.

    குளிரினாலும், பனியால் ஏற்பட்ட விபத்துகளாலும் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 20 என்று காண்பித்தது த.மு.க சேனல்; 200 என்று காண்பித்தது  ம.மு.க சேனல். அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை – கடைசியில் ஒரு பூஜ்ஜியம். அவ்வளவுதானே? மேலும், இந்தியாவில் அன்றாடம் 62000 பேர் இறக்கிறார்கள். அது 62020 -ஆக இருந்தால் என்ன? இல்லை 62200 -ஆக இருந்தால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? மனிதர்களை விடுங்கள்; எண்ணற்ற கால்நடைகள் மரித்துப் போயிருக்கும். அவற்றை பற்றி பச்சைமாமலையும், கட்டுத்தறியும் விவாதம் புரிந்ததாய் தெரியவில்லை. பேசினாலும் அவைகளுக்குப் புரியப்போவதில்லை.

    நாட்டை உலுக்கும் அதிபயங்கரமான விஷயங்களை நாம் கையாளும் விதத்தையும், ‘நெஞ்சில மஞ்சா!’ போன்ற நிகழ்ச்சிகளில் வாதிடும் அறிஞர்களையும், அவர்களின் விஷய ஞானம், சமூகப் பார்வை இவற்றையெல்லாம் பார்க்கும் போது, நாம் என்னமாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற நிதர்சனம் மனதுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. இவர்கள் தான் நம்மை ‘அறிவார்ந்த’ சமூகமாக மாற்ற இளைஞர்களை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு பரிதாபகரமான உண்மை.

    இரவு தூக்கமே வரவில்லை. இருட்டில் அமர்ந்து நுண்ணறி பேசியை எடுத்து வருடிக்கொண்டிருந்த போது திடீரென கூகிள் காலண்டர் கண்ணில் பட்டது. காலண்டரைக் கண்ட அடுத்தகணம், பாண்டிபஜாரில் பார்த்த கிழவர் நினைவுக்கு வந்தார்.

    “சட்டைகூட போடாமல் திரிந்து கொண்டிருந்த அந்த மகராசன் இந்நேரம் எங்கிருப்பார்? போய் பார்க்கலாமா? அவருக்கு ஒரு கம்பளிச்சட்டையும், கம்பளிப் போர்வையையும் கொடுத்திருக்கலாமே? பலியாகிற அனைத்து உயிர்களையும் நம்மால் காப்பாற்ற இயலாது. ஆனால், பணத்திற்காக முட்டாள்களை அறிவாளிகளாக்கிப் பார்க்கும் விந்தையான மனிதர்களுக்கிடையே, கொடுத்த பணத்தையும் மதிக்காமல், கொடுத்தவனையும் முட்டாள் என்றுரைத்த அந்த மனிதரின் உயிர் மகத்தானதல்லவா?” என்று தோன்றிய அடுத்தகணம் பனிப்போருக்கு தயாராகி, ஒன்றிரண்டு கம்பளிப் போர்வைகளை எடுத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து காரை எடுத்தேன். பனிப்பொழிவின்பொது கார் ஓட்டுவது நமக்கு ஒன்றும் புதிதில்லையே? என்ன இங்கெல்லாம் விண்டர் டயர் கிடையாது. சமாளித்து ஓட்ட வேண்டும். இருந்தாலும் அந்த மகராசனுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ளலாம் என்று தோன்றியது.

    பனிப்பொழிவு சற்று குறைந்திருந்தது.

    காரில் ஏறி அமர்ந்தாலே நடு இரவிலும் கூட இந்த ரேடியோக்களின் தொல்லை தாங்க முடிவதில்லை; அதில் வரும் ஆர்.ஜேக்கள் பேசும் தமிழ் – சொல்வதற்கில்லை. டோனி க்ரைகும், ஜெப்ரி பாய்காட்டும் ஆங்கிலம் பேசுவது போலவே தமிழ் பேசவேண்டும் என்று யாரோ பாடம் நடத்தியிருப்பார்கள் போலிருக்கிறது. அன்றைய விவாத மேடையில் இரண்டு அரசியல்வாதிகளையும் வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலரின் ஜகதலப் பிரதாபங்களை மூச்சு விடாமல் டோனி பாணியில் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் ரேடியோ பீட்-ரூட் ஆர்.ஜே ‘காதல் கிங்’ கார்த்தி. இவற்றிற்கிடையே காதலர்களுக்கு அறிவுரையும், அதன் பிறகு ஒரு டூயட் பாடலும்.

    “நம் நாட்டில் ஆளாளுக்கு கருத்து பேசுகிறார்களே? பேச்சுக்கும் செயல்களுக்கும் தொடர்பே இல்லாத இதுபோன்ற போலிகளால் நிரம்பி வழிகிறது இந்த உலகம்.” என்று எரிச்சல்பட்டுகொண்டே, தியாகராயர் சாலையின் இரு புறங்களையும் பார்த்தபடி காரோட்டிச் சென்றபோது சாலையோரத்தில் ஒரு மரத்தருகே என் கண்கள் கண்ட அந்தக் காட்சி, உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சி, என்னை உடனே ப்ரேக் அடிக்க வைத்தது. திடீரென ப்ரேக் அடித்ததால் பனிபடர்ந்த சாலையில் என் கார் சறுக்கி, க்றீச்சிக்கொண்டே சென்று, ஒரு சுற்று சுற்றி, இன்னொரு மரத்தின் மீது மோதி நின்றது. கிட்டத்தட்ட கார் கண்ணாடியை முத்தமிட்டுத் திரும்பினேன். பழக்க தோஷம் காரணமாக அணிந்திருந்த சீட் பெல்ட்டினால் தலைதப்பியது. பின்னர் சுதாரித்துக்கொண்டு கார் கதவைத் திறந்து வலதுகாலைக் கீழே வைத்ததும், முழங்கால் வரை பனியில் புதையுண்டது. அடுத்த அடிக்கு தரையில்  இருப்போமா அல்லது ஏதேனும் ஒரு குழிக்குள் புதைந்து விடுவோமா என்கிற அளவில்தான் எனக்கு சென்னை மாநகராட்சியின் மேல் ‘நம்பிக்கை’ இருந்தது. குளிரில் உதறியபடி அச்சத்துடனும், வெகுகவனமாகவும் அடிமேல் அடிவைத்து மெதுவாக நடந்து சென்றேன். அங்கு பென்குவின் உத்தி மட்டும் போதுமானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

    மரத்தருகே நெருங்க நெருங்க, நான் கண்ட அந்தக் காட்சி இன்னும் தெளிவாகத் தெரிந்து இறுதியில் என் ஊகத்தை உறுதிப்படுத்தியது.

    நான் யாரைத் தேடிச் சென்றேனோ அந்த மனிதர், அங்கே ஒரு சிறு நாய்க்குட்டியை இறுக அணைத்தபடி அமர்ந்திருக்க, அந்த ஜீவன்கள் குளிரில் நடுங்காமல் இருப்பதற்காக, இயற்கை அன்னை என்னை முந்திக்கொண்டுச் சென்று, அடர்த்தியானதொரு வெண்பனிப் போர்வையை அவர்கள் மீது போர்த்தி இருந்தாள்.

