மாதவன் இளங்கோ

"மாதவன் இளங்கோ", தமிழகத்தின் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில், 1979 ஆம் ஆண்டு, திரு. பாரதி-திருமதி. சியாமளா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திருப்பத்தூரில் பள்ளிக்கல்வி பயின்ற அவர், கோயமுத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி 'இயந்திரவியல்' துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். இந்திய மேலாண்மை கழகத்தில் பொது மேலாண்மையும் பயின்றவர். கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதிவரும் இவரது படைப்புகள் வல்லமை, சொல்வனம், திண்ணை, சிறகு, விகடன், தினமலர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, இலக்கியம், மெய்யியல், உளவியல், மற்றும் மேலாண்மையில் மிகுந்த நாட்டமுடையவர். வல்லமை இணைய இதழின் 'வல்லமையாளர்' விருது பெற்றவர். வல்லமை இணைய இதழ் - ஐக்கியா அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைகளை மூத்த கலை இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களும், மூத்த எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களும், சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து மதிப்புரை வழங்கியுள்ளார்கள். திரு.வெ.சா அவர்கள், திண்ணை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரைகளில் இவரது படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கணையாழி இலக்கிய இதழிலும் இவருடைய சிறுகதைத் தொகுப்பைப் பற்றி 'இப்போது பெல்ஜியத்திலிருந்து ஒரு மாதவன் இளங்கோ' என்கிற தலைப்பில் விரிவாக விமர்சனம் எழுதியுள்ளார். விக்கிபீடியாவில் இவரது பங்கு - ஆங்கில விக்கியில் தொடங்கி, தற்போது தமிழ் விக்கியில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதியும், திருத்தியும் வருவதன் மூலம் தொடர்ந்து வருகிறது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான அம்மாவின் தேன்குழல் அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. தற்போது ஐரோப்பாவில் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சு மாநகருக்கு அருகிலுள்ள லூவன் நகரில் தன் மனைவி தேவிப்ரியா மற்றும் மகன் அம்ரிதசாயுடன் வசித்து வருகிறார். பெல்ஜியத்தின் முதன்மையான வங்கி ஒன்றில் செயல் திட்ட மேலாளர், பயிற்சியாளர், விரிவுரையாளர், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி எனப் பல திறக்குகளில் இயங்கி வருகிறார். அண்மையில் ஏஜைல் சர்வதேச கூட்டமைப்பின் பெல்ஜியம் பிரிவின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மின்னஞ்சல் முகவரி: madhavan.elango@gmail.com