Category: வரலாறு

  • இத்தாலிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர்!

    இத்தாலிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர்!

    -மேகலா இராமமூர்த்தி

    ஆஸ்திரியா, பிரான்ஸ் என்று பல ஐரோப்பிய நாடுகளின் பிடியில் சிக்கி, தாழ்வுற்று விடுதலை தவறிக்கெட்டு நின்ற இத்தாலியின் விடுதலைக்குப் பாடுபட்டோர் மூவர். ஒருவர் மாஜினி (Giuseppe Mazzini); அடுத்தவர் கரிபால்டி (Giuseppe Garibaldi); மற்றொருவர் காவுர் (Cavour). இவர்களில் இத்தாலியின் ஆயுதமாகக் கரிபால்டியும், அறிவாகக் காவூரும், ஆன்மாவாக மாஜினியும் திகழ்ந்தனர் என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் மெரிடித் (George Meredith).  

    இந்தியாவுக்கு மகாத்மா காந்தி எப்படியோ, ரஷ்யாவுக்கு லெனின் எப்படியோ அப்படியே இத்தாலிக்கு மாஜினி. இவர்களை நாம் ஒரே தராசில் வைத்து நிறுக்க முடியாதுதான்; எனினும் இவர்களிடத்தே காணப்பட்ட  சில அபூர்வமான பண்புகளின் அடிப்படையில் இவர்களை நாம் ஒன்றுபடுத்தலாம். இவர்கள் அரசியல்வாதிகளாகவே வாழ்ந்திருக்கின்றார்கள்; ஆனால் அதற்காக இவர்கள் போற்றப்படவில்லை. மனிதத் தன்மையில் மேம்பட்டவர்கள் என்பதற்காக, அந்த மனிதத்தன்மையானது தங்கள் நாட்டினரிடத்தில் மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து நாட்டினரிடத்தும் நிறைந்திருக்க வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது உழைத்ததற்காகப் போற்றப்படுகிறார்கள்.

    இத்தாலிய விடுதலை வேள்விக்குப் பாடுபட்டவரும் புதிய ஐரோப்பாவை நிர்மாணித்தவர்களில் ஒருவர் என்று கருதப்படுபவருமான ஜோசப்  மாஜினி இத்தாலியிலுள்ள ஜெனோவா நகரில் 1805ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் நாள் பிறந்தார்.

    குழந்தைப் பருவத்திலேயே மிகவும் புத்திக்கூர்மை கொண்டவராகத் திகழ்ந்த மாஜினி, தம் தொடக்கக் கல்வியை வீட்டிலேயே ஓர் ஆசிரியரிடம் பயின்றார். மாஜினிக்கு பத்து வயதாக இருந்தபோது, பிரான்சில் நெப்போலியனுடைய ஏகாதிபத்தியம் வீழ்ந்துபட்டது. அந்த ஆண்டில் ஐரோப்பிய வல்லரசுகளின் ஒப்புதலின்பேரில் லிகூரியா (Liguria) மாகாணத்திலிருந்த ஜெனோவா நகரத்தை பீட்மாண்ட் (Piedmont) மன்னன் தன்வசப்படுத்திக்கொண்டான். இதனை ஜெனோவாவாசிகள் அடியோடு வெறுத்தனர். இதுகுறித்தெல்லாம் மாஜினி வீட்டில் அடிக்கடி பேச்சுகள் நடைபெற்றன. இவை மாஜினியின் இளம் உள்ளத்தில் புரட்சிக் கனலை அப்போதே உண்டுபண்ணத் தொடங்கின. 

    அவர் ஒருநாள் தம் தாயோடும் வேறொரு நண்பரோடும் சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்களைத் தொடர்ந்து ஒருவன் வந்தான். நல்ல உயரமும் கருமையான தாடியும் கூர்த்த பார்வையும் கொண்டிருந்த அவன் இவர்களருகில் வந்து ஒரு கைக்குட்டையை விரித்து, “சட்ட விரோதிகளான இத்தாலியர்களுக்கு” என்று சொல்லவும், மாஜினியின் தாயும் அருகிலிருந்த நண்பரும் அக் கைக்குட்டையில் சில காசுகளைப் போட்டனர். அவன் நன்றி சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.

    இதனைக் கண்ட மாஜினி வியப்போடு, ”அம்மா இவர் யார்? இவருடைய தோற்றமும் கம்பீரப் பார்வையும் என்னைக் கவர்கின்றன. இவர் ஏன் பிச்சையெடுக்க வேண்டும்?” என்று வினவ, அவருடைய தாய், “மகனே! சில நாள்களுக்கு முன் பீட்மாண்ட் பிரதேசத்தில் அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து கார்போனாரி (Carbonari) எனும் அமைப்பைச் சேர்ந்தோர் ஒரு புரட்சி செய்தார்கள். ஆனால் அரசாங்கத்தார் அதனை ஆரம்பத்திலேயே அடக்கிவிட்டார்கள். எனவே அரச தண்டனைக்குப் பயந்து இப்புரட்சியாளர்கள் தப்பித்து ஜெனோவாவுக்கு ஓடிவந்துவிட்டனர்; அவர்களில் இவரும் ஒருவர் என்றார்.

    ”இவர்களுடைய புரட்சி ஏன் தோல்வியுற்றது?” என்று கேட்டார் மாஜினி. ”சரியான முன்னேற்பாடும் ஒழுங்கான தலைமையும் இன்மையே அதற்குக் காரணம்” என்றார் அவரின் தாயார்.

    ”இவர்கள் ஏன் ஜெனோவாவுக்கு வந்தனர்?” என்று அடுத்த வினாவை மாஜினி தொடுக்க, ”கையில் காசில்லாமல் ஓடி வந்துவிட்ட இவர்கள் ஸ்பெயின் முதலிய நாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு வசதியாகத் துறைமுக நகரமான ஜெனோவாவுக்கு வந்திருக்கின்றனர். கப்பல் செலவுக்குத்தான் இப்போது பணம் வசூலிக்கின்றனர்” என்றார் மாஜினியின் தாய்.

    இந்தச் சம்பவம், மாஜினியின் மனத்தில் ஆழப் பதிந்து, தாய்நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்குத் தன்னையும் அர்ப்பணிக்க வேண்டும் எனும் தீவிர எண்ணத்தை அவருள் விதைத்துவிட்டது.

    இதற்கிடையில் 1827ஆம் ஆண்டு கல்லூரியில் சட்டம் படித்து வழக்கறிஞரானார் மாஜினி. ஏழைகளின் வழக்கறிஞர் (Poor man’s lawyer) என்று சொல்கின்ற வகையில் வசதியற்ற ஏழைகளுக்காக வாதாடினார் அவர். என்னதான் அவர் வழக்கறிஞராகத் திறம்படப் பணியாற்றினாலும் அவருடைய ஆர்வம் கவிதையிலும் வரலாற்றிலுமே அதிகம் இருந்தது. இலக்கியத்திலும் அரசியலிலும் ஆர்வங்கொண்ட நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு ஒரு சங்கம் ஆரம்பித்தார். அரசாங்கத்தால் தடுக்கப்பட்டிருந்த பல நூல்களை அவர் இரகசியமாக வரவழைத்து நண்பர்களைப் படிக்கச் செய்தார். இத்தாலிய மகா கவிஞராகிய தாந்தேயிடத்திலும் (Dante), ஆங்கில மகா கவிஞராகிய பைரனிடத்திலும் (Byron) மாஜினிக்குச் சிறப்பான ஈர்ப்பும் ஈடுபாடும் இருந்தன. இக்காலத்தில் அவர் இதயத்திலிருந்து ஊற்றெடுத்த தேசிய எண்ணங்கள், இலக்கியப் போர்வை போர்த்துக்கொண்டு ஜெனோவாவில் வெளியான சில பத்திரிகைகளில் கட்டுரைகளாக மலர்ந்தன.

    பின்னர், அரசியலில் தீவிரமாக ஈடுபடுவது என்ற எண்ணத்தில் தம் வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அரசாங்கத்துக்கு எதிரான கார்போனாரி இரகசியச் சங்கத்தில் சேர்ந்தார் மாஜினி. அந்தச் சங்கத்தின் ஒழுங்கற்ற தன்மையை அவர் அறிந்திருந்தும்கூட வேறு வழியின்றி அதில் தம்மை இணைத்துக்கொண்டார்.

    இச்சமயத்தில், அதாவது 1830ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், பிரான்சை அப்போது ஆண்டுகொண்டிருந்த பத்தாம் சார்லஸ் மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து மக்கள் புரட்சி நடைபெற்றது. இப்புரட்சியானது மற்ற நாடுகளிலுள்ள தேசியவாதிகளுக்கும் ஓர் உந்துசக்தியையும், தங்கள் நாட்டில் புரட்சியை உண்டுபண்ணுவதற்கான வாய்ப்பையும் அளித்தன.

    ஆனால் இதுபோன்றதொரு பெரிய புரட்சியை கார்போனாரி சங்கத்தால் இத்தாலியில் நடத்த முடியாதென்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தார் மாஜினி. ஒரு புரட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு உயர்ந்த இலட்சியங்களோடு கூடிய ஓர் அமைப்பு அவசியம் என்று எண்ணிய அவர், அப்புதிய அமைப்பை உருவாக்கும் பொறுப்பு தம்முடையதே என்பதையும் அறிந்தார். இங்ஙனம் வேறோர் அமைப்பிலிருந்துகொண்டே புதிய அமைப்பைத் தோற்றுவிக்க அவர் முயன்றுகொண்டிருந்த வேளையில், இத்தாலியக் காவல்துறையினரின் சந்தேகப் பார்வை மாஜினி மீது விழுந்தது. அவரைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்த காவல்துறையினர், 1830ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் தம் புதிய அமைப்புக்கு ஆள் சேர்த்துக்கொண்டிருந்தபோது கைதுசெய்து ஜெனோவாவின் மேற்கேயிருந்த ஸாவோனா (savona) எனும் நகரத்தின் சிறைச்சாலையில் அடைத்தனர்.

    தம்முடைய எதிர்கால வேலைகளுக்குத் தேவையான திட்டங்களையெல்லாம் சிறையிலேயே தயார்செய்திருந்த மாஜினி, 1831ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாவோனா சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தார். ஆனால் அத்திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்த இயலாவண்ணம் அதிகாரிகள் அவரை பிரான்சிலுள்ள மார்சேல் நகரத்துக்கு நாடுகடத்திவிட்டார்கள்.

    தம்முடைய 26ஆவது வயதில் மார்சேல் (Marseille) நகரத்துக்கு வந்தார் மாஜினி. இத்தாலியில் நடைபெற்ற முந்தைய புரட்சிகளில் கலந்துகொண்டு நாடுகடத்தப்பட்ட இத்தாலியர்கள் சிலர் ஏற்கனவே மார்சேல் நகரில் இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டிய மாஜினி, தம்முடைய திட்டங்களை அவர்களிடம் விளக்கினார். இவற்றை நிரல்பட நிறைவேற்றினால் ஒரு தலைமுறைக்குள் இத்தாலியைச் சுதந்தர நாடாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் விதைத்தார். அவர்களும் மாஜினியைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள், அனைவரும் சேர்ந்து ஒரு சிறு அறையை வாடகைக்குப் பிடித்தார்கள். அதில்தான் மாஜினியின் புகழ்பெற்ற ‘இளைய இத்தாலி’ (Giovine Italia/ youth Italy) என்ற சங்கம் உதயமாயிற்று. நாற்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதில் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

    சுமார் இரண்டாண்டு காலம் இச்சங்கத்தார் சலியாது உழைத்தனர். தங்களுக்கென்று சொந்தமாக ஓர் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் தங்கள் கருத்துகளை அச்சிட்டு, இத்தாலிக்கு இரகசியமாக அனுப்பிவந்தார் மாஜினி. இவைதவிர தீவிரப் போக்குடைய பலநாட்டுப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளும் எழுதினார் அவர். இத்தாலியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாஜினியின் எழுத்தாலும் மாசற்ற தேசப்பற்றாலும் ஈர்க்கப்பட்டு நாட்டு விடுதலைக்காக எதையும் இழக்கச் சித்தமாயினர்; அவர்கள் மாஜினியின் சித்தாந்தங்களை நாடெங்கும் பரப்பினர். இத்தாலியில் இளைய இத்தாலியின் கிளைகள் பல தோன்றலாயின.

    ஈராண்டுகளுக்குள் சுமார் அறுபதினாயிரம் பேர் இச்சங்கங்களில் அங்கத்தினர்களாயினர். இவ்வாறு இளைய இத்தாலி இயக்கத்தின் செல்வாக்கு பெருகி வருவதை ஆஸ்திரிய அரசாங்கம் விரும்பவில்லை. அதனால் இச்சங்கத்தில் சேர்வது குற்றமென்றும், அவ்வாறு சேருவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் அது அறிவித்தது.

    பீட்மாண்ட் அரசனும் மாஜினிக்கும் அவனுடைய இளைய இத்தாலி சங்கத்தார்க்கும் எதிராகப் பல அடக்குமுறைகளைக் கையாண்டு அவர்களை ஒடுக்கினான். இதனால் மாஜினி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். சிறிது காலம் சுவிட்சர்லாந்தில் மறைந்துவாழ்ந்த அவர், தம்முடைய 32ஆவது வயதில் இங்கிலாந்திலுள்ள இலண்டன் நகருக்கு வந்தார்.  அங்கேயும் கையில் பொருளின்றி அல்லலுற்றிருந்த அவருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக அமைந்தது சிறந்த அறிஞரான தாமஸ் கார்லைலுடன் (Thomas Carlyle) ஏற்பட்ட நட்பு. அதுபோலவே ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill) எனும் அறிஞருடைய நட்பும், இன்னும்  அறிஞர்கள் பலரின் நட்பும் மாஜினிக்கு அக்காலக்கட்டத்தில் ஏற்பட்டன.  இவை அவருக்கு ஆறுதலையும் மனஅமைதியையும் அளித்தன.

    இந்த நண்பர்களின் முயற்சியின் பேரில் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு மாஜினி எழுதிவந்த கட்டுரைகளுக்கு அதிகமான வருவாய் கிடைக்கத் தொடங்கியது, அதனைக் கொண்டு தொழிலாளர்களின் நலனுக்காக ’Apostolato popolare’ (Apostleship of the People) எனும்  பத்திரிகையை ஆரம்பித்தார். அதனை ஆரம்பிப்பதற்கு முன்பே இலண்டனில் வசித்துக்கொண்டிருந்த இத்தாலியத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்கென்று ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார். அந்தச் சங்கத்தின் ஓர் அங்கமாகவே இந்தப் பத்திரிகையை மாஜினி வெளியிட்டார். அதில்தான் ’மனிதனின் கடமைகள்’ (On the Duties of Man) எனும் அவருடைய புகழ்வாய்ந்த கட்டுரைகளின் முதல் ஆறு பகுதிகள் வெளிவந்தன.

    1848ஆம் ஆண்டு ஐரோப்பாவில் புரட்சிகள் மிகுந்த ஆண்டாக விளங்கியது. இத்தாலியின் மக்களும் ஒன்றுபட்டு, ஆஸ்திரிய ஆதிக்கத்திற்கெதிராகப் புரட்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றனர். அதனை அறிந்த மாஜினி, இங்கிலாந்திலிருந்து மகிழ்ச்சியோடு இத்தாலி திரும்பினார். ஆனால் மக்களின் வெற்றியும் மாஜினியின் மகிழ்ச்சியும் நெடுநாள் நீடிக்கவில்லை. அப்போது இத்தாலியோடு எவ்வித நேரடி மோதலும் இல்லாத பிரான்ஸ்,  இத்தாலிக்கு எதிராகப் போரில் இறங்கியது. பிரெஞ்சுப் படையை எதிர்த்து புரட்சியாளர் கரிபால்டி (Garibaldi) தலைமையில் இத்தாலியப் படை வெகுதீரத்துடன் போராடிய போதிலும், அளவிலும் ஆற்றலிலும் மிக்கிருந்த பிரெஞ்சுப் படையை எதிர்க்க முடியாமல் அது தோல்வியைத் தழுவியது. கரிபால்டி, பிரெஞ்சு வீரர்களிடம் சரணடைய விரும்பாமல் உரோமை விட்டு வெளியேறினார்.

    இந்நிகழ்வுகள் மாஜினியை மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாக்கின. நம்பிக்கையிழந்த மாஜினி மீண்டும் இங்கிலாந்து போய்ச்சேர்ந்தார். இத்தாலியின் விடுதலைப் போருக்கு இங்கிலாந்தில் உள்ளோரின் ஆதரவைப் பெறும்பொருட்டு, இத்தாலியின் நண்பர்கள் சங்கம் (the Friends of Italy) என்ற சங்கத்தை 1851இல் ஆரம்பித்து அதில் இத்தாலி குறித்துத் தொடர்ந்து சொற்பொழிவுகள் நிகழ்த்திவந்தார்.

    எவ்வளவு முயன்றும் தம் வாழ்நாளுக்குள் இத்தாலியில் குடியாட்சியை நிறுவ மாஜினியால் இயலவில்லை. போராட்டத்திலேயே பிறந்து போராட்டத்திலேயே வளர்ந்த மாஜினியின் உடல் முதுமையால் தளர்ந்தது. ”உழைத்து உழைத்துக் களைத்துப்போன இந்த வாழ்க்கை எந்திரம் எனக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது” என்று கூறி வருந்தினார் அவர். அவரோடு அன்பு பாராட்டிப் பழகியவர்களெல்லாம் அவருடைய அந்திமக் காலத்தில் அவருக்குப் பகையாகிப் போனார்கள். அவரோடு அரசியல் போராட்டங்களில் கைகோத்திருந்த கரிபால்டிக்கும் அவருக்கும்கூட மனத்தாங்கல் ஏற்பட்டது. எனினும் இவற்றையெல்லாம் மாஜினி பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

    இத்தாலியத் தொழிலாளிகளுக்கு அவர் கடைசியாக உபதேசித்தது இதுதான்! “பெருமை வாய்ந்த ஆனால் துரதிர்ஷ்டம் மிகுந்த நமது தாய்நாட்டை நேசியுங்கள்! அதன் மேன்மைக்காக அயராது உழையுங்கள்! இதுவே நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்பதற்கான அடையாளம்.”

    தம் வாழ்நாளெல்லாம் இத்தாலிய விடுதலைக்காகப் போராடிய மாஜினி,1872ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி ஜெனோவாவுக்கு அருகிலுள்ளதும், சாய்வுகோபுரத்திற்குப் பெயர்பெற்றதுமான பைசா நகரத்தில் உயிர்நீத்தார். பின்னர் அவர் விருப்பப்படியே ஜெனோவா நகரத்திலிருந்த அவருடைய தாயாரின் கல்லறைக்கு அருகில் அவருடல் அடக்கம் செய்யப்பட்டது.

    உலகத்தில் அகத்தூய்மைக்கும் மனிதத் தன்மைக்கும் மதிப்பிருக்கின்ற வரையில், அதிகாரத்தையும் வெற்றியையும் காட்டிலும் தன்னலத் துறவும், கடமையுமே உயர்ந்தது என்று மன்பதை எண்ணுகின்ற வரையில், தமக்கென வாழாது தம் நாட்டுக்காகவே வாழ்ந்து மறைந்த மாமனிதர் மாஜினியின் பெயரும் நிலைத்திருக்கும்!

    ***********************************************

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. https://www.britannica.com/biography/Giuseppe-Mazzini
    2. https://en.wikipedia.org/wiki/Giuseppe_Mazzini
    3. மாஜினி – வெ.சாமிநாத சர்மா நூல்திரட்டு 5 – தமிழ்மண் பதிப்பகம்

     

    Share
  • (Peer Reviewed) தமிழ்ச் சமுதாயத்தின் புன்மை – அடிமைமுறை

    (Peer Reviewed) தமிழ்ச் சமுதாயத்தின் புன்மை – அடிமைமுறை

    -மு.கயல்விழி
    உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை
    பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்-632501.

    *****

    திட்டச் சுருக்கம்:-

         உலகில் அடிமைமுறை என்பது மிகவும் பழமையானது. தமிழகத்திலும் இடைக்காலத்தில் அது பேரளவில் காணப்பட்டது. தமிழ்நாட்டில் மன்னர்கள் மட்டுமன்றிக் கோயில்களும், மடங்களும், செல்வர்களும், அரசு அலுவலர்களும் அடிமைமுறையைக் கையாண்டனர். அடிமைகள் மிருகங்கள் போன்று நடத்தப்பட்டனர். போர்கள், பஞ்சங்கள், பக்தி போன்ற பல காரணங்களால் இவ்வடிமை முறை இடைக்காலத்தில் நிலைபெற்றது.

    முன்னுரை:

         மனிதன் ஆறாம் அறிவுடையவன். எனவே அவன் உலக உயிர்கள் அனைத்திலும் மேம்பட்டவனாகத் திகழ்ந்தான். அத்தகைய மனிதன் உலக உயிர்கள் அனைத்தையும் அடக்கியாண்டான். அதே சமயம் பறவைகள், விலங்குகள் போன்றே மனிதன் மனிதனையும் அடிமைப்படுத்தினான். இது அடிமைமுறை (Slave System) எனப்பட்டது. அடிமைமுறை எல்லா நாடுகளிலும் இருந்துள்ளது. இப்புன்மையை ஒழிக்கப் பெரியோர்கள் எவ்வளவோ முயன்றாலும் மது, திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்று இதுவும் அழிக்க முடியாத ஒன்றாகவே திகழ்ந்தது. உயர் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியுமிக்க இக்காலத்திலும் ஆப்பிரிக்காவிலுள்ள சூடான் (Sudan), எத்தியோப்பியா (Ethopia) போன்ற நாடுகளில் அடிமைமுறை இருப்பது இதை உணர்த்தும். தமிழ்ச் சமுதாயத்தின் சிறப்புக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், அடிமைமுறை அதன் பெருமையைக் குலைக்கும் களங்கமாகவும், கரும்புள்ளியாகவும் இன்றளவும் திகழ்ந்து வருகின்றது.

    அடிமைமுறையின் பழமை:

         அடிமைமுறை என்பது மனிதன் தோன்றிய காலம் முதலே தோன்றிய ஒன்று. தமிழ்நாட்டில் இம்முறை முதன்முதலாக எப்பொழுது தோன்றியது என்று துல்லியமாகத் தெரியவில்லை. தொல்காப்பியர் காலத்துக்கு முன்னே இம்முறை இருந்துள்ளது. இதைத் தொல்காப்பியர் உறுதிசெய்கின்றார்.

    ”அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
    கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர்
    ” (தொல்.பொரு. அகத்.25)

    இதன்பின் வந்த திருவள்ளுவரும் அடிமைமுறையை உறுதிசெய்து,

    ”மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
    அடிமை புகுத்தி விடும்”
    (குறள்: 608)

    என்று கூறிச்செல்கின்றார். பின்பு வந்த பல்லவர் காலத்திலும் இம்முறை இருந்ததைச் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனால் அடிமைப்படுத்தப்பட்டதைக் கொண்டு அறியலாம். ஆனால் இவையெல்லாம் சிறிய அளவிலே இருந்தன. உரோம், கிரேக்க நாடுகளைப் போன்று பெரிய அளவில் பரவலாக அடிமைமுறை காணப்படவில்லை. பின்பு வந்த சோழர், பாண்டியர் காலத்தில் இது பல்கிப் பெருகிச் சமுதாயத்தையே சீர்கேடாக்கும் வகையில் வளர்ந்து நின்றது.

    தமிழ்நாட்டில் அடிமைமுறைக்கான காரணங்கள்:

         பழந்தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான அடிமைகள் இருந்துள்ளனர். அவர்கள் பல காரணங்களுக்காக அடிமைப்பட்டனர் அல்லது அடிமைப்படுத்தப்பட்டனர். அவை வருமாறு:-

    1. அயல்நாடுகளுடனான போரின்பொழுது தோற்ற நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அடிமைகளாகப் பிடித்து வரப்பட்டனர்.
    2. சிலர் இறைப்பணியாற்ற விருப்பத்துடன் தம்மைத் தாமே அடிமைகளாக விற்றுக்கொண்டனர்.
    3. பணத்துக்காக அப்பாவிகள் பிடிக்கப்பட்டு அடிமைச் சந்தைகளில் விற்கப்பட்டனர்.
    4. இயற்கைச் சீற்றங்கள் மிகுந்த காலத்தில் வரிசெலுத்தவியலாத பொதுமக்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டதுடன் அவர்களும் அடிமைகளாக்கப்பட்டனர்.
    5. கொடிய பஞ்சத்தின்போது தம்மைக் காத்துக்கொள்ளப் பலர் தம்மை கோயில்களுக்கும், மடங்களுக்கும் அடிமைகளாக விற்றுக் கொண்டனர்.
    6. குடும்பப் பெண்கள் சிலர் கணவன்களால் அடிமைகளாக விற்கப்பட்டனர்.
    7. அடிமைகளை அவர்களின் பரம்பரையினருடன் சேர்த்தும் விற்பனை செய்தனர்.
    8. பிராமணர்கள் ஒருபோதும் அடிமைகளாக்கப்படவில்லை.

    தமிழகத்தில் அடிமைமுறையின் இயல்புகள்:

       உலகில் அடிமைமுறையை அறிமுகம் செய்தவர்கள் உரோமானியர்களே. தம்மிடம் தோற்ற நாடுகளிலிருந்து அவர்கள் பல்லாயிரக்கணக்கான அடிமைகளைப் பிடித்துவந்தனர். உரோமாபுரி முழுவதும் ஏராளமான அடிமைச் சந்தைகள் காணப்பட்டன. அங்கு அரசர்களே அடிமைமுறையை ஆதரித்தனர். தமிழகத்தில் கோயில்களும், மடங்களும், செல்வர்களும் இம்முறையை ஆதரித்தனர். இடைவிடாத போர்களும், இயற்கைச் சீற்றங்களும் இதற்குக் காரணிகளாய் அமைந்தன. இடைக்காலப் பொதுமக்கள் சமய உந்துததலால் இறைப்பணி புரியக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் தம்மைத் தாமே அடிமைகளாக விற்றுக்கொண்டனர். பலர் தம்மையும், தம் சந்ததியினரையும் அடிமைகளாக விற்றுக்கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கையை இதற்குச் சான்றாய்க் கொள்ளலாம்.

         அரசர்களே அடிமைமுறையை ஆதரித்ததால் அடிமைகளை விற்பதும், வாங்குவதும் பழங்காலத் தமிழகத்தில் சர்வ சாதாரண நிகழ்வாய்த் திகழ்ந்தது. தமிழ்நாட்டில் அடிமைகள் மிருகங்கள் போன்று நடத்தப்பட்டனர். அவர்கள் உடம்பில் எஜமானர்களின் இலச்சினைகள் பொறிக்கப்பட்டன. சிவன் கோயிலுக்கு விற்கப்பட்ட அடிமைகளுக்குச் சூல அடையாளமும், வைணவக் கோயில்களுக்கு விற்கப்பட்டவர்களுக்குச் சக்கர இலச்சினையும், அரசு அடிமைகளுக்கு அரசு முத்திரையும் பொறிக்கப்பட்டன. சில சமயம் அடிமைகள் சீதனப் பொருள்களுள் ஒன்றாய்க் கருதப்பட்டு வழங்கப்பட்டனர். சான்றாகக் கிழவன் வயிதராயன் என்பவனுக்குத் தன் மனைவியின் சீதனமாக 36 அடிமைகள் கிடைத்தனர்.

         பஞ்ச காலங்களில் எளியவர்கள் தம் வயிற்றுக் கொடுமையிலிருந்து தப்பிக்க அக்காலத்தில் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த கோயில்களுக்கும், மடங்களுக்கும் தம்மை விற்றுக் கொண்டனர். சான்றாகத் திருப்பாபுரம் கோயிலுக்கு வேளாளன் ஒருவன் வறுமையின் கொடுமையால் தன் மனைவியையும், இரு மகள்களையும் விற்றுக்கொண்டதைச் சான்றாகக் கொள்ளலாம் (ARE.No:86/1911). கடமை தவறியவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவனது அடிமைகளும் ஏலம் விடப்பட்டனர். சான்றாக ஊட்டத்தூரைச் சார்ந்த பிராமணன் ஒருவன் அவ்வூர் கோயில் நகைகளைத் திருடிவிட்டதால் அவன் சொத்துக்களுடன் அவனது அடிமைகளும் ஏலம் விடப்பட்டனர். கொத்தடிமைமுறை தாங்காத அடிமைகள் தப்பியோடும்பொழுது பிடித்துவரப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். சான்றாக, திருச்செங்காட்டான்குடிக் கோயில் அடிமைகள் அதன் உரிமையாளன் ஸ்தானப் பட்டன் என்பவன் செய்த கொடுமைகள் தங்காது தப்பியோடிய பொழுது மூன்றாம் குலோத்துங்க சோழனால் பிடித்துவரப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர் (ARE.No:94/1926).

         கோயிலுக்கு விடப்பட்ட அடிமைகள் கோயில் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் கோயிலின் உரிமைப் பொருளாய்க் கருதப்பட்டனர். அவர்கள்மீது மன்னர்கள்கூட உரிமை பாராட்ட இயலவில்லை. சான்றாக முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1088-இல்) காளஹஸ்தி கோயில் தேவரடியார்கள் தவறுதலாக அரசுப்பணிக்குக் கொண்டு வரப்பட்டு அரண்மனையில் பணியாற்றினர். அவர்கள் முதுகில் அரசு இலச்சினை பொறிக்கப்பட்டது. பின்பு உண்மை தெரிந்தபின் அவர்கள் கோயிலுக்கே திரும்ப வழங்கப்பட்டனர். அவர்களின் முதுகிலிருந்த அரசு இலச்சினை அழிக்கப்பட்டு சூல இலச்சினை பொறிக்கப்பட்டது (ARE.No:141/1922).  இது தவிர வேறு விதமான அடிமைமுறையும் அக்காலத்தில் காணப்பட்டது.

    கி.பி.1002-இல் திருவிடந்தைக் கோயிலுக்கு 12 மீனவக் குடும்பங்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். இவ்வடிமைகள் கோயில் பணி செய்யாமல் மீன்பிடித் தொழில் செய்துவந்தனர். ஆனால் இவர்கள் ஈட்டிய வருவாயில் 3/4 கழஞ்சு பொன்னைக் கோயிலுக்கு வழங்கினர். மேலும் இக்கோயிலில் சிறப்புடன் நடக்கும் இராஜராஜன் பிறந்தநாள் திருவிழாவான சதயத் திருவிழாக் கொண்டாட்டத்தில் 7 நாட்களும் கோயில் பணியாற்றினர். அவர்களுக்கு ஊதியமாக கோயில் படையல் (உணவு) மட்டுமே வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் அடிமை முறையின் பதிவுகள்:

         சங்க காலத்தில் குறைவாகக் காணப்பட்ட அடிமைமுறை  இடைக்காலத்தில் பல்கிப்பெருகியது. இதைக் கல்வெட்டுச் சான்றுகள் உறுதிசெய்கின்றன. தஞ்சை மாவட்டம் பெரும்பள்ளம் கோயிலுக்கு நாங்கூர் அந்தணன் 13 காசுகளுக்குத் தன் அடிமைகள் 6 பேரை விற்றான் (ARE.No:216/1925).  நந்திவர்ம மங்கலத்து அதிகாரியான சந்திரசேகரன் என்பவன் வயலூர் கோயிலுக்குப் பணிபுரியப் பல அடிமைகளை விற்றான். பாண்டிய நாட்டுக் கருங்குளத்து இராஜசிம்மேஸ்வரக் கோயிலுக்கு அரசு அதிகாரி ஒருவன் பறை கொட்டும் உவச்ச அடிமையை விற்றான் (ARE.No:230/1927-28).  திருவலம் கோயிலுக்கு அழகிய பாண்டிய பல்லவராயன் என்பவன் தன் குடும்பப் பெண்களையே சூல இலச்சினை பொறித்து அடிமைகளாக விற்றான் (ARE.No:149/1936-37).  திருவாலங்காட்டுக் கோயிலுக்கு 4 தேவரடியார்கள் 700 காசுக்கு விற்கப்பட்டனர் (ARE.No:80/1913).  வயித ராயன் என்ற அதிகாரி தன் மனைவியைத் திருச்செங்கட்டான்குடிக் கோயிலுக்குத் தேவரடியராக விற்றான்.

         திருவாலங்காட்டுக் கோயில் பணிக்கு கோயில் நிர்வாகம் 36 அடிமைகளை கி.பி.1208-இல் விலைக்கு வாங்கியது (ARE.No:90/1926). கி.பி.1209-இல் நிகழ்ந்த பஞ்சத்தில் வேளாளன் ஒருவன் தன்னையும் தன் மனைவி மற்றும் இரு மகன்களையும் 110 காசுக்குத் திருப்பாபுரம் கோயிலுக்கு விற்றுக் கொண்டான் (ARE.No:86/1911).  கி.பி.1208-இல் சூலமங்கலம் கோயிலுக்குப் பணிபுரியச் சில அடிமைகள் விற்கப்பட்டனர் (ARE.No:296/1911).  இதற்காகத் தயாரிக்கப்பட்ட பிரமாணச் சீட்டில் “கிராமகதமாய் வரும் அடியார்” என்று அவர்களின் அடிமைத்தனம் பொறிக்கப்பட்டது. எதிரிலிச் சோழ கங்க நாடாள்வான் என்பவன் கி.பி.1219இல் திருமறைக்காட்டுக் கோயிலுக்கு 5 ஆண்களையும், 5 பெண்களையும் 1000 கழஞ்சு பொன்னுக்கு விற்றான் (ARE.No:499/1904).  தஞ்சை அச்சுதமங்கலம் கோயிலில் உள்ள மடத்தில் கல்தச்சன் ஒருவனும் அவன் குடும்பமும் கி.பி.1219இல் அடிமைகளாகப் பணியாற்றினர் (ARE.No:409/1925).  நாகப்பட்டினம் மாவட்டம் கொருக்கை கோயிலில் 100க்கும் மேற்பட்ட அடிமைகள் அக்காலத்தில் பணியாற்றினர் (ARE.No:110/1892).  மேலப்பெரும்பள்ளம் கோயிலுக்கு நம்பிக்காட்டு நங்கை என்ற பெண் தன்னையும் தன் குடும்பத்தையும் 15 காசுகளுக்கு விற்றுக் கொண்டாள் (ARE.No:218/1925).  திருவொற்றியூர் கோயிலுக்கு வயலூர் கிழவன் என்பவன் நெல்லைக் குத்தி அரிசியாக்கும் பணிக்கு 5 அடிமைப் பெண்களைத் தானமாக வழங்கினான். கிழவன் வயிதராயன் என்பவனுக்கு மனைவியின் சீதனமாய் 36 அடிமைகள் கிடைத்தனர் (ARE.No:75/1925).

         திருவாலங்காட்டுக் கோயிலில் பல அடிமைகள் கோயில் பணியாற்றினர். திருவிடந்தைக் கோயிலுக்கு 12 மீனவக் குடும்பங்கள் அடிமைகளாகப் பணியாற்றினர் (ARE.No:274/1910). மூன்று வேளாளர்களும், இரண்டு பெண்களும் திருவக்கரைக் கோயிலுக்கு அடிமைகளாக கி.பி.1099ல் விற்கப்பட்டனர் (ARE.No:183/1904).  அடிமைகள் உடலில் தாம் அடிமைகள் என்ற அடையாளம் பொறிக்கப்பட்டது. இதைக் கல்வெட்டுகள் ‘இலாஞ்சினை இட்டு” ‘இலாஞ்சினை சாத்தி” என்றழைக்கின்றன. அக்காலத்தில் அடிமைகள் “அடியார்கள்” என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். “எங்களுக்குக் கிரமாந்தமாய் வரும் அடியார்” என்ற கல்வெட்டு வாசகம் இதை உணர்த்தும் (ARE.No:296/1911).  அடிமைகளை விற்கும் பொழுது ‘ஆள்விலைப் பிரமாண இசைவுச் சீட்டு” எழுதப்பட்டது. இவ்வாறு பழந்தமிழ்ச் சமுதாயத்தில் அடிமைமுறை நன்கு வேரூன்றி விருட்சமாய் வளர்ந்து நின்றது.

    தமிழகத்தில் அடிமைமுறையின் வீழ்ச்சி:

         இடைக்காலத்தில் சிறப்புற்றுத் திகழ்ந்த அடிமைமுறை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியைச் சந்தித்தது. தமிழகத்தில் முடியுடை வேந்தர்களின் வீழ்ச்சிக்குப்பின் ஏற்பட்ட ஓயாத படையெடுப்பால் இம்முறை வீழ்ச்சியடைந்தது. தமிழ்ச் சமுதாயம் வறுமையில் பீடிக்கப்பட்டது. அடிமைமுறையை வளர்த்த கோயில்களும், மடங்களும் தம் சிறப்பை இழந்து பெரும் பின்னடைவைச் சந்தித்தன. செல்வர்கள் வறியவர்களானார்கள். படையெடுப்பாளர்கள் கோயில்களிலும், மடங்களிலும் இருந்த செல்வங்களையெல்லம் சுரண்டிச் சென்றனர். தமிழ்மக்கள் அனைவரும் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். படையெடுப்பாளர்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிமைகளாகப்  பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் தனியாக அடிமைமுறை என்ற ஓர் அமைப்பு முற்றிலுமாய்த் தமிழகத்திலிருந்து மறைந்தது. இவ்வாறு மன்னர்களாலும், மடங்களாலும், திருக்கோயில்களாலும், செல்வர்களாலும் பலநூற்றாண்டுகளாய் வளர்க்கப்பட்ட இவ்வடிமை முறை கால நிர்பந்தத்தாலும், அரசியல் சூழலாலும் முற்றிலுமாகச் சுவடு தெரியாமல் மறைந்துபோனது.

    முடிவுரை:

          ஒரு சமுதாயத்தைப் பாராட்ட பல காரணங்களைச் சொல்லலாம். சிறந்த ஆட்சியாளர்கள், அறிவார்ந்த பொதுமக்கள், ஏற்றத்தாழ்வற்ற சமூகம், மேம்பாடான கல்வி நிலை, வளமான பொருளாதார நிலை, சிறப்பான கலாசாரம், உன்னதப் பண்பாடு போன்றவற்றுடன் அனைத்துத் துறைகளிலும் நாடு தன்னிகரற்ற வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இடைக்காலத் தமிழகம் இத்தகு சிறப்புகளைக் கொண்டிருந்தது. எனவே இச்சமூகத்தில் பிறந்ததற்குப் பல அறிஞர்கள் பெருமை கொண்டு அகமகிழ்ந்து தம்மைத் தாமே பாராட்டிக்கொண்டனர். ஆனால் இச்சமூகத்தில்தான் அடிமைமுறை போன்ற புன்மைகளும் இருந்தன என்பதை அவர்கள் மறந்தனர். இப்புன்மையை ஒழிக்கவேண்டிய தமிழ் மன்னர்கள் அவற்றை முனைப்புடன் ஆதரித்தது வியப்புக்குரியது. இச்சமூக அவலத்தை ஆதரிக்கும் கேந்திரியங்களாகக் கோயில்களும், மடங்களும் திகழ்ந்தன. இந்நிறுவனங்கள் சமூகத்தில் பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாய் மன்னர்களும் அவ்வழியே சென்று இம்முறையை ஆதரித்து வளர்த்தனர். இடைக்கால ஐரோப்பாவில் திருச்சபை (Papacy) பெற்றிருந்த செல்வாக்கை இவை தமிழகத்தில் பெற்றிருந்தன. திருச்சபையின் அதிகாரத்தை ஒழிக்க அங்குள்ள மன்னர்கள் அரிதின் முயன்றனர். ஆனால் தமிழ் மன்னர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் அதை வளர்ப்பதில் ஆர்வம் காட்டியதால் இப்புன்மை ஒழியாமல் பல்கிப் பெருகியது.

         இடைக்காலத் தமிழ்ச் சமூகம் வலியோர்களை உயர்த்துவதிலும், மெலியோர்களை நசுக்குவதிலும் முனைப்புக் காட்டியது. மேலும் மேல்நாட்டின் தலைசிறந்த மேதாவிகளான மார்டின் லூதர் (Martin Luther), வால்டேர் (Voltaire), ரூஸோ (Jean-Jacques Rousseau), ஜான் விக்ளிப் (John Wycliffe), விக்டர் யூகோ (Victor Hugo), அலேக்சாண்டர் டூமா (Alexandre Dumas), சர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) போன்றோர் தம் எழுத்துக்களாலும், பேச்சுக்களாலும் சமூக அவலங்களையும், சீர்கேடுகளையும் படம்பிடித்துக்காட்டிப் பதிவு செய்துவிட்டுச் சென்றனர். இதனால் அம்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு, சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள் தோன்றிச் சமூகப் புன்மைகள் மறைய அவை உதவின. இது போன்ற எழுத்தாளர்களும், சீர்திருத்தவாதிகளும் ஒருவர் கூடத் தமிழகத்தில் தோன்றாதது மாபெரும் இழப்பாகும். இதனால் பழந்தமிழ்ச் சமுதாயத்தின் புன்மைகளைப் பொதுமக்கள் அறிய முடியாமலும், அவற்றை ஒழிக்க முடியாமலும் போயிற்று. அடிமைமுறை என்பது பழந்தமிழ்ச் சமுதாயத்தின் சீர்கேடு என்பதுடன், அறிவார்ந்த நம் முன்னோர்கள் எளியோர் மீது இழைத்த மாபெரும் சமூக அநீதி (Social Injustice) என்பதை மறுக்கவியலாது.

    சுருக்கம் (Abbrevations):

    1.ARE-Annual Report on Indian Epigraphy

    பார்வை நூற்பட்டியல் (Bibliography):

    1.Neelakanta Sastri.K.A,(1975), The Cholas, Chennai: University of Madras.

    2.Neelakanta Sastri.K.A,(1939), Studies in Chola History and Administration, Chennai:

     The University of Madras.

    3.Appadorai.A.(1990). Economic Conditions in South India (1000-15000), Chennai: University of  Madras.

    4.Pillai.K.K.(1969) A Social History of The Tamils, Chennai: University of Madras.

    5.Swaminathan.A, (1991), Social and Cultural History of Tamil Nadu, Chennai: Deepa Publications.

    6.பிள்ளை.கே.கே. (1977), தமிழ்நாட்டு வரலாறு- மக்களும்

     பண்பாடும், சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

    *****

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    இடைக்காலத் தமிழகத்தில் நிலவிய அடிமைமுறை பற்றி விரிவாக ஆய்ந்து பல கருத்துக்களை இக்கட்டுரையில் வெளியிட்டிருக்கின்ற ஆய்வாளர்,  திறமிகு ஆட்சியாளர்கள், அறிவார்ந்த பொதுமக்கள், மேம்பட்ட கல்விநிலை, உயரிய பண்பாடு எனும் பல சிறப்புக்கள் அன்றைய தமிழகத்துக்கு இருந்தாலும் மனிதர்களுக்குள் வேற்றுமையை வளர்த்துச் சமத்துவத்துக்குச் சமாதி கட்டும் அடிமைமுறையை ஆட்சியாளர்களும், சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருந்தோரும் ஆதரித்ததையும், அதனை அழியாமல் காத்துவந்ததையும் பாராட்டவியலாது என்பதை அழுத்தமாய்ப் பதிவுசெய்திருக்கின்றார்; அதற்கு அவருக்குப் பாராட்டுக்கள்!

    எனினும், சொற்பிழைகள், ஒரேசெய்தி ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் இடம்பெற்றுள்ளமை போன்றவற்றையும் ஆய்வாளர் கவனத்தோடு களைந்திருந்தால் கட்டுரை மேலும் சிறப்பாய் அமைந்திருக்கும்.

     

    Share
  • (Peer Reviewed) சம்புவராயர் கால அஞ்சினான் புகலிடங்கள்

    (Peer Reviewed) சம்புவராயர் கால அஞ்சினான் புகலிடங்கள்

    மு.கயல்விழி,
    உதவிப் பேராசிரியர் (தமிழ்),
    பச்சையப்பன்  மகளிர்  கல்லூரி,
    காஞ்சிபுரம்.
    மின்னஞ்சல்: kayalarul22@gmail.com

    முன்னுரை                                                                                                                         

    இடைக்காலத் தமிழக வரலாற்றில் அஞ்சினான் புகலிடங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அக்காலத் தமிழகத்தின்; வடபகுதியைச்  சம்புவராய மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்தனர். இவர்கள் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் தனியரசு  செலுத்தியவர்கள். வட தமிழகத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர்கள் இவர்களே. இவர்கள் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாளர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த வஞ்சினான் புகலிடங்கள் அவர்களின் மேம்பட்ட பொருளியல் அறிவைப் புலப்படுத்தின. தமிழக வணிகர்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அஞ்சினான் புகலிடங்கள் இவர்கள் வணிகத்தின் மீதும், வணிகர் மீதும், நாட்டின் பொருளியல் நலன் மீதும், எத்துணை அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதைப் புலப்படுத்தின. அஞ்சினான் புகலிடங்களால் வணிகம் செழித்தது; வணிகர்கள் பாதுகாக்கப்பட்டனர். இதன் விளைவாய் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தது. ஆனால் அஞ்சினான் புகலிடங்களை ஆராய்வது மிகவும் சவாலான மற்றும் சிக்கலான பணியாகும். இதன் சான்றுகள் தொல்லியல் துறை சார்ந்தது என்பதால் இது குறித்து அதிக ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே இது சார்ந்து இந்த ஆய்வு மேற் கொள்ளப்படுகின்றது.

    இடைக்காலத் தமிழகத்தின் அரசியல் (அவல) நிலை

    இடைக்காலத் தமிழகத்தின் அரசியல் நிலை மிகவும் குழப்பம் நிறைந்தது. தமிழகத்தின் தீயூழின் காரணமாய்ப் பேரரசுச் சோழர்களும், அவர்களைத் தொடர்ந்து பிற்காலப்பாண்டியர்களும் வீழ்ச்சியடைந்தனர். அவர்களின் வீழ்ச்சி மாபெரும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியது. தமிழகத்தில் அரசியல் குழப்பம் நீடித்ததுடன், எங்கும் அமைதியின்மை நிலவியது. தமிழகமே போர்க்களமாக மாறியது. பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி.1219ல் சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்று அழிவை ஏற்படுத்தினான். இதன்பின் அரசனான ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1257ல் சோழநாட்டை வென்று நிர்மூலமாக்கினான் (பாண்டியர் வரலாறு. ப:445). இந்நிலையில் தெலுங்குச் சோழ மன்னனான விஜய கண்டகோபாலன் கி.பி. 1267ல் காஞ்சிபுரத்தை வென்றான் (பிற்காலச் சோழர் சரிதம் .ப:386). சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜன் எந்தப் படையெடுப்பையும் தடுக்கவியலாத அளவுக்குப் பலவீனமானான். இது தவிர சேரமன்னன் பாஸ்கர இரவிவர்மன் கி.பி.1313ல் படையெடுத்துச் சோழநாட்டை வென்று தொண்டை நாடு வரை தன் ஆதிக்கத்தைப் பரப்பினான். கி.பி.1313ல் காகதீய மன்னன் பிரதாபருத்திரன் தன் தளபதி முப்பிடி நாயகனை அனுப்பிக் காஞ்சிபுரத்தினைக் கைப்பற்றினான். போசள மன்னன் வீர நரசிம்மனும் தன் பங்குக்குப் பெரும் படையுடன் வந்து வெற்றி பெற்று, திருச்சி மாவட்டம் கண்ணனூரில் ஒரு அரசை நிர்மாணித்தான்.

    இதன் பின்னும்; அந்நியப் படையெடுப்புகள்; தொடர்ந்தன. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூர் (Malik Kafur)  தமிழகத்தின் மீது கி.பி.1311ல் படையெடுத்துப் பேரழிவையும், பெரும் சேதத்தையும் ஏற்படுத்கினான் (தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும்.ப:387). அவனைத் தொடர்ந்து குஸ்ருகான் (Khusro Khan) கி.பி.1318லும், உலூக்கான் (Ulugh Khan) கி.பி.1323லும், தமிழகத்தைச் சூறையாடி, பெரும் பொருளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இவ்வாறு தொடர்ச்சியான படையெடுப்புகளால் மக்கள் சிக்கிச் சின்னா பின்னமானார்கள். தமிழகத்தில்; தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை தோன்றியது. இந்நிலையில் பஞ்சங்களும் தோன்றி மக்களை வாட்டி வதைத்தன. கி.பி.1344ல் காஞ்சிபுரம் மாவட்டம் நெரும்பூரிலும் (ARE.No:276/1912), இதேவாண்டு வேலூர் மாவட்டம் கலவை (SII.Vol:7 No-444) மற்றும் குடிமல்லூரிலும் (ARE.No:420/1905) பஞ்சங்கள் தோன்றின. இதன் காரணமாய் மக்கள் கடுமையான இன்னல்கள் அடைந்தனர். இவ்வாறு ஓயாத படையெடுப்புகளாலும், இயற்கைச் சீற்றங்களாலும், இடைக் காலத் தமிழ் மக்கள் சொல்லவியலாத் துயரடைந்தனர்.

    அஞ்சினான் புகலிடங்களின் தோற்றம்

    அஞ்சினான் புகலிடம் என்றால் தஞ்சம் தேடி அஞ்சி வருபவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் அமைப்பாகும். அஞ்சினான் புகலிடங்கள் முதலில் எங்கு தோன்றின என்ற முடிவு இன்னும் எட்டப்படவில்லை. பண்டைய நாளில் சமணர்கள் இது போன்ற அடைக்கலங்கள்; வழங்கும் அமைப்புகளை நடத்தினர். இது “அபயதானம்”என்று அழைக்கப்பட்டது. வாழ்க்கைப் போரில் தோற்று, அனைத்தையும் இழந்து, அநாதைகளாகிய அபலைகளுக்கு உணவும், உடையும், உறையுளும் சமணப் பெரியோர்களால் சமணப் பள்ளிகளில் (சமண ஆலயம்) வழங்கப்பட்டது. சான்றாகத் திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள “ஜம்பை” என்ற ஊரினைக் கொள்ளலாம். இங்கு “கண்டராதித்தப் பெரும் பள்ளி” என்ற சமண ஆலயம் சோழர் காலத்தில் செயல்பட்டது. அங்கு “சோழத்துங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம்” என்ற அஞ்சினான் புகலிடம் செயல்பட்டது. அங்கு தஞ்சம் தேடி வருபவர்களுக்கு உணவும், உடையும், தங்குமிடமும் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் சமணர்களால் அமைக்கப்பட்ட இந்த அஞ்சினான் புகலிடங்கள் காலநிர்பந்தத்தால் அரசர்களாலே நடத்தப்பட வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

    சோழர் காலத்தின் இறுதியில் தோன்றிய அரசியல் குழப்பங்களால் சமயம் சாராத அஞ்சினான் புகலிடங்கள் தமிழகத்தின் பலவிடங்களில் தோன்றின. பின்னர் வந்த சம்புவராயர் காலத்தில் இது பல்கிப் பெருகின. சோழர்கள் ஆட்சிக்குப் பின் தொண்டை நாட்டை ஆண்ட சம்புவராய மன்னர்கள் நாட்டின் நிதி நிலையைச் சீர்த்திருத்த முனைந்தனர். சோழர் கால வரிவிதிப்பு முறைகள் இக்காலத்திற்குப் பொருந்தவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. வணிகம் அழிந்தது, வணிகர்கள் வறியவராயினர். பலவிடங்களில் வியாபாரிகள் அரசு வரிகளைச் செலுத்தவியலாமல் ஊர்களை விட்டு ஓடினர். எனவே வணிகத்துக்கும், வணிகர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய இன்றியமையாப் பணியைச் சம்புவராய மன்னர்கள் முதலில் கொண்டனர். இதன் காரணமாய் நாட்டின் பல பகுதிகளில் அஞ்சினான் புகலிடங்களை  ஏற்படுத்தினர்.

    அஞ்சினான் புகலிடங்களின் நிலை

    அஞ்சினான் புகலிடங்கள் போர்க் காலங்களில் துன்புற்ற மக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு அரண்கள் என்றும், வணிகர்களின் பாதுகாப்புக்காகவும். வணிகத்தின் வளர்ச்சிக்காகவும் நிறுவப்;பட்ட பொருளியல் அமைவிடங்கள் என்றும் இரு மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. கூர்ந்து ஆராயுமிடத்து அவை வணிகத்துக்காக நிறுவப்பட்ட புகலிடங்கள் என்பது தெளிவாகின்றது. அக்காலத்தில் போர்கள் என்பது அன்றாட நிகழ்வாய் மாறிய நிலையில் மக்களுக்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருந்தால் அது போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில்; அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அஞ்சினான் புகலிடங்கள் ஏதும் அவ்விடங்களில் அமைக்கப்படவில்லை. மாறாக இப்புகலிடங்கள் அமைக்கப்பட்ட இடங்களெல்லாம் வணிக மையங்களாகத் திகழ்ந்தன. புதியதாக அமைக்கப்பட்ட இப்பகுதிகளி;ல் அக்கால வணிகக் குடியினரான காசாயக் குடியினர் (கைக்கோளர், சாலியர், கோலியர், சேனையங்காடிகள், செக்குக் குடிகள், செட்டிகள் போன்றோர்) பெருமளவில் வரவேற்கப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர்.

    போர்களால்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமேயன்றி பாதுகாப்புப் பகுதிகள் அமைக்கப்பட்டிராது. அக்காலத்தில் போரால் நேரடியாக பாதிக்கப்பட்ட எவ்விடங்களிலும்; அஞ்சினான் புகலிடங்கள் அமைக்கப்பட்டதாகச் சான்றுகளில்லை. மாறாகப் புதியதாக அமைக்கப்பட்ட அஞ்சினான் புகலிடங்களில்; வணிக இனத்தவர்கள் வந்து குடியேறி வணிகம் புரிய ஊக்கமளிக்கப்பட்டதற்குச் சான்றுகள் உள. எனவே அஞ்சினான் புகலிடங்கள் நிறுவும் நடவடிக்கையானது போரினால் வணிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வணிகம் செழிக்க வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட பொருளியல் தொடர் நடவடிக்கையாகக் கொள்ளவேண்டும். சம்புவராய மன்னர்கள் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்; துரிதமாகப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டதுடன் பல  அஞ்சினான் புகலிடங்களை அமைத்தனர். எனவே, அஞ்சினான் புகலிடங்கள் என்பவை பொதுமக்களைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட அரண்கள் என்பதைவிட வணிகத்தையும்; வணிகர்களையும் பாதுகாக்க அரசு அமைத்த அமைவிடங்கள் என்பது சாலவும் பொருந்தும்.

    சம்புவராயர் கால அஞ்சினான் புகலிடங்கள்:-

    சம்புவராய மன்னர்கள் பல்லவர்களுக்குப் பின்பு வந்த சோழர் காலத்தில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை (வட தமிழ்நாட்டை) ஆண்ட அரச குலத்தவர் ஆவர். கி.பி 10 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை இவர்களுடைய ஆட்சி நிலைத்திருந்தது. ஆரம்பத்தில் காஞ்சிபுரத்தைத்  தலைநகராகக் கொண்டு சோழர்களின் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்த அவர்கள் பின்பு படைவீடு என்ற இடத்தில் தம் தலைநகரை மாற்றிக்கொண்டனர். இவர்கள் சோழர்கள் ஆட்சியில் முக்கியப் படைத்தலைவர்களாகவும் குறுநில மன்னர்களாகவும் பணியாற்றினார்கள். இவர்கள் தமிழகத்தின் சிறந்த புராதனத் தமிழினத்தைச் சார்ந்தவர்கள். சோழர்களுடன் நெருங்கிய திருமண உறவைக் கொண்டவர்கள். பல்வேறு  சம்புவராய மன்னர்களின் கல்வெட்டுகள் இவர்கள் பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்று உரைக்கின்றன (ARE.NO:244/1901 & ARE.NO: 453/1923-24 & ARE.NO:163/1915 & SII. Vol-3.No:63 & பெருமுக்கல் கல்வெட்டுகள், ப:60) மேலும் இவர்கள் பழம்பெருமை மிக்க வன்னிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் சோழர்களின் குறுநில மன்னர்களாகப் பணியாற்றிய இவர்கள் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் சுதந்திர மன்னர்களாகத் தனியரசு செலுத்தினர்.

    இடைக்காலத்தில் இடைவிடாத போர்களாலும், இயற்கைச் சீற்றங்களாலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எனவே, சம்புவராய மன்னர்கள் வணிகம் வளர்ப்பதை முதற்பணியாகக் கொண்டனர். முதலில் வணிகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு மண்டலங்கள் (அஞ்சினான் புகலிடங்கள்); அமைக்கப்பட்டன. இவ்வஞ்சினான் புகலிடங்கள் ஒரே இடத்தில் செறிந்து காணப்படாமல் நாடு முழுவது பரவிக் காணப்பட்டன. வணிக வளர்ச்சி தேவைப்படும் இடங்களில் இவை அமைக்கப்பட்டன. அஞ்சினான் புகலிடங்களி;ல் வந்து வியாபாரம் செய்ய வணிகர்கள் பெரிதும் வரவேற்கப்பட்டனர், அவர்கள் வணிகம் செய்து பிழைக்க ஊக்குவிக்கப்பட்டனர். அரசே இவ்விடங்களுக்குப் போதுமான பாதுகாப்பை நல்கியதுடன் வணிகர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க உறுதியளித்தது. சிலவிடங்களில் வணிகத் தெருக்கள் புதிதாய் அமைக்கப்பட்டன. அத்தெருக்களுக்கு பெயர்களும் சூட்டப்பட்டன. இங்கு புதிதாய்க் கடை வைத்து வணிகம் செய்யும் வணிகர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டி அரசுக்கு அவர்கள் முதலாண்டு செலுத்த வேண்டிய வரிகள் பெருமளவு தள்ளுபடி செய்யப்பட்டன. இவ்வாறு அஞ்சினான் புகலிடங்களில் வணிகத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் சிறப்பாக வழங்கப்பட்டது.

    சம்புவராய மன்னர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில்  அஞ்சினான் புகலிடங்களை நிறுவினர். ஆனால் இவற்றில் ஒரு சில மட்டுமே வெளிச்சத்திற்கு வந்தன. திருமல்லிநாத சம்புவராயன் விழுப்புரம் மாவட்டம் “செவலப்பொறை” என்ற இடத்தில் அஞ்சினான் புகலிடம் ஒன்றை அமைத்தான் (ஆவணம் இதழ் எண்:16,ப:104). வென்று மண்கொண்ட சம்புவராயன் வேலூர் மாவட்டம் “கீழ்மின்னல்”(ARE.No:135/1933-34), “கூடநகரம்” (ARE.No:137/1926), மற்றும் “வேப்பூரிலும்” (ARE.No:499/1926), திருவள்ளூர் மாவட்டம் “திருவேற் காட்டிலும்” (ARE.No:393/1958-59), காஞ்சிபுரம் மாவட்டம் “கொத்திமங்கலம்” (ARE.No:137/1926) என்ற ஊரிலும் அஞ்சினான் புகலிடங்கள் நிறுவினான். மூன்றாம்  இராஜநாராயணச் சம்புவராயன் திருவண்ணாமலை மாவட்டம் “வடமாதிமங்கலம்” (ARE.No:62/1933-34) என்ற ஊரில் அஞ்சினான் புகலிடம் அமைத்தான். குலசேகரச் சம்புவராயன் திருவண்ணாமலை மாவட்டம் “தெள்ளாறு” (ARE.No:70/1934-35) மற்றும் “இடைப்பாறையிலும்” (ARE.No:141/1941-42) அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தான். இவ்வாறு சம்புவராய மன்னர்கள் நாட்டின் பல பகுதிகளில் அஞ்சினான் புகலிடங்களை நிறுவி வணிகம் வளர்த்தனர்.

    முடிவுரை

    சம்புவராயர் அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு. அவர்கள் காலத்தில் நாடு முழுவதும் பரவலாக நிறுவப்பட்ட இவ்வஞ்சினான் புகலிடங்கள் வணிகத்தைப் பாதுகாத்தன. திருடர்கள், கொள்ளையர்கள், அந்நியர் படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்கள் இவற்றால் வணிகர்கள்  பாதிக்காமலிருக்க இவை பாதுகாப்பளித்தன. அஞ்சினான் புகலிடங்களில் வணிகம் செழித்தது, வணிகர்கள் கொழித்தனர். இங்கு பொதுமக்கள் தடையின்றி பொருட்களை விற்றும், அச்சமின்றி பண்டங்களை வாங்கியும் நாட்டின் பொருளியல் நிலையை உயர்த்தினர். இதனால் வணிகர்கள் நன்முறையில் பொருளீட்டியதுடன், அரசுக்கு முறையாக வரியும் செலுத்தினர். இதன் விளைவாய்; நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டது. போரினால் வீழ்ச்சியடைந்த பொருளியல் நிலை இவ்வாறு உயர்ந்தது. மக்கள் நிம்மதியுடனும், வளத்துடனும், மகிழ்வுடனும் வாழ்ந்தனர். இடைக்காலத் தமிழக வரலாற்றில் சம்புவராயர் அரசு மக்கள் நலன் சார்ந்த, பொருளியல் திறன் வாய்ந்த,  வணிகத் தொலைநோக்கு கொண்ட அரசு என்பதற்கு அவர்கள் ஏற்படுத்திய அஞ்சினான் புகலிடங்களே சாலச் சிறந்த சான்றுகளாகும்.

    விரிவாக்கம் (Abbreviations)
    1. ARE- Annual Report on Indian Epigraphy
    2. SII-South Indian Inscription
    கருவி நூற்பட்டியல் (Bibliography)

    1.Appadurai.A, (1990), Chennai, Economic Condition In South India, University of Madras.

    2.Neelakanta Sastri.K,A., (1975), Chennai, The Cholas, University of Madras.

    3.இராஜசேகரத் தங்கமணி.ம, (1978), சென்னை, பாண்டியர் வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

    4.சதாசிவப் பண்டாரத்தார்.தி.வை, (2008), சிதம்பரம், பிற்காலச் சோழர் சரிதம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

    5.பிள்ளை.கே.கே. (2013), சென்னை, தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராச்சி நிறுவனம்.

    6.தமிழக வரலாறு – சோழர் காலம், (1998), சென்னை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்

    7.நடன.காசிநாதன் & வசந்த கல்யாணி.அர (பதி), (1998), சென்னை, பெருமுக்கல் கல்வெட்டுகள், தமிழ்சாடு  அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சோழ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட குறுநில வேந்தர்களாகிய சம்புவராயர்களின் பங்களிப்பு, தமிழக வரலாற்றில் குறிப்பிடத் தகுந்ததாகும். கடைசியாகத் தமிழகத்தை ஆண்ட குறுநில மன்னர்களும் இவர்களே ஆவர். சோழர்களின் இறுதிக் காலத்தின்போது சமுதாயத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் குறிப்பிடத்தகுந்தது, அஞ்சினான் புகலிடங்கள் ஆகும். இந்தக் கட்டுரை இது குறித்துத் தெளிவாக விளக்குகிறது. அஞ்சினான் புகலிடங்கள் போர்க் காலங்களில் துன்புற்ற மக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு அரண்கள் என்றும், வணிகர்களின் பாதுகாப்புக்காகவும். வணிகத்தின் வளர்ச்சிக்காகவும் நிறுவப்பட்ட பொருளியல் அமைவிடங்கள் என்றும் இரு மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன என்று கட்டுரையாசிரியர் அஞ்சினான் புகலிடங்கள் குறித்துக் கூறுகிறார். இயல்பாகவே குறுநில மன்னர்கள் மக்களின் துன்பம் துடைப்பதற்காக மேற்கொண்ட பல வழிகளை வரலாற்றின் மூலமாக அறிகிறோம். அந்த வழியில் சம்புவராய மன்னர்களின் சமுதாயப் பணி ஆகிய அஞ்சினான் புகலிடங்கள் குறித்து இந்தக் கட்டுரை பேசுகிறது. சம்புவராயர் குறித்து மேலும் சில விளக்கங்களைக் கட்டுரையாசிரியர் சற்று விரியத் தந்திருக்கலாம்.  


     

    Share
  • வாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடுகள்

    -துக்கை ஆண்டான்

    ஸ்வஸ்திஸ்ரீ வாணகோவரையன் (ஓலை சிற்றகழி ஊரவர் கண்டு தங்களூரில்) இருபத் தெட்டாவது முதல் மகனார் சவுண்(ட)பர் நம(க்)கு நன்றாக வைத்த அ(கர)த்துக்குப் பேர் கொண்ட பட்டர்கள் இருபத்தொரு(வரு)க்கு த(ங்க)ளூரிலே ஒருவர்க்கு ஒரு (ம)னையும்  புன்செய் நிலத்திலே ஒருவருக்கு ஒன்(ற)ரையாக வ(ந்த) புன்செய் நிலம் முப்ப(த்)தொன்றரையும் வைத்திய விருத்திக்கு ஒரு மனையும் பு(ன்)செய் நிலத்திலே ஒன்றரை நிலமும் “ஆகப்பேர் இருபத்திருவருக்கும் மனை இருபத்திரண்டும் புன்செய்) நிலம் முப்பத்திரு வேலியும் இறையிலி ஆக இட்டோம். இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொண்டு நமக்கு நன்றாக சந்திராதித்த(வ)ரையும் இறையிலிஆக அனுபவிப்பார்களாகப் பண்ணுவதே.” இவை வாணகோ(வ)ரையன் எழுத்து.

    இப்பட்டர்கள் குடியிருக்கிற மனைகளுக்கு நிலம் காலும் பாடிகாப்பானுள்ளிட்ட பணி செய் மக்களுக்கு நிலம் காலும் ஆக நிலம் முப்பத்திரு வேலியும் சந்திராதித்தவரையும் இறையிலி ஆக விட்டோம். இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொண்டு அனுபவிப்பார்களாகப் பண்ணவதே.(கன்னட மொழியில் கையெழுத்து உள்ளது)

    இடம்: பெரம்பலூர் வட்டம் சித்தளி கிராமம். வரதராஜபெருமாள் கோவில் மகாமண்டபம் தென்சுவரில் வெட்டப்பட்ட 19 வரி கல்வெட்டு.

    மகன் – கீழ்ப்படிந்த வீரன், subordinate soldier; மனை – வீடு.

    விளக்கம்: மூன்றாம் இராசராசனுக்கு 28 ஆவது ஆட்சிஆண்டில் (1244 AD) அவனுக்கு அடிபணிந்து ஆட்சிபுரிந்த மூன்றாம் அதிகார நிலை அரையனான வாணகோவரையன் தனக்கு உடல்நலம் தேறவேண்டி அவனுக்குக் கீழ்படிந்த வீரனான சவுண்டபர் அகரம் வைக்கிறான். அந்த அகரத்தை செய்த இன்றைய சித்தளியான அன்றைய சிற்றகழி ஊர் பிராமணர் 21 பேருக்கும், ஒரு மருத்துவரின் வளர்ச்சிக்கும் ஆக 22 பேருக்கு பேர் ஒருவருக்கு ஒரு வீடும், 1-1/2 புன்செய் நிலமும் பெறும்படியாக 32 வேலி நிலமும் அரசவரி இன்றி வழங்கப்படுகின்றது. இந்நிலங்கள் மகதேசன் கோலால் அளந்து கொடுக்க ஏற்பாடானது. நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை இப்படி நடக்கவேண்டும் என்று வாணகோவரையன் ஆணைஓலை வெளியிட்டான். வாணர் கோலார் பகுதியில் இருந்து வந்ததால் அவர் தாய்மொழி கன்னடம் என்பதால் இறுதியில் கன்னடத்தில் கையொப்பம் இட்டான்.

    இந்த பிராமண வீடுகளை ஒட்டி நிலம் காலும் ஒதுக்கப்படுகின்றது. அவை கொல்லைப்புறமாக இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகின்றது. இவர்களுடன் பாடிகாவல் உள்ளிட்ட பிற பணியாளருக்கும் இறையிலியாக தலைக்கு கால்நிலம் என 32 வேலி நிலம் நிலவும் ஞாயிறும் நின்று நிலைக்கும் வரை செல்லக் கடவதாக வழங்கப்படுகின்றது.

    22 பேருக்கு 32 வேலியை வகுத்தால் ஒருவருக்கு ஒன்றரையாக (1.45) நிலம் கிட்டுகின்றது. இந்த ஒன்றரையில் கால் என்பது சற்றொப்ப 0.242 என வருகின்றது. அப்படியானால் பாடிகாவல் உள்ளிட்ட பிற கோவில் பணிசெய்வோருக்கு நிலம்கால் என்ற அளவில் 32 வேலி நிலத்தை வகுத்தால் 128 பேர் நிலம் பெறுகின்றனர். ஆக ஒரு பழைய கோவில் ஊரை திருத்திச் சீரமைத்து பெரிய ஊராக அமைத்தான் வாணகோவரையன் என்பது விளங்குகின்றது.  இந்த கால்நிலம் பெறும் 128 பேரில் 22 பிராமணரும் அடங்குவர் என்று தெரிகின்றது. அந்த 22 பேரைக் கழித்தால் 128 – 22 = 106 பிராமணரல்லாதார் நிலம் பெற்றனர். இந்த கால்நிலம் என்பது பயிர் நிலமல்ல மாறாக அவர்கள் தம் சொந்த செலவில் வீடு கட்டிக் கொள்வதற்கே என்று புரிகின்றது. பிராமணருக்கு அரசனே வீடு கட்டிக் கொடுத்ததால் அவை அளவில் பெரியவாகவும் கிணறு உடையவாகவும் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை.

    அதேநேரம் கால்நிலம் பெற்றவர்கள் எளியோர் என்பதால் அவர்களால் அதிகம் செலவழித்து பெரிய வீடு கட்ட முடியவில்லை என்பதோடு கிணறு வெட்டினால் கூடுதல் செலவாகும் எனபதால் கிணறுஅற்ற சிறு வீடுகளாகவே அவர்தம் வீடுகள் காட்சிப்படுகின்றன. கால்நிலம் என்பதும் சிறுபரப்பு நிலத்துண்டு தான் அதுவே சிறிய வீட்டிற்கும் காரணமாகின்றது.

    மற்றொரு மடலாடல் குழுவில் 3 ஆண்டுகள் முன் பிராமணர் பிறர் வீடுகள் கிணறு அமையா வண்ணம் தடுத்துவிட்டனர் என்று தொல்லியலாளர் பத்மாவதி என்பவர் கருத்து கூறியதாக பதிவான போது அதை மறுத்து பிராமணர் வீடுகள் கிணறுடன் இருப்பதற்கு அவை வேந்தர், மன்னர், அரையர்களால் பெருஞ்செலவு செய்து  கட்டப்பட்டவை. பிறருடைய வீடுகள் கிணறு இன்றி சிறியவாக இருப்பதற்கு காரணம் அவர்தம் வீடுகள் அவர் தம் சொந்த செலவால் கட்டப்பட்டதே காரணம் என்று பிழையை சுட்டிக் காட்டினேன். தொல்லியலாளர் பத்மாவதி திராவிட கருத்தியலின் தாக்கத்தால் அவ்வாறு தவறான ஒரு கருத்தை கல்வெட்டில் செய்தியாக கூறப்பட்டுள்ளது என திணித்துள்ளார் என்று எடுத்துரைத்தேன். இப்போது போல அப்போது என்னால் கல்வெட்டுச் சான்று ஏதும் தரஇயலவில்லை என்பதே குறை.

    தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்கள் தம் சொந்தக் கருத்தை கல்வெட்டுச் செய்தியாக புகுத்தாமல், திணிக்காமல் இருப்பதுவே சாலவும் நன்று, அல்லவிட்டால் பல தலைமுறைக்கு அத்தவறான கருத்து எடுத்துச் செல்லப்பட்டு சமூகத்தில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் என்பதே நடப்பு உண்மை.

    இப்போது இந்தக் கல்வெட்டின் மூலம் பெரம்பலூர் வட்டம் சித்தளி ஊரில் மட்டும் அல்ல, கோவில் அமைந்த பிற எல்லா ஊர்களிலும் இதே முறையில் தான் பிராமணருக்கு வீடும், பிறருக்கு வீட்டு மனை மட்டும் என வழங்கப்பட்டன. அதனால் தான் பிராமண வீடுகள் கிணறுள்ள பெரிய வீடாகவும், பிறருக்கு கிணறற்ற சிறிய வீடாகவும் அமைந்தன என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்.  இன்றும் கோவில் ஊர்க் கிராமப் புறங்களில் வீடுகள் இதே நிலையில்தான் அமைந்துள்ளன என்பதைக் கண்டு தெளியலாம். இந்த வேறுபாட்டிற்கு ஏற்றத்தாழ்விற்கு வேந்தர், மன்னர், அரையர் தாம் காரணமே ஒழிய பிராமணர் காரணகர் அல்லர். அப்படியான நிலையில் பிராமணரைப் பழிப்பது நன்றன்று.

    வேந்தர், மன்னர், அரையரான அரசர், நாட்டுக் கிழான் ஆகிய நாலடுக்கு அதிகார அமைப்பு பிராமணருக்கு வேத பாடசாலை அமைத்து கல்வி புகட்டி, கோவில் கட்டி வேலைவாய்ப்பு தந்து குடியிருக்க வீடும் ஏற்படுத்தித் தந்தது என்ற வகையில் 4 அகவை முதல் இறக்கும் காலம் வரை பாதுகாவலராக உத்தாரமாக (supportive) இருந்து தந்தைக்கு ஒப்பான நிலையில் பேணியதற்கு பிராமணர் நன்றி உணர்வுள்ளவராக இருத்தல் வேண்டும். ஆளப்பிறந்தவர், ஆண்டகுடி, மண்ஆண்டவர், அடக்கிஆண்டவர் என்று மார்தட்டிக் கொள்வோர் காரணமின்றி பிராமணரைப் பழிப்பது என்பது இதில் அவர்கள் போற்றும் அரசகுடியோரை பழிப்பதாகவே கருதத்தக்கதாக உள்ளது.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி III, பக். 100. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, எழும்பூர், சென்னை – 8

    Share
  • ஜார்ஜ் பெர்னாண்டஸ் (1930-2019)

    -மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    இலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின் தாக்குதலில் 64 தமிழ்ப் பொது மக்கள் இறந்தனர். வியத்நாமில் மைலாய் நகரில் 1968 மார்ச்சு 16இல் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் 300-500 வியத்நாமியப் பொதுமக்கள் இறந்தனர். வியத்நாமில் அமெரிக்கப் படைகள் செய்ததையே வல்வெட்டித்துறையில் இந்தியப் படைகள் செய்ததாகக் குற்றம் சாட்டிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், வல்வெட்டித்துறையை இந்தியாவின் மைலாய் என அறிவித்தார்.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ், கொங்கணக் கத்தோலிக்கர். மேற்குக் கடற்கரையோர மங்களூரில் 1930இல் பிறந்தவர். பாதிரியாரகப் பயிற்சிக்கு பங்களூர் போனவர் இடை நிறுத்தி மும்பை சென்று தொழிற் சங்கவாதி ஆனவர்.

    சமதருமக் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். எளிமையானவர், இனிமையானவர், அடித்தள மக்களின் மேம்பாட்டுக்கு அச்சாணியானவர். 1967இல் நாடாளுமன்ற உறுப்பினரானவர்.1994இல் சமதாக் கட்சியைத் தொடங்கியவர். பிகாரின் இன்றைய முதலமைச்சர் நிதிஷ்குமார், சமதாக் கட்சியில் இருந்து வளர்ந்தவர்.

    வங்கத்துக் கவிஞர், நேரு அமைச்சரவையில் அமைச்சர் உமாயூன் கபீரின் மகள் இலைலாவை விரும்பி மணந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். சீன் அவர்களின் ஒரே மகன்.

    1983க்குப்பின் இந்திய மனித உரிமை இயக்கங்கள் இலங்கைத் தமிழர் மீதான சிங்களவரின் தாக்குதல்களையும் தமது நிகழ்ச்சி நிரலில் ஆர்வத்துடன் சேர்த்துக்கொண்டன.

    சென்னையில் ஊடகவியலார் தி என் கோபாலன் மிகுந்த ஆர்வம் காட்டினார். வி ஆர் கிருஷ்ண ஐயர், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தமிழரல்லாத மனித உரிமை ஆர்வலர்களை, சமதரும ஈடுபாட்டாளரைச் சென்னைக்கு அழைத்து இலங்கைத் தமிழர் அழிப்புத் தொடர்பான மாநாடுகளை நடாத்தி வந்தார்.

    அக்காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தமிழகத்தில் பலருக்கு இலங்கைத் தமிழர் ஆதரவாளராக அறிமுகமானார். அதற்குப்பின்னர் வாழ்நாள் முழுவதும் அவர் அந்தக் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.

    இலங்கைத் தமிழருக்காக மட்டுமன்றி, மியன்மார், வங்கதேசம், நேபாளம் என அவரின் இரக்கக் கண்கள் பரந்து பார்த்தன, அடக்கியோரை எதிர்த்து விரைந்து குரல் கொடுத்தன.

    இந்திராவின் நெருக்கடி நிலைக் காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கருணாநிதி. ஆனாலும் இலங்கைத் தமிழர் ஆதரவு நிலையில் தமிழகத்தில் பழ.நெடுமாறன், வைகோ, கி. வீரமணி மூவரும் ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் நெருக்கமாகப் பணிபுரிந்தவர்கள்.

    விடுதலையை வேரறுக்க முடியாது. அதற்கான போராட்டங்கைளையும் நசுக்க முடியாது. தமது நாட்டில் விடுதலைக் குரல்களை ஒடுக்கியோர், பிறிதொரு நாட்டில் விடுதலைக்கு ஆதரிப்பது இரட்டை வேடமே. மனதார ஆதரிக்கார். ஒப்புக்காக ஆதரிப்பார். இதனாலன்றோ உரத்த ஒலியுடன் குரல் எழுப்பியிருந்தாலும் இந்திரா காந்தியின் தமிழர் போராட்ட ஆதரவுக் கொள்கை தோல்வி கண்டது. எம்ஜியாரும் எதையும் செய்யமுடியவில்லை. ஆனாலும் அடக்கி ஆள்வோர் நடுவே எம்ஜியார் விடுதலைக்காகக் குரல் கொடுத்ததால் தனித்து ஒளிர்கிறார் என ஜார்ஜ் பெர்னாண்டஸ் எழுதினார் (பக். 61, மனித உரிமைகள், 1998).

    இந்தியப் படைகளை மீளழைக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் குரல் 1989 ஆனியில் ஓங்கி ஒலித்த நாள்களில், விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம், ஜார்ஜ் பெர்னாண்டசுடன் தொடர்பு கெண்டார். இந்தியப் படைகள் விலகினால் விடுதலைப் புலிகளைப் பிரேமதாசா அழித்துவிடுவார் எனக் கூறினார். பாலசிங்கத்தை ஜார்ஜ் பெர்னாண்டஸ் கமுக்கமாகச் சந்தித்ததாகவும் செய்தி உண்டு. இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டார்.

    இந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்லும் நிலையில் தான் இல்லை எனப் பதிலளித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், குடியரசுத் தலைவர் வேங்கடராமனுக்குக் கடிதம் எழுதினார். ஜார்ஜ் பெர்னாண்டஸிடம் மேலும் தகவல்களைக் கோரிப் பெற்ற வேங்கடராமன், பிரதமருக்கு அவை யாவற்றையும் அனுப்பினார். (இந்தியா டுடே, யூலை 31, 1989 இதழ்)

    1997 பெப்ருவரியில் ஜார்ஜ் பெர்னாண்டஸைத் தில்லியில் முதன்முதலாகச் சந்தித்தேன். என்னுடன் வந்தவர் திருமதி மாலினி இராசநாயகம். இலங்கைத் தமிழர் ஆதரவு நிலைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம்.

    1998 தொடக்கம் 2001 வரை ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர். முந்தைய அரசு, இலங்கைக்குக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல்களைக் கொடுத்திருந்தது. ஒரு கப்பலை அனுப்பியபின் மற்றக் கப்பல் அனுப்பும் நிலையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரானார். பழ் நெடுமாறனின் வேண்டுகோளை ஏற்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் இரண்டாவது கப்பலை இலங்கைக்கு அனுப்ப மறுத்தார்.

    2000ஆம் ஆண்டு யூன் 3ஆம் நாள். சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம். முதலமைச்சர் கருணாநிதியின் 77ஆவது பிறந்த நாள் விழா.

    இரத்தம் சிந்தாமல் ஒரே நாடு பிரிந்தது. செக் நாடும் சுலோவாக் நாடும் உருவாகின. அதே போல இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் தனியாகவும் சிங்களவர் தாயகம் தனியாகவும் பிரிந்து தமிழருக்குத் தனி நாடு அமைய வேண்டும். கருணாநிதி தன் உரையில் இவ்வாறு கூறினார்.

    வாஜ்பாய் பிரதமர். திமுகவும் அரசில் கூட்டணி. மாறன் அமைச்சர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சர்.

    முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சு இந்திய அரசின் கொள்கையா? இந்திய எதிர்க் கட்சிகள் கூவின. இலங்கையில் சிங்களவர் கூச்சலிட்டனர். மேற்கத்தைய நாடுகளும் குரலெழுப்பின.

    வாஜ்பாயின் பதிலை ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் விரும்பும் தீர்வே இந்தியக் கொள்கை என்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் வாஜ்பாய் அவர் வழி கூறினார். அதே நாளில் இந்திய வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சிங் கொழும்பில் நின்றார்.

    2000 யூலை 1, 2 நாள்கள். இடம் ஈரோடு. வைகோ தலைமையிலான மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் “தமிழக மீளெழுச்சி மாநாடு”. உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மின்சக்தி அமைச்சர் அரங்கராசன் குமாரமங்கலம், முதலமைச்சர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் இராமதாசர் எனப் பலர் பங்குபற்றிய மாநாடு.

    அந்த மாநாட்டிலும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேசினார். 1987-1988இல் இந்திய அரசின் தவறான கொள்கையைப் பிரதமர் வாஜ்பாய் பின்பற்றமாட்டார் எனக் கூறிய அவர், தமிழரும் சிங்களவரும் இணைந்து கேட்டாலே இந்திய அரசு தலையிடும் எனக் கூறினார்.

    2008 வைகாசியில் தில்லியில் மீண்டும் ஜார்ஜ் பெர்னாண்டஸைச் சந்தித்தேன். குணபாலசிங்கம், பத்மநாதன் ஆகிய இருவருடனும் தில்லி சென்றிருந்தேன். இலண்டனில் அவர்கள் இருவரும் சார்ந்த அமைப்பு நடத்த இருந்த இலங்கைக் தமிழர் ஆதரவு மாநாட்டிற்காக ஜார்ஜ் பெர்னாண்டஸை அழைக்கச் சென்றிருந்தோம்.

    இலண்டன் மாநாட்டிற்காக, ஜார்ஜ் பெர்னாண்டஸை அனுப்ப உதவினேன். தென் ஆபிரிக்க அமைச்சர் என் நண்பர் படையாட்சியையும் அனுப்ப உதவினேன். தில்லியில் இருந்து இந்திய வெளியுறவுத் தூதரக அநுபவம் நிறைந்த என் நண்பர்களையும் அனுப்ப உதவினேன்.

    மற்றொரு முறை தில்லி சென்ற பொழுது, ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்ந்த கிருஷ்ண மேனன் மார்க் இல்லம் சென்றேன். அவர் மருத்துமனையில் இருப்பதாகக் கூறினர்.

    2019 ஜனவரி 29 அன்று அவர் காலமானார் என்ற செய்தி அறிந்து கலங்கினேன். இலங்கைத் தமிழரின் உணர்வுபூர்வமான நண்பர். அடித்தட்டு மக்களின் இதயத் துடிப்பு. விடுதலை இயக்கங்களுக்கு நீரூட்டி வளர்ப்பவர். அவரின் மறைவு இந்தியாவுக்கு மட்டுமன்று, மனித நேயர்களுக்குப் பேரிழப்பு.

    Share
  • சர்வதேச நட்பின் சின்னம்! சுதந்திர தேவி சிலை!

    பவள சங்கரி

    எல்லீஸ் தீவு அருங்காட்சியகம்  நியூயார்க், அமெரிக்கா

    சர்வதேச அளவில் நட்பு, விடுதலை, மக்களாட்சியினை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்கும் சுதந்திர தேவி சிலை, உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க நாட்டின் நுழைவாயிலாக உள்ள சுதந்திர தேவி சிலை 1880 ஆம் ஆண்டில் பாரீசியர்களால் கட்டமைக்க ஆரம்பிக்கப்பட்டு, 1886 இல் நியூயார்க் நகரின் உன்னத படைப்பாகவும், உலகின் மிக உயரமான சிலை வடிவமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மீது பிரான்சு நாடு கொண்ட நட்பின் அடையாளமாக, அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு விழா பரிசாக அளிக்கப்பட்ட அதிசயம்! ‘Libertas’ என்ற உரோமாபுரி கடவுளின் உருவில் வடிவமைக்கப்பட்ட சிலை என்றும் கூறப்படுகிறது.

    Liberty Enlightening The World என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சுதந்திர தேவி சிலையைக் காணவேண்டும் என்ற ஆவலில் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள்.


    1865இல் எடுவர்ட் டி லெபோலயி என்பவரின் தலைமையில் ஒரு அறிஞர் குழு, தங்கள் சொந்த நாட்டின் அரசியல் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நாட்டிற்கு, சுதந்திரம் மற்றும் விடுதலையின் குறியீடாக ஒரு நினைவுப் பரிசை வழங்கி கௌரவிக்க முடிவு செய்தனர். அதற்கான சரியான நேரமாக அது அமைந்தது. ஆம், உள் நாட்டுப் போர் நிறைவடைந்து, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு, நாடு தமது நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கியிருந்தது. ஈபில் டவர் கோபுரத்தை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபிள் எனும் நபர் தான் அமெரிக்க தேவி சிலையையும் வடிவமைத்தவர்.


    தேசியவாதம், செழிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவைகள் இந்த நினைவுச் சின்னத்தின் ஒரு சகாப்தத்தை தோற்றுவித்தது. லெபோலேயியின் இளம் சிற்பி நண்பன் அகஸ்டி பர்தோல்டிக்கு, பிரம்மாண்ட நவீன சிற்பம் உருவாக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சமுத்திரத்தைத் தாண்டி நியூயார்க் துறைமுகத்தில் உலகிற்கு சுதந்திர விளக்கேந்தி நெடிதுயர்ந்து இன்றும் நிலையாக நின்று கொண்டிருக்கின்றது. 1886 இல் அமெரிக்காவிற்கு அர்ப்பணம் செய்த பின்பு பிரான்சு நாட்டுப் பிரதமர், இந்த சுதந்திரதேவி கடல்களுக்கு அப்பாலும் வெகு தொலைவிற்குச் சென்று நம் பிரான்சு நாட்டை மேலும் பிரமாண்டமாக்கப்போகிறாள் என்பதில் ஐயமில்லை என்று அறிவித்தார்.

    ஆனால் சுதந்திர தேவியின் உருவம் ஏற்கனவே எண்ணற்றோரின் உள்ளத்திலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிற்கால 1800களின் பெருவாரியான குடியேற்றங்களுக்கு இடையில், வளர்ந்துவரும் கடுமையான குடியேற்றத் தடைச் சட்டத்தையும் மீறி, சுதந்திர தேவியின் திருவுருவம், ‘புலம் பெயர்ந்தோரின் தாய்’ என்ற ஆழமான உணர்வுகளால் ஆன கருத்தாக்கமாக, அவர்தம் இதயங்களில் ஊடுறுவிக் கொண்டிருந்தது.


    சனவரி 1, 1892 ஆம் ஆண்டில் அமெரிக்க எல்லீஸ் தீவு குடிவரவு நிலையம் மூலமாக, அயர்லாந்திலிருந்து குடிபெயர்ந்த அமெரிக்காவின் முதல் குடிபெயர்வாளராக உள் நுழைந்தவர் 15 வயது அன்னி மூர் என்பவர். இவருக்கு அப்போதைய அமெரிக்க குடியேற்ற கண்காணிப்பாளர் ஜான் வேபர் மூலமாக பத்து டாலர் தங்க காசுடன் வரவேற்பளிக்கப்பட்டதாம்! அதன் பிறகு 1895இல் இவர் ஜோசப் ஆகஸ்டஸ் என்பவரை மணம் புரிந்து, நியூ யார்க் நகரில் குழந்தைகளுடன், 47 வயது வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.


    முதலாம் உலகப் போரின் சமயத்தில் குடியேற்ற எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டதால் சுதந்திர தேவியின் பங்கு பரிணாமம் பெற்றது. போர் பத்திரங்கள் வாங்க வேண்டியும், இராணுவத்தில் பங்கு பெறவும் குடிகளை கேட்டுக்கொள்ளும் பளபளக்கும் சுவரொட்டிகள் அனைத்திலும் சுதந்திர தேவியின் திருவுருவமே மொத்த அமெரிக்கா என்பதாக உருவகப்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் சுதந்திர தேவி சிலையின் பிம்பமே அனைத்து அரசியல் செயல்பாடுகளுக்கும் தலைமை வகித்தது. அன்றிலிருந்து இன்றுவரை உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்களை ஈர்த்துக் கொண்டும் இருக்கிறது.

    வலது கரத்தில் தீப்பந்தமும், இடது கரத்தில், “சூலை 4, 1776” என்று எழுதப்பட்ட, அமெரிக்க விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கும் புத்தகமும் உள்ளன. சுதந்திர தேவியின் சிலையின் தலையில் உள்ள 7 முனைகள் கொண்ட கிரீடம் 7 கண்டங்களையும், 7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர் என்பதோடு சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர். இந்த புகழ்மிக்க சிலை தாமிரத்தில் செய்யப்பட்டுள்ளது. இச்சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.

    சுதந்திர தேவியின் சிலை குறித்து அதன் படைப்பாளர் பர்தோல்டியின் கருத்து:

    அந்த பிரம்மாண்டமான சிலை வெறுமனே ஒரு சரணாலயமாக மட்டுமல்லாமல் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஆழமான உணர்வை உருவாக்க வேண்டும். அதுவும் அது அதன் அளவின் காரணமாக அல்ல, ஆனால் அதன் அளவைப் புரிந்துகொள்வது, அது ஆக்கிரமித்துள்ள இடத்தின் அளவிற்கு அதன் உன்னதமான தத்துவத்தை உள்வாங்கி, தாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் அற்புதமாக இருக்க வேண்டும்.


    இந்த கருத்தாக்கமே, இச்சிலையைக் கண்டுகளிக்க வரும் உலக மக்கள் அனைவரின் மனத்திலும் சுதந்திரம் தன் உயிர் மூச்சு என்ற ஒருமித்த கருத்தை உருவாக்கத் தவறுவதில்லை என்பதை முழுமையாக உணர முடிகின்றது! இதன் காரணமாகவே இச்சிலை உலக அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்வதாகக் கொள்ள முடிகின்றது என்பதும் நிதர்சனம்!

    Share
  • பழந்தமிழக வரலாறு – 16

     

     

    இ.பாண்டிய வேந்தர்கள்

    முதல் கரிகாலனின் ஆசிரியராக இருந்த, கரிகாலனைவிட இருதலைமுறைகள் மூத்த இரும்பிடர்த்தலையார், கருங்கை ஒள்வாள் பெரும்பெயெர்வழுதி என்கிற பாண்டிய வேந்தன் குறித்துப்பாடியுள்ளார். இவன் சேரன் உதியன், சோழன் பெரும்பூட்சென்னி ஆகியவர்களின் காலத்தவன். இவனது ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 350-கி.மு.320 வரையாகும். இவனுக்குப்பின் வந்தவன் இரண்டாம் காலகட்ட முதுகுடுமிப் பெருவழுதி. இவன் குறித்து மூன்று சங்கப்புலவர்கள் ஐந்து பாடல்களைப் பாடியுள்ளனர். அதுபோக ஏழாம் காலகட்டத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடவந்த மாங்குடிமருதனார் அவனை, முதுகுடுமிப் பெரு வழுதி போன்று புகழ்பெற வாழ்த்துகிறார். முதுகுடுமிப் பெருவழுதி வெளியிட்ட ‘பெருவழுதி’ நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு ஆகும். ஆகவே மேற்குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டும், இவன் மிக நீண்டகாலம் ஆண்டவன் எனக்கொண்டும் இவனது ஆட்சிக் காலம் கி.மு.320-கி.மு.290 எனக் கணிக்கப்பட்டது.

    ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவன் இளைஞனாக இருந்தபோது பாண்டியர்படைக்கு தலைமை தாங்கி மௌரியப்படையின் ஒரு பகுதியை எதிர்த்துப் போரிட்டு(கி.மு.290) வெற்றிபெற்று இப்பெயர் பெற்றான். இவன்தான் சிலப்பதிகாரப் பாண்டிய வேந்தனும் ஆவான். இவன் சேரன் செங்குட்டுவனைவிட மூத்தவன். மூன்றாம் காலகட்டத்தைச்சேர்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் காலம் சுமார் கி.மு. 250-கி.மு. 220 வரையாகும். கி.மு. 270 வாக்கில் வேந்தன் ஆன இவன் சேரன் செங்குட்டுவன் காலத்திலும் சிறிதுகாலம் ஆண்டான். இவனுக்குமுன் நம்பி நெடுஞ்செழியன் என்பவன் ஆண்டான். அவனைப் பேரெயின் முறுவலாரும், பரணரும் பாடியுள்ளனர். பரணர் அவனை இறந்த காலத்தில் பாடியுள்ளார். இவைகளை வைத்து நம்பி நெடுஞ்செழியன் சுமார் கி.மு.290-கி.மு.270 வரை 20 ஆண்டுகள் ஆண்டான் எனவும் அதன்பின் ஆட்சியேற்ற ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், சுமார் கி.மு.270-கி.மு.245 வரை 25 ஆண்டுகள் ஆண்டதாகவும் கணிக்கப்பட்டது.

    ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியனுக்குப்பின் ஆட்சிக்குவந்த, கொற்கையை ஆண்டுவந்த வெற்றிவேற் செழியன் சேரன்செங்குட்டுவன் காலத்தைச் சேர்ந்தவன். அவனது ஆட்சிக்காலம் என்பது சுமார் கி.மு.245-கி.மு.235 வரையான 10 ஆண்டுகள் ஆகும். தினமலர் ஆசிரியரும், நாணயவியலாளரும் ஆன இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கொற்கையில் தனிப் பாண்டிய அரசு இருந்ததாகவும் அவர்கள் செழியன் என்கிற பெயரில் நாணயங்களை வெளியிட்டனர் எனவும் அதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும் கூறியுள்ளார். கொற்கையில் மட்டு மல்ல ஈழத்தின் தம்பப்பண்ணி, மோகூர், ஒல்லையூர் போன்ற பல இடங்களில் பாண்டியர்கள் தனி ஆட்சி செய்து வந்துள்ளனர். இந்த கொற்கை, மோகூர், தம்பப்பண்ணி போன்ற இடங்களில் இருந்தவர்கள் பாண்டியர்களின் கிளை அரசர்களாவர். அவர்கள் தான் பின்னர் மதுரையில் வேந்தர்களாக ஆண்டனர். வெற்றிவேற்செழியன் கொற்கையில் இருந்தும் பழையன் மாறன் மோகூரிலிருந்தும் வந்து மதுரையை ஆண்டனர் என்பதைச் சங்க இலக்கியம் தெரிவிக்கிறது.

    சுமார் கி.மு.290-கி.மு.235 வரை 55 ஆண்டுகள் மதுரையை ஆண்ட நம்பி நெடுஞ்செழியன், ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் ஆகிய இவர்கள் மூவரும் கொற்கையை அரசர்களாக இருந்து ஆண்டபின்னர் மதுரையில் வேந்தர்களாக ஆனார்கள். இந்த மூன்றுபேரும் கொற்கையில் அரசர்களாக இருந்தபோது வெளியிட்ட நாணயங்கள்தான் இந்த ‘செழிய’ நாணயங்கள் ஆகும். இவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதாலும் இந்த நாணயங்களின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதாலும் இவர்கள்தான் இந்த செழிய நாணயங்களை வெளியிட்டனர் எனலாம். இந்த நாணயங்களில் ஒருபக்கம் ‘செழிய’ என்கிற பெயரும் மறுபக்கம் யானைச்சின்னமும் இருக்கின்றன. இவை வெள்ளீய வெண்கல நாணயங்கள் ஆகும். இவைகளுக்கான வெள்ளீயம் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மலேசியா, தாய்லாந்து ஆகிய பகுதிகளிலிருந்து கடல்மூலம் வந்ததாக இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவிக்கிறார்1 வெற்றி வேற்செழியனுக்குப்பின் வந்த பசும்பூண் பாண்டியன், ஐந்தாம் காலகட்டம் ஆவான். நான்காம் காலகட்டப் பரணரும் ஏழாம் காலகட்ட நக்கீரரும் இவனைப் பாடியுள்ளனர். நக்கீரரின் தந்தை மதுரைக்கணக்காயர் இவனைப்பாடியுள்ளார். அதில் கொல்லிமலையைச் சேரர்களுடையதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓரியிட மிருந்து காரியினால் பறிக்கப்பட்டு கி.மு. 220க்குப்பின் அது சேரர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அது சில காலம் கழித்துத்தான் சேரர்களுடையதாகப் புலவர்களால் கருதப்பட்டது. ஆதலால் அப்பாடல் கி.மு. 220க்குப்பின் சில காலம் கழித்துப் பாடப்பட்டிருக்கவேண்டும். மதுரைக்கணக்காயர் மகன் நக்கீரரின் காலம் என்பது சுமார் கி.மு. 240-160 வரையாகும். நக்கீரர் பசும்பூண் பாண்டியனை தனது 25 வயதில் பாடியதாகக் கொண்டால், கி.மு. 215 வாக்கில் அவர் அவனைப்பாடியிருக்க வேண்டும். அதன்பின்னர் 5 வருடம் கழித்து அவன் இறந்தான் எனக் கொண்டால் அவனது வேந்தர் ஆட்சிக்காலம், என்பது கிட்டத் தட்ட கி.மு.235-கி.மு.210 வரை எனலாம்.

    பசும்பூண் பாண்டியனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் ஆறாம் காலகட்டப் பாண்டியன் அறிவுடை நம்பி ஆவான். இவன் பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் காலத்தவன். இவர்களின் இறுதிக் காலத்தில் இருந்தவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறை ஆவான். அறிவுடை நம்பி காலத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை ஆள்கிறான். நம்பி சுமார் 10 ஆண்டுகள் ஆண்டதாகக் கொண்டு இவனது காலத்தைத் கிட்டத்தட்ட கி.மு.210-கி.மு.200 வரை எனலாம். இவனுக்குப்பின் வந்தவன் பழையன் மாறன் ஆவான். இந்தப் பழையன் மாறனை கிள்ளிவளவன் கி.மு. 193வாக்கில் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றுகிறான். இந்தப்பழையன் மாறன் காலத்தில் வாழ்ந்த இளஞ்சேரல் இரும்பொறை இளம்பழையன் மாறனையும், கோப்பெருஞ் சோழனின் புதல்வர்களையும் தோற்கடிக்கிறான். பழையன் மாறன் சுமார் 15 வருடங்கள் வேந்தனாக இருந்தான் எனக்கொண்டு இவனது வேந்தர் ஆட்சிக்காலத்தை சுமார் கி.மு.200-கி.மு.185 வரை எனக் கணிக்கலாம்.

    மாங்குடிமருதனார் தனது மதுரைக்காஞ்சியில் பழையன் மாறனை இரு முறை குறிப்பிட்டுள்ளார். ஆதலால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுக்குமுன் ஆட்சியில் இருந்தவன் பழையன் மாறன் ஆவான்.  பாண்டியர் களில் மிகவும் புகழ்பெற்ற நெடுஞ்செழியனது தலையாலங்கானப் போர் கி.மு. 183வாக்கில் நடக்கிறது. இப்போர் மூலம் பாண்டியர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக ஆகின்றனர். இப்போரால் தமிழகமே தலைமயங்கியது என்கிறார் குடபுலவியனார். இப்பாண்டியனால் கி.மு. 182வாக்கில் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தோற்கடிக்கப்பட்டுச் சிறை செய்யப்பட்டுப் பின் அதிலிருந்து தப்பி வந்து வேந்தனாக ஆகிறான்.

    அதன்பின் கி.மு. 175 வாக்கில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் முசிறி முற்றுகையிடப்படுகிறது. சுமார் 20 வருடங்கள் ஆண்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது கிட்டத்தட்ட கி.மு.185-கி.மு.165 வரை எனலாம். சோழன் இரண்டாம் கரிகாலனும், சேரன் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் இவனது சமகால வேந்தர்கள் ஆவர். இரண்டாம் தூமகேது தோன்றிய கி.மு. 163 என்கிற காலவரையறையும், கலிங்கமன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டுக் காலமும்(கி.மு. 165) இவர்கள் மூவருக்கும் இறுதிக்காலமாக ஆகிறது எனலாம். இவர்களது காலத்தில் வடக்கே சாதவாகனர்களின் சதகர்ணியும் (கி.மு.180-கி.மு.124), கலிங்க மன்னன் காரவேலனும்(கி.மு.180-கி.மு.165) ஆண்டனர். கி.மு.187இல் மௌரியர்கள் வீழ்ந்து, மகதம் சுங்கவம்சத்து(கி.மு.187-கி.மு.75) புசுய மித்திரனால் ஆளப்படுகிறது.

    தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும், இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனையும் நக்கீரர் பாடியுள்ளார். ஆதலால் இந்த நெடுஞ்செழியனுக்குப்பின்(கி.மு.165) பாண்டிய வேந்தனாக ஆட்சிக்கு வந்தவன் இந்த நன்மாறனே ஆவான். இவன் எட்டாம் காலகட்டம் ஆவான். இதேகாலத்தில் உக்கிரப்பெருவழுதி அரசனாக ஆகிறான், வேந்தனாக அல்ல. உக்கிரப்பெருவழுதி வெளியிட்ட தலைவடிவ நாணயங்கள் கிடைத்துள்ளன. அவைகளின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி, அதாவது கி.மு. 135-கி.மு.100 ஆகும். இந்த நன்மாறனை ஏழாம் காலகட்ட நக்கீரர், எட்டாம் காலகட்ட மதுரை இளநாகனார், ஒன்பதாம் காலகட்ட ஆவூர் மூலங்கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். ஆகவே இவன் கிட்டத்தட்ட கி.மு.165-கி.மு.145 வரை, சுமார் 20 ஆண்டுகள் வேந்தனாக இருந்தான் எனலாம்.

    இவனுக்குப் பின் உக்கிரப்பெருவழுதி கிட்டத்தட்ட கி.மு.145-கி.மு.130 வரை சுமார் 15 ஆண்டுகள் வேந்தனாக ஆண்டான். அக்காலத்தில்தான் இந்தத் தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவன் அகநானூற்றைத் தொகுத்தவன். அதன் காரணமாகவே இவனுக்குப்பின் வந்த புலவர்கள் அகநானூற்றில் பாடவில்லை என்பதோடு 9ஆம், 10ஆம் காலகட்ட வேந்தர்கள், அரசர்கள் இதர ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் அகநானூற்றில் பாடப்பட வில்லை. 9ஆம், 10ஆம் காலகட்ட ஆட்சியாளர்கள் பெரும்பாலும் புறநானூற்றில் தான் பாடப்பட்டுள்ளனர். இவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆவான். அவன் சுமார் கி.மு.130-கி.மு.120 வரை 10 ஆண்டுகள் ஆண்டதாகக் கொள்ளலாம். இவன் 9ஆம் காலகட்டம் ஆவான். இவனை சீத்தலைச் சாத்தனார் என்கிற புலவர் மட்டுமே பாடியுள்ளார். இவனுக்குப்பின் வந்தவன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி ஆவான். இவனும் சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனும் நண்பர்களாக இருந்துள்ளனர். இவன் சுமார் கி.மு.120-கி.மு.105 வரை 15 வருடங்கள் வேந்தனாக இருந்தான். இவனும் தலைவடிவப் பெருவழுதி நாணயங்களை வெளியிட்டவன் ஆவான். இவனும் 9ஆம் காலகட்டமே ஆவான். உக்கிரப்பெருவழுதியும், இவனும் வெளியிட்ட தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பது ஒரு மிகமுக்கியமான கால வரையறையாகும்.

    இவனுக்குப்பின் வந்த கூடகாரத்துஞ்சிய மாறன் வழுதிதான் சங்ககாலத்தின் கடைசிப்பாண்டியவேந்தன் ஆவான். இவன் முத்தொள்ளாயிரப் பாடலில் இடம் பெற்றவன். சோழன் நலங்கிள்ளி, குட்டுவன் கோதை ஆகியவர்களின் சமகாலத்தவன். ஆதலால் இவன் காலம் 10ஆம் காலகட்டம் ஆகும். முத்தொள்ளாயிரம் கி.மு. 75வாக்கில் எழுதப்பட்டதாகும். அதன்பின் இவன் 5ஆண்டுகள் இருந்தான் எனக் கொண்டும், இவன் எட்டாம் காலகட்ட மதுரை மருதன் இளநாகனாராலும், 9ஆம் காலகட்ட ஐயூர் முடவனாராலும் பாடப்பட்டவன் என்பதாலும் இவன் காலத்தை சுமார் கி.மு.105-கி.மு.70 எனக்கொள்ளலாம். இவனுக்கு முந்தைய பெருவழுதி நாணயங்களின் காலமும், இவனது சமகாலச் சோழன் நலங்கிள்ளியின் வடநாட்டுப் படையெடுப்புக்காலமும், குட்டுவன் கோதையின் நாணயங்களின் காலமும் இவனது காலத்தை உறுதிப்படுத்துகின்றன.

    தமிழகத்தின் மீதான மௌரியப்படையெடுப்புக்கு முன்பின் ஆண்ட பாண்டியன் முதுகுடுமிப்பெருவழுதியின் ஆட்சி தொடங்கும் கி.மு. 320 முதல், உச்சயினியை வென்ற சோழன் நலங்கிள்ளியின் காலத்தில் பாண்டியநாட்டை ஆண்ட மாறன் வழுதியின் ஆட்சிமுடியும் சுமார் கி.மு. 70 வரையான 250 ஆண்டுகளில் 13 பாண்டிய வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதல் பாண்டிய வேந்தன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியையும்(கி.மு.350-கி.மு.320) சேர்த்து மொத்தம் 14 பாண்டிய வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதுகுடுமியின் பெருவழுதி நாணயங்கள், கொற்கைப்பாண்டியர்கள் வெளியிட்ட செழியன் நாணயங்கள், இறுதிக்காலப் பாண்டியர்கள் வெளியிட்ட தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், இலக்கியக் கணிப்புகள், சமகால சேர, சோழ வேந்தர்களின் உறுதிப்படுத்தப்பட்ட காலவரையறை ஆகியவைகள் இந்த கி.மு.350-கி.மு.70 வரையான 280 ஆண்டுகளில் ஆண்ட 14 பாண்டிய வேந்தர்களின் காலத்துக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன. ஆகவே தனிப்பட்ட வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளில் ஒருசில ஆண்டுகள் முன்பின் இருந்தாலும், முதல் பாண்டிய வேந்தன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி முதல் இறுதிப்பாண்டியன் மாறன் வழுதி வரையான 14 பாண்டிய வேந்தர்களின் காலம் என்பது சுமார் கி.மு.350-கி.மு.70 வரையான 280 ஆண்டுகள் என்பது இந்திய, உலக வரலாற்றுச் சான்றாதாரங்களைக் கொண்ட ஒரு உறுதியான காலவரையறையை உடையது எனலாம்.

    பார்வை:

    1.செழிய, செழியன் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பப்ளிசர்ஸ், ஏப்ரல்-2014, பக்: 54-57.

    Share
  • பழந்தமிழக வரலாறு – 15

    கணியன்பாலன்

     

    ஆ.சோழவேந்தர்கள்

    முதலில் சேரவேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் நிர்ணயிக்கப் பட்டு அதன்பின் அவர்களின் சமகாலச் சோழ, பாண்டிய வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டன. சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள், பதிற்றுப்பத்துப்பதிகத்தில் உள்ள சேர வேந்தர்களின் மொத்த ஆட்சி ஆண்டுகளைக் கொண்டும், தூமகேது தோன்றியதைக்கொண்டும், புகளூர்க் கல்வெட்டு, அந்துவன் கல்வெட்டு, சம்பைக்கல்வெட்டு, கொல்லிப்பொறைக் கல்வெட்டு, பிட்டந்தைமகள்கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளைக் கொண்டும், மாக்கோதை, குட்டு வன் கோதை போன்றோரின் நாணயங்களைக் கொண்டும் ஓரளவு முறையான வரலாற்றுத்தரவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆதலால் சேர வேந்தர்களுக்கான ஆட்சி ஆண்டுகள் பிற சமகாலச் சோழ, பாண்டிய வேந்தர் களின் ஆட்சியாண்டுகளை நிர்ணயிக்கப் பெருமளவு பயன் பட்டன எனலாம்.

    மௌரியப் படையெடுப்பு கி.மு. 297வாக்கில் தீவிரப்படுத்தப் படுகிறது. கி.மு. 295வாக்கில் தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி சோழன் இளஞ்சேட்சென்னி தலைமையில் வலுப்படுத்தப் படுகிறது. அதற்குச்சுமார் 10 ஆண்டுகளுக்குமுன் சோழன் இளஞ்சேட் சென்னி வேந்தன் ஆகிறான் எனவும், அதற்கு முன் அவனது தந்தை பெரும்பூட்சென்னி வேந்தனாக சுமார் 30 வருடங்கள் இருந்தான் எனவும்கொண்டு அவனது ஆட்சிக் காலம் என்பது ஏறக்குறைய கி.மு.335-305 வரை எனக்கணிக்கப்பட்டது. இளஞ்சேட்சென்னி செருப்பாழிப் போருக்குப் (கி.மு.288) பின், சிறிதுகாலத்தில் இறந்துவிடுகிறான் என்பதால் இளஞ்சேட் சென்னியின் ஆட்சிக்காலம் என்பது கிட்டத்தட்ட கி.மு. 305-285 வரை எனக் கணிக்கப்பட்டது.

    கி.மு. 285 வாக்கில் அவனது மகன் முதல் கரிகாலன் பெரும்போராட்டத்துக்குப்பின் முதல் வெண்ணிப்பறந்தலைப்போரை நடத்தி புகாரின் அரசன் ஆகிறான். இலக்கியக் கணிப்புப்படி, அவன் முதல், இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போர்களையும், இறுதியாக வாகைப் பறந்தலைப் போரையும் நடத்தி சுமார் 35 ஆண்டுகள் வேந்தனாக இருந்து கி.மு. 250வாக்கில் இறக்கிறான். அவனது இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப்போர் கி.மு. 275 வாக்கில் சேரலாதன் இமயவரம்பனோடு நடக்கிறது. அவனது வாகைப் பறந்தலைப்போர் பிந்துசாரன் இறந்தபின் கி.மு. 270 வாக்கில் நடைபெறுகிறது. ஆதிமந்தி அவனது மகள் ஆவாள். அவள் வளர்ந்து அவனது கணவன் ஆட்டனத்தியை மணந்த பின்னும் சிலகாலம், முதல் கரிகாலன் அரசாண்டு வந்துள்ளான் என்பது பரணரின் பாடல் மூலம் தெரிகிறது(அ-376). அவன் புகாரின் அரசன் ஆன போது(கி.மு. 285) இளவயது இளைஞனாக இருந்தான். ஆகவே அவன் அதன்பின் 35 ஆண்டுகள் ஆண்டான் எனக்கொண்டு அவனது ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 285-250 எனக்கணிக்கப்பட்டது. இவனது சமகாலத்தில் இமயவரம்பனும், பல்யானைச்செல்கெழு குட்டுவனும், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் சேர வேந்தர்களாக இருந்தனர் என்பதால் அவர்களின் வேந்தர் ஆட்சி ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்பட்டன.

    முதல் கரிகாலனது மகன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி 4ஆம், 5ஆம் காலகட்டங்களில் வேந்தனாக இருந்து, சுமார் 40 ஆண்டுகாலம் ஆண்டு, கி.மு. 210வாக்கில் இறக்கிறான். இவனது சமகால சேர வேந்தர்கள் சேரன் செங்குட்டு வனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆவர். பெருங்குன்றூர் கிழார் கி.மு. 184வரை வாழ்ந்த சேரன் இளஞ்சேரல் இரும்பொறை குறித்த 9ஆம் பதிற்றுப் பத்தைப்பாடியவர். அவராலும் 5ஆம் பதிற்றுப்பத்தைப்பாடிய பரணராலும் இவன் பாடப்பட்டவன் என்பதால் இவன் நீண்டகாலம் ஆண்டவன் என ஆகிறது. சேரன் செங்குட்டுவனின் நேரிவாயில் போருக்குப்(கி.மு. 225) பின்னர் சிலவருடங்கள் கழித்துத்தான் இவனுக்கு இரண்டாம் கரிகாலன் பிறக்கிறான். ஆதலால் நேரிவாயில் போருக்குப்பின் இவனது ஆட்சிக்காலம் சுமார் 15 ஆண்டு கள் இருந்துள்ளது எனக்கொண்டு இவனது வேந்தர் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 250-210 எனக் கணிக்கப்பட்டது.

    சேரன் செங்குட்டுவன் கி.மு. 225வாக்கில் நேரிவாயிலில் போர் நடத்தி சோழன் கிள்ளிவளவனை உறையூர் அரசனாக ஆக்குவதோடு, உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னிக்குப்பின் கிள்ளிவளவன் சோழவேந்தனாக ஆவதற்கும் ஏற்பாடு செய்கிறான். அப்பொழுது உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னிக்கு மகன் இல்லை. அதன் காரணமாக கி.மு. 210வாக்கில் கிள்ளிவளவன் புகாரில் சோழவேந்தனாக ஆகிறான். இவன் 6ஆம் காலகட்டம் ஆவான். கி.மு. 199வாக்கில் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையால் புகாரை இழந்த அவன் அதனை மீட்டு, கோசர்களோடும் அதன்பின் பாண்டியன் பழையன் மாறனோடும் போரிட்டு மதுரையைக் கைப்பற்றுகிறான்(கி.மு. 193). அதன்பின் ஓரிரு வருடங்களில், அதாவது கி.மு. 190வாக்கில் இறந்துவிடுகிறான். அவன் கிட்டத்தட்ட கி.மு. 210-190வரை 20 ஆண்டுகள் வேந்தனாக இருந்துள்ளான்.

    அதன்பின் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகனான ஏழாம்காலகட்ட இரண்டாம் கரிகாலன் புகாரின் அரசனாக ஆகிறான். கி.மு. 188வாக்கில் நடந்த மூன்றாம் வெண்ணிப் பறந்தலைப் போரின் மூலம் இவன் சோழ வேந்தனாக ஆகிறான். இவன் தொண்டைமான் இளந்திரையன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை போன்றவர்களின் சமகாலத்தவன். இவனது காலத்துக்கு முன்னரே கடையேழு வள்ளல்களும் இறந்து விடுகின்றனர். அவர்களைப்பாடிய பெருஞ்சித்தரனாரும் அவர்களுக்குப்பின் வந்த குமணனும் இவன் காலத்தவர்களாக இருந்துள்ளனர். இவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையிலும், முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுப்படையிலும் பாடியுள்ளனர். இவன் பெருவேந்தனாக இருந்து காவிரியில் கல்லணை கட்டியவன். கி.மு. 180 வாக்கில் இவன் வடதிசை படையெடுத்து தக்காணப்பகுதியை தமிழரசுகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். அது சாதவாகன அரசன் சதகர்ணி, கலிங்கமன்னன் காரவேலன் ஆகியவர்களின் தொடக்க ஆண்டுகள் ஆகும். ஔவையார் தனது 90ஆம் வயதில் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி, சேரன் மாரிவெண்கோ ஆகிய மூவரையும் கி.மு. 165வாக்கில் வாழ்த்திப்பாடியுள்ளார். ஔவையார் பாடியதற்குச் சில வருடங்களுக்கு முன்பே, அதாவது கி.மு. 170 வாக்கில் இரண்டாம் கரிகாலன் இறந்துவிடுகிறான்.  ஆதலால் அவனது ஆட்சி ஆண்டுகள் கிட்டத்தட்ட கி.மு. 190-170 எனக்கொண்டு, கி.மு. 170 வாக்கில் எட்டாம் காலகட்டச் சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி சோழ வேந்தன் ஆனான் எனலாம்.

    இந்த இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி கி.மு. 168வாக்கில் மலையமானின் உதவியோடு யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைத் தோற்கடிக் கிறான். ஔவையார் கி.மு. 165வாக்கில் இவன் வேந்தனாக இருந்தபோதுதான் இவனையும் உக்கிரப்பெருவழுதியையும் மாரிவெண்கோவையும் வாழ்த்திப் பாடி யுள்ளார். இவன் கணைக்கால் இரும்பொறையைக் கைதுசெய்து சிறையில் அடைத்த ஆண்டு என்பது சுமார் கி.மு. 150 ஆகும். இவனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் கோக்கோதை மார்பன் சேரவேந்தனாக இருந்துள்ளான். பொறையர்குலச் சேரர் களின் இறுதி ஆண்டான கி.மு. 150க்குப்பின் 5 ஆண்டுகள் இவன் ஆண்டதாகக் கொண்டால், மொத்தம் 25 ஆண்டுகள் ஆண்ட இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி யின் வேந்தர் ஆட்சியாண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 170-145 ஆகும்.

    அதன்பின் 9ஆம் காலகட்ட குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் வேந்தன் ஆகி சுமார் 25 ஆண்டுகள் ஆள்கிறான். அவன் சிறுகுடிகிழான் பண்ணன் என்கிற 8ஆம் காலகட்டப் பாண்டியர் தலைவனைப் பாடியுள்ளான். இவன் கி.மு. 135வாக்கில் கரூரை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றிக் கொள்கிறான். சேரன் மாக்கோதை அதேஆண்டில் அதாவது கி.மு. 135வாக்கில் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தச் சோழனோடு சமாதானம் செய்துகொண்டான். குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை,

    பெரும்புலவர் கோவூர்கிழார் அவர்களையும் சேர்த்து ஒன்பது புலவர்கள் பாடியுள்ளனர். இவனுக்குப்பின் வந்த பெருந்திருமாவளவன் என்பவன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியின் சமகாலத்தவன் ஆவான். வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி வெளியிட்ட நாணயங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி(கி.மு.120-100) ஆகும். ஆதலால் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளிக்குப் (கி.மு.170-145) பின்பும் பெருந்திருமாவளவனுக்கு(கி.மு.120) முன்பும் ஆண்ட குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் வேந்தர் ஆட்சியாண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 145-கி.மு.120 ஆகும். அதன்பின் ஆட்சிக்கு வந்த குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனை 9ஆம் காலகட்ட உறையூர் மருத்துவர் தாமோதரனாரும், 10ஆம் காலகட்டக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனாரும் பாடியுள்ளனர். அதுபோக இந்தப்பெருந்திருமாவளவனும், வெள்ளியம்பலத்துத்  துஞ்சிய பெருவழுதியும் ஒன்றாக இருந்தபொழுது 8ஆம் காலகட்டக் காவிரிப் பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் பாடியுள்ளார். ஆதலால் இவன் சுமார் 20 ஆண்டுகள்(கி.மு.120-100) வேந்தனாக இருந்தான் எனலாம்.

    இறுதியாக 10ஆம் காலகட்டச் சோழன் நலங்கிள்ளி, சுமார் கி.மு. 85-கி.மு.80 வாக்கில் மகத அரசை ஆண்ட சுங்கவம்சத்தின் உச்சயினி மீது படையெடுத்து வெற்றி கொள்கிறான். முத்தொள்ளாயிரம் நூல் இவனது உச்சயினி படையெடுப்பு குறித்துப் பேசுகிறது. டி.டி. கோசாம்பி அவர்கள் தனது பண்டைய இந்தியா என்கிற நூலில் தந்த தகவல் இந்தப் படையெடுப்பை நடத்தியவன் சோழன் நலங்கிள்ளி தான் என்பதை உறுதி செய்கிறது. இவன் சேரன் குட்டுவன் கோதையின் சம காலத்தவன். இவன் கி.மு. 100வாக்கில் தனது ஆட்சியைத் தொடங்கி சுமார் 25 ஆண்டுகள் ஆண்டான் என்பதால் இவனது ஆட்சியாண்டுகளை கி.மு.100-கி.மு.75 எனலாம். இவனுக்குப்பின் இவனது மகன் இளஞ்சேட்சென்னி, நலங்கிள்ளி சேட்சென்னி எனப்பெயர்கொண்டு சுமார் கி.மு.50வரை ஆள்கிறான். அவனது வேந்தர் ஆட்சியாண்டுகள் கிட்டத்தட்ட கி.மு.75-கி.மு.50 ஆகும். அவனே கடைசிக்காலச் சங்ககாலச்சோழ வேந்தன் ஆவான்.

    மௌரியப்பேரரசு கி.மு. 297இல் தமிழகத்தின் மீதான படையெடுப்பைத் தீவிரப்படுத்தி கி.மு. 295வாக்கில் பாழிநகரைக் கைப்பற்றியது. அதனால் சோழன் இளஞ்சேட்சென்னி தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியை வலுப்படுத்தி மௌரியப்படையை கி.மு. 288வாக்கில் தமிழகத்திலிருந்து துரத்தியடிக்கிறான். இவனது வேந்தர் ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 305-கி.மு.285 ஆகும். இவை மாமூலனார் போன்ற சங்கப்புலவர்களின் பாடல்களின் மூலமும் மௌரியப் பேரரசின் வரலாற்றிலிருந்தும் இன்னபிற பல்வேறுதரவுகளின் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்றே கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில் சுங்கவம்சத்தின் இறுதிக்காலத்தில் தெற்கேயிருந்து படையெடுத்த சோழன் நலங்கிள்ளி கி.மு.85-கி.மு.80 வாக்கில் உச்சயினியைத் தாக்கி வெற்றி கொண்டான். முத்தொள்ளாயிரம் நூலும், டி.டி. கோசாம்பியின் கூற்றுக்களும் இன்னபிற தரவுகளும் இதனை உறுதி செய்கின்றன. இவனது வேந்தர் ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 100-கி.மு. 75 வரையாகும். இவனுக்கு முன்னும், இவனுக்குச் சமகாலத்திலும் ஆண்ட சேர, பாண்டிய வேந்தர்கள் வெளியிட்ட நாணயங்களின் காலங்களும் இவனது ஆட்சிக்காலத்தை உறுதி செய்கின்றன. இவனுக்குப்பின் இவனது மகன் நலங்கிள்ளி சேட்சென்னி கி.மு. 75-50 வரை வேந்தனாக ஆண்டுள்ளான்.

    ஆகவே இரண்டாம் காலகட்டச் சோழன் செருப்பாழிஎறிந்த இளஞ்சேட் சென்னியின் ஆட்சி கி.மு. 305வாக்கில் தொடங்குகிறது. 10ஆம் காலகட்ட சோழன் நலங்கிள்ளியின் ஆட்சி கி.மு. 75வாக்கில் முடிகிறது. இந்த இரண்டு ஆண்டுகளும் இந்திய, உலக வரலாற்று காலங்களைக் கொண்டு உறுதியான அடித்தளத்தின் மீது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கி.மு. 305க்கு முன் முதல் சோழ வேந்தன் பெரும்பூட் சென்னியும்(கி.மு.335-305), கி.மு.75க்குப்பின் இறுதி வேந்தன்  நலங்கிள்ளி சேட்சென்னியும்(கி.மு.75-50) ஆண்டுள்ளனர். இந்த இரு சோழ வேந்தர்களையும் சேர்த்து மொத்தம் உள்ள 11 சோழ வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை நிர்ணயிப் பதில் பல்வேறு கல்வெட்டுகள், நாணயங்கள், வரலாற்றுக்குறிப்புகள் முதலியன கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே தனிப்பட்ட சோழ வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளில் ஒரு சில ஆண்டுகள் முன்பின் வேறுபாடுகள் இருந்தாலும், முதல் வேந்தனான பெரும்பூட் சென்னி முதல் இறுதி வேந்தனான நலங்கிள்ளி சேட்சென்னி வரையான 11 சோழ வேந்தர்களின் வேந்தர் ஆட்சி ஆண்டுகள் என்பது சுமார் கி.மு.335-கி.மு.50 வரையான 285 ஆண்டுகள் என்பது இந்திய, உலக வரலாற்றுச் சான்றாதாரங்களைக் கொண்ட ஒரு உறுதியான காலவரையறையை உடையவை எனலாம்.

    தொடருவோம்

    Share
  • பழந்தமிழக மூவேந்தர்களின் காலவரையறை – 14

    கணியன்பாலன்

     

    அ.சேர வேந்தர்கள்:

    மாமூலனார் பாடல்கள்தான் நமது கால நிர்ணயிப்புக்கான முதல் அடிப்படை ஆதாரங்களை வழங்குகின்றன. பண்டைய ஆதார சங்க இலக்கிய நூல்களில் மாமூலனாருக்கு முன் ஒரு தலைமுறையும், அவரது தலைமுறைக்குப்பின் 8 தலை முறைகளையும் நம்மால் இனங்காண முடிந்தது. முதல் காலகட்ட முதன்மைப் புலவராக குடவாயிற்கீரத்தனாரும் பத்தாம் காலகட்ட முதன்மைப்புலவராக கோவூர்கிழாரும் இருக்கின்றனர். மாமூலனார் இரண்டாம் காலகட்ட முதன்மைப் புலவராகிறார். நமக்குக் கிடைத்துள்ள பண்டைய ஆதார சங்க இலக்கிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள பத்து வரலாற்றுக் கால கட்டங்களும் கி.மு. 350 முதல் கி.மு 50 வரையான 300 வருட காலத்தைக் கொண்டதாகும். கிரேக்கவீரன் அலெக்சாந்தர் இந்தியாவை விட்டு வெளியேறிய கி.மு. 325க்கு ஒரு தலைமுறை முந்தைய காலம்(கி.மு. 350) முதல், சோழமன்னன் நலங்கிள்ளி உச்சயினிவரை படையெடுத்த காலத்திற்கு(கி.மு.75) பிந்தைய ஒரு தலைமுறை(கி.மு. 50) வரையான பத்து வரலாற்றுக் காலகட்டங்களே நமது சங்ககால வரலாற்றுக் காலகட்டங்கள்(கி.மு.350-50) ஆகும்.

    சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள்தான் முதலில் நிர்ணயம் செய்யப்பட்டன. இரண்டாம் காலகட்ட மாமூலனார் காலம் என்பது கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என முன்பே கணிக்கப்பட்டுள்ளது. அதாவது கி.மு. 325- கி.மு. 275 ஆகும். ஆதலால் முதல் காலகட்டம் என்பது கி.மு. 350 இல் இருந்தும், இரண்டாம் காலகட்டம் என்பது கி.மு. 320 இல் இருந்தும் தொடங்குகிறது. இமயவரம்பன் இரண்டாம் காலகட்டம் ஆவான். வின்சென்ட் சுமித் அவர்கள் கி.மு. 325-322 வரை வட இந்தியாவில் கலவரம் நடந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வட இந்தியாவில் கலவரம் நடந்தது என்பது நந்தர்கள் மௌரியர்களுக் கிடையேயான போர்போக, சேரலாதன் இமயவரம்பனின் படையெடுப்பாலும் இருக்கலாம் எனக்கொண்டு அவன் கி.மு. 325வாக்கில் முதல் காலகட்டத்தின் இறுதியில் வடநாடு படையெடுத்ததாகக் கொள்ளப்பட்டது. ஆதலால் அதற்கு இரு வருடங்களுக்கு முன் கி.மு. 327வாக்கில் அவனது தந்தை உதியன் சேரலாதன் இறந்து இமயவரம்பன் வேந்தனாக ஆனான் எனக் கணிக்கப்பட்டது. கி.மு. 163 என்பது வரலாற்றில் இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டாகும். அந்த வருடத்தில்தான் பத்தாம் பதிற்றுப்பத்தின் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்துபோகிறான். இது ஒரு முக்கிய காலவரையறையாகும்.. ஆதலால் பதிற்றுப்பத்தில் உள்ள சேரலாதன் இமயவரம்பன் முதல் பத்தாம் பதிற்றுப்பத்தின் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் வரையான வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் என்பது சுமார் கி.மு. 327இல் தொடங்கி கி.மு. 163இல் முடிகிறது என கணிக்கப்பட்டது.

    உதியன் முதல் தொடங்கும் குட்டுவர்களின்  இறுதி ஆட்சி ஆண்டு என்பது, சேரன் செங்குட்டுவன், சம்பைக் கல்வெட்டு வெட்டிய ஆண்டில்(கி.மு.220) இறந்தான் எனக்கொண்டும், அதன்பின் 8 ஆண்டுகள் மட்டுமே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சியில் இருந்தான் எனக்கொண்டும் சுமார் கி.மு. 212 என நிர்ணயிக்கப்பட்டது. கி.மு. 212 முதல் கி.மு. 163வரை 4 பொறையர்குலச் சேர வேந்தர்களும் அதன் பின் இறுதியாக 13 ஆண்டுகள் கணைக்கால் இரும்பொறையின் ஆட்சியும், ஆக மொத்தம் ஐந்து பொறையர்குலச் சேரர்களின் ஆட்சி சுமார் 62 ஆண்டுகள் இருந்ததாகக் கொண்டு, பொறையர்குலச் சேரர்களின் ஆட்சி கிட்டத்தட்ட கி.மு. 212வாக்கில் தொடங்கி, கி.மு. 150வாக்கில் முடிந்ததாகக் கொள்ளப்பட்டது.

    உதியனின் மகன் இமயவரம்பன் முதல் ஐந்து குட்டுவர்களின் ஆட்சியாண்டுகள் என்பது கி.மு.327-கி.மு.212 வரை எனவும். ஐந்து பொறையர்களின் ஆட்சி யாண்டுகள் என்பது கி.மு.212-கி.மு.150 வரை எனவும் கணிக்கப்பட்டது. இந்தக் கி.மு. 150வாக்கில் தான் கணைக்கால் இரும்பொறை சிறையிலிடப்பட்டு இறந்து போகிறான். மாக்கோதை வெளியிட்ட நாணயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பதாலும், குட்டுவன் கோதையின் நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு என்பதாலும், குட்டுவன் கோதை முத்தொள்ளாயிரம் நூலின் காலத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், இவன் உச்சயினியை வென்ற சோழன் நலங் கிள்ளியின் சமகாலத்தவன் என்பதாலும், இவனது ஆட்சிக்காலம் கி.மு.70வாக்கில் முடிவதாகக் கொள்ளப்பட்டது. ஆதலால் இறுதி மூன்று கோதை வேந்தர்களின் ஆட்சியாண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 150-கி.மு. 70 வரையான சுமார் 80 ஆண்டுகள் எனக்கணிக்கப்பட்டது.

    குட்டுவகுலச்சேர வேந்தர்கள்:

    கி.மு. 327வாக்கில், இமயவரம்பனின் வேந்தர் ஆட்சி தொடங்குவதாகக் கொள்ளப் பட்டது. அவன் மொத்தம் 58 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகப் பதிற்றுப்பத்து குறிப்பிட்டுள்ளது. அவனது ஆட்சி மௌரியப் படையெடுப்புக்குப்பின், முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போரில் முடிகிறது. அதன் காலம் கி.மு. 275 ஆகும். ஆகவே அவனது மொத்த ஆட்சிக்காலம் கி.மு. 333-275 எனக் கணிக்கப்பட்டது. ஆதலால் இமயவரம்பன் சுமார் 6 ஆண்டுகள் அரசனாகவும் 52 ஆண்டுகள் வேந்தனாகவும்(கி.மு.327-கி.மு.275) இருந்தான் என ஆகிறது. இவனுக்குமுன் இவனின் தந்தை உதியன் சேரலாதன் சேர வேந்தனாக சுமார் 20 ஆண்டுகள் ஆண்டான். ஆகவே அவனது வேந்தர் ஆட்சிக்காலம் கி.மு.347-கி.மு.327 ஆகும். இமயவரம்பனுக்குப் பின் அவனது தம்பி சுமார் 10 ஆண்டுகளும், மூத்த மகன் 15 ஆண்டுகளும் வேந்தர்களாக ஆண்டதாகக் கொண்டு செங்குட்டுவனின் வேந்தர் ஆட்சி கிட்டத்தட்ட கி.மு. 250-220 வரை எனக் கணிக்கப்பட்டது. செங்குட்டுவன் மொத்தம் 55 ஆண்டுகள் ஆண்டதாகப் பதிகம் கூறுகிறது. அசோகர் இறந்த ஆண்டு கி.மு. 232 என்பதால், செங்குட்டுவன் கி.மு. 232-228வாக்கில் தனது வடநாட்டுப்படையெடுப்பை நடத்துகிறான். அதன்பின் கிள்ளிவளவனுக்காக கி.மு. 225வாக்கில் நேரிவாயில் போரை நடத்துகிறான். அதன்பின் 5ஆண்டுகள் கழித்து கி.மு. 220வாக்கில் இறந்து விடுகிறான்.

    செங்குட்டுவன் மொத்தம் 55 ஆண்டுகள் ஆண்டதால் அவன் கி.மு. 275இல் இமயவரம்பன் இறந்தபோது அரசனாக ஆகிறான். அதேகாலத்தில் தான் அவனது தமையன் களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரலும் அரசனாகிறான். இமயவரம் பனின் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனும், மூத்த மகன் களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரலும் மூன்றாவது காலகட்டம் என்பதாலும் அவர்களது மொத்த ஆட்சிகள் பதிற்றுப்பத்துப்படி தலா 25 ஆண்டுகள் என்பதாலும் தம்பி 10 ஆண்டுகளும் மூத்தமகன் 15 ஆண்டுகளும் வேந்தர்களாக ஆண்டதாகக் கொண்டு அவர்களது ஆட்சிகள் கி.மு. 250க்குள் முடியமாறு கணிக்கப்பட்டது. களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் பெண்கொலைபுரிந்த நன்னனை, நன்னனூர் நன்னனை வெற்றி கொள்கிறான் என்பதும், இவன் பாலைபாடிய பெருங்கடுங்கோ இடம்பெற்றுள்ள புகளூர்க் கல்வெட்டுக்கு(கி.மு.295) ஒரு தலைமுறை பிந்தையவன் என்பதும் கணக்கில் கொள்ளப்பட்டு இவனது வேந்தர் ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 265-250 எனக் கணிக்கப்பட்டது. ஆதலால் இமயவரம்பனுக்கும் இவனுக்கும் இடையே இருந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் வேந்தர் ஆட்சிக்காலம், கிட்டத்தட்ட கி.மு. 275-265 எனக் கணிக்கப்பட்டது.

    அதன்பின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 8 ஆண்டுகளும், செல்வக் கடுங்கோ வாழியாதன் 7 ஆண்டுகளும் ஆண்டதாகக் கொள்ளப்பட்டது. இவை வேந்தர் ஆண்டுகள் தானே ஒழிய மொத்த ஆட்சி ஆண்டுகள் அல்ல. இலக்கியக் கணிப்புப் படி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், செல்வக் கடுங்கோவாழியாதனும் 5ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 5ஆம் காலகட்ட நள்ளி என்கிற கடையேழு வள்ளல்களில் ஒருவரைப்பாடிய காக்கை பாடினியார் நச்செள்ளையார்தான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை 6ஆம் பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார். பேகன், ஓரி, பாரி போன்ற வள்ளல்களின் சமகாலத்தவன் இவன். பதிற்றுப்பத்துப் பதிகப்படி இவனது மொத்தஆட்சி ஆண்டுகள் 38 ஆகும். இவன் சேரன் செங்குட்டுவன் வேந்தன் ஆனபோது (கி.மு.250) அரசனாக ஆக்கப்பட்டான். இவை அனைத் தையும் கணக்கில் கொண்டுதான் இவனது வேந்தர் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 220-212 எனக்கணிக்கப்பட்டது. ஆகவே கிட்டத்தட்ட கி.மு. 347-212 வரை, மொத்தம் ஆறு குட்டுவகுலச்சேரவேந்தர்கள் 135 ஆண்டுகள் ஆண்டனர் எனலாம்.

    பொறையர்குலச்சேர வேந்தர்கள்:

    செல்வக் கடுங்கோவாழியாதனை 7ஆம் பதிற்றுப்பத்தில் கபிலர் பாடியுள்ளார். அவர் 5ஆம் காலகட்டத்தின் முதன்மைப்புலவர் ஆவர். அவர் பாரியின் பறம்புப் போருக்குப்(கி.மு.215) பின் சில வருடங்கள் கழித்துத்தான் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடியுள்ளார். மூவேந்தர்களும் சேர்ந்துதான் பாரியை அழித் தனர். ஆதலால் பறம்புப்போரின்போது செல்வக்கடுங்கோ வாழியாதன் சேர வேந்தனாக இருந்திருக்க இயலாது. குட்டுவன் குலத்தில் வாரிசுகள் இல்லாததால் செல்வக்கடுங்கோவாழியாதன் கி.மு. 212வாக்கில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குப் பின் வேந்தன் ஆகிறான். இவன் கிமு. 230வாக்கில் அந்துவன் சேரலுக்குப்பின் கரூரில் பொறையர்குல சேர அரசன் ஆவதாலும், இவனது மொத்த ஆட்சி ஆண்டுகள் என்பது பதிற்றுப்பத்துப்பதிகப்படி 25 ஆண்டுகள் என்பதாலும் இவன் 205வரை வேந்தனாக இருந்தான் எனலாம். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டுதான், இவனது வேந்தர்ஆட்சி ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 212-205 எனக் கணிக்கப்பட்டது.

    அதன்பின் கி.மு. 205வாக்கில் இருந்து தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையின் ஆட்சி தொடங்குகிறது. அதியமானின் திருக்கோவிலூர் போருக்குப் பல ஆண்டுகள் கழித்துத்தான் தகடூர் போர் நடக்கிறது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆட்சியேற்றபின் தான் இப்போர் தொடங்குகிறது. அவன் ஆட்சியேற்ற இரு வருடங்களில் தொடங்கிய இப்போர் சுமார் 3 வருடம் நடக்கிறது(கி.மு.203-கி.மு.200). அதன்பின் புகார்ப் போர் (கி.மு. 199)நடக்கிறது. இலக்கியக்கணிப்புப்படி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும், இளஞ்சேரல் இரும்பொறையும் 6ஆம் காலகட்டம் ஆவர். பதிற்றுப்பத்துப்பதிகப்படி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மொத்த ஆட்சிக்காலம் 15 ஆண்டுகள் என்பதாலும், செல்வக்கடுங்கோ வாழியாதன் வேந்தன் ஆன சுமார் இரு ஆண்டுகள் கழித்து(கி.மு. 210) பெருஞ்சேரல் இரும்பொறையை அரசனாக்கினான் என்பதாலும் அவனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது ஏறக்குறைய கி.மு. 205-கி.மு. 195 என ஆகிறது. அதன்பின் ஆட்சிக்கு வந்த 6ஆம் காலகட்ட இளஞ்சேரல் இரும்பொறை கி.மு. 200வாக்கில் தகடூர் போருக்குப்பின் அரசனாக்கப்படுகிறான். சுமார் கி.மு. 195வாக்கில் வேந்தன் ஆகிறான். பதிகப்படி இவனது மொத்த ஆட்சி ஆண்டுகள் 16 என்பதால் இவனது வேந்தர் ஆட்சி கி.மு. 184வாக்கில் முடிவடைகிறது. ஆகவே இவனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது கி.மு.195 – 184 ஆகும்.

    கி.மு. 184 முதல் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சி நடைபெறுகிறது. இலக்கியக் கணிப்புப்படி இவன் 7ஆம் காலகட்டம் ஆகிறான். இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டு(கி.மு.163), இவன் இறக்கிறான். ஆதலால், இவனது வேந்தர் ஆட்சிக் காலம் என்பது கி.மு. 184 முதல் கி.பி. 163 வரை ஆகும். இவனைத் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் கி.மு. 182வாக்கில் தோற்கடித்து கைது செய்து சிறையில் அடைக்கிறான். இவன் தப்பித்து வந்து மீண்டும் சேர வேந்தன் ஆகிறான். இவன் காலத்தில்தான் முசிறியைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் முற்றுகையிடுகிறான். இவன் இரண்டாம் கரிகாலன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், தொண்டைமான் இளந்திரையன் போன்றவர்களின் சமகாலத்தவன் ஆவான்.இவனுக்குப்பின் எட்டாம் காலகட்டக் கணைக்கால் இரும்பொறை கி.மு. 163 முதல் சுமார் 13 ஆண்டுகள் ஆட்சி செய்கிறான். கி.மு. 150வாக்கில் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியிடம் போரில் தோற்று, அவனால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இறந்து போகிறான். இவனைப் பொய்கையார் பாடியுள்ளார். இவன் கிட்டத்தட்ட கி.மு. 163-150வரை சேரவேந்தனாக இருந்தான். இவனே கடைசிப் பொறையர்குலச் சேரவேந்தன் ஆவான். ஆகவே கிட்டத்தட்ட கி.மு. 212-கி.மு. 150வரை 62 ஆண்டுகள், 5 பொறையர்குலச் சேரவேந்தர்கள் ஆண்டனர் எனலாம்.

    கோதைகுலச் சேர வேந்தர்கள்:

    அதன்பின் கோதைகுலச் சேரர்களின் ஆட்சி நடைபெறுகிறது. இலக்கியக் கணிப்புப்படி கோக்கோதை மார்பன், மாக்கோதை, குட்டுவன் கோதை ஆகிய மூவரும் சுமார் கி.மு. 150-கி.மு. 70வரை ஆள்கின்றனர். கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை வெளியிட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. அதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்கிறார் நடன. காசிநாதன் அவர்கள். ஒரு நூற்றாண்டை தொடக்கப்பகுதி, இடைப்பகுதி, இறுதிப்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 30-35 ஆண்டுகள் எனக்கொள்ளலாம். அதன்படி கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பது கி.மு. 135-கி.மு. 100 வரையான காலம் ஆகும். அதுதான் மாக்கோதையின் ஆட்சிக்காலம் ஆகும். இவனுக்கும் கணைக்கால் இரும்பொறைக்கும் இடையே இருந்தவன் தான் கோக்கோதை மார்பன் ஆவான். கணைக்கால் இரும்பொறையின் ஆட்சி கி.மு. 150வாக்கில் முடிந்து, மாக்கோதையின் ஆட்சி கி.மு. 135வாக்கில் தொடங்குவதால் இடைப்பட்ட கோக்கோதை மார்பனின் ஆட்சி என்பது கி.மு. 150-கி.மு. 135 ஆகும். கடைசி வேந்தன் குட்டுவன் கோதையின் நாணயங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அதன்காலம் கி.மு. முதல்நூற்றாண்டின் முதல்பகுதி எனக் கருதப்படுகிறது. மேலும் அவன் முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றவன். சோழன் நலங்கிள்ளிக்குச் சமகாலத்தவன். மேலும் பிட்டனின் மகன் பிட்டன் கொற்றன் இவனுக்குப் படைத்தலைவனாக இருந்தவன். இவனது காலத்தைச் சேர்ந்த பிட்டனின் மகள் வெட்டிய கல்வெட்டுக்காலம் சுமார் கி.மு. 85 ஆகும். ஆகவே இவைகளைக் கொண்டு இவனது வேந்தர் ஆட்சிக் காலம் கிட்டத்தட்ட கி.மு. 100-கி.மு. 70 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவ்விதமாகக் கோதைகுலச் சேரவேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டன.

       சேரவேந்தன் இமயவரம்பனின் வேந்தர் ஆண்டு என்பது அவன் வடநாடு படையெடுத்துச்செல்வதற்கு(கி.மு.325) 2 ஆண்டுகள் முன்பு கி.மு. 327வாக்கில் தொடங்குகிறது. அதன் கடைசிச் சேரவேந்தன் குட்டுவன் கோதையின் ஆட்சி யாண்டு கி.மு. 70வாக்கில் முடிகிறது. இந்த இடைப்பட்ட சுமார் 257 ஆண்டு களில் 13 சேர வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதல் சேர வேந்தன் உதியனையும் சேர்த்து மொத்தம் 14 சேர வேந்தர்கள் ஆண்டுள்ளனர். ஆகவே தனிப்பட்ட சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளில் ஒருசில ஆண்டுகள் முன்பின் இருந்தாலும், முதல் வேந்தனான சேரன் உதியன் முதல் இறுதி வேந்தனான குட்டுவன் கோதை வரையான 14 சேர வேந்தர்களின் வேந்தர் ஆண்டுகள் என்பது சுமார் கி.மு.347-கி.மு.70 வரையான 277 ஆண்டுகள் என்பது இந்திய, உலக வரலாற்று சான்றாதாரங்களைக் கொண்ட ஒரு உறுதியான காலவரையறையை உடையது எனலாம்.

    Share
  • பழந்தமிழக வரலாறு – 13

    பதிற்றுப்பத்தும், பதிகமும், சேர வேந்தர் ஆண்டுகளும்

          பதிற்றுப்பத்துப் பதிகம் குறிப்பிடும் மொத்த ஆட்சி ஆண்டுகளை அரசனாக இருந்த ஆண்டுகள், வேந்தனாக இருந்த ஆண்டுகள் என இரு பகுதிகளாகக் கணிக்கப்பட்டன. இமயவரம்பனின் தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன், அவனது மகன்கள் களங்காய் கண்ணி நார்முடிச் சேரல், சேரன்செங்குட்டுவன் ஆகியோர் முறையே 25, 25, 55 ஆண்டுகள் ஆண்டதாகப் பதிகம் குறிப்பிடுகிறது. இவை அவர்கள் அரசனாகவும் வேந்தனாகவும் இருந்த மொத்த ஆட்சி ஆண்டுகள் ஆகும். இமயவரம்பன் கிட்டத்தட்ட கி.மு. 275வாக்கில் இறக்கிறான். இமயவரம்பனுக்குப் பின் கி.மு. 275இல் வேந்தனாக ஆன அவனது தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன்  10 ஆண்டுகள் வேந்தனாகவும், 15 ஆண்டுகள் அரசனாகவும்(கி.மு.290 முதல்) இருந்தான் எனக் கணிக்கப்பட்டது. இமயவரம்பன் இறந்த போது கி.மு. 275வாக்கில், அவனது மகன்கள் களங்காய்கண்ணி நார்முடிச்சேரல், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் அரசனாக்கப்படுகின்றனர். 10 ஆண்டுகள் கழித்து, அவனது தம்பி இறந்தபின் இமயவரம்பனின் மூத்த மகன் கி.மு. 250 வரை, 15 ஆண்டுகள் வேந்தனாக இருக்கிறான். அதன்பின் இமயவரம்பன் இறந்து 25 ஆண்டுகள் கழித்து கி.மு. 250இல் சேரன் செங்குட்டுவன் வேந்தனாக ஆகி 30 ஆண்டுகள் வேந்தனாக ஆண்டான். அதன்பின் அவனது கடைசிமகன் ஆடுகோட்பாட்டு சேரலாதன் 8 ஆண்டுகள் மட்டுமே வேந்தனாக இருந்தான். பதிகம் குறிப்பிடும் மொத்த ஆட்சி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்ட, அரசர், வேந்தர் ஆட்சி ஆண்டுகள் குறித்த கீழ்க்கண்ட அட்டவணை, இக்கணிப்பு குறித்த ஒரு தெளிவைத்தரும்.

     

    வேந்தன்பெயர்        மொத்தஆண்டு   அரசர்ஆண்டு    வேந்தர்ஆண்டு

    1.இமயவரம்பன்       333-275=58       333-327=6        327-275=52

    2.அவனதுதம்பி        290-265=25       290-275=15       275-265=10

    3.மூத்தமகன்          275-250=25       275-265=10       265-250=15

    4.செங்குட்டுவன்       275-220=55       275-250=25       250-220=30

    5.கடைசிமகன்         250-212=38       250-220=30       220-212=8

    மொத்த ஆண்டுகள்    201             86              115

    பொறையர் குலச்சேர வேந்தர்கள்:

    1.செல்வக்  வாழி.           230-205=25       230-212=18       212-205=7

    2.பெருஞ்   பொறை    210-195=15       210-205=5        205-195=10

    3.இளஞ்    பொறை    200-184=16       200-195=5        195-184=11

    மொத்த ஆண்டுகள்    56              28              28

         உதியனின் மகன்கள் இருவரும்(இமயவரம்பனும் அவனது தம்பியும்), அவனது பேரன்கள் மூவரும்(இமயவரம்பனின் மகன்கள்) சேர்ந்து பதிற்றுப்பத்துப்படி மொத்தம் 201 ஆட்சி ஆண்டுகள் ஆண்டுள்ளனர். இதில் ஒருவன் வேந்தனாக இருந்த போது மற்றவர்கள் அரசர்களாக இருந்துள்ளனர். இவர்களது வேந்தர் ஆட்சி ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட 115 ஆண்டுகள் ஆகும். இந்த வேந்தர் ஆட்சி ஆண்டுகளைத்தான் காலக் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளமுடியும். இமயவரம்பன் சோழன் மகள் மணக்கிள்ளியை இரண்டாவது மனைவியாக மணந்தபின்,  அவனது 50ஆவது வயதில் சேரன் செங்குட்டுவன் அவனுக்கு மகனாகப் பிறக்கிறான். அதன் பின் ஆடுகோட்பாட்டு சேரலாதன் பிறக்கிறான்.

            கி.மு. 232 வாக்கில் அசோகர் இறந்தார் என்பதாலும், கி.மு. 230 வாக்கில் சாதவாகனர்கள் தனி ஆட்சியை நிறுவினர் என்பதாலும் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பு என்பது கி.மு. 232-228 வாக்கில்தான் நடந்தது எனலாம். சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப்படையெடுப்பு, சாதவாகனர்கள் தனி ஆட்சியை நிறுவக் காரணமாக அமைந்தது. பரணரால் சேரன் செங்குட்டுவன் பாடப்பட்டவன்; அதியமான் காலத்தில் வாழ்ந்தவன்;  வடநாட்டுப் படையெடுப்புக்குப் பின்னரே சோழன் கிள்ளிவளவனுக்கு உதவ நேரிவாயில் போர் இவனால் நடத்தப்பட்டது; அவன் இறந்த ஆண்டும், சம்பை கல்வெட்டின் ஆண்டும் கிட்டத்தட்ட கிமு. 220 ஆகும். கொல்லிமலை கைப்பற்றப் படுவதற்கும் திருக்கோவிலூர்போர் நடப்பதற்கும் சிறிது காலத்துக்குமுன் அவன் இறந்துவிடுகிறான்.

           7ஆம் காலகட்டம் வரையான சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை நிர்ணயிப்பதில் பதிற்றுப்பத்தின் மொத்த ஆட்சி ஆண்டுகளும், சங்கப்பாடல்களும் போக, நந்தர்கள்-மௌரியர்கள் ஆட்சிமாற்றம் கி.மு. 323 வாக்கில் நடந்தது; இந்தியாவின் வடபகுதியில் கி.மு. 325-322 வரை கலவரங்கள் நடந்தன; கி.மு. 272 வாக்கில் பிந்துசாரன் இறந்தான்; அதன்பின் 4 ஆண்டுகள் கழித்து அசோகன் கி.மு. 268 வாக்கில் முடி சூடினான்; கி.மு. 256 வாக்கில் அசோகன் கல்வெட்டுகள் வெட்டப்பட்டன; கிமு. 232 வாக்கில் அசோகர் இறந்தார்; கி.மு. 230 வாக்கில் சாதவாகனர்கள் தனி அரசை அமைத்தனர்; கி.மு. 220 வாக்கில் சம்பைக்கல்வெட்டு வெட்டப்பட்டது; கி.மு. 165 வாக்கில் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு வெட்டப்பட்டது; கி.மு. 163 வாக்கில் இரண்டாவது தூமகேது தோன்றியபோது யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இறந்தான் என்பன போன்ற வரலாற்றுச் செய்திகள், கி.மு. 327 முதல் கி.மு. 163 வரையான 2ஆம் காலகட்டம் முதல் 7ஆம் காலகட்டம் வரையிலான சேரஆட்சியாளர்களின் ஆண்டுகளை வரையறை செய்து அவைகளை நிர்ணயிப்பதில் மிக முக்கியப் பங்கை வகித்தன.

          சிலப்பதிகாரக் காப்பியம் மூலம் சாதவாகனர்களுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் தொடர்பு இருந்ததை,  அதில் சேரன் செங்குட்டுவன் பெரு வேந்தனாகவும், சாதவாகனர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டு, அவன் சொல்படி செயல்படுபவர்களாகவும் காட்டப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. மேலும் சேரன் செங்குட்டுவன் தனது இறுதிக்காலத்தில்தான் வடநாடு படையெடுத்தான் என்பதையும் அறிய முடிந்தது. இமயவரம்பன் தனது வேந்தர் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே வடநாடு படையெடுத்தான் என்பதை 2ஆம் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. இந்த ஒவ்வொரு செய்தியும் காலக்கணிப்பிற்கு பயனுள்ளதாக இருந்தது எனலாம்.

    தொடருவோம்

    Share
  • பழந்தமிழக வரலாறு – 12

    கணியன்பாலன்

            தமிழக வரலாற்றுக்கான காலவரையறைகள்

             நமது பழந்தமிழக வரலாறு இங்கு தரப்பட்டுள்ள இருபத்தொரு காலவரையறைகளைத் தனது வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படை வரலாற்று ஆதாரங்களையும், நமது சங்க இலக்கிய ஆய்வுகளையும் இணைத்து, இவை இரண்டின் அடிப்படையில்  பல புதிய கணிப்புகள் கண்டுணரப்பட்டு, நமது முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கான ஆண்டுகளும், காலகட்டங்களும்  கணிக்கப்பட்டன.

    1.கிரேக்கவீரன் அலெக்சாந்தர் கி.மு. 326 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்து, 19 மாதம் கழித்து கி.மு 325 வாக்கில் வெளியேறுகிறான்-(1).

    2.அலெக்சாந்தர் காலத்திலும் அவனுக்கு முன்னும் மகதத்தை நந்தர்கள் ஆண்டு வந்தனர். நந்தர்களில் மகாபத்ம நந்தன் இந்திய அளவில் புகழ்பெற்றவனாக இருந்தான்-(2).

    3.கி.மு.325-322 வரையான காலங்களில் வட இந்தியாவில் கலவரங்களும் குழப்பங்களும் நடைபெற்றது என்கிறார் வின்சென்ட் சுமித்-(3).

    4.மௌரியர்கள் சுமார் கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். வட இந்தியாவில் தங்களை நிலை நிறுத்திக்கொண்ட அவர்கள் கி.மு. 300 வாக்கில் தக்காணத்தின் மீது படையெடுக்கின்றனர்-(4).

    5.கி.மு. 297இல், பிந்துசாரன் பதவியேற்றபின் தக்காணத்தின்மீதான படையெடுப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. கடலுக்கு இருபகுதிகளிலும் இருந்த தக்காணப்பகுதிகளைக் கைப்பற்றியவனாக அவன் கருதப்படுகிறான்-(5).

    6.சங்கப்பாடல்கள், வடுகர்கள், கோசர்கள் துணையோடு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்தும், வல்லம்போர், செருப்பாழிப்போர் ஆகியவற்றில் வடவடுகர், வம்பவடுகர், ஆரியர் எனப்படுகிற மௌரியர்கள் இளஞ்செட்சென்னியால் தோற்கடிக்கப்பட்டது குறித்தும் பேசுகின்றன-(6).

    7.இப்படையெடுப்புக்குப்பின் மௌரியர்களின் தெற்கெல்லை, மேற்கே கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் வரையிலும், கிழக்கே வடபெண்ணை நதியின் முகத்துவாரத்தில் இருந்த நெல்லூர் வரையிலும் பரவியிருந்ததாக வின்சென்ட் சுமித் குறிப்பிடுகிறார்-(7).

    8.வின்சென்ட் சுமித் தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகள் பராமரித்து வந்துள்ளன எனவும் ஆனால் மௌரியப்பேரரசில் கடற்படை இராணுவத்தின் ஓர் அங்கமாக இருந்தது பற்றிய ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் கூறுகிறார்-(8).

    9.மாமூலனார் தமிழ் மூவேந்தர்களின் கட்டுப்பாட்டில் மொழிபெயர்தேயம் எனப்படும் தாக்காணப்பகுதி இருந்ததாகத் தெரிவித்துள்ளார்(9).

    10.முதுகுடுமிப்பெருவழுதி வெளியிட்ட நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என்கிற நடனகாசிநாதன் அவர்களின் கருத்து, கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்கிற பிரித்தானிய-ஜெர்மன் குழுவினர்,  ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களின் கணிப்பு-(10).

    11.புகளுர்கல்வெட்டின் காலம் பட்டிப்பொருளு கல்வெட்டுக்கு(கி.மு.290-270) முந்தைய கி.மு. 4ஆம் நூற்றாண்டு என்கிற நடனகாசிநாதன் அவர்களின் கணிப்பு-(11).

    12.சேரலாதன் இமயவரம்பன் குறித்தப் பதிற்றுப்பத்துப்பாடல்கள், அதன் பதிகம், அவன்குறித்த மாமூலனார் போன்ற சங்கப்புலவர்களின் பாடல்கள் ஆகியன, அவன் 58 ஆண்டுகள் ஆட்சியாண்டதையும்,  வேந்தன் ஆனவுடன் இமயம்வரை அவன் படையெடுத்துச் சென்று வென்றதையும், கடம்பர்களையும், யவனர்களையும் வென்றதையும் தெரிவிக்கின்றன-(12)

    13.கி.மு. 256ஆம் ஆண்டைய அசோகன் கல்வெட்டில் சோழ, பாண்டிய, சதியபுத்ர, கேரளபுத்ர அரசுகள் இடம்பெற்றுள்ளனர். சோழர்கள் முதன்மை பெற்றுள்ளார்கள். அதியன்கள் இடம் பெற்றுள்ளார்கள்-(13).

    14.கி.மு. 232இல் அசோகர் இறந்துபோகிறார். சாதவாகனர்கள் கி.மு.230இல் தனி அரசாக ஆகின்றனர்-(14).

    15.சம்பை கல்வெட்டின் காலம் கி.மு.270-230; அதில் இடம்பெற்ற ‘சதியபுதோ’ என்பதில் உள்ள எழுத்துக்கள் பண்டைய எழுத்தியல்-கல்வெட்டியல் (palaeography-orthography) படி, அசோகரின் கல்வெட்டில் இருப்பது போன்றே இருப்பது-(15).

    16.காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டின்படி, கி.மு. 165க்கு முன்  1300 வருடங்களாக தமிழரசுகளின் ஐக்கியகூட்டணி இருந்து வந்துள்ளது. தமிழரசுகளின் காவல் அரணாக இருந்த, புத்துண்டா என்கிற கலிங்கநாட்டின் இரண்டாவது பெரிய துறைமுக நகரம் காரவேலனால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஆண்டு பாண்டிய வேந்தன் பரிசுப்பொருட்களை காரவேலனுக்கு அனுப்பியுள்ளான்-(16).

    17.பதிற்றுப்பத்துப் பாடல்களின் தரவுகளும், அதன்பதிகங்கள்தரும் வேந்தர்களின் ஆட்சியாண்டுகளும்-(17).

    18.வரலாற்றுக்கால இரண்டாம் தூமகேதுவின் ஆண்டும்(கி.மு.163), யானைக் கண்சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்தஆண்டும் ஒன்றாக இருப்பது. பத்தாம் பதிற்றுப்பத்தின் தலைவன் இவனே என்கிற தமிழறிஞர்களின் கணிப்பு-(18).

    19.தலைவடிவப் பெருவழுதி நாணயங்களின் காலம்-கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி(சுமார்கி.மு.130-100) என்கிற தினமலர் ஆசிரியர், நாணயவியலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கணிப்பு-(19).

    20.மாக்கோதை வெளியிட்ட தலைவடிவ நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டு அல்லது கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கு சிறிது முந்தைய காலப்பகுதி(130-100)  என்கிற அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன், ஆர். கிருஷ்ணமூர்த்தி  ஆகியவர்களின் கணிப்புக்கள்-(20).

    21.கி.மு. முதல் நூற்றண்டில், சுங்க வம்ச ஆட்சியாளர்களின் இறுதிக் காலத்தில்(கி.மு.75), அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த உச்சயினி மீது  தெற்கத்திய சாதவாகனர்களின் படையெடுப்பு நடந்தது என்கிற கோசாம்பி அவர்களின் கருத்து. சோழன் நலங்கிள்ளி உச்சயினி மீது படையெடுத்தான் என சங்ககால இறுதிக்கால “முத்தொள்ளாயரம்” நூல் கூறும் செய்தி-(21).

           வரலாற்றுக் காலவரையறைக்கான ஆதாரங்கள்

    1.பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா, தமிழில் மாஜினி,    வெளியீடு, ஜூன்-2004, பக்: 187.

    2.பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 101.

    3.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, பக்: 56.

    4, 5. பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 111, 112.

    6.மாமூலனார் – அகம்: 251, 265, 281; பாவைக்கொட்டிலார் – அகம் 336; இடையன் சேந்தன் கொற்றனார் – அகம்: 375;   ஊன்பொதிபசுங்கொடையார்- புறம்: 370, 378; கள்ளில் ஆத்திரையனார்-புறம்: 175; உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்- அகம்: 69.

    7.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, பக்: 64.

    1. “     “    பக்: 79

    9.மாமூலனாரின் அகநானூற்றுப்பாடல்: 31.

    10.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 45;  தமிழகக் கடல்சார் வரலாறு, பதிப்பாசிரியர்கள்-ந.அதியமான் & பா.ஜெயக்குமார்,   தமிழ்ப்பல்கலைக்கழகம்,   ஐப்பசி-நவம்பர்:2006,     பக்:24;     ஆர். கிருஷ்ணமூர்த்தி,  செழிய செழியன் நாணயங்கள், பக்: 125-128.

    11.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 25.

    12.இரண்டாம் பதிற்றுப்பத்துப்பாடல்கள் & பதிகம் – குமட்டூர் கண்ணனார்; மாமூலனாரின் அகப்பாடல்கள்: 127, 347.

    13.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, அசோகர் ஆணைகள், பக்: 123, 124, 139, 140.

    14.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 310, 311.

    15.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 26-28.

    16.www.jatland.com/home/Hathigumpha– inscription & சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

    17.சங்ககால பதிற்றுப்பத்தும் அதன் பதிகமும்.

    18.க.ப. அறவாணன், “தமிழியல் தேற்றங்களும் தீர்வுகளும்” டிசம்பர் 2009, பக்: 54-61 & பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 580-582.

    19.ஆர். கிருஷ்ணமூர்த்தி, பாண்டியர் பெருவழுதி நாணயங்கள், பக்: 81-91.

    20.சங்ககால சேர நாணயங்கள் கண்டுபிடிப்பு, சில வரலாற்றுச்செய்திகள், ஆர். கிருஷ்ணமூர்த்தி, 2009, பக்: 31, 32. & TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 45.

    21.டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, செப்டம்பர்-2006, பக்: 388. & கவிஞர் தெசிணி அவர்கள், ‘கலித்தொகையும் முத்தொள்ளாயிரமும்’, டிசம்பர் 2004, பக்; 180;

    Share
  • பழந்தமிழக வரலாறு – 11

    கணியன்பாலன்

    இ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

    மோகூர்த்தலைவன்:

     

        இறுதியில் மோகூர்த் தலைவனும் அதியன்மரபினரும், திதியனும் எல்லையோர அனைத்துப்பிற தமிழ் அரசுகளும் ஒன்றிணைந்து மோரியர்களைப் போரில் தோற்கடித்துத் தங்களது எல்லையைவிட்டு துரத்திவிடுகின்றனர். மோரியர்படை பின்வாங்கி துளுவநாட்டை அடைந்து பாழிநகரில் நிலைகொள்ளுகிறது. துளுவநாட்டு வெற்றிக்குப்பின் மௌரியரது எல்லைப் பகுதிப் படைத்தலைவர்களே வடுகர்களின் துணையோடு போரிட்டு வந்தனர். ஆனால் அவர்களால் தமிழக எல்லையில் உள்ள குறுநில மன்னர்களை, வேளிர்களை வெல்ல இயலவில்லை. தமிழகத்தின் எல்லையில் மௌரியப்படைகளின் தோல்வி மௌரியப்பேரரசைத் தட்டி எழுப்பியது. மௌரியப்பேரரசின் பெரும்படை திரட்டப்பட்டது. பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றன. துளுவ நட்டையும், எருமை நாட்டையும் கடந்துவரும் வழிகளிலுள்ள பாறைகளை வெட்டிச் செப்பனிட்டு மௌரியப்பெரும்படை வருவதற்கான பாதைகள் உருவாக்கும் பணி நடைபெற்றது. இந்தப்பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் சில ஆண்டுகள் நடைபெற்றதாகத்தெரிகிறது. இப்பாறைகளை வெட்டி பாதைகள் அமைக்கும் பணி குறித்தும் வடுகர்கள் வழிகாட்டியாக இருந்து மௌரியர்களுக்கு உதவியது குறித்தும் மோகூர்த்தலைவன் மேல் பகைகொண்டு மௌரியர் படையெடுத்து வந்தது குறித்தும் மாமூலனாரும், பிற சங்கப்புலவர்களும் தங்கள் பாடல்களில் தெரிவித்துள்ளனர். இந்தப்பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் முடிந்தவுடன் மௌரியப் பேரரசின் பெரும்படை துளுவ நாட்டில் வந்து தங்கி தமிழகத்தின் மீது படையெடுக்கத்தயாராகியது.

    சோழர்களின் முதன்மை:

         தமிழகத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய ஆபத்தை, அப்பொழுது சோழ வேந்தனாக இருந்த சோழன் இளஞ்சேட்சென்னி நன்கு உணர்ந்து கொள்கிறான். எல்லையிலுள்ள படைத்தலைவர்களை, வேளிர்களை, சிற்றரசர்களை மட்டும் இப்பெரும்போருக்கு பொறுப்பாக்குவது பெரும் ஆபத்தில் முடியும் என்றெண்ணி, தமிழர் ஐக்கிய கூட்டணி அரசுகளை ஒன்றுதிரட்டி தனது தலைமையில் பெரும்படையைத் திரட்டுகிறான். இப்போர் தமிழகப்போராக தமிழகக் கூட்டணி அரசுகளின் போராக நடைபெற்ற போதிலும், இப்போரின் வெற்றி, சோழர்களின் வெற்றியாகவே வடவரிடத்திலும், நமது இலக்கியங்களிலும், புராணங்களிலும் பதிவாகி சேர பாண்டியவர்களை விட சோழர்கள் பெரும் புகழடைகின்றனர். அசோகன் கல்வெட்டுகளிலும் அதன் காரணமாகவே பாண்டியர்களைவிட சோழர்கள் முதன்மை பெறுகின்றனர். ஆகவே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கும் தமிழரசுகளின் வெற்றிக்கும் அசோகன் கல்வெட்டுகள் ஒருவிதத்தில் மறைமுக சான்றாதாரங்கள் ஆகின்றன எனலாம்.

    வல்லம்போர்:

         தமிழக கூட்டணி அரசுகளுக்கும், மௌரியப் பேரரசுக்குமிடையே பெரும் போர் துவங்கியது. சோழ நாட்டெல்லையிலேயே பல தடவை மௌரியர்கள் தோல்வியுற்றனர். எனினும் தொடர்ந்து புதுப் புதுப் படைகளை போருக்கு அனுப்பினர். மௌரியப் பேரரசின் முழு ஆற்றலும் திரட்டப்பட்டு பெரும்படை கொண்டு தமிழகம் தாக்கப்பட்டது. தமிழகத்தின் வட பகுதி முழுவதும் மௌரியப் பெரும்படையால் தாக்கப்பட்டது. வட ஆர்க்காட்டில் உள்ள வல்லம் என்ற இடத்தில் நடந்த பெரும் போரில், இளஞ்செட்சென்னி மௌரியர்களை பெரும் தோல்வி அடையச் செய்து துரத்தி அடித்தான். வல்லம் போர் குறித்து அகம் 336இல் பாடிய பாவைக் கொட்டிலார் என்கிற பெண்பாற் புலவர், மௌரியர்களை ஆரியர் எனக் குறிப்பிடுகிறார். மௌரியர் தங்களை ஆரியர் என்றே அழைத்துக் கொண்டனர்.  கி.மு.3ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட இப்பாடலில் குடும்ப மகளிர்கள் ‘கள்’ அருந்தி தங்கள் கணவன்மார்களின் பரத்திமை நடத்தை குறித்து வம்பளந்து கொண்டிருப்பது குறித்த குறிப்பு வருகிறது.

    ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

         வல்லம் போருக்குப் பின்னரும், மௌரியர்கள் சளைக்காமல் தொடர்ந்து பல தடவை, பெரும் படைகளை அனுப்பிக்கொண்டேயிருந்தனர். ஆனால் போரில் பெரும் இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய, அவர்களுக்கு வெற்றி கிடைப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற ஒரு நிலையில் தான் பாண்டியர் படைகளுக்குத்தலைமை தாங்கிய, இளைஞனாக இருந்த நெடுஞ்செழியன் மௌரியர்களின்பெரும்படை ஒன்றைத் தோற்கடித்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என பெயர் பெற்றான். முதல் கரிகாலனுக்குச் சம காலத்தவனாகவும், சேரன் செங்குட்டுவனுக்கு முந்தையவனாகவும் அவன் இருந்தான். ‘தமிழகம் ஒன்றாக இருந்து பார்க்கும் வகையில் வட ஆரியப்படையை எதிர்த்து வெற்றி பெற்ற நெடுஞ்செழியன்’  என்கிறது சிலப்பதிகாரம்-(17). ஆகச் சோழன் தலைமையில் பாண்டியர்களும், சேரர்களும் மௌரியப்படையை பலமுறை தோற்கடித்தனர். இறுதியில் தொடர்ந்து பலமுறை நடந்த தோல்விகளால் தாக்குப் பிடிக்க இயலாமல் பெரும் இழப்போடு மௌரியப்படை பாழி நகருக்குப் பின் வாங்கியது.

    செருப்பாழிப் பெரும்போர்:

        இளஞ்சேட் சென்னி போரைத் தொடர்ந்து நடத்தி, பாழி நகர் வரைப் படையெடுத்துச் சென்று, அதனைத் தாக்கி, இறுதியில் பெரும் வெற்றியை தமிழகத்திற்கு வாங்கித் தந்தான். இளஞ்சேட்சென்னியின் பாழி நகர் வெற்றி குறித்து இடையன் சேந்தன் கொற்றனார் என்பவர் அகம் 375இல் பாடியுள்ளார். அதில் மௌரியர்களை அவர் வம்பவடுகர் என்கிறார். தமிழகத்தின் வடக்கே வாழ்பவர்களை வடுகர் என்பது பொது வழக்கு. வடக்கே வாழும் வடுகர்களை அவர் அறிவார். ஆனால் மௌரியர்களை அவர் அறியார். ஆனால் மௌரியர்களும் வடக்கிருந்தே வருகிற புதியவடுகர்கள என்பதால், அவர்களை வம்ப வடுகர் என்கிறார். பாழி நகரில் நடந்த இறுதிப் பெரும் போருக்குப் பின்னர் மௌரியர்கள் தமிழக அரசுகளைப் படை கொண்டு வெற்றிபெற இயலாது என்பதை உணர்ந்துகொண்டு நிரந்தரமாகப் பின் வாங்கினர். தமிழகத்தைக்கைப்பற்றும் முயற்சி கைவிடப்பட்டு தமிழக அரசுகளோடு நட்பு கொண்டனர். கி.மு.297இல் பிந்துசாரரின் காலத்தில் தீவிரப்படுத்தப்பட்ட தக்காணப் படையெடுப்பும், தமிழகப் படையெடுப்பும் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததாகக் கொண்டு, பாழி நகரில் நடந்த இவ்விறுதிப்பெரும்போர் கி.மு.288 வாக்கில் முடிந்ததாகக் கணிக்கப் பட்டது. இந்தப் பெரும் போரில் சோழர் பெற்ற பெரும் புகழின் காரணமாகவே, அசோகன் தனது இரு கல்வெட்டுகளிலும் பாண்டியர்களைவிட சோழர்களை முதன்மைப் படுத்தியுள்ளான்.

