சு. கோதண்டராமன்

வெப்பம் மிகுந்த இடம் நோக்கி
விரைந்து செல்லும் இயல்புடனும்
சூடு என் மேல் பட்டவுடன்
சுர்ரென மேலெழும் இயல்புடனும்
இறைவா என்னைப் படைத்துவிட்டாய்
இவ்விதி மாற்றல் எளிதாமோ

வீடுகள் தோறும் கூரையினில்
விதவிதப் பெயருடன் தொங்கிடுவார்
முக்கரம் விரித்துச் சுழன்றிடும் இச்
சக்கரத்தாழ்வார் செயல் காணீர்

தலைவா உன்னை மறந்துவிட்டு
தானே விதியெனத் தருக்குகிறார்
மக்கள் உடலைக் குளிர்வித்து
மற்றவர் வெப்பம் நான் பெற்று
மேலே செல்ல முயலுகையில்
மிகுந்த எதிர்ப்புக் காட்டுகிறார்
கழுத்தைப் பற்றித் திருகுகிறார்
தரையில் தள்ளி மோதுகிறார்
குனிய வைத்துக் குட்டுகிறார்
கொடுமை அந்தோ நான் சகியேன்
இறைவா உன்னை வேண்டுகிறேன்
இனிப் படமுடியாது இத்துயரம்
சக்கரத்தாழ்வார் செயும் கொடுமை
சற்றே மாற்ற மாட்டீரோ ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *