Author: சு.கோதண்டராமன்

  • பாரதியின் வேத முகம் – 4

    சு.கோதண்டராமன்

     பூரண ஞானம் பொலிந்த நன்னாடு

    பாரதியார் இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டியது ஏன்? அன்னியர் நம்மை ஆளக்கூடாது என்பதாலா? அல்ல. அத்வைதக் கொள்கையை நெஞ்சில் நிலையாகப் பதித்திருந்த அவர் நம்மவர் அன்னியர் என்று பிரித்துப் பார்க்கவில்லை.  அதனால் தான் அவரது எழுத்துகளில் எங்கும் ஆங்கிலேயர் பால் வெறுப்புக் காணப்படுவதில்லை. பின் அவரது விடுதலை வேட்கைக்குக் காரணம் என்ன? பார்ப்போம்.

    பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

          விளங்குக, துன்பமு மிடிமையு நோவும்

          சாவு நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்

          இன்புற்றுவாழ்க

    என்பது பாரதி விநாயகரிடம் வைக்கும் வேண்டுகோள். எல்லா உயிர்களும் தெய்வம் என்பதை உணர்ந்து விட்டால் பிறர் மீது அச்சம், பகைமை, கோபம், பொறாமை ஏற்படுமா? பூமண்டலம் எங்கும் அன்பும் பொறையும் மட்டுமே விளங்கும்.

    அச்சம் முதலான இந்தத் தீய குணங்களை நீக்கி விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் என்று பாரதி கூறுகிறார். எல்லோரும் அமர நிலை எய்த முடியும்.

    எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளான் என்ற வேதக் கருத்தை உலகிற்கு அளிக்கத் தகுதி பெற்ற ஒரே நாடு இந்தியா தான்.

    எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்

    என்றுரைத்தான் கண்ண பெருமான்

    எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை

    இந்தியா உலகிற்களிக்கும் ஆம்

    இந்தியா உலகிற்களிக்கும் ஆம் ஆம்

    இந்தியா உலகிற்களிக்கும் – வாழ்க

    இந்தியா தாழ்ந்து நின்றால் உலகனைத்திலும் அஞ்ஞான இருள் பரவி விடும். எனவே தான் பாரதி இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்று பாடுபடுகிறார்.

    சுதந்திர தேவியின் ஒளி பெறாவிடில் அங்கு அறிவுண்டோ, ஆக்கமுண்டோ?

    காவிய நூல்கள், ஞானக் கலைகள், வேதங்களுண்டோ?”          என்று கேட்கிறார். மேலும் மற்றோரிடத்தில்,

    வேத நூல் பழிக்கும் வெளித் திசை மிலேச்சர்

    பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி?”

    என வினவுகிறார். ஏனெனில் அம்மிலேச்சர்,

    மாதர் கற்பழித்தலும் மறையவர் வேள்விக்கு

    ஏதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்

    எனவே பாரதி இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டியது வேத நெறி தழைக்கவும், உலகெங்கிலும் அறம் ஓங்கி வளரவும் தான்.

    பாரதி மகாத்மா காந்தியைப் போற்றியது ஏன்? எல்லா உயிர்களும் கடவுள் என்ற அத்வைதக் கொள்கையைக் கொண்டு, இழிவான வழி முறைகளே நிறைந்த அரசியலைத் தூய்மைப்படுத்தியதற்காகத் தான்.

    மன்னுயிரெல்லாம் கடவுளின் வடிவம்

                கடவுளின் மக்களென் றுணர்தல்

                இன்ன மெய்ஞானத் துணிவினை மற்றாங்

                கிழிபடு போர் கொலை தண்டம்

                பின்னியே கிடக்கும் அரசியலதனிற்

                பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்

    என்று காந்தியைப் பாராட்டுகிறார் அவர்.

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2012/03/Subramania-Bharathiar-Rare-Photos.jpg


    Share
  • பாரதியின் வேத முகம் – 3

     சு.கோதண்டராமன்

    அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

          இறைவன் கண்ணனாக அவதரித்துப் பாரதப் போரில் பார்த்தனுக்குச் சாரதியாகப் பணி புரிந்தது நமக்குத் தெரியும். அதே கண்ணன் துரியோதனனாக வடிவெடுத்து அர்ஜுனனோடு சண்டையிட்ட செய்தி தெரியுமா?

    இது என்ன புதுக்கதை? பாரதத்திற்குப் போட்டியாக யாரேனும் நாத்திகர் கீரதம் என்று ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்ன?

    இதை எழுதியவர் நாத்திகர் அல்ல. அத்வைத வேதாந்தத்தில் தோய்ந்து கண்ணனின் பரம பக்தராக வாழ்ந்து, இன்று பதின்மூன்றாவது ஆழ்வாராகப் போற்றப்படும் பாரதி தான் இப்படிச் சொல்கிறார்.

    அரைச் செய்தி சொன்னால் குழப்பமாகத் தான் இருக்கும். முழுவதையும் கேளுங்கள்.

    கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எதைக் கொண்டு படைத்தார் என்ற வினாவுக்கு விடையாக அத்வைதம் கூறுகிறது – கடவுள் எதைக் கொண்டும் உலகைப் படைக்கவில்லை. தானே பிரபஞ்சமாகத் தோற்றம் காட்டி அருளினார். அப்படி என்றால் இங்குக் காணப்படும் மலைகள், கடல்கள், காடுகள், விலங்குகள், மனிதர்கள் எல்லாமே கடவுளின் வெவ்வேறு தோற்றங்கள் தாமே. அப்படி இருக்க, மானிடரில் சிலரைப் பகைவர் என்று கூறி வெறுக்கிறோமே அது சரியா? சரி அல்ல. அதனால் தான் பாரதி கூறுகிறார் –

    பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்

    புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே

    பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

    ‘யாரையும் மேல் தோற்றத்தை மட்டும் பார்த்து மதிப்பிடக் கூடாது. ஆழ்ந்து நோக்குக. புகை நடுவில் தீ போல, சிப்பியினுள் முத்து போல, குப்பை நடுவே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி போல, பகைவனிடத்திலும் உறைவது பிரம்ம சைதன்யமே. தின்ன வரும் புலியைப் பார். அதன் கண்ணில் தெரியும் பசியைக் கூர்ந்து நோக்கு. பராசக்தி தென்படுவாள். எந்த தேவி எல்லா உயிரினங்களிலும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அந்தத் தேவிக்கு மீண்டும் மீண்டும் வணக்கம் என்று தேவி பாகவதம் கூறுவதைச் சிந்தனை செய். அந்தப் பராசக்தியைக் கும்பிடு.

    ‘எல்லா உயிர்களாகவும் இருப்பது ஒரே கடவுள் என்றால், எதிரி என்று முத்திரை குத்தி ஒருவனை அழித்து விட்டு நீ வாழ நினைப்பது எவ்வளவு பேதைமை? எதிரியை அழிப்பதன் மூலம் நீ கடவுளை அழிக்க முயல்கிறாய். நீயும் கடவுள் தானே? அதாவது உன்னையே நீ அழிக்க முற்படுகிறாய்.

    ‘இதெல்லாம் கடவுளின் லீலை என்பதை உணர்க. அவனே புலியாகவும் மானாகவும் வடிவெடுத்து ஒன்றை ஒன்று அழிப்பதாகத் தோற்றம் காட்டுகிறான். எதுவும் அழிவதும் இல்லை, எதுவும் அழிக்கப்படுவதும் இல்லை. மாயத் தோற்றங்களில் ஒன்று மறைகிறது, ஒரு புதிய மாயத் தோற்றம் ஏற்படுகிறது.

    ‘பாரதக் கதை கேட்டிருக்கிறோம். அங்கே, பார்த்த சாரதியாக வந்தது மட்டும் கண்ணன் அல்ல. அங்கு இருந்த அனைத்து மனிதர்களும் விலங்குகளும் உயிரற்ற பொருள்களும் கண்ணனே. அவனே தன்னை இப்படிப் பல  கூறாக ஆக்கிக் கொண்டு பாரதப் போர் என்னும் மாயையைத் தோற்றுவித்தான். சுருக்கமாகச் சொல்லப் போனால், பார்த்த சாரதி மட்டுமல்ல, பார்த்தனும் கண்ணனே, அவனை எதிர்த்த துரியோதனனும் கண்ணனே, அவனது தம்பிகளும் கண்ணனே.

    ‘விசுவரூப தரிசனம் தந்து நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என்ற முக்காலத்தையும் காட்டின கண்ணன் தன் உடலுக்குள்ளேயே இரு திறத்துப் படைகளையும் உள்ளடக்கிக் காட்டவில்லையா? இந்த உண்மையைச் சந்தேகம் இன்றித் தெரிந்து கொண்டால் உன் உள்ளம் நிறைவு பெறும். சிறிதேனும் சந்தேகம் கொண்டால் குடம் தேனில் ஒரு துளி விஷம் என்ற கதை ஆகிவிடும்’ என்பது பாரதியின் கருத்து.

    இனி அப்பாடலைப் பார்ப்போம்.

    பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்

    புகை நடுவினில் தீ இருப்பதைப் பூமியிற் கண்டோமே

    பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்

     

    சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ?

    குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக் கொடி வளராதோ?

     

    உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ?

    தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?

     

    வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?

    தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவான் என்ற சாத்திரம் கேளாயோ?

     

    போருக்கு வந்தங்கெதிர்த்த கௌரவர் போல வந்தானும் அவன்

    நேருக்கருச்சுனன் தேரிற் கசை கொண்டு நின்றதும்   கண்ணனன்றோ?

     

    தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையிற் போற்றிடுவாய்

    அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் அவளைக் கும்பிடுவாய்.

    படத்துக்கு நன்றி: http://www.vallamai.com/wp-content/uploads/2012/09/bharathiyar-4.jpg

    Share
  • பாரதியின் வேத முகம் – 2

     சூழ்ந்ததெல்லாம்  கடவுள்

                                                                                                                                                                                          சு.கோதண்டராமன்

    கடவுள் எங்கே இருக்கிறார்? தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார் என்று சொல்கிறோம். அதற்குச் சான்றாகப் பிரகலாதன் கதையைக் கூறுகிறோம். இதை இக் கால இரணியர்கள் ஏற்றுக் கொள்வார்களா?    புராணங்களைப் புளுகு என்று தள்ளும் காலம் இது.

    தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே, உனக்கு நல்ல காலம் வருகின்றது….. வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே என்று அறிவுறுத்திய பாரதி பிரகலாதன் கதைக்குப் புதிய பொருள் தருகிறார்.

    ஈசாவாஸ்ய உபநிடதம் கூறும் ‘இந்த எல்லாமே இறைவன் தான்’ (ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்) என்ற கருத்தை அதில் காண்கிறார்.

    சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே

                சொல்லென்று இரணியனும் உறுமிக் கேட்க

                நல்லதொரு மகன் சொல்வான் தூணிலுள்ளான்

                நாராயணன் துரும்பிலுள்ளான் என்றான்

                வல்லமைசேர் கடவுளில்லாப் பொருளொன்றில்லை

                மகாசக்தி இல்லாத வஸ்து இல்லை

                அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை

                அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ

                           

                கேளப்பா சீடனே கழுதை ஒன்றை

                கீழான பன்றியினைத் தேளைக் கண்டு

                தாளைப் பார்த்திருகரமும் சிரமேற் கூப்பி

                சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்

                கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்

                கூடி நின்ற பொருனனைத்தின் கூட்டம் தெய்வம்

                மீளத்தான் இதை மட்டும் விரித்துச் சொல்வேன்

                விண் மட்டும் தெய்வமன்று மண்ணுமஃதே

     

    யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் பகுதி உபநிடத மகா வாக்கியங்களின் விளக்கமாக உள்ளது. இது உலகம் முழுமையையும் ருத்திர வடிவமாக வணங்குகிறது.

    மந்திரி, வணிகர், தேரோட்டி, வேடர், கள்வர், விராதன், [ஒழுக்கக் கேட்டால் புறம் தள்ளப்பட்டவர்], தச்சர், குயவர், செம்படவர் என்று பல வடிவங்களில் விளங்கும் ருத்திரருக்கு வணக்கம் தெரிவிக்கும் அது, சடைமுடியர், மொட்டைத் தலையர், நிற்பவர், நடப்பவர், தூங்குபவர், அருகில் இருப்பவர், தொலைவில் இருப்பவர் என்று எவரையும் மிச்சம் வைக்காமல் இறைவனாகக் கருதி வணங்குகிறது. மனிதர் மட்டுமல்ல, நாய், குதிரை ஆகிய விலங்குகள் வடிவத்திலும் ருத்திரன் விளங்குவதாகக் கூறப்படுகிறார். தேர், ஆற்று நீர், மரங்கள் போன்ற உயிரற்ற பொருள்களாகவும் அவர் இருக்கிறார். இந்த மனிதருக்குள்ளும், பிராணிகளிடத்திலும், பொருட்களுக்குள்ளும் ருத்திரன் வசிப்பதாகக் கூறாமல் அவர்களே, அவையே ருத்திரன் என்று கூறுவது கவனிக்கத்தக்கது.

    “நீயே கார்த்திகை நட்சத்திரமாகவும் அக்னியாகவும் உள்ளாய். நீயே அக்னியின் சுவாலை, பிரஜாபதியின் ஒளி, சோமரசத்தின் பிரகாசம். நீயே ரோகிணி நட்சத்திரமாகவும் பிரஜாபதியாகவும் உள்ளாய். நீயே ஆதிரை, நீயே ருத்திரன், நீயே புனர்வஸு, நீயே அதிதி, நீயே பூசம், நீயே பிரகஸ்பதி, நீயே ஆயில்யம், நீயே பாம்புகள், நீயே மகம், நீயே பித்ருக்கள்…” என்று நீளும் மற்றொரு யஜுர் வேதப் பகுதி [யஜுர் 4.4.10] விண்ணிலுள்ள நட்சத்திரங்கள், தேவர்கள் எல்லாவற்றையும் ஒரு பரம்பொருளின் பல தோற்றங்களாகக் காண்கிறது.

    இந்தக் கருத்தைப் பாரதி பின்வருமாறு பாடினார்.

    சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;

    சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;

    வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,

    வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

     

    பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று

    பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்

    நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்

    நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

     

    உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;

    ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;

    பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்

    பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

     

    வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்

    மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே

    இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;

    எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்

    [பாரதி அறுபத்தாறு 15, 17, 18]

    மனிதர்க்குக் கோபம் வருவதற்கான காரணத்தை ஆராய்கிறார் பாரதி. நம்மைச் சூழ்ந்தது எல்லாம் கடவுள், நாமும் கடவுள் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்குமானால் நமக்குக் கோபம் வராது அல்லவா? நம்மிலும் வேறான ஒரு பொருளிடம் தானே நாம் கோபித்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு பொருள் எதுவும் இல்லை என்ற வேதக் கருத்தைச் சுருக்கமாக, மூன்று வார்த்தைகளில் தருகிறார். சூழ்ந்தது எல்லாம் கடவுள்.

     

                சூழ்ந்ததெலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்

                நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே

                சேருவதே மானிடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

    தன் வசன கவிதையில் பாரதி இக் கருத்தை மேலும் விளக்குகிறார்.

    இவ்வுலகம் ஒன்று

    ஆண், பெண், மனிதர், தேவர்,

    பாம்பு, பறவை, காற்று, கடல்,

    உயிர், இறப்பு இவை அனைத்தும் ஒன்றே

    ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலை, அருவி,

    குழல், கோமேதகம் இவ்வனைத்தும் ஒன்றே

    இன்பம், துன்பம், பாட்டு,

    வண்ணான், குருவி, மின்னல், பருத்தி                            

    இஃதெல்லாம் ஒன்று

    மூடன், புலவன்,

    இரும்பு, வெட்டுக்கிளி

    இவை ஒரு பொருள்

    வேதம், கடல்மீன், புயற் காற்று, மல்லிகை மலர்

    இவை ஒரு பொருளின் பல தோற்றம்

    உள்ளதெல்லாம் ஒரே பொருள் ஒன்று

    இந்த ஒன்றின் பெயர் – தான்

    தானே தெய்வம்

    தான் அமுதம் இறவாதது  

     

    பாரதி இக்கொள்கையைப் பின்பற்றினார். அத்வைத நிலையின் உச்ச கட்டத்தில் நின்று அவர் பாடுகிறார்.

    காக்கைச் சிறகினிலே நந்தாலா நின்றன்

    கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

    பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன்

    பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

    கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா நின்றன்

    கீதம் இசைக்குதடா நந்தலாலா

    தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத்

    தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா

     

    உலகனைத்துமாக வியாபித்து நிற்கும் பிரமம் நானே (அஹம் ப்ரம்மாஸ்மி) என்ற உபநிடதக் கருத்து எவ்வளவு எளிய சொற்களில்  வெளிப்படுகிறது பாருங்கள்.

     

    வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்

    மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்

    கானிழல் வளரும் மரமெலாம் நான்.

    காற்றும் புனலும் கடலுமே நான்,

     

    விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,

    வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,

    மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்

    வாரியிலுள்ள உயிரெலாம் நான்.

     

    கம்பனிசைத்த கவியெலாம் நான்,

    காருகர் தீட்டும் உருவெலாம் நான்,

    இம்பர் வியக்கின்ற மாட கூடம்

    எழில் நகர் கோபுரம் யாவுமே நான்

     

    இன்னிசை மாதரிசையுளேன் நான்

    இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,

    புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,

    பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

     

    மந்திரங் கோடி இயக்குவோன் நான்

    இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்

    தந்திரங் கோடி சமைத்துளேன் நான்,

    சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

     

    அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

    அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,

    கண்ட பல சக்திக் கணமெலாம்நான்,

    காரணமாகிக் கதித்துளோன் நான்.

     

    நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,

    ஞானச் சுடர் வானில் செல்லுவோன் நான்,

    ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்

    அறிவாய் விளங்கு முதற் சோதி நான்.

     

    http://artgallerydg.blogspot.in/2010/10/subramanya-bharathi.html

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 1

     

    -சு. கோதண்டராமன்-

    பாரதி ஒரு பன்முகக் கவிஞர். நாட்டுப் பற்று, மொழி்ப் பற்று, சமயப் பற்று இவற்றிற்கு விரோதமி்ல்லாத வகையில் அனைத்து உலக மக்களையும் அனைத்து மொழிகளையும், அனைத்துச் சமயங்களையும் நேசிக்கும் பண்பு, சொல் புதிது பொருள் புதிதாய் கவிதை இசைத்த புலமை, பெண் விடுதலை, சமூக நீதிக்குப் போராட்டம் இப்படிப் பல முகங்கள் உண்டு அவருக்கு.

          நாடகத்தில் ராவணனாகவோ முருகனாகவோ வேடம் போடுபவர் பல அட்டைத் தலைகளைத் தாங்கி வருவதைப் பார்க்கிறோம். எல்லா முகங்களும் ஒன்று போல இருந்தாலும் உண்மை முகம் ஒன்று தான், அதன் வடிவத்தை ஒட்டியே மற்ற முகங்கள் அமைக்கப் பட்டுள்ளன, அந்தத் தலை தான் மற்ற தலைகளையும் தாங்குகிறது என்பதையும் நாம் அறிவோம்.

          பல முகம் கொண்ட பாரதியின் உண்மை முகம் எது? எந்த முகத்தின் அடிப்படையில் மற்ற முகங்கள் அமைந்துள்ளன?

          வேதங்களின் மீது அவர் கொண்டிருந்த மரியாதை தான் அவரது உண்மை முகமாகத் தோன்றுகிறது. தான் பிறந்த குலத்துக்கு உரிய ஆசாரங்களைக் கைவிட்டதோடு அல்லாமல், தன் சாதியினரையும் எள்ளி நகையாடியவர் பாரதி. அப்படிப்பட்ட புரட்சிக்காரர், பழைமையான தனது குல வித்தையாகிய வேதத்தினிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பது வியப்புக்குரிய உண்மை.

          தனது பாடல்களிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் வேதத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். அவரது இந்த வேதப் பற்று தெய்வ பக்திப் பாடல்களில் மட்டுமல்லாது சமூக விடுதலைப் பாடல்களிலும், தேச பக்திப் பாடல்களிலும் கூட வெளிப்படுவதைக் காணலாம்.

          வேதம் பாரத நாட்டின் கலாசாரத்தின் ஆணி வேராக இருந்து வந்துள்ளது. ஆனால் இடைக்காலத்தில் சில தவறான கருத்துகளும் தவறான விளக்கங்களும் வேத இலக்கியத்தில் புகுந்துவிட்டன. இவற்றையும் அக்கால வேதியர்கள் வேதம் என்ற பெயரிட்டே அழைத்தனர். இந்தப் போலி வேதங்களை நீக்கி விட்டு வேதத்தை அதன் தொன்மையான தூய நிலையில் கொண்டு வைக்க வேண்டும் என்பது அவரது பேரவா. இந்தக் கருத்து அவரது ஒவ்வொரு பாடலின், கதையின், கட்டுரையின் அடிநாதமாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவற்றில் சிலவற்றை அடுத்து வரும் வாரங்களில் காண்போம்.

    ஒன்று: பரம் பொருள்

                    பாரதி இந்து மதத்தின் மீதும் வேதங்களிடத்தும் பெரு மதிப்புக் கொண்டிருந்த போதிலும் பிற மதங்களைச் சமமாகவே போற்றினார். அவரது இந்தச் சமயப் பொதுமைக்கு அடிப்படை ரிக் வேதமும் பகவத்கீதையும் தாம். ரிக் வேதத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வசனம், “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்பது. “ஒன்றே மெய்ப் பொருள், அதனை ரிஷிகள் பலவிதமாய்ச் சொல்லினர்,” என்று பாரதி அதை மொழி பெயர்க்கிறார். கீதையில் கண்ணன் கூறுகிறான், “யார் யார் என்னை எந்தெந்த வடிவில் வழிபடுகிறார்களோ அவரவரை அந்தந்த நம்பிக்கையில் நான் நிலைக்கச் செய்கிறேன்.” இவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்ட பாரதி தன் எழுத்துகளில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இக் கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.

                எல்லாச் சமயங்களும் கடவுள் ஒன்றே என்று தான் கூறுகின்றன. ஆயினும் ஏன் தகராறு? தன் சமயத்தையே நன்கு அறியாத அரை குறை மனிதர்கள், “நான் வணங்குவது மட்டுமே கடவுள், மற்ற சமயத்தவர் வணங்குவது பேய்களை, பேய் வழிபாடு செய்வோரைத் திருத்துவது அல்லது அழிப்பது என் கடவுளுக்கு உகப்பானது,” என்ற வகையில் பேசுகிறார்கள். அத்தகையோருக்குப் பாரதி அறிவுறுத்துகிறார் –

    வேடம்பல் கோடியோ ருண்மைக்குள வென்று

                வேதம் புகன்றிடுமே ஆங்கோர்

                வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ்

                வேதமறியாதே

                நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று

                நான்மறை கூறிடுமே ஆங்கோர்

                நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்

                நான்மறை கண்டிலதே.

    வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுபவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல. அவை அனைத்தும் ஒரு தெய்வத்தின் வெவ்வேறு வேடங்களே. இந்த வேடங்களைத் தெய்வத்தின் மீது மனிதர் தாம் சுமத்துகின்றனர். அதன் உண்மையான சொரூபம் சுத்த அறிவு ஆகும். வள்ளுவர் இறைவனை வாலறிவன் என்று போற்றுகிறார். இறைவன் எல்லாம் அறிந்தவன் என்று தான் எல்லாச் சமயங்களும் கூறுகின்றன. இதை உணர்த்தும் வேத வசனம், “ப்ரக்ஞானம் ப்ரம்ம” (அறிவே கடவுள்) என்பதைப் பாரதி மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.

    ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி

                அலையும் அறிவிலிகாள் பல்

                லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்

          டாமெனல் கேளீரோ என்று பாரதி கேட்கிறார்.

                நாம் என்ன செய்கிறோம்? மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் பல கள்ள மதங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம். இது முறையா? அச்சமும் அறியாமையுமே வன்முறையின் அடிப்படை. எனது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சமும், எல்லா மதங்களுக்கும் உட்புகுந்த கருத்து ஒன்றே என்பதை அறியாமையுமே மாற்றுச் சமயத்தாரை அழித்தால் நம் சமயம் வாழும் என்ற மூட நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. வீரமில்லாமல் இந்த அச்சங்களுக்கு இடமளிப்பவர் எந்தச் சமயத்தவரானாலும் இறைவனை அடைய முடியாது என்கிறார் பாரதி.

    வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்

                எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்

                பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்

                பேணுமவர் பதமலரும் பூணல் வேண்டும்

      “ஒவ்வொரு மனிதனும் தனித் தனி இயல்பினன். அவனவன் மதம் அவனது தனித் தன்மையைப் பொறுத்தது. எனவே இன்னும் இரண்டு கோடி மதங்கள் பெருகட்டும். எத்தனை பேர் எத்தனை விதமாக வழிபட்டாலும் உண்மை ஒன்றே” என்கிறார் விவேகானந்தர். பாரதி அதனை வழிமொழிகிறார்-

    பூமியிலே கண்டமைந்து மதங்கள் கோடி

                புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்

                சாமிஎன ஏசுபதம் போற்றும் மார்க்கம்

                ஸநாதனமாம் இந்துமதம் இஸ்லாம் யூதம்

                நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்

                நல்ல கண்பூசி மத முதலாப் பார்மேல்

                யாமறிந்த மதங்கள்பல உளவாமன்றே

                யாவினுக்கும் உட்புகுந்த கருத்திங்கொன்றே      

     

                தெய்வம் பல பல சொல்லிப் பகைத்

                தீயை வளர்ப்பவர் மூடர்

                உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும்

                ஓர் பொருளானது தெய்வம்

    என்கிறார் பாரதி. அல்லாவைப் போற்றி அவர் பாடுவதைக் கேட்போம்-

    பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்

                எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளிவானில்

                நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன்

                சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி

                அல்லா அல்லா அல்லா

    இதே கருத்தைக் காளி மீது ஏற்றிப் பாடுகிறார்.

    விண்டுரைக்க அறிய அரியதாய்

                விரிந்த வான வெளியென நின்றனை

                அண்டம் கோடி வானில் அமைத்தனை

                அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

      பாரதி விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனையைக் கவனியுங்கள். தொல் பழம் தெய்வங்கள் உள்பட, வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய கிருத்துவப் பெயர்களும் ஒரே பரம்பொருளைக் குறிப்பதை விளக்குகிறது அது.

    விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

    பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி

    அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்

    தேவரும் தானாய் திருமகள் பாரதி

    உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்

    உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

     

          இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்

          தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்

          உள்ளொளியாகி உலகெலாம் திகழும்

          பரம்பொருளேயோ, பரம்பொருளேயோ

          ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்

          தேவதேவா சிவனே கண்ணா

          வேலா சாத்தா விநாயகா மாடா

          இருளா சூரியா இந்துவே சக்தியே

          வாணீ காளீ மாமகளேயோ

          ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள

          யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே

          வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

        சமயங்கள், சாத்திரங்கள், சடங்குகள் எல்லாம் உண்மையை அடைவதற்கான படிகளே அன்றி அவையே இறுதி நிலை அல்ல. மனதைச் செம்மைப்படுத்திப் பரம்பொருளை உள்ளத்தால் தொட முடிந்தால் இவை தேவையற்றதாகி விடும்.

    காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா

                பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே

                சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை

                தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றால் போதுமடா

                தவமொன்றும் இல்லை ஒரு சாதனையுமில்லையடா

                சிவமொன்றே உள்ளதெனச் சிந்தை செய்தாற் போதுமடா

     

                அறிவு விளக்கம் பெறாத குழந்தை நிலையில் உள்ளோர் தாம் விரும்பிய வெவ்வேறு வடிவங்களில் பரம்பொருளை வழிபடட்டும். ஆனால் அதே நிலையில் நின்று விடாமல் படிப்படியாக மேலே உயர்ந்து வடிவங்கள், வழிபாட்டு முறைகள்,  வேதங்கள், தவங்கள் இவற்றைக் கடந்து பரம்பொருளை உள்ளத்தால் உணரும் நிலைக்கு வரட்டும். இவை எல்லாமே உண்மை தான். இதை உலகுக்கு உணர்த்தவல்ல ஒரே நாடு நமது நாடு தான் என்பதில் பெருமை கொள்கிறார் பாரதி.

    ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

                உலகின்பக் கேணிஎன்றே

                நன்று பல்வேதம் வரைந்தகை பாரத

                நாயகிதன் திருக்கை

    Share
  • மின்தடை

    சு. கோதண்டராமன்
    இரவு மணி எட்டு

    விசிறிகள் சுழல, விளக்குகள் ஒளிர,

    வீடு தோறும் தொக்கா முழக்கம்.

    போட்டிப் பெருங்குரல் மாணவர் படிப்பு.

    உலகமே சுறுசுறு, ஓய்விலா இயக்கம்.

     

    திடீரென மின்சாரம் நின்றது.

     

    விளக்குகள் அணைந்தன,

    தொக்கா ப்ரிட்ஜுடன் க்ரைண்டரும் வாய் மூட,

    வீட்டுக்குள் கொசுக்கடி, வெளியே வந்தோம்.

    வானம் மட்டும் பளிச்செனத் தெரிந்தது.

    இத்தனை விண்மீனா! ஈதென்ன விந்தை!

    முத்துகள் வயிரங்கள் பதித்த பட்டுடையோ!

    வெள்ளி முலாம் பெற்ற தென்னையோ பேரழகு!

    கண்களைக் கூசாத கவினுறு நிலவொளி!

    இயற்கைத் தென்றலின் இதமான தழுவல்!

     

    ஐந்து நிமிடம் கழித்து-

     

    மின்சாரம் வந்தது.

    உறைந்த உலகு உயிர்பெற்று எழுந்தது.

    விட்ட சீரியல் தொடர வேண்டும்,

    விடிந்தால் தேர்வு படிக்க வேண்டும்,

    எல்லோரும் பறவை போல் தத்தம் கூட்டில்.

    மீண்டும் இயந்திரமாயினர் மக்கள்.

    படத்துக்கு நன்றி

    http://kashmirobserver.net/news/power-cut-dismays-consumers

    Share
  • தெரு நாய்

    சு.கோதண்டராமன்

    எங்கும் பரவியுள ஈசனுக்கோர் பாமாலை

    எழுத முற்பட்டு ஏடெடுத்து அமர்ந்திட்டேன்

    “எனைப் பாடு, எனைப்பாடு” என்றொரு குறுக்கீடு

    எட்டி நான் பார்த்தேன். ‘சீ, ஒரு தெரு நாய்!’

    “உனக்கென்ன தகுதி ? குரைக்காமல் கிட” என்றேன்.

     

    “எங்குமுளன் ஈசன் எனில் என்னிடத்தில் அவன் இலையோ?”

    (நாய் தொடர்ந்து கூறியதை நம் மொழியில் தருகின்றேன்.)

     

    “மண்ணில் நான் பிறந்து மாதமொன்று ஆகிறது..

    புத்தியைக் கொண்டுந்தன் பிழைப்பை நடத்தென்று

    தாயும் விரட்டிடவே தனியன் ஆகிவிட்டேன்.

    கால் கொண்டு சேர்த்தது காலையில் இங்கென்னை.

    போவோர் பின் போனேன், வருவோர் பின் வந்தேன்.

    இங்குள்ள மனிதரை என் நண்பனாய் ஏற்றேன்.

     

    காலை முதல் பட்டினி, அது எனக்குப் பொருட்டல்ல.

    எனக்கொரு பிடி சோறு இடினும் இடாவிடினும்

    இப்போது வருகின்றான் யாரோ ஒரு வேற்றாள்.

    அவனிடமிருந்து உமதுடமை காத்திடுதல்

    எந்தன் கடமையென எண்ணிக் குரைக்கின்றேன்.

    பணி செய்து கிடப்பதென் கடனென் றுரைத்தது.

     

    நாய் உரைத்த சொல் யாவும் நாயகனின் சொல்லேயாம்.

    நாய் வடிவினில் விளங்கும் ருத்திரனுக்கு நம என்ற

    வேத மொழி நினைந்து விம்மிதம் எய்தினேன்.


    படத்துக்கு நன்றி

    http://thedogweb.meu.zoznam.sk/psie-vianoce/

    Share
  • அக்னி

     
    சு. கோதண்டராமன்

    புலவர் வகுத்தபடி புகழோடு  தோன்றினாய்.

    பிறக்கும் கணமுதலே பிரகாசம் பரப்புகிறாய்.

    கடமை முடிந்தவுடன் கணமும் உயிர் தரியாய்.

    காலம் பலவாகக் கவிந்திருந்த இருளெனினும்

    நிற்றல் இயலுமோ நின் முன்னே தேவனே.

    சார்ந்தாரைக் காத்திடுதல் சான்றோரின் இயல்பென்பர்.

    நீயோ சார்ந்தாரை நீறாக்கி மகிழ்கின்றாய்,

    உயர்வும் தாழ்வுமென உனக்கில்லை பேதங்கள்

    உன்னதக் கலைப் பொருளை ஓசையின்றி விழுங்கிடுவாய்.

    அழுகிய பிணத்தினையும் ஆசையுடன் உண்டிடுவாய்

    அழுக்கு தூசிகளை அழித்திடவே விரும்பிடுவாய்

    பழையன நைந்தன உன் பசி வாய்க்கு உணவாக்கி

    புதுமை பிறத்தற்குப் புவி தன்னில் வழியமைப்பாய்.

    தங்கம் ஒளிர்வதுன் தயவின்றி நடைபெறுமோ?

    வீட்டில் சமையலகம் வீதியில் வாகனங்கள்

    எந்திரத் தொழிலகங்கள் யாவையும் இயக்கிடுவாய்

    நீயின்றி எனக்கிந்தப் பொருளெல்லாம் ஏது?

    நானே தான் ஏது?

    என்னிடம் நீ இன்றேல் எனைத் தூக்கி நான்கு பேர்

    உன்னிடம் சேர்ப்பித்தல் உலகில் மரபன்றோ?

    மானிடரே வாருங்கள், மகரிஷிகள் சொன்னபடி

    வேத மொழி சில கூறி வேண்டிடுவோம் அக்கினியை.

    அக்னிமீளே புரோஹிதம்

    யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம்

    ஹோதாரம் ரத்ன தாதமம்

    முன்னின்று வழிநடத்திச் செல்பவனே போற்றி

    முதன்மையாய் நலம் செய்யும் முன்னவனே போற்றி

    யாகத்தின் தலைவனாய் இயங்கிடுவாய் போற்றி

    யாகங்கள் செய்பவனும் நீயே தான் போற்றி

    சிறப்பான செல்வங்கள் சேர்த்திடுவாய் போற்றி

    Share
  • வாயு தேவன் புலம்பல்

     

    சு. கோதண்டராமன்

    வெப்பம் மிகுந்த இடம் நோக்கி
    விரைந்து செல்லும் இயல்புடனும்
    சூடு என் மேல் பட்டவுடன்
    சுர்ரென மேலெழும் இயல்புடனும்
    இறைவா என்னைப் படைத்துவிட்டாய்
    இவ்விதி மாற்றல் எளிதாமோ

    வீடுகள் தோறும் கூரையினில்
    விதவிதப் பெயருடன் தொங்கிடுவார்
    முக்கரம் விரித்துச் சுழன்றிடும் இச்
    சக்கரத்தாழ்வார் செயல் காணீர்

    தலைவா உன்னை மறந்துவிட்டு
    தானே விதியெனத் தருக்குகிறார்
    மக்கள் உடலைக் குளிர்வித்து
    மற்றவர் வெப்பம் நான் பெற்று
    மேலே செல்ல முயலுகையில்
    மிகுந்த எதிர்ப்புக் காட்டுகிறார்
    கழுத்தைப் பற்றித் திருகுகிறார்
    தரையில் தள்ளி மோதுகிறார்
    குனிய வைத்துக் குட்டுகிறார்
    கொடுமை அந்தோ நான் சகியேன்
    இறைவா உன்னை வேண்டுகிறேன்
    இனிப் படமுடியாது இத்துயரம்
    சக்கரத்தாழ்வார் செயும் கொடுமை
    சற்றே மாற்ற மாட்டீரோ ?

    Share
  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?

     

     சு. கோதண்டராமன் 

     

    போதி மரத்துப் புனிதன் சொன்னான்

    “சாவினை அறியாத் தனி மனை இல்லை”

     

    “பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும்

    உலகினில் இயல்பாம். ஒழித்திடு சோகம்”

    கண்ணன் உரைத்தான் கடும் சமர் நாளில்

     

    “நேற்றைய வலியும் நாளைய கனவும்

    நெஞ்சினில் பாரம். நீக்குக அதனை.

    இன்றெது உள்ளதோ இதுவே உண்மை”

    தத்துவ ஞானி ஜே.கே. பகர்ந்தான்.

     

    “சென்றது மீளுதல் செகத்தினில் இல்லை

    இன்று தான் புதிதாய்ப் பிறந்தோ மென்று

    எண்ணிக் களிக்க. இன்பமாய் வாழ்க.”

    ஆசையாய்ப் போற்றும் மீசைக் கவிஞன்

    அழுத்திச் சொன்ன கருத்துக ளாமிவை.

     

    அனைத்தும் கற்றேன். அறிஞன் ஆனேன்.

    இத்தனை அறிவையென் மூளைக்கனுப்பிய

    எந்தன் கண்களோ இன்னமும் அசடு.

    எட்டுச் சுரைக்காய் சுவைக்க அறியா.

     

    கண்டிராக் க்ண்ணனைக் காணவே வேண்டி

    கரைந்து உருகினாள் கவிதையில் மீரா.

    நிசிதின் பரசத நைன ஹமாரி

    (இரவும் பகலும் சொரியுதெம் கண்கள்)

     

    பெற்ற உறவைப் பிரிந்து நிற்கையில்

    இரவும் பகலும் சொரியுதெம் கண்கள்.

    ஏட்டுக் காயை எடுத்துச் சமைத்து

    அசட்டுக் கண்களுக் கருத்துவார் உளரோ?

     

    படத்துக்கு நன்றி

    http://nutrihealth.in/health/bottle-gourd-guard-against-diseases/

    Share
  • ஸப்தபதி

       சு.கோதண்டராமன்

    ஏழு அடி வைப்பது எதற்காக?

    இரு மனம் இசைந்து ஒன்றாக.

    முதலடி வைக்கையில் வேண்டுவதோ

    முகுந்தன் அருளால் மிகு உணவு.

     

    இரண்டாம் அடியை எடுப்பது

    இலட்சுமி நாயகன் புஷ்டி தர

    மூன்றாம் அடியை வைக்கும்போது

    முராரி காப்பான் விரதங்களை.

     

    நான்காம் அடியை வைப்பதனால்

    நாரணன் அளிப்பான் நல்ல சுகம்.

    ஐந்தாம் அடியால் வேண்டுவது

    அரியின்  அருளால் பசுச் செல்வம்.

     

    பருவ காலங்கள் துணை புரிய

    பிரார்த்திப்பது தான் அடுத்த அடி.

    ஏழாம் அடியை வைப்பதனால்

    இறைவனிடம் வேண்டும் வரம் என்ன?

     

    கணவன் செய்யும் நற்பணிகள்

    காரியம் யாவினும் கைகொடுக்க

    கண்ணபிரான் அருள் பின் தொடர்க.

     

    ஏழடி நடந்த நீ என் தோழி.

    என்றும் விலக்கோம் நம் நட்பை.

    சிந்தனையில் நாம் ஒன்றாவோம்.

    செயலிலும் நாமினி ஒன்றாவோம்

    உள்ளத் தூய்மை அன்புடனும்

    ஒன்றாய் இன்பம் அனுபவிப்போம்.

     

    இருக்கு வேதம் நீ என்றால் இசைக்கும் சாமம் நான் ஆவேன்

    பொறுக்கும் பூமி நீ என்றால் பொழியும் வானாய் நானிருப்பேன்

    விளையும் வயலாய் நீ இருப்பாய். விதையாய் உன்னுள் மறைந்திடுவேன்

    செல்லும் வாக்காய் நீ இருக்க, சிந்தனை மனமாய் நான் இருப்பேன்

     

    இன்சொல் நங்காய் என்னிடம் வருக.

    நன்மக்கள் பேறும் நலிவிலாச் செல்வமும்

    பெற்று நாம் வாழ்வோம், பெரும் புகழ் அடைவோம்

    படத்துக்கு நன்றி

    https://picasaweb.google.com/lh/photo/hjO-U6-l75FB2KaN6EwPVg

     

    Share
  • வைகறைப் பொழுது

    சு.கோதண்டராமன்

    பொழுது புலர்கிறது. இரவு மெல்ல விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சூரியன் உதிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே கீழ்வானில் வெளிச்சம் பரவி விட்டது. மானிடர் மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் உறங்கி எழுந்து விட்டன. நேற்றைய உடல் வலிகள், மன வேதனைகள் யாவும் மறைந்து உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. எல்லோரும் புதிய நாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

    இது போன்ற எத்தனையோ வைகறைகளை நாம் கடந்து வந்துள்ளோம். இனி நம் வாழ்நாளில் எத்தனையோ காணப்போகிறோம். சர்வ சாதாரணமான தினசரி நிகழ்ச்சி, ஆனாலும் வேத ரிஷி ஒவ்வொரு விடியலையும் புதிதாகக் காண்கிறார். அவரது உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை கவிதையாக்கித் தருகிறார். கீழே வருவது ரிக் வேதம் முதல் மண்டலம் 113வது சூக்தம். குத்ஸ ஆங்கிரஸர் என்பவர் யாத்தது.

     

    வைகறைப் பொழுது இனியது. ஆனந்தம் தருவது. அழகானது. அழகானவற்றை எல்லாம் பெண்ணாகவும் ஆற்றலோடு கூடியவற்றை எல்லாம் ஆணாகவும் உருவகிப்பது வேத ரிஷிகள் துவக்கிய கவிதை மரபு. இதோ இந்த விடியல் நேரம், உஷை (உஷா, உஷஸ்) என்னும் பெண்ணாகக் காட்டப்படுகிறது.

     

    இன்னும் இரு பெண்கள் உள்ளனர். இரவு ஒரு பெண், பகல் ஒரு பெண். இருவர்க்கும் என்ன உறவு? சோதரிகளாகத் தான் இருக்க வேண்டும். இரவு கறுப்பாகவும், பகல் வெள்ளையாகவும் இருக்கின்றன. ஆனால் அச் சோதரிகள் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. ஒரே பாதையில் ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு கணமும் தடைபட்டு நிற்காமல், அவர்களது இந்தப் பயணம் தொடர்கிறது. பகல் முழுமையாகத் தோன்றிவிட்டால் அதில் ஒரு உக்கிரம் காணப்படுகிறது. அதற்கு  முன் வரும் வைகறைப் பொழுதோ உக்கிரம் இல்லாத, அமைதியான, ஆனந்தமான, இனிய சூழலை ஏற்படுத்துகிறது. இந்த வைகறை பிறக்க ஒரு பிரசவ அறை அமைத்து விட்டு இரவு என்னும் நங்கை தன் இல்லம் நோக்கித் திரும்புவதாகக் கவிஞரின் கற்பனை விரிகிறது.

    இப்படி நாள் தவறாமல் இரவும் பகலும் மாறி மாறி வருவது எப்படி? கவிஞர் வியக்கிறார். ஒரு இயற்கை நியதி உள்ளது, அதில்  தோன்றியவை தான் இவை யாவும், அந்த இயற்கை நியதிக்குக் கட்டுப்பட்டுத் தான் இவை அனைத்தும் செயல் புரிகின்றன என்பதை உணர்கிறார். வேதக் கவிதைகளில் எங்கும் இழையோடும் மையக் கருத்தே இது தான். ருதம் என்ற பெயரால் குறிக்கப்பட்ட இந்த நியதி தான் கடவுள் கொள்கையாகப் பிற்காலத்தில் பரிணாம வளர்ச்சி பெற்றது.

    வைகறைப் போதில் ஒவ்வொரு உயிரும் விழிப்புப் பெறுகிறது. இறந்தோர் மட்டுமே விழிப்பதில்லை. அவரவர் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுகின்றனர். அரசனாக இருந்தால் செங்கோல் ஓச்சுவது தொடர்பான கடமைகள் அவனுக்காகக் காத்திருக்கின்றன. பொருள் தேடப் புறப்படுவோர் சிலர். புகழ் நாடிச் செயல் புரியத் தொடங்குவோர் சிலர். தேவ பூசனைக்கு ஆயத்தமாவோர் சிலர். பொழுது புலரவில்லையெனில் தேவர்க்கு உணவளிப்பார் எவரும் இரார் என்கிறார் கவிஞர்.

    பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை அதிதி என்னும் பெண்ணாக உருவகிக்கப்படுவது வேத மரபு. தேவர்களாகக் கூறப்படும் இயற்கைச் சக்திகள் யாவும் அதிதியின் மக்களாகக் கருதப்படுகின்றனர். மக்கள் தேவ பூசை செய்யவும், தேவர்களுக்கு உணவளிக்கவும் வழி செய்வதால் உஷை தேவர்களின் தாயாகவும் அதிதியின் வடிவினளாகவும் கருதப்படுகிறாள்.

      சு.கோதண்டராமன்

    எத்தனை காலமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என வியக்கிறார் கவிஞர். நம்முடைய எண்ணற்ற முன்னோர்கள் எத்தனையோ விடியல்களைப் பார்த்து விட்டு மறைந்து விட்டனர். இன்று நாம் பார்த்து மகிழ்கிறோம். இனி எத்தனையோ எண்ண முடியாத வைகறைகள் வரப்போகின்றன. நம் சந்ததியர் அதைக் கண்டு களிப்பர். இதன் துவக்கத்தையோ முடிவையோ யார் அறிவார்? இந்த மாபெரும் காலப் பெரு வெள்ளத்தில் தான் ஒரு சின்னஞ்சிறு திவலை என்பதை உணர்ந்து அடக்கம் கொள்கிறார் ரிஷி.

    இனி மேற் சொன்ன வேதக் கவிதையின் தமிழாக்கத்தைப் பார்ப்போம். (மொழிபெயர்ப்புகள் எப்போதுமே குறை உடையவை தாம். வேதக் கவிதையின் உயிர்த்துடிப்பை, அதில் அடங்கியுள்ள வியப்புணர்ச்சியை, ஆனந்தத்தை மொழிபெயர்ப்பது அரிது. அதன் கருத்தை மட்டுமே இங்கு தந்துள்ளேன்.)

     

    1     வந்தது வந்தது பேரொளி இன்று,

    வானகமெங்கும் பரவியே நின்று.

    ஆதவன் தோன்ற வழி விடும் இருட்டு

    அணங்கு உஷை பிறக்க அமைத்ததோர் அரங்கு.

     

    2     வெள்ளைக் குழவியாய் வைகறை மலர்ந்தாள்

    இருளின் கருமையோ இல்லம் விரைந்தது.

    இரவென ஒருத்தி பகலென ஒருத்தி

    அமரத் தன்மை அடைந்த மகளிர்

    ஒன்று போல் இருப்பர் நிறம் தான் வேறு

    ஒருவரை ஒருவர் தொடர்ந்து சென்று

    விண்ணில் நடக்கும் விந்தை காணீர்

     

    3     மூலப் பரம்பொருள் ஏவியபடியே

    முடிவிலாப் பாதையில் முனைந்து செல்வர்

    இரு சோதரிக்கும் இருப்பது ஒரு வழி

    மாறி மாறியே பயணம் செய்வர்.

    நிறம் தான் வேறு மனமோ ஒன்று

    அழகியர் இருவரும் ஒருவரை ஒருவர்

    தடுப்பதும் இல்லை நிற்பதும் இல்லை.

     

    4     உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை

    இனிய சொற்களின் எழில்மிகு தலைவி

    பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,

    கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.

    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

     

    5     சுருண்டு கிடந்து துயின்றிருந் தோரை

    பூசனை புரியவும் பொருளினைத் தேடவும்

    இன்ன நலன்களை இனிதே நாடவும்

    தூண்டி நிற்பாள் திருவளர் செல்வி

    விழியிலார்க்கு விழிகள் அருளி

    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

     

    6     கோலினை ஓச்சக் கிளம்பிடும் ஒருவன்

    புகழினைச் சேர்க்க புறப்படும் ஒருவன்

    இலாபம் ஈட்டவே இயங்கிடும் ஒருவன்

    கடமையைச் செய்யக் கடுகிடும் ஒருவன்

    வேலைகள் பலவாம் விரைதல் ஒன்று

    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

     

    7     விண்ணின் குழவியே, வெளிச்சம் என்னும்

    நல்லுடை உடுத்த நளின மங்கையே,

    புவியின் செல்வம் ஆளும் ராணியே,

    மங்கலச் செல்வி, இன்று எம்மீது

    உந்தன் ஒளியினை உவந்து பாய்ச்சுக.

     

    8     கடந்து சென்ற கணக்கிலா விடியல்

    அடிச்சுவ டொற்றிச் செல்கிறாய் நீயும்

    இனி வர விருக்கும் எண்ணிலா விடியல்

    யாவற் றிற்கும் நீ வழி காட்டி.

    உதித்ததும் எழுப்பினை உயிரினம் யாவையும்.

    இறந்தோர் தம்மை எழுப்ப வலாயோ?

     

    9     உஷையே, உன்னைக் கண்டதும் மக்கள்

    தீயினை மூட்டித் தொடங்குவர் வேள்வியை.

    சூரியக் கண்ணால் சுடரினைப் பரப்பினை.

    தேவ பூசனை செய்யும் உந்துதல்

    உன்னால் அன்றோ, உஷையே, நடைபெறும்!

     

    10    எத்தனை காலமாய் எம்முடன் உள்ளாய்?

    இன்னும் எத்தனை காலம் இருப்பாய்?

    கடந்து சென்ற நாட்களின் வழியில்

    நடந்து வந்து நாளும் ஒளிர்வாய்.

    இனிவரும் விடியலை இனிதே அழைப்பாய்

     

    11     எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்

    எண்ணிலா விடியல் கண்டு களித்து

    எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.

    உஷையின் ஒளி கண்டு உள்ளம் மகிழ்ந்திட

    இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.

    புதிய மக்கள் நாளை வருவர்

    விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.

     

    12    நியதியில் தோன்றினை, நியதியைக் காத்தனை

    நெடிய பகையினை நீளத் துரத்தினை

    மகிழ்வு அளித்தனை மங்கலச் செல்வி

    இனிய ஒலிகள் எழும்பச் செய்தனை

    தேவர்க்குணவை தினமும் கொணர்ந்தனை

    இன்றுனது ஒளியை எம்மிடம் வீசு

    13    தேவி உனது திருநிறை ஒளியை

    பன்னெடுங்காலமாய்ப் பாய்ச்சி வந்துளாய்.

    இன்றுனது ஒளியை எமக்கு அளிக்கின்றாய்

    மூப்பும் இறப்பும் கடந்தவளாதலால்

    இனி வரும் நாளிலும் இனிதே ஒளிர்வாய்

     

    14    விண்ணின் விளிம்பில் ஒளியுடன் வந்தாள்

    கருமையாம் போர்வையைக் கழற்றி எறிந்தாள்

    செந்நிறப் புரவியும் சிறந்ததோர் தேரும்

    கொண்டு அவள் விரைகிறாள் உலகினை எழுப்ப.

     

    15    உயிரினை ஊட்டும் பொருள்களை எல்லாம்

    உடமையாய்க் கொண்ட உஷையெனும் நங்கை

    வியப்புறு ஒளியால் விழிப்பினைத் தந்தாள்

    கடந்து சென்ற விடியல் களிலே

    கடைசியாய் வந்தது இன்றைய வைகறை

    இனிவர விருக்கும் விடிவு களுக்கு

    முதலாய் அமைந்ததும் இதுவே ஆகும்

     

    16    உயிர்த்து எழுந்தோம், ஒளியே எங்கணும்,

    விரைந்து மறைந்தது எங்கோ இருட்கணம்

    பகலவன் நடக்கவோர் பாதை அமைத்தாள்

    இன்று எமது ஆயுளில் இயைந்தது ஒரு நாள்

     

    17    ஒளிமிகு உஷையை உளத்திலே துதித்து

    உயர்ந்த சொற்களால் பாக்கள் இயற்றிப்

    போற்றும் புலவர்க் கருளுக உஷையே

    குழந்தைப் பேறும் குன்றா ஆயுளும்.

     

    18    சோமம் பிழிந்து செஞ்சொல் கலந்து

    காற்றினில் கனிவாய்க் கலந்திடும் புலவரை

    வீரப் புதல்வர், விரையும் குதிரைகள்

    பசுக்கள் பலவுடன் தந்து காத்திடுக.

     

    19    தேவர் தாயே, அதிதியின் வடிவே

    வேள்விக் கொடியே ஓங்குக, ஒளிர்க!

    யாவரும் போற்றும் இனிய நங்காய்,

    உன்னைத் துதிக்கும் அடியார் தம்மை

    உலகில் உயர்ந்து ஓங்கிடச் செய்வாய்.

     

    20    உஷையைப் போற்றும் புலவோர் தமக்கு

    உவந்து அவள் அளிக்கும் உயரிய செல்வம்

    மிதிரன் வருணனும் அதிதி சிந்துவும்

    விண்ணும் மண்ணும் ஆமெனக் கூறுக.

    படத்திற்கு நன்றி

    http://chakrabodyyoga.blogspot.in/2012/06/from-blah-to-brilliant-3-great-reasons.html

    Share
  • கண்ணீர்

     சு.கோதண்டராமன்

    என்னருமைக் கண்ணீரே,

    இன்னலிலே என் தோழா,

    உன்னருமை நானறிவேன்

    ஒன்றுரைப்பேன் கேளாய் நீ

     

    நலிந்தார்க்கு நற்றோழா நானறிவேன் நின் திறமை

    வலிமையுள்ள நின் முன்னே வாள் திறனும் சிறிதாகும்

    ஞாலத்தின் முழுமையிலும் நீ தூண்டி நடத்திட்ட

    கோலப் பெருஞ்செயல்கள் கோடி கோடி ஆகுமையே

     

    வாயினால் வடித்திடவே வார்த்தையிலாச் செய்தியெலாம்

    நீயாக உரைத்திடுவாய் நீள் விழியினில் நின்று.

    பேசவொணாப் பெருஞ்செய்தி இதயத்தில் உளதெல்லாம்

    நேசமுடை நெஞ்சத்தில் நீயே உரைத்திடுவாய்.

     

    உள்ளத்துச் சோகத்தை உன்னி உன்னி நின்னை பெரு

    வெள்ளம் போல் பெருக்கிவிட வேட்கை பிறக்குதையே.

    ஆனால்

    பத்துப் பேர் என்னைப் பார்த்து நிற்கும் போது

    முத்துப் போல் நீ வந்து முகம் காட்டி நிற்கிறாய்

    பிறரறியாது உன்னைப் பேணி மறைக்கிறேன்

    ஊரறிய அழுவதிலே உண்டாமோ ஆறுதலும்

     

    அருகில் யாருமே இல்லாத நேரம் நீ

    பெருகி வரவேண்டுமெனப் பிடித்து வைக்கிறேன்.

    தனிமையிலே நின்றுன்னை ஆறாய்ப் பெருக்குவதே

    மனச்சுமை குறைத்திடும் மார்க்கம் ஆகிவிடும்.

    படத்திற்கு நன்றி

     

     

    Share
  • அன்ன தாதா சுகீ பவ

     

     சு. கோதண்டராமன்

    வயிறு முட்டப் பாலை அருந்தி

    வாயை விலக்கித் தாய்முகம் பார்த்து

    இனிய வாயை இதமாய்த் திறந்து

    கனிவும் மகிழ்வும் கண்களில் காட்டி

    சின்னக் குழந்தை சிரிப்பதன் பொருள் என்

    அன்னம் இட்டவர் நலமுடன் வாழ்க

     

    ஏதும் இல்லா ஏழை மெலிந்து

    காதம் நடந்து வேற்றூர் நண்ணி

    வருத்தும் பசியினால் வயிறு சுருங்கி

    அறத்திடு பிச்சை இரந்து பெற்றது

    உப்பும் நீரில் ஊறிய சோறும்

    தொப்பை குளிரத் தொலைந்தது துன்பம்.

    உண்டபின் ஈந்தவன் முகத்தினை நோக்கி

    கண்களில் நன்றிக் கண்ணீர் துளிர்க்க

    சொன்ன செய்தி எதுவெனக் கேளீர்

    அன்னம் இட்டவர் நலமுடன் வாழ்க.

     

    படத்திற்கு நன்றி

    http://www.melaniecooks.com/how-to-cook-perfect-rice-in-rice-cooker/283/

    Share
  • பொம்மை

     

    சு. கோதண்டராமன்

    குழந்தையை அழைத்துக்கொண்டு
    பொம்மை வாங்க
    கடைத்தெருவுக்குப் போனேன்.

    “இந்தக்கடையில் வாங்கலாம்பா”
    “வேண்டாம்மா,
    இது வேறே ஜாதிக்காரன்
    நடத்தற கடை.”

    “இதுப்பா?”
    “இதுவும் அப்படித்தான்.”

    பல கடைகளைத்தாண்டி
    என் ஜாதிக்காரர் நடத்தும்
    கடையைக் கண்டுபிடித்தேன்.
    அங்கு பல சேல்ஸ்மென்.

    இவர் நெற்றியில்
    நாமம் போட்டிருக்கிறார்,
    வேண்டாம்.

    இவர் நெற்றியில் கரிக்கோடு
    வேண்டாம்.

    இதோ இவர்கள் எல்லாம்
    என்னைப் போலவே
    விபூதி பூசியிருக்கிறார்கள்.

    இவர் தெலுங்கு பேசுகிறார்,
    இவர் மலையாளம்,
    இதோ இவர்கள்
    என்னைப்போலவே
    தமிழ் பேசுகிறார்கள்.

    “என்ன ரேஞ்சுலே பொம்மை வேணும் சார்?”
    என் கையில் பத்து ரூபாய் இருந்தது
    நூறு இருநூறு என்கிற
    பொம்மை எல்லாம்
    எனக்குக் கட்டுபடி ஆகாது.
    அஞ்சு ஆறு ரூபா பொம்மை எல்லாம்
    என் கௌரவத்துக்கு
    குறைச்சல்.

    “பத்துப் பதினஞ்சு ரூபாயிலே எடப்பா”
    பேரம் செய்து
    ஒன்றிரண்டு குறைச்சுக்கலாம்
    ஒன்று இரண்டு பணம் குறைந்தால்
    கடன் சொல்லிக்கலாம்.

    பொம்மை உற்பத்தி ஆன தேதிக்கும்
    என் குழந்தை பிறந்த தேதிக்கும்
    பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து
    “இந்தப் பொம்மை அழகாயில்லை,
    வேண்டாம்.
    இது வேலைக்காரன் பொம்மை,
    வேண்டாம்.
    இது வியாபாரி பொம்மை,
    வேண்டாம்.”

    அப்பா ! கடைசியில் கிடைத்தது,
    ஐ.டீ இஞ்சினீயர் பொம்மை.
    இதை விற்பவர்
    நல்ல குடும்பத்தைச்
    சேர்ந்தவர்கள் தானா என்பதை
    விசாரித்து,
    திருப்தி அடைந்து,
    பேரம் பேசி,
    ஒரு வழியாக பொம்மையை வாங்கி,
    கையில் எடுத்துக்கொண்டு பார்த்தால் —  

    குழந்தையைக் காணோம் !

    குழந்தை, குழந்தை !
    ஐயோ என் குழந்தை !
    தேடினேன், தேடினேன்.

    கடைசியில் ஏதோ ஒரு கடையில்
    இதுவரை நான் ஒதுக்கி வந்த
    பொம்மைகளில் ஒன்றை
    கையில் வைத்துக்கொண்டு
    குழந்தை சிரித்துக் கொண்டிருக்கிறாள்

    குழந்தை ஆசைப்பட்டது என்று
    கடைக்காரர்
    இனாமாகக்  கொடுத்து விட்டார் போலும்

     பொம்மை என்பதற்குப் பதிலாக மாப்பிள்ளை என்று வாசிக்கலாமா ?

    உங்கள் இஷ்டம்.                                                                                                                                   

    Share
  • காணிக்கை

     

    சு. கோதண்டராமன்

    கோவில் உண்டியல் காணிக்கைக்குக்
                காசினை எடுக்கையில் அறிவு தடுத்தது
                “பற்பல கோவிலில் உண்டியல் திருட்டு,
                அறங்காவலரால் ஆலயம் சூறை,
                என நிதம் படிக்கிறோம் செய்தித்தாளில்.
                நேரே  நல்லோர்க் கீவாய்” என்றது.

             
                தீபத்தட்டுடன் குருக்கள் வந்தார்-
                வைரக்கடுக்கன் வகை வகை மோதிரம்
                “இவர்க்கேன் எந்தன் அற்பக்காசு?
                தனிகர்க் களித்தல் தருமம் அல்ல.”
               

                வறுமையின் உருவமாய் வந்தார் பணியாள்
                “ஐயகோ! இவனொரு குடியன் அன்றோ?
                ஆலயப் பணியின் புனிதம் மறந்து
                அறவழி பிறழும் இவனும் வேண்டாம்.”
     

                வெளியே பலபேர் பிச்சை எடுத்தனர்
                எஃகினைப்போன்ற உடலினைக் கொண்டோர்
                உழைக்கா துண்பதில் தனிச்சுகம் காண்போர்
                “இவர்க்கு ஈந்தால் சோம்பல் வளரும்,
         எனக்கோர் சமூகக் கடமையும் உண்டு.”
     

    தெருவில் இறங்கி நடந்தபோது
    எதிரில் சுவரில் இருந்ததிவ் வாசகம்
    “கடமையைச் செய்யவே உனக்குளதுரிமை,
    பலனை
    அலசுதல் மாபெரும் மடமை.”

    காசினை அங்கே வைத்து நகர்ந்தேன்
    கனமிலா மனத்துடன் இல்லம் வந்தேன்.

    படத்திற்கு நன்றி :

    http://www.osho-tv.com/

    Share