Author: விவேக்பாரதி

  • வல்லமையாளர் விருது 306 – பனை சதிஷ்

    -விவேக்பாரதி

    நம் வாழ்க்கை வேகமயமாக மாறி வருகிறது. மரபு சார்ந்த நம் அடையாளங்கள் ஒவ்வொன்றும் எப்படியோ மறந்து வருகின்றன. இயற்கை விவசாயம் என்ற சொல்லை நாம் போராட மட்டும் தான் காண முடிகிறது. இந்த அவலநிலைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் கூறுகள் நம்மைச் சிந்திக்க வைப்பதில்லை. மாறாக தன் வளர்ச்சியை நம் வளர்ச்சியாக மாற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட, இளைஞர்கள் அறிவார்ந்த புரட்சிகளைக் கைகளில் எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு இளைஞர்தான் இந்த வாரத்தின் வல்லமையாளர்.

    நீர் வளத்தைக் காக்க இயற்கை நமக்குக் கொடுத்த அற்புதமான வரம், பனை மரம். ஆழ்ந்து விரிந்து தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லும் வேர்களைக் கொண்டவை பனைமரங்கள். ஆறு மற்றும் குளத்தின் கரை ஓரங்களில் பனைமரங்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் குளங்களெல்லாம் வற்றி நிலங்களாயின. நமக்கும் ஏனோ பனை மரங்களின் மகிமை மட்டும் இதுவரை புரியாமலேயே இருக்கிறது.  பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற சிந்தனையோடும் உழைப்போடும் தன் வாழ்க்கையை அவற்றுக்காகவே அர்ப்பணிக்கிறார் பனை சதிஷ் என்னும் இளைஞர். இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வாரின் வழியில் பயணிக்கிறார் இவர்.  சமகால இளைஞர்களைப் போல இவரும் வாழ்க்கைத் தேவைக்காகத் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்திருந்தாலும், பூமியில் பனை மரங்கள் போன்ற ஒரு வாழ்வாதாரத்தைக் காக்கப் பெரிதும் முயற்சியெடுத்து வருகிறார். பனை மரங்களின் பயன்களைச் செல்லும் இடங்களில் எல்லாம் தீர்க்கமாக வலியுறுத்தி வருகிறார்.

    பனை சதிஷ், தன் குழுவுடன் இணைந்து சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 2000 பனை விதைகளை சென்ற பருவத்தில் விதைத்திருக்கிறார். இதனைப் பாராட்டி நேற்று (28.04.2019) கவிப்போம் அறக்கட்டளை இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது. துரித உணவுக் கலாச்சாரத்தில் மயங்கி, நம் கலாச்சாரத்தைத் தொலைத்து நிற்கும் இளைஞர்கள் மத்தியில் இவர் இயற்கை உணவுப் பழக்கங்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார்.

    “சிலரிடம் பனை பற்றி எத்தனை விழிப்புணர்வோடு பேசினாலும் அவர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் அதனைக் கடந்துவிடுவது இயற்கை, ஆனால் இளஞ்சிறார்கள் அப்படி அல்ல, பனை விதைகளை விளையாடக் கொடுத்து, நடச்சொல்லி, பனை மரங்களைப் பற்றிய பயன்பாட்டை விளக்கினால் அவர்கள் இந்தப் புரட்சியை மிகச் சாதாரண விளையாட்டாக செய்வார்கள்” என்று ஒரு அமைதிப் புரட்சியைச் செய்து நம்மையும் சேர்த்துப் புளகாங்கிதம் அடைய வைக்கிறார் பனை சதீஷ்.

    அவருடைய சாதனையையும், விடா முயற்சியையும் பாராட்டுகிறோம். வல்லமை மின்னிதழ் குழு பனை சதிஷுக்கு “வல்லமையாளர்” என்ற விருதை அளித்து கௌரவம் சேர்க்கிறது. இயற்கை வேளாண்மையுடைய வல்லமையை இன்னும் உலகறிய வைக்கவும் வாழ்த்துகிறோம்.

    பனை சதிஷ் குறித்து அறிய அவருடைய முகநூல் பக்கம் பார்க்கவும். (https://www.facebook.com/sathishkumar.pichandi)

    பனை குறித்த தகவல்கள் தேவைப்பட்டால் அவருடைய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் (99949 69088)

    Share
  • வானுக்கு மேல்

    -விவேக்பாரதி

    வானம் எனக்கு எப்போதும் அதிசயமானது. வானத்தைப் பார்த்தாலே என் மனத்தில் வார்த்தை மழை பெய்யும். “பாரதி யார்?” நாடகத்திற்காக சிங்கப்பூர் செல்லும் வழியில் விமானத்தில் எழுதிய கவிதை…

    வானுக்கு மேல்வந்து பாருங்களேன்! இங்கு
    வண்ணங்கள் இல்லையோர் வேற்றுமை இல்லை
    நானென்றும் நீயென்றும் போட்டிகள் இல்லை
    நாடில்லை கோடில்லை நாடகம் இல்லை!

    காலுக்குக் கீழ்கோடி மேகம் மிதக்கும்
    காற்றுக்கு நாம்தோழன் லீலை இனிக்கும்
    மேலுக்கும் கீழுக்கும் சண்டை இல்லாமல்
    மென்மனம் குழந்தையாய்த் தாவிக் குதிக்கும்!

    அமைதியாம் வீட்டிற்கு வாசல் திறக்கும்
    ஆனந்தம் நெஞ்சத்தில் ஊஞ்சல் அமைக்கும்
    சுமைநீங்கப் பெறும்போது சொர்க்கம் திறக்கும்
    சுறுசுறுப் பாய்ரத்த நாளம் துடிக்கும்!

    யாருக்கும் கிட்டாத காட்சி கிடைக்கும்
    யவ்வணம் நம்மோடு சேர்ந்தே சிரிக்கும்
    பாருக்குள் ஒருவிந்தை வானம் திறக்கும்
    பார்பார்பார் வாவென்று மேகம் அழைக்கும்

    வானத்தை நமக்காக தேவன் படைத்தான்
    வானத்தின் அடிவாழ நம்மைப் படைத்தான்
    ஞானத்தில் உயர்ந்தோர்க்கு வானம் மனத்துள்
    நம்போன்ற ரசிகர்க்கு மனமே அதற்குள்!

    மேலேறு வதுபோல ஆட்டம் நடக்கும்
    மெச்சினால் சிலநொடியில் தரையும் நகைக்கும்
    காலுண்டு காலில்லை நாமே பறப்போம்
    ககனத்தின் நிலைகண்டு கவிதை படிப்போம்!

    இந்த வானுக்கு மேல்வந்து பாருங்களேன்!!

    -11.04.2019

    Share
  • வல்லமையாளர் 305 – கோமதி மாரிமுத்து

    விவேக்பாரதி

    வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் எத்தனையோ தடைகளைத் தாண்டி, சுமைகளை ஏந்தி நாம் ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம். வெற்றி தோல்வி என்பதெல்லாம் இல்லாமல் பாதியிலே நாம் பந்தயத்திலிருந்து விலகியும் விடுகிறோம். ஆனால் உள்ளம் முழுவதிலும் சாதிக்கும் திண்ணத்துடன் ஓடும் வீரர்கள் பந்தயங்கள் எத்தனை வந்தாலும் வென்றுவிடுகிறார்கள். அப்படிப்பட்டவொரு வீரரே வீராங்கனை கோமதி மாரிமுத்து.

    போதிய அளவு மைதான வசதியோ, பேருந்து வசதியோ கூட இல்லாத முடிகண்டம் என்னும் ஊரிலிருந்து தனது ஒவ்வொரு பயிற்சியையும் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மேற்கொண்டு ஓட்டம் பயில ஓடி ஓடி உழைத்த கோமதி மாரிமுத்து அவர்கள் கத்தார் நாட்டில் நிகழ்ந்த 23 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் கலந்துகொண்டு இந்திய நாட்டின் சார்பாக தங்கம் வென்றுள்ளார்.

    காலை 3 மணி முதல் தன் நாளின் ஓட்டத்தைத் தொடங்கி, பள்ளி அதன்பின் கல்லூரி என்று தன் இளமைப் பருவம் முழுக்கவும் தன்னை ஓட்டப் பந்தயத்திற்காகவே தயார் செய்த கோமதி அவர்களுக்கு அவரது தந்தை மாரிமுத்து அவர்கள் பின்னால் உந்து சக்தியாக செயல்பட்டு இவரது இன்றைய வெற்றியைக் காண பெரிதும் ஆசைப்பட்டார் என்று சொன்னால் அது மிகையன்று. தன் மகள் வென்றதையே பத்திரிகையாளர்கள் தம் இல்லம் சூழ்ந்ததை வைத்துத் தெரிந்து கொண்ட தாய் “எங்க பாப்பா எப்டியோ ஓடி ஜெயிச்சிட்டா” என்று உருக்கமாக பேட்டியும் அளித்துள்ளார்.

    விளையாட்டுப் பிரிவில் தேர்ச்சிபெற்று, பெங்களூருவில் வருமான வரித்துறையில்  பணியாற்றிக் கொண்டிருக்கும் கோமதி மாரிமுத்து, தனது மாபெரும் துணையான தம் தந்தையை இழந்த இரண்டாவது ஆண்டில் அவரது கனவை நனவாக்கியுள்ளார். 800 மீட்டர் தடகளப் போட்டியில் அதன் தூரத்தை 2 நிமிடம் 70 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

    தமிழகத்தில், திருச்சி மாவட்டம் முடிகண்டம் பகுதியிலிருந்து இந்தியா சார்பாக போட்டியிட்டு வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துத் தந்திருக்கும் வீராங்கனை கோமதி மாரிமுத்து அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் “வல்லமையாளர்” என்னும் விருதினைப் பெருமையோடு அளித்து இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டுமென்று வாழ்த்துகிறது.

    Share
  • “என்னில் சாயி, எல்லாம் சாயி” – இசைத்தகடு மற்றும் புத்தக வெளியீடு

    -விவேக்பாரதி

    சென்ற வாரம் சனிக்கிழமை மாலை 4.00 மணி அளவில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சாய்பாபா ஆலயத்தில் “எல்லாமே சாயி” என்னும் இசைக் குறுந்தகடு வெளியானது. கவிமாமணிகள் க.ரவி மற்றும் சு.ரவி, கவிஞர்கள் சாய்ரேணு, நதிநேசன் ஆகியோர் எழுதி, க.ரவி அவர்கள் இசையமைத்து, திருமதி கிருபா ரமணி அவர்கள் பாடியிருந்த அந்தக் குறுந்தகட்டையும் அதனையொட்டி திருமதி சாய்ரேணு எழுதிய “என்னில் சாயி, எல்லாம் சாயி” என்ற சாய் சரித்திர நூலையும் சொல்லின் செல்வர் சுகி.சிவம் அவர்கள் வெளியிட்டு சாய்நாதன் மகிமைகளைக் குறித்து ஓர் சிற்றுரை ஆற்றினார். A forum for Art & Poetry என்னும் வாட்ஸாப் குழுவின் முன்னெடுப்பாக நிகழ்ந்த இந்த நிகழ்வில் Forum குழுவைச் சேர்ந்த நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர். சாய்நாதன் தாமரை மலர்ப்பதங்களில் குறுந்தகடும் புத்தகமும் சமர்ப்பிக்கப்பட்டது. சாய் பக்தர்கள் ஒருசேர சில பஜனைப் பாடல்களை சாய்நாதன் சன்னிதியில் பாடிய பின்னர் புத்தக வெளியீடும் அதைத் தொடர்ந்து உரை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    “குருமார்கள் மனிதர்களின் நிலவழிப் பயணத்தை விமானத்தின் வான்வழிப் பயணமாக மாற்றும் டேக் ஆஃப் செய்வதற்குப் பெரிதும் உதவுகிறார்கள், சாய்நாதர் கிருபை அத்தகையது” என்று ஆழமான உண்மைகளைச் சுகி சிவம் பேசினார். வாழ்த்துரை வழங்கிய சு.ரவி அவர்கள் “சாய்நாதம் மீது கொண்ட அளவற்ற பக்தியும் அவரது அருளும் தான் இத்தகைய படைப்புகள் உருவாகக் காரணம்” என்று பாராட்டினார்.

    அதன் பின்னர் சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பேராசிரியர் வ.வே.சு, திரு. பாலகிருஷ்ணன், திருமதி ஷோபனா ரவி, திருமதி மங்கலசுந்தரி, கவிஞர் சியாமளா ராஜசேகர், திருமதி ராணி, திரு. ராஜு போன்ற எண்ணற்ற நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நிகழ்வில் கலந்து கொண்டமை மேலும் சிறப்பைச் சேர்த்தது.

    கீழே நிகழ்வின் நிழற்படங்கள்

    Share
  • இந்த வார வல்லமையாளர் – 304

    விவேக்பாரதி

    மாறிக்கொண்டே வரும் இந்த துரித உணவுக் கலாச்சாராத்தில் உணவு என்பதும் நம் வாழ்க்கையில் ஆடம்பரப் பொருள்களுள் ஒன்று என்று ஆகிவிட்டது. பெருநகரங்களில் மட்டுமே கிடைக்கும் என நம்பப் படுகின்ற துரித உணவுகள், சமைக்கும் முறைகளில் நவீனமான கருவிகள் தேவைப்படும் எனப் பலர் கருதும் உணவுகளை ஒரு கிராமத்துச் சூழலில் சமைத்து வருகிறார் ஒருவர். அனைத்து வகையான உணவுகளையும் சிறிதளவு என்றில்லாமல் குறைந்தபட்சன் 50 நபர்கள் சாப்பிடும் அளவு சமைத்து குழந்தைகளுக்கான விடுதிகளிலும், கோவில்களிலும் ஆதரவற்றோருக்கு அளித்து வருகிறார்.

    இதிலே வியக்கத்தக்க செய்தி என்னவென்றால் அவர் சமைக்கும் முறைகளைக் காணொலிகளாக்கி யூடியூபில் வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் அவர் டிரெண்டிங் ஆகி வருவது தான். “வில்லேஜ் ஃபுட் ஃபேக்ட் ரி” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் யூடியூப் பக்கம் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்களையும் 200 க்கும் மேற்பட்ட காணொலிகளையும் கொண்டுள்ளது. அதிகப்படியான தகவல்க, ஆராவாரமான பேச்சுகள் என்பதெல்லாம் இல்லாமல் சிறிய எளிய முறையில் 8 முதல் 10 நிமிடங்களில் முடிந்துவிடும் காணொலிகளின் மூலமாக இத்தனை பெரிய ரசிக வட்டத்தை வில்லேஜ் ஃபுட் ஃபேக்ட ரி பிடித்திருக்கிறது எனலாம்.

    இதில், சமையல் செய்து வழிநடத்திச் செல்பவர் திரு. ஆறுமுகம் அவர்கள். பெரிய அளவில் உணவு சமைத்து ஆதரவற்றோருக்கு வழங்கும் அடிப்படையில் பிரம்மிக்க வைக்கும் நிறைய சாதனைகளை இவர் நிகழ்த்தியிருக்கிறார். அதில் சென்ற வாரம் இவர் செய்த நுங்கு சர்பத்தும் ஒரு உதாரணம்.

    சுமார் 1500 நுங்குகளைக் கொண்டு தன் ஊர் மக்களுக்கு அவர் செய்துன்கொடுத்த, நமக்குச் செய்து காட்டிய நுங்கு சர்பத் பார்க்கும்போதே கண்கள் வழியே மனத்துக்குக் குளிர்ச்சியைப் பரப்பியது. இதோ காணொலிக்கான சுட்டி,

    நம் பாரம்பரிய வகை உணவுகளையும் துரித உணவுகளுடன் சேர்த்துச் சமைத்துக் காட்டி இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து, வாட்ஸாப், முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் மிகவும் பிரபலமாகி இருக்கும் வில்லேஜ் ஃபுட் பேக்டரியைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் அவர்களை இந்த வாரத்தின் வல்லமையாளர் என்று அறிவிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். அவர்களது இந்தப் பணி தொடரவும் வல்லமை மின்னிதழ் குழுமம் வாழ்த்துகளை இங்கே பதிவு செய்கின்றது.

     

    Share
  • உலகம் அளந்து பார்க்காத ஆழம், பெண்மை!

    -விவேக்பாரதி

    பெண்மை என்பதோர் ஆயுதம் – நம்
    பெருமை அளந்திடும் சீதனம்
    பெண்மை என்பதோர் பூவனம் – அது
    பேண வேண்டிய தோர்வளம்!
    பெண்மை காப்பதே நம்கடன் – அப்
    பேறு வாய்ப்பதே தெய்வதம்
    பெண்மை வாழ்கெனப் பாடுவோம் – எந்தப்
    பெண்ணைக் கண்டாலும் போற்றுவோம்!

    ஆணின் பலமெலாம் ஊனிடம் – பெரும்
    ஆன்ம பலமெலாம் பெண்ணிடம்
    காண வேண்டிய கீர்த்திகள் – நம்
    காரி கைவசம் பூர்த்திகள்
    பேணும் நல்லறம் பெண்ணிடம் – பல
    போரும் அமைதியும் பெண்ணிடம்
    தூணைப் போலதைக் காத்துதான் – எதிர்
    தோன்றும் போதெலாம் வாழ்த்துவோம்!

    வானின் மாமழை தாய்க்குணம் – அலை
    வண்ணக் கடலும் காதல்மனம்
    சேனை ஆயிரம் ரௌத்திரம் – பல
    செழுமை பெண்கொளும் பூரணம்!
    ஞானம் அவர்சொலும் போதனை – அவர்
    நாமம் தேன்வரும் கீர்த்தனை
    தானு ணர்ந்திதை ஏத்துவோம் – பெருந்
    தண்மை பெண்களைப் போற்றுவோம்!!

    Share
  • நூல்நோக்கம்

    -விவேக்பாரதி

    சித்தார்த்தனாகும் புத்தன்கள் – கவிஞர் சிபு

    போதிமரம், சித்தார்த்தன், புத்தன், ஞானம் இவற்றை அடித்துத் துவைத்துப் பிழிந்து சாயம் உலர்த்திப் போட்டிருக்கும் புத்தகம் “சித்தார்த்தனாகும் புத்தன்கள்”. ஏழெட்டு மாதங்கள் தவமாய்த் தவம் கிடந்து இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது என்றால் எத்தனை வெட்டல் ஒட்டல்களைக் கடந்து வந்திருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனால் மற்ற புத்தகங்களைப் போல ஓரிரவில் கடந்து சென்றுவிட முடியாத அடர்த்தி பக்கத்திற்குப் பக்கம் வலுக்கிறது. இடையிலோ, தொடக்கத்திலேயோ, நிறைவிலோ நம்மை ஒருகணம் புத்தக வரிகளை மறந்து அகவரிக்குள் பயணப்பட வைக்கும் கவிதைகள். நான்கே நான்கு கதாப்பாத்திரங்களைக் குழந்தை விளையாடும் பொம்மை ராஜாங்கத்தைப் போல மாற்றிமாற்றி நண்பனாய், சேவகனாய், அரசனாய், அடிமையாய், கேள்வியாய், விடையாய் போட்டு உருட்டி எடுத்து நம்மையும் தன்னுடன் இழுத்துக்கொண்டே போகிறது இந்தப் புத்தகத்தின் மூலம் தான் பிறந்தாகச் சொல்லிக் கொள்ளும் “சிபு” என்கிற குழந்தை.

    ஆரம்பத்திலேயே நம் அகத்தை வென்று விடுகிறார் சிபு,

    “இந்தப் புத்தகத்தில் புத்தர் உட்பட மனிதர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை” மற்றும் “கற்பனைகளைத் தவிற மற்ற எதுவும் கற்பனைகள் அல்ல”

    இந்த வரிகளே நம்மை அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் என்று படிக்கத் தூண்டுகிறது.

    எடுத்த எடுப்பில் எடுப்பான அணிந்துரை வழங்கியிருக்கிறார் கார்த்திக் இமயவரம்பன் அவர்கள். கவிஞர் சிபுவிடன் மிக நெருக்கமாகப் பழகிக் கொண்டிருக்கும் அவர் சிபுவைக் குறித்து அளவிட்டுச் சொல்லியிருப்பவை யாவும் புத்தகத்தில் மறைமுகமாக அவர் முகம் பார்க்கத் தோதாக அமைகின்றன. வைரவரி வானரசன் அவர்களது நயவுரை நயம் மிகுந்த உரை. தன்னுடைய உரையாகக் கவிஞர் தான் சொல்லியிருப்பதையும் சொல்லவிருப்பதையும் காட்டுகிறார். இவையெல்லாம் எல்லாப் புத்தகத்திலும் இயல்புதான் என்றாலும் எல்லாப் புத்தகத்தை விட இதனை மாறுதலாகச் செய்ய வேண்டுமென்ற எத்தணம் வெற்றியைத்தான் சேர்த்திருக்கிறது. எதார்த்தமே இந்தக் கவிஞரின் உயிர்நாதமாக விளங்குகிறது என்பது மிகவும் பாராட்டவும் வரவேற்கவும் தக்கது. பொதுவாகவே “கவிதை விற்பனைப் பொருளன்று” இது அனைவரும் அறிந்த வாசகம். மேலும் கவிஞர்கள் விற்பனை உத்திகளில் விலைபோவதில்லை. ஆனாலும் விற்பனை உத்திகளைக் கவிஞர்கள், சிபு போல வளர்த்துக்கொள்ளலாம் என்று நான் எங்கும் நிறுவத் தயாராக உள்ளேன். அகம் சார்ந்த ஒரு பயணத்தை இந்தச் சமுதயத்திற்குத் தர நினைக்கும் சிபு, அதனை இந்தக் கால நவீன இலக்கிய வடிவத்திலும், அதிகப் படியான கவிதை உள்ளீட்டு ஜாலங்கள் இல்லாத நிலையிலும் படைத்திருப்பது மிகவும் பாராட்டுவதற்கும் பின்பற்றுவதற்கும் உரியது.

    கவிதைக்குள், கதைக்குள், சரி கவிதைக் கதைக்குள் நுழைந்தால் முதலில் நாம் சந்திப்பது ஒரு செய்தியாளனை,

    “செய்தியாளன்
    ஆவதற்கு முதற்தகுதி
    பிணங்களைக் கண்டு
    அழக்கூடாது…

    எரியும் உடலை
    எக்காரணம் கொண்டும்
    அணைக்கக் கூடாது…”

    இவை சிபுவின் எதார்த்த அளவீட்டின் உச்சம் என்று கொள்ளலாம். படிப்படியாக செய்தியாளன் ஞானத்தையும் புத்தனையும் சித்தார்த்தனையும் போதி மரத்தையும் சந்திக்கிறான். அவற்றிடம் வழக்கமாகக் கேள்வி கேட்டு வாங்கிக் கொள்கிறான். திறனாய்வு அல்லது விமர்சனம் என்று இதனை நகர்த்திக் கொண்டு போவதற்கு முன்னம் ரசித்த பகுதிகளை வாசக ரசிகனாகச் சொல்லிவிடுவது என்று எனக்குத் தோணுகிறது. அதன்படி பார்த்தோமானால் சித்தார்த்தனாகும் புத்தன்கள் மொத்தமும் எதார்த்தத்தின் சிகரம். இந்த எதார்த்தத்தையும் கற்பனைக் கதையையும் வடதுருவ தென்துருவமாகக் கண்டுவந்த நம் சமுதாயத்திற்கு இவை இரண்டும் பக்கத்து வீட்டு அங்காளி பங்காளிகள் என்று காட்ட முயன்றிருக்கிறார் கவிஞர். என்னைப் பொறுத்தமட்டில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

    “எனக்குத் தெரியும்
    அந்தப் பூக்காரிக்குக்
    கணவன் இல்லை…
    எதற்கவளுக்கு
    இத்துணைப் பெரிய பொட்டு?
    பூக்கள் விற்கவா?”

    இந்த வரிகள் நம்மை அந்தப் பூக்காரி அருகில் அமர வைக்காமல் செல்லா. சமுதாயம் சில நிலைகளில் சில வேஷங்களைச் சீருடையாக நம்பி ஏற்கின்றது. விபூதி பட்டை அடித்த முதல் பெஞ்ச் மாணவன், சிடுமூஞ்சி பேருந்து நடத்துநர் என்பது போல..

    செய்தியாளன் ஞானம் என்கிற பொருளை, ஆளை, சக்தியை என்னவோ ஒன்றைத் தன் கண்களால் காண்கிறான். தன் பழக்க தோஷத்தில் அதற்கு முன்னமும் பேனாவை நீட்டிக் கேள்விகள் கேட்கத் தொடங்குகிறான்., அவன்,

    “நீதான் புத்தனுக்குக் கிடைத்தாயா?” என்று கேட்க,

    “நான் கிடைத்ததால்தான்
    அவன் புத்தன்,
    இல்லையேலவன்
    சிறுவன் சித்தார்த்தன்”

    என்று ஏளனமாக ஞானம் பதில் சொல்கிறது. இவ்விடம் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைப்பதில் வியப்பொன்றும் இல்லை. பொதுவாக நாம் பொருட்களின் மீதும் தகுதிகளின் மீதும் பற்று கொள்கிறோம். சில சமயங்களில் அவற்றால் கர்வமும் கொள்கிறோம். நம் மனம் அதனால் ஆனந்தமும் திருப்தியும் அடைகிறது, இஃதொரு பக்கம் இருக்க, பொருட்களோ, தகுதிகளோ நம்மை என்ன நினைக்கும்? புத்தனை நான் அடைந்ததால் தான் அவன் புத்தன் ஆனான், இல்லையேல் அவன் சித்தார்த்தனாகவே இருந்திருப்பான் என்று ஞானம் சொல்வதாக இங்குக் காட்டப்பட்டிருக்கும் நிலை, நம் வாழ்வில் எதுவும் நிலையானது இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.

    நான் முன்னம் குழம்பினேன், அல்லது குழப்பினேன் என்று வைத்துக்கொள்வோம். எது ஞானம்? சக்தியா? தகுதியா? ஆற்றலா? அடிப்படையா? ஆளா? பொருளா? மாயையா? குணமா? எத்தனை கேள்விகள்! இதற்கு விடையைக் குழப்பி விட்ட சிபுவிடமே கேட்கலாம் என்று பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள்.

    “உன்னைக் கிழித்து
    உன்னையே தைக்க,
    உன் கையிலுள்ள
    கத்திரிக்கோலும், ஊசி நூலும்
    தான் ஞானம்”

    உலகியல் என்பது நம் யாவருக்கும் அனுக்கமான ஒரு புள்ளி தான். அது நம்மால் கற்பனை செய்யப் படவேண்டியது அன்று. கண்ணால் கண்டுகொள்ளத் தக்கது. அப்படிப்பட்ட உலகியல் இந்தப் புத்தகத்தில் நிரம்பிக் கிடக்கின்றது. தற்போதைய சமுதாயத்தின் இருள் பக்கங்கள் வெட்டவெளிச்சமாக கவிஞரின் சொற்களில் அம்பலமாகின்றன.

    “போதிமரமெங்கே?
    யார் வீட்டுக் கொட்டகையில்
    கரையான் அரித்துக் கிடக்கிறது?”

    “இராஜகுமாரனுக்கு
    மட்டும் தான்
    உன் ஞானக் கீற்றில்
    கூரை போடுவாயா?

    சொல்

    முதலில் நீ
    எந்தக் காக்கையின்
    மலக்குடலிலிருந்து
    சுகப்பிரசவமாய்க்
    கபிலவஸ்துவில்
    விழுந்து முளைத்தாய்
    நினைவிருக்கிறதா?”

    போன்றவை அந்த உலகியலின் எடுத்துக்காட்டுகள். கவிஞர் தத்துவம், அறிவியல், காதல், விரக்தி என்று எல்லா துறைகளையும் வம்புக்கிழுத்தபடியே இருக்கிறார். இவர் கதையில் போதிமரமே பாவம் மரம் வெட்டிப் பிழைக்கக் கையில் கோடரியோடு அலைகின்றது.

    சிபுவின் எள்ளல் முழுக்கமுழுக்க சமுதாய நலத்தின் விழைவாக ஒலிக்கின்றது.

    “வேண்டுமென்றால்
    அரசு போதி மரங்களுக்கு
    மேற்கூரை போடுங்கள்,

    ஒருவேளை
    ஏழைச் சித்தார்த்தன்கள்
    தியானிக்க வரலாம்!”

    இதைவிடச் சிறந்த துள்ளலும் எள்ளலும் கிடைக்குமா? வானம்பாடி காலத்துக் கவிஞர் தான் இங்கு வந்தாரோ என்றெண்ண வைக்கும் அற்புதமான வீச்சு.

    “கிட்டுவதை எல்லாம்
    புனிதமாகக்
    கருதுங்கள், உங்களை
    விட்டுச் சென்ற
    அத்தனையும்
    போதிமரம் தான்..”.

    “பசியின்மையில்
    சிந்திய சோற்றுப் பருக்கை
    பசியில் போதிமரம்!

    குளிருக்கு இதம்,
    கருகும் விறகு
    போதிமரம்..
    விழுந்து
    எழுந்திரு,
    தாயின் அதட்டல்
    போதிமரம்..
    பிரம்பை நேசி,
    பள்ளியே போதிமரம்.
    துரோகம் சுவை,
    தந்தவன் போதிமரம்,
    நெரிசல்தான் மன்னித்துவிடு
    மிதித்தவன் போதிமரம்,

    இறங்கித் தேடு
    உன் இன்னொரு பையை,
    பயணம் போதிமரம்..

    போதிமரங்கள், வெறும்
    நிழலை மட்டும் தருவதில்லை,

    சொட்டும் சூட்டையும்
    சுறுக்கென்ற பாடத்தையும்
    தரும்..”

    கவிஞர் வரையறைகள் செய்வதில் வாழ்க்கையைக் கழிக்கிறார் போலும். கண் பார்க்கும் அனைத்தையும் வரையறுக்கிறார்.

    “பூமியின் மேல்பக்கம்
    தோண்டப்பட்ட
    நுணுக்கமான
    ஆழம்தாம், நம்வானம்..”

    ஒருநாள் என் பராசக்தி அந்தாதியில் எழுதினேன்,

    “அறிந்தவை யாவும் அரியதென் றேதான் அளத்திடுவார்!
    அறிந்தவை ஏதும் அவறறி வில்லை அறிந்தவர்கள்
    அறிந்தவை தம்மை அனுபவிப் பாரன்றி ஆள்நிறைந்தே
    அறிந்தவை தோறும் அலட்டுகி லாரென தம்பிகையே! (50)”

    இதனை மிகவும் எளிமையாக்கித் தர இயலும் என்றால் அது கவிஞர் சிபுவால் நிகழ்ந்திருக்கிறது.

    “ஆழத்தில் இறங்கியவர்கள்
    ஆசிரமத்துக்குத்
    திரும்பியதில்லை,
    அவர்கள் ஆழமாகவே
    ஆகிவிடுகிறார்கள்..”

    அடுத்தென்ன சித்தார்த்தனைத் தேடுகிறான் செய்தியாளன். அவனைத் தேடும் தருவாயில் இவன் உதிர்த்துக்கொண்டே செல்லும் புலம்பல்களை உங்களுக்குச் சொல்லி வீணாக்க விரும்பவில்லை என்று கடந்தாலும்,

    “இப்போது
    எந்தக் குப்பைத் தொட்டிக்குள்
    தொப்புள்கொடியில்
    எறும்பு மொய்க்கத்
    தியானம் செய்கிறாய்?”

    என்ற இந்த வரிகள் என்னை கடக்க முடியாமல் நிறுத்துகின்றன. இளவரசன் சித்தார்த்தனை மட்டுமே பார்த்திருக்கும் நமக்கு இந்தக் கேள்விகள் எத்தனை சித்தார்த்தன்கள் உலகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பயணித்துக்கொண்டும் படுத்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

    இதோ அதையும் கவிஞரே சொல்கிறார்,

    “இன்று
    எத்தனையோ
    சித்தார்த்தன்கள்
    இருக்கிறார்கள்,
    ஒரு புத்தன்கூட
    வெளிச்சத்திற்கு
    வருவதில்லை.”

    விட்டால் இப்படி வரிக்குவரி ரசனைக் குவியல்களைக் காட்டி நீங்கள் ரசிக்கவே வைக்கப்பட்டிருக்கும் சில பிரத்யேகமான இடங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை. மேற்படி சித்தார்த்தனாகும் புத்தன்கள் நூல் இந்தக் காலத்து நவீன கவிதை வடிவத்தில் எழுதப் பட்டிருப்பதும், கவித்துவ உள்ளீடுகள் என்று வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக இருப்பதும் நான் முன்னமே சொன்னதைப் போல மிகவும் மெச்சி வியக்கத்தக்கது.

    இலக்கண மரபைக் கழற்றிய ஒரு மனநிலையில் பயணிக்கும் உரைவீச்சுக் கவிதைகளுக்கும் இலக்கணம் என்பது கட்டாயமாகிறது. உரைவீச்சுக் கவிதைகளும் எழுதப்படுகிற மொழி தமிழ் என்பதனால் தமிழ் மொழிக்கே உரிய சில அடிப்படை இலக்கணங்களை இன்றைய நவீன கவிஞர்கள் தங்கள் மனத்துக்குள் ஆழப் பதித்தாக வேண்டும். காட்டாற்று வெள்ளமும் கண்களுக்கு அச்சம் கொடுத்தால் பயனில்லை தானே. அந்த வகையில் புத்தகம் முழுக்க கவிச்சுவையைப் போலவே எதார்த்தமாக நிரம்பிக் கிடக்கின்றன ஒற்றுப் பிழைகளும், புணர்ச்சிப் பிழைகளும். தற்போது கவிதை எழுதும் நவீன கவிஞர்களிடம் நான் கண்டு மிகவும் நொந்து போகும் இன்னொரு சகிக்கமுடியாத பிழை, ஒருமைப் பன்மை மயக்கம். “கனவுகள் வந்தது, காட்சி விரிந்தன” என்றெல்லாம் மாற்றிமாற்றி எழுதும் பாங்கு மிகவும் சகஜமாகிப் போய்விட்டது இந்த முகநூல் சூழ் உலகில். எனது இந்த வருத்தத்தை இவ்விடம் சொல்லக் காரணம் சித்தார்த்தனாகும் புத்தன்கள் புத்தகமும் தன் பங்கிற்கு ஒருமைப் பன்மையில் பெரிய மயக்கத்தைத் தந்துகொண்டுதான் இருக்கிறது.

    கதைநோக்கமோ கற்பனை ஆற்றலோ எவ்விதச் சலனமும் இல்லாமல் இனியதொரு பிரவாகமாகத்தான் நடந்து நிறைகிறது. ஆனால் என்னைப் பொருத்தமட்டில் அதிகப்படியான எதார்த்தம் ரொம்பவே திகட்டச் செய்கின்றது. ஒருநாள்தான் வாழ்வு என்று தெரிந்திருந்தாலும் மலரை நாம் ரசிப்பதை நிறுத்துவதில்லை. கடந்தது மறையும் என்று தெரிந்திருந்தாலும் நாம் மணங்களை வெறுப்பதில்லை. நாளையே நிச்சயம் இல்லை என்ற வாழ்க்கையை நாம் வாழ்கிறோம் என்றாலும் அதற்காக நாளையைத் திட்டமிடாமல் நகர்வதில்லை. உலகியலின் எதார்த்தங்கள் என்பன எப்போதும் எல்லாராலும் உணர்ந்து அறியப்படுவன தாம். அவற்றை உணர்த்தும் முகத்தான் இந்த நூல் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும் எனக்கிது அதிகப்படியான பயத்தையும் தயக்கத்தையும் உருவாக்குகிறது என்பது திண்ணம். இந்தப் பயம் எனக்குப் புதியதல்ல, பட்டிணத்தாரின் பாடல்களைப் படித்தபோது எப்படியெல்லாம் நடுங்கினேனோ அவற்றைச் சித்தார்த்தனாகும் புத்தன்களும் எனக்குள் செய்கிறது என்பது, பல நூற்றாண்டுகள் தொடாமல் இருந்த பட்டிணத்தாரின் உணர்வுக் கடத்தலை இந்த வருடம் வெளியான ஒரு நூல் செய்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியைத் தருகிறது. கூடவே எதார்த்தங்களின் பட்டியலால் இலேசான பயமும் என்னைப் பீடிக்கிறது.

    ஆகமொத்தம் சித்தார்த்தனாகும் புத்தன்கள் உலகம் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய புத்தகம். கற்பனை, எதார்த்தம் இரண்டையும் எப்படியெல்லாம் இணைத்து, ஞான மார்க்கத்தில் கொண்டுசெல்ல முடியும் என்று ஏழெட்டு மாதங்கள் ரூம் போட்டு யோசித்திருக்கும் கவிஞர் சிபு வின் முயற்சி வானத்துக் கீழே வாழ்ந்து, வாசிக்கத் தெரிந்த அத்தனை உயிர்களுக்கும் ஒரு வரம்.

    _______________________________________

    புத்தக விமர்சனமாக வரவிருக்கும் இந்தத் தொடரில் தங்கள் புத்தகம் குறித்த விமர்சனம் இடம்பெற வேண்டில் தங்கள் புத்தகத்தின் மென்நகலையும் (SOFT COPY) அட்டைப் படத்தையும் vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

     

    Share
  • உள்ளம் என்பதோர் பூனை

    -விவேக்பாரதி

    உள்ள மென்பதோர் பூனையடா – அது
    உரசித் திரிவதே வேலையடா
    உள்ளி ருக்குதோ வெளியி ருக்குதோ
    உணருவார் அதிகம் இல்லையடா!

    நாம் வளர்க்கிறோம் என்பதையே – பல
    நாள் மறந்திடும் பிறவியடா!
    ஆம் நமக்குளே அதுதன் ஆட்சியை
    அமைத்து வாழ்கின்ற பிராணியடா! (உள்ளம்)

    சொகுசுக் காகவே வாழுமடா! – அது
    சுவையி லாததைச் சாடுமடா!
    நகத்தில் கீறலும் கடிகள் நூறுமாய்
    நம்மைக் காயமே செய்யுமடா! (உள்ளம்)

    அந்தப் பூனையைக் கொஞ்சுவதும் – நீ
    ஆவ தில்லையெனத் தள்ளுவதும்
    நந்தம் கைகளில் இல்லை! யாவையும்
    நாயகன் செயும் ஆட்டமடா! (உள்ளம்)

    காலி டுக்கிலே சுற்றுவதும் – ஒரு
    கதையி லாமலே கத்துவதும்
    வாலை ஆட்டியே பற்றுவ தும்நம்
    வாழ்க்கை நாடகத் தங்கமடா! (உள்ளம்)

    காலம் என்கிற வீட்டினிலே – சதி
    காரப் பூனையும் குடித்தனமாம்!
    ஓலம் இட்டாலும் ஓய்வெ டுத்தாலும்
    உள்ளம் இல்லாமல் வெற்றிடமாம்!

    அடப்போடா!
    உள்ளம் என்பதோர் பூனையடா!!

    -19.02.2019

    Share
  • காலை நடை

    -விவேக்பாரதி

    நடக்க நடக்க நீண்டிடும் சாலை
    நடுவில் எத்தனை நிறுத்தங்கள்!
    நாடிய சிலவும் வேண்டிய சிலவும்
    நகர்ந்து போகும் வழக்கங்கள்!
    வெடித்த சாலை வெண்ணீர்ப் பாலை
    வேகக் காற்றும் இடையிடையே
    மெலிந்த தென்றல் சோலைக் காட்சி
    மெதுவாய்ப் படரும் வழிவழியே!

    பூவின் வாசம் ஓரிடத் தில்நான்
    புயல்வ சத்தில் ஓரிடத்தில்
    புன்னகை மட்டும் மாறா மல்நான்
    புரியும் நடைதான் யாரிடத்தில்?
    தாவும் குரங்காய் மனமும் செல்லத்
    தண்ணீர் தேடும் நிமிடங்கள்
    தடித்துப் புடைக்க உண்டக ளைப்பில்
    தடுமா றுகிற பயணங்கள்!

    முதுகு வளைய மூட்டை தூக்கி
    முறுவ லிப்பதும் நானேதான்
    முடியா தெனவென் மனத்துச் சுமையால்
    முனகி நிற்பதும் நானேதான்
    அதுவாய் வந்தோர் தனிவே தாளம்
    அழுத்திக் கட்டிப் பிடிக்கிறது
    ஆயிரம் கதைகள் கேட்டுக் கேட்டே
    அழுகைக் கவிதை கொடுக்கிறது!!

    11.02.2019

    Share
  • தமிழ்த் தொழுகை

    -விவேக்பாரதி

    தொழுதால்நான் தமிழ்த்தாயைத் தொழவேண்டும்! – புதுத்
    தோரணமாய் அவள்புகழை நடவேண்டும் – இனி
    அழுதாலும் தமிழில்தான் அழவேண்டும் – அந்த
    ஆனந்தம் போல்மண்ணில் எதுவேண்டும்? – வந்து
    முழுதாக எனைவார்த்த செந்தமிழே – நாவை
    முத்துரத மாக்கிவைத்த முத்தமிழே – உன்னை
    மொழியாகக் கொண்டதலால் இச்சிறுவன் – எந்த
    முக்தியையும் பெற்றதில்லை வான்தமிழே!

    பாரதியின் பாட்டுவழி உள்வந்தாய் – அந்தப்
    பாட்டமுதம் வழியென்னுள் கள்தந்தாய் – ஒரு
    காரணமில் லாமலுயர் பொன்தந்தாய் – ஆ
    ககனத்தைக் கைசேர்க்கும் கவிதந்தாய் – உனைச்
    சாரதியாய் நான்கொண்ட தேதிமுதல் – உமை
    சன்னிதிக்கு மட்டுந்தான் கால்பயணம் – மீதி
    நேரமெல்லாம் நீயோட்டும் வெள்ளிரதம் – இது
    நேர்ந்துவிட நான்செய்த தென்னதவம்?

    தொட்டாலே பொன்னாக்கும் வித்தையினை – எனைத்
    தொடாமலே தந்தபுதுச் சித்திரமே – விழி
    பட்டாலே பாடுகின்ற பாவலனாய் – உயர்
    பாதைமாற்றி விட்டதொரு பெட்டகமே – இனி
    கெட்டாலும் கவலையிலை நீகாப்பாய் – நான்
    கேட்டதெலாம் உமைகொடுக்கக் கவிசேர்ப்பாய் – நீ
    சுட்டாலும் சுகம்சேர்க்கும் காலைவெயில் – உன்
    சுருதிக்கு நானாடும் காட்டுமயில்!!

    27.01.2019

    Share
  • இந்த வார வல்லமையாளர் (297) – ப்ராஞ்சல் கச்சோலியா

    -விவேக்பாரதி

    இல்லங்கள் என்பன அன்பின் ஆதாரங்கள். நமக்கு நாமே சேர்த்துக் கொள்ளும் வரங்கள். “எலிவளை ஆனாலும் தனிவலை வேண்டும்” என்று பழமொழி சொல்கிறது அல்லவா! அத்தகைய சிறப்பினை நமது சமூகத்தில் எப்போதும் இடம்பிடித்து இருப்பன வீடுகள் தாம். சின்னச் சின்ன வீடுகளில் தொடங்கி பெரிய பங்களாக்களும், அரண்மனைகளும், அடுக்கடுக்காய் பல மாடிகளைக் கொண்ட அடுக்ககங்களும் சூழ்ந்த நாடு நம் நாடு. இத்தகைய நவீன இல்லங்களை சமூகத்தினர் தற்போது அலங்காரப் படுத்துவதில் காட்டும் அக்கரையும் நேர்த்திகளும் பார்ப்பவர் கண்களையும் சிந்தனையையும் சேர்த்துக் கவர்ந்திழுக்கும் வல்லமை பொருந்தியவை. பல கலவையில் கண்களைச் சுண்டி இழுக்கும் வண்ணங்கள், அழகான வேலைப்பாடுகள், அம்சமான விதான அமைப்புகள். மக்கள் தங்கள் கலைநயத்தைக் குடியிருக்கும் வீடுகளில் காட்டி மகிழ்வதும் மகிழ்விப்பதும் எந்தக் காலத்திலும் மாறாத ஒன்று. நிற்க! என் பணி இங்கே வல்லமையாளரை அறிமுகம் செய்வது, அதனை விடுத்து ஏன் இல்லங்களின் அழகினை விவரித்துக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்குள் இந்நேரம் எழுந்திருக்குமாயின் அதற்கான விடையை இங்கே தருகிறேன்.

    இந்த வார வல்லமையாளர் நமது இல்லங்களைப் புதுவிதமாக மேம்படுத்தும் உத்தியைக் கண்டு கொண்டவர். ஆம்! அலங்காரங்கள் பெறுகின்ற வீடுகள் அதற்கடுத்து பெறப்போவது அறிவை. இன்றைய கணினி மயமான வாழ்க்கை மனிதர் சௌகர்யத்தை எப்படியெல்லாம் உயர்த்துகின்றது பாருங்கள்! இன்றைக்கு எல்லாரது வீடுகளையும் மின்சாரம் ஆள்கின்றது. மின்சாரம் இல்லாத / பயன்படுத்தாத வீடுகளைச் சுட்டிக் காடுதல் அரிது. இவ்வளவில், மின்சாரச் சிக்கனம் குறித்தும் சேமிப்பு குறித்தும் மக்களிடை பரவலாக விழிப்புணர்வுகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மின்சாரத்தைச் சேமிப்பது மூலம், நம் பங்கிற்குச் செலவைக் குறைக்கும், சமுதாயத்தில் மின்சாரம் எட்டும் தொலைவில் இல்லாத ஊர்களையும் சென்றடையும். இந்தக் கோட்பாட்டை நாம் எளிமையாகச் செய்ய தேவைக்கு மீறி இயங்கும் மின் சாதனங்களை நிறுத்தி வைப்பதொன்றே போதும்.

    கை தட்டினால் இயங்கும் மின் விளக்குகள், ஆள் நடமாட்டத்தை அறிந்து இயங்கும் குளிர்சாதனங்கள் என்று இன்றைய அறிவியல் உலகம் இந்த மின் சேமிப்பை இன்னும் எளிமைப் படுத்தித்தான் இருக்கிறது. அந்த வகையில், சாதனை புரிந்து வல்லமையை நிரூபிக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி. ஸ்மார்ட் ஃபோன் மயமாகிப் போன நமது வாழ்க்கையில் மின் சாதனங்களையும் ஓர் செல்ஃபோன் செயலி மூலம் இயக்குகின்ற உபகரணங்களைக் கண்டுபிடித்துள்ளார் ஐஐடி டில்லியைச் சேர்ந்த மாணவர் ப்ராஞ்சல் கச்சோலியா. மிகவும் எளிய முறையில் வீட்டின் எந்தவொரு மின் சாதனத்தையோ மாற்றாமல் அப்படியே இருக்கும் மின் கம்பிகளுக்கு ஊடே சாதாரணமாக ஒரு செயற்கருவியைப் பொருத்தலின் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் நமது வீட்டில் இருக்கும் மின் சாதனங்களை இயக்கும் செயலியை இவர் உருவாக்கியுள்ளார், இதனை ஈடன் ஸ்மார்ட் ஹோம்ஸ் என்ற நிறுவனம் முழுவுதவி செய்து உலகச் சந்தைகளுக்குக் கொண்டு சேர்க்கின்றது.

    அதன் விளம்பரக் காணொலி,

    மாணவராகவும் அறிவியல் மூலம் அன்றாட வாழ்வியலில் மாற்றம் கொணர விரும்பிய விஞ்ஞானியாகவும் பரிமளித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவர் திரு ப்ராஞ்சல் கச்சோலியா அவர்களை இந்த வாரத்தின் வல்லமையாளர் என்று அறிவிப்பதில் பேருவகை எய்துகிறோம். வல்லமை மின்னிதழ் குழுமம் இன்னும் பல அத்யாவசியமான படைப்புகளை இவர் உலகத்திற்கு வெளிக்கொணர வாழ்த்துகிறோம்.

    சிக்கனம் அதனைச் சிறுவயதில்
    சிறப்புடன் செய்ய! மின்சார
    மக்களெல் லாரும் வாழ்வினிலே
    மதித்திடும் வண்ணம் கண்டெடுப்பைப்
    பக்கமாய்ப் பலமாய்ச் செய்தவரும்
    ப்ராஞ்சல் கச்சோலியா அவர்கள்
    மிக்கவே இன்னும் கண்டெடுக்க
    வல்லமை யாளர் உயர்விருதே!!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?p=43179

    Share
  • பம்பரச் சாட்டை

    -விவேக்பாரதி

    ஆடு கின்றதோர் பம்பரம் நாமெலாம்
    ஆட்டு விப்பவன் யாரெனக் கூறடா
    பாடு பட்டவர் பாட்டினில் வாழ்ந்தவன்,
    பாரின் சுற்றினில் பற்றிடா துள்ளவன்,
    நாடு மத்தனை ஆசையும் எண்ணமும்
    நண்ணி டாத்தொலை வெட்டியி ருப்பவன்,
    காடு மேடுகள் சுற்றுமெய்ஞ் ஞானியர்
    காணும் சக்தியாங் கைதொழ வேண்டிடும்,

    கோவில் எங்கிலும் உள்ளுறை தெய்வதம்,
    கொள்கை கொண்டுவாழ் போகியர் நெஞ்சினில்
    ஆவ லாகவும் வாழ்ந்திடும் உத்தமன்,
    ஆண்டி யாயொரு கானிடை தங்குவார்
    நாவில் ஞானமாய் நின்றிடும் உள்ளொளி,
    நாட்டில் அற்புதம் தோன்றிடப் பாடிடும்
    பாவ லர்க்கெலாம் பாதரும் சற்குரு,
    பார்க்கும் வையமி யக்கிடும் ஆற்றலான்,

    கிள்ளை நாரைகி ளர்ந்திடுங் கான்குயில்
    கீழ்வி ழும்மழைக் காடிடும் மஞ்ஞைகள்
    புள்ளி னந்தரும் ஓசையில் பச்சையாய்ப்
    புன்செய் தந்திடும் நாற்றினில் ஆற்றினில்
    கள்ள ருந்திடும் வண்டினப் போதையில்
    காற்றில் சேர்ந்திடுஞ் சாகர வாடையில்
    உள்ளி ருந்துல காட்டிடும் நாயகன்
    உண்மை யானவன் பொய்ம்மையும் தேர்ந்தவன்!

    நம்பு வார்தம தன்பினில் ரூபமாய்
    நாடு முற்றிலும் காத்திட வேலியில்
    கம்பும் கையுமாய் நிற்குநம் வீரரின்
    கண்ணில் வீரமாய் இல்லறஞ் சேர்த்திடும்
    தெம்பு மிக்கபெண் டிர்மிசை பெண்மையாய்
    சின்ன பாலகர் புன்னகை அம்சமாய்
    நம்பி டாதவர் வாக்கினில் பொய்ம்மையாய்
    நாலு திக்கிலும் நின்றுநி றைந்தவன்

    பேர்கள் மாறலாம் பெற்றிடும் சேதியால்
    பெருமை மாறலாம் ஆயினும் நாமெலாம்
    ஓரி றைவனின் சாட்டையில் சுற்றிடும்
    ஓய்வி லாததோர் பம்பரம்! நாமிடும்
    காரி யங்களும் ஆட்டமும் ஓய்ந்திடும்
    கணம்நெ ருங்கிடில் ஞானமெ னும்புதுத்
    தேரி லேறிநம் கண்முனம் தோன்றுவான்
    தெய்வ மென்றறி தேர்ச்சிகொள் நெஞ்சமே!!

    -20.01.2019

    Share
  • இந்த வார வல்லமையாளர் (296) – டி குகேஷ்

    -விவேக்பாரதி

    முன்னரே நிறுவி வைத்திருக்கும் இலக்கினைக் காலம் ஒவ்வொரு திறனாளிகளைக் கொடுத்து உடைத்துப் பார்க்கின்றது. எளிமையாக நமது எண்ணங்களை மற்றொரு எண்ணம் வெல்வது என்பதில் தொடங்கி சர்வதேச அளவில் இந்த இலக்கை முறியடித்து சாதனை படைப்பதும் வெற்றி வாகை தரிப்பதும் ஒரு உலகியல் நியதி. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வினை விளையாட்டு சம்பந்தமான துறையில் நிறையவே காணப்படுகிறது. ஏற்கனவே சாதனையாளராக ஒரு விளையாட்டு வீரர் தன் திறத்தால் தாம் சேர்ந்த துறையில் பதித்து வைக்கின்ற இலக்குக் கல்லை மற்றொரு சாதனையாளர் தம் திறத்தால் இடம்பெயர்த்து உயர்த்தி வைக்கிறார் என்பதி விளையாட்டுத் துறையில் எளிதில் நமக்குப் புலப்படும் ஓர் ஆரோக்யமான போட்டி.

    இந்த வார வல்லமையாளர் அப்படிப் பட்டவரே! ஆனால் இங்கே சாதனைக்கு உள்ளானது விளையாட்டு வீரர்களின் வயது! ஆம்! மிகவும் சிறு வயதிலேயே இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராகவும், உலக ளவில் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டராகவும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் என்னும் 12 வயது நிரம்பிய மாணவர் சாதனை படைத்துள்ளார். அவரே இந்த வாரத்து வல்லமையாளர்.

    டில்லியில் நடந்த சர்வதேச ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தினேஷ் சர்மா என்னும் வீரரை 9 ஆவது சுற்றில் வீழ்த்தி குகேஷ் இந்தப் பட்டத்தை வென்றிருக்கிறார். இதற்கு முன்னதாக 12 வயது 10 மாதங்கள் 13 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்னாநந்தா என்பவர் நிறுத்தி வைத்திருந்த இலக்கைத் தான் குகேஷ் முறியடித்து 12 ஆண்டு 7 மாதங்கள் 13 நாட்களில் இந்தியாவின் மிகக்குறைந்த வயது கிராண்ட் மாஸ்டராக வலம் வருகிறார்.

    அவரது தந்தை மற்றும் தாயின் தளராத ஊக்கத்தாலும், 5 வயதிலிருந்தே அவர் மேற்கொண்டு வரும் செஸ் விளையாட்டின் பயிற்சி மற்றும் ஆர்வத்தினாலும் இந்த வெற்றிப் பதக்கத்தைத் தோளில் சுமந்துள்ளார். மார்ச் மாதம் சர்வதேச செஸ் மாஸ்டர், பாங்காக் ஓபன் போட்டியில் 3 ஆம் இடம், ஆர்பிஸ் போட்டிகளில் 2 ஆம் இடம் ஆகிவற்றை வென்றதன் நீட்சியாகவே இப்போது உலகத்திந் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டராகப் பரிமளிக்கிறார்.

    இவர்தம் வல்லமையை மெச்சி, இன்னும் பல விருதுகளும் பல திறமைகளும் வாய்க்கப்பெற வல்லமை மின்னிதழ் குழுமம் டி குகேஷ் அவர்களுக்கு வல்லமையாளர் என்ற விருதினைப் பெருமையுடன் வழங்கி மகிழ்கின்றது.

    சதுரங்க ஆட்டத்தில் காய் நகர்த்தும்
    சமர்த்தாலே உலகிலிளம் கிராண்ட் மாஸ்டர்
    மதிப்பதனை வென்றகுகேஷ் வல்ல மைக்காய்
    வல்லமையாளர் விருதை வழங்குகின்றோம்!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (295) – குக்கூ குழந்தைகள் வெளி

    உலகறியாத சிறுவர்க்குள் தான்
    உலகம் சுழல்கிறது!
    ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு ரகமாய்
    உயர்ந்து விரிகிறது!
    கலகம் அறியாப் பிள்ளை நெஞ்சுள்
    கடவுள் வாழ்கிறது!
    கணமொரு வடிவாய்ப் புதிதினும் புதிதாய்க்
    கனவாய் வளர்கிறது!

    என்ற வரிகள் இதயத்தில் உதயமாகின்றன. இவை இந்நேரம் தோன்றக் காரணம் என்ன? அதற்குக் காரணமானவர்களே இந்த வாரத்தின் வல்லமையாளர். விதையை யார் தான் எழும்ப வைக்கிறார்? இந்தக் கேள்விக்கு என்னவாயிருக்கும் பதில்? அப்படி சிறிய விதைகளாய் விளங்கும் குழந்தைகளைச் சமுதாய நெறியின்படி நல்ல நடத்தையுடன் எழுப்பும் ஒரு சுவாரஸ்யமான முயற்சியைச் சுலபமாக மேற்கொண்டுக் கொண்டிருக்கின்ற குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பினர் அனைவருமே இந்த வாரத்து வல்லமையாளர்கள் தாம்.

    குக்கூ குழந்தைகள் வெளி என்ற அமைப்பினர், http://cuckoochildren.in என்றொரு இணையதளம் மூலம் தங்களது அன்றாட சேவைகளை உலகின் பார்வைக்குப் பதிவுசெய்கிறார்கள். அந்த வலைதளத்தில் அவர்களைப் பற்றி குறிப்பிடும் பகுதியில்,

    Forgive my grimy hands. I’m just back from the forest.
    There is a stream there.
    On its banks is a rock that’s shaped like an elephant.
    I was sitting on it with my friends all morning.
    We played a lot of games.
    We made animals and birds with clay from the bank and released them into the forest.
    We drew clouds on the ground using red earth, we also drew the sun.
    We wrote a story in which the moon goes for a swim one night.
    We collected seeds which we will plant near our homes.
    We read a book under a tree when it drizzled.
    And when the sun came out we danced for a song we wrote.
    We then…oh my, we’re late.
    The seeds! We have to plant them right away.
    See those grey clouds floating towards us?
    They hold precious water drops that will give life to the seeds.
    We have to go now, there’s so much to do.
    Good-bye.
    No, wait, do you want to come along?

    என்று ஒரு அற்புதமான கவிதை வழியாகத் தாங்கள் வித்யாசமானவர்கள் என்று நிறுவுகிறார்கள்.

    நண்பர்கள் சிலர் கூடி 2004 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட தன்னார்வ அமைப்பான குக்கூ குழந்தைகள் வெளி, ஊர்ப்புற சிறார்களுக்கு உள்ளே அமிழ்ந்திருக்கும் ஆற்றல் மிகுந்த படைப்பாளிகளையும், திறமைசாலிகளையும் எளிதில், இயற்கையோடு இயைந்த வாழ்வியல் முறையில் கண்டெடுத்துப் பயிற்சி அளிக்கும் செயலினைத் தொண்டாகச் செய்து வருகிறது.

    Our objective — letting children discover themselves. We mostly work with little ones from rural Tamilnadu, who lack the opportunities that children from urban environments take for granted. We introduce them to Nature, good books and movies. We tell them stories, play with them, draw and paint with them, introduce them to the colorful world of photography, traditional folk arts, music, martial arts, theatre, and also engage them in exciting discussions on socio-political and environmental issues. We wish to bring out the inherent spark in every child. And more than anything, we want to learn from them, for their world is the most beautiful place on earth.

    என்ற அவர்களின் தன்விவரக் குறிப்பு நமக்கு அவர்களின் தன்மையை விளக்கும்.

    கலாச்சாரம் மற்றும் பண்பாடு ரீதியாகக் கலைநயத்துடன் புது நயத்தையும் சேர்த்துக் குழந்தைகளை உயர்த்தும் இந்த குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பினரின் சாதனைகளை அவர்களது முகநூல் பக்கத்தில் காணும்பொழுது மெய் சிலிர்த்துப் போகிறது. சிறிய, எளிய, இதுவரை யாரும் யோசிக்காத விஷயங்களை மிகவும் சாதாரணமாக நிகழ்த்தியிருக்கிறார்கள். அந்தப் புதிய பார்வை மிகவும் பாராட்டத் தக்கது. அதிலும் குறிப்பாக இந்த வாரம், பனை ஓலைகளை வைத்து விளையாடப் பழக்கியிருக்கும் இவர்களது முயற்சி மிகவும் புதுமையாகவும், கேட்கவே சுவாரஸ்யமானதாகவும் விளங்குகிறது என்பது படிக்கும் உங்களுக்கும் பிடிபடும்.

    அவர்களின் பதிவு,

    பனை ஓலையில் பொம்மைகள் செய்யக் கற்றுத்தரும் குழந்தைகள் பயில்முகாம் இனிதே நிகழ்ந்துமுடிந்தது குக்கூ காட்டுப்பள்ளியில்… பனை ஓலையின் வாசத்தை நாசியில் ஏற்றி ஓலையை மடித்தும் நுழைத்தும் சின்னச்சின்ன பறவைகளாகவும், விலங்குருவங்களாகவும் செய்து இவ்வெட்டவெளியில் மிதக்கவிட்டனர். மகிழ்வின் நிறைவின் புகைப்படங்கள் உங்கள் விழிகளுக்காக… ஒளிப்படங்கள் : அய்யலு குமரன், திருமலைவாசு

    பொதுவாகவே ஒரு விருதளிப்பது என்பது இன்னும் திறம்படச் செயலாக்க அவர்களை ஊக்கும் சக்தியாக விளங்கும். அந்த வகையில் குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பினருக்கு வல்லமையாளர் என்ற விருதினை வழங்கி மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம். நாளைய சமுதாய பூக்களை சரியாக வகையில் பயிரிட்டு அடை காக்கின்ற குக்கூ குழந்தைகள் வெளி போல பல அமைப்புகள் இன்றைய சூழலில் நாளைக்காகவும் உழைக்க வேண்டும் என்ற வேண்டுதல்களை இறைவன் முன்னம் வைத்து வாழ்த்துகிறோம்.

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?p=43179

    Share
  • இந்த வார வல்லமையாளர் (294) – டாக்டர் சுதா சேஷய்யன்

    தமிழில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு அதன் மேம்பாட்டிற்கும் தமிழ் மக்களின் நல்வாழ்விற்கும் உழைக்கும் அறிஞர்களும் சான்றோர்களும் அதிக பட்சம் பிற துறைகளிலும் சாதித்தவர்களாக இருக்கிறார்கள். இந்த வார வல்லமையாளரும் அப்படிப் பட்டவர் தான்.

    “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
    இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்”

    என்பார் பாரதியார். அப்படி உலகமெங்கும் வியக்கும் பல மருத்துவக் கருத்துகளைத் தமிழ்மொழியிலும் தந்து, தமிழின் மீதும் ஆன்மீகச் சிந்தனைகளின் மீதும் தீராத காதலாகி, அவை இரண்டையும் தமதிரு கண்களாகவே போற்றி வாழ்ந்து வரும் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள்.

    பல இதழ்களில் ஆன்மீக சிந்தனைகளை எழுதியும், பல மேடைகளில் தமிழர் தெய்வீகத்தை உரையாற்றியும் வருகின்ற டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகப் பணியாற்றி, மருத்துவம் தொடர்பான நிறைய கட்டுரைகளைத் தமிழில் எழுதிச் சிறப்பு சேர்த்தவர். அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த திருமதி கீதா லட்சுமி ஓய்வு பெற்றதும், அதற்கடுத்த இரண்டே நாட்களில், மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் அதே மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவர், மருத்துவப் பேராசிரியர், ஆன்மீகவாதி, சொற்பொழிவாளர், எழுத்தாளர் என்ற பல பரிமாணங்களைத் தாங்கி நிற்கும் சுதா சேஷய்யன் அவர்கள் இப்போது துணைவேந்தர் என்ற உயரிய பதவியையும் தமது திறத்தால் அடைந்து உயர்ந்துள்ளார் என்பது பாராட்டுதலுக்கு உரியது.

    மனித உடற்கூறியல் துறையில் மிகவும் பிரபலமான Gray’s anatomy என்கின்ற புத்தகத்தை எழுதி வெளியிட்ட சர்வதேச ஆசிரியர் குழுவில் ஓர் அங்கமாக இவர் செயல்பட்டார். ஆன்மீகம் மற்றும் மருத்துவம் தொடர்பாக இவர் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பல அரசு விழாக்களின் சிறப்பு தொகுப்பாளராகவும் டாக்டர் சுதா சேஷய்யன் இருந்து வருகிறார் என்பதெல்லாம் இவரது இடையறாத உழைப்பையும் திறனையும் மேற்கோளிட்டுக் காட்டும் பதிவுகள்.

    சென்ற வாரம், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் சார்பில் “வல்லமையாளர்” விருது அளிப்பதில் கௌரவம் கொள்கிறோம்.

    டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களைப் பற்றி தி இந்து வெளியிட்டிருக்கும் செய்தி
    https://www.thehindu.com/features/friday-review/art/balancing-act/article2011893.ece

    மருத்துவத்தோடு மலர்த்தமிழ்த் தொண்டும்
    பொருத்தமாய்ச் செய்து புவியில் – அருத்தமுடைச்
    சொல்லொடு வாழும் சுதா சேஷயனுக்கு
    வல்லமை யாளர் விருது!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?p=43179

    Share