-விவேக்பாரதி

இல்லங்கள் என்பன அன்பின் ஆதாரங்கள். நமக்கு நாமே சேர்த்துக் கொள்ளும் வரங்கள். “எலிவளை ஆனாலும் தனிவலை வேண்டும்” என்று பழமொழி சொல்கிறது அல்லவா! அத்தகைய சிறப்பினை நமது சமூகத்தில் எப்போதும் இடம்பிடித்து இருப்பன வீடுகள் தாம். சின்னச் சின்ன வீடுகளில் தொடங்கி பெரிய பங்களாக்களும், அரண்மனைகளும், அடுக்கடுக்காய் பல மாடிகளைக் கொண்ட அடுக்ககங்களும் சூழ்ந்த நாடு நம் நாடு. இத்தகைய நவீன இல்லங்களை சமூகத்தினர் தற்போது அலங்காரப் படுத்துவதில் காட்டும் அக்கரையும் நேர்த்திகளும் பார்ப்பவர் கண்களையும் சிந்தனையையும் சேர்த்துக் கவர்ந்திழுக்கும் வல்லமை பொருந்தியவை. பல கலவையில் கண்களைச் சுண்டி இழுக்கும் வண்ணங்கள், அழகான வேலைப்பாடுகள், அம்சமான விதான அமைப்புகள். மக்கள் தங்கள் கலைநயத்தைக் குடியிருக்கும் வீடுகளில் காட்டி மகிழ்வதும் மகிழ்விப்பதும் எந்தக் காலத்திலும் மாறாத ஒன்று. நிற்க! என் பணி இங்கே வல்லமையாளரை அறிமுகம் செய்வது, அதனை விடுத்து ஏன் இல்லங்களின் அழகினை விவரித்துக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்குள் இந்நேரம் எழுந்திருக்குமாயின் அதற்கான விடையை இங்கே தருகிறேன்.

இந்த வார வல்லமையாளர் நமது இல்லங்களைப் புதுவிதமாக மேம்படுத்தும் உத்தியைக் கண்டு கொண்டவர். ஆம்! அலங்காரங்கள் பெறுகின்ற வீடுகள் அதற்கடுத்து பெறப்போவது அறிவை. இன்றைய கணினி மயமான வாழ்க்கை மனிதர் சௌகர்யத்தை எப்படியெல்லாம் உயர்த்துகின்றது பாருங்கள்! இன்றைக்கு எல்லாரது வீடுகளையும் மின்சாரம் ஆள்கின்றது. மின்சாரம் இல்லாத / பயன்படுத்தாத வீடுகளைச் சுட்டிக் காடுதல் அரிது. இவ்வளவில், மின்சாரச் சிக்கனம் குறித்தும் சேமிப்பு குறித்தும் மக்களிடை பரவலாக விழிப்புணர்வுகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மின்சாரத்தைச் சேமிப்பது மூலம், நம் பங்கிற்குச் செலவைக் குறைக்கும், சமுதாயத்தில் மின்சாரம் எட்டும் தொலைவில் இல்லாத ஊர்களையும் சென்றடையும். இந்தக் கோட்பாட்டை நாம் எளிமையாகச் செய்ய தேவைக்கு மீறி இயங்கும் மின் சாதனங்களை நிறுத்தி வைப்பதொன்றே போதும்.

கை தட்டினால் இயங்கும் மின் விளக்குகள், ஆள் நடமாட்டத்தை அறிந்து இயங்கும் குளிர்சாதனங்கள் என்று இன்றைய அறிவியல் உலகம் இந்த மின் சேமிப்பை இன்னும் எளிமைப் படுத்தித்தான் இருக்கிறது. அந்த வகையில், சாதனை புரிந்து வல்லமையை நிரூபிக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி. ஸ்மார்ட் ஃபோன் மயமாகிப் போன நமது வாழ்க்கையில் மின் சாதனங்களையும் ஓர் செல்ஃபோன் செயலி மூலம் இயக்குகின்ற உபகரணங்களைக் கண்டுபிடித்துள்ளார் ஐஐடி டில்லியைச் சேர்ந்த மாணவர் ப்ராஞ்சல் கச்சோலியா. மிகவும் எளிய முறையில் வீட்டின் எந்தவொரு மின் சாதனத்தையோ மாற்றாமல் அப்படியே இருக்கும் மின் கம்பிகளுக்கு ஊடே சாதாரணமாக ஒரு செயற்கருவியைப் பொருத்தலின் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் நமது வீட்டில் இருக்கும் மின் சாதனங்களை இயக்கும் செயலியை இவர் உருவாக்கியுள்ளார், இதனை ஈடன் ஸ்மார்ட் ஹோம்ஸ் என்ற நிறுவனம் முழுவுதவி செய்து உலகச் சந்தைகளுக்குக் கொண்டு சேர்க்கின்றது.

அதன் விளம்பரக் காணொலி,

மாணவராகவும் அறிவியல் மூலம் அன்றாட வாழ்வியலில் மாற்றம் கொணர விரும்பிய விஞ்ஞானியாகவும் பரிமளித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவர் திரு ப்ராஞ்சல் கச்சோலியா அவர்களை இந்த வாரத்தின் வல்லமையாளர் என்று அறிவிப்பதில் பேருவகை எய்துகிறோம். வல்லமை மின்னிதழ் குழுமம் இன்னும் பல அத்யாவசியமான படைப்புகளை இவர் உலகத்திற்கு வெளிக்கொணர வாழ்த்துகிறோம்.

சிக்கனம் அதனைச் சிறுவயதில்
சிறப்புடன் செய்ய! மின்சார
மக்களெல் லாரும் வாழ்வினிலே
மதித்திடும் வண்ணம் கண்டெடுப்பைப்
பக்கமாய்ப் பலமாய்ச் செய்தவரும்
ப்ராஞ்சல் கச்சோலியா அவர்கள்
மிக்கவே இன்னும் கண்டெடுக்க
வல்லமை யாளர் உயர்விருதே!!

(“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
https://www.vallamai.com/?p=43179

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *