அன்று அதிகாலை ஒரு முழுநாள் தேர்வுக்காக லூவன் நகரிலிருந்து ப்ரசல்சு நகரம் செல்ல வேண்டியிருந்தது.
லூவன் எகானோம் டாக்சி நிறுவனம், சொன்னதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வண்டி அனுப்பி இருந்தார்கள். பென்சு காரில் ஏறி அமர்ந்தவுடன் கோனிங்கு போடெவெய்ன்லான் நெடுஞ்சாலையில் காரை விரட்டினார் என் சாரதி.
‘ஹுய மார்ஹன்’ என்பதற்குப் பதிலாக ‘குட் மார்னிங்’ என்று கூறிய பாங்கும், அவரது உருவ அமைப்பும் அவர் நிச்சயம் ஃபிளம்மியர் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது.
“ஆர் யூ ஃப்ரம் போலன்ட்?” என்று கேட்டேன்.
“இல்லை, ரஷ்யா!” என்று கூறியவர், “தாங்கள் பாகிஸ்தானியா?” என்றார்.
“எப்படி இருவருமே ‘சரியாக’ தவறாகக் கேட்கிறோம்?” என்று நினைத்துக்கொண்டே, “இல்லை, இந்தியன்!” என்றேன்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, “தாங்கள் ரஷ்யா சென்றதுண்டா?” என்று கேட்டார்.
“இல்லை, நண்பரே. ஆனால், நானும் என் பள்ளி நண்பனும் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்பட்டதுண்டு.” என்றேன்.
அவர் புன்னகைத்தார். நான் தொடர்ந்து, “நீங்கள் ‘தாய்’ (தி மதர்) நாவலைப் படித்ததுண்டா?” என்று கேட்டேன்.
அவர் மிகுந்த ஆச்சர்யத்துடன், “உங்களுக்கு மதர் நாவலைப் பற்றி எப்படித் தெரியும்?” கேட்டார்.
“மாக்சிம் கோர்கி என் அபிமான எழுத்தாளர்!” என்றேன்.
பரவசத்தோடு, “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு எந்த கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும்?” என்று கேட்டார்.
“அந்தத் தாய் – பெலகேயா நீலவ்னா!” என்றேன்.
“எனக்கு பாவெல்!” என்றார்.
தாய் பற்றிய சிலமணித்துளி உரையாடலில் இலக்கை சென்றடைந்தோம்.
“என் பெயர் ‘ப்ரமான் சூபியங்க’ (Roman Zubenko)” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, என் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, என் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு, “மாலையும் நானே வர விரும்புகிறேன்!” என்று கூறிவிட்டு சென்றார். மாலையும் வந்தார். மீண்டும் பேசினோம். பேச்சு தாய், மாக்சிம் கோர்கி, ஆன்டன் செக்கோவ், ரஷ்யா, இந்தியா என்று சுற்றிவந்தது. இதோ, இன்று, இதை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் கூட ஜி-டாக்கில் ஆன்லைனில் இருக்கிறார்.
மறக்க முடியாத நாள்! மறக்க முடியாத மனிதர்!
“மொழி இனத்தை இணைக்கிறது. இலக்கியம் உலகையே இணைக்கிறது.”
“மாதவன் இளங்கோ”, தமிழகத்தின் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில், 1979 ஆம் ஆண்டு, திரு. பாரதி-திருமதி. சியாமளா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருப்பத்தூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், கோயமுத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ‘இயந்திரவியல்’ துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். இந்திய மேலாண்மை கழகத்தில் பொது மேலாண்மையும் பயின்றவர்.
கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதிவரும் இவரது படைப்புகள் வல்லமை, சொல்வனம், திண்ணை, சிறகு, விகடன், தினமலர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, இலக்கியம், மெய்யியல், உளவியல், மற்றும் மேலாண்மையில் மிகுந்த நாட்டமுடையவர்.
வல்லமை இணைய இதழின் ‘வல்லமையாளர்’ விருது பெற்றவர். வல்லமை இணைய இதழ் – ஐக்கியா அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைகளை மூத்த கலை இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களும், மூத்த எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களும், சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து மதிப்புரை வழங்கியுள்ளார்கள். திரு.வெ.சா அவர்கள், திண்ணை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரைகளில் இவரது படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கணையாழி இலக்கிய இதழிலும் இவருடைய சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ‘இப்போது பெல்ஜியத்திலிருந்து ஒரு மாதவன் இளங்கோ’ என்கிற தலைப்பில் விரிவாக விமர்சனம் எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இவரது பங்கு – ஆங்கில விக்கியில் தொடங்கி, தற்போது தமிழ் விக்கியில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், திருத்தியும் வருவதன் மூலம் தொடர்ந்து வருகிறது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அம்மாவின் தேன்குழல் அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
தற்போது ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சு மாநகருக்கு அருகிலுள்ள லூவன் நகரில் தன் மனைவி தேவிப்ரியா மற்றும் மகன் அம்ரிதசாயுடன் வசித்து வருகிறார். பெல்ஜியத்தின் முதன்மையான வங்கி ஒன்றில் செயல் திட்ட மேலாளர், பயிற்சியாளர், விரிவுரையாளர், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி எனப் பல திறக்குகளில் இயங்கி வருகிறார். அண்மையில் ஏஜைல் சர்வதேச கூட்டமைப்பின் பெல்ஜியம் பிரிவின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.