    மாமூலனாரும் வேந்தர்களின் காலமும்:

         பழமொழி நானூற்றின் ஆசிரியர் மூன்றுரையரையனார், புலவரும் தனது மாமனுமாகிய இரும்பிடர்த் தலையாரிடம் கல்வி கற்று, முதல் கரிகாலன் சிறப்புப் பெற்றான்  எனக் குறிப்பிடுகிறார்(18). முதல் கரிகாலன் சிறுவனாக இருந்த பொழுது அவனைவிட இரு தலைமுறைகள் மூத்த முதியவராக இருந்தவர் அவனது ஆசிரியர் இரும்பிடர்த் தலையார். அன்று அரச குடும்பச் சிறுவர்களுக்கு அறிவும் அனுபவமும் உடைய வயதானவர்களைத்தான் ஆசிரியராக நியமிப்பர். இரும்பிடர்த் தலையார் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியை புறம் 3இல் பாடியுள்ளார். இந்தப் பாண்டியன் பெரும்பெயர் வழுதியை, குடவாயிற் கீரத்தனார் அகம் 315ஆம் பாடலில் பாடியுள்ளார். ஆதலால் குடவாயிற் கீரத்தனாரும் இரும்பிடர்த் தலையாரும் சம காலத்தவர் ஆகின்றனர். இந்த குடவாயிற் கீரத்தனார் அகம் 44ஆம் பாடலில் பெரும்பூட்சென்னி என்கிற சோழ வேந்தனைப் பாடியுள்ளார். குடவாயிற்கீரத்தனாரும், இரும்பிடர்த் தலையாரும் சமகாலத்தவர் என்பதால் குடவாயிற்கீரத்தனாரால் பாடப்பெற்ற சோழன் பெரும்பூட்சென்னியும், பாண்டியன் கருங்கைஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் சமகாலத்தவர் என்பதோடு முதல்கரிகாலனை விட இருதலைமுறைகள் மூத்தவர்களும் ஆவர். அதாவது முதல்கரிகாலன் மூன்றாம் தலைமுறை எனில், குடவாயிற்கீரத்தனார், இரும்பிடர்த் தலையார், சோழன் பெரும்பூட் சென்னி, பாண்டியன் கருங்கைஒள்வாள் பெரும்பெயர் வழுதி ஆகிய நால்வரும் முதல்கரிகாலனை விட இரு தலைமுறைகள் மூத்த முதல் தலைமுறை எனலாம்(தலைமுறை என்பதை நமது இலக்கியக் கணிப்புப்படி காலகட்டம் எனவும் கருதலாம்).

                மாமூலனார், இரண்டாம் பத்துக்குரிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனையும், அவனது தந்தை உதியன் சேரலாதனையும் பாடியுள்ளார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் போரில் வென்ற முதல் கரிகாலனையும் அவர் பாடியுள்ளார். மாமூலனாரை விட இளையவரான பரணர் முதல் கரிகாலனையும், இமயவரம்பன் மகன் சேரன் செங்குட்டுவனையும் பாடியுள்ளார். ஆனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை அவர் பாடவில்லை. ஆகவே முதல் கரிகாலனுடன் போரிட்ட இமயவரம்பன், முதல் கரிகாலனைவிட மூத்தவன் எனவும், இமயவரம்பனின் மகன் சேரன் செங்குட்டுவன் முதல் கரிகாலனைவிட இளையவன் எனவும்  அறியலாம்.

                            பெரும்பூட்சென்னி முதல் தலைமுறை என்பதாலும், முதல் கரிகாலன் மூன்றாம் தலைமுறை என்பதாலும், பெரும்பூட் சென்னியின் மகனும், முதல் கரிகாலனின் தந்தையும் ஆன செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி  இரண்டாம் தலைமுறை ஆகிறான். செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி  இரண்டாம் தலைமுறை என்பதால் மாமூலனாரும், இமயவரம்பனும் அவர் காலத்தவர் ஆகின்றனர். மௌரியப் படையை கி. மு. 297முதல் கி.மு.288 வரை போராடி வென்ற இளஞ்சேட் சென்னியின் காலத்தவர் மாமூலனார் என்பதால், அவர் இந்தக் காலத்துக்குச் சிலகாலம் முன்பும் சிலகாலம் பின்பும் வாழ்ந்தவர் எனலாம். அதாவது கி.மு. 3ஆம் 4ஆம் நூற்றாண்டு எனலாம்.  முதல் தலைமுறையைச் சேர்ந்த சோழன் பெரும்பூட் சென்னி, உதியன் சேரலாதன் போன்றவர்கள் கி.மு. 4ஆம் நூற்றாண்டு ஆவர். அதே சமயம் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாமூலனார் போன்றவர்கள் கி.மு. 3ஆம்,  4ஆம் நூற்றாண்டு ஆவர். முதல் கரிகாலன் போன்ற மூன்றாம் தலைமுறையையும், அவனைவிட இளையவனான சேரன் செங்குட்டுவன் போன்ற நான்காம் தலைமுறையையும் சேர்ந்தவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம்.

    மாமூலனாரின் இறுதிக் காலம்:

         செருப்பாழிப்போர் நடைபெற்ற இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின், இளஞ்சேட் சென்னியின் புகழ் பரவியதைப் பொறுக்க மாட்டாத சிலர் அவனைச் சூழ்ச்சி செய்து கி.மு. 285 வாக்கில் கொன்று விடுகின்றனர். அதன்பின் அவனது மகன் முதல் கரிகாலன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள நடத்திய போர் தான் முதல் வெண்ணிப்பறந்தலைப் போர் ஆகும். இப்போர் செருப்பாழிப் போருக்குப்பின் ஒருசில வருடங்கள் கழித்து நடந்தது என்பதால் அதன் காலம் கி.மு. 283 எனக்கொள்ளலாம். அதன்பின் ஏழு அல்லது எட்டு வருடங்களுக்குப்பின் கி.மு.275 வாக்கில் முதல் கரிகாலனுக்கும், சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் இடையே நடந்த போர் தான் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போராகும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இப்போரில் தோல்வியடைந்து, முதுகில் விழுப்புண் பெற்று, நாணி, வடக்கிருந்து உயிர் துறந்து பெரும் புகழடைந்தான். சேரனாடு பெரும் இழப்பைச் சந்தித்தது. முதல் கரிகாலன் தமிழகத்தின் பேரரசனாக உயர்ந்தான். இப்போர் குறித்தும், சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தது குறித்தும் வெண்ணிக் குயத்தியார் என்ற பெண்பாற் புலவரும், கழார்த் தலையாரும், மாமூலனாரும் பாடியுள்ளனர்-(19).

         கி.மு. 275 வாக்கில் நடைபெற்ற, மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போர் குறித்துப் பாடிய பாடலே மாமூலனாரின் இறுதிப்பாடலாகும். ஆகவே மாமூலனாரது இறுதிக்காலம் என்பதை முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போருக்குப்பின்  5 வருடங்கள் கழித்து கி.மு. 270 வாக்கில் எனக் கொள்ளலாம். மாமூலனாரின் தொடக்க காலம் கி.மு.360 என முன்பே கணிக்கப்பட்டுள்ளது. எனவே மாமூலனார் அவர்கள் வாழ்ந்த காலம் என்பது கிட்டத்தட்ட  கி.மு. 360 முதல் கி.மு. 270 வரையான சுமார் 90 வருடங்கள் எனலாம். கி.மு.4ஆம் நூற்றாண்டின் இடையில் பிறந்த மாமூலனார் தனது இளவயதில் நந்தர்களையும், முதல் தலைமுறையைச் சேர்ந்த  உதியஞ் சேரலாதனையும், கி.மு. 270க்கு முன் தனது இறுதிக் காலத்தில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சோழன் முதல் கரிகாலனையும் இடையில் மௌரியர்களையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும் பாடியுள்ளார். ஆகவே பல்வேறு தரவுகளையும், ஏரணக்கண்ணோட்டம்-பொதுஅறிவு  அடிப்படையிலும் கணிக்கப்பட்ட காலமே மாமூலனாரின் காலமாகும்.

         புகளூர் கல்வெட்டு, அசோகன் கல்வெட்டுகள், சம்பைக் கல்வெட்டு முதுகுடுமிப் பெருவழுதி நாணயம், மாக்கோதை, குட்டுவன் கோதை  நாணயங்கள், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், மாமூலனாரும் பிற சங்கப் புலவர்களும் நந்தர்கள் குறித்தும், மௌரியர்கள் குறித்தும், பாடிய பாடல்கள், செருப்பாழிப் போர், வல்லம் போர் குறித்தச் சங்கப் புலவர்களின் பாடல்கள், மொழிபெயர் தேயம் எனப்படும் தக்காணப் பகுதி தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்கிற மாமூலனாரின் குறிப்பு போன்ற சங்க இலக்கியச் சான்றுகள் ஆகிய மேலே தரப்பட்டுள்ள பல்வேறு வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டதுதான் மாமூலனாரின் காலமும்(கி.மு. 360-270), செருப்பாழிப்போரின் காலமும்(கி.மு. 288), சேரன் செங்குட்டுவனின் காலமும்(கி.மு. 3ஆம் நூற்றாண்டு), ஆகும். இக்காலங்கள் பழந்தமிழக வரலாற்றுக்கான ஆண்டுகளையும், காலகட்டங்களையும் கணித்து, அவைகளை உறுதிப்படுத்துவதில் மிகமிக முக்கியப் பங்காற்றியுள்ளன எனலாம்.

    பார்வை:

    17.சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், 23-கட்டுரைக்காதை: கட்டுரை வரி; 14, 15.

    18.ஔவை.சு.துரைசாமிபிள்ளை, புறநானூறு-1, ஜூலை-2009, பக்:31.

    19.வெண்ணிக்குயத்தியார் என்ற பெண்பாற் புலவரின் புறநானூற்றுப்பாடல்: 66; கழார்த்தலையார் அவர்களின் புறநானூற்றுப்பாடல்: 65; மாமூலனார் அவர்களின் அகநானூற்றுப்பாடல்: 55.

    Share
  • பழந்தமிழக வரலாறு – 10 ஆ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

    கணியன்பாலன்

    மாமூலனார் பாடல்கள்:

         மாமூலனார், பரணர், கபிலர் ஆகியவர்கள் குறித்து அப்பாதுரையார் தனது தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூலில், “பரணர் சங்ககாலப் புலவர்களிலேயே மிக முற்பட்டவர், மிக நீண்ட நாள் வாழ்ந்தவர், அவர் முதுமைக்காலத்திலே கபிலர் இளையவராக இருந்தார், மாமூலனாரோ பரணரிலும் பழமையானவர். அவர் மௌரியருக்கு முற்பட்டு கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர்” எனக்கூறுகிறார்(11). ஓரளவு பொருத்தமான காலத்தையே அப்பாதுரையார் கூறியுள்ளார் எனலாம். ஆகவே முதலில் ஓரளவு துல்லியமான காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட மாமூலனாரின் ஒருசில சங்கப் பாடல்களைக் காண்போம். இவர் பாடல்கள் மொத்தம் 30 ஆகும். அகநானூற்றில் 27 பாடல்களும், நற்றிணையில் இரு பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலும் பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் பாடல் எதுவும் இடம்  பெறவில்லை.

                  மாமூலனார் தனது பாடல் ஒன்றில்(அகம்-265) மகதத்தை ஆண்ட  நந்தர்கள் பெரும் புகழை உடையவர்களாகவும், பெரும் படை உடையவர்களாகவும்  இருந்ததோடு, மிகப் பெரிய அளவிலான செல்வத்தையும் கொண்டிருந்தனர் என்கிறார்.  நந்தர்கள் காலம் கி.மு.4 ஆம் நூற்றாண்டு ஆகும்.  நந்தர்கள் குறித்துப் பேசிய அவர், தனது வேறு இரு சங்கப் பாடல்களில்(அகம்-251, 281),  நந்தர்களுக்குப் பின், மகத ஆட்சிக்கு வந்த  மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு  குறித்து, வடதமிழகம் மௌரியப் படையெடுப்பால் அழிந்து கொண்டிருந்த போது, சிற்றரசர்களான மோகூர் பழையன் போன்ற, தமிழரசுகளின்  எல்லைக் காவல் படைத் தலைவர்கள், அதனைத்தடுத்து நிறுத்தி, மௌரியப்படைக்குப்  பணியாது எதிர்த்து நின்றனர். அதனால் மோகூர் பழையன் போன்ற தமிழக எல்லைக்காவல் படைத் தலைவர்களின் எதிர்ப்பை முறியடித்து வெற்றிபெற,  வடுகர்கள் வழிகாட்ட, வம்ப மோரியர்கள் (மோரியர் என்பது  மௌரியர் என்பதன் பிராகிருதச்  சொல்லாடல் ஆகும்), மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள  பாறைக் குன்றுகளை வெட்டித் தகர்த்து, பாதையமைத்து, பெரும்படை கொண்டு  தமிழகத்தை நோக்கி  படையெடுத்து வந்தனர் என்கிறார் மாமூலனார்.

           அகம் 251ஆம் பாடலில் மாமூலனார், நந்தர்களின் செல்வ வளம் குறித்து, “நந்தன் வெறுக்கை எய்தினும்”(நந்தர்களின் செல்வத்தைப் பெறினும்), எனக் குறிப்பிட்டுவிட்டு,  மௌரியர்களைப் பற்றிய அம்முதல் பாடலில் அவர்களை “வம்பமோரியர்” எனக்குறிப்பிடுகிறார். இப்பாடல் மௌரியர்கள் தமிழகத்தை நோக்கி  படையெடுத்து வந்தபோது பாடிய முதல் பாடல் ஆகும். நந்தர்கள் வீழ்ச்சியடைந்து விட்டார்கள் என்பதை மாமூலனார் முன்பே அறிந்திருப்பார் எனினும், அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த புதியவர்கள் யார் என்பதை, மௌரியர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தபோது தான் அவர் அறிந்திருப்பார் போல் தெரிகிறது. அதனால் தான் பழையவர்களான நந்தர்களுக்குப் பின் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களைக் குறிப்பிடும் போது அவர்களைப் புதியவர்கள் என்கிற பொருளில் வம்பமோரியர் என்கிறார். அதேசமயம் மௌரியர்கள் குறித்த இரண்டாவது  பாடலான அகம் 281ல் வம்ப என்பதை விடுத்து மோரியர் என்றே மாமூலனார் குறிப்பிடுகிறார்.  மாமூலனார் தவிர வேறுசில சங்கப்புலவர்களும், மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு  குறித்துப் பாடியுள்ளனர்.  வேங்கட மலைத் தலைவன் ஆதனுங்கனைப் பாடவந்த  கள்ளில் ஆத்திரையனாரும்(புறம்-175), தனது அகப்பாடலில் காதலன் கடந்து சென்ற பாதை குறித்துப் பாடிய உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனாரும்(அகம்-69) மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு  குறித்துப் பாடியுள்ளனர்.

    மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு :

           நந்தர்களை அகற்றிய பின், மகதத்தில் ஆட்சி ஏற்ற  மௌரியர்கள் வட இந்தியாவின்  பெரும்பகுதியைக் கைப்பற்றிய பின்  தென் இந்தியா மீது படை எடுத்ததும், இன்றைய கர்நாடகம் வரை  அவர்கள் தங்கள் படையெடுப்பை  நடத்தியதும் குறித்து  வரலாறு பேசுகிறது.  ஆனால் மௌரியர்கள், வடுகர்கள் துணையோடு  தமிழகத்தைத்  தங்கள் பெரும்படை கொண்டு தாக்கினர் என்கிற, மேலே உள்ள சங்கப் பாடல்கள்  தரும்  நிகழ்வுகள் குறித்து வரலாற்றில் செய்திகள் எதுவும் இல்லை. இப்படை எடுப்பு நடந்த காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். மௌரியர்களின் இந்தத் தமிழகப் படையெடுப்பு, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனின் தலைமையில் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளால் முறியடிக்கப்பட்டது.  இவன் குறித்தும் இப்போர் குறித்தும் ஊன்பொதி பசுங்குடையாரும், இடையன்சேந்தன் கொற்றனாரும், பாவைக் கொட்டிலாரும் பாடியுள்ளனர்-(12).

    கே. ஏ. நீலகண்ட சாத்திரி &  டி.டி. கோசாம்பி:

             மாமூலனாரின் சங்கப்பாடல்கள் குறித்து கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள், “மாமூலனார் கூறும் நிகழ்ச்சிகள் அசோகன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடைபெற்றிருக்கக் கூடும் என்று நாம் கூறலாம்” எனவும் ‘வம்ப’ என்ற சொல்லுக்குரிய ‘புதிய’ என்பதன்படி, “மாமூலனார் தமது பாடலை இயற்றிய காலத்தில் மௌரியர்கள் தென்னாட்டிற்கு வந்தது அண்மையில் நடந்த நிகழ்ச்சியாய் இருந்திருக்கலாம்” எனவும் மாமூலனாரின் கூற்று நம்பத்தகுந்தவை எனவும் குறிப்பிடுகிறார்-(13). வரலாற்று ஆய்வாளர் ஆர். எஸ். சர்மா அவர்கள், “நந்தர்கள் மிகவும் செல்வச் செழிப்பில் செழித்தனர். மிகவும் வலிமை வாய்ந்தவர்களாய் விளங்கினர்” என்கிறார்-(14). இக்கூற்று மாமூலனார் 2300 வருடங்களுக்கு முன்பு கூறியதோடு ஒத்துப்போகிறது.

         மௌரியர்களின் தமிழகப்படையெடுப்பு குறித்து டி.டி. கோசாம்பி அவர்கள், “அசோகரோ, அவரது தந்தையோ போர் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமலேயே மைசூர் அவர்கள் வசமானது. பண்டைத்தமிழ்க் கவிதை இலக்கியம் குறிப்பிடும் வம்பமோரியர் என்பது, திருப்பித் துரத்தியடிக்கப்படும் முன்போ அல்லது தம் தேர்களால் கடக்க முடியாத ஒரு மலையால் தடுத்து நிறுத்தப்படும் முன்போ உள்ளபடியே மதுரையையே அடைந்திருந்த ஒரு மௌரியப்படையையே குறிப்பிடுவதாகலாம்” என்கிறார்-(15). மேலே தந்த சங்கப்பாடல்கள், மௌரியர்களின் தேர் முதலான பெரும் படையைக் கொண்டு செல்வதற்குத்தான் மலையை வெட்டி மௌரியர்கள் பாதை அமைத்தனர் என்கின்றன. ஆதலால் மௌரியப்படை மலையால் தடுத்து நிறுத்தப்படவில்லை, அவை தமிழர்களால் துரத்தியடிக்கப்பட்டது. ஆதலால், மௌரியர்கள் தமிழகம்வரை படையெடுத்தனர் என்பதையும் ஆனால் அவர்கள் தமிழரசுகளால் துரத்தியடிக்கப்பட்டனர் என்பதையும் டி.டி. கோசாம்பி அவர்களின் மேற்கண்ட சொற்களும் உறுதிப்படுத்துகின்றன.

    மகத அரசில் ஆட்சி மாற்றம்:

         ஆகவே மாமூலனாரின் பாடல்கள் மகதஅரசில் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் நடந்த ஆட்சி மாற்றங்கள் குறித்தும், நந்தர்களுக்குப் பின்வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்தும் பேசுகிறது. மாமூலனார் நந்தர்களைப் பற்றி அறிந்திருப்பதும், மௌரியர்களைப் புதியவர்கள் எனக் குறிப்பிடுவதும் அதே காலகட்டத்தில் அவர் வாழ்ந்து வந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. கே. ஏ. நீலகண்ட சாத்திரி, டி.டி. கோசாம்பி ஆகியவர்களின் கூற்றும் இதனை வலியுறுத்துகிறது. ஆகவே மகத அரசில் நடந்த இந்த ஆட்சி மாற்றங்களின் ஆண்டுகள் மாமூலனாரின் காலத்தை நிர்ணயிக்கப் பயன்படும் எனலாம். கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 327 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்தான். அவன் கி.மு. 325 வாக்கில் இந்தியாவிலிருந்து திரும்பினான். கி.மு. 323இல் பாபிலோனியாவில்  இறந்தான். அதன்பின் சந்தரகுப்த மௌரியன் நந்தர்களின் மகத ஆட்சியை வீழ்த்தி விட்டு கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றினான். இந்த ஆண்டுகள் ஆதார பூர்வமான உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட ஆண்டுகள். முறையானதும் சரியானதுமான இந்த ஆண்டுகளைக் கொண்டு தமிழக வரலாற்றுக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாமூலனார் காலம்:

         நந்தர்கள் சுமார் கி.மு. 365 முதல் கி.மு. 321 வரை சுமார் 44 ஆண்டுகள் மட்டுமே ஆண்டனர். அவர்களில் மகாபத்ம நந்தன் இந்தியா முழுவதும் புகழ் பெற்றவனாக இருந்தான். நந்தர்களின் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருந்த காலத்தில் இயற்றப்பட்டது தான் மாமூலனாரின் அகம் 265ஆம் பாடலாகும். கி.மு. 321இல் நந்தர்கள் வீழ்ச்சி அடைந்தனர்  என்பதால், அவர்களின் புகழும் அத்தோடு வீழ்ச்சி அடைந்தது. நந்தர்களுக்குப்பின் மௌரியர் ஆட்சியேற்ற பின்னரும், அவர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த போதும் மாமூலனார் வாழ்ந்து வந்தவர். ஆகவே நந்தர்கள் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் சுமார் கி.மு. 330 வாக்கில் தனது இளைய வயதில் மாமூலனார் நந்தர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்தான் அகம் 265ஆம் பாடலாகும். ஆகவே அப்பாடலைப் பாடியபோது அவரது வயது 30 எனக் கொண்டு, அவர் கி.மு. 360 வாக்கில் பிறந்தார் எனக் கணிக்கப்பட்டது..

    சோழர்களின் முதன்மை:

         மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்த மாமூலனார் குறிப்புகளுக்கு, அசோகன் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் உள்ளன. கி.மு. 325 முதல் கி.மு. 300 வரையான காலகட்டத்தில், அதாவது கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மெகத்தனிசு, சாணக்கியர் போன்றவர்களால் தமிழக மூவேந்தர்களில் முதன்மையான அரசாகவும் ஒரே அரசாகவும் குறிக்கப்படுவது பாண்டிய அரசு தான். ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொறிக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டுகளில் முதன்மை பெற்றிருப்பது சோழ அரசு தான். பாண்டிய அரசு அசோகனின் இரு கல்வெட்டுகளிலும் இரண்டாவது இடத்தில் தான் குறிக்கப்பட்டுள்ளது. அரை நூற்றாண்டுக்குள் மௌரிய அரசியலில் சோழர்கள் முதன்மை பெற்று, பாண்டியர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட நிகழ்வே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கான ஆதாரமாகும். இதனை விரிவாகக் காண்போம்.

    பெரும்தோல்வி:

         சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலம் கி.மு. 321 முதல் கி.மு. 297 வரையான 24 வருடங்கள் ஆகும். அவர் மகன் பிந்துசாரரின் ஆட்சிக்காலம் கி.மு. 297 முதல் கி.மு. 272 வரையான 25 வருடங்கள் ஆகும். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலத்திலேயே, கி.மு. 300க்குப்பின் தக்காணத்தைக் கைப்பற்றும் பணி தொடங்கிவிடுகிறது. ஆனால் பிந்துசாரரின் ஆட்சிக்காலத்தில் அதாவது கி.மு. 297க்குப்பிறகு அது தீவிரப்படுத்தப் படுகிறது. இதுகுறித்து கா. அப்பாதுரை அவர்கள் முனைவர் எம். இராசமாணிக்கனார் அவர்கள் சங்கஇலக்கியங்களில் இருந்து திரட்டிய தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்-(16).

                    தக்காணத்தையும் தமிழகத்தையும் கைப்பற்றும் மௌரியர்களின் படையெடுப்பு கிட்டத்தட்ட கி.மு. 297 முதல் கி.மு. 288 வரையான காலங்களில் மிகத் தீவிரத்தோடும், மௌரியப்பேரரசின் முழு ஆற்றலோடும் நடைபெற்றது. தக்காணத்தின் பலபகுதிகள் பிடிக்கப்பட்டன. ஆனல் தமிழகத்தை பொருத்தவரை அப்படையெடுப்பு ஒரு பெரும் தோல்வியில் முடிந்தது என்பதுதான் வரலாறு. சங்க இலக்கியங்கள் தரும் செய்தியும் அதுவேயாகும். பாரசீகப்பேரரசு கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கிரேக்க அரசுகளைக் கைப்பற்ற முயன்றபோது அம்முயற்சி பெருந்தோல்வியில் முடிந்தது போன்ற நிலையே மௌரியப்பேரரசின் தமிழகப் படையெடுப்புக்கும் ஏற்பட்டது. பின் பிந்துசாரரின் கடைசி ஆண்டுகளில் தமிழரசுகளோடு நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.

    மௌரியப் படையெடுப்பு:

         கி.மு. 297 வாக்கில் பிம்பிசாரன் மகத ஆட்சியில் அமர்ந்தவுடன் தக்காணப் படையெடுப்பைத் தீவிரப்படுத்தினான். மௌரியப்படை தக்காணத்தின்மீது படையெடுத்து வந்த போது அவர்களுக்கு வடுகர்கள் துணையாக இருந்து ஆதரவு தந்தனர். மௌரியப்படையில் சேர்ந்துகொண்ட கோசர்களும், வடுகர்களும் தென்பகுதியில் இருந்த அனைத்து அரசுகளோடும் போர் செய்து வென்று வரலாயினர்.  மௌரியர்கள் முதலில் வடுகர்கள் துணைகொண்டு துளுவ நாட்டைத்தாக்கி அதனை ஆண்ட நன்னன் மரபினனை முறியடித்து, அவனது தலைநகர் பாழியைக் கைப்பற்றிக் கொண்டனர். பின் அதனை ஒரு வலிமையான அரணாக மாற்றியமைத்து அங்கிருந்து அவர்கள் அதியமான் மரபினரையும், சோழநாட்டின் எல்லையிலுள்ள அழுந்தூர்வேள் திதியனையும், பாண்டிய நாட்டு எல்லையிலுள்ள மோகூர் பழையனையும் படிப்படியாகத் தாக்கத்தொடங்கினர்.

    சதிய புத்திரர்கள்:

         அதியமான் மரபினர் மௌரியர்களை எதிர்த்து, தொடர்ந்து இறுதிவரை தாக்குதல் நடத்தினர். தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் மேற்குக் கடற்கரையில் உள்ள குதிரை மலை முதல் கொங்குநாடு வரை அதியன்கள் மரபினர் ஆண்டு வந்ததால் அவ்வழியே படையெடுத்து வந்த மௌரியப் படைகளை அவர்கள் கடுமையாக  எதிர்த்துப் போரிட்டனர். அதன் காரணமாகவே அசோகரின் கல்வெட்டில் அவர்களுடைய அரசகுடி வடமொழிப்(பிராகிருதம்) பெயரில், சதிய புத்திரர்கள் என மூவேந்தர்களுக்கு இணையாக இடம்பெற்றனர். இந்த அதியன் மரபினரும், சோழ நாட்டெல்லையில் உள்ள அழுந்தூர்வேள் திதியனும், பாண்டிய நாட்டின் எல்லையிலுள்ள மோகூர்ப்பழையனும் மௌரியர்களை எதிர்த்துத் தாக்கி அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

    பார்வை:

    11.அப்பாதுரையார், தென்னாட்டுப் போர்க்களங்கள், பக்: 81.

    12.ஊன்பொதி பசுங்குடையார் பாடிய புறநானூற்றுப்பாடல்: 378; இடையன் சேந்தன் கொற்றனார் பாடிய அகநானூற்றுப்பாடல்: 375; பாவைக்கொட்டிலார் பாடிய அகநானூற்றுப்பாடல்: 336.

    13.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 28, 37.

    14.பண்டைக்கால இந்திய, ஆர். எஸ். சர்மா, தமிழில் மாஜினி, NCBH  வெளியீடு, ஜூன்-2004, பக்:180.

    1. டி.டி. கோசாம்பி, ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்’ தமிழில் சிங்கராயர், அக்டோபர்- 2011, விடியல் பதிப்பகம், பக்: 271.

    16.தென்னாட்டுப் போர்க்களங்கள், கா. அப்பாதுரை, ஜூலை-2003, பக்: 57-63.

