சு.ரவி

தழலுக்குள்ளே தண்ணீருண்டு, நீருக்குள்ளும் தழலுண்டு
சுழலுக்குள்ளே சும்மாநிற்கும் அமைதிப் புள்ளி ஒன்றுண்டு
நிழலுக்குள்ளும் சூரியனுண்டு, இரவுக்குள்ளும் பகலுண்டு
விழலுக்கென்றும் வெள்ளம் உண்டு; கழலுக்குள்ளே புகலுண்டு!
எரியாய்க் கவிதை செய்தேன் அதனுள் அமுதாய்த் தானே அவள் வந்தாள்
திரியாய்த் தானே நான் நின்றேன் அதில் தீபச் சுடராய் அவள் நின்றாள்
கரியாய்ப் போகும் மேனிக்குள்ளும் கவிதைத் தேனைப் பாய்ச்சியதார்?
தரிசானாலும் தரிசனம் தந்தெனைத் தண்வயலாக மாற்றியதார்?
வனப் புள்ளாய் என் ஆன்மா வானில் வட்டமடித்துப் பறக்கிறது
என்க்குள் எரியும் தீபம் எந்தன் வாக்கில் கவியாய்ப் பிறக்கிறது
மனக்குள அலைகள் ஓயும் நேரம் மரத்தின் வேர்கள் தெரிகிறது
தனக்குள் தானே உறையும் தருணம் தழலின் தவமும் புரிகிற்து
எல்லாக் கவியும் என்கவி என்றே நெஞ்சம்மகிழ்ந்து ரசிக்கிறது
எல்லாத் துயரும் என்தோள் ஏற்று ரகசியமாக விசிக்கிறது
எல்லா உயிரும் நானே என்று வாழ்ந்திட நெஞ்சு பதைக்கிறது
நில்லாதோடும் காலம் மட்டும் நினைத்து நினைத்து நகைக்கிறது!

Leave a Reply