-விவேக்பாரதி

தொழுதால்நான் தமிழ்த்தாயைத் தொழவேண்டும்! – புதுத்
தோரணமாய் அவள்புகழை நடவேண்டும் – இனி
அழுதாலும் தமிழில்தான் அழவேண்டும் – அந்த
ஆனந்தம் போல்மண்ணில் எதுவேண்டும்? – வந்து
முழுதாக எனைவார்த்த செந்தமிழே – நாவை
முத்துரத மாக்கிவைத்த முத்தமிழே – உன்னை
மொழியாகக் கொண்டதலால் இச்சிறுவன் – எந்த
முக்தியையும் பெற்றதில்லை வான்தமிழே!

பாரதியின் பாட்டுவழி உள்வந்தாய் – அந்தப்
பாட்டமுதம் வழியென்னுள் கள்தந்தாய் – ஒரு
காரணமில் லாமலுயர் பொன்தந்தாய் – ஆ
ககனத்தைக் கைசேர்க்கும் கவிதந்தாய் – உனைச்
சாரதியாய் நான்கொண்ட தேதிமுதல் – உமை
சன்னிதிக்கு மட்டுந்தான் கால்பயணம் – மீதி
நேரமெல்லாம் நீயோட்டும் வெள்ளிரதம் – இது
நேர்ந்துவிட நான்செய்த தென்னதவம்?

தொட்டாலே பொன்னாக்கும் வித்தையினை – எனைத்
தொடாமலே தந்தபுதுச் சித்திரமே – விழி
பட்டாலே பாடுகின்ற பாவலனாய் – உயர்
பாதைமாற்றி விட்டதொரு பெட்டகமே – இனி
கெட்டாலும் கவலையிலை நீகாப்பாய் – நான்
கேட்டதெலாம் உமைகொடுக்கக் கவிசேர்ப்பாய் – நீ
சுட்டாலும் சுகம்சேர்க்கும் காலைவெயில் – உன்
சுருதிக்கு நானாடும் காட்டுமயில்!!

27.01.2019

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *