-மேகலா இராமமூர்த்தி
அண்ணலார் காந்தி அறவழிக் கொள்கை
அகிம்சையைப் போற்றி நட.
ஆய்ந்தறி யாமல் பழகும்தீ நட்பதனால்
ஓயாத தொல்லை வரும்.
இளமையில் கற்றிடும் நற்பண் பதுவே
வளமான வாழ்வைத் தரும்.
ஈட்டும் பொருளில் ஒருசிறி தாவது
நாட்டின் நலத்திற்கே நல்கு.
உழைப்பினை மூல தனமெனக் கொண்டால்
தழைக்கும் தமிழர் குடி.
ஊனம் ஒருவர் குறையன்றே அஃதறிந்(து)
ஊக்கம் அளித்தல் கடன்.
எண்ணம் உயர்வாக என்றும் இருந்திட்டால்
திண்ணமாய் வெற்றி வரும்.
ஏற்றத்தை எந்நாளும் வாழ்வினிலே பெற்றிடவே
போற்றிடுக கல்வி தனை.
ஐயம் அகற்றிடு ஆற்றல் பெருக்கிடு
வையகம் வாழ்த்தும் உனை.
ஒற்றுமை என்றும் பலமாம் அதனையே
கற்கநல் கொள்கையா இன்று.
ஓயா துரைக்கின்ற பொய்ம்மையைப் போக்கியே
வாய்மையால் வென்றிடு வோம்.
ஔவியம் பேசாமல் அன்போடு வாழ்ந்திடுநீ
ஔவைதான் சொன்ன படி.

Leave a Reply