    Share
  • பழந்தமிழக வரலாறு – 9

    கனியன்பாலன்

    அ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

         .

           தென்னிந்தியக் கல்வெட்டுகள்(South Indian Inscription) என்கிற நூல்  தொகுதிகளை மிகக் கவனமாக தொகுத்தளித்த புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் உல்ட்ச்(Hultzsch)  என்பவர், முதலாம் கயவாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் ஒரே காலத்தவர் என்கிற கருத்தை ஏற்கவில்லை(1). மேலும் மகாவம்சம் குறிப்பிடும் கயவாகுவின் காலம், அந்தக் கயவாகு சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக நடத்திய விழாவில் கலந்து கொண்டான் என்கிற செய்தி ஆகிய இரண்டுமே அடிப்படை வரலாற்றுச் சான்றுகள் அற்றவை. அவை வரலாற்றுக்கு பொருந்தாதவை. ஆகவே, அவைகளைக் கொண்டு தமிழக வரலாற்றின் காலங்களைக் கணிப்பது முறையான காலக்கணிப்பாக இருக்காது. ஆகவே இந்தியாவின் மேல் அலெக்சாந்தர் படையெடுப்பு நடத்திய காலத்தையும், மாமூலனார் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மகதத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும், அதன்பின் தமிழகத்தின்மேல் மேற்கொள்ளப்பட்ட மௌரியப் படையெடுப்புக்காலத்தையும், அசோகன் கல்வெட்டையும் கணக்கில்கொண்டு, நமது தமிழக வரலாற்றுக்கான காலம் கணிக்கப்பட்டு உறுதிப்படுத்தப் படவேண்டும்.  இவைகளின் மூலம் மட்டுமே  நமது தமிழக வரலாறு உலக வரலாற்றுக் காலத்தோடு இணைக்கப்பட்டு, ஒரு முறையான, நிலையான, உறுதியான காலவரையறையைக் கொண்ட வரலாறாக ஆகும்.

    பழந்தமிழக வரலாற்றில் அசோகன் கல்வெட்டும் சம்பைக் கல்வெட்டும்:

           அதியமான் திருக்கோவிலூர்ப் போரில் மலையமான் காரியை வென்ற போது, பரணர் அதியமானைப் பாடியுள்ளதாக ஔவையார் குறிப்பிடுகிறார். ஆகவே, பரணர் அதியமான் காலத்தவர் ஆகிறார். பரணர் சேரன் செங்குட்டுவனை, 5ஆம் பதிற்றுப்பத்திலும், புறம்-212, 369;  அகம்-376 ஆகிய மூன்று பாடல்களிலும் பாடியுள்ளார். ஆகவே, சேரன் செங்குட்டுவன் பரணர் காலத்தவனாகிறான். இவைகளின் காரணமாக சேரன் செங்குட்டுவன், அதியமான், பரணர் ஆகியோர் சம காலத்தவர் ஆகின்றனர்.

         அதியமானின் சம்பைக் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் அசோகர் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் ஒரே மாதிரி எழுதப்பட்டு, இரண்டும் அதியமான்களை அவர்களது பரம்பரையைத் தான் குறிப்பிடுகிறது. பண்டைய எழுத்தியல்- கல்வெட்டியல்(palaeography – orthography) படி, அசோகரின் கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்கள் போன்றே சம்பை கல்வெட்டிலும் இருப்பது என்பது இரண்டும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதி செய்கிறது.  அசோகர் கல்வெட்டின் காலம் கி.மு.256 ஆகும். ஆகவே சம்பைக் கல்வெட்டின் காலம் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் அவர்களின் கருத்துப்படி கி.மு. 270-230 ஆகும். அதாவது அசோகன் கல்வெட்டுக்குச் சில வருடங்கள் முன்பின் என்பதே அதன் கருத்தாகும்(2). நாம் அதனை கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம். அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் சம்பைக் கல்வெட்டை வெட்டிய அதியமான், அதியமானைப்பாடிய பரணர், பரணர் பாடிய சேரன் செங்குட்டுவன் ஆகிய மூவரின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என உறுதிப்படுத்தலாம்.

         ‘பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும்’ என்ற எனது நூலில் அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியன போக, புகளூர் கல்வெட்டு; மாமூலனாரின் நந்தர்கள், மௌரியர்கள், சேர, சோழ வேந்தர்கள் குறித்த பாடல்கள்; அதியமான், சேரன் செங்குட்டுவன் குறித்த பரணரின் பாடல்கள்; பாலைபாடிய பெருங்கடுங்கோ, மாமூலனார் ஆகியவர்களின் நன்னன் குறித்த பாடல்கள்; தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்; மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள்; ஆகியவைகளைக் கொண்டு செங்குட்டுவனின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டு என்பது பல தளங்களில், பல கோணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது(3).

    மகாவம்ச நூலும் செங்குட்டுவனின் காலமும்:

         வில்கெம் கெய்கர் அவர்களின் மகாவம்ச நூலின்படி புத்தர் இறந்தபின் 248 ஆண்டுகள் கழித்து அசோகர் முடிசூட்டிக்கொண்டார்(4). மகாவம்ச நூலின் ஆண்டுப்பட்டியல் கி.மு. 483இல் இருந்து தொடங்குகிறது. ஆனால் கி.மு. 483 என்பது எந்தவிதத்தில் இந்திய அல்லது உலக வரலாற்றுக் காலவரையரையோடு இணைக்கப்பட்டது என்பதற்கான அடிப்படைச் சான்றுகள் எதுவும் அந்த நூலில் தரப்படவில்லை. அந்த நூல் தந்துள்ள மன்னர்களுடைய ஆட்சி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டுதான் கயவாகுவின் காலம் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 483இல் தொடங்கும் பட்டியல் கி.பி. 352இல் முடிகிறது. அநுராதபுரத்தில் கிட்டத்தட்ட சுமார் 835 ஆண்டுகள் ஆட்சி செய்த 61 மன்னர்களை அது குறிப்பிடுகிறது. இந்த ஆண்டுகள் ஆரம்பம் முதல் இடையில் கூட உலக, இந்திய காலவரையரைகளோடு இணைக்கப்படவில்லை-(5).

         புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் வின்சுடன் சுமித் அவர்கள் கி.மு. 483 முதல் கி.பி. 124 வரையான, 607 வருடகால மகாவம்ச நூலின் வரலாற்றை,  அதன் ஆண்டுகளை முழுமையாக நிராகரித்துள்ளார்.  தேவநாம்பியதீச என்கிற மன்னன் சார்ந்த 10 அத்தியாயங்களை “அபத்தங்களால் முடையப்பட்ட வேலைப்பாடு” என்கிறார் அவர்-(6). அதனால்தான் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கூல்ட்ச்(Hultzsch) அவர்கள் சேரன் செங்குட்டுவன், கயவாகுவின் காலத்தைச் சேர்ந்தவன் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நூல், எந்த வெளிநாடும் செல்லாத புத்தர் மூன்றுமுறை இலங்கை வந்ததாகக் கதை சொல்லுகிறது. தனது 99 சகோதரர்களைக்கொன்றபின் அசோகர் ஆட்சிக்கு வந்தார் என்கிறது-(7). புத்தசமயத்துக்கு மாறுவதற்கு முன் அசோகர் தீயவராக, கொடூரமானவராக இருந்தார் என அந்நூல் சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை என்கிறார் வின்சுடன் சுமித்(8).

         பல அறிஞர்களின் கருத்துப்படி அசோகர் இலங்கை பற்றித் தனது கல்வெட்டில் எதுவும் சொல்லவில்லை. அசோகருக்கு மகிந்த, சங்கமித்ர என்கிற மகனோ, மகளோ இருக்கவில்லை. அவர்கள் இலங்கை போகவும் இல்லை. மகிந்த அவருடைய தம்பி ஆவார். அவர்தான்  தமிழகம் வந்தார். இலங்கை போனார். தமிழ்நாட்டில் இருந்துதான் புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின. இவை வின்சுடன் சுமித் அவர்கள் தனது அசோகர் என்கிற நூலில் தரும் தரவுகளாகும்-(9). மகாவம்ச நூல் என்பது பௌத்தமத நம்பிக்கையாளர்கள் ஓதுவதற்கும், நினைவில் வைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு இன்பமும், பரவசமும் ஊட்டவும் எழுதப்பட்டது என்கிறார் அதனை கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதிய ‘மகாநாம’ என்கிற புத்த பிக்கு. அந்நூல் புத்த மடாலங்களின் அத்தகதா கதைகளையும், புத்தமத மடாலயங்களுக்கு உதவிய மன்னர்கள், அவர்களின் உதவிகள் பற்றிய தரவுகள்  முதலியனவற்றையும் கொண்ட  கி.பி. 3ஆம் நூற்றாண்டு தீபவம்ச நூலைப் புதுப்பித்து எழுதப்பட்டதாகும்-(10).

             ஆகவே எந்தவித அடிப்படைச் சான்றுகளும் இல்லாத, கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில், மதக் காரணங்களுக்காக எழுதப்பட்ட, இலங்கையின் பௌத்தமத நூலான மகாவம்சம், இடைச் செருகல்கள் நிறைந்த சிலப்பதிகாரக் காப்பியப் பதிகம் ஆகியவைகளைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட, சேரன் செங்குட்டுவனின்காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பதைவிட, சங்க இலக்கியங்கள் தரும் அடிப்படைச் சான்றுகளைக் கொண்டும் உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டு, புகளூர் கல்வெட்டு, சம்பைக் கல்வெட்டு, தலைவடிவப்பெருவழுதி நாணயங்கள், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் போன்றவைகளின் காலத்தைக் கொண்டும் கணிக்கப்பட்ட சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதே பல கோணங்களிலும் பொருந்திப்போகிறது. இரண்டு காலங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது என்பதையும், சங்க இலக்கியம் இயற்கையானது, நம்பத்தகுந்தது என்பதையும், பதிற்றுப்பத்து கூறும் சேர வேந்தர்களும், பிற சங்க இலக்கியங்கள் கூறும் பல தமிழக வேந்தர்களும் வரலாற்றில் இருந்தவர்கள் என்பதையும் அகழாய்வுகளும், கல்வெட்டுகளும், நாணயங்களும் இன்ன பிற தரவுகளும் உறுதி செய்துள்ளன என்பதையும் கருத்தில்கொண்டு சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதே முறையானதாகும்.

    மாமூலனாரும் செருப்பாழிப்போரும்:

         சங்ககாலப் புலவர்களும், பாணர்களும் வேந்தன் இருக்குமிடம் சென்று, அவனை நேரடியாகப் புகழ்ந்து பாடி பரிசுகள் பெற்று வருவதே சங்ககால வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் தங்கள் காலகட்டத்துக்கு முந்தைய புரவலர்களைப் பாடும் பழக்கம் அவர்களிடத்தில் இருக்கவில்லை. புறப் பாடல்களில் மட்டுமின்றி அகப்பாடல்களிலும் இதே நிலை தான் இருந்து வந்துள்ளது. முந்தைய காலகட்டப் புரவலர்களை மட்டுமல்ல, முந்தைய காலகட்ட நிகழ்வுகளையும் அவர்கள் பெரும்பாலும் பாடுவதில்லை. புரவலர்களை நேரடியாக அவர்களின் இடத்திற்கே சென்று சந்தித்து அவர்களிடம் நேரடியாகத் தங்கள் புகழ்ந்துரைகளைப் பாடல்களாகப் பாடிப் பரிசில்பெறுவது என்பது பாணர், புலவர்களின் மிகப் பழமையான, தொன்று தொட்டு இருந்து வருகிற ஒரு மரபாகும். அதனால் தங்கள் காலத்துக்கு  முந்தையவர்களை, இறந்து மறைந்து போன பழைய தலைமுறைப் புரவலர்களை அல்லது தலைவர்களைப் பாடும் பழக்கம் என்பது சங்ககாலப் புலவர்களிடம் இருக்கவில்லை.

            சான்றாகக் கபிலர் பாரியிடமும், ஔவையார் அதியமானிடமும், பரணர் செங்குட்டுவனிடமும், அரிசில்கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடமும், நக்கீரர் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனிடமும் நேரடியாகச் சென்று தான் பாடிப் பரிசில் பெற்றார்கள் என்பதை சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. பொதுவாகச் சங்க காலப் புலவர்கள் பழைய தலைமுறைப் புரவலர்களைப் பாடவில்லை என்பதற்குச் சில சான்றுகளைக் கீழே காண்போம்.

    மாமூலனார்:

          மாமூலனார் தனது இளவயதில் உதியஞ் சேரலாதனைப் பாடினார். பின் அவனது மகனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடினார். பின், இந்த நெடுஞ்சேரலாதனுடன் போரிட்ட சோழன் முதல் கரிகாலனைப் பாடினார். ஆனால் இவர் சேர வேந்தர்களில் உதியஞ்சேரலாதனுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த யாரையும் பாடவில்லை. தனது காலத்திய மகத நாட்டு நந்தர்களின் செல்வ வளம் குறித்துப் பாடியுள்ளார். நந்தர்களுக்குப் பின் மகத ஆட்சிக்கு வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்துப் பாடியுள்ளார். மாமூலனார் காலத்தில் நடந்த நிகழ்வுகள்தான், இவர் பாடல்களின் பாடுபொருளாக இருந்தன. தனக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பண்டைய நிகழ்வுகள் குறித்து இவர் எதுவும் பாடவில்லை.

    பரணர்:

         மாமூலனார் முதியவராக இருந்த போது இளையவராக இருந்த, மிக நீண்ட காலம் வாழ்ந்த பரணர், மிக அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைத் தந்தவர். இவர் தனது இளவயதில் மாமூலனார் பாடிய முதல் கரிகாலனைப் பாடியுள்ளார். பின் அவனது மகனான உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடியுள்ளார். முதல் கரிகாலனுக்குப் பிந்தைய சேரன் செங்குட்டுவனைப் பாடியுள்ளார். ஆனால் சேரன் செங்குட்டுவனுக்கு முந்தைய மாமூலனரால் பாடப்பட்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையோ, உதியஞ்சேரலாதனையோ அவர் பாடவில்லை. அதுபோன்றே, முதல் கரிகாலனுக்கு முந்தைய சோழ வேந்தர்களான செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியையோ அல்லது பெரும்பூட்சென்னியையோ அவர் பாடவில்லை.

         பாண்டியர்களில் நம்பி நெடுஞ்செழியனையும் அவனுக்குப் பின் வந்த பசும்பொன் பாண்டியனையும் பாடினாரே ஒழிய அவர்களுக்கு முந்தைய  முது குடுமிப் பெருவழுதி மற்றும் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி போன்ற பாண்டிய வேந்தர்களைப் பரணர் பாடவில்லை. இவர்களைப் போன்று தான் பெரும்பாலான புலவர்கள் தங்கள் கால கட்ட நிகழ்காலப் புரவலர்களை, நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே பாடியுள்ளனர். பரணர் தமது காலத்துக்குச் சற்று முன்பு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்துக் கூடப் பாடவில்லை. ஆகவே பொதுவாக நிகழ்கால நிகழ்வுகளை, நிகழ்காலப் புரவலர்களை மட்டுமே சங்க காலப் புலவர்கள் பாடி உள்ளார்கள் என்பது வரலாற்றுக்கு மிகப்பெரிய அளவில் துணை செய்கிறது எனலாம். புலவர்கள் மற்றும் புரவலர்களின் காலத்தை உறுதிசெய்வதற்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    பார்வை:

    1.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 4, 69.

    2.. TAMILS HERITAGE – NATANA KASINATHAN, APRIL-2006, PAGE: 25-30.

    3.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 317-329

    4.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009, பக்:36.

    5.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009 பின்னிணைப்பு-அ.

    6.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், முன்னுரைப்பக்:28, அக்டோபர்-2009.

    1. “ “     பக்:36.

    8.வின்சுடன் சுமித், அசோகர், இந்தியாவின் பௌத்தப்பேரரசர், 2009, பக்:21.

    1. “ “       பக்; 38-40.

    10.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள்,  பக்:1; & முன்னுரைப்பக்: 20, 21,   அக்டோபர்-2009.

    Share
  • பழந்தமிழக வரலாறு – 8

    கணியன்பாலன்

                 பண்டைய வடஇந்திய அரசுகள்

         கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான வட இந்தியக் காலகட்டமே சங்ககால வரலாற்றுக் காலகட்டமாகும். பழங்காலத்தமிழக வரலாற்றை முழுமையாகக் கட்டமைக்க, அக்காலகட்ட தக்காண, வடஇந்திய அரசுகளின் வரலாறு குறித்தப் புரிதல் தேவை என்பதால் அவை இங்கு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கி.மு. 8ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் 16 ஜனபதங்கள் எனப்படுகிற 16 நகர்மைய அரசுகள் வட இந்தியாவில் இருந்தன. கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில்  அவைகளுக்கிடையே நடந்த போட்டிகளில் மகத அரசு வெற்றி பெற்று ஒரு பேரரசாக வளர்ச்சிபெற்றது. அரியங்கா(கி.மு. 600-413) வம்சத்தைச்சேர்ந்த பிம்பிசாரனும்(கி.மு. 543-493), அவனது மகன் அசாத்சத்ருவும்(கி.மு. 493-461) மகதத்தைப் பேரரசாக ஆக்குகின்றனர். அரியங்கா வம்சத்திற்குப்பின் கி.மு. 413இல் சிசுநாகர் வம்சம்(கி.மு. 413-345) தோன்றுகிறது. அதன் அழிவில் நந்த வம்சம்(கி.மு. 345-323) உருவாகிறது. நந்த வம்சத்தின் மகாபத்ம நந்தன் மகத அரசை இந்தியாவெங்கும் புகழ்பெற்ற ஒரு பேரரசாக ஆக்குகிறான். அதன்பின் அந்த நந்த வம்சத்தின் அழிவில்தான் மௌரிய வம்சம் உருவாகிறது.

         இந்த ஆட்சிமாற்றத்தின் போதுதான் மாமூலனார் என்கிற பெரும் வரலாற்றுப்புலவர் தமிழகத்தில் வாழ்ந்துள்ளார். மௌரிய வம்சம் கி.மு. 323-187 வரை இருந்தது. அலெக்சாந்தர் கி.மு. 327இல் வடஇந்தியா மீது படையெடுக்கிறான். கி.மு. 325இல் வடஇந்தியாவைவிட்டு வெளியேறி கி.மு. 323இல் இறந்து விடுகிறான். அவன் வடஇந்தியாவை விட்டு வெளியேறிய உடன் சந்திரகுப்த மௌரியன் நந்தர்களைத் தாக்கி வென்று கி.மு. 321 வாக்கில் மகத அரசின் அரியனையில் அமருகிறான். 24 ஆண்டுகள் அவன் அரசாள்கிறான். அதன் பின் கி.மு. 297இல் அவனது மகன் பிந்துசாரன் அரசனாகிறான். அவனது ஆட்சிக்காலம் என்பது கி.மு. 297-272 வரையான  25 வருடங்கள் ஆகும். அதன்பின் அவனது மகன் அசோகர் கி.மு. 268இல்தான் முடிசூடுகிறார். அவரது ஆட்சிக்காலம் கி.மு. 268-232 வரையான சுமார் 34 வருடங்கள் ஆகும். அசோகருக்குப்பின் வந்தவர்கள் பலவீனமானவர்களாக இருந்தனர். அதன் கடைசி அரசனை, புசுயமித்திரன் என்கிற பிராமணத்தளபதி  கொன்றுவிட்டு  சுங்க வம்சத்தைத் தொடங்குகிறான். சுங்க வம்சத்தின் காலம் கி.மு. 187-75 ஆகும். அதன்பின் கன்வ வம்சம் கி.மு. 75-30 வரை 45 வருடம் ஆள்கிறது. சுங்கவம்சம், கன்வவம்சம் இரண்டும் பிராமண வம்சங்கள் ஆகும். அதன்பின் மகத அரசு இல்லாதுபோகிறது. மகதத்தைச்சுற்றி பல சிறு சிறு இனக்குழு அரசுகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்கின்றன.

         மௌரியர்களுக்குப்பின் சுங்க வம்ச ஆட்சிக் காலத்தில் வட மேற்கிலிருந்து கிரேக்கர்கள் மகத அரசைத் தொடர்ந்து தாக்கி வந்தனர். அவர்களுள் மினான்டர்(கி.மு. 150-135) என்பவன் பாடலிபுத்திரம் வரை படையெடுத்து வந்தான் எனப்படுகிறது. இந்தோகிரேக்க மன்னர்களில் இவனே புகழ்பெற்றவன் ஆவான். இந்தோ கிரேக்கர் ஆட்சி நீண்டகாலம் நீடிக்க வில்லை. சைத்தியர்கள் எனப்படும் சாகர்கள் இவர்களை கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து வடக்கிலிருந்து தாக்கத் தொடங்கினர். அவர்கள் பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளை வென்றனர். சாகர்கள்  கிரேக்கர்களைவிட பலபகுதிகளை இந்தியாவில் ஆண்டனர். சாகர்களில் ஐந்து பிரிவினர், ஆப்கானிஸ்தான், தட்சசீலம், மதுரா, மேற்கு இந்தியா, மேல்தக்காணம் ஆகிய ஐந்து இடங்களில் ஆண்டனர். இதே காலகட்டத்திலும் கி.பி. முதல் நூற்றாண்டிலும் பல இனக்குழுக்கள் வடக்கிலிருந்து இந்தியாவைத் தாக்கின. மதுராவைத் தலைநகராகக் கொண்ட சாகர்கள் 200 ஆண்டுகள் ஆண்டனர்.  மேற்கு இந்தியாவில் இருந்த மேற்கு சத்ரப் எனப்படும் சாகர்களின் ஆட்சிதான் கி.பி. 400 வரை நீடித்தது. இவர்களில் புகழ்பெற்றவன் இருத்ரதாமன்(கி.பி. 130-150) ஆவான். அந்நிய அரசனான இவன்தான் முதன் முதலாக சமற்கிருதத்தில் ஒரு நீண்ட கல்வெட்டுப் பொறிப்பை உருவாக்கினான். மேற்கு சத்ரப் அல்லது சாகர்களின் ஆட்சி என்பது கி.பி. 35 முதல் கி.பி. 405 வரை நீடித்தது.

         சாகர்கள் மேற்கு இந்தியாவில் ஆட்சியைத் தொடங்கிய போது குசானர்கள் இந்தியாவின் வடக்கே தங்கள் ஆட்சியைத் தொடங்கினர். அவர்களது ஆட்சி கி.பி. 30 முதல் கி.பி. 230வரை இருந்தது. இதில் புகழ்பெற்றவர் கி.பி. 78இல் ஆட்சியைத் தொடங்கிய கனிசுகர் ஆவார். இவர்தான் கி.பி. 78இல் தொடங்கிய,  சக சகாப்தம் என்பதைத் தொடங்கியவர் ஆவார். இவர் கிழக்கில் பாடலிபுத்திரம் வரை படையெடுத்தார். கனிசுகர் ஆட்சிக்காலம் என்பது கி.பி. 78-101 வரையாகும். சுங்க, கன்வ மகத அரச வம்சங்கள், சாதவாகனர்கள், சாகர்கள், குசானர்கள் ஆகிய ஐந்து அரச வம்சங்கள் தான் இக்காலத்தில் வடக்கிலும் தக்காணத்திலும் ஆண்டவர்கள் ஆவர். சாதவாகனர்கள் குறித்து முன்பே சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. சுமார் கி.மு. 230இல் இருந்து கி.பி 220 முடிய 450 வருடம் சாதவாகனர்கள் தக்காணத்தில் ஆண்டனர். இடையே கலிங்கமன்னன் காரவேலன் போன்றவர்கள் ஆண்டனர். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ் அரசுகளின் வட படையெடுப்புகள் இருந்தது. ஆகவே வட அரசுகளின் காலத்தை அறிதல் ஒரு தெளிவை வழங்கும்.

                    வட இந்திய அரசுகள்(கால அட்டவணை)

    வம்சம்               அரசன்          காலம்               ஆண்டுகள்

    அரியங்கா வம்சம்                     கி.மு. 600-413         187

    அரியங்கா வம்சம்     பிம்பிசாரன்      கி.மு. 543-493         50

    அரியங்கா வம்சம்     அசாத்சத்ரு      கி.மு. 493-461         32

    சிசுநாகர் வம்சம்                      கி.மு. 413-345         68

    நந்த வம்சம்                          கி.மு. 345-325         20

    கலவரங்களும், குழப்பங்களும்          கி.மு. 325-322         04

    இமயவரம்பனின் வடபடையெடுப்பு       கி.மு 325-323           03*

    மௌரிய வம்சம்                      கி.மு. 322-187         135

    சந்திரகுப்த மௌரியன்                 கி.மு. 321-297         24

    பிந்துசாரன்                           கி.மு. 297-272         25

    மௌரியப்படையின் தோல்வி                கி.மு 297-288          11*

    அசோகர்  ஆட்சிக்காலம்               கி.மு. 268-232         36

    செங்குட்டுவனின் வடபடையெடுப்பு      கி.மு. 232-230           03*

    சாதவாகன வம்சம்                    கி.மு. 230-கி.பி. 220    450

    சாதவாகன வம்சம்    சிமுகா          கி.மு. 230-207         23

    இந்தோகிரேக்கர்       டெமிட்ரியசு-1    கி.மு. 200-180         34

    சுங்க வம்சம்(மகதம்)                  கி.மு. 187-75                112

    கலிங்கம்             காரவேலன்      கி.மு. 180-165         15

    சாதவாகன வம்சம்    சதகர்னி         கி.மு. 180-124         56

    இந்தோகிரேக்கர்       மினான்டர்      கி.மு. 150-135         15

    நலங்கிள்ளியின் உச்சயினி படையெடுப்பு கி.மு.  82-80            03*

    சுங்க வம்சத்தின் இறுதி ஆண்டு        கி.மு.  75               –

    கன்வ வம்சம்(மகதம்)                 கி.மு. 75-30           45

    சாதவாகன வம்சம்    புலுமாயி        கி.மு. 30-6            24

    குசான வம்சம்                        கி.பி. 30-230           200

    மேற்குசத்ரப்,சாகா வம்சம்              கி.பி. 35-405           370

    குசான வம்சம்        கனிஷ்கர்        கி.பி. 78-101           23

    சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு       கி.பி. 78                –

    சாதவாகன      கௌதமிபுத்ர சதகர்னி கி.பி. 106-130                24

    சாதவாகன      வசிட்திபுத்ர புலுமாயி  கி.பி. 130-160                30

    மேற்கு சத்ரப்         உருத்ரதாமன்    கி.பி. 130-150                20

    சாதவாகன      யாஜன சதகர்னி       கி.பி. 170-199                29

    குறிப்பு: * இக்குறியிட்டவை தமிழகம் சார்ந்த தகவல்கள் ஆகும்.

         “மௌரியர்களுக்குப்பின் வந்த வடஇந்திய அரச வம்சங்களின் காலவரிசை ஒரு பொழுதும் சரியானவாறு வரையறுக்கப்படவில்லை எனவும் கி.மு.327இல் அலெக்சாந்தர் நிகழ்த்திய பஞ்சாப் படையெடுப்புதான் முதன்முதலாக ஒரு வரலாற்றுக் காலத்தை(வடஇந்தியாவுக்கு) உறுதி செய்தது எனவும்” கூறுகிறார் டி.டி. கோசாம்பி(1). “கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய அரசியல் வரலாறு தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் இனக்குழுக்கள், மன்னர்கள், வீரமிக்க ஆக்ரமிப்பாளர்கள் ஆகியோரைப்பற்றிய ஒரு குழப்பமான சித்திரத்தைதான் அளிக்கின்றன” என்கிறார் டி. என். ஜா(2). ஆகவே கி.மு. 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் ஒரு குழப்பமான நிலைதான் இருந்து வந்தது எனலாம்..

    பார்வை & ஆதார நூல்கள்:

    1.பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, தமிழில் ஆர்.எசு. நாராயணன், NCBH வெளியீடு, செப்டம்பர்-2006. பக்:386; பக்; 286

    2.பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர் 2011, பக்: 150.

    பிறஆதார நூல்கள்: 3.இந்திய வரலாறு ஒரு அறிமுகம், டி.டி. கோசாம்பி அவர்கள், தமிழில் சிங்கராயர், விடியல் பதிப்பகம், அக்டோபர்-2011,.

    4.அசோகர், விசென்ட்.சுமித், தமிழில் சிவமுருகேசன், 2009.

    5.தென் இந்திய வரலாறு, டாக்டர் கே.கே. பிள்ளை, எட்டாம் பதிப்பு-2011.

    6.சாதவாகனர்கள், குசானர்கள், சாகர்கள், மகத அரசுகள், இந்தோ கிரேக்கர்கள், மன்னன் காரவேலன் ஆகியோர் பற்றிய விக்கிபீடியா, இணைய தள தரவுகள்.

    Share