    பனிப்போர்வைக்குள் சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தன – அந்த இரு உயிர்களும்.

    Share
  • முன்னைப் பிறவியில்… (கவிதைக்கதை)

     

    மாதவன் இளங்கோ

     

    Author’s Note:

    சில சந்திப்புகள் நம் மனதிற்கு இனிமையானதாக அமையும்; சில சந்திப்புகள் நம்மை சிந்தனையாளர்களாக மாற்றும்; சில சந்திப்புகள் நம்மை முட்டாள்களாக்கும்; சில சந்திப்புகள் நம் வாழ்க்கைப் பாதையை  சற்று மாற்றும்; சில சந்திப்புகள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். சில சந்திப்புகள் சில மணித்துளிகளே நீடித்தாலும், நம் மனதில் ஒரு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு தான் ‘முன்னைப் பிறவியில்..’ எழுத உந்துதலாக அமைந்தது.

    ஒரு வியாழக்கிழமை மாலை. ப்ரசல்சு மாநகரத்தின் நார்டு (வடக்கு) ஸ்டேஷன். லூவன் நகரம் செல்வதற்காக, இரயிலுக்காகக் காத்திருந்த போதுதான் நான் மேலே கூறிய அந்த ‘கொந்தளிப்பு’ சந்திப்பு நிகழ்ந்தது. அந்த மனிதர், ‘நீங்கள் தமிழரா?’ என்று கேட்டதில் ஆரம்பித்த உரையாடல் ஒரு இருபது நிமிடம் நீடித்தது. சில நிமிட உரையாடலாக இருந்தாலும் என்னை வெகுவாய் பாதித்து விட்டது – தமிழனாக அல்ல; வெறும் மனிதனாகவே!! இன்னும் சொல்லப்போனால் அவர் பகிர்ந்துகொண்ட விதத்தில், மொழியே புரியவில்லை என்றாலும் கூட, எங்களருகே அமர்ந்து கொண்டிருந்த ஃப்ளம்மியரின் மனதிலும் அது ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியிருக்கக் கூடும்.

    பெல்ஜியத்தின் பிரெஞ்சு பகுதியிலுள்ள லியாஷே (Liege) நகருக்கு செல்லும் இரயிலுக்காக அவர் காத்திருந்தார். நானும் அதே இரயிலில் சென்று இடையில் வரும் ஃப்ளம்மிய நகரான லூவனில் (Leuven) இறங்க வேண்டும். வண்டியிலும் அவர் பேச்சு தொடர்ந்தது. நான் அமைதியாக அவரருகே அமர்ந்து அவர் கூறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும், என் மனது மட்டும் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

    ‘காலம் நிச்சயம் மாறும்; விடியல் பிறக்கும்!’ என்று கூறிவிட்டு , லூவன் நகரில் இறங்கிய என் மனதில் ஏராளமான எண்ண ஓட்டங்கள், கேள்விகள், கொந்தளிப்புகளை ஏற்படுத்திவிட்டு அவர் விடைபெற்று இரயிலோடு சென்று விட்டார். அப்போது  வேறொரு சமயத்தில், வேறொரு இடத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வர, இவையிரண்டையும் இணைத்துப் பார்க்கையில் ‘முன்னைப் பிறவியில்..’ பிறந்தது.

    வீட்டிற்கு வந்தவுடன், அதே வேகத்தில், அதே மனநிலையில் ஒரு இருபத்து ஐந்து நிமிடத்தில் எழுதியதைத்தான் இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    இதோ… முன்னைப் பிறவியில்… 

    இம்மையில்,

    என் பெயர் வேதநாயகம்.

     

    காதலில் விழுந்து,

    திருமணம் முடிந்து,

    ஐந்து ஆண்டுகளோடிய பின்னும்

    மழலை இல்லை வீட்டினிலே!

     

    முதல் குழந்தைகருவிலே மரித்தது!

    இரண்டாவதுஇறந்தே பிறந்தது!

    மூன்றாவதோபிறந்து இறந்தது!      

     

    உற்றார் உறவினர் –

    துரத்தி அடித்தனர்!

    மருத்துவம் பாரென்றனர்!

    கருக்காவூர் போவென்றனர்

    திருமலை நடவென்றனர்!

    தானம்புரி என்றனர்!

     

    அவர்தம் பரிகாசப்

    பேச்சுகளைக் கேட்டுக்கேட்டு,

    நாணிக் குறுகினோம்,

    நானும் என் மனையாளும்!

    ஓடி ஒளிந்தோம்.

    உற்றார் உறவினரின்,

    தொடர் பறுத்தோம்!

     

    மூலகாரணம் அறிந்திடல்

    முக்கிய மென்றார்,

    நண்பர் ஒருவர்.

    அவர் நாடச் சொன்னது

    நாடி சோதிடம்‘!

     

    நாடி‘ நாடித்

    தேடி ஓடினேன் –

    வைத்தீசுவரன்கோவில்!   

     

    ஓலைகள் பல அலசியபின்

    சோதிடர் சொன்னார் என்னிடமே:

    முன்னைப் பிறவியில் நீ,

    அந்தத் தீவினில்’ பிறந்தவன்!

    பந்துக் களுடன் கூட்டாய்

    செய்தாய் பல நீ உயிர்வதைகள்.

    அதற்கு விலையே,

    இப்பிறவியிலே உனக்கு

    இத்தனை சித்ரவதைகள்!”

     

    சோதிடர் சொன்னதை நான்,

    துளியும் நம்பவில்லை!

    வீடு திரும்பினேன்.

    நாடி சோதிடத்தை,

    நம்பி ஓடுபவர்கள்

    அனைவருமே அவிவேகிகள்,

    என்றெண்ணிச்

    சிறிது கண்ணயர்ந்தேன்.

     

    கனவிலே,

    கடல் கடந்து சென்றேன்.  

    அங்கேபச்சை உடையணிந்த

    வெறிபிடித்தக் கூட்டமொன்று,

    வளைத்துப் பிடித்தது –

    சில அப்பாவி மக்களை!

    அதில் ஆடவர் சிலர்,

    பெண்டிர் பலர்,

    நிறைமாதக் கர்ப்பிணிகள் சிலர்

    சிறார்களோ பலர்.

     

    பிடித்தோம்!” என்றும்,

    சிக்கினர்!”  என்றும்,

    கொக்கரித்தது,

    அந்தப் பச்சை உடையணிந்தக் கூட்டம்!

     

    அதோ!

    அந்த கூட்டத்தின் தலைவன்!

    அவன் என்னைப்போல்!

    அது நானா?

    எனக்கு என் நண்பர்கள்

    வைத்த பெயர் ‘சாந்த சொரூபி‘ அன்றோ?!

    ஆனால்அந்தக் கொடூர முகம்?

    அதில் குடிக்கொண்டிருந்த வெறித்தனம்!

    அது நிஜமாய் நான் தானா?

    ஆம்நானே தான்!

    அந்தச் சிரிப்பு

    அந்த அசுரச் சிரிப்பு?

    அதற்குச் சொந்தக்காரன்?

    அதுவும் நானே தான்!

     

    பெண்களைசிறார்களை

    மட்டும் விட்டு விட

    ஆடவர் வேண்டினர்

    கர்ப்பிணிகளை மட்டும் விட்டு விட

    பெண்டிரும் கதறித் துடித்தனர்!

    ஒன்றும் புரியா மழலைகளோ,

    ஒளிந்து அழுதன – 

    சேலையின் மறைவில்!

    அனைவரையும் விட்டு விட,

    கிழவர்கள் சிலர் – என்

    காலில் விழுந்து மன்றாடினர்!  

     

    நான் தந்த பதிலோ,

    சிரிப்பு மட்டும் தான்!

    ஏளனச் சிரிப்பு!

    இடிச்சிரிப்பு!

     

    சில நிமிடங்களில்,

    வெடிச்சிரிப்பு மறைந்தது,

    வெறித்தனம் புகுந்தது,

    வெறிச்சிரிப்பானது!

    கண்கள் சிவந்தது,

    வானம் பார்த்தோம்,

    உரக்கக் கத்தினோம்!   

     

    வெட்டிச் சாய்த்தோம்

    ஆடவர் கைகளை – பின்

    அவர்தம் கால்களை – அதன் பின்

    அவர்தம் தலைகளை!

     

    சிட்டுக் குருவிகளைப்  போல்,

    சுட்டு வீழ்த்தினோம் – அவர்தம்

    சிறார்களை!

    ஓடி விளையாடும் வயதில்,  

    அவர்தம் உடல்களில் – எம்

    துப்பாக்கிக் குண்டுகள்

    விளையாடின!

     

    கதறினர் பெண்டிர் – அவர்

    கண்களில் நீர் வற்றும் வரை!

    அழுகுரல்கள் நிறைந்த

    அந்த அவல ஓசை,

    எங்கள் செவிகளில்

    தேனினு மினிய’ 

    நாதமாய் ஒலித்தது!

     

    சபித்தனர் எங்களை:

    நீங்கள் கொன்று குவித்த

    அவைகள் –

    எம் பிள்ளைகள் அல்ல!

    உம் பிள்ளைகள்!

    அவைகளுக்கும் இது நேரும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    இங்கே புதைக்கப்படும்,

    ஒவ்வொரு உடலும்,

    விதைகள்!

    அவைகள் மரமாய் வளர்ந்து

    உங்களைச் சாய்க்கும் நாள் வரும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    நிராயுதபாணிகளை நிர்வாணப்படுத்திச்

    சுட்டுக் கொல்லும்

    உங்களைஉங்கள் பாவங்களே

    ஆயுதங்களாய் மாறித்

    தாக்கி அழிக்கும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    ‘நாய்நிலைக்கும் கீழ்நிலை

    எம்நிலை’ கண்டு

    கொக்கரிக்கும் நீவீர் – நாளை

    உம்நிலை மாறுகையில்

    கதறி வீழ்வீர்கள்!!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    இயற்கை தந்த மண்ணை ஆள,

    இன்றெம்மைக் கொல்லும் உம்மை

    இனிதாய் வாழவிடுமா இயற்கை?

    இந்நிலத்தை அதன் சீற்றமே,

    சிதைத்தெறியும் நாள் தூரமில்லை!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    ஆம்எம் மக்களின்

    சதை தின்று,

    எம் குஞ்சுகளின்

    குருதி குடித்த உம்மை

    அந்தக் கடல் குடிக்கும் நாள் வரும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    உங்கள் ஒவ்வொரு கொலைக்கும்,

    உங்கள்  சந்ததி விலை கொடுக்கும்!

    ஏன்இன்னொரு பிறவி

    என்று ஒன்று இருப்பின்,

    நீங்களே அதற்கு விலை கொடுப்பீர்கள்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    நீங்கள் கொன்று குவித்த

    அவைகள் –

    எம் பிள்ளைகள் அல்ல!

    உம் பிள்ளைகள்!

    அவைகளுக்கும் இது நேரும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    எம் பிள்ளைகளா?

    ஹா ஹா ஹா” என

    மீண்டும் அதிபயங்கரமாய்,

    அசுரத்தனமாய்ச் சிரித்தோம்!

     

    கொலைவெறிகாமவெறியும் ஆனது!

    பேதை முதல்

    பேரிளம்பெண் வரை  

    ஆளுக்கு ஒன்றாய்ப் பகிர்ந்து,

    இழுத்துச் சென்றோம்!

    கதறக் கதறச்

    சூறையாடினோம்!

    சூறையாடிய பின்

    சிதைத்தோம்

    சுட்டு வீழ்த்தினோம்!

     

    அங்கே பாரென்றான் தோழன்!

    அவன் காட்டிய திசையில்,

    கர்ப்பிணிப் பெண்ணொருத்தி,

    மடிந்து கிடந்தாள்!

    வயிற்றினில் சுட்டேன்!

    சுட்டுச் சிரித்தேன்!

     

    சிரித்தேன்சிரித்தேன்!

    இடியெனச் சிரித்தேன்!

     

    அந்த வயற்காட்டை

    இடுகாடாய்சுடுகாடாய்,

    பூலோக நரகமாய்

    மாற்றிக் காட்டி இருந்தோம்!

    எங்கள் சாதனைகளைக் கண்டு

    குதூகலித்தோம்!

     

    வானத்தில் வட்டமிடும்,

    வல்லூறுகளாய்ச் சுற்றிப் பார்த்தோம்!

     

    எங்கெங்கு காணினும்

    உடையில்லா உடல்கள்!

    சிதைக்கப்பட்ட உறுப்புகள்!

    அறுபட்ட தலைகள்!

    அவற்றினூடே ஓடிய

    குருதி ஆறு!

     

    ஹா ஹா ஹா!”

    மீண்டும் சிரித்தேன்!

    உடல்களின் மீதேறிக் குதித்துத்

    தாண்டவ மாடினோம்!

     

    திடீரென,

    நிலை தடுமாறி

    கீழே விழுந்தேன்,

    ஆவென்று கத்தி,

    விழித்தேன்‘!

     

    அது கனவா?”

     

    இதயம் இரைத்தது,

    தேகம் நடுங்கியது,

    தலை கனத்தது,

    கண்களில் கண்ணீர்

    வழிந்து ஓடியது!

     

    ஆயிரமாயிரம் எண்ணங்கள்

    ஆணிபோல் என் நெஞ்சில்

    அறைந்ததாய் உணர்ந்தேன்!

     

    எனக்குள் இப்படி ஒரு மிருகமா?”

     

    ஐயோஅந்தக் குழந்தைகள்!!!”

     

    முன்தினப் பிறவியில்,

    நான் கொன்றது,

    அவர்கள் எவருடைய

    குழந்தைகளையோ அல்ல!

    என்னோடு இன்று 

    வாழ்ந்திருக்க வேண்டிய

    என் குழந்தைகளே!”

     

    எந்த இனத்தை அழித்துக்

    கொக்கரித்தேனோ,

    அதே இனத்தில்

    இன்று நானா?”

     

    இனமென்ற குறுகிய

    வட்டத்திற்குள் நான்

    சிக்க வேண்டாம்!

    அவர்களெல்லாம் மனிதர்களல்லவா?

    வெறும் மனிதனாகவே,

    வெட்கித் தலை குனிகிறேன்!” 

     

    அந்த இரத்த பூமி!”

     

    அந்த உடல்கள்!”

     

    பொசுக்கப்பட்ட அந்த பொடியன்கள்!”

     

    அந்த கதறல்கள்!”

     

    என்றோ செய்த

    என் குற்றங்கள்          

    என் கண்முன்னே

    படமாய் ஓடின!

     

    கதறிக் கதறிக்

    கடவுளை வேண்டினேன் –

    வேண்டாம் எனக்கு

    பெண் குழந்தைகள்!

    ஏனெனில்அவர்கள்

    கண்டிப்பாய்ச் சூறையாடப்படுவார்கள்!”

     

    மீண்டும் வேண்டினேன் –

    இன்னொரு பிறவி இருப்பின்,

    நானும் பெண்ணாய்ப்

    பிறந்திடல் வேண்டாம்!

    ஏனெனில்நானும்

    நிச்சயமாய் சூறையாடப்படுவேன்!”

     

    கடவுளே

    என்று மீண்டும் கத்திக் கதறினேன் !

     

    ஓடி வந்தாள் மனையாள்!

    என்னவென்று கேட்டாள்,

    பதறியபடி!

     

    அந்தத் தீவினில்

    குழந்தைகளையுமா கொன்றார்கள்?”

    என அதிர்ச்சியுடன் கேட்டேன்.

     

    தீவிரவாதம் பேசாதீர்,” என்றாள்!

     

    சிந்தித்தேன் –

    கொடூரக் கொலைகளை

    எதிர்த்து இந்த மண்ணில்

    கொடுக்கப்படும்

    குரல்களெல்லாம் ,

    தீவிரவாதத்தின் குரல்களாக

    மாற்றிக்காட்டியது

    யார் குற்றம்?”  

     

    என்னவென்று மீண்டும் வினவினாள்

    என் மனையாள்.

    அதற்கு பதிலாய்,

    நான் தந்தேன் உபதேசம்,

    அவளுக்கு மட்டுமல்ல,

    என் முன்னைப்பிறவி சக மிருகங்களுக்கும்:

    நீ விதைக்கும் ஒவ்வொன்றையும்,

    நீ அறுவடை செய்தே ஆகவேண்டும்!

    நீ கொலைகாரன் என்றால்,

    நீ கொல்வது மற்றவரை அல்ல!

    உன்னையே தான்!

    நீ செய்வது கொலையல்ல,

    தற்கொலை!

    ஏனெனில்,

    நீ கொல்லும் ஒவ்வொரு முறைக்கும்,

    நீ ஒருமுறை கொல்லப்படுவாய்!    

     

    முன்னைப் பிறவியில் நான் மிருகம்!

    என் கொலைகளுக்கு விலையாய்,

    இம்மையில் நானே அந்த

    மிருகம் தின்ற ஆடாய்!

     

    இம்மை மிருகங்களே!

    அங்கிருந்தவன்,

    இங்கிருந்து பேசுகிறேன்!

    ஆடாதீர்ஆவீர்கள் ஆடுகளாய்!

    யாரும் ஆக்கவேண்டியதில்லை!

    நீங்களாகவே ஆவீர்கள்!

      

    பழிக்குப் பழி

    சரியான பதிலல்ல!

    கண்ணுக்குக் கண்

    சரியான பதிலல்ல!

    கொலைக்குக் கொலை

    சரியான பதிலல்ல!

    ஆனால்,

    இயற்கைக்குக்

    கண்ணனையும்,

    நியூட்டனையும்,

    தெரிந்த அளவிற்கு,

    காந்தியம் தெரியாது!

     

    ஊழிற் பெருவலி யாவுள?’

     

     

     

    Share
  • பேஸ்புக் ஸ்டேடஸ் (Facebook Status)

    மாதவன் இளங்கோ

    “ஹவ் ஆர் யு பீலிங், விக்ரம்?” – இப்படி கேட்ட என்னோட பேஸ்புக் ஸ்டேடஸ் பாக்சுக்கு இன்னைக்கு கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்னு தோணிச்சிங்க. அதனால என் மனசுல இருக்கற பாரத்த இந்த பாக்சுக்குள்ள இறக்கிவச்சி உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்.

    கொஞ்சம் பாரம் ஜாஸ்திங்கறதால இந்த  ஸ்டேடஸ் மெசேஜ் கொஞ்சம் பெரிசா போவும் போல இருக்கு. உங்களுக்கு வேற ஏதாவது வேலை இருந்தா பாத்துட்டு வந்து பொறுமையா படிங்க. இல்ல, என் கஷ்டத்த இப்போவே தெரிஞ்சிக்கணும்னா தொடர்ந்து படிங்க.

    ஒரு வரி ரெண்டு வரின்னா இங்கிலீஷ்லயே எழுதியிருப்பேன். இவ்ளோ பெரிய விஷயத்தையெல்லாம் என்னால இங்கிலீஷ்ல எழுத முடியாதுங்க. தமிழில எழுதறதே பெரிய விஷயம். இதுல வேற, நம்ம ஊர்க்கார பசங்கல்லாம் பேஸ்புக் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. அவங்களுக்கும் நம்ம சொல்ல வர்றது புரியணுமில்லையா? ‘இங்கிலீஷ்லயே எழுதத் தெரியாத நீ அமெரிக்காவுல போயி என்னத்த கிழிக்கற’னு உங்க மைண்ட் வாய்ஸ் பேசறது எனக்குக் கேக்குதுங்க. நான் பாக்குற வேலைக்கு ஜாவா லாங்குவேஜும் அதோட கீவேர்ட்ஸும் போதும்! ஒருநாளைக்குப் பதினாலு மணிநேரம் கம்ப்யூட்டர் கூட தானே பேசுறோம். அதுவுங்கூட சரியா தெரியாதுங்கறது வேற விஷயம். ஆனா ஒன்னு, இந்த ஊர்க்காரங்க பேசற வழவழா, கொழகொழா இங்கிலீஷுக்கு என்னோடது எவ்வளவோ பரவாயில்லீங்க.

    என்னடா இவன் ரொம்ப மரியாதையா நெறைய ‘ங்க’ யூஸ் பண்றானேனு நெனெச்சீங்கதானே? என்ன பண்றது? இப்போதான் பேஸ்புக்ல என் பெரிப்பா, சித்தப்பா, மாமா, மாமினு எல்லா பெரியவங்களும் வந்துட்டாங்களே. என்ன பண்றது?

    சித்தப்பா “ஓ! சட்டை மேல எவ்ளோ பட்டன்!” பேஸ்புக் பேஜ்லர்ந்து போட்டோவ ஷேர் பண்றார். மாமா என்னடான்னா, “Ovvoru figurum thevai machaan”-னு ஏதோவொரு பேஜை லைக் பண்றாரு. என்னதான்  நடக்குது இந்த பேஸ்புக்ல?

    எங்க கெழவி மட்டும்தான் இன்னும் வரலைங்க. அவங்களுக்கும் சாவித்திரி சொல்லிக் கொடுத்துட்டு இருக்கானு கேள்விப்பட்டேன். உண்மையா @Savithiri Muthusamy?

    தமிழில எழுதறத்துக்கு இன்னொரு காரணம் – நான் இன்னைக்கு எழுத போறது இந்த ஊருக்காரங்கள பத்தி. சாதாரண ஆளுங்களப்பத்தி எழுதனாவே பிரச்சினை. அப்படி இருக்கும்போது, இந்த ஊர் போலீஸ்காரங்கள பத்தி எழுதினா சும்மா விடுவாங்களா? அட, இப்போல்லாம் நம்ம இந்தியாவுலையே கான்ட்ரொவர்ஷியலா எதாச்சும் பேஸ்புக் ஸ்டேடஸ் போட்டா, சரியில்லையேன்னு சொல்லி, புடிச்சி உள்ள வெச்சிடறாங்க. (கான்ட்ரொவர்சிக்கு தமிழ்ல என்னங்க?) நாளைக்கு நம்மளையும் புடிச்சி உள்ள வச்சிட்டாங்கன்னா என்ன பண்றது? நம்மளையும்னு சொல்றதுல இருந்தே உங்களுக்கு ஏதோ  புரிஞ்சிருக்கணுமே?

    டிஸ்க்ளைமர்: பிரச்சினைல மாட்டிக்கவேணாம்னு நெனெக்கற யாரும் இந்த ஸ்டேடஸ படிச்சிட்டு ‘லைக்கோ’, பாராட்டி ‘கமெண்டோ’ போட்டுறாதீங்க பா. வேணும்னா என்ன திட்டி எழுதுங்க. ஒருவேளை அதனால உங்களுக்கு அவார்டு கூட கெடைக்கலாம்.

    ஆனா ஒன்ன மட்டும் தெளிவா சொல்லிடறேன். இது இந்த ஊர்ல மட்டும் நடக்கற விஷயம் இல்ல. உலகம் பூராவும் இருக்கறதுதான். என்னடா இவன் புதிர் போட்டுட்டே போறானேன்னு பாக்கறீங்களா? சிலர் செய்யற தப்புனாலையும், பலர் தப்பா ஜெனெரலைஸ் பண்றதாலையும் எவ்ளோ அப்பாவிங்க பாதிக்கப்படறாங்க?

    மொதல்ல என்னோட பேஸ்புக் ஸ்டேடஸ் பாக்ஸ் என்கிட்ட கேட்ட கேள்விக்கு வருவோம் – “ஹவ் ஆர் யு பீலிங், விக்ரம்?”

    இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு பதிலா, உங்ககிட்ட ரெண்டு விஷயத்தை இப்போ ஷேர் பண்ணிக்க போறேன்: 16 மணிநேரத்துக்கு முன்ன நடந்த ஒரு விஷயம், அப்புறம் 16 நாளைக்கு முன்னால நடந்த இன்னொரு விஷயம்.

    மொதல்ல 16 நாளைக்கு முன்ன நடந்த விஷயத்தைப் பத்தி சொல்றேன்:

    அன்னைக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டில, ஹாலிவுட் பவுல்வர்டு ஏரியால இருக்கற மெக்டீல தனியா உக்காந்து, ப்ரைசும், சாண்ட்விச்சும் சாப்டிட்டு இருந்தேன். திடீர்னு எனக்கு எதிர இருந்த டேபிள்ல இருந்தவங்கல்லாம் பதறியடிச்சி எழுந்து நின்னு எனக்கு பின்னாடி இருந்த கண்ணாடிச் சுவரு வழியா வெளிய பாத்தாங்க.

    நானும் எந்திரிச்சி திரும்பிப் பார்த்தப்போ, ரோடுக்கு அந்தப்புறம் இருக்கற ஸ்னோ வைட் கபே கிட்ட ஒரே பரபரப்பாக இருந்தது. சாதாரணமாக இவ்வளவு கூட்டமெல்லாம் இந்த ஊர்ல கூடாதேனு நெனெச்சிக்கிட்டே வெளியே வந்தேன். ரெண்டு மூணு போலீஸ்காரங்க சேர்ந்து எவனோ ஒருத்தன தரையில அமுக்கிப்பிடிச்சி, ரெண்டு கையையும் முதுகுக்குப் பின்னாடி வளைச்சி, அவன் கைல விலங்கு மாட்டிட்டு இருந்தாங்க. அந்தப் போலீஸ்காரங்க அவனைத் தூக்கி நிறுத்தனப்போ அவன் மொகத்தப் பாத்தவுடனே அப்படியே என் ஒடம்பெல்லாம் ஜில்லிட்டு போச்சுங்க. ஏன்னா, அவங்க புடிச்சி வெச்சிருந்தது என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் – இம்ரான்!

    அவனைக் கார்கிட்ட இழுத்துட்டுப்போறத பாத்தவுடனே, ரோட க்ராஸ் பண்ண ஓடினேன். ஆனா அதுக்குள்ள சிக்னல் விழுந்துடுச்சி. இந்த ஊர்ல இது வேற ஒரு பெரிய தொல்லைங்க! தலை போற நேரத்துல கூட ரூல்ஸ பாலோ பண்ணியாகணும். எப்படா பச்சை விழும்னு பாத்துட்டே இருந்து, விழுந்த அதே செகண்ட் அடிச்சி பிடிச்சி க்ராஸ் பண்றதுக்குள்ள, இம்ரான கூட்டிட்டு போயிட்டாங்க போலீஸ்காரங்க.

    அங்க கூடியிருந்த கூட்டத்துல சத்தம் போட்டுப் பேசிட்டு இருந்த ஒரு ஆள்கிட்ட போயி என்ன ஆச்சுனு கேட்டேன்.

    “என்னாச்சுனே தெரியல. திடீர்னு பாருக்குள்ள வந்து பாட்டில தூக்கிக் கண்ணாடி மேல போட்டு ஒடச்சிட்டு வெளிய போயிட்டான்.  நல்லவேள, அந்த நேரம் கரெக்டா இந்த பக்கமா வந்த போலீஸ் அவனை அமுக்கி பிடிச்சிட்டுப் போயிட்டாங்க.” என்று இங்கிலீஷ்ல சொன்னான்.

    அவன் ஏன் அப்படி செஞ்சான்னு எனக்கு லேசா புரிஞ்சது. ஆனா, அந்த சமயத்துல நிஜமாவே எனக்கு என்ன செய்யறதுனே தெரியல.

    ஹி ஈஸ் மை ப்ரண்ட். அவன எங்க கூட்டிட்டு போனாங்கன்னு தெரியுமா?” என்று அந்த ஆள்கிட்டயே திரும்பவும் கேட்டேன்.

    ஓ! காட் டேம்! எல்.ஏ.பி.டி ஈஸ் நாட் பார் பிரம் ஹியர். கோ தேர் அண்ட் செக்! குயிக்!” என்றான்.

    என்னோட போன்ல ஜிபிஎஸ்-ஐ ஆன் பண்ணிட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் டிபார்ட்மெண்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன். போற வழியில இம்ரான பத்தியே நெனெச்சிட்டுப் போனேன். எப்படி இருந்தவன்? நான் மொதமொதல்ல லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தப்போ, அவன் கூடத்தான் தங்கினேன். எனக்கு இங்க யாரைத் தெரியும்? எவ்ளோ ஹெல்ப் பண்ணினான்? வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர்லர்ந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு வர்ற என்ன மாதிரி ஆளுங்களுக்கு அவன் தான் கைட், ப்ரண்ட், பிலாசபர், எல்லாமே. அவன் மட்டும் இல்லேனா இங்க வந்த அடுத்த வாரமே கிளம்பி இந்தியாவுக்குப் போயிருப்பேன்.

    அவனுக்கு ஒரு கேர்ல் ப்ரண்ட் கெடச்சவுடனே, அவன் இருந்த வீட்ல என்ன விட்டுட்டு, வெஸ்ட் ஹாலிவுட் ஏரியாவுக்குப் போயிட்டான்.

    அடிக்கடி என் ரூமுக்கு வருவான். பிரெண்ட்ஸ் எல்லாரும் ஒன்னா சேர்ந்து வாரத்துக்கு ரெண்டு படம் பாப்போம். இந்தியாவிலேயே ரெண்டு நாள் ஓடாத படத்தைக்கூட சீரியசா பாத்திருக்கோம். நல்லா ஊர் சுத்துவோம். சூப்பரா போயிட்டு இருந்த அவனோட வாழ்க்கைய ஒரு ஆக்சிடென்ட் அப்படியே புரட்டிப் போட்டுடிச்சி.

    அவனுக்கு அம்மா கெடையாது. ஆறு மாசத்துக்கு முன்னாடி அவனோட அப்பாவும் சித்தியும் ஆம்பூர்லர்ந்து திண்டுக்கல்லுக்கு ஏதோ கல்யாணத்துக்குப் போகும்போது ஆக்சிடெண்ட்ல ஸ்பாட் டெட். எதிர்ல வந்த வேன் டிரைவர் தண்ணி அடிச்சிட்டு ஓட்டிட்டு வந்ததால நடந்த கொடுமை. அவங்க ரெண்டு பேர் மேலயும் ரொம்ப ஜாஸ்தியா பாசம் வெச்சிருந்ததால ஒடிஞ்சி போயிட்டான்.

    இந்தியாவுக்கு போயிட்டு திரும்பி வந்ததுல இருந்தே ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தான். திடீர்னு நைட் முழிச்சிப்பானாம். ஓடுவானாம். சாப்பாட்ட தூக்கி எறிவானாம். ரெண்டு மூணுமுற எங்க கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண அவனோட கேர்ல் ப்ரெண்ட், நாலு மாசம் சகிச்சிட்டு அப்புறம் பிரிஞ்சி போயிட்டா. அப்பலர்ந்து அடிக்கடி என் ரூமுக்கே வந்திடுன்னு கூப்பிட்டுப் பாத்தேன், அவன் கேக்கவே இல்ல. நானும் இன்னொரு ப்ரெண்ட் கார்த்திக்கும் நெறைய முறை அவன ஹாஸ்பிடலுக்கு ட்ரீட்மெண்டுக்கு கூட்டிட்டுப் போனோம்.

    மென்டல் டிப்ரஷன்தான் காரணம், ரெகுலரா மெடிசின்ஸ் எடுத்துக்கிட்டா சரியா போய்டும்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஆனா, அவன் ஒழுங்கா மருந்து சாப்பிடரானான்னு கூட எங்களுக்குத் தெரியல. அடிக்கடி அவன பாக்க அவன் ரூமுக்கு போவோம் – எப்பவுமே பூட்டியே இருக்கும்.

    “அடுத்த மாசம் இந்தியாவுக்கு போகும்போது பேசாம நான் அவன கூட்டிட்டு போயிடறேண்டா” என்று கார்த்திக் மூனு வாரத்துக்கு முன்னாடி கூடச் சொன்னான்.

    இப்படி நடந்ததெல்லாம் திங்க் பண்ணிக்கிட்டே பார்ட்டி மினிட்ஸ் நடந்ததுல வில்காக்ஸ் அவென்யூவில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் போய்ச்சேர்ந்தேன். உள்ள போயி எல்.ஏ.பி.டி ஆபீசர்கிட்ட என்ன அறிமுகப்படுத்திகிட்டு, இம்ரான் கானைப் பத்திக் கேட்டேன். அவ்வளோதான் என்னோட பாஸ்போர்ட உடனே வாங்கிக்கிட்டு, என்னப்பத்தியும், இம்ரானப் பத்தியும் எல்லா டீடைல்சயும் கேட்டு ரெகார்ட் பண்ணிட்டு என்னை போகச் சொல்லிட்டார்.

    நான் இம்ரானோட ப்ராப்லெம்ச பத்தி எடுத்துச் சொல்லி அவன பாக்கணும்னு சொன்னேன். எவ்ளோ சொல்லியும் அவர் கேக்கவே விரும்பல. கடைசியா,

    “வி கான்ட் லெட் யூ மீட் எ டெர்ரரிஸ்ட் லைக் ஹிம்” என்று கத்தினார்.

    அந்த ஆள் சொன்னதக் கேட்டு அரண்டு போயிட்டேங்க.

    ” டெர்ரரிஸ்ட்?? வாட் த ஹெக்? ஹவ் கேன் யூ கால் மை ப்ரெண்ட் எ டெர்ரரிஸ்ட்? வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்!” என்று என்னையறியாமல் ஆவேசமாக நானும் கத்திவிட்டேன்.

    “மை ப்ராப்ளெம்??? ஹிஸ் நேம் ஈஸ் த ப்ராப்ளெம். ‘கான்’ ஈஸ் த ப்ராப்ளெம். கெட் லாஸ்ட் ரைட் அவே!” என்று அவர் கத்திய கத்தில் என் காதே கிழிஞ்சிடுச்சோனு ஒரு டவுட்டே வந்திடுச்சு.

    இன்வெஸ்டிகேஷன் முடிஞ்சாத்தான் பாஸ்போர்ட்ட தருவேன்னு என்னை தொறத்தி அடிச்சிட்டார். அன்னைலர்ந்து நானும், கார்த்திக்கும் படாதபாடு பட்டுட்டோம். தொலச்சி எடுத்துட்டாங்க. ஒரு வாரம் கழிச்சி, என்னோட பாஸ்போர்ட்ட திருப்பி கொடுத்துட்டாலும், இம்ரானைப் பாக்கவே முடியல. ஒரு வாரத்துக்கு முன்னால போனப்ப அவன் தீவிரவாதிங்கறதால (??!!) எப்.பி.ஐ கஸ்டடில இருக்கான், நாங்க ஒண்ணுமே பண்ண முடியாதுனு கைய விரிச்சிட்டாங்க பாவிப்பசங்க. எப்.பி.ஐ சம்மந்தப்பட்டதுங்கறதால நம்ம இந்தியன் லாயர்சும் கைய விரிச்சிட்டாங்க.

    கார்த்திக் இந்தியன் எம்பசில ஹெல்ப் கேக்கறதுக்காக சான் பிரான்சிஸ்கோ போனான். கான்சலேட் சீரியஸா ஸ்டெப்ஸ் எடுத்துட்டு இருக்கார்னு தைரியம் சொன்னான். நானும் அலைஞ்சி திரிஞ்சி நாலு நாளைக்கு முன்னாலதான் என்னோட கொலீக் மூலமா ஒரு அமெரிக்க லாயரப் புடிச்சேன். அவர் கண்டிப்பா வெளிய கொண்டுவந்திடலாம்னு ஆறுதல் சொன்னார். அப்போதான் எனக்கு உயிரே வந்தது. வெளிய வந்தவுடனே பேசாம நானே இந்தியா கூட்டிட்டு போகலாம்னு நெனெச்சிட்டு இருக்கேன்.

    இப்போ 16 மணிநேரத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்துக்கு வருவோம்.

    அத சொல்றதுக்குப் பதிலா, இன்னைக்கு காலைல இதோ இங்க ஒரு பாபுலர் நியூஸ் பேப்பரோட பேஸ்புக் பேஜ்ல ஸ்டேடசா போட்டிருக்கற நியூஸ் அப்டேட்ட படிக்கறேன் கேளுங்க. இது உங்களுக்குப் புரிஞ்சா, என் வலியும் உங்களுக்குப் புரிஞ்சிடுச்சுனு அர்த்தம்:

    “சான் டியகோ நகரில் நேற்று மாலை ஒரு ‘கன் மேன்’ (??!!) – அதாவது ‘துப்பாக்கி ஏந்திய ‘நபர்’ – ஒரு வணிக வளாகத்தில் புகுந்து 23 பேரை சரமாரியாகச் சுட்டுக் கொன்றுவிட்டார். ‘ஆன்டர்சன்’ என்கிற அந்த ‘கன் மேன்’ ஒரு மன நோயாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரை மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.”

    Share
  • ஏன் முதல் ஏடு வரை…

     

    மாதவன் இளங்கோ

     

    சிறிது குழப்பமான தலைப்புதான்.

    என்ன செய்வது? சில மாதங்களாகவே இது போன்ற குழப்பமான விஷயங்கள்தான் என் மனதிற்குள் உதிக்கிறது. ஆனால், இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன் இந்தத் தலைப்பில் இருக்கும் குழப்பம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே!

    ஓரிரு நாட்களுக்கு முன்பு எனது பெல்கிய நண்பருக்கு ‘கிப்ளிங் முறை’ (Kipling Method) பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன்.

    அது என்ன ‘கிப்ளிங் முறை’ என்று உங்கள் புருவங்கள் சுருங்குவது தெரிகிறது.

    Rudyard Kipling – எனது ஆதர்ச கவிஞர், எழுத்தாளர். தலைவலி வந்தால் மருந்தை உட்கொள்வது போல, எப்போதாவது மனவலி வந்தால் அவருடைய ‘IF’ என்கிற கவிதைதான் எனக்கு மருந்தே! என்னைப் பொறுத்தவரையில், IF – உலகின் தலைசிறந்த கவிதைகளில் ஒன்று.

    அவரது “The Elephant’s Child” கதையில் வரும் “I KEEP…“ என்கிற கீழ்வரும் கவிதைதான் கிப்ளிங் முறைக்கு அடிப்படையாக அமைந்தது.

    I KEEP six honest serving-men

     (They taught me all I knew);

    Their names are What and Why and When

     And How and Where and Who.

    நாம் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண முயலும்போதும் அல்லது ஒரு திட்டத்தைத் (Project) தொடங்கும்போதும், ‘ஏன்?’, ‘என்ன?’, ‘எப்போது?’, எங்கே?’, ‘எப்படி?’ மற்றும் ‘யார்?’ என்கிற இந்த ஆறு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டும். இந்த ஆறு கேள்விகளுக்கு விடையளித்தாலே பாதித் தீர்வு கிடைத்ததற்குச் சமம், பாதித் திட்டத்தை முடித்ததற்குச் சமம்.

    இது ஒன்றும் நமக்குப் புதிய விஷயமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது பாட்டனார் ‘வினைசெயல்வகை’அதிகாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று விளக்கிவிட்டார்.

    ஆனால், என் மகனுக்கு என்னவோ இவர்கள் இரண்டு பேரையும் விட,   டாய்ச்சி ஓனோ-வைத்தான் நிறைய பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஓனோ, ஆறு கேள்வியெல்லாம் வேண்டாம், ஒரே ஒரு கேள்வி போதும் – ‘ஏன்?’. ஆனால், அதை விடாமல் ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’ என்று கேட்டுகொண்டே போக வேண்டும் என்றார்.

    இதைத்தான் செம்மையாக செய்து கொண்டிருக்கிறான் என் மகன் – ஒனோவை பற்றியெல்லாம் தெரியாமலேயே! நேற்று முழுவதும் ‘ஏன்? ஏன்? ஏன்?’ என்று அவன் கேட்ட கேள்விகளை எண்ணியிருந்தால் நிச்சயமாக எண்ணிக்கை ஐநூற்றைத் தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

    “ஏன் அலுவலகத்திற்குப் போகிறீர்கள்?” என்பதில் தொடங்கி “ஏன் பாட்டு பாடுகிறீர்கள்?” என்பதில் முடியும் (முடியாது.. நீளும்!). ஏதோ நான் அலுவலகத்துக்குச் செல்வதே பாட்டு பாடுவதற்காகத்தான் என்று தோன்றுமளவிற்கு எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ முடியும் அந்தக் குழந்தையின் கேள்விகள்.

    சிறிது சிந்தித்துப் பார்த்தோமானால், இப்படி ஏன்-களைப் போட்டுக்கொண்டே செல்லும் போதுதான் ஒரு சிக்கலுக்கான அடிப்படைக் காரணத்தை தெரிந்துகொள்ள முடியும். அடிப்படைக் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் நம்மால் எந்தவொரு சிக்கலையும் தீர்க்கவே முடியாது.

    நான் அலுவலகத்தில் என் அணியினருக்கு அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம்: “அறிகுறிகள் எல்லாம் மூல காரணங்கள் அல்ல. அறிகுறிகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அறிகுறிகளே காரணங்கள் அல்ல. எனவே காரணங்களைத் தேடுங்கள்!”.

    ‘ஏன்-கள் மூல காரணங்களை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் சாதனங்கள்!’.

    சிறுவர்களுக்கு இருக்கும் இந்தக் ‘கேள்விகேட்டுப் பெறும் திறம்’, அவர்கள் வளரும் போது சிறிது சிறிதாகக் குறைந்து, பின்னர் முற்றிலும் அழிந்தே போய்விடுகிறது. இவற்றிற்கான காரணங்களை சற்று அலசுவோம்.

    • குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கச் சோம்பல்பட்டுக்கொண்டு , அவர்களை நன்றாகத் திட்டி, அதனைத் அவர்கள் தொடரவிடாவண்ணம் ஒருவித குற்ற உணர்ச்சியையை அவர்களுக்குள் ஏற்படுத்தி விடுகிறோம்.
    • இன்னும் சொல்லப்போனால், அவர்கள் சிறிது வளர்ந்த பிறகு கேட்கும் நிறைய கேள்விகளுக்கு நமக்கு உண்மையாக பதிலே தெரிவதில்லை. ஏனெனில் நம்மில் பலர் அறிவை வளர்த்துக்கொள்ளப் படிப்பதில்லை – அந்தப் பழக்கமே இருப்பதில்லை.
    • ‘கற்றலின் கேட்டல் இனிது’ என்பதுபோல பிறர் சொல்வதைக் கேட்டோ, கவனித்தோ அறிவைப் பெறலாம். ஆனால் யார் பேசுவது? பெரும்பாலான நேரம் நாமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சேர்ந்து கொண்டு சினிமாவைப் பற்றியோ அல்லது வீடு, மனை விற்றல்-வாங்கல் தொடர்பாகத்தான் பேசுகிறோம்..

    அறிவியலும், இலக்கியமும், வரலாறும், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களைப் பற்றியுமா பேசுகிறோம்?

    “அதையெல்லாம் எதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும்? இணையம் இருக்கிறதே, விக்கிபீடியா இருக்கிறதே!” என்று ஒரு கேள்வி எழலாம்.

    Wikipedia is a great platform. However, It may not be complete. நானும் ஒரு விக்கிப்பீடியன் என்கிற முறையில், இதனைக் கூறமுடியும். நாங்கள் எங்கோ எப்போதோ, படித்தோ கேட்டோ தெரிந்துகொண்ட விஷயங்களை மற்றவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்கிற உந்துதலால் விக்கிபீடியாவில் பதிவு செய்கிறோம். அவற்றை யார் வேண்டுமானாலும், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் செம்மைப்படுத்த முடியும்.

    ஆனால், விக்கிபீடியாவைக்கூட இன்று எந்த அளவிற்கு உபயோகிக்கிறோம் என்று தெரியவில்லை.

    ஒரு காலகட்டத்தில் சினிமாவில் போதிக்கப்படுவது மட்டுமே அறிவாக இருந்தது மாறி, இப்போது FACEBOOK-இல் பகிர்ந்து கொள்ளப்படும் விஷயங்கள் மட்டுமே நம் அறிவை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது என்பது ஒரு Painful reality!

    இவையனைத்துமே ‘நுனிப்புல் மேய்வது’ போலத்தான். நாம் பார்க்கும் விஷயங்களைப் பற்றிய நுண்ணறிவை வளர்த்துக்கொள்ள இவை சிறிதும் உதவாது.

    வேறு என்னதான் வழி?

    ஏடுகளை வாங்கிப் படிக்கலாம்.

    ஆயிரம்தான் விஷயங்கள் இணையதளத்தில் பொதிந்து கிடந்தாலும், புத்தகத்தை கையில் எடுத்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாசிப்பது போல் வராது.

    கடந்தமுறை இந்தியாவிற்கு வந்தபோது நண்பர்களைச் சந்திக்கக்கூட  நேரமே போதவில்லை. ஆனால், Landmark-ற்கு இருமுறையும், Higgin Bothams-ற்கு ஒருமுறையும் சென்றேன்.

    எனக்கு இதுபோன்ற புத்தகக்கடைகள் – மது அருந்துபவர்களுக்கு TASMAC போன்றது. இதைவிட மோசமான உவமை இருக்கமுடியாது என்று உங்களுக்குத் தோணலாம். இதைக்கூறிய உவமைக்கவிஞர் வேறு யாருமல்ல – என் மனையாளே தான்.

    இதற்கான காரணத்தைச் சொன்னால், அவருடைய இந்த உவமை உங்களுக்குச் சரியெனப் படலாம். புத்தகக் கடைகளைக் கண்டாலே என் கைகள் பரபரவென்றும், கால்கள் நடுநடுங்கவும்  ஆரம்பித்துவிடும். உள்ளே சென்றுவிட்டு வந்தால் CARD நன்றாகவே தேய்ந்து போயிருக்கும்.

    இந்தமுறை நான் வாங்கிய புத்தகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

    1. பாற்கடல் – லா.ச.ராமாமிருதம் (சந்தியா பதிப்பகம்)

    2. புத்ர – லா.ச.ராமாமிருதம் (சந்தியா பதிப்பகம்)

    3. நடந்தாய்; வாழி, காவேரி! – தி.ஜானகி ராமன் – சிட்டி (காலச்சுவடு பதிப்பகம்)

    4. வாழும் கணங்கள் – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

    5. பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

    6. நானும் என் எழுத்தும் – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

    7. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)

    8. நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

    9. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

    10. வாசக பர்வம்  – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

    11. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (உயிர்மை பதிப்பகம்)

    12. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (விசா பதிப்பகம்)

    13. கண்ணீரில்லாமல் – சுஜாதா – (உயிர்மை பதிப்பகம்)

    14. இன்னும் சில சிந்தனைகள் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

    15. எழுத்தும் வாழ்க்கையும் – சுஜாதா – (உயிர்மை பதிப்பகம்)

    16. தமிழ் அன்றும் இன்றும் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

    17. சுஜாதாவின் நாடகங்கள் – முழுத்தொகுப்பு (உயிர்மை பதிப்பகம்)

    18. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

    19. டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன – மனுஷ்யபுத்திரன்  (உயிர்மை பதிப்பகம்)

    20. பூமித்தாயே – கோ.நம்மாழ்வார் (இயல்வாகை பதிப்பகம்)

    21. Famous Chinese Short Stories – Lin Yutang (Classic Library)

    22. Great Short Stories – Anton Checkov (Classic Library)

    23. By the River Piedra I sat down and Wept – Paulo Coelho (Harper Collins)

    24. Sudden flash of a thunder – OSHO (Wisdom Tree)

    இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே?

    இவற்றில் சில நான் ஏற்கனவே படித்தவை. இது தவிர, திரு.அண்ணாகண்ணன் அவர்கள் வேறு மூன்று புத்தகங்கள் அனுப்பி இருந்தார். விமானத்தில் 30 கிலோ எடைக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் புத்தகங்களே கிட்டத்தட்ட இருபது கிலோ தேறும். என்ன செய்வது, இங்கெல்லாம் தமிழ் புத்தகங்களே கிடைப்பதில்லையே!

    ‘யாம் பெற்ற இன்பம் யாவரும் பெற’ வேண்டுமென்பதால் கூறுகிறேன்.  விரைவாய்ச் சென்று புத்தகங்களை வாங்குங்கள்! வாசியுங்கள்! UPSC, CAT, GRE, GMAT இவற்றிற்குத் தயாரிப்பது போல, ஏதோ ஒரு இலக்கிற்காக அல்லாமல், அனுபவத்திற்காக வாசியுங்கள். வாசித்தல் என்பது மனதிற்கினிய விஷயம்.

    ‘ஏன் என்பதில் தொடங்கி ஏடுகள் வரை’பேசிவிட்டோம்!

    வாசி!

    வல்லமைக்கு வா…SEE …!

